புதிய பதிவுகள்2

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!

3 months 3 weeks ago
கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்கள் கொழும்புக்கு ; கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய் adminNovember 9, 2025 கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட காவல்துறைக் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்றும் காரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்தனையும் கொழும்புக்கு அழைத்து செல்ல காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடைய காரினை கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு விட்டு , பிறிதொரு காரில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளனர். சந்தேகநபர்கள் காரினை வாடகைக்கு பெற்றே வடக்கு நோக்கி தப்பி சென்றதை அறிந்தகாவல்துறையினர் , காரினை வாடகைக்கு கொடுத்த நிறுவனத்தினை கண்டறிந்து , அவர்களிடம் இருந்து கார் தொடர்பிலான தகவல்களை பெற்று இருந்தனர் அதன் அடிப்படையில் காரில் பொருத்தப்பட்டிருந்த தடங்காட்டியின் (GPS) உதவியுடன் காரினை கண்காணித்த வேளை கார் , மானிப்பாய் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பினை சேர்ந்த காவல்துறைக்குழு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பிரிவினர் , காரினை மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கண்டுபிடித்தனர். அதனை அடுத்து காரினை மீட்டகாவல்துறையினர் காரில் பயணித்த மூவரையும், வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்ததுடன் அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட அவர்களின் வளர்ப்பு நாயினையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று இருந்தனர். வாகன திருத்தக உரிமையாளரிடம் முன்னெடுத்த விசாரணையில் காரில் குளிரூட்டி (AC) வேலை செய்யவில்லை என அதனை திருத்தம் செய்யவே காரினை கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , காரினை திருத்தவே திருத்தகம் போனார்கள் என்பதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்தனர். அதேவேளை காரில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவே கூறியுள்ளனர். காரில் மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும் , கைது செய்யப்பட்ட பெண் , கைது செய்யப்பட்ட ஆணொருவரின் காதலி எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கொழும்பில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த காவல்துறை விசேட குழு , கைது செய்யப்பட்ட மூவரையும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/222472/

துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன்.

3 months 3 weeks ago
துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன். கார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப் போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் கூடிய நிகழ்வுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று தாயகத்தில், கிளிநொச்சியில். மற்றது,கனடாவில்.தாயகத்துக்கு வெளியே அதிகதொகை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடாக கனடா காணப்படுகிறது. எனவே அங்கே ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அமைச்சர் சந்திரசேகரன் பேசும்போது அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். மாவீரர் மாதத்தையொட்டி அவர் அவ்வாறு சொன்னாரா? அல்லது விசுவாசமாகவே அரசாங்கம் அப்படி ஒரு நிலைப்பாட்டோடு இருக்கிறதா? ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் இன்றுவரையிலும் அவ்வாறு நடக்கவில்லை. இப்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக வேறு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு கூட்டத் தொடர் தொடங்க முன்பு அரசாங்கம் அவ்வாறு அறிவித்தது.அப்படித்தான் இப்பொழுது மாவீரர் நாளையொட்டி உணர்ச்சிகரமான அரசியற் சூழலில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள துயிலுமில்லங்களை விடுவிக்கப் போவதாக சந்திரசேகர் கூறுகிறாரா? தேசிய மக்கள் சக்தியின் இதயமாகக் காணப்படும் ஜேவிபி இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்பு.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஓர் அமைப்பு. பிரேமதாசவின் காலத்தில் இரண்டாவது தடவை அவர்கள் நசுக்கப்பட்டபோது இறந்த தமது தியாகிகளை நினைவு கூர்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குறிப்பாக திருமதி சந்திரிகாவின் காலகட்டத்தில் அவர்கள் நினைவு கூர்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் ஜேவிபி தன் தோழர்களை ரகசியமாக நினைவு கூர்ந்தது. அந்நாட்களில் அந்த நிகழ்வுக்கு ஒரு அர்த்தம் இருந்தது; ஆழம் இருந்தது;புனிதம் இருந்தது என்றும் ஆனால் பின்னர் சந்திரிக்கா தடைகளை நீக்கியபின் அது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது என்றும் ஒரு மூத்த ஜேவிபி உறுப்பினர் பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சொன்னார்.தடைகள் இருக்கும் வரையிலும்;ரகசியமாக நினைவு கூரப்படும் வரையிலும் அந்த நாளுக்கு ஒரு ஆன்மா இருந்தது.ஆனால் தடைகள் நீக்கப்பட்டபின் அது ஒரு பெருமெடுப்பிலான சடங்காக மாறி முடிவில் அதன் ஆன்மாவை இழந்து விட்டது என்றும் அவர் சொன்னார். இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி ஆகிவிட்டது.நினைவு நாட்களுக்குள்ள உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை அவர்களுக்கு யாரும் விளங்கப்படுத்தத் தேவையில்லை.இப்பொழுது இருக்கும் அரசுத் தலைவர் தன் சொந்தச் சகோதரனைப் பறிகொடுத்தவர்.தன் உறவினர்களையும் பறிகொடுத்தவர். எனவே அவர்களுக்கு நினைவு நாட்களின் முக்கியத்துவம்,புனிதம் விளங்கும். இந்த அடிப்படையில் பார்த்தால் துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்குத்தான் அதிகம். பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்களை விடுவிப்பது என்பதை முக்கியமாக இரண்டு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று,எதிர்க்கட்சிகள் அதனை இனவாதமாக மாற்றக்கூடாது. இரண்டாவது,படைத்தரப்பு அதற்குச் சம்மதிக்குமா என்பது. எதிர்க்கட்சிகள் பலமான ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக முயற்சிக்கும் ஒரு பின்னணியில்,அரசாங்கம் ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்கும் முடிவை உத்தியோகபூர்வமாக எடுக்குமா என்பது சந்தேகம்தான். தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளத் தொடங்கிவிட்டன. போதைப் பொருளுக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதன் விளைவாக எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. போதைப் பொருள் கும்பல்களுக்கு எதிராகவும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள்,ஒருபுறம் அரசாங்கத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் அபிமானத்தைக் கூட்டியிருக்கின்றன.இன்னொருபுறம்,எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.ஏனென்றால் இந்தக் குற்றக் கும்பல்களோடு எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறது.அந்த அரசியல்வாதிகள் பெருமளவுக்கு எதிர்க்கட்சிகளைச் செய்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள்.அல்லது முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இப்பொழுது தெரிய வருகிறது. அதேசமயம், அண்மையில் போதைப் பொருளை வைத்திருந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதில் ஒரு சிறந்த முன்னுதாரணம் உண்டு.நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த ஏனைய கட்சிகளிடம் அவ்வாறான சிறந்த முன்னுதாரணங்கள் இல்லை என்று மக்களை நம்பச் செய்யும் விதத்தில் தேசிய மக்கள் சக்தியின் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளும் பாதாள உலகம் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.இதனால் எதிர்க்கட்சிகள் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அதேசமயம் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒன்றிணைய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அவ்வாறு ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் விரைவில் அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அரசாங்கம் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.அதுமட்டுமல்ல,குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை குழப்புவதற்காகவே எதிரணிகள் ஒன்று திரள்கின்றன என்று சிங்கள மக்களை நம்ப வைக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் சிந்திக்கின்றது;செயல்படுகின்றது. இவ்வாறு தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு எதிராக கையில் எடுக்கக் கூடிய ஒரே ரெடிமேட் ஆயுதம் இனவாதம்தான். ஐநா கூட்டத்தொடரில் அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.அரசாங்கம் படைத்தரப்பை பாதுகாக்கும் முடிவுகளை எடுத்ததோடு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் இல்லை. பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இப்பொழுது மாவீரர் மாதத்தை முன்னிட்டு படைத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலுமில்லங்களை விடுவிக்கப்போவதாக சந்திரசேகரன் கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க முடியும். ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்காத விதத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததுபோல, துயிலும் இல்லங்களின் விடயத்திலும் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புக்களை வழங்காத முடிவுகளையே எடுக்குமா? மேலும் இந்த விடயத்தில் துயிலுமில்லங்களில் காணப்படும் படைத்தளங்களை அகற்றுவது உடனடிக்குச் சாத்தியமானது அல்ல.முதலாவதாக படைத்தரப்பு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இரண்டாவதாக சில துயிலும் இல்லங்களில் காணப்படும் படைத்தளங்கள் அப்பகுதியைச் சேர்ந்த படைத்தரப்பின் தலைமை மையங்களாகக் காணப்படுகின்றன.உதாரணம், கோப்பாய் துயிலும் இல்லம். அங்கிருந்து படைத்தரப்பை அகற்றுவது என்றால் குறுகிய காலத்துக்குள் அதைச் செய்யமுடியாது.கோப்பாயில் உள்ள போலீஸ் நிலையத்தை இடம் மாற்றுவதற்கே எவ்வளவு காலம் எடுத்தது? சில நாட்களுக்கு முன் வெளியான அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கும் சிங்கள பௌத்த அரச பாரம்பரியத்தை மீறாத என்பிபி அரசாங்கம், படையினர் சம்பந்தப்பட்ட விடயங்களில் எப்படிபட்ட முடிவை எடுக்கும்? எனவே துயிலுமில்லங்களில் முகாம்களை அமைத்திருக்கும் படையினரை அங்கிருந்து அகற்றும் முடிவை உடனடியாக அமல்படுத்த அரசாங்கத்தால் முடியுமா? ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்ததைப் போன்றதா இதுவும்? https://athavannews.com/2025/1452330

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்த பொலிசார்!

3 months 3 weeks ago
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்த பொலிசார்! பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார், கெப் ரக வாகனம் என்பவற்றை பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனை செய்யப்பட்டபோது குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை குறித்த சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452327

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

3 months 3 weeks ago
‘முழு நாடுமே ஒன்றாக’ போதைப்பொருள் தடுப்புத் திட்டம்: பலர் கைது! Published By: Digital Desk 1 09 Nov, 2025 | 11:20 AM நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று சனிக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 5 கிலோ கிராம் 782 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ், 71 கிலோ கிராம் 682 கிராம் கஞ்சா, 275,501 கஞ்சா செடிகள்,4 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 25 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 637 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோகிராம் 585 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 994 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 1,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 5 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229889

2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

3 months 3 weeks ago
க.பொ.த. உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் : நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் Published By: Digital Desk 1 09 Nov, 2025 | 07:37 AM எம்.மனோசித்ரா கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 340, 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 246 521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94 004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340 525 ஆகும். உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கும் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். பரீட்சாத்திகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை கொண்டு வர வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/229871

கதைகளை வாசிக்கும் போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

3 months 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? கட்டுரை தகவல் அனலியா லோரென்டே பிபிசி நியூஸ் முண்டோ 8 நவம்பர் 2025 " நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்," மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது. ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான். வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது. மூளையும் மனமும் ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும். "மூளை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, மனம் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூளையைப் பற்றி தனியாகப் பேச முடியாது," என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியல் (Cognitive Psychology) பேராசிரியரான கீத் ஓட்லி சுட்டிக்காட்டினார். "நாம் வாசிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயல்படுகிறதா என்பதை அறிவது மட்டும் போதாது. அந்தச் செயல்பாட்டில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்," என்று மார் ஏற்றுக்கொள்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாம் வாசிக்கும்போது மூளை அதற்கானப் படங்களை உருவாக்குகிறது. மனதில் தோன்றும் படங்கள் வாசிக்கும்போது தூண்டப்படும் முதல் எதிர்வினைகளில் ஒன்று, மனதில் படங்களை உருவாக்குவதுதான். "நாம் வாசிக்கும்போது, விளக்கப்பட்டதைப் போன்ற உருவங்களை மனம் உருவாக்குகிறது அல்லது நினைவுபடுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று மார் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "அடிப்படையில், நீங்கள் ஒரு காட்சியைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் வாசித்தால், உங்களால் மூளையின் காட்சிப் புறணியில் (visual cortex) செயல்பாட்டைக் காண முடியும். அறிதலுக்கும் (perceiving) அறிதல் பற்றி வாசிப்பதற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன," என்று அவர் கூறினார். நாம் வாசிப்பதையே நிஜத்திலும் வாழ்கிறோமா? புனைகதைக் கதாபாத்திரத்தின் அனுபவத்தைப் பற்றி வாசிப்பதற்கும், அந்தச் செயல்பாட்டை நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதற்கும் இடையில் மூளை பெரிய வேறுபாட்டைக் காண்பதில்லை என தோன்றுவதாக ஓட்லியும் மாரும் முடிவுக்கு வந்துள்ளனர். "ஏதோவொன்றைப் பற்றி வாசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் மூளை ஒரே மாதிரியாகவே வினைபுரிவதாக தெரிகிறது," என்று மார் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, ஒரு நாவலில் ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதைப் பற்றி ஒருவர் வாசிக்கும்போது, அந்த நபர் நிஜத்தில் அந்தச் செயலைச் செய்யப் பயன்படுத்தும் அதே மூளைப் பகுதிகளே செயல்படுகின்றன. "உதாரணமாக, ஒரு கதையின் கதாநாயகன் ஆபத்தான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பயத்தை உணர்கிறோம் என்பது நமக்குத் தெரியும்," என்று மார் உதாரணம் அளித்தார். இது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில் தன்னைப் பொருத்திப்பார்க்கும் தெளிவான பச்சாதாப உணர்வு. "நிஜ வாழ்க்கையில் மக்கள் பச்சாதாபம் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய மூளையின் சில பகுதிகளை கண்காணிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் வாசிக்கும்போது அதே மூளைப் பகுதிகள்தான் தூண்டப்படுகின்றன. ஏனெனில், உளவியல் செயல்முறை ஒத்திருக்கிறது," என்று ஓட்லி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாசிக்கும்போது, நாம் நம்மை அவர்களின் இடத்தில் வைத்து, ஏறக்குறைய அதே உணர்வுகளை அனுபவிக்க முடியும். இயக்கம் செயலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை நாம் வாசித்தால், நாம் அதைச் செய்வதாக மூளை புரிந்துகொள்கிறதா? "நாம் ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை மௌனமாகப் வாசிக்கும்போது செயல்படும் மூளையில் உள்ள இயக்கப் பகுதிகளும், நாம் இயக்கத்தைச் செய்யும்போது செயல்படும் பகுதிகளும் மிக அருகில் உள்ளன," என்று பிரான்சின் லியோனில் உள்ள மொழியியல் இயக்கவியல் ஆய்வகத்தின் (Language Dynamics Laboratory) அறிவாற்றல் நரம்பியல் ஆராய்ச்சியாளர் வெரோனிக் பூலெங்கர் சுட்டிக்காட்டினார். காலால் உதைப்பது, நடப்பது அல்லது ஓடுவது போன்ற செயல்களை ஒருவர் வாசித்தால், மூளை இயக்கப் பகுதியைத் தூண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். "ஒரு வகையில், மூளை நாம் வாசிக்கும் செயலை உருவகப்படுத்துகிறது," என்று பூலெங்கர் பிபிசி முண்டோவிடம் கூறினார். போட்டி ஆனால், ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை வாசித்து, அதே நேரத்தில் ஒரு அசைவைச் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்? "ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை ஒரு திரையில் செயல்பாட்டு வினைச்சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஒரு பொருளை எடுக்கச் சொன்னோம். அப்போது, வாசிக்காதபோது இருப்பதைவிட, அசைவுகளின் வேகம் குறைவாக இருந்தது," என்று பூலெங்கர் விளக்கினார். மூளையின் அதே வளங்களைப் பயன்படுத்துவதில் "குறுக்கீடு அல்லது போட்டி" இருப்பதால் இது நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாசிப்பதும் செயல்படுவதும் மூளையில் "குறுக்கீடு அல்லது போட்டி"யை உருவாக்குகின்றன. நேரடி அல்லது மரபுத்தொடர் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (functional magnetic resonance imaging - fMRI) என்ற மற்றொரு ஆய்வில், கை அல்லது கால் தொடர்பான செயல்பாட்டு வினைச்சொற்களை உள்ளடக்கிய நேரடி வாக்கியங்கள் அல்லது மரபுத் தொடர்களை வாசிக்கும்போது மூளையின் செயல்பாட்டை பூலெங்கர் பகுப்பாய்வு செய்தார். "இரண்டு வகையான வாக்கியங்களுக்கும், மூளையின் மொழி பகுதிகளின் செயல்பாடுகளுடன், இயக்க மற்றும் முன்-இயக்க மூளைப் பகுதிகளின் (motor and premotor brain regions) செயல்பாடுகளும் காணப்பட்டன," என்று அவர் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, கை தொடர்பான வாக்கியங்கள் மூளையில் கையைச் சித்தரிக்கும் இயக்கப் பகுதியையும், அதே சமயம் கால் தொடர்பான வாக்கியங்கள் மூளையின் வேறுபட்ட இயக்கப் பகுதியையும் தூண்டுகின்றன. இது, மூளையின் இயக்கப் புறணியின் (motor cortex) உடலமைப்பு பிரதிபலிப்புக்கு (somatotopy) பதிலளிக்கிறது. அதாவது, உடலின் வெவ்வேறு பாகங்கள் இயக்கப் புறணியின் வெவ்வேறு துணைப் பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்பு இது. நிஜ வாழ்க்கையில் எப்படி உதவும்? கதைகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளுக்கும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கும் இடையே பொதுவான பகுதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அப்படியானால், புனைகதைக் கதாபாத்திரங்களைப் வாசிப்பதன் மூலம் பச்சாதாபம் கொள்வது, நிஜ வாழ்க்கையில் மக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுமா? மார் அப்படித்தான் நம்புகிறார். "நாம் அடிக்கடி வாசிப்பதிலும், அதில் உள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தால், அது மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் நம் திறனை மேம்படுத்தலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம் என்று இது பொருள்படலாம்," என்று அவர் பகுப்பாய்வு செய்தார். "உதாரணமாக, ஒரு மாற்றுத்திறனாளி போல வாழ்வது எப்படி என்று நமக்கு ஒருபோதும் தெரியாமல் இருக்கலாம்," என்று அவர் கூறினார், "ஆனால், அதை அனுபவிக்கும் நபரின் இடத்தில் நம்மை வைக்கும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கதையை வாசித்தால், நாம் அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2310jvzpzpo பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மீண்டுமொரு சதி, குழி பறிப்பு

3 months 3 weeks ago
என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்க தாயார் - சிவஞானம் சிறிதரன் எம்.பி பகிரங்க அறிவிப்பு 09 Nov, 2025 | 09:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மனநோயாளியான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தாயார். பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த 2025 ஒக்ரோபர் 23ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற சிறப்புரிமை; மீறலில் நான் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு உண்மைக்கும், அறத்திற்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் எனக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்துள்ளார். அரசியலமைப்பின் திருத்தம் செய்யப்பட்ட 2018 ஆண்டின் 18 திருத்தத்தின் பிரகாரம் 2024 டிசம்பர் 06 திகதி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 11 பேரின் இரகசிய வாக்களிப்பில் தேர்தல்மூலமாக உயர் பதவிகளைத் தீர்மானிக்கும் அரசியலமைப்புசபைக்கு நான் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டேன். இப்பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உட்பட பலர் கண்வைத்து திரைமறைவில் ஈடுபட்ட போதும் நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு நான் தெரிவு செய்யப்பட்டேன். தெரிவுசெய்யப்பட்ட 2024.12.06 திகதி முதல் இன்றுவரை எனது கௌரவமான பங்களிப்பை நேர்மையுடனும், அரசியலமைப்பு உறுப்புரிமை 9 இன் பீரகாரமும் எனது மனச்சாட்சிக்கு இணங்க செயற்பட்டு வருகின்றேன். அரசியலமைப்பின் உறுப்புரை 29 இன் பிரகாரமும் உறுப்புரை 7இன் பிரகாரமும் எனது தேசத்து மக்கள் சார்ந்து பொதுநலனில், மக்கள் நலனில் நின்றே எனது முடிவுகளை மிகத்தெளிவாக அரசியலமைப்பு சபையில் முன்வைத்துள்ளேன். என் கட்சிக்காகவோ அல்லது வெளிநபர்களின் நெருக்குதலுக்காகவோ எந்தமுடிவுகளையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எந்தவித வெளிப்புற அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப் படவுமில்லை. அவ்வாறு பிரயோகிக்கவும் முடியாது என்பதை கடந்த ஓராண்டு காலமாக நேர்மையுடனும், கண்ணியத்துடனும் அறம் சார்ந்து தைரியத்துடன் நிரூபித்துள்ளேன். 'சிவில் புத்தி பெரமுன' என்ற அமைப்பைச் சார்ந்தவர் எனக்கூறப்படும் 'சஞ்சய் மகவத்' என்பவரால் நிதிக்குற்றப்புலனாய்வுபிரிவில் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக 2025 ஜுலை 25ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்ததாக பத்திரகைகளில், சமூக ஊடகங்களில் பார்வையிட்டிருந்தேன். செய்திகள் வெளிவந்த உடனேயே பகிரங்கமாக இவ்விசாரணையைச் செய்து உண்மையை வெளிக்கொண்டு வருமாறு வெளிப்படையாகக் கூறியிருந்தேன். இன்று ஏறத்தாள 04மாதங்களை நெருங்குகின்ற போதும் இதுவரை நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் எந்த முடிவுகளும் வெளியீடப்படவில்லை. இப்பொழுதும் இந்த உயர்ந்த சபையினூடாக ஒரு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன். எனது பெயரிலோ, என்குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ எனக்கு சொத்துக்கள் இருந்தால் வீசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாக கேட்கின்றேன். அதுபோல் எனது பெயரிலோ அல்லது எனது சிபாரிசிலோ, கடந்த காலங்களில் நான் மதுபான சாலைக்கான அனுமதிப்பத்திரம் ஏதும் பெற்றிருந்தால்சிபார்சு செய்திருந்தால் உடன் வெளிப்படுத்தி என்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றேன். அசியலமைப்பு உறுப்புரை 41இன் பிரகாரம் நான் நீதியான முறையில் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அரசியலமைப்பு சபையில் மொத்தம் 10 உறுப்பினர்களில் நான் மட்டுமே இலங்கை வரலாற்றில் முதன்முதலில் தேர்தல்மூலம் தெரிவு செய்யப்பட்டவன் எனக்கருதுகிறேன். பாராளுமன்ற நிலையியற்கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடாத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த போது தமிழ் அதிபர் ஒருவரை முழந்தாழிட்டார்.இவர் ஒரு மன நோயாளி என்றே குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார். அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார். https://www.virakesari.lk/article/229875
Checked
Sun, 03/01/2026 - 05:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed