ஊர்ப்புதினம்

“சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்!

2 months 3 weeks ago

“சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்!

adminDecember 22, 2025

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவி நகர் மற்றும் ஆராதிநகர் கிராம மக்கள், தமது கிராம சேவையாளரின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 21) பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மக்கள் முன்வைக்கும் அதிரடிப் புகார்கள்:

தனது அவல நிலையைத் தொலைபேசியில் விவரித்த பெண்ணொருவரிடம், “சோத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு சாமான் கொடுக்க முடியாது” என கிராம சேவையாளர் மிகக் கேவலமாகப் பேசியதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வெள்ள நீரை வெளியேற்ற குளத்தைப் புனரமைக்க ஏனைய அரசுத் தரப்புகள் அனுமதி அளித்தும், கிராம சேவையாளர் அதற்குத் முட்டுக்கட்டை போடுவதாகக் கிராம அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு முரணான செயல்?

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்திக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், குறித்த அதிகாரி மக்களை அலட்சியப்படுத்துவதுடன், ஏழை மக்களை இழிவுபடுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடரும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் “பொறுப்பான அரசாங்கம்” முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2025/224692/

இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு

2 months 3 weeks ago

இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு

Published By: Digital Desk 2

22 Dec, 2025 | 09:50 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சீன– இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்ட குழு ஒன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது.

அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்ஷெங் தலைமையிலான இந்த குழு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 முதல் 25 வரை இலங்கையில் தங்கியிருந்து அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தகம், முதலீடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்புகளின் போது, சீன–இலங்கை நட்புறவின் எதிர்கால நிலைவரம், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கிய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீன–இலங்கை உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான மைல்கல்லாக இந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவின் வருகை அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/234059

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!

2 months 3 weeks ago

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!

Dec 22, 2025 - 10:14 AM

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. 

கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வருகை தந்த குழுவொன்றே கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

இத்தாக்குதலின் போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. 

குறித்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இது குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmjgo8o0o02zno29n5j348tat

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு

2 months 3 weeks ago

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு

Dec 22, 2025 - 08:01 AM

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmjgjihvc02zho29nd2entzzf

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பிரதமர் வழங்கினார்

2 months 3 weeks ago

ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Published By: Vishnu

21 Dec, 2025 | 07:39 PM

image

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது.

அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி  ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற  274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை  நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் தொடங்கியது. இன்று, இந்த நிகழ்ச்சித்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இறுதி நிகழ்வு, யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதில்  மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியமாகும். தற்போதைய அரசாங்கம் இந்த நிதியத்தை  மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய  மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து, அவ்வாறே இங்கும் செயல்படுங்கள்.

நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான், வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் தங்கள் கருத்துக்களை இதன்போது தெரிவித்தனர்.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்ட செயலாளர்கள், வட மாகாண அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

IMG-20251221-WA0073.jpg

IMG-20251221-WA0076.jpg

IMG-20251221-WA0072.jpg

IMG-20251221-WA0070.jpg

IMG-20251221-WA0069.jpg

IMG-20251221-WA0064.jpg

IMG-20251221-WA0068.jpg

https://www.virakesari.lk/article/234041

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

2 months 3 weeks ago

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

Published By: Vishnu

21 Dec, 2025 | 07:17 PM

image

கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (21) சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார்.

ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார். வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின் சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமருடன் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/234040

மருந்து தரப் பரிசோதனை ஆய்வகத்தை உடனடியாக உள்நாட்டில் நிறுவுங்கள் அரசாங்கத்திடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

2 months 3 weeks ago

மருந்து தரப் பரிசோதனை ஆய்வகத்தை உடனடியாக உள்நாட்டில் நிறுவுங்கள் அரசாங்கத்திடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

21 Dec, 2025 | 02:53 PM

image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குள்ளாகியுள்ள 'ஒன்டன்செட்ரான்" மருந்து தொடர்பில் கண்டி வைத்தியசாலை ஆய்வுகளைச் செய்து அறிவிக்கும் வரை சுகாதார அமைச்சோ அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித் தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டிலேயே மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்றும், தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்த மற்றும் தமது கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைவலியுறுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த டிசம்பர் 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA)  ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்திய நிறுவனமான 'மான் பார்மாசூட்டிகல்ஸ்" (Maan Pharmaceuticals) உற்பத்தி செய்த "ஒன்டன்செட்ரான்" (Ondansetron) என்ற ஊசி மருந்து தரமற்றது என்பதால், அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டது. பின்னர் அதே நிறுவனத்தின் மேலும் 10 மருந்து வகைகளின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஏழு நோயாளிகளுக்கு ஒரே மாதிரியான கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது.

இது குறித்து ஆய்வு செய்தபோது, அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட 'ஒன்டன்செட்ரான்' மருந்துக் குப்பிகளுக்குள் "ரைசோபியம்"  (Rhizobium) என்ற பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த மருந்தை பயன்படுத்திய பின்னர் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், டிசம்பர் முதல் வாரத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கண்டி வைத்தியசாலை ஆய்வுகளைச் செய்து அறிவிக்கும் வரை சுகாதார அமைச்சோ அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வியெழுப்புகிறது.

இந்த மருந்துகள் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கவலைக்கிடமான நோயாளிகளுக்கு வழங்கப்படுபவை. இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித் தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க சர்வதேச தரத்திலான ஆய்வகம் (Quality Assurance Lab) ஒன்று இன்னும் அமைக்கப்படவில்லை. இது குறித்து பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டும், அரசாங்கம் அதற்குப் நிதி ஒதுக்காமல் வேறு தேவையற்ற விடயங்களுக்கு நிதி ஒதுக்குவதாக வீடியோவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தத் தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த நோயாளிகளுக்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் நட்டஈடு வழங்க வேண்டும். உள்நாட்டிலேயே மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும்.

தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்த மற்றும் தமது கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த மருந்துகள் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எத்தனை ஆயிரம் நோயாளிகளுக்கு இந்தத் தரமற்ற மருந்துகள் இதுவரை ஏற்றப்பட்டன என்பது குறித்த முறையான விசாரணை அவசியம் என நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/234015

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி

2 months 3 weeks ago

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி

Dec 21, 2025 - 05:01 PM

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும். 

அதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார். 

இன்று (21) முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். 

நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது. 

இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்று தெரிவித்தார். 

ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக இங்கு தெரவித்தார். 

இன்று முற்பகல் தியதலாவ, இராணுவ கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். 

வதிவிட கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 93, 94B குறுகிய கால பாடநெறி எண்23, வதிவிட பாடநெறி எண்62 மற்றும் தன்னார்வ பெண் கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண்19 ஆகியவற்றைச் சேர்ந்த 240 கெடட் உத்தியோகத்தர்கள் வெற்றிகரமான இராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். 

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு கௌரவ சின்னங்களையும், ஒவ்வொரு பாடநெறியிலும் முதலிடம் பெற்ற அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கினார். 

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், அண்மைய சூறாவளியின் போது மக்களை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை வழங்குவதில் ஆற்றிய சிறந்த பணிக்கு நன்றி தெரிவித்தார். 

இங்கு மேலும் உரையாற்றிய முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களாக தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியைப் பெற்ற நீங்கள், இன்று அதிகாரிகளாக மாறியுள்ளீர்கள். 

அரசாங்கத்திற்கும், ஜனாதிபதியாக எனக்கும், உங்கள் மீது பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. நமது நாடு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்த சவால்களை வெற்றிகொள்ள, இந்த தாய்நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் மக்களுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த உங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளனர். 

நீங்களும் நானும் இன்று கால்களை வைத்திருப்பது, கடந்த காலங்களில், வீரச் செயல்கள் மூலம், நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தில் உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பூமியில் ஆகும். எனவே, கைவிட முடியாத ஒரு பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இலங்கை இராணுவமாக, நமது தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அசைக்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விடயத்தில் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. 

சூறாவளியினால் நமது நாடு பேரழிவைச் சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சிலருக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் சிலரது உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய சவாலாக அமைந்தது. 

அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு சவாலிலும் இலங்கை இராணுவம் பெரும் பங்காற்றியுள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். படையினர் மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். 

உங்களுக்கு இருப்பது தொழில் ரீதியான பொறுப்பு மாத்திரமல்ல. பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. உங்கள் நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கே உரிய பொறுப்பு மற்றும் மதிப்பு உள்ளது. நீங்கள் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அதே நேரம் ஒரு பாரிய பொறுப்பு உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நான் நினைக்கிறேன். 

நமது தாய்நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமது தாய்நாடு பல தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ஒருபுறம், நமது அரச பொறிமுறை பலவீனமாகவும் வீழ்ச்சி அடைந்தும் இருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது பொருளாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகி சரிவடைந்து கொண்டிருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது சமூகத்தின் நல்வாழ்வு முற்றிலுமாக தோழ்வி கண்ட ஒரு சகாப்தம் இருந்தது. மனித உறவுகள் பெறுமதியற்ற உறவுகளாக மாறிக்கொண்டிருந்தன. 

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. மதஸ்தலங்களுக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. நமது நாடு அனைத்து மனித உறவுகளும் உடைந்த ஒரு சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருந்தது. அதன்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன? நாம் வரலாற்று பாரம்பரியத்தையும் வரலாற்று சாதனைகளையும் கொண்ட ஒரு நாடு. ஆனால் நமது நாடு எல்லா வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளானது. 

இப்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, இந்த தாய்நாட்டை உலகில் உயர்ந்த, மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும். ஒவ்வொருவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும், நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான பொறிமுறையைத் தயாரிக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் ஒரு தொழிலாக அன்றி, மாறாக மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கும் அதே போன்ற பொறுப்புகள் உள்ளன. இங்கு கூடியிருக்கும் பெற்றோருக்கும் நமது நாட்டிற்கான பொறுப்புகள் உள்ளன. நமது மதஸ்தலங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுவதன் மூலமோ அல்லது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலமோ இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. 

நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கான உறுதியான தீர்மானத்துடன் நாம் அனைவரும் செயல்பட்டால் மாத்திரமே நாம் ஒரு நாடாக முன்னேற முடியும். 

ஒரு நாடாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். 

மேலும் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுமாறு பொதுமக்களையும் நான் அழைக்கிறேன். 

நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் தைரியமாக தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடிந்தால், வரலாற்றில் நம் நாடு பெற்ற பெருமை மற்றும் கௌரவத்துடன் தாய்நாட்டை மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmjfnctey02z4o29nqk7ccx9z

25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

2 months 3 weeks ago

25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

Dec 21, 2025 - 01:25 PM

25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டை - ஹிதாயத் நகர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இதன்போது, "நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், எங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள், " பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்டாது, அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குங்கள் ", " அரசாங்கம் கொடுத்த 25,000 ரூபாவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள்" இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். 

மேற்படி வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் 25,000 ரூபா பணத்தை வழங்குவதற்காக வீரபுர கிராம சேவகர் பிரிவில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் , உண்மையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்ததுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக ஒரு வழிப்பாதையாகவே வாகனங்கள் பயணித்தன. 

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன், அவர்களின் கருத்துக்களையும் அமைதியான முறையில் கேட்டறிந்துகொண்டனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முந்தல் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும், கணக்காளரும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் குறிப்பிட்டனர். 

மேலும், 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் போது பொய்யான தகவல்களை வழங்கி அரச பணத்தை பெற முயற்சி செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

குறித்த கொடுப்பனவு வழங்குவதில் எவ்விதமான பாகுபாடுகளும் இன்றி, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் முயற்சி எடுப்பதாக இதன்போது முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் ஆகியோரினால் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் தெரிவக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக களைந்து சென்றனர். 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

https://adaderanatamil.lk/news/cmjffmp5402yzo29nrnlch3v9

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல்

2 months 3 weeks ago

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல்

21 Dec, 2025 | 05:02 PM

image

(நமது நிருபர்)

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபரிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரவிடம் கடந்த 17ஆம் திகதி அறிவித்தது.

இந்த விடுவிப்பு சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதனால், இது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படுவதாயின், அடுத்த கட்டம் குறித்து உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவம் ஊடாக மன்றுக்கு அறிவிக்குமாறு நீதிவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

அவர் சட்டமா அதிபரினால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக நான்காவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் காரணத்திற்காகவும் திகதி வழங்கப்படமாட்டாது. அரச சட்டத்தரணிக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்குமாறு கோர வேண்டாம். இச்சம்பவம் நடந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. வேறெந்த விடயத்திற்காகவும் விசாரணையைத் தள்ளிப்போட முடியாது எனத் தெரிவித்த நீதிவான்,

சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பிரதிநிதி ஒருவருடன் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இரண்டாவது சந்தேகநபரின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றுக்குத் தெரிவித்தார். இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் போதுமான சாட்சிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, பிரதிவாதிகள் தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இச்சம்பவம் தொடர்பான ஆரம்பத் தகவல்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் கோரியும் கிடைக்கவில்லையென மன்றுக்குத் தெரிவித்தனர்.

இதனைப் பரிசீலித்த நீதிவான், இதற்கு விசேட கட்டளைகள் தேவையில்லை என்றும், ஒரு வார காலத்திற்குள் அந்த ஆவணங்களின் பிரதிகளை பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குமாறும் குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவியளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் அவர் தங்கியிருந்த தென்னந்தோட்டத்தைப் பராமரித்த லக்ஸிரி அமரசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234035

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2 months 3 weeks ago

Colmbo.jpg?resize=750%2C375&ssl=1

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நேற்றும் இன்றும் காற்றின் தரத்தில் சரிவு காணப்பட்டதாகவும், காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை இருப்பதாகவும் அவர் கூறினார்.

எல்லைகளுக்கு இடையே காற்று சுழற்சி ஏற்படுவதாலும், வடகிழக்கு பருவமழை செயல்படுத்தப்படுவதாலும் இந்த நிலைமை ஏற்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தக் காலகட்டத்தில் இந்த நிலைமை காணப்படுவதாகவும், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் நாட்டின் காற்றின் தரக் குறியீட்டையோ அல்லது வேறு எந்த நிலையையோ தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

காற்றின் தரம் குறைவினால் பாதிப்படையக் கூடிய நபர்கள்,  உடனடியாக மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சையைப் பெற வேண்டும்.

எனினும், இன்றைய தினத்திற்குப் பின்னர் இந்த நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர்.

https://athavannews.com/2025/1456918

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

2 months 3 weeks ago

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. 

யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. 

அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார்.

குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது:

வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. 

முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 https://jaffnazone.com/news/53411

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

2 months 3 weeks ago

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

21 Dec, 2025 | 09:20 AM

image

(நமது நிருபர்)

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த  வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன்.

இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும்.

பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார்.

https://www.virakesari.lk/article/233967

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

2 months 3 weeks ago

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

21 Dec, 2025 | 09:26 AM

image

(நா.தனுஜா)

நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது:

இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம்.

அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம்.

அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/233968

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

2 months 3 weeks ago

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

21 Dec, 2025 | 12:58 PM

image

வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ராணி ரயிலில் இருந்து காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; 

Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-

Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-


https://www.virakesari.lk/article/234005

நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

2 months 3 weeks ago

நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

21 December 2025

1766283521_4172941_hirunews.jpg

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். 

நாட்டிற்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை, வெளிவிவகார அமைச்சர் , ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், பேரிடர் மீட்புக்கான இந்தியாவின் விசேட பொதி தொடர்பிலும் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடினமான நிலையில் இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய உயர்மட்டக் குழுவுடன் நாட்டிற்கு வருகைதரவுள்ள வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், தமிழ்த் தரப்பினரும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

https://hirunews.lk/tm/436883/s-jaishankar-to-arrive-in-sri-lanka-tomorrow-important-meeting-with-the-president

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

2 months 3 weeks ago

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

இந்த வான் பாய்தல் காரணமாக வெள்ள நிலைமையோ அல்லது அத்தகைய நிலைக்கு நீர் வெளியேற்றப்படுவதோ இடம்பெறாது என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், எதிர்கால பருவமழை நிலைமைகளுக்கு ஏற்ப ஆறுகளின் நீர் மட்டங்கள் மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அந்த நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே 50-100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

ஈரவலயத்தின் பல இடங்களை அண்டி 25 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

மத்திய மலைநாடு மற்றும் களனி கங்கை படுக்கையை அண்டிய சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சியும், கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 25-50 மில்லிமீற்றருக்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

இந்த நிலைமையின் அடிப்படையில் நில்வலா நதியின் நீர் மட்டம் சிறிய அதிகரிப்பைக் காட்டினாலும், கிடைத்த மழையின் அடிப்படையில் அது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் வரை செல்லவில்லை என பொறியியலாளர் குறிப்பிட்டார். 

அத்துடன் மஹாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி நீர் மட்டம் உயர் நிலையில் காணப்பட்டாலும் அதுவும் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும், ஏனைய நீர்நிலைகளை அண்டி மழை பெய்தாலும் வெள்ள நிலைமை ஏற்படும் அளவிற்கு நீர் மட்டங்கள் அதிகரிப்பைக் காட்டவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjf3u29102ypo29n4225nb7n

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

2 months 3 weeks ago

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

21 Dec, 2025 | 07:50 AM

image

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு குருநகர் - பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடியுள்ளார்.

இதன்போது மற்றைய சுவர் அவர்மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

https://www.virakesari.lk/article/233959

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

2 months 3 weeks ago

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

Dec 20, 2025 - 10:12 PM -

0

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

கண்டியில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது. 

எனவே, பிரஜைகள் என்ற ரீதியில் தமக்குத் தேவையான அளவை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும். இதன் மூலம், தேவையுள்ள ஏனைய தரப்பினருக்கு முறையான முகாமைத்துவத்தின் கீழ் அந்த நிதியை வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிட்டும். 

அத்துடன், பெற்றுக்கொள்ளும் நிவாரண நிதியை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும். 

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போது, அத்துறையினருக்கு நிவாரணக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்காத தரப்பினர் என இரு சாராரும் தேவைக்கு அதிகமாக கடன்களைப் பெற்றனர். பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வணிகங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததை ஆளுநர் நினைவுகூர்ந்தார். 

எனவே, வழங்கப்படும் நிவாரணக் கடன்களைக் கூட தமது வணிகத்திற்குத் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் பணத்தை முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் என்றார்.

https://adaderanatamil.lk/news/cmjej0snj02yko29nd30ixnco

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

2 months 3 weeks ago

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

Dec 21, 2025 - 11:18 AM

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதெனப் பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

"இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை. அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது நடவடிக்கையினால் போராட்டக்களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjfb3o7k02ywo29npez5i2v0

Checked
Wed, 03/18/2026 - 04:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr