Aggregator
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார். அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்கள் ஆகவோ அல்லது புயல்களாகவோ மாறலாம் என்பதை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்திருந்தார்.
அரச வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வானிலை மாற்றங்களை அறிவிக்கும். வரக்கூடிய ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கும். ஊடகங்கள் அவற்றை உடனுக்குடன் அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்யும். இம்முறை டித்வா புயல் தாக்கப்போவது குறித்து அரச வளிமண்டலவியல் திணைக்களம் பொருத்தமான எச்சரிக்கைகளை முன்னறிவிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. புயல் அனுராதபுரத்தை அடையும் வரையிலும் அதுதொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனால் தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பிரதீபராஜா இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைக் குறித்து ஏற்கனவே சில நாட்களுக்கு அல்லது பல நாட்களுக்கு முன் எச்சரிப்பதுண்டு. அவருடைய எச்சரிக்கைகள் சில சமயங்களில் பிழைக்கலாம். மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம். அதனால் சில சமயங்களில் மீனவர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்லது ஏனைய துறையினருக்கோ நட்டங்கள் ஏற்படலாம். ஆனால் அவர் எதிர்வு கூறியதுபோல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களோடு ஒப்பிடுகையில், வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருட்சேதம் பொருட்படுத்தத்தக்கது அல்ல.
மழைக்காலங்களில் மலைகளில் மண் சரிவு ஏற்படுவது வழமை. ஒவ்வொரு பருவ மழைக்கும் மலையக மக்கள் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள். மழை வீழ்ச்சி அதிகரிக்கும்போது,மண் சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உண்டு. அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இக்கட்டுரையில் முன் கூறியதுபோல வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சிரமங்கள், நட்டங்களை விடவும் அந்த முன்னெச்சரிக்கையின்படி நிகழும் அனர்த்தத்தால் இழக்கும் உயிர்களின் நட்டம் பெரிது. நாடு இப்பொழுது அவ்வாறான உயிர்ச் சேதத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறதா?.
ஒரு புயல் தாக்கப் போகிறது என்பதனை பிரதீபராஜா ஏற்கனவே தெளிவாகக் கூறியிருந்தார். அதை அவர் வழமைபோல தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பகிரவில்லை. இந்தமுறை வடமாகாண ஆளுநர் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைத்து உரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பிரதீபராஜா தெரிவித்த தகவல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன. அதன்படி 130 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பேரிடர் நாட்டை நெருங்கி வருவதனை அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.
இந்த விடயத்தில் இப்போதுள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் அவருக்கு முன் இருந்த ஒரு பெண் ஆளுநர் பிரதீபராஜாவை பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் ஆளுநரின் காலத்தில் நடந்த ஒரு மெய்நிகர் சந்திப்பில் பிரதீபராஜா தனது கருத்தைக் கூற முற்பட்டபோது ஆளுநர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக அரச வளிமண்டலவியல் திணைக்களங்கள் தரும் தகவல்களைத்தான் நாங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பொருள்பட அவர் பிரதிபராஜாவை அவமதித்திருக்கிறார்.
ஆனால் இம்முறை டித்வா புயலுக்கு முன்னரே வடமாகாண ஆளுநர் பிரதீபராஜாவுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். பிரதீபராஜா எச்சரித்ததை போலவே புயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதீபராஜாவைப் போலவே சென்னையை மையமாகக் கொண்ட செல்வக்குமார் என்ற வானிலை முன்னறிவிப்பாளரும் இலங்கையை நோக்கி முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்.
“வானிலை அறிவியல்” என்ற யூடியூப் தளத்தில், செல்வகுமார் இலங்கைக்கான வானிலை அறிக்கை என்ற தலைப்பில் ஒரு காணொளியை 24ஆம் திகதி வெளியிட்டார். நவம்பர் 26 தொடக்கம் 28 வரையிலுமான மூன்று நாட்களில் முன்னப்பொழுதும் காணாத பெருமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ( https://youtu.be/p-ayF49Ov7Q?si=lf20WuDgEkL-hr0R )
இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் கால்நடைகளையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்ய வேண்டிவரும் என்பதையும் செல்வகுமார் முன்கூட்டியே மிகச்சரியாக ஊகித்திருந்தார். தன்னுடைய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மிகைப்படுத்தல்கள் இருந்திருக்கலாம். ஆனால் இழக்க கொடுத்தவர்களின் நோக்குநிலையில் இருந்துபார்த்தால் அவை மிகைப்படுத்தலாகத் தெரியாது.
அதாவது நாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புவியியல் துறை பேராசிரியரும் நாட்டுக்கு வெளியே அயலில் தமிழகத்திலிருந்து ஒரு துறைசார் வல்லுநரும் எச்சரித்த போதும்கூட அந்த எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழவில்லை. அதற்குக் காரணம் என்ன?
பொதுவாக சமூக வலைத்தளங்களில் யூடியூப்களில் வரும் செய்திகள், தகவல்கள், எச்சரிக்கைகள் தொடர்பாக பொருட்படுத்தாத ஒரு பொதுப் புத்தி வளர்ந்து வருகிறது. யூடியூப் தலைப்புக்கள் அல்லது எச்சரிக்கைகள் மிகைப் படுத்தப்பட்டவை என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. வியூவர்ஸை கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் போடும் யூடியூப் பாரம்பரியமானது பாரதூரமான விடையங்களின் மீதான சீரியஸான கவனிப்பைக் குறைத்து விடுகிறது. பல யூடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை. இதனால் தலைப்பைக் கண்டு உள்நுழைந்து ஏமாற்றமடைந்த வியூவர்ஸ் குறிப்பாக அறிவுதெளிந்த, புத்திசாலித்தனமான வியூவர்ஸ் மீண்டும் ஒரு தடவை யூடியூப்களின் கவர்ச்சியான தலைப்புகளை, எச்சரிக்கைகளைக் கண்டு ஏமாற விரும்புவதில்லை. இந்த யூடியூப் பண்பாடு, வானிலை முன்னெச்சரிக்கை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
யூடியூப் பார்வையாளர்கள் மட்டுமல்ல ஏனைய சமூக வலைத்தள நுகர்வோரும் அவ்வாறுதான். எல்லாவற்றையும் ஸ்குரோல் பண்ணிக் கடக்கும் ஒரு சமூக வலைத்தளச் சூழல் வளர்ந்து விட்டது. உண்மையான எச்சரிக்கை எது உண்மையான ஆபத்து எது என்பதனை பகுத்தறிய முடியாத அளவுக்கு சமூக வலைத்தளச் சூழல் மேலோட்டமானதாக,அதிகம் ஜனரஞ்சகமானதாகக் காணப்படுகிறது.
பிரதீபராஜாவையும் செல்வகுமாரையும் தொடர்ந்து அவதானித்துவரும் சீரியசான சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் அவர்களுடைய எச்சரிக்கைகள் முன்னுணர்த்தும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன கூறுவதுபோல,இலங்கை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அழிவை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கலாமா ?
நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன,நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும், உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். அது இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம், உரியநேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாமையே என்றும் கூறினார். வழக்கமாக 160 மில்லிமீற்றர் மழை பெய்தாலே மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டு. ஆனால், இம்முறை 400 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், மக்களுக்கு அதுகுறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக, நவம்பர் 27ஆம்திகதி ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்து, 26ஆம் திகதி நடைபெறவிருந்த உத்தியோகபூர்வ கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், சாதாரண மக்களுக்கு அந்த ஆபத்துக் குறித்து அறிவிக்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். நாவலப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்கள உபஅலுவலகம் நீர்மட்டத்தை அளவிட்டிருந்தும்,அந்தத் தகவலை கம்பளை மக்களுக்குப் பரிமாறத் தவறியதே பல உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறினார். மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணை திறக்கப்பட்டமை நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்
புயலுக்கு பின்னரான உரையாடல்கள் அவ்வாறு அரசு திணைக்களங்களின் மீதான விமர்சனங்களாகவே காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியினர் அரசு திணைக்களங்களில் பிழை பிடிக்கிறார்கள் என்று அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் விரிவுரையாளர்கள் நியாயம் கூறுகிறார்கள்.
உண்மை. பேரியற்கையோடு ஒப்பிடுகையில் மனிதர்கள் அற்பமானவர்கள். சீனர்களுடைய பாரம்பரிய ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அந்த நிலக் காட்சிகளில் இயற்கை மிகப் பிரமாண்டமாக வரையப்படும். மனிதர்களோ மிகச் சிறிய,அற்ப புள்ளிகளாக காட்டப்படுவார்கள்.
எனவே பேரியற்கையின் போக்கை துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம்தான். ஆனால் அவ்வாறு சில துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறிய போதிலும் அதை சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் கவனத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமா? முன்னெச்சரிக்கை மிக்க வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நட்டத்தை விடவும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இடர் பெரியது.இழப்பு பெரியது. துயரம் பெரியது.
டித்வா புயல் அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.
டித்வா புயல் அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.

டித்வா புயல் அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.
ரணில் விக்கிரமசிங்கவால் “எல்போர்ட்” அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா புயல் ஒரு சோதனையாக வந்திருக்கிறது. கடந்த 14 மாதங்களாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எதிர்க் கட்சிகள் நுகேகொடவில் ஒர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தி மெல்லத் தலைதூக்க முயற்சித்தன.அந்தப் பேரணி திறந்துவிட்ட வாய்ப்புகளைவிட அதிக வாய்ப்புகளை டித்வா புயல் எதிர்க்கட்சிகளுக்கு திறந்து விட்டிருக்கிறது. இது ஒரு எல்போர்ட் அரசாங்கம் என்று நிரூபிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.முதலாவது குற்றச்சாட்டு, அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு நடக்கவில்லை என்பது. இதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13 ஆம் திகதியே எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது.மேலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா நொவம்பர் மாதக் கடைசியில் வரக்கூடிய புயலைக் குறித்து முன்னெச்சரிக்கை விடுத்திருந்தார். அவரைப்போலவே தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன்னுடைய யூடியூப் தளத்தில் புயலின் வருகையைக் குறித்து எச்சரித்திருந்தார்.ஆனால் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? புயல் நாட்டைத் தாக்கப்போகிறது என்பதனை வளிமண்டலவியல் திணைக்களம் உரிய நேரத்தில்,உரிய வேகத்தில் எச்சரித்திருக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இரண்டாவது குற்றச்சாட்டு,அரசு திணைக்களங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்பது. பாதிக்கப்பட்ட மக்களும் அதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இந்த விடயத்தில் முழு அளவுக்கு ஒருங்கிணைப்போடு செயற்பட்டு இருந்திருந்தால் இழப்பின் அளவைக் குறைத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.குறிப்பாக வளிமண்டலவியல் திணைக்களம்,நீர்பாசனத் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவத் நிலையம் போன்றன இந்த விடயத்தில் மக்களை எச்சரிக்கத் தவறி விட்டதாகவும்,தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்போடு செயல்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரட்ன,ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை ஒரே வேளையில் திறக்கப்பட்டதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைக் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மக்களை எச்சரிக்கத் தவறியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விடயத்தில் திணைக்களுங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாதது சேதத்தை அதிகப்படுத்தி இருப்பதனால் வருங்காலத்தில் நதிப் படுக்கைகளுக்கு என்று அதிகார சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.
மூன்றாவது குற்றச்சாட்டு,முன்னெச்சரிக்கை உணர்வோடு வருமுன் காக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து இருந்திருந்தால் சேதத்தின் அளவைக் குறைத்திருக்கலாம் என்பது. பருவ மழையின்போது மண் சரிவு ஏற்படும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.மழை வீழ்ச்சி அதிகரிக்கும் போது மண் சரிவு அபாயம் உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லா அரசுக்கு கட்டமைப்புக்களுக்கும் தெரியும் என்பதால் வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களில் இருந்து மக்களை முன்கூட்டியே இடம்மாற்றி இருந்திருந்தால் சேதத்தின் அளவை குறைத்து இருக்கலாமா என்ற கேள்வி உண்டு. இந்த விடயத்தில் அரசாங்கம் அனர்த்த காலம் ஒன்றை நோக்கி வினைத்திறனோடு செயல்படவில்லை என்றும் அனர்த்தத்தின் போதும் அதன் பின்னரும் நிலைமைகளைச் சரியாக முகாமை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, அவை வழமையான எதிர்ப்பு அரசியல் என்ற பெட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட முடியாது. அதே சமயம் நுகேகொட பேரணிக்குப்பின் அரசங்கத்தை விமர்சிப்பதற்கு கிடைத்த அதிகரித்த வாய்ப்பாக புயலுக்கு பின்னரான அரசியற் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதும் உண்மை.
எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும்,வானிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இயற்கை அனர்த்தங்களைக் குறித்து மிகச்சரியாகக் கணிக்க முடிவதில்லை என்றும் அவ்வாறு கணிப்பிட்டு இருந்தாலும் அழிவுகளை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதில் உண்மை உண்டு.
ஆனால் இந்திய வானிலை அவதானிப்பு மையம் உரிய காலத்தில் எச்சரித்திருந்த போதிலும் துறைசார் வல்லுநர்கள் சிலர் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் இதுதொடர்பாக எச்சரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏன் அதனை கவனத்தில் எடுக்கத் தவறின?
இப்பொழுது அழிவு நடந்து விட்டது.இனி இறந்த காலத்தைப் போஸ்ட் மோர்ட்டம் செய்து கொண்டிருப்பதை விடவும்,மண்ணில் புதைந்திருப்பவர்களை எப்படி மீட்பது? உடைந்து தொங்கும் பாலங்களை எப்படிச் சீரமைப்பது? சிதைந்துபோன வாழ்வை எப்படி மீளக் கட்டியெழுப்புவது? என்பதுதான் முதன்மைச் சவால்.
நாட்டின் முழுக் கவனமும் புயலுக்குப் பின்னரான மனிதாபிமான நிலவரங்களின் மீது குவிந்திருக்கின்றது.நாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அதிகளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்கின்றன.
தமிழ்ப் பகுதிகளில் உயிர் இழப்பு ஒப்பீட்டளவில் குறைவு.ஆனால் சொத்திழப்பு உண்டு.அடிக்கட்டுமானங்கள் சேதமடைந்துவிட்டன.முல்லைத்தீவு மாவட்டம் சில நாட்கள் துண்டிக்கப்பட்டிருந்தது.மன்னாரில் 15000க்கும் குறையாத கால்நடைகள் கொல்லப்பட்டு விட்டன.திருகோணமலையிலும் மலையகத்திலும் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றன.புயலுக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கழித்து இக்கட்டுரை எழுதப்படுகையிலும்கூட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை.இது அனர்த்தத்தின் பாரதூரத் தன்மையைக் காட்டுகின்றது.
அதனால்தான் உலக சமூகம் இலங்கைக்கு உதவ முன் வந்திருக்கிறது முதலில் உதவ வந்தது இந்தியா.அதிகம் உதவியதும் இந்தியா.அதைத் தொடர்ந்து பெரும்பாலான அயல்நாடுகளும் உட்பட உலக சமூகம் தாராளமாக உதவி செய்து வருகிறது.அனர்த்த காலம் இலங்கை மீதான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.இந்த அனுதாபம் ஒரு விதத்தில் அனுர அரசாங்கத்தைப் பலப்படுத்தக் கூடியது.
அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீடுகளின் பருமன் அது மக்களுடைய நம்பிக்கையை வெல்வதற்கு முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகின்றது. இதற்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது முன்னிருந்த அரசாங்கங்கள் அறிவித்திராத பெருந்தொகை இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தைக் கட்டியெழுப்ப முடியும். இது வெறும் வாக்குறுதிதான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.நடைமுறையில் அரசாங்கம் எவ்வளவு தொகையைக் கொடுக்கப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இழப்பீட்டுத் தொகை ஒப்பீட்டளவில் பெரியது.
மேலும்,சிதைந்த நகரங்களையும் வாழ்வையும் மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் அரச நிறுவனங்களோடு பொது மக்களும் தன்னார்வமாக இணைந்து வருகிறார்கள்.பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்த மக்கள், அல்லது ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்தவர்கள, தாங்களாகத் திரண்டு,தன்னார்வமாக முன்வந்து,ஏனைய பகுதிகளுக்கு உதவுகிறார்கள். மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உதவுகிறார்கள்.சேறு படிந்த தெருக்களை,வீடுகளைக் கழுவிச் சுத்தமாக்குகிறார்கள்.பொதுமக்கள் மத்தியில் இருந்து நிவாரணங்களைத் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிக் கொண்டு போகிறார்கள். இந்த மனிதாபிமானத் தன்னார்வச் சூழல் அரசாங்கத்துக்கு அனுகூலமானது.
குறிப்பாக வடக்கிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் தன்னார்வலர்களும் மலையகத்தை நோக்கி உதவிகளோடு போகிறார்கள்.புயல் ஓய்ந்த கையோடு தனித்து விடப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட முல்லைத்தீவை நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து தன்னார்வலர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் போனார்கள். தங்களால் இயன்ற நிவாரணங்களைக் கொடுத்தார்கள். உதவிகளைச் செய்தார்கள்.இப்பொழுது மலையகத்தை நோக்கிப் போகிறார்கள். அனர்த்த காலம் தமிழ் மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை உணர்வு பூர்வமாகப் பலப்படுத்தியிருக்கிறது- அது மட்டுமல்ல அனுர அரசாங்கத்தையும் அது பலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாகத் தெரிகின்றன.
மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்
மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்
மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்
டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்வேறு விடயங்களிலும் உள்ளூராட்சி சபைகள் ஆர்வம் காட்டின.
மழை;வெள்ளம் ;புயல் எச்சரிக்கை எனினும் மக்கள் பரவலாக துயிலும் இல்லங்களை நோக்கி வந்தார்கள். பெரும்பாலான துயிலும் இல்லங்களில் மக்கள் குடைகளைப் பிடித்தபடி அஞ்சலி செய்தார்கள். மழை சற்றுக் கடுமையாக இருந்த இடங்களில் சுடருக்குக் குடை பிடித்து அதைப் பாதுகாத்துக் கொண்டு நனைந்தபடி நின்றார்கள். குறிப்பாக ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சுடர் அணையக் கூடாது என்பதற்காக தமது தலைக் கவசத்தை சுடருக்கு மேல் பிடித்து சுடரைப் பாதுகாத்ததாக ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார்.
இவ்வாறு பரவலாகவும் செறிவாகவும் பெருமடுப்பிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணிக்குள், அதுதொடர்பான உரையாடல்களின் மீதான கவனக் குவிப்பை புயல் திசை திருப்பியது. மாவீரர் நாளுக்காக அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடிகள் நனைந்து தொங்கிய தெருக்களைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்தது. மாவீரர் நாளுக்காக கட்டப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் நாட்டுக்குள் வந்து விட்டது. புயலின் அகோரம் காரணமாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் கவனக்குவிப்பு மாவீரர் நாளில் இருந்து புயலை நோக்கித் திரும்பியது.
புயல் வடக்கு கிழக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தியது. அதிக உயிரிழப்பு தெற்கில்தான். வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்கள் சிதைவடைந்தன. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் துண்டிக்கப்பட்டது; மன்னாரில் ஆயிரக் கணக்கில் மாடுகள் இறந்தன. எனினும் வடக்கில் உயிரிழப்பு என்று பார்த்தால் மொத்தம் நான்கு பேர்தான். ஒருவர் தெற்கு நோக்கி பேருந்தில் சென்ற போது பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் உயிரிழந்தவர். மற்றவர் கடற்தொழிலாளி. ஏனைய இருவரும் வவுனியாவிலிருந்து அவர்கள் பயணம் செய்த வாகனம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்கள்.
ஒருபுறம் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர்பாராத திசைகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. இன்னொரு புறம் வணிகர்களில் ஒருபகுதியினர் மனிதாபிமானமாக நடந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நோக்கிப் பல்வேறு தரப்புகளும் உதவிக்கரம் நீட்டின. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள்,புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் உதவிகளைச் செய்தனர். நாடுகளைப் பொறுத்தவரை முதலில் உதவியது இந்தியா. அதன் பின் அமெரிக்கா, பாகிஸ்தான், மாலை தீவுகள், சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் உதவி புரிந்தன.
ஆனால் உள்ளூரில், வணிகர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினார்கள். மரக்கறி,முட்டை போன்றவற்றின் விலைகளை உயர்த்தினார்கள். புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரத்தின் பெரும்பாலான சிலிண்டர் கடைகளில் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். திடீரென்று சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. பாதைகள் அடைபட்ட காரணத்தால் சிலிண்டர்கள் வரவில்லை என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிலிண்டர்களைத்தான் கடைகளில் வைத்து விற்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேவையான குறிப்பிட்ட தொகை சிலிண்டர்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அதுதான் வியாபார வழமை.பாதைகள் அடைபட்டதைச் சாட்டாக வைத்து அவர்கள் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?
சிலிண்டர்களுக்கு நிர்ணய விலை உண்டு. விலை கூட்டி விற்க முடியாது. ஆனால் மரக்கறிகளுக்கு அப்படியல்ல. மரக்கறிகளை விரும்பின விலைக்கு விற்றார்ர்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமான விலைகள். பச்சை மிளகாயில் இருந்து இஞ்சி வரை, விலை சடுதியாக உயர்ந்தது. வெள்ளம் வடிந்த பின்னரும், புயல் ஓய்ந்த பின்னரும், மரக்கறிகளின் விலை குறையவில்லை. ஒரு பகுதி மரக்கறி வியாபாரிகளின் இதயம் இளகவில்லை.
மரக்கறிகள் மட்டுமல்ல முட்டை, கோழி இறைச்சி போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் பேரண்ட்ஸ் வகை இறைச்சிக் கோழிகள் கிடைக்கவில்லை. ஏன் என்று கேட்டபோது தெற்கில் இருந்துதான் அவை வருகின்றன. பாதைகள் அடைபட்டதால் அவை வரவில்லை என்று சொன்னார்கள். புயலுக்கு முன் முட்டையின் விலை 30 ரூபாய். புயலோடு முட்டை விலை 36ரூபாய். ஏனென்றால் முட்டை ஒவ்வொரு நாளும் வவுனியாவுக்கு அப்பாலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முட்டை வியாபாரி தெற்கில் தனக்கு வழமையாக முட்டை சப்ளை செய்யும் மொத்த வியாபாரி அனுப்பிய வாட்சப் ஒளிப்படம் ஒன்றைக் காட்டினார். அதில் கோழிப் பண்ணையில் இருந்த கோழிகள் புயலில் அடிபட்டுச் செத்துக் கிடந்தன.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. புயல் வந்து, வெள்ளம் பெருகி பாதைகள் தடைபட்டதும் மரக்கறிகளின் விலை,முட்டை விலை உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு. பேரன்ட்ஸ் வகைக் கோழிகள் கிடைக்கவில்லை. அப்படியென்றால் வடக்கின் பொருளாதாரம் மேற்கண்ட பொருட்களுக்காக தெற்கில் தங்கியிருக்கின்றதா? வடக்கிலிருந்து தெற்குக்கான பாதைகள் அடைபட்டால் யாழ்ப்பாணத்தவர்களுக்கு முட்டை, பச்சை மிளகாய், பேரன்ட்ஸ் கோழி இறைச்சி போன்றவை கிடைக்காதா?
புயல் எழுப்பிய கேள்விகளில் இது முக்கியமானது. மற்றொரு கேள்வி, தொலைத் தொடர்பு தொடர்பானது. தமிழ் மக்களில் அதிகமானவர்கள் குறிப்பாக கிராமப் பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துவது டயலக் தொலைபேசி அட்டைகளைத்தான். ஆனால் புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் டயலக் சிம்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை. அந்த சிம்களை பயன்படுத்திய பலர் தொடர்புகளை இழந்து தவித்தார்கள். அனர்த்த காலங்களில் தொலைத் தொடர்பும் ஓர் அத்தியாவசிய சேவைதான். தொலைதொடர்பு இல்லையென்றால் ஆபத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்படுவார்கள். இது கடந்த புயல் நாட்களில் நடந்தது. அது இயற்கை அனர்த்தம் மட்டுமல்ல தொலைத்தொடர்பு அனர்த்தமும்கூட.
டயலக் கொம்பனி உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்புக் கொம்பெனிகள் சாதாரண மக்களிடம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி பணத்தை வசூலிக்கின்றன இந்த குற்றச்சாட்டு பரவலாக உண்டு. சிம்மை விற்கும் பொழுது அல்லது சேவையை தொடங்கும் பொழுது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அதன் மூலமே அப்பாவி மக்களிடமிருந்து சிறுகச்சிறுக பணத்தைச் சுரண்டுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. கேள்வி கேட்காத அப்பாவியான ஒரு வாடிக்கையாளரிடம் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை சுரண்டினால் கூட லட்சக்கணக்கானவரிடம் இருந்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ரூபாய்களைச் சுரண்ட முடியும். இவ்வாறு ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காகியிருந்த தொலைதொடர்புக் கொம்பனிகள் குறிப்பாக டயலாக் கொம்பனி இம்முறை புயலோடு அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.
இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் டயலக் தொலைத்தொடர்பு சீராகவில்லை. பலருடைய டயலாக் இன்டர்நெட் இணைப்பு மோசமாக இருக்கிறது. உயிரிழந்தவர்கள்,பாதிக்கப்பட்டவர்களில் ஒருபகுதியினர் இவ்வாறு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறமுடியும். டயலக் கொம்பனி அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
புயல் தணிந்த காலையில், யாழ்ப்பாணத்தவர்கள் பொருட்களை வாங்க தெருக்களில் தயங்கித் தயங்கி இறங்கிய வேளையில், திருநெல்வேலியில் ஒரு கொலை நடந்தது. கொலைக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானவர்கள் இளவயதினர். சம்பவம் நடந்தது அதிகம் சனப்புழக்கமுள்ள ஓரிடம். திருநெல்வேலி சந்தைக்கு அருகே ஆடியபாதம் வீதி. ஒரு நபரை மூன்று பேர் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். அப்பகுதியில் நின்றவர்கள் அதில் சம்பந்தப்படாமல் விலகி விலகி நிற்கிறார்கள். யாருமே கொல்லப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. அங்கு கிடைத்த சிசிடிவி கமரா பதிவுகளின்படி அங்கு நின்ற அனைவருமே பார்வையாளர்களாக நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் அதைத் தடுக்கும் சக்தியற்றவர்களாக, அதைத் தடுக்கும் துணிச்சலற்றவர்களாக, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்பவர்களாகத்தான் அவர்கள் காணப்பட்டார்கள். இத்தனைக்கும் ஒரு காலம் தன் வீரத்துக்கும் தியாகத்துக்குமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மக்கள் கூட்டம். புயல் தணிந்த வேளை நடந்த கொலை அது. அந்தக் கொலையை விடக் கொடுமையானது, அதை கையாலாகாத சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம்.
அதேசமயம் அதே மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்துதான் இன்னொரு தொகுதி இளையவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிப் போனார்கள். ஆபத்தை எதிர்கொண்டு நனைந்து நனைந்து, பாதிக்கப்பட்ட மக்களை, தனித்து விடப்பட்ட மக்களைத் தேடித்தேடி உதவினார்கள்.
இந்த இரண்டுமே ஒரே சமூகத்தில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரணான காட்சிகள். ஆனால் இதற்குள்தான் இருக்கிறது தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் யதார்த்தம். ஒருபுறம் தானும் தன்பாடும் என்று கூட்டுப் புழுக்களாகப் பதுங்க முற்படும் கூட்டு மனோநிலை. இன்னொருபுறம் மழை,வெள்ளம்,புயல் என்பவற்றைத் தாண்டி ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களைத் தேடிச் செல்லும் இளையோர் கூட்டம். சரியான பொருத்தமான தலைமைகள் இந்த இளையவர்களை ஒருங்கிணைத்து இலட்சிய வேட்கை கொண்டவர்களாக வார்த்தெடுத்தால், அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது.
தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு.
பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல - ரணில் விக்கிரமசிங்க
பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல - ரணில் விக்கிரமசிங்க
பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல - ரணில் விக்கிரமசிங்க

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவால் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை கையாள இடமளிக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முரண்பாடான இந்த விடயத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி உடனடியாக கட்சித் தலைவர்களை அழைத்து முடிவை எடுக்க வேண்டும். இப்போது அரச அதிகாரம் ஜனாதிபதி அலுவலகத்தாலோ அல்லது பிரதமர் அலுவலகத்தாலோ நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குழுவால் தான் தற்போது நாட்டின் நிதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களும் தீர்மானிக்கப்படுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பாராளுமன்ற அதிகாரத்தை இழிவுப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை தீத்வா சூறாவளி அழிவுகளில் இருந்து மீள அரசாங்கத்திற்கு அனுபவம் குறைவாகவே உள்ளது. எனவே பேரிடர் மேலாண்மை மற்றும் புனரமைப்புக்கான கண்காணிப்புக் குழுவை பாராளுமன்றத்தால் நியமிப்பது பொருத்தமானது. அதன் தலைமைப் பதவியை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வகிக்க வேண்டும்.
அத்துடன் புனரமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அனைத்து மத மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்களை கொண்ட ஒரு சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். இந்தக் குழுவின் முதல் கூட்டத்திற்கு நாட்டின் நான்கு மகாநாயக்க தேரர்கள் தலைமை தாங்கினால், அது ஒரு பெரிய பலமாக இருக்கும். ஏனைய பிரதான மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுச் சமூகத்தில் ஒரு நல்ல நிலைப்பாடு உருவாகும்.
பேரிடருக்குப் பிறகு, 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால், பேரிடர் பணிகளை ஒப்படைக்கப்பட்ட அனைத்துத் திணைக்களங்கள், அரச பிரிவுகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் செயலற்றவர்களாகி விட்டனர். பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, உதவிகளை வழங்குவதில் அரசியல்மயமாக்கலைச் செய்ய முயற்சிக்கிறது. மற்றொரு சமாந்தரமான நிவாரண நிதியையும் நிறுவியும் உள்ளது. இந்த அழிவை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் ஒரு வியூகம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும். இன்னும் யார் இறந்தார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று கூட முழுமையாக கண்டறியப்படவில்லை என்றார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட 'ஒப்பரேஷன்' - அமைச்சர் சந்திரசேகர்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட 'ஒப்பரேஷன்' - அமைச்சர் சந்திரசேகர்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட 'ஒப்பரேஷன்' - அமைச்சர் சந்திரசேகர்
07 Dec, 2025 | 11:15 AM
![]()
வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்த விசேட 'ஒப்பரேஷன்' ஒன்று முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் அதில் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஒரு பெரும் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அனர்த்தத்தால் எமது மீனவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா ஒரு புறம் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது. அது எமக்கு ஆறுதலைத் தருகிறது.
ஆனால் மறுபுறத்தில் இடர் நிலைமையையும் கவனத்தில் கொள்ளாது இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக எமது கடற்பரப்புக்குள் பிரவேசித்து எமது கடல் வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள். இது நியாயமான ஒரு செயற்பாடு அல்ல.
இது குறித்து நாங்கள் பல தடவைகள் பல தரப்புக்களுடனும் பேசிவிட்டோம். ஆனால் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இல்லை. மாறாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துக்கொண்டே போகிறது.
தொப்புள்கொடி உறவுகள் என்கிறார்கள். ஆனால், அந்த தொப்புள்கொடி உறவுகளின் வளங்களை அள்ளிச் செல்வது சரியானதா? தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து, எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி எமது கடல் வளம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுடன் பேசவேண்டும்.
இவ்வாறு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடரும் பட்சத்தில் அதனைத் தடுப்பதற்கு எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்து 'விசேட ஒப்பரேஷன்' ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
07 December 2025

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய, ஊவா மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், எமது செய்திச் சேவை, அமைச்சரை தொடர்பு கொண்டு வினவியது.
இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், மும்மொழிக் கொள்ளையைப் பின்பற்றுமாறு அனைத்து அரச அலுவலகங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எனினும், கடந்த நாட்களில் அதனைப் பின்பற்றியிருக்கவில்லை என்றால் அது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அதற்கமைய நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களிலும் வெளியிடப்படும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்பது தொடர்பில், தாம் பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
adminDecember 7, 2025

யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பூங்காவின் (Old Park Jaffna) நிலம், அதிகாரிகளின் குறுகிய சிந்தனையாலும், அரசியல் தலையீடுகளாலும் குதறப்படுவதாக, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
🏛️ முக்கியக் குற்றச்சாட்டுகளும் கவலைகளும்:
பதவிப் பலி: பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினாலேயே பழைய பூங்கா இன்று அழகு இழந்து, அதன் மதிப்பு சிதைக்கப்படுவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
உள்ளக விளையாட்டரங்கு சர்ச்சை: பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கும் விடயம் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து, தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர் நீதிமன்றத்தையும்நாடியுள்ளனர்.
பதிலீடற்ற பெரும் சொத்து: பூங்காவின் தொன்மையையும், பெறுமதியையும் உணராமல், ‘அபிவிருத்தி’ என்ற போர்வையில் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் தன்னிச்சையான அதிகாரம்: ஆட்சிக்கு வரும் அரசுகளும், ஆளுநர்களும் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தங்கள் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் அதிகாரங்களைத் தன்னிச்சையாகப் பிரயோகிப்பதாகவும், அதனை அதிகாரிகள் ஆட்சேபணையின்றி நிறைவேற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
🛑 மாவட்டச் செயலராகச் சிவபாலசுந்தரத்தின் நேரடி நடவடிக்கை:
யாழ்ப்பாண மாவட்டச் செயலராக அவர் பணியாற்றிய 14 மாத கால அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஆளுநரின் ஆக்கிரமிப்பு முயற்சி: 2023ஆம் ஆண்டுப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அப்போதைய ஆளுநர் பழைய பூங்காவின் ஒரு பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து, ஏற்கனவே இருந்த ஆளுநர் அலுவலகத்தோடு புதிய கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தார். மேலும், காணியைப் பிரித்து வேலியிட்டு அது ஆளுநர் அலுவலகத்திற்குரியது என அத்துமீறலையும்செய்திருந்தார்.
கனரக இயந்திரங்கள் வெளியேற்றம்: ஒரு அதிகாலையில், மாநகர சபைக்குரிய கனரக இயந்திரங்கள் தனது அனுமதியின்றி ஆளுநரின் உத்தரவின்பேரில் பூங்காவுக்குள் வந்தபோது, உடனடியாக மாநகர ஆணையாளருடன் தொடர்புகொண்டு, “இது அரசாங்க அதிபரின் காணிக்குள் எனது அனுமதியில்லாமல் எவரும் எந்த வேலையும் செய்ய அனுமதியில்லை” என்று கூறி இயந்திரங்களை வெளியேறப் பணித்தார்.
அபிவிருத்தி ஒப்புதலை நிராகரிப்பு: நடைபயிலும் சாலை அமைக்கும் நோக்கில், ஆளுநர் நேரடியாகத் தொடர்புகொண்டு தடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோதும், பழைய பூங்கா அபிவிருத்தி பற்றித் தீர்மானிக்க வேண்டியவர் மாவட்டச் செயலரே என்றும், அதன் முன்மொழிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்விலேயே உள்ளது என்றும் ஆளுநருடன் விவாதித்தார். இறுதிவரை அதற்கான ஒப்புதலை அவர் வழங்கவில்லை, குறித்த வேலையும் நடைபெறவில்லை.
💔 பூங்காவின் இன்றைய நிலை:
“27 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெறுமதியான அமைவிடத்தில் வரலாற்றுப் பதிவுகள் பலதையும் கொண்ட இந்தக்காணியை எந்தவித தூரநோக்குமின்றி நினைத்தபடி துண்டாடி வெறும் ஒழுங்கற்ற கட்டிடக் காடாக்கி இன்று அழகிழந்து கிடக்கிறது பழைய பூங்கா!“
ஆளுநர் மாளிகை, ஆளுநர் அலுவலகம் போன்ற நகரைச் சுற்றியுள்ள அரியாலை, செம்மணி, கோப்பாய் போன்ற பகுதிகளுக்குக் கொண்டு போயிருக்க வேண்டிய அரச கட்டிடங்களை யாழ். நகரப் பழைய பூங்காவில் அமைத்து, பூங்காவைக் குதறி அலங்கோலப்படுத்தி வைத்திருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கண்டி, கொழும்பு போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் கூட பூங்காக்கள் தீண்டப்படாமல் பேணப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பூங்கா இவ்வாறு குதறப்படுவதைத் தடுத்தேயாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






