ஊர்ப்புதினம்

இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் இறுதி அறிக்கை வெளியீடு

1 month 4 weeks ago

Published By: Vishnu

04 Sep, 2025 | 04:02 AM

image

(நா.தனுஜா)

உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முற்கூட்டிய வரைவு அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அவ்வறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில் வழங்கியதன் பின்னரா இறுதி அறிக்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

'பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக சகல ஒடுக்குமுறைச்சட்டங்களையும் இல்லாதொழிப்பதாகப் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அச்சட்டத்தை முற்றாக நீக்குவது குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமென கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அத்தோடு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு வெறுமனே இரண்டு வார காலஅவகாசத்தை வழங்கும் அறிவிப்பு கடந்த மேமாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

அப்புதிய சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அரசாங்கமானது நபர்களைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறது.

இவ்வறிக்கை தொடர்பான ஆணை வழங்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் நினைவுகூரல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அவற்றை ஒழுங்குசெய்தவர்கள் உள்ளடங்கலாகப் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த நபர்கள் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் படையினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கும் வகையில் பொதுப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுவரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் தற்போதைய அரசாங்கத்தினால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகிறது' என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று 'யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆக்கபூர்வமானதும் செயற்திறன்மிக்கதுமான பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சமூகத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட சமூகப்பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவருவோர் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தகாலத்தில் சர்வதேச குற்றங்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மீறல்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்வதும், அதுகுறித்து உரியவாறான தீர்வை வழங்குவதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதும் அவசியமாகும்.

மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையையும், நீதியையும் உறுதிசெய்வதற்குத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவரது கொள்கைப்பிரகடன உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இக்கருத்தானது செயல் வடிவம் பெறுமாயின், அதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்டதொரு வாய்ப்பு கிட்டும். இருப்பினும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்வதுடன், கடந்தகால மீறல்களுக்கு வழிகோலிய கட்டமைப்பு ரீதியான நிலைமைகள் மாற்றமின்றிக் காணப்படுகின்றன' என்றும் அவ்வறிக்கையில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224149

ஐ.நா.வில் இலங்கை குறித்து இந்தியா மௌனம் கலைய வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹநாமா

1 month 4 weeks ago

03 Sep, 2025 | 03:03 PM

image

(எம்.மனோசித்ரா)

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால் அது இலகுவான விடயமல்ல. இதற்கு ஐரோப்பிய மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டுமெனில் இலங்கை தொடர்பில் இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹநாமா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (03)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடர் இவ்வாரம் ஆரம்பமாகிறது. புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பதிலளிப்பு தொடர்பில் 47 அங்கத்துவ நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை உருவாக்குவது இலகுவான விடயமல்ல.

மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள கால கட்டத்திலேயே இது தொடர்பில் பேசப்படுகிறது. ஆனால் இந்த பொறிமுறை பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டியவையாகும். ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் பிரேரணைக்கு அமெரிக்கா இணை அனுசரனை வழங்குகிறது. எனினும் தற்போது ட்ரம்ப் அதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதால் இங்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டிரிகோ உள்ளிட்ட 5 நாடு;கள் இலங்கைக்கு எதிரான யோசனையை தயாரித்து அதனை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தரினகராலயத்திடம் கையளித்துள்ளன. இந்த யோசனைக்கு இலங்கையிடம் இணை அனுசரணை கோரப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இது சிறந்த தீர்மானமாகும். எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனமும், இறையான்மைiயும் காணப்படுகிறது.

இதனை எந்த வகையிலும் யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. இதற்கு முன்னர் ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் எமக்கெதிரான யோசனைக்கு நாமே இணை அனுசரணை வழங்கியிருக்கின்றோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களில் பரிந்துரைகள் சில குறிப்பிடப்பட்டுள்ளன. சுயாதீன இராச்சியம் என்ற ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை முன்னிலையாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அவற்றில் பிரதானமானது ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும்.

அவ்வாறு அதில் கையெழுத்திட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் நாம் நேரடியாக தொடர்புபடுவோம். எனவே இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அடுத்து நாம் அவதானம் செலுத்த வேண்டிய விடயம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுவினரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடிந்துள்ளது.

இந்த சட்டம் நடைமுறையில்லாவிட்டால் இவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பர். இது பொலிஸாரின் விசாரணைகளுக்கு பாரிய பாதிப்பாகவே அமையும்.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றை ஏற்றுக் கொள்கின்றோம். இதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் காணப்படுகிறது. இவ்வாறு மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தேசிய ரீதியில் முன்னெடுக்க வேண்டும்.

அவற்றுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். செப்டெம்பர் ஒக்டோபரில் மாத்திரமன்றி தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்திலும் இதற்காக விசேட குழு நியமிக்கப்பட வேண்டும்.

சீனா, வியட்நாம், கியூபா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு ஆதரவாகவுள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும். அதற்கு இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். இந்தியா எமக்காக பேசும் பட்சத்தில் எம்மால் இந்த நாடுகளின் ஆதரவை இயல்பாகப் பெற முடியும்.

இந்தியா தவிர தென் ஆபிரிகா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் நம்பிக்கையும் பெற வேண்டும். இந்த நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை. மாறாக இவை இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளைப் பயன்படுத்தும் பட்சத்தில் எமக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/224099

காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!

1 month 4 weeks ago

New-Project-70.jpg?resize=750%2C375&ssl=

காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://athavannews.com/2025/1446035

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

1 month 4 weeks ago

dog-fe.jpg?resize=660%2C375&ssl=1

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும்  திட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446002

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!

1 month 4 weeks ago

New-Project-69.jpg?resize=750%2C375&ssl=

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!

தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன.

பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது, குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன.

தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் குலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட குலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாக குறைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://athavannews.com/2025/1446031

நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு

1 month 4 weeks ago

நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு

PrashahiniSeptember 4, 2025

WhatsApp-Image-2025-09-03-at-21-07-38_c4

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (03) நடைபெற்றது.

நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தனர்.

அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.

நிகழ்வில் நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.thinakaran.lk/2025/09/04/breaking-news/150884/நாவற்குழியில்-நவீன-கடலுண/

மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வாசஸ்தலம் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்படுமா?

1 month 4 weeks ago

மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வாசஸ்தலம் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்படுமா?

04 Sep, 2025 | 10:54 AM

image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. 

அரச உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. 

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்ப்பாத்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/224168

புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்!

1 month 4 weeks ago

புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன.

இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர்.

மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmf4xo9k0007xo29nktu6dqqe

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று ஷனுதி அமாயா சாதனை

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன.

இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. 

மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmf4xy9xm007dqplp73s06m6e

எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு!

1 month 4 weeks ago

எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு!

170711571.jpeg

எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், நல்லிணக்க பொறிமுறை மற்றும் யுத்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு 'அதிக காலமும் விட்டுக்கொடுப்பும்' தேவை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு செப்டெம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பிரித்தானியா உட்பட பல நாடுகளின் குழுமம் இம்முறை இலங்கை பிரச்சினை தொடர்பில் மேலும் ஒரு தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன. அது குறித்து ஆரம்ப கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன, ஆனால் தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனால் இலங்கைக்கு தனது கருத்துக்களை முன்வைக்க இராஜதந்திர சமூகத்தின் ஆதரவு தேவையெனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நடைபெறவுள்ள அமர்வில் தனது அறிக்கையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை கடந்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது தற்போதைய அரசாங்கமும் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது.

கடந்த 11 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அருணி ரணராஜா, செப்டெம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்றும் கூறினார்.  

https://newuthayan.com/article/எதிர்வரும்_செப்டெம்பர்_24ஆம்_திகதி_சர்வதேச_சபையில்_அநுர_வழங்கவுள்ள_செய்தி_-விஜித_ஹேரத்_தெரிவிப்பு!

அஸ்கிரிய பீட மகாநாயக்கா்கள் மற்றும் அணுநாயக்கர்களை சந்தித்தார் நாமல் ராஜபக்ஷ

1 month 4 weeks ago

03 Sep, 2025 | 12:03 PM

image

பொது ஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும்  குழுவினர் மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கா்களையும் அணுநாயக்கர்களையும் சந்தித்தனர். 

அவர்கள் தமது  எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக  நல்லாசிகள் பெற்றுக் கொண்டனர்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், சியம் மகா நிக்காயாவின் அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண.வரகாகொட ஞானரதன தேரர், மற்றும் அனுநாயக்கத் தேரர் வண.வேண்டறுவே உபாலி, வண. நாரம்பனாவே ஆணந்த தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் சியம் மகா நிக்காயாவின்  மல்வத்தை பிரிவின் மகா நாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்தி ஶ்ரீ சுமங்கல அவர்களை சந்தித்தனர். அப்பொழுது நாமல் ராஜபக்ச அவர்களுக்கு வண. தேரரினால் புத்தரின் புனித உருவச் சிலை ஒன்றையும்அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாமல் ராஜபக்சவிற்கு முடிந்த வரை பொறுமையுடன் பணியாற்றும்படி வண. தேரர் நல்லாசி வழங்கினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகர காரியவசம், சஞ்ஜீவ எதிரிமான, சீ.பீ.ரத்நாயக்கா, முன்னால் மத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் மகிந்த அபேகோன் உட்பட பலர் இதன் போது கலந்து கொண்டனர்.

Namal_Rajapak__2_.jpg

Namal_Rajapak__1_.jpg

https://www.virakesari.lk/article/224081

மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரியுங்கள் - சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்

1 month 4 weeks ago

03 Sep, 2025 | 11:45 AM

image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் சமகால நிலைவரங்கள் மற்றும் குறிப்பாக மனித உரிமைகள்சார் நகர்வுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.

இதன்போது இலங்கையினால் இதுவரை அடையப்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அங்கீகரிக்குமாறும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் மற்றும் புதிய சட்ட உருவாக்கம் உள்ளடங்கலாக எதிர்வருங்காலங்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

https://www.virakesari.lk/article/224078

இலங்கையில் HIV தாண்டவம்

1 month 4 weeks ago

இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்ளை  கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வியத்தகு அதிகரிப்பைக் காட்டுவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி,2025  ( National STD/AIDS Control Programme - NSACP 2025) ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச சம்பவங்கள் 2025 ஆம் முதல் காலாண்டில் பதிவாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான சம்பவங்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும்  அடங்குகின்றனர் இவர்கள் 15–24 வயதுக்குட்பட்டவர்கள், ஏனைய சம்பவங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

2025 ஆம் ஆண்டில் பதிவான HIV தொற்றுகளின் ஆண்-பெண் விகிதம் 6.6:1 ஆக காணப்படுகின்றது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) தொடர்பான 10 இறப்புகள் பதிவாகியுள்ளன

2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த வகையில் இலங்கை கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான HIV பரிசோதனைகளை நடத்தப்பட்டது.

அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சமீபத்தில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பரிந்துரைக்கப்பட்டது.

Tamilmirror Online || இலங்கையில் HIV தாண்டவம்

யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

1 month 4 weeks ago

யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இணையதள வசதி அண்மைக்காலமாக மந்தமான நிலையில் காணப்படுகிறது.

இதனை சரி செய்யும் வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று ஆழியவளையில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இதனை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குடும்பஸ்தர் ஒருவர் இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை இதில் நிறுவுவதால் கதிர்வீச்சால் தாம் மேலும்  பாதிக்கப்பட்டு, உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் தமது பகுதியில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்க வேண்டாம் என பிரதேச செயலகம், பிரதேச சபையிடம் கடிதம் மூலம் முறைப்பாடளித்துள்ளார்

சம்பவ இடத்திற்கு நேற்று  வருகை தந்த பருத்தித்துறை  பிரதேச சபை அதிகாரிகள் குறித்த தொலை தொடர்பு கோபுரம் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்படுவதை சுட்டிக்காட்டி உரிய முறையில் அனுமதி பெற்ற பின் பணிகளை தொடருமாறும் அதுவரை பணிகளை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தல்  வழங்கிச் சென்றுள்ளனர்.[ஒ]

யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை

1 month 4 weeks ago

03 Sep, 2025 | 05:05 PM

image

யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் ஏனைய பாரவூர்திகள் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை மற்றும் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குச் செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் இவ்விடயங்கள் குறித்து நல்லூர் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டு, இந்த போக்குவரத்துத் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வாகன சாரதிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அறிவுறுத்தியுள்ளார். 


யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை  | Virakesari.lk

ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

1 month 4 weeks ago

Published By: Digital Desk 1

03 Sep, 2025 | 11:02 AM

image

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை )03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலை ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து.

https://www.virakesari.lk/article/224074

செம்மணி விவகாரம்; விசாரணையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்து!

2 months ago

New-Project-56.jpg?resize=750%2C375&ssl=

செம்மணி விவகாரம்; விசாரணையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்து!

யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வலியுறுத்தியுள்ளது.

சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸாருக்கும், விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்திற்கும் அது அழைப்பு விடுத்தது.

சில நிறுவன நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

இந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

90 சதவீதத்திற்கும் அதிகமான உடல் பாகங்கள் ஆடைகள் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டு ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

இது நீதிக்குப் புறம்பான கொலைகள் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2025/1445906

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

2 months ago

New-Project-55.jpg?resize=750%2C375&ssl=

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வநதுள்ளன.

இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1445900

விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது!

2 months ago

New-Project-53.jpg?resize=750%2C375&ssl=

விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது!

சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று (02) புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டனர்

இதனால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட விமான நேரம் இருந்தபோதிலும் விளையாட்டு வீரர்களுக்கு விசாக்கள் கிடைக்கவில்லை.

இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த அணியினர் மன உளைச்சலை எதிர் கொண்டனர்.

23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் செப்டம்பர் 5 முதல் 7 வரை சீனாவில் நடைபெற உள்ளது.

இதில் 29 இலங்கை விளையாட்டு வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர்.

விமான கட்டணம், விசா செயலாக்கம் மற்றும் பிற தளவாட ஆதரவு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பு ஒவ்வொரு பங்கேற்பாளரிடமிருந்தும் ரூ. 580,000 வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களை விமான நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து, இன்று காலைக்குள் விசாக்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இருப்பினும், சீனாவுக்கான விமானம் நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

மேலும் கூட்டமைப்பு தேவையான விசாக்களை சரியான நேரத்தில் பெறத் தவறியதால், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு நம்பிக்கைகள் பொய்த்துப் போயின.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கராத்தே விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1445889

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி

2 months ago

harakkata.webp?resize=700%2C375&ssl=1

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி.

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445853

வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

2 months ago

வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

September 3, 2025 11:29 am

வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.  அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம்.

முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம்.

அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர்.

மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/i-will-fulfill-my-responsibility-to-build-the-economy-of-the-people-of-the-north-president/

Checked
Mon, 11/03/2025 - 08:42
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr