வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை பொது தனியார் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படுமா?
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடும் சூழலுக்கு இடமளிக்காமல் பொது தனியார் கூட்டு முயற்சியாக பேண வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் வருடாந்த அறிக்கைகள் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அண்மையில் (20) கவனத்திற்க் கொள்ளப்பட்ட போதே குழுத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதால், திருத்தியமைக்க 1.2 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார். எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்படாததால், இதனை அரச தனியார் கூட்டு முயற்சியாக நடத்துவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சுற்றுலாத்துறைக்காக காணி ஒதுக்கப்பட்டதால் அனுமதி வழங்கப்படவில்லை.
1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களை பழுதுபார்த்தால் நாளொன்றுக்கு 5 தொன் உற்பத்தி செய்வதன் மூலம் மாதம் 22 மில்லியன் ரூபா இலாபம் ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முழு நிலத்தையும் ஒரு பகுதியை மட்டும் சுற்றுலா வலயமாக மாற்ற பரிசீலிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. வாழைச்சேனை காகித ஆலையை மூடுவதாக இருந்தால், அதனை விற்பனை செய்வதற்குப் பதிலாக, பொதுத் தனியார் கூட்டு நிறுவனமாக நடத்துவது முக்கியம் என்றும், குழுவின் பரிந்துரை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குழுத் தலைவர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாத் துறையையே சார்ந்திருக்காமல், நாட்டின் தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15% மட்டுமே என்றும், அபிவிருத்தியடைந்த நாட்டில் இந்த எண்ணிக்கை 30% என்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். தொழில்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிலம் நாட்டின் மொத்த நிலத்தில் 0.04 சதவீதம் என்றும், அபிவிருத்தியடைந்த நாட்டில் இது பொதுவாக 3 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.