புதிய பதிவுகள்2

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 3 weeks ago
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி 28 Nov, 2025 | 04:12 PM டிட்வா சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், ஆறுதலுக்கும், விரைவான மீட்சிக்கும் நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் 'சாகர் பந்து' நடவடிக்கையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலைமைக்கு ஏற்ப மேலும் பல உதவிகள் மற்றும் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நேரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/231831

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது?

2 months 3 weeks ago
செங்கோட்டையன் வருகையால் விஜய் பலம் பெறுவாரா? அதிமுக-வுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,@TVKPartyHQ படக்குறிப்பு,முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 நவம்பர் 2025 அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவருமான செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் முன்பாக அக்கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார். இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்த அளவுக்கு உதவும்? அ.தி,மு.கவின் துவக்க காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்த ஒருவரது வெளியேற்றத்தால், அக்கட்சிக்கு எந்த அளவுக்கு இழப்பு? வியாழக்கிழமையன்று காலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்திருந்தனர். அதற்குப் பிறகு அங்கு வந்த செங்கோட்டையன் கட்சியின் தலைவர் விஜயை சந்தித்துப் பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதற்குப் பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ பதிவில், "20 வயது இளைஞராக இருந்தபோதே எம்.ஜி.ஆரை நம்பி அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்தச் சிறிய வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்" என்று கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,@TVKPartyHQ அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டது எப்படி? கடந்த 1972இல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அக்கட்சியில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன் நீடித்து நிற்பதற்கும், அதிருப்தியை வெளிக்காட்டாமல் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் பெயர்போனவர். அவர் மிக இளம் வயதிலேயே சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆனார். அதற்குப் பிறகு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்.எல்.ஏ-வாக தேர்வானவர். 2012ஆம் ஆண்டில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி, அவரது கட்சிப் பதவிகளை ஜெ. ஜெயலலிதா பறித்தபோதும் வேறு முடிவுகள் எதையும் எடுக்காமல் தனது தருணத்திற்காகக் காத்திருந்தவர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது வந்தடையும்? - சமீபத்திய தகவல்கள் பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி தருணங்களை எழுதி வைத்தவர் டொயோட்டா கார்களை அதிகம் விரும்பும் ஆப்கன் தாலிபன்கள் - விநியோகிக்க மறுக்கும் நிறுவனம் பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா? End of அதிகம் படிக்கப்பட்டது ஆனால், 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதிலிருந்து, அவர் தனது அதிருப்தியை மெல்ல மெல்ல வெளிக்காட்டத் தொடங்கினார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கூறத் தொடங்கினார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளே, அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதில் வந்து முடிந்தது. இதற்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் தொடர்ந்து தனித்துச் செயல்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் வேறொரு கட்சியில் சேர முடிவு செய்திருக்கிறார். இருந்தபோதும், சமீபத்தில்தான் துவங்கப்பட்டு இதுவரை ஒரு தேர்தலையும் சந்தித்திராத தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய முடிவு செய்ததுதான் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. படக்குறிப்பு,கோப்புப் படம் 'சரியான முடிவாகத் தெரியவில்லை' பிற முன்னாள் அமைச்சர்களைச் சேர்த்துக் கொண்டு எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து கட்சியின் ஒருங்கிணைப்பை அவர் வலியுறுத்தியது சரியானதுதான் என்றாலும், தற்போது அவர் எடுத்துள்ள முடிவு துரதிர்ஷ்டவசமானது என்கிறார் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்புரத்தினம். "செங்கோட்டையனின் தற்போதைய முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விஜயின் கட்சி இன்னும் தேர்தல் களத்தில் பரிசோதிக்கப்படவில்லை. 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், விஜயை தலைவராக ஏற்றுக்கொண்டு போகிறார் என்றால் பொதுமக்கள் மத்தியில் அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்றுதான் கருத வேண்டும். அ.தி.மு.க பொதுக் குழுவின் பொருளாளராக இருந்து, அந்த பொதுக் குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றவர் இவர். 1980ஆம் ஆண்டு நடந்த அ.தி.மு.க-வின் அமைப்புத் தேர்தலில் போட்டியிட்டு ஈரோட்டின் மாவட்டச் செயலாளர் ஆனவர். அதற்குப் பிறகு, கொள்கை பரப்புச் செயலாளர், தலைமை நிலைமைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். போக்குவரத்து துறை, வனத்துறை அமைச்சராக இருந்தவர். இவ்வளவு பெரிய பின்னணியைக் கொண்ட செங்கோட்டையன் உள்ளாட்சித் தேர்தலில்கூட போட்டியிடாத இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார் என்பது அவ்வளவு சரியான முடிவாகத் தெரியவில்லை" என்கிறார் சுப்புரத்தினம். படக்குறிப்பு,செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது பற்றிய கேள்விகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறவில்லை. அரசியல் தற்கொலை என விமர்சிக்கும் அ.தி.மு.கவினர் செங்கோட்டையனை பொறுத்தவரை, தேர்தல் காலங்களில் சிறந்த திட்டமிடுதலுக்காக அறியப்பட்டவர். ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரங்களின்போது, அவரது வாகனம் எந்த வழியில் செல்ல வேண்டும், எந்த இடத்தில் நின்று ஜெயலலிதா பேச வேண்டும் என்பதையெல்லாம் மிகக் கச்சிதமாக செங்கோட்டையன் வடிவமைப்பார். கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, 1980இல் இருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் 1996 முதல் 2006 வரையிலான பத்து ஆண்டுகளைத் தவிர, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். ஈரோடு மாவட்ட அ.தி.மு.கவின் வலுவான முகமாகவும் இருந்தார். இந்த நிலையில், அவர் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டு, த.வெ.கவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி, இதுபோன்ற கேள்விகளுக்கே பதில் சொல்ல விரும்பவில்லை. மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, செங்கோட்டையன் இப்போது அ.தி.மு.க-வில் இல்லை என்பதால், இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மட்டும் கூறினார். அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான செம்மலை, செங்கோட்டையனை பொறுத்தவரை இது ஒரு அரசியல் தற்கொலையாகத்தான் இருக்கும் என்கிறார். பட மூலாதாரம்,TVK "ஒருங்கிணைப்பு முயற்சி என்பது செங்கோட்டையன் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். அந்த நாடகம் புஸ்வாணமாகிவிட்டது. இன்று அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு, அரசியல் தற்கொலை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து யாரும் வேறொரு கட்சியில் இணைவது, அ.தி.மு.கவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொதுவாக, நதிகள் கடலில் கலப்பதுதான் இயற்கை. இவருடைய நடவடிக்கை, கடல் நீர் நதியில் கலப்பதைப் போன்றது. அவர் த.வெ.க-வில் இணைவதன் மூலம் விஜயிடம் அரசியல் கற்றுக்கொள்ளப் போகிறாரா அல்லது விஜய்க்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய செம்மலை, "ஒரு பெரிய இயக்கத்தில் இருந்து, பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமாக இருந்துவிட்டு, அதே போன்ற குழப்பத்தை இங்கும் ஏற்படுத்துவாரோ என்ற சந்தேகம் அந்தக் கட்சியினரிடம் இருக்கும். ஆகவே அக்கட்சியின் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் அவரால் இணைந்து பணியாற்ற முடியாது. த.வெ.கவின் தொண்டர்கள், விஜயின் ரசிகர்கள் வாக்குரிமை பெறும் வயதை இப்போதுதான் அடைந்திருக்கிறார்கள். சில விதிவிலக்குகள் இருக்கலாம். இவரால் அவர்களோடு இணைந்து பயணிக்க முடியுமா? மேலும், புதிதாக துவக்கப்பட்டுள்ள கட்சிக்கு ஊர் ஊராகச் சென்று கிளைகளை அமைத்து, ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைத்தாலும் அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும்," என்று கூறினார். பட மூலாதாரம்,@TVKPartyHQ பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? ஆனால், மூத்த பத்திரிகையாளர் மணி போன்றவர்கள் செங்கோட்டையன் வெளியேறியது அ.தி.மு.கவில் குறிப்பிடத்தக்க ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதுகிறார்கள். "தேர்தல் களத்தில் வெல்வதற்கு முன்பாக கருத்து ரீதியான போரில் வெல்ல வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் 6 முதல் 8 தொகுதிகளில் சிறிய அளவில் வாக்குகளை உடைத்தாலே பெரிய இழப்புதான். அதேபோல, த.வெ.க-வுக்கு அவர் எவ்விதமான வழிகாட்டுதலை அளிக்கப் போகிறார் என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கும். எத்தனையோ தலைவர்கள் அ.தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அக்கட்சித் தொண்டர்களிடம் ஏற்படாத ஒரு வருத்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவரது வெளியேற்றம் குறிப்பிடத்தக்க சேதாரத்தை ஏற்படுத்தும்" என்கிறார் ஆர். மணி. மூத்த பத்திரிகையாளர் ப்ரியனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "அ.தி.மு.க-வில் கீழ் நிலை நிர்வாகிகள்தான் இப்போதும் எடப்பாடி கே. பழனிசாமியுடன் இருக்கிறார்கள். இடைநிலை தலைவர்களில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் த.வெ.கவை நோக்கிச் செல்லும் வாய்ப்பை செங்கோட்டையன் உருவாக்கியுள்ளார். செங்கோட்டையனை பொறுத்தவரை, தன்னை உதாசீனப்படுத்திய அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தத் துணிந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாக, தான் கலந்துகொண்ட கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியைக் காட்டியபோது, அதைப் பார்த்து 'கூட்டணி உருவாகிவிட்டது' என்பதைப் போல ஒரு கருத்தைத் தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி. ஆனால், செங்கோட்டையன் இப்போது அங்கு சென்று சேர்ந்திருப்பதன் மூலம் அந்தக் கூட்டணிக்கு இனி வாய்ப்பேயில்லை என்பது தெரிந்துவிட்டது" என்று கூறுகிறார் ப்ரியன். மேலும், "பா.ஜ.கவுடனான கூட்டணியால் ஏற்படக்கூடிய எதிர்மறை வாக்குகள் வேறு இருக்கின்றன. அ.தி.மு.கவுடன் வேறு கட்சிகள் எதுவும் கூட்டணியை உறுதிப்படுத்தவும் இல்லை. இது தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தும்" என்கிறார் அவர். படக்குறிப்பு,நவம்பர் 26ஆம் தேதியன்று செங்கோட்டையன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் ஆனால், மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனின் கருத்து முற்றிலும் மாறானதாக இருக்கிறது. செங்கோட்டையன் எப்போதுமே தன்னை ஒரு தனித்த ஆளுமையாக முன்னிறுத்திக் கொண்டதில்லை என்பதால், அவர் வெளியேறியது அ.தி.மு.கவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் அவர். "செங்கோட்டையன் அந்தக் கட்சியில் தன் இருப்பை பெரிய தடபுடல் இல்லாமல்தான் வைத்திருந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார் அவ்வளவுதான். அ.தி.மு.கவில் அவருடைய முக்கியமான செயல்பாடாக, ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தை அவர் திட்டமிடுவதைக் கூறுவார்கள். குறிப்பாக கொங்கு பகுதியிலும் தென் மாவட்டங்களிலும் அதை அவர் செய்வார். அந்தந்த மாவட்டச் செயலாளர்களைக் கலந்தாலோசித்து இதைச் செய்து வந்தார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய அரசியல் சாணக்கியராகவோ, தலைவராகவோ முன்னிறுத்திக் கொண்டதில்லை. செயல்பட்டதுமில்லை." அப்படியிருந்திருந்தால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, "வி.கே. சசிகலா ஒரு முக்கியப் பதவியை இவருக்கு வழங்கியபோது, அதை ஏற்க மறுத்திருப்பாரா?" என்று வினவுகிறார் இளங்கோவன் ராஜசேகரன். மேலும், "இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும். சாதிரீதியாக பார்த்தாலும்கூட, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவில் இருக்கும்போது இவர் வெளியேறுவதால் பெரிய பாதிப்பு இருக்காது. அப்படிப் பார்த்தால் இதற்கு முன்பாக செந்தில் பாலாஜி, முத்துசாமி போன்றவர்கள் வெளியேறியுள்ளார்கள். அவர்கள் வெளியேறியதால் ஏற்படாத பாதிப்பு, இவரால் எப்படி ஏற்படும்? ஒருவேளை எல்லோரும் சொல்வதைப்போல, பா.ஜ.க. இதன் பின்னணியில் இருந்தால், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.கவினர் அங்கே செல்வார்கள். அவ்வளவுதான்" என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன். த.வெ.கவை செழுமைப்படுத்துவாரா செங்கோட்டையன்? ஆனால், இவர்கள் எல்லோருமே செங்கோட்டையனின் வருகை த.வெ.கவின் அரசியல் செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் என்பதில் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு உதாரணமாக இன்றைய செய்தியாளர் சந்திப்பைச் சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் ஆர். மணி. "இன்றைய செய்தியாளர் சந்திப்பில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன் என த.வெ.கவின் தற்போதைய தலைவர்கள் மட்டும் உட்கார்ந்திருந்தால் இவ்வளவு பெரிய கவனம் கிடைத்திருக்காது. செங்கோட்டையனும் அங்கு அமர்ந்து பேசியதால்தான் இவ்வளவு பெரிய அளவில் எல்லோரும் கவனிக்கிறார்கள். செங்கோட்டையன் அங்கு சென்று சேர்ந்திருப்பது த.வெ.கவுக்கு பெரிய அளவில் உதவும். தி.மு.கவும் அ.தி.மு.கவும் கள அரசியலிலும் பிரசாரத்திலும் என்ன செய்வார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அ.தி.மு.கவும் தி.மு.கவுக்கும் இணையான வியூகத்தை அவரால் வகுக்க முடியும். கள அரசியலில் மிக நல்ல வழிகாட்டுதலை அளிப்பார்" என்கிறார் ஆர். மணி. சுப்புரத்தினமும் இதையே கூறுகிறார். "த.வெ.க.வை பொறுத்தவரை கரூர் நெரிசல் சம்பவத்தில் இருந்து ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதாவது, தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், நெறிப்படுத்தப்பட என்பதை உணர்ந்துள்ளார்கள். விஜயின் ரசிகர்களை அரசியல்படுத்த, நெறிப்படுத்த செங்கோட்டையனின் அனுபவம் உதவும்" என்கிறார் அவர். வயதைப் பொறுத்தவரை தனது 70களில் இருக்கும் செங்கோட்டையன், தமது நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். அவரால் த.வெ.கவுக்கு பலன் இருக்கலாம். ஆனால், த.வெ.க. அவரது அரசியல் ஏற்றத்திற்கு உதவுமா என்பதற்கான பதில், இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை தெரியலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdrn0plnd3xo

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் பாகிஸ்தானை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்தது இலங்கை Published By: Vishnu 27 Nov, 2025 | 10:53 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாட இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற கடைசி இரண்டாம் கட்ட லீக் போட்டியில் 6 ஓட்டங்களால் இலங்கை மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியதன் மூலமே இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. காமில் மிஷார குவித்த அபார அரைச் சதமும் துஷ்மன்த சமீரவின் 4 விக்கெட் குவியலும் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இந்தப் போட்டி முடிவை அடுத்து இறுதிக்கு போகலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஸிம்பாப்வே அணியினர் தமது சொந்த நாட்டுக்கு திரும்ப தயாராகின்றனர். சற்று கடினமான ஆனால் எட்டக்கூடிய 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்த மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும். மிகத் துல்லியமாக பந்துவீசிய துஷ்மன்த சமீர தனது முதல் இரண்டு ஒவர்களில் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி பலம்வாய்ந்து பாகிஸ்தான் துடுப்பாட்ட வரிசையை திக்குமுக்காடச் செய்தார். இதன் கராணமாக பவர் ப்ளே நிறைவில் பாகிஸ்தான் 4 விக்கெட்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியது. பாகிஸ்தானின் முன்வரிசையில் சய்ம் அயூப் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 27 ஓட்டங்களைப் பெற்றார். சாஹிப்ஸதா பர்ஹான் (9), பாபர் அஸாம் (0), பக்கார் ஸமான் (1) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். எவ்வாறாயினும் அணித் தலைவர் சல்மான் அகா, உஸ்மான் கான் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கட்டி எழுப்ப முயற்சித்த போது உஸ்மான் கான் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் சல்மான் அகா தனித்து போராடி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். அவரும் மொஹமத் நவாஸம் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் மொத்த எண்ணிக்கையை அண்மிக்கச் செய்தனர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹம்மத் வசிம் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 19ஆவது ஓவரில் ஏஷான் மாலிங்கவினால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டார். கடைசி ஒவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தெவைப்பட்டது. அந்த ஒவரை மிகவும் நேர்த்தியாக வீசிய துஷ்மன்த சமீர 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இலங்கையை வெற்றி அடையச் செய்தார். சல்மான் அகா 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைக் குவித்தது. இளம் ஆரம்ப வீரர் காமில் மிஷார அனுபவசாலிபோல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார். 12ஆவது சர்வதேச ரி20 போட்டியில் விளையாடும் அவர் இந்த வகை கிரிக்கெட்டில் பதிவுசெய்த அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். குசல் மெண்டிஸ் 23 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து குசல் பெரேரா 6 ஓட்டங்களை மட்டும் பெற்று வெளியேறினார். இதனை அடுத்து காமில் மிஷாரவும் ஜனித் லியனகேவும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். மொத்த எண்ணிக்கை 153 ஓட்டங்களாக இருந்தபோது காமில் மிஷார களம் விட்டகன்றார். அதன் பின்னர் ஜனித் லியனகேவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் 5ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 184 ஓட்டங்களாக உயர்த்தினர். ஜனித் லியனகே 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்க 17 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/231723

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 3 weeks ago
இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு (HADR) ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி பேரனர்த்தத்திற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்ளது. நிவாரண நடவடிக்கைகள் மேலும், இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன். நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுடன், இந்தியா ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை அவசரமாக அனுப்பியுள்ளது. மோசமான நிலைமை உருவாகும்போது மேலும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை மஹாசாகர் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்தியா அதன் தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/india-dispatches-relief-pm-modi-cyclone-ditwah-1764326128

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

2 months 3 weeks ago
திருகோணமலையில் மொத்தமாக 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 பேர் பாதிப்பு! 28 Nov, 2025 | 12:35 PM சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை (25) முதல் வெள்ளிக்கிழமை (28) காலை 8.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 95 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 3515 குடும்பங்களை சேர்ந்த 9683 நபர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.04 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 204 குடும்பங்களை சேர்ந்த 589 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 85 குடும்பங்களை சேர்ந்த 299 நபர்களும், தம்பலகாமம் 188 குடும்பங்களை சேர்ந்த 563 நபர்களும், மொறவெவ 34 குடும்பங்களை சேர்ந்த 99 நபர்களும், சேருவில 105 குடும்பங்களை சேர்ந்த 401 நபர்களும், வெருகல் 16 குடும்பங்களை சேர்ந்த 48 நபர்களும், மூதூர் 750 குடும்பங்களை சேர்ந்த 2485 நபர்களும், கிண்ணியா 1600 குடும்பங்களை சேர்ந்த 3800 நபர்களும், கோமரங்கடவல 05 குடும்பங்களை சேர்ந்த 22 நபர்களும், பதவிஸ்ரீபுர 40 குடும்பங்களை சேர்ந்த 123நபர்களும், குச்சவெளி 870 குடும்பங்களை சேர்ந்த 2880 நபர்களும், கந்தளாய் 151 குடும்பங்களை சேர்ந்த 630 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தம்பலகாமம் பிரதேச செயல பிரிவில் தி/ஆதிகோனேஸ்வரா இடைத்தங்கல் முகாமில் 22 குடும்பங்களை சேர்ந்த 64 நபர்களும், இரு முகாம்களில் கிண்ணியா பாரதிபுரம் வைஷ்னவி மகாவித்தியாலயத்தில் 150 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும், கிண்ணியா அல் றவ்லா மகாவித்தியாலயத்தில் 30 குடும்பங்களை சேர்ந்த 95 நபர்களும் மொத்தமாக 180 குடும்பங்களை சேர்ந்த 515 நபர்களும், குச்சவெளி கமாஸ் நகர் பாலர் பாடசாலையில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 நபர்களும் பாதுகாப்பாக குறித்த இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231783

'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

2 months 3 weeks ago
திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது வந்தடையும்? - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம், Getty Images 28 நவம்பர் 2025, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா (ditwah) புயல் காரணமாக, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது. அந்த ஆய்வு மையம் வழங்கிய தகவலின்படி, கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் திட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. இன்று (நவம்பர் 28) அதிகாலை சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 460 கி.மீ தொலைவிலும் இருந்த திட்வா புயல் தமிழகத்தை நோக்கி மேலும் நகர்ந்துள்ளது. இன்று மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திட்வா புயல் கடந்த ஆறு மணி நேரங்களில் மணிக்கு 10 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து இலங்கை திரிகோணமலையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவிலும், காரைக்காலின் தெற்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 530 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை கடந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கரைகளை வரும் 30ம் தேதி அதிகாலை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும்? இந்நிலையில், திட்வா புயல் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாதிப்புகளும் பதிவாகி வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் அமைந்துள்ள ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது வந்தடையும்? - சமீபத்திய தகவல்கள் பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி தருணங்களை எழுதி வைத்தவர் டொயோட்டா கார்களை அதிகம் விரும்பும் ஆப்கன் தாலிபன்கள் - விநியோகிக்க மறுக்கும் நிறுவனம் பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா? End of அதிகம் படிக்கப்பட்டது சென்னையைப் பொருத்தவரை, இன்று (நவம்பர் 28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 29: வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 30: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டையின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 1: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 2 முதல் 4 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை நவம்பர் 28–30 தேதிகளில் வட மற்றும் தென் தமிழகம், புதுச்சேரி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரம், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு–மாலத்தீவு பகுதிகளில் 35 முதல் 90 கி.மீ/மணி வரை பலத்த சூறாவளிக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், "டிசம்பர் 1–2 தேதிகளில் காற்றின் வேகம் 45–75 கி.மீ/மணி வரை குறையும். எனவே ஆழ்கடல் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்தப் பகுதிகளைத் தவிர்க்குமாறும், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய வாழை... படகில் சென்று அறுவடை செய்த விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், படகுகளில் சென்று அவற்றை அறுவடை செய்து வந்துள்ளனர் திருச்செந்தூர் அருகே உள்ள விவசாயிகள். திருச்செந்தூர் அருகே உள்ள செம்மறிகுளம் கஸ்பா பகுதிக்கு அதிகமான நீர் வந்தது. அது அங்கிருந்த வாழைத் தோட்டங்களில் நுழைந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கின. எனவே, விவசாயிகள் படகுகள் எடுத்துக் கொண்டு தோப்புக்குள் சென்று, வாழையை அறுவடை செய்து, படகுகளில் வைத்து கொண்டு வந்தனர். திருவாரூர் வந்த பேரிடர் மீட்புப் படையினர் இலங்கை கடல் பகுதியில் உள்ள திட்வா புயல் 30ம்தேதி அதிகாலை தமிழக கடலோர பகுதிகளை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் திருவாரூரில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி, ஆவடி பட்டாலியனை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் திருவாரூருக்கு சென்றுள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரங்களில் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களை காட்சிப்படுத்தினர். மாவட்டத்தில் எங்கெல்லாம் மீட்புப் பணிகளுக்கான அவசியம் இருக்கிறது என்று கருதப்படுகிறதோ, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகு, அப்பகுதிகளுக்கு தனித்தனி குழுக்களாக பேரிடர் மீட்புப் படையினர் செல்வார்கள். திட்வா புயல் : புதுச்சேரியில் கடல் சீற்றம் திட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே, அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவில் திட்வா புயல் நிலை கொண்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலில் பொதுமக்கள் யாரும் இறங்காதவாறு, போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். எச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட 60 பேர் கொண்ட 2‌ கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0kjej1g4zo

தமிழ்நாட்டின் தென்காசியில் பஸ் விபத்து : 6 பேர் பலி, 28 பேர் காயம்!

2 months 3 weeks ago
தென்காசி விபத்து: 7 பேர் பலிக்கு தனியார் பேருந்துகளின் அதிவேகம் தான் காரணமா? படக்குறிப்பு, தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களில் கீர்த்திகாவின் (நடுவே இருப்பவர்) தாய் மல்லிகாவும் ஒருவர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''எனக்கு 5 வயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்துவிட்டார். அதற்கு பிறகு என் அம்மாதான் பீடி சுற்றும் வேலை பார்த்து என்னை எம்.ஏ. பி.எட். படிக்க வைத்தார். ஆனால் அவரும் இந்த விபத்தில் இறந்துவிட்டார். இப்போது நான் இருவரையும் இழந்து நிற்கிறேன். '' பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கீர்த்திகாவின் வார்த்தைகள் இவை. தென்காசி அருகே கடந்த நவம்பர் 24 ஆம் தேதியன்று 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களில் கீர்த்திகாவின் தாய் மல்லிகாவும் ஒருவர். மல்லிகா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த இந்த விபத்துக்கு, தனியார் பேருந்துகளின் அதிவேகமும், இரு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருப்பதும் காரணமென்று பேருந்தில் பயணம் செய்து தப்பியவர்கள், நேரில் பார்த்தவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்கு விரைவில் டெண்டர் விடப்பட வாய்ப்புள்ளதாகவும், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகில் கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று காலை 11 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற தனியார் பேருந்தும், சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்குச் சென்ற தனியார் பேருந்தும் இடைக்கால் என்ற ஊருக்கு முன்பாக உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயங்களுடன் உயிர்தப்பினர். எலத்துார் காவல் நிலையத்தில் பதிவான வழக்கின்படி, விபத்தில் 96 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தாயை இழந்து நிற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி படக்குறிப்பு,மல்லிகா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த இந்த விபத்துக்கு, தனியார் பேருந்துகளின் அசுர வேகமும் ஒரு காரணம் என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விபத்து நடந்த இடத்திலும், மருத்துவமனையிலும் பிபிசி தமிழ் களஆய்வு செய்து, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், உயிர் தப்பியவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் பலரையும் நேரில் சந்தித்துப் பேசியது. இறந்துபோன 7 பேரில் புளியங்குடி ரோட்டரி கிளப் வீதியைச் சேர்ந்த மல்லிகாவும் ஒருவர். உறவினர் ஒருவரின் மரண நிகழ்வுக்கு சென்றபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மல்லிகாவின் கணவர் முத்துராமன், 25 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மல்லிகாதான் தன்னுடைய ஒரு மகன் மற்றும் இரு மகள்களை படிக்க வைத்துள்ளார். இவர்களில் மூன்றாவது மகள் கீர்த்திகா (வயது 33) பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கீர்த்திகாவின் நிலை குறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், கீர்த்திகாவிடம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவருக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணி நியமன ஆணை வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கீர்த்திகாவின் இல்லத்திற்கு வந்து இதற்கான ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார். பிபிசி தமிழிடம் பேசிய கீர்த்திகா, ''என் 5 வயதிலேயே அப்பா இறந்துவிட்டதால் எனக்கு எல்லாமே அம்மாதான். அவர்தான் பீடி சுற்றி என்னை எம்.ஏ. பி.எட் படிக்க வைத்தார். விபத்து நடந்த அன்று காலையில் சீக்கிரமே வந்துவிடுவதாக சொல்லிவிட்டுத்தான் சென்றார். பேருந்து மெதுவாகச் சென்றிருந்தால் என் அம்மாவுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.'' என்றார். படக்குறிப்பு,கீர்த்திகாவின் இல்லத்திற்கு நேரில் வந்து பணி நியமன ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார். ''நான் எம்.ஏ. பி.எட் முடித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்கிறேன். என்னை ஆசிரியராக்க வேண்டுமென்பது என் தாயின் ஆசை. எனக்கும் அதுதான் விருப்பம். எனவே எனக்கு ஆசிரியர் பணி வழங்கினால் பேருதவியாக இருக்கும்.'' என்றார் கீர்த்திகா. கேரளாவைச் சேர்ந்த சுரேஷ், தன் மனைவி முத்துலட்சுமி, 2 சகோதரிகளுடன் உறவினர் ஒருவரின் மரணத்துக்காக தமிழகம் வந்துள்ளார். இந்த விபத்தில் அவருடைய 2 கால்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சுரேஷ், எழுந்து நடக்க இன்னும் பல மாதங்களாகலாம். ''மிக மோசமான விபத்து அது. நாங்கள் சென்ற பேருந்து சற்று மெதுவாக ஓரமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. எதிரே வந்த பேருந்து மிக வேகமாக வலதுபுறத்தில் ஏறிவந்துவிட்டது. மோதாமலிருக்க இடது புறத்தில் நாங்கள் சென்ற பேருந்து ஓட்டுநர் எவ்வளவோ திருப்ப முயன்றும் முடியவில்லை. அதில் நிறைய பேருக்கு மோசமாக அடிபட்டது.'' என்றார் சுரேஷ். மனைவி இறந்ததே தெரியாமல் சிகிச்சை பெறும் கணவர் படக்குறிப்பு,லதா, தன் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது, இந்த விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் இறந்துபோன 7 பேரில் சுரேஷின் மனைவி முத்துலட்சுமியும் ஒருவர். நவம்பர் 27 ஆம் தேதியன்று பிபிசி தமிழ் சுரேஷிடம் பேசும் வரையிலும் தன் மனைவி இறந்தது அவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. தன் மனைவி வேறொரு பகுதியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா, தன் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது, இந்த விபத்தில் சிக்கியுள்ளார். பிபிசி தமிழ் அவரைச் சந்தித்த நவம்பர் 27 ஆம் தேதியன்று காலையில் அவருடைய மகளின் திருமணம் நடந்து முடிந்தது, ஆனால், தன் மகளின் திருமணத்தில் லதாவால் கலந்துகொள்ள முடியவில்லை என கண்ணீருடன் கூறினார். இடைக்காலில் இருந்து கடையநல்லுார் வரையிலான வெறும் 15 நிமிட பயணத்துக்காக பேருந்து ஏறிய ராஜேஷ், விபத்தில் சிக்கி கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உட்பட பேருந்துகளில் பயணம் செய்து உயிர் தப்பியவர்கள், காயமடைந்தவர்கள், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் வசிப்பவர்கள் அனைவருமே, 'தனியார் பேருந்துகளின் அசுர வேகமே இதற்குக் காரணம்' என்கின்றனர். இந்த விபத்துக்குப் பின் அந்த வழித்தடப் பேருந்தின் பர்மிட்டை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ரத்து செய்துள்ளார். விபத்தில் உயிரிழந்த மல்லிகாவின் உறவினரான பழனியம்மாளும் அதே பேருந்தில் பயணம் செய்தவர். ''நாங்கள் சென்ற பேருந்து மிகமிக வேகமாகச் சென்றது. ஒவ்வொரு முறை பிரேக் போடும்போதும் நாங்கள் முன்னே முட்டிக்கொள்ளும் நிலைதான் இருந்தது. எப்போது இறங்குவோம் என்ற அச்சம்தான் இருந்தது. நாங்கள் அச்சப்பட்டவாறே விபத்து நடந்துவிட்டது.'' என்று அவர் கூறுகிறார். குறுகலான தேசிய நெடுஞ்சாலை படக்குறிப்பு,விபத்து நடந்த பகுதி விபத்து நடந்த துரைசாமிபுரம் என்ற இடம், தமிழகம்–கேரளம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் திருமங்கலம்–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் (என்.எச்.744) ஒரு பகுதியாகவுள்ளது. ஆனால் ராஜபாளையத்திலிருந்து இந்த சாலையின் பெரும்பான்மையான பகுதிகள், மிகவும் குறுகலான இரு வழிச்சாலையாக மட்டுமே உள்ளன. துரைசாமிபுரத்தில் விபத்து நடந்த இடத்திலும் இதேபோன்று இரு வழிச்சாலை மட்டுமே உள்ளது. அதிலும் ஒரு பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியிலுள்ள இரு வழிச்சாலையில் டிவைடரும் இல்லை. அந்த இடத்தில்தான் இடது புறமாக வந்த பேருந்தின் மீது, எதிரே வந்த பேருந்து மிகவும் வலது புறமாக வேகமாக ஏறிச்சென்றதில்தான் இந்த விபத்து நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்காசியிலிருந்து வந்த பேருந்து சாலையை விட்டு இடது புறமாகச் செல்ல முயற்சி செய்தும், எதிரே வந்த பேருந்து கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்ததால் இந்த விபத்து நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மிக அருகில் கடை வைத்துள்ள முப்பிடாதி, இந்த விபத்தை நேரில் பார்த்துள்ளார். பிபிசி தமிழிடம் அதுபற்றி விவரித்த அவர், ''முதலில் பெரும் சத்தத்தைக் கேட்டு டயர் வெடித்து விட்டது என்றுதான் நினைத்தோம். அப்போதுதான் இரு பேருந்துகளும் மோதிக்கொண்டது தெரியவந்தது. எங்களால் முடிந்தவரை உதவி செய்து பலரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்த சாலையில் எல்லா வாகனங்களுமே வேகமாகத்தான் செல்கின்றன.'' என்றார். படக்குறிப்பு,முப்பிடாதி 'தனியார் பேருந்துகளின் அசுர வேகம்' அதே பகுதியில் குடியிருக்கும் முப்பிடாதி என்ற மற்றொரு பெண்ணும் இதே கருத்தை தெரிவித்தார். தனியார் பேருந்துகளின் அதீத வேகத்தால் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகக் கூறிய அவர், அந்த பேருந்துகளால் ஏற்கெனவே பல உயிர்கள் ஒன்றிரண்டாக பறிக்கப்பட்டுவந்த நிலையில், இப்போது மொத்தமாக 7 உயிர்கள் போயிருப்பதாக தெரிவித்தார். துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ''இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்பது தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கை. அது தாமதமாகி வரும் நிலையில், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.'' என்றார். பேருந்துகளில் கூட்டத்தை ஏற்றுவதில் நடக்கும் போட்டியில்தான், தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார் புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி. விபத்து நடந்த பேருந்தில் பயணம் செய்த அவர், சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய மாடசாமி, ''நாங்கள் சென்ற பேருந்து மங்களாபுரத்தில் பயணிகளை ஏற்றிப் புறப்பட்ட அடுத்த நிமிடமே மிகவேகமாக இயக்கப்பட்டது. அடுத்த 2, 3 நிமிடங்களில் இடைக்காலில் பேருந்தை நிறுத்த வேண்டிய நிலையில், இந்த துாரத்துக்குள் இவ்வளவு வேகமாக இயக்க வேண்டிய அவசியமேயில்லை. இடைக்காலில் நிற்கும் நான்கைந்து பேரை ஏற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு வேகமாகச் சென்றதுதான் இந்த விபத்துக்குக் காரணம்.'' என்றார். ''அந்த டிக்கெட்களால் கிடைக்கும் 200–300 ரூபாய் வருவாய்க்காக இன்றைக்கு 7 உயிர்கள் பலி வாங்கப்பட்டிருக்கின்றன. இத்தனை உயிர்களும் அந்த 300 ரூபாய் வருமானமும் ஒன்றா...தனியார் பேருந்துகள் வேகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் இதுபோன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்வதைத் தடுக்கவே முடியாது.'' என்றார் மாடசாமி. சாலை விரிவாக்கம், வேகக்கட்டுப்பாடு ஆகிய இரண்டு மட்டுமே, விபத்துக்களைக் குறைப்பதற்கான வழி என்பதே தென்காசி மாவட்ட மக்களின் ஒருமித்த கருத்தாகவுள்ளது. இந்த விபத்துக்குப் பின், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் தனியார் பேருந்து உரிமையாளர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். படக்குறிப்பு,மாடசாமி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுவது என்ன? இதுகுறித்து பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் பேசிய திருநெல்வேலி மாவட்ட (தென்காசி மாவட்டத்துக்கென்று தனியாக சங்கம் இல்லை) தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர், ''தற்போதுள்ள நேர அட்டவணை 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த போக்குவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. உதாரணமாக ஒரு கி.மீ. துாரத்துக்கு 90 வினாடிதான் அவகாசம் தரப்படுகிறது. இப்போது வாகனங்கள் பெருகிவிட்டன. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. ஆனால் நேர அட்டவணை மாற்றப்படவில்லை.'' என்றார். ''நேரத்தை ஈடுகட்ட வேகமாக இயக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஓட்டுநர்கள் தள்ளப்படுகின்றனர். அரசு பேருந்துகளும் அதிகமாக இயக்கப்படுகின்றன. நேரமும் அவர்களுக்கு ஏற்றாற்போல நிர்ணயிக்கப்படுகிறது. ஆனாலும் விதிகளை மீறி வேகமாக இயக்குவதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஓட்டுநர்களுக்கு நிறைய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். எங்கள் கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.'' என்றார் அவர். தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன? விபத்துக்கான காரணங்கள், பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து சில கேள்விகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ''என்.எச்.744 விரிவாக்கத்துக்கான நிலமெடுப்புப் பணி முடிந்துவிட்டது. மறுமதிப்பீடு தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திடமிருந்து வந்ததும் டெண்டர் பணி துவங்கும். முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' என்றார். ''விபத்துக்குப் பின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டத்தை, நானும் எஸ்பியும், ஆர்டிஓக்களும் நடத்தினோம். அதில் சாலை விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கவும், வேகத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பிலிருந்து சில கோரிக்கைகளை வைத்தனர். அவையும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர். மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில், தேசிய அளவில் சாலை விபத்துகளில் 1,72,890 பேர் மரணமடைந்துள்ளனர். தேசிய அளவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், விபத்து உயிரிழப்புகளில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் ஜனவரி–ஜூலை இடையிலான 7 மாதங்களில், 10,792 விபத்துகளில் 11,268 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் 9,844 விபத்துகளில் 10,241 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 1027 உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில்தான் இந்த ஒரே விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mpv747m7do

குட்டிக் கதைகள்.

2 months 3 weeks ago
Benitto Kumar · வியாபாரியின் அகந்தையை உடைத்த தெனாலி ராமன். சிறுகதை. வெகு நாட்களாக வெளியூரில் தங்கியிருந்த புத்திக்கூர்மையின் உருவமான தெனாலி ராமன், ஒரு நாள் தன் ஊரான ஹம்பி நகருக்குத் திரும்பி வந்தான். ஊருக்குள் நுழைந்தவுடனே எங்கும் மக்கள் கூட்டம், கிசுகிசுப்பு, பரபரப்பு! எல்லோரும் ஏதோ ஒரு அதிசயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். “என்ன விஷயமாக இப்படி ஊரே கலகலப்பாக இருக்கிறது?” என்று வியப்புடன் ராமன் தன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு அவன் வேலைக்காரர்கள் இருவரும் கூடி ரகசியமாக ஆலோசனை செய்வது போல பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட தெனாலிக்கு சந்தேகம் வந்தது. ஒருவனை அழைத்து, “ஏய்! என்ன விஷயம்? ஊரும் பேசுது… நீங்களும் பேசுறீங்க?” என்று கேட்டான். பயந்து நடுங்கிய வேலைக்காரன் சொன்னான்: “ஐயா… நம்ம ஊருக்கு ஒரு வடநாட்டு வியாபாரி வந்திருக்காராம். அவரிடம் ஒரு அதிசயமான சவால் இருக்காம்…” “என்ன சவால்?” என்று தெனாலி கேட்டான். “அவர் வைத்திருக்கும் ஒரு பொருளின் எடையை சரியாகக் கண்டுபிடித்தால், எடைக்கு எடை பொன் தருவேன் என்கிறாராம். தவறினால்… நம்ம வாழ்க்கை முழுக்க அவருக்கு அடிமையாக வேலை செய்ய வேண்டுமாம்!” இந்தக் கொடூரமான நிபந்தனையைக் கேட்ட ராமன் சற்று சிந்தித்து, நேராக அரச சபைக்குச் சென்றான். அங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் அந்த வியாபாரியின் சவாலை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார். தெனாலி வந்ததும் மன்னர் மகிழ்ச்சியுடன், “இந்தச் சவாலுக்கு நீயே தீர்வு காண வேண்டும்!” என்று உத்தரவிட்டார். தெனாலி ராமன் வியாபாரியைப் பார்த்து, “எந்தப் பொருளின் எடை வேண்டும்?” என்று கேட்டான். கர்வமாகச் சிரித்த வியாபாரி சொன்னான்: “வீதியில் நிற்கும் என் யானையின் எடை சொல்ல வேண்டும்!” சபையே அதிர்ந்தது. யானையை தராசில் எப்படி நிறுத்துவது? இதற்கெல்லாம் எடை கருவியே இல்லையே! அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் தெனாலி ராமன் சற்றும் கலங்கவில்லை. “நான் நாளை காலை பதில் சொல்கிறேன்!” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான். இரவில் தன் மனைவியிடம் இந்தச் சிக்கலைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவனது புத்தியில் திடீரென மின்னல் போல ஒரு யோசனை உதித்தது. நதி… படகு… மரக்கட்டைகள்… மாபெரும் புத்திசாலித்தனம்! அடுத்த நாள் காலை, மன்னர், மக்கள், வியாபாரி ஆகிய அனைவரும் ஆவலோடு நதிக்கரையில் கூடியிருந்தனர். தெனாலி ராமன் முதலில் யானையை ஒரு பெரிய படகில் ஏறச் செய்தான். யானை ஏறியதும் படகு நீரில் எவ்வளவு ஆழம் அமிழ்ந்தது என்பதை குறிக்கும் வண்ணம் படகின் உட்புறத்தில் ஒரு கோடு போட்டான். பிறகு யானையை இறக்கிவிட்டு, அதே படகில் மரக்கட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, படகு முன்னர் யானை ஏறிய போது அமிழ்ந்த அதே அளவு வரை நிரப்பினான். பின்னர் மன்னரைப் பார்த்து, “அரசே! இப்போது இந்த மரக்கட்டைகளைத் தனித் தனியே எடை போடுங்கள். அவை அனைத்தின் மொத்த எடைதான் யானையின் உண்மையான எடை!” என்றான். அரச சபையே ஆனந்த அதிர்ச்சியில் முழங்கியது. மன்னர் கிருஷ்ணதேவராயர் மகிழ்ச்சியில் திளைத்தார். மன்னர் வியாபாரியை நோக்கி, “நீ சொன்ன சவாலை எங்கள் தெனாலி நிறைவேற்றிவிட்டான். இப்போது நீ சொன்னது போல பரிசைத் தந்தே ஆக வேண்டும்!” என்றார். ஆனால் அப்போது தெனாலி ராமன் இடைமறித்து, “மன்னர் பெருமானே… இவன் ஒன்றைத் தெளிவாகச் சொல்லவில்லை! ‘எடைக்கு எடை பொன்’ என்று சொன்னான்… எந்த எடைக்கு? என் எடைக்கா? அல்லது யானையின் எடைக்கா?” என்று கேட்டான். இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் வியாபாரியின் முகம் வெளுத்துப் போனது. யானையின் எடைக்கு ஈடான பொன் கொடுக்க அவனால் முடியாது! அவனது சூழ்ச்சியும், பல நாடுகளில் மக்களை அடிமையாக்கிய பாவமும் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே மன்னர் உத்தரவிட்டார்: “இப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனுக்கு சிறையே சரியான தண்டனை!” என்று அவனைச் சிறையில் அடைத்தார். மன்னர் தெனாலி ராமனைப் புகழ்ந்து, பெரும் அளவு பொன்னும் பரிசுகளும் வழங்கினார். மக்கள் அனைவரும் ஒரே குரலில் கூறினார்கள்: “வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு!” கருத்து: யாரையும் துன்புறுத்தி மகிழாதே. அகந்தையால் வாழ்பவன் ஒருநாள் தன் அகந்தையாலேயே வீழ்வான்.......!

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......! தமிழ் பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மலரே… குறிஞ்சி மலரே… பெண் : மலரே… குறிஞ்சி மலரே… ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் பெண் : யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ ஆண் : கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ ஆண் : நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் பெண் : தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் பெண் : பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களே ஆண் : பால் மனம் ஒன்று பூ மணம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே ......! --- மலரே குறிஞ்சி மலரே ---

யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி

2 months 3 weeks ago
யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி வெள்ளி, 28 நவம்பர் 2025 06:39 AM புத்தளம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியதில், பயணிகள் உயிர் ஆபத்துக்குள்ளாகியதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்க இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, பேருந்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள். நாட்டின் பல பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://jaffnazone.com/news/52698

விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

2 months 3 weeks ago
விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு Mano ShangarNovember 28, 2025 10:06 am 0 மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/special-notice-for-passengers-traveling-through-the-airport/

இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை ! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு

2 months 3 weeks ago
இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு Published By: Priyatharshan 28 Nov, 2025 | 07:23 AM இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் உயர் அபாய நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. * திடீர் வெள்ளப்பெருக்கு * நிலச்சரிவு * மரங்கள் சாய்வது/வீழ்வது * கடல் பகுதிகளில் மிகவும் கடுமையான அலை ஏற்கனவே பதிவான மிக கன மழை அளவுகள் * வவுனியா - செடிக்குளம் – 315 மிமீ * முல்லைத்தீவு, அலம்பில் – 305 மிமீ * கண்டி – 223.9 மிமீ * மன்னார், மடு – 218.5 மிமீ * இரத்தினபுரி – 208 மிமீ பொது மக்களுக்கு அறிவுறுத்தல் * அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் * அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் * வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் https://www.virakesari.lk/article/231741

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்

2 months 3 weeks ago
இளம்பருவத்தினரின் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு; 2024 ஆண்டு 724 ஆண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் Published By: Vishnu 28 Nov, 2025 | 03:06 AM ( செ.சுபதர்ஷனி) இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 824 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 724 பேர் ஆண்களாவர். அந்தவகையில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள் /எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணதிலக்க தெரிவித்தார். எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (26) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் கூட்டுத் திட்டம் வெளியிட்டுள்ள எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி உலகளாவிய தரவுகளுக்கமைய 2024 ஆண்டு இலங்கையில் 5,700 அண்ணளவானோர் எச்.ஐ.வியுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாளாந்தம் பதிவாகும் எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், கடந்த ஆண்டு மாத்திரம் 824 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் 1987 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரை 7,168 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் சுமார் 724 பேர் ஆண்களாவர். 2010 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான தரவுகளை நோக்கும்போது 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி க்கு ஆளாகியுள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்பாலின ஈர்பாளர்களிடையே (ஓரின சேர்க்கையாளர்கள்) உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதால் பலர் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் 50 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாக பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன. சிரிஞ்சியின் ஊடாக போதைப்பொருள் பாவனையும் சமூகத்தின் அதிகரித்துள்ளது. ஒருவர் பயன்படுத்திய சிரிஞ்சியை ஏனையோர் உபயோகிப்பதால் எச்.ஐ.வி ஏற்பட வாய்ப்புள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் உலகளாவிய ரீதியில் கண்டறியப்பட்ட புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோய் பற்றிய புரிந்துணர்வு இல்லாமை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு 20 -24 வயதுக்கிடைப்பட்ட 9 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் 2024 ஆம் ஆண்டு அவ்வயதுக்குட்பட்ட 91 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படுவது பாரதூரமான விடயமாகும். ஆகையால் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்குவைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பால்வினைநோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/231738
Checked
Sat, 02/21/2026 - 07:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed