புதிய பதிவுகள்2

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

3 months 2 weeks ago
குமாரசாமி, நீங்கள் நிலமையை உணர மறுக்கிறீர்களா? ஒரே நிகழ்வில் 41 உயிர்கள் பலியாகியுள்ள ஒரு பெரும் அனர்த்தம் இது. இதை ஒரு அதிர்ச்சி, ஒரு தடுமாற்றம் என்று உணர வேண்டும். நீங்கள் யேர்மனியில் வசிக்கிறீர்கள். ஆகவே இது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். சாலையில் ஒரு வாகன விபத்து நிகழ்கிறது என்றால், அதை ஓட்டி வந்த சாரதிக்கு என்ன பிரச்சினை அந்த விபத்தால் மனதளவில் அவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றாரா? என்றெல்லாம் பார்த்து சிகிச்சை அளிப்பார்கள். இதை நீங்கள் குறைந்தது தொலைக்காட்சிகளிலாவது பார்த்திருப்பீர்கள். இதுவே ஊரில் என்றால், சாரதிக்கு அடி உதை தாராளமாக கிடைக்கும். இங்கே நடந்து முடிந்த அனர்த்தத்தை அதிகம் பார்க்காமல், விஜய் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை, ஓடி விட்டார், இவர் எல்லாம் தலைவரா? என்ற கேள்விகளுக்குள் அவரை வைத்து அரசியல் இலாபம் தேடும் எண்ணத்தில்தன் பலர் இருக்கிறார்கள். சீமான் கூட, விபத்து பற்றி உடனடியாக சொன்ன கருத்தில், தம்பி விஜய்க்கு சார்பாக நின்றதையும் கவனிக்கவும். பெட்டியும் வராது ஒட்டுதலும் கிடையாது என்றவுடன் நிலமை தலை கீழாக மாறிவிட்டது. விஜய் தனது அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார். உறவுகளை இழந்த குடும்பத்தோடு கதைத்தும் இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது, அந்தக் குடும்பங்களில் யாருமே விஜய்க்கு எதிராகக் கைகளை நீட்டவில்லை. இப்பொழுது இந்த வழக்கை சிபிஜ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முடிவு வரட்டும். தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். நான் விஜய் ரசிகன் இல்லை. எனவே என்னை ‘ரசிகன்’ என்ற அடையாளத்தில் அடைத்துவைக்க முயலாதீர்கள். ஆனால், ஒரு பொது மனிதனாக, உண்மையை உணர முயற்சிப்பதில்தான் எனது நோக்கம் இருக்கிறது. சீமான் பற்றி சொல்வதெனில்,அவர் ஒரு கேவலமான, காட்சிக்காகக் கடுமையான மொழிகளைப் பயன்படுத்தும் மாண்புகளற்ற ஒரு அரசியல் வியாபாரி. தமிழ் தேசியத்தின் பெயரில் பிரபாகரனின் புகைப்படத்துடன், இறந்தவர்கள் படங்களையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார். இது பண்பற்ற அரசியலின் ஒரு பகிரங்கமே. இறந்தவர்களின் படம், அவர்கள் உயிர் இல்லாத நிலையில் காட்டப்படும் போது, அது மரியாதையின்மை மட்டுமல்ல, மனிதநேயத்தின் கேள்விக்குறியுமாகும். திமுகவைச் சாடி கண்ணதாசன் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆக திமுக பற்றி எழுதும் போது கண்ணதாசனும் எனக்கு உள்ளே வந்து விடுகிறார். இதை எல்லாம் பட்டிமன்ற கணக்குக்குள் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. தமிழக அரசியலே நாடக, சினிமா மூலமே பிரச்சாரம் செய்துதான் வந்தது. வருகிறது. எம்ஜிஆர் கூட தனது படங்களில் வரும் பாட்டுக்களூடாகத்தான் தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆட்சிக்கும் வந்தார். போராட்டம் கூட…..சரி விடுங்கள். இதற்குள் போனால் நிறைய எழுத வேண்டும். பலே பாண்டிய படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் பாடலில் சில வரிகள், மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா மோசம் நாசம் வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா கதவைத் திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா அட என்னத்தச் சொல்வேண்டா தம்பியோவ் என்னத்தச் சொல்வேண்டா யாரை எங்கே வைப்பது என்றே யாருக்கும் தெரியலே... அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

3 months 2 weeks ago
அது சரி, இதை வெளியிட எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தார் இவர்? மஹிந்தவோ, புலிகளை அழித்தது தான் என்று பெருமையடிக்கிறார், கோத்தாவோ, போரை நிறுத்துமாறு சர்வதேசம் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது, இருப்பினும் அதற்கு அடிபணியாது நாமே புலிகளை முற்றாக அழித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்கிறார். அதை விட, தான் நம் தலைவரை நாயைப்போல் இழுத்து வந்ததாக வேறு கூறுகிறார். என் தலைவன் நிழலைக்கூட அவர் உயிருடன் இருக்கும்வரை நெருங்க முடியவில்லை இவர்களால். இன்று இல்லாவிடினும் என்றோ ஒருநாள் இவர்கள் வாயாலேயே அது வெளிவரும். மிஸ்ரர் பொன்சேகா! நீங்கள் இன்னும் சொல்லுங்கள், நிறைய சொல்லுங்கள், நாங்கள் கேட்ப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். உங்கள் கருத்துக்களுக்கு அவர்களும் பதில் சொல்லத்தானே போகிறார்கள். மக்கள் தம்மை மறந்துவிடக்கூடாது, அதே நேரம் தமது ஊழல்களை மறைக்கவும் கனவிலும் புலிகளை நானே அழித்தேனென புலம்புகிறார். பிரபாகரனை அழித்தேன் என்று யாரும் துணிந்து கூறவில்லை, கூறவும் முடியாது.

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

3 months 2 weeks ago
நானும் தமிழ் தேசிய கொள்கை உடையவனாக இருந்துகொண்டு கருணாவை ஆதரிக்கவில்லையா. தனக்கென்று வரும்போது கொள்கையாவது கோற்பாடாவது. இரண்டாவதாக தாயார் சும்மா புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு சென்றிருக்கலாம். சமூகத்திற்கு எதோ சொல்லவந்து இந்த கருத்து சாம்பாரை பதிவேற்றியிருப்பதால் சரவெடி வெடித்திருக்கிறது இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது இப்படி பதிவேற்றியதற்கு பதிலாக இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, வந்தேறி இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் வந்தேறிகளான எனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது இப்படி பதிவேற்றியிருக்கவேண்டும். பழங்குடி ,பூர்வகுடி என்று அதிகப்பிரசங்கிதனமாக அலப்பறை செய்தவர் தான் யாரென்பததையும் சுயவிமர்சனம் செய்திருக்கவேண்டும் என்பதே எனது பார்வை

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

3 months 2 weeks ago
ஏங்கோ அவ்வளவு தூரம் போறீங்கோ. நம் இனம் விழுந்து, எழுந்து நடமாட துடித்திருக்கும்போது, அந்த இனத்தின் பிரதிநிதி என்று பினாத்திக்கொண்டு திரிபவர், அவர்களை அழித்தவர்களோடு கிறிக்கெற் விளையாடினார். கேட்ட போது, அவர்களோடுதான் பேச்சு நடத்த வேண்டும் ஆகவே நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாடினேன் என்று விளக்கம் கொடுத்தார். நமது விடுதலைக்காய் போராடி இறந்த நம் வீரருக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை, இவரோ பொப்பிப்பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போய் நம் இனத்தை அழித்த இராணுவத்திற்கு தம் மரியாதையை காட்டினார். சிங்கள மக்களோடு வாழ்வது தனது அதிஷ்டம் என்று வேறு பெருமை பாராட்டினார். ஆனால் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் மகன்கள் சிங்கள பெண்களை மணந்ததால், சிங்களச்சம்பந்தி என்று வாய்க்கு வாய் தூற்றிக்கொண்டு திரிந்தார். தனது மகன் சிங்களப்பெண்ணை மணந்து, தான் சிங்களசம்பந்தியான போது அமைதியாக இருந்துவிட்டார். எங்கள் வீட்டில் நடந்தால் போற்றுவோம், அடுத்தவர் வீட்டில் நடந்தால் தூற்றி ஏளனம் செய்வோம்.

கழிவறை குழி வெடித்து குடும்பஸ்தர் பலி

3 months 2 weeks ago
காலி - பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmgonwccm00yjqplpn4ia8856 https://www.facebook.com/reel/1324971306092243

போர் முடிந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்

3 months 2 weeks ago
போர் முடிந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் 13 October 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், “போர் முடிந்துவிட்டது” என அறிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் உச்சிமாநாட்டிற்காக எகிப்திற்கு செல்வதற்கு முன்னர் அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் போர்நிறுத்தம் நிலைத்திருக்கும் என்றும், காசாவுக்காக விரைவில் ஒரு “அமைதிக் குழு” (Board of Peace) அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். காசா தற்போது ஒரு “சிதைவுப்பகுதி” போல தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கட்டார் ஆகியவற்றின் பங்களிப்பையும் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டினார். https://hirunews.lk/tm/424981/donald-trump-declares-the-war-is-over

மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம்

3 months 2 weeks ago
மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம் திங்கள், 13 அக்டோபர் 2025 06:05 AM மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சியின் முன்னாள் எம். பி.க்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர் . இதுபற்றிக் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பி.க்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பி.க்கள் போட்டியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. https://jaffnazone.com/news/51231

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

3 months 2 weeks ago
மலையக தமிழ் மக்களுக்கள் வாக்குகளுக்காக மாத்திரமே பயன்படுத்தினர் அவர்களுக்கான அபிவிருத்திகளை குழப்புவதற்கு இனியும் முயற்சிக்காதீர் - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Published By: Vishnu 13 Oct, 2025 | 05:15 AM (எம்.மனோசித்ரா) மலையக தமிழ் மக்கள் காலம் காலமாக வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரடகனத்தின் ஊடாக அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கடந்த காலங்களைப் போன்று இவற்றைக் குழப்புவதற்கு இனியும் முயற்சிக்க வேண்டாம் என எதிரணியினரிடம் கேட்டுக் கொள்வதாக பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மலையக மக்கள் இருநூறு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழ்கின்றனர். நாட்டில் பல வைத்தியர்களையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கிய அவர்களுக்கு இலவச கல்வி கூட மறுக்கப்பட்டது. வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் அந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலைமையில் கடந்த ஆண்டு உலகத்திலேயே அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் நாயகனாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரகடனத்தின் ஊடாக பல்வேறு வேலை திட்டங்களை முன்மொழிந்திருந்தது. அந்த வேலைத்திட்டங்களில் மிக முக்கியமாக மலையக மக்களின் காணி உரிமம் மற்றும் வீட்டு உரிமத்தை இந்த அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என உறுதியளித்திருந்தோம். மலையக மக்களின் வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சிறந்த தலைமைத்துவம் வழங்கப்படுகிறது. மலையக மக்களின் சேவையை இலங்கை மாத்திரம் இன்றி முழு உலகமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. எமது வேலைத் திட்டங்களின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களுக்காக 10 000 வருட திட்டத்தை அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மொத்த இந்திய அரசுக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இந்திய வீட்டுத்துடன் அந்த மக்களுக்கான காணி உரிமத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என மீண்டும் உறுதியளிக்கின்றேன். அதேபோன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். இன்று எம்மை விமர்சிக்கும் மலையக பிரதிநிதிகள் இதுவரையும் அந்த மக்களுக்கு இழைத்த துரோகம் போதும். எனவே அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் அந்த மக்கள் சமூகத்தை குழப்புவதற்கு இனியும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். மலையக மக்கள் மாத்திரமின்றி சகல இன மக்களுக்கும் சிறப்பான ஒரு நாட்டை நாம் உருவாக்குவோம். கடந்த ஆட்சியாளர்கள் மலையக மக்களை மறந்திருந்தாலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவ்வாறு செயல்படாமல் அவர்களை நினைவில் இருத்தி அவர்களுக்கான தேசிய வேலை திட்டத்தை ஆரம்பித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/227570

யாழில் வாள் வெட்டு: தேசிய மக்கள் சக்தி செயற்திட்ட இணைப்பாளர் காயம்!

3 months 2 weeks ago
யாழில் வாள் வெட்டு: தேசிய மக்கள் சக்தி செயற்திட்ட இணைப்பாளர் காயம்! யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது . இச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது தும்பளை பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியன அதிகரித்து உள்ளன இந்நிலையில் , போதைப்பொருள் விற்பனை தொடர்பிலான சி.சி.ரி.வி காணொளி தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை இணைப்பாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை அவர் பொலிஸாரிடம் கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில் , ஓரிரு நாட்களின் பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அத்துடன் , போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளருக்கும் தொலைபேசி ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதிலும் , பொலிஸார் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்று 20 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் 10ஆம் திகதி அதிகாலை வேளை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டினுள் இருந்த தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மற்றும் , அவரது தந்தை மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/article/யாழில்_வாள்_வெட்டு:_தேசிய_மக்கள்_சக்தி_செயற்திட்ட_இணைப்பாளர்_காயம்!

2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 560 பேரிடர்கள்

3 months 2 weeks ago
2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும். https://adaderanatamil.lk/news/cmgolgnpn00yiqplpw28r6sel

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

3 months 2 weeks ago
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றி இலக்கை கடந்து அவுஸ்திரேலியா அபார வெற்றியீட்டியது Published By: Vishnu 13 Oct, 2025 | 04:42 AM (நெவில் அன்தனி) விசாகபட்டினம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலியா, வரவேற்பு நாடான இந்தியாவை 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது. அனாபெல் சதர்லண்ட் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல், அணித் தலைவி அலிசா ஹீலி குவித்த அபார சதம் என்பன அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 331 ஓட்டங்கள் என்ற மிகப் பெரிய மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 331 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது. இதன் மூலம் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அவுஸ்திரேலியா சற்று அதிகரித்துக்கொண்டதுடன் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாட்டத் தொடங்கியுள்ளது. ஆரம்ப வீராங்கனை அலிசா ஹீலி மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 107 பந்துகளில் 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே 40 ஓட்டங்களைப் பெற்ற ஃபோப் லிச்பீல்டுடன் முதலாவது விக்கெட்டில் 85 ஓட்டங்களை அலிசா ஹீலி பகிர்ந்தார். மொத்த எண்ணிக்கை 154 ஓட்டங்களாக இருந்தபோது எலிஸ் பெரி உபாதைக்குள்ளாகி 32 ஓட்டங்களுடன் தற்காலிய ஓய்வு பெற்றார். எனினும் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் புகுந்த எலிஸ் பெரி 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். மத்திவரிசையில் ஆஷ்லி கார்ட்னர் 45 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கோர் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்மிரித்தி மந்தனா, ப்ராத்திக்கா ராவல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை மந்தனா பூர்த்திசெய்தார். ப்ராத்திக்கா ராவல் 75 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட ஹார்லீன் டியோல் 38 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிகஸ் 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 32 ஓட்டங்களையும் பெற்றனர். 43ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, அதன் கடைசி 6 விக்கெட்களை வெறும் 36 ஓட்டங்களுக்கு இழந்தது. இதுவும் அதன் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் அனாபெல் சதர்லண்ட் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சொஃபி எக்லஸ்டொன் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: அலிசா ஹீலி. https://www.virakesari.lk/article/227565

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

3 months 2 weeks ago
இன்று அதிகாலையில் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக 180 பாகை எதிர்மாறான கருத்தினை கூறியுள்ளார், இது எப்போதும் இவர் செய்யும் வேலைதான் (bear trap). சந்தை இன்று 98.6 இல் தொடங்கியுள்ளது (சந்தை 97.9 மூடிய சந்தை), சந்தை இடைவெளி விட்டு ஆரம்பித்துள்ளது கடந்த வார ஆரம்பம் போலவே, இது ட்ரம்பின் வழமையான சந்தை மோசடி செயல் (Market manipulation). இது ஒரு bear trap ஆக இருந்தால் இந்த வாரம் மீண்டும் அவுஸ், ஜப்பான் இணை மீண்டும் 101 தொடலாம்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
மழை பெய்தமையால் மைதான ஈரலிப்பு இருக்காது என போட்டி ஆரம்பிக்கும் போது கருதினேன், மைதான ஈரலிப்பு ஆடுகளம் மெதுவாகின்றமையினால் ஏற்டும் தாக்கம் குறையும், பந்து வீசுபவர்களுக்கு சிரமமாக இருக்கும், ஆனால் இரண்டாவது இனிங்ஸில் ஆடுகளம் உலரும் அது துடுப்பாட்டத்திற்கு மிக சிரமமாக இருக்கும், அத்துடன் அது ஒரு கறுப்பு நிற ஆடுகளம் மைதான ஈரலிப்பினை நம்பி அப்படி ஒரு முடிவு எடுப்பது ஆபத்தான விடயம், அத்தோடு பொதுவாக அனைவரும் மழை வந்ததால் மைதான ஈரலிப்பு இருக்காது எனவே நம்புவார்கள் (மைதான ஈரலிப்பு இருந்ததா என தெரியவில்லை) வேலை இடைவேளைகளில் போட்டியினை பார்த்ததால் அது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. ஏன் இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது என உண்மையில் எனக்கும் தெரியாது, வேறு ஏதாவது காரணம் இருந்திருக்கலாம், மைதான ஈரலிப்பினாலேயே அவ்வாறு தீர்மானித்திருப்பார்கள் எனவும் கூற முடியாது (அப்படி ஒரு காரணம் இருக்கலாம் என நினைத்தேன்) வேறு ஏதாவது நீங்கள் கூறுவது போல காரணம் இருக்கலாம், போட்டி முடிவின் பின்னர் இலங்கை அணித்தலைவர் அதனை பற்றி ஏதாவது குறிப்பிட்டாரா? துடுப்பாட்டத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் முதலாவதாகவே துடுப்பெடுத்தாடி இருப்பார்கள், பந்து வீச்சில் அதிக நம்பிக்கை இருந்திருந்தால் இரண்டாவது இனிங்க்ஸில் பந்து வீச சாதக நிலமையும் காணப்படும். இதனை மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு குளறுபடியான முடிவாக இருந்தாலும் போட்டியின் முடிவு இரண்டாவதாக பந்து வீசுவதால் மாறியிருக்குமா என்பதுவும் சந்தேகம்தான்.

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!

3 months 2 weeks ago
உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்! வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, ஒக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும் WHO தென்கிழக்கு ஆசியாவின் 78 பிராந்தியக் குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் விவாதிக்கும் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியத்தின் (SEARHEF) நிதியை விரிவுபடுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறனுக்கு (AMR) எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தென்கிழக்கு ஆசியாவிற்கான அலுவலகப் பொறுப்பாளர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், டாக்டர் கேத்தரினா போஹ்மே மற்றும் பிற உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) நிபுணர்கள் மூன்று நாள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இது எதிர்வரும் ஆண்டுகளுக்கான பிராந்தியத்தில் சுகாதார நிகழ்ச்சி நிரலை அமைக்கும். பிராந்திய நிர்வாகக் குழுக் கூட்டம் முன்னுரிமைச் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என்றும், முந்தைய ஆண்டுகளின் தீர்மானங்களுடன் ஒப்பிட்டு முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பு நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் (WHO) ஆரோக்கியமான முதுமை குறித்த பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஆரோக்கியமான முதுமை குறித்த கவனம் செலுத்தப்படுகிறது. 2050 ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிராந்தியத்தின் மக்கள்தொகையில் 20.9% ஆக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2024 இல் 11.3% ஆக இருந்தது. முதுமை தவிர்க்க முடியாதது என்றாலும், இந்த மக்கள்தொகை மாற்றத்தை அதன் நன்மையை அதிகரிக்க சுகாதார மற்றும் சமூக அமைப்புகள் போதுமான அளவு தயாராக இருக்க வேண்டும். புகையில்லா புகையிலை, மின்னணு சிகரெட்டுகள், நிக்கோடின் பைகள் மற்றும் பாக்கு ஆகியவற்றின் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான உத்திகள் குறித்து இந்தக் கூட்டம் விவாதிக்கும். 280 மில்லியனுக்கும் அதிகமான வயதுவந்தோர் புகையில்லா புகையிலை பயன்படுத்துபவர்கள் மற்றும் அண்ணளவாக 11 மில்லியன் இளம் பருவத்தினர் புகையிலை பயன்படுத்துபவர்கள் என உலகளாவிய புகையிலை பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பங்கின் விகிதாசார சுமையை தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் தொடர்ந்து சுமந்து வருகிறது. மின்னணு சிகரெட்டுகள் மற்றும் நிக்கோடின் பைகள் போன்ற புதிய நிக்கோடின் தயாரிப்புகளின் வளர்ந்து வரும் பயன்பாடு மற்றும் பாக்கு கொட்டையின் பரவலான சமூக கலாச்சார பயன்பாடு ஆகியவை சவாலை மேலும் அதிகரிக்கின்றன. இயற்கை பேரழிவுகளுக்கு ஆளாகக்கூடிய, உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம், சுகாதார அவசரநிலைக்குப் பிறகு உடனடியாக உயிர்காக்கும் செயற்பாடுகளில் உதவுவதற்காக அதன் சொந்த பிராந்திய சுகாதார அவசர நிதியைக் கொண்டுள்ளது – தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதி (SEARHEF). 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதிலிருந்து, 10 உறுப்பு நாடுகளில் 49 அவசரநிலைகளில் உதவியுள்ளது. இந்த நிதியின் தொகையை விரிவுபடுத்துவது குறித்து இந்த கூட்டம் ஆலோசிக்கும். நிதியத்தின் ஆணை 2016 இல் அவசரகால தயார்நிலைக்கும் ஆதரவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. உலகளாவிய உறுதிமொழிகளுடன் பிராந்திய கொள்கை நடவடிக்கைகளை இணைப்பதன் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறனுக்கு (AMR) எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது, பிராந்தியக் குழுவில் மற்றொரு முன்னுரிமைப் பிரச்சினையாக இருக்கும். ஐ.நா. பொதுச் சபையின் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறன் மீதான அரசியல் பிரகடனம் போன்ற சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய மைல்கற்கள், புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தையும் நடவடிக்கைக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்கள் வசிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம், மனநலம், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது; பெண்கள், இளம்பெண்கள், இளம் பருவத்தினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் முதலீட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது; தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை புரிந்து திறமைகளையும், அறிவை நிர்வகித்தலையும் மற்றும் ஆராய்ச்சியையும் அதிகரிக்கிறது. அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தவும், வழங்கவும் மற்றும் பாதுகாக்கவும், சுகாதாரம் தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) மீண்டும் உரிய பாதையில் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். https://athavannews.com/2025/1450179

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

3 months 2 weeks ago
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு! இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பரில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம். இதற்கிடையில், ஜனவரி 01 முதல் இந்த ஆண்டு இன்றுவரை நாடு 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு பணம் அனுப்பியுள்ளதாக CBSL தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதலின் அளவு 4,843.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட பணம் அனுப்புதலில் 967.9 மில்லியன் அமெரிக்க ‍டொலர்கள் அதிகரித்துள்ளது. 2025 செப்டம்பரில் சுற்றுலா வருவாய் 182.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் செப்டம்பர் 30 வரை சுற்றுலா வருமானமாக 182.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1450186

Bond Master(பொண்ட் மாஸ்ரர்.

3 months 2 weeks ago
1970 களில் தனியார் பாடசாலைகளில் இரசாயனவியல் ஆசிரியராக மிகவும் பிரபலமாக இருந்தார்.அந்தக் காலங்களில் படித்தவர்களுக்கு இவரிடம் படிக்காவிட்டாலும் இவரைத் தெரியாமலிருக்க முடியாது. இரசாயனவியல் ஆசிரியராக சிறிபதி மாஸ்ரர் என்பவரும் இருந்தார்.இருவரும் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.பொண்ட் மாஸ்ரர் பாடசாலைக்கு வெளியிலும் எல்லோருடனும் நண்பர்கள் போல பழகுவார். நானும் சிறிதுகாலம் இவரிடம் படித்தேன்.வகுப்புகளுக்கு ஒழுங்காக போவதில்லை. இவரிடம் இருந்த திறமை என்னவென்றால் சோதனை வருவதற்கு முதல் கடந்தகால வினாத்தாள்களை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக விழங்கப்படுத்தி தானே ஒரு வினாத்தாள் தயாரித்து மாதிரிச் சோதனையும் எழுத வைப்பார். இதனால் சோதனைக்கு வரும் கேள்விகள் இவருக்கு முதலே தெரியவருகிறது என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. வீதிகளில் எப்ப கண்டாலும் 5 வினாடிகள் என்றாலும் கதைக்காமல் போக மாட்டார்.அவ்வளவு ஒன்றிப் போயிருந்தோம். 1977 களில் வெளிநாடு வெளிக்கிட்ட பின்பு என்ன ஆனார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தேன்.அனேகமாக வெளிநாடு சென்றிருப்பார் என எண்ணியிருந்தேன். இரு தினங்களுக்கு முன் முகப்புத்தகம் ஊடாக இந்த செய்தியைப் பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது. இளம் வயதிலேயே காலமாகியுள்ளார்.காலமாகி 5 வருடங்களின் முன் காலமாகியுள்ளார். எப்படி காலமானார்?சுகயீனமாக இருந்தாரா?குடும்பம் பிள்ளைகள் என்று இருந்தாரா? எதுவுமே தெரியவில்லை. என்னைப் போல இதை வாசிக்கும் நீங்களும் இவரைப் பற்றி முன்னரே அறிந்திருக்கலாம்..இவரிடம் படித்திருக்கலாம்.ஏன் இவர் இறந்த செய்தி கூட தெரியாமல் இருக்கலாம். யாருக்காவது விபரங்கள் தெரிந்திருந்தால் அறியத் தரவும். நன்றி. ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.
Checked
Sat, 01/31/2026 - 10:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed