அரசியல் அலசல்

அரசியல் யாப்பை மீறும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம்

3 months 2 weeks ago

அரசியல் யாப்பை மீறும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம்

இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா? 

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

 

28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட  அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீறுகின்ற சட்டவிரோத தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை அதிர்ச்சி அளிக்கும் – வெட்கக்கேடான செயல் ஆகும்.

1. ஒன்று இத்தீர்மானத்தின் அடிப்படை தவறுகள்.
2. இத் தீர்மானம் செயற்படுத்த முடியாத ஒன்று.

இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபை நிரல். ஒன்பதாம் அட்டவணையின் 11ஆம் பிரிவின் முதல் (11.1) பகுதியின் பிரகாரம்;

போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர, பொது மருத்துவமனைகள் யாவையும், கிராமிய மருத்துவமனைகளையும் மகப்பேற்று மருத்துவமனைகளையும் தாபித்தலும் பேணுதலும்மாகாண சபைக்கு உரித்தானது.

இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா? இக்கூட்டத்தில் ஒருவர் கூட இது அரசியல் யாப்பை மீறும் செயல். இது மாகாண சபை அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய தீர்மானத்தை இயற்றுவது சட்டவிரோதமானது என கருத்து தெரிவித்ததாக தகவல் இல்லை.

மேலும் இத்தீர்மானத்தை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றளவில் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இத் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் யாப்புக்கு முரணாக ஜனாதிபதியால் கூட செயல்பட முடியாது. எனவே இத்தீர்மானம் நடவடிக்கைக்குதவாத ஒன்று என்பதை கூட இங்கிருந்த அதிகாரிகள் புரிந்து கொள்ளாமை  அவர்களது ஆற்றல், ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகிறது.

விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது 

இவை அனைத்துக்கும் மேலாக இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். கிடைக்கப்பெறும் தகவல்களின்படி செல்வம் அடைக்கலநாதன் இங்கிலாந்தில் இருப்பதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; மருத்துவரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சத்தியலிங்கம் கலந்து கொள்ளவில்லை; ரவிகரன் மட்டுமே கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. ஏனையோர் தமிழ் தேசியப் பரப்பு சாராத ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஸ்தானுமே.

இங்கு இத்தீர்மானத்தை எதிர்த்து, மாகாண அதிகாரங்களை மத்தியிடம் தாரை வார்க்கும் இத்தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்தினால் பெறப்பட்ட அதிகாரங்களை வேண்டாம் என்று மீழளிக்கும், வெட்கம் கெட்ட செயற்பாடு என்பதை அறைந்து சொல்லி இருக்க வேண்டியவர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரவிகரனே.

ஆனால் ‘இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. எனினும் இது மாகாண சபைகளின் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கும் ஓர் செயல்பாடாக பார்க்கப்படக்கூடும்’ என்று அச்சம் வெளியிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதாவது, மிகப்பெரும் போராட்டத்தால் பெறப்பட்ட மாகாண அதிகாரங்களை மத்திக்கு மீண்டும் வழங்குவதில் எனக்கு சிக்கல் ஏதும் இல்லை எனக் கூறும் இவர், எதைப் பெறுவதற்காக நாடாளுமன்றம் சென்றிருக்கிறார் என்பதற்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் ‘இது மாகாணங்களின்  அதிகாரங்களை விட்டுக் கொடுப்பதாக பார்க்கப்படக்கூடும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பார்க்கப்படக்கூடும் அல்ல இது மிகப்பெரும் தியாகங்களால் கிடைத்த அதிகாரம். இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதுதான் என்பதில் அவருக்கு ஐயம் இருப்பது போல் உள்ளது. மேலும் இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் வெட்கம் கெட்ட செயல் என்பது அவருக்குமே புரியவில்லையா? இவற்றை புரியாமல் நாடாளுமன்றத்தில் என்ன உரிமை கேட்பார்?

இந்த அரசியல் யாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு மேலாக இங்கிருந்த உயர் மட்டத்தினர் எவருக்கும் 75 ஆண்டு காலத்துக்கு மேலாக தமிழ் மக்களும் தலைமைகளும் அதிகார பகிர்வுக்காகவே போராடினார்கள் என்பது தெரியாதா? அதற்காக எத்தனை லட்சம் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டது என்பது தெரியாதா? இன்றும் 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து அதிகாரங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் தமிழ் தலைமைகளாலும் இந்தியாவாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியாதா? இத்துணை தியாகங்கள் மத்தியில் பெறப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்தியிடம் வழங்குவது எமது கையாலாகத் தனத்தை எதிரியிடம் காண்பிக்கும் செயல் என்பது புரியாதா?

அதிகாரப் பகிர்வு பற்றி தமிழ் தலைமைகளோ இந்தியாவோ ஆட்சியாளரிடம் பேசும்போது; வழங்கப்பட்டதையே திருப்பித் தருகிறார்கள். அவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரப் பகிர்வு தேவையில்லை. சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காகவே அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றனர் என்ற சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் பொய்யான – போலியான பிரசாரங்களுக்கு இது தீனி போடுவதாகும்.

சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது ஆகும். யாப்புக்கு முரணான சட்டவிரோதமான இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மீறி அதனை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் 650 வரையிலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்க மத்திய அரசு முனைந்த போது இது 13 வது திருத்தத்திற்கு முரணானது- சட்டவிரோதமானது என வழக்குத்தாக்கல் செய்து அவை நிறுத்தப்பட்டது போல் இதுவும் தடுக்கப்படும்.

வடக்கிலிருந்து 50 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மத்திய அரசு கையகப்படுத்த முனைந்தது. பல பாடசாலைகளின் அபிவிருத்தி குழுக்கள் இதற்காக செயல்பட்டனர். இது சட்டவிரோதமானது என்பது தெரிந்தே மத்திய அமைச்சர்கள் இதனை செயல்படுத்த முற்பட்டனர். ஆனால் இக்கட்டுரையாளர் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்ததுடன், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து மாகாண கல்வி அமைச்சு செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்களுக்கு இவ்வனைத்து பாடசாலைகளிலும் உள்ள தேசிய பாடசாலை பெயர் பலகைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டமும் கைவிடப்பட்டது.

மத்திய ஆட்சியாளர்கள் எவருக்கும் தமிழ் மக்களுக்கு அல்லது வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்வது அறவே விருப்பம் இல்லாத ஒன்று. எவ்வாறு மாகாண சபையை ஒழித்துக் கட்டலாம் என திட்டங்கள் தீட்டும் இனவாத ஆட்சியாளர்களுக்கு நாமே வலிந்து உதவும் மோசமான செயற்பாடே இத்தீர்மானம். நெருப்பு வைக்கும் ராசாவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரிகள் செயல்பாடு போன்றது இத் தீர்மானம். அடுத்து வரும் கூட்டத்தில் இத் தீர்மானத்தை மீள பெறுவது மட்டுமே ஓரளவான பிராயச்சித்தமாக அமையும்.

வைத்தியசாலையின் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்தல் என்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் கீழ் அன்றைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, மன்னார் வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாக (தேசிய பாடசாலை போல்) பெயர் பலகை மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்தபோது அப்படியானால் நீங்களே அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என ஏதோ தனது வீட்டு பணத்தில் செலவு செய்வது போல் பதிலளித்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்; வடக்குக் கிழக்கில் வரிகளை வசூலிப்பதை மாகாண அரசிடம் விடுங்கள், எமது வைத்தியசாலைகளை நாமே பார்த்து கொள்கிறோம் என பதிலளித்திருந்தார்.

இவ்வாறு மத்திய மாகாணத்து குறித்தான அதிகாரங்களை பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போது தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே தக்கவைக்கப்படுகின்றன. ஆனால் இத்தீர்மானம் ‘நீங்கள் பறிக்க வேண்டாம்; நாங்களே தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருகிறோம்’ என்பதாக அமைந்துள்ளது. மாகாணத்திற்கு உரித்தான கல்வி அதிகாரத்தை தேசிய பாடசாலை என்கிற சட்டவிரோத யாப்பு விரோத கருத்துருவாக்கத்தின் ஊடாக பறிக்க முனைந்து சட்டப் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதேபோன்று சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த வன்னி மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை மதிக்கிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை மனதில் நிறுத்தி எதிர்கால செயற்பாடுகள் அமைந்தால் மட்டுமே தமிழினம் உரிமைகளுடனும் அதிகாரத்துடனும் வாழ முடியும். அதிகாரத்துடன் வாழ்வதா? அடிமையாக வீழ்வதா? தேவை சிந்தனைத் தெளிவு.

https://thinakkural.lk/article/318640

காணி நிலம் வேண்டும் பராசக்தி - நிலாந்தன்

3 months 2 weeks ago

காணி நிலம் வேண்டும் பராசக்தி

viber_image_2024-03-18_09-54-35-963-02-1

சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே சமயம் இதில் கிடைத்த வெற்றிக்கு உரிமை கோரி அடிபடும் தமிழ்க் கட்சிகள் அதைப்போல ஆழமான அதோடு தொடர்புடைய ஒரு விடயத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

தாய் நிலத்தை நிலப் பறிப்பிலிருந்து காப்பாற்றுவது அவசியம். அதேயளவு அவசியமானது, தாய் நிலத்தைச் சனச் செழிப்புடையதாகக் கட்டியெழுப்புவது. ஒருபுறம் உரிமை கோரப்படாத,அல்லது உரிமை கோர ஆட்கள் இல்லாத, அல்லது உரிமை கோரத் தேவையான ஆவணங்கள் இல்லாத காணிகள். இன்னொருபுறம் ஒரு துண்டுக் காணிகூடச் சொந்தமாக வைத்திருக்காத ஏழைகள்.

ஒருபுறம் பற்றைகள் மண்டிக் கிடக்கும் அல்லது பூதம் காக்கும் பிரம்மாண்டமான மாளிகைகள். அல்லது சிசிரீவி கமராக்களால் அல்லது செக்யூரிட்டி நிறுவனங்களால் பாதுகாக்கப்படும் பிரமாண்டமான மாளிகைகள். இன்னொருபுறம் ஒரு துண்டுக் காணி கூட இல்லாத ஒரு தொகுதி மக்கள்.

தமிழ் மக்கள் நிலப் பறிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். அதே சமயம் தாய் நிலத்தில் உள்ள ஆளில்லாத வீடுகளையும் காணிகளையும் வீடில்லாதவர்களுக்கும் காணி இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க முன் வர வேண்டும். அதை ஒரு தேசக் கடமையாகச் செய்ய வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஒன்றாகச் செய்ய வேண்டும்.

அண்மையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றின் போது,யாழ் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த,ஒரு பெண் செயல்பாட்டாளர் சொன்னார், தன்னுடைய பகுதிக்குள் மட்டும் 24 ஆளில்லாத வீடுகள் உண்டு என்று. அதுபோல மானிப்பாயில் அந்தோணியார் கோவிலில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு ஒன்றின்போது அங்கு வந்திருந்த இளவாலை மறைக் கோட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவினர் தந்த தகவல்களின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக பத்துக்குக் குறையாத ஆளில்லாத வீடுகள் உண்டு என்று தெரிகிறது.

தமிழர்கள் மத்தியில் ஆளில்லாத வீடுகள் இரண்டு வகைப்படும். முதலாவது வகை, ஆள் இல்லாத அல்லது பாழடைந்த சிதைந்த வீடுகள். இரண்டாவது வகை புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டியெழுப்பும் மாடமாளிகைகள். புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களில் காணிகளை வாங்கி அல்லது வீடுகளை வாங்கி அவற்றைப் புனரமைத்து வருகிறார்கள். இந்த வீடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நிரந்தரமாக வசிப்பதில்லை. பருவ காலப் பறவைகளைப்போல அவ்வப்போது வந்து போகிறார்கள். ஊர்த் திருவிழாக்களுக்கு அல்லது நல்லது கெட்டதுக்கு வந்து போகிறார்கள். அவர்களுடைய அந்தஸ்தின் சின்னமாகிய அந்த வீட்டை ஒன்றில் சிசிரீவி கமராக்கள் கண்காணிக்கும். அல்லது பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணிக்கும்.

இவ்வாறாக, தமிழர் தாயகத்தில் இரண்டு வகை ஆளில்லாத வீடுகள் உண்டு. அதிலும் குறிப்பாக ஆளில்லாத பாழடைந்த வீடுகள் என்று பார்த்தால் தீவுப் பகுதிதான் அவ்வாறான வீடுகளை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தீவிலேயே ஏன் இந்தப் பிராந்தியத்திலேயே ஆளில்லா வீடுகளை அதிகமாகக் கொண்ட கிராமங்களைத் தீவுப் பகுதியிலும் காணமுடியும். இவ்வாறு ஆளில்லா வீடுகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேசத்தில், ஆண்டு அனுபவிக்க ஆளில்லாத காணிகளை அரசாங்கம் அபகரிக்க முயற்சிக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பலாலியில் காணிகளை விடுவிக்கும் நிகழ்வொன்றில் பேசிய ஒரு தளபதி, “தமிழ் மக்கள் காணிக்காகப் போராடுகிறார்கள். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் வந்து குடியேறுகிறார்கள் இல்லை” என்று பேசியதாக ஒரு சமயப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.

முகாமை அண்டிய பகுதிகளில் ஏன் மக்கள் குடியேற மறுக்கிறார்கள் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பு அவர்கள் இருந்தது ஒரு கிராமம். ஆனால் மீளக்கூடியமர்த்தும் போது அவர்களுக்குக் கையளிக்கப்படுவது பெரும்பாலும் ஒரு வெட்டை. ஒரு பெரிய முகாமின் சிறிய பகுதியாக மாற்றப்பட்டு வெட்டையாக்கப்பட்ட ஒரு இடம். எனவே அங்கே திரும்ப ஒரு கிராமத்தை ஸ்தாபிப்பதற்கு பல ஆண்டுகள் செல்லும். கிராமம் என்பது நிலம் மட்டுமல்ல. கிணறு வேண்டும்; கோயில் வேண்டும்; குளம் வேண்டும்; பாடசாலைகள் அரச அலுவலகங்கள் வேண்டும்; மின்சார, நீர் வினியோகங்கள் வேண்டும்… அதற்குரிய எல்லா உட்கட்டுமானங்களும் கட்டியெழுப்பப்படும் பொழுதுதான் அது ஒரு கிராமமாக மீள எழுச்சி பெறும்.எனவே மீளக் குடியேற்றம் எனப்படுவது தனிய நிலத்தைக் கையளிப்பது மட்டுமல்ல. அங்கு ஏற்கனவே செழிப்பாக இருந்து பின்னர் சிதைக்கப்பட்ட அழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை மீளக்கட்டி எழுப்புவது. வெட்டப்பட்ட வேர்களில் இருந்து மீண்டும் ஒரு வனத்தை உருவாக்குவது போல.

ruins-of-war-574x1024.jpg

மேலும், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்த மக்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இப்பொழுது இடம்பெயர்ந்து வாழும் புதிய இடங்களுக்குப் பழக்கப்பட்டு விட்டன. புதிய தலைமுறையின் தொழில் வாய்ப்புகளும் புதிய இடத்தைச் சுற்றித் தான் இருக்கும். இதனால் பூர்வ நிலத்துக்குத் திரும்பிச் செல்ல அந்தப் புதிய தலைமுறை தயங்குகிறது.

இப்படிப்பட்டதோர் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், அண்மையில் கிடைத்த சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி,வடபகுதியில் சனத்தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பிள்ளைப்பேறு விகிதம் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் குறைந்து கொண்டே போகிறது. ஒருபுறம் ஜனத்தொகை சிறுக்கின்றது. இன்னொருபுறம் நிலமும் சிறுக்கின்றது.

தவிர,இருக்கின்ற நிலத்திலும் ஆளில்லா வீடுகள். எனவே இந்த விடயத்தில் நிலத்தை அபகரிக்க முற்படும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திடமிருந்து தாய் நிலத்தைக் காப்பாற்றுவதற்காக போராடும் அதே சமயம் தாய் நிலத்தைச் சனப்புழக்கம் உடையதாகக் கட்டியெழுப்புவது பற்றியும் சிந்திக்க வேண்டும். ஆளில்லா வீடுகளை வைத்திருக்கும் உள்நாட்டுத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்களிடமுள்ள மேலதிக காணிகளையும் வீடுகளையும் வீடில்லாதவர்களுக்கும் காணிகள் இல்லாதவர்களுக்கும் தானமாக வழங்கலாம்.

தமது பூர்வீக காணியை,பூர்வீக வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாரும் தங்களுடைய பூர்வீக வீட்டையும் காணியையும் தானம் பண்ண வேண்டும் என்று இந்தக் கட்டுரை கேட்கவில்லை.மாறாக தமிழர் தாயகத்தில் பூதம் காக்கும் ஆளில்லாத வீடுகளை வீடில்லாதவர்களுக்கும்,பற்றைகள் மண்டிக் கிடக்கும் காணிகளை நிலம் இல்லாதவர்களுக்கும் விரும்பினவர்கள் தானமாக வழங்கலாம். அதை ஒரு அரசியல் செயற்பாட்டு இயக்கமாக முன்னெடுக்கலாம்

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வினோபா அவ்வாறு பூமிதான இயக்கம் ஒன்றை நடத்தினார். சுதந்திரப் போராளியான அவர் காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகி குறிப்பாக ஆந்திராவில் இடம்பெற்ற நிலமற்ற விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் 1951ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக இருக்க முடியும். அதற்கு முன்னுதாரணங்கள் ஏற்கனவே உண்டு.கிளிநொச்சியில் பன்னங்கண்டிக் கிராமத்தில் சிவா பசுபதி கமத்தில் உள்ள மேட்டு நிலம் அவ்வாறு அங்கே குடியிருக்கும் மலையக மக்களுக்கு கொடையாக வழங்கப்பட்டது.

அது ஒரு வித்தியாசமான கதை. 2017 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் உள்ள காவேரி கலாமன்றத்தின் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றதற்காக ஒஸ்ரேலியாவில் இருந்து மாலதி வரன் எனப்படும் ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவர்களோடு இணைந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்ய வேண்டிய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் உரிய நேரத்தில் வராமல் பிந்தி வந்திருக்கிறார்.ஏன் என்று கேட்டபோது, பன்னங்கண்டி கிராமத்தில் நடக்கும் நிலமற்ற மக்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற காரணத்தால் பிந்தி வந்ததாகக் கூறியுள்ளார். உரையாடலின் போக்கில் அந்த காணியின் பெயர் சிவா பசுபதி கமம் என்றும் கூறியுள்ளார்.சிவா பசுபதி என்ற பெயரைக் கேட்டதும் அவர்களோடு பயணம் செய்த மாலதி வரன், இடையில் குறுக்கிட்டு அது தனது தந்தையாகிய முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதியின் கமம்தான் என்று கூறியுள்ளார். அதனால் அவரை கமத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் அங்கே போராடும் மக்களோடு கதைக்க வைத்துள்ளார்கள். மக்களோடு கதைத்த மாலதி,வெளிநாடுகளில் வசிக்கும் தனது எழு சகோதரர்களோடு கதைத்த பின் அந்தக் கமத்தைப் போராடும் மக்களுக்கே வழங்கத் தான் தயார் என்றும் உறுதி கூறியுள்ளார். உடனடியாகவே கொழும்புக்குச் சென்று தனது சகோதரர்களோடு கதைத்து அவர்களுடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு கிளிநொச்சிக்குத் திரும்பி வந்திருக்கிறார்.அந்தக் கமத்தில் நீண்ட காலம் வசித்து வந்த நிலமற்ற மக்களுக்கு அந்தக் கமத்தைச் சேர்ந்த 33 ஏக்கர் மேட்டு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

bb46791d-cb22-4046-9c86-1dab2c46a552-ccc

மாலதி வரனும் காவேரி கலா மன்ற இயக்குனரும்

இது போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம். நிலம் இல்லாத தன் இனத்தவனுக்கு நிலத்தைக் கொடுப்பது என்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஒன்று. மருத்துவர் மாலதி வரனைப் போல பல புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது காணிகளை, வீடுகளைத் தானமாக வழங்கி வருகிறார்கள்.

காணி உரிமைக்கும் சாதி ஒடுக்கு முறைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சித் தேவைகளுக்காக இலங்கைக்கு வந்த பேராசிரியர் இசபெல்லா எனப்படும் புலமையாளரை சமூக ஏற்றத்தாழ்வுகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றேன்.அக்கிரமங்களுக்குச் சென்று ஆராய்ந்தபின் அவர் கேட்டார்,”சாதி ஒடுக்குமுறைக்கும் நில உரிமைக்கும் இடையே தொடர்புகள் உண்டல்லவா?” என்று. அது மிக வெளிப்படையான எளிமையான ஓருண்மை.

எனவே நிலமில்லாத மக்களுக்கு தமது நிலத்தை வழங்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலச் சுவாந்தர்கள் முன் வர வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன் வர வேண்டும். அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்படி பணியை ஒருங்கிணைக்கலாம். அதை ஒரு செயல்வாதமாகவே ஒழுங்கமைக்கலாம்.விரைவில் உருவாக்கப்படவிருக்கும் பிரதேச சபைகள் அதைச் செய்யலாம்.

நில அபகரிப்புக்கு எதிராக போராடச் செயற்பாட்டாளர்கள் தேவை.அதுபோலவே நிலத்தைத் தானமாக கொடுப்பதற்கும் செயற்பாட்டு இயக்கங்களும் அறக் கொடைகளும் தேவை. தாய் நிலத்தைக் காப்பாற்றுவது என்பது தாய் நிலத்தை அபகரிக்க முற்படும் அரச வர்த்தமானிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல,அதேயளவு முக்கியத்துவத்துவமுடையது,தாய் நிலத்தை சனச் செழிப்பு மிக்கதாக மாற்றுவது.காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்குவது;வீடற்ற மக்களுக்கு வீடுகளை வழங்குவது. அதுதான் உண்மையான தேசியக் கூட்டுணர்வு.

https://www.nillanthan.com/7440/

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 months 2 weeks ago

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

May 30, 2025 11:36 am

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் உரத்து கூறிவரும் நிலையில் அந்தக்குரலுக்கு ஆதரவான குரல்கள் உலக நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கையில் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா போற்றப்படுகின்றது.

இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்களவர்களுக்கும் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கும் 3 தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஒரு போரின் முடிவு இலங்கையின் வடக்கு கிழக்கில் ”இனப்படுகொலை” யாக நினைவுகொள்ளப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் ”இனப்படுகொலை”என்பதனை நிராகரித்து ”போர் வெற்றிக் கொண்டாட்டம்” என்ற பெயரில் வெற்றிநாளாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில்தான் இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது ”தமிழ் இனப்படுகொலை” என்பதனை கனடா ஏனைய உலக நாடுகளுக்கு உரத்துக் கூறியுள்ளது.

இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் இறுதிக்கட்ட யுத்த தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, ”தமிழின அழிப்பு நினைவகம்” என்ற பெயரில் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்தும் ”தமிழினப் படுகொலை”நடந்தது என்பதனை சர்வதேச மயப்படுத்தியுள்ளது.

கனடாவின் இந்த துணிச்சலான,மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கின்ற, சிறுபான்மையினங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்ற,அநீதிகளை சமரசமின்றி எதிர்க்கின்ற,நியாயத்தின் பக்கம் நிற்கின்ற ,உண்மையை உரத்துக்கூறுகின்ற உயரிய அரசியலும் உயர்ந்த குணமும்தான் இன்று இலங்கை அரசுக்கும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளதுடன் இவர்களை நெருப்பில் விழுந்த புழுக்களாக துடிக்கவும் துள்ளவும் வைத்துள்ளது.

தமிழின படுகொலையை நினைவுகூரும் வகையில் கனடா, பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை அழைத்து,இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

canada-2.jpg

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் , 2006 இல் கனடாவானது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்காவுசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.பிரம்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகின்றது எனவும் கனடிய தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடும் தொனியில் கண்டனம் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையிலுள்ள பிரதான தமிழ் தேசியக் கட்சிகள்,அமைப்புக்கள்,புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்கள் கனடா அரசுக்கும் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணுக்கும் கனேடிய தூதுவருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தன. இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியான இ லங்கைத் தமிழரசுக்கட்சி கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தது.

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்று கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்ததுடன் தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றையும் கையளித்துள்ளார். மேற்குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே கனேடிய ஸ்தானிகரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில்தான் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட ”தமிழின படுகொலை நினைவுத்தூபி”போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப்படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி மூலம் அச்சுறுத்தியுள்ளார்.

பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்ட போது பிரம்டன் நகர மேயர், ஏனைய நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் , வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியுலர் காரியாலயம் இந்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை தெரிவித்து இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ளது. இது கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கனடாவினால் அமுல்படுத்தப்பட்ட இனவழிப்பு வாரத்தை ஏற்க முடியாது என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் இலங்கையின் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் கனடா அசரவில்லை. பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் இது தொடர்பில் கூறுகையில் .நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்கக் கூடாது.இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் மேலும், தமிழர் படுகொலை நினைவுத்தூபி என் நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன. எனவே இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பினால்தான் கனடாவிலுள்ள சிங்களவர்கள் இந்த நினைவுத்தூபி தொடர்பில் சிங்கக்கொடியை தூக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு அடுத்த அடியாக கனடாவின் ரொரென்ரோவின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்டனில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் ராஜபக்ஸக்கள் சிங்கள இனவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில்தான் கனடாவின் அடுத்த நினைவுத்தூபி அறிவிப்பு இலங்கை அரசுக்கும் சிங்களபேரினவாதிகளுக்கும் கடும் சினத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கே.பாலா

https://oruvan.com/canadas-memorial-and-the-screaming-sri-lankan-government/

Checked
Wed, 09/17/2025 - 10:49
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed