தமிழகச் செய்திகள்

'கருணாநிதியின் உதவி, ஏசி வசதி' - காமராஜர் பற்றி திருச்சி சிவா பேசியதில் உண்மை உள்ளதா?

3 months 2 weeks ago

காமராஜருடன் கால் நூற்றாண்டு, புத்தகம்

பட மூலாதாரம்,KAMARAJARUDAN KAAL NOOTRANDU

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 17 ஜூலை 2025, 13:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"காமராஜருக்கு குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அனைத்துப் பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்தார் முதலமைச்சராக இருந்த கருணாநிதி" என தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது இறுதிக் காலத்தில், தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கருணாநிதியிடம் காமராஜர் கேட்டுக் கொண்டதாகவும் திருச்சி சிவா பேசினார். "இது உண்மைக்குப் புறம்பானது" என காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காமராஜர் தொடர்பாக திருச்சி சிவா பேசிய கருத்தில் உண்மை உள்ளதா?

சென்னை பெரம்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 15) தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளும் அதேநாளில் வந்ததால் அவர் குறித்து சில தகவல்களை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பகிர்ந்துகொண்டார்.

திருச்சி சிவா பேசியது என்ன?

திருச்சி சிவா

பட மூலாதாரம்,TIRUCHI SIVA

படக்குறிப்பு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா

"எனக்கு 23, 24 வயது இருந்தபோது நிறைய நிகழ்வுகளை கருணாநிதி கூறுவார். காமராஜர் தங்கும் இடத்தில் குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அவர் தங்கும் அனைத்துப் பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்ததாகக் கருணாநிதி என்னிடம் கூறினார்."

ஆனால், "அப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி காமராஜர் கண்டனக் கூட்டம் நடத்துவதாகவும் அவர் நம்மை எதிர்த்துப் பேசுவதாகவும்" கருணாநிதி கூறியதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் காமராஜரை கைது செய்ய முடியவில்லை. அப்போது திருப்பதிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு அவர் கிளம்பினார். அப்போது முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு சென்றது."

'காமராஜரை போக வேண்டாம்' என, முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறியதாகவும் 'நான் தி.மு.க அல்ல, காங்கிரஸ்காரன். என்னைப் போக வேண்டாம்' எனக் கூற இவர் யார்?' என காமராஜர் கேட்டதாகவும் திருச்சி சிவா குறிப்பிட்டுப் பேசினார்.

அதோடு, "தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கும் வரை காமராஜரை நான் பாதுகாப்பேன் எனக் கருணாநிதி கூறியபோது, இவ்வளவு பெரிய உள்ளம் கொண்டவரா என காமராஜர் நெகிழ்ந்தார். தனது உயிர் போகும்போது, 'நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என கருணாநிதியிடம் அவர் கூறினார்" எனவும் திருச்சி சிவா பேசினார்.

எளிய முதலமைச்சராக அறியப்பட்ட காமராஜர் குறித்தும், காமராஜர் - கருணாநிதி நட்பு குறித்தும் திருச்சி சிவா கூறிய கருத்துகள், அரசியல்ரீதியாகப் பேசுபொருளாக மாறியது.

'தி.மு.க பரப்பிய கட்டுக் கதைகள்' - ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

பட மூலாதாரம்,JOTHIIYC/FACEBOOK

படக்குறிப்பு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

"திருச்சி சிவா ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். காமராஜர் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, கரூர் எம்.பி ஜோதிமணி, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் திருச்சி சிவாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனது எக்ஸ் பக்கத்தில் ஜோதிமணி எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சராக இருந்தபோது அரசினர் விடுதியில் தங்கியிருந்த காமராஜர், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறியது உண்மைக்குப் புறம்பானது" எனக் கூறியுள்ளார்.

காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறியுள்ள ஜோதிமணி, "காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. ஆனால், அது அவரது சொந்த மாளிகை என தி.மு.க பரப்பிய கட்டுக்கதைகளால் தேர்தல் நேரத்தில் அவர் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, காமராஜருடன் நெருங்கிய நட்பில் இருந்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனிடம் பிபிசி தமிழ் பேசியது. ஆனால் அவர், "தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேச விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

விளக்கம் அளித்த திருச்சி சிவா - ஆனால்?

காமராஜருடன் கால் நூற்றாண்டு, புத்தகம்

பட மூலாதாரம்,KAMARAJARUDAN KAAL NOOTRANDU

படக்குறிப்பு, காமராஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் இந்திரா காந்தி மற்றும் கருணாநிதி

தனது பேச்சுக்குக் கண்டனம் எழுவதைத் தொடர்ந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருச்சி சிவா, "காமராஜரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நான் பேசியதாக விவாதங்கள் வலுத்து வருகின்றன. எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றி நான் கண்ணியத்தோடு விமர்சிப்பதை அனைவரும் அறிவார்கள்" எனக் கூறியுள்ளார்.

"மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு ஏற்படுவதை எந்த வகையில் யார் செய்தாலும் அதை ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல" எனக் கூறியுள்ள திருச்சி சிவா, "காமராஜர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். என் உரையில் நான் கூறிய செய்தியை மேலும் விவாதப் பொருளாக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

அறிக்கையில் தான் பேசிய கருத்து தொடர்பாக எந்த மறுப்பையும் திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. ஆனால், இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டே காமராஜர் பிறந்தநாளன்று தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவை தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் பலரும் தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கருணாநிதியின் ஃபேஸ்புக் பதிவு கூறுவது என்ன?

மு.கருணாநிதி

பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89

அந்தப் பதிவில், "முதன்முதலாக காமராஜருக்கு சிலை வைத்த பெருமை, தி.மு.க பொறுப்பில் இருந்த சென்னை மாநகராட்சியையே சாரும்" எனக் கூறியுள்ளார்.

காவிரி பிரச்னை, எமர்ஜென்சி போன்றவற்றில் ஒவ்வொரு முடிவுக்கு முன்பும் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் காமராஜரின் வீட்டுக்குச் சென்று கருத்துகளைக் கேட்டு அவ்வாறே செயல்பட்டு வந்ததாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

காமராஜருக்கு குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்தது பற்றிப் பதிவிட்டுள்ள கருணாநிதி, "தி.மு.க அரசு பதவிக்கு வந்த பிறகு கடும் சுற்றுப் பயணத்தை காமராஜர் மேற்கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்க செயலாளர்கள், 'ஏ.சி இல்லாமல் அவரால் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை அவருக்கு உள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி ஏற்பாடு செய்து கொடுங்கள்' என்றனர்.

உடனே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, 'அவர் அதிகாரத்தில் இல்லையே எனப் பார்க்கக்கூடாது. நாமெல்லாம் அதிகாரத்தில் வருவதற்கு அவர் வழிவிட்டவர். நீங்கள் யாரும் சுணங்கக் கூடாது' என உத்தரவு பிறப்பித்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஆம்பூரில் காமராஜர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றையும் கருணாநிதி தனது பதிவில் மேற்கோள் காட்டியுள்ளார்.

'பேசிய பேச்சுக்குப் பரிகாரம்' - கருணாநிதி

காமராஜருடன் கால் நூற்றாண்டு புத்தகம்

'கூட்டத்துக்கு நேரமாகிவிட்டது' எனக் கூறி கட்சிக்காரர்கள் அவரை அழைத்தனர். அதற்குப் பதில் அளித்த காமராஜர், 'கருணாநிதியை திட்டுவதற்குத்தானே கூப்பிடுகிறாய். அவர்தான் ஊருக்கு ஊர் ஏ.சி வைத்துக் கொடுத்திருக்கிறார். அதை அனுபவித்துவிட்டு திட்டச் சொல்கிறாய்' என்று அவர் பேசியதாகவும் தனது பதிவில் கருணாநிதி கூறியுள்ளார்.

அதே பதிவில் காமராஜரை தான் எதிர்த்து அரசியல் செய்ததைக் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, "இந்தப் பாராட்டுகள், சிறப்புகள் எல்லாம் நான் அரசியலில் காமராஜரை எதிர்த்துப் பேசிய பேச்சுகள், ஈடுபட்ட செயல்களுக்குப் பரிகாரமாக என்னை மாற்றுகின்ற அளவுக்கு இருந்தன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

'அதுவே அவரது கடைசி நிகழ்ச்சி'

'குளிர்சாதன வசதியை காமராஜர் பயன்படுத்தினாரா?' என்பது தொடர்பாக, அவரது இறுதிக் காலம் வரை உதவியாளராக இருந்த வைரவன் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

'காமராஜருடன் கால் நூற்றாண்டு' என்ற தலைப்பில் வெளியான அந்தப் புத்தகத்தில் காமராஜரின் இறுதி நாட்கள், கருணாநிதி உடனான நட்பு ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

அதில், "இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தால் காமராஜர் மட்டுமல்ல, இந்திய அரசியலே ஆடிப் போனது. தன்னைப் பற்றி காமராஜர் கவலைப்படவில்லை. நாட்டுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற கவலையில் மூழ்கினார்" எனக் கூறியுள்ளார்.

"மனக் கவலை எந்த ஆரோக்கியமான மனிதரையும் வீழ்த்திவிடும். ஆனால் காமராஜருக்கோ சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் இருந்தன" எனக் கூறியுள்ள வைரவன், "இதனால் அவரது உடல்நலம் மிக விரைவாக பாதிக்கப்பட்டது" என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

"அதுவரை மாடியில் தூங்கி வந்தவர், கீழ்தளத்தில் தூங்கத் தொடங்கினார். 'நான் பழையபடி எழுந்து நடப்பேனா?' என மருத்துவர்களிடம் கேட்டார். எப்படியோ குணம் பெற்று நடமாடத் தொடங்கினார்" என்றும் காமராஜர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் வைரவன்.

திருச்சி சிவா

பட மூலாதாரம்,TIRUCHI SIVA

காமராஜர், 1975, ஜூலை 15 ஆம் தேதி தனது பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடியதாகக் கூறியுள்ள வைரவன், "அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜிக்கு பிறந்தநாள். அதுவே அவரது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும் என நினைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

"மறுநாள் (அக்டோபர் 2) காந்தியின் பிறந்தநாள். காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் இருந்தனர். அடுத்த தேர்தல் வரப் போகிறது. நிச்சயமாக தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என்ற கனவோடு காத்திருந்தார்கள். வழக்கமாக காந்தி பிறந்தநாளில்தான் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும்" என்கிறார் வைரவன்.

"நீங்கள் (காமராஜர்) எனக்கு ஆதரவாக இருங்கள். இந்தி பேசாத மாநிலங்களில் நீங்கள் விரும்பியவர்களை முதலமைச்சர்களாக நியமித்துக் கொள்ளுங்கள். நான் எமர்ஜென்சியை விலக்கிவிட்டு தேர்தலை நடத்துகிறேன்" என இந்திரா காந்தி கூறியதாகவும் தனது நூலில் வைரவன் குறிப்பிட்டுள்ளார்.

குளிர்சாதன வசதியை காமராஜர் பயன்படுத்தினாரா?

இந்த நூலில் காமராஜரின் இறுதி நாள் குறித்து வைரவன் விவரித்துள்ளார்.

"தலைவர் காலையில் வழக்கம்போல எழுந்தார். பத்திரிகைகள் படித்தார், குளித்து முடித்தார், மருத்துவர் ஜெயராமன் வந்தார். இன்சுலின் ஊசி போட்டுவிட்டுப் போனார். காலை சிற்றுண்டியாக முட்டையில் வெள்ளைக் கரு போட்டு பிரட் டோஸ்ட் தயாரித்தேன். அப்போது என்னை மின்சாரம் தாக்கியது" என்கிறார்.

"கடந்த 1955இல் மும்பையில் தானியங்கி டோஸ்டர் ஒன்றை காமராஜர் வாங்கினார். அது பழுதாகிவிட்டது. அதைச் சரிபார்க்க வாங்கிச் சென்ற எலக்ட்ரீஷியன், 'அண்ணே இன்றைக்கோடு போச்சு' என தலைவர் இருப்பதைக் கவனிக்காமல் கூறிவிட்டான்.

'டோஸ்டர் இனி தேறாது' என்ற அர்த்தத்தில் அவன் சொன்னான். எப்போதும் அப்படிப் பேசாதவன் பேசியதும் என்னை மின்சாரம் தாக்கியதும் சற்று நெருடலாக இருந்தது" எனக் கூறியுள்ளார் வைரவன்.

காமராஜர்

பட மூலாதாரம்,JOTHIMANI SENNIMALAI/FACEBOOK

அவசரநிலைப் பிரகடனத்தை இந்திரா காந்தி விலக்காவிட்டால் மதுரையில் இருந்து போராட்டம் நடத்துவது என காமராஜர் முடிவெடுத்ததாகக் கூறும் வைரவன், "உடனே நெடுமாறனை வரச்சொல்' என்றார். ஆனால், சென்னையில் இருந்தாலும் அவர் வரவில்லை" என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

"என்னிடம் சொன்னதற்கு மாறாக எதிரணியைச் சேர்ந்த சிவாஜியின் வீட்டுக்குப் போய்விட்டாரே என காமராஜருக்கு வருத்தம். மணி மதியம் இரண்டரை மணி. அப்போதும் நெடுமாறன் வரவில்லை. காமராஜர் மனதளவில் சோர்ந்து போனார்" எனவும் அவர் கூறியுள்ளார்.

"மனவெதும்பலுடன் சாப்பிட்டார். மின்விசிறி ஓடியபோதும் தலை லேசாக வியர்த்தது. துண்டால் துடைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தார். மதியம் சாப்பிட்டதும் சற்று தூங்குவது அவர் வழக்கம். அன்றும் படுத்தார். அந்த அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டது" எனக் கூறுகிறார் வைரவன்.

"காமராஜர் இருந்தால் உள்ளே குழல் விளக்கு எரியும். அவர் தூங்கும்போது நாங்களாக விளக்கை அணைத்துவிடுவோம்" எனக் கூறியுள்ள வைரவன், "அப்போது அழைப்பு மணி அவசர அவசரமாக ஒலித்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வியர்ப்பதாகக் கூறி மருத்துவர் சௌரிராஜனை காமராஜர் அழைக்குமாறு கூறியதாகக் குறிப்பிட்டார். "அறையை விட்டுக் கிளம்பும்போது, 'வைரவா விளக்கை அணைத்துவிட்டுப் போ' எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியதில்லை" என்கிறார் வைரவன்.

மருத்துவர் சௌரிராஜன் வந்து பார்த்தபோது அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறிக் கதறி அழுததாக வைரவன் தெரிவித்துள்ளார். ஆனால், கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கூறியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

'அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசுவார்'

அதே புத்தகத்தில் கருணாநிதி-காமராஜர் நட்பு குறித்தும் வைரவன் விவரித்துள்ளார்.

"தேசிய அளவில் காங்கிரஸ் பிளவுபட்டபோது தி.மு.கவினர் இந்திரா காந்திக்கு நேசக்கரம் நீட்டினார்கள். இந்திரா காந்திக்கும் தி.மு.கவுக்கும் காமராஜரை எதிர்ப்பது நோக்கமாக இருந்தது" எனக் கூறுகிறார்.

இந்த நிலையில், தி.மு.க பிளவுபட்டு அ.தி.மு.கவை தொடங்கிய எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியை ஆதரித்தார். "அப்போதுதான் காமராஜர் மீது கருணாநிதிக்கு அன்பு மலர்ந்தது. அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசுவார்" என வைரவன் குறிப்பிடுகிறார்.

"நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியபோது, தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் நச்சுக்கத்தி எட்டிப் பார்த்தது. அதைத் தடுக்க உதவும் முக்கியக் கேடயமாக காமராஜர் இருந்தார். அதைக் கருணாநிதியும் உணர்ந்தார்" என்கிறார் வைரவன்.

மு.க.ஸ்டாலினின் திருமண நிகழ்வில் காமராஜர் பங்கேற்றது குறித்துக் கூறியுள்ள வைரவன், "சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடியார் மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் திருமணம் நடந்தது. அதற்கு நேரில் வந்து கருணாநிதி அழைப்பு கொடுத்தார். அப்போது காமராஜர் உடல் நலிவுற்று இருந்தார். அவரால் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாது."

காமராஜரின் கார் நேராக மணமேடை வரை போவதற்கு கருணாநிதி ஏற்பாடு செய்திருந்ததாகவும் காமராஜரும் சென்று வாழ்த்தியதாகவும் கூறியுள்ள வைரவன், ஆட்சியில் இருந்தபோதும் நெருக்கடி நிலையின்போதும் காமராஜரை பலமுறை சந்தித்து கருணாநிதி ஆலோசனை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான 'முரசொலி' வெளியிட்ட காமராஜர் நூற்றாண்டு மலரிலும் இதைப் பற்றிக் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். 'எனக்குப் பெருந்துணையாக விளங்கிய காமராஜர்' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியானது.

அதில், "ஆட்சிப் பொறுப்பில் நான் இருந்தாலும் காவிரி பிரச்னை போன்ற பொதுப் பிரச்னைகளில் காமராஜரின் ஆலோசனைகளைப் பெறவும் எமர்ஜென்ஸி நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து விவாதிக்கவும் அவரது இல்லத்திற்குப் பலமுறை சென்றுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq536elzlq2o

ஈரோட்டில் கர்ப்பிணி பழங்குடி பெண்ணை காவல்துறை, சுகாதாரத்துறை சேர்ந்து தேடுவது ஏன்?

3 months 2 weeks ago

தேடப்பட்டு வரும் கர்பிணி பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • சாரதா வி

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு சுகாதாரத்துறையும் காவல்துறையும் சேர்ந்து கடந்த சில நாட்களாக 25 வயது பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இடம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, சோளகர் தொட்டி கிராமம்

தேதி : ஜூலை 05-ஆம் தேதி, மாலை 5மணி.

அழகான மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்த கிராமத்தில் இருந்த சேவந்தி என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜூலை 7-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு இது இரண்டாவது பிரசவம்.

ஒரு வாரம் முன்பே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கிராம சுகாதார செவிலியர் ஜோதி வலியுறுத்தியிருந்தார். ஆனால் சேவந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

ஜூலை 5-ஆம் தேதி சேவந்தியை சந்திக்க சென்ற போது, ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனைக்கு வருவதாக சேவந்தி கூறியிருந்தார். ஆனால் ஜூலை 7-ஆம் தேதி காலை ஜோதி அங்கு சென்ற போது, சேவந்தியின் வீடு பூட்டியிருந்தது. அவர் வீட்டிலிருந்த அவரது கணவர் சந்திரன், அவரது 3 வயது குழந்தை, அவரது மாமியார் நான்கு பேரும் காணவில்லை. அந்த கிராமத்தில் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்

படக்குறிப்பு,சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

பத்து நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் கர்ப்பிணி

தமிழ்நாடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாகும்.

தேசிய குடும்ப நல ஆய்வு (2020-2021) தரவுகள் படி 99.6% பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) திட்டத்தின்படி, ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது, குறிப்பாக கிராமங்களில் இந்த கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.

செவிலியர் ஜோதி மட்டுமல்லாமல், பிளாக் மருத்துவ அலுவலர், விவசாய சங்கத் தலைவர் என பலர் முயற்சி எடுத்தும் சேவந்தி எங்கு இருக்கிறார் என்று கண்டறியமுடியவில்லை.

அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை, சேவந்தியை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

ஜூலை 16-ஆம் தேதி மாலை வரை சேவந்திக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா, அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஜூலை 14ம் தேதி கர்ப்பிணியை காணவில்லை என்று சுகாதாரத்துறை புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண் அணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் ஒத்துழைக்கவில்லை" என்றார்.

தேடப்பட்டு வரும் கர்பிணி பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகாவில் அமைந்துள்ளது சோளகர் தொட்டி கிராமம். சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள்.

"அவர் முதல் பிரசவத்திலேயே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டினார். பிறகு அவரிடம் பேசி அவரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைத்தோம். அவருக்கு சுகபிரசவம் ஆனது. எனவே இந்த முறை அவரை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.

மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறவிடாமல் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை காண இயலவில்லை. இவரை போன்ற பலர் பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்வதில்லை. பல மணி நேரங்கள் உட்கார்ந்து பேசி பல பெண்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கூட்டி வந்துள்ளோம். ஆனால் அவரை காணவேயில்லை என்பதுதான் இதில் எங்களுக்கு சவால்" என்கிறார் இதில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் ஒருவர்.

சேவந்தியை தேடும் பணியில் பல தரப்பினர் உதவியையும் சுகாதாரத்துறை நாடியுள்ளது. முதல் பிரசவத்தின் போதும் சுகாதாரத்துறையினரின் மிகுந்த வற்புறுத்தல், காவல்துறையினர் தலையீட்டுக்கு பிறகே சேவந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

தாளாவடி விவசாய சங்கத் தலைவர் கண்ணையன், "முதல் பிரசவத்தின் போது சேவந்திக்கு ரத்த சோகை இருந்தது. வேறு சில உடல் நல பிரச்னைகளும் இருந்தது. எனவே மருத்துவ நிபுணர்களை நேரில் சென்று ஆலோசனைப் பெற வேண்டும் என்று சுகாதார ஊழியர் கூறியிருந்தார்.

அவரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது, ஆனால் அவர் அதில் ஏற மறுத்துவிட்டார். உதவிக்காக நான் கொடுத்த காசையும் வாங்க அவரது மாமியார் மறுத்துவிட்டார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவரிடம் பேசி, மருத்துவரே காரை எடுத்துக் கொண்டு வந்த அவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது அவரது மாமியார், 'இவர்களுக்கு என்ன தெரியும்? நான் எத்தனை பிரசவங்கள் பார்த்திருக்கிறேன்' என்றார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் என்கிறார் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். (கோப்புப்படம்)

சோளகர் தொட்டி அருகில் இருக்கும் மருத்துவ நிலையம் 4 கி.மீ தொலைவில் இருக்கும் பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம். அடுத்து கிராமத்திலிருந்து 20 நிமிடத்தில் செல்லக் கூடிய தாளவாடி மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம். அங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதி உண்டு என்றாலும், அவருக்கு ரத்த சோகை இருந்ததால் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

"பிரசவத்தின் போது கடைசி நேர சிக்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் அதையே காரணம் காட்டி அவரது மாமியார், எந்த பிரச்னையும் இல்லாத போதே பல கிலோ மீட்டர் தள்ளியுள்ள மருத்துவமனைக்கு தேவையில்லாமல் எங்களை அழைத்துச் சென்றீர்கள், எங்களுக்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிவிட்டது என்று கூறுகிறார்" என்கிறார் கண்ணையன்.

"அவருக்கு முதல் பிரசவத்திலேயே ரத்த சோகை இருந்தது. இந்த முறையும் அவருக்கு ஹீமோகுளோபின் அளவு 8 மட்டுமே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால், தேவையான இரும்புச் சத்து கொடுத்து அவரது ஹீமோகுளோபின் அளவு 11.2 ஆக உயர்ந்திருந்தது." என்கிறார் சேவந்தியை கண்காணித்து வந்த கிராம சுகாதார ஊழியர் ஒருவர்.

சேவந்திக்கு அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைத்துள்ளன. மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.14 ஆயிரத்தின் முதல் தவணை கிடைத்துள்ளது என்கிறார் கிராம சுகாதார ஊழியர்.

ஏன் பழங்குடியினர் மருத்துவமனை வர தயங்குகின்றனர்?

சோளகர் தொட்டி கிராமம் வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்ட கிராமம்.

"அவரது மாமியார் காவல்துறை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் தான் அரசின் இழப்பீட்டை பெற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் அவரைப் போன்று மேலும் சிலர் உள்ளனர். எனவே இப்பகுதியினருக்கு அரசு மீதான நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது. தாளாவடியில் தாலுகா மருத்துவமனை வேண்டும் என்பது இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை," என்று கூறும் கண்ணையன் சோளகர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர் கல்வி பயில உதவி வருகிறார்.

பழங்குடியின பெண்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர்.

"பழங்குடி பெண்களிடம் பிரசவ தேதி வந்துவிட்டது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வலி வந்தால்தான் பிரசவத்துக்கு உடல் தயாராகிறது என்பது அவர்களின் புரிதலாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் குடும்பங்களில் அந்த வழக்கத்தையே அவர்கள் பார்த்திருப்பார்கள்." என்கிறார்.

பழங்குடியின பெண்கள் மத்தியில் ரத்த சோகை பரவலாக காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

"பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து அதிக புரதம், அதிக கொழுப்பு இருக்கலாம். செருப்பு இல்லாமல் நடக்கும் பழக்கம் இருந்தால் கொக்கிப்புழு தொற்று ஏற்படலாம். அதுவும் ரத்த சோகைக்கு காரணமாகலாம்" என்றார்.

மேலும் அவர், "கர்ப்பிணி பெண்ணுக்கு அனைத்தும் இலவசம் என்றாலும், அவருடன் இருப்பவருக்கான தங்கும் செலவு, உணவு செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரிக்கிறது. இந்த பெண்ணின் மாமியார் கூறியது போல, கையிலிருந்து செய்ய வேண்டிய செலவு அதிகரிக்கிறது. தேவைப்படும் இடங்களில், நோயாளியுடன் வருபவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல தனி படுக்கை, உணவு ஆகியவற்றை வழங்க ஆலோசிக்க வேண்டும்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce37ewp130do

'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி

3 months 2 weeks ago

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.

"பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி இன்று பிஹெச்.டி முடித்து, லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்கிறார் என். ஜென்சி.

சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய ஜென்சி, பி.ஏ., எம்.ஏ.வில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

"சமூகம் என்னை அடக்குமுறை செய்தபோது என்னை காப்பாற்றியது கல்விதான்." என கூறுகிறார் ஜென்சி. ஏழ்மையான நிலையிலும் கல்வியை கைவிடாததற்கு இதுவே காரணம் என்கிறார் அவர்.

ஜென்சி லயோலா கல்லூரியில் பணியாற்றுவது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவிக்கிறார், லயோலா கல்லூரியின் ஆங்கில துறை தலைவரும் ஜென்சியின் முனைவர் பட்ட வழிகாட்டியுமான மேரி வித்யா பொற்செல்வி.

"என்னை முதலில் பேராசிரியராக பாருங்கள், பின்னர் எந்தவித கற்பிதங்களும் இல்லாமல் திருநங்கையாக பாருங்கள்." என்கிறார் பேராசிரியர் ஜென்சி.

தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: டேனியல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

BBC News தமிழ்
No image previewஜென்சி: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் கல்வியா...
கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.

திருவாரூர்: 'மலம் கலந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால்...' - அரசுப் பள்ளி சமையலர்கள் நேரில் கண்டது என்ன?

3 months 2 weeks ago

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

படக்குறிப்பு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன்

பள்ளி வளாகத்தில் என்ன நடந்தது?

திங்கள் கிழமை (ஜூலை 14) காலை 7 மணியளவில் காலை உணவு தயாரிப்பதற்காக பள்ளிக்கு சமையலர்கள் கார்த்திகா, பிரியா ஆகியோர் வந்துள்ளனர்.

"உள்ளே நுழையும்போதே உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் என சமையலுக்குத் தேவையான பொருட்கள் வெளியில் சிதறிக் கிடந்தன" எனக் கூறுகிறார், கார்த்திகா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளி வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. அவற்றில் இருந்து காய்களையும் பறித்துக் கீழே வீசியிருந்தனர். அங்கிருந்த குடிநீர் குழாய்களையும் உடைத்திருந்தனர். இதைப் பார்த்து பயந்து போய் வெளியில் வந்தோம்," என்கிறார்.

பள்ளி வளாகத்துக்குள் அசாதாரண சூழல் நிலவியதால், ஊர் மக்களில் சிலரை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். "சமையல் அறைக்கு வெளியில் வாழை இலையில் மசாலாவை போட்டு பிரட்டியிருந்ததைப் பார்க்க முடிந்தது. உடும்பு அல்லது கீரியைச் சமைத்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகா.

பள்ளி வளாகத்தைப் பார்வையிட்ட ஊர் மக்கள், சமையலறைக் கதவை உடைத்து சிலர் பயன்படுத்தியுள்ளதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

'தற்செயலாக உள்ளே பார்த்தேன்'

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

"சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு நடத்திவிட்டுச் சென்றது. அவர்கள் சென்ற பிறகு குடிநீர்த் தொட்டியின் முன்பு உடைக்கப்பட்ட குழாய்களைப் பார்த்துவிட்டு, தற்செயலாக குடிநீர்த் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன்" எனக் கூறுகிறார், காரியாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான கோ.சி.மணி. இவரது மகள் இதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி வளாகத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள கான்கிரீட் சுவற்றின் மீது குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

"நீர் வெளியேறும் குழாய் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ஐந்து தேங்காய்கள் உரிக்கப்படாமல் கிடந்தன. ஒரு அடி அளவுக்கு நீர் தேங்கியிருந்தது. அதில் மனித மலம் இருந்ததைக் கண்டேன்" எனக் கூறுகிறார், கோ.சி.மணி.

"உடனே காவல்துறையை மீண்டும் அங்கு வரவழைத்தோம்" எனக் கூறும் அவர், "காலையிலேயே இதைக் கவனித்துவிட்டதால் குழாயைச் சரி செய்து நீரைத் தொட்டிக்குள் நிரப்பும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அசுத்தம் கலக்கப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் குழந்தைகள் நீரைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்" எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறை விசாரணை தீவிரம்

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

இதையடுத்து, திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், பள்ளியில் ஆய்வு நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது அங்குள்ள வீடு ஒன்றை நோக்கி மோப்ப நாய் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சந்தேக வளையத்தில் இருந்த நான்கு பேரிடம் திருவாரூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

"பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி உடும்பு மற்றும் கீரியைப் பிடிப்பதற்காக கூண்டு ஒன்றை வைத்துள்ளனர். நாங்கள் சென்றபோது அந்தக் கூண்டு இருந்தது. அதன் அருகில் இருந்த சாக்குப் பையில் கீரியின் உரிக்கப்பட்ட ரோமங்கள் இருந்தன" எனக் கூறுகிறார், கோ.சி.மணி.

சமையல் கூடத்தில் உள்ள சிலிண்டர் மூலம் கீரியை நெருப்பில் வாட்டி சுட்டு சமைத்துள்ளதாகக் கூறும் அவர், "சமையல் அறையைப் பயன்படுத்தி சாப்பிட்டதைக்கூட பெரிய பிரச்னையாக நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், மனித மலம் கலக்கப்பட்டதை ஏற்க முடியாது" என்கிறார்.

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

'மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்'

இதே கருத்தை முன்வைக்கும் சமையலர் கார்த்திகா, "ஒரு குழாய் விடாமல் அனைத்தையும் உடைத்துவிட்டனர். அந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தங்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறும் அவர், அதில் இருவர் பள்ளிக்கு அருகிலும் இருவர் பக்கத்து தெருவிலும் வசிப்பவர்ளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கி மிக அராஜகமாக செயல்பட்டுள்ளனர். ஆனால், யாருக்கும் சத்தம் கேட்கவில்லை என்கிறார்கள். சாதிரீதியாக நடந்திருக்குமா எனத் தெரியவில்லை," எனவும் அவர் கூறினார்.

'என்ன கோபம் எனத் தெரியவில்லை'

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

மேலும், "குடிபோதையில் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், நான்கு குடிநீர்க் குழாய்களை உடைத்துவிட்டு, தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கும் அளவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை," என்கிறார் கார்த்திகா.

திட்டமிட்டே இதைச் செய்ததாகப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறும் கார்த்திகா, "தேங்காய்களைப் பறித்து வீசியதோடு இரண்டு வாழை மரங்களை அடியோடு சாய்த்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட அட்டகாசத்தை ஏன் செய்ய வேண்டும்?" எனவும் கேள்வியெழுப்பினார்.

வரும் நாட்களில் பள்ளியில் காலை உணவு தயாரிப்பதற்குத் தனியாக வந்து செல்வதற்குத் தனக்கு அச்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாததால், பள்ளி ஆசிரியர் அன்புச்செல்வியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"பள்ளி கட்டடத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்படவில்லை. தண்ணீர்த் தொட்டியை மாற்றிவிட்டோம்" எனக் கூறினார்.

காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தான் வந்து பத்து மாதங்களே ஆகியிருப்பதாகக் கூறும் அன்புச்செல்வி, "இதற்கு முன்பு சிலர் தேங்காய்களைப் பறித்துச் சென்றதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை" என்கிறார்.

மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்

குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவம் நடைபெற்ற பள்ளியில் காவல் துணை காண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் குற்றம் செய்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்" எனக் கூறினார்.

பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சிலர் இவ்வாறு செய்துள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், "என்ன நோக்கத்திற்காகச் செய்துள்ளனர் எனத் தெரியவில்லை. சாதிரீதியான காரணம் எதுவும் இல்லை. விசாரணை முடிவில்தான் தெரிய வரும்" என்றார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரிக்குமாறு காவல்துறைக்கு கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து வைக்குமாறு கூறியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rp86n2gjpo

ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

3 months 2 weeks ago

New-Project-187.jpg?resize=750%2C375&ssl

ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

கடந்த மாதம் மேல்சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தலைமையிலான கூட்டணியின் முக்கிய ஆதரவுடன் உறுதி செய்யப்பட்டது.

ஜூன் மாதம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்காக ஆளும் கூட்டணியால் முன்மொழியப்பட்ட நான்கு வேட்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.

மூத்த நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனுடன் திமுக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், புகழ்பெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரை நியமித்தது. திமுக தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இது மாநில சட்டமன்றத்தில் கூட்டணியின் வலுவான பெரும்பான்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (AIADMK), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் எம். தனபால் ஆகியோரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தத் தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

ஏனெனில் அதன் தொடக்கத்திலிருந்து கட்சியிலிருந்து ஒருவர் மாநிலங்களவையில் நுழைவது இதுவே முதல் முறை.

கமல்ஹாசன் மாநிலங்களவையில் உறுப்பினராக இணைந்திருப்பது, தேசிய சட்டமன்ற விவாதங்களுக்கு ஒரு புதிய குரலைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அவரது உறுப்புரிமை மேல்சபையில் திமுக தலைமையிலான கூட்டணியின் பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்தும்.

https://athavannews.com/2025/1439288

வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறையின் சாதக, பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்

3 months 2 weeks ago

வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறை

பட மூலாதாரம்,INSTA/R.C.C.LPS.EAST.MANGAD

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • சாரதா வி

    பிபிசி தமிழ்

  • 15 ஜூலை 2025, 02:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டு அரசுப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் 'ப' வடிவத்தில் இருக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்து இதன் மூலம் உடைபடும் என்று அரசு நம்புகிறது.

ப வடிவ இருக்கைகள் ஆசிரியர் - மாணவர் இடையேயான உரையாடலை அதிகரிக்கும் என்றும், பொதுவாக பேச தயங்கும் மாணவர்களும் இந்த வடிவில் இருக்கைகள் அமைக்கப்படும் போது வகுப்பறையில் அதிகம் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை கூறுகிறது.

ஆனால் இருக்கைகள் 'ப' வடிவில் இருந்தால் மட்டும் போதுமா? என்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்து எழுப்பப்படுகின்றன. ஆரோக்கியமான வகுப்பறை சூழலுக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போதுமான கட்டுமானங்கள் இருப்பது ஆகியவற்றை செய்யாமல் இருக்கைகளை மாற்றியமைப்பது எப்படி உதவும் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

'ப' வடிவ இருக்கை முறை அறிமுகம்

சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற மலையாள திரைப்படத்தில் ப வடிவ இருக்கை முறையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து, கேரளாவில் சில பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இந்த முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அமரும் பாரம்பரிய இருக்கை முறையில், மாணவர்- ஆசிரியர் உரையாடல் குறைவாக இருக்கலாம். ப வடிவ இருக்கை முறையில், மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது சோதனை முயற்சியே என்றும், ஒரு வாரம் கழித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று அவர்களின் கருத்துகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசின் இந்த உத்தரவை பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ப வடிவ இருக்கை முறையில் மாணவர்களின் மனநிலை மேம்படும் உள்ளிட்ட சாதக அம்சங்கள் இருப்பது போலவே குறைகளும் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த உத்தரவை விமர்சித்து பேசியுள்ள பாஜக மூத்தத் தலைவரும் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிகள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பள்ளிகளில் கழிவறைகள் இல்லை, குடி நீர் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலகில் ப வடிவம், வட்ட வடிவம், குழுக்களாக அமர்வது என பல்வேறு வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன.

'ப' வடிவ இருக்கை முறை : சாதகம் vs பாதகம்

ப வடிவ இருக்கை முறை வகுப்பறையில் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

  • ப வடிவ முறையில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையும், கரும்பலகையையும் பிற மாணவர்களையும் பார்க்க முடியும்.

  • எல்லா மாணவர்களையும் பார்த்து ஆசிரியரால் பேச முடியும்.

  • பிற மாணவர்கள் பேசுவதை கேட்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் இந்த இருக்கை முறை உதவும்.

  • ப வடிவில் மாணவர்கள் அமரும் போது, ஆசிரியர் வகுப்பறைக்குள் நடமாட முடியும், அனைத்து மாணவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும்.

  • மாணவர்கள் வகுப்புகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உதவும்.

  • பேச தயங்கும் மாணவர்கள் இந்த இருக்கை முறையில் கலந்துரையாடலில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உண்டு

ப வடிவ முறையின் இந்த சாதகமான அம்சங்களை யாரும் மறுக்காத நிலையில், இதற்கான பாதகங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

கல்வியாளர் பாலாஜி சம்பத், " மாணவர்கள் ப வடிவ முறையில் அமரும் போது, அனைத்து மாணவர்களாலும் கரும்பலகையை நேராக பார்க்க முடியாது. சில மாணவர்கள் இடது அல்லது வலது புறம் தங்கள் கழுத்தை திருப்பியே பார்க்க வேண்டியிருக்கும். பல மணி நேரம் இப்படி அமர்வதால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்." என்கிறார்.

அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், வகுப்பறையில் அனைவரையும் ப வடிவ முறையில் அமர வைப்பது சிரமமாக இருக்கலாம்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ப வடிவ இருக்கை முறை 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்தை நீக்கிட உதவும் என்று அரசு கூறுகிறது.

சர்வதேச அளவில் என்னென்ன இருக்கை முறைகள் உள்ளன?

உலகில் பல்வேறு விதமான வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. அவை அந்தந்த கற்றல் முறையின் வெளிப்பாடாக உள்ளன.

  • ப வடிவம்/ யூ என்ற ஆங்கில எழுத்து (U) வடிவ இருக்கை முறையில் மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடல் நிகழ்த்தவும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் கவனம் செலுத்தவும் உதவும்.

  • சிறுசிறு குழுக்களாக மாணவர்கள் ஒரு மேசைக்கு அருகில் அமரும் முறையில் மாணவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள உதவும்.

  • வட்ட வடிவிலான இருக்கை முறை குழு விவாதங்கள் நடத்தவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் உதவும்.

  • இரு மாணவர் அமரும் முறை ஆசிரியர் மேசைகளுக்கு இடையே சென்று அனைத்து மாணவர்களையும் கவனிக்க உதவும்.

தரமான கல்வி முறையை கொண்டதாக கூறப்படும் பின்லாந்து நாட்டில், நவீன பள்ளிகள் சிலவற்றில் வகுப்பறைகளில் பாரம்பரிய மேசை, நாற்காலிகளுக்கு பதிலாக நகர்த்துவதற்கு எளிதான மென்மையான நாற்காலிகள், சோஃபாக்கள், நவீன மேசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது இருக்கை முறையை தேவைப்படும் போது மாற்றியமைத்துக் கொண்டே இருக்கலாம். அங்கே மாணவர்கள் குழுக்களாக அமரும் முறையும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் நிரந்தரமான இடம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் என்ன செய்யலாம் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த வகுப்பறை வழங்கும்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் 'யாருடைய வகுப்பறை' என்ற தனது நூலில், பின்லாந்து வகுப்பறைகளில் வட்ட வடிவ இருக்கை முறை எப்படி கற்றலை மேம்படுத்தவும், வகுப்பறையை ஆசிரியர் மையப்படுத்தியதாக இல்லாமல் மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர் இந்த உத்தரவை வரவேற்காமல் இருக்க முடியாது என்றார். " கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு மாணவர்களிடம் 'என்னை கவனி' என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஏன் கடைசியில் அமர வைத்துள்ளீர்கள், முதல் வரிசையில் அமர வையுங்கள் என்று ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்" என்று கூறினார்.

எனினும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருந்தால் மட்டுமே வகுப்பறையில் இந்த இருக்கை முறை சாத்தியம் என்றும் அவர், "அனைத்து வகுப்பறைகளிலும் இந்த விகிதம் இல்லை, பல இடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது போன்ற வகுப்பறைகளில் இருக்கை முறையை எப்படி அமைய வேண்டும் என்பதை ஆசிரியரின் சுதந்திரத்துக்கே விட்டுவிட வேண்டும்." என்கிறார்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம்,ஆயிஷா இரா. நடராசன்

படக்குறிப்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன், சில வரம்புகள் இருந்தாலும் அரசின் இந்த உத்தரவு வகுப்பறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம், பாலாஜி சம்பத்

படக்குறிப்பு,கல்வியாளர் பாலாஜி சம்பத்

வருடாந்திர கல்வி நிலை (ASER) 2024 -ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் ஐந்தாம் வகுப்பில் 37% பேருக்கே வாசிக்க தெரிந்திருந்தது. (தனியார் பள்ளிகளில் 32.3% மாணவர்களுக்கு வாசிக்க தெரிந்திருந்தது). அதே போன்று அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 20.2% பேருக்கே வகுத்தல் கணக்குகளை செய்ய தெரிந்திருந்தது.

இதுபோன்ற அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாலாஜி சம்பத் கூறுகிறார். "அதை செய்வது சிரமமான காரியம் அல்ல. கழித்தலோ, வகுத்தலோ தெரியாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி தர வேண்டும். இது போன்ற சிறுசிறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் தான் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒரே ஒரு விசயம் மொத்தமாக கல்வி முறையை மாற்றியமைத்து விடும் என்று நம்புவது தவறு" என்கிறார் அவர்.

கடந்த 21 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தை ஷண்முகப்பிரியா ப வடிவ வகுப்பறையை அரசு வலியுறுத்தும் முன்பே தங்களது பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார்.

"மாணவர்களின் கவனம் அதிகரிக்கும் என்பதால் ப வடிவ இருக்கை முறையை ஏற்கெனவே வகுப்பறைகளில் அமல்படுத்தியுள்ளோம். இந்த வடிவில் அமரும் போது, ஆசிரியரால் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியும். மெதுவாக கற்கும் மாணவர்களுக்கும் முழு கவனம் கிடைக்கும். மாணவர்கள் வகுப்பை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொள்வது குறைந்தது" என்கிறார். எனினும் வகுப்பறையின் அளவை பொருத்தே இதை அமல்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஒரு வகுப்பறையில் 23 மாணவர்கள் இருந்தபோது எளிதாக ப வடிவ முறையை அமல்படுத்த முடிந்தது என்றும் இந்த ஆண்டு 38 மாணவர்கள் இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படலாம் என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, மாணவர்களின் அமரும் இடங்களை ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றியமைக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராசன். "ஒவ்வொரு வகுப்பின் போதும் மாணவர்கள் இடம் மாறி அமர்வது அவர்களுக்கு புத்துணர்வு தரும். இதனை நேர விரயமாக ஆசிரியர்கள் கருத கூடாது" என்பது அவரது கருத்து.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj4epnzdqk5o

தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது!

3 months 2 weeks ago

san.jpg?resize=668%2C375&ssl=1

தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது!

கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி சான்ரேச்சல்  காதல் திருமணம் செய்த ஓராண்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான  அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் விருதுகளை  குவித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாது புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ‘மொடலிங்’ (பேஷன் ஷோ) பயிற்சி வகுப்புக்களையும்  எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்,  கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டனர்.

இதேவேளை சான்ரேச்சல் தனது திருமணத்திற்காகவும், பேஷன் ஷோ நடத்துவதற்காகவும்  பலரிடம் லட்ச்சக்கணக்கில் கடன் பெற்றிருந்ததாகவும் இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான்ரேச்சல் தனது தந்தைக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த (பி.பி.) மாத்திரைகளை தின்று விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை  மகளது வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு  மயங்கிக்  கிடந்த மகள் சான்ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சான்ரேச்சல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேவேளை  சான்ரேச்சல் இறப்பதற்கு முன்னர் தனது கணவர், தந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தார்.

அக்  கடிதங்களில் ‘தான்  தனது குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன்  வாங்கியுள்ளதாகவும், அக் கடனை தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை எனவும், தனது  உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணியதாகவும்,  ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை எனவும்,  தற்கொலைக்கு தன்னை அனைவரும் மன்னித்து விடவேண்டும் எனவும்  தனது மரணத்திற்கு யாரும்  காரணமில்லை’ எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சான்ரேச்சல் கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும்  பொலிஸார்  கூறுகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1439001

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

3 months 2 weeks ago

New-Project-152.jpg?resize=750%2C375&ssl

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.

ஜூலை 13 ஆம் திகதி அதிகாலையில், ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களை மேலும் அதிகரிக்கிறது என்றும் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1438998

Checked
Sun, 11/02/2025 - 17:37
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed