ஊர்ப்புதினம்

அகதிகள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் அவசியமில்லை; மாறாக கொள்கையிலேயே மாற்றம் வேண்டும் - சுமந்திரன்

3 months 1 week ago

02 JUN, 2025 | 05:35 PM

image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாறாக இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளியன்று தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அதில் பின்வருமாறு கூறிப்பிட்டிருந்தார்:

சட்டத்தின் ஊடாக அனுமதியளிக்கப்படாத துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிப்போருக்கு எதிராக தன்னியல்பாகப் பிரயோகிக்கப்படும் சட்டத்தின் விளைவாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்குப் பின்னர் இவ்விடயம் தொடர்பில் கரிசனை கொண்ட தரப்பினர் உரியவாறு செயலாற்றியிருந்தால், இச்சட்டத்தை இலகுவாக மாற்றியமைத்திருக்கமுடியும். இதுபற்றி நான் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடினேன். அவர் இக்கொள்கையை மாற்றியமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்தோடு இது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல. மாறாக இது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். நானும், அமைச்சர் சந்திரசேகரும் 2007 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அம்முகாம்களில்; இருந்த 28,500 இலங்கைப் பிரஜைகளுக்கு இந்நாட்டுப் பிரஜாவுரிமையை வழங்குவதற்கான சட்டத்தை 2008ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டோம்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பதிவை மேற்கோள்காட்டி தனது 'எக்ஸ்' தளத்தில் கடந்த சனிக்கிழமை பதிவொன்றைச் செய்திருந்த சுமந்திரன், 'குறித்த நபருக்கான பயண அனுமதிப்பத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதுடன், அது இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் அவரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்கையில் அந்நபரைக் கைதுசெய்த குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள், இதுபற்றி ஏன் ஆராயவில்லை. மாறாக அவரைக் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தது ஏன்?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேவேளை நேற்று திங்கட்கிழமை இதுபற்றி மற்றுமொரு பதிவைச் செய்துள்ள அவர், அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியமைப்பதாக அரசாங்கம் கூறியிருப்பதைப் பெரிதும் வரவேற்பதாகவும், இருப்பினும் இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

'ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் 'தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்' கீழ் நாடு திரும்பும் நபர்கள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள். மாறாக அவர்கள் நாட்டுக்குள் வரவேற்கப்படுவார்கள் எனும் கொள்கைசார் அறிவுறுத்தல் மாத்திரமே அவசியமாக இருக்கின்றது' என்றும் சுமந்திரன் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/216368

எரிபொருளில் கிடைக்கும் இலாபம் இன்று யாருடைய சட்டை பைகளுக்குள் செல்கிறது? - பிரேம்நாத் சி தொலவத்த கேள்வி

3 months 1 week ago

02 JUN, 2025 | 05:28 PM

image

(எம்.மனோசித்ரா)

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், நமது நாட்டில் எவ்வித விலை திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அன்று எரிபொருளால் கிடைத்த இலாபம் தேசிய மக்கள் சக்தி கூறியதைப் போன்று கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் சென்றது உண்மையெனில், இன்று அது யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களால் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி அப்போதைய அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் செல்வதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்தியது. ஆனால் இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அவ்வாறெனில் இப்போது கிடைக்கும் இலாபம் யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது?

அன்று உண்மையைக் கூறியிருந்தால், இன்று அரசாங்கத்துக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அன்றைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தான் இன்றும் இந்த அரசாங்கத்துக்கு உதவுகின்றனர். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவே பங்கேற்கின்றார்.

தமது ஆட்சியில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறிய நிதி அமைச்சின் செயலாளரும், மத்திய வங்கி ஆளுநரும் இன்றி இந்த அரசாங்கத்தால் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அன்று கூறிய பொய்களால்தான் இன்று இந்த அரசாங்கம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அரசாங்கத்தின் அழிவு வெகு தொலைவில் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/216375

திருகோணமலையில் காணி அபகரிப்பு, இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

3 months 1 week ago

02 JUN, 2025 | 06:01 PM

image

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின்  காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திங்கட்கிழமை (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில்  சமூக செயற்பாட்டாளர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், 

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின்  கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கிறது.

20250602_172507.jpg

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக் கூறி, பெரும் பிரச்சாரம் செய்துவந்த ஜேவிபி அரசு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர் சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும்.

அத்துடன் நீண்ட நாட்களாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வினையும் தராமல் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது.     

கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலயத்தில் காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினை மீறிய புத்தவிகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பல நூறு சமயத் தலங்களின் பிரச்சினைகள் தொடர்பான பட்டியல் நீள்கிறது என்று குரல் எழுப்பினர்.

20250602_172227.jpg

20250602_172624.jpg

https://www.virakesari.lk/article/216379

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு

3 months 1 week ago

02 JUN, 2025 | 03:34 PM

image

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 900,000 US$ (சுமார் ரூ. 270 மில்லியன்) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நன்கொடை அளித்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை 47 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.

KAMOSHIDA Naoaki Chargé d' Affaires ad interim, கண்ணிவெடி ஆலோசனைக் குழு (MAG) மற்றும் ஹாலோ அறக்கட்டளையுடன் (Halo Trust) அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவி (GGP)" திட்டத்தின் கீழ் இரண்டு கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கான மானிய ஒப்பந்தங்களில் மே 30, 2025 அன்று  கையெழுத்திட்டார். 

MAG மற்றும் HALOவின் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 13,000 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் மேம்பட்ட வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு யுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும்.

இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல், மீள்குடியேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு அடிப்படை படியாக கண்ணிவெடி அகற்றலை ஜப்பான் கருதுகிறது என்று  KAMOSHIDA வலியுறுத்தினார். ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கான வலுவான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை கண்ணிவெடி பாதிப்பு இல்லாத நாடாக மாறும் என்றும், இது நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

MAG இன் இயக்குநர் ஜீனத் கரேவால் கூறினார்.

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பொதுமக்களின் வாழ்க்கையில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் நில விடுவிப்பு நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட நிலங்களை அகற்றுவது கிராமங்களில் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவுவதோடு கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளின் அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன, செழிப்பு மற்றும் பாதுகாப்பான தேசத்தை நோக்கிய பாதையை அமைக்கின்றன.

ஜனவரி 2025 நிலவரப்படி, MAG மொத்தம் 100,930,005 ㎡நிலத்தை விடுவித்துள்ளது மற்றும் 2002 முதல் 103,467 க்கும் மேற்பட்ட வெடிக்கும் போர் எச்சங்களை அகற்றியுள்ளது.

பல தசாப்தங்களாக ஆயுத மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆள் எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் பிற ஆபத்தான மாசுபாடுகளை அகற்றுவதற்கு ஜப்பான் தூதரகம் மற்றும் மக்கள் அளித்த தொடர்ச்சியான ஆதரவுக்கு MAG தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

“உயிர்களைக் காப்பாற்றுங்கள், எதிர்காலத்தைக் கட்டியெழுப்புங்கள்” என்ற எங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக, MAG தூதரகம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் கண்ணிவெடி இல்லாத இலங்கையை உருவாக்குவதற்கான எங்கள் இலக்கை அடைய அவர்களின் தொடர்ச்சியான ஆதரவையும் உதவியையும் எதிர்நோக்குகிறது.”

HALOவின் துணைத் திட்ட மேலாளர் ஹன்னா எலிசபெத் பிக்டன் கூறுகையில்;

“கடந்த 22 ஆண்டுகளில், ஜப்பான் HALOவின் மிகவும் நிலையான ஆதரவாளராக இருந்து வருகிறது. இக்காலத்தில், HALO கிட்டத்தட்ட 300,000 ஆள் எதிர்ப்பு கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழித்துள்ளது மற்றும் முன்னர் மாசுபட்ட 120 ㎢ நிலத்தை விடுவித்துள்ளது.

இது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 150,300 நபர்களின் மீள்குடியேற்றத்திற்கு பங்களித்துள்ளது, நிலையான வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளது மற்றும் சமூக மறுகட்டமைப்பு மற்றும் நிலைப்படுத்தலை செயல்படுத்துகிறது. இது உள்ளூர் ஆண்களும் பெண்களும் மிகவும் மதிக்கப்படும் தொழிலில் பங்கேற்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கவும் உதவியுள்ளது.

ஜப்பானின் ஆதரவுடன், மீதமுள்ள மாசுபாட்டைக் கண்டறிந்து அகற்றுவதில் HALO செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தை (NMAC) தேசிய நிறைவு செயல்முறையை செயல்படுத்துவதில் ஆதரிக்கிறது.

கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு இந்த உதவி, இலங்கை அரசாங்கத்தை அதன் அனைத்து அறியப்பட்ட கண்ணிவெடி மற்றும் பிற வெடிக்கும் மாசுபாடுகளிலிருந்து நாட்டை விடுவிப்பதற்க்கும் அதன் ஆள் எதிர்ப்பு கண்ணிவெடி தடை ஒப்பந்தக் கடமையை நிறைவேற்றுவதற்க்கும் மிகவும் முக்கியமானது.”

Photo.1.jpg

Photo.3__1_.jpg

Photo.2.jpg

https://www.bbc.com/tamil/articles/cn9je4x5859o

ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!

3 months 1 week ago

ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!

http://seithy.com/siteadmin/upload/suthan-020625-seithy.jpg

தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் பொன்.சுதன் தெரிவித்துள்ளார். நேற்று சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவற் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

  

“இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பிற்பகல் 02.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற நான் மாலை 06.00 கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன் 02.00 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடசிவரை அவர் கூறவில்லை.

பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது.

ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதனை தேடி அறிந்த போது யாழ் தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=334084&category=TamilNews&language=tamil

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை!See

3 months 1 week ago

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை!

00]

http://seithy.com/siteadmin/upload/easter-attack-111124-seithy.jpg

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தி தெரிவித்த தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்தார்.

  

"நாங்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கொண்டுவருவது, மற்றவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதைப் போலவே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

http://seithy.com/breifNews.php?newsID=334090&category=TamilNews&language=tamil

தமிழ் தேசிய பேரவை - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையே கொள்கை ரீதியான இணக்க ஒப்பந்தம் கைச்சாத்து

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2025 | 03:45 PM

image

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளனர். 

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில், 

சுதந்திர இலங்கைத் தீவில் கடந்த 77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில் ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனது விவகாரங்களைத் தானே கையாளக்கூடிய விதத்திலும் தனது சுதந்திரத்தை நிலை நிறுத்தும் வகையிலும் பூரண பொறுப்பு வாய்ந்த ஒரு சுயாட்சி அரசியல் ஆட்சி முறையைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும், இந்த இலக்கினை அடைவதற்கு தமிழ்த் தேசத்தினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்திருக்கும் ஒற்றையாட்சி எனப்படும் அரசியல் ஆட்சி முறையின் எந்தவொரு ஏற்பாட்டின் கீழும் அறவே இடமில்லை என்பதுடன் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்றினை, தமிழ்த் தேசத்தின் மரபுவழித் தாயகத்தில், இலங்கைத் தீவு என்ற யாதார்த்த ரீதியான வரையறைக்குள் ஏற்படுத்துவதற்கு, ஒற்றுமையாகவும் உறுதியாகவும் பாடுபட நாம் தீர்மானித்துள்ளோம் என்பதையும் பிரகடனப்படுத்துகின்றோம்.

இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு என்பது ஒரு புதிய அரசியல் சாசனத்தை திட்டவட்டமானதும் தெளிவானதுமான முறையில் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக, தமிழ்த் தேசத்தின் அரசியல் ஒற்றுமையை தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி ஏற்படுத்தப்படுகின்றது.

1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழித் தாயகத்தில், ஒரு பூரணமான சம்ஸ்டி ஆட்சி முறை, அரசியல்சாசன ரீதியாக ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம் செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்.

மேலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன ரீதியானவையும், வலுவானவையுமான அரசியல் நிர்வாக ஏற்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

2. அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ இறுதியானதோ தீர்வு அல்ல என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.

3. கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது, ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற காரணத்தால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளோம் என்பதனை இருதரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

4. போரின் போதும் அதற்குப் பின்னும் இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில், உள்ளகப் பொறிமுறைகளை முழுமையாக நிராகரித்துச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை ஒன்று அவசியமானது என்பதனை இரு தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

5. இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ்த் தேசிய சக்திகளும் நேர்மையாகவும், விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

6. இந்த அடிப்படையில் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஒன்றின் கீழ் கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும், தமிழ்த் தேசியம் சார்ந்து நேர்மையாக செயற்படும் சக்திகள் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு எமது மக்கள் அனைவரினதும் ஆதரவையம் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நாங்கள் நாடி நிற்கின்றோம்.

7. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதிலும் அரசியல் சாசன ரீதியாக அவற்றை நிலைநாட்டிக் கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் முழுமையான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயல்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெகுசன அமைப்புகளும் ஒருங்கிணைந்து, மக்களின் பங்கேற்புடன் தயாரித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளமுடியும் என நாம் கருதுகின்றோம்.

8. இந்தக் குறிக்கோளை ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும்,மக்கள் எழுச்சியினாலுமே சாதிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி, ஒரு பரந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பாகவும், இந்த இலக்கினை முன்வைத்து சகல தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்துச் சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும், அதை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவினை நாடிநிற்கின்றோம்.

9. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இரண்டு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம்.

என குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்று தமிழ் தேசிய பேரவையின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கைச்சாத்து இட்டுள்ளனர்.  

501156962_2016488108878948_4885936248109

494822683_1935115060579692_5749278701029

494828995_1251140599730056_3300799345173

494835305_1466911771350960_2840280692798

500423042_708978121739981_79646336766074

https://www.virakesari.lk/article/216332

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!

3 months 1 week ago

02 JUN, 2025 | 03:38 PM

image

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது.

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.

குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

20250602_133351.jpg

20250602_131653.jpg

20250602_132128.jpg

20250602_130948.jpg

20250602_134239.jpg

https://www.virakesari.lk/article/216339

சங்கு - சைக்கிள் சந்திப்பு!

3 months 1 week ago

00]சங்கு - சைக்கிள் சந்திப்பு!

http://seithy.com/siteadmin/upload/DTNA-020625-seithy.jpeg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

  

சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

http://seithy.com/breifNews.php?newsID=334091&category=TamilNews&language=tamil

பெப்ரவரி முதல் இராணுவத்தை சேர்ந்த 2,900 பேர் கைது

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2025 | 11:30 AM

image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய வீரர்கள் உட்பட மொத்தம் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி  மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 2,261 இராணுவ வீரர்கள், 194 கடற்படை வீரர்கள் மற்றும் 198 விமானப்படை வீரர்கள் அடங்குவர்.

இதே காலப்பகுதியில் பொலிஸார் மேலும் 330 பேரைக் கைது செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/216317

யாழ். போதனா அருகே மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி ; சகோதரர்கள் இருவருக்கு எதிராக முறைப்பாடு

3 months 1 week ago

02 JUN, 2025 | 09:47 AM

image

யாழ். போதனா வைத்தியசாலை அருகே வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் 34 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

சனிக்கிழமை (31)  இரவு இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

பளையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நகர பகுதியில் தனது வேலை நிமித்தம் வந்துள்ளார். பேருந்தில் பயணிப்பதற்காக தனது சைக்கிளை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டவரிடம் அங்கு வந்த ஒருவர் அவரை தனக்கு தெரியும் என்று கூறி கைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டுள்ளார்.

இருட்டில் நின்ற நபரிடம் தான் கைபேசி பாவிப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். உடனே எதிரில் நின்றவர் அவரின் முகத்தில் குத்திவிட்டு பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியிலிருந்தவரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.

இவர் கூறியதைக் கேட்ட பணியிலிருந்த நபர், அவ்வாறு செய்தவர் தனது தம்பிதான் என்றும் நாளை வாருங்கள் உங்கள் பணப்பையை மீட்டுத் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். 

அத்துடன், பேருந்தில் செல்வதற்கு செலவாக 500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இரவு நேரமென்பதால் பாதிக்கப்பட்டவரும் வேறு வழியின்றி அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.   

மறுநாள் காலை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்துக்கு சென்ற பாதிக்கப்பட்ட நபரிடம் தனது தம்பியிடம் வாங்கினார் என்று கூறி அவரின் பணப்பையை வாகன பாதுகாப்பு பணியிலிருந்தவர் கொடுத்துள்ளார்.

பணப் பையை வாங்கிய பாதிக்கப்பட்ட நபர், அந்த இடத்திலேயே சோதனையிட்டுள்ளார். பணப்பையிலிருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததுடன், வங்கி அட்டை மூலம் 26 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில், பணப் பையை வழங்கியவரிடம் பாதிக்கப்பட்டவர் கேட்டபோது, அவருக்கு ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, “எனது தம்பியை பிடிக்கமுடியாது. நீ இதைக் கொண்டு போ”, என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியாற்றிய நபர் திட்டமிட்டு இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்றும் பொலிஸார் கூறினர் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/216302

முல்லைத்தீவு உடுப்புக்குளம் - தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

3 months 2 weeks ago

தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

Published By: VISHNU

01 JUN, 2025 | 08:40 PM

image

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில்  இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும்  நீரிற்குள் மூழ்கிய நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும்  10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன்  எனும் இருவரே  உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு  பொலிஸார்  மேற்கொண்டு  வருகின்றனர்.

அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல்  குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற  இரு  மாணவிகள்  கேணியில் தவறி வீழ்ந்து. உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216288

முல்லைத்தீவில் சோகம்: கோயில் குளத்தில் விழுந்து இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

3 months 2 weeks ago

Published By: VISHNU

01 JUN, 2025 | 08:04 PM

image

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

1000303237.jpg

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். 

1000303239.jpg

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

1000270319.jpg

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216285

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று; தொற்று நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 05:19 PM

image

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு  வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும்  நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நீரில்  ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம்  கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும்  நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

IMG-20250601-WA0007.jpg

https://www.virakesari.lk/article/216271

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள்!

3 months 2 weeks ago

Published By: VISHNU

01 JUN, 2025 | 08:44 PM

image

ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.

கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216289

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

3 months 2 weeks ago

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, 

“இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடனடியாக தலையிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது என்பதே புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக உள்ளது. 

தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும். 

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். அதேவேளை, மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும்.”- என்றார்.

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள்...
No image previewயாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; ஞா. சிறிநேசன்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 04:20 PM

image

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (31) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மட்டு.ஊடக அமையம்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,வடகிழக்கு,தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் அமரர் நடேசனின் உருவப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களான நடராசா மற்றும் பெடிகமகே ஆகியோரினால் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் சுடரை மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் ஏற்றிவைத்ததை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு தெற்கிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-06-01_at_14.53.30__1

WhatsApp_Image_2025-06-01_at_14.53.32.jp

WhatsApp_Image_2025-06-01_at_14.53.37__1

WhatsApp_Image_2025-06-01_at_14.53.34.jp

https://www.virakesari.lk/article/216263

குடிவரவு, குடியகல்வு குறித்து விரைவில் சட்டதிருத்தம் ; அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவிப்பு

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 12:11 PM

image

ஆர்.ராம்

நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவித்தார்.

அத்துடன், அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதான நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து  வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அமைச்சர் ஆனந்த விஜயபாலவைத்தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலையத்தில் குடிவரவு, குடிகல்வு அதிகாரிகளால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கையில் இருந்து வெளியேறும்போது முறைப்படியான சட்டங்களை பின்பற்றியிருக்கவில்லை. அதனைக் காரணம் காண்பித்தே அவர் மீண்டும் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இதனைத் தவிர அவர் கைது செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை. அந்த வகையில் அவரை விடுவிப்பதற்குரிய வழிகாட்டல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன்.

அதேநேரம், இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டங்களில் காணப்படுகின்ற ஏற்பாடுகளால் தான் இவ்வாறு கைது செய்யப்பட வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.

ஆனால் அகதிகளாக சென்றவர்களோ, புலம்பெயர்ந்தவர்களோ மீண்டும் நாடு திரும்பும் போது அவர்களைக் கைது செய்வது எமது அரசாங்கத்தின்கொள்கை அல்ல.

அந்த வகையில், நாட்டில் அசாதாரணச் சூழல் காணப்பட்ட போது அக்காலத்தில் ஏதோவொரு வகையில் வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காத வகையில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது.

அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அத்துடன் புலம்பெயர்ந்துள்ளவர்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியுள்ளவர்கள் எந்தவிதமான அச்சங்களுமின்றி நாடு திரும்ப முடியும்.

அவர்கள் தங்களது நிலங்களில் வாழுவதற்கான உரித்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நாம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீள நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.

ஆகவே, குறித்த விடயத்தினைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக நன்மைகளை அடைவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/216242

மாகண அதிகாரங்களை சூட்சுமமாக மீளப்பெறுவதற்கு முயற்சி; ஈ.பி.டி.பி.சுட்டிக்காட்டு

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 12:10 PM

image

(நமது நிருபர்)

மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்கவேண்டும்.

மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

1987 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம்.

குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாகாண சபையின் முக்கியமான பல அதிகாரங்களை மீளவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்போது, ஆளுந்தரப்பில் பங்காளிகளாக இருந்த நாம், அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் பேசும் பிரதிநிதிகளையும் மாகாண சபை தொடர்பான நியாயத்தினை புரிந்து கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து சுமார் 50 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட. வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முனனெடுக்கப்பட்டன.

குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, 1000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம் எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தினையே கைவிடச் செய்ததில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது மன்னார் வைத்தியசாலை விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக மாகாண சபையை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளாத6 தரப்பினர் ஆளுந்தரப்பாக இருக்கின்ற நிலையில், எமது அரசியல் அபிலாஷைகளுக்கான அடிப்படையாக கொண்ட மாகாண சபை அதிகாரங்களை வலுவிழக்க செய்கின்ற, மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கி எடுக்கப்படுகின்ற அபாயம் அதிகளவில் இருக்கின்றது.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எமது மக்களின் நலன்சார்ந்த தரப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணில் எண்ணெய் ஊற்றி விடயங்களை அவதானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/216234

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 10:57 AM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.

அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.

வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது,  இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

https://www.virakesari.lk/article/216228

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr