தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்திவாரங்கள்!
--->வல்வை குமரன்(தேவரண்ணா...)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உலகின் பல நாடுகளாலும் பேசப்படுகின்ற ஒரு அமைப்பாக விளங்குகின்றது. தரைப்படை,கடற்படை,விமானப்படை என முப்படைகளையும் வைத்திருந்து பல்வேறு கட்டுமானங்களோடு தமிழீழ மண்ணில் ஆட்சி செலுத்த முடிந்ததென் றால் இந்த இயக்கம் கட்டி எழுப்பப்பட்ட வரலாற்றை நாம் அறிய வேண்டும்.
தேசியத்தலைவர் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மாபெரும் அமைப்பாக மாற்றினார் என்றால் அதற்கு அத்திவாரக் கற்களாக, அத்திவாரமாக ஆரம்ப காலத்தில் செயற்பட்டவர்கள் தமிழக உறவுகள் தான் என்பதை நாம் என்றுமே மறந்துவிட முடியாது.
1982 காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் பேபி சுப்பிரமணியம் என அழைக்கப் பட்டவருமான பேபி அண்ணா தமிழகத்தில் கட்சி வேறுபாடுகள் இன்றி ஐயா.பழ.நெடுமாறன் அவர்களது காமராசர் காங்கிரசு,திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட்ட அனைத்து அமைப்பினர்களுடனும் தொடர்பு கொண்டு தேசியத்தலைவர் அவர்கள் பற்றியும்,அவரால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும்,தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் எடுத்துக் கூறி எமக்கான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக தமிழக மக்கள் மத்தியிலும் அந்தப் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் திராவிடர் கழகத்தில் அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களின் ஒத்துழைப்போடு 'தமிழீழ விடுதலைப் புலிகள் தோழமைக் கழகம்' என்றோர் அமைப்பை 1984 காலகட்டத்தில் உருவாக்கினார்.
1983 இன் ஆடிக் கலரத்தினைத் தொடர்ந்து சிங்களவர்கள் இலங்கையில் நடத்திய படுகொலைகளைக் கண்டு வேதனையுற்ற இந்திரா காந்தி அம்மையாரின் அரசு சிறிலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமன்றி, இலங்கையில் அப்போது செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வழங்க முன்வந்தது.அதன்படி 1983 நவம்பர் மாதம் முதல் டிசம்பர் கடைசிவரை இந்திய அரசின் பயிற்சி முகாம்கள் வட இந்தியா வில் நடைபெற்றன.அங்கு இரண்டு முகாம்களிலும் சில நூறு எண்ணிக்கையிலான புலிகளுக்கே பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தன. அத்தோடு தேசியத்தலைவர் அவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. தமிழ்நாட்டிலும் பயிற்சி முகாம்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,ஆயிரக் கணக்கான வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என விரும்பினார். அந்த விருப்பம் மணி அண்ணாவின் (கொளத்தூர் மணி)ஒத்துழைப்போடு நிறைவேறியது.
பின் நாட்களில் தேசியத் தலைவர் அவர்களால் 'புலிகளின் மூத்த போராளி' என அழைக்கப்பட்ட மணி அண்ணாவின் மேட்டூர் கொளத்தூர் பாப்பாரம்பட்டியில் உள்ள மணி அண்ணாவின் இடம் அன்று போராளியாக இருந்த ராகவன் மற்றும் கோபி என்பவர்கள் சென்று பார்த்து ராகவனால் போராட்ட பயிற்சி முகாம் நடத்துவதற்கு பொருத்தமான இடம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு மணி அண்ணாவின் பூரண சம்மதத்துடன் அங்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.
அப்பையா அண்ணர் அவர்களே மூன்றாவது பயிற்சி முகாமுக்கான (முதல் இரண்டும் வட இந்தியாவில் நடைபெற்றிருந்தன) போராளிகளை அழைத்துச் சென்றிருந்தார்.அங்கு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் அது.3,6,10 ஆகிய மூன்று பயிற்சி முகாம்கள் அங்கு நடத்தப்பட்டன.
3 ஆவது பயிற்சி முகாம்,1984 ஜனவரி 5ஆம் நாள் ஆரம்பமானது.ஒவ்வொரு முகாமிலும் பயிற்சிகள் இடம்பெறும் போது தேசியத்தலைவர் அவர்கள் அங்கு சென்று வருவார். அந்தக் காலப்பகுதிகளில் தலைவருக்கும் மணி அண்ணாவுக்குமான உறவு நெருக்கமாக வளர்ந்தது.
அங்கு நடைபெற்ற 3 பயிற்சி முகாம்களும் பொன்னம்மானின் மேற்பார்வையிலேயே நடைபெற்றன. 3ஆவது பயிற்சி முகாமினை புலேந்தி அம்மான் பொறுப்பேற்று நடத்தினார். அவருக்கு உதவியாக நம்மாள் என்பவரும் பணியாற்றினார்.
3ஆவது பயிற்சி முகாம் நடாத்தப்பட்ட காலகட்டத்தில் இயக்கத்திடம் பெருமளவில் நிதி வசதி இருக்கவில்லை.அந்த நேரங்களில் மணி அண்ணாவின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது.உள்ளூர் மக்களிடமும்,கட்சிப் பிரமுகர்களிடமும் நிதி பெற்று வழங்கினார்.அந்தக் காலகட்டத்தில் மணி அண்ணாவின் குடும்பத்திற்கு என சாராயக் கடைகள்,கள்ளுத் தவறணைகள் என்பன இருந்தன.அந்த வருவாய்களும் போராளிகளின் செலவுகளை ஈடு செய்தன.அது மட்டுமன்றி தனது நண்பர்களிடமும் சென்று ஒவ்வொருவரிடமும் மூன்று மூடை நெல், 1 கிடாய் ஆடு என்ற விதமாகவும் பெற்று வருவார்.அவ்வாறு சேகரிக்கப்பட்ட நெல் மூடைகளும், கிடாய் ஆடுகளும் போராளிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தது. அது மாத்திரமன்றி வாணியம்பாடி, பெங்களூர்,சேலம்,திருப்பூர் போன்ற இடங்களிலும் பலரையும் தொடர்பு கொண்டு நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுத்தார்.வாணியம்பாடியில் அண்ணா தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் 1லட்சம் ரூபா நிதி திரட்டி வழங்கினார்கள். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஐயா 2லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தார். கரூரில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பழ.ராமசாமி அவர்கள் முகாமின் பாவனைக்கென ஜீப் வண்டி ஒன்றை அன்பளிப்புச் செய்திருந்தார்.அது மட்டுமன்றி முகாமில் ஆழ்குழாய்க் கிணற்று வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். ஈரோடு திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் தேசியத்தலைவர் மீது மிகுந்த பற்றும்,மரியாதையும் கொண்டவர்.பயிற்சி முகாம் காலத்தில் 6 ஆவது முகாம் நடைபெற்றபோது அரிசி மூடைகளும்,வாரத்திற்கு 1000 முட்டைகள் வீதமும் வழங்கி உதவியவர்.
அது மட்டுமன்றி நமது போராளிகள் காயப்பட்டு வந்த வேளைகளில் ஈரோட்டில் அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவர்களைப் பராமரித்தவர்.குறிப்பாக சீலன்,புலேந்தி, ரகுவப்பா காயப்பட்டு வந்திருந்த வேளையில் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளையும் செய்து தந்தவர்.
6ஆவது பயிற்சி முகாம் பொன்னம்மானின் மேற்பார்வையில் லூக்காஸ் அம்மான்,மேனன் ஆகியோர் பொறுப்பில் நடைபெற்றன.அந்தப் பயிற்சி முகாமின் போது போராளிகளுக்கு சின்னம்மை(பொக்குளிப்பான்) நோய் வந்து போராளிகள் மிகவும் துன்பப்பட்டார்கள்.அந்த நேரம் வண்டிமாடு கட்டிச்சென்று வேப்பிலைகளை பெருமளவில் கொண்டு வந்து முகாம்களில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடில்களில் அவற்றைப் பரப்பி வைத்து அவற்றின் மேல் அவர்களைப் படுக்க வைத்து பராமரித்து பழ வகைகளை வாங்கி வந்து அவர்களுக்கு வழங்கி அவர்களுக்கான அனைத்துப் பணிவிடைகளையும் செய்தவர் மணி அண்ணா.
4ஆவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற ஒரு போராளிக்கு சின்னம்மை வந்து மாறியிருந்தது.6ஆவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக்கொண்ட தனது தம்பியைப் பார்ப்பதற்காக அவர் அங்கு வந்திருந்தார்.அவர் மூலமே அந்த நோய் அங்கு பரவியிருக்கலாம் என மணி அண்ணா தெரிவித்தார். ஆரம்பத்தில் 5 பேரில் தொடங்கி 50 பேர் வரை அது பரவியிருந்தது.மணி அண்ணாவின் பெரு முயற்சியினா லேயே அது மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருந்தது.
கொளத்தூரில் நடைபெற்ற மூன்று முகாம்களின் போதும் மணி அண்ணாவின் பங்களிப்பு தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டும்படி யாக அமைந்திருந்தது.பயிற்சிப் பாசறைகளின் பணிகளோடு மட்டும் மணிஅண்ணா நின்றுவிடவில்லை.
1986 ஆம் ஆண்டு ஏழாம் நாள் டெல்லியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் ஒன்றிற்கு கலந்து கொள்ளச் சென்றிருந்த மணி அண்ணா தன்னோடு பள்ளியில் பயின்றவரும்,பெரியாரிய பற்றாளரும்,விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அந்த நண்பர் இந்திய இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர்.அவர் படைத்துறை அறிவியல் சார்ந்த கிட்டத்தட்ட 50 அரிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவை புலிப்படைக்குப் பயன்படட்டும் என்று கூறி மணி அண்ணாவிடம் கையளித்துள்ளார்.சென்னை திரும்பிய மணி அண்ணா அவற்றை தேசியத் தலைவர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அவற்றைப் பார்த்ததும் தேசியத்தலைவர் அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தலைவர் அவர்கள் மணி அண்ணாவிடம் மீண்டும் புதுடில்லி சென்று வருமாறு கேட்டுள்ளார்.
இரண்டு லட்சம் ரூபாய்களை மணி அண்ணாவிடம் கொடுத்து அப்போது விடுதலைப் புலிகளின் படைத்துறைத் செயலகத்தில்( MO) பணியாற்றி வந்த ஜான் மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறி அதற்கான ஏற்பாட்டையும் செய்தார் தலைவர்.முன்பு மணி அண்ணா கொண்டுவந்த நூல்களின் தொகுதியில் ஒரு புத்தகத்தின் இரண்டாம் பாகம் இருந்துள்ளது.முதலாம் பாகத்தையும் எப்படியாவது தேடி வாங்கி வருமாறும் கூறியுள்ளார்.அடுத்த நாளே ஜான் மாஸ்டரோடு டெல்லிக்கு பயணமானார் மணி அண்ணா.டெல்லிக்குச் சென்ற அவர்கள் புத்தகக் கடைகள்,பல்வேறு பதிப்பகங்கள் என அலைந்து திரிந்து மேலும் ஏராளமான படைத்துறை சார்ந்த அறிவியல் நூல்களை வாங்கி வந்து தலைவர் அவர்களிடம் ஒப்படைத்தார் மணி அண்ணா. இவ்வாறு மணி அண்ணா அவர்கள் அனைத்துப் பணிகளையும் இயக்கத்தில் ஒருவராக இணைந்து நின்றே செய்து முடிப்பவர்.
அமைதிப்படையென்று கூறி இலங்கைக்கு சென்று விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கில் புலிகளுக்கு எதிராக படை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நடைபெற்ற சமர்களில் எம்மவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள்.அவ்விதம் காயப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்ட லெப்டினன்ட் கேணல் நவம் சிகிச்சைகள் பலனின்றி மரணத்தை தழுவிக் கொண்டார். நவம் அவர்களது உடலை மருத்துவ மனையில் இருந்து எடுத்துச் சென்று அவருடைய உடலைக் குளிப்பாட்டி புலிச்சீருடை அணிவித்து அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலி உறுப்பினர்கள் மற்றும் திராவிடர் கழக உடன்பிறப்புக்கள் பலர் அணிவகுத்துச் சென்று நவம் அவர்களது உடலுக்குத் தீ மூட்டப்பட்டது.அவரது அஸ்தி சேகரித்து வைக்கப்பட்டு 31ஆம் நாள் அஞ்சலி நிகழ்வையும் நடத்தி முடித்து அந்த அஸ்தியை தமிழீழ மண்ணுக்கு அனுப்பி வைத்தவர் மணி அண்ணா.
இந்தியப்படை நடவடிக்கை களின்போது காயமடைந்து தமிழ் நாட்டுக்கு கொண்டு வரப்படும் புலிப் போராளிகளுக்கு தனது ஏற்பாட்டிலேயே சேலம்,ஈரோடு,போன்ற இடங்களில் அமைந்திருந்த தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைகள் அளித்து பலரை ஈழத்திற்கு அனுப்பியது மட்டுமன்றி,தமிழகத்தில் சிகிச்சைகள் பலனளிக்காது மரணித்த ஒன்பது பேர்களின் உடல்களுக்கு தகுந்த மரியாதைகள் செய்து தனது சொந்த குடியிருப்புப் பகுதியிலேயே தகனம் செய்தவர் மணி அண்ணா.
தேசியத்தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டில் தங்கியிருந்த வேளையில் 1987 நவம்பர் 27ஆம் நாள் முதலாவது மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த நிகழ்வில் மணி அண்ணாவும் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய தேசியத் தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டுக்கு வந்து திரும்புமாறு மணி அண்ணாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.அந்தக் கடிதத்தில் மாவீரர்நாள் நிகழ்வு பற்றி தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருக்கவில்லை.கடல் பயணம் தடைப்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட நவம்பர் மாத காலப்பகுதியில் மணி அண்ணாவுக்கு தமிழ் ஈழம் செல்ல முடியாது போய்விட்டது.
1987 டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மணலாற்றுக் காட்டுக்கு சென்று தேசியத்தலைவர் அவர்களைச் சந்திக்க முடிந்தது.தலைவர் அவர்களுடன் தங்கியிருந்த நாட்களில் கண்ணிவெடி தயாரிப்புத் தொழிற்சாலை சீருடைகள் தைக்கும் பாசறை,மொழி பெயர்ப்புப் பணிகள் செய்துவந்த தனிப்பகுதி,பெண்புலிகள் பாசறை, கமாண்டோ பயிற்சிப் பாசறை என பல பகுதிகளுக்கும் தேசியத்தலைவர் அவர்களோடு சென்று மணி அண்ணாவினால் அனைத்தையும் பார்க்க முடிந்தது.
தேசியத்தலைவர் மணலாற்றுக் காட்டில் தங்கியிருந்த வேளையில் இந்திய அமைதிப்படை நடவடிக்கை களின்போது மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் பொய்யான தகவல் ஒன்றும் பரப்பப்பட்டிருந்தது.மணி அண்ணா காட்டில் தலைவரைச் சந்தித்து, தலைவரோடு நின்று எடுத்த புகைப் படங்களைக் காண்பித்து ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் மூலம்தான் அந்தத் தகவல் பொய்யானது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள்.
தலைவரைச் சந்தித்து வந்த பின்பும் மணி அண்ணாவின் இயக்கம் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றே வந்தன.இயக்கப் போராளிகள் கஷ்டம் என்று யார் வந்தாலும் முகம் சுழிக்காமல் உதவிகள் செய்பவர்.
2014 இல் ஒரு நாள் மணி அண்ணாவிடம் இருந்து எனக்கு கைபேசி அழைப்பு." சொல்லுங்கோ அண்ணா" என்றேன் நான்.ஒரு பெயரைச் சொல்லி " இவர் மைசூர் பக்கம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றாராம்.நம்ம ஆளா?" என்றார்.அவர் சொன்ன பெயரைக் கேட்டதும் அதிர்ந்து போய்விட்டேன். மு.வே.யோகேஸ்வரன் என்ற பெயரில் முகநூலில் எழுதிக் கொண்டிருந்த வாஞ்சிநாதனே அவர்.தான் ஜேர்மனியில் இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். " அண்ணா அவரை உடனை சென்னைக்கு எடுக்க வேணும்.நான் வீட்டில் வைச்சுப் பார்க்கிறன்.கொஞ்ச காசு அனுப்புங்கோ" என்று கூறி வங்கி இலக்கத்தையும் வாஞ்சியிடம் இருந்து வாங்கி மணி அண்ணாவுக்கு தெரிவித்தேன்.மணி அண்ணா உடனடியாக 10 ஆயிரம் ரூபா அனுப்பி இருந்தார்.பணம் கிடைத்த இரண்டொரு நாட்களில் வாஞ்சி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.வாஞ்சி ஆட்டோவில் வந்து எங்கள் வீட்டு வாசலில் இறங்கியபோது அவரை அடையாளம் காண முடியாமல் இருந்தது.சரியாக மெலிந்து நடக்கவும் முடியாமல் முதுகு வளைந்தபடியே வந்து சேர்ந்தார். நான் மறு நாளே அண்ணா நகரில் உள்ள ஒரு சிறந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பூரண உடற்பரிசோதனைகள் செய்வித்தேன்.அவருக்கு கான்சர் என்ற மாதிரித்தான் முதலில் கதை பரப்பப் பட்டிருந்தது.அவருக்கு கான்சர் இல்லை. ஒழுங்காக நேரத்திற்கு சாப்பிடாமல் அல்சர் முற்றிய நிலை. பின் இரண்டு மாதங்கள் வரை அவருக்கு சிகிச்சைகள் மேற்கொண்டு எனது வீட்டில் நானே பராமரிப்பு செய்து பூரண நலமடைந்து பின்பே திரும்ப மைசூருக்கு அனுப்பி வைத்தேன்.அதன் பின்பும் மணி அண்ணா வாஞ்சியோடு தொடர்பில் இருந்து நிதியுதவிகளும் செய்துள்ளார்.
90 காலப்பகுதியில் கப்டன் றோய் நாட்டில் காயப்பட்டு சிகிச்சைக்காக மணி அண்ணாவிடம் அனுப்பப்பட்டிருந்தார். முதலில் ஈரோடு L.K.M மருத்துவமனையில் வைத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் பெங்களூரில் Peoples Hospital இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி றோய் மரணத்தைத் தழுவிக் கொண்டபோது அவரின் உடலைப் பொறுப்பேற்று எடுத்துவந்து அவருக்குரிய மரியாதைகளோடு றோய் வாழ்ந்த கொளத்தூர் கும்பாரப்பட்டியிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் நினைவாக அந்த இடத்திற்கு புலியூர் என பெயர் மாற்றம் செய்து பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் ஒன்றினையும் உருவாக்கி புலியூர் பகுதியில் வருடாவருடம் தமிழீழ மாவீரர் நாளை வெகு விமரிசையாக செய்து வருகின்றார் மணி அண்ணா. அத்தோடு நினைவு நிழற்கூடத்திற்கு பின்புறமாக ஒரு ஏக்கர் காணியைப் பெற்று மாவீரர் நினைவு மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் மணி அண்ணா.
'ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக தன் சொந்தப் பணத்தையே செலவழித்திருக்கின்றார்.ஈழப் போராளிகளின் இலட்சியம் நிறைவேறுவதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்' என 1994 இல்'கியூ' பிரிவினர் மணி அண்ணாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்திருந்தனர்.
08.02.91-27.04.91காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்தவர்.
28.05.94-02.01.95 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கியதாக தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை.
10.09.95-08.09.96 வேலூர் சிறப்பு முகாமில் இருந்து தப்பிய விடுதலைப் புலிப் போராளிகளுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தவர். இந்த வழக்கில் தனக்காக தானே வாதாடி விடுதலையானார்.
28.02.2009-04.05.2009 ' ராஜீவ் கொலை அல்ல மரண தண்டனை' என்று திண்டுக்கல்லில் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டும் சிறை.
02.11.2013-15.02.2014 இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கூறி சேலம்,மற்றும் சென்னையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் இணைக்கப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறை சென்றார்.
இவ்வாறு 1984 காலகட்டத்தில் இருந்து தேசியத்தலைவர் அவர்களுக்கு விசுவாசமாக விடுதலைப்புலிகளில் ஒருவராக செயற்பட்டு வரும் மணி அண்ணா தனது சொத்துக்களில் பெரும் பகுதியை எமக்காகவே இழந்தவர்.பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தும் இன்றுவரை இலட்சியத்தோடு வாழ்ந்து வருபவர். பயிற்சி முகாம் நடைபெற்ற தோட்டத்தில் 15 ஏக்கரை முன்பே விற்றிருந்தார்.மீதியாக இருந்த 12 ஏக்கர் காணியையும் சமீபத்தில் விற்பனை செய்துள்ளார் என்பதைக் கேள்விப்படும் போது வேதனையாக இருக்கிறது.பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மணி அண்ணா சொந்த வீடும் இன்றி வாடகை வீட்டிலேயே இன்று வாழ்ந்து வருகின்றார்.
மணி அண்ணாவின் விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் உடனிருந்து உதவி வருபவர் மணி அண்ணாவின் இளவல் தா.செ.பழனிச்சாமி அவர்கள்.
அவர்கள் இருவர்க்கும் என்றென்றும் தமிழீழ மக்கள் சார்பில் நன்றிகள் பல கோடி!