ஊர்ப்புதினம்

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

3 months 1 week ago

New-Project-1-11.jpg?resize=600%2C300&ss

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்தில் வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, இலகுவான முறையில் விமான நிலையத்திலேயே குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த புதிய சேவை ஒகஸ்ட் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் , இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, இந்த அனுமதி பத்திரத்திற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை காரணமாக ஏற்படும் சிரமம் குறித்து எதிர்மறையான கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1439685

கட்டண அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மெய்நிகர் பேச்சுவார்த்தை!

3 months 1 week ago

New-Project-233.jpg?resize=750%2C375&ssl

கட்டண அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மெய்நிகர் பேச்சுவார்த்தை!

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்க முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான விவாதங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்று (18) இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற உள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தலைமையில், தொடர்புடைய அரசு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலை நடத்துவார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதே இந்த சந்திப்பின் முதன்மையான நோக்கமாகும்.

ஆரம்பத்தில் இலங்கை மீது 44% வரியை விதித்த அமெரிக்கா, அண்மையில் அதை 30% வரிகளாக திருத்தியது.

இந்த வரிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருத்தப்பட்ட கட்டணங்களை மேலும் குறைக்க இலங்கை அதிகாரிகள் தற்போது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439684

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

3 months 1 week ago

New-Project-232.jpg?resize=750%2C375&ssl

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் இன்று (18)வெளியிடப்பட்டது.

அதன்படி, சாரதி பணிக்கு 450 காலியிடங்கள் (ஆண்களுக்கு 425 மற்றும் பெண்களுக்கு 25) மற்றும் நடத்துனர் பணிக்கு 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275 மற்றும் பெண்களுக்கு 25) உள்ளன.

விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி 2025 ஜூலை 31 ஆகும்.

விண்ணப்பிக்கும் பதவி மற்றும் தொடர்புடைய மாகாணம் உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் SLTB அறிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1439672

9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு

3 months 1 week ago

9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு

July 18, 2025 11:03 am

9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://oruvan.com/opportunity-to-visit-the-9-arch-bridge-at-night/

காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு

3 months 1 week ago

காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு

1691269552.jpg

வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என்று வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன. அத்துடன், காயங்களை ஏற்படுத்திய, வாகனங்கள் சேதமடைந்து பல விபத்துகளும் அண்மையில் இடம்பெற்றுள்ளன. வல்லைப் பாலம் மேலும்மேலும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில், அதைச் சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்-என்றார்.

இதற்குப் பதில் வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்ததலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன், வல்லைப் பாலம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கப்படும் என்றார். இதையடுத்து, வல்லைப் பாலத்தில் போதியளவு மின்விளக்குகள் இல்லை என்ற விடயத்தை இளங்குமரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். இதற்குப் பதில் வழங்கிய தவிசாளர், 'கடந்த காலங்களில் வல்லைப் பாலத்தில் போதியளவு மின் விளக்குகள் பூட்டப்பட்டன. எனினும், அவை காலப்போக்கில் திருடப்பட்டுவிட்டன. உடனடித் தேவை கருதி சில சோலர் விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார்.

https://newuthayan.com/article/காவுவாங்கும்_வல்லைப்பாலம்;_தவிசாளர்_நிரோஷ்_சுட்டிக்காட்டு

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!

3 months 1 week ago

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!

2105191707.jpeg

ஆடிப்பிறப்பன்று படைத்தரப்பு அறிவிப்பு

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள குறித்த ஆலயத்துக்கு கடந்த ஆறுமாத காலத்துக்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை. விசேட தினங்களில் மாத்திரம் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆலயத்துக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 'ஆலயத்துக்கு மாத்திரம் செல்வதற்கு' என உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு. அந்தப்பாதை ஊடாக மக்கள் ஆலயத்துக்கு மாத்திரம் சென்று வழிபட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆலயத்துக்குச் செல்வதற்காக அந்தப் பகுதி மக்கள் தமது சொந்த நிதியிலேயே குறித்த பிரத்தியேகப் பாதையை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/பலாலி_இராஜ_இராஜேஸ்வரி_அம்மன்_கோயிலுக்கு_பிரத்தியேக_பாதையூடாக_சென்று_வழிபட_அனுமதி!

யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு!

3 months 1 week ago

யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு!

895360039.jpg

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் கூட்டுப்பாய்ச்சல்

யாழ் மாவட்டச் செயலர் தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். அவை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் குவிந்தபடி உள்ளன என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவரான வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. அப்போது ஒருகட்டத்தில், யாழ். மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மணல் கடத்தலின்போது கைப்பற்றப்பட்ட வாகனத்தை விடுவிக்க யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் பணித்ததாக நான் அறிந்தேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டினார். இதனை மறுதலித்த மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன். ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் இவ்வாறு கதைக்கக் கூடாது. நான் அவ்வாறு எதுவிதமான செயலிலும் ஈடுபடவில்லை' - என்றார். இதனையடுத்து ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கருணைநாதன் இளங்குமரன், 'இங்குள்ள பலர் பக்கச்சார்பாக நடக்கின்றனர். இதனால் பல பிரதேச செயலாளர்களும், நிர்வாக அதிகாரிகளும் பழிவாங்கப்படுகின்றனர். அந்தப் பழிவாங்கலால் திட்டமிட்ட இடமாற்றங்களுக்கும் உட்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

அதனை ஆமோதித்த அர்ச்சுனா எம்.பி. "யாழ்.மாவட்டச் செயலரின் பழிவாங்கலால் தாம் பாதிக்கப்பட்டுள்ளனரென எட்டு பிரதேச செயலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்" - என்றார். அதனைத் தொடர்ந்து ஆளும்கட்சி எம்.பி.க்களான பவானந்தராஜா, இளங்குமரன் ஆகியோர் மாவட்டச்செயலர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அத்துடன், பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்து, வடக்கு ஆளுநர் தலைமையில் குழு அமைத்து இடமாற்றங்களை தீர்மானிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. எனினும் முடிவேதுமின்றி கூட்டம் அவசர அவசரமாக முடிவுறுத்தப்பட்டது.

https://newuthayan.com/article/யாழ்._மாவட்டச்_செயலர்_தன்னிச்சைச்_செயற்பாடு!

இலங்கையர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை!

3 months 1 week ago

New-Project-223.jpg?resize=750%2C375&ssl

இலங்கையர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மாநியங்கள் அல்லது உதவிகளை வழங்குவதாக கூறி, தனி நபர்களிடமிருந்து பண மோசடி செய்யும் நபர் தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள உத்தியோப்பூர்வ அறிவிப்பில்,

சம்பந்தப்பட்ட நபர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, குறிப்பாக இளம் தொழில்முனைவோருக்கு மானியங்கள் அல்லது நிதி வழங்குவதாகக் கூறுவது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த நபர் பொய்யான வாக்குறுதிகளின் பேரில் தனிநபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் காணாமல் போவதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு மோசடி என்பதை நினைவில் கொள்ளவும்!

அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மானியங்களும் ஒப்பந்தங்களும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தேர்வு செயல்முறைகளைப் பின்பற்றி மாத்திரமே வழங்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்வு மற்றும் விருது நடைமுறைகள் முகவர்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் சேவைகளை நிதியுதவியை எளிதாக்க ஒருபோதும் அனுமதிக்காது.

மேலும், சமர்ப்பிக்கப்பட்ட மானிய முன்மொழிவுகள் அல்லது கொள்முதல் டெண்டர்களைச் செயல்படுத்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து எந்தப் பணத்தையும் ஒருபோதும் கோராது.

இதுபோன்ற மோசடிச் செயல்பாட்டை நீங்கள் சந்தித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2025/1439610

தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?

3 months 1 week ago

34-1.jpg?resize=750%2C375&ssl=1

தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே  மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும்  தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற  வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று விகாரை வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில், புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் அங்கு சென்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1439624

தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

3 months 1 week ago

download-5.jpg?resize=275%2C183&ssl=1

தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (17)  ரத்து செய்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 https://athavannews.com/2025/1439594

வவுனியாவில் மகாவலி காணிப் பகிர்வு தொடர்பில் சிங்கள - தமிழ் மக்களிடையே அமைதியின்மை

3 months 2 weeks ago

17 JUL, 2025 | 05:16 PM

image

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்துக்காக அரச நிறுவனமொன்று நிலத்தை பகிர்ந்தளித்தமையானது அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே முறுகல் நிலையை உருவாக்கியுள்ளது.

தங்கள் விவசாய நிலங்களை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்கள் புதிதாக காடழிப்பிலும் ஈடுபடுவதாக தமிழ் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், சிங்கள மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தும் காணி தமது பரம்பரைக் காணி எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் அந்தக் காணியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்தக் காணியில் விவசாயம் செய்துவரும் ஒரு சிங்கள விவசாயி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள திரிவைத்தகுளம் கிராமத்திற்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதியில் வசிக்கும் சிங்கள மக்கள், தமிழ் மக்களின் சுமார் 1,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

103.jpeg

வன்னி பகுதியில் காடழிப்பைத் தடுக்க வனப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய ரவிகரன், அந்த திணைக்களம் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது பழி சுமத்தும் விதமாகவும் அல்லது தமிழ் மக்களை அழிக்கும் விதமாகவும் செயற்படுவதாக தெரிவித்தார். 

பெரிய அளவிலான காடழிப்பு குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் விசாரித்ததாகக் கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச்செல்வன், துப்பரவு செய்யப்படும் காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என பிராந்திய நில அலுவலர் தன்னிடம் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் நான் விசாரித்தபோது, அவர், இது மகாவலி எல் வலயத்திற்கு சொந்தமானது என்பதால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

காணி, மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திய வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெடுங்கேணி அலுவலகம், காடுகளை அழிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்ததாக, தமிழ்ச்செல்வன் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

107.jpeg

நெடுங்கேணி வன இலாகா திணைக்களத்திடம் கேட்டபோது 2021ஆம் ஆண்டு மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணப்படுவதால் இது தொடர்பில் தலையீடு செய்ய முடியாது எனவும் எனினும் காணி அபகரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தமையால் தாங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரியின் போகஸ்வெவ மற்றும் வெலிஓயா அலுவலகங்களில் சென்று பேசியதோடு இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரியதாக அதிகாரி தெரிவித்தார்.

புதிதாக காடுகளை அழித்து கையகப்படுத்தப்பட்ட காணிக்கு மேலதிகமாக, தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் நெல் வயல் காணிகளை சிங்கள மக்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டினார்.

300, 400 ஏக்கர் காணி டோசர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களது 350, 400 ஏக்கர் வயல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு வவுனியா வடக்கு மகாவலி எல் வலயத்திற்குள் 5259.83 ஹெக்டேயர் செல்வதால் இதில் தலையீடு செய்ய முடியாது எனவும் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதகாவும் குறிப்பிட்டனர். இதன் ஊடாக இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய முடியுமென வன இலாகா அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிங்கள மக்கள், தமிழ் மக்களின் விவசாய காணிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூறிய குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அந்த விவசாய காணிகள் தனது மூதாதையர்களும் கிராம மக்களும் 1955 முதல் பயிரிட்டு வந்த காணிகள் என போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் பிமல் தர்மதாச, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுக் கூறியுள்ளார்.

106.jpeg

அதில் அவர் கூறுகையில், 

“1955ஆம் ஆண்டு எனது தந்தை, எங்கள் பியதாச மாமா மற்றும் எங்கள் மக்கள் இந்த வயலில் பயிரிட்டனர். நாங்கள் இந்த வயலை பயிரிட்டுக் கொண்டிருந்தபோதுதான், 1985ஆம் ஆண்டு, எங்கள் கிராமமான போகஸ்வெவ புலிகளால் தாக்கப்பட்டு, எங்கள் கிராம மக்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் அகதிகளானோம். பின்னர் நாங்கள் அகதி முகாம்களில் வசித்து வந்தோம். போர் முடிவடைந்த பின்னர், 2010  ஜூலை மாதம் 26ஆம் திகதி நாங்கள் மீள்குடியேறினோம்” என்றார். 

இவ்வாறு மீள்குடியேறிய பின்னர், தமது காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் அனுமதிகளை சமர்ப்பித்து, நிலத்தை விடுவிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்ததாக விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் பிமல் தர்மதாச, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய காணொளியில் விளக்கம் அளித்துள்ளார்.

வனப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்த நிலையில், கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையே தலா 12 ஆயிரம் ஹெக்டேயர் காணிப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறும் பிமல் தர்மதாச, வனப் பாதுகாப்புத் திணைக்களம் 12 ஆயிரம் ஹெக்டேயர் முள் காடுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியதாகவும் கூறுகிறார். 

இதற்கமைய, அவரது விவசாய காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கைகளுக்குச் சென்றுள்ளதோடு காணி உரிமையை கொண்டுள்ள சிங்கள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தலா 40 ஏக்கர் நிலத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் விடுவித்து, 2020 முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை வழங்கியதாக பிமல் தர்மதாச மேலும் கூறுகின்றார்.

கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள விவசாயிகள் அந்த நிலத்தில் விவசாயம் செய்துவருவதாக அவர் கூறுவதோடு, தற்போது தமிழ் பிரதிநிதிகள் காணியின் உரிமையை கோரியுள்ளதால், அந்தக் காணியில் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.

சுமார் 40 வருடங்களாக அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த  காணி, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் சிங்கள விவசாயிகளால் பயிரிடுவதற்காக விடுவிக்கப்படுவதாகக் கூறும் பிமல் தர்மதாச, சிங்கள விவசாயிகள் குத்தகை அனுமதியின் கீழ் காணியில் பயிரிடுவதாகவும் மேலும் கூறினார். 

https://www.virakesari.lk/article/220244

துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை; - ரவிகரன் வலியுறுத்து

3 months 2 weeks ago

துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை; இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புங்கள் - ரவிகரன் வலியுறுத்து

17 JUL, 2025 | 02:17 PM

image

துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன் மூலம் துணுக்காய் கல்வி வலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

1000405234.jpg

ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (17)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துரையாடியபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

1000405233.jpg

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

நிச்சயமாக இந்த சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றிய 44 பேர் இங்கிருந்து பணி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், வெளிவலயங்களிலிருந்து 4 ஆசிரியர்கள் மாத்திரமே துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்துள்ளனர்.  40 ஆசிரியர்கள் இதுவரை துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. 

இவ்வாறு தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 

ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல்கள் காணப்படுகின்றன.  மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். எனவே, இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானங்களை எடுக்கவேண்டும். 

1000405240.jpg

துணுக்காய் வலயத்தில் ஏற்கனவே 160 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தற்போது 40 ஆசிரியர்கள் கடமைகளைப் பெறுப்பேற்காத நிலையில், துணுக்காய் வலயத்தில் ஆசிரியர்களின் வெற்றிடங்கள் 200ஆக உயர்வடைந்திருக்கிறது. இதனால் துணுக்காய் வலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்னும் மோசமடைவதற்கான சூழ்நிலையே காணப்படுகிறது. 

எமது பிள்ளைகளும் கல்வி கற்கவேண்டும். வன்னி என்றால் ஒதுக்கிவிடுக்கின்ற நிலைமை, முல்லைத்தீவு மாவட்டம் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை, துணுக்காய் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். 

மேலும், இப்பிரச்சினை தொடர்பில் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்னார், முசலிப்பிரலி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டத்தில் பேசப்பட்டது. 

அந்தக் கூட்டத்திலும் மன்னார் வலயத்திலிருந்து பல ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்றுச் சென்றிருப்பதாகவும், அந்த வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களிலிருந்து ஆசிரியர்கள் சென்று, தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இதன்போது ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைய மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை முன்னெடுக்க வேண்டுமென முசலி பிரதேச அபிவிருத்திக் குழுவில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220221

வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளராக பொ.வாகீசன் நியமனம்!

3 months 2 weeks ago

வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

17 JUL, 2025 | 01:20 PM

image

வவுனியா மாநகர சபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். 

வவுனியா நகரசபையாக இருந்து மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார். 

இந்தநிலையில் புதிய ஆணையாளராக, வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தினால் இந்த நியமனம் நேற்று  வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

download.jpg

https://www.virakesari.lk/article/220215

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று!

3 months 2 weeks ago

4-1.jpg?resize=750%2C375&ssl=1

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில், இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம் (17) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராசா , ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவன், க. இளங்குமரன் , சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அருச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

4-5.jpg?resize=600%2C400&ssl=1

4-4.jpg?resize=600%2C400&ssl=1

https://athavannews.com/2025/1439557

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

3 months 2 weeks ago

WhatsApp-Image-2025-07-17-at-15.54.44.jp

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1439568

வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு

3 months 2 weeks ago

வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு

vavuniya-2.jpg

â

தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் இது தொடர்பில் அறிவித்தாரா? இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள புதிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பின் கேந்திர மையமாகவுள்ள வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த விமான படை முகாம் 1985 ஆம் ஆண்டு 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றல், மூடப்பட்ட வீதிகளை திறத்தல் காணி விடுவிப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட நகைகளை மீள ஒப்படைத்தல் என்பன தற்போது கண்காட்சி போன்று இடம்பெறுகின்றன.

2024.03.23 ஆம் திகதியன்று எஸ்.ஞானசம்பந்தன் என்பவர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அக்கடிதத்தில் வவுனியா விமான படை முகாம் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒருபகுதி தனது தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரத்துக்கு சொந்தமானது. ஆகவே இந்த காணியை விடுவித்து தனக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரியிருந்தார்.

இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளர் இந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் விமானப் படையிடம் அறிக்கை கோரினார் .2024.07.04 ஆம் திகதியன்று விமானப் படை இவ்விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் ‘1985 ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக இந்த காணி விமான படைக்கு கையளிக்கப்பட்டது . முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக 1997.12.12 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்ட இந்த காணிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ள எஸ்.ஞானசம்பந்தன் என்பவரின் தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரம் என்பவர் 2 இலட்சம் ரூபா நஷ் ஈட்டை பெற்றுக்கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் எஸ்.ஞானசம்பந்தர் என்பவர் இந்த முயற்சியை கைவிட்டு விட்டு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது காணியை விடுவிக்குமாறு 2024.12.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் இந்த கடிதத்தை துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் இந்த கடிதம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு இணைப்பு கடிதம் ஒன்றை எழுதி, குறித்த காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு விமானப்படைக்கு ஆலோசனை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?இந்த ஆலோசனையை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே வழங்கியுள்ளார். இந்த விமானப் படை முகாமை அகற்றி இவ்விடத்தில் ஆரம்ப குடியிருப்பாளர்களை மீண்டும் அந்த காணியில் குடிமயர்த்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இவ்விடயத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் அறிவித்தாரா?இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன.1985 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே இந்த முகாமுக்கான காணிகள் பெறப்பட்டன. எனவே தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.

https://akkinikkunchu.com/?p=333108

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

3 months 2 weeks ago

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

July 17, 2025

இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும் உணவுக்கான செலவும் அதிகரித்துள்ளது, மேலும் ஒரு குடும்பத்தைத் தொடங்க நினைத்த இளைஞர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் குழந்தை பிறக்கும் வயதுடையவர்களில் சுமார் 20 வீதம் பேர் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாது என்று நம்புவதாக ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

https://www.ilakku.org/இலங்கையில்-பிறப்பு-விகித/

சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!

3 months 2 weeks ago

சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!

Vhg ஜூலை 17, 2025

1000545695.jpg

சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொலைபேசியூடாக, அவருக்கு இந்த அழைப்பை விடுத்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் (20-07-2025)ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் காணி உரிமை, கடற்றொழிலாளர் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!

3 months 2 weeks ago

மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!

551819790.jpeg

மன்னாரில் மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும்  என்று  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மக்காஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

எமது வளங்களை அபகரிக்கும் நோக்கத்துடன், கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல நிறுவனங்கள் மற்றும் திணைக் களங்கள் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே மன்னாரில் நிறுவப்பட்ட 30 காற்றாலைகளை தொடர்ந்து மேலும் 05 காற்றாலைகள் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இலங்கை மின்சார சபையின் அனுசரணையுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு நாங்கள் மேலும் ஒரு வார கால அவகாசத்தை வழங்குகின்றோம். குறித்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு காற்றாலை திட்டத்தை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிலங்களை பாதுகாக்கும் உரிமை வாழிடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு உள்ளது. அது அவர்களின் பிறப்புரிமை.எனவே அந்த நிலங்களை உங்களால் ஒருபோதும் பறித்து எடுக்க முடியாது.

எனவே இத்திட்டத்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் அத்திட்டத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டால் உங்களுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்படும்.எனவே உங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் - என்றார்.

https://newuthayan.com/article/மன்னாரில்_காற்றாலை_திட்டம்_உடனடியாக_நிறுத்தவேண்டும்_-_அருட்தந்தை_மக்காஸ்_எச்சரிப்பு!

முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்!

3 months 2 weeks ago

முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்!

1081757198.jpeg

யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வின் போது, முதல்வர் இருக்கத்தக்கதாக, முதல்வர் பதில் வழங்க வேண்டிய விடயங்களில் துணை முதல்வர் அடிக்கடி தலையீடு செய்து கொண்டிருந்ததால் நீண்டநேரம் இழுபறி ஏற்பட்டது.

விவாதங்களின் போது உறுப்பினர்கள் முதல்வரிடம் குறிப்பிடும் விடயங்களுக்கும், முதல்வர் தெரிவிக்கவேண்டிய பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் முதல்வர் தேவையற்றவகையில் தலையிட்டுக் கருத்துகளை வெளியிட்டபடி கொண்டிருந்தார். ஒவ்வொரு விடயத்திலும் தலையிட்டு நீண்ட விளக்கத்தையும் அவர் வழங்கினார். காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வு இரவு 7 மணிவரை இடம்பெற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

https://newuthayan.com/article/முதல்வரின்_விடயத்தில்_மூக்கை_நுழைத்த_துணைமுதல்வர்;_நேற்றைய_அமர்வில்_கடும்_நேரவிரயம்!

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr