Aggregator
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன்
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன்
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன்
டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக் கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள்.
காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின் போது மட்டுமல்ல, இன முரண்பாடுகளின் போதும் உடனடியாகச் சுற்றி வளைக்கப்படும் மக்களாக, இன அழிப்புக்கு உள்ளாகும் மக்களாக அவர்களே கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் காணப்படுகிறார்கள்.
அவர்கள் மலிவான கூலிகளாக இச்சிறிய தீவுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் ஏறக்குறைய அடிமைகள் போலவே கொண்டுவரப்பட்டார்கள். அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அங்கிருந்து தொடங்குகிறது இன அழிப்பு.
அடுத்த கட்டம் மலையகத் தமிழரின் சனத்தொகையானது தென்னிலங்கைக்குள் ஒரு பெரிய தமிழ்ச் சனத்தொகையாகப் பல்கிப் பெருகுவதைத் தடுப்பதும், அதன்மூலம் ஈழத் தமிழர்களோடு அவர்கள் இணைந்து இலங்கைத் தீவில் மொத்தத் தமிழ்ச் சனத்தொகையைப் பலப்படுத்துவதைத் தடுக்கும் உள்நோக்கத்தோடும், மலையக தமிழர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. இப்படிப்பார்த்தால் இலங்கையில்,தமிழ் இனஅழிப்பின் தொடக்கம் மலையகம்தான்.
அதன்பின் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளின் போது முதலில் பலியாவது மலையக மக்கள்தான். அவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி வந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட்டார்கள் என்று கூறமுடியாது. ஏழை மலையகத் தமிழர்கள் வடக்கில் வீட்டு வேலைக்காரர்களாக,கடைகளிலும்ம் வன்னிப் பெருநிலத்தில் வயல்கள் தோட்டங்களிலும் மலிவுக் கூலிகளாக வேலை செய்தார்கள்.
வடக்கு கிழக்குக்கு வந்த மலையக மக்களை ஒப்பீட்டளவில் கௌரவமான நிலைக்கு உயர்த்திய நகரங்கள் இரண்டு.ஒன்று கிளிநொச்சி. மற்றது வவுனியா. அதிலும் கிளிநொச்சிதான் மலையகத் தமிழர்களை ஒப்பீட்டளவில் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் உயர் நிலைக்கு உயர்த்தியது. அது ஒரு குடியேற்றப் பட்டினம் என்பதனால், அங்கே மலையகத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் எல்லா வாய்ப்புகளையும் பெற்றார்கள்.கிளிநொச்சியின் பெரிய வியாபாரிகளாக, மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அதிபர்களாக, கல்வி அதிகாரிகளாக, நிர்வாகிகளாக, பொறியியலாளர்களாக, ஊடகவியலாளர்களாக, இன்னபிறவாக.. மலையகத் தமிழர்கள் அங்கே பலமாகக் காணப்படுகிறார்கள். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படட உத்தியோகப்பற்றற்ற ஒரு கணக்கெடுப்பின்படி அங்கே மொத்த சனத்தொகையில் அவர்களுடைய சனத்தொகை 40% இற்கும் குறையாது.
வவுனியாவில் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், அங்கே மலையகத் தமிழர்களைக் குடியமர்த்தும் வேலைகளை “காந்தியம்” ஒருங்கிணைத்தது. இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் எல்லைப்புறங்களில் சிங்கள குடியேற்றவாதிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் இடையிலான மனிதக் கவசங்களாகக் குடியமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் காந்தியம் அதை அவ்வாறு கருதிச் செய்யவில்லை என்பது,காந்தியத்தின் முக்கியஸ்தர்களை, அவர்களுடைய வாழ்க்கைக்கூடாக அறிந்து வைத்திருக்கும் எவருக்கும் தெரியும்.
இன்று வவனியாவில் தமிழ்ச் சனத்தொகையை, குறிப்பாக தேர்தல்களில் தமிழ் வாக்குகளின் ஒரு பகுதியைக் கட்டியெழுப்புவது மலையகத் தமிழர்கள்தான். அதாவது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான எல்லையில் தமிழ்ச் சனத்தொகையைப் பாதுகாப்பதில் மலையகத் தமிழர்களுக்குப் பங்குண்டு.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணியுரிமையை வழங்குவதற்கு மறுத்தால் மாற்று யோசனையாக மலையக மக்களை வடக்கு-கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார். அதேசமயம்,பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை வடக்குக்கிழக்குக்கு வருமாறு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகனும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கிலிருந்து இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவது இதுதான் முதல் தடவையல்ல,புளட் இயக்கத்தில் இருந்தவரும் மூத்த கவிஞரும், இப்பொழுது திரைப்படக் கலைஞராக இருப்பவருமாகிய,வ.ஐ.ச.ஜெயபாலன் இரு தசாப்தங்களுக்கு முன்பு தென்னிலங்கைப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அதைச் சுட்டிப்பாகக் கூடியிருந்தார். மலையகத் தமிழர்களை வடக்கு கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று. அப்பொழுதும் அந்தப் பேட்டிக்கு எதிர் வினைகள் வந்தன. இப்பொழுதும் சுமந்திரன் மற்றும் ஆறு.திருமுருகனின் அழைப்புகளுக்கு அவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழ வரைபடத்தை வரைந்து வைத்திருந்தது ஈரோஸ் இயக்கம்தான். மலையகத்தையும் உள்ளடக்கிய தமிழீழம் என்பது ராணுவரீதியாக மலையகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று அப்பொழுது விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் மலையகம் நிலத்தால், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட ஒரு தமிழ் நிலப் பரப்பு. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் ஆயுதமயப்படுத்தினால் அது அந்த சமூகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.
தமிழ் மக்களுடைய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணித் தளபதிகளாக பல மலையகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து எழுச்சி பெற்ற பல தளபதிகள், இடைநிலைத் தளபதிகள், அரசியல் பிரிவு முக்கியஸ்தர்கள் உண்டு. ஈழப் போராட்டம் மலையகத் தமிழர்களுக்கு கௌரவமான,மதிப்பு மிகுந்த இடத்தைக் கொடுத்தது.
தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அறிவு ஜீவிகளில் ஒருவராகிய மு.திருநாவுக்கரசு தன்னுடைய “இலங்கை அரசியல் யாப்பு:டொனமூரிலிருந்து இருந்து சிறுசேன வரை” என்ற நூலில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகிறார்….”மலையகத் தமிழரின் பிரச்சினையில்,அவர்கள் வாழும் மாலையகத்தைச் சார்ந்த புவியியல் பின்னணியில், அவர்களுக்குரிய ஓர் அரசியல் நிர்வாகப் பிரிவைக் கோரும் உரிமை அவர்களுக்கு உண்டு. (உதாரணமாக இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் இருப்பது போன்ற அமைப்பு). அந்த வகையில் அவர்களுக்கான தீர்வு புதிய யாப்பில் உருவாக்கப்பட வேண்டும்.
அதேவேளை மலையகத் தமிழர் விரும்புமிடத்து, ஈழத்தமிழ் மாநிலத்தின் குடிமக்களாகக் குடியேறும் உரிமை உடையவர் என்பதை ஈழத்தமிழ் மாநிலம் தனது யாப்பில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அவ்வாறு ஈழத்தமிழ் மாநிலத்தில் குடியேற விரும்பும் மலையத் தமிழர்களுக்கு காணி மற்றும் வீட்டு வசதிகளை ஈழத்தமிழ் மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு குடியேறிய குடும்பங்களில் ஒருவருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டிய பொறுப்பும் ஈழத்தமிழ் மாநில அரசுக்குரியதாகும்.”
மலையகத் தமிழர்களை ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து ஓர் இறுதித் தீர்வில் எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதற்கு திருநாவுக்கரசு முன்வைக்கும் முன்மொழிவு அது. அதேசமயம் மலையகத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக வரையறுத்து இறுதித் தீர்வில் அவர்களுக்கும் ஒரு பொருத்தமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது,கடந்த 16ஆண்டுகளுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியத் தரப்பால் முன்மொழிக்கப்பட்ட தீர்வு முன்மொழிவுகளில் கூறப்பட்டுள்ளது.
நிலத்தைத்தவிர அதாவது தாயகத்தைத்தவிர, மற்ற எல்லா விடயங்களிலும் ஒரே பண்புகளைக் கொண்டிருக்கும் இரண்டு மக்கள் கூட்டங்களும் தீர்வு முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்படுவதே பலம்.மலையகத் தமிழர் மத்தியில் ஒரு பலமான நடுத்தர வர்க்கம் மேலெழுந்துவிட்டது.ஒரு தேசிய இனமாக மலையகத் தமிழர்களைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியும். ஓர் இணைத் தேசிய இனமாக,ஈழத்து தமிழர்கள் மலையகத்தை நோக்கிச் செல்ல வேண்டியது ஈழத் தமிழர்களுடைய தவிர்க்கப்பட முடியாத ஒரு தேசியக் கடமை.மலையகத் தமிழரை அவர்களுடைய தாயத்தில் வைத்தே பலப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அதை நோக்கி தன்னால் முடிந்த எல்லாவறையும் செய்ய வேண்டும் ஒரு பேரிடர் காலம் தமிழ் ஐக்கியத்தை, தமிழ் சகோதரத்துவத்தைப் பலப்படுத்தியிருக்கிறது.
புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன்
புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன்
புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன்
புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல் சூழல் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தைப் பலப்படுத்தும்.
அனைத்துலக அளவில் பெரும்பாலான நாடுகள் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. குறிப்பாக முதலில் உதவியதும் இந்தியா. அதிகம் உதவியதும் இந்தியாதான். தவிர வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் உதவுகிறார்கள். சில புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு நிதி சேர்த்துக் கொடுக்கிறார்கள். அல்லது தாம் சேர்த்த நிதியை தாம் வாழும் நாட்டின் அரசாங்கத்துக்கு ஊடாகக் கொடுக்கிறார்கள்.
உள்நாட்டில் செழிப்பான ஒரு மனிதாபிமானச் சூழல் மேலெழுந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள், சிறிய சமூக அமைப்புக்கள் என்று பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் தனி நபர்களும் தன்னார்வமாக முன்வந்து உதவிகளைச் சேகரித்து, தேவைப்படும் மக்களுக்குத் கொண்டு சென்று கொடுக்கிறார்கள். நிவாரணத்தைச் சேகரிக்கும்பொழுது உள்ளூர் வணிகர்களும் காசு உள்ளவர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பகுதி ஒன்றில் ஒரு முதிய பெண் தன்னுடைய பங்குக்கு தன்னிடம் இருந்த இரண்டு பனடோல் மாத்திரை அட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தது ஒரு நிகழ்ச்சியான சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் தன்னார்வமாக இளையவர்களும் தொண்டு நிறுவனங்களும் நிவாரணங்களை சேகரித்துக் கொண்டு மலையகத்தை நோக்கிச் செல்கிறார்கள். புயல் ஓய்ந்த அடுத்தடுத்த நாட்களில் ஒரு பகுதியினர் தனித்துவிடப்பட்டிருக்கும் முல்லைத்தீவை நோக்கியும் வன்னியின் எனைய பகுதிகளை நோக்கியும் சென்றார்கள். அங்கே தங்களால் முடிந்த உதவிகளைச் செய்த பின் மலையையகத்தை நோக்கித் திரும்பினார்கள். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் மலையகத்தை நோக்கி உதவிகள் செல்கின்றன. புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலானது தமிழ் சகோதரத்துவத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம்கள் தங்களுடைய மதக் கட்டமைப்புகளுக்கு ஊடாகவும் தொண்டு நிறுவனங்களுக்கு ஊடாகவும் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிச் செல்கிறார்கள். உதாரணத்துக்கு,”கெலி ஓயா அபிவிருத்தி நிதியம்” என்ற அமைப்பு கண்டி மாவட்டத்தில்,உடுநுவர பிரதேச செயலர் பிரிவில்,பள்ளிவாசலை மையமாக கொண்டு இயங்குகிறது. டித்வா புயல் அழிவுகளின் பின் உருவாக்கப்படட அமைப்பு இது.
தென்னிலங்கையில் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி தன்னார்வமாகத் திரண்டு செல்கிறார்கள். அரச கட்டமைப்புகள் உதவிக்கு வரும் அதேவேளை, மக்கள் தாங்களாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். வெள்ளம் கட்டுக்கடங்காது ஓடிய பகுதிகளில் வீதிகள்,வீடுகள்,பொது இடங்கள் போன்றவற்றில் சேறு கழி போல மூடிக்கிடக்கின்றது. சில இடங்களில் கால் புதையக் கூடிய அளவுக்கு சேறு. அதனை அரச உதவி வரும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், அயலில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து அகற்றுகிறார்கள். தெருக்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் உள்ள சேற்றைக் கழுவி அகற்றுகிறார்கள். முறிந்து விழுந்த மரங்களையும் குப்பைகளையும் சேகரித்து ஓரிடத்தில் குவிக்கிறார்கள்.
இதுவிடயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே சமயத்தில் அரச கட்டமைப்புகள், அரசுசாரா கட்டமைப்புகள்,தன்னார்வலர்கள்,இவர்களோடு உதவிக்கு வந்த நாடுகளின் தொண்டர்கள்,படையினர் மற்றும் வெளிநாட்டவர்கள் என்று எல்லாத் தரப்பும் இணைந்து அந்தப் பகுதியை துப்புரவாக்கும் காட்சி அற்புதமானது. சில இடங்களில் உல்லாசப் பயணிகளாக வந்த வெள்ளைக்காரர்களும் காணப்பட்டார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களே மக்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டுச் செயற்பாடுகளில் ஜேவிபியின் அடிமட்ட வலைப்பின்னல் பலமாகச் செயல்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருப்பது ஜேவிபி. அது அடிப்படையில் ஓர் இயக்கம். அடிமட்ட கிராமிய வலைப் பின்னலைக் கொண்ட ஓர் இயக்கம். எனவே அவர்களிடம் உள்ள அடிமட்ட வலையமைப்பு புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கட்டமைத்து வருகிறது.
இவ்வாறாக டித்வா புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் என்பது ஒரு விதத்தில் அனுரவுக்குச் சாதகமானதாகவே காணப்படுகிறது. ஒருபுறம் நாட்டை நோக்கி உதவிகள் குவிக்கின்றன. இன்னொருபுறம்,ஒரு பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் அதிகம் நெகிழ்ச்சியானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் காணப்படுகிறது.
” (நாட்டில் நிலவும் )மிகவும் பலமான ஒரு சகோதரத்துவத்துக்கு நாங்கள் உயர் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். என்னைப் பொறுத்தவரை இது அசாதாரணமானது. நாடு முழுவதும் மக்களும் மக்கள் அமைப்புகளும் ஒன்றாக திரண்டு ஒருவர் மற்றவருக்கு உதவ முன்வருகிறார்கள். இதுபோன்ற சகோதரத்துவத்தை என்னுடைய நாட்டில் காண முடியுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது என்பதனை நான் இங்கே கூறவேண்டும். சிறீலங்கர்கள் காட்டும் இந்த வகையான சகோதரத்துவம் அசாதாரணமானது.” இவ்வாறு இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி அண்மையில் தெரிவித்துள்ளார்.
இது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல். ஆனால் இங்கு இயற்கை மட்டும் பேரிடரை ஏற்படுத்தவில்லை. மனிதத் தவறுகளும் இதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றன. ரணில் விக்கிரமசிங்க இந்த அரசாங்கம் பதவியேற்ற புதிதில் இது ஓர் “எல்போர்ட்” அரசாங்கம் என்று நக்கலடித்திருந்தார். அனர்த்த காலமொன்றை முகாமை செய்ய இந்த அரசாங்கத்தால் முடியவில்லை என்று நிரூபிப்பதற்கு எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.
நுகேகொட பேரணிக்குப் பின் டித்வா புயலானது எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அதிகரித்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது வழமைபோல எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதனை ஒரு மரபாகப் பேணுகின்றன என்று அரசுக்கு ஆதரவான அறிவுஜீவிகள் நியாயம் கற்பிக்கின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே முன்னெச்சரிக்கைகள் கிடைத்த போதிலும் அரசாங்கம் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையானதுபோல தெரிகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13ஆம் திகதியே எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது. அதுபோலவே தமிழக வானிலை முன்னறிவிப்பாளர்களில் ஒருவராகிய செல்வக்குமார், தன்னுடைய யூடியூப் தளத்தில் இதுதொடர்பாக இலங்கையை 24ஆம் திகதி எச்சரித்திருந்தார். குறிப்பாக முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அதைவிடக்குறிப்பாக,இந்தப் பேரிடரின் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டி வரலாம் என்றும் செல்வக்குமார் மிகத்துல்லியமாக எதிர்வு கூறியிருந்தார். அது மட்டுமல்ல தன்னுடைய முன்னெச்சரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சென்று சேர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார். அவருடைய முன்னெச்சரிக்கை அடங்கிய காணொளி 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இலங்கை வானிலை என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது
அதேபோல,யாழ்ப்பாணத்தில் வசிக்கும்,யாழ் பல்கலைக்கழக,புவியியல் துறையின் தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா ஒரு புயலைக் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அவர் அந்த எச்சரிக்கையை விட்டிருந்தார். அவர் வழமையாக தன்னுடைய முகநூல் தளத்தில் வானிலை அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
அவர் ஒரு புவியியல் துறை பேராசிரியர். இயற்கை அனர்த்தங்களைக் குறித்து எச்சரிப்பது அவருடைய உத்தியோகபூர்வ கடமை அல்ல. அதைச் செய்ய வேண்டியது வளி மண்டலவியல் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்றனதான். ஆனால் பிரதீபராஜா அதைத் தன்னார்வமாகச் செய்கிறார். இம்முறை பருவ மழையை முன்னிட்டு அவர் முகநூலில் பதிந்த நீண்ட முன்னெச்சரிக்கைகள் அடங்கிய பதிவு ஒன்றில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின் மடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து துறைசார் திணைக்களங்களின் பொறுப்பாளர்களையும் அழைத்து ஒரு கலந்தாலோசனை செய்தார்.
எனவே ஒரு பேரிடரைக் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று அரசாங்கம் கூறமுடியாது. இந்த முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய பாரதூரத் தன்மையோடு உள்வாங்கியிருக்கவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. மேலும் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறியதுபோல திணைக்களங்களுக்கு இடையில் போதிய ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசாங்கம் அனர்த்தமொன்றை வினைத்திறனுடன் முகாமை செய்யவில்லை என்று பொருள் கொள்ளத்தக்கது.
எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. எனினும், பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமான உதவிகளுக்கான சூழலானது,எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கூர்மையிழக்கச் செய்கின்றது. அதோடு அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகையும் மிகப்பெரியது. இதுவரையிலும் இருந்த அரசாங்கங்கள் இதுபோன்ற அனர்த்தங்களின் போது அறிவித்திராத பெரிய தொகை இழப்பீடு அது. இந்த இழப்பீட்டின்மூலம் அரசாங்கம் தன்னை ஏழைகளின் நண்பனாக மீண்டும் ஒரு தடவை நிரூபிக்க முயற்சிக்கின்றது. அரசாங்கம் அறிவித்திருக்கும் பெரிய அளவிலான இழப்பீட்டுத் தொகையானது மக்கள் அபிமானத்தை வென்றெடுப்பதற்கு உதவும். இதனாலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
எனவே புயலுக்கு பின்னரான அரசியல் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, அது மனிதாபிமானத் தேவைகளை முன்னிறுத்தும் சூழலாக மேலெழுகிறது. இதனால் அனுர அரசாங்கம் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்ததைப் போல பலவீனம் அடையவில்லை, மாறாக பலமடைந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.
நாடு புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி அதிலிருந்து முழுமையாக மீண்டெழாத கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.ரி.என்.ஏக்கும்) இடையே ஒரு சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது.
புயலின் அழிவுகளில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு எழவில்லை. சிதைந்த வீதிகள் பல இப்பொழுதும் திருத்தப்படவில்லை. உடைந்து தொங்கும் பாலங்கள் பல இப்பொழுதும் முழுமையாகக் கட்டப்படவில்லை.நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் முழுமையாக வீடு திரும்பவில்லை. சேறு படிந்த நகரங்களையும் வீதிகளையும் கட்டிடங்களையும் முழுமையாகத் துப்பரவாக்கி முடியவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மேற்படி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். இப்படி ஒரு சந்திப்புக்கு சுமந்திரன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.அதற்கு சுரேஷ் பிரமச்சந்திரன் பகிரங்கமாகப் பதில் கூறியதோடு சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது.
சந்திப்பின் பின் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனும் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வைக்கப்படுகிறது. எனவே மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்.
மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்திவருகிறது. அவ்வாறான ஒரு கருத்தரங்கு வவுனியாவில் நடந்தபோது அதில் சுமந்திரனும் கலந்து கொண்டார்;பேசினார். மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைக்க வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கேட்கின்றன.
மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட டி.ரி.என்.ஏ ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒரு கூட்டுக்குள் காணப்பட்டது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்பின் ஓர் எழுத்துமூல ஆவணத்தில் கையெழுத்திட்டு அந்த கூட்டு உருவாக்கப்பட்டது.அப்பொழுது நடந்த ஒர்ஊடகச் சந்திப்பில் கஜேந்திரக்குமார் பின்வருமாறு சொன்னார் “இந்தக் கூட்டு உடையுமாக இருந்தால் அதைத் தமிழ் மக்கள் தாங்க மாட்டார்கள்” என்று.
அவர் ஏன் அப்படி சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் நாடு தாங்க முடியாத ஒரு புயலில் சிக்கி மீண்டும் எழுந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் தாங்க முடியாத அந்த உடைவு விரைவில் ஏற்படுமா ?
ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியபோது அந்தக் கூட்டில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின.டி.ரி.என்.ஏ ஓர் இலட்சியக்கூட்டு அல்ல.அந்த கூட்டுக்குள் இருப்பவர்கள் அனைவருமே முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களைச் சேர்ந்த கட்சிகள்.முன்பு தமிழரசுக் கட்சியோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயல்பட்ட கட்சிகள்.பின்னர் தமிழரசுக் கட்சியின் பெரிய அண்ணன் தனத்தால் அந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியேறிய அல்லது வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்ட கட்சிகள்.
கடந்த ஆண்டு பொது வேட்பாளரை முன்நிறுத்திய கூட்டுக்குள்ளும் மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை காணப்பட்டன.அவர்களுடைய சொந்த வாக்கு வங்கி பலவீனமானது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை அவர்கள் வெல்லமுடியும்.ஆனால் மாகாண சபைத் தேர்தலிலோ, ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலோ பெரிய வெற்றிகளைப் பெறத் தேவையான வாக்கு வங்கி அவர்களுக்கு இல்லை.இந்த விடயத்தில் தங்களுடைய உயரம் என்னவென்று அந்த கட்சிகளுக்கும் தெரியும்.சங்குச் சின்னத்தை தங்களுடையதாக்கியதன் மூலம் தமது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தலாம் என்று அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை. எனவே வெற்றி பெறக்கூடிய கட்சியோடு இணைவதன் மூலம் தான் அவர்களால் எதிர்காலத்தில் கட்சிகளாக நின்றுநிலைக்க முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி இப்போதைக்கு தமிழரசுக் கட்சிதான். எனவே தமிழரசுக் கட்சியோடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் இந்தக் கட்சிகளுக்கு உண்டு.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததன்மூலம் அவர்கள் மூன்று உடன் நன்மைகளைப் பெற விரும்பினார்கள். முதலாவது, தங்களைத் துரோகிகள் என்றும் ஒட்டுக் குழுக்கள் என்றும் இந்தியாவின் ஆட்கள் என்றும் பெட்டிகட்டி,முத்திரை குத்திய தீவிர தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு கட்சியோடு கூட்டுக்குப் போவதன் மூலம், தமிழ்த் தேசியப் பரப்பில் தங்களைப் பற்றியுள்ள முற்கற்பிதங்களை அகற்றலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
இரண்டாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு தமிழரசுக் கட்சியோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திராத ஒரு பின்னணியில், தமது பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் இணக்கத்துக்கு போக வேண்டிய தேவை இருந்தது.
மூன்றாவது உள்ளூராட்சி சபைகைளை இயலுமானவரை கைப்பற்றுவது.
இப்பொழுதும் அந்த அடிப்படையில்தான் அவர்களை தமிழரசுக் கட்சியோடு பேச முற்பட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றிகளை உறுதிப்படுத்துவது. இப்பொழுது நடக்கும் பேச்சுக்கள் வெற்றி பெறுமாக இருந்தால் அதன் முதல்விளைவு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனிமைப்படுத்தப்படும்.அதே சமயம் டி.ரி.என்.ஏ.யும் மதிப்பிறக்கத்துக்கு உள்ளாகும்.
அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் அவர்கள் நம்பத்தக்க சக்திகள் அல்ல, இலட்சிய பாங்கான கட்சிகள் அல்ல என்ற அபிப்பிராயம் எண்பிக்கப்படும்.ஏற்கனவே பொது வேட்பாளர் விடையத்தில் சங்குச் சின்னத்தை எடுத்ததன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சிவில் சமூகங்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள். அதற்குப் பின்னர்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் எழுத்துமூல ஆவணத்தின் அடிப்படையில் கூட்டாகச் செயல்படச் சம்மதித்தார்கள்.இப்பொழுது தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதன்மூலம் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரவையுடனான தமது உறவைப் பலவீனப்படுத்தியிருக்கிறார்கள்.அதன் மூலம் எதிர்காலத்தில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத தரப்பு இது என்ற முற்கற்பிதம் மேலும் நிரூபிக்கப்படும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் அவர்களைக் கைவிடுமாக இருந்தால்,அல்லது கூட்டமைப்பாக செயற்பட்ட காலகட்டங்களில் மேடைகளில் பகிரங்கமாகவே அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்தது போல இனிமேலும் அழைப்பார்களாக இருந்தால், டி.ரி.என்.ஏ என்ற கூட்டுக்குள் இருக்கும் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்?
இக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கஜேந்திரகுமார் கூறியது போல,தமிழ்த் தேசியப் பேரவையுடனான அவர்களுடைய இணக்கம் உடையுமாக இருந்தால்,அதைத் தமிழ் மக்கள் தாங்குவார்களோ இல்லையோ டி.ரி.என்.ஏ. தாங்குமா என்ற கேள்வி உண்டு.
மாகாண சபைத் தேர்தலை நோக்கி மேற்படி சந்திப்பு நடந்திருக்கலாம். ஆனால் ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமா இல்லையா என்பது இப்பொழுதும் சந்தேகம்தான். புயலுக்கு பின்னரான அரசியல் சூழலானது ஒரு தேர்தலை வைக்கத் தக்கதாக இல்லை. ஏற்கனவே அரசாங்கம் புயலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருந்தது. அதேசமயம் மாகாணங்களின் எல்லைகளை மீள நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதனால் அதற்கு கால அவகாசமும் கேட்டது.இப்பொழுது புயலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கேட்க வாய்ப்பு உண்டு.இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டு வைக்கலாம்.
அப்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் அது தமிழ்த்தரப்பின் பாவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையுமா? இப்போதைக்கு தமிழரசு கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன. ஆனால் அதில் அர்ஜுனாவும் களமிறங்கி இளஞ்செழியனும் களமிறங்குவாராக இருந்தால், அவர் தமிழரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கவில்லை என்றால்,அப்பொழுது தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புக்களின் பருமன் குறையும்.அதுமட்டுமல்ல தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு முன்னேறும்.
எனவே நடக்குமா இல்லையா என்று உறுதியாகத் தெரியாத ஒரு தேர்தலை நோக்கி,ஏற்கனவே இருந்த ஒரு கூட்டை உடைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியோடு இணங்கிப்போவது என்று டி.ரி.என்.ஏ முடிவெடுக்கமாக இருந்தால்,அது கஜேந்திரக்குமார் சொன்னதுபோல, தமிழ்த் தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள மிகப் பலவீனமான ஒரு ஐக்கியத்தின் முடிவாக அமையும். ஆனால் அதை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்வார்கள். ஏனென்றால் முள்ளிவாய்க்காலை கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு இனி எதிர்காலத்தில் தாங்கிக் கொள்ள முடியாத துயரம்; தாங்கிக் கொள்ள முடியாத காயம்; தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்று எதுவும் கிடையாது.
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை
நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை
நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை
14 Dec, 2025 | 01:30 PM
![]()
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி போராட்டத்தில் மக்கள் நேற்று சனிக்கிழமை (13) ஈடுபட்டனர்.
சீரற்ற கால நிலை காரணமாகவும் மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுப்பு தொடர்பில் பல சேதங்கள் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை மறித்து போராடினர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச செயலக வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கொடுப்பனவுகளை வழங்குமாறும் குரல் எழுப்பிய மக்கள் பிரதேச செயலாளரை வெளிதே விடாது தடுத்தனர்.



ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!
ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!
ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!
14 Dec, 2025 | 02:11 PM
![]()
ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் சந்தேக நபர்களான நால்வரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த விடயங்களை குறித்த சிறுமி கூறியுள்ளார்.
இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக 12 வயது மதிக்கத்தக்க தனது மகளை முதலில் ஆபாச படம் பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துவந்தமையும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தந்தை உட்பட 5 பேரை தற்போது கைது செய்துள்ள பொலிஸார் தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேகநபர்களை தேடி வருகின்றனர்.
சந்தேகநபர்கள் 52,41,24 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் தந்தை சுமார் 05 மாத காலமாக தனது மகளை பல்வேறு நபர்களுடன் பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை
காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை
காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை
14 Dec, 2025 | 03:07 PM
![]()
காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்
1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன.
அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படாது , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில் , தற்போது அப்பகுதி அனைத்தும் துறைமுக அதிகார சபையின் ஆளுகைக்குள் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் இந்து மயானத்தை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக சுமார் 10 வருட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமது முன்னோர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் , தமது சொந்த மண்ணில் உள்ள இந்து மயானத்திலையே தமது உடல்களும் தகனம் செய்யப்பட்ட வேண்டும் என அங்குள்ள முதியவர்கள் பலரும் தமது இறுதி ஆசையாக கூறி வரும் நிலையில் , மாயனத்தினையும் அதற்கான பாதையையும் மீள பெற்று தருமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்ததை , அடுத்து , அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வந்து அவ்விடத்தினை பார்வையிட்டார்.
அதன் போது , மயானத்தினை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.



அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை
14 Dec, 2025 | 04:09 PM
![]()
‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலை சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்திக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், கோண்டாவில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



மகேஸ்வரன் கொலை வழக்கு: குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி
மகேஸ்வரன் கொலை வழக்கு: குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி
மகேஸ்வரன் கொலை வழக்கு: குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி
14 December 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
'வசந்தன்' என்ற ஜோன்சன் கொலின் வலன்டினோ என்ற குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் கோரி குற்றவாளி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற ஆயத்தின் முன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை மீளப் பெற அனுமதிக்குமாறு கோரினார்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி கொழும்பு - பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வைத்து மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்போது சுடப்பட்ட மகேஸ்வரன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், சுட்டுக் கொன்றவர் இவர்தான் என்று குற்றவாளியை அடையாளம் காட்டியிருந்தார்.
அத்துடன், இந்த சம்பவத்தின்போது மகேஸ்வரின் மெய்ப்பாதுகாவலர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளியின் இரத்த மாதிரி மரபணு சோதனை மூலம் குற்றத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி, மனுவை மீளப் பெற அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை அனுமதித்தது.
https://hirunews.lk/tm/435740/maheswaran-murder-case-death-sentence-confirmed-for-the-convict


