உள்ளக விசாரணைகளின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்க முடியாது : வெள்ளைக்கொடி மாத்திரமல்ல அனைத்தும் விசாரிக்கப்படும் - பிரதமர் ஹரிணி
07 Sep, 2025 | 12:05 PM
![]()
(லியோ நிரோஷ தர்ஷன்)
பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனை உலகிற்க வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும் இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும், விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டுமே தவிர அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க முடியாது. முதலில் ஜெனிவா சக்கரத்தில் இருந்து விடுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உண்மையிலேயே உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தான் ஜெனிவா குற்றச்சாட்டுக்களும் நெருக்கடிகளும் வலுப்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்று, வெறும் அறிக்கைகளை சமர்பித்து வந்துள்ளார்களே தவிர அங்கு வழங்கும் உறுதிமொழிகளை உள்நாட்டில் நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை.
ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் நடக்கும் போது இலங்கையிலிருந்து செல்லும் தரப்பு அறிக்கையை சமர்பித்து விட்டு நாடு திரும்பியதும் அதனை மறந்து விடுகின்றனர். மறுபடியும் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பிக்கும் போது தான் வழங்கிய உறுதிமொழிகளும் அறிக்கையும் அவர்களின் நினைவுக்கு வருகிறது. இதுவரை காலமும் இவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் இருந்துள்ளது.
சர்வதேசத்துடன் தொடர்புப்பட்ட விடயங்களாக இவற்கை கருதும் போது இதுவொரு தவறான அணுகுமுறையாகும். ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாக செயல்படுவது என்பது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளது. உதாரணமாக செம்மணி மனித புதைக்குழி உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களை அழைத்து சென்று அந்த விசாரணைகளை பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை.
மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு விசாரணைக்கும் அரசாங்கம் தடையாக இருக்க வில்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் முறைப்பாடு செய்யலாம். சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே யாரையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கடமைப்பட்டில்லை.
அது மாத்திரமன்றி ஜெனிவா குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக உள்ளது. எனவே ஜெனிவா சக்கரத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும். பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. மாறாக எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். விசேடமாக இந்த அரசாங்கம் அவர்களுக்கு உரியது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும். ஆனால் இதுவரைக் காலமும் அந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது வேறு ஒரு விடயமாகும். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனையும் , எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம். இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டும். மாறாக அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம்.
எனவே ஜெனிவா குற்றச்சாட்டுக்களில் நிபுணத்துவ ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவும் தயராகவே உள்ளோம். ஆனால் விசாரணைகளின் பொறுப்பாளர்களாக இலங்கை இருக்கும். வெள்ளைக்கொடி மாத்திரமல்ல முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் அரசாங்கம் தடையாக இருக்காது என தெரிவித்தார்.














