உலக நடப்பு

பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது? அவர் நன்கொடைகளை அள்ளி வழங்குவது ஏன்?

3 months 2 weeks ago

பில்கேட்ஸ் அறக்கட்டளை

பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கேட்டி ரஸ்ஸல்

  • பதவி, கல்ச்சர் & மீடியா ஆசிரியர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நேர்காணலின் இறுதியில்தான் பில்கேட்ஸ் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்று கூறினார். அவரின் தொண்டு நிறுவனம் மூலம், நோய்களைத் தடுக்க, வறுமையை ஒழிக்க அவர் நன்கொடை அளித்துள்ளார்.

''நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை நான் கொடுத்திருப்பேன். என்னிடம் கொடுக்க இன்னும் நிறைய உள்ளது'' என்று கூறுகிறார் பில் கேட்ஸ்.

பல்கேரியா நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு இது. இதை வைத்துக் கொண்டு லண்டனையும் பர்மிங்காமையும் இணைக்கும் அதிவிரைவு ரயில் சேவையான எச்.எஸ்.2 என்ற ரயில்வே லைனையே முழுமையாகக் கட்டிவிடலாம்.

இந்த மதிப்பானது, டெஸ்லா கார்களின் ஓராண்டு விற்பனை மதிப்பு. டெஸ்லாவின் உரிமையாளர் ஈலோன் மஸ்க், உலகில் மிகவும் பணக்கார நபராக அறியப்படுகிறார். ஒரு காலத்தில் பில் கேட்ஸ் அந்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான கேட்ஸும், மற்ற செல்வந்தரான வாரன் ப்ஃபெட்டும் அவர்களின் கோடிக்கணக்கான நிதியை கேட்ஸ் அறக்கட்டளை மூலமாகப் பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கேட்ஸ் அறக்கட்டளையை கேட்ஸும் அவரின் முன்னாள் மனைவியான மெலிண்டாவும் சேர்ந்து உருவாக்கினார்கள்.

மிகவும் சிறிய வயதில் இருந்தே மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் போக்கு தன்னிடம் இருந்ததாகத் தெரிவிக்கிறார் கேட்ஸ்.

அவருடைய அம்மா, "பணம் வரும்போது அதை மற்றவர்களுக்கு வழங்கும் பொறுப்பும் உடன் வருகிறது," என்று கூறியிருக்கிறார்.

கேட்ஸின் அறக்கட்டளையானது வருகின்ற மே மாதம், 25வது ஆண்டை நிறைவு செய்கிறது. பணத்தை வழங்குவதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்று கூறுகிறார் பில்கேட்ஸ்.

அன்றாட வாழ்க்கை என்று வரும்போது எந்த மாற்றத்தையும் அடைந்ததாகத் தெரியவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். "நான் தனிப்பட்ட ரீதியில் எதையும் தியாகம் செய்யவில்லை. நான் ஹாம்பர்கர் ஆர்டர் செய்வதைக் குறைக்கவோ, படத்திற்குச் செல்வதைக் குறைக்கவோ இல்லை," என்று கூறுகிறார்.

இதுவரை அவரது சொத்தில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அவரால் இன்றும் தனி விமானத்தில் பறக்க இயலும். பல வீடுகளை வாங்க இயலும்.

சொத்தில் பெரும் பகுதியை நன்கொடையாக அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அனால், "மூன்று பிள்ளைகளிடமும் அவர்களுக்கு எவ்வளவு சொத்து வேண்டும்," என்ற பெரிய ஆலோசனையை நடத்தியதாகத் தெரிவித்தார்

"அவர்கள் ஏழைகள் ஆகிவிடுவார்களா?" என்று நான் கேட்டேன். அவர் ''இல்லை'' என்றார். "மொத்த சதவீதத்தில் பெரும் பகுதி இல்லை என்றாலும் நான் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பணம் அவர்களை நன்றாக வாழ வைக்கும்," என்றார் அவர்.

கணக்கில் மிகவும் திறமையானவர் அவர். சியாட்டலில் உள்ள லேக்சைட் பள்ளியில் அவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது நான்கு மாகாணங்களுக்கான பிராந்திய கணக்குத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டார்.

அப்போது அவருக்கு வயது 13 மட்டுமே. அந்த வயதில், அந்தப் பிராந்தியத்தில் கணக்கில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.

கணக்கு அவருக்கு மிகவும் எளிமையாக வருகின்ற ஒரு விசயம். ப்ளூம்பெர்க்கின் செல்வந்தர் பட்டியலில் அவருக்கு 160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறு விகிதத்தை அவரின் பிள்ளைகளுக்கு விட்டுச் சென்றாலும் அவர்கள் பணக்காரர்களாக வாழ முடியும்.

கேட்ஸின் பால்ய கால வீடு

ப்ளூம்பர்க் தரவுகளின் அடிப்படையில், 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துகளைக் கொண்டுள்ள செல்வந்தர்கள் உலக அளவில் வெறும் 15 நபர்கள்தான் உள்ளனர். அதில் பில் கேட்ஸும் ஒருவர்.

நாம் தற்போது, சியாட்டிலில், அவருடைய பால்ய கால வீட்டில் இருக்கின்றோம். நான்கு படுக்கை வசதிகளைக் கொண்ட அந்த வீடு மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. அவர் சமீபத்தில் 'ஸோர்ஸ் கோட்: மை பிகினிங்ஸ்' என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். அதில் தன்னுடைய ஆரம்பக்கால வாழ்வைப் பற்றி விவரிக்கிறார்.

சராசரி என்ற எல்லைக்குள் நிறுத்தி வைக்க இயலாத குழந்தையைப் பிற்காலத்தில் ஒரு தொழில்நுட்ப ஜாம்பவானாக மாற்றியது எது என்று புரிந்து கொள்வற்காக நான் இங்கே வந்திருக்கிறேன்.

கிறிஸ்டி மற்றும் லிபி என்று இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தவர் கேட்ஸ். இவர்கள் மூவரும் ஆச்சரியமாக வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இங்கே வருவதில்லை. அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர்கள் அந்த வீட்டை மறுசீரமைப்பு செய்துள்ளனர் (அதற்கு கேட்ஸின் சகோதரிகள் ஒப்புதலும் அளித்திருக்கின்றனர்).

அந்த வீட்டின் சமையலறைக்குச் செல்லும்போது பழைய நினைவுகளை அவர்கள் அசைபோடுகின்றனர். அங்கே ஒரு இண்டர்காம் சிஸ்டம் இருந்தது. அது அவர்களின் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. படுக்கையில் இருந்து எங்களை எழுப்பி காலை உணவை உட்கொள்ள வைக்க, "அவர் காலையில் எங்களுக்காகப் பாடல் பாடுவார்," என்று கேட்ஸ் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

பில் கேட்ஸின் அம்மா, மேரி கேட்ஸ் அவர்களின் கடிகாரங்களை எட்டு நிமிடங்கள் வேகமாக வைத்துவிடுவார். அப்போதுதான் அவருடைய நேரத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்வார்கள். பில் கேட்ஸை மேம்படுத்த அவருடைய அம்மா அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அந்த சேட்டையெல்லாம் அவருடைய பாட்டி 'காமி' முன்பு ஒன்றுமில்லாமல் போனது. பில் கேட்ஸின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த அவர்தான் கேட்ஸுக்கு பல்வேறு விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்.

கணினி கற்றுக்கொள்ள ஏற்பட்ட ஆர்வம்

பில்கேட்ஸ் அறக்கட்டளை, பில்கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது?

பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC

படக்குறிப்பு, நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துகளைக் கொண்டுள்ள செல்வந்தர்கள் உலக அளவில் வெறும் 15 நபர்கள்தான் உள்ளனர். அதில் பில் கேட்ஸும் ஒருவர்.

படிகளில் இறங்கி தரைத்தளத்தில் முன்பு அவரின் படுக்கையறை இருந்த இடத்திற்கு நான் கேட்ஸுடன் சென்றேன். தற்போது விருந்தினர் தங்கும் பகுதியாக அது மாற்றப்பட்டுள்ளது. இளமைக் காலத்தில் கேட்ஸ் அங்கே அதிக நேரத்தைச் செலவிடுவாராம். ஏதேனும் யோசித்துக் கொண்டே இருப்பார் என்று அவரின் சகோதரிகள் கூறுகின்றனர்.

ஒரு நேரத்தில் வீட்டில் மூன்று குழந்தைகளும் செய்யும் சேட்டையால் வெறுப்படைந்த அவருடைய அம்மா தரையில் கிடைக்கும் உடை மற்றும் இதர பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வாராம். திருப்பித் தர வேண்டும் என்றால் அதற்கு பில் கேட்ஸும் அவரின் சகோதரிகளும் 25 செண்ட் பணத்தை அவர்களின் அம்மாவிடம் கொடுக்க வேண்டுமாம். "அதன் பிறகு மிகவும் குறைவான உடைகளை உடுத்த பழகிக் கொண்டேன்," என்று அவர் கூறுகிறார்.

இந்தக் காலத்தில்தான் 'கோடிங்கில்' அவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. ஏதேனும் பிரச்னையைப் பற்றி தெரிவித்தால் அதற்கு பதிலாக உள்ளூர் கணினி மையத்தில் கணினியைப் பயன்படுத்த அவரது பள்ளி நண்பர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொழில்நுட்பப் புரட்சியின் ஆரம்பக் காலத்தில், 'கோடிங்' கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினார் பில் கேட்ஸ். இரவு நேரங்களில் பெற்றோர்களிடம்கூட கூறாமல் ஜன்னல் வழியாக வீட்டைவிட்டு வெளியேறி கணினியைப் பயன்படுத்த விரும்பியிருக்கிறார் அவர்.

இப்போதும் உங்களால் அப்படி செய்ய முடியுமா என்று நான் கேட்டேன். அது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை எனக் கூறிக்கொண்டே, ஜன்னலைத் திறந்து அதிலிருந்து வெளியேறினார் கேட்ஸ்.

ஒரு காலத்தில் பில் கேட்ஸை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் ஒருவர், நின்ற இடத்தில் இருந்தே ஒரு நாற்காலியை தாண்டிக் குதிப்பீர்களா என்று கேட்டிருக்கிறார். அதே இடத்தில் கேட்ஸ் அதைச் செய்து காட்டியுள்ளார்.

அது மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. நான் இன்று அவருடைய பால்ய கால படுக்கையறையில் நின்று கொண்டிருக்கிறேன். 70 வயதைத் தொடப்போகும் அந்த மனிதர் இன்னும் இப்படியாக சாகசம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆட்டிசம் குறைபாடு கொண்டவரா பில் கேட்ஸ்?

பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது?

பட மூலாதாரம், MAXINE COLLINS/BBC

படக்குறிப்பு, சகோதரிகளுடன் கேட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி. இடது புறத்தில் இருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் பிபிசி செய்தியாளர்

அந்த இடம் அவருக்குப் பழக்கப்பட்டது என்பதற்காக மட்டும் அவர் இப்படி இலகுவாக ஜன்னல் வழியாக ஏறிச் செல்லவில்லை. அவருடைய புத்தகத்தில் வெளிப்படையாக இவ்வாறு எழுதியுள்ளார், ''இந்தக் காலத்தில் அவர் வளர்க்கப்பட்டிருந்தால், அவர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவராக வகைப்படுத்தப்பட்டிருப்பார்.''

கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன் ஒரே ஒருமுறை அவரை நான் நேர்காணல் செய்தேன். உயிர்க் கொல்லி நோய்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான அவருடைய இலக்கு குறித்த நேர்காணல் அது.

அப்போது நேர்காணலுக்கு முன்பான உரையாடல் ஏதும் நிகழவில்லை. என்னுடைய நேர்காணலுக்குப் பிறகு அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறதா என்று எனக்குத் தோன்றியது.

அவருக்குப் பிடித்த விஷயங்களில் செலுத்தப்படும் அதிகபட்ச கவனம், எதையும் கற்றுக்கொள்ள காட்டும் அதீத ஆர்வம், சமூக விழிப்புணர்வு குறித்து அறியாமல் இருந்தது போன்றவை குறித்துத் தன்னுடைய புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

டெலவேர் குறித்து 177 பக்க அறிக்கை ஒன்றை ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது எழுதியுள்ளார். உள்ளூரில் உள்ள நிறுவனங்களுக்கு ஆண்டு அறிக்கை வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும் என்று கூறி பல நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதும்போது அவருக்கு வயது 11.

அவருடைய சகோதரிகள், பில் கேட்ஸ் வித்தியாசமானவர் என்று உணர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கிறிஸ்டி, பில்லின் அக்கா. தன்னுடைய தம்பி குறித்து மிகவும் அக்கறை கொண்டதாகத் தெரிவிக்கிறார். "அவன் சாதாரண குழந்தை இல்லை. அவனுடைய அறையில் அமர்ந்து பென்சிலை மென்று கொண்டிருப்பான்," என்று தன்னுடைய தம்பி குறித்துக் கூறுகிறார்.

அவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக பில் கேட்ஸ் நம்பவது குறித்து அறிந்தபோது, ''அது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை'' என்று கூறுகிறார் மனநல ஆலோசகரான லிபி.

டிரம்ப்பை சந்தித்தேன்

பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது?

பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC

படக்குறிப்பு, ஆட்டிசம் குறித்து முறையாக நோயறியும் பரிசோதனையில் ஈடுபடவில்லை என்றும் அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறுகிறார் பில் கேட்ஸ்

ஆட்டிசம் குறித்து முறையாக நோயறியும் பரிசோதனையில் ஈடுபடவில்லை என்றும் அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறுகிறார் பில் கேட்ஸ்.

"என்னுடைய குறைபாடுகள் எனக்கு ஒரு பிரச்னையாக இருந்ததைவிட எனது வாழ்க்கைக்கான நேர்மறையான பண்புகள் எனக்கு அதிக பயன் அளித்தன," என்று கூறுகிறார் பில் கேட்ஸ்.

"நரம்பியல் பன்முகத்தன்மை (neurodiversity) என்பது சிலிகான் பள்ளத்தாக்கில் அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுவிட்டது. ஏனெனில், மிகவும் சிறு வயதில் ஆழமாகக் கற்றுக் கொள்வது கடினமான சில விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவும்," என்கிறார் அவர்.

ஈலோன் மஸ்கும் ஆட்டிசம் குறைபாடான அஸ்பெர்கெர் குறைப்பாட்டைக் (Asperger's syndrome) கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். டெஸ்லா, எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான அவர் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர்.

அவர் மட்டுமின்றி சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்து மெட்டாவின் மார்க் சக்கர்பெர்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ் போன்றோர் வரை, டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

சுய லாபத்திற்காக அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம் என நீங்கள் கருதலாம், இருப்பினும் தானும் அதிபரை அணுகியதாகக் கூறுகிறார் பில்கேட்ஸ். டிசம்பர் 27ஆம் தேதியன்று மூன்று மணிநேரம் பேசியதாகத் தெரிவித்தார். "ஏனென்றால் உலக சுகாதாரம் தொடர்பாகவும், நாம் எப்படி ஏழை நாடுகளுக்கு உதவ முடியும் என்பது தொடர்பாகப் பல்வேறு முடிவுகளை அவர் எடுக்கிறார். அதில் தான் தற்போது என்னுடைய முழுமையான கவனமும் இருக்கிறது," என்று தெரிவித்தார் கேட்ஸ்.

பில்கேட்ஸ் அறக்கட்டளை, பில்கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது?

பட மூலாதாரம்,LAKESIDE SCHOOL

படக்குறிப்பு, லேக்சைட் பள்ளியில் மாணவனாக பில் கேட்ஸ்

பில்கேட்ஸ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரவில்லை. அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். பணம் ஒரு பிரச்னையாக இல்லை. ஆனால் தன்னுடைய மகனை தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்புவது அன்று சவாலாக இருந்தது. அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் இன்று நாம் யாரும் பில் கேட்ஸ் பற்றிக் கேட்டிருக்க இயலாது.

பள்ளியில் டெலிடைப் இயந்திரம் மூலம் முதல்முறையாக ஆரம்பக்கால மெய்ன்ஃபிரேம் கணினிக்கான அணுகல் கேட்ஸுக்கு கிடைத்தது. ஆசிரியர்களால் அதைப் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் நான்கு மாணவர்கள் இரவும் பகலுமாக அதில் வேலை செய்து வந்தனர். "வேறு யாராலும் அணுகவே முடியாத காலத்தில் நாங்கள் கணினியை நன்றாகப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தோம்," என்கிறார் அவர்.

அந்த அனுபவத்திற்குப் பிறகு, சில ஆண்டுகளில் அந்த நண்பர்களில் ஒருவரான பால் ஆலெனுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை கேட்ஸ் நிறுவினார். கேட்ஸின் மற்றொரு நெருங்கிய நண்பரான கென்ட் இவான்ஸ் அவருடைய 17 வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

லேக்சைட் பள்ளியில் நாங்கள் நடந்து செல்லும்போது அங்கே ஒரு தேவாலயத்தை தாண்டிச் சென்றோம். அங்கேதான் கென்ட்டின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது படியில் நின்று அழுததை நினைவு கூர்ந்தார் பில் கேட்ஸ்.

அந்த நான்கு பேருக்கும் மிகப்பெரிய கனவு இருந்தது. அவர்கள் கணினியைப் பயன்படுத்தாத காலத்தில், பலரின் சுயசரிதை புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தனர். அதில் மக்களை வெற்றியாளர்களாக மாற்றியது எது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தனர்.

தற்போது கேட்ஸ் அவருடைய சுயசரிதையை எழுதிவிட்டார். அவரின் கருத்து, ''நீங்கள் தற்போது யாராக இருக்கின்றீர்களோ, ஆரம்பக் காலத்தில் இருந்தே அவர் உங்களுக்குள் இருந்திருக்கிறார்.''

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czj31n28gm1o

காசாவில் யுத்தத்தில் சிக்கிய சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரம் - இஸ்ரேலின் அழுத்தத்தால் நீக்கியது பிபிசி?

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN

23 FEB, 2025 | 02:09 PM

image

காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரத்தை பிபிசி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின்அழுத்தங்கள்காரணமாகவே பிபிசி அதனை அகற்றியதுஎன   குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன.

காசா - போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பிபிசி வெளியிட்டிருந்தது.

காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற  தாக்குதலின் மத்தியில் தப்பிபிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச்சித்திரம்.

gaza_docu_bbc.jpg

காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச்சித்திரம் என தெரிவித்திருந்த பிபிசி ,இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் கருதுகின்றோம்,வெளிப்படைத்தன்மை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

எனினும் அந்த விவரணச்சித்திரத்தில் தோன்றிய சிறுவனின்தந்தை  கலாநிதி  அல்மான் அல்யாசூரி ஹமாஸ்  அரசாங்கத்தில் பிரதிவிவசாய அமைச்சராக பணியாற்றியவர் என தெரியவந்ததன் பின்னர் பிபிசி அந்த விவரணச்சித்திரத்தை நீக்கியுள்ளது.2007 இல் அவர் பிரதிஅமைச்சராக பணிபுரிந்திருந்தார்.

ஹமாஸ் அமைப்பை பிரிட்டன் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது.

பிபிசி அந்த விவரணச்சித்திரத்தை விலக்கியதை கண்டித்துள்ளவர்கள் குறிப்பிட்ட நபர் தொழில்நுட்ப அதிகாரியாகவே ஹமாசின் அமைச்சரவையில் பணியாற்றினார் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களை மனிதாபிமான முகத்துடன் சித்தரிக்கும் இஸ்ரேலின் தாக்குதலினால் காசா மக்களின் நாளாந்த வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அந்த வீடியோவை பிபிசி அகற்றியமை குறித்து பலர் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர்.

வீடியோவில் தோன்றிய சிறுவனின் தந்தை ஹமாஸ் அமைப்பின் அமைச்சரவையில் பணியாற்றினார் என்பதற்காக அந்த வீடியோவை அகற்ற முடியாது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அந்த சிறுவனின் தந்தையின் பின்னணி குறித்து தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள பிபிசி இது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/207450

பிரான்சில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி - இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என ஜனாதிபதி தெரிவிப்பு

3 months 2 weeks ago

23 FEB, 2025 | 09:39 AM

image

பிரான்சின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது  நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத  குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார், தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பயங்கரவாத கண்காணிப்பிலிருந்தவர் இதன் காரணமாக அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/207417

காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?

3 months 2 weeks ago

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29வது காலநிலை உச்சிமாநாட்டில் காலநிலை செயல்முறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான ஐ.நா திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தெற்காசியா முழுவதும் நிகழ்ந்து வரும் காலநிலை பேரிடர்கள், புறக்கணிக்க முடியாத ஒரு கேள்வியை முன்வைத்துள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களுக்குக் கூட எளிதில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29வது காலநிலை உச்சிமாநாட்டில், காலநிலை செயல்முறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான ஐ.நா திட்டத்தை (Lima work programme on gender) மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளைப் பொருத்தவரை, இந்த நாடுகளில் பாலின சமத்துவமின்மை ஒரு முக்கிய சவாலாக இருப்பதாக கடந்த டிசம்பர் 20ஆம் தேதி பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் இதழில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது.

அந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரும் ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானியுமான முனைவர் அஞ்சல் பிரகாஷ் பிபிசி தமிழிடம் பேசிய போது, "இந்திய சமூகத்தில் இருக்கும் ஆணாதிக்க விதிமுறைகள், பெண்களிடமே பெரும்பாலும் வீட்டுப் பணிகளையும் பொறுப்புகளையும் ஒப்படைத்து விடுகின்றன. அதுவே, காலநிலை பேரிடர்களின் போதும் பெண்கள் மீது அதீத சுமையும் அழுத்தமும் விழுவதற்குக் காரணமாக அமைகிறது" என்று கூறுகிறார்.

காலநிலை மாற்றம் ஆணை விட பெண்ணுக்கு இரட்டைச் சுமையை ஏற்படுத்துவது ஏன்? காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, பாலின ஏற்றத் தாழ்வுகள் காரணமாக பெண்கள் அனுபவிக்கும் அழுத்தங்கள் என்ன? அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி? தற்போதைய சூழலில் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியது ஏன் அவசியம்?

காலநிலை நெருக்கடியில் பாலின சமத்துவமின்மை

கடந்த டிசம்பர் மாதம், அசர்பைஜானில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டிலும், இந்தத் தவிர்க்க முடியாத கேள்வி குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைச் சமாளிக்கும் நோக்குடன் ஐ.நா.வின் காலநிலை செயல்முறையில், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டத்தைக் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில், நேச்சர் ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், வெள்ள பாதிப்புகள் காரணமாக 107,888 பெண்கள் கருக்கலைப்புக்கு ஆளானதாகக் கூறுகிறது. இதில், 75% கருக்கலைப்புகள் சப்-சஹாரா பிராந்தியம் (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகள்) மற்றும் தெற்காசியாவில் பதிவாகியுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்தியாவில் 2015 முதல் 2021-க்குள் கருவிலேயே குழந்தை உயிரிழக்கும் விகிதம் 28.6% அதிகரித்ததாகக் கூறியது.

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காலநிலை நெருக்கடியால் பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு 60% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

யுனிசெஃப் அறிக்கைப்படி 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை பேரிடர்களால் 15.8 கோடி பெண்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள். 23.6 கோடி பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிசிசி அறிக்கைப்படி, வறட்சி, திடீர் வெள்ளம் போன்ற பாதிப்புகளால், அதிக உயிரிழப்புகளைச் சந்திப்பது, ஊட்டச்சத்துக் குறைபாடுகளை எதிர்கொள்வது, வாழ்வாதாரங்களை இழப்பது ஆகிய அபாயங்களை பெண்கள் அதிகம் எதிர்கொள்கின்றனர்.

சென்னை ஒவ்வொரு வெள்ளத்தை எதிர்கொள்ளும் போதும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழலில், இதுபோன்ற கருக்கலைப்பு அபாயங்கள் அதிகரிப்பதாகவும், அதன் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளைப் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார் 'டாக்டர்ஸ் ஃபார் ஏர் பொலியூஷன்' அமைப்பைச் சேர்ந்த விஷ்வஜா சம்பத்.

இதுமட்டுமின்றி, இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு, துரிதமடையும் காலநிலை தாக்கங்களின் காரணமாக 60% அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, உணவுப் பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு, குடும்பங்களை நிர்வகித்தல் போன்ற பல்வேறு பொறுப்புகள், கலாசார மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பெண்களின் மீதே சுமத்தப்படுவதாகக் கூறுகிறார் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இனிஷியேட்டிவ் அமைப்பின் காலநிலை மாற்றம் மற்றும் காற்றுத் தரம் துறையின் இயக்குநர் சுருச்சி பத்வால்.

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம், SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, சூழலியல் ரீதியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் எண்ணூரில், குழந்தைகள் அதிகமான சுவாசக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர்.

உதாரணமாக, சூழலியல் ரீதியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் எண்ணூரில், குழந்தைகள் அதிகமான சுவாசக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக, தங்கள் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும், பணியைப் புறக்கணிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய தாய்மார்கள் தெரிவித்தனர்.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுருச்சி பத்வால், "கல்வி, வேலை போன்ற வாய்ப்புகள் கிடைத்தாலும்கூட, அவற்றோடு சேர்த்து குடும்பப் பொறுப்புகளையும் நிர்வகிக்க வேண்டிய சுமை பெண்கள் மீதே விழுகிறது. உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வது முதல் குழந்தைகளோடு சேர்த்து கூட்டுக் குடும்பங்களில் இருக்கும் முதியவர்களையும் பராமரிக்கும் பணி பெண்களுடையதாகவே இந்திய சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், கனமழை, வெள்ளம், வெப்ப அலை அல்லது வறட்சிப் பேரிடர்களின் போது நோய்த்தொற்றுகள் பரவினால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது, அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போது நிவர்த்தி செய்ய முயல்வது போன்ற சுமைகள் பெண்கள் மீதே பெரும்பாலும் விழுகிறது. இந்தப் பிரச்னைகளைக் கடந்து வேறு எதையும் சிந்திக்க முடியாத சுழலில் சிக்குவதால், பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்," என்கிறார் அவர்.

இத்தகைய சவால்களை பெண்கள் எதிர்கொள்ள முக்கியக் காரணம், பேரிடர் நிவாரணக் குழுகளில், ஆண்களே பெருமளவு இருப்பதுதான் என்கிறார் விஷ்வஜா சம்பத். அதன் விளைவாக, பேரிடர்களின்போது பெண்களின் தேவைகள் முழுதாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை எனவும் அவர் கூறுகிறார்.

"பெண்களின் குரல்களை எதிரொலிக்கும் பிரதிநிதிகள் போதுமான அளவுக்கு ஒரு குழுவில் இல்லாமல் போவதன் விளைவு இது. இத்தகைய சாதாரண பிரிதிநிதித்துவம்கூட, பெண்களின் குரல்களை ஒலிக்கச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன."

"இந்தப் பணிகள் அவர்களை நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை போன்ற காலநிலை தாக்கங்களுக்கு ஆளாக்குகின்றன. கல்வி மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவது விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சவாலாக இருப்பதால், காலநிலை சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு திறம்படச் செயலாற்றும் திறனைப் பெறுவதிலும் தடைகள் நீடிக்கின்றன," என்கிறார் முனைவர் அஞ்சல் பிரகாஷ்.

'பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும் நிலைமை மாறவில்லை'

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, பேரிடர் காலங்களில் பெண்கள் மீது இரு மடங்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமூக அறிவியல் ஆராய்ச்சி நெட்வொர்க் என்ற ஆய்விதழில் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை, கல்வி, வேலை போன்ற பிரிவுகளில் பெண்கள் முன்னேறுவது உலகளாவிய நெருக்கடியாக கருதப்படும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் பெரும் பங்காற்றுவதாகக் கூறுகிறது.

ஆனால், அந்த முன்னேற்றத்தை அடைந்த பிறகு, பெண்கள் அதோடு குடும்பத்தையும் சேர்த்து இரட்டை சுமையைச் சுமக்க வேண்டியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில், நிலத்தடி நீர் பெருமளவு குறைந்துவிட்டதால் பெண்கள் 5 முதல் 10 கிலோமீட்டர் வரை தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய பயணிக்க வேண்டியுள்ளது" என்கிறார் விஷ்வஜா சம்பத்.

"இதற்காக அந்தப் பெண்கள் செலுத்தும் உடல் உழைப்பும், நேரமும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதோடு அவர்களின் வேலை நேரமும் இதனால் குறைகிறது. ஒவ்வொரு வறட்சிக் காலத்திலும், தண்ணீர்ப் பற்றாக்குறையை சமூகங்கள் எதிர்கொள்ளும்போது, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணிகளில் பெண்களே மையப்படுத்தப்படுகின்றனர்," என்று விவரிக்கிறார் அவர்.

கடந்த 2023 டிசம்பர் மாதம் வடசென்னை, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், எண்ணூரில் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு என மக்கள் இரண்டு பேரிடர்களை ஒருசேர எதிர்கொண்டனர்.

அந்தப் பேரிடரின்போது உடுத்த மாற்றுத்துணிகூட இல்லாமல் சிரமப்பட்ட வள்ளிப் பாட்டி, தனது கணவர், மகன் உள்பட குடும்பத்தாரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்போடு, தனது சிறிய தேநீர்க் கடையால் ஏற்பட்ட இழப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

"என் இடுப்பளவுக்கு எண்ணெய் கலந்த வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது. ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே வீணாகிவிட்டன. என் மகனுக்கும் உடல்நிலை குன்றிவிட்டது. இந்த நிலையில், என் கணவரின் லுங்கியை அணிந்துகொண்டு வீட்டுப் பொருட்களைப் பாதுகாப்பது, மகனைப் பார்த்துக்கொள்வது என்று அனைத்தையுமே கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். இதற்கிடையில், நான் நடத்தி வந்த சிறு தேநீர்க் கடையும் முற்றிலுமாக வீணாக அதற்கென ரூ.30,000 கடன்பட்டு சீரமைத்தேன்," என்று தான் எதிர்கொண்ட சவாலை விவரித்தார்.

அவரைப் பொருத்தவரை, பெண்கள் எவ்வளவுதான் பொருளாதார முன்னேற்றம் கண்டாலும், குடும்பத்திற்குள் செய்யப்படும் வேலைகளும் பெண்கள் மீதே விழுவது இயல்பாகிவிட்டது. இவையிரண்டையும் பல ஆண்டுகளாக ஒருசேரச் செய்து வருவதால், அவை பழகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று முன்னேறினாலும்கூட, வேலை, வீடு என இரண்டையுமே கவனித்தாக வேண்டுமென்ற கட்டாயத்தை இந்திய குடும்பக் கட்டமைப்பு வலியுறுத்துவதாகக் கூறுகிறார் முனைவர் அஞ்சல் பிரகாஷ். இதன் விளைவாக, காலநிலை நெருக்கடிகளின்போது அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தமும் ஒப்பீட்டளவில் ஆண்களைவிட அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

அதிகரிக்கும் குழந்தைத் திருமணம், மனித கடத்தல்

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் பகுதியில் காலநிலை நெருக்கடியின் அபாயங்களை பெண்களே அதிகம் எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவில் காலநிலை நெருக்கடி, பெண்களுக்கு குடும்பரீதியான சுமைகளை அதிகரிப்பதோடு, அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது என்கிறார் சுது சுந்தர்பான் சார்ச்சா இதழின் ஆசிரியர் ஜோதிந்த்ர நாராயண் லாஹிரி.

இந்தியா, வங்கதேசம் இடையே அமைந்திருக்கும் சுந்தரவனப் பகுதியில், மேற்கு வங்கத்தில் வாழும் கடலோர சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் காலநிலை நெருக்கடியின் அதீத அபாயங்களை எதிர்கொள்வதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஜோதிந்த்ர நாராயண் லாஹிரி.

கடந்த 15 ஆண்டுகளாக, வங்காள மொழியில் சுது சுந்தர்பான் சார்ச்சா என்ற சிற்றிதழை நடத்தி வரும் அவர், தனது இதழில் சுந்தரவனப் பகுதி மக்களின் வாழ்வியல், சமூக-சூழலியல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வருகிறார்.

காலநிலை நெருக்கடியால், சுந்தரவனப் பகுதியில் புயல் பாதிப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து விட்டதாகக் கூறும் அவர், இதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, கடல்மட்ட உயர்வு, வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவுகள் சுந்தரவனத்தில் தெளிவாகத் தெரிவதாகக் கூறும் அவர், "இவற்றால், சுந்தரவனத் தீவுகளில், உவர்நீர் புகுந்துவிடுவதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. தீவுகளுக்குள் இருந்த நன்னீர் குளங்கள் உப்பாகிவிடுவதால், பாரம்பரிய மீன் வளர்ப்புத் தொழில் பாதிக்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம்,ARCHISMAN NARAYAN LAHIRI

படக்குறிப்பு,சுந்தரவனப் பகுதியில், நெருக்கடிக் காலங்களில் பெண்களே அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகக் கூறுகிறார் ஜோதிந்த் நாராயண் லாஹிரி.

மேலும், கடந்த 15 ஆண்டுகளில் சுந்தரவனப் பகுதியைச் சேர்ந்த 70% ஆண்கள் தொழில் தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால், நெருக்கடிக் காலங்களில் பெண்களே அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் 'ஐலா' என்ற பேரழிவுகரமான புயல் சுந்தரவனத்தைத் தாக்கியதில் இருந்து இந்த இடப்பெயர்வு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் ஜோதிந்த்ர நாராயண்.

"இதன் விளைவாகத் தங்கள் வீடுகளை நிர்வகிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, மீன் பிடிப்பது, விற்பது போன்ற பிற பணிகள் என அனைத்தும் பெண்களின் கைகளிலேயே விடப்படுகின்றன.

இதனால், புயல்களின் போது, கால்நடைகள், குழந்தைகளை வெள்ள முகாம்களுக்குக் கொண்டு செல்வதில் இருந்து, விவசாயம், படகுகளில் சிற்றோடைகளில் மீன் பிடிப்பது என அனைத்து சவால்களையும் கையாள்வதில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்." என்கிறார் அவர்.

பெண்கள் காலநிலை நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு,காலநிலை பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை என்கிறார் மூத்த ஆய்வாளர் முனைவர் மினி கோவிந்தன்.

காலநிலை பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை எனவும் அதன் விளைவுகளை ஆண்களைவிட பெண்களே அதிகம் அனுபவிப்பதாகவும் கூறும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இனிஷியேட்டிவ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் முனைவர் மினி கோவிந்தன், சமூகக் கட்டமைப்பில் இருக்கும் பாலின சமத்துவமின்மையே அதற்கு அடிப்படைக் காரணம் எனவும் குறிப்பிடுகிறார்.

"கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதுதொடர்பான வளங்களை அணுகும் விகிதம் குறைவாகவே இருக்கிறது.

அதோடு, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் பகுதி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழும் கடலோர மாநிலங்களில், ஆண்களே வேலை தேடி அதிகமாக இடம் பெயர்கின்றனர். இந்தச் சூழலில், குடும்பத்தின் முழு பொறுப்பும், குறிப்பாக பேரிடர்க் காலங்களில், பெண்கள் மீதே விழுகிறது. இது அவர்களுக்கு அதீத மன அழுத்தத்தையும், அவர்களின் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து குடும்பத்தினரை முன்னிலைப்படுத்தும் சூழலையும் ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார் மினி கோவிந்தன்.

அதேவேளையில், காலநிலை மாற்ற விளைவுகளால், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்களில் ஏற்படும் மனோவியல் தாக்கங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்கிறார் மினி கோவிந்தன்.

அவரது கூற்றுப்படி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படு ம்போதும் மேற்கூறிய அனைத்து சவால்களையும் பெண்கள் ஒருசேர எதிர்கொள்வதால் மனப் பதற்றம், அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், ஆரோக்கியக் குறைபாடுகள் பேசப்படும் அளவுக்கு இவை பேசப்படுவதில்லை என்கிறார்.

காலநிலை மாற்றம், பெண்களுக்கு இரட்டைச் சுமை

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு,காலநிலை நடவடிக்கைகளில் பாலினக் கண்ணோட்டங்களைப் புகுத்துவது மிகவும் அவசியம் என்கிறார் காலநிலை விஞ்ஞானி முனைவர் அஞ்சல் பிரகாஷ்.

இவை அனைத்துக்குமே காரணம், கலாசார, சமூக கட்டுப்பாடுகள் பெண்கள் மீது அதிகமாகச் சுமத்தப்படுவதே எனக் கூறும் மினி கோவிந்தன், "ஒரு பெண் காய்கறி அல்லது மீன் விற்பவராக, வீட்டு வேலை செய்பவராக, அலுவலகப் பணி செய்பவராக என எந்தப் பணியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தம் குடும்பத்தில் உள்ள குழந்தைக்கோ, முதியவருக்கோ உடல்நலம் குன்றிவிட்டால், அந்தப் பெண்தான் விடுப்பு எடுத்துக்கொண்டு அவர்களைக் கவனிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார், சில நேரங்களில் நிர்பந்திக்கவும் படுகிறார்.

இத்தகைய சூழ்நிலையில், பேரிடர்க் காலங்களில் ஓர் ஆணின் சம்பளத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயல்பாகவே பெண்களின் சம்பாத்தியத்திற்குக் கிடைப்பது இல்லை. ஆகையால், ஆண் வேலைக்குச் செல்ல வேண்டும் எனவும், பெண் வீட்டில் இருந்து வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வது, குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவற்றைக் கவனிக்க வேண்டுமென்றும் அழுத்தம் தரப்படுகிறது," என்று விவரித்தார்.

பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்களைச் சமாளிக்க, இந்தியாவுக்கு பன்முகத்தன்மை மிக்க அணுகுமுறை தேவை என்பதை வலியுறுத்துகிறார் காலநிலை விஞ்ஞானி முனைவர் அஞ்சல் பிரகாஷ்.

"உள்ளூர் அளவிலிருந்து, சமூக அடிப்படையிலான திட்டங்களை வகுக்க வேண்டும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், அவர்களின் தகவமைப்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும்.

பாலினக் கண்ணோட்டங்களை காலநிலை உத்திகளில் புகுத்துவது, முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றில் கொள்கை அளவிலான தீர்வுகளைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்," என்கிறார் அவர்.

அதோடு, "வேலை, குடும்பம் என இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண்கள், காலநிலை மாற்ற தணிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கான திறன்களை மேம்படுத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, பாலின சமத்துவம் மிக்க குடும்ப ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதும் ஊக்குவிப்பதும் அவசியம். பெண்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் கொள்கைகளை வடிவமைப்பது, காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வைப்பதற்கு உதவும்," என்றும் அஞ்சல் பிரகாஷ் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2rlgyyk34o

நியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு!

3 months 2 weeks ago

New-Project-331.jpg?resize=750%2C375&ssl

நியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு!

நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் மிதமான சேதத்தை சந்தித்ததாக நியூஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், மேலும் மூன்று தேவாலயக் கட்டிடங்கள் விசமிகளால் தாக்கப்பட்டுள்ளன.

எனினும் அவை தீப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வைரராபா பகுதி முழுவதும் உள்ள மீட்பு குழுவினர் சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி மாலை 04:30 மணிக்கு தீயை அணைத்துள்ளனர்.

எபிபானியின் ஆங்கிலிகன் தேவாலயம், செயின்ட் பாட்ரிக் கத்தோலிக்க தேவாலயம் மாஸ்டர்டன், மாஸ்டர்டன் பாப்டிஸ்ட் தேவாலயம் மற்றும் எக்விப்பர்ஸ் சர்ச் மாஸ்டர்டன் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் உள்ள மத கட்டிடங்கள் சமீப வருடங்களில் தீவைப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, ஆக்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தின் சொத்து ஒரே இரவில் இரண்டு தீ தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது.
நவம்பர் மாதம் இதே பகுதியில் ஒரு மசூதி தீ வைத்து எரிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில், கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதிகளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image previewநியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு!
நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நக...

இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை ஒத்திவைப்பு - இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

3 months 2 weeks ago

இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை - இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

23 Feb, 2025 | 11:41 AM

image

இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை  நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட உடன்படிக்கையின் படி ஹமாஸ் அமைப்பு இன்னமும் நான்கு கைதிகளை மாத்திரம் விடுதலை செய்யவேண்டும்.பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவேளை உயிரிழந்த நால்வரின் உடல்களை ஒப்படைக்கவேண்டும்.

ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது உட்பட பல உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/207436

பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்!

3 months 2 weeks ago

New-Project-325.jpg?resize=750%2C375&ssl

பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்!

பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

37 வயதான அல்ஜீரிய சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், தாக்குதல்தாரி கத்திக் குத்தினை மேற்கொள்ளும் போது, “அல்லாஹு அக்பர்” (பெரியவர்) என்று கூச்சலிட்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேக நபர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்ததால் நாடு கடத்தும் உத்தரவுக்கு உட்பட்டார் என்று அந் நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை” என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

அதேநேரம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த மக்ரோன், “எங்கள் மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பணிகளைத் தொடர வேண்டும் என்ற எனது அரசாங்கத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் ” – என்றார்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசை ஆதரித்து காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Athavan News
No image previewபிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் கா...
பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்....

உலகெங்கும் அமெரிக்கா தங்கத்தை வாங்கிக் குவிப்பது ஏன்? தட்டுப்பாடு ஏற்படுமா? இந்தியாவில் என்ன பாதிப்பு?

3 months 2 weeks ago

தங்க விலை, இந்தியாவில் தங்கத்தின் விலை, இன்றைய தங்கத்தின் விலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அஜித் காத்வி

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 22 பிப்ரவரி 2025, 09:44 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்கம் பெரிய அளவில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்க்க முடிகிறது.

லண்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகங்களிலிருந்து பல ஆயிரம் கிலோ தங்கம் தற்போது அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சர்வதேச செய்திகளின்படி, அமெரிக்க தங்க வியாபாரிகள் விமானங்களில் தங்கத்தை நியூயார்க் நகருக்கு எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு வகையில் லண்டனில் தங்கப் பற்றாக்குறையையும், அமெரிக்காவில் தங்கப் பதுக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தற்போது உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தங்கத்தை ஈர்க்கும் பிரம்மாண்ட காந்தம் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

தற்போதுவரை, பிரிட்டன் தலைநகர் லண்டனில்தான் மிக அதிக அளவு தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் அதிக தங்கம் குவிந்துள்ளதாக வால் ஸ்டீரிட் ஜர்னல் இதழில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது.

லண்டனைத் தவிர, ஸ்விட்சர்லாந்திலிருந்தும் தங்கம் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தங்கத்திற்கான தேவை மிக அதிகமாக இருப்பதால், ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தங்கத்திற்கான ஸ்பாட் விலை செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத அளவு ஒரு அவுன்சுக்கு (சுமார் 28 கிராம்) 2,942.70 டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை 2,932 டாலராக அதன் விலை இருந்தது.

தங்கத்தின் விலை இதே போன்று உயர்ந்துகொண்டிருந்தால், முதல் முறையாக அதன் விலை 3,000 டாலர்களை கூட எட்டக்கூடும்.

எப்போது தொடங்கியது?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பே லண்டன் மற்றும் உலகின் பிறப்பகுதிகளிலிருந்து தங்கம் அமெரிக்காவிற்கு செல்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது .

ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 % வரி விதித்ததைப் போல், டொனால்ட் டிரம்ப் தங்கத்தின் மீது 10 % வரி விதிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவே தங்க வியாபாரிகளை அவசரமாக தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல தூண்டியிருக்கிறது.

அமெரிக்க பொருட்கள் மீது வரிவிதிக்கும் அனைத்து நாடுகள் மீதும் வரியை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்ததால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

டிரம்பின் திட்டம் அவர் நினைத்தது போல் நடந்தால், வரும் நாட்களில் சீனா, கனடாவோடு, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக அதிக வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

2024 நவம்பர் 5-ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவின் காமெக்ஸில் (COMEX - தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை வர்த்தகம் செய்யும் ஒரு முக்கிய சந்தை) தங்கத்தின் கையிருப்பு சுமார் 533 டன்னாக இருந்தது. அதன் பின்னர் அது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

டிசம்பர் 29ஆம் தேதி, தங்கத்தின் கையிருப்பு 681 டன்னாக இருந்தது. ஜனவரி 29, 2025-ல் அது 963 டன்னாக அதிகரித்தது. ஜனவரி 31ஆம் தேதி இந்த கையிருப்பு 1000 டன்களை கடந்தது. பிப்ரவரி முதல் வாரதில் 1100 டன் கையிருப்பு இருந்தது.

தங்கத்தை அதிகம் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவிற்கு செல்லவேண்டிய தங்கம் இப்போது லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருக்கிறது என்று ராய்ட்டர்ஸின் செய்து ஒன்று கூறுகின்றது.

தங்க விலை, இந்தியாவில் தங்கத்தின் விலை, இன்றைய தங்கத்தின் விலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவில் தங்கம் விலை புதிய உச்சங்களை தொட்டிருப்பதால், அதனை வாங்குவது பாதிக்கப்படும்

உலகிலேயே அதிக தங்க கையிருப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா

பிபிசியிடம் பேசிய ஹெச்டிஎஃப்சி செக்யூரிடிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் செளமில் காந்தி, "தங்கம் லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருக்கின்றன," என்கிறார்.

"ஒன்று, டிரம்ப் வரி விதிப்பார் என்ற அச்சம். இந்த வரி எவ்வளவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது 10% அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இதுபோன்ற வரிகள் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவை அதிகரிக்கும். எனவே தங்க இறக்குமதியாளர்கள் இழப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்கனவே குறைக்க தொடங்கிவிட்டனர்."

"அத்தோடு, உலகிலேயே அதிக தங்க கையிருப்பு அமெரிக்காவில் இருக்கிறது. அது நீண்ட காலமாக தணிக்கை செய்யப்படவில்லை. எனவே வங்கிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் லண்டன் பெட்டகங்களில் இருக்கும் தங்களது தங்கத்தை கணக்கில் காட்டுவதற்காக அமெரிக்காவிற்கு கொண்டு செல்கின்றன."

"வரி யுத்தமும், சர்வதேச நிச்சயமற்ற தன்மையும்தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். தனது தங்க கையிருப்பை ஜனவரியில் அதிகரித்த சீனாவின் மத்திய வங்கி போல பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக்கொண்டிருக்கின்றன," என்கிறார் செளமில் காந்தி.

"முக்கியமாக, பிரிக்ஸ் நாடுகள் தற்போது டாலர்களை குறைத்து கொண்டு தங்களது தங்க கையிருப்பை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே தங்கத்தின் விலை உயர்கிறது" என்றும் அவர் கூறினார்.

தங்க விலை, இந்தியாவில் தங்கத்தின் விலை, இன்றைய தங்கத்தின் விலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகிலேயே அதிகம் தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று

இந்தியாவில் திருமணங்களுக்கு தங்கம் வாங்குவது குறையுமா?

தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், திருமணத்திற்கு தங்கம் வாங்க விரும்பும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆமதாபாத் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜிகர் சோனி பிபிசி குஜராத்தியிடம் பேசிய போது," தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக நிதி சேமித்து வைத்திருக்கும் மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் வாங்க வேண்டும் என நினைத்திருப்பார்கள். ஆனால் தற்போதைய விலையில் அவர்களால் குறைவான அளவிலே வாங்க முடியும்'' என்றார்.

"10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக மாறலாம்''

"தங்கத்தின் விலை உயர்ந்தாலும், மக்கள் அதன் மீதான ஆர்வத்தை இழந்துவிடமாட்டார்கள். மக்கள் தற்போது 14 முதல் 18 கேரட் தங்க நகைகளையும் வாங்குகின்றனர். இவை குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. " என்கிறார் அவர்.

"அண்மையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் பலர் பங்குச்சந்தையில் ஆர்வத்தை இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டாக கருதுகின்றனர்."

முன்னதாக டிரம்பின் வருகைக்கு பிறகு, கூடுதலாக 600 டன் தங்கம் அமெரிக்காவில் குவிக்கப்பட்டிருப்பதாகவும், தங்கத்தின் அடிப்படையில் அமெரிக்கா அதிக டாலர்களை அச்சடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஹரேஷ் ஆச்சார்யா. இண்டியா புல்லியன் ஆண்டு ஜூவல்லர்ஸ் அசோசியேசன் (IBJA) எனப்படும் இந்திய தங்க மற்றும் நகைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இயக்குநராக அவர் உள்ளார்.

இவ்வாறு நடைபெற்றால், வரும் மாதங்களில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டக்கூடும்.

இந்தியாவில் பலர், புதிய தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து நகைகளை தயாரித்து வருகின்றனர்.

தங்க விலை, இந்தியாவில் தங்கத்தின் விலை, இன்றைய தங்கத்தின் விலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வரும் நாட்களில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.1 லட்சத்தை தொடக்கூடும்

இந்தியாவுக்கான தங்கமும் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது

அமெரிக்காவிற்கு அதிக அளவில் தங்கம் நகருவதால், இந்தியாவிலிருந்தும் தங்கம் அமெரிக்காவை சென்றடைந்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஒரு முன்னணி வங்கி இந்தியாவில் சுங்க வரியில்லா பகுதியில் சேமித்து வைத்திருந்த தங்கத்தை இரண்டு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவிற்கு அனுப்பியது.

பொதுவாக பல வங்கிகள் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து சுங்க வரி இல்லா பகுதியில் சேமித்து வைக்கும். அதன் பின்னர், தங்கத்திற்கு தேவை இருக்கும்போது மட்டும் அவர்கள் இறக்குமதி வரியை செலுத்தி தங்கத்தை எடுக்கிறார்கள்.

இவை தவிர, அவர்கள் விரும்பினால் அந்த தங்கத்தை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படிச் செய்தால் அவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.

துபை சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வரும் தங்கமும் அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்த தங்கம் சாதாரணமாக இந்தியாவிற்கு வரும்.

பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏழாவது வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்க வியாபாரத்தின் மிகப்பெரிய வர்த்தக மையம் லண்டன். ப்ளும்பர்க் செய்தியின்படி லண்டனின் பெட்டகங்களில் 800 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள தங்கம் வைக்கப்பட்டுள்ளது.

தங்க விலை, இந்தியாவில் தங்கத்தின் விலை, இன்றைய தங்கத்தின் விலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லண்டன் பெட்டகங்களிலிருந்து பெரிய அளவிலான தங்கம் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குன்றன

உலக தங்க கவுன்சில் அறிக்கை ஒன்றின்படி, உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தற்போது பெரிய அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.

மத்திய வங்கிகள் மூன்றாவது வருடமாக 1000 டன்னுக்கு மேல் தங்கத்தை வாங்கியுள்ளன. 2024-ல் அந்த வங்கிகள் 1,044 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.

2024-ல் அதிகபட்சமாக போலந்து 89.5 டன் தங்கம் வாங்கியிருந்தது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி 72 டன்னுக்கு மேல் தங்கம் வாங்கியது.

மிண்ட் நாளிதழ் செய்தியின்படி, இந்தியாவின் தங்கம் கையிருப்பு 2021ஆம் ஆண்டு 754 டன்னாக இருந்தது. 2024-ல் 876 டன்னாக அதிகரித்தது. இந்தியா அதன் அன்னிய செலாவணியில் 11% மேல் தங்கமாக வைத்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y050k12rko

பிரான்ஸ் ஜனாதிபதியும் பிரித்தானிய பிரதமரும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை - அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்!

3 months 2 weeks ago

பிரான்ஸ் ஜனாதிபதியும் பிரித்தானிய பிரதமரும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை - அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 

அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த அவர், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். 

எனினும் முன்னதாக யுக்ரைன் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்திய டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

யுக்ரைன் ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையே விரிவான மற்றும் நேர்மறையான விவாதங்கள் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் குறிப்பிட்டிருந்தார். 

அண்மையில் யுக்ரைன் ஜனாதிபதியை 'சர்வாதிகாரி" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையில், அவரின் தூதுவர் யுக்ரைன் ஜனாதிபதியை 'தைரியமான தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.hirunews.lk/tamil/397638/பிரான்ஸ்-ஜனாதிபதியும்-பிரித்தானிய-பிரதமரும்-யுக்ரைன்-போரை-முடிவுக்கு-கொண்டு-வர-எதுவும்-செய்யவில்லை-அமெரிக்க-ஜனாதிபதி-விமர்சனம்

பிபிசி புலனாய்வு - மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கத்தின் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம்

3 months 2 weeks ago

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போல் தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி ஐ விசாரணைகள்

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது என்று பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ் எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஒரே மாதிரியான ஆபத்தான கலவையைக் கொண்டுள்ளன.

அதில் டேபெண்டடால் என்ற சக்திவாய்ந்த மருந்துப்பொருள் மற்றும் காரிஸோப்ரோடால் என்ற மிகவும் அடிமையாக்கக்கூடிய தசை தளர்த்தி போன்றவை உள்ளன. மேலும், இது ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துகளை உலகில் வேறு எங்கும் பயன்படுத்த உரிமம் கிடையாது. இது சுவாசக்கோளாறுகள் மற்றும் வலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறியப்படுகின்றது. இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பும் ஏற்படலாம். இத்தனை ஆபத்துகள் இருந்தாலும், இந்த மருந்துப் பொருட்கள் பல்வேறு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளின் தெருக்களில் விற்கப்படும் பிரபலமான போதைப் பொருட்களாக உள்ளன. ஏனென்றால், அவை மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.

கானா, நைஜீரியா, கோட் டிவோயர் போன்ற நாடுகளின் தெருக்களில், ஏவியோ நிறுவனத்தின் முத்திரையிடப்பட்ட பாக்கெட்டுகளில் இம்மருந்துகள் விற்பனைக்குக் கிடைப்பதை பிபிசியின் உலக சேவை கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஏவியோவின் தொழிற்சாலையில் இருந்த போதைப் பொருட்களைக் கண்டறிந்த பிபிசி, ஒருவரை உளவு பார்க்க, ரகசியமாக அந்த தொழிற்சாலைக்குள் அனுப்பியது. அவர், ஆப்பிரிக்க தொழிலதிபராக தன்னைக் காட்டிக்கொண்டு, நைஜீரியாவுக்கு போதை மருந்துகளை விற்க விரும்புவதாகக் கூறினார்.

பிபிசி மேற்கு ஆப்பிரிக்காவின் சந்தையில் கண்ட அதே ஆபத்தான தயாரிப்புகளை, ஏவியோ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வினோத் ஷர்மா எடுத்துக் காட்டும் காட்சிகளை, ஒரு மறைமுக கேமராவைப் பயன்படுத்தி பிபிசி படம் பிடித்தது.

மறைமுகமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், அந்த உளவாளி வினோத் ஷர்மாவிடம், நைஜீரியாவில் "இந்த தயாரிப்பை விரும்பும்" இளைஞர்களிடம் விற்கத் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.

ஷர்மா அதற்கு சிறிதும் சளைக்காமல், "சரி" என பதிலளிக்கிறார்.

பின்னர், இவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், "ஓய்வு கிடைக்கும்" என்றும், அவர்கள் "(போதையின்) உச்ச நிலையை அடையலாம்" என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

சந்திப்பின் முடிவில், "இது ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்" என்று கூறும் ஷர்மா, "இப்போதெல்லாம், இது தான் வியாபாரம்" என்றும் தெரிவித்தார்.

Play video, "ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?", கால அளவு 14,47

14:47

p0kspjch.jpg.webp

காணொளிக் குறிப்பு, ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?

கோடிக்கணக்கான இளைஞர்கள் பாதிப்பு

அந்த தொழிற்சாலையில், கலவை மருந்துகள் நிரப்பப்பட்ட பெரிய பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்றாக, கூரையின் உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

வினோத் ஷர்மா தனது மேசையில், டேபெண்டடால்-காரிஸோப்ரோடால் கலவையுடன் கூடிய மாத்திரை பாக்கெட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். அவற்றுள் மிகவும் பிரபலமான டாஃப்ரோடோல் உட்பட, டிமாகிங் மற்றும் சூப்பர் ராயல்-225 போன்ற பல்வேறு பெயர்களில், அந்த நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.

இந்தத் தொழில், மேற்கு ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, அவர்களின் திறனை அழித்துக்கொண்டிருக்கின்றது.

கானாவின் வடக்கு பகுதியிலுள்ள டமாலே நகரத்தில், பல இளைஞர்கள் சட்டவிரோத மருந்துப் பொருட்களை எடுத்துக்கொள்வதால், அந்த நகரின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அல்ஹசன் மஹாம், உள்ளூரைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொண்ட தன்னார்வக்குழுவை உருவாக்கியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களை தேடித் பிடித்து, இந்த மாத்திரைகளை வீதிகளிலிருந்து அகற்றுவது அவர்களது முக்கியப் பணியாக உள்ளது.

"நெருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ, அதேபோல இந்த ஓபியாய்டுகள், அவற்றை தவறாக பயன்படுத்துபவர்களின் புத்திசாலித்தனத்தை அழிக்கின்றன" என்று மஹாம் தெரிவித்தார்.

"இவை எங்களுடைய வாழ்க்கையையே வீணடித்துவிட்டன" என்று டமாலேயில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் அதை இன்னும் எளிமையாகக் கூறுகிறார்.

இருசக்கர வாகனங்களில் ஏறிச் சென்ற அந்த தன்னார்வக் குழுவினரை, பிபிசியின் குழு பின்தொடர்ந்து சென்றது.

ஒரு போதைப்பொருள் ஒப்பந்தத்தைப் பற்றி தகவல் கிடைத்த நிலையில், டமாலேயின் மிகவும் ஏழ்மையான பகுதியில் சோதனை தொடங்கியது.

அவர்கள் செல்லும் வழியில், ஒரு இளைஞர் மயக்கத்தில் சரிந்து கிடந்தார். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அவர் இந்த மருந்துகளை உட்கொண்டிருந்தார் என அறியப்படுகின்றது.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, டமாலேயில் உள்ள அந்த தன்னார்வ குழுவினர், அந்த இளைஞர் டாஃப்ரோடால் மாத்திரைகளை எடுத்திருக்கக்கூடும் எனக் கருதினர். சோதனையில் அந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன

அந்த வியாபாரி பிடிபட்டபோது, அவர் டாஃப்ரோடால் என்று பெயரிடப்பட்ட பச்சை மாத்திரைகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்றார். பாக்கெட்டுகளில் ஏவியோ மருந்து நிறுவனத்தின் தனித்துவமான முத்திரை அச்சிடப்பட்டிருந்தது.

ஏவியோவின் மாத்திரைகள் டமாலேயில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் பெருந்துயரத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதேபோன்ற ஏவியோ நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் கானாவின் வேறு இடங்களில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதை பிபிசி கண்டறிந்தது.

நைஜீரியா மற்றும் கோட் டிவோயர் தெருக்களிலும் ஏவியோ நிறுவனத்தின் மாத்திரைகள் விற்பனைக்கு உள்ளன என்பதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். போதையின் உச்ச நிலையை அடைவதற்காக, அங்குள்ள இளைஞர்கள் அவற்றை மதுபானத்தில் கலந்து குடிக்கிறார்கள்.

ஏவியோ மருந்து நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனமான வெஸ்ட்ஃபின் இன்டர்நேஷனல் ஆகியவை, கோடிக்கணக்கான இந்த மாத்திரைகளை கானா மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகின்றன என்று பொதுத்தளத்தில் கிடைக்கும் ஏற்றுமதி தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

22.5 கோடி மக்கள்தொகை கொண்ட நைஜீரியா இந்த மாத்திரைகளுக்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. நைஜீரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, சுமார் 40 லட்சம் நைஜீரியர்கள் சில வகையான போதை மருந்துகளை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறியப்படுகின்றது.

நைஜீரியாவின் போதைப்பொருள் மற்றும் சட்ட அமலாக்க முகமையின் (NDLEA) தலைவர் பிரிக் ஜெனரல் முகமது புபா மார்வா, "இந்த வலி நிவாரணி மருந்துகள் (ஓபியாய்டுகள்) எங்கள் இளைஞர்களையும், எங்கள் குடும்பங்களையும் அழித்துவிட்டன, நைஜீரியாவின் ஒவ்வொரு சமூகத்திலும் இது புகுந்துவிட்டது" என்று பிபிசியிடம் கூறினார்.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, கானாவின் டமாலேயில் நடந்த சோதனையில், ஏவியோ நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட டாஃப்ரோடால் மாத்திரை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன

டிரமடாலுக்கு மாற்றாக வந்த மாத்திரைகள்

2018 ஆம் ஆண்டில், இந்த வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்வது குறித்து 'பிபிசி ஆப்பிரிக்கா ஐ' மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, தெருவில் போதை மருந்துகளாக விற்பனையாகி, பரவலாகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான டிரமடாலை நைஜீரிய அதிகாரிகள் கட்டுப்படுத்த முயன்றனர்.

மருந்துச் சீட்டு இல்லாமல் டிரமடாலை விற்பனை செய்வதை அரசாங்கம் தடை செய்தது. மேலும், மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான உச்சவரம்பின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனையடுத்து, சட்டவிரோத மாத்திரைகளின் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்தியது. அதே நேரத்தில், இந்திய அதிகாரிகள் டிரமடாலின் ஏற்றுமதி விதிமுறைகளை கடுமையாக்கினர்.

இந்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, வெகு விரைவாகவே ஏவியோ மருந்து உற்பத்தி நிறுவனம், தசை-தளர்ச்சி மருந்தான காரிஸோப்ரொடாலுடன் கலந்து, டேபண்டடால் அடிப்படையிலான இன்னும் வலிமையான புதிய மருந்துப்பொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

போதை மாத்திரைகளை ஏற்றுமதி செய்வோர், இந்த புதிய கலவை மாத்திரைகளை டிரமடாலுக்கு மாற்றாகவும், கடுமையான கண்காணிப்பை தவிர்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாக மேற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

தனது தொழிற்சாலையில் பணிபுரியும் 'விஞ்ஞானிகளால்' வெவ்வேறு மருந்துகளை ஒன்றிணைத்து 'ஒரு புதிய தயாரிப்பை' உருவாக்க முடியும் என்று வினோத் சர்மா பிபிசியின் ரகசிய கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்.

ஓபியாய்டு மருந்துகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஏவியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய மாத்திரைகள், முந்தைய டிரமடாலுக்கு மாற்றாக வந்தவையாக இருந்தாலும், இன்னும் அதிக ஆபத்தானவையாக உள்ளன.

இந்தியாவின் பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் லேகன்ஷ் ஷுக்லா கூறுகையில், ஆழ்ந்த உறக்க நிலை உட்பட, "ஒரு வலி நிவாரண மாத்திரை அளிக்கும் விளைவுகளை, டேபண்டடால் தருகிறது" என்றார்.

"அது ஒருவரை மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு ஆழ்ந்த உறக்கத்துக்குக் கொண்டுசெல்லலாம். இதுதான் அந்த வலி நிவாரணி மாத்திரையை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்தான நிலை," என்று அவர் விளக்கினார்.

"அத்துடன், இன்னொரு பொருளான காரிஸோப்ரோடால் சேர்க்கப்படுகிறது, இது ஆழ்ந்த உறக்கத்தையும், தளர்வையும் அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான கலவையாகத் தெரிகிறது." என்றார்.

காரிஸோப்ரோடால் ஒருவரை அடிமைப்படுத்தக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது என்பதால் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மூன்று வாரங்கள் வரை என்ற குறுகிய காலத்துக்கு மட்டுமே அதனை பயன்படுத்த அனுமதி உள்ளது.

இதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகளில், கவலை, உறக்கமின்மை மற்றும் மாயத்தோற்றங்கள் தென்படுவது போன்றவை அடங்கும்.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, நைஜீரிய அதிகாரிகள் தாங்கள் கைப்பற்றிய சட்டவிரோத மருந்துகளை, பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை, லாகோஸில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைத்துள்ளனர்

டேபண்டடால் உடன் சேர்க்கப்படும்போது, சாதாரண வலி நிவாரண மருந்துகளைக் காட்டிலும், அந்த மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகள் இன்னும் 'கடுமையானவையாக' இருக்கின்றன. இது "மிகுந்த வேதனை தரும் அனுபவமாக இருக்கும்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த கலவையின் செயல்திறனைப் பற்றி மனிதர்களிடத்தில் நடத்தப்பட்டுள்ள எந்த சோதனை குறித்தும் தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் கூறினார்.

மேலும், வரையறுக்கப்பட்ட அளவுகளில் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதி உள்ள டிரமடாலைப் போன்றில்லாமல், டேபண்டடால்-காரிஸோப்ரோடால், "சரியான மருந்து சேர்க்கையாகத் தோன்றவில்லை" என்றார்.

"இந்த கலவையை எங்கள் நாட்டில் பயன்படுத்துவதற்கு உரிமமும் இல்லை" என்றும் தெரிவித்தார்.

மருந்துகளை ஏற்றுமதி செய்ய விரும்பும் நாட்டின் தர நிலைகளை பூர்த்தி செய்யாவிட்டால், மருந்து நிறுவனங்களால் இந்தியாவில் அவற்றை சட்டபூர்வமாகத் தயாரித்து, ஏற்றுமதி செய்ய முடியாது.

ஏவியோ நிறுவனம், கானாவுக்கு டேபண்டடால் மற்றும் அதற்கு இணையான தயாரிப்புகளை அனுப்புகிறது.

கானா தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தகவலின் படி, டேபண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் கலவையுடன் கூடிய இந்த மருந்து அங்கு அங்கீகரிக்கப்படாததும் சட்டவிரோதமானதும் ஆகும்.

எனவே, டாஃப்ரோடாலை கானாவுக்கு அனுப்புவதன் மூலம், ஏவியோ நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை வினோத் சர்மாவிடமும், ஏவியோ மருந்து நிறுவனத்திடமும் நாங்கள் முன்வைத்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.

உலகளாவிய பொது சுகாதாரத்துக்கான அதன் பொறுப்பை இந்திய அரசு அங்கீகரிப்பதாகவும், இந்தியா ஒரு பொறுப்பான மற்றும் வலுவான மருந்து ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எங்களிடம் தெரிவித்தது.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதிகள் கவனத்துடன் கண்காணிக்கப்படுகின்றன என்றும், சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், இந்தியாவின் முயற்சிகளை ஆதரிக்க, இறக்குமதி செய்யும் நாடுகளும் வலுவான கட்டுப்பாட்டு அமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுடன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதாகவும், தவறுகளைத் தடுக்கும் நோக்கில் அவற்றுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் எந்த மருந்து நிறுவனத்தின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, டமாலே நகரில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட, ஏவியோ நிறுவனம் தயாரித்த டாஃப்ரோடால் உள்ளிட்ட போதை மருந்துகளை கானாவின் தன்னார்வக் குழு எரித்து அழித்தது

உரிமம் இல்லாத வலி நிவாரண மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரே இந்திய நிறுவனம் ஏவியோ மட்டும் அல்ல.

மற்ற மருந்து நிறுவனங்கள் இதே போன்ற மருந்துகளை உற்பத்தி செய்வதையும், வெவ்வேறு பெயர்களில் இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன என்பதையும் பொதுத்தளத்தில் கிடைக்கும் ஏற்றுமதித் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் உயர்தர பொது மருந்துகளையும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய தடுப்பூசிகளையும் தயாரிக்கின்ற, வேகமாக வளர்ந்து வரும் இந்திய மருந்துத் துறையின் நற்பெயரை இந்த உற்பத்தியாளர்கள் சேதப்படுத்துகின்றனர்.

மேலும் இந்த தொழில்துறையின் ஏற்றுமதிகள் வருடத்துக்கு குறைந்தது 28 பில்லியன் டாலர்கள் (22 பில்லியன் யூரோ) மதிப்புடையவை என்றும் அறியப்படுகின்றது.

அந்த தொழிற்சாலைக்குள் ரகசியமாக சென்றவர் (பாதுகாப்புக்காக அவருடைய அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது), ஷர்மாவுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், "நைஜீரிய செய்தியாளர்கள் இந்த வலி நிவாரண மருந்துப் பொருட்களின் நெருக்கடியைப் பற்றி 20 ஆண்டுகளாக செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இறுதியாக, ஆப்பிரிக்காவில் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மூல காரணமாக உள்ள ஒருவரை, இவற்றைத் தயாரித்து, கப்பலில் எங்கள் நாடுகளுக்கு சரக்குப் பெட்டகங்களில் அனுப்பும் ஒருவரை, நேருக்கு நேர் சந்தித்தேன். இது எவ்வளவு கேடு விளைவிக்கிறது என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால், அவருக்கு எந்த கவலையும் இல்லாதது போல் காட்சியளித்தார். இதை வெறும் 'தொழில்' என விவரித்தார்" என்கிறார்.

கானாவின் டமாலே நகரத்தில், பிபிசியின் குழு உள்ளூர் பணிக்குழுவுடன் சேர்ந்து இறுதியாக ஒரு சோதனை மேற்கொண்டது. அப்போது இன்னும் அதிகளவிலான ஏவியோ நிறுவனத்தின் டாஃப்ரோடால் மருந்துகள் கைப்பற்றப்பட்டன. அன்று மாலை, அவர்கள் பறிமுதல் செய்த அந்த போதைப்பொருட்களை எரிக்க உள்ளூர் பூங்காவில் கூடினார்கள்.

"அனைவரும் பார்க்கும்படி திறந்த வெளியில் நாங்கள் அதை எரிக்கிறோம்," என்று தலைவர்களில் ஒருவரான ஜிக்கே கூறினார்.

அவற்றைப் பெட்ரோலில் ஊறவிட்டு தீ வைத்துவிட்டு, தொடர்ந்து பேசிய அவர், "எனவே, இது விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் வழங்கப்படும் ஒரு எச்சரிக்கை. நீங்கள் பிடிபட்டால், உங்கள் மருந்துகளை எரிப்போம்" என்றார்.

ஆனால், தீப்பிழம்புகள் சில நூறு டாஃப்ரோடால் பாக்கெட்டுகளை அழித்தபோதும், இந்த விநியோகச் சங்கிலியின் உயர் நிலையில் உள்ள 'விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்களும்' ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இந்தியாவில் இருந்துகொண்டு இன்னும் கோடிக்கணக்கான மருந்துகளை உற்பத்தி செய்து, மனிதர்கள் அடையும் பெருந்துன்பத்தின் மூலம் லாபம் அடைந்து பணக்காரர்களாகிக் கொண்டிருப்பர்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyged5nyv9o

இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

3 months 2 weeks ago

இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

21 Feb, 2025 | 12:00 PM

image

இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

GkRbMa_bAAEYUC9.jpg

இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு பாலஸ்தீன எழுச்சியின் போது இவ்வாறான  பேருந்து குண்டுவெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வேறு இரண்டு பேருந்துகளில் காணப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

GkRa4rHW0AAN8fs.jpg

ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரியானவையாக குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் காணப்பட்டன  என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெல்அவிக்கு வெளியே உள்ள பகுதியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

பயணத்தை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலேயே வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/207277

உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க விசேட பிரதிநிதி இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடு இறுதிநிமிடத்தில் இரத்து

3 months 2 weeks ago

உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க விசேட பிரதிநிதி இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடு இறுதிநிமிடத்தில் இரத்து

21 Feb, 2025 | 12:54 PM

image

மூன்று வருடகால ரஸ்ய உக்ரைன் யுத்தத்தை எவ்வாறு முடிவிற்கொண்டுவருவது என்பது குறித்த அரசியல் பதற்றம் தீவிரமடைகின்ற அதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் உக்ரைன்ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இடம்பெறவிருந்த செய்தியாளர் மாநாடு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி கெய்தகெலொக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடே இரத்துசெய்யப்பட்டுள்ளது.

இறுதியில் இருவரும் இணைந்து புகைப்படம் மாத்திரம் எடுத்துக்கொண்டனர்.

அவர்கள் அறிக்கைகளை வெளியிடவில்லை கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை.

அமெரிக்க தரப்பினரே செய்தியாளர் மாநாட்டினை இரத்துச்செய்யுமாறு கேட்டனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உக்ரைனின் கனிமங்களை  அமெரிக்கா பயன்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மீண்டும் ஈடுபடவேண்டு;ம் என வேண்டுகோள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அவமதிக்கும் வார்த்தைகளை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்து வெள்ளை மாளிகை ஏமாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆதரவிற்கான இழப்பீடாக அல்லது பரஸ்பர உதவிக்காக உக்ரைன் தனது அரிய கனிமங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் உக்ரைனிற்கு மிகச்சிறந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கினோம்,என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/207283

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்!

3 months 2 weeks ago

New-Project-304.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது.

வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பிற அரசாங்க ஊழியர்களை குறிவைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெருமளவிலான ஆட்குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியே இந்த பணிநீக்கம் ஆகும்.

ட்ரம்பின் மிகப்பெரிய பிரச்சார நன்கொடையாளரான தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க் இந்த முயற்சியை வழிநடத்துகிறார்.

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் நாடு முழுவதும் சுமார் 100,000 கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி பைடன் நிர்வாகம் $80 பில்லியன் முதலீட்டில் அமலாக்கத்தை மேம்படுத்தி ஏஜென்சியை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டது.

ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் அதன் அதிகாரங்களை கட்டுப்படுத்த விரும்புகிறார்

உள்நாட்டு வருவாய் சேவை செய்தி தொடர்பாளர் பணிநீக்கங்களுக்கான சரியான எண்ணிக்கையை வழங்க மறுத்துவிட்டது.

எனினும், இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, பணிநீக்கங்கள் மொத்தம் 6,700 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பைடனின் கீழ் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பணியமர்த்தப்பட்ட ஏஜென்சியில் பணிபுரியும் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

2021 இல் பைடன் பதவியேற்பதற்கு முன்பு இருந்த 80,000 பேருடன் ஒப்பிடும்போது, வரி ஏஜென்சி இப்போது தோராயமாக 100,000 பேரை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Athavan News
No image previewஅமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீ...
அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞ...

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்!

3 months 2 weeks ago

New-Project-298.jpg?resize=750%2C375&ssl

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்!

மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.

சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி,

தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியாங்சு மாகாணத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் தகவலை மேற்கொள்காட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, மூன்று நாடுகளின் சட்ட அமலாக்க அதிகாரிகள் சமீபத்தில் மியாவாடியில் தொலைத்தொடர்பு மோசடிக்கு எதிராக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1422394

பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்!

3 months 2 weeks ago

New-Project-296.jpg?resize=750%2C375&ssl

பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்!

காசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் கைக்குழந்தை உட்பட அவரது மகன்களான ஏரியல் மற்றும் கஃபிர் காசாவில் பணயக்கைதிகளான சிறைபிடிக்கப்பட்டிருந்த போது இறந்து விட்டனர் என்று செய்தி இஸ்ரேலில் சோகத்தில் ஆழ்த்தியது.

தடயவியல் சான்றுகள், உளவுத்துறை தகவலின்படி, இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2023 இல் பயங்கரவாதிகளால் “கொடூரமாக கொல்லப்பட்டனர்” இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது.

அவர்கள் கொல்லப்படும் போது ஏரியலு 4 வயது, கஃபிர் 10 மாதங்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மீதமுள்ள பணயக்கைதிகளுடன் அவரது உடலையும் இஸ்ரேல் திரும்பக் கோரியது.

வியாழன் அன்று ஹமாஸால் இஸ்ரேலுக்குக் அவர்களில் உடல்களை திருப்பிய அனுப்பிய பின்னர் ஷிரி பிபாஸின் இரு மகன்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஷிரியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது.

ஆனால், அவர்களின் தாயார் ஷிரி என்று கூறப்படும் மூன்றாவது உடல் எந்த பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை மற்றும் அடையாளம் காணப்படவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

அபு கபீர் தடயவியல் நிறுவனத்தில் உள்ள நிபுணர்களால் நான்காவது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை (21) அதிகாலை அறிவித்தது.

இது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தீவிர ஒப்பந்த மீறல் ஆகும் என ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப ஒப்பந்தத்தின் கீழ் கடமைப்பட்டுள்ளகவும் கூறியது.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து, இஸ்ரேல் முழுவதும் கோபத்தையும் துக்கத்தையும் ஏற்கனவே தூண்டியிருந்த நிலையில், உடல்கள் திரும்பப் பெற்ற பின்னர் அதிர்ச்சிகரமான இந்த அறிக்கை வந்தது.

எனினும், ஹமாஸிடம் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

https://athavannews.com/2025/1422378

எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் - அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் - சல்மான் ருஸ்டி

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN

19 FEB, 2025 | 03:07 PM

image

அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றார் என குற்றம்சாட்டியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா என்ற கேள்விக்கு எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு ஊறு விளைவிக்கின்றார் என சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.

தீவிர வலதுசாரிகளிற்கு சார்பாக கருத்துருவாக்கத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளார் என சல்மான் ருஸ்டி கருத்துசுதந்திரத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டே எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதாக தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை, அவரது சமூக வலையமைப்பு தீவிரவலதுசாரிகளிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சல்மான் ருஸ்டி, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் உன்னதமான பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துக்கொண்டே அதற்கு எதிராக செயற்படுவது நேர்மையற்ற விடயம், செவ்வாய்கிரகத்திற்கு செல்லும் முதல் மனிதனாக எலான்  மஸ்க் விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் - அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் - சல்மான் ருஸ்டி

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு!

3 months 2 weeks ago

New-Project-287.jpg?resize=750%2C375&ssl

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு!

இந்த வாரம் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் புதன்கிழமை (19) அறிவித்துள்ளது.

எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் டெல்டாவிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சலுகையைப் பெற்றால், அது விமான நிறுவனத்துக்கு மொத்தம் $2.3 மில்லியனுக்கும் மேலான செலவாக அமையும்.

கடந்த திங்களன்று (19) அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டாவில் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், டொராண்டோவின் பிரதான விமான நிலையத்தில் தரையிரங்கும் போது, ஓடுபாதையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது, விமாணத்தில் 76 பயணிகளும், நான்கு பணியாளர்களும் இருந்தனர்.

விபத்தில் உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை, எனினும், 21 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

புதன்கிழமை காலை நிலவரப்படி ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தற்சமயம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்டா தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1422280

Checked
Thu, 06/12/2025 - 11:09
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe