உலக நடப்பு

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்

2 months 1 week ago

Nov 2, 2025 - 08:18 AM

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. 

தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். 

கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் மூடியுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmhh436c301c7o29ng88tb3uv

80 வயது மூதாட்டியை தீவிலேயே விட்டு புறப்பட்ட சுற்றுலா கப்பல் - இறுதியில் நடந்தது என்ன?

2 months 1 week ago

சுற்றுலா கப்பல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • லானா லாம்

  • பிபிசி செய்தியாளர்

  • 42 நிமிடங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள்' பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.

"சுசான் ரீஸின் துயர மரணம் மற்றும் அதற்கு முன்னர் கப்பலில் கண்டறியப்பட்ட இயந்திர சிக்கல்கள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோரல் அட்வென்ச்சர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விஷயம் புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது" என கப்பல் நிறுனவனமான கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஃபைஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

"பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், தனி விமானங்கள் மூலம் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான பணிகளை கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருவதாகவும்" அவர் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளார்.

பயணக் கப்பல்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, சுசான் ரீஸ்

என்ன நடந்தது?

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) கிரேட் பேரியர் ரீஃபில் உள்ள லிசார்ட் தீவில் உயிரிழந்த நிலையில் சுசான் ரீஸ்-இன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையன்று, அவர் தனது சக பயணிகளுடன் தீவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு கப்பல் புறப்பட்டபோது அதில் அவர் இல்லை என்பதை யாரும் அறியவில்லை.

கோரல் அட்வென்ச்சர் கப்பல், தீவில் இருந்து கிளம்பும்போது "என் அம்மா இல்லாமல் கிளம்பியது என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக" உயிரிழந்தவரின் மகளான கேத்தரின் ரீஸ் கூறியுள்ளார்.

தனது தாய் சுறுசுறுப்பானவர், ஆரோக்கியமானவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர் மற்றும் காட்டுப்பகுதிகளில் நடப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று அவர் விவரித்தார்.

"எங்களுக்குச் சொல்லப்பட்ட சில விஷயங்களிலிருந்து, கவனக்குறைவு மற்றும் அடிப்படை அறிவு இல்லாததே இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது," என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Coral Expeditions

ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க 60 நாள் பயணமாக கோரல் அட்வென்ச்சர் கப்பல் இந்த வார தொடக்கத்தில் கெய்ர்ன்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. இதில் பயணித்த நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த சுசான் ரீஸ், இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தமான லிசார்ட் தீவில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று தெரிகிறது.

பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள், ஒரு நாள் பயணத்திற்காக பிரத்யேக தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு மலையேற்றம் அல்லது ஸ்நோர்கெல்லிங் என இரண்டு விருப்பத்தெரிவுகள் இருந்தன.

தீவின் மிக உயரமான சிகரமான குக்ஸ் லுக்கிற்கு சுசான் நடந்து செல்ல முடிவு செய்து மலையேற்றக் குழுவில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் குழுவிடமிருந்து பிரியும் சூழல் ஏற்பட்டது.

பயணக் கப்பல்

"காவல்துறை அளித்த தகவலில் இருந்து நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அன்று வெப்பம் அதிகமாக இருந்துள்ளது, மலை ஏறும் போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது," என்று கேத்தரின் கூறினார்.

"அவரை தனியாக கீழே செல்லும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் கப்பல் கிளம்பும்போதும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல், அம்மாவை விட்டுவிட்டு சென்றுள்ளனர்."

"இதில் ஏதோ ஒரு கட்டத்தில், அல்லது பிறரிடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, தனியாக இருந்த அம்மா இறந்துவிட்டார்."

"அம்மாவின் உயிரைக் காப்பாற்ற நிறுவனம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் தெரியவரும்" என்று நம்புவதாக கேத்ரின் கூறினார்.

ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம்(Amsa), இந்த மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு காணாமல் போன மூதாட்டி குறித்து கப்பலின் கேப்டன் முதலில் தகவல் தெரிவித்ததாக Amsa செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த சில மணி நேரத்தில், பயணியைத் தேடி தேடல் குழு ஒன்று தீவுக்குத் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடும் முயற்சிகள் நிறுத்தப்பட்டாலும், பின்னர் ஒரு ஹெலிகாப்டர் திரும்பி வந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுசானே ரீஸ்-இன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பேசிய, கோரல் எக்ஸ்பெடிஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஃபிஃபீல்ட், "சுசானே ரீஸ்-இன் மரணத்திற்கு நிறுவனம் 'மிகவும் வருந்துவதாகவும்', ரீஸ் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும்" கூறினார்.

"குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம், அவர்களின் விசாரணைக்கு உதவுகிறோம். விசாரணை முடியும் வரை நாங்கள் எந்தவிதக் கருத்துகளையும் கூற முடியாது" என்று மார்க் ஃபிஃபீல்ட் கூறினார்.

நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கோரல் அட்வென்ச்சர் கப்பல் 46 பணியாளர்களுடன் 120 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள தொலைதூரப் பகுதிகளை அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் பகல்நேர சுற்றுலாக்களுக்காக பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் 'டெண்டர்ஸ்' எனப்படும் சிறிய படகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும், மேலும் பயணக் கப்பல்களில் எந்தப் பயணிகள் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் அமைப்புகள் உள்ளன என்றும் பயண வலைத்தளமான செய்ல்அவேஸ்-இன் (Sailawaze) 'க்ரூஸ்' பிரிவு ஆசிரியர் ஹாரியட் மாலின்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பயணக் கப்பல் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தற்போது நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என்றாலும், இது அரிதான நிகழ்வாகும்" என்று மாலின்சன் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp85jk2znvno

தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !

2 months 1 week ago

தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !

01 Nov, 2025 | 01:49 PM

image

தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 பேரும், மவான்ஸா (Mwanza) நகரில் 200-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டதாகவும், பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை சுமார் 700 ஆக இருக்கலாம் என்றும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அவர்கள் இந்த உயிரிழப்பு விவரங்களை வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் மூலமாகக் கட்சி உறுப்பினர்களின் வலையமைப்பு மூலம் சேகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும், மொத்த எண்ணிக்கை 700 முதல் 800 வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகமும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகள் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டனர். இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்த தகவல்களைச் சரிபார்க்க முடியாத அளவிற்கு நாடு முழுவதும் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் தகவல் சரிபார்ப்பை கடினமாக்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/229225

நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?

2 months 1 week ago

இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?

பாராட்டுகளை பெற்ற கடல்சார் பெண் சிங்கத்தின் புகைப்படம்

பட மூலாதாரம், Griet Van Malderen

கட்டுரை தகவல்

  • இசபெல் கெர்ரெட்சன்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.

அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன.

நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று.

அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது.

"அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார்.

மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன.

அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது.

'எல்லாமே ஒரு போராட்டம்தான்'

"இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென்.

"இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்."

காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.

மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார்.

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார்.

'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை'

இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார்.

"பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.

மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார்.

அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்."

பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார்.

"இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன."

இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது.

"ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன."

நமீபியாவின் கடல்சார் சிங்கம்

பட மூலாதாரம், Griet Van Malderen

படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக உள்ளன

மீண்டும் கடற்கரைக்கு பயணம்

2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின.

"கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது."

பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது."

2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்."

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.

ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது.

"இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர்.

இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9v1dkp7793o

சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

2 months 1 week ago

சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

October 31, 2025 11:09 am

சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது.

ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றதோடு, ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க சீ ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.”ஃபெண்டானில் நிலைமையை கவனித்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்திருக்கிறது.

அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என நான் நம்புகிறேன். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைத்துள்ளேன். இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47 சதவீதமாக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கான ஒப்பந்தம்.

எனினும், இந்த ஒப்பந்தம் தொடரும் என நம்புகிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் மீண்டும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம்.நான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு சீன அதிபர் சீ ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய புவி கனிய மணல்கள் குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது.

அது உலகத்துக்கானது. தாய்வான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம். இதில், ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது குறித்து நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம். சீ ஜின்பிங் எங்களுக்கு உதவப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://oruvan.com/us-reduces-import-tariffs-on-china-by-10-percent/

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

2 months 1 week ago

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

October 31, 2025

அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

“பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்து ஆண்டுகளில் நாம் சமமாக இருப்போம்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்கள் அபாரமான அழிக்கும் சக்தியை கொண்டுள்ளன என்று அங்கீகரிக்கும் டிரம்ப், ஆயுதங்களை மேம்படுத்துவதை தவிர தனக்கு “வேறு வழியில்லை” என்றும் கூறியுள்ளார்.

https://www.ilakku.org/trump-orders-immediate-testing-of-us-nuclear-weapons/

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…

2 months 1 week ago

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…

October 31, 2025

சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.

https://www.ilakku.org/சூடானில்-மருத்துவமனை-மீத/

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்!

2 months 1 week ago

New-Project-347.jpg?resize=750%2C375&ssl

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! 

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். 

பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின்றனர்.

இது தொடர்பில் வியாழக்கிழமை (30) பிற்பகுதியில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆண்ட்ரூ தனது ரோயல் லோட்ஜ் என்ற மாளிகையை விட்டுக்கொடுக்க முறையான அறிவிப்பு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்குச் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஆண்ட்ரூ இளவரசராக அல்லாமல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

மன்னர் சார்லஸின் இந்த முடிவினை அவரது குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மேலும் பல கேள்விகளை எதிர்கொண்ட பிறகு, ஆண்ட்ரூ இந்த மாத தொடக்கத்தில் யார்க் டியூக் உட்பட தனது பிற அரச பட்டங்களை கைவிட்டார்.

ஆண்ட்ரூ ஒரு காலத்தில் ஒரு துணிச்சலான கடற்படை அதிகாரியாகக் கருதப்பட்டார் மற்றும் 1980களின் முற்பகுதியில் அர்ஜென்டினாவுடனான பால்க்லாந்து போரின் போது இராணுவத்தில் பணியாற்றினார்.

ஆனால் அவர் 2011 இல் இங்கிலாந்து வர்த்தக தூதர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2019 இல் அனைத்து அரச கடமைகளையும் இராஜினாமா செய்தார், பின்னர் 2022 இல் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவரது இராணுவ தொடர்புகள் மற்றும் அரச ஆதரவுகள் பறிக்கப்பட்டன, அதை அவர் எப்போதும் மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451614

அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை

2 months 1 week ago

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்.

மெல்போர்ன் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி

மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை | Sri Lanka Thero Arrested In Australia

1994 மற்றும் 2002 க்கு இடையிலான காலப்பகுதுியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக இன்றையதினம் கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.

வயதான தேரரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான அனைத்து சிறுவர்களும் விகாரையில் சமய நெறி கற்க சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியாக துன்பம்

16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை | Sri Lanka Thero Arrested In Australia

தேரர் பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியை துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tamilwin
No image previewஅவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை - தமிழ்வின்
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அட...

தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு!

2 months 1 week ago

New-Project-336.jpg?resize=750%2C375&ssl

வர்த்தகப் போருக்கு மத்தியில் தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு!

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார்.

தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும்.

அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது.

சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய ட்ரம்ப், நாங்கள் மிகவும் வெற்றிகரமான சந்திப்பை நடத்தப் போகிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இன்று நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று கூறினார்.

பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அவர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் அமர்ந்தபோது, உலகின் இரண்டு முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்படுவது இயல்பானது என்று ஜி ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் ட்ரம்பிடம் கூறினார்.

மேலும், சீனா-அமெரிக்க உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தொடர்ந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, இரு நாடுகளுக்கான வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒருவருக்கொருவர் முதன்மை கசப்பான விடயங்களை நிவர்த்தி செய்வதில் அடிப்படை ஒருமித்த கருத்தை எட்டினர்.

இந்த முன்னேற்றத்தினால், உலகளாவிய வணிகத்தை உலுக்கிய வர்த்தக பதட்டங்கள் தணியும் என்று முதலீட்டாளர்கள் நம்பியதால், டொலருக்கு எதிராக சீனாவின் யுவான் நாணயம் கிட்டத்தட்ட ஒரு வருட உச்சத்தை எட்டியது. 

வால் ஸ்ட்ரீட் முதல் டோக்கியோ வரையிலான உலக பங்குச் சந்தைகள் அண்மைய நாட்களில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளன.

ஆனால் இரு நாடுகளும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டித் துறைகளில் கடுமையாக விளையாடத் தயாராக இருப்பதால், எந்தவொரு வர்த்தகத் தடையும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன.

சீனா ஆதிக்கம் செலுத்தும் துறையான உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு அவசியமான அரிய-பூமி தாதுக்களின் ஏற்றுமதியில் பெய்ஜிங் வியத்தகு முறையில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த முன்மொழிந்ததைத் தொடர்ந்து இந்த மாதம் வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியது.

சீன ஏற்றுமதிகள் மீது கூடுதலாக 100% வரிகள் விதிப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாகவும், அமெரிக்க மென்பொருளைப் பயன்படுத்தி சீனாவுக்கான ஏற்றுமதிகளில் தடைகள் விதிக்கப்படுவது உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றியிருக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் சபதம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451575

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு!

2 months 1 week ago

download-28.jpg?resize=275%2C183&ssl=1

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு!

போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் மோதல் முற்றியுள்ளது.

இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது.

பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது.

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1451511

மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி

2 months 1 week ago

மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி

29 October 2025

1761709247_4660666_hirunews.jpg

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களை ஹமாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டமைக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போர் நிறுத்தத்துக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் உபகரணப் பற்றாக்குறையால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சப்ரா மற்றும் கான் யூனிஸ் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் உள்ள பணயக்கைதிகளைத் திருப்பி அளிக்கும் முதல் கட்ட ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதில் ஹமாஸ் விதிமுறைகளை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் பணயக்கைதிகள் விவகாரத்தில் பதற்றம் நீடிக்கிறது.

https://hirunews.lk/tm/427873/war-breaks-out-again-33-palestinians-killed-in-israeli-attack

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

2 months 1 week ago

New-Project-323.jpg?resize=750%2C375&ssl

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது.

அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது.

மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.

கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. 

பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது.

"Witness the raw power of nature as a U.S. Air Force pilot navigates through the eye wall of Hurricane Melissa, a Category 5 storm with 185 mph winds sweeping across Jamaica, Haiti, and the Dominican Republic. The accompanying image captures the storm's mesmerizing eye, where life persists amidst the chaos. #HurricaneMelissa #ClimateCrisis #NatureUnleashed"

Image

செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது. 

இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451468

இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!

2 months 1 week ago

f41732c0-b397-11f0-ba75-093eca1ac29b.jpg

இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது.

இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது.

உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அகதிகளை விடுதிகளில் தங்க வைக்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இதேவேளை, விடுதிகள் வழியாக தங்குமிடம் வழங்கும் திட்டம், அரசுக்கு பல பில்லியன் பவுண்டுகள் இழப்பை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451369

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்

2 months 1 week ago

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்

28 Oct, 2025 | 10:27 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாயவாதி ஸ்டீவ் பானனின் அரசியலமைப்பிற்கு முரணாக மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என்ற சமீபத்திய பரிந்துரை தொடர்பில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளன” என தெரிவித்தார்.

எனினும், மீண்டும் போட்டியிடுவது பற்றி "உண்மையில் யோசிக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/228866

தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: மத்தியஸ்தம் செய்த ட்ரம்ப்

2 months 1 week ago

Published By: Digital Desk 1

27 Oct, 2025 | 02:13 PM

image

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினையால் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் (ASEAN Summit) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.இரு நாட்டுப் படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், எல்லைப் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றனர்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர முதலில் மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது. எனினும், மோதல் தொடர்ந்து நீடித்ததால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதில் நேரடியாகத் தலையிட்டு இரு நாட்டுத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில்  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கம்போடிய பிரதமர் {ஹன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கம்போடிய பிரதமர் {ஹன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கிலோமீற்றர் நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகளை உடனடியாக ஆரம்பித்துள்ளன.

அமைதி ஒப்பந்தத்துடன் சேர்த்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிராந்தியத்தில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் சில முக்கிய பொருளாதார ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.

மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தம் (Critical Minerals Deal) ஆகியவற்றில் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும், கம்போடியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தம் ஆகியவற்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

WhatsApp_Image_2025-10-27_at_13.36.40.jp

https://www.virakesari.lk/article/228783

வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!

2 months 1 week ago

New-Project-274.jpg?resize=750%2C375&ssl

வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!

அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன.

இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க வரிகளை அதிகரிப்பதையும் சீன அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் இடைநிறுத்துவதையும் நோக்காக்க கொண்டுள்ளது.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த பேச்சுவார்த்தைகள், நவம்பர் 1 முதல் சீன இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் 100% வரிகளின் அச்சுறுத்தலை நீக்கியதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். 

சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் கவனமாக இருந்தனர், மேலும் சந்திப்புகளின் முடிவுகள் குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (30) ட்ரம்பும் ஜியும் சந்தித்து, விதிமுறைகளில் கையெழுத்திட உள்ளனர். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப்-ஜி பேச்சுவார்த்தைகளை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சந்திப்பார்கள் என்பதை சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

https://athavannews.com/2025/1451204

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி

2 months 2 weeks ago

மலேசியாவுக்கு சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

26 Oct, 2025 | 11:06 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்கள் பயணமாக  ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். 

மலேசியாவில் இன்றைய தினம்  முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார்.

அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். 

பின்னர் அங்கிருந்து ஜப்பானுக்கு செல்லவுள்ளார். அங்கு புதிய பிரதமர் சனே தகச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசியா பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அப்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தநிலையில் வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ஊடகவியலார்கள் கேள்விக்கு ட்ரம்ப், “கிம் ஜாங் அன் எனக்கு நல்ல நண்பர். அவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்” என்றார். 

இருப்பினும் பயணத்திட்டத்தில் கிம் ஜாங் அன்னுடனான எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

G4KXc6_XEAAqpVu.jpg

G4KXd2iWgAA0xK_.jpg

https://www.virakesari.lk/article/228693

கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

2 months 2 weeks ago

Column-Will-Donald-Trump-Go-to-Prison-fo

கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும்
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கூறி, அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்ததுடன்
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக கொலம்பியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைத்துள்ளார்.

இந்த பின்னணியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எனக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ, அவரது மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அவர்கள் உலகளவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451140

தொழில்நுட்பக் கோளாறு: அமெரிக்காவில் 40 விமான சேவைகள் இரத்து

2 months 2 weeks ago

25 Oct, 2025 | 10:40 AM

image

அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த நிறுவனத்தின் சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் (website) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) ஆகியவற்றின் விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தால், மொத்தமாக சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் அதிகமான விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தைவிடத் தாமதமாகப் புறப்பட்டதால், விமானப் பயணங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், கோளாறு சரிசெய்யப்பட்டுச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/228619

Checked
Sat, 01/10/2026 - 00:01
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe