தமிழகச் செய்திகள்

விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா?

3 months 2 weeks ago

Screenshot-2025-05-29-162620.png?resize=

விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே), பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சியாக, 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுத் தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் (ECI) வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி ஸ்டிக் மற்றும் பந்து, மைக்ரோஃபோன் (மைக்), மோதிரம் மற்றும் விசில் போன்ற சின்னங்கள் சாத்தியமான தேர்வுகளில் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இவற்றுள், கிரிக்கெட் மட்டை, மைக், வைரம் மற்றும் மோதிரம் ஆகியவை இதுவரை மிகவும் விரும்பப்படும் தேர்வுகளாகத் தோன்றுகின்றன. இது ஒருபுறம் ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகாரமாகத் தோன்றினாலும், மறுபுறம், தமிழகத்தின் ஆளும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, புதிய கட்சிகள் எழுச்சி பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பயன்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு பொதுச் சின்னம் பெறுவதற்கான இந்த போராட்டம், தமிழக அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள அதிகாரப் போட்டியின் பிரதிபலிப்பாகும்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு (மே 6, 2026) ஆறு மாதங்களுக்கு முன்னதாக, நவம்பர் 5 அன்று சின்னத்திற்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கும். டிவிகே வட்டாரங்கள், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், சமீபத்தில் மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ஆணையத்தின் 190 இலவச சின்னங்கள் பட்டியலில் இருந்து பரிந்துரைகளை அழைத்ததாகத் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் தனது திரைப்படப் புகழ் மூலம் அரசியல் களத்தில் நுழைய முயல்கிறார். ஆனால், ஒரு பொதுச் சின்னத்தைப் பெறுவதற்கான போராட்டம், அவர் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கம் உள்ள நிலையில், ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் கிடைப்பது மிகவும் முக்கியம். இது ஒருபுறம் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதி என்றாலும், மறுபுறம், பெரிய கட்சிகள் புதிய கட்சிகள் தங்கள் இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தடையாக உள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுகிறதா அல்லது ஆளும் கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சின்னம் குறித்த போராட்டம், தமிழக அரசியலில் ஒரு பெரிய மோதலைத் தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

https://athavannews.com/2025/1433810

'ரூ.15,000 கடனுக்காக வாத்துப் பண்ணையில் கொத்தடிமை' - 9 வயது சிறுவனுக்கு காஞ்சிபுரத்தில் நேர்ந்த கொடுமை

3 months 2 weeks ago

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 29 மே 2025

"என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது" எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள்.

மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான தனது மகனை மீட்டுத் தருமாறு அங்கம்மாள் புகார் கொடுத்திருந்தார். அடுத்த 3 நாள்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு படுகையில் அவரது மகன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில், சிறுவனை குழந்தைத் தொழிலாளராகப் பணியமர்த்திய முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் கூறுகிறார்.

குழந்தைத் தொழிலாளராக வைக்கப்பட்ட ஒன்பது சிறுவன் இறந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருப்பதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஒன்பது சிறுவன் கொத்தடிமையாக வைக்கப்பட்டாரா? சிறுவன் மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது?

15 ஆயிரம் கடனுக்கு பண்ணை வேலை

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூரில் உள்ள சாவடபலேம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான அங்கம்மாள், சத்தியவேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் சத்தியவேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் பண்ணையில் வேலை செய்து வந்தோம்."

"ஒரு வருடத்துக்கு முன்பு நெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எனது கணவருக்குக் கொடுத்த கடன் தொகையைக் கேட்டார். இதை அறிந்து எனக்கு 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து முத்து உதவி செய்தார். இதற்கு ஈடாகத் தனது வாத்துப் பண்ணையில் எங்களைக் குடும்பத்துடன் வேலை பார்க்க வைத்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

காலை முதல் இரவு வரை அதிக வேலைகள் கொடுக்கப்பட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள அங்கம்மாள், "எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதிக வேலைகளைக் கொடுத்தனர். ஆனால், சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இதற்கிடையில், தனது கணவர் செஞ்சய்யா இறந்துவிடவே அதற்கான சடங்குகளைச் செய்துவிட்டு பணத்தைத் திரட்டி அனுப்புவதாக முத்துவிடம் அங்கம்மாள் கூறியுள்ளார்.

ஆனால், "42 ஆயிரம் ரூபாய் வரை பணம் தர வேண்டும். ஒன்று பணம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஒன்பது வயது மகனை பணத்துக்கு உத்தரவாதமாக வாத்துப் பண்ணையில் விட்டுச் செல்ல வேண்டும்" என முத்து கூறியதாக புகார் மனுவில் அங்கம்மாள் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது கடைசி மகனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு கூடூர் வந்ததாகக் கூறுகிறார், அங்கம்மாள்.

பிபிசி தமிழிடம் பேசிய அங்கம்மாள், "10 மாதங்களுக்குப் பிறகு (மே 15) பணத்தைத் திரட்டிக் கொண்டு மகனை மீட்கப் போனேன். அப்போது, என் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, '70 ஆயிரம் தர வேண்டும். அப்படியே பணம் கொடுத்தாலும் உன் மகனை அனுப்ப மாட்டேன்' என முத்துவும் அவரது மனைவி தனபாக்கியமும் மிரட்டினர்" என்றார்.

வாத்து பண்ணையில் என்ன நடந்தது?

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,வாத்துப் பண்ணை உரிமையாளர் முத்து

"வாத்துப் பண்ணையில் என் மகன்கள் மிகவும் சிரமப்பட்டனர். வாத்துகளை வயலுக்குள் அழைத்துச் செல்லும்போது சேற்றில் நடந்து காலில் காயங்கள் ஏற்படும். வேலை செய்யாவிட்டால், கடுமையாகத் திட்டி அடிக்க வருவார்கள்" என்கிறார் அங்கம்மாள்.

தொடர்ந்து பேசிய அவர், "கையில் பணம் தர மாட்டார்கள். அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் குறைவாகத்தான் தருவார்கள். ஒரு கட்டத்தில் வெளியில் சென்று வேலை பார்த்து உங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம் எனக் கூறியும் அவர்கள் விடவில்லை" என்கிறார்.

தனது மகனை மீட்டுத் தருமாறு சத்தியவேடு காவல் நிலையம் சென்ற அங்கம்மாள் அங்கு தனக்குத் தொடக்கத்தில் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.

அதுகுறித்துப் பேசியபோது, "அங்கிருந்த போலீசார், இரண்டு நாள் அவகாசம் கேட்டனர். அங்கு சரியான பதில் கிடைக்காததால் கூடூர் எம்.எல்.ஏ பாசம் சுனில்குமார் மூலமாக உதவி கேட்டேன். அவர் காவல்துறைக்கு ஃபோன் செய்து பேசியதால் முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்" எனக் கூறுகிறார் அவர்.

"மே 21 அன்று முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஏப்ரல் 12 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர்" என்று சத்தியவேடு முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலாற்று படுகையில் சிறுவன் சடலம்

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஆந்திராவின் சத்தியவேடு கிராமத்தில் இருந்து, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள தங்கள் உறவினரின் வீட்டுக்கு வாத்துகளை மேய்ப்பதற்காக சிறுவனை கூட்டிச் சென்றதாகவும் முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இறப்பு குறித்து பெற்றோருக்குக் கூறாமல், காஞ்சிபுரம் மாவட்டம், புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்துக்கு அருகில் உள்ள பாலாறு படுகையில் சிறுவனை அடக்கம் செய்தது விசாரணையின்போது தெரிய வந்ததாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், யாருக்கும் தெரியாமல் சடலத்தைப் புதைத்தது உள்படப் பல்வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப் படுகையில் சிறுவனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் காவல் துறை தோண்டியெடுத்தது. அப்போது ஆந்திரா, தமிழ்நாடு என இரு மாநில காவல் துறையும் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

புத்தூர் டி.எஸ்.பி கூறியது என்ன?

ஆந்திர மாநிலம் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியபோது, "சிறுவனை கொடிய ஆயுதம் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூராய்வு முடிவு கூறுகிறது. இதனால் கைதான மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மே 19 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மே 21 அன்று இந்த வழக்கில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் கைது செய்யப்பட்டனர். உடற்கூராய்வு முடிவுகளுக்குப் பிறகு இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார்

அதன்படி, 103(1) BNS (Punishment for murder) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, சிறார் நீதிச் சட்டம் 2015, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986 உள்படப் பல்வேறு பிரிவுகளில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனை ஆயுதங்களைக் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.

'கைது செய்வதில் சிரமம் ஏற்படவில்லை'

"முதலில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக முத்து கூறியுள்ளார். ஆனால் கடுமையான சித்திரவதைக்குப் பிறகே சிறுவன் இறந்துள்ளார். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் ஆயுதத்தால் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்" எனக் கூறுகிறார், வழக்கை கவனித்து வரும் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர்.

"சிறுவன் காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவனிடம் அங்கம்மாள் பேசியுள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என சிறுவன் கூறவில்லை. கடுமையான தாக்குதலுக்குப் பிறகே அவர் இறந்துள்ளார். அதைத்தான் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்வதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனக் கூறுகிறார், புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார். "அவர்கள் மூன்று பேர் மீதும் சந்தேகம் இருப்பதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார்.

கூடூர் பகுதியில் ஏனாதி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அதிகம் வசிப்பதாகக் கூறிய ரவிக்குமார், "அங்கம்மாள் குடும்பம், மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. விவசாயப் பணிகள், வாத்து மேய்த்தல், மாடு மேய்த்தல் பணிகளில் மாத சம்பளத்துக்குத் தங்கி வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை," என்றும் குறிப்பிட்டார்.

"முத்துவின் வாத்துப் பண்ணையில் எங்களைப் போல குடும்பமாக யாரும் வேலை செய்யவில்லை. நாங்கள் சென்றபோது, ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவரது பெற்றோர் பணம் கொடுத்து கூட்டிச் சென்றனர்" எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

'அந்த வலி இன்னொருவருக்கு வரக் கூடாது'

இந்த வழக்கில் கூடூரை சேர்ந்த சிவா ரெட்டி என்பவர், அங்கம்மாள் குடும்பத்தினருக்கு உதவிகளைச் செய்துள்ளார்.

"அவரது எலுமிச்சம் பழத் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். பத்தாவது படிக்க வேண்டிய மகன், இடையில் வாத்துப் பண்ணையில் வேலை பார்த்ததால் படிப்பு பாதியில் நின்றுவிட்டது. விரைவில், அவர் தனது படிப்பைத் தொடரவுள்ளார். மகள், ஏழாவது படித்து வருகிறார்" எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

இதற்கான செலவை சிவா ரெட்டி பார்த்து வருவதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைதாவதற்கு அவர் பல வகைகளில் உதவி செய்ததாகவும் அங்கம்மாள் குறிப்பிட்டார்.

"என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் பல மாதங்களாக ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது" எனவும் வேதனையுடன் கூறினார்.

'இறந்தால் மட்டுமே வருகின்றனர்'

சிறுவன் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "ஒரு குழந்தைத் தொழிலாளர் இறந்துவிட்டால் மட்டுமே அனைத்து உதவிகளும் செய்வதற்கு அரசுத் துறைகள் முன்வருகின்றன" எனக் கூறுகிறார்.

"கிராம குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு முறையாகச் செயல்பட்டிருந்தால் சிறுவன் இறந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது" என விமர்சிக்கும் தேவநேயன் அரசு, "இக்குழுவினர், தங்கள் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளர் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். அதை முறையாகச் செய்திருந்தால் இது நடந்திருக்காது" என்கிறார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்

"தமிழ்நாட்டில் மாட்டுப் பண்ணைகள், கல் குவாரிகளில் வேலை செய்வதற்கு வடமாநிலங்களில் இருந்து குடும்பமாக வருகின்றனர். அவர்களின் வாழ்வுநிலை குறித்தோ, குழந்தைகள் பணி செய்வது குறித்தோ அதிகாரிகள் சரி வர ஆய்வு நடத்துவதில்லை" எனவும் தேவநேயன் குற்றம் சாட்டினார்.

மேலும், "குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை நடத்த வேண்டும். அவர்களும் ஆய்வு நடத்துவதில்லை. குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்கு வருவாய்த் துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், அது முறையாக நடப்பதில்லை" என்றார்.

அமைச்சர் சொல்வது என்ன?

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது.

அப்போது அவர், "ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எங்கள் கவனத்துக்குத் தகவல் தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறோம்" எனக் கூறினார்.

சிறுவன் இறப்பு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2je05pg48o

தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி!

3 months 2 weeks ago

MK-Stalin-.jpeg?resize=750%2C375&ssl=1

தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி!

”தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள்  1,383 பேர் இலங்கை கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு  வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1433623

கமலுக்கு ராஜ்யசபா இடம், வைகோவுக்கு இல்லை : மு.க.ஸ்டாலின் எடுத்த கறாரான முடிவு - அ.தி.மு.க. முகாமில் நிலவரம் என்ன?

3 months 2 weeks ago

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY/STALIN/X

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க-வுக்கு 4 இடங்களும் அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ள நிலையில், 'தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படலாம்' என பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படியொரு முயற்சியில் தி.மு.க இறங்கவில்லை. காரணம் என்ன?

தி.மு.க-வை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் ராஜ்யசபா பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அ.தி.மு.க சார்பில் சந்திரசேகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலமும் இதே காலகட்டத்தில் நிறைவடைய உள்ளது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யாருக்கு என்ன பலம்?

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளதாகவும், ஜூன் 12 அன்று வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற்ற உடன், அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் (திமுக 134, காங்கிரஸ் 17, விடுதலைச் சிறுத்தைகள் 4, இ.கம்யூ 2, மா.கம்யூ 2) உள்ளனர். ஒரு ராஜ்யசபா இடத்துக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்தவகையில், தி.மு.க-வுக்கு நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர்.

அ.தி.மு.க-வுக்கு சட்டசபையில் 66 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் உள்பட 4 உறுப்பினர்கள் தனி அணியாக உள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் வாக்களிக்காமல் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் எண்ணிக்கை 66 ஆக உயரும் (62 + பாஜகவின் 4 வாக்குகள்). 2 ராஜ்யசபா இடங்களில் வெற்றி பெறுவதற்கு மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு தேவைப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பா.ம.கவில் இருந்து 2 பேர் ஆதரவு தெரிவித்தால் மட்டும் அ.தி.மு.க-வுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கிடைக்கும். "இதில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும்" எனக் கூறுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன்.

நான்கு வேட்பாளர்களை தி.மு.க அறிவித்தால் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும். மாறாக, உபரியாக உள்ள வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது நான்கு இடங்களுக்கு மட்டுமே தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

"கட்சிக்குக் கெட்ட பெயர் வரும்"

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

"தி.மு.க வசம் 23 ஓட்டுகள் கூடுதலாக உள்ளதால் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி தனது வலிமையைக் காட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படியொரு சர்ச்சைக்கு தி.மு.க தலைமை இடம் கொடுக்கவில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.

"தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க அணியில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறும் ஜென்ராம், "அவரவர் வாக்கு அவரவருக்கே என்ற நிலையை எடுத்து தேவையற்ற சர்ச்சையை தி.மு.க தலைமை தவிர்த்துள்ளது" என்கிறார்.

"தி.மு.க தலைவராக ஸ்டாலின் வந்த பிறகு அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததில்லை" எனக் கூறும் ஜென்ராம், "கொள்கைரீதியான முடிவுகளில் உறுதியாக இருக்கிறார். எனவே, அரசியல்ரீதியாக புதிய முயற்சிகளில் அவர் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார்.

தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "உபரியாக உள்ள வாக்குகளை வைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றாலும் அது கட்சிக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும். தோற்றாலும் அது தி.மு.கவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்" எனக் கூறுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கான்ஸ்டன்டைன், "அப்போது தி.மு.க பக்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார்" எனக் கூறுகிறார்.

"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதுபோன்று செய்தால் அதை வேறு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்ற சர்ச்சைகளில் இறங்க மாட்டார் என்று இதர அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்" எனக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.

அதேநேரம், "தங்களிடம் கூடுதலாக உள்ள வாக்குகளை வைத்து ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தும் வேலைகளைக் கடந்த காலங்களில் தி.மு.க செய்துள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

1984 உதாரணம் என்ன?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

"ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது. வேட்பாளர் பட்டியலில் கவிஞர் சல்மா பெயர் இடம்பெற்றுள்ளது எதிர்பாராத ஒன்று" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் உறுதியாகிவிட்டதால், ஓட்டு போடும்போது சட்டமன்ற உறுப்பினர்களை 34 என நான்கு வகைகளாக பிரித்து, யார் எந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் எனக் கூறுவார்கள். மீதமுள்ள வாக்குகள் உபரியாக இருக்கும்.

தி.மு.கவுக்கு உபரியாக 23 வாக்குகள் உள்ள நிலையில், ஐந்தாவது வேட்பாளருக்கு வாக்கு செலுத்தலாம் எனக் கூறலாம். ஆனால், அ.தி.மு.கவுக்கு 34 வாக்குகளும் வந்துவிட்டால், தி.மு.க நிறுத்தும் ஐந்தாவது வேட்பாளர் தோற்றுப் போவார். அதனால் வேட்பாளரை நிறுத்தியும் பலன் இல்லை" எனக் கூறுகிறார்.

"ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தும்போது, பா.ம.கவும் பா.ஜ.கவும் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக அறிவித்தால் தி.மு.கவின் முயற்சி எடுபடாது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே இப்படியொரு தோல்வியை தி.மு.க விரும்பாது" என்கிறார், ஷ்யாம்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை சுட்டிக் காட்டிப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அப்போது ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியை தி.மு.க முன்னிறுத்தியது. ஆனால், அவர் வெற்றி பெறவில்லை" எனக் கூறுகிறார்.

1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா, வலம்புரி ஜான், ராஜாங்கம், ராமநாதன் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுவும் போட்டியிட்டனர். தி.மு.க சார்பில் வைகோவும் ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியும் போட்டியிட்டனர். இதில் ஆற்காடு வீராசாமி தோல்வியடைந்தார்.

"1996ஆம் ஆண்டில் ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக வேட்பாளராக உதயபானு போட்டியிட்டார். அவர் வெற்றி பெறவில்லை. உறுதியாக வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே கடினமான முடிவுகளை தி.மு.க எடுக்கும்" என்கிறார் ஷ்யாம்.

1996 ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தரப்பில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரை எதிர்த்து வாழப்பாடி ராமமூர்த்தி அணியின் சார்பில் உதயபானு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார்.

ஓ.பி.எஸ் தரப்பு வாக்குகள் யாருக்கு?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் குபேந்திரன்

"தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுடன் பன்னீர்செல்வம் அணி, பா.ம.க மற்றும் சிறிய கட்சிகள் இணைந்தால் புதிதாக ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளதே?" என, பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டோம்.

"பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை. இருவரும் அமைதியாகிவிட்டனர்" என்கிறார்.

"ஐந்தாவது வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் பன்னீர்செல்வம் அணியினர் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் அணியும் பா.ம.கவும் வாக்களிக்கவே வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க-வை மீறி இந்த கட்சிகள் வாக்குகளை மாற்றிப் போடுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார் குபேந்திரன்.

கூட்டணிக் கட்சிகளைத் தவிர்ப்பது ஏன்?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,KAMALHAASAN/X

படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க உறுதியளித்தது

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டணியில் கடந்த முறை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக, கடந்த மாதம் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே, 'தி.மு.க மீண்டும் சீட் கொடுக்குமா?' எனக் கேள்வி எழுப்பும் தொனியில் வைகோ பேசியிருந்தார்.

"வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லாததால் தான் துரை வைகோவுக்கு திருச்சி எம்.பி தொகுதி ஒதுக்கப்பட்டது" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

இதே கருத்தை முன்வைக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன், "மக்கள் நீதி மய்யத்தைத் தவிர மற்ற மூன்று இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதை தி.மு.க தலைமை விரும்பவில்லை" எனக் கூறுகிறார்.

"ராஜ்யசபாவில் தி.மு.கவின் குரல் எதிரொலிக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். கூட்டணிக் கட்சிகள் பேசினாலும் அது கட்சியின் குரலாக இருக்காது என நினைக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" எனக் கூறினார்.

"அன்புமணி விரும்பவில்லை"

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,ANBUMANI/X

படக்குறிப்பு,"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை"

அ.தி.மு.க உடன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை. அந்தவகையில், அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

"கட்சி வளர்ச்சிப் பணிகளில் அன்புமணி தீவிரம் காட்டி வருவதால், மீண்டும் ராஜ்யசபா சீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை" என, பா.ம.க-வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது குறித்து பா.ம.க தலைமை பேசி வருகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

அ.தி.மு.க தரப்பில் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அவ்விரு இடங்களுக்கும் கட்சியின் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.

"பொறுமை கடலினும் பெரிது" - பிரேமலதா

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,_PREMALLATHADMDK/INSTAGRAM

படக்குறிப்பு,நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

அ.தி.மு.க அணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க இணைந்தது. அப்போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசி வந்தார்.

"நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்" எனவும் செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எங்கள் தரப்பில் இருந்து அப்படி எந்த வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, " பொறுமை கடலினும் பெரிது. பொறுத்திருங்கள்" எனக் கூறியவர், "ஜனவரி 9 ஆம் தேதியன்று கடலூரில் மாநாடு நடக்க உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்" என்றார்.

"2026 சட்டமன்றத் தேர்தலில் ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டபோது, "கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் சீட்டை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது அது தேர்தலில் எதிரொலிக்கும்" எனக் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg5v400z1no

'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?

3 months 2 weeks ago

கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம்,@RKFI

28 மே 2025, 09:29 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல் ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இந்நிலையில், இன்று (மே 28) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல் ஹாசன்) தெரியாது." என்று தெரிவித்துள்ளார்.

கமல் பேசியது என்ன?

கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம்,@RKFI

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றிருந்தார்.

மேடையில் பேசிய கமல்ஹாசன், "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார்.

கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?

தக்லைஃப், தமிழ், கன்னடா

பட மூலாதாரம்,KAMALHAASAN/X

கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த தக் லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த விஷயத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன்." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பல வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழியின் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் குறிப்பாக அர்த்தப்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு அடிப்படையில் தனி சிறப்பு கொண்டது. இங்கு ஒரு மேனன், ஒரு ரெட்டி, மாண்டியாவிலிருந்து வந்த ஒரு கன்னட ஐயங்கார் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோது, கர்நாடக மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். எனவே தக் லைஃப் படத்தையும், எனக்கு எதிரான மொழி பிரச்னையையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட. இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்." என கூறினார்.

மேலும், "நான் அளிப்பது விளக்கம், பதில் அல்ல. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் கூறினார்.

கர்நாடக பாஜக என்ன கூறுகிறது?

கமல்ஹாசன் சர்ச்சைப் பேச்சு

பட மூலாதாரம்,VIJAYENDRA YEDIYURAPPA

படக்குறிப்பு, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா

'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது.

மேலும், "எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுத்து கூற கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது.

கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ததில்லை என்பதை ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசன் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என எச்சரிக்கை

தக் லைஃப், கன்னடா, கமல்ஹாசன், கன்னட ரக்ஷன வேதிகே

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி (கோப்புப் படம்)

கன்னட அமைப்புகள் சிலவும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கமலை எச்சரித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?

இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். நீங்கள் தப்பிவிட்டீர்கள். கர்நாடகாவுக்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

செவ்வாய்கிழமை பெங்களூருவில் கமல் ஹாசன் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அந்த இடத்தில் கன்னட அமைப்பினர் சிலர் கூடி கன்னடத்தில் கோஷங்கள் எழுப்பினர். தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இவை மட்டுமல்லாமல் கன்னட அமைப்பினர் பலர் சமூக ஊடகங்களில் கமல் ஹாசனுக்கு கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyr17pd5rpo

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

3 months 2 weeks ago

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

28 May 2025, 10:52 AM

  Anna University student sexual assault case

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த ஒருவர் இருவரையும் மிரட்டி, அந்த ஆண் நண்பரை விரட்டிவிட்டு அம்மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி 100 க்கு போன் செய்து புகார் தெரிவிக்க, இந்த தகவல் கோட்டூர்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

Anna-University-case.jpg

இதையடுத்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர். 

இந்த நிலையில், ஞானசேகரன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட போது தொலைபேசியில் ‘சார்’ என்று ஒருவரை அழைத்து பேசியதாகவும் தகவல் வெளியானது. 

இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

குறிப்பாக ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர். 

இந்த நிலையில் சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக அனுதாபி தான் என்று விளக்கமளித்திருந்தார். 

இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. 

கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரன் மீது திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து ஞானசேகருக்கு எதிராக 100 பக்க குற்ற பத்திரிக்கையை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. 

இந்த சூழலில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் ஆதாரம் இல்லாமல் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

அதாவது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு சாட்சி விசாரணை தொடங்கியது. இதில் மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு சார்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 20 முதல் 23 வரை இறுதி வாதங்கள் நடைபெற்றன. 

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் வலுவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி” என அறிவித்தார். சிறப்பு விசாரணை குழு அறிக்கையை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏற்கனவே சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இட மாறுதல் செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் புதிய பொறுப்பை அவர் ஏற்க உள்ளார். 

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/anna-university-student-sexual-assault-case-verdict/#google_vignette

நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'

3 months 2 weeks ago

நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'

Today at 6 AM

கமல்ஹாசன் - சல்மா

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது.

2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர். அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது திமுக தனது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக வெளியிட்ட பட்டியல்

திமுக வெளியிட்ட பட்டியல்

அந்தப் பட்டியலில் திமுக வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா இடம்பெற்றிருக்கிறார்கள்.

மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்று அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மநீம சார்பில், கமல் களமிறங்குவார் என அக்கட்சி செயற்குழு சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'

இதில் வில்சன் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாகத் தான் இருந்தார். தற்போது அவர் பதவிக்காலம் முடிய இருக்கும் நிலையில், மீண்டும் எம்.பி வேட்பாளாராக களம் இறங்குகிறார்.

https://www.vikatan.com/government-and-politics/kamalhasan-rajya-sabha-mp-dmk

சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை - சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?

3 months 2 weeks ago

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட மூவர்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 27 மே 2025

"எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்" என்கிறார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி.

மே 26 அன்று ஏடிஎம் இயந்திரத்தின் பெட்டியை உடைக்காமல் கொள்ளையடித்ததாக உ.பி-யை சேர்ந்த மூன்று பேர் கைதான விவகாரத்தில் அவர்களின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏடிஎம் மைய கொள்ளைச் சம்பவத்தில் என்ன நடந்தது? பணம் திருடு போனால் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் நரேன்குமார், ஹிட்டாச்சி ஏடிஎம் சர்வீஸ் (Hitachi ATM Service) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று தங்களின் மும்பை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக, திருவான்மியூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.

திருவான்மியூர், திருவள்ளூவர் நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில் ஏதோ தவறு நடந்துள்ளதாகவும் அதை உடனே சென்று சோதனை செய்யுமாறு தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாக புகார் மனுவில் நரேன்குமார் குறிப்பிட்டுள்ளார்.

ஏடிஎம் மையத்தில் சோதனை செய்தபோது, பணம் வெளியில் வரக் கூடிய இடத்தின் உள்புறத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியில் வராமல் சிலர் தடுத்துள்ளதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.

அதிகாலை கொடுத்த அதிர்ச்சி

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த ஏடிஎம்

'வங்கிக் கிளையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ஞாயிற்றுக்கிழமை (மே 25) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவை இரண்டு பேர் திறந்துள்ளனர். பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்' என புகார் மனுவில் நரேன்குமார் கூறியுள்ளார்.

அதன்பிறகு வாடிக்கையாளர் ஒருவர் 1500 ரூபாயை எடுக்க முயன்றும் வராததால் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அதைச் சோதிக்க சென்றபோது குற்றச் சம்பவம் நடந்திருப்பதை தான் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

". இதனால் பணம் வெளியில் வராமல் உள்ளேயே நின்றுவிடும். பிறகு போலி சாவி மூலம் லாக்கரை திறந்து அங்கு கிடக்கும் பணத்தை எடுத்துள்ளனர்" எனக் கூறுகிறார், திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளர் முகமது புகாரி.

"இரண்டாவது லாக்கர் என்பது பணம் வைக்கப்படும் இடம் என்பதால், அதை உடைத்தால் அலாரம் சத்தத்தை எழுப்பும் என்பதால் அதை கைதான நபர்கள் தொடவில்லை" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

முதல் லாக்கரைத் திறப்பதற்கு பயன்படுத்திய சாவி என்பது அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தக் கூடிய தோற்றத்தில் இருந்ததாகக் கூறும் முகமது புகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் எந்தெந்த வகைகளில் கொள்ளையடிக்கலாம் என்பதை சமூக வலைதளங்களின் மூலமாக கைதான நபர்கள் கற்றுக் கொண்டு திருடியுள்ளனர்" எனக் கூறினார்.

"தமிழ்நாட்டில் 3 மாதங்கள்"

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,முகமது புகாரி

படக்குறிப்பு, காவல் ஆய்வாளர் முகமது புகாரி.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடு போன சம்பவத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிஜ்பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை, திங்கள் கிழமையன்று திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் குல்தீப் சிங் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். மற்ற இருவரும் விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர்.

"மூவரும் உ.பி-யில் உள்ள கான்பூரில் ஒரே ஊரில் வசிப்பவர்கள். தமிழ்நாட்டுக்கு மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் மட்டும் தங்கி ஏடிஎம் மையங்களில் திருட வந்துள்ளனர். முதலில் செங்குன்றம், அடுத்து மாதவரம், மூன்றாவதாக திருவான்மியூரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் முகமது புகாரி.

"சனி, ஞாயிறு தான் டார்கெட்"

ஒவ்வோர் இடத்திலும் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் மூவரும் தங்குவதாகக் கூறும் முகமது புகாரி, "சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அன்று வங்கிகள் விடுமுறை என்பதால் புகார் பதிவாகி கவனிப்பதற்குள் ஞாயிறு இரவு விமானம் அல்லது ரயிலில் ஏறி சொந்த ஊர் சென்று விடுகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய முகமது புகாரி, "ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 20 ஆயிரம் முதல் ஆயிரம் வரையில் கூட கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். பணம் வராதால் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் பொதுமக்களில் சிலர் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்" எனக் கூறினார்.

அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ பிரச்னை எனக் கூறி வங்கி ஊழியர்கள் அமைதியாக இருந்துவிட்டதாகக் கூறிய அவர், "மும்பையில் ஹிட்டாச்சி நிறுவனத்தில் உள்ள பணியாளர் ஒருவர் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து சென்னை கிளைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்" என்கிறார்.

காட்டிக் கொடுத்த 40 கேமராக்கள்

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள முதல் லாக்கரில் பணம் வரும் இடத்தின் உட்புறத்தில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர்

இதன்பிறகு, சுமார் 40 கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்துள்ளது. "முதல் சிசிடிவி காட்சிலேயே அவர்களின் முகம் தெரிந்துவிட்டது. சாலையின் வெளிப்புற கேமரா காட்சிகள், அவர்கள் சென்ற வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அவர்களின் செல்போன் எண்ணும் கிடைத்துவிட்டதால் கைது செய்ய முடிந்தது" என்கிறார் முகமது புகாரி.

எந்த ஊருக்குச் சென்றாலும் ஓட்டலில் அறை எடுத்து தங்குவதை கைதான நபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "திருட்டில் ஈடுபடும்போது மட்டும் கால் டாக்ஸியை வாடகைக்கு எடுத்துள்ளனர். அப்போது தான் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

கைதான மூவர் மீதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, திருட்டில் ஈடுபட்டது உள்பட மூன்று பிரிவுகளில் (305(a),62 BNS Act r/w 3 of TNPPDL Act) வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "ஞாயிறு மாலை சுமார் 4 மணிக்குக் காவல்துறையில் புகார் கொடுத்தனர். மறுநாள் காலை 9 மணிக்குள் கைது செய்துவிட்டோம். அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.

வங்கி அதிகாரி கூறுவது என்ன?

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரம் (கோப்புப்படம்)

"ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவைத் திறந்து இவ்வாறு மோசடி செய்ய வாய்ப்புள்ளதா?" என, பொதுத்துறை வங்கி ஒன்றின் கிளை மேலாளரிடம் பிபிசி தமிழ் பேசியது.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "முதல் கதவு என்பது சாதாரண லாக்கராக வடிவமைக்கப்பட்டிருக்கும். போலி சாவி மூலம் இதன் கதவைத் திறந்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகள் தொடர்வதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் தடுத்து, வாடிக்கையாளர் சென்ற பிறகு எடுக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. பாஸ்வேர்டை கண்டறிந்து பணம் எடுப்பது என தவறுகள் தொடர்கின்றன" என்கிறார்.

தொழில்நுட்பரீதியாக இதுபோன்ற குறைகளைக் களைவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏ.டி.எம்மை அந்தந்த வங்கிக் கிளைகள் தான் பாதுகாக்க வேண்டும். இயந்திரத்தில் யாரும் சேதம் ஏற்படுத்தினால் காவல் நிலையம், வங்கி மேலாளர் ஆகியோருக்குத் தகவல் சென்றுவிடும் வகையில் அலாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வங்கி சேவைகளுக்கு ஏடிஎம் இயந்தித்தைத் தயாரித்துக் கொடுப்பதில் நான்குக்கும் அதிகமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் வங்கி மேலாளர், "பணம் சிக்கிக் கொண்டால் எடுத்துக் கொடுப்பது, தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வது போன்ற பணிகளை இவர்கள் செய்கின்றனர். அப்போது வங்கி ஊழியரும் உடன் இருப்பார்" எனக் கூறுகிறார்.

"ஒரு நபர் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும். பணம் வராவிட்டால் புகார் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுவிடுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

"பணத்தைத் திரும்பப் பெறலாம்" - வழக்கறிஞர் கார்த்திகேயன்

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம், வழக்கறிஞர் கார்த்திகேயன்

படக்குறிப்பு,"ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

"ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை. அது மக்களின் பணம் கிடையாது. வங்கியின் பணம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பணம் எடுக்கப்படாமல் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தால் அதற்கு வங்கி தான் முழுப் பொறுப்பு. 2017 ஆம் ஆண்டு இதுதொடர்பான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இதுதொடர்பான தகவல்கள் இருப்பதைக் காண முடிந்தது.

உங்களின் பங்களிப்பு இல்லாமல் பணம் திருடு போயிருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு அல்ல. ஏடிஎம் இயந்திரம் என்பது வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்க முடியாது என ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுவதாக கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

பணத்தைத் திரும்பப் பெற வழிமுறைகள் என்ன?

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் பட்டியலிட்டார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார்.

* ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியில் வராவிட்டால் வங்கியிடம் 3 நாள்களில் முறையிட வேண்டும். அவ்வாறு முறையிட்டால் 10 நாள்களுக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

* மூன்று நாட்கள் கடந்துவிட்டால் 4 முதல் 5 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குரிய சேவைக் கட்டணத்தை மட்டும் வங்கி பிடித்தம் செய்து கொள்ளும்.

* பணம் எடுக்கப்பட்டதாக (debit) செல்போனுக்கு அழைப்பு வந்தும் பணம் வராவிட்டால் காவல்துறையில் புகார் தெரிவிக்குமாறு வங்கி நிர்வாகம் கூறும். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை.

* குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்யும் வரை வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

* வாடிக்கையாளர் வெளியூரில் இருந்தால் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரி மூலம் புகார் மனுவை அனுப்பலாம்.

* இமெயில் முகவரி இல்லாவிட்டால் வங்கியின் இணையதளத்தில் ரிசர்வ் வங்கி விதியின்படி புகார் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். அதில், வங்கியின் ஏடிஎம் கிளை, பணம் வராமல் போன நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தால் போதும். காவல்நிலையம் செல்ல வேண்டியதில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c36545xejldo

சென்னையில் தரையிறங்கும் விமானத்தில் பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி - இதன் விளைவுகள் என்ன?

3 months 2 weeks ago

சென்னை விமானம், லேசர் ஒளி

பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X

படக்குறிப்பு,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. (சித்தரிப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 54 நிமிடங்களுக்கு முன்னர்

துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், அதன் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தரையிறங்கும் விமானங்களின் மீது பாயும் லேசர் ஒளி ஏன் விமானங்களைத் தடுமாற வைக்கிறது?

மே 25ஆம் தேதியன்று துபையில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.

அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானபோது, அதன்மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் தொந்தரவுக்கு உள்ளான விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.

இதற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஒளி நின்றுவிட்டது. இதன் பிறகு, விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. ஆனாலும் இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முந்தையை சம்பவங்கள்

சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு, 2023, 2024ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.

இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்ததோடு, இதுபோல விமானப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோர் குறித்துத் தகவல் தெரிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்குள் மூன்று முறை விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. சென்னை விமான நிலைய காவல்துறையினரும் இதுதொடர்பாக தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டைகளை நடத்தினர். பிறகு இந்தச் சம்பவங்கள் நின்றுவிட்டன. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவர், "சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஓடுபாதையில் இறங்குவதற்காகத் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் மீது இதுபோன்று பல வண்ணங்களில் லேசர் ஒளிக்கற்றைகள் அடிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் இது நடக்கிறது. இது விமானிகளுக்குப் பல பிரச்னைகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.

அதாவது, "விமானத்தைத் தரையிறக்கும்போது விமானிகள் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அந்தத் தருணத்தில் இதுபோன்ற லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்" என்று விளக்கினார்.

விமானம் தரையிறங்கும்போது இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் விமானிகள்

பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X

படக்குறிப்பு,விமானம் தரையிறங்கும்போது இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் விமானிகள்

அதேபோல, விமானக் கட்டுப்பாட்டு அறையின் மீது இதுபோன்ற லேசர் ஒளியை அடித்தால், அதுவும் அங்கு இருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னை போன்ற விமான நிலையங்களில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறையும் ஒரு விமானம் தரையிறங்கவோ, மேலேறவோ செய்துகொண்டிருக்கும். அத்தகைய சூழலில், மிகக் கவனமாக உத்தரவுகளை வழங்க வேண்டிய தருணத்தில் இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறினார் பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி.

'உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்'

விமானிகளுக்கு இது ஆபத்தான குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார் இந்திய விமானப் படையின் முன்னாள் வீரரான செல்வ ராமலிங்கம்.

"விமானங்களைத் தரையிறக்குவது என்பது மிகச் சிக்கலான ஒரு செயல்பாடு. ரன்வேயின் லைட்டை ஃபோகஸ் செய்துதான் வருவார்கள். தேவையில்லாத லைட் வந்தால் குழப்பம் ஏற்படும். இந்த விளக்கு ஏன் வருகிறது என யோசிப்பார்கள். அந்தச் சந்தேகம் வரும்போது மறுபடியும் ஏடிசியை தொடர்புகொள்வர்கள்.

நான் லேண்ட் செய்யலாமா எனக் கேட்பார்கள். டே டைமில்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ரன்வேயில் ஒவ்வொரு விளக்குக்கும் ஒவ்வொரு சமிக்ஞை இருக்கிறது. எல்லோர் உயிரும் அதைக் கண்டறிந்து இயக்கும் விமானியின் கையில்தான் இருக்கிறது" என்றார்.

சிறிய டார்ச் அளவுக்கு உள்ள லேசர் கருவிகளைக் கொண்டு ஒளியை அடித்தால், அது சில நூறு மீட்டர் தூரத்துக்கே பாயும். ஆனால், விமான நிலையங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளைப் பயன்படுத்தினால், அந்த லேசர்கள் விமானத்தில் பட்டால் அது மிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானிகளுக்கே குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் அதிகாரிகள்.

தற்காலிக பார்வையிழப்பு ஏற்படும் அபாயம்

சென்னை விமானம், லேசர் ஒளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருக்கிறது என்கிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன்

ஆனால், சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன்.

"விமானத்தைத் தரையிறக்குவது என்பது மிகவும் சிக்கலான தருணம். அந்த நேரத்தில் விமானிகள் பல விஷயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அளவைக் காட்டும் பல்வேறு மீட்டர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஓடுபாதையையும் விமானத்தையும் ஒரே நேர்கோட்டில் பொருத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

அப்போது ஒரு மில்லிவிநாடியைக்கூட வீணாக்க முடியாது. அந்த நேரத்தில் சக்தி வாய்ந்த லேசர் ஒளி கண்ணில் அடித்தால், தற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படும்" என்கிறார் அவர்.

"இதனால் மிக அரிதான தருணங்களில் இதன் காரணமாக, missed approach செய்ய வேண்டியிருக்கும். அதாவது விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் பறக்கச் செய்து, மறுபடியும் ஏடிசியின் அனுமதியைப் பெற்றுத் தரையிறக்க வேண்டியிருக்கும். இதுபோல தீவிர கவனத்துடன் வேலை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் லேசர் ஒளி கண்ணில் படுவது, விமானிகளுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும், அது மிக அபாயகரமானது" என்கிறார் அசோகன்.

'கண்டுபிடிப்பதே கடினம்'

பிற நாடுகள் இதுபோன்ற விவகாரங்களை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுகிறார், இந்தியாவில் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெயரை வெளியிட விரும்பாத விமானி ஒருவர்.

"இதுபோல, லேசர் ஒளியை அடிப்பதால், விமானம் விபத்தில் சிக்காது. ஆனால், வேறு பல பிரச்னைகள் ஏற்படும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோலச் செய்தால், மிகக் கடுமையான அபராதமும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும். இந்தியாவில் இதுபோலச் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கிறது" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கிறார். "பொதுமக்களின் கையில் இதுபோன்ற கருவிகள் கிடைத்த பிறகு அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், இதுபோன்ற கருவிகளைத் தயாரிப்பவர்கள், இறக்குமதி செய்பவர்களைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் யாருக்கு விற்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரிக்கச் சொல்ல வேண்டும். அப்படித்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்" என்கிறார் அந்த விமானி.

இந்தியாவில் சென்னை தவிர, மைசூர், கொல்கத்தா விமான நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னர் நடந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce81zvln4kko

"நன்கொடை கொடுக்கலாம், உபயதாரர் ஆக முடியாது" திருநாகேஸ்வரம் கோவிலில் பட்டியல் சாதியினருக்கு என்ன பிரச்னை?

3 months 2 weeks ago

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

படக்குறிப்பு, சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 18 மே 2025

'ஒரு மனிதனின் தாழ்ந்த நிலையைக் காரணம் காட்டி கோவில்களில் நன்கொடை பெற மறுப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்' என, கடந்த ஏப்ரல் 29 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் திருநாகேஸ்வரர் கோவிலில் தங்களை உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறி பட்டியல் பிரிவினர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவில் அறங்காவலர்களும் மறுக்கின்றனர். தங்களிடம் மனு கொடுக்காமல் நீதிமன்றத்தை நாடிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

கோவிலில் என்ன பிரச்னை?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் சிறப்புகளைக் கூறுவதற்கு 45 கல்வெட்டுகள் உள்ளதாக கோவில் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது எனவும் இணையதளம் கூறுகிறது.

கி.பி. 1192 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டதாகவும் கோவிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டுக்காக தானம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1546 ஆம் ஆண்டு விஜயநகர மன்னரும் திருநாகேஸ்வரம் வந்துள்ளதாகவும் பெரிய புராணம் எழுதிய சேக்கிழாருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளதாகவும் அறநிலையத்துறை கூறியுள்ளது.

குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் கிராமத்தில் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கூலி வேலைகள் பிரதானமாக உள்ளன.

'குறிப்பிட்ட சாதி கட்டுப்பாட்டில் கோவில்'

திருநாகேஸ்வரம்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

படக்குறிப்பு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

"கோவிலுக்கு அருகில் முருகன் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுவில் உள்ளனர். ஆனால், திருநாகேஸ்வரர் கோவிலை குறிப்பிட்ட சாதியினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்" எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாண்டியராஜன். இவர் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தான் கோவிலில் உபயதாரராக உள்ளதாகக் கூறும் அவர், "பட்டியல் சாதியைப்போல பிற சாதியினருக்கு உபயதாரராக முக்கியத்துவம் தருவதில்லை. அனைத்து சாதிகளுக்கும் உரிமை கொடுக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை மூன்று வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

'கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல'

தீர்ப்பில், 'இந்த நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தன்னைவிட கீழ் நிலையில் உள்ள நபரிடம் நன்கொடைகளை வாங்காமல் இருப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம். கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல' என நீதிபதி கூறியுள்ளார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஒரு வழக்கில் (நாமக்கல் மாவட்டம் பொன் காளியம்மன் கோவில் வழக்கு) பிப்ரவரி 5 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த வழக்கில், 'காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவிலில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உபயதாரராக இருக்க முடியும்' என இந்து அறநிலையத்துறை வாதிட்டதாகக் கூறுகிறார், வழக்கைத் தொடர்ந்த பாண்டியராஜனின் வழக்கறிஞர் சுகந்தன்.

"சமூக நீதி அரசை நடத்துவதாகக் கூறும் ஆட்சியில் இப்படியொரு பதிலைக் கூற முடியாது. கோவிலில் பக்தர்களிடம் நன்கொடைகளை வாங்குகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சாதியினரின் விழாவாக கொண்டாடுகின்றனர்" எனக் கூறுகிறார்.

திருநாகேஸ்வரம்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

அழைப்பிதழ் சர்ச்சை

திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

"பத்து நாட்களாக நடைபெற்ற இந்த விழாவுக்கு அனைத்து சாதியினரிடம் இருந்தும் நன்கொடை பெற்றனர். ஆனால், விழா அழைப்பிதழில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் பெயர் மட்டும் இருந்தது" எனக் கூறுகிறார், குன்றத்தூரை சேர்ந்த வைரமுத்து.

கோவில் விழா தொடர்பான அழைப்பிதழை நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சமர்ப்பித்ததாகக் கூறும் வைரமுத்து, "குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" என்கிறார்.

கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட சாதியின் பெயரில் சங்கம், திருமண மண்டபம் உள்ளதாகக் கூறும் அவர், "இது அவர்களின் மூதாதையரின் கோவிலாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்" என்றார்.

திருநாகேஸ்வரர் கோவில் கடந்த 1968 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பாண்டியராஜன், "60 பேர் கொண்ட குழுவில் பத்து பேர் உபயதாரராக உள்ளனர். அவர்கள் 10 பேரும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா நடத்துகின்றனர். வேறு சாதிக்கு அனுமதியில்லை" என்கிறார்.

"திருவிழாவுக்கு நன்கொடை வசூல் செய்தால் அதற்குரிய ரசீதுகள் கொடுக்கப்படுவதில்லை. கணக்கு வழக்குகளும் இல்லை. அனைத்தும் தங்கள் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், "கோவிலில் வழிபாடு நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் கூறும் வைரமுத்து, "கோவிலில் உபயதாரராக பட்டியல் சாதி உள்பட இதர சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நன்கொடைகளையும் பாரபட்சம் பார்த்து தான் வாங்குகின்றனர்" எனக் கூறுகிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ்பாபு முழுமையாக மறுத்தார்.

அறங்காவலர் குழு சொல்வது என்ன?

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

படக்குறிப்பு,திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

"முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் இந்தக் கோவில் வருகிறது. அதன்படி அறங்காவலர் குழுவில் ஒரே சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு" எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோவிலுக்கு நியமிக்கப்படும் ஐந்து அறங்காவலர்களில் 3 பேரை அறநிலையத்துறை ஆணையரும் 2 பேரை துறையின் செயலரும் நியமிப்பார்கள்" என்கிறார்.

சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்கள் சாதியினர் கோவிலை சிறப்பாக நிர்வாகம் செய்வதாகக் கூறி நாயக்கர், செட்டியார், வன்னியர், ஆதிதிராவிடர் என அனைவரும் சேர்ந்து கடிதம் கொடுத்தனர். அதை அடிப்படையாக வைத்து நிர்வாகம் செய்து கொள்வதற்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது" எனக் கூறுகிறார் ராஜ்பாபு.

ஒரு சாதியினர் உரிமை கோர முடியுமா?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினர் கோவிலை நிர்வகிக்க உரிமை கோரினால், அறநிலையத்துறை சட்டப்படி அதனை பரிசீலித்து அனுமதி வழங்கும் நடைமுறையை நிர்வாக திட்டம் (scheme) எனக் கூறுகின்றனர்.

இவை கிராமங்கள், ஊர்க்காரர்கள், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 'கோவிலுக்கு ஒரு சாதியினர் மட்டும் உரிமை கோர முடியாது' என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன் காளியம்மன் கோவில் வழக்கில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்கு கோவில்களை பயன்படுத்திக் கொள்வதாக தீர்ப்பில் கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, பெரும்பாலான பொதுக் கோவில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோவில்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, 26 ஆகியவை மத உரிமைகள் மற்றும் மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறிய நீதிபதி, 'அப்படிப் பார்த்தால் எந்த சாதியினரும் கோவிலுக்கு உரிமை கோர முடியாது' எனக் குறிப்பிட்டார்.

"தகவல் சொல்லாமல் வழக்கு"

அதேநேரம், தங்கள் வழக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை மனுதாரர் வழங்கியுள்ளதாகக் கூறுகிறார் திருநாகேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ் பாபு.

"கோவிலில் உபயம் செய்வதற்கு ஏதுவாக பொறுப்பு கொடுக்குமாறு கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம். ஆனால், எந்தவித தகவலும் சொல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர்" என்கிறார்.

"அதேநேரம், நன்கொடை பெறுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. கோவிலில் 16 உண்டியல்கள் உள்ளன. ஏராளமான கியு.ஆர் கோடு அட்டைகள் உள்ளனர். யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரம்மோற்வ விழாவுக்கு உபயதாரர்கள், பக்தர்கள், ஊர் பெரியவர்கள் ஆகியோரிடம் நன்கொடை பெற்று நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

"நன்கொடை வாங்காமல் எந்த விழாவையும் நடத்த முடியாது. அனைத்துக்கும் கணக்குகள் உள்ளன. இதில் தவறு நடந்தால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும்" என்கிறார் ராஜ்பாபு.

"அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் அவர்களிடம் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்" எனக் கூறும் ராஜ்பாபு, "கோவிலில் கருங்கல் மண்டபம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். அப்போதெல்லாம் உதவி செய்வதற்கு இவர்கள் வரவில்லை" எனக் கூறினார்.

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

அறநிலையத்துறை கூறுவது என்ன?

கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இதுவரை உபயதாரராக சேர்க்குமாறு அவர்கள் எந்த மனுவையும் கொடுக்கவில்லை. ஏதேனும் இடங்கள் காலியாக இருந்திருந்தால் மனுவை பரிசீலித்திருப்போம். ஆனால், நேரடியாக நீதிமன்றம் சென்றுவிட்டனர்" எனக் கூறினார்.

உபயதாரர்களையும் நன்கொடையாளர்களையும் கோவில் நிர்வாகம் வரவேற்பதாகக் கூறும் சுதாகர், "யார் வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். எந்த சாதி வேறுபாடுகளும் இல்லை" என்கிறார்.

கோவிலுக்கு குறிப்பிட்ட சாதியினர் பணம் செலவழித்து விழாக்களை நடத்துவதாகக் கூறும் சுதாகர், "உபயதாரர்களாக அவர்கள் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதனைச் செய்து வருகின்றனர்" என்கிறார்.

முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் நாகேஸ்வரம் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலராக இருக்க வேண்டும் என 1981 ஆம் ஆண்டு சென்னை அறநிலையத்துறை துணை ஆணையர் மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"கோவில்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாரார் உரிமை கோர முடியாது" என, நாமக்கல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களை குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலர்களாக இருந்து நிர்வாகம் செய்கின்றனர். திருநாகேஸ்வரர் கோவில் வழக்கில் இணை ஆணையர் விசாரணை நடத்தி மனுவை பரிசீலனை செய்வார்" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gk2vxx6e4o

Checked
Mon, 09/15/2025 - 19:37
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed