3 months ago
மருந்து வகைகளின் பெயர்களை தெளிவாக எழுதுமாறு வைத்தியர்களுக்கு எச்சரிக்கை! 15 Nov, 2025 | 11:32 AM இலங்கையில் உள்ள வைத்தியர்களுக்கு இலங்கை மருத்துவ சபை முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் தெளிவற்ற முறையில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதுவதால் மருந்துகளை அடையாளம் காண சிரமமாக உள்ளமாக மருந்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் முறையிடுவதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதும் போது தெளிவாகவும் மருந்து பரிந்துரைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு அமையவும் எழுத வேண்டும் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. மருந்துச் சீட்டுகளில் உள்ள மருந்து வகைகளின் பெயர்கள் தெளிவற்றதாக இருக்கும் போது நோயாளிகள் தவறாக மருந்துகளை பெற்றுக்கொள்ள கூடும் எனவும் இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது எனவும் இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. மருந்து பரிந்துரைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மீறும் வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/230411
3 months ago
Published By: Digital Desk 1 15 Nov, 2025 | 01:36 PM பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க தொடர்ந்தும் பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பணியாற்றிய சஞ்சீவ தர்மரத்ன, குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், குறித்த வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்கவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன தற்போது பணியாற்றி வருகிறார். https://www.virakesari.lk/article/230414
3 months ago
15 Nov, 2025 | 01:15 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்கி அரசாங்கம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பான 21ஆவது பொதுக்கூட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 21ஆவது பொதுக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காவிட்டாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சி என்ற வகையில், பொதுக்கூட்டம் தொடர்பிலும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தெரிவிப்பது அவசியம் என நாமல் ராஜபக்ஷ தனது Xதளத்தில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230415
3 months ago
இந்தியாவில் கணனி மூலமாக தட்டச்சு செய்து பிரதி வழங்கவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக வாசித்த நினைவுள்ளது.
3 months ago
உள்ளதை சொல்வேன் .........! 😍
3 months ago
கடவுளே சனீஸ்வரா நீங்கள் இடையில நிண்டு பார்க்கிறீங்கள் ........ முதல் பக்கத்தில் சென்று பார்த்தால் உங்கள் கேள்விக்குப் பதில் நிழல் ஆகத் தெரியும் . ...... முன்பு பல கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருந்தன, இப்ப இராகுதான் தனி ஆவர்த்தனம் . ....... இடைக்கிடை உங்களையும் காண்பது மகிழ்ச்சி . ......! 😂 வணக்கம் வாத்தியார் . ...........! தமிழ் பாடகர் : டி. சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது ஆண் : உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது ஆண் : பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது எதுவும் கிடையாது ஆண் : அடிப்பது போலே கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கு காரணம் புரியாது காரணம் புரியாது ஆண் : நன்றியய் மறந்தால் மன்னிக்க மாட்டேன் பார்வையில் நெருப்பாவேன் நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன் ஆண் : பிறந்தேன் பிறந்தது தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை பிறந்தேன் பிறந்தது தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை பெரியவர் அத்தை இருவரைத் தவிர தெய்வத்தைக் பார்த்ததில்லை நான் தெய்வத்தைக் பார்த்ததில்லை ஆண் : திருமணம் என்றார் நடக்கும் என்றேன் திருமணம் என்றார் நடக்கும் என்றேன் கொண்டு வந்தார் உன்னை சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ கொடுத்து விட்டேன் என்னை .........! --- உள்ளதை சொல்வேன் ---
3 months ago
இன்னுமா கையெழுத்து ......... கணனியில் எழுதச்சொல்லுங்கள் ........நானே கணனியில் அடிக்கிறன் ..........! 😇
3 months ago
என்ன இப்படி சொல்லுறியள் . ...... அவர் வியர்வையை புறங்கையால் துடைத்து விட்டுத்தானே முன் கையால் இழுத்து இழுத்து வாட்ச் எல்லாம் செய்து தாறவர் .........பிறகென்ன வருத்தம் . ....... ( அப்பா இருந்த நோயெதிர்ப்பு சக்திதான் இப்பவும் எங்களைக் காப்பாற்றுது )........! 😂
3 months ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44B பகுதி: 44 B / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இந்தியா இலங்கை மரபுகளுக்கிடையில் வேறுபாடு ஏன்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] இரண்டு மரபுகளுக்கும் இடையே பல குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, இலங்கை பாரம்பரியம் மூன்றாவது பௌத்த சபையைக் கூட்டுவதில் அசோகரின் பங்கையும், அவரது மகன் மகிந்த உட்பட இலங்கைக்கு புத்த மத நம்பிக்கையை மற்றும் மனிதாபிமான வேலையை பிரச்சாரப் படுத்தும்படி கட்டளையிடப் பட்ட ஊழியத்தை மேற்கொள்வதற்காக பல நபர்களை [missionary / மதப் போதகர்களை / மிஷனரிகளை] தொலைதூரப் பகுதிகளுக்கு அனுப்பியதையும் வலியுறுத்துகிறது. இருப்பினும், வட இந்திய பாரம்பரியம் இந்த நிகழ்வுகளை குறிப்பிடவில்லை. என்றாலும் குணாலா என்ற மற்றொரு மகனைப் பற்றிய கதையையும் மற்றும் இலங்கை பாரம்பரியத்தில் காணப்படாத பிற நிகழ்வுகளையும் தான் இது விவரிக்கிறது. அது மட்டும் அல்ல, பொதுவான கதைகளை விவரிக்கும் போது கூட, இரண்டு மரபுகளும் பல வழிகளில் வேறுபடுகின்றன. உதாரணமாக, பௌத்த சமயத்தை மௌரியப் பேரரசு முழுவதும் பரப்பிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், அசோகவதனம் மற்றும் இலங்கை மகாவம்சம் இரண்டும் அசோகரின் பேரரசி திஷ்யரக்ஷா [Tishyaraksha, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. இவர் மூன்றாவது மௌரிய பேரரசர் அசோகரின் கடைசி மனைவி ஆவார். அசோகவதனம் நூலின் கூற்றுப்படி, அசோகனின் மகனும், அவரின் வாரிசான குணாளனின் கண் பார்வை பறிபோக காரணமானவள்.] போதி மரத்தை அழித்ததாகக் குறிப்பிடுகின்றன. எனினும் அசோகவதனாவில், பேரரசி தனது தவறை உணர்ந்த பிறகு மரத்தை பழைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்தாள். ஆனால், மகாவம்சத்தில், மரத்தின் ஒரு கிளை இலங்கையில் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், அவள் மரத்தை நிரந்தரமாக அழித்தாள் என்கிறது. மற்றொரு கதையில், இரண்டு நூல்களும் இராமகிராமத்தில் இருந்து [Ramagrama] கௌதம புத்தரின் நினைவுச்சின்னத்தை [புத்த தாதுவை] சேகரிக்க அசோகரின் தோல்வியுற்ற முயற்சிகளை விவரிக்கின்றன. அசோகவதனாவில், அவர் அதைச் செய்யத் தவறுகிறார், ஏனென்றால் புத்த தாதுவை வைத்திருக்கும் நாகர்களின் ஒப்பற்ற பக்தியுடன், அசோகனின் பக்தி ஒப்பிட முடியாததால், அசோகன் தோல்வி அடைந்தார் என்று கூறுகிறது; இருப்பினும், மகாவம்சத்தில், புத்தர் இந்த நினைவுச்சின்னத்தை இலங்கையின் மன்னர் துட்டகாமினியால் பிரதிஷ்டை செய்ய என முன்னரே தீர்மானிக்கப்பட்டு இருந்தார், ஆகவே அசோகன் தோல்வியடைந்தார் என்கிறது. இத்தகைய கதைகளைப் பயன்படுத்தி, மகாவம்சம் இலங்கையை புத்த மதத்தின் இருப்பை பாதுகாக்கும் இடம் என்று போற்றுகிறது. அது அவர்களின் விருப்பம், ஆனால் மற்ற மொழி, சமயம் கொண்ட தமிழ் மக்களின் வாழ்விடங்களிலும், அவர்களின் பூர்வீக நிலத்தை பறித்து, அங்கிருந்து அகற்றி புத்தரை [புத்தர் சிலையை] குடியிருக்க வைப்பதை எப்படி புத்தர் அனுமதிப்பார் ? அல்லது அது தான் மகாவம்ச புத்தரின் கொள்கையா ?, நான் அறியேன், பரா பரமே! சாருமதி (Charumati / Brahmi: 𑀘𑀸 𑀭𑀼𑀼 𑀫𑀓𑀻) சில சமயங்களில் சாருமித்ரா என்று அழைக்கப்படுபவர், இந்திய மௌரியப் பேரரசர் அசோகரின் மகள் மற்றும் அவரது மனைவி பேரரசி அசந்திமித்ராவின் [Asandhimitra] வளர்ப்பு மகள் ஆவார். அசந்திமித்ரா, அசோகரின் இரண்டாவது மனைவி மற்றும் முதல் பேரரசி மனைவி ஆகும். அசந்திமித்ரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவளுக்கு குழந்தைகள் இல்லை. அவரது மரணத்திற்குப் பிறகு, திஷ்யரக்ஷா அசோகரின் முதல் தலைமைப் பேரரசியானார். சாருமதி, அசந்திமித்ராவிடம் செவிலி பயிற்சி பெற்றார். அவர் காத்மாண்டு அல்லது காட்மாண்டூவில் [Kathmandu] நேபாள இளவரசர் சத்திரியர் தேவபாலவை [kshatriya named Devapala] மணந்தார். நேபாளத்தின் மிகப் பழமையான புத்த மடாலயங்களில் ஒன்றான சபாஹில் (Chabahil / சாருமதி விகாரை என்றும் அழைக்கப்படும்) மடத்தை நிறுவிய பெருமைக்குரியவர் ஆவார். அவர் தனது தந்தையின் வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் அவரை கவனித்துக்கொண்டார் என்றும், அவருடன் புத்த யாத்திரைக்கு, உபகுப்தர் (Upagupta) சகிதம் சென்றார் என்றும் நம்பப்படுகிறது. உபகுப்தர், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆன்மீக குருவாக இருந்தார் என அறியப்படுகிறது, சாருமதியும் அசோகர் பேரரசரும் நேபாளத்திற்குச் சென்றதாக புனித நூல் ஒன்று விவரித்தாலும், 2003 ஆம் ஆண்டு வரை தொல்பொருள் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 2003 ஆம் ஆண்டில், தண்டோ சைத்யாவை [Dhando chaitya] புணருத்தாரனம் செய்யும் போது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவரது பெயருடன் செங்கற்களைக் கொண்ட கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தனர். மேல் முகம் பிராமியில் சா ரு வா டி [Cha Ru Wa Ti] என்றும், அத்துடன் சா ரு வா டி தண்டே [Cha Ru Wa Ti Dhande] என்றும் / ஹே து பிர பா [He Tu Pra Bha] என்று புஜிமோல் [Bhujimol script / the most ancient form of Nepal script.] எழுத்திலும் பொறிக்கப்பட்டு இருந்தது. அசோகருக்கு பல ராணிகள் இருந்தபோதிலும், அசோகரின் கல்வெட்டுகள் மற்றும் ஆணைகளில் பெயர் பெற்ற ஒரே ராணி கருவாகி [Karuvaki] மட்டுமே. அப்படியே அசோகரின் மகன், திவரா [Tivara or Tivala] மட்டுமே கல்வெட்டுகளில், அவரது தாயுடன் [கருவாகி உடன்], ராணி ஆணையில் [Queen Edict] பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வட இந்திய பாரம்பரியத்தின் படி, அசோகருக்கு குணாலா [Kunala] என்ற இரண்டாவது மகன் இருந்தான். குணாலாவுக்கு சம்பிரதி [Samprati] என்ற மகன் இருந்தான். நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 44 C தொடரும் / Will follow துளி/DROP: 1900 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44B https://www.facebook.com/groups/978753388866632/posts/32379937014988193/?
3 months ago
அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??
3 months ago
3 months ago
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்! மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2025/1452807
3 months ago
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு! ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விபத்தில் மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதவேளை, . ஸ்ரீநகர் துணை ஆளுநர் அக்ஷய் லப்ரூ காயமடைந்தவர்களை வைத்தியசலையில் சென்று பார்வையிட்டுள்ளார். ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காஷ்மீர் காவல் நிலையத்தில் , வெடி விபத்து இடம்பெற்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1452798
3 months ago
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து ஊடகம் பிபிசி-க்கு எதிராக வழக்கு தொடர்வதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிபிசி ஊடகத்தின் “பனோரமா” நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்பின் திருத்தப்பட்ட உரையின் காரணமாக அவர் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இருப்பதாக உறுதியாக கூறியுள்ளார். இதேவேளை, இந்தச் செயலுக்காக பிபிசி மன்னிப்பு கோரியிருந்தாலும் , அது அவதூறு வழக்குக்கு அடிப்படை இல்லை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பிபிசி தனது தவறை ஒப்புக்கொண்டாலும் இவ்வாறு அந்த ஊடகம் மேற்கொண்ட திருத்தப்பட்ட பதிப்பிற்காக பிபிசி ஊடகத்தின் மீது 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்வரை அபராதம் விதிக்க வழக்கு தொடரப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் றுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடபோவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி கேபிடல் கட்டிடத்தில் கலவரம் ஏற்படுவதற்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையை பிபிசி ஊடகம் திருத்தியமைத்து வெளியிட்ட பின்னணியிலேயே இந்த வழக்கு தொடரப்படஉள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452785
3 months ago
பொதுவாக தீவிர சிந்தனை கொண்டவர்கள் (ஒற்றை பார்வை), மற்றவர்களுக்கும் அபிப்பிராயம் உள்ளது என்பதனை புரிவது கூட இல்லை, இதனாலேயே மதம், சாதி, ஆண், பெண் இப்படி பல வகுப்புவாதங்களுக்குள் தம்மை இலகுவாக பிரதிநிதித்துவப்படுத்தி கொள்கிறார்கள், இதில் ஒன்றிற்கொன்று குறைவாக இருக்கமாட்டார்கள். பேர்னாட்சோவிடம் ஒரு நடிகை நாம் இருவரும் திருமனம் செய்து எமக்கு ஒரு குழந்தை என்னை போல அழகுடனும் உங்களை போல அறிவுடனும் பிறந்தால் எப்படி இருக்கும் என கேட்டார், அதற்கு பேர்னாட்சோ நன்றாக இருக்கும் ஆனால் அதுவே இடம் மாறினாலேயே மோசமாக இருக்கும் என கூறினார். தீவிர சிந்தனையாளர்கள் தமக்கு ஒவ்வாத பக்கங்களை கூட பார்க்க விரும்புவதில்லை.
3 months ago
2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் Nov 15, 2025 - 06:55 AM 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது வரவு செலவு திட்டம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் வரையில் வரவு செலவு திட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. குறித்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர். அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhzlv7ja01mgo29nvku1ow5o
3 months ago
Nov 15, 2025 - 08:58 AM ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வௌியிட்டுள்ளார். நீலக் கோடு என்பது லெபனானை இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் இருந்து பிரிக்கும் ஐ.நா.வால் வரையறுக்கப்பட்ட கோடாகும். ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) கூறுகையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் எழுப்பப்பட்ட கொன்கிரீட் 'T-சுவர்' சுமார் 4,000 சதுர மீட்டரால் லெபனான் நிலப்பரப்பை உள்ளூர் மக்கள் அணுக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். யருன் பகுதிக்கு தென்கிழக்கே, நீலக் கோட்டைக் கடந்து செல்லும் மேலதிக சுவர் ஒன்றின் ஒரு பகுதியும் எழுப்பப்பட்டு வருவதாக ஐ.நா அமைதிகாக்கும் படையினரை மேற்கோள் காட்டி அவர் கூறினார். இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திற்கு UNIFIL தகவல் அளித்து, அந்தச் சுவரை அகற்றக் கோரியதாகவும் டுஜாரிக் தெரிவித்தார். "லெபனான் பிரதேசத்தில் இஸ்ரேலின் இருப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1701 மற்றும் லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீறல்கள் ஆகும்" என்று UNIFIL அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தச் சுவர் நீலக் கோட்டைக் கடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். "இந்தச் சுவர் 2022-இல் தொடங்கப்பட்ட பரந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். போர் தொடங்கியதிலிருந்தும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் ஒரு பகுதியாகவும், வடக்கு எல்லையில் உள்ள பௌதீகத் தடையை வலுப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை IDF மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmhzq8ngy01mio29ndjtrlytc
3 months ago
15 Nov, 2025 | 09:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு) 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணையை வெளியிட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நேர அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெறும். 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10ம் திகதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும். 2027 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2026 அக்டோபர் 24ம் திகதி நடைபெறும். 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 டிசம்பர் 8ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/230397
3 months ago
பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக தென் ஆபிரிக்காவை 159 ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்தியா Published By: Vishnu 14 Nov, 2025 | 06:36 PM (நெவில் அன்தின) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கு இந்தியா சுருட்டியது. இந்தியாவில் எட்டு முயற்சிகளில் முதல் தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா, துணிந்து துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தபோதிலும் அவ்வணி ஒருநாள் போட்டியை ஒத்தது போன்று துடுப்பெடுத்தாடி 55 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் தென் ஆபிரிக்காவின் 10 விக்கெட்களும் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன. 51ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஓர் இன்னிங்ஸில் தனது 16ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் மொஹமத் சிராஜ், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் மற்றைய 5 விக்கெட்களை வீழ்த்தி தென் ஆபிரிக்காவை திக்குமுக்காட வைத்தனர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தென் ஆபிரிக்க ஆரம்ப வீரர்களான ரெயான் ரிக்ல்டன், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரையும் 4 பந்துகள் இடைவெளியில் பும்ரா ஆட்டம் இழக்கச் செய்து போட்டியில் இந்தியாவுக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் பொறுமையுடன் துடுப்பெடுத்தாட முயற்சித்த அணித் தலைவர் டெம்பா பவுமா, வியான் மல்டர் ஆகிய இருவரை குல்தீப் யாதவ் ஆட்டம் இழக்கச் செய்ததும் தென் ஆபிரிக்கா ஆட்டம் காணத் தொடங்கியது. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் ஏய்டன் மார்க்ராம் (31), வியான் மல்டர் (24), டோனி டி ஸோர்ஸி (24), ரெயால் ரிக்ல்டன் (23) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க தென் ஆபிரிக்காவைவிட 122 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது. யஷஸ்வி ஜய்ஸ்வால் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கே.எல். ராகுல் 13 ஓட்டங்களுடனும் புதிய 3ஆம் இலக்க வீரர் வொஷிங்டன் சுந்தர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். https://www.virakesari.lk/article/230383
3 months ago
பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான் அரைச் சதங்கள் குவிப்பு, இலங்கையுடனான தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் Published By: Vishnu 15 Nov, 2025 | 02:31 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் ஸமான் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. பக்கார் ஸமான், மொஹம்மத் ரிஸ்வான் ஆகியோரும் அரைச் சதங்கள் குவித்து இந்த வெற்றியில் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர். இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க இப்போதைக்கு 2 - 0 என தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பாகிஸ்தான் முன்வரிசை வீரர்கள் அனைவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். பக்கார் ஸமான், சய்ம் அயூப் ஆகிய இருவரும் 58 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அயூப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களம் புகுந்த முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 2ஆவது விக்கெட்டில் பக்கார் ஸமானுடன் 100 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் மற்றொரு முன்னாள் தலைவர் மொஹம்மத் ரிஸ்வானுடன் 122 ஓட்டங்களையும் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தார். பக்கார் ஸமான் 78 ஓட்டங்;களையும் பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது போட்டியில் போன்றே முன்வரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத நிலையில் மத்திய வரிசை வீரர்கள் நால்வர் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதன் பலனாக இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ஜனித் லியனகே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி இருந்தார். பவர் ப்ளேயில் பெத்தும் நிஸ்ஸன்கவும் காமில் மிஷாரவும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்துகொடுத்தனர். ஆனால், பெத்தும் நிஸ்ஸன்க (24), காமில் மிஷார (27), குசல் மெண்டிஸ் (20), அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோர் (7) சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (98 - 4 விக்.) இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் ஜனித் லியனகேவும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உயிர்கொடுத்தனர். சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர். ஆனால், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 54 ஓட்டங்களையும் பெற்று 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களுடனும் ப்ரமோத் மதுஷான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 9 ஆவது விக்கெட்டில் 44 ஒட்டங்களைப் பகிர்ந்;தனர். பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பாபர் அஸாம் https://www.virakesari.lk/article/230390
Checked
Tue, 02/17/2026 - 03:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed