அரசியல் அலசல்

செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா?

3 months 1 week ago

செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா?

ஏம்.எஸ்.எம்.ஐயூப்

பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன.

1984 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்ததை அடுத்து யாழ். நகரில் நூற்றுக் கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், அந்நாட்களில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுலில் இருந்ததால் இவ்விபரங்கள் வெளியே வரவில்லை. அக்காலத்தில் பத்திரிகைகளும் அரச வானொலியும் மட்டுமே ஊடகங்களாக இருந்தன.

தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும், அது தென் பகுதியை மையமாகக்கொண்டு இயங்கியது. இணையத்தளங்கள் இருக்கவில்லை.

ஆயினும், சில தமிழ் பத்திரிகைகள் மறைமுகமாக அக்கொலைகளை அம்பலப்படுத்தின. ஒரு தமிழ் பத்திரிகை கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ விபரம் என ஒரு பட்டியலை வெளியிட்டது.

அதில், கொல்லப்பட்டவர்களின் வயது விபரமும் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் சிறுவர்களும் கொல்லப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. பயங்கரவாதிகள் யார் என்பதும் அம்பலமாகியது.

இப்போது செம்மணி மயானத்தில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளிலும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இதுவும் சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு மறுக்க முடியாத சான்றாகும்.

செம்மணியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் யாருடையவை என்பதைப் பற்றி தெற்கில் சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு இருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் கடற்படை அதிகாரியும் அமைச்சருமான சரத் வீரசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் விசித்திரமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

செம்மணியில் கண்டெடுக்கப்படும் எலும்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று அவர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, அவை இராணுவத்தினருடையதாக இருக்கலாம் என்றும் மற்றொரு கருத்தும் வெளியிடப்படுகிறது.கடந்த மாத இறுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, செம்மணிக்கும் சென்று அங்கு அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார்.

அவரை அங்கு செல்ல அனுமதித்ததையிட்டு விமல் வீரவன்ச அரசாங்கத்தைக் குறை கூறியிருந்தார். இது அவர்களது வாதத்துக்கே முரணானதாகும். இந்த எலும்புகள் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை என்றால், ஐ.நா. உயர்ஸ்தானிகர் அங்கு செல்வதை அவர்கள் ஏன் குறை கூற வேண்டும்?

செம்மணி 1990களில் இருந்தே அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது, பொது மக்கள் அதனை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதைப் பற்றி கதை சொல்லும் இடமாக இருக்கிறது. அக் காலத்தில் அங்கு இராணுவத்தின் சோதனைச் சாவடியொன்று இருந்தது.

 அந்த இடத்தில் தான் கிருசாந்தி குமாரசுவாமி என்ற பாடசாலை மாணவி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஒருவர் கடத்திக் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, தான் இந்த இடத்தில் சுமார் 600 பொது மக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்று சோமரத்ன ராஜபக்‌ஷ என்ற இராணுவ அதிகாரி கூறியிருந்தார்.

ஆயினும், அதன் பின்னர் அதைப் பற்றி பெரிதாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.1995இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, யாழ். குடாநாடு ஏறத்தாழ முழுவதுமாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலையில், குடாநாட்டை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக அவ்வாண்டு இராணுவத்தினர் ‘ரிவிரெச’ என்ற படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அக்காலத்தில் குடாநாட்டைச் சேர்ந்த 500க்கும் 600க்கும் இடைப்பட்டோர் காணாமற் போனதாக சிறிது காலத்துக்குப் பின்னர் கூறப்பட்டது. அத்தகவலும் சோமரத்ன ராஜபக்‌ஷவின் சாட்சியமும் பொருத்தமாக இருக்கிறது.

இலங்கையில் செம்மணியில் மட்டும் கூட்டுக் கொலைகள் இடம்பெறவில்லை. அதேவேளை, அரச படைகள் மட்டும் தான் கூட்டுக் கொலைகளைச் செய்தார்கள் என்று கூறவும் முடியாது.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப் படை, இந்தியப் படைகள், புலிகள் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படை ஆகிய அனைவரும் கூட்டுக் கொலைகளுக்காகக் கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அச்சம்பவங்களில் பலவற்றில் தடயங்கள் எதுவும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போதே கூட்டுக் கொலைகள் முதன் முதலில் இடம்பெற்றன.

தெனியாய, கேகாலை போன்ற பல பிரதேசங்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றன. அக்காலத்தில் மனித உரிமை அமைப்புக்களில் செயற்பாடுகள் மிகக் குறைந்ததாகவே இருந்தமையினால் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியன அறிக்கையிடப்படவில்லை.

ஆங்காங்கே ‘டயர்’ போட்டு சடலங்களை எரித்த கதைகள் மற்றும் ஆறுகளில் சடலங்கள் மிதந்த கதைகள் மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தன.
பிரிவினைவாத போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது கூட்டுக் கொலை 1984 செப்டெம்பர் 10ஆம் திகதி வவுனியா பிரதேசத்தில் பூவரசங்குளத்திலேயே இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்று ரம்பேவ என்னுமிடத்தில் வழிமறிக்கப்பட்டு பூவரசங்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த 47 பயணிகளில் 15 பேர் அவ்விடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இராணுவத்தினரையே அப்பத்திரிகைகள் மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தன.
இதனையடுத்து, தமிழ் ஆயுத குழுக்களும் அதே ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முதல் சாதாரண மக்களைத் தாக்கின.

1984ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘டொலர் பார்ம்’ மற்றும் ‘கென்ட் பார்ம்’ என்ற இரண்டு பெரும்பான்மையின குடியேற்றங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 62 சாதாரண மக்கள் உள்ளிட்ட மொத்தம் 82 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

அடுத்த நாள் அதாவது டிசெம்பர் 1ஆம் திகதி அதே மாவட்டத்தில் கொக்குளாய் மற்றும் நாயாறு ஆகிய இரண்டு மீனவ கிராமங்கள் தாக்கப்பட்டு 11 பெரும்பான்மை இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். புலிகளே இந்தத் தாக்குதலையும் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, 
அதே மாதம் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் பல கிராமங்களைத் தாக்கி சுமார் 100 தமிழர்கள் வரை கொன்றதாகக் கூறப்பட்டது.

இவ்வாறு அடுத்து வந்த வருடங்களில் இரு சாராரும் வடக்கு கிழக்கில் ஏட்டிக்குப்போட்டியாக கிராமங்களைத் தாக்கியுள்ளனர்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு வந்த இந்தியப் படையினர், ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், பின்னர் அவர்களும் பல இடங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டனர்.

1990ஆம் ஆண்டு சாதாரண மக்கள் கூடுதலாகக் கொல்லப்பட்ட வருடமாகும். கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாசலில் மற்றும் ஒண்டாச்சிமடத்தில் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். புலிகளே அத்தாக்குதல்களை நடத்தினர்.

1980களில் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, 60,000க்கும் அதிகமானோர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் சூரியகந்த, கொழும்பு மாவட்டத்தில் ஹோகந்தர, கம்பஹ மாவட்டத்தில் வனவாசல போன்ற இடங்களில் புதைகுழிகளில் கூட்டாகப் பலர் புதைக்கப்பட்டுள்ளதாகப் பின்னர் தெரிய வந்தது.
இவ்வாறு பல்வேறு தரப்பினர் பல்வேறு காலங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்ட போதிலும், சகல கொலைகளைப் பற்றியும் கூட்டுப் புதைகுழிகள் போன்ற தடையங்கள் காணக்கூடியதாக இல்லை.

அதேபோல, பதவிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அவற்றைப் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை.சர்வதேச நெருக்குதல் காரணமாகப் பல அரசாங்கங்கள் காணாமற்போனோர்களைப் பற்றி ஆணைக்குழுக்களை நியமித்தன.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலங்களில் தெற்கில் 60,000க்கு அதிகமானோர் காணாமற்போனதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கென பிரேமதாச ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இதனையடுத்து, வந்த ஜனாதிபதி சந்திரிகாவும் அதே விடயத்துக்காக மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றொன்றை நியமித்தார். குறித்த சகல ஆணைக்குழுக்களும் ஊரையும் உலகையும் ஏமாற்றம் உத்திகள் என்பது இப்போது நிரூபனமாகி விட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மனித உரிமை விடயத்தில் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்தார். அரசாங்கத்தின் போர் வீரர் தின வைபவங்களில் கலந்துகொள்ள அவர் ஆரம்பத்தில் விரும்பவில்லை.

பின்னர் அதில் கலந்துகொண்டாலும், முன்னைய ஜனாதிபதிகளைப் போலல்லாது, அவர் நல்லிணக்கத்தை வலியுறுத்தியே அங்கு உரையாற்றினார். ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகர் செம்மணிக்குச் செல்ல அவரது அரசாங்கம் எவ்வித தடையும் விதிக்கவில்லை.

ஆயினும், மனித உரிமை விடயத்தில் நிர்ணயகரமான முறையில் அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதைக் காலம் தான் கூறும். ஏனெனில், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பெரும்பான்மை சமூகம் அடுத்த தேர்தலில் அவரை தூக்கி எறிந்துவிடும்.

அவர் அந்த அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராவாரா என்பது காலம் போகப் போகத் தான் தெரிய வரும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செம்மணி-விடயத்தில்-அனுர-உறுதியாக-இருப்பாரா/91-361619

ஈழத் தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பி பலனில்லை

3 months 2 weeks ago

ஈழத் தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பி பலனில்லை

நஜீப் பின் கபூர்

நெப்போலியன் ஒரு முறை தனது அதிகாரிகளிடத்தில் பேசும் போது “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தேசங்களாக இருந்தாலும் சரி பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அதனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். ஐரோப்பா வரலாற்றில் நெப்போலியன் மறக்கமுடியாத ஒரு நாமம். நெப்போலியன் பொனபார்ட் 1769 – 1821 களில் வாழ்ந்து தனது 52 வது வயதில் இறந்தும் போனார். இந்த நெப்போலியன் கதை நமக்கு சில நூறு வருடங்களுக்கு முந்தியது ஒன்று.

அந்தக் காலகட்டத்தில் – அப்போதைய உலக செயல்பாடுகளில் இன்றைய அளவு வளர்ச்சி வேகம் அன்று இருந்திருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்கள்தான். எனவே மின்னல் வேகத்தில் அல்லது ஒளிவேகத்தில் மாற்றங்கள் நடந்து வருகின்ற இந்தக் காலத்தில் தனிமனிதர்களும் சமூகங்களும் இந்த உலகில் வாழும் போது அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குத் தயாரில்லாத சமூகமும் தனிமனிதர்களும் கூட அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்று நாம் நம்புகின்றோம்.

நாம் தலைப்புக்கு ஏற்று கருத்துக்களை பேசுவதாக இருந்தால் சிறுபான்மை சமூகங்களுக்கு சமகால அரசியலில் புதிய அணுகுமுறைகள் தேவை காலத்தின் கட்டாயமாகும். அரசியல் பற்றி நேரடியாக விமர்சனங்கள் பண்ணும் போது அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களை சுட்டிக்காட்டாது கருத்துக்களை முன்வைப்பது என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கின்ற ஒரு வேலை. நமது பதிவுகளில் இப்படியான கருத்துக்களை மறைத்து கதைகள் சொல்வதில்லை என்பது நமது வாசகர்களுக்குத் தெரியும். எனவே எமது சாதக – பாதக விமர்சனங்களையும் வாசகர்கள் ஜீரணித்துக் கொள்வார்கள் என்றும் நாம் நம்புகின்றோம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும் இன ரீதியில் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தார், ஏனையோர் என்று அது அமைகின்றது. மத ரீதியில் என்று வருகின்ற போது பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், இதர என்று ஒரு மிகச்சிறிய குழுவும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனால் இன ரீதியிலும் மத ரீதியிலும் இவர்களிடையே இணக்கப்பாடுகளும் முரண்பாடுகளும் இயல்பானவை. என்னதான் நாம் அனைவரும் இலங்கையர் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த வேறுபாடுகளை ஒவ்வொரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். எனவே புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் சமூக ஒற்றுமைக்கு தேவை.

வரலாறு தொட்டு மன்னராட்சி காலம், தென்னிந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, அதற்குப் பின்னர் நாடு விடுதலை பெற்ற பின்னர் ஏறக்குறைய முப்பது வருடங்கள் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் இந்த நாட்டில் இன ரீதியான முரண்பாடுகளை உச்சத்துக்கு கொண்டு சென்றிருந்தன. அத்துடன் இன – மத ரீதியான செல்வாக்கும் சிறிதும் பெரிதுமாக நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் அதிகாரத்துக்கு வந்த சில ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது தமது மேலாண்மையை செலுத்தி வந்தனர். இது ராஜபக்ஸ -கோட்டா அதிகாரத்தில் இருந்த போது உச்சம் தொட்டிருந்தது. அதே ஆணவம் அவர்களது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

ஜே.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறை இன ரீதியான அரசியல் இயக்கங்களை, கட்சிகளை வலுப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தெற்கில் இனவாதம் மேலோங்க இதுவும் ஒரு காரணமாக இருந்து வந்திருகின்றது. சிறுபான்மையினர் அரசியல் பற்றிப் பார்க்கும் முன்னர் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விருப்பு வெறுப்புக்கள், அரசியல் செயல்பாடுகள் பற்றி முதலில் பார்ப்போம்.

இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற இயக்கர், நாகர்களைத் தவிர அனைவரும் வந்தேறு குடிகள். அதில் எல்லோருக்கும் ஒரு பொது உடன்பாடு இருக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் விஜயன் வருகை, அதற்குப் பின்னர் மஹிந்த தேரர் வரவு, மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை பின்பற்றியது என்பன இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்துக்கு பிரதான காரணங்களாக அமைந்தன என்பது எமது கருத்து. அதன் பின்னர் மன்னராட்சி, நாம் முன்சொன்ன இந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு, நாடு சுதந்திரம் என்ற அனைத்துக் காலப்பகுதிகளிலும் நாட்டில் சுதேச அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு மேலோங்கி வந்தது. இதில் இன – மத உணர்வுகளும் கலந்திருந்தன. இதன் பின்னணியில்தான் நாட்டில் இனக்கலவரங்களும் முறுகல் நிலைகளும் அந்தக் காலப்பகுதிகளிலும் அவ்வப்போது இருந்து வந்திருந்தன என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.

நமது பண்டைய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க, சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியை ஆராய்கின்ற போது நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகளைப் பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியும் (1946) சுதந்திரக் கட்சியுமே (1951) மாறிமாறி ஏறக்குறைய 2020 வரையிலும் அதிகாரத்தில் இருந்து வந்திருக்கின்றன. சமசமாஜ கட்சி (1935), இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சி (1943) என்பன துவக்கத்தில் செல்வாக்குடன் இருந்தாலும் பின்னர் பலயீனமடைந்தன. இன்று அவை கட்சிப் பொருட்கள் போல ஆகிவிட்டன. ஒருமுறை சமசமாஜக் கட்சியின் என்.எம் பெரேரா கொழும்பு மேயராக பதவியில் இருந்திருக்கின்றார்.

கூட்டணிகள் அமைத்து மேற்படி இடதுசாரிகள் செல்வாக்கான அமைச்சுகளை வகித்திருக்கின்றார்கள். அதேநேரம் வடக்கில் சில தமிழ் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை இன்று முன்பு போல செல்வாக்குடன் இன்று இல்லை. 1981 கள் வரைக்கும் இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. என்றாலும் அவர்களின் பல சிவில் இயக்கங்கள் பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்தி செயல்பட்டு வந்திருக்கின்றன.

உதாரணமாக பதியுதீன் மஹ்மூத் அவர்களின் இஸ்லாமிய சோஸலிச முன்னணி டாக்டர் கலீல் போன்றவர்களின் முஸ்லிம் லீக்கை கூறலாம். ஆனால் அவை நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற பிரதான கட்சிகளுக்கு துணைபோகின்ற இயக்கங்களாக செயல்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர். ஜெயவர்தன செயல்பாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு ஏற்படுத்திக் கொண்டமை, முஸ்லிம்களை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் என்று செடிகொடி என்று பேசி அவர்களைப் பண்படுத்தி வந்தமை.

இதனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981) அந்த சமூகத்தில் செல்வாக்குடன் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற ஜே.ஆர். துணைபுரிந்திருக்கின்றார். மு.கா. தலைவர் அஸ்ரபுக்குப் பின்னர் இன்று வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசவாத உணர்வுடைய கட்சிகள் பிறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது தனிப்பட்ட நபர்களின் அரசியல் இருப்பை மையமாகக் கொண்ட இயக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே அவற்றை தேசிய அளவில் முஸ்லிம்களின் நலன்களை மையமாக வைத்து செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் என்று சொல்ல முடியாது.  

பிரதான அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், வெட்டுக் கொத்துக்கள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த பண்டாரநாயக்க புதுக் கட்சி துவங்கி பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று அண்மைக்காலம் வரை நமது அரசியலில் செல்வாக்குடன் செயல்பட்டு வந்தது. சந்திரிக்காவுக்குப் பின்னர் குறிப்பாக மைத்திரி காலத்தில் சுதந்திரக் கட்சி பல கூறுகளாக பிளந்து நிற்கின்றது. அதிலிருந்து மஹிந்த தலைமையிலன மொட்டுக் கட்சி உருவாகியது. சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் பிற்பட்ட காலப்பகுதிகளில் செல்வாக்கான அரசியல் கட்சிகளாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே மஹிந்த தலைமையிலான மொட்டு வாடிப்போயிருப்பதை நமது அரசியல் களத்தில் பார்க்க முடிகின்றது.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இதற்கு ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணமாக அமைந்தது. இதுவரை நாட்டில் மிகப் பெரும் அரசியல் கட்சியாக இருந்த ஐ.தே.க. தலைமையிலான ரணிலின் கட்சி ஆதரவாளர்களினால் நிராகரிக்கப்பட்டது. இன்று ரணில் அரசியலில் மிகவும் பலயீனமான மனிதராக இருந்தாலும் களத்தில் தனது ஆட்டத்தை அவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலையக அரசியலை எடுத்துக் கொண்டால் சுதந்திரத்துக்குப் பின்னர் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சிகளை வைத்திருந்தவர்கள் என்று பார்க்கும் போது, சௌமியமூர்த்தி தொண்டமான், (1939) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏ.அசிஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ் 1939) போன்றவர்களின் அரசியல் கட்சிகளைக் குறிப்பிட முடியும். இன்று மலையகத்தில் மலைக்கு மலை தோட்டத்துக்குத் தோட்டம் கட்சிகள் என்று அரசியல் இயக்கங்கள் முளைத்திருப்பதைப் பார்க்க முடியும்.

இப்போது சர்வதேசத்தையும் இந்தியாவையும் தொடர்ந்தும் நம்பி இருப்பதில் எந்தப் பயன்களும் இல்லை என்ற நமது வாதத்துக்குள் நுழைவோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944ல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஜீ.ஜீ. பென்னம்பலம் முன்வைத்தார். பின்னர் 1949 ல் தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பமானது. இவை இரண்டும் ஏதோ வகையில் வடக்கு, கிழக்கில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரையிலான காலப்பகுதி தமிழரசுக் கட்சி வீரியத்துடன் செயல்பட்டு வந்திருக்கின்றன. அதேபோல ஜீ.ஜீ. பொன்னம்பலம் துவங்கிய தமிழ் காங்கிரஸ் இன்று ஒரு பிராந்தியக் கட்சி என்ற அளவுக்கு போய் நிற்கின்றது.

அத்துடன் விக்னேஸ்வரன் ஒரு கட்சி வைத்திருக்கின்றார். பார் அனுமதிப்பத்திரத்துடன் அவர் மீது இருந்த இமேஜ் கெட்டுப்போய் நிற்கின்றது. டக்ளஸ் மற்றும் முன்னாள் போராளிகள் குழுக்களின் பேரில் பல அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வருகின்றன. கிழக்கிலும் அம்மான் மற்றும் பிள்ளையானின் அரசியல் செய்பாடுகளும் காணப்படுகின்றன. அதேநேரம் அனுரவுடன் சேர்ந்து அனைவருக்கும் விமோசனம் என்ற கருத்தும் இப்போது அங்கு பலமாக இருந்து வருகின்றது. இதுபோல தமது இருப்புக்கான ஒரு அரசியல் செயல்பாடுகள்தான் பொதுவாக இப்போது வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன.

எனவே, வடக்கு, கிழக்கில் செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் இன்று அவற்றின் தனிப்பட்ட இருப்புக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனங்களைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதனை வடக்கு, கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் நலன்களைவிட இவர்கள் தமது அரசியல் இருப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போராடி வருகின்றார்கள். அத்துடன் இன்று தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சி சம்பந்தன் காலத்தில் பதவியில் இருக்கின்ற அரசுக்கு விசுவாசமான ஒரு முகவர் அணியாகத்தான் இயங்கி வந்திருக்கின்றது.

அதனால்தான் ஆட்சியாளர்களை நம்பி இவர்கள் தமிழர்களின் அரசியல் விமோசனம் பற்றி அவ்வப்போது இன்று – நாளை எனக் காலகெடுக்களை கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதில் சுமந்திரன் பங்கு அளப்பரியது என்பதுதான் நமது கணிப்பு. இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் தமது கட்சி மீண்டும் மக்கள் மனதை வென்றுவிட்டதாக இவர்கள் கதை விட்டாலும் மாகாண சபைத் தேர்தல் வருமாக இருந்தால் யதார்த்தத்தை நமக்கு புரிந்து கொள்ள முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வரும் ஒரு இயல்புநிலை தான் இது என்பதும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் கடும் சேதாரங்கள் நிகழ்ந்தாலும் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அரசியல் தலைமையை தமிழ் மக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பல தசாப்தங்கள் பிரபாகரன் தலைமையில் அங்கு ஒரு அரசு இயங்கி வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தெற்கில் பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, தமிழ் உலகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த என்.பி.பி. அரசு அதிகாரத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான விமர்சனங்கள் இருப்பது போலதான் பிரபாகரன் பற்றிய மதிப்பீடும்.

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்று வந்து அதில் தமிழர் பிரதிநிதித்துவம் என்பதனை விட தமிழ் மக்களுக்கு அடிப்படைத் தேவை ஒரு அரசியல் தீர்வு. இது விடயத்தில் மேற்சொன்ன தேர்தல்களோ அதில் தமிழர்களுக்கு வரும் பிரதிநிதித்துவமோ சமூகத்தின் விமோசனத்துக்கு காரணிகளாக அமையப்போவதில்லை. அதேநேரம், சர்வதேசமும் இந்தியாவும் ஈழத்தமிழர்களை இன்று கைவிட்டு விட்டது. இதற்குக் காரணம் வடக்கு, கிழக்கில் அரசியல் செயல்பாடுகள் – போராட்டங்கள் பலயீனப்பட்டதே காரணம். இப்போது செம்மணி விவகாரம் பேசு பொருளாக இருந்தாலும் அது பற்றி ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் ஒன்றுபட்ட கருத்து இல்லை.

இப்போது இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பற்றி பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் ஈழத்தமிழர் விவகாரம் ஒரு பேசுபொருளாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை சிந்தித்துப் பாருங்கள். சர்வதேசமும் இப்போது ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு தலைப்பாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அது கிடப்பில் போடப்பட்ட கோவைகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே நாம் முகவுரையில் சொல்லி இருப்பது போல நெப்போலியன் உபதேசத்தை கட்டாயமாக இன்று ஈழத் தமிழர்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, வடக்கு, கிழக்கில் இன்று இயங்கி வருகின்ற அரசியல் கட்சிகளும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகளும் தமிழர் விமோசனங்களைப் பெற்றுத்தர முடியாது நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் செல்லாக் காசுகள் என்பதனைப் புரிந்து புதிய வியூகங்களுடன் ஒரு பலமான அரசியல் இயக்கம் தமிழர்களுக்கு தேவை. முஸ்லிம் மற்றும் மலையக தனித்துவ அரசியல் இயக்கங்களின் நிலையும் இதுதான். இவர்கள் சமூகத்தை விற்று தன்னல அரசியல் செய்கின்றார்கள் என்ற ஒரு வலுவான குற்றச்சாட்டும் அந்த சமூகங்களின் மத்தியில் நிலவி வருகின்றன.

https://thinakkural.lk/article/319267

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்

3 months 2 weeks ago

22 JUL, 2025 | 12:32 PM

image

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. 

வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். 

ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை  வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை  கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது.

1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே  தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது.

1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன.

காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது. 

இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும். 

நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு  வழங்கப்பட வேண்டும்.

தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை  யோசனை முன்வைக்கிறது. 

இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான  ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை  அமையும்.

https://www.virakesari.lk/article/220610

புதிய அரசின் பொறுப்புக்கூறல்?

3 months 2 weeks ago

புதிய அரசின் பொறுப்புக்கூறல்?

லக்ஸ்மன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு அல்லது புதிய நெருக்கடியாக அமைய வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும்.

அது சாத்தியமாவதும் இவ்லாமல் போவதும் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையிலேயே தங்கியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின் காலம் முடிவடைய இருந்த நிலையில் கடந்த வருடத்தில் அத் தீர்மானம் ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கப்பட்டது. அது வருகிற செப்ரம்பரில் முடிவுக்கு வருகிறது. 

இந்த நிலையில், இவ்வருடத்தில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றினை பிரிட்டன் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டனுடைய உறுதியான நிலைப்பாடாக இருப்பதாகவே இப்போது வரையில் அறியமுடிகிறது.

கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேரணை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் பொறுப்புக் கூறல் செயற்றிட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுக்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. 

மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுதல் என்பன ஒன்றுக்கொன்று சமாந்தரமோ, பொருத்தப்பாடோ இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதே நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வருகின்ற செப்டெம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்படும் பிரேரணைத் தீர்மானமானது இவற்றினை  உறுதிப்படுத்தும் வகையிலும் உரிய பிரேரணை தீர்மானங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படும் வகையிலும் இருப்பது அவசியமாகும். 

2022ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களைத் திரட்டும் பணியும் நீடிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மீண்டும் இதனை நீடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியானதுதான். அந்த ஒழுங்கில்தான் புதிய தீர்மானத்தின் கட்டாயம் மற்றும் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. சாட்சியங்களைத் திரட்டும் பணியை நாட்டுக்குள் மேற்கொள்வதற்கு இலங்கையின் கடந்த அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

என்ற வகையில் புதிய அரசாங்கத்திடமிருந்து இவ்வருடத்தில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பது தெரியாமலிருக்கிறது. ஏனெனில் கடந்த வருடத்தின் கால நீடிப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தது. 

அந்த வகையில்தான், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டிய அவசியம் காணப்படுகிறது.

அத்துடன், மனித உரிமைப் பேரவையின்  பிரேரணைத் தீர்மானங்களின் காலத்தை நீடித்தல், புதிய பிரேரணைகளைக் கொண்டுவருதல் மூலம் இலங்கைக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளத் தமிழர் தரப்பு முயன்று வருகிறது. 

முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்தம் ஓய்ந்து 16 வருடங்கள் கடந்த போதிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய அக்கறையினை காண்பித்திருக்கவில்லை.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இதற்கான வலியுறுத்தல்களே இப்போது நடைபெற்று வருகின்றன என்பதுதான் உண்மை. 

2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது உள்ளக விசாரணைப் பொறிமுறை மூலம் பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. 

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டது. அப்போது, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி ஆசையினால் அது நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்தவகையில், நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பொறுப்புக்கூறல் விடயமானது கைகூடாமல் போனது. 

இருந்தாலும், காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கான செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

நம்பிக்கையீனம் காரணமாகத் தமிழ் மக்கள் இவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், சர்வதேச விசாரணையையே பாதிக்கப்பட்ட மக்கள் கோரினர். ஆனால், உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் தரப்பினர் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி வருகின்றனர்.

என்பதனை அரசாங்கம் உணர மறுப்பதே இந்த இடத்தில் சிக்கலாகும். இவ்வாறான சிக்கல்களுக்குள்தான் நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு வந்து புதிய அரசாங்கம் உருவானது.

ஆனால், 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து நல்லாட்சி காலத்தில் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்து அதன் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில்,  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் அதுவும் நின்று போனது. இருந்த போதிலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி வழங்கியிருந்தார்.

என்பதும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் புதிய அரசாங்கத்தால்  மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும். 
நாட்டில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கங்கள் கால இழுத்தடிப்புடனேயே நகர்த்தின, கடந்து போயிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது வெறுமனே பொறுப்புக்கூறலுடன் முடிந்து போகின்ற விடயமல்ல என்பதும் வெறுமனே வாக்குறுதிகளால் இதனைச் சரி செய்துவிடலாம் என்று எண்ணுவதும் புத்திசாலித்தனமானதல்ல. சீரான முன்னேற்றத்துடன் அது முன்னெடுக்கப்படவேண்டும். 

அந்த வகையில்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் மாத அமர்வில்,  இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை கொண்டுவரப்படவேண்டும். அதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உருவாகி வருகின்றன.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வரை அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். 
பிரிட்டன் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணையானது பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணை அனுசரணை நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ளதாகவே இருக்கும்.

என்றவகையில், பலமானதொரு தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்பிடம் இருக்கிறது. அந்த ஒழுங்கில்தான், இப்போது ஆட்சியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றது என்ற குற்றச்சாட்டு வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

அது தவிர்க்கப்படவேண்டுமாக இருந்தால், புதிய அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லாது போனால், நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் புதிய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை இழப்புக்கு அவர்களே காரணமாவார்கள். அத்துடன், அரசாங்கத்தின் மீது  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டமைக்கு அது சமமானதாகும்.

அதே நேரத்தில், இலங்கையின் அரசாங்கங்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் உரிய அக்கறை காண்பிக்காமையினாலேயே தமிழ் தரப்பு இப்போதும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக நிறுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வருகின்றமையை மீண்டுமொருமுறை நிரூபிப்பதாகவும் இருக்கும்.

எது எவ்வாறானாலும், மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் கொண்டுவரப்படும் பிரேரணையும், அதன் நிறைவேற்றமும் அதற்கு இலங்கை அரசாங்கம் காண்பிக்கும் பிரதிபலிப்பும்தான் இவற்றினைத் தீர்மானிக்கும். 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புதிய-அரசின்-பொறுப்புக்கூறல்/91-361507

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

3 months 2 weeks ago

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

qqqqqqq.jpg

ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன. பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது. ஆயுத மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல்  விடிகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர் ஊராக வருகிறது. அதுதான் தண்ணீர் விற்கும் வாகனம். அதுவும் இசையோடுதான் வருகிறது.

அதாவது நீரை விலைக்கு வாங்கும் ஒரு சமூகமாக நாங்கள் எப்பொழுதோ மாறி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கலாநிதி ஆறு.திருமுருகன் இதுதொடர்பாக பகிரங்கமாக பேசியிருந்தார். ”ஆலயங்களில் காணப்படும் பொதுக் கிணறுகளில் உள்ள நீரை தீர்த்தம் என்று கூறி ஊர் முழுதும் அருந்தியது. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிக்கிறார்கள்” என்ற பொருள்பட அவர் கவலைப்பட்டிருந்தார். அது மட்டுமல்ல. “கிணற்று நீரை குடிக்கலாமா இல்லையா என்பதனை இதுதொடர்பாக துறைசார் நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அந்த வேண்டுகோளுக்கு எனக்கு தெரிந்தவரை இன்றுவரையிலும் யாரும் உத்தியோகபூர்வமாக பதில் சொல்லவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சுன்னாகத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பேராசிரியர்  சிறீஸ்கந்தராஜாவிடம் இந்த கேள்வியை நான் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்… ஒஸ்ரேலியாவில் தான் மேற்படிப்பு படிக்கும் பொழுது இந்த கேள்வியை ஒருவர் தமது விரிவுரையாளரிடம் கேட்டாராம். அதற்கு அந்த விரிவுரையாளர் சிரித்துக்கொண்டே சொன்னாராம், ”யாழ்ப்பாணத்தவர்கள் கெட்டிக்காரர்கள் என்று கூறுகிறோம். அந்தக் கெட்டித்தனத்துக்கும் அவர்களுடைய கிணத்து நீருக்கும் தொடர்பு இருக்குமா ?” என்று.

ஆனால் நடப்பு நிலைமைகளைத்  தொகுத்துப் பார்த்தால்  அதாவது ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் நடப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் ஈழத் தமிழர்கள் தங்களைக் கெட்டிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி பாரதூரமாக மேல் எழுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் கொழும்புத் துறைப் பகுதியை சேர்ந்த ஒரு நாடகச் செயற்பாட்டாளரை ஒரு நீர் விற்கும் கடையில்  கண்டேன். அவரிடம் கேட்டேன் “உங்களுடைய கிணற்று நீரை அருந்த முடியாதா?” என்று. அவர் சொன்னார் “எனது பகுதிகளில் நீர் பெருமளவுக்கு உவராகிக் கொண்டு வருகிறது” என்று. அவர் அப்படி கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் கடல் நீரேரியை அண்மித்திருக்கும் கோப்பாய் இருபாலை ஆகிய பகுதிகளில் நீர் உவராகி வருவதாக முறைப்பாடுகள் உண்டு.

ஆனால் இது இன்றைக்கு நேற்றைக்கு வந்த பிரச்சினை அல்ல. ஒரு நூற்றாண்டு கால பிரச்சனை. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1894 ஆம் ஆண்டு பொது வேலைகள் திணைக்களத்தின்(PWD) ஆணையாளருடைய அறிக்கையில் பின்வருமாறு கூறப்படுகிறது…”யாழ்ப்பாணத்துக்கான நீர் வழங்கல் குறுகிய காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் உள்ள கிணறுகளில் பெரும்பாலானவை படிப்படியாக உவர்த்தன்மை கொண்டவையாக மாறிவருவது உண்மை. எடுத்துக்காட்டாக, பொது வேலைகள் பகுதியின் வளவுக்குள் இருக்கும் கிணறு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல தண்ணீரைக் கொண்டிருந்தது. அந்த வளவிலிருந்து நீர் பாய்ச்சி மிகச் சிறப்பான திராட்சைக் கொடிகளை வளர்த்தனர். ஆனால், இப்போது நீர் உவர்த்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. திராட்சைக் கொடிகளும் அழிந்துவிட்டன…..கச்சேரி வளவுக்குள் உள்ள பெரும்பாலான கிணறுகளுக்கும் இதே நிலைதான். தற்போது முற்றவெளியில் உள்ள இரண்டு கிணறுகளும், சுண்டிக்குழிக் குருமனை வளவில் உள்ள ஒரு கிணறும் மட்டுமே நல்ல தண்ணீர்க் கிணறுகள். முற்றவெளிக் கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக நீரை அள்ளுவதால்,அவை நீண்டகாலம் தாக்குப் பிடிக்கும் என்பது ஐயத்துக்குரியது. இந்த நல்ல நீர்த் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதாவது ஒரு வழியில் தயாராவதற்காகப் புத்தூர்க் கிணற்றுத் திட்டத்தைக் சுவனத்தில் எடுத்துள்ளோம்…..”

மேற்படி தகவல்களை அண்மையில் வெளியிடப்பட்ட  “யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு” என்ற நூலில் காணலாம். தமிழ் விக்கிபீடியாவை ஸ்தாபித்தவர்களில் ஒருவராகிய, கட்டடப்படக் கலைஞர் மயூரநாதன் அந்த நூலை எழுதியுள்ளார். ஆகவே இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மேலெழுந்த ஒரு பிரச்சினை. அதுவும் குடித்தொகை பெருகாத,தொழில்நுட்பம் இப்போதிருக்கும் வளர்ச்சியை அடைந்திராத,ஒரு காலகட்டத்தில் உணரப்பட்ட ஒன்று. ஆனால்  அதிலிருந்து  ஒரு நூற்றாண்டுக்கு மேலான பின்னரும் இந்த விடயத்தில்  தமிழ் மக்கள்  விழிப்ப்பில்லாமல் இருப்பதன் விளைவாகத்தான் குடிக்கும் நீரை விலைக்கு வாங்கும் ஒரு நிலை வளர்ந்து வருகிறதா?

இவ்வாறு தெருத்தெருவாக நீர் விற்கும் கடைகள் மற்றும் வாகனங்களில் எத்தனை அதற்குரிய பதிவுகளோடு இயங்குகின்றன? யாழ் மாநகர சபையில் மணிவண்ணன் மேயராக இருந்த காலத்தில் மாநகர சபை உறுப்பினரான பார்த்திபன் இது தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். தொடக்கத்தில் ஆறுக்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் இருந்தன. இக்கடைகள் எவையும் நீரை விற்பதற்கு அனுமதி பெற்றவை அல்ல. வியாபார அனுமதியை மட்டும் பெற்றவை. இதுதொடர்பாக பொருத்தமான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இக்கடைகளை விட முதலில் ஊர் ஊராக வாகனங்களில் நீர் விற்கப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பார்த்திபன் மேற்படி தீர்மானத்தை கொண்டு வந்தார். எனினும் அந்த தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு போலீசார் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்று கூறப்படுகிறது. மாநகர சபை ஊழியர்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகக் காணப்பட்டார்கள். இப்பொழுது கிடைக்கும் தகவல்களின்படி யாழ் நகரப் பகுதிக்குள் 30க்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் வந்துவிட்டன. தான் ஆணையாளராக இருந்த காலகட்டத்தில் மொத்தம் ஆறு கடைகளில் இருந்ததாக முன்னாள் ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

இப்பொழுது புதிய மாநகர சபை நிர்வாகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தின் குடிநீர் உவராகும் ஆபத்தைக் குறித்தும் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வடிக்கப்பட்ட நீரை விலைக்கு வாங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் புதிய நிர்வாகத்துக்கு உண்டு.

யாழ் மாநகர சபைக்கு மட்டுமல்ல புதிதாக தெரிவு செய்யப்பட்ட எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக ஒரு பிரச்சினை படிப்படியாக வளர்ந்து வந்து இப்பொழுது காசுக்கு நீர் வாங்கிக் குடிக்கும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. தமிழ்ச் சமூகம் தன்னை மெத்தப் படித்த சமூகம் என்று நம்புகின்றது.ஆனால் தன் சொந்தக் கிணத்து நீரை குடிக்கலாமா இல்லையா என்ற கேள்விக்கு விடை காண முன்னரே பல கிணறுகள் உவராகி வருகின்றன.

அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வந்த ஒருவர் சொன்னார் யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் நீரைக் குடித்த பொழுது அது கனமில்லாமல் இருந்ததாக தான் உணர்ந்ததாக. லண்டனில் தான்  குடித்த நீரோடு ஒப்பிடுகையில் இங்குள்ள வடித்த நீர் இலேசானதாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இவ்வாறு உடலுக்குத் தேவையான கனியுப்புக்கள் வடிக்கப்பட்ட நீரைக்  குடிப்பதால் வரும் பாதகமான விளைவுகள் எவை ?

“யாழ்ப்பாணத்தின் ஆழக் கிணறுகளில் ஏடுக்கும் நீரில் படியும் கல்சியத்தை அந்நியப் பொருளாக யாழ்ப்பாணத்தவர்கள் பார்க்கத் தேவையில்லை. அது யாழ்ப்பாணத்துக்கு அந்நியமானது அல்ல. சுண்ணக் கற் பிரதேசத்தில் பிறந்தவர்களுக்கு கல்சியம் ஒரு புறத்திப் பொருள் அல்ல” என்று பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா கூறுகிறார்.

புதிய உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தின் மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். முதலில் வடித்து விற்கப்படும் நீரைக் குடிப்பதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய வேண்டும். இரண்டாவதாக தமிழ் மக்கள்  நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்;பெருக்க வேண்டும்.அதாவது உள்ளூராட்சி சபைகள் அதற்குப் பொருத்தமான பசுமைப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இதுதொடர்பான  துறைசார் ஆராய்ச்சிக்காக தாயகத்திலேயே வந்து தங்கி இருக்கின்ற பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா போன்றவர்களின் துறைசார் ஞானத்தை  உள்ளூராட்சி சபைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களில் பொறியியலாளர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புடையவர்கள் பலர் உண்டு.எல்லாரையும் அழைத்து இதுதொடர்பாக கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி தமிழ் மக்கள் தமது நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பசுமைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

சில கிழமைகளுக்கு முன்பு பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா தலைமையிலான ஒரு குழுவினர் வழுக்கி ஆற்றின் தடங்களைப் பின்தொடர்ந்து சென்று யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பான களஆய்வுகளை மேற்கொண்டார்கள். வழுக்கையாறு ஓடியதாகக் கருதப்படும் தடங்களில் காணப்படும் குளங்களையும் நீர்நிலைகளையும்,நீர் தேங்குமிடங்களையும், நீரோடும் வழிகளையும் பாதுகாப்பதன்மூலம் நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.இதுதொடர்பில் உள்ளூர் மக்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதிய உள்ளூராட்சி சபைகளில் கட்சி முரண்பாடுகளும் மோதல்களும் நிறைய உண்டு.ஆனால் அவர்கள் போட்டிபோட வேண்டிய இடம் அதுவல்ல.தங்கள் உள்ளூராட்சிப் பிரதேசங்களை எப்படிப் பசுமைப் பிரதேசங்களாக மாற்றுவது என்பதில்தான் அவர்கள் போட்டி போட வேண்டும்.ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினரும் தனது வட்டாரத்தைத் தூய்மையானதாக, குப்பையற்றதாக, பசுமை வட்டாரமாக மாற்றுவது என்று உறுதிபூண வேண்டும். அவருடைய பதவிக்காலம் முடியும் பொழுது அவர் நட்ட மரங்களும் அகழ்ந்த குளங்களும் தூர் வாரிய வாய்க்கால்களும் என்றென்றும் அவருடைய சந்ததிக்கு அவருடைய புகழைச் சொல்லும்.

https://www.nillanthan.com/7543/

வரதரின்(2025) புதிய முயற்சிகள் — கருணாகரன் —

3 months 2 weeks ago

வரதரின்(2025) புதிய முயற்சிகள்

July 19, 2025

வரதரின்(2025) புதிய முயற்சிகள்

— கருணாகரன் —

ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இருவரும் ஒரு காலத்தில் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்கள். 1988 இல் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் கூட முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பின்னாளில் வெவ்வேறு நிலைப்பாடுகளால் இருவேறு அணிகளாகியிருந்தனர். இப்போது கூட வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 

இந்தச் சந்திப்பு தனிப்பட்டதல்ல. அரசியல் ரீதியானதே. சந்திப்பில் சுரேஸ் அணியின் தரப்பில் வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முக்கியஸ்தருமான சர்வேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் யாழ்ப்பாணக் கொமிட்டியின் செயலாளர் கமலாகரன் (குகன்) மற்றும் சிவா ஆகியோரும் வரதரோடு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் கிருபாகரன் உட்பட மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர். 

ஆனால், இது சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான  ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் வரதராஜப்பெருமாள் செயற்பட்டுவரும் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சிக்கும் இடையிலான கட்சிசார் அரசியற் சந்திப்பு இல்லை என்று சம்மந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன. கட்சிசார் அரசியற் சந்திப்பாக இருந்தால் அதில் முக்கியமாக தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுகு ஸ்ரீதரன், மோகன் போன்றோரும் பங்கேற்றிருப்பார். மட்டுமல்ல, அதனுடைய தன்மையும் வேறாகவே இருந்திருக்கும். 

அப்படியென்றால் இந்தச்சந்திப்பில் என்ன முக்கியத்துவம் என்று யாரும் கேட்கலாம். ஏற்கனவே  எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் அரசியல் உரையாடலையும் உறவாடலையும் அரசியற்கூட்டுகள், தேர்தற்கூட்டுகளையும் வைத்துள்ளன. இந்த நிலையில் சுரேஸ் – வரதர் சந்திப்பு ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியலில் இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனாலும் இந்தச் சந்திப்புச் சற்று வித்தியாசத்துக்குரியது என்றே கருதப்பட வேண்டியுள்ளது. 

ஏனென்றால், இந்தச் சந்திப்பு கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்கு அப்பாலானதாக இருக்கிறது. அதை வரதராஜப்பெருமாளும் சுரேஸ் அணித் தரப்பும் சொல்லியுள்ளது. மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியைச் சந்தித்ததைப்போல, 17.07.2025 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் வரதராஜப்பெருமாள் சந்தித்துப்பேசியிருக்கிறார். அதற்கு அப்பால், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் உட்பட வேறு சிலரையும் சந்தித்துப்பேசியிருக்கிறார். 

இந்தச் சந்திப்புகள் தொடர்பாக வரதராஜப்பெருமாளுடன் பேசியபோது, தன்னுடைய இந்தப்பயணமும் சந்திப்புகளும் தேர்தல் அரசியல், கட்சி அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலானது. தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலிலும் தனக்கு இப்பொழுது ஆர்வமில்லை. அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள், கட்சிகள் பற்றித் தான் எத்தகைய விமர்சனங்களையும் கருத்துகளையும் சொல்லப்போவதில்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய ஆர்வமும் நிலைப்பாடும், மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்துவது, மாகாணசபையை வினைத்திறனுள்ளதாக, ஆற்றல் மிக்கதாக வலுப்படுத்துவது, தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை – அதற்கான செயற்பாட்டு முனைப்பை அதற்குரிய தரப்புகளிடம் பேசி, இணைந்து செயற்பட்டுக்கூர்மைப்படுத்துவது போன்றதே என்றார். 

மாகாணசபையை வலுவாக்கம் செய்வதைப் பற்றிப் பேசினாலும் சமஸ்டி, தனிநாடு போன்றவற்றைப் பேசுவோர், அதற்காகச் செயற்படுவோரை தாம் மறுக்கப்போவதில்லை. அவற்றைத் தான் வரவேற்கிறேன். சமஸ்டியோ தனிநாடோ கிடைக்குமாக இருந்தால் எதை யார்தான் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறார் வரதராஜப்பெருமாள். 

ஆனால், அது கிட்டும் வரையில் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவையாக, வினைத்திறன் மிக்கவையாக இயங்க வைப்பது அவசியம். ஏனென்றால் இப்போதுள்ள சூழலில் தமிழ் பேசும் மக்களுடைய பாதுகாப்பு, முன்னேற்றம், சுயாதீனம் போன்றவற்றுக்கு மாகாணசபைகள்தான் யதார்த்தமாக உள்ளன. மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறிப்பாக ஜனாதிபதியை மையப்படுத்திக் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மாகாண சபைகள்தான் பகிரக்கூடிய பொறிமுறையாக உள்ளது. எங்கே அதிகாரம் குவிக்கப்படுகிறதோ, அங்கே ஊழல் தொடக்கம் அதிகார துஸ்பிரயோகங்கள் வரையில் அத்தனை பிரச்சினைகளுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகாரங்களைப் பகிரும்போது ஒன்றை ஒன்று கட்டுப்படுத்திக்கொள்ளவும் கண்காணித்துக்கொள்ளவும் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. 

ஆகவேதான் நாம் மாகாணசபைகளை பல்வேறு அடிப்படைகளில் வலியுறுத்துகிறோம். இது அனைத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். என்பதால்தான் சகல தரப்புகளோடும் இதை வலியுறுத்திய ஒரு உரையாடலைச் செய்ய விரும்புகிறேன். தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், மதகுருக்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரோடும் பேசுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மாகாணசபை முறைமையிலும் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்குப் பெரிய பிரச்சினை இல்லை. ஏனென்றால், அந்த மாகாண சபைகள் பெரும்பான்மைச் சமூகமாகிய சிங்களத் தரப்பினரால் ஆளப்படுவது. சிங்களத் தரப்பே எப்போதும் ஆளும் தரப்புமாக இருப்பதால் அங்கே அதிகாரம் குறைந்திருந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. ஆனால், வடக்குக் கிழக்கின் நிலை அப்படியல்ல. அது பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் தரப்புகளால் நிர்வகிக்கப்படுவது. இதனால் அதிகாரம் இல்லை என்றால், உரிய ஆதரவையும் ஆற்றலையும் பெறுவது கடினமாகும். இதைக்குறித்து நாம் தெளிவாக உரையாடி வேண்டியுள்ளது.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினை என்பது இலங்கையின் தீராத அரசியல் நெருக்கடியாக நீண்டு செல்கிறது. அரசியல் நெருக்கடி இருக்கும் வரையிலும் பொருளாதார நெருக்கடியும் இருக்கும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதை வெறுமனே நல்லிணக்கம், சமாதானம் போன்ற வார்த்தைகளால் தீர்த்து விட முடியாது. அதற்கப்பால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் திருப்தி அடையக் கூடிய, நம்பிக்கை கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் முக்கியம். 

அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆகவேதான் நடைமுறைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக பொருத்தமானதொரு அரசியல் யாப்பைக் குறித்த உரையாடல்களை நாம் செய்ய வேண்டும். இதையெல்லாம் கட்சி அரசியலுக்கு அப்பால், சமூக ஒருங்கிணைப்போடு செய்யலாமா என்று முயற்சித்துப் பார்ப்பதே தன்னுடைய நோக்கமாகும் எனமேலும் சொல்கிறார் வரதர். 

அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.  அறுதியிட்டுக் கூற முடியாது. “இருந்தாற்போல திடீரென்று ஏதோ ஞானோதயம் கிடைத்ததைப்போல வந்து நிற்கிறார். இதற்கான பின்னணி என்ன? உண்மையான நிலவரம் என்ன?” என்று சிலர் குழம்பக்கூடும். 

எல்லாவற்றுக்கும் அப்பால், தன்னுடைய முதிர்வு, அரசியல் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் தன்னால் முடிந்தவற்றை, தனக்குத் தெரிந்தவற்றையும் தனக்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று உண்மையாகவே வரதர் வந்திருக்கலாம். உண்மையான ஈடுபாட்டின் விளைவாகவே அவருடைய முயற்சிகள் இருக்கலாம். 

வரதர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள விருப்பத்தையும் அந்த மெய்யான நோக்கத்தையும் சந்தேகித்தோ சந்தேகிக்காமலோ யார் யாரெல்லாம் பேசப்போகிறார்கள்? அவர் சொல்வதிலுள்ள நியாயங்களை யார் யாரெல்லாம் புரிந்து கொள்ளப்போகிறார்கள், ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

ஆனால், வரதருடைய இந்தச் சந்திப்புகளைக் குறித்தும் இந்த உரையாடல் முயற்சிகளைப் பற்றியும் ஒரு நேர்மறையான தோற்றமே – அணுகுமுறையே – இதுவரையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு – உரையாடல்கள் –  பற்றிய முதல் ஊடகச் செய்திகளும் வரவேற்கக் கூடியவையாகவே உள்ளன. இந்தப் பத்தியாளர் கவனப்படுத்த விரும்புவது, எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் தமக்கிடையில் இணக்கங்களைக் கண்டு வரும் ஒரு சூழல் மலர்ந்து வருகிறது. துரோகி – தியாகி என்ற பிரிவுக்கோடு மெல்ல அழிந்தோ மங்கியோ வருவதாகத் தோன்றுகிறது. மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் யதார்த்த நிலையை உணர்வதாகத் தெரிகிறது. அதாவது பலரிடத்திலும் ஒரு சிறிய மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதொரு தொடக்க நிலைதான். ஆனால், வரவேற்கக் கூடிய தொடக்கம். 

அந்த வகையில் வரதர் எடுத்துள்ள முயற்சி வரவேற்க வேண்டியது. கட்சி, இனம், மதம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் பாரபட்சமும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரோடும் பேசுவதற்கு தான் முயற்சிக்கிறேன் என்பது வரவேற்க வேண்டியதே. எப்போதும் உரையாடல்கள் முக்கியமானவை. அதில் தயக்கங்களும் தாமதங்களும் விடுபடல்களும் புறக்கணிப்புகளும் தேவையில்லை. இந்த உலகம் உரையாடல்களினால்தான், இணக்கங்களினால்தான் ஏராளம் விடயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது; சாதித்திருக்கிறது. 

இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் வரதர் புரிந்திருப்பது நல்லது. அதனால்தான் அவர் தானாகவே முன் வந்து எல்லோருடைய கதவுகளையும் தட்டுகிறார். எல்லோருடைய கைகளையும் குலுக்குகிறார். எல்லோருடனும் ஒரு தேநீரைப் பருகவும் பகிரவும் தயாராக இருக்கிறார். 

வரதராஜப்பெருமாளுடைய அரசியல் வரலாறும் அனுபவமும் நீண்டது, பரந்தது. எந்த வரலாறும் நேர்கோட்டில் பளிச்செனத் துலங்கிச் செல்வதில்லை. பல நூறு சுழிப்புகளையும் முடிச்சுகளையும் ஏற்ற இறக்கங்களையும் இருளையும் ஒளியையும் தன்னுள் கொண்டே வரலாறு நகர்கிறது. வரதருடைய அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலானதுதான். வரதருடையது மட்டுமல்ல, அனைவருடையதும் அப்படியானதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1970 களின் தொடக்கத்திலிருந்து இன்று வரையான தன்னுடைய அரசியல் வரலாற்றில், போராட்டம், சிறை, வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர், தலைமறைவு வாழ்க்கை எனப் பலதையும் சந்தித்தவர் வரதராஜப்பெருமாள். மாகாணசபை முறைமையைப் பற்றிய தெளிவான அறிவும் அனுபவமும் வரதருக்குண்டு. அரசியலமைப்பு மற்றும் பொருளாதார அடிப்படைகளைப் பற்றிய புரிதலும் அறிவும் கொண்டவர். கூடவே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான நேரடி அனுபவத்தையும் அறிவையும் கொண்ட இந்தியாவின் இறுதித் தலைமுறையுடன் தொடர்பும் பரிச்சயமும் உள்ளவர்களில் ஒருவர். இலங்கைச் சூழலிலும் அறியப்பட்ட ஓர் அரசியல் ஆளுமை. இத்தகைய ஒருவர் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலான அரசியல் இயக்கமொன்றை (Political movement) பற்றிச் சிந்திப்பது இன்றைய சூழலில் நல்லதே. 

பலருடனும் பேசி, உரையாடி, விவாதித்து, பொருத்தமான அடிப்படைகளை உருவாக்குவதைப்பற்றிய இத்தகைய அரசியல் முன்னெடுப்பு – அரசியற் பண்பாடு – நம்மிடையே வளர்ந்து செழிக்க வேண்டும். எத்தகைய எதிரெதிர் நிலைப்பாடு, கோட்பாடு, கொள்கை போன்றவற்றோடு இருந்தாலும் பரஸ்பரப் புரிதலோடு பேசிக் கொள்வது அவசியமானது. கைகளைப் பற்றிக் குலுக்கி, முகத்தை முகம்  நேரில் பார்த்து, நெகிழ்ச்சியோடு தொடர்ந்து உரையாடும்போது பரஸ்பர நெருக்கமும் புரிதலும் ஏற்படும். 

பேச்சுகளில் – உரையாடல்களில் ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு தரப்புக்கும் உள்ளோட்டங்களும் தனியான நிகழ்ச்சி நிரலும் இருக்கலாம். அல்லது உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சம்பிரதாயமாக வேறொன்றைப் பேசலாம். எதுவாயினும் பரவாயில்லை. முதலில் சந்திப்பதும் பேசுவதும் அவசியமானது. அதொரு சிறந்த பண்பாடு. உயர்ந்த நாகரீகம். 

பேசாதிருப்பது, முகத்தைத் திருப்பிக் கொள்வது, தனிமைப்படுவது, தனிமைப்படுத்துவது எல்லாம் பயனற்றவை. கீழ்மையானவை. தீங்கானவை. இதனால் நாம் சந்தித்த இழப்புகளும் பின்னடைவுகளும் ஏராளம்.

தமிழ் அரசியலில், ஊடகத்துறையில், இலக்கியவெளியில், சமூக நிலையில்  மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய தடைகள் – விலக்கல்கள், விலகல்கள், ஒதுக்கங்கள், ஒதுங்குதல்கள்தான் நீண்ட வரலாறாகும். அந்த வரலாற்றை மாற்றுவது – மாற்றி எழுதுவது நல்லது. அவசியமானது. 

மாற்றத்துக்கான எத்தனையோ முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் பலரும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுவரையில் எதுவும் சாத்தியமானதில்லைத்தான். ஆனாலும் அதைக் கை விட முடியாது. ஏனென்றால், மாற்றம் வேண்டும். மாற்றம் ஒன்றே வேண்டும். மாற்றத்துக்காகவே இந்த உலகம் இடையறாது பாடுபடுகிறது.

https://arangamnews.com/?p=12166

வெகுஜன போராட்டங்களும் அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளும்!

3 months 2 weeks ago

வெகுஜன போராட்டங்களும் அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளும்!

அமைச்சர் மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் வருகையை போராட்டக்களம் அணுகிய விதத்தில் சில குறைபாடுகள் காணப்படவே செய்கின்றது. குறிப்பாக இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கோரும் போராட்ட களத்திற்கு ஆதரவு நல்கி வருகை தரும்போது அதனை போராட்ட ஏற்பாட்டாளர்கள் தந்திரமாக அணுகியிருக்க வேண்டும். 

-ஐ.வி.மகாசேனன்-

மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது ‘அணையா விளக்கு’ போராட்டமாகும். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் செயல் என்ற தன்னார்வ இளைஞர் கட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜூன் 23 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதி நாளான ஜூன் -25 அன்று பெருந்திரளான மக்கள் தன்னார்வமாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசியல்வாதிகள் ஒருசிலருடன் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் தமது கோபங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இது ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் பிரதான பேசுபொருளாகவும் மாறியிருந்தது.

இக்கட்டுரை வெகுஜன போராட்டக்களங்களில் அரசியல்வாதிகள் மீதான மக்கள் எதிர்ப்பின் ஈழத்தமிழர் அரசியல் கலாசாரத்தை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூன் – 25 அன்று இறுதி நாளில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது சிறு குழப்பம் உருவாகியது. இருவரும் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் வெளியேறியபோது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் ஆதரவு கோரியது தொடர்பில் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

204.jpg

பின்னர் தேசிய மக்கள் அரசாங்கத்தின் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்த போதும் சிறு குழப்பகரமான சூழல் உருவாகியது. மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் அணையா விளக்கில் மலரஞ்சலி செலுத்த வந்தபோது போராட்டக்காரர்கள் ஒரு சிலர் அவர்களை உடனடியாக வெளியேறுமாறு கோரி எதிர்த்தனர். பதட்டங்கள் அதிகரித்ததால் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். இவ்முரண்பாட்டு செய்திகளுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் வந்திருந்தார். போராட்டக்காரர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பை எதிர்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

வெகுஜன போராட்டங்கள் மற்றும் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழரசியலில் நீண்டதொரு மரபாக காணப்படுகின்றது. குறிப்பாக 1976 இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தினூடாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து இளைஞர்களின் ஆயுதப் போராட்ட நகர்விற்கு உரமூட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னாளில் மாவட்ட சபைக்குள் முடங்கினார்கள். இது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தமிழ் மக்களை சினங்கொள்ள வைத்தது.

1970 களின் இறுதியில் மற்றும் 1980 களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்ளும் வெகுஜன நிகழ்வுகளில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் வாகனத்தை பொதுமக்கள் தாக்கிய வரலாறுகள் காணப்படுகின்றது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்திருந்த போது மாணவர்களின் எதிர்ப்பால் வெளியேறியிருந்தார்.

குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியினை மாணவர்கள் பறித்து பெரும் குழப்பகரமான சூழ்நிலையொன்று உருவாகியிருந்தது. இவ் எதிர்ப்புக்கள் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நல்லூர் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.

1980 கள் மற்றும் 1990 களில் வெகுஜன நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளே அரங்கேறியிருந்தது. இது மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய உறுதியான நிறுவனக் கட்டமைப்பினாலேயே சாத்தியமாகியிருந்தது. 1980 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே எழுச்சியுற்ற ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களினை வெகுஜன அபிப்பிராயங்களை ஒன்றுதிரட்டி சாத்தியப்படுத்தக்கூடிய களமாக இருந்தது.  

எனினும் தொடர்ச்சியான தேர்தல்களில் 1989 இல் யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் 1994 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். இறுதியாக 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் நியமன உறுப்பினராக பாராளுமன்றம் சென்றிருந்தார். அவ்வாறே 1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராயிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார்.

20010.jpg

பின்னர் நியமன உறுப்பினராகவே பாராளுமன்றம் சென்றிருந்தார். இப்பின்னணியில் 1970 களின் இறுதியில் மற்றும் 1980 களில் வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தியிருந்த கோபத்தை பின்னாளில் தேர்தல்களிலும் வெளிப்படுத்தி அவர்களை நிராகரித்திருந்தார்கள்.

‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அணையா விளக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் எதிர்ப்பாளர்களிடம் ‘உங்களுக்கு அவையள் பிழை செய்திருந்தால் வாக்குகளில் காட்டுங்கள்’ எனத் தெரிவித்திருந்த விடயம் முக்கியமானதாகும். 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை நெறிப்படுத்தும் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தை வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடுமையாக எதிர்த்திருந்தனர். இரா.சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பல வெகுஜன நிகழ்வுகளிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் 2010 களுக்கு பின்னர் உயர்வாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் அங்கிருந்த கட்சி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டிருந்தார்.

2018 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே வருகை தந்திருந்திருந்தனர்.

அன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் வருகை தந்திருக்கவில்லை. மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்தால் மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதெனக்கூறி மாணவப் பிரதிநிதிகளை வேறு இடத்திற்கு அழைத்திருந்தார்கள்.

இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெகுஜன நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத மக்கள் எதிர்ப்பையே உறுதி செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்பையும் அணுக வேண்டியுள்ளது.

2010 களின் பின்னர் வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் தமது நம்பிக்கையின்மை மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும்இ ‘அணையா விளக்கு’ ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டியது போன்று தேர்தல்களில் இவ் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்த தவறுகின்றார்கள். 2017 இல் முள்ளிவாய்க்காலில் வெளியேற்றப்பட்ட இரா.சம்பந்தன் 2020 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு தொடக்கமே தமிழ் மக்களிடம் எதிர்ப்பை பெற்று வரும் சுமந்திரன் 2015 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் மக்கள் வாக்குகள் மூலம் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே மக்கள் நிராகரித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். எனினும் 1980 கள் மற்றும் 1990 களில் வெகுஜன நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளே அரங்கேறியிருந்தது. இது மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய உறுதியான நிறுவனக் கட்டமைப்பினாலேயே சாத்தியமாகியிருந்தது. 1980 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே எழுச்சியுற்ற ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களினை வெகுஜன அபிப்பிராயங்களை ஒன்றுதிரட்டி சாத்தியப்படுத்தக்கூடிய களமாக இருந்தது.

அத்தகையதொரு பொதுக்கட்டமைப்பு 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடம் வெற்றிடமாகவே அமைகின்றது. 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியேற்றப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் அடுத்த தேர்தலிலேயே மக்களால் நிராகரிக்கப்படும் சூழமைவு காணப்பட்டது. 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்த போது அன்றைய மாணவர் ஒன்றியம் ‘தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்’ என வீரவசனம் பேசியிருந்தார்கள். எனினும் அவ் ஒன்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலிற்கே மக்களுக்கு சரியானதையும் நிராகரிக்க வேண்டியவர்களையும் வழிகாட்ட மாணவர் ஒன்றியம் தவறியிருந்தது.

இவ்வாறாக மக்களின் எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்புகளின் பலவீனங்களினாலேயே வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் எதிர்ப்புகளின் பிரதிபலிப்புகளை தேர்தல் முடிவுகளில் அவதானிக்க முடிவதில்லை.தேர்தல் நலன்களை மாத்திரம் மையப்படுத்தி இயங்கும் கட்சிகளும் வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் மக்கள் எதிர்ப்புகளையும் புறந்தள்ளி போகும் நிலைமைகள் காணப்படுகின்றது.

‘அணையா விளக்கு’ போராட்டத்தில் வருகை தந்த போது போராட்டக்காரர்களின் ஒரு சிலரின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட தமிழரசுக்கட்சியின் பிரமுகர்களும் அரசாங்க உறுப்பினர்களும் அதனை மக்களின் எதிர்ப்பு மற்றும் கோபங்களிலிருந்து திசைமாற்றும் செய்திகளையே வழங்கி இருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் வெளியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் ஆரம்பம் தமிழரசுக் கட்சியின் உட்பூசலாகவே அமைந்திருந்தது.

எனினும் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை வெளியே செல்லுமாறு எழுப்பப்பட்ட கோஷத்திற்குரியவர்களை முழுமையாக தமிழரசுக் கட்சியின் உட்பூசலின் எதிர்த்தரப்பினராக சுருக்கிவிட முடியாது. காணொளியில் இயல்பான மக்களின் கோபங்களும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் தம்மை நியாயப்படுத்த முழுமையாகவே எதிர்ப்பினை திசைதிருப்பும் வகையில் செய்தி வழங்கி இருந்தார்கள். இதனை தொடரும் வகையிலேயே அரசாங்க உறுப்பினர்களின் செய்திகளும் அமைந்திருந்தது.

அமைச்சர் மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் வருகையை போராட்டக்களம் அணுகிய விதத்தில் சில குறைபாடுகள் காணப்படவே செய்கின்றது. குறிப்பாக இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கோரும் போராட்ட களத்திற்கு ஆதரவு நல்கி வருகை தரும்போது அதனை போராட்ட ஏற்பாட்டாளர்கள் தந்திரமாக அணுகியிருக்க வேண்டும்.

போராட்டக்காரர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அரசாங்கத்தின் இரட்டை நிலையை தோலுரிக்கக்கூடிய வகையிலும் அல்லது இனப்படுகொலையை அரசாங்க உறுப்பினர்கள் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் களத்தை அணுகியிருக்க வேண்டும். எனினும் போராட்டக்களம் குழப்பகரமாக மாறியதன் பின்னணியில் மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே காணப்படுகின்றது.

அரசாங்க உறுப்பினர்களை வெளியேறுமாறு எழுப்பப்பட்ட கோஷத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே கூறப்பட்டது. எனினும் போராட்டக்களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் வெகுஜன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் மதுபோதையிலிருந்ததாகவும் அவர்களே தமக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்கள். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ‘அணையா விளக்கு’ போராட்டத்தை திசைதிருப்பி குழப்பவே சென்றிருந்தார்கள் என்ற நுண்ணிய அரசியலையே வெளிப்படுத்துகின்றது.

அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மக்கள் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட செய்தியின் பின்னரும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்தமையும் அமைகின்றது. இதன் நுண்ணிய அரசியலை கையாளும் உத்தியை ‘அணையா விளக்கு’ போராட்டம் திட்டமிட தவறியுள்ளது. எதிர்காலங்களில் இதனையும் அணுகும் விதத்திலேயே ஈழத்தமிழர்கள் போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டி உள்ளது.

எனவே, வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழ் அரசியல் கலாசாரத்தின் பொதுப்பண்பாகவே காணப்படுகின்றது. எனினும் முன்னைய காலங்களில் வெகுஜனங்களின் எதிர்ப்பை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு ஈழத்தமிழர்களிடம் காணப்பட்டமையால்இ வெகுஜன நிகழ்வுகளின் எதிர்ப்பு தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது. இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையாக அமைந்திருந்தது.

எனினும் 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களினை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு இன்மையால் அல்லது உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்புகளின் பலவீனங்களால் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்கள் தேர்தல்களில் பிரதிபலிக்கப்பட முடிவதில்லை. ஆதலால் வெகுஜன நிகழ்வுகளில் ஏற்படும் எதிர்ப்புக்களை அரசியல்வாதிகள் உதாசீனம் செய்பவர்களாகவே உள்ளனர். இதனூடாக வெகுஜன போராட்டங்களையும் மலினப்படுத்தும் செயற்பாடுகளையே அரசியல்வாதிகள் செய்யும் நிலைமைகளையே சமகாலத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படுத்தும் நம்பிக்கையீனமான அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளை தொடர்ச்சியாகவும் அதேவேளை தேர்தல்களில் பிரதிபலிப்பதனூடாக மாத்திரமே வெகுஜன போராட்டங்களை பாதுகாப்பதுடன், அரசியல்வாதிகளின் தான்தோன்றித் தனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

https://thinakkural.lk/article/318755

சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

3 months 2 weeks ago

மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள்

Published By: DIGITAL DESK 2

18 JUL, 2025 | 04:03 PM

image

நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள், புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை   மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக "செம்மணி புதைகுழி கிளறிய சில சிந்தனைகள்" என குறிப்பிட்டு அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்கள். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

1996ம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பரீட்சை முடிந்து செம்மணியூடாக வீடு திரும்பும் போது செம்மணியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையும் அவரைத்தேடிச் சென்ற அவரது தாயும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டு அங்கே புதைக்கப்பட்டதும் பின்னர் இந்நிகழ்வுகள் வெளிவந்து குற்றவாளிகள் கோர்ப்புரல் சோமரட்ண ராஜபக்ஷ ஆகியோர் குற்றவாளிகளாகக்காணப்பட்டு 1998 ஆண்டு ராஜபக்ஷவிற்கு மரண தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டு பின்னர் 2015ம் ஆண்டுக்குப்பின் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டவை என்பன வரலாறுகள்.

கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாகிய சோமரட்ண ராஜபக்ஷ கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் சில தமிழ் மக்கள் செம்மணியில் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தும் அப்போது செம்மணிப்பகுதி ஒரு பாரிய மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அதன்பின் அதுபற்றி எவரும் பெரிதாக பேசவில்லை. 

ஆயினும் சில மாதங்களுக்குமுன் செம்மணிப்பகுதியில் ஒரு தகனமேடைக்கெனத் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனித உடற் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் உத்தியோகபூர்வமாக அப்பகுதியில் நீதிமன்ற அனுசரணையுடன் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மேலும் பல எலும்புத் தொகுதிகள் கண்டுபடிக்கப்பட்டன. 

இரண்டு கட்டங்களாக இடம் பெற்ற அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக 10.7.2025 நிறுத்திவைக்கப்பட்போது ஏறக்குறைய 65 மனித உடற்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லையாயினும் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது அதிர்ச்சியூட்டுபவையாகவுள்ளன. 

அவற்றுள் சில சிறுவர்களுடையது. ஒரு இடத்தில் சிறுவர்களது விளையாட்டு பொம்மை, பாடசாலை புத்தகப்பை, சிறுமியின் உடை, சில வளையல்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

15.7.2025 அன்று இவ்வழக்குக்குப் பொறுப்பான நீதிவான் அ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வின் போது பிரசன்னமாயிருந்த தொல்லியல் பேராசிரிய ராஜ்சோம தேவாவும், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனும் பிரசன்னமாயிருந்தனர். 

அப்போது தொல்லியல் பேராசிரியரும் சட்ட வைத்திய நிபுணரும் தமது இடைக்கால அறிக்கைகளில் இப்புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகள் உள்ள இடம் ஒரு குற்றப்பிரதேசமாகவும், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்ற இடமாகவும் கருதப்படச்சான்றுகள் உள்ளன என்றும் குறிப்பாக 4-5 வயதுச்சிறுமியின் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சடலம் மேலும் இக்காலகட்டத்தில் கிருஷாந்தி கொல்லப்பட்டதற்கு (1996க்கு) முந்திய பிந்திய காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இராணுவ முகாம்களும் வீதிக்குவீதி சென்ற்றி போயின்ற்றுகளும் இருந்தன. 

சர்வ சாதாரணமாக கைதுகளும், கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போவதும் இடம்பெற்றுவந்தன. யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இது பற்றி பாராளுமன்றத்தில் 2025 ஆனி ஆடி இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் குறிப்பிட்டிருந்தார். 

ஆங்கிலத்தில் 'tip of the iceberg' (நீரில் மிதக்கும் பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய பகுதிஎன்று ஒரு சொற்றொடர் உண்டு, பாரிய பனிப்பாறைகள் கடலில் மிதந்துவரும் போது வெளியே கண்ணுக்குத்தெரியும் சிறியதொரு பனிக்கட்டியை இது குறிக்கின்றது. ஆனால் அதைப்போல் ஏழு மடங்கு பெரிய பனிப்பாறை தண்ணிருக்குள் அமிழ்ந்திருப்பது வெளியே தெரியாது) இது போலத்தான் இதுவரை செம்மணி சிந்துபாத்திப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 65 மனித எலும்புக்கூடுகள் (பாடசாலை சிறுமிகளது உட்பட) சோமரட்ண ராஜபக்சவின் சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த எலும்புக்கூடுகள் இப்பகுதியில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 600க்குக்குறையாத எலும்புக்கூடுகளாயிருக்கலாம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வரமுடியும்.

இதற்குமேலாக 2024ம் ஆண்டு குழாய்நீர் வசதி வழங்க சில அகழ்வு மேற்கொள்ளப்பட்ட கொக்கு தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இறந்த இளைஞர், இளம் பெண்களுடைய எலும்புக்கூடுகள், மன்னார் பாலத்துக்கருகாமையில் 'சதோச' வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை முடிவு வெளிவராத எலும்புகூட்டு விபரங்கள், திருக்கேதிஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் எல்லாவற்றையும் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டதை பார்க்கும் போது எலும்பு கூடுகள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களுள்  வீதமானவர்களது எலும்புக்கூடுகள் என்ற முடிவுக்கு வரலாம்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு கமிஷனர் வோக்கர் டக் இலங்கைக்கு வந்த போது யாழ்ப்பாணத்திற்கும் வந்திருந்தார். அப்போது அணையா விளக்கு' நிகழ்வும் சிவில் சமுகங்கள் செயற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் செம்மணிப்பகுதியில் ஏற்பாடு செய்த 3 நாள் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. 

ஆயினும் இவரது கருத்துக்கள் விசாரணையில் சர்வதேச பங்களிப்பை சுட்டிக்காட்டாதிருப்பது பெரும் ஏமாற்றமே. 3000 நாட்களைக் கடந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போரின் பின் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று கவனயீர்ப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த 3000 நாட்களில் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுள் 200க்கு மேற்பட்டவர்கள் தமது உறவுகளைக் காணாது இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்கு வந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடும் 'பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை' என்று தான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்த அரசின் செயற்பாடு ஒரு அங்குலம் தானும் முன்னேறவில்லை. நல்லிணக்கத்தைக்கொணர்வோம் என்று பதவிக்கு வந்த தற்போதைய அரசு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை சம்பந்தமாக அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே உள்ளன. 

வீதிகள் திறக்கப்பட்டாலும்  மறுபுறத்தில்  இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில வீதிகள் காணிகள் இன்னும் முறைப்படி விடுவிக்கப்படவில்லை. பாரம்பரியக்காணிகள் கிழக்கில் தமிழரது பெரும்பான்மையினருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. 

வெடுக்குநாறி, குருத்தூர், தையிட்டி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் தொன்மை மிகு இடங்கள் பறிக்கப்பட்டமைக்கு தீர்வு காணப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்பட்டபாடில்லை. 

2009 ம் ஆண்டு யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த பின் போர்க்குற்றங்கள் (சரணடைந்தவர்களைக் கொல்வது உதாரணம் : இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்கள்) பற்றிய பொறுப்புக்கூறல் இதுவரை இடம் பெறவில்லை. 

செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார் திருக்கேதிஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள புனித குழிகள் பற்றிய அகழ்வுக்கும் ஆய்வுக்கும் உள்நாட்டில் நிபுணத்துவம் இல்லையென்று தெரிந்தும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு அனுமதி மறுப்பு. போர்க்காலத்தில் இடம் பெற்ற படுகொலைகள் உதாரணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் ஆலயக்குண்டு வீச்சு, நாகர்கோவில் குண்டுவீச்சு, புனித ஜேம்ஸ் ஆலய குண்டுவீச்சு, மடு தேவாலய செல் வீச்சு, மூதூர் வெளிநாட்டு  தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை, திருகோணமலையில் பரீட்சை எழுதிமுடித்திருந்த 5 மாணவர் படுகொலை போன்றவை எவற்றிலும் உள்நாட்டுப் பொறிமுறையில் ஒரு அங்குலம் முதலாக முன்னேற்றம் இல்லை.

இதனால் தான் தமிழ் மக்கள் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட சில விடயங்களிலாவது வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டிருக்க வேண்டும். சாத்வீரசேகர, விமல்வீரவன்ச, விமல ரத்னதேரர் போன்றவர்களது இனவாத கருத்துக்களுக்கு இவ் அரசும் அடிபணிகிறது போலத் தென்படுகிறது.

2009ம் ஆண்டுக்குமுன் குறிப்பாக 30 ஆண்டுகாலம் நடந்த உக்கிரமான மோதல்களில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் விமானக்குண்டு வீச்சுக்கள் மூலமும் தரையில் கடத்தப்பட்டதும், கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு, கடலில் சாதாரண பயணிகள் கொல்லப்பட்டதாலும் (குமுதினி படுகொலை) ஆசியாவை இனப்படுகொலை அல்லது இனச்சுத்திகரிப்புக்களின் வெளிப்பாடுகளே. 

அத்துடன் யாழ் நூலக எரிப்பு, பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் பெளத்த விகாரைகள் நிர்மாணம் எல்லாம் இனஅழிப்பின் பல்வேறு பரிமாணங்களே. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 2009ம் ஆண்டுக்குப்பின் யுத்த வெற்றி நாள் கொண்டாடப்பட்டு கடற்படை, விமானப்படை, தரைப்படையினருக்கு யுத்தகால வீரதீரச்செயல்களுக்குப்பதவி உயர்வுகளும், பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்டவற்றுள் எந்த வீரதீரச்செயல்களுக்காக இப்பதக்கங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுகின்றன? இது போன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி நிகழாது, நல்லிணக்கமே எமது குறிக்கோள் என்று பதவிக்கு வந்த இவ்வரசு இவ்வருட வெற்றி விழாவில் மேற்படி வீர தீரச்செயல்களுக்காக பதவி உயர்வுகளும் பதக்கங்களும் வழங்கியிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/220320

Checked
Thu, 11/06/2025 - 15:04
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed