Aggregator
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
பாரம்பரிய பல்லுயிர் தலமாக தேர்வு: எலத்தூர் குளம், நாகமலை குன்றில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, எலத்தூர் குளம்
கட்டுரை தகவல்
சேவியர் செல்வகுமார்
பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் 2002இன் படி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள எலத்துார் குளத்தை மூன்றாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது.
அதற்கு அடுத்த மாதத்திலேயே அதற்கு மிக அருகிலேயே உள்ள நாகமலை குன்றை நான்காவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்தது.
எலத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 கி.மீ. துார இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு இடங்களையும் பாரம்பரிய பல்லுயிர் தலங்களாக அறிவித்திருப்பது, அவற்றின் மீது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அப்படி அந்த இடங்களில் என்ன இருக்கிறது? இவற்றின் சூழலியல் சிறப்புகள் என்ன? விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வுக்குச் சென்றது.
ஊர்ப் பறவைகளை கவர்வதில் முக்கிய இடம் பிடித்த எலத்துார் குளம்
எலத்துார் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. சுற்று வட்டாரத்திலுள்ள 21 கிராமங்கள்தான் இதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன. குளத்தில் இருந்து வெளியேறும் நீர், ஓடை வழியாகச் சென்று அரசூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது.
இந்தக் குளத்திற்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன.
இதற்குள் குடைவேலம், நாட்டுக் கருவேலம், வேம்பு, அரப்பு, மூலிகைச் செடிகள் எனப் பலவிதமான மரங்களும், தாவரங்களும் இருக்கின்றன. குளத்திலுள்ள தண்ணீர் தெளிந்த நீராகத் தெரிகிறது. 134 விதமான மண்ணின் மரங்கள் கரைப்பகுதிகளில் உள்ளன.
மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ள இந்தக் குளத்தில்தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இருந்தன. வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன.

பட மூலாதாரம், ebird.org
அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்புக்கான இ-பேர்ட் இணையதள தரவின் அடிப்படையில், 2024–2025ஆம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் (Great Backyard Bird Count) எலத்துார் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 23வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோன்று 2024 ஜனவரி 28 அன்று, தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக பறவைகளைக் கொண்ட நீர்நிலையாகவும் எலத்துார் பதிவு பெற்றுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை பெருவெள்ளத்தின்போது தொடங்கப்பட்ட 'சூழல் அறிவோம்' அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் 5 ஆண்டுகளாக எலத்துார் குளம் மற்றும் நாகமலை குன்று பற்றி ஆவணப்படுத்தியுள்ளார்.
''கோவிட் காலத்தில் இந்தக் குளத்திற்கு வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருவதைப் பார்த்தோம். பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், இங்குள்ள பறவைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த பெரிதும் உதவினார். அதன் பின்பே இந்தக் குளத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தொடர்ந்து அங்கு வரும் பறவைகளை 5 ஆண்டுகளாகப் பதிவு செய்தோம்'' என்றார் தீபக் வெங்கடாசலம்.

படக்குறிப்பு, சூழல் அறிவோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம்
இந்தக் குழுவினர் இங்கு வரும் பறவைகளை ஆவணப்படுத்தி இ–பேர்ட் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் 2 ஆண்டுகளாக ஊர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் எலத்துார் குளம் முதலிடம் பெற்றுள்ளது.
குளத்தை நவம்பர் முதல் வாரத்தில் பிபிசி நேரில் பார்வையிட்டது. அப்போது பெருமளவில் குளம் நிரம்பியிருந்தது. குளத்திற்கு நம்பியூர் பகுதியிலிருந்து சிறிய ஓடையில் தண்ணீர் வருகிறது. சமீப காலமாக அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலமாகவும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் வருகிறது.
குளத்தின் நடுவிலுள்ள மரங்களிலும், நீர்ப் பகுதிகளிலும், தரையிலுள்ள புதர்க் காடுகளிலும் பல ஆயிரம் பறவைகள் தங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது.
நீர்க்காகம், கொக்கு, வாத்துகள் என பலவகை பறவைகள் பகல் நேரத்திலேயே அங்கிருந்தன. மாலையில் இருள் சூழும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக நுாற்றுக்கணக்கான பறவைகள் அணி அணியாக வந்து குளத்தில் தங்குவதற்கு (Roosting) இறங்கியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

படக்குறிப்பு, எலத்தூர் குளம்
204 பறவையினங்கள்
'சூழல் அறிவோம்' ஆவணப்படுத்தியுள்ள தரவுகளின்படி, எலத்துார் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 77 வலசைப் பறவைகள் என்றும், அவற்றில் 47 தொலைதுார வலசைப் பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர்ப் பறவைகள் உள்ளன. 64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் (அழியும் அபாயத்தில்) உள்ள 9 பறவைகள் இங்கு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் (State of Indian Birds) உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது.
குளத்திற்கு அருகிலுள்ள செங்காளிபாளையத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவிகா, ''ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில்தான் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த குளத்திற்கு ஏகமாகப் பறவைகள் வரும். அதிலும் அந்தி நேரத்தில் பார்த்தால் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வரும். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்திலும் தண்ணீர் வருகிறது. குளத்தில் அதிக தண்ணீர் தொடர்ந்து இருப்பதால் மீன்களும் அதிகமாக இருக்கின்றன'' என்றார்.

படக்குறிப்பு,தேவிகா, செங்காளிபாளையம்
குளம், குன்று ஆகியவற்றின் அமைப்பு மற்றும் முக்கியத்துவத்தை சூழல் அறிவோம் குழுவினர், நம்முடன் நடை பயணம் மற்றும் மலையேற்றம் செய்து நேரில் விளக்கினர்.
குளத்திற்குள் கீச்சான், கரிச்சான்குருவி, குயில், புறா, சில்லை, அன்றில், தேன்சிட்டு, கொண்டலாத்தி, கதிர்குருவி உள்பட ஏராளமான உள்ளூர்ப் பறவைகள் இருப்பதை சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி அடையாளம் காண்பித்தார்.
அவை இனப்பெருக்கம் செய்வதற்காக அங்குள்ள மரம், புதர், தரை எனப் பல இடங்களில் கட்டியுள்ள விதவிதமான கூடுகளையும் காண்பித்து, அந்தப் பறவைகளின் இனப்பெருக்க காலத்தையும் விவரித்தார். ரசாயனப் பொறியாளரான கேசவமூர்த்தி, 'இயற்கை நடை' என்ற சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''எலத்துார் குளத்தைப் பாதுகாப்பதில் இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பு பிரதானமாகிவிட்டது. அரசின் அறிவிப்புக்குப் பின், சூழலியல் ஆர்வலர்கள், பறவை ஆய்வாளர்கள், மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கேயும் நாகமலை குன்றிலும் நாங்கள் இயற்கை நடைக்கு அழைத்துச் சென்று இங்குள்ள உயிர்ச் சூழல், பறவைகளின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்கிறோம்'' என்றார்.

படக்குறிப்பு, இயற்கை நடை ஒருங்கிணைப்பாளர் கேசவமுர்த்தி
தொல்லியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நாகமலை குன்று
இந்த குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் நாகமலை குன்று உள்ளது. நாகமலை குன்றின் அடிவாரப் பகுதிகளையும், குன்றின் உச்சியிலுள்ள பாறைப் பகுதிகளையும் பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டது.
நாகமலை குன்றின் உச்சியிலும், மலையடிவாரத்திலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 700க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் தனிப்பாறையில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் கொண்ட தனிக்கோவில் உள்ளது.
நாகமலை குன்று பகுதியில் புலிக்குத்தி நடுகல், பாறைத்தட்டுகள் போன்ற வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் க.ராஜன் தனது 'கொங்கு களஞ்சியம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார். குன்றில் 5 இடங்களில் உள்ள பாறை ஓய்விடங்கள் (Caves) பண்டைக்கால வேட்டைச் சமூகத்திற்கான வாழ்விடங்களாக இருந்திருக்கலாம் என்கிறது அவரது நுால்.
நாகமலை குன்றின் மலையடிவாரப் பகுதியில் இருந்த மரங்களில் பகல் நேரத்திலேயே ஏராளமான பறவைகள் இருந்தன. அந்தக் குன்றின் உச்சியில் ராசாளிக் கழுகுகள் இணையாக வசிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறினர். அவற்றில் ஒரு ராசாளிக் கழுகு வெளியில் வலம் வந்ததையும் நேரில் பார்க்க முடிந்தது.

படக்குறிப்பு, நாகமலை குன்று, முருகன் கோவில்
நாகமலை குன்று உச்சியைச் சுற்றிலும் உள்ள பாறைப் பகுதிகளில் 3 இடங்களில் நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் கந்தன் தேரை இருப்பதை நேரில் காண்பித்த சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி, எலத்துார் குளத்திற்கும், நாகமலை குன்றுக்கும் ஓர் உணவுச் சங்கிலி இருப்பதையும் அவர் விவரித்தார்.
அரிய வகைப் பறவைகள் மட்டுமின்றி, அரிதான பல தாவரங்கள் இங்கு இருப்பதையும் தாவரவியல் வல்லுநர்களின் உதவியுடன் சூழல் அறிவோம் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.
எலத்துார் பேரூராட்சியின் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழு (Biodiversity Management Committee), குளம் மற்றும் குன்று பகுதிகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
பறவைகளை நாட்டுத் துப்பாக்கி வைத்து வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், வலை விரித்து மீன்களைப் பெருமளவில் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், பேரூராட்சி குப்பைகளைக் குளத்தில் கொட்டுதல் போன்றவை சூழல் அறிவோம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக் குழுவின் முயற்சிகளால் பெருமளவில் தடுக்கப்பட்டு இருப்பதாக பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

படக்குறிப்பு, நாகமலை குன்று
உள்ளூர் மக்களின் கோரிக்கைகளும், வனத்துறையின் முன்மொழிவும்
குளம் மற்றும் குன்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சூழல் அறிவோம் குழுவினர், சுற்றுவட்டாரத்திலுள்ள 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை இங்கே அழைத்து வந்து 'இயற்கை நடை' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இதைச் செய்து வருகின்றனர்.
''பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் (Biological Diversity Act, 2002) மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதால்தான், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தலம் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். இதில் இந்த இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மக்கள்தான் முடிவு செய்ய முடியும். இவை தவிர்த்து, அரசிடம் அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு என சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றார் தீபக்.
சூழல் அறிவோம், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக்குழு மற்றும் உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் முன் வைக்கும் சில கோரிக்கைகள்:
குளம் மற்றும் குன்றின் பகுதிகளில் பறவை வேட்டையை முற்றிலும் தடுக்க, 2 இடங்களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தல எல்லையை வரையறுத்து, நிறைய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
தாவரங்கள், உயிர்களின் வாழ்விடம் பாதிக்கும் வகையில் நில அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.
குளத்தில் நம்பியூர் கழிவுநீர் கலக்காமல் சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் வேறு வழியில் வெளியே கொண்டு செல்ல வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராஜ்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இத்தகைய தலங்களை பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புக் குழுதான் பராமரிக்க வேண்டும். ஆனால் பறவைகள் வாழ்விடம் என்ற வகையில் வனத்துறையும் அதைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் ஆலோசனைப்படி சில முன்மொழிவுகளைத் தயார் செய்து வருகிறோம்'' என்றார்.
"வனத்துறைக்கு வெளியே உள்ள உயிர்ச்சூழல் முக்கியத்துவம் உள்ள இடங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் ஒருங்கிணைந்த உயிரியல் வாழ்விடப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி கோரி முன்மொழிவு அனுப்பியிருந்தோம். அந்த நிதி கிடைக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க அனுமதி கிடைக்கும் வரை, தற்போது வனத்துறையினர் இவ்விரு இடங்களையும் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
''நாகமலை குன்றை அப்படியே பாதுகாத்தால் போதுமானது. எலத்துார் கரையில் சூழல் நடை பயிலும் வகையில் ஒரு சிறிய நடைபாதை அமைத்து, சுற்றிலும் அங்குள்ள பறவைகள், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் பலகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கரைப் பகுதிகளில் ஆலமரங்களை நட்டுப் பராமரிக்கும் திட்டமும் உள்ளது. சூழல் சுற்றுலாவை உருவாக்கினாலும் அதுவும் அங்குள்ள மக்களின் பங்களிப்போடுதான் செயல்படுத்தப்படும்.' என்றார் கள இயக்குநர் ராஜ்குமார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பாரம்பரிய பல்லுயிர் தலமாக தேர்வு: எலத்தூர் குளம், நாகமலை குன்றில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு
பிகார் தேர்தல்: 190 இடங்களுக்கு மேல் தே.ஜ.கூட்டணி முன்னிலை - தேஜஸ்வி யாதவ் பின்னடைவு
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்?

பட மூலாதாரம், Getty Images
கட்டுரை தகவல்
பிரதீப் கிருஷ்ணா
பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல அணிகள் இதில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் ஆர்வம் காட்டியதில்லை.
16 சீசன்களில் அந்த அணி ஒரேயொரு முறை ராபின் உத்தப்பாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இப்போது அதே அணியிலிருந்து சாம்சனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
தங்கள் அணிகளின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்ட வீரர்கள் மாறியது ஏன்? இந்த டிரேட் யாருக்கு பெரிய அளவில் லாபகரமாக அமைந்திருக்கிறது? இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும் விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இரு அணிகளின் முக்கிய அங்கமாக இருந்த வீரர்கள்
ஜடேஜா, சாம்சன் இருவருமே தங்கள் அணிகளில் நெடுங்காலம் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா, 12 சீசன்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என 200 போட்டிகளில் சூப்பர் கிங்ஸுக்காக ஆடியிருக்கிறார் அவர்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், அந்த அணியோடு மூன்று முறை (2018, 2021, 2023) ஐபிஎல் பட்டமும் வென்றிருக்கிறார் அவர்.
அதேசமயம் சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 155 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி சுமார் 32 என்ற சராசரியில் 4219 ரன்கள் (அனைத்து போட்டிகளிலும்) எடுத்திருக்கிறார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அவர்தான்.
மேலும், 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த சாம்சன், 2022 சீசனில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2024ல் அவர் தலைமையில் அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது.
இப்படி அந்த அணிகளின் பெரிய அங்கமாக இருந்த வீரர்களை இரு அணிகளும் டிரேட் செய்ய முன்வந்தது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்ன காரணம் என்ன?
இந்த டிரேட் உறுதியான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் இது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாகக் கூறிய அவர், தரமான இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களை மினி ஏலத்தில் எடுப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
"ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்டரின் தேவையை அணி உணர்ந்தது. ஏலத்தில் அதிக இந்திய பேட்டர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் இந்த 'டிரேட் விண்டோவில்' ஒருவரை கொண்டுவருவது என்று முடிவு செய்தோம்.
சிஎஸ்கேவின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்த ஜடேஜாவை விடுவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் கடினமானது என்றுகூட சொல்லலாம்.
இந்த சமயத்தில் அணியின் எதிர்கால மாற்றத்தை (transition) கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஜடேஜாவோடு கலந்துபேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் காசி விஸ்வநாதன்.
அதுமட்டுமல்லாமல், அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஓர் அணியைக் கட்டமைக்கும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுபற்றிப் பேசிய அவர், "தன் 'வைட் பால்' கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் ஜடேஜாவும் மாற்றம் தரும் வேறு வாய்ப்புகளுக்குத் தயாராகத்தான் இருந்தார். சாம் கரணும் எங்களுக்கு சீரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.
நான் முன்பே சொன்னதுபோல் இவர்கள் இருவரையும் விடுவது மிகவும் கடினமான முடிவுகளுள் ஒன்று. அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஒரு அணியை அடுத்த ஒருசில ஆண்டுகளில் கட்டமைப்பது மிகவும் முக்கியம்." என்றார்.
இந்நிலையில், சாம்சனை எதிர்காலத்துக்கான ஒரு வீரர் என அவர் குறிப்பிட்டார். "சஞ்சு சாம்சன் சுமார் 4500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரு அனுபவ ஐபிஎல் பேட்டர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 30 வயது தான் (31 வயது) ஆகிறது. அதனால் எதிர்காலத்துக்கு இது நல்ல முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்" என்று சாம்சனை டிரேட் செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தோனி, ரெய்னா தவிர்த்து சூப்பர் கிங்ஸுக்காக 200 போட்டிகள் ஆடிய ஒரே வீரர் ஜடேஜா தான்
ராஜஸ்தான் ராயல்ஸ் & ஜடேஜா சொன்னது என்ன?
இந்த டிரேட் பற்றிப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா, "ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவது சிறப்பான தருணம். அவருக்கு இந்த அணியை, ரசிகர்களை நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் அனைத்து ஏரியாவிலும் பங்களிக்கக்கூடிய ஒரு சிறந்த வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம், அமைதியான தன்மை, போட்டித்தன்மை ஆகியவை ஒரு நல்ல எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்க உதவும்" என்று கூறினார்.
சாம் கரண், ஜடேஜா இருவரும் தங்களுக்கு பல பரிமாணங்களில் உதவுவதாக அவர் தெரிவித்தார். "சாம் கரண் கொஞ்சம் வேறு மாதிரியான வீரர் என்றாலும், அவரும் முக்கியமான சில பரிமாணங்கள் கொண்டுவருகிறார். அவர் பயமறியாத வீரர். எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்பவர். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடியவர். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்" என்றும் அவர் கூறினார்.
2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, முதல் ஐபிஎல் சீசனில் அந்த அணியோடு சாம்பியன் பட்டமும் வென்றார்.
அந்த அணியோடு மீண்டும் இணைவது பற்றிப் பேசிய ஜடேஜா, "எனக்கு முதல் மேடையும், முதல் வெற்றிச் சுவையையும் கொடுத்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல. இது என் வீடு. இங்குதான் என் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். இப்போது இருக்கும் வீரர்களோடு இணைந்து இன்னும் நிறைய கோப்பைகள் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார்.
இந்த டிரேட் மூலம் யாருக்கு வெற்றி?
இரண்டு அணிகளுமே பெரிய வீரர்களை டிரேட் செய்திருந்தாலும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்ற விவாதங்களும் எழவே செய்திருக்கின்றன. இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆண்கள் அண்டர் 19 அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான யோ மஹேஷ், சூப்பர் கிங்ஸுக்கு சற்று கூடுதல் லாபம் என்று தெரிவித்தார்.
"இந்த டிரேடைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி தான். இரு அணிகளுமே அவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஏனெனில், சாம்சன் பல கட்டங்களை நிரப்புகிறார். அவர் ஒரு நீண்ட காலத்துக்கான வீரர், ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டர், சிறந்த கீப்பர், அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஸி அனுபவம் கொண்ட வீரரும் கூட. சூப்பர் கிங்ஸுக்கு தேவையாக இருந்த பல வெற்றிடங்களை அவர் நிரப்புகிறார்" என்று கூறினார் யோ மஹேஷ்.
நீண்ட நாள்களாக ஒரு தரமான கீப்பரை சூப்பர் கிங்ஸால் வாங்க முடியாமல் இருந்த நிலையில், இந்த டிரேட் அவர்களுக்கு சாதமாக அமைந்திருப்பதாகக் கூறினார் அவர். மேலும், இவ்விரு வீரர்களின் வயதைக் கணக்கில் கொள்ளும்போது, சூப்பர் கிங்ஸுக்கு இந்த ஒப்பந்தம் சற்று கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.
சாம்சனுக்கு 31 வயதாகும் நிலையில், ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் 37 வயதில் அடியெடுத்து வைப்பார்.
"சாம்சன் - சூப்பர் கிங்ஸ் எதிர்காலத்துக்கான அடித்தளம்"
சாம்சனை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அணியைக் கட்டமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் யோ மகேஷ்.
"சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பெரிய 'பிராண்ட்'. அவருக்கு நல்ல பெயரும் மதிப்பும் இருக்கிறது. மார்க்கெட்டிங் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அது சூப்பர் கிங்ஸுக்கு பெரிய சாதகம். அதுமட்டுமல்லாமல் சாம்சன் தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்த் ரசிகர் வேறு. இதெல்லாம் நம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போகும். சாம்சனை நம்முள் ஒருவனாக அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடக்கவில்லை" என்றார் அவர்.
அதுமட்டுமல்லாமல் சாம்சனை உடனடியாக கேப்டனாக்குவது நல்லது என்றும் அவர் கருதுகிறார். "18 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பெரிய வீரரை வாங்கிவிட்டு, சிஎஸ்கே தாமதம் செய்யக்கூடாது. அவரை உடனடியாக கேப்டனாக்கவேண்டும். ருதுராஜ் போன்று அவருக்கு அந்த ரோலில் செட் ஆக அவகாசம் எடுத்துக்கொள்ளாது. அவர் ஏற்கெனவே ஒரு அணியை பல ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் தலைமையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அதனால், அவர் எளிதாக அந்த இடத்தை நிரப்பிவிடுவார்" என்கிறார் யோ மகேஷ்.
சாம்சனை கேப்டனாக்கும் முடிவு ருதுராஜ் கெய்க்வாட் மீதான நெருக்கடியையும் குறைக்கும் என்கிறார் அவர். 2022, 2023 சீசன்களில் ஒரு பேட்டராக அவர் எப்படி சோபித்தாரோ, அதே மாதிரியான செயல்பாட்டை கேப்டன் பதவி இல்லாதபோது அவரால் நெருக்கடியின்றி கொடுக்கமுடியும் என்பது அவரது வாதமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் அணியின் கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
கீப்பர் யார்? தோனியா, சாம்சனா?
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவரும் சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதன்மூலம், கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஒருசில வல்லுநர்கள், இது தோனி 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்கள். அவர் முழங்கால் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்படுவதால் இப்படியொரு வாதத்தை சிலர் முன்வைத்தனர்.
அதேசமயம் தோனியின் சிறப்பே அணி ஃபீல்டிங் செய்யும்போது அவர் கொடுக்கும் பங்களிப்புதான் என்பதால், அவர் ஃபீல்டிங்கில் இருக்கவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த விஷயம் பற்றிப் பேசிய யோ மகேஷ், "சொல்லப்போனால் தோனி அறிவிக்கப்படாத ஒரு 'இம்பேக்ட்' வீரராகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 10 பந்துகள் இருக்கும்போதுதான் ஆடவருகிறார். அவருடைய பெரிய பங்களிப்பு என்பது ஃபீல்டிங்கில் இருக்கும்போதுதான். அதேசமயம் வேறு கேப்டன்கள் இருக்கும்போது அவரும் மெல்ல தலையீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருசில போட்டிகள் சாம்சன் செட் ஆகும் வரை அவர் கீப்பிங் செய்துவிட்டு, மெல்ல அவர் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.
சாம்சன் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருவதால் அவர் நிச்சயம் கீப்பிங் செய்யவே விரும்புவார் என்று குறிப்பிட்டார் யோ மகேஷ்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா
ஜடேஜா: சென்னையின் இழப்பும், ராயல்ஸின் லாபமும்
ரவீந்திர ஜடேஜா சென்னையில் இருந்து சென்றிருப்பது உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார் யோ மகேஷ்.
"இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் அவரை தங்களுள் ஒருவராகப் பார்த்திருக்கிறார்கள். அவரும் அதை திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார். இதை ஒரு வீடு என்றே கருதியிருக்கிறார். அவரும், அஷ்வினும் ஒன்றாகப் பந்துவீசி எதிரணிகளை தடுமாற வைத்த தருணங்கள், ஜடேஜா பாய்ந்து பிடித்த கேட்ச்கள், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் பௌண்டரிகள் அடித்து அவர் வெற்றி பெறவைத்த அந்தத் தருணம்... இப்படி பல்வேறு தருணங்கள் சென்னை ரசிகர்களுக்கு அவரை மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்து வைத்துள்ளன" என்றார் அவர்.
கடந்த 2 சீசன்களாக ஜடேஜாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சிறு சரிவு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூட அவர் கருதுகிறார். கடந்த சீசன் 32.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜடேஜா, 2024 சீசனில் 46.13 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.
அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரால் சிறப்பாக செயல்படமுடியும் என்று சொல்லும் யோ மகேஷ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.
"கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்க ஆடுகளம் முன்பு போல் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஜடேஜாவின் செயல்பாட்டில் பிரதிபலித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியம் அவருக்கு உகந்ததாக இருக்கும். அது பெரிய மைதானம். பந்து கொஞ்சம் மெதுவாகவும், கீழ் தங்கியும் செல்லும். அங்கு சராசரி ஸ்கோரே 160 - 170 போலத்தான் இருக்கும். அங்கு ஜடேஜாவால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்" என்று யோ மகேஷ் கூறினார்.
கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சே பிரதான பிரச்னையாக இருந்ததாகவும், அதை ஜடேஜா மூலம் அவர்கள் ஓரளவு தீர்த்திருப்பதாகவும் யோ மகேஷ் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளாக ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் அந்த அணி பல போட்டிகளில் 5 பிரதான பௌலர்களை மட்டுமே வைத்து களமிறங்கும் சூழ்நிலை பல போட்டிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரின் வருகை மூலம் அந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.
இதனால் தான் இந்த டிரேட் இரண்டு அணிகளுக்குமே வெற்றிகரமானது என்று குறிப்பிடுகிறார் யோ மகேஷ். எதிர்காலத்தை கணக்கில் கொள்ளும்போது சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் லாபம் என்று சொல்லும் அவர், சாம்சனை ராயல்ஸ் இழந்ததை விட, ஜடேஜாவை சூப்பர் கிங்ஸ் இழந்தது உணர்வுபூர்வமாக பெரிய இழப்பு என்றும் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
பொய்யரை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்? ஒருவர் கூற்று உண்மையா பொய்யா என்றறிய அறிவியல் கூறும் வழி

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கட்டுரை தகவல்
பல்லப் கோஷ்
அறிவியல் செய்தியாளர்
7 மணி நேரங்களுக்கு முன்னர்
"பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை.
பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார்.
அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாளர்கள், தங்கள் மத்தியில் இருக்கும் "துரோகிகளை" கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கேம் ஷோ தொடங்கி ஏழு எபிசோடுகள் கடந்த பிறகுதான் "விசுவாசமான" போட்டியாளர்கள் தங்கள் மத்தியில் இருந்த மூன்று பொய்யுரைக்கும் "துரோகிகளில்" ஒருவரையே கண்டுபிடித்துள்ளனர்.
பெரும்பான்மையாக சொல்லப்படும் வழக்கமான 'ஞானத்திற்கு' முரணாக சர் ஸ்டீபனின் கோட்பாடு உள்ளது. அதாவது, பல நூற்றாண்டுகளாக மக்கள் முகங்களைப் பார்த்தே ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பினார்கள். இது ஒருவரது உடலில் நிகழும் மாற்றங்களைப் பகுப்பாயும் ஃபிசியோக்னோமி (physiognomy) என்றழைக்கப்படும் ஒரு பண்டைய முறை.
கடந்த 19ஆம் நூற்றாண்டில் குற்றவாளிகளை அடையாளம் காண இது பயன்படுத்தப்பட்டது. அதாவது, பெரிய தாடைகள், கன்னக் கதுப்பின் எலும்புகள், சமச்சீரற்ற முக அம்சங்கள், தட்டையான அல்லது பெரிதாக இருக்கும் மூக்கு, வலிமையான கண்புருவ முகடுகள் போன்றவை "நாகரிகம் குறைவான" மனிதர்களுடன் தொடர்புடைய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய தோற்றம் உடையவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களாகக் கருதப்படும் அபாயம் இருந்தது.
நிச்சயமாக, இது முற்றிலும் மடமைத்தனமான பார்வைதான். இது சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் உருவாக்கப்படும் தப்பெண்ணங்களுடன் தொடர்புடையது. இதற்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்து முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளது.
இருப்பினும், சில நவீன ஆய்வுகள், ஒருவர் தம்மை எவ்வளவு தூரம் கவர்கிறார், அவர்களின் முக சமச்சீர்மை, முகபாவனைகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனிதர்களை நம்புவது, சந்தேகிப்பதில் மக்கள் ஈடுபடுவதாகக் கூறுகின்றன.
இதன் மூலம், நேர்மையற்ற ஒருவரது முகத்தைக்கூட மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் நம்பகமான ஒன்றாகக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
அழகாக இருந்தால் நல்லவரா?
மக்கள் வெளிப்புறத்தில் தெரியும் மேலோட்டமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வு, கவர்ச்சிகர தோற்றம் கொண்ட மக்கள் மிகவும் நேர்மறையாக உணரப்படுவதாகக் கூறுகிறது. அதாவது, அவர்கள் அதிக புத்திசாலிகளாக, திறமையானவர்களாக, நம்பகமானவர்களாக கருதப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
"எது அழகாக இருக்கிறதோ அது நல்லதாக இருக்கும் என்ற அனுமானம் இருக்கிறது" என்று கவன்ட்ரி பல்கலைக் கழகத்தின் உளவியலாளரும் விரிவுரையாளருமான ரேச்சல் மோலிட்டர் கூறுகிறார்.
"உங்களை ஒருவர் கவர்ந்திழுப்பதாகக் கருதினால், நேர்மறையான குணங்களாக நீங்கள் கருதும் குணங்களை அவர் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்" என்கிறார் ரேச்சல்.

படக்குறிப்பு, ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் சர் ஸ்டீபன் ஃப்ரை
கவர்ச்சி, அழகு ஆகியவை குறித்த பார்வை உலகம் முழுவதும் நீண்ட காலமாக பெருமளவில் வேறுபடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 2015இல் வெளியான மற்றோர் ஆய்வு, கவர்ச்சி மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கருத்துகளை ஆராய்ந்தது. ஒரு முகம் மிகவும் பொதுவானதாகவோ அல்லது சராசரியான ஒன்றாகவோ மாறும்போது, மிகவும் கவர்ச்சிகரமான, நம்பகமான முகமாகவும் அது மாறுகிறது என்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
அதன்படி, ஒருவர் குறிப்பிட்ட அளவிலான கவர்ச்சியைக் கொண்டிருந்தால் அவர் மீதான நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது. அதுவே ஒருவர் அந்த வரம்பை மீறும் அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும்போது, அவர் குறித்த பிறரின் நம்பகத்தன்மை குறையத் தொடங்குகிறது.
தன்னியக்கமாக, சுயநினைவின்றி வெளிப்படும் நமது "அனிச்சையான நம்பிக்கை", மகிழ்ச்சியாகவும் நட்புறவு கொண்ட வகையிலும் தோன்றக்கூடிய முக அம்சத்தாலும் தூண்டப்படலாம். கடந்த 2008ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மேற்கொண்ட தொடர் சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முகபாவனைகளை, உடலியல் மாற்றங்களை வைத்து ஒருவர் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தச் சோதனையில் பங்கேற்றவர்கள், கோபம், சோகம் அல்லது நடுநிலையான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய முகங்களைவிட, மகிழ்ச்சியான அல்லது புன்னகைக்கும் பாவனைகளைக் கொண்ட முகங்களை அதிக நம்பிக்கையானவை என மதிப்பிட்டனர்.
பிரெஞ்சு தன்னார்வலர்கள் மத்தியில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் உண்மையானதாக மதிப்பிடப்பட்ட புன்னகைகளைக் கொண்ட முகம் நம்பத் தகுந்தது என்றும் கருதப்பட்டதைக் கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, அத்தகைய முகங்களைக் கொண்டவர்கள் அதிக வருமானம் ஈட்டுபவராக இருக்கலாம் என மக்களை நினைக்க வைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்தது.
சன்கிளாஸ், முகக்கவசம், முகத்தை மறைக்கும் வகையில் இருக்கும் நீளமான முடி ஆகியவை, நம்பகத்தன்மை அளவைக் குறைப்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் ரேச்சல்.
என் முகம் எவ்வளவு நம்பகமானது?
என் முகம் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது எனக் கூறுமாறு சில ஆய்வாளர்களிடம் கேட்டேன். இது சற்று ஆபத்தானதாகத் தெரிந்தாலும், எனக்கு ஆர்வமாக இருந்தது.
அவர்கள் முதலில், என் முகம் எவ்வளவு சமச்சீராக இருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். சமச்சீர் என்பது முகத்தின் இருபுறமும் எவ்வளவு சீராக இருக்கிறது என்பதாகும்.

படக்குறிப்பு, பல்லப் கோஷ் தனது சொந்த முகத்தின் நம்பகத்தன்மையை ஆராயுமாறு ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார்
"மக்கள் பெரும்பாலும் சமச்சீரான முகங்களை மிகவும் அழகானவையாகக் கருதுகிறார்கள். அழகான முகங்கள் பெரும்பாலும் நம்பகமானவையாக கருதப்படுகிறது" என்று கூறினார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உளவியல் மற்றும் குற்றவியல் துறையில் விரிவுரையாளராக இருக்கும் மிர்சியா ஸ்லோடானு.
அதோடு ஹேலோ விளைவு என்ற ஒன்றும் உள்ளது. அதாவது, ஒருவர் ஒரு வழியில் நல்ல விதமாகத் தென்பட்டால், அவர் பிற விஷயங்களிலும் நல்லவராக இருப்பார் என்று கருதுவது.
உளவியலாளர் மிர்சா ஸ்லோடானு, "அனைவரிடமும் சிறிய அளவிலான சமச்சீரற்ற தன்மை இயல்பாக இருக்கும்" என்று விளக்கினார். ஆகையால், "சில சமச்சீர்மை அம்சங்கள் ஒருவரை நல்லவராகக் காட்டலாம். ஆனால், ஒரு முகம் மிகச் சரியானதாக இருந்தால் அது விசித்திரமாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ தோன்றத் தொடங்குகிறது" என்கிறார் முனைவர் ஸ்லோடானு.
இந்தக் காரணத்தாலேயே, டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் அல்லது ரோபோக்களின் முகங்களின் சமச்சீர் மிகுந்த துல்லியத்தன்மை, பார்ப்போருக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது.

படக்குறிப்பு, பல்லப் கோஷின் முகத்தில் உள்ள சமச்சீர்மையை முனைவர் மிலேவா ஆராய்ந்தார் (இந்தப் புகைப்படங்கள் தன்னார்வலர்களுக்கு காட்டப்பட்டவை அல்ல)
என் முகத்தை எப்படி அதிகம் நம்பகமான ஒன்றாகத் தோன்ற வைப்பது என்பதைக் காட்ட, மற்றொரு ஆய்வாளரான முனைவர் மிலா மிலேவா என் புகைப்படத்தில் சில திருத்தங்களைச் செய்தார். அவர் முக சமச்சீர்மையை சிறிது மாற்றி, என் உதடுகளில் புன்னகையைக் கொண்டு வந்தார்.
கூடுதலாக ஒரு படி மேலே சென்று, என் முகத்தை இளமையானதாகவும் பெண்மை கொண்டதாகவும் மாற்றிக் காட்டினார். அதாவது, பெண் முகங்கள், குரல்கள், பெயர்கள் பெரும்பாலும் ஆண் முகங்களைவிட நம்பகமானவையாகக் கருதப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, ஒரு முகம் எவ்வளவு பெண்மையுடன் தெரிகிறதோ, அவ்வளவு நம்பகமானது என மக்கள் நினைக்கிறார்கள்.
இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, அவர் 26 தன்னார்வலர்களுக்கு வெவ்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட என் முகத்தின் வெவ்வேறு வடிவங்களைக் காட்டினார். ஒவ்வொரு நபரும் 35 முகங்களின் புகைப்படங்களில் ஒன்றாக என் முகத்தையும் பார்த்தார்கள். அந்தத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு முகத்திற்கும், 1 (நம்பகமானதல்ல) முதல் 9 (மிகவும் நம்பகமானது) என்ற அளவுகோலில் மதிப்பிட்டனர்.
இது ஓர் அதிகாரபூர்வ அறிவியல் ஆய்வு இல்லை. ஆனால் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே இருந்தன. அதாவது மக்கள் என் முகத்தின் இளைய, புன்னகைக்கும், பெண்மை கூட்டப்பட்ட வடிவத்தின் மீது அசல் முகத்தைவிட அதிகமாக நம்பிக்கை வைத்தனர்.
இந்தச் சோதனையின் இறுதியில் நான் எளிமையான விஷயத்தை கற்றுக் கொண்டேன். அதாவது நான் கொஞ்சம் கூடுதலாகச் சிரித்தால், மக்கள் என் அறிவியல் கட்டுரைகளை அதிகமாக நம்பக்கூடும்.

படக்குறிப்பு, குழு மனப்பான்மை மக்களின் முடிவுகளை அதிகம் பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
மக்களின் மந்தை மனோபாவம்
ஆரம்பத்தில் பார்த்த கேம் ஷோவில் இருப்பதைப் போல, துரோகிகளைக் கண்டறிவதை பொறுத்தவரை, குழு மனப்பான்மை காரணமாக யாரை நம்புவது என்பது பற்றிய கேள்வி மிகவும் சிக்கலான ஒன்றாக மாறுகிறது.
முனைவர் மோலிட்டர் ஏமாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் துரோகிகளாக கேம் ஷோ நிகழ்ச்சியில் வந்தவர்களுடைய மிகப்பெரிய ரசிகராகவும் உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த இந்த ஆண்டின் போட்டியாளர்கள் ஒரேயொரு பொய்யரை அடையாளம் காண்பதற்குக் கூட இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதற்கான காரணம் குறித்து அவருக்குச் சொந்தக் கருத்து உள்ளது. அதாவது "குழு மனப்பான்மை மோசமான முடிவுகளை எடுக்கவே வித்திடுவதாக" அவர் வாதிடுகிறார்.
"துரோகத்திற்கான சான்றுகள் மெல்லியதாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும்கூட, மந்தை மனநிலை கொண்ட மக்களை அது கூட்டாகப் பிழை செய்வதற்கு இழுக்கிறது," என்று கூறுகிறார் அவர்.
மக்களின் மனம், குழு சிந்தனையில் எழக்கூடிய, பெரும்பாலும் தவறாக இருக்கக்கூடிய அனுமானத்தை ஆதரிக்காத ஆதாரங்களை புறக்கணிப்பதாகவும் கூறுகிறார்.
ஒருவர் எவ்வளவு நம்பகமானவர் என்பது குறித்து மக்களுக்கு எண்ணங்கள் எழுவதன் வேகமும் இந்தப் பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம். இது ஒரு நபரின் நம்பகத்தன்மையை தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, துல்லியமான சமச்சீர்மை இருப்பது, ரோபோ முகங்கள், டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் மீது மக்களுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது
நம்பிக்கையை அளவிடக்கூடிய திறன் என்பது, மனித பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே உருவாகிவிட்டதாக முனைவர் மிலேவா விளக்குகிறார். "நமது முன்னோர்கள் ஒருவர் நண்பரா, பகைவரா என்பதை ஒரு நொடியில் சொல்ல வேண்டியிருந்தது. இது மிகவும் விரைவான சிந்தனைச் செயல்முறை. நம்பகத்தன்மை குறித்த நிலையான எண்ணங்கள் நமக்குள் உருவாவதற்கு ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமே ஆகிறது" என்று அவர் விளக்குகிறார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அனிச்சையாக ஏற்படும் நமது நம்பிக்கைகள் விரைவாக உருவாகும் அதேவேளையில், அவை மிக மோசமானவை என்று மிலேவாவின் ஆராய்ச்சி காட்டுகிறது.
பொய்யர்களை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்?
பொய் கண்டறிதலுக்கான அறிவியல் அணுகுமுறைகள், ஏமாற்றுதலின் சமூகப் பங்கு ஆகியவற்றில் நிபுணரான மிர்சியா ஸ்லோட்டானு, விரைவாக உருவாகும் நமது அனிச்சையான நம்பிக்கை மோசமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார்.
நம்பத்தகுந்த நபர்களையும் பொய் சொல்பவர்களையும் கண்டறிவதில் நாம் மிகவும் திறமையானவர்கள் என்று நமக்கு நாமே கருதிக் கொள்கிறோம் என்பதையும் ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
"வியர்வை, நேராகக் கண்களைப் பார்க்காதது, முகம் சிவத்தல், நடுக்கம் அல்லது பிற உடலியல் குறிப்புகளைத் தேடுவதன் மூலம் நம்மால் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துவிட முடியும் எனக் கருதுகிறோம். ஆனால், உண்மையில், இந்தக் குறிப்புகள் நம்ப முடியாத அளவுக்கு சுற்றியிருக்கும் சூழல் சார்ந்தவையாக உள்ளன. இவை ஏமாற்றுதலின் நம்பகமான குறியீடுகள் இல்லை" என்று கூறுகிறார் ஸ்லோடியனு.

பட மூலாதாரம், Getty Images
"ஒருவர் பதற்றமாக, கூச்ச சுபாவமுள்ளவராக இருப்பதால் வியர்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது கண்களை நேராகப் பார்க்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பொய் சொல்வதாகப் பொருள் இல்லை. பெரும்பாலும், இந்த சமிக்ஞைகளை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஏனெனில், அவை நேர்மையற்ற தன்மையைக் குறிப்பதாக நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் அவை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியம் அல்லது உணர்ச்சித் தூண்டுதலின் அறிகுறிகளே" என்றும் அவர் விளக்கினார்.
பல்வேறு சோதனைகளில், தன்னார்வலர்கள், ஒருவரின் வீடியோவை பார்த்து, அவர் சொல்வது பொய்யா, உண்மையா என்பதைக் கண்டறிய, வியர்த்தல், விலகி வேறுபுறமாகப் பார்ப்பது, முகம் சிவத்தல் போன்ற வழக்கமான குறிப்புகளைப் பயன்படுத்தினார்கள்.
முனைவர் ஸ்லோடானுவும் அவரது குழுவினரும் சோதனைகளில் பங்கெடுத்த தன்னார்வலர்களால் உண்மை மற்றும் பொய்க்கு இடையிலான வித்தியாசத்தை அறிய முடியவில்லை என்பதையும், போலி உணர்ச்சிகள் அல்லது கற்பனையான கதைகள் போன்ற பல்வேறு வகையான பொய்களைக் கண்டறிவதில் அவர்கள் சிறந்து விளங்கவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.
மீண்டும் குழு மனப்பான்மையுடன், தவறான பதிலையே உறுதி செய்வதில் அதிகமான மக்கள் ஈடுபட்டது துல்லியத்தன்மையை மேலும் குறைத்தது.
"அறிவியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது, அதைப் பிரதிபலிக்கும் எங்கள் சொந்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் பொய்களைக் கண்டுபிடிப்பதில் சிறந்தவர்கள் அல்ல என்பது புரியும். அதாவது இது அடிப்படையில் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, கையில் இருப்பது பூவா, தலையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நிகரானதுதான்" என்று முனைவர் ஸ்லோட்டானு கூறினார்.
பொய்யர்களால் பிறரை முட்டாளாக்க முடிந்தது எப்படி?
ஆரம்பத்தில் கூறிய நிகழ்ச்சியில் பங்கெடுத்த துரோகிகளால் இவ்வளவு காலம் அனைவரையும் முட்டாளாக்க முடிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதில் போட்டியாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் முக்கியப் பங்கைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியெனில், தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பாடம் என்ன? நாம் நம்பும் நபர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதுதானா?
இது உண்மையெனில், அது எப்போதும் மோசமான விஷயமாக இருப்பதல்ல என்று முனைவர் ஸ்லோட்டியனு கூறுகிறார். பொய் சொல்வது நீண்டகாலமாக மிகவும் மோசமான விஷயமாக கருதப்படுகிறது என்று விளக்கும் அவர், "ஆனால் உண்மையில், கொஞ்சம் பொய் சொல்லும் திறனும், சில நேரங்களில் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் திறனும் இருப்பது சமூகத்தில் உதவிகரமாக இருக்கும்" என்கிறார்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சிறிய விஷயங்களில் பொய் கூறலாம். அதாவது, அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறீர்கள். அல்லது கூடுதலாக ஒரு துண்டு கேக் சாப்பிடுவது நல்லது எனக் கூறுகிறீர்கள். இவை மோசமான பொய்கள் அல்ல. அவை நட்பை உருவாக்கிக் கொள்ளவும், நல்ல உறவுகளைப் பராமரிக்கவும், மக்கள் நல்லவிதமாக உணர்வதற்கும் உதவுகின்றன. இந்த வகையான பொய்கள், "பசை" போலச் செயல்பட்டு, மக்களை இணைக்கிறது.
ஒருவர் உண்மையைத்தான் பேசுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகள் சில பரிந்துரைகளைக் கூறுகிறார்கள். அதாவது, நமது சொந்தச் சார்பு நிலைகளைப் புரிந்து கொள்வது, நமக்கு உடனடியாக ஏற்படும் முதல்கட்ட எண்ணங்களையே முற்றிலுமாக நம்பாமல் இருப்பது, உள்ளுணர்வுகளை மட்டுமே அதிகமாக நம்புவதைத் தவிர்ப்பதும், அதற்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த அடிப்படையில் பார்த்தால், சர் ஸ்டீபன் ஃப்ரை கூறியது சரிதான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பொய்யரை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்? ஒருவர் கூற்று உண்மையா பொய்யா என்றறிய அறிவியல் கூறும் வழி
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க பதவி நீக்கம்!
பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க பதவி நீக்கம்!
Published By: Digital Desk 1
15 Nov, 2025 | 01:36 PM
![]()
பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க தொடர்ந்தும் பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பணியாற்றிய சஞ்சீவ தர்மரத்ன, குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், குறித்த வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்கவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன தற்போது பணியாற்றி வருகிறார்.
நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
15 Nov, 2025 | 01:15 PM
![]()
(இணையத்தள செய்திப் பிரிவு)
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்கி அரசாங்கம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பான 21ஆவது பொதுக்கூட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
21ஆவது பொதுக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காவிட்டாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சி என்ற வகையில், பொதுக்கூட்டம் தொடர்பிலும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தெரிவிப்பது அவசியம் என நாமல் ராஜபக்ஷ தனது Xதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
