உலக நடப்பு

எவரெஸ்ட் உச்சியில் ஹிலாரி, டென்சிங் எவ்வளவு நேரம் இருந்தனர்? என்ன செய்தனர்?

1 week 4 days ago

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மைல்ஸ் பர்க்

  • பதவி,

  • 1 ஜூன் 2025, 02:13 GMT

உலகின் மிகவும் சவாலான விஷயங்களுள் ஒன்று, எவரெஸ்ட் மலை உச்சியை ஏறி அடைவது. தற்போது வரை வெகு சிலரே இதனைச் சாதித்துள்ள நிலையில் பலர் இந்த ஆபத்தான மற்றும் சவால் நிறைந்த பயணத்தில் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 330-க்கும் அதிகமானோர் இத்தகைய பயணங்களில் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

1953-ம் ஆண்டு தான் முதல் முறையாக மனிதர்களால் எவரெஸ்ட் உச்சியை அடைய முடிந்தது. இதனைச் சாதித்தவர்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளியரான டென்சிங் நோர்கே.

உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்களுக்கு எவரெஸ்ட் ஏன் சொர்க்கபுரியாக உள்ளது, அங்கு அவ்வாறு என்ன தான் உள்ளது, அதன் உச்சியை முதலில் அடைந்த இருவர் எவ்வாறு அதனைச் சாதித்தனர்?

உலகத்தின் உச்சியை அடைந்தபோது எப்படி இருந்தது?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

படக்குறிப்பு,எட்மண்ட் ஹிலாரி பிபிசிக்கு அளித்த பேட்டி

எவரெஸ்ட் உச்சியை அடைய எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே உலகின் ஆபத்தான மலைப்பகுதியில் கடினமான பாறைகளை ஏறி, உறைய வைக்கும் பனி மற்றும் ஆக்சிஜன் போதாமை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. 72 ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த இந்த சாதனை பற்றி இருவரும் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

உலகின் உயரமான புள்ளியை அடைந்த போது ஏற்பட்ட உணர்வை விவரித்த ஹிலாரி, "நான் முதலில் நிம்மதியாக உணர்ந்தேன்" என்று 1953-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நாங்கள் மலை உச்சியை கண்டுபிடித்தோம் என்பதும் அந்த இடத்தை அடைந்தோம் என்பதும் நிம்மதி அளிக்கக் கூடியதாக இருந்தது" என டென்சிங் தனது மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்தார்.

கர்னல் ஜான் ஹண்ட் தலைமையிலான குழு இந்தப் பயணத்தை மேற்கொண்டது. "முதலில் பெரு நிம்மதி அடைந்தோம், மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்" எனத் தெரிவித்தார். இருவரும் நிம்மதி அடைந்ததற்கு நியாயமில்லாமல் இல்லை, ஏனெனில் எவரெஸ்ட் உச்சியை அடைவதற்குள் இவர்கள் மலையின் ஆபத்தான பகுதியில் ஏறவே முடியாத 40அடி உயரமுள்ள பாறையை ஏறி கடந்து தான் செல்ல வேண்டும். இந்த இடம் மரணப் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 8,849மீட்டர் (29,032 அடி) உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ளது. இதற்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், இந்த மலைக்கு 1856-ல் சர்வேயர் ஜார்ஜ் எவரெஸ்டின் பெயரை வைத்தது. நேபாளில் இது சாகர்மாதா என்றும் திபெத்தில் சோமோலுங்மா (பூமாதேவி) என்றும் அழைக்கப்படுகின்றது.

மரணப் பிரதேசத்தில் என்ன நடக்கும்?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது.

மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது. டென்சிங் இந்தக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்தப் பெயர் 8000 மீட்டருக்கு (26,000 அடி) மேல் மலையேறுபவர்கள் அடைகின்ற இடத்தைக் குறிக்கின்றது. அங்கு நிலவும் குறைந்த ஆக்சிஜன் சூழ்நிலையானது உடலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும், உடலில் உள்ள அணுக்கள் சாகத் தொடங்கும். எவரெஸ்ட் மலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மரணப் பிரதேசத்தில் தான் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய குளிர்ந்த வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைவான ஆக்சிஜனில் பிழைப்பதற்கு மனிதர்கள் பழக்கப்படவில்லை. மலையேறுபவர்கள் ஹைபோக்ஸியாவால் பாதிக்கப்படுவார்கள். இதில் முக்கியமான உறுப்புகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் மெல்ல மெல்ல சிதைய ஆரம்பிக்கும். மூளைக்கும் நுரையீரலுக்கும் ஆக்சிஜன் குறைவதால் இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பிற்கான ஆபத்துகள் அதிகமாகும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைவதால் அது வீங்கி தலைவலியை, குமட்டலை உண்டாக்கும். இதனால் பதற்றம் உருவாவதால் மலையேறுபவர்களின் முடிவெடுக்கும் திறன் மட்டுப்படும். மூளை வீக்கம் அடைவதால் மலையேற்ற வீரர்கள் மயக்க நிலையை உணர்வார்கள். இதனால் இல்லாத நபர்களிடம் பேசுவது, பனியில் தோண்டுவது அல்லது துணிகளைக் கழற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு எப்படி தயாராகினர்?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எவரெஸ்ட் மலையேற்றம்

டென்சிங் மற்றும் ஹிலாரி இந்தப் பயணத்தில் உள்ள மற்றவர்களுடன் இமயமலையில் உள்ள கடினமான சூழ்நிலைகளுக்குப் பழகிக் கொள்ள உயரமான இடங்களில் தொடர்ந்து முகாமிட்டனர். அதன் பின்னர், 1953ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படிப்படியாக ஏறத் தொடங்கினர். இது அவர்களின் நுரையீரல் திறனை அதிகரிக்கவும் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவும் ரத்தத்தில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை அதிகமாக உற்பத்தி செய்யவும் அனுமதிக்கிறது. இதன்மூலம் எவரெஸ்ட் உச்சியை நோக்கி செல்ல செல்ல ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டை ஈடு செய்ய முடிகிறது. இவ்வாறு புதிய தட்பவெட்ப நிலைக்குப் பழக்கப்படுவதில் சிக்கல்களும் உள்ளன, ஏனென்றால் கூடுதல் ஹீமோகுளோபின் அளவு என்பது ரத்தத்தை தடிமனாக்கும். இது சுழற்சியை மேலும் கடினமாக்கும், இதனால் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மற்றும் நுரையீரலுல் திரவங்கள் சேர்வதை அதிகரிக்கிறது.

ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 6000மீட்டருக்கு (19,700 அடி) அதிகமான உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கும் 8,790 மீட்டர் (28,839) உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் அவர்கள் கடக்க வேண்டிய செங்குத்தான பாறையை கடப்பதற்கும் உடலை பழக்கப்படுத்துவதும் என்பது சாத்தியமற்றது. எனவே அந்த உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையின் தாக்கங்களை சமாளிப்பதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் உபகரணங்களை அவர்கள் எடுத்து வந்திருந்தனர். ஆனால் அவர்களை எதிர்நோக்கி இருக்கும் சவால்களை பற்றி அவர்கள் எந்த கற்பனையும் கொண்டிருக்கவில்லை. இதற்கு மூன்று நாட்கள் முன்பு தான் அதே குழுவைச் சேர்ந்த டாம் போர்டில்லன் மற்றும் சார்லஸ் எவன்ஸ் உச்சியை அடைவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது செயலிழந்த ஆக்சிஜன் உபகரணங்கள் மற்றும் நடுங்க வைக்கும் குளிர்ந்த காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற முடியாமல் திரும்பினர்.

குழு முயற்சி

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டென்சிங் மற்றும் ஹிலாரியின் குழு

29 மே 1953 அன்று டென்சிங் மற்றும் ஹிலாரி குழுவின் இரண்டாவது முயற்சியை தொடங்கினர். பனிக்கு நடுவே மலை முகடுகளைக் கடந்து உச்சியை நோக்கிச் சென்றனர். பனியைக் கடந்து பயணித்தபோது தங்களால் தொடர்ந்து செல்ல முடியுமா என ஹுல்லாரிக்கு சந்தேகங்கள் எழுந்ததாக அவரின் மகன் பீட்டர் 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

"எனக்கு நினைவில் இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்த சறுக்கலான பனி மற்றும் பாதையைக் கடந்தது பற்றி அவருடைய விவரிப்புகள் தான். அவர் அந்தப் படிகள், பனிப் போர்வை மற்றும் உடைந்துவிழும் பனிக்கட்டிகளைக் கடந்து திபெத்தை நோக்கியுள்ள எவரெஸ்டின் காங்ஷுங் பக்கத்தை நோக்கி (கிழக்கு பக்கம்) சென்றார். அவர் இதைக் கூறியுள்ளார், நான் அவரின் நாட்குறிப்பிலும் பார்த்துள்ளேன். அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் தொடர்ந்து செல்வது பாதுகாப்பாக இருக்குமா ஆகியன குறித்து சந்தேகம் வரத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்" என்றார் பீட்டர். மேலும், "அவர் இந்தக் கதையை கண்களில் பிரகாசத்துடனும் ஒரு புன்னகையுடனும் சொன்னது எனக்கு நினைவிக்கிறது. தானும் டென்சிங்கும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடியே அந்தச் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றோம் எனக் கூறினார்" என்றார்.

ஹிலாரி உடன் சென்ற டென்சிங் இதனை விதி என உணர்ந்தார், "அவருக்கு மலைகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. இது அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மலையாகும்" என அவரின் மகன் ஜாம்லிங் நோர்கே 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவித்தார். "ஏற்கெனவே 21 வருடங்களில் 6 முறை இந்த மலையை ஏற முயற்சித்திருந்தார். சுவிஸ் அணியுடன் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு உச்சிக்கு 400 மீட்டர் வரைச் சென்று திரும்ப வேண்டியதாயிற்று. அவர் எப்போதுமே அது தான் ஏற வேண்டிய மலை என்றே உணர்ந்தார்" என்றார்.

செங்குத்தான பாறையை கடந்தது எப்படி?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது.

இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது. கை அல்லது கால் பிடிமானத்திற்கு எதுவுமே இல்லாத அதன் மென்மையான மேற்பரப்பு ஏறுவதற்கு சாத்தியமற்றதாகத் தெரிந்தது. டென்சிங் பிடியில் இருந்த கயிற்றை தன் மீது கட்டிக் கொண்டு ஹிலாரி தன்னுடைய உடலை பாறை முகடு மற்றும் அருகில் உள்ள பனி மேட்டிற்கு இடையே உள்ள ஒரு குறுகிய விரிசலான பகுதிக்குச் சென்றார், பனிக்கட்டி உடைந்து செல்லக்கூடாது என வேண்டிக் கொண்டே இருந்தார். அதன் பின்னர் வலியுடனே மெல்ல மேல்நோக்கிச் சென்றார். அவர் மேலே சென்ற பிறகு கயிற்றை கீழே விட அவரைப் பின் தொடர்ந்து டென்சிங்கும் சென்றார். அவர் கடந்து சென்ற பாறை, அவர் நினைவாக பிற்காலத்தில் ஹிலாரி ஸ்டெப் (Hillary step) எனப் பெயரிடப்பட்டது. இது 2015-ம் ஆண்டு நிகழ்ந்த மிக பயங்கரமான நிலநடுக்கத்தால் அழிந்துபோனது.

"கடைசி தருணங்களில் நாங்கள் அந்த மேட்டில் சென்றபோது அதன் உச்சியை காண முடியவில்லை" என 1953-ல் பிபிசியிடம் ஹிலாரி தெரிவித்தார். "அது எங்களிடமிருந்து வலதுபக்கம் விலகிச் சென்றுகொண்டே இருந்தது. நாங்கள் அதைக் கடந்து வடக்கு பக்கம் உச்சி இருப்பதைப் பாரத்ததும் நிம்மதி அடைந்தோம். எங்களுக்கு மேல் 30, 40 அடி தூரத்தில் தான் உச்சி இருந்தது. நாங்கள் உச்சி மீது ஏறி நின்றோம்" என்றார் ஹிலாரி.

உலகத்தின் உச்சியை அடைந்ததும் இரு மலையேற்ற வீரர்களும் உற்சாக மிகுதியில் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டனர். ஹிலாரி தன்னுடைய கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். இந்தியா, நேபாளம், ஐ.நா மற்றும் பிரிட்டன் கொடிகள் அடங்கிய கோடாரியை டென்சிங் அசைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். உலகத்தின் உச்சியிலிருந்து தெரிகின்ற காட்சிகளை அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பனியில் ஒரு குழியை ஏற்படுத்தி சில இனிப்புகள் மற்றும் பிஸ்கட்டுகளை பௌத்த முறை படி புதைத்தார்.

"அங்கு எப்போதும் இருக்கக் கூடியது மாதிரியான பொருள் எங்களிடம் எதுவும் இல்லை" என ஹிலாரி பிபிசியிடம் தெரிவித்திருந்தார். "அங்கு ஒரு கற்குவியலை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. ஏனென்றால் பாறைகள் உச்சியில் இருந்து 30, 40 அடிக்கு கீழ் இருந்தன. டென்சிங் சில உணவுகளை பௌத்த கடவுள்களுக்கு காணிக்கையாக விட்டுச் சென்றார். நாங்கள் நான்கு கொடிகளை உச்சியில் விட்டுச் சென்றோம், ஆனால் அவை நிலைத்திருக்க வாய்ப்பில்லை" என்றார்.

மலையேற்றமும் உயிரிழப்புகளும்

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே பேட்டி

இருவரும் 1924-ல் காணாமல் போன மலையேற்ற வீரர்களான ஜார்ஜ் மல்லோரி மற்றும் ஆண்ட்ரூ "சாண்டி" இர்வின் ஆகியோர் பற்றிய தடயங்களைத் தேடினர். மல்லோரி தான் எவரெஸ்ட் மலையை ஏன் ஏற வேண்டும் என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "ஏனென்றால் அது அங்கு உள்ளது" என்கிற பிரபலமான பதிலை அளித்திருந்தார். இருவர் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மல்லோரியின் உடல் 1999-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது அவரின் கூட்டாளி இர்வினின் உடலின் சில பகுதிகள் 2024-ல் உருகிய பனிப்பாறையால் வெளிப்பட்டது.

டென்சிங்கும் ஹிலாரியும் 15 நிமிடங்கள் தான் உச்சியில் இருந்தனர். "ஆக்சிஜன் குறைந்து கொண்டே வந்ததால் நாங்கள் திரும்பி கீழே வருவதில் குறியாக இருந்தோம்" என்றார் ஹிலாரி. எவரெஸ்ட் உச்சியை அவர்கள் ஒரு குழுவாகத் தான் அடைந்தார்கள் என்பதால் யார் முதலில் உச்சியால் ஏறினார் என்பதை தெரிவிக்கக்கூடாது என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் 1955-ல் வெளியான டைகர் ஆப் தி ஸ்னோஸ் (Tiger of the Snows) என்கிற தனது சுயசரிதையின் மூலம் ஹிலாரி தான் முதலில் ஏறினார் என்பதை வெளிப்படுத்தி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டென்சிங்.

அவர்கள் சோர்வுடன், கீழறங்கி முகாமை அடைந்தபோது அந்தக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் லோவிடம் "நாங்கள் அந்த இடத்தை எட்டி விட்டோம்" எனத் தெரிவித்தார் ஹிலாரி. அவர்களின் சாதனை பற்றிய செய்தி ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடிய ஜூன் 2-ம் தேதி வரை வெளியுலகத்திற்குத் தெரியவில்லை. எட்மண்ட் மற்றும் கர்னல் ஹண்டுக்கு அரச பதக்கங்கள் வழங்கிய ராணி, டென்சிங்கிற்கு ஜார்ஜ் பதக்கத்தை வழங்கினார். இது அவர்களுக்கு ஒரே மாதிரியான மரியாதை ஏன் வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சையை உருவாக்கியது.

அடுத்தடுத்த வருடங்களில் அதிக அளவிலான சாகச வீரர்கள் அவர்களின் சாதனையை மீண்டும் செய்ய முயற்சித்துள்ளனர். இந்த மலையேற்றம் நேபாள அரசுக்கு முக்கியமான வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 800 பேர் உச்சியை அடைய முயற்சித்தாலும் அது ஆபத்தான பயணமாகவே இருந்து வருகிறது. 2024-ல் ஒன்பது பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர் என்றும் அதற்கு முந்தைய வருடம் 18 உயிரிழந்துள்ளனர் என்றும் நேபாள சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. நூற்றாண்டுக்கு முன்பு இந்தத் தரவுகள் எல்லாம் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து சுமார் 330-க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த உறைந்த உடல்கள் பல வருடங்களாக மலையிலே இருந்துள்ளன. ஆனால் புவிவெப்பமடைதலால் பனிப் பாறைகள் மற்றும் போர்வைகள் உருக இந்த உடல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

2019-ஆம் ஆண்டு நேபாள அரசு மலையேற்ற வீரர்களின் உடல்களை மீட்கும் முடிவை எடுத்தது. கடந்த ஆண்டு மீட்பாளர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மலையின் ஆபத்தான மரணப் பிரதேசத்தில் இருந்து ஐந்து உடல்களை மீட்டு வந்தனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn0gyz7g9l4o

Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது

1 week 4 days ago

Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.

72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றுது. 

இந்த ஆண்டு, 108 போட்டியாளர்கள் உலக அழகி போட்டியில் பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.

Opal_Suchata_Chuangsri_Miss_World_2025__

https://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/Miss-World-2025-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/50-358326

2009 இல் இலங்கை விவகாரத்தில் ஐநா இழைத்த தவறை மீண்டும் நினைவுபடுத்தினார் டொம் பிளெச்சர் - “ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது”

1 week 5 days ago

Published By: RAJEEBAN

31 MAY, 2025 | 02:46 PM

image

இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என  உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான மே 14ம் திகதி உரையில் பிளெச்சர் காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் ஏன் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார் என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிளெச்சர் காசாவில் பலவந்தமாக இடம்பெயரச்செய்தல் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன பட்டினி குறித்து தகவல்கள் கிடைக்கின்றன சித்திரவதைகள் பெருமளவு உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.

இலங்கை, ருவாண்டா, ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என  உலகம் பின்னர் தெரிவித்தது என குறிப்பிட்டுள்ள அவர் அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் உலகிற்கும் நான் வேண்டுகோள் விடுத்தேன் எனக்குறிப்பிட்டுள்ளதுடன் நீங்கள் இனப்படுகொலையை தடுப்பதற்காக செயற்படுவீர்களா என கேள்வி  எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/216188

இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு வரிகளை இரட்டிப்பாக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முடிவு

1 week 5 days ago

31 MAY, 2025 | 11:26 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, தனது உலகளாவிய வர்த்தகப் போரின் சமீபத்திய தீவிரமாக, இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரிகளை 25 சதவீதட்டிப்பாக்குவதாக அறிவித்தார்.

பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள US Steel’s Mon Valley Works–Irvin ஆலையில் பேசிய டிரம்ப், இரும்பு இறக்குமதி மீதான வரி 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதேபோன்ற உயர்வு விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

ஜனவரியில் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் இரும்பு விலைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 நிலவரப்படி, அமெரிக்க எஃகு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 984 டாலர் ஆகவும், ஐரோப்பாவில் 690 டாலர் ஆகவும், சீனாவில் 392 டாலர் ஆகவும் இருந்தது.

ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் அமெரிக்க எஃகு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தையும் டிரம்ப் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/216165

காசா போர் நிறுத்தம்; அமெரிக்க முன்மொழிவை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்!

1 week 6 days ago

New-Project-343.jpg?resize=750%2C375&ssl

காசா போர் நிறுத்தம்; அமெரிக்க முன்மொழிவை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்!

ஹமாஸுடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (30) தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கும், மோதலை தூண்டிய தாக்குதலில் பிடிபட்ட பணயக்கைதிகளை மேலும் திருப்பி அனுப்புவதற்கும் ஒரு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வது குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேல் புதிய முன்மொழிவினை “ஆதரித்து” என்றார்.

இதேவேளை, புதிய காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் அண்மைய முன்மொழிவை பாலஸ்தீனிய ஆயுதக் குழு நிராகரிக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இந்த திட்டம் பூர்த்தி செய்யவில்லை என்றும், சரியான நேரத்தில் அது பதிலளிக்கும் என்றும் ஹமாஸ் அதிகாரி கூறினார்.

60 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, ஹமாஸ் இரண்டு கட்டங்களாக 10 உயிருள்ள பணயக்கைதிகளையும் 18 இறந்த பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைப்பதைப் பார்ப்போம் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்தத்தில் இரண்டு மாத கால போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மார்ச் 18 அன்று இஸ்ரேல் காசா மீது முழுமையான முற்றுகையை விதித்து, ஹமாஸுக்கு எதிரான தனது இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.

https://athavannews.com/2025/1433853

'சிறு தவறும் மரணத்தை தரலாம்' - யுக்ரேன் வீரர்களை நகர விடாமல் முடக்கும் ரஷ்யாவின் புதிய ஆயுதம்

1 week 6 days ago

ரஷ்யா, யுக்ரேன், போர், மோதல், முக்கிய செய்திகள், பிபிசி தமிழ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், யோகிதா லிமாயே

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ரோடின்ஸ்கி நகரத்தில் சங்கடம் தரும் போரின் வாசம் வீசுகிறது. அந்த சங்கடமான வாசம் எங்கிருந்து வருகிறது என்பதை நகரத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் தெரிந்துக் கொள்ள முயன்றோம்.

250 கிலோ எடையுள்ள கிளைட் குண்டு ஒன்று நகரத்தின் பிரதான நிர்வாகக் கட்டடத்தை சிதைத்ததுடன் 3 குடியிருப்பு வளாகங்களையும் இடித்துவிட்டது. குண்டுவீச்சு நடைபெற்ற அடுத்த நாள் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். இடிபாடுகளின் சில பகுதிகளில் இருந்து இன்னும் புகை வெளிவந்து கொண்டிருக்கிறது. நகரின் எல்லைப்புறங்களில் பீரங்கித் தாக்குதல்களின் சத்தத்தையும், துப்பாக்கிச் சூடு சத்தத்தையும் கேட்க முடிகிறது. அது யுக்ரேனிய வீரர்கள், டிரோன்களை சுட்டு வீழ்த்தும் சப்தம்.

போரின் பிடியில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரிலிருந்து வடக்கே சுமார் 15 கிமீ (9 மைல்) தொலைவில் உள்ளது ரோடின்ஸ்கி நகரம். தெற்கிலிருந்து போக்ரோவ்ஸ்க் நகரத்தைக் கைப்பற்ற கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் இருந்து ரஷ்யா முயற்சித்து வருகிறது, ஆனால் யுக்ரேனியப் படைகள் ரஷ்ய வீரர்கள் உள்ளே நுழைவதை தடுத்து வருகின்றனர்.

எனவே தனது போர்த்திட்டத்தை மாற்றிக் கொண்ட ரஷ்யா, நகரத்தைச் சுற்றி வளைத்து செல்வதற்குப் பதிலாக, நகருக்கான பொருட்கள் விநியோக வழிகளைத் துண்டித்துவிட்டது.

கடந்த இரு வாரங்களாக, யுக்ரேனில் போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து தனது போர்த்திட்டத்தில் மிக முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது ரஷ்யா.

ரோடின்ஸ்கியில் அதற்கான ஆதாரங்களை எங்களால் பார்க்க முடிந்தது.

நாங்கள் நகரத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே, எங்களுக்கு மேலே ரஷ்ய டிரோன் சத்தம் கேட்டது. அருகில் இருந்த பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம், ஒரு மரம் தான் அந்த பாதுகாப்பான இடம்.

டிரோன் எங்களைப் பார்க்க முடியாதபடி நாங்கள் மரத்தை ஒட்டி நின்று கொண்டோம். சற்று நேரத்தில் மிகப்பெரிய வெடிச் சத்தம் கேட்டது, அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இரண்டாவது டிரோனின் தாக்குதல். மேலே வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் டிரோன், இந்தப் போரின் மிகக் கொடிய ஆயுதமாக மாறியதன் எதிரொலியாக பயங்கரமான சத்தத்தைக் கேட்கிறோம்.

அந்த சப்தம் சகித்துக் கொள்ள முடியாத அளவில் மாறிய போது, 100 அடி தொலைவில் யாருமே இல்லாத ஒரு கட்டடத்திற்கு சென்று மறைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அங்கு சென்று நாங்கள் மறைந்துக் கொண்டோம். ஆனால், அங்கும் டிரோன் சப்தம் கேட்டது. மரத்தில் இருந்து நாங்கள் கட்டடத்திற்கு சென்றதைக் கண்ட பிறகு அந்த டிரோன் திரும்பியிருக்கலாம்.

ரோடின்ஸ்கே மீது ரஷ்ய டிரோன்கள் தாக்குதல் நடத்துவது என்பது, போக்ரோவ்ஸ்க் நகருக்கு தெற்கே உள்ள ரஷ்ய நிலைகளை விட, மிக நெருக்கமான நிலைகளிலிருந்து தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான சான்றாகும். போக்ரோவ்ஸ்கின் கிழக்கிலிருந்து கோஸ்ட்யான்டினிவ்கா வரை செல்லும் ஒரு முக்கிய சாலையில் புதிதாக கையகப்படுத்திய யுக்ரேனின் பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம்.

நாங்கள் மறைவிடத்திற்கு வந்த அரை மணி நேரத்திற்கு பிறகு டிரோன் சத்தம் நின்றது. பிறகு, மரங்களின் கீழ் மறைவாக நிறுத்தப்பட்டிருந்த எங்கள் காரை நோக்கி ஓடினோம். ரோடின்ஸ்கேவை விட்டு வேகமாக வெளியேறிவிட்டோம். நெடுஞ்சாலையின் ஓரத்தில் புகை மூட்டத்தை பார்க்க முடிந்தது, அதேபோல ஏதோ எரிந்துக் கொண்டிருப்பதையும் கண்டோம். அது சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனாக இருக்கலாம்.

ரஷ்யா, யுக்ரேன், போர், மோதல், முக்கிய செய்திகள், பிபிசி தமிழ்

படக்குறிப்பு,ரோடின்ஸ்கே மீது ரஷ்ய டிரோன்கள் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட சேதங்கள்

"அவர்களிடம் இருந்த அனைத்தையும் பயன்படுத்தினார்கள் "

அங்கிருந்து தொலைவில் உள்ள பிலிட்ஸ்கேவுக்கு சென்றோம். இரவு முழுவதும் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலால் வரிசையாக இருந்த வீடுகள் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஸ்விட்லானாவின் வீடும், சேதமடைந்த வீடுகளில் ஒன்று.

"நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு முன்னதாக, தொலைதூரத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது எங்கள் நகரம் குறிவைக்கப்படுகிறது, நாங்களே அதை அனுபவிக்கிறோம்," என்று 61 வயதான ஸ்விட்லானா கூறுகிறார். தனது வீட்டின் இடிபாடுகளிலிருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டிருந்த அவர், தாக்குதல் நடந்தபோது வீட்டில் இல்லை.

"நகரத்தின் மையப்பகுதிக்குச் சென்றால், அங்கு பெருமளவிலான அழிவைப் பார்க்கலாம். பேக்கரி மற்றும் விலங்கு காட்சி சாலையும் அழிக்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறுகிறார்.

டிரோன்கள் வர முடியாத தொலைவில் உள்ள பாதுகாப்பான ஓரிடத்தில், 5வது தாக்குதல் படைப்பிரிவின் பீரங்கி பிரிவு வீரர்களைச் சந்தித்தோம்.

"ரஷ்ய தாக்குதல்களின் தீவிரம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும். ராக்கெட்டுகள், மோட்டார்கள், டிரோன்கள் மற்றும் நகரத்திற்கு தேவையான பொருட்கள் செல்வதற்கான விநியோக வழிகளைத் துண்டிக்க அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்," என்று செர்ஹி கூறுகிறார்.

ரஷ்யா, யுக்ரேன், போர், மோதல், முக்கிய செய்திகள், பிபிசி தமிழ்

படக்குறிப்பு,"ரஷ்ய தாக்குதல்களின் தீவிரம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்."

முன்னேறி வரும் ரஷ்யா

தொடர்ந்து அதிகரித்து வரும் மோதலில், மாறிவரும் தொழில்நுட்பத்தால் ஏற்படும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களை விரைவாக தகவமைக்க வேண்டியிருக்கிறது. அதிலும், சமீபத்திய அச்சுறுத்தல் ஃபைபர் ஆப்டிக் டிரோன்களிலிருந்து வருகிறது. பத்து கிலோமீட்டர் நீளமுள்ள கேபிள் ஒரு டிரோனின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபைபர் ஆப்டிக் கேபிள், விமானியிடம் இருக்கும் கண்ட்ரோலருடன் இணைக்கப்பட்டுள்ளது.

"வீடியோ மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞை, ரேடியோ அதிர்வெண்கள் மூலம் அல்லாமல் கேபிள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் பொருள், சிக்னலை முடக்க முடியாது என்பதால் அந்த டிரோனை செயலிழக்கக் செய்ய முடியாது." என்று 68வது ஜேகர் படைப்பிரிவின் டிரோன் பொறியாளரான மாடரேட்டர் என்ற அழைப்பு அடையாளத்தைக் கொண்ட சிப்பாய் ஒருவர் கூறுகிறார்.

இந்தப் போரில் டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கிய சமயத்தில், இரு தரப்பினரும் தங்கள் வாகனங்களில் எதிரிகளின் டிரோன்களை முடக்கக் கூடிய மின்னணு போர் அமைப்புகளைப் பொருத்தினர். ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது அந்தப் பாதுகாப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்துவதில் தற்போது ரஷ்யா முன்னணியில் உள்ளது என்றால் யுக்ரேன் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிக்கிறது.

"நாங்கள் ஃபைபர் ஆப்டிக் டிரோன்களைப் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ரஷ்யா அவற்றை பயன்படுத்தத் தொடங்கவிட்டது. வழக்கமான டிரோன்களை விட உயரம் குறைவாக செல்ல வேண்டிய இடங்களில் இவற்றை பயன்படுத்தலாம். சொல்லப்போனால், வீடுகளுக்குள் நுழைந்து, வீட்டிற்குள்ளும் தாக்குதல் நடத்தலாம்," என்று 68வது ஜேகர் படைப்பிரிவின் டிரோன் பைலட் வெனியா கூறுகிறார்.

"கேபிள்களை வெட்ட கத்தரிக்கோலையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் வேடிக்கையாக பேசத் தொடங்கிவிட்டோம்," என்று பீரங்கி வீரர் செர்ஹி கூறுகிறார்.

ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் மெதுவாக இயங்கும், மரங்களில் அதன் கேபிள்கள் சிக்கிக்கொள்ளலாம் என்பது போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும், தற்போது, ரஷ்யா அவற்றை பரவலாக பயன்படுத்துகிறது. இதனால் யுக்ரேன் வீரர்கள் தங்களின் நிலைகளுக்கு செல்வதும், இடம் மாறுவதும் கூட சிரமமாகிவிட்டது.

ரஷ்யா, யுக்ரேன், போர், மோதல், முக்கிய செய்திகள், பிபிசி தமிழ்

படக்குறிப்பு,ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்துவதில் தற்போது ரஷ்யா முன்னணியில் உள்ளது என்றால் யுக்ரேன் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிக்கிறது.

ரஷ்யாவின் புதிய ஆயுதம் யுக்ரேன் வீரர்களை ஒரே இடத்தில் முடக்குவது எப்படி?

"ஒரு நிலைக்குள் நுழையும்போது, உங்களை யாராவது பார்த்துக் கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அது உங்கள் வாழ்க்கையின் இறுதியான நேரமாக இருக்கலாம்," என்று 5வது தாக்குதல் படைப்பிரிவின் உளவுப் பிரிவின் தலைமை சார்ஜென்ட் ஓல்ஸ் கூறுகிறார்.

அதாவது, வீரர்கள் தங்கள் நிலைகளிலேயே அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.

ஓல்ஸும் அவரது ஆட்களும் காலாட்படையில் உள்ளனர், இவர்கள் யுக்ரேன் படைப் பிரிவின் முன் வரிசையில் பணியாற்றுகின்றனர். தற்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் காலாட்படை வீரர்களிடம் பேசுவது அரிதாகிவிட்டது, ஏனெனில் அங்கே செல்வது மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. தற்காலிக தளமாக மாற்றப்பட்டுள்ள ஒரு கிராமப்புற வீட்டில், ஓல்ஸ் மற்றும் மாக்சிமை நாங்கள் சந்தித்தோம், பணியில் இல்லாதபோது வீரர்கள் அங்கு தான் ஓய்வெடுக்கிறார்கள்.

"அந்த நிலையில் நான் அதிகபட்சம் 31 நாட்கள் இருந்திருக்கிறேன், ஆனால் 90 மற்றும் 120 நாட்கள் அங்கேயே கழித்தவர்களும் உண்டு. இந்த டிரோன்கள் வருவதற்கு முன்பு, சுழற்சி அடிப்படையில் நாங்கள் 3 முதல் 7 நாள்கள் வரை மட்டுமே இருந்திருக்கிறோம்," என்று மாக்சிம் கூறுகிறார்.

"போர் என்பது ரத்தம், மரணம், ஈரமான சேறு மற்றும் தலை முதல் கால் வரை பரவும் குளிர் என மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிகிறது. மூன்று நாட்கள் தூங்காமல், ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருந்த சந்தர்ப்பமும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, ரஷ்யர்கள் அலைஅலையாக எங்களை நோக்கி வந்து கொண்டே இருந்தனர். நாங்கள் செய்யும் சிறிய ஒரு தவறு கூட எங்கள் மரணத்திற்கு காரணமாகும்."

ரஷ்யாவின் காலாட்படை அதன் தந்திரோபாயங்களை மாற்றியிருப்பதாக ஓல்ஸ் கூறுகிறார். "முதலில் குழுக்களாக வந்து தாக்கிய அவர்கள், இப்போது சில சமயங்களில் ஓரிருவரை மட்டுமே அனுப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள்களையும், சில சந்தர்ப்பங்களில், குவாட் பைக்குகளையும் பயன்படுத்துகிறார்கள்."

இதன் பொருள் என்னவென்றால், போர் முனையில் இனிமேல் ஒரு புறத்தில் யுக்ரேனியர்களையும் மறுபுறம் ரஷ்யர்களையும் கொண்ட பாரம்பரிய போர் முறை இருக்காது. சதுரங்கப் பலகையில் உள்ள கட்டங்கள் போன்று, இரு தரப்பின் நிலைகளும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.

ரஷ்யா, யுக்ரேன், போர், மோதல், முக்கிய செய்திகள், பிபிசி தமிழ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நாங்கள் செய்யும் சிறிய ஒரு தவறு கூட எங்கள் மரணத்திற்கு வழிவகை செய்யும் என்று யுக்ரேனிய வீரர்கள் தெரிவிக்கின்றனர்

தனிப்பட்ட பிரச்னைகள்

ரஷ்யா அண்மையில் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், போக்ரோவ்ஸ்க் அமைந்துள்ள டொனெட்ஸ்க் பகுதி முழுவதையும் கைப்பற்றுவது துரிதமானதாகவோ அல்லது சுலபமானதாகவோ இருக்காது.

யுக்ரேன் மோசமாக பின்வாங்கியுள்ளது, சண்டையைத் தொடர வேண்டுமானால், அதற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

போர் நான்காவது கோடைக்காலத்திற்குள் நுழையும் போது, மிகப் பெரிய ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக யுக்ரேனின் குறைந்த அளவிலான வீரர்களின் எண்ணிக்கையும் அதற்கு பிரச்னையாக இருக்கும். நாங்கள் சந்தித்த பெரும்பாலான வீரர்கள் போர் தொடங்கிய பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சில மாத பயிற்சியே அளிக்கப்பட்டது, ஆனால் கடுமையான போருக்கு நடுவில், அனுபவத்திலேயே நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ராணுவத்தில் சேருவதற்கு முன்பு பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் மாக்சிம். அவரது குடும்பத்தினர், அவரது வேலையை எப்படி சமாளிக்கின்றனர் என்று கேட்டேன்.

அதற்கு பதிலளித்த மாக்சிம், "மிகவும் கடினமானது, இது மிகவும் கடினமானதுதான். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. எனக்கு இரண்டு வயது மகன் இருக்கிறான், அவனை பார்க்க முடியவில்லை. அவனுக்கு வீடியோ கால் செய்கிறேன், இந்த சூழ்நிலையில் அதுதான் முடியும்… பரவாயில்லை," என்று கண்களில் நீர்மல்க சொல்கிறார்.

தனது நாட்டிற்காகப் போராடும் மாக்சிம் ஒரு சிப்பாய், ஆனால் அவர் தனது இரண்டு வயது மகனை அருகில் இருந்து கொஞ்ச முடியாத ஒரு தந்தையும் கூட.

கூடுதல் தகவல்: இமோஜென் ஆண்டர்சன், சஞ்சய் கங்குலி, வோலோடிமிர் லோஷ்கோ மற்றும் அனஸ்டாசியா லெவ்செங்கோ

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9dq9686xwdo

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்

2 weeks ago

Published By: RAJEEBAN

28 MAY, 2025 | 02:33 PM

image

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது.

france_pre.jpg

பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கருதுகின்றார்.

இரு அரசுகள் தீர்வு முன்னர் எப்போதையும் விட அவசியமானதுஇஎனினும் யுத்தம்இ .இடம்பெயர்வுஇதீவிரதன்மை மிகுந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை போன்றவற்றால் அது முன்னர் எப்போதையும் விட அதிக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத பிரான்ஸ் இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இஸ்ரேலின் காசாமீதான குண்டுவீச்சுக்கள் காரணமாகவும்இஇஸ்ரேலின் மூன்று மாத கால தடைகள் காரணமாக உணவிற்கும் மருந்திற்கும் நீருக்கும் காசாவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றதாலும் சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள அந்த மாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகள் குறித்து பிரான்ஸ் தனது நம்பிக்கைகளை குறைத்துள்ளது.

அராபிய தேசங்கள் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்தே ஆர்வமாக உள்ளன பாலஸ்தீன தேசம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என ஐரோப்பிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.

gaza_2025_1159.jpg

பாலஸ்தீன தேசத்திற்கான அடித்தளத்தினை ஆதரிப்பதற்காக பிரிட்டன் சகாக்களுடனும் ஏனைய நாடுகளுடன் இணைந்து எதனையும் செய்ய தயார் என பிரிட்டிஸ் பிரதமரின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரித்த முதல் ஜி7 நாடுகளாக பிரான்சும் இங்கிலாந்தும் மாறலாம்.

பாலஸ்தீன தேசம் என்பது பாலஸ்தீனியர்களின் தசாப்தகால கோரிக்கை.

இதேவேளை பிரான்ஸ் இராஜதந்திரிகளின் முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.பிரான்சின் நடவடிக்கை ஹமாசினை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுகின்றதுஇ2023 பயங்கரவாத தாக்குதலிற்காக அந்த அமைப்பிற்கு வெகுமதி வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது.

பாலஸ்தீன தேசத்தை பிரிட்டனும் பிரான்சும் அங்கீகரித்தால் இஸ்ரேல் இதனையே தெரிவிக்கப்போகின்றது.

கடந்த ஆண்டு ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நிலையில் 140க்கும் மேற்பட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. பல வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை

மக்ரோனின் முன்னிலை

பல ஆண்டுகளாக பாரிஸ் பாலஸ்தீன பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பிரான்ஸ் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என எச்சரிக்கiயும் விடுத்துவந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் "அங்கீகாரத்தை நோக்கி நகர" வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசு இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டு செயல்பாட்டில் பங்கேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மக்ரோன் கூறினார்.

ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை.

இப்போது காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்து வருவதால் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பது என்பது அமைதியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குப் பதிலாக ஒரு இஸ்ரேலிற்கு எதிரான ஒரு கண்டனமாகத் தோன்றும் என்று சிரியாவிற்கான முன்னாள் தூதரும் இன்ஸ்டிட்யூட் மோன்டைக்னேவின் உறுப்பினருமான மைக்கேல் டக்லோஸ் விளக்கினார்.

gaza_city_2025.jpg

இது இஸ்ரேலுக்கு எதிரான கண்டனமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

இருப்பினும் பாலஸ்தீனிய பிரதேசங்களை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பது "இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான நிபந்தனைகளை வரையறுக்க அரபு நாடுகளை ஊக்குவிக்கும்" என்று டுக்லோஸ் கூறினார். ஜூன் 17 முதல் 20 வரை நியூயார்க்கில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் இயல்பாக்கத்தை நோக்கி "நடவடிக்கைகளை" எடுக்கும் என்று பிரான்ஸ் நம்புவதாக மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரெஞ்சு தூதர் கூறினார்.

இறுதியில் காசா பகுதியில் வன்முறையை நிறுத்துவதும் ஓரளவிற்கு மேற்குக் கரையில் வன்முறையை நிறுத்துவதும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் மிகப்பெரிய இராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா என்ன செய்ய முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஐரோப்பிய அதிகாரிகள் கவனித்தாலும்இ வாஷிங்டன் ஒரு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை.

இது இறுதியில் வெற்றுப்பட்டாசாக மாறலாம் என ஐரோப்பிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/215904

உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி!

2 weeks ago

AA1yZ91O.png?resize=750%2C375&ssl=1

உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி!

உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேன் மீது அண்மையில்  ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலேயே உக்ரேனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி  உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம்  உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  ரஷ்ய ஜனாதிபதி  புட்டின் மீது கடும்  கண்டனம் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும்,  புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அத்துடன் புடின் தேவையில்லாமல்  பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும்  ட்ரம்ப்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ட்ரம்பின் விமர்சனத்தைத் தொடர்ந்து  புடினின் முக்கிய ஆலோசகர் மற்றும் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் வ்லாடிமிர் மெடின்ஸ்கி(Vladimir Medinsky), உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஸ்டென் உமெரோவுடன் Rusten Umerov தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார் எனவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் திங்கட் கிழமை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433710

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

2 weeks ago

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். 

ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார். 

டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தது டிரம்புக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது. இதனால் ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு பின்னடவுகளை ட்ரம்ப் எதிர்கொண்டுள்ளார். 

அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ட்ரம்ப் வரி விதித்தார். ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், கடுமையான பாதிப்பை சந்தித்தன. 

எனவே ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmb8sk34g0136qpbsrqjrezte

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன?

2 weeks ago

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன?

29 MAY, 2025 | 10:19 AM

image

 அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலன்மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த  ஜனாதிபதிடொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

பின்னணி என்ன? -  ட்ரம்ப்பின் புதிய வரி சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார். இந்நிலையில் அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

புதிய வரி மசோதாவின் சில அம்சங்களில் தனக்கு விருப்பம் இல்லை என ஊடகத்துடனான பேட்டியில் மஸ்க் தெரிவித்திருந்தார். இனி ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு சார்ந்து மஸ்க் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செயல் திறன்துறையில் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப்.  தேர்தலில் ட்ரம்ப்புக்கு மஸ்க் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில்முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும் வெள்ளை மாளிகை மேலாண்மை அலுவலகம் மற்றும்  போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/215948

“ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!

2 weeks ago

postcard-4-2025-05-28T211622.565.webp

“ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.

postcard-4-2025-05-28T211744.941.webp?re

இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், கடந்த மார்ச் 18ம் தேதி காசா மீது தாக்குதல்களை தொடங்கியது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காசாவில் பதுங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். கடந்த மே 13ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததை தற்போது உறுதிபடுத்தியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதலில், முன்னாள் ஹமாஸ் தலைவரும், முகமது சின்வாரின் சகோதரருமான யஹா சின்வார் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://news7tamil.live/hamas-leader-mohammed-sinwar-has-been-killed-israeli-prime-minister-netanyahu-announces.html

உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்

2 weeks 1 day ago

Published By: RAJEEBAN

28 MAY, 2025 | 11:29 AM

image

பட்டினியின் பிடியில் வாடும் பாலஸ்தீனியர்கள் உணவு விநியோகிக்கப்படும் நிலையத்தில் பெருமளவில் திரண்டதையடுத்து காசாவில் அமெரிக்கா ஆதரவுடனான புதிய குழுவின் மனிதாபிமான உதவி வழங்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்குள் சிக்கியுள்ளதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

உணவு விநியோகிக்கப்படும் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பெருமளவு பாலஸ்தீனியர்கள் நுழைந்ததை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என ஏபி தெரிவித்துள்ளது.

gaza_food__delivery__2025.jpg

இஸ்ரேலிய டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ள ஏபி செய்தியாளர் ஹெலிக்கொப்டரில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய படையினர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர்.

மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் ஒருவரின் காலில் இருந்து குருதி வெளியேறுகின்றது என ஏபி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

gaza_food__delivery_3__2025.jpg

காசாவின் தென்பகுதயில் உள்ள ரபாவில் காசா மனிதாபிமான மன்றம் என்ற அமைப்பு மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் இந்த முறை மூலம் காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்து ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் இதனை ஏற்க மறுத்துள்ளன.

பொதுமக்களிற்கான உணவை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இது அனுமதிக்கின்றது என ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

மனிதாபிமான பொருட்களை எதிர்பாத்திருக்கும் மக்களிற்கும் இஸ்ரேலிய துருப்பினருக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம் என சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மூன்று மாதகால இஸ்ரேலின் தடை காரணமாக பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள காசா மக்கள் உணவிற்காக காத்திருக்கின்றனர்.

பெருமளவானவர்கள் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு செவ்வாய்கிழமை சென்று உணவுப்பெட்டிகளை பெற்றுக்கொண்டனர் என பாலஸ்தீனியர்கள் ஏபிக்கு தெரிவித்துள்ளனர்.

தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் தங்களின் அகதிமுகாமிலிருந்து பல மைல் நடந்து மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியை நோக்கி சென்றனர்.

gaza_food__delivery_2__2025.jpg

அவர்கள் இஸ்ரேலின் இராணுவநிலைகள் ஊடாகவே அந்த இடத்தை சென்றடையவேண்டும்.

மதியமளவில் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணப்பட்டனர். நீண்ட சங்கிலிதொடர் வேலிப்பாதைகளில் பெருமளவில் மக்கள் குவிந்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

gaza_food__delivery_4__2025.jpg

ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு முக அடையாளங்கள் ஸ்கான் செய்யப்பட்ட பின்னர் உணவுபெட்டிகளை பெற அனுமதிக்கின்றனர் என ஏபிக்குதெரிவித்துள்ள இருவர்,கூட்டம் அதிகரித்ததும்,மக்கள் வேலிகளை இழுத்துவிழுத்திவிட்டு உணவுப்பெட்டிகளை எடுத்தனர்,அங்கிருந்த பணியாளர்கள் தப்பியோட வேண்டிய நிலையேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/215882

"அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி?

2 weeks 1 day ago

0_Adidas-File-Photo.jpg?resize=615%2C375

"அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி?

அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன் தொடர்பு கொண்டவர்களின் “முக்கியமாக” தொடர்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அடிடாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் “செயல்பாட்டு ரீதியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். கடவுச்சொற்கள், கடன் அட்டைத் தகவல் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகள் இந்தத் திருட்டால் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது ஒரு சிறிய தகவல் திருட்டு என நிறுவனம் குறைத்துக் காட்டினாலும், வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் தற்போது பெரிய அளவில் உருவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாளர் நம்பிக்கையை அசைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்தும்.

அடிடாஸ் மீதான இந்த இணையத் தாக்குதல், சமீப வாரங்களில் மார்க்ஸ் & ஸ்பென்சர், கூப் மற்றும் ஹாரோட்ஸ் போன்ற நிறுவனங்கள் சந்தித்த பெரும் இடையூறுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. மார்க்ஸ் & ஸ்பென்சர் நிறுவனம் ஈஸ்டர் வார இறுதியில் இலக்கு வைக்கப்பட்ட பிறகு, இந்தத் தாக்குதலால் சுமார் £300 மில்லியன் இழப்பு ஏற்படும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தது. அடிடாஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “அங்கீகரிக்கப்படாத ஒரு மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை வழங்குநர் மூலம் சில நுகர்வோர் தரவுகளைப் பெற்றது என்பதை அடிடாஸ் சமீபத்தில் அறிந்தோம். நாங்கள் உடனடியாக இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, முன்னணி தகவல் பாதுகாப்பு நிபுணர்களுடன் இணைந்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கினோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான ஒப்புதல் ஒருபுறம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இந்தத் தகவல்கள் எப்படி திருடப்பட்டது, யார் இதற்குப் பொறுப்பு என்பது போன்ற முக்கிய கேள்விகள் இன்னும் விடைதெரியாமல் உள்ளன.

பாதிக்கப்பட்ட தரவுகளில் கடவுச்சொற்கள், கடன் அட்டை அல்லது வேறு எந்த பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்கள் இல்லை என்றும், இது கடந்த காலத்தில் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தைத் தொடர்பு கொண்ட நுகர்வோரின் தொடர்புத் தகவல்களை முக்கியமாகக் கொண்டுள்ளது என்றும் அடிடாஸ் தெரிவித்துள்ளது. அடிடாஸ் நிறுவனம் பாதிக்கப்படக்கூடிய நுகர்வோருக்கும், பொருத்தமான தரவுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் நடைமுறை சட்டத்திற்கு இணங்கத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. “எங்கள் நுகர்வோரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட எந்தவொரு சிரமத்திற்கும் அல்லது கவலைக்கும் நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்,” என்று நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், வெறும் தொடர்புத் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டன என்பது ஒருவேளை உண்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம், வாடிக்கையாளர்களின் அடையாளம் அல்லது பிற தரவுகள் இந்தத் தாக்குதலால் சமரசம் செய்யப்படவில்லையா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. இது சைபர் பாதுகாப்பில் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த தீவிரமான விவாதத்தை தூண்டியுள்ளது.

Athavan News
No image previewஅடிடாஸில் பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு...
அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன...

“கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை!

2 weeks 1 day ago

New-Project-303.jpg?resize=750%2C375&ssl

“கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் முன்மொழிந்த “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இணைவதற்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ளார்.

மேலும், அந்த செயல்பாட்டில் தனது இணைப்பு அச்சுறுத்தலையும் புதுப்பித்துள்ளார்.

இது குறித்து செவ்வாயன்று (27) சமூக தளத்தில் டரம்ப் இட்ட பதிவில்,

அவர்கள் (கனடா) ஒரு தனி தேசமாக இருந்தால், கோல்டன் டோமில் சேர கனடாவுக்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.

ஆனால், அவர்கள் எங்கள் நேசத்துக்குரிய 51 ஆவது மாநிலமாக மாறினால் அவ்வாறு எந்த செலவும் இருக்காது என்று கூறினார்.

கனடா இந்த சலுகையை “பரிசீலனை செய்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.

கனடாவின் இறையாண்மையை வலியுறுத்திய மன்னர் சார்லஸ், நாடாளுமன்றத்தில் அரியணை உரை நிகழ்த்திய அதே நாளில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும், பிரதமர் மார்க் கார்னி தனது அரசாங்கத்தை ஒரு பெரிய ஐரோப்பிய பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் சேர உறுதியளித்தார்.

கடந்த வாரம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்கான திட்டங்களை வெளியிட்டார்.

இது 175 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, பல அடுக்கு அமைப்பாகும், இது முதல் முறையாக அமெரிக்க ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும்.

ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், இந்த அமைப்பு 2029 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும், “அவை விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட” ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

கோல்டன் டோம் திட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒப்புக்கொண்டுள்ளார்.

கனடாவிற்கு இது நல்ல யோசனையா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆம், கனடியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது நல்லது என்று கடந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கார்னி கூறினார்.

இருப்பினும், கனடா இன்னும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், கனடாவின் இறையாண்மை “விற்பனைக்கு இல்லை” என்று ட்ரம்பின் முன்னிலையில் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார்.

https://athavannews.com/2025/1433489

ஒரே நபரின் விந்தணுவின் மூலம் கருத்தரித்த 10 குழந்தைகள் பாதிப்பு; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி

2 weeks 1 day ago

விந்தணுவில் புற்றுநோய்; ஒரே குடும்பத்தில் 10 குழந்தைகள் பாதிப்பு;ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி

விந்தணுவில் புற்றுநோய்; ஒரே குடும்பத்தில் 10 குழந்தைகள் பாதிப்பு;ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி

ஐரோப்பாவில் ஒரே நபரின் விந்தணுவில் கருத்தரித்த 67 குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பரிசோதனையில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஒரே நபரின் விந்தணு மூலம் 67 பேர் கருத்தரித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் அந்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான ”லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின்” அல்லாத ”லிம்போமா” பாதிப்பு வழக்குகளும் அடங்கும்.

அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு விந்தணு தானத்தின் போது இந்த பிறழ்வு நிகழ்ந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது” என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது.

ஒரு டோனாரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வல்லுநர்கள், TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

https://thinakkural.lk/article/318407

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

2 weeks 2 days ago

emmanuel-brigitte-macron-052625-2-21cd0f

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்  கடந்த சில தினங்களுக்கு முன்னர்  அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர்  சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான  காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும்  நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத்  தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி  மெக்ரோன் 72 வயதான  தனது ஆசிரியரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்குப் பின்னர்  மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433368

சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா?

2 weeks 2 days ago

New-Project-286.jpg?resize=750%2C375&ssl

சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா?

சவுதி அரேபியா, 73 ஆண்டுகால மது தடையை நீக்கும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை திங்களன்று (26) அந் நாட்டு ஒருவர் மறுத்தார்.

இது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.

2034 கால்பந்து உலகக் கோப்பையை நடத்த நாடு தயாராகி வருவதால், சுற்றுலா அமைப்புகளில் மதுபான விற்பனையை அனுமதிக்க சவுதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

இந்தத் தகவலுக்கான நம்பகத் தகுந்த ஆதாரம் சுட்டிக்காட்டப்படவில்லை.

ஒரு காலத்தில் தீவிர பழமைவாத நாடாக இருந்த இந்த இராச்சியம், தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஒரு இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளையும் சர்வதேச வணிகங்களையும் ஈர்க்க சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் நடைமுறைத் தலைவரான, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2017 ஆம் ஆண்டில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்தது, பொது இடங்களில் பாலினப் பிரிவினை குறித்த சில விதிகளைத் தளர்த்தியது மற்றும் மதக் காவல்துறையின் அதிகாரத்தைக் குறைத்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில் வெளியான மதுபான விதிகள் பற்றிய அறிக்கை இராஜ்ஜியத்தில் ஒரு தீவிரமான விவாதத்தைத் தூண்டியது.

சவுதி அரேபியா மற்றும் குவைத் மட்டுமே மது விற்பனையைத் தடை செய்யும் வளைகுடா நாடுகள்.

சவுதி அரேபியாவில் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கும் ஒரு சிறிய நடவடிக்கை, கடந்த ஆண்டு தலைநகர் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் முதல் மதுபானக் கடை திறக்கப்பட்டது.

அதற்கு முன்பு, இராஜதந்திர அஞ்சல் மூலமாகவோ அல்லது கறுப்புச் சந்தையில் மட்டுமே மதுபானம் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433365

பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்

2 weeks 2 days ago

பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்

27 MAY, 2025 | 06:35 AM

image

லிவர்பூலில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் அணிவகுப்பு நிகழ்வின் மீது நபர் ஒரு காரால் மோதியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

TELEMMGLPICT000426280058_17483020237730_

பொதுமக்கள் மீது காரால் மோதிய  53 வயது பிரிட்டிஸ் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TELEMMGLPICT000426276462_17483021827580_

இதனை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/215780

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

2 weeks 3 days ago

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

May 25, 2025 4:43 pm

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் போது ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒரு குற்றச் செயல் என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் நிகழ்வின் போது கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது.

கப்பலை விடுவிப்பதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. அதிபரின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் அவர் மிகுந்த கோபமடைந்ததாக தெரிகிறது.

கடற்படை சக்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான சோங்ஜினில் புதிய போர்க்கப்பல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

விழாவின் போது, 5,000 தொன் எடையுள்ள நாசகாரக் கப்பலின் அடிப்பகுதியின் சில பகுதிகள் சரிந்து விழுந்ததால், கப்பல் சமநிலையை இழந்தது. இருப்பினும், விபத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தடுப்பு காவலில் உள்ளவர்களில் கப்பலை கட்டிய வடக்கு சோங்ஜின் கப்பல் கட்டும் தளத்தின் தலைமைப் பொறியாளரும் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பலானது ஏவுகணை சோதனை, அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுத அமைப்புக்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/failure-to-introduce-new-warship-north-korean-presidents-drastic-action/

உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்

2 weeks 3 days ago

AA1yZ91O.png?resize=750%2C375&ssl=1

உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்.

உக்ரேன்  மீது  ரஷ்யப்  படையினர் நடத்திய வான்  தாக்குதல் உலகளவில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்  புடின் ‘முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

உக்ரேன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்றைய தினம்  தெரிவித்தனா்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரேன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா்.

இந்நிலையில் இது குறித்து ஊடகஙரம்ப்” புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும்,  புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” விமர்சித்துள்ளார்.

அத்துடன் புடின் தேவையில்லாமல்  பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும்  ட்ரம்ப்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம்”உக்ரேன் ஜனாதிபதி  வொலோடிமிர் செலென்ஸ்கியையும்  ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப கருத்துத் தெரிவிக்கையில் ”செலென்ஸ்கியின் பேச்சு அவருடைய நாட்டுக்கு நன்மை செய்யவில்லை எனவும்,  அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது எனவும், இதனால் பல  சிக்கல்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1433169

Checked
Thu, 06/12/2025 - 11:09
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe