Aggregator
பாம்புகள் இறந்து பல மணி நேரம் கழித்தும் மனிதரை 'கடிப்பது' எப்படி?
கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு
நன்மைகள் இருப்பின் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி - அரசாங்கம்
நன்மைகள் இருப்பின் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி - அரசாங்கம்
31 Aug, 2025 | 09:09 AM
(லியோ நிரோஷ தர்ஷன்)
நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய இனி அனுமதியளிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இதன் போது இந்தியாவா - சீனாவா அல்லது அமெரிக்காவா என்பது எமக்கு முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து தீர்மானிக்க வெளிவிவகார அமைச்சு விசேட குழு அமைத்து கலந்துரையாடி வருகிறது. இவ்வாறான ஆய்வுக்கப்பல்களின் வருகை குறித்து ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பொதுவானவொரு திட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சீனா மாத்திரம் அல்ல வேறு எந்தவொரு நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதாயின், நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மறுபுறம் இவ்வாறான ஆய்வுக்கப்பல்கள் வரும் போது உலகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனையும் ஆராய வேண்டும். ஏனெனில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போர் சூழலும் போட்டித்தன்மையும் காணப்படுகின்றமை இரகசியமான விடயமல்ல.
எனவே ஏவுகணை தாக்குதல்கள், புவிசார் அரசியல் நலன்கள், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கலாசார விஜயங்கள் என பல கோணங்களில் ஆய்வுக்கப்பல்களின் வருகையை கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. எனவே தான் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் வருகையை விசேட கண்ணோட்டத்தில் நோக்குகிறோம்.
இந்த விடயத்தில சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என வேறுப்படுத்தி பார்க்க விரும்ப வில்லை. இறுதியில் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.
இலங்கை போன்ற சிறிய நாடுகள் எவ்வாறு உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை அனுமதிக்கிறது என்ற உலக படிப்பினையுடனான திட்ட வரைபை வெளிவிவகார அமைச்சின் சிறப்பு குழு விரைவில் அமைச்சரவைக்கு சமர்பிக்கும். இதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன?
குட்டிக் கதைகள்.
'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்
மனைவிக்காக குடிமக்களிடம் பணம் கொடுத்து நிலம் வாங்கிய சோழ மன்னன்
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு
செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு
31 Aug, 2025 | 09:09 AM
(லியோ நிரோஷ தர்ஷன்)
நாட்டின் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்க வழிவகுக்காது. எனவே செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசாங்கம், உள்ளக விசாரணை பொறிமுறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் வழிகாட்டல்களை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவதில் அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
செம்மணி மனித புதைக்குழி விவகாரம் மற்றும் ஜெனிவா மனத உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஆவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதை 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் வெளியேற்றிய விதததிற்கு பின்னர் உலகிற்கு எம்மாள் எதுவும் கூற முடியாது போனது.
ஆனால் எமது ஆட்சியில் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். 2005 ஆம் ஆண்டில் தாரகி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வகையான சம்பவங்களை மீள் விசாரணைக்கு எடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி உத்திரவிட்டார்.
பாரின் பின்னர் செய்ய குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. நாம் ஆட்சிக்கு வரும் போது செம்மணி மனித புதைக்குழியில் 30 எழும்புக்கூடுகளே கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
அங்குள்ள காவலர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்குகின்றது. செம்மணி மாத்திரம் அல்ல, கொக்குத்தொடுவாய், மண்டைத்தீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனித புதைக்குழிகள் இருக்கின்றன. அவற்றை தோண்டும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மீள நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க விரும்புகிறது.
இந்த புதைக்குழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்ஷர்களே தவிர நாம் அல்ல. சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனித புதைக்குழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளுராட்சிமன்றங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். எனவே சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு நாட்டில் காணப்படும் போது, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. எனவே தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்காது.
இருப்பினும் உள்ளக விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கு அனுமதியளிக்க தயாராகவே உள்ளோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தேவைப்படலாம்.
மறுபுறம் சர்வதேச விசாரணைகள் நாட்டிற்குள் வந்ததும், தோல்வியடைந்துள்ள இனவாதிகள் மீள எழுவார்கள். குறிப்பாக ராஜபக்ஷர்கள் இதனை காரணம் காட்டி இனவாத அரசியலை முன்னெடுப்பார்கள். 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணிலை நீதவான் நீதிமன்றத்தினால் கைது செய்ய முடியும் என்றால் எமது நாட்டின் நீதித்துறை எவ்வாறு உள்ளது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும் என்றார்.
300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
30 Aug, 2025 | 05:46 PM
(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
மஹரகம நகரசபையில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம்.
எவ்வாறிருப்பினும் அரச சேவைக்கு பொறுத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக் கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாகும். அதற்காக சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப் போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து பணியாற்றுமாறு சகல அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்றார்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! அ.நிக்ஸன்
யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! அ.நிக்ஸன்
யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்!
-- ---- -----
*இவர்கள் தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள்.
*செம்மனி பேசும் நிலையில் ரணில் கைது
*முறிந்த பனைமரக் குழுக்களின் தொடர்ச்சி
*ஜெனீவா கூட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில்...
-- ---- ---
மாற்றுக் கருத்து என்ற போர்வையில் தமிழர்களின் "அரசியல் விவகாரம்" என்ற பிரதான இலக்கை திசை திருப்ப - மலினப்படுத்த பலர் பலவிதமான விடயங்களைக் கையில் எடுக்கின்றனர்.
2009 இற்குப் பின்னர் இத் தன்மை வெவ்வேறு வடிவங்களில் உருவெடுத்து முளைத்துள்ளது.
முறிந்த பனைமரக் குழுக்களிடம் இருந்து 1980 களில் ஆரம்பித்தது தான் இந்த மாற்றுக் கருத்து.
உண்மையில், விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றுக்குள் வரக் கூடிய மாற்றுக் கருத்து என்பது, அந்த இனத்தின் விடுதலை உணர்வுக்கு மற்றொரு வகிபாகத்தில் அறிவுசார்ந்து உரமூட்டுவதாக அமைதல் வேண்டும்.
ஆனால் ஈழத்தமிழர்களை சிதைப்பதற்கே மாற்றுக் கருத்து - ஜனநாயகம் - என்று கட்டமைக்கப்படுகிறது.
இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் யார் என்று பார்த்தால்----
A) தமிழ் பேசத் தெரியாத ஆங்கிலம் பேசும் தமிழர்களாக இருப்பர்.
B) அல்லது சிங்களம் கலந்த தமிழர்களாக இருப்பர்.
C) அல்லது புலி எதிர்ப்பாளர்களாக இருப்பர்.
D) அல்லது கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரி - முற்போக்கு வாதம் பேசும் தமிழர்களாக இருப்பர். முற்போக்குத் தமிழ் இலக்கியவாதிகள் சிலரும் இந்த மாற்றுக் கருத்தாளர்களுக்குள் அடங்குவர்.
இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் என்ன செய்வார்கள் என்றால்----
தமிழ்த் தேசிய நோக்கு நிலை எப்போது எழுச்சி அடைகிறதோ அல்லது தீவிரமாக பேச ஆரம்பிக்கப்படும் சூழல் தென்பட்டால், உடனடியாக யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பார்கள்.
அல்லது கொழும்பு அரசியலில் ஏதேனும் திடீர் அரசியல் சர்ச்சைகள் நடக்கும் (Sudden Political Controversy)
உடனடியாக நடந்த சில உதாரணங்கள் --
1) செம்மணி விவகாரம் கொழும்பில் உள்ளக ரீதியாக பேச ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிலையில்தான் ரணில் கைது நடந்திருக்கிறது.
2) இச் சூழலில்தான் மாற்றுக் கருத்தாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள்.
3) கொழும்புத் துறைமுக மனித புதை குழி பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது. துறைமுக மனித புதை குழி பற்றி தூதுவர்களுக்கும் விளக்கமளிப்பது இந்த மாற்றுக் கருத்தாளர்கள் தான்.
4) இந்த மாற்றுக் கருத்தாளர்கள்தான் ஜேவிபி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருடன் சமப்படுத்தி வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் பற்றிய நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட தயார்படுத்தி வருகின்றனர்.
4) ஆணையாளரின் உருப்படியில்லாத உள்ளக விசாரணை என்ற, அரசாங்கத்தைக் காப்பற்றும் முன்னோடி அறிக்கையைக் கூட (Pioneer Report to Protect the Government) நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில், மாற்றுக் கருத்தாளர்களின் கூட்டங்கள் - ஆய்வுகள் யாழ்ப்பாணத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே இலங்கைத்தீவில் மாற்றுக் கருத்தாளர்கள் என்பதன் பொருள், ”ஈழத்தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள்” (Political Tools)
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்
எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன?
எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன?
3 கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன?
பட மூலாதாரம், Getty Images
28 நிமிடங்களுக்கு முன்னர்
நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும்.
சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் செப்டம்பர் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை நடத்தும்.
23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது எஸ்சிஓவின் வரலாற்றில் 'இதுவரை இல்லாத மிகப்பெரிய' உச்சி மாநாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது.
எஸ்சிஓ உச்சி மாநாட்டை சீனா நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். சீனா கடைசியாக 2018 ஜூன் மாதம் கிங்தாவில் இந்த நிகழ்வை நடத்தியது.
எஸ்சிஓ உச்சி மாநாடு "இந்த ஆண்டு சீனாவில் நடைபெறும் மிக முக்கியமான தேச தலைவர்கள் சந்திப்பு மற்றும் தூதரக நிகழ்வுகளில் ஒன்று", என சீனா கூறியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு தலைவர்கள் கவுன்சிலின் 25-வது கூட்டம் மற்றும் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் உரையாற்றுவார். எஸ்சிஓ விரிவாக்கப்பட்ட வடிவத்தில் இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது.
ஷி ஜின்பிங் என்ன கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது?
"ஷாங்காய் உணர்வை முன்னெடுப்பதற்கும், காலத்தின் பணியை ஏற்பதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் எஸ்சிஓ-விற்கான சீனாவின் புதிய தொலைநோக்கையும், முன்மொழிவுகளையும் ஷி ஜின்பிங் விரிவாக எடுத்துரைப்பார்", என ஆகஸ்ட் 22 அன்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் "எஸ்சிஓ-வின் உயர்தர வளர்ச்சி மற்றும் முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் அறிவிப்பார்" மற்றும் "இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்கவும், உலகளாவிய ஆளுகை முறையை மேம்படுத்தவும் எஸ்சிஓ-விற்கு புதிய வழிகளையும் முறைகளையும் முன்மொழிவார்".
எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இணைந்து தியான்ஜின் பிரகடனத்தை வெளியிடுவார்கள், அடுத்த பத்தாண்டு எஸ்சிஓ வளர்ச்சி உத்தியை அங்கீகரிப்பார்கள், மற்றும் "உலக பாசிச எதிர்ப்பு போரின்" 80-வது வெற்றி ஆண்டு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 80-வது நிறுவன ஆண்டு நினைவு அறிக்கைகளை வெளியிடுவார்கள். பாதுகாப்பு, பொருளாதாரம், மக்கள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஆவணங்களின் தொகுப்பு வெளியிடப்படும்.
ஷாங்காயைச் சேர்ந்த ஜீஃபாங் டெய்லி, ஆகஸ்ட் 26 அன்று வெளியிட்ட செய்தியில், 10 ஆண்டு வளர்ச்சி உத்தி "இந்த உச்சி மாநாட்டில் வெளியிடப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டது. இது எஸ்சிஓ-வின் "முன்னுரிமை ஒத்துழைப்பு திசையை" நிறுவும், இது அமைப்பின் "நிலையான வளர்ச்சி" மற்றும் "சுய கட்டமைப்புக்கு" முக்கியமானது எனக் கூறியது.
யார் கலந்துகொள்கிறார்கள்?
பட மூலாதாரம், Xinhua News Agency
படக்குறிப்பு, இந்த முறை எஸ்சிஓ மாநாட்டில் முன்பெப்போதையும் விட அதிக நாடுகள் பங்கேற்கும்
2001-இல் சீனா, ரஷ்யா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட எஸ்சிஓ, இப்போது 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. 2017 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டன, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரானும் பெலாரஸும் இணைந்தன.
10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள், பார்வையாளராக மங்கோலியாவும், அமைப்பின் 14 பேச்சுவார்த்தைகளின் கூட்டாளிகளில் எட்டு நாடுகளான அஜர்பைஜான், ஆர்மீனியா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், துருக்கி, எகிப்து மற்றும் மியான்மரும் பங்கேற்கும்.
தென்கிழக்கு ஆசியாவுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்படும், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவையும் நட்பு நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. இவர்கள் துர்க்மெனிஸ்தானுடன் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
2024 இல், விருந்தினர் நாடான துர்க்மெனிஸ்தான், பேச்சுவார்த்தை கூட்டாளிகளான அஜர்பைஜான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியுடன் இணைந்து, கசாக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் முதல் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் பங்கேற்றது.
உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு விருந்து அளிப்பார், மேலும் சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உச்சி மாநாட்டின் ஒரு அங்கமாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த அமைப்பில் சீனாவுக்கு இணையான மிக முக்கியமான நாடுகளின் தலைவர்களான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான ஷி ஜின்பிங்கின் சந்திப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.
புதின் கடைசியாக 2024 மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், கடந்த ஓராண்டில் இரு நாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோதி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சீனாவுக்கு செல்கிறார்.
ஆகஸ்ட் 28 அன்றைய ஊடக அறிக்கைகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர் செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.
சீனா வழங்கிய பங்கேற்பாளர்களின் பட்டியலின் அடிப்படையில் பார்க்கையில், 2021 ஆகஸ்டில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உயர்மட்ட பிரதிநிதியை அனுப்பாத ஆப்கானிஸ்தான், இம்முறையும் கலந்துகொள்ளவில்லை.
ஆப்கானிஸ்தான் 2012 இல் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது, ஜூலையில் ரஷ்யாவிடமிருந்து தூதரக அங்கீகாரம் பெற்றது, மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் வாங் யி காபூலுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். நட்பு அணுகுமுறைகள் இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தான் இல்லாதது, தாலிபானின் பங்கேற்பு குறித்து எஸ்சிஓவுக்குள் இன்னும் எதிர்ப்பு குரல்கள் இருப்பதைக் குறிக்கிறது.
ஆகஸ்ட் 28 வெளியான ஊடக செய்திகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர், செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.
ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, சீன ஊடகங்கள் இப்போது "உலக மக்கள்தொகையின் கிட்டத்தட்ட பாதியையும், உலக நிலப்பரப்பின் கால் பகுதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது", என எஸ்சிஓ அமைப்பின் வளர்ச்சியைப் புகழ்ந்தன.
2024 இல் சீனாவின் மற்ற எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடனான வர்த்தகம் 512.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, "புதிய உச்சத்தை" எட்டியது என வணிக அமைச்சகம் ஆகஸ்ட் 27 அன்று தெரிவித்தது.
அரசு நடத்தும் நாளிதழான குளோபல் டைம்ஸ், சீன சமூக அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரை மேற்கோள் காட்டி, எஸ்சிஓ-வின் உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் வலுவான செல்வாக்கு "பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்" எனக் கூறியது.
"எஸ்சிஓ புதிய வகை சர்வதேச உறவுகளுக்கும், பிராந்திய ஒத்துழைப்புக்கும் முன்மாதிரியாக உள்ளது, மேலும் குறிப்பிடத்தக்க சர்வதேச செல்வாக்குடன் உருவாக்கும் சக்தியாக விளங்குகிறது," என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி, ஆகஸ்ட் 23 அன்று ஒரு கருத்துரையில் தெரிவித்தது.
எஸ்சிஓ "வரலாற்றின் சரியான பக்கத்தில்" மற்றும் "நீதியும் நியாயமும் உள்ள பக்கத்தில்" நிற்கிறது, என்று அது மேலும் தெரிவித்தது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமைப்பின் ஒருங்கிணைந்த குரல், "உலக ஆளுகையை மிகவும் நியாயமான மற்றும் பகுத்தறிவான திசையில் முன்னெடுக்கும், உலக தெற்கை ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்த்தை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு வழிநடத்தும்". என்றும் அது கூறியது.
பல கட்டுரைகள், அமைப்பினுள் ஒத்துழைப்பை நெறிப்படுத்தும்,"பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, பல்வேறு நாகரிகங்களுக்கு மரியாதை, மற்றும் பொது வளர்ச்சிக்காக உழைப்பது" ஆகிய கொள்கைகளை கொண்ட "ஷாங்காய் உணர்வு" பற்றி குறிப்பிட்டன.
"காலம் மாறும்போது, இதன் சமகால மதிப்பு மேலும் தெளிவாகிறது, தற்போதைய உலக ஆளுகை இக்கட்டைத் தீர்க்கவும், சர்வதேச வேறுபாடுகளை களையவும், மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு சித்தாந்த உத்வேகத்தை வழங்குகிறது," என்று சின்ஹுவா ஆகஸ்ட் 23 அன்று தெரிவித்தது.
எஸ்சிஓ-வில் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு பொறுப்பான தூதர் ஃபான் சியான்ரோங், "சாங்காய் உணர்வு" எஸ்சிஓ-வின் "வேர் மற்றும் ஆன்மா" என்று விவரித்தார். இது "நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான எஸ்சிஓ நாடுகளின் தேவைகளை முழுமையாக எதிரொலிக்கிறது" மற்றும் "பனிப்போர் மனநிலை, நாகரிகங்களின் மோதல் போன்ற காலாவதியான கருத்துக்களை கடந்து நிற்கிறது" என்று சின்ஹுவா அறிவித்தது.
அமைப்பின் உலகளாவிய செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு குறித்த பேச்சுகளுக்கு அப்பால், இணைப்பு, பெரிய தரவு, ஆற்றல் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் அமைப்பினுள் ஒத்துழைப்பு சாதனைகளை ஊடகங்கள் எடுத்துக்காட்டின. 2025-ஐ "எஸ்சிஓ நிலையான வளர்ச்சி ஆண்டு" என்று அவர்கள் குறிப்பிட்டனர், மேலும் நிலையான வளர்ச்சிக்கு தேவையான "பரஸ்பர சாதக அம்சங்கள்" மற்றும் "பெரும் திறன்" உள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இந்தக் கருப்பொருளுக்கு ஏற்ப, எண்ணெய், வாயு, உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் எஸ்சிஓ கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த முயற்சிகள் "தொழில்துறை மாற்றத்தை ஊக்குவித்து, எஸ்சிஓ உறுப்பினர்களிடையே தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலி உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்" என்று வணிகத் துணை அமைச்சர் லிங் ஜி-யை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்தது.
சீனாவின் கவனம் எஸ்சிஓ-வா அல்லது பிரிக்ஸா?
மத்திய ஆசியா பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு நடைமுறையாக தொடங்கிய எஸ்சிஓ, இப்போது மூன்று கண்டங்களில் உள்ள நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.
இந்த விரிவாக்கம், உலக தெற்கின் தேவைகளை பூர்த்தி செய்வது, "உண்மையான பன்முகவாதத்தை" பாதுகாப்பது மற்றும் "ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு" ஆகிய வாதங்கள், இந்த அமைப்பை சீனா தலைமையிலான மற்றொரு சர்வதேச அமைப்பான பிரிக்ஸைப் போல விரைவாக மாற்றுகிறது.
26 எஸ்சிஓ உறுப்பினர்கள், கூட்டாளிகள் மற்றும் பார்வையாளர் நாடுகளில் 9 நாடுகள் பிரிக்ஸிலும் தொடர்புடையவர்கள். இது 10 உறுப்பினர்களையும் 10 பேச்சுவார்த்தை கூட்டாளிகளையும் கொண்டுள்ளது, சமீப ஆண்டுகளில் உலக தெற்கு நாடுகளை ஈர்க்க விரிவாக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கு மற்றும் ஒற்றுமை குறைந்திருக்கலாம் என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஜூலையில் பிரேசிலில் நடைபெற்ற "பலவீனமடைந்த" பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் லி கியாங் கலந்துகொண்டதால், ஷி ஜின்பிங் பிரிக்ஸ்-க்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ஷி ஜின்பிங் அதிபராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு எஸ்சிஓ உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார், மேலும் "சீனா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான தூதரக உறவுகளில் எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளித்து வருகிறது" என்றும், இந்த அமைப்பை "மேலும் உறுதியானதாகவும் வலிமையானதாகவும்" மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பெய்ஜிங் உண்மையிலேயே எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளிக்கிறதா என்பது இன்னும் தெளிவாக வேண்டும், ஆனால் தற்போதைக்கு, இந்த இரு அமைப்புகளும் பாதுகாப்புவாதத்திற்கு எதிர்ப்பு, ஒருதலைபட்சம், "ஆதிக்கம்" மற்றும் "அடக்குமுறை" ஆகியவற்றை நிராகரித்தல், உலக தெற்கிற்கு ஆதரவாகவும், மிகவும் நியாயமான சர்வதேச ஒழுங்கிற்காகவும் நிற்பது போன்ற செய்திகளை முன்னெடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
எஸ்சிஓ-வில் அதிக உறுப்பினர்களையும் கூட்டாளிகளையும் சேர்ப்பது, மிக முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அமைப்பை பயனற்றதாக ஆக்கலாமா, மற்றும் "சில நாடுகள் தன்னிச்சையாக கூடுதல் வரிகளை விதிக்கும்" "உலகளாவிய கொந்தளிப்புக்கு" மத்தியில் இது ஒற்றுமையின் தோற்றமாக மாறலாமா என்பது வழக்கம்போல, ஊடக செய்திகளில் குறிப்பிடப்படவைல்லை.
"எஸ்சிஓ தனது கதவுகளைத் தொடர்ந்து திறந்து வைத்து, ஷாங்காய் உணர்வை ஏற்கும் நாடுகளை பெரிய எஸ்சிஓ குடும்பத்தில் இணைய வரவேற்கும்," என சின்ஹுவாவுடனான நேர்காணலில், தூதர் ஃபான் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு