கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!
”நாமலின் தந்தை பிள்ளையானை,கருணாவை மாற்றினார், நாமல் அர்ச்சுனாவை மாற்றினார்” இப்படிக் கூறியிருப்பவர் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய இந்திக அனுருத்த.
மஹிந்த அணியானது அர்ச்சுனாவுக்குக் கொடுத்திருக்கும் நற்சான்றுப் பத்திரம் இது. அர்ஜுனா யார் என்பதையும், அவரை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும்,அவரை அவர்கள் எந்த நோக்கக் கோணத்தில் இருந்து அணுகுகிறார்கள் என்பதனையும் அது தெளிவாககக் காட்டுகிறது.இதற்கு மேலும் அர்ஜுனாவைப் பற்றி இங்கே உரையாட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் எத்தனை குட்டி அர்ஜுனாக்கள் கிளம்பப் போகிறார்கள் என்பதுதான்.அவர்கள் தமிழ் வாக்குகளை எவ்வளவுதூரம் சிதறடிக்கப் போகிறார்கள் என்பதுதான்.ஏனென்றால் அர்ஜுனா மேலும் குட்டி போடக்கூடிய ஓர் அரசியல் சூழல்தான் தொடர்ந்து நிலவுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அர்ஜுனா தெரிவு செய்யப்படக் காரணங்கள், தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமை, ஐக்கியமின்மை, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் ஜனவசியம் இழந்தமை போன்றவைதான். அதே காரணங்கள் இப்பொழுதும் உண்டு. அதைவிட வேறு புதிய காரணங்கள் அரங்கில் தோன்றி விட்டன. ஒரு மாகாண சபை தேர்தல் நடக்குமாக இருந்தால், அதில் நிதிப்பலம் மிக்க புதிய வருகைகளுக்கான வாய்ப்புகள் தெரிகின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால் வரக்கூடிய அடுத்த தேர்தலில் வாக்குகள் மேலும் சிதறுமா?
இப்பொழுது தமிழ்த் தேசிய அரசியலில் இரண்டு பிரதான வாக்குத் தளங்கள் உண்டு.ஒன்று, தமிழரசுக் கட்சிக்குரியது. மற்றது,தேசிய மக்கள் சக்திக்குரியது.தமிழ்த் தேசியப் பேரவை மாகாண சபையை நோக்கி இதுவரையிலும் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.வெளிப்படுத்தினாலும் இப்பொழுது அவர்களுடைய வாக்கு வங்கி ஒப்பீட்டு அளவில் சிறியது.
தமிழரசுக் கட்சிக்குரிய வாக்குத் தளந்தான் உள்ளவற்றில் பெரியது. மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால் அதில் அதிகளவு வாக்குகளை கைப்பற்றும் சக்தி இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குத்தான் உண்டு. ஏனென்றால் அந்த கட்சிதான் வடக்கு-கிழக்கு தழுவிய வாக்குத் தளத்தைக் கொண்டிருக்கிறது.ஆனால் அதே சமயம் தனக்குள் தானே மோதிக் கொண்டிருக்கும் கட்சி அது.இரண்டு அணிகளாக நிற்கிறது.இதில் சிறீதரன், கஜேந்திரகுமார் அணிக்குக் கிட்டவாகத் தெரிகிறார்.ஆனால் தேர்தல் என்று வரும்போது அவர் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார் ?
கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலின்போது அவர் பொது வேட்பாளர் அணியோடு நின்றார்.மாவை சேனாதிராஜா அப்பொழுது உயிருடன் இருந்தார்.அவரும் பொது வேட்பாளருக்குக் கிட்ட நிற்பது போல தோன்றினார்.ஆனால் கிளி நொச்சியில் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் 20,348.சஜித் பிரேமதாசவை ஆதரித்த சந்திரகுமார்+சுமந்திரன் அணிக்குக் கிடைத்த வாக்குகள் 30,571.
அதன்படி கூட்டிக்கழித்துப் பார்த்தால் சிறீதரன் கிளிநொச்சியில் செல்வாக்கிழந்து விட்டார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிதரன் வழமைபோல வெற்றி பெற்றார்.தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த ஒரே ஒரு ஆசனம் அது.இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் 75வயதான ஒரு கட்சிக்கு அதன் இதயம் என்று கூறத்தக்க ஒரு மாவட்டத்தில் ஒரே ஒரு ஆசனந்தான் கிடைத்தது.அதுகூட கிளிநொச்சியை மையமாகக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு.
இங்கே சிறீதரன் பெற்ற வெற்றியை அதற்கும் சில மாதங்களுக்கு முன் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் பெறத் தவறிய வெற்றியோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.மிகக்குறுகிய காலத்துக்குள் அங்கே மாற்றம் நிகழ்ந்ததா? அல்லது பொது வேட்பாளருக்காக சிறீதரன் தன் முழுப் பலத்தையும் பிரயோகித்து உழைத்திருக்கவில்லையா?
சிறீதரன்,சுமந்திரன் அணியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக கொள்கை ரீதியாக ஏனைய அணிகளோடு இணைந்து நின்றாலும்,கட்சியை உடைக்கத் தயாரில்லை என்பதைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிரூபித்து வந்திருக்கிறார்.அதேசமயம் சிறுதரனை முற்றாகத் தோற்கடித்து, கட்சியை விட்டு அகற்றி,கட்சியை தனது கேள்விக்கு இடமற்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமந்திரனாலும் முடியவில்லை என்பதுதான் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் உட்கட்சி யதார்த்தம் ஆகும்.
இதில் இப்பொழுது அரசியலில் ஈடுபடக்கூடும் என்று ஊகிக்கப்படும் புலம்பெயர்ந்த தமிழரான ஊடக முதலாளி சிறீதரனுக்கு நெருக்கமாகக் காணப்பட்டவர்.எனினும் சிறீதரன் அவரை உபயோகித்து கட்சியை உடைக்க முயற்சிக்கவில்லை.அல்லது மறுவளமாகச் சொன்னால் குறிப்பிட்ட ஊடக முதலாளியும் உட்பட தமிழ் தேசிய பேரவையாலும் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வருமாறு அல்லது ஒரு புதிய அணியை உருவாக்குமாறு சிறீதரனைத் தூண்ட முடியவில்லை.சிறீதரன் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வரத் தயாரில்லை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளிலும் காணப்பட்டு வரும் தமிழரசுக் கட்சி யதார்த்தம் ஆகும்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மாகாண சபைத் தேர்தல் நடந்தால்,அதில் தேர்தலில் சிறீதரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு சில தரப்புகள் விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால் சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதற்குத் தயாராக இல்லை என்று தெரிகிறது.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சிறீதரன் துறப்பாராக இருந்தால்,வரிசையில் அவருக்கு அடுத்தபடியாக கூடுதலான வாக்குகளை பெற்ற சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வருவார்.அவர் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சிக்குள் பலமடைவாராக இருந்தால் அடுத்ததாக என்ன செய்வார்?
கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்திக் கொண்ட பின் சுமந்திரன் கட்சியை எப்படித் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்றுதான் சிந்திப்பார்.அவ்வாறு சிந்தித்தால் அவர் சிறீதரனை எப்படித் தோற்கடிப்பது என்றுதான் சிந்திப்பார்.சிறீதரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டாலும் அவரை சொந்தக் கட்சிக்காரர்களே மாகாண சபைக்குள் சுத்தி வளைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.ஏற்கனவே விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில் அது நடந்தது. எனவே சிறீதரன் மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவாராக இருந்தால்,தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே சுற்றி வளைக்கப்படும் ஆபத்துக்கள் அதிகம் இருக்கலாம்.
அதாவது சிறீதரன் முதலமைச்சராக வந்தாலும் சுற்றிவழிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.அதேசமயம் அவர் முதலமைச்சராக வருவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கும் பொழுது அது அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக சுமந்திரனைக் கட்சிக்குள் இப்போது இருப்பதை விடவும் பலப்படுத்திவிடும்.
சுமந்திரனைக் கட்சிக்குள் இப்போது இருப்பதை விடவும் பலமானவராக ஸ்தாபிப்பதற்கு சிறிதரன் விரும்பமாட்டார்.எனவே ஒரு முதலமைச்சராக வருவதை விடவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டுப் போகலாம் என்று அவர் முடிவெடுக்கும் வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன.தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் அவ்வாறு தெரிவித்ததாகவும் சில தகவல்கள் உண்டு.
எனவே சிறீதரன் முதலமைச்சர் வேட்பாளராக இறங்கக்கூடிய வாய்ப்புகள் இப்பொழுது பிரகாசமாக தெரியவில்லை.எதிர்காலத்தில் நிலைமைகள் மாறலாம்.அதேசமயம் வட மாகாண முதலமைச்சராக வரவேண்டும் என்று சுமந்திரன் விரும்புகிறாரா என்ற கேள்வியையும் இங்கே முன்வைக்க வேண்டும்.
தான் ஒரு கெட்டிக்கார நிர்வாகி அல்லவென்றும் ஒரு சட்ட மன்றத்தை நிர்வகிப்பது தனக்கு சவால் மிகுந்தது என்ற பொருள்படவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு தெரிவித்ததாக சில தகவல்கள் ஏற்கனவே உண்டு. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அவர் இதுவரையிலும் தன்னை ஒரு “கிங் மேக்கர்”ஆகத்தான் நிரூபித்திருக்கிறார் “கிங்”காக அல்ல.
ஒரு கிங் மேக்கர் ஆக இருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிதான் அதிகம் பொருத்தமானது;சுதந்திரமானது.ஒரு முதலமைச்சருக்கு பொறுப்புக்கள் அதிகம்.அது ஒரு சட்டமன்றம்.எனவே சுமந்திரன் ஒரு முதலமைச்சராக வர ஆசைப்படுவாரா என்ற கேள்விக்கு விடை முக்கியம்.அதில் அவர் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்குமா?
இப்போதுள்ள கட்சி நிலவரங்களின்படி ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமாக இருந்தால்,அதில் தமிழரசுக் கட்சிக்குத்தான் அதிகம் வெற்றி வாய்ப்புகள் உண்டு.ஆனால் எதிர்காலத்தில் மேற்சொன்ன ஊடக முதலாளி தேர்தலில் இறங்குவாராக இருந்தால்,அவர் தமிழ்த் தேசியப் பேரவையின் ஆதரவைப் பெறுவாராக இருந்தால்,அந்த அணியோடு சிறீதரன் அணியும் இணையுமாக இருந்தால் என்ன நடக்கும் ?
அதன் முதல் விளைவாக, தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படும்.இது வடக்கில் மட்டுமல்ல,கிழக்கிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.மாகாண சபை தொடர்பான தமிழ் உரையாடல்களில் அதிகமானவை வடக்கை மையமாகக் கொண்டவை. கிழக்கைக் கவனத்தில் எடுக்காதவை என்பதையும் இங்கே தொகுத்துக் காட்ட வேண்டும்.
எனவே தமிழ்த் தேசியப் பேரவையும் சிறீதரன் அணியும் புலம்பெயர்ந்த ஊடக முதலாளியும் ஒன்றிணைவார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசிய வாக்கு வங்கியை மேலும் சிதறடிக்கும்.அதை அதன் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை அதிகமாகப் பாதிக்கும்.
புதிய வருகைகளும் புதிய கூட்டணிகளும் தமிழ் வாக்குகளைத் திரட்டுமாக இருந்தால் அது வேறு கதை.இல்லையென்றால்,தமிழ்த் தேசிய வாக்குகள் சிதறடிக்கப்படுமாக இருந்தால் என்ன நடக்கும்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக தன் வாக்கு வங்கியைப் படிப்படியாகக் கட்டி எழுப்பி வருகின்ற தேசிய மக்கள் சக்தியானது வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும்.ஓர் ஆளும் தரப்பாக,அரச வளங்களை உபயோகித்து,அரச திணைக்கள நிகழ்வுகளையும் அரச நிகழ்வுகளையும் பயன்படுத்தி,தேசிய மக்கள் சக்தியானது,தன்னைத் தமிழ்ப் பகுதிகளில் படிப்படியாகப் பலப்படுத்தி வருகிறது.தெற்கில் அது எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதன் மூலம்,எதிர்க்கட்சிகளை அம்பலப்படுத்துவதன் மூலம்,தனது வாக்கு வங்கியை பலப்படுத்த முயற்சிக்கின்றது.
ஒருபுறம் தமிழ்த் தேசிய வாக்கு வங்கி குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வாக்குத் தளம் உடைக்கப்படும் ஆபத்து தெரிகிறது.இன்னொரு புறம்,தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல் இருக்கப்போகிறது.எனவே மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால்,அதில் புதிய வருகைகளும் புதிய கூட்டுக்களும் பலப்படுமாக இருந்தால்,குறிப்பாக,தமிழ்த் தேசிய பேரவையும் சிறீதரன் அணியும் புலம்பெயர்ந்த தமிழ் ஊடக முதலாளியும் ஒன்றாகத் திரண்டால்,தமிழரசுக் கட்சி மேலும் பின்னடைவுகளைச் சந்திக்கலாம்.எனினும், தமிழரசுக் கட்சியோடு இப்பொழுது சினேகிதமாக இருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.அவர்கள் கொழும்பை நோக்கி மட்டும் கேட்கவில்லை,இந்தியாவை நோக்கியும் அதே கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.நடக்குமோ நடக்காதோ என்று இன்றுவரை நிச்சயமாகத் தெரியாத ஒரு தேர்தலில்,தமது வாக்காளர்கள் எப்படி முடிவு எடுப்பார்கள் என்பதை மிகச் சரியாகக் கணித்த பின்தான் அவர்கள் அவ்வாறு கேட்கிறார்களா?
Athavan News
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்...
''நாமலின் தந்தை பிள்ளையானை,கருணாவை மாற்றினார்,நாமல் அர்ச்சுனாவை மாற்றினார்” இப்படிக் கூறியிருப்பவர் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய இந்திக அனுருத்த.
மஹிந்த அணியானது அர்ச்சுனாவுக்குக் கொடுத
By
தமிழ் சிறி ·