அனோஜனுக்கான மரண தண்டனை தொடர்பில் அவசர இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தும் அலி சப்ரி!
சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் இலங்கை இளைஞரை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அலி சப்ரி, குறித்த சம்பவம் தொடர்பாக அனோஜன் சிவராசா என்ற இளைஞருக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து தான் வருத்தமும் கவலையும் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா என்ற இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் சட்ட அமைப்பை மதிக்கும் அதேவேளையில், இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றத்திற்காக இவ்வளவு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க முடியாது என்ற கருத்துச் சமுதாயத்தில் உருவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக மனதை புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதே கடுமையான தீர்மானமாக உள்ள பின்னணியில், அந்தச் செயலுக்காக ஒரு மனித உயிரைப் பறிப்பது மனிதநேயத்திற்கு எதிரானதுடன் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
குறித்த கருத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதை அகற்றுவதற்கும், அது தொடர்பாக பகிரங்க வீடியோ மூலம் மன்னிப்பு கோருவதற்கும் அனோஜன் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
மனவேதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு குற்றத்தின் காரணமாக, ஒரு நபர் மனந்திரும்புவதற்கும், தனது தவறைச் சரிசெய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் உள்ள வாய்ப்பை முற்றாக இல்லாதொழிக்கக் கூடாது.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த இளைஞருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு சவுதி அதிகாரிகளிடம் கருணையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் தலையிட்டு அனுஜனுக்காக முறையான சட்ட உதவியை வழங்குவதற்கும், உயர்மட்ட இராஜதந்திர மட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதியையும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்போது கருணைக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்பதுடன், மீண்டும் தனது குடும்பத்தினரிடம் திரும்பி புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அனுஜனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்" என்றும் அந்த 'X' பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா என்ற இந்த இளைஞர், மதத் தலைவரொருவரை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞரை விடுவிப்பதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு சிறப்புத் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள சவுதி அரேபியத் தூதரகம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
இதனிடையே, குறித்த இளைஞருக்கு ஆரம்பத்தில் சிறைத்தண்டனையும் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிவிவகார அமைச்சின் தலையீட்டினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் காரணமாகவே இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்துகின்றார். https://adaderanatamil.lk/news/cmu7vdaff0003356opgiffdm8
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை முன்வைக்க தயாராகும் ரிஷாட் எம்.பி
சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன், அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர்.
அதை வேளை அனோஜனின் மற்றும் பெற்றோர் குடும்பத்தினர் அனுஜனின் விடுதலை தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் இருப்பதாகவும் இதன் போது அவர்களிடத்தில் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இதேவேளை சக பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,சாணக்கியன் ராசமணிக்கும் மனோ கணேசன் ஆகியோர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குழுவாக அனோஜனின் விடயம் தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
அனோஜன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பில் மரணதண்டணை தீர்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாக, அவர் கூறியதாகவும் தெரியவருகின்றது.
https://adaderanatamil.lk/news/cmu7wcpwy0004356ogk1v2w4h
By
கிருபன் ·