புதிய பதிவுகள்2

அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!

2 months 3 weeks ago
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி இன்று வெள்ளிக்கிழமை நுகேகொட நகரில் நடைபெறவுள்ளது. ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி பிவித்துறு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் பல கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்ஸ கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்த பேரணியில் பிக்குகள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அதற்கமைய, பிற்பகல் 02.00 மணி முதல் கூட்டம் நிறைவடையும் வரை நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதியின் நாவல சுற்றுவட்டம் வரையான பகுதியில் (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் பின்வரும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர். https://www.samakalam.com/அரசாங்கத்திற்கு-எதிராக-20/

யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் – மீள் குடியேற்றம் முழுமையடையவில்லை!

2 months 3 weeks ago
யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் – மீள் குடியேற்றம் முழுமையடையவில்லை! adminNovember 21, 2025 யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாக வீடமைப்பு நிர்மாண அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திலேயே அவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் , ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 1259 மில்லியன் ரூபா 2025 ஆம் ஆண்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக மாவட்ட மக்கள் சார்பாக அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முடிவுறுத்தப்படாமல் இருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக்கப்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை அடுத்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிகிறது, இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு ஜனாதிபதி , என்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளார். மேலும், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், மீள்குடியேற்ற செயற்பாடுகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும், இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இக் கலந்துரையாடல் மேலதிக செயலர், மேலதிக செயலர் (காணி), யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப்பணிப்பாளர், தாளையடி நீர்வழங்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக மீள்குடியேற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/222887/

யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்!

2 months 3 weeks ago
யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்! adminNovember 21, 2025 வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் 33 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹவால், குருநகர் பகுதியை சேர்ந்த 19 பேருக்கு வீட்டு உறுதிகள் வழங்கப்பட்டன. குருநகர் பகுதியில் 1983ஆம் ஆண்டு கால பகுதியில் வீடமைப்பு அமைச்சினால் , வீடற்ற மக்களுக்கு என கட்டி கையளிக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் , இது வரையில் வழங்கி வைக்கப்படாத நிலையில் , நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. https://globaltamilnews.net/2025/222871/

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
சர்வதேச ரி20இல் ஸிம்பாப்வேயிடம் இலங்கை மிக மோசமான தோல்வி Published By: Vishnu 20 Nov, 2025 | 11:27 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயிடம் 67 ஓட்டங்களால் இலங்கை மிக மோசமான தோல்வியைத் தழுவியது. மீண்டும் அணித் தலைவர் பதவியை ஏற்ற தசுன் ஷானக்கவுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த வருடம் இலங்கையிலும் இந்தியாவிலும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்த வருடம் இரண்டாவது தடவையாக ஸிம்பாப்வேயிடம் இலங்கை தோல்வி அடைந்துள்ளது. ஹராரேயில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இருதரப்பு சர்வதேச ரி20 தொடரின் இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயிடம் இலங்கை 5 விக்கெட்களால் தோல்வி அடைந்திருந்தது. சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இந்த தோல்விகள் இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் ரி20 கிரிக்கெட்டில் ஸிம்பாப்வேயிடம் ஓட்டங்கள் ரீதியில் இலங்கை அடைந்த மிகப் பெரிய தோல்வியாகவும் இன்றைய தோல்வி பதிவானது. அத்துடன் ஐசிசியில் பூரண அந்தஸ்து பெற்ற நாடொன்றுக்கு எதிராக ஸிம்பாப்வே ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இப் போட்டியில் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க களத்தடுப்பைத் தெரிவு செய்தது இலங்கைக்கு பெரும் தாக்கத்தை கொடுத்தது. ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஸிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச ரி20 போட்டியில் 3 மாதங்கள் இடைவெளியில் இலங்கை 100 ஓட்டங்களுக்குள் சுருண்டது இது இரண்டாவது தடவையாகும். கடந்த செப்டெம்பர் மாதம் 17.4 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு இலங்கை சுருண்டிருந்தது. அதுவே ரி20 கிரிக்கெட்டில் ஸிம்பாப்வேக்கு எதிராக இலங்கை பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். இலங்கை துடுப்பாட்டத்தில் தசுன் ஷானக்கவும் பானுக்க ராஜபக்ஷவும் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பவர் ப்ளே நிறைவில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அதன் பின்னர் இலங்கை அணியினால் மீள முடியாமல் போனது. பானுக்க ராஜபஷ 11 ஓட்டங்களையும் தசன் ஷானக்க 34 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கையின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக 12 உதிரிகள் பதிவானது. பந்துவீச்சில் ப்றட் இவேன்ஸ் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் நிகரவா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. ப்றயன் பெனெட் 49 ஓட்டங்களையும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 47 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர். மத்திய வரிசையில் ரெயான் போல் 18 ஓட்டங்களையும் டஷிங்கா முசேகிவா 11 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்தப் போட்டி முடிவுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் ஸிம்பாப்வே அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியது. ஆட்டநாயகன்: சிக்கந்தர் ராஸா. https://www.virakesari.lk/article/230961

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?

2 months 3 weeks ago
பட மூலாதாரம், RAMESH படக்குறிப்பு, திருகோணமலையில் பௌத்த விகாரை நிர்மாணிப்பது தொடர்பாக பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை திருகோணமலை நகரிலுள்ள கடற்கரையோரத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விவகாரம், நாட்டில் இன்றும் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில், அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளாலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது. திருகோணமலை நகரில் கடந்த 16ம் தேதி காலை கரையோர பகுதியில் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில பௌத்த பக்தர்கள் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இந்த விடயம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. திருகோணமலை கரையோர பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற விகாரையானது சட்டவிரோதமானது என, கரையோர பாதுகாப்பு திணைக்களம், போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அத்துடன், இந்த விகாரை நிர்மாணிக்கப்படுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் மாத்திரமன்றி, தமிழர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். 'தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில்' பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக, தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், கரையோர பாதுகாப்பு திணைக்களம் செய்த முறைப்பாடு குறித்து, போலீஸ் அதிகாரிகள், விகாரையின் விகாராதிபதிக்கு (தலைமை பிக்கு) அறிவித்திருந்தனர். எனினும், தமது நடவடிக்கையானது சட்டவிரோதமானது அல்லவெனவும், தம்மால் விகாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்த முடியாது எனவும் விகாரையின் பிக்குகள் போலீஸாருக்கு தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த விகாரை நிர்மாணிக்கப்படுகின்றமையானது சட்டவிரோதமானது என தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தனர். பட மூலாதாரம், RAMESH இந்த நிலையில், திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பௌத்த விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த அதேநாள் இரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டு, புத்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதுடன், அந்த புத்தர் சிலை திருகோணமலை கரையோர போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதன்போது பௌத்த பிக்குகளுக்கும், போலீஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், கைக்கலப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்த கைகலப்பில் இரண்டு பௌத்த பிக்குகள் காயமடைந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. புத்தரின் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். புத்தர் சிலை கைது செய்யப்படுவதானது, புத்த பெருமானே கைது செய்யப்பட்டமைக்கு சமமானது என அனைத்து பௌத்த மக்களும் கவலையடைந்த ஒரு சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், RAMESH படக்குறிப்பு, புத்தர் சிலையை போலீஸார் எடுத்துச் சென்றபோது பௌத்த பிக்குகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஏன் புத்தர் சிலையை போலீஸார் எடுத்து சென்றனர்? திருகோணமலை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே தாம் புத்தர் சிலையை அப்புறப்படுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த இடத்திலிருந்து புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது." என தெரிவித்தார். மீண்டும் அந்த புத்தர் சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு தாங்கள் போலீஸாருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அவர், அன்றைய தினத்திலிருந்து முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். "அந்த இடத்தில் சிற்றுண்டிசாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாக முன்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன. நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பட மூலாதாரம், SJB MEDIA படக்குறிப்பு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்கட்சிகள் வெளியிட்ட எதிர்ப்பு புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பதற்றம் ஏற்பட்டமை குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே இதனை பார்ப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ''இவ்வாறு செயற்படுவதன் ஊடாக இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது. நள்ளிரவில் போலீஸாரை அனுப்பி விகாரையொன்றுக்குள் நடைபெறுகின்ற அபிவிருத்தி பணிக்கு போலீஸார் எப்படி தலையீடு செய்வது?" என அவர் கேள்வியெழுப்பினார். இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முயற்சித்த போது, அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காதமையானது, தவறான செயற்பாடு என கூறிய சஜித், ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு சபாநாயகர் ஆசனத்திலிருந்து செய்யும் இந்த நடவடிக்கையை தயவு செய்து நிறுத்துங்கள் என குறிப்பிட்டார். புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்பதுடன், அரசாங்கம் இதற்கு தலையீடு செய்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். பட மூலாதாரம், SLPP MEDIA படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ''புத்தர் சிலையின் பாதுகாப்புக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார். பாதுகாப்புக்காக புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்படும் போது, போலீஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி, இரண்டு பௌத்த பிக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தர் சிலையின் பாதுகாப்புக்காகவா புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது பிக்குகளின் பாதுகாப்புக்காகவா வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது போலீஸாரிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவா என்று கேள்வி எமக்குள் எழுகின்றது." என்றார் நாமல் ராஜபக்ச. 1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு புனித பூமியாக பிரகடனப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாக இந்த விகாரை காணப்பட்டது எனக்கூறிய நாமல், "இதனை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம். நீங்கள் தலையீடு செய்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு இரண்டு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்துங்கள். அதனூடாக நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். இது இனவாத பிரச்னையாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்கு தலையீடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்'' என கூறினார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்களை விடுதலை புலிகள் அழிக்கவில்லை என்றும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பட மூலாதாரம், SHANAKIYAN படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ''பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பௌத்த மதமோ, எந்த மதமோ சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அது நானாக இருந்தாலும் சரி, பௌத்த துறவியாக இருந்தாலும் சரி. திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான விகாரை புதிதாக உருவெடுத்தது. இது சட்டவிரோதமானது, நிறுத்துவார்கள் என நம்பியிருந்தோம். சிலையை பாதுகாப்பதற்காக அகற்றப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தார். 30 வருடம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சின்னம் கூட விடுதலைப் புலிகளினால் கூட அழிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைக்கின்ற மக்கள் அல்ல'" என்றார் ராசமாணிக்கம். திருகோணமலை சம்பவத்தின் ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், முந்தைய அரசாங்கத்தை போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் என்பதை நிறுவியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA படக்குறிப்பு, அமைச்சர் ஆனந்த விஜயபால ''அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப செயல்படுவதை காண்கிறோம். அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை போலீஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்." என்றார் சுமந்திரன். பட மூலாதாரம், SUMANTHIRAN படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பழைமை வாய்ந்த விகாரை என தகவல் திருகோணமலையில் நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடமானது, பழமையான விகாரைக்கு சொந்தமான ஆவணங்களை கொண்டுள்ள விகாரை என விகாரையின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பிக்குகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை என்ற பெயரில் இந்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள இந்த விகாரையானது, 1951ம் ஆண்டு புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் நடத்தி செல்லப்பட்ட பௌத்த அறநெறி பாடசாலை, சுனாமி அனர்த்தத்தில் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு அழிவடைந்த இடத்திலேயே புதிதாக தாம் விகாரையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ள பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர். இந்த விகாரைக்கு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதற்கான உறுதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும் பிக்குகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், குறித்த இடத்தில் தனிநபர் ஒருவரினால் விகாரையின் அனுமதியுடன் உணவகமொன்று அமைக்கப்பட்டு நடத்திச் செல்லப்படுகின்றது. இந்த உணவகத்தின் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தில் 25 வீதத்தை விகாரைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த உணவகம் நடத்திச் செல்லப்படுகின்றது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் உணவகம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, உணவகத்தை முதலில் அகற்றுமாறு கூறப்பட்டிருந்தது. எனினும், தாம் உரிய அனுமதியை பெற்று இந்த உணவகத்தை நடத்தி வருவதாக உணவகத்தின் உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார். உணவகத்தை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, திடீரென விகாரையை நிர்மாணிக்கும் நோக்கில் புத்தர் சிலையொன்று அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலை திருகோணமலை போலீஸாரினால் தமது பொறுப்புக்கு எடுக்கப்பட்ட புத்தர் சிலை, அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளிலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பௌத்த சமய வழிபாடுகளுக்கு அமைய இந்த புத்தர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் தமது சமய நடைமுறைகளை பின்பற்றி, போலீஸாரின் ஒத்துழைப்புடன் புத்தர் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். நீதிமன்றம் என்ன சொல்கின்றது? திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை தொடர்பில் எழுந்த பதற்ற நிலைமையை, சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நவ. 19 அன்று தெரிவித்தது. இந்த மனு மீதான விசாரணைகளை டிசம்பர் மாதம் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்தது. விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரரினால் மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், RAMESH திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் ஒரு பகுதியை அப்புறப்படுத்துமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை, செயற்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, பிரதேசத்தின் அமைதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளது. ஜனாதிபதி என்ன சொல்கின்றார்? திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மதஸ்தலமொன்றை அமைப்பதைப் போன்றே, அதற்குப் பின்னால் மற்றொரு விவகாரமும் இருப்பது தெளிவாக தெரிகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். குறித்த இடத்தில் பிக்குவுக்கு சொந்தமான காணியொன்று இருந்த போதிலும், மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடமொன்று இருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம், RAMESH ''இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே போலீஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் நிலையத்திலுள்ள பதிவேட்டில் தெளிவாகவுள்ளது. புத்தர் சிலை மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது." என்றார் ஜனாதிபதி அநுர. அதற்கு முன், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் 2014ம் ஆண்டு குறித்த காணிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது இந்த இடம் விகாரையாக அழைக்கப்பட்ட போதும் அண்மைக் காலங்களில் இந்த இடம் விகாரையாகப் பயன்படுத்தப்படாமல் ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "உணவகத்தில் சட்டவிரோத நிர்மாணப் பணிகள் இருப்பதால் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், போலீஸ் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தங்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிக்குகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கால அவகாசம் 14ம் தேதியுடன்; முடிவடைந்தது." என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் பிக்குவுக்கு உரித்தான காணியொன்று இருந்தது என்றும், ஆனால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடம் இருக்கவில்லை, அதுதான் உண்மையான நிலைமை என கூறிய அநுர, "சம்பந்தப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான அளவீடு செய்ய, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவும் விகாரைக்குச் சொந்தமான காணியை தனித்தனியாக பெயரிட்டு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டது." என்றார். ஆனால் பழைய வழக்கின் பிரகாரம் இங்கு புதிய நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனவும் ஏற்கெனவே உள்ள நிர்மாணங்களை அகற்றக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, விகாரைக்குச் சொந்தமான காணி ஒதுக்கப்பட்ட பிறகு தொடர்புடைய பணிகளை முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பிரச்சினை தற்போது நிறைவடைந்து விட்டது" என்றார். இனவாதத்திற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். ''சந்தர்ப்பவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தீ வைப்பு தான் தற்போது நடந்திருக்கிறது . ஆனால் நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த நாட்டில் பழைய இனவாத நாடகங்களை யாராவது மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது இறந்த வரலாற்றில் மட்டுமே இருக்கும்.'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2n24qrwp7o

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
பரபரப்பை ஏற்படுத்திய மும்முனை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான் Published By: Vishnu 18 Nov, 2025 | 11:25 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) மிகவும் பரபரப்பை எற்படுத்திய மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை 4 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. பிறயன் பெனெட் (49), டடிவான்ஸே மருமணி (30) ஆகிய இருவரும் 48 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன. மத்திய வரிசையில் அணித் தலைவர் சிக்கந்தர் ராசா ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார். இந்த மூவரை விட ப்றெண்டன் டெய்லர் (14) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது பாகிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. ஷிப்ஸதா பர்ஹான் (16), பாபர் அஸாம் (0), சல்மான் அகா (1), சய்ம் அயூப் (22) ஆகியோர் கவனக் குறைவான அடி தெரிவுகளால் முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். எனினும் மத்திய வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர். பக்கார் ஸமான் (44), உஸ்மான் கான் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர். தொடர்ந்து உஸ்மான் கான், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தனர். உஸ்மான் கான் 37 ஓட்டங்களுடனும் மொஹ்ஹமத் நவாஸ் 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ப்றட் இவேன்ஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: மொஹம்மத் நவாஸ் இந்த மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி நாளைமறுதினம் ஸிம்பாப்வேயை எதிர்த்தாடவுள்ளது. https://www.virakesari.lk/article/230747

நீங்கள் 70 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 30 வயதுகளில் செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள் என்ன?

2 months 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டேவிட் காக்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி முதல், தினசரி முறையான தூக்கம் வரை - உங்கள் 30களில் சில பழக்கங்களைப் பின்பற்றுவது 70கள் வரை கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உங்கள் வாழ்க்கையில் எழுபதுகளை அடையும் போது, இளமைப் பருவத்துடன் ஒப்பிடுகையில், சற்றே பலவீனமாகவும், சோர்வாகவும், அறிவாற்றல் ரீதியாக பின்னடைவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. உங்களது தூக்கம் சார்ந்த வழக்கங்கள் மாறியிருக்கலாம், இதனால் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பீர்கள், மாலையில் தூக்க கலக்கத்தை அதிகமாக உணருவீர்கள். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மக்கள்தொகை சராசரிகளின் அடிப்படையில், உங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள்பட்ட நோயாவது இருக்கலாம். இருப்பினும், இது தவிர்க்க முடியாதது அல்ல என்பதில் ஆராய்ச்சியாளர்கள் முன்னெப்போதையும் விட உறுதியாக உள்ளனர். "இப்போது நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், 90 அல்லது 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்," என்று கலிஃபோர்னியாவில் உள்ள 'பக் இன்ஸ்டிட்யூட் ஃபார் ரிசர்ச் ஆன் ஏஜிங்கின்' தலைவரும் தலைமை நிர்வாகியுமான எரிக் வெர்டின் கூறுகிறார். "ஆனால், பெரும்பாலான மக்கள் 65 அல்லது 70 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, முதுமையின் அனைத்து சிரமங்களையும் அனுபவிக்கும் நிலை தற்போது உள்ளது, அதனுடன் ஒப்பிடுகையில் இந்த விஷயத்தில் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்". மாற்றங்களை விரைவாகத் தொடங்குவது நல்லது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உடற்பயிற்சியை அதிகரிப்பது, நல்ல உணவுப் பழக்கம் கொண்டிருப்பது, மது அருந்துவதைக் குறைப்பது போன்ற நன்மை பயக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் எந்த வயதிலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று வெர்டின் கூறினாலும், அத்தகைய மாற்றத்தை விரைவாகத் தொடங்கினால் இன்னும் அதிக பலன்களைப் பெறலாம். முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக உங்கள் 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தசை நிறை மற்றும் வலிமை, எலும்பு அடர்த்தி அல்லது வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறை போன்ற பல உடலியல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள். "இந்த காலகட்டத்தில் நீண்டகால மீள்தன்மையை வளர்க்கும் நடத்தைகளை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது" என்கிறார் அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 'மாயோ கிளினிக்கின்' கோகோட் மையத்தின் உடலியல் துறை பேராசிரியர் ஜுவோன் பாசோஸ். இதில் என்னென்ன சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள, முதுமை தொடர்பான செயல்முறையை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், வழக்கமான போக்குகளைப் பின்பற்றாத மக்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறார்கள். ஒரு உதாரணம், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது பிற விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் 35 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள். அவர்களில் பலர் தங்களது 60கள் அல்லது அதற்குப் பிறகும் இதைத் தொடர்கிறார்கள். மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான மூத்த விரிவுரையாளர் பால் மோர்கன், "இந்த விளையாட்டு வீரர்களில் பலர், முதுமையடைவது தொடர்பான விஷயத்தில், மற்றவர்களை விட மிகவும் மாறுபட்ட முறையைக் கொண்டுள்ளனர். இந்த முறை, இருதய செயல்பாடு மற்றும் தசை வலிமை மற்றும் செயல்பாட்டில் அதிக உச்சநிலையைத் தொடர்ந்து, தாமதமாக ஏற்படும் ஒரு வீழ்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது." என்கிறார். இதன் விளைவாக, அவர்களில் பலர் முதுமை வாழ்க்கையில் இயக்கம் மற்றும் சுதந்திரத்தை இழப்பதை நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடிகிறது என்று அவர் கூறுகிறார். "வாழ்க்கையின் நடுப்பகுதிகளில், ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும் இந்த கூடுதல் சக்தி அவர்களிடம் உள்ளது" என்று மோர்கன் கூறுகிறார். இது நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. மோர்கனின் கூற்றுப்படி, ஆரோக்கியமான முறையில் முதுமையடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, நமது 30களில், குறிப்பாக தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் ஏரோபிக் திறன் (செயல்பாட்டின் போது உங்கள் உடல் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச ஆக்ஸிஜன் அளவு) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகபட்ச அளவை அடைய முயற்சிக்க வேண்டும். விளையாட்டு ஒரு சிறந்த வழி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று தடுமாறி விழுவது. இது சுறுசுறுப்பு குறைவு மற்றும் மூட்டுகளில் இயக்கம் குறைவால் ஏற்படுகிறது. 'நடப்பதற்கு உதவும் உடலின் கீழ் அங்கங்களில் உள்ள தசைக் குழுக்கள் சுயமாக வாழ்வதற்கும், முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கும் முக்கியம். அதனால் அவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்" என்று மோர்கன் கூறுகிறார். இதை அடைவதற்கு விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். டென்னிஸ் அல்லது பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பதற்கும், நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அதே சமயம், 2025ஆம் ஆண்டு ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது, அதன்படி தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் முதியவர்களுக்கு நீண்டகால பராமரிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு அல்லது முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. வாரத்திற்கு 75 நிமிடங்களுக்கு மேல் ஓடுவது முதுமை செயல்முறையின் சில அம்சங்களின் மீது தாக்கம் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் உடலை உழைப்பின் உச்சநிலைக்குத் தள்ளுவது உண்மையில் முதுமையின் சில அம்சங்களை துரிதப்படுத்தக்கூடும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன, ஆனால் இது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. மறுபுறம், ஒரு ஆய்வு தினமும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது மூளைக்கு வயதாவதை குறைக்க உதவும் என்று கூறுகிறது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவிப் பேராசிரியரான அதிதி குர்கரின் கூற்றுப்படி, "ஒப்பீட்டளவில் எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் அனைவரும் ஆரோக்கியமாக முதுமையடைவதன் நன்மைகளைப் பெறலாம். சாப்பாட்டுக்குப் பிறகு 15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்". 30களில் நமது தசைகள் மற்றும் இருதய அமைப்பைப் பாதுகாத்து வலுப்படுத்துவது போல, நமது மூளைக்கும் அதையே செய்ய முடியும். வழக்கமான பரிசோதனைகள், முறையாக பல் துலக்குதல், புகைபிடிக்காமல் இருப்பது மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல் மூலம் நல்ல பல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஆச்சரியமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் அழற்சி அதிகரிப்பால் உருவாகும் 'பீரியோடொண்டல் நோய்' என்ற ஈறு நோய்க்கு, வாழ்க்கையின் பிற்பகுதியில் அறிவாற்றல் குறைவதற்கான அபாயத்துடன் தொடர்புள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மூளையில் நீண்டகால அழற்சியின் தாக்கத்தால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குகிறது. 30களில் இருந்தே மது அருந்துவதைக் குறைக்கத் தொடங்குவதும் சாத்தியமாகும். மது அருந்துவது உடலில் மரபணு வெளிப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது, இது முதுமையடைவதை துரிதப்படுத்துகிறது. மதுவும் தூக்கத்திற்கு ஒரு முக்கிய இடையூறாகும். வரவிருக்கும் காலங்களில் வயது தொடர்பான மூளைச் சுருக்கத்தைத் தவிர்ப்பதற்கும் டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பதற்கும் நிலையான தூக்க முறைகள் முக்கியமாக இருப்பதாக வெர்டின் கூறுகிறார். இதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று எழுந்திருப்பதை உறுதிசெய்வதும் அடங்கும், இது தூக்க ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், மனித உடல் செல் மீளுருவாக்கத்தில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. "ஒரு இரவு தூக்கம் இல்லாவிட்டாலும், உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறை மாறுகிறது, மேலும் உங்கள் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் என்ற உங்கள் மன உறுதியும் போய்விடும்" என்று அவர் கூறுகிறார். வழக்கமான தூக்க முறையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தின் காரணமாக, வெர்டின் இப்போது ஒவ்வொரு இரவும் அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், ஆனால் தூக்கத்திலிருந்து எழுவதற்கு அல்ல, மாறாக தூங்கச் செல்ல நினைவூட்டுவதற்காக. "இதற்குக் காரணம், நாம் சர்க்காடியன் உயிரினங்கள்," என்று அவர் கூறுகிறார். "மரபணு வெளிப்பாடு முதல் வளர்சிதை மாற்றம் வரை நமது முழு உயிரியலும் 24 மணி நேர சுழற்சியுடன் ஒத்திசைவில் உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது உங்கள் உடல் இவை அனைத்திற்கும் மிகவும் ஒத்திசைவாக இருக்க உதவுகிறது." இருப்பினும், ஒரு நல்ல இரவு தூக்கம் எப்போதும் சாத்தியமில்லை என்பது இளம் குழந்தைகளை வளர்க்கும், 30களில் இருக்கும் பெற்றோருக்கு தெரியும். 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது' இறுதியாக, உங்கள் 30கள் என்பது ஊட்டச்சத்தை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கான ஒரு உகந்த நேரமாக இருக்கலாம். நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, பகலில் உணவு சாப்பிடாமல் இருக்கும் நேரத்தை அதிகமாக உடலுக்கு கொடுப்பது. உதாரணமாக, 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) மூலம் இதைச் செய்யலாம். 'இடைநிலை உண்ணாவிரதத்தை' ஆதரிப்பவர்கள் பலர் 16:8 பிரிவை பரிந்துரைக்கின்றனர், அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணவை எட்டு மணி நேரம் என்ற வரம்புக்குள் சுருக்குவது. ஆனால், எளிதாக நிர்வகிக்கக்கூடிய 12:12 பிரிவின் மூலம் நாம் ஏராளமான நன்மைகளை அடைய முடியும் என வெர்டின் கூறுகிறார். "நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. நான் மக்களிடம் சொல்வது, நீங்கள் சாப்பிடும்போது, ஒன்றைக் கட்டமைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, உடலைச் சரிசெய்கிறீர்கள்." பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதிக அளவு உணவு கரோட்டினாய்டுகளை (Carotenoids - சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளிலும், மாம்பழம் மற்றும் அப்ரிகாட் போன்ற பழங்களிலும் காணப்படும் தாவர ரசாயனங்கள்) உட்கொள்பவர்கள் மெதுவாக முதுமையடைகிறார்கள் என்ற தனது ஆய்வு முடிவு மற்றும் பிற ஆய்வுகளை மேற்கோள் காட்டும் குர்கர், 'ஏனெனில் இந்த ரசாயனங்கள் நமது செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் எனப்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதில் பங்கு வகிக்கக்கூடும்' என்கிறார். பட மூலாதாரம், Getty Images ஒட்டுமொத்தமாக, 30களில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் முதுமையை பாதிக்கின்றன என்பதை பாசோஸ் உறுதியாக நம்புகிறார். பல தசாப்தங்களாக அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்காணித்து வரும் பெரிய ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, ஃப்ரேமிங்ஹாம் இதய ஆய்வு மற்றும் செவிலியர் சுகாதார ஆய்வு போன்றவை, நடுத்தர வயதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் மக்கள், பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட இருதய நோய், அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் பலவீனம் ஆகியவற்றின் அபாயங்களைக் குறைவாகக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. "30களில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், காலப்போக்கில் குவிந்து, 70களில் செயல்பாட்டு வீழ்ச்சிக்கு பங்களிக்கும் நுட்பமான மூலக்கூறு மற்றும் செல்லுலார் மாற்றங்களைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்," என்கிறார் பாசோஸ். "இதைச் செய்வதன் மூலம் முதுமையைத் தடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை என்றாலும், அதன் பாதையை நிச்சயமாக மாற்ற முடியும்." 30களில் நல்ல ஆரோக்கியத்தோடு தான் நாம் இருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் முதுமை இறுதியில் நம் அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் அதிகப்படியான மதுவைத் தவிர்த்து, உங்கள் பிற்கால வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்து, வழக்கமான தூக்க முறையைக் கடைபிடித்து, தொடர்ந்து சாப்பிடுவதிலிருந்து உங்கள் உடலுக்கு அதிக இடைவெளிகளைக் கொடுத்தால், வருங்காலங்களில் உங்கள் இதயம், தசைகள், மூட்டுகள் மற்றும் மூளை என அனைத்தும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0l7lj2pz0do

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

2 months 3 weeks ago
புலிக்கொடியை அங்கீகரித்தது பிரம்டன் Published By: Priyatharshan 21 Nov, 2025 | 11:36 AM கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை நினைவுகூருகின்றனர். இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிக்கின்றது. உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்குமானதொரு அமைப்பாகும். இந்நாளில், புலிக்கொடி சம்பிரதாயமாக ஏற்றப்படுவதோடு இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மதிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் தமிழ் வரலாறு கலாசாரம் அடையாளம் குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொடி தினத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுதல் மற்றும் ஈழத்தமிழர்கள், பிரம்டன் குடியிருப்பாளர்கள், பரந்த சமூகத்தினரிடையே பகிரப்பட்ட புரிதல், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230990

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 months 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 46 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 46 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீயகுணங்களும் செயல்களும் கொண்ட விஜயனின் வருகைக்கு, புத்தர் உண்மையில் இலங்கையைத் தயார்படுத்துவாரா?' அத்தியாயம் 9, ஏற்கனவே விளக்கியது போல, விஜயனின் வம்சாவளி, அவரது தீய பாத்திரங்கள் அல்லது செயல்கள், அவரது கட்டாய நாடுகடத்துதல், கடல் பயணம் மற்றும் இறுதியாக இலங்கைக்கு வந்ததைப் பற்றி பேசுகிறது. ஆனால், அவர்கள் இலங்கையில் இறங்கிய இடத்தை தீபவம்சம் குறிப்பிடவில்லை. என்றாலும், அவர்கள் இறங்கிய இடம் மண்ணின் நிறத்தின் அடிப்படையில் தம்பபன்னி [Tambapanni] என்று பெயர் பெற்றது. [34. The town of Tambapaṇṇi surrounded by suburbs was built by Vijaya in the south on the most lovely bank of the river.] தம்பபன்னி என்ற பெயர் இலங்கையில் எங்கும் இருக்கவில்லை. இந்தப் பெயர் எதிர்க் கடற்கரையில் உள்ள தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. மனைவிகளையும் குழந்தைகளையும் நாட்டை விட்டு அகற்ற அரசன் ஆணையிட்டதால், விஜயனுக்கு அப்பொழுதே மனைவி, பிள்ளைகள் இருக்கலாம்? அப்படி என்றால் அவனுக்கு, இலங்கையில் நடந்த திருமணத்துடன் சேர்த்து, ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகத் தெரிகிறது. இலங்கையில் தரையிறங்கிய பிறகு, அவனோ அவனுடன் வந்தவர்களோ தங்கள் தங்கள் மனைவி பிள்ளைகளைப் பற்றி யோசிக்கவும் இல்லை அல்லது அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும் இல்லை. புத்தர் ஆதரித்த அவர்களிடம், என்ன மனிதத் தன்மை! யாராவது இதற்கு பதில் கூறுவார்களா? 9-38 இன் படி, ஏழு ஆண்டுகளில் நிலம் மக்கள் கூட்டமாக இருந்தது. [38. (அவரது ஆட்சியின்) ஏழு ஆண்டுகள் கடந்தபோது, நாடு மக்கள் கூட்டமாக இருந்தது. அந்த இளவரசன் முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.] ஏழெட்டு ஆண்டுகளில் விஜயன் ஆண்ட நிலப்பரப்பை மனிதர்களால் நிரப்புவதற்கு, கட்டாயம் அண்டை நாட்டில் இருந்து பெருமளவான மக்கள் வெளியேறி வந்திருக்க வேண்டும். அப்படி வரக்கூடிய இடம் தென் இந்தியா மட்டுமே என்பதையும் கவனிக்க? ஏன் என்றால், அதற்க்கு முதல் இலங்கையில் வாழ்த்த பூர்வீக குடிகளை, அன்பின், கருணையின் சொரூபமான புத்தர் வெருட்டி, பயம்காட்டி கலைத்துவிட்டாரே? சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், ஏழு வருடங்களில் தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் கூட்டமாகத் தீவில் வந்து குடியேறுவது சாத்தியமில்லை. அது மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள எந்த புராணம் அல்லது வரலாற்று பதிவுகளிலும் கூட, வங்க நாட்டில் இருந்து அல்லது அருகிலுள்ள ஒரிசாவிலிருந்து [Vanga or from the nearby Orissa] இலங்கைக்கு மக்கள் வெகுஜன நடமாட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விஜயன் தனது சொந்த நாட்டிலும், சுப்பரா [சுப்பராகா] மற்றும் பருகாச்சாவிலும் [Suppara and Bharukaccha] குற்றவியல் அல்லது தீய நடத்தையில் ஈடுபட்டவர் ஆகும். அதில் இருந்து அவர் விலகவும் இல்லை. அப்படிப்பட்ட, இந்த குற்றவாளியின் வருகைக்கு இலங்கையைத் தயார்படுத்துவது, ஞானம் பெற்ற புத்தரின் உருவத்திற்கு அவமானத்தை விட வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரூச் (Bharuch) இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆறு காம்பத் வளைகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்நகர் பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் பரூச் துறைமுக வாயிலாக சீனா, எகிப்து, ரோம், இலங்கை, மதுரை, சுமத்திரா, அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளுடன், தங்கம், நவரத்தினங்கள், யாணைத் தந்தம், வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பட்டு பருத்தி துணிகள் கொண்ட வணிகம் செழிப்பாக இருந்தது. இது பண்டைய காலத்தில் பாருட்கட்சா [Bharutkatccha] என்று அழைக்கப்பட்டது. மேலும் சுப்பரா [சுப்பராகா] பெரும்பாலும் இந்திய துணைக் கண்டத்தின் மேற்கு விளிம்பில் உள்ள ஒரு நிலத்தைக் குறிக்கிறது. இதில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற துறைமுகமான சுப்பராகா (இன்றைய சோபாரா / Sopara) அடங்கும் என நம்பப் படுகிறது. தீபவம்சத்தின்படி விஜயன் இலங்கையில் திருமணம் ஒன்றும் செய்து கொள்ளவில்லை, எனவே அவருக்குப் பின், அவருக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை. அவர் தனது சகோதரன் சுமித்தாவிடம் [Sumitta] இலங்கைக்கு வந்து அரசாட்சியை தொடரும் படி செய்தி அனுப்பினார். மேலும் புத்தரின் மரண நாளில், மகாபரிநிர்வாண நாளில் அவர் [விஜயன்] இலங்கைக் கரையில் இறங்கியதும், எதோ ஒரு நோக்கத்தை நிலைநாட்டிட, கண்டுபிடிக்கப்பட்ட கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்? தீவின் பக்திமிக்க பௌத்தர்கள் விஜயனின் தீய குணாதிசயங்களைப் பற்றி வெட்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மாறாக, பொல்லாத, பயமுறுத்தும் செயல்களைச் செய்து, மக்களைக் கொள்ளையடித்த விஜயனை நினைத்துப் பெருமிதம் கொள்கிறார்கள். கடந்த காலத்திலும், பெரும்பாலான துறவிகள் மற்றும் புத்த சமயத்தை பின்பற்றும் பாமர மக்களின் கைதட்டலுக்கு, தமிழர்கள் இதே தீய சிகிச்சைக்கு ஆளானதில் ஆச்சரியமில்லை. இலங்கையின் கடந்த கால 100 ஆண்டு வரலாறு இவற்றைப் பற்றி பேசும். நான் கோடிட்டு காட்டத் தேவையில்லை? Part: 46 / Appendix – Dipavamsa / 'Is Buddha really prepare Lanka for the arrival of this criminal, Vijaya?' The Chapter 9 speaks of Vijaya’s ancestry, his evil characters, his forced exile and drifting in the sea, and finally his arrival in Lanka. As shown elsewhere, Vijaya’s birth is biologically impossible. Vijaya and all his brothers are invented personalities. Naïve Buddhists may believe in it, but the Tamils need not consider these as human historical facts. Vijaya and his companions first landed at the port city of Suppara. This must be the present day Surat in Gujarat. They behaved very badly though the people of Suppara first hospitably received them. Their behaviour made the people of Suppara angry, and Vijaya and his companions had to flee. They landed next in Bharukaccha, the present day Broach in Maharashtra. Again, they exasperated the people of Bharukaccha and they had to flee again and landed in Lanka. The map in the ‘Appendix – Asoka’ locates these two port cities on the western coast of India. The Dipavamsa does not identify the place at which they landed in Lanka. The place where they landed is Tambapanni based on the colour of the soil. There was no place with the name Tambapanni in Lanka. This name must have been from the Tamil country on the opposite coast. The Dipavamsa does not say he had seven hundred companions. Vijaya, his attendants, man-servants and the hired workmen are together seven hundred men. Vijaya seems to have more than one wife, as the king decreed to remove wives and children. He never tried to find them after landing in Lanka. As per 9-38, the land was crowded with people in seven years. There must have been a mass exodus of people from adjoining countries to crowd the land in seven years. The people must have come from the adjoining Tamil countries. It is impossible for people to come from faraway places to crowd the island in seven years about two thousand five hundred years ago. There is no mention of mass movement of people from Vanga or from the nearby Orissa to Lanka in any Puranic records in India. Vijaya is a person of criminal behaviour in his home country, as well as at Suppara and Bharukaccha. It is a shame on the image of the enlightened Buddha to prepare Lanka for the arrival of this criminal. Vijaya is not married in Lanka as per the Dipavamsa, and therefore he had no offspring to succeed him. He sent a message to his brother Sumitta to come to Lanka to take over the kingship. His landing on the shore of Lanka on the day of Mahaparinirvana, death, of Buddha, must also be an invented fiction. It is a pity that the pious Buddhists of the Island are not ashamed of the evil characters of Vijaya. All saffron clad monks all over the Island are very proud of Vijaya who committed wicked and fearful deeds, and plundered people. No wonder Tamils are subject to the same evil treatment to the applause of the monks and the laity. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 47 தொடரும் / Will follow துளி/DROP: 1907 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 46] https://www.facebook.com/groups/978753388866632/posts/32475581668757060/?

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

2 months 3 weeks ago
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே அரச இயந்தியரத்தை இயக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற கருப்பொருளில் தேசிய செயற்பாடு, இன்று தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் கடந்தா ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி – “போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவான நிதி ஈட்டப்படுகின்றது. திட்டமிடப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக்குழுவினர்அரசியல் தலைவர்களின் அடைக்கலத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்??? போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக்குழுவினர் இந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் மூலமே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர்.அதுதான் உண்மை .ஒரு காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் மத்தியசெயற்குழுக்களின் அதிகாரம் பாதாள உலகக்குழுக்களின் வசம் காணப்பட்டது. அதேபோல் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் அடங்கியிருந்தனர். நாம் இந்த இடத்தில் உறுதிபட ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. எந்தவொரு போதைப்பொருள் குற்றவாளிக்கும் அரசியல்அடைக்கலம் வழங்கப்படமாட்டாது. மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.இதில் மக்களின் எதிர்ப்பார்ப்பு தங்கியுள்ளது எனவே தலைவர்கள் என்ற ரீதியில் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது அதனாலேயே நாம்போதைப்பொருள் தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். ஆனால் இன்று சிலர் அதனை முடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.அனைவரும் ஒரு இலக்கினை நோக்கிபயணிக்கும் போது அவர்கள் இந்த சமுதாயத்தினை திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த வலையில் நாட்டு மக்கள் சிக்கமாட்டார்கள். நாம் இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்துவோம். போதைப்பொருள் மோசடியை நாம் இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்போம். இந்த செயற்பாடுகளில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் நாம் பாதுகாப்போம். அவர்களுக்காக நாம் முன்னிற்போம். நேற்று இரவும் போதைப்பொருளுடன் மீன்பிடிபடகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அந்த மீன்பிடி படகு இன்றுஇரவு கரைக்குகொண்டுவரப்படும்.கடற்படையினர் நாட்டின் கடற்பிராந்தியங்களில் போதைப்பொருள் கடத்தலைமுறியடிப்பதற்கு பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிராக பலர் பல சூழ்ச்சிதிட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.அரசாங்கத்தின் இந்த இலக்கை முறியடிப்பதே அவர்களின் நோக்கமாக அதற்காக மக்கள் எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்படலாம். https://athavannews.com/2025/1453398

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!

2 months 3 weeks ago
ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி! தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவ.23ம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார் எனவும் இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை எனவும் இதனால் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இதேவேளை, ஏற்கனவே, ”தென் ஆப்ரிக்காவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரியும் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1453416

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

2 months 3 weeks ago
Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 11:33 AM டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் வியாழக்கிழமை (20) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென நோய்வாய்ப்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட பயணி மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் A380 ரக பெரிய அகலமான இந்த விமானம் இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் பிரிஸ்பேனுக்குப் புறப்பட்டது. https://www.virakesari.lk/article/230975

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?

2 months 3 weeks ago
அப்போ விஜய் அரசியலை விட்டு விலகும் சாத்தியம் இருக்கின்றது இலங்கை பாராளுமன்றத்தை அதிரவிட்ட வீர தமிழன் அர்ச்சுனா போன்ற ஒரு வீரதமிழன் தமிழ்நாட்டிற்க்கும் வேண்டும் என்று அங்கே உள்ள வீர தமிழர்கள் ஆசைபடுகின்றார்களாம் 😂

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை

2 months 3 weeks ago
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த துலார குணதிலக்க என்பவர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்று உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன முரண்பாட்டைத் தூண்டுதல் மற்றும் அந்த நேரத்தில் விகாரைக்கு சென்ற அரசாங்க அமைச்சர்களை துன்புறுத்த மக்களைத் தூண்டுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கடும்போக்குவாத செய்தி அவர் பல முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியுள்ளார். அத்துடன் கடும்போக்குவாத செய்திகளை வெளியிடும் சிங்கள இணையத்தளம் ஒன்றையும் அவர் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. https://tamilwin.com/article/buddha-statue-incident-man-under-investigation-1763691773

அமெரிக்காவிடம் எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் சௌதி திட்டம் பற்றி இஸ்ரேல் கவலை ஏன்?

2 months 3 weeks ago
எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா சௌதி அரேபியாவுக்கு விற்பதால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் 20 நவம்பர் 2025 அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. செளதி அரேபியாவுக்கு இந்தப் போர் விமானங்கள் கிடைத்தால், அந்தத் தொழில்நுட்பத்தை சீனா அறிந்துகொள்ளக் கூடும் என்ற கவலைகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். செளதி அரேபியாவிடம் இந்த சக்திவாய்ந்த விமானங்கள் இருப்பது, மத்திய கிழக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேலின் "தனித்துவமான ராணுவ முன்னிலையை" பாதிக்கக்கூடும் என டிரம்ப் நிர்வாகத்தில் இருப்பவர்களும்கூட கவலை தெரிவிக்கின்றனர். செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க பயணத்தின்போது பேசியபோதும், அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்தப் போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு வழங்கப் போவதாக மீண்டும் குறிப்பிட்டார். டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் எஃப்-35 போர் விமான விற்பனை தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது, ஆனால் அது இறுதி முடிவை எட்டவில்லை. வெள்ளை மாளிகைக்கு செளதி பட்டத்து இளவரசர் வருகை தருவதற்கு ஒரு நாள் முன்னதாக, செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்யவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். "நாங்கள் எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வோம் எனக் கூற விரும்புகிறேன். அவர்கள் (செளதி அரேபியா) அவற்றை வாங்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் சிறந்த கூட்டாளியாக இருந்து வருகின்றனர்," என்று ஓவல் அலுவலகத்தில் பேசியபோது டிரம்ப் கூறினார். செவ்வாய்க் கிழமையன்று டிரம்புக்கும் பட்டத்து இளவரசருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, எஃப்-35 போர் விமானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செளதி அரேபியாவுக்கு அமெரிக்கா எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வது மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவ நன்மைக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற கவலையும் டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளிடையே நிலவுகிறது. அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, எஃப்-35 ரக விமானங்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், செளதி அரேபியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டின் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என நம்புவதாகவும் டிரம்ப் கூறினார். இந்த ஒப்பந்தம் ஏற்படலாம் என்பது, இஸ்ரேலிய அதிகாரிகள் சிலரிடையே கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது எஃப்-35 போர் விமானங்களை வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டும்தான் என்பதால், செளதிக்கும் இந்த விமானத்தை வழங்குவது, இஸ்ரேலின் "தனித்துவமான ராணுவ முன்னிலையை" குறைத்துவிடக்கூடும். செளதிக்கு வழங்கப்படும் எஃப் -35 போர் விமானம், இஸ்ரேல் பயன்படுத்தும் விமானங்களைப் போலவே இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். "செளதி அரேபியா ஒரு சிறந்த கூட்டாளி. இஸ்ரேலும் சிறந்த கூட்டாளிதான். அவர்கள் (இஸ்ரேல்) உங்களுக்கு (செளதி அரேபியா) குறைந்த திறன் கொண்ட விமானங்களைக் கொடுக்க வேண்டும் என நினைப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் எனது பார்வையில், இரு நாடுகளுமே சிறப்பான விமானங்களைப் பெறத் தகுதியானவை" என்று டிரம்ப் குறிப்பிட்டார். "அமெரிக்கா வழங்கும் எஃப்-35 போர் விமானத்தால் சௌதிக்கு என்ன நன்மை?", தனது முன்மொழியப்பட்ட காஸா அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேலின் ஆதரவை டிரம்ப் கோரியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலை கோபப்படுத்தக்கூடும் என்பதால், எஃப்-35 போர் விமானங்களை செளதிக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் இரான் உடனான 12 நாள் மோதலின்போது இஸ்ரேல் எஃப்-35 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியது. எஃப்-35 விமானங்களை வைத்திருக்கும் அல்லது அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 19 நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. நியூயார்க் டைம்ஸ் நாளிதழின்படி, பென்டகனுடைய உளவுத்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கை, "இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், செளதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம், சீனாவால் எஃப்-35 தொழில்நுட்பத்தை அணுக முடியும்" என்று எச்சரித்துள்ளது. பட மூலாதாரம், Win McNamee/Getty Image மத்திய கிழக்கின் ராணுவ சூழலை மாற்றவல்ல எஃப்-35 எஃப்-35 போர் விமானம் மத்திய கிழக்கு முழுவதும் தற்போது இருக்கும் ராணுவ சூழலையே மாற்றக்கூடும் என்று நம்பப்படுகிறது. சில இஸ்ரேலிய அதிகாரிகளும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். செளதி அரேபியாவுடனான உறவுகளை இஸ்ரேல் இயல்பாக்கினால், அது பரந்த இஸ்லாமிய உலகுடனான சுமூக உறவுகளுக்கு ஒரு வழியைத் திறக்கும். அதற்கு ஈடாக, செளதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து ஒரு பாதுகாப்புத் திட்டத்தைப் பெற வேண்டும். இதன் கீழ், செளதி அரேபியா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களைப் பெற்றிருக்கும். இது அமெரிக்காவுடனான செளதி அரேபியாவின் உறவை வலுப்படுத்துவதுடன் இஸ்ரேலுடனான அதன் உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றையும் தொடங்க உதவும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வதில் டிரம்ப் நிர்வாகம் முன்னேறக்கூடும். இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், செளதி அரேபியாவுடன் அந்நாடு ராணுவ சமநிலையைப் பெறக்கூடும். பட மூலாதாரம், Getty Images இஸ்ரேல் மற்றும் செளதி அரேபியா இடையிலான பிரச்னைகளை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை. எஃப்-35 போர் விமான விற்பனை விவகாரம் குறித்து சி.என்.என் சேனலிடம் பேசிய கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளரான நவாஃப் ஒபைத், "நெதன்யாகுவுக்காக, ஆயுதங்கள் மற்றும் பிற விற்பனையை நிறுத்தி வைத்து தனது நேரத்தை டிரம்ப் வீணாக்கப் போவதில்லை" என்று கூறுகிறார். "செளதி அரேபியாவுக்கு எஃப்-35 விமானங்களை வழங்குவது இஸ்ரேலிய ராணுவத்திற்குக் கவலை அளிக்கும் விஷயம்" என இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் சி.என்.என் சேனலிடம் கூறினார். "பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கில் உள்ள எந்த நாட்டிலும் எங்களிடம் இருப்பது போன்ற விமானங்கள் அல்லது திறன்கள் இருக்கக்கூடாது என்ற சொல்லப்படாத விதி எங்களிடம் இருந்தது," எனக் கூறும் அவர், "நிலைமையின் தீவிரத்தை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல" என்கிறார். இருப்பினும், அல்-அரேபியாவின் கூற்றுப்படி, "இஸ்ரேலியர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம், பாலத்தீனர்கள் அமைதியாக வாழ வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதியாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், இந்த இலக்கை அடைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று பட்டத்து இளவரசர் கூறினார். பாலத்தீனம் ஒரு நாடாக உருவாகாமல், இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கப் போவதில்லை என செளதி அரேபியா பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், Getty Images செளதி அரேபியா எஃப்-35 போர் விமானத்தை வாங்க விரும்புவது ஏன்? மத்திய கிழக்கில் தனது ராணுவத்தையும் அதன் நிலைப்பாட்டையும் வலுப்படுத்த செளதி விரும்புகிறது. செளதி அரேபியா பல ஆண்டுகளாக எஃப்-35 போர் விமானங்களை வாங்க முயன்று வந்தாலும், அதற்கு இஸ்ரேலிய எதிர்ப்பு காரணமாக ஒப்புதல் மறுக்கப்பட்டது. செளதி அரேபியா ஏற்கெனவே அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்கி வருகிறது. இருப்பினும், எஃப்-35 திட்டத்தில் சேர அந்த நாடு அனுமதிக்கப்படவில்லை. தனது ராணுவத்தை நவீனமயமாக்கவும், மத்திய கிழக்கில் தனது நிலையை வலுப்படுத்தவும், இரானால் பதற்றம் ஏதேனும் ஏற்பட்டால் அதில் தனது கை மேலோங்கியிருக்க வேண்டும் எனவும் செளதி அரேபியா விரும்புகிறது. அதற்காகவே எஃப்-35 விமானங்களை வாங்க முயல்கிறது. ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செளதி அரேபியாவும் போரிட்டுள்ளது. இந்த மோதல் தற்போது மட்டுப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் வெடிக்கக்கூடும். அதனால் எஃப்-35 நவீன போர் விமானம் தங்களுக்கு அவசியம் என அந்நாடு கருதுகிறது. பட மூலாதாரம், Getty Images டிரம்ப் எஃப்-35 விமானங்களை சௌதிக்கு விற்பது சாத்தியமா? செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வது இஸ்ரேலின் ராணுவ நன்மைக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற கவலைகளை டொனால்ட் டிரம்ப் பொருட்படுத்தவில்லை. டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தாலும்கூட, இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சிலர் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும். இருப்பினும், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார், விமானத்தை விற்பனை செய்வதற்கான தனது ஆதரவை வலுவாக மீண்டும் ஒருமுறை முன்வைத்துள்ளார். மிக முக்கியமாக, அவர் இஸ்ரேலின் "தனித்துவமான ராணுவ முன்னிலை" என்ற கொள்கையையும் புறந்தள்ளியுள்ளார். "தனித்துவமான ராணுவ முன்னிலை" என்பதன் கீழ், மத்திய கிழக்கில் உள்ள அதன் அண்டை நாடுகளைவிட இஸ்ரேல் எப்போதும் மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை அமெரிக்கா உறுதி செய்து வருகிறது. எஃப்-35 போர் விமானம் எவ்வளவு ஆபத்தானது? எஃப்-35 போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின், அதை உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் என்று அழைக்கிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 விமானங்களைத் தயாரிக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, எஃப்-35 "உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம்." ஐந்தாம் தலைமுறை போர் விமானமான எஃப்-35, எதிரி ரேடார் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறிய முடியாத வகையில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், அது தனது தாக்குதல் திறனைப் பயன்படுத்தி எதிரி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்களைத் தாக்க முடியும். இதனால் எதிரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே அவர்களைச் சீர்குலைக்க முடியும். லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 விமானத்தை, "உலகின் மிகவும் ஆபத்தான, நீடித்து இயங்கக்கூடிய மற்றும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட போர் விமானம்" என்று அழைக்கிறது. ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட சென்சார்கள், அதிவேக கணினி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, எஃப்-35 போர் விமானத்தின் பலம் என்று கூறலாம். அவை வெகுதொலைவில் இருந்து எதிரிகளைக் கண்டறிந்து தரவை நேரடியாக விமானிக்கு அனுப்பும். இந்தத் தொழில்நுட்பம், படைகளின் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே பார்க்கவும், தாக்குதல்களைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எஃப்-35 விமானங்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் சேர்ந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz919ve3w5wo

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

2 months 3 weeks ago
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று(21.11.2025) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளிலும்.. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்த நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவார்கள். பொதுவாக, தமிழர் தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள், சிவப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும் இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், புலம்பெயர் தேசங்களிலும் இவ்வகையான வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/maaveerar-week-begins-today-1763677607
Checked
Wed, 02/18/2026 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed