புதிய பதிவுகள்2

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும்

2 months 1 week ago
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை இன்றைய தினம் தெரிவு செய்தனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு கிழக்கின் தலைவி யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக சி. ஜெனிற்றாவும் தெரிவு செய்யப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவராக சி. இளங்கோதை, மட்டக்களப்பு மாவட்டம் வ.அமலநாயகி, அம்பாறை மாவட்டம் வ.செல்வராணி, திருகோணமலை மாவட்டம் எஸ்.செபஸ்ரியான்தேவி, வவுனியா மாவட்டம் சி.ஜெனிற்ரா, முல்லைத்தீவு மாவட்டம் ப.வீரமணி, கிளிநொச்சி க.கோகிலவாணி, மன்னார் மாவட்டம் கு.உதயசந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். https://adaderanatamil.lk/news/cmdbw6u5301emqp4kja18plf9

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

2 months 1 week ago
இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு. இது என்னுடைய தாழ்மையான கருத்து.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

2 months 1 week ago
எம் முன்னோர்கள் எதற்காக ஒரு குழந்தையின் பிறப்பிற்கு தந்தையின் பெயரை அத்தாட்சிப்படுத்தினார்கள். அவர்கள் என்ன முட்டாள்களா? தந்தை எவர் என்று தெரியாத, அறியமுடியாதவிடத்து அந்தத் தாயை எங்கள் சமூகம் எப்படி அழைக்கும்.?????🫣

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

2 months 1 week ago
நம்ம ஆபீசர்ஸ்....டிஜிட்டலில் சுருட்ட முடியாதே....கக்கூசு என்றால் கத்தையாக காசு வரும்😅

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

2 months 1 week ago
அடுத்தது தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்கள் நிறையவே இருக்கின்றனர்.☹️

மூளாயில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2 months 1 week ago
வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு Published By: VISHNU 20 JUL, 2025 | 09:21 PM யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு , சேதமாக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் சனிக்கிழமை (19) தினம் ஏற்பட்ட தர்க்கம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது. அந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) இரு நபர்களின் பிரச்சனை மீண்டும் தலை தூக்கிய நிலையில், அது அப்பகுதியை சேர்ந்தவர்களின் பிரச்சனையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர். அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த சம்பத்தில் இடம்பெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்னர். குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/220495

கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் - எழும் கேள்விகள் என்ன?

2 months 1 week ago
பட மூலாதாரம்,ANUSH KOTTARY படக்குறிப்பு, புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தியில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார். புகார்தாரரான இவர் இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் தாம் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். தன்னால் "குற்ற உணர்வோடு இதற்கு மேலும் உயிரோடு இருக்கமுடியாது" என அவர் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு வெளியே வந்தபின்னர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு பெண்ணின் தாயும் முன்வந்துள்ளார். உடல்கள் அடையாளம் காணப்பட்டால் தாம் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருப்பதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வழக்கில், விசாரணையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதை காவல்துறையினர் இன்னமும் முடிவு செய்யவில்லை. இதற்கிடையில், இந்த விசாரணை குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. "உடல்கள் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும், இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், பெயர்கள் வெளிவரக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும் ஒரு யுக்தி கடைப்பிடிக்கப்படுவதாக தெரிகிறது," என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கேவி தனஞ்செய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடகா அரசு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை ஞாயிறன்று அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு டிஜிபி அந்தஸ்து உள்ள காவல் அதிகாரி பிரணாப் மொஹாந்தி தலைமை வகிக்கிறார். இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர். இந்த கோரிக்கைக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, " அரசு எந்த அழுத்தத்தின் மீதும் பணி செய்யாது. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். காவல்துறையினர் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என கோரினால் நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்போம்," என தெரிவித்திருந்தார். புகார்தாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த தூய்மைப் பணியாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் ஶ்ரீ ஷேத்ர தர்மஸ்தாலா மஞ்சுநாதா ஸ்வாமி கோயிலில் பணியாற்றினார். இந்த கோயில் தர்மஸ்தாலா கோயில் என்றும் அறியப்படுகிறது. இந்தக் கோயில் தென்னிந்தியாவின் முக்கியமான மத தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது ஒரு சைவ கோயில், ஆனால் பூசாரிகள் வைஷ்ணவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ஜெயின் வம்சத்தினரிடம் உள்ளது. புகார்தாரர், 1995 முதல் 2014 வரை நேத்ராவதி ஆற்றங்கரையை தவறாமல் சுத்தம் செய்து வந்ததாகக் கூறினார். பின்னர், அவரது பணியின் தன்மை மாறியது மற்றும் "கடுமையான குற்றங்களின் ஆதாரங்களை மறைப்பது" என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் பல பெண்களின் உடல்களை பார்த்ததாகவும், அவை "ஆடைகள் இல்லாமல், பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலின் தெளிவான அடையாளங்களுடன்" இருந்ததாகவும் கூறினார். அவரது கூற்றுப்படி, இதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்க முயன்றபோது, அவரது மேலதிகாரிகள் மறுத்துவிட்டனர். உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தபோது, அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறுகிறார். "உன்னை துண்டு துண்டாக வெட்டுவோம்," "உன் உடலை மற்றவர்களைப் போல புதைப்போம்," "உன் குடும்பத்தையே கொன்றுவிடுவோம்" என்று கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "2010-ல் நடந்த ஒரு சம்பவம் இன்னும் என்னை அடியோடு உலுக்குகிறது. கலையரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், காவலர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியின் உடலைப் பார்த்தேன். அவரது உடலில் ஆடைகள் குறைவாக இருந்தன, பாலியல் வன்முறையின் தெளிவான அடையாளங்கள் இருந்தன. அவரது கழுத்தில் கட்டிப்போடப்பட்ட தழும்புகள் இருந்தன. அவரையும் அவரது பள்ளி பையையும் புதைக்க ஒரு குழியை தோண்டுமாறு என்னிடம் கூறப்பட்டது. அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது," என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "என்னால் மறக்கமுடியாத மற்றொரு சம்பவம் 20 வயது பெண் ஒருவரின் முகம் ஆசிடால் எரிக்கப்பட்டதுதான்." முதல் தகவல் அறிக்கையின் கூற்றுப்படி, ஆண்கள் கொல்லப்பட்ட விதம் "மிகவும் கொடூரமானதாக" இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு அறையில் நாற்காலியில் கட்டிப் போடப்பட்டு துண்டு ஒன்றால் அவர்கள் வாயைப் பொத்தி மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. புகார்தாரரின் கூற்றுப்படி இந்த சம்பவங்கள் அவர் கண்முன்னே நிகழ்ந்துள்ளன. "நான் பணியாற்றிய காலத்தில் நான் தர்மஸ்தாலா பகுதியில் பல இடங்களில் உடல்களை புதைத்துள்ளேன்," என அவர் தெரிவித்துள்ளார். "சில சமயம் அவர்களது உடல்கள் மேல் டீசலை ஊற்றும்படி சொல்வார்கள். பின்னர் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க அவர்களை எரிக்கும்படி உத்தரவு வரும். இந்த வகையில் நூற்றுக்கணக்கான உடல்கள் அழிக்கப்பட்டன." "மன அழுத்தத்தை" தம்மால் அதற்கு மேலும் தாங்கமுடியவில்லை என்றும் குடும்பத்துடன் மாநிலத்தைவிட்டே வெளியேறியதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார். "நான் குறிப்பிடும் நபர்கள் தர்மஸ்தாலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள். தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது, ஏனெனில் சிலர் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் எதிர்ப்பவர்களை அழிக்கக் கூடியவர்கள். எனக்கும் என் குடும்பத்திற்கும் சட்ட பாதுகாப்பு கிடைத்தவுடன், அனைவரின் பெயர்களையும் அவர்களின் பங்கையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன்," என முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. தனது புகாரை நிரூபிக்கவும் ஆதாரங்களை வழங்கவும், தூய்மைப் பணியாளர் தானே ஒரு கல்லறையை தோண்டினார். பின்னர் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்தார். அவரது வாக்குமூலம் இந்திய பொது பாதுகாப்பு சட்டம் (BNSS) பிரிவு 183-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. நீதிபதியின் முன் ஆஜரானபோது புகார்தாரர் தலை முதல் கால்வரை முழுமையாக கருமையான துணியால் மூடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. விசாரணை மந்தகதியில் நடைபெறுகிறதா? மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.வி. தனஞ்ஜய், விசாரணையின் மந்தமான வேகம் கவலையளிக்கிறது என்று கருதுகிறார். "புகார் ஜூலை 4-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. புகார்தாரர், BNSS பிரிவு 183-ன் கீழ் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, தான் புதைத்த ஒரு உடலின் எச்சங்களையும் சமர்ப்பித்தார். ஆனால், எட்டு நாட்களுக்கு மேலாகியும், புகார்தாரரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்ய எந்த முயற்சியையும் காவல்துறை எடுக்கவில்லை," என அவர் தெரிவித்தார். "இதுபோன்ற அலட்சியத்தை புரிந்துக் கொள்ளமுடியவில்லை, இது காவல்துறை செல்வாக்கு மிக்க நபர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்பதற்கான முக்கியமான தீவிர அறிகுறியாகும், அல்லது முறையான விசாரணை அல்லது இடங்களை சீல் வைப்பதற்கு முன்பு எந்தவொரு ஆதாரங்களை அகற்றுவதில் அல்லது சேதப்படுத்துவதில் வெற்றிபெற அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், தக்ஷிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் வேறு கருத்து தெரிவிக்கிறார். "பொதுவாக, 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் இது, வழக்கு என்னவென்பதை பொறுத்து, விசாரணை அதிகாரியின் (IO) பொறுப்பில் உள்ளது. அதன் பின், விசாரணை நடைமுறையின்படி நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், இப்போது மேலும் தகவல்களை பகிர முடியாது," என அவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். கல்லறையை தோண்டி எச்சங்களை எடுத்த இடத்திற்கு கூட புகார்தாரர் அழைத்து செல்லப்படவில்லை என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருண், "முதலாவதாக அவரது புகாரில் இருக்கும் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதி செய்யவேண்டும். அவரே குழியை தோண்டியுள்ளார். அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமா என்பதை பார்க்கவேண்டும். அடுத்த கட்டம் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை செய்வதுதான் என்பதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் புகார்தாரர் ஒரு கல்லறையை தோண்டுவதும் குற்றம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று உள்ளது. விசாரணை செய்து உறுதி செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் தேவை, " என கூறினார். மீண்டும் திறக்கப்பட்ட பழைய காயங்கள் தூய்மைப் பணியாளரின் புகார் வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஒரு பெண்மணி, 22 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன தனது மகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். அப்பெண் மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவியாக இருந்தார். தாயின் கூற்றுப்படி, அவரது மகள் கடைசியாக கோயிலில் காணப்பட்டார். அவரது வழக்கறிஞர் மஞ்சுநாத், "அவர் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. இந்த தூய்மைப் பணியாளரின் புகாரின் அடிப்படையில் உடல்கள் தோண்டப்பட்டால், அவற்றின் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே அவரது விருப்பம். மகளின் மரணத்தை ஏற்றுக்கொண்டு, இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம்," என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். "நான் அந்த மதத் தலத்திற்கு சென்றேன். அங்கு அதிகாரிகளிடம் பேச முயன்றேன்,ஆனால் அங்கிருந்து விரட்டப்பட்டேன். அதன் பின்னர் நான் காவல்நிலையத்திறுல் சென்றேன், அங்கும் நான் திருப்பி அனுப்பப்பட்டேன்," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அப்பெண்ணின் தாய். இது ஒரு தனி வழக்காக பார்க்கப்படுவதாக அருண் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். "இதை அந்த வழக்குடன் இணைக்கமுடியாது. ஆனால் அதுவும் விசாரிக்கப்படுகிறது," என அவர் சொல்கிறார். தூய்மைப் பணியாளரின் குற்றச்சாட்டுகள் நம்பகமானவையா? தூய்மைப் பணியாளார் 100-க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருப்பதாக கூறியுள்ளார். இது கவனத்தை கவர்வது மட்டுமல்லாது, மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாகும். 2012-ல் 17 வயது மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மாநிலத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. அப்போது, வி.எஸ். உக்ரப்பா தலைமையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை விசாரிக்க ஒரு எம்எல்ஏக்கள் குழு அமைக்கப்பட்டது. "ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 100 பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன என்று ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி குழுவின் முன் கூறினார். அதே மாவட்டத்தில், 402 பெண்கள் மாயமான வழக்குகளும், 106 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன." என உக்ரப்பா, பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். இந்த குழுவின் அறிக்கை சில வாரங்களுக்கு முன்பு மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 1983-ல் தர்மஸ்தாலாவில் நான்கு பெண்கள் காணாமல் போன விவகாரம் கர்நாடக சட்டமன்றத்தில் பெல்தங்கடி எம்எல்ஏ கே. வசந்த பங்கேடாவால், எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c24vjjzqeq1o

49ஆவது தேசிய விளையாட்டு விழா - மரதன் ஓட்டம்: மத்திய மாகாணத்தின் சண்முகேஸ்வரனுக்கு தங்கம்

2 months 1 week ago
Published By: VISHNU 20 JUL, 2025 | 09:24 PM (நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைகளமும் இணைந்து காலியில் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக பங்குபற்றிய அட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தை சண்முகேஸ்வரன் பெற்றார். இவர் கடந்த வருடம் மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார். காலி மரதன் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. சந்தன (2:25:18) வெள்ளிப் பதக்கத்தையும் கிழக்கு மாகாண வீரர் ரி. டபிள்யூ. ரத்னபால (2:30:46) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பெண்கள் பிரிவில் மத்திய மாகாணத்திற்கு தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களும் கிடைத்தது. மதுவன்தி ஹேரத் (2:53:42) தங்கப் பதக்கத்தையும் எஸ். ஹேரத் (3:00:21) வெள்ளிப் பதக்கத்தையும் ஊவா மாகாண வீராங்கனை நிமேஷா நிதர்ஷனி (3:02.32) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பெண்கள் பிரிவில் போட்டியிட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வேலு கிருசாந்தினி (3:14:15) ஏழாம் இடத்தைப் பெற்றார். https://www.virakesari.lk/article/220497

லொஸ் ஏஞ்சல்ஸில் நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

2 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 05:24 PM அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு டெல்டா விமானத்தில் இயந்திரம் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். https://www.virakesari.lk/article/220484

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

2 months 1 week ago
Keeladi Report: 'அகழாய்வு செய்து கணித்த காலத்தை மாற்ற முடியாது’ - Amarnath Ramakrishna Interview தான் அளித்த கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கையை மாற்றப்போவதில்லை என அங்கே முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி கி.மு. 800 முதல் கி.மு. 500வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பது எப்படி முடிவு செய்யப்பட்டது என்பதையும் விளக்கினார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 1 week ago
மான்செஸ்டர் டெஸ்டில் கருண் நாயர் இல்லையெனில் 3-ஆம் இடம் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் பேட்டிங் செய்தார் கட்டுரை தகவல் மனோஜ் சதுர்வேதி மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள கருண் நாயர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால், அவர் திறமையான ஆட்டத்தால் கவனம் ஈர்க்க தவறிவிட்டார். எனவே, மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது இந்திய அணிக்கு ஒரு கவலையாக மாறியுள்ளது. கருண் நாயர் நன்றாக தொடங்கினாலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற அவர் தவறவிடுவதுதான் பிரச்னையாக உள்ளது. வேகமாக நகரும் பந்துகளை விளையாடுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் ஆட்டமிழந்துள்ளார். எளிதில் தீர்வு கிடைக்காத பிரச்னை இது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கருண் நாயர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்சரை கருண் நாயர் தடுக்கும்போது வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்ட கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கருண் நாயர் நிறைய ரன்களை குவித்தார், அதனால் மூன்றாம் வரிசை வீரராக களமிறங்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எந்தவொரு இன்னிங்ஸையும் வலுப்படுத்த இது மிகவும் முக்கியம். ஆனால், பெரிய இன்னிங்ஸை விளையாடுவதில் கருண் நாயர் தோல்வியடைந்தது, இந்தியாவின் ஆட்டத்தை பாதித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் கருண் நாயர் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் 21.83 எனும் சராசரியில் வெறும் 131 ரன்களையே பெற்றுள்ளார். இதில் லார்ட்ஸில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற 40 ரன்கள்தான் அவர் பெற்ற அதிகபட்ச ஸ்கோராகும். கருண் நாயர் நான்காவது டெஸ்டில் அதாவது மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடவில்லை என்றால், அவரது டெஸ்ட் வாழ்க்கை மீண்டும் முடிவுக்கு வரக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உதவி பயிற்சியாளர் ரியான் டென் உதவி பயிற்சியாளர் ரியான் என்ன நினைக்கிறார்? இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோசெட், பெக்கென்ஹேமில் நடைபெற்ற பயிற்சியின்போது, இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் தெளிவாக தெரிவிக்கவில்லை. அவர் கூறுகையில், "கருண் நாயர் நல்ல வேகத்துடன் செயல்படுகிறார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து எங்களுக்கு நிறைய ரன்கள் தேவை. நாங்கள் எதில் சிறப்பாக இருக்கிறோம் என்பதிலும் போட்டியில் தோல்வியடைந்ததற்கான தவறுகளை சரிசெய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்." என அவர் கூறினார். "ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் தனித்தனியாக பார்த்தால், அவர்கள் நன்றாகவே விளையாடியுள்ளனர். விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் அணியின் பிரச்னை" என கூறினார் ரியான் சில சந்தர்ப்பங்களில் கருண் நாயருடையது மட்டுமல்லாமல் அனைத்து பேட்ஸ்மேன்களுடைய ஆட்டமும் சரிவை கண்டதாக, அணி நிர்வாகம் நம்புகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் இந்திய டெஸ்ட் வீரர் ஃபரூக் இன்ஜினியர் கருண் நாயரின் ஆட்டத்தில் திருப்தி அடையவில்லை. இந்திய முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரர் ஃபரூக் இஞ்சினியரும் கருண் நாயரின் ஆட்டம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "கருண் நாயர் முதல் 20-30 ரன்களை நன்றாக விளையாடுகிறார். கவர் டிரைவ் (cover drives) ஷாட்டுகளை நன்றாக அடிக்கிறார். ஆனால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து இது மட்டும் எதிர்பார்க்கப்படுவதில்லை. மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் நிறைய ரன்களை குவிக்க வேண்டும்." என கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா இந்த தொடரை ஒளிபரப்பும் டிவி சேனலின் கமெண்ட்ரியில், "கருண் நாயரை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். அணி நிர்வாகம் கருண் நாயரை தக்கவைக்க விரும்பினால், இந்த தொடர் முடிந்ததும் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்." என கூறினார் "அணி நிர்வாகம் வருங்கால திட்டங்களில் சாய் சுதர்ஷனை மனதில் வைத்திருந்தால், ஓல்ட் டிராஃபோர்டில் நடக்கும் போட்டியிலிருந்தே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சாய் சுதர்ஷன் வந்தவுடன் தனது விக்கெட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் என நமக்கு தெரியும். ஆனால், அவர் விளையாடுவது போதாது, அவர் இந்த நிலையில் விளையாடினால் 60-70 ஓவர்கள் பந்து வீசக் கற்றுக்கொள்ள வேண்டும்." இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவாங் காந்தி தான் 2016ம் ஆண்டில் முதன்முறையாக டெஸ்ட் அணியில் கருண் நாயரை தேர்ந்தெடுத்தார். இந்த சுற்றுப்பயணம் கருணுக்கு கொடூரமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்திய அணியிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருண் நாயருக்குப் பதிலாக சாய் சுதர்ஷனுக்கு (பேட்டிங்) வாய்ப்பு கிடைக்கக்கூடும். (கோப்புப் படம்) மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இல்லை என்றால், இந்திய அணிக்கு முன் உள்ள மற்ற வாய்ப்புகள் என்ன? முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குவது முதல் வாய்ப்பு. முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷன், முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், இரண்டாவது இன்னிங்ஸ்லில் 30 ரன்களை எடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் தனது ஆட்ட பாணியால் கவனம் ஈர்த்தார். ஆனால் இரண்டாவது டெஸ்டில், ஆல்ரவுண்டரை களமிறக்கும் பொருட்டு சாய் சுதர்ஷன் களமிறக்கப்படவில்லை. முதலாவது டெஸ்டில் சாய் மூன்றாவதாகவும் கருண் நாயர் ஆறாவதாகவும் களமிறக்கப்பட்டனர். இதன்மூலம், மூன்றாவது வரிசை வீரருக்கு சாய் சுதர்ஷன் தான் பயிற்சியாளரின் கண்களுக்கு முதல் தேர்வாக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே, அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த்தின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் பேட்டிங் செய்தாலும், விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. துருவ் ஜுரெல் விக்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். தற்போது ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருந்தால், அவர் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டியிருக்கும், துருவ் ஜுரெல் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் ஜுரெல் தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தியுள்ளார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கும் திறன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் உள்ளது. 2024-25ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இருந்து டெஸ்ட் அணியில் அவர் உள்ளார். ஆனால், இன்னும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்த தொடருக்கு முன்பு அவர் இந்தியாவுக்காக நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் அரைசதம் அடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 27 சதங்கள் அடித்தும் அவர் சாதனை படைத்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாத இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். கருண் நாயரை போன்றே ஷ்ரேயாஸும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை குவித்துள்ளார், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. அவர் ஃபார்மில் இருந்தபோதிலும் டெஸ்ட் அணியில் அவரைத் தேர்வு செய்யாதது, வீரர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அணியில் இருந்திருந்தால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. ஷ்ரேயாஸ் அணியில் இல்லாவிட்டாலும், தேவைப்பட்டால் அவர் அழைக்கப்படலாம். லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு என்ன காரணம்? சுப்மன் கில் பதில் சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான சச்சின் போராட்டம் நினைவிருக்கிறதா? இந்தியா நூலிழையில் கோட்டை விட்ட ஆட்டங்கள் கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் இருந்த வித்தியாசம் ஆட்டத்தில் எவ்வாறு எதிரொலித்தது? கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் இருந்த வித்தியாசம் ஆட்டத்தில் எவ்வாறு எதிரொலித்தது? 14 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. அவர், 35க்கும் அதிகமான சராசரியுடன் 811 ரன்கள் எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராஃபியில் மிகவும் திறமையாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அணிக்கு வந்தால் அது அணியை வலுப்படுத்தும் என்பது உறுதி. ஆனால் தேர்வாளர்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இப்போது அவர் மீது மேலும் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கலாம். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c86gxyyq287o

மலையகத்தில் கடும் மழை - நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு

2 months 1 week ago
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 03:07 PM பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் சுயமாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது இதனால் நீர்த்தேக்க அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்து பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/220465

ஜெய்சங்கரின் சீன பயணம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

2 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். 20 ஜூலை 2025, 04:53 GMT புதுப்பிக்கப்பட்டது 20 ஜூலை 2025, 04:58 GMT இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும் வேளையில், ஜெய்சங்கரின் பயணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானை சீனா வெளிப்படையாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாயின. இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு ஜெய்சங்கர் சீனா சென்றது எந்தளவுக்கு சரியானது? சீனாவுடன் நெருக்கமாவதன் மூலம் அமெரிக்காவுடனான உறவில் சமநிலையை பராமரிக்க இந்தியா விரும்புகிறதா? தெற்காசியா மற்றும் மற்ற வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவை விட பெரிதா? பிபிசி ஹிந்தியின் 'தி லென்ஸ்' எனும் வாராந்திர நிகழ்ச்சியில் கலெக்டிவ் நியூஸ்ரூமின் இயக்குநர் (இதழியல்) இந்த விவகாரங்கள் குறித்து விவாதித்தார். ராஜிய விவகாரங்கள் நிபுணர் ஷ்ருதி பாண்ட்லே, சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் துணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். புதிய அத்தியாயத்தின் தொடக்கமா? அல்லது ஒரு அடையாள பயணமா? கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இருவரும் சந்தித்துக்கொண்டனர். 2020ம் ஆண்டு எழுந்த பதற்றத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டது அதுவே முதல் முறையாகும். அதன்பின், சீனாவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த ஜூலை மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பெய்ஜிங் சென்றனர். அங்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது ஜெய்சங்கர் சீனா சென்ற நிலையில் இருநாட்டு உறவுகளை மீட்டமைப்பதற்கான நடவடிக்கை இது என சிலர் கூறுகின்றனர். அதேசமயம், இது வெறும் அடையாள பயணம் என்றும் சிலர் கூறுகின்றனர். இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான நேர்மையான முயற்சியாக இந்த பயணத்தை பார்க்க வேண்டும் என ஷ்ருதி பாண்ட்லே நம்புகிறார். ஷ்ருதி பாண்ட்லே கூறுகையில், "அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகளால் உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இப்போது உருவாகி வரும் உறவுகளில் நாடுகடந்த தேசியவாதம் பங்காற்றுகிறது என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. முன்பு, பிரச்னைகளை தீர்க்க சில நாடுகள் ஒன்றாக இணைந்துள்ளன. முன்பு, சீனாவை சமாளிப்பது ஒரு பிரச்னையாக இருந்தது. ரஷ்யாவை சமாளிப்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இப்போது, டிரம்பின் முடிவுகளை சமாளிப்பது பிரச்னையாக உள்ளது. எனவே, ஜெய்சங்கரின் பயணத்தை இந்த பார்வையுடனும் அணுக வேண்டும்." என்றார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 3,000 கி.மீ நீள எல்லை உள்ளது. அப்பகுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகள் இருப்பதால் எல்லைக் கோடு தெளிவாக இல்லை. இதனால். இருநாட்டு படையினருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா மீது இறக்குமதி வரிகளை அறிவித்தார். சீனா அதை வெளிப்படையாக எதிர்த்தது, ஆனால் இந்தியா பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்தது. இந்தியாவின் முன்னுரிமைகள் என்ன? சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லைப் பிரச்னை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபரின் கொள்கைகள், இந்தியா-சீனாவை ஒன்றாக இணைத்துள்ளன." என்றார். "இரு நாடுகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பதை பார்க்க வேண்டும். அமெரிக்கா இந்தியாவை இருதரப்பு வர்த்தகத்துக்கு அழைத்து, ரஷ்யா மற்றும் சீனா உட்பட பிரிக்ஸ் (BRICS) நாடுகளிடமிருந்து விலகி இருக்குமாறு கூறுவதற்கான சாத்தியம் உள்ளது. டிரம்பின் வார்த்தைகளை இந்தியா ஏற்றுக்கொண்டால், சீனாவுடனான உறவு வெகுதூரம் செல்லாது என நினைக்கிறேன். ஜெய்சங்கரின் முயற்சிகள் சிறப்பானவை, ஆனால் அதன் முடிவு வெகுவிரைவில் ஏற்படாது." பட மூலாதாரம்,X/DR S JAISHANKAR படக்குறிப்பு, கல்வான் மோதலுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெய்சங்கர் முதல் முறையாக சீனாவுக்கு பயணம் செய்தார். பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இந்தியா சொல்லும் சேதி என்ன? இந்தியாவின் சர்வதேச அரசியல் குறித்த விவாதத்தையும் இந்த பயணம் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என, எதிர்க்கட்சியான் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி பல்கலைக் கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் இணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், "வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு சென்றிருக்காவிட்டால், இந்தியாவின் விருப்பங்கள் வேறு எங்காவது பாதிக்கப்பட்டிருக்கலாம். எஸ்.சி.ஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் குரல் எழுப்பியிருந்தார். அவர் அங்கு சென்றிருக்காவிட்டால், இத்தகைய கருத்தை எழுப்பியிருக்க முடியாது. இந்தியா அதில் பங்கேற்காமல் இருந்திருந்தால், அந்த தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கக் கூடும். 2026-ம் ஆண்டில் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. நீங்கள் (இந்தியா) மறுத்தால், சீன தலைமையும் இந்தியாவுக்கு வருவதற்கு மறுக்கலாம்." என கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாட்டுக்கும் இடையே அமைதியை ஏற்பத்தியதாக சமூக ஊடகத்தில் அறிவித்தார். பாகிஸ்தான் அதற்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்தாலும், மோதல் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு இருப்பதாக கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என, டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஷ்ருதி பாண்ட்லே கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை இருநாட்டு விவகாரம் என, அமெரிக்காவிடம் இந்தியா தொடர்ந்து கூறிவந்தது. அதேபோன்று, சீனாவுடனான உறவையும் இருநாட்டு உறவாக தொடர இந்தியா விரும்பியது. எந்தவொரு மூன்றாவது தரப்பும் இருநாட்டு உறவை பாதிக்க முடியாது என வெளியுறவு அமைச்சர் தெளிவாக கூறினார். இங்கு, மூன்றாவது தரப்பு பாகிஸ்தானுடன் தொடர்புடையது. டிரம்பின் கொள்கைகளால் இந்தியா தன்னுடைய கொள்கைகளை மாற்ற வேண்டியுள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே சமநிலையை பேணுவது இந்தியாவின் நலனுக்கானதாகும்." என தெரிவித்தார். இந்தியா ஒரு பன்முக உலகம் பற்றிப் பேசுகிறது. இந்த சூழலில், ஜெய்சங்கரின் சீன பயணத்தை மற்ற நாடுகள் எப்படி பார்க்கின்றன? பேராசிரியர் புஷ்ப் அதிகாரி கூறுகையில், "ரஷ்யா-சீனா-இந்தியா என முத்தரப்பு கூட்டணியை செயல்படுத்த வேண்டும் என விரும்புவதாக ரஷ்யாவிலிருந்து செய்தி வெளியானது. இப்போது இந்தியா இதற்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும், ஏனெனில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக செல்கிறது. தங்கள் கூட்டாளியை தேர்ந்தெடுப்பதில் இப்போது இந்தியா சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதுகுறித்து அமெரிக்காவிடமிருந்து நிச்சயம் அறிக்கை வரலாம். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிய நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்." என்றார். இந்தியா முன்னுள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஆண்டு அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோதியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்யாவின் கஸானில் சந்தித்தனர். ராஜீய ரீதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் இயல்பானதாக இருப்பதாக தோன்றினாலும், களத்தில் இருநாடுகளுக்கிடையே அடிப்படையான மற்றும் நிரந்தரமான சவால்கள் பல உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவில் பதற்றம் அதிகரித்தது, அது தற்போது வரை முழுமையாக தீர்க்கப்படவில்லை. பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கம் மற்றும் பெல்ட் அண்ட் ரோட் போன்ற திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் குவாட் (Quad) அமைப்பில் அங்கம் வகிப்பது போன்ற காரணிகள் சீனாவை அசௌகரியமாக்குகின்றன. இந்தியா-சீனாவின் வர்த்தகத்தில் பெரும் சமநிலையின்மை நிலவுகிறது. இந்தியா சீனாவிடமிருந்து ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது, ஆனால் வெகுசில பொருட்களையே சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்த சமநிலையின்மை குறித்துப் பேசிய ஷ்ருதி பாண்ட்லே, "இதே விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சரும் குரல் எழுப்பியுள்ளார். நீங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறீர்கள், ஆனால் எங்கள் பிரச்னைகளையும் கேளுங்கள் என அவர் பேசியுள்ளார். உண்மையில் சீனாவுடன் எதுவுமே எளிது அல்ல. இந்தியா சீனாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் உள்ளது." என தெரிவித்தார். தலாய் லாமா இந்தியாவில் இருப்பது குறித்தும் திபெத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் சீனா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், பிரமபுத்திரா ஆற்றின் மீதான சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா மிகவும் கவலைகொண்டுள்ளது. அப்படியான சூழலில், இருநாட்டு உறவை மேம்படுத்த இந்தியா எதில் கவனம் செலுத்த வேண்டும்? இந்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் புஷ்ப் அதிகாரி, "சீனாவுடன் உறவை மேம்படுத்த பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவும் சீனாவும் இரு வெவ்வேறு நாகரிகங்கள், ஆனால் ஒன்றாக வளரும் நாடுகள். எதிர்காலத்தில் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தினால், இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவின் அழுத்தத்தைக் குறைக்கலாம். பிராந்திய அளவில் சிறப்பான ஒத்துழைப்பு இருந்தால்தான் எந்த தவறான புரிதலும் ஏற்படாது என்பதுதான் மிக முக்கியமான விஷயம். இது நடந்தால், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக முடியும்." என கூறினார். பேராசிரியர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், இந்தியாவும் சீனாவும் முதலில் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தி உறவை வலுப்படுத்த வேண்டும் என்றார். அமெரிக்கா மிரட்டல் எதிரொலி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு நெருக்கடி வருமா? ஐஎன்எஸ் அர்னாலா: இந்திய கடற்படையின் புதிய போர்க் கப்பல் எதிரிகளை முறியடிக்க எவ்வாறு உதவும்? ஆசியாவை நிலைகுலைய வைக்கும் டிரம்பின் வரி விதிப்பு, கவலையில் உற்பத்தியாளர்கள் சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயலும் இந்தியா - அமெரிக்கா குறித்த கவலை காரணமா? அவர் கூறுகையில், "முதலாவதாக, ஒரு உறவில் நிலைத்தன்மை அவசியம். இரண்டாவதாக, நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானையும் கவனிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களுக்கும் இந்தியாவும் சீனாவும் கவனம் செலுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிறந்த திசையில் நகரும்." என்றார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா சென்றது, இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதற்கான அறிகுறியாக உள்ளது. எனினும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை இரண்டும் நிரந்தர தீர்வு ஏற்படுவதில் பெரிய சவால்களாக உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70xl1rrrjqo

ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

2 months 1 week ago
20 JUL, 2025 | 05:10 PM கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (20) மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது குறித்த தாயார் தன்னுடைய விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம் எனவும் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தினார். பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருப்பதாகவும் பொலிஸார் தங்களது வாக்குமூலத்தையும் பதிவு சரியான முறையில் செய்யவில்லை எனவும் நீதியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் பக்க சார்பாக செயற்பட்டதாகவும் குறித்த தாயார் தெரிவித்தார். விபத்து இடம்பெற்ற சிசிடிவி காணொளிகள் இதன் போது வெளியிடப்பட்டதுடன் பொலிஸார் இந்த சிசிரிவி காணொளிகளை கூட பார்வையிட்டு சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் இதன் போது குற்றம் சுமத்தினார். குறித்த விபத்தான தாயின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாகவும் தாங்கள் சரியான முறையில் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் கூறி குறித்த விபத்துக்கு காரணம் உயிரிழந்த சிறுவனின் தாயார் தான் என சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது பிள்ளையின் உயிருக்கு பேருந்து உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாயும் பேருந்து சாரதி ஒரு லட்சம் ரூபாயும் தங்களுக்கு இழப்பீடாக வழங்கியதாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் தனக்கு சரியான நீதி வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தார். தனது மகன் பேருந்தின் பின்பக்கம் அடிபட்டு விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் விசாரணையின் போது பேருந்து முன் பக்கம் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்ததாகவும் இறந்த சிறுவனின் உடல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே சாரதியை பிணையில் விடுவித்ததாகவும் பேரூந்தையும் விடுவித்ததாகவும் குறித்த தாயார் இதன் போது தெரிவித்தார். பொலிஸார் உயிரிழந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலத்தை கூட சரியான முறையில் பெறவில்லை எனவும் நீதியான விசாரணையை முன்னெடுக்கவில்லை எனவும் சிசிரிவி காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதன் போது குற்றச்சாட்டினர். உயிரிழந்த சிறுவனுக்கு சிறந்த விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டி தர வேண்டுமென இதன் போது கண்ணீர் மல்க ஊடகங்களிடம் வேண்டிக்கொண்டார். https://www.virakesari.lk/article/220481

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

2 months 1 week ago
மோட்டார் சைக்கிளை யார் ஓடுவது? நீங்களா? மோட்டார் சைக்கிளில் திரிவதை விட ஆட்டோ பிடிப்பது பாதுகாப்பானது. ஊபர் மிகவும் வசதி. கட்டணம் பரவாயில்லை. உண்மையில் வாடகைக்கு வாகனம் இலங்கையில் எடுப்பது கிட்டத்தட்ட் வெளிநாட்டில் தினம் ஆகும் செலவுக்கு ஒப்பானது. அல்லது அதைவிட கொஞ்சம் குறைவு என கூறலாம். உங்களுக்கு பொதுவாக மைல் பிரச்சனை வராது. ஏன் என்றால் ஒரு நாளைக்கு வெளிநாடு போல் 700/800 அல்லது 1000/1200 கிலோமீற்றர் நாங்கள் இலங்கையில் ஓடப்போவது இல்லை. அப்படி ஓடினால் இலங்கை தெரு நிலவரங்களை பொறுத்தவரை ஆபத்தானதும் கூட. நிதானமாக, ஆறுதலாக வாகனம் ஓடக்கூடிய சூழ்நிலை காணப்பட்டால் வாடகைக்கு எடுத்து ஓடலாம். அவசரப்படுவது என்றால் வாகனம் வாடகைக்கு எடுத்து ஓடுவது ஆபத்தானது. நீண்ட தூரங்களுக்கு ஹயரை விட புகையிரதம் அதிகம் பாதுகாப்பானது. ஹயர் ஓடும் சாரதிகள் போதுமான அளவு தூங்கி, ஓய்வெடுத்து வாகனத்தை ஓட்டுகின்றார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இன்றைக்கு இவன், நாளைக்கு எத்தனை பேரோ?

2 months 1 week ago
இன்னைக்கு இவன்.. நாளைக்கு எத்தனை பேரோ? இந்த பையன் மூன்றாண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனாக இருந்த போது 'சிறுவன்'. அப்பவே ஸ்கூல் ரவுடியாக ஆசிரியரை எதிர்த்து தம்பி பேசிய வீடியோ படு வைரல். அதாவது அந்த ஸ்டைல் பேச்சு என்னென்னா, "ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.. போட்டா பெயிலு" அப்ப ஏதாவது பண்ணி இருந்தா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போய் இருப்பான். திண்டுக்கல் தம்பி இப்போ மாட்னது 19 வயசுல. அதுவும் ஏடிஎம்முக்கு கொண்டு போன பணம் 29 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில். ஸோ, நேரடியாக ஜெயில்.. ஒன்னே கால் வயசு தம்பிய ஏமாத்திடிச்சு.. தமிழ்நாடு முழுக்க பள்ளிகளில் இந்த மாதிரி தறுதலை மனநிலையோடு மாணவர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம், ஒரே நினைப்பு, சட்டம் நம்மளை ஒன்றும் புடுங்கி விட முடியாது. அப்புறம் கைது என்றால் ஏதோ கடைக்கு போய் டீ குடித்துவிட்டு வரும் சமாச்சாரம் என்று நினைக்கிறார்கள்.. இந்த மாதிரி தறுதலைகளுக்கும் இவைகளை வேடிக்கை பார்க்கும் பெற்றோருக்கும் சில விஷயங்கள் புரிவதில்லை. கைது.. பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம். பல விஷயங்களில் இவர்கள் கைது , அவர்கள் கைது என பேப்பரில், கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக படித்துவிட்டு கடந்து விடுவீர்கள். மற்ற குற்றவாளிகளை விட்டுவிடுங்கள். தற்செயலாய் சிக்கும் புதியவர்களின் நிலைமை இருக்கிறதே, அதுதான் இங்கே பெரும்பான்மை. ஆனால் அவர்களில் பலருக்கும் சட்டத்தின் பின்விளைவுகள் என்பது மருந்துக்கும் தெரியாது. சட்டத்தால் நம்மை தொடக்கூட முடியாது என்று இந்த காலத்து தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் பொதுவெளியில் கெத்து காட்டுகிறார்கள். மாஸ் ஹீரோக்களின் பில்டப் சினிமாக்களை மட்டுமே பார்த்துப் பார்த்து கும்பலைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாதாரண அடிதடி என்று வைத்துக்கொள்வோம். விசாரணைக்கு என்று காவல் நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போவார்கள். காவல் நிலையத்தில் நுழையும்போதே பின்னங்கழுத்தில் ... விழும். டூட்டிக்கு புதிதாக வருபவர்கள், என்ன கேசு இது என்று நாலு தட்டு தட்டிவிட்டுத் தான் மற்ற வேலையையே பார்ப்பார்கள். அதே மாதிரி, அடுத்த டூட்டிக்கு வரும்போது அக்யூஸ்ட்டை பார்க்க வாய்ப்பு இருக்காது என்று நினைத்து போகும்போது கொஞ்சம் விருந்து வைத்து விட்டு தான் செல்வார்கள். சுருக்கமா சொன்னா இருக்கிறவங்க, வர்றவங்க, போறவங்கன்னு எல்லார்கிட்டயும் விழும். இவ்வளவு விழுந்தாலும் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே காத்துக் கொண்டிருப்பதால் நிலைமை பற்றி சீரியஸாக பெரிதாய் தெரியாது. யாரையாவது பிடித்து எப்படியாவது பேசி எதையாவது கொடுத்து வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும். அதாவது அடித்ததோடு விட்டுடுவாங்க என்ற அசால்ட்டான நம்பிக்கை . ஆனால் எப்ஐஆர் போட்டு ரிமான்ட் செய்தே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி காவல்நிலையத்தில் பலரும் பேசிக் கொள்ளும் போதுதான், லாக்கப்பில் இருக்கும் பார்ட்டிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போதுகூட அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாது. நீதிமன்றத்திற்கு அழைத்து கொண்டு செல்லும்போது கூட ஏற்கனவே தெரிந்த காவலர்கள்தான் வருவார்கள். கூடவே குடும்பத்தினரும் உறவினர்களும் வருவார்கள். மேஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்து ஜெயிலுக்காக வேனில் ஏற்றும் வரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அருகில் பார்க்க முடியும். இதற்குப் பிறகுதான் சோதனைகள் ஆரம்பிக்கும். வேனில் ஏற்றிய பிறகு குடும்பத்தினர் உறவினர்கள் கட் ஆவார்கள். ரிமாண்ட் க்கு பிறகு சகஜமாக பேசிக்கொண்டு கூடவே வரும் காவலர்கள் சென்ட்ரல் ஜெயிலில் ஒப்படைத்த உடன் காணாமல் போய்விடுவார்கள். ஜெயில்.. முற்றிலும் புதிய இடம்.. உள்ளே அட்மிஷன் போடுவதற்காக அங்க அடையாளங்களை கேட்கும்போதே விதவிதமாக சீர்வரிசை. புழுவை விட கேவலமாக கருதி அவர்கள் நடத்துகிற விதத்திலேயே ஜென்மம் செத்துப் போய்விடும். அதற்கப்புறம் சிறையில் பிளாக் என்கிற வகுப்பு. விதவிதமாக துர்நாற்றங்கள் கலந்து வீசும் அங்கு ஏகப்பட்ட பேருடன் விசாரணைக் கைதி என்ற அந்தஸ்தோடு குடும்பம் நடத்திய ஆக வேண்டும். டாய்லெட் காலியாக இருக்கும் நேரம் பார்த்து அதைப் பிடித்து போய் வருவதற்குள்.. மூன்று வேளையும் கியூவில் நின்று தட்டில் வாங்கித் தின்னுவதற்குள்.. கக்கூசை கழுவ விடலாம், துணிகளை துவைக்க விடலாம் தோட்ட வேலை செய்ய விடலாம் இன்னும் என்னென்ன வேலை இருக்கிறதோ அத்தனையையும் செய்யச் சொல்லலாம். வார்டன்கள் சொல்வதை செய்யாவிட்டால் அடுத்தடுத்த கட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகிக் கொண்டே போகலாம். ஜெயிலுக்குப் போன ஓரிரு தினங்கள் தொடர்ந்து குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பிஸ்கட் பழங்களுடன் வந்து அக்கறையாக பார்ப்பார்கள்.. ஜாமின் கிடைப்பதில் தாமதம் ஆகி உள்ளே இருக்க இருக்க, அக்கறை யோடு வந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் வருகை என்பது குறைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் அடியோடு கூட நின்று போகும். ஜாமீன் கிடைத்து வெளியே வரும்வரை ஏண்டா இந்த தவறை செய்தோம் என்று நினைத்து வருந்தாதே தருணமே இருக்க முடியாது. வாரங்கள் கழித்து மாதங்கள் கழித்து ஜாமீனில் வந்த பிறகு, பட்டதெல்லாம் போதும் என நொந்து போய் சொந்த வேலையை பார்க்க ஆரம்பித்து இருப்பார். அப்படியே ஜெயில் சமாச்சாரத்தையும் மறந்து விடுவார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்திலிருந்து நேரில் ஆஜராகும்படி சம்மன் வரும். அப்போது பார்த்தால், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம். ஒரு வியாபாரம் ஆரம்பித்து நன்றாக போய்க் கொண்டிருக்கலாம். அல்லது புது மாப்பிள்ளையாக மாமனார் வீட்டில் கெத்து கூட காட்டிக் கொண்டிருக்கலாம். எல்லாமே தொலைஞ்சு போச்சு என்று மறந்துவிட்டிருந்தால் இந்த நேரத்தில் பார்த்தா இந்த எழவு வரவேண்டும் என நொந்து போய் தலையில் அடித்துக்கொண்டு உட்காருகிற கட்டம் அது. குற்றப்பத்திரிகை தாக்கல் விசாரணை என நீதிமன்றங்களுக்கு வருடக்கணக்கில் அலைய நேரிடும். உள்ளூரில் வழக்கில் சிக்கி உள்ளூர் நீதிமன்றத்தில் அலைய நேரிட்டால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் வெளியூரில் தப்பு செய்துவிட்டு அங்கேயே அங்கேயே மாட்டி அந்த நீதிமன்ற எல்லைக்குள் வழக்கு நடந்தால், சுத்தம். ஒவ்வொரு முறையும், அன்றைய தின எல்லா வேலைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு வழக்குக்காக ஊரு விட்டு ஊரு போய் வரும் வரை நாய் அலைச்சல்தான். சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு குளிக்கப் போய் அங்கு தகராறு செய்துவிட்டு வழக்கு பதிவாகி சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்காசி நீதிமன்றத்திற்கு இன்றைக்கும் நடப்பவர்கள் பலருண்டு. இதேபோல நீண்டதூர மாவட்டங்களுக்கு பயணம் செய்யும்போது அங்கு ஏதாவது ஒரு விஷயத்தில் தகராறு வழக்கு பதிவாகி சொந்த ஊருக்கும் தகராறு நடந்த ஊர் நீதிமன்றத்திற்கும் அலையும் பரிதாபங்கள் பற்றிக் கேட்டுப் பாருங்கள். விதவிதமான கண்ணீர் கதைகள் கிடைக்கும் சரி போகட்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு கட்டம். இதற்குப் பிறகு? வேறென்ன? தண்டனை கொடுத்தால் உள்ளே போக வேண்டியதுதான். விடுதலை என்றால் ஆள விடுங்கடா சாமி என்று புத்தர் ரேஞ்சுக்கும் போகலாம்.. எல்லாமே பழகிவிட்டதால் அடுத்த ரவுண்ட்டையும் பார்த்துவிடலாம் என இன்னும் திமிர் அதிகமாகலாம். அப்புறம் வழக்குகளுக்கான செலவு, சமூகம் மற்றும் சொந்த பந்தங்கள் இடையே அவமானம்.. போன்றவை உள்ளூர் வரிகள்.. முக்கிய குறிப்பு.. சொன்னது கொஞ்சம் தான்.. சொல்லாமல் விட்டது தான் அதிகம்.. இதையெல்லாம் வீட்டில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.. பள்ளிகளில் சொல்லி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. சொல்ல வேண்டிய கடமை உள்ளதால்தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். Ezhumalai Venkatesan

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

2 months 1 week ago
யாழ்ப்பாணத்தில் கல்சியத்தால் நீர்க்கடுப்பு வருவதில்லை. ஆனால் அதீத நீர்ப்பாவனை(மோட்டார் பாவிப்பது), மழை நீர் சேமிக்கப்படுவதில்லை, குட்டை, குளங்களின் தேவை அறியாது ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்படுவது, அதீத உரப்பாவனை போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் உவராகிறது. பயனுள்ள கட்டுரையை பகிர்ந்த @கிருபன் அண்ணைக்கு நன்றி.

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

2 months 1 week ago
தகவலுக்கு நன்றி. இலங்கையில் இதுவரை வாகனத்தை வாடகைக்கு எடுத்ததில்லை. ஊரிலே மோட்டார் சைக்கிள் இருப்பதால் அதிலேயே சகல இடங்களுக்கும் போய் வருவோம். குடும்ப சகிதம் கோவில் குளம் போக வேண்டுமென்றால் வான் பிடித்து தான் போவதுண்டு. வாடகைக்கார் எடுப்பமா என்று பார்க்கிறது தான் ஆனாலும் இலங்கையில் அதற்கான கட்டணங்கள் மிகவும் கூடுதலாகவே இருந்தது. அத்தோடு குறிப்பிட்ட அளவு மைல்களே ஓடலாம்.
Checked
Sun, 09/28/2025 - 00:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed