எங்கள் மண்

தனித்து விடப்படும் முதியவர்கள்

4 days 4 hours ago

தனித்து விடப்படும் முதியவர்கள்

NillanthanBy Nillanthan - 4 months ago

Less than a minute

FacebookTwitterGoogle+WhatsappShare via Email

IMG-20251020-WA0017-1024x682.jpg

புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம்.எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன்.

அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை.எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து,வளர்ந்து,திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று.

அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள்.இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா?அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது.

ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு.ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார்.நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார்.இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை.

பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது.போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது.புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது.பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர்  பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள்.எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான்.தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான்.

image_1475506398-df6ec0a4a0-ccc.jpg

இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது.அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக்  கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள்.அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்.அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார்.போர்க்களத்தில் உயர்நீத்தார்.தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார்.தனித்து விடப்பட்ட தந்தையை  புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள்.ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார்.அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார்.ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.

இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர்.பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார்.அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர்.

மூன்றாவது உதாரணம்,ஓர் அரசியல் செயற்பாட்டாளர்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார்.2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை.எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார்.அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார்.

நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது.புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது.

இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள  மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு.அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம்.

மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம்.இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது.தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும்.

நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும்.ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது.இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது.பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது.ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை.இரண்டாம் நாளும் காணவில்லை.பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது ஆயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது.

elderly-home-panadura-sri-lanka-3-1024x4

இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன்.தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள்.இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும்.

Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு.அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு.இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு.2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது.இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது.

வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு.அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு.

ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில்  மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு.இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு.இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான்.அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு.அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள்.

எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள்.அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது.அது ஒரு கொடுப்பினை.ஆனால் எல்லாருக்கும் இல்லை.

எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும்.தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை  எடுக்கலாம்.இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும்.முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது,முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது.மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை.

முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள்,விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான  கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம்.எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம்.


https://www.nillanthan.com/

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

5 days 21 hours ago

இத்திரியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்படுமுன்னர் TEA என்ற ஆங்கில சுருக்கத்தால் அறியப்படும் தமிழ் ஈழ இராணுவம் எனப்படும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுத அமைப்பினரால் சிறிலங்காக் கடற்படையின் கடற்கலங்கள் மீது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அதனால் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள் தொடர்பிலும் தகவல் சேகரிக்கப்பட்டு பதிவிடப்படும்.

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்…

2 weeks 3 days ago

இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்…

1992 கார்த்திகை 23 ஆம் நாள் ஒரு பெரு வீரன் எம்மை விட்டு விதையாகிய நாள். லியோ என்றும் மலரவன் என்றும் நாமம் கொண்ட வேங்கை அந்த மகாவீரன். பசீலன் -2000 என்ற விடுதலைப்புலிகளினால் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி அணி ஒன்றின் அணித்தலைவன். யாழ்கோட்டை, மணலாறு, முல்லைத்தீவு, கொண்டச்சி, மாங்குளம் சிலாவத்துறை காரைநகர் என்று பல முகாம்களின் வெற்றிக்கு வலுச்சேர்த்த அந்த அணியின் திறன் வாய்ந்த அணித்தலைவன். யாழ் மாவட்டத்தின் மாணவரமைப்புப் பொறுப்பாளர். அப்படி பலவற்றை சொற்களால் அடுக்கி அவன் வீர வரலாற்றை மேலெழுப்பிக் கொண்டே செல்லலாம்.

மணலாற்றுக் காட்டில் இருந்து 1991 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி ஆரம்பித்த மாங்குளம் முகாம் மீதான் முற்றுகை மற்றும் கைப்பற்றல்  நடவடிக்கைக்காக தனது பீரங்கிகளுடனும் தனது அணியோடும் பயணித்த ஒரு பெரும் பயணத்தை இலக்கியப்படைப்பாக்கி அதற்குள் மக்களின் நடைமுறை வாழ்வியலை, போராளிகளின் வீரதீரங்களை, அவர்கள் படும் வேதனைகளை, பிரிவுகளை, வெற்றிகளை “போருலா” என்று பெயரெடுத்து போர்ப்புதினமாக எமக்குத் தந்த இலக்கிய வீரன்.

பணியில் சிரத்தையும் தேசம் மீது கடுமையான பாசமும், தமிழீழ மண்மீட்பில் நம்பிக்கையும், அண்ணன் மீது அளவில்லாத நேசமும் கொண்டவர். தனது நண்பர்கள் ஒவ்வொருவராய் வீழ்வது கண்டு துடித்துப்போகும் ஒவ்வொரு தடவைகளிலும் அவரது  கரங்களின் ஒன்று இறுகப்பற்றியது துப்பாக்கிப் பிடிகளை. மறுகரம் இறுகப்பற்றிக்கொண்டது எழுத்து எனும் பெரும் ஆயுதத்தை உருவாக்கும் பேனாவை. அதனால் எம் மனங்களில் என்றென்றும் நேசத்துக்குரிய மகாவீரனாகிவிட்டார்.

1992 ஆம் வருடம் பலாலி இராணுவமுகாமை சுற்றி இருந்த 150  காவலரண்களை தகர்க்கும் சண்டையை திட்டமிட்ட போது, களமுனையின் ஒரு பகுதி அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.  அப்போது பசீலன் அணியில் இருந்து அரசியல்துறைக்கு பிரிவு மாற்றப்பட்டிருந்தார் மலரவன்.

அந்த நிலவொளி கூட இல்லாத வெற்று இருட்டுக்குள் சண்டை தொடங்கியது. அதற்குள் இருந்துகொண்டு வெற்றிகளை சுவைத்துக்கொண்டிருந்த எமது அணிகள். பகைவன் தமது நிலைகளை விட்டு ஓடத்தொடங்கினான். பகையணிகளிடம் இருந்து கைப்பற்றும் ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் உடனடியாக பின்னால் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் போராளிகள்.  அதற்காக விநியோக அணி வெகு சிரமத்தின் மத்தியிலும் தமது உயிரைத் துச்சமென மதித்து ஓடிக்கொண்டிருந்தன. சண்டையணிகளுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் இந்த அணியை வழிநடாத்துபவனாக மலரவன் ஓடித்திருந்தார்.

பிரிகேடியர் தமிழ்செல்வனின் கட்டளையை ஏற்று நடப்பதாலோ என்னவோ களமுனையின் முன்னிலைக்கு செல்வதற்கு அவனால் முடியவில்லை. சண்டையணிகளோடு பயணிக்க அனுமதி அவரால் மறுக்கப்பட்டிருந்தது. தன்னுடனே நிற்குமாறு தமிழ்செல்வன் பணித்திருந்தார். பணிக்கப்பட்ட கட்டளையை மீற முடியாது வரும் ஆயுத தளபாடங்களை பின்னணிக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார் மலரவன்.

அதே நேரம் களமுனையின் பின்னணியில், களமருத்துவர்களை ஒருங்கிணைத்தபடி ஒரு வேங்கை பிரதான மருத்துவநிலையில் இருந்தார். வைத்திய கலாநிதியான சுஜா என்ற அந்த புலிவீரன் விழுப்புண்ணடைந்து வரும் வேங்கைகளின் குருதி மண்ணுக்கு உரமாகிவிடாமலும் அவர்களின் உயிர்கள் பிரிந்து விதையாகிவிடாமலும் இருக்க தன் மருத்துவத்திறனை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.  விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளரும் போராளி மருத்துவரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பழைய மருத்துவ மாணவனும் மருத்துவக் கலாநிதியுமாகிய அந்த சகோதரனும் மலரவனும் ஒரு  தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள்.

இரு சகோதரர்களும் ஒரே களமுனையில் வேறு வேறு பணியில் சோர்வின்றி தமது பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். அன்றும் அப்படித்தான். இருவரும் தம்பணி செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எதிரியின் பல எறிகணைகள் பிரிகேடியர் தமிழ்செல்வனின் அணியிருந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தன. மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். பலர் விழுப்புண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னணி மருத்துவநிலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அதில் மலரவனும் படுகாயமடைந்து பின்நிலைக்கு அனுப்பப்படுகிறார்.

ஆனால்,

மருத்துவ நிலைக்கு கொண்டு செல்ல முன்பே மலரவனின் உயிர் பிரிந்து விதையாகிவிட்டது. வோக்கிகள் மலரவனின் பெயர் தாங்கி சோகச் செய்தியை போராளிகளிடையே கொண்டுபோய் சேர்க்கிறது. பலநூறு போராளிகளின் உயிரைக் காத்த அந்த மருத்துவ சகோதரனுக்கும் அச்செய்தி வந்து சேர்கிறது. அவர் எத்தனையோ உயிரற்ற போராளிகளின் உடலங்களைப் பார்த்திருக்கிறார். சிதறிப்போன மக்களின் வெறும் தசைத்துண்டங்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் எல்லாம் அவர் திடமாக உறுதி பெற்றிருக்கிறார். அடுத்த கணமே கலங்கிய விழிகளைத் துடைத்துவிட்டு அடுத்த போராளியைக் காப்பாற்றிவிட துடித்திருக்கிறார். அப்படியானவருக்கு  தன் தம்பியும் உயிரற்ற உடலாக வந்திருப்பது பெரும் அதிர்ச்சி தான். ஒருவேளை சாவு மலரவனை அணைத்திருக்காவிட்டால் சுஜா அண்ணன் தன் தம்பியை நிச்சயமாக காப்பாற்றி இருப்பார். பல ஆயிரம் போராளிகளின் உயிர்களைக் காத்த அந்த கரங்கள் மலரவன் உயிரையும் நிச்சயம் காப்பாற்றி இருக்கும். இருந்தாலும் அதற்கு முன்பே மலரவன் விதையாக வீழ்ந்து விட்டார். மருத்துவ சகோதரனின் அடிமனதில் உள்ள பல ஆயிரம் வேதனைகளோடு தம்பியின் பிரிவு வேதனையும் இணைந்து கொள்கிறது.

அவரது கரங்கள் மருத்துவக் கருவியை இறுகப்பற்றிக்கொள்கின்றன. கால்கள் இன்னொரு போராளியின் உயிரைக்காப்பாற்ற வேகம் கொள்கின்றன. விழிகள் மட்டும் தம்பிக்காக பலமணி நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன. ஏனெனில் அவரும் எம்மைப்போன்ற சாதாரண மனிதப்பிறவியாக புவியில் உதித்துத் தானே விடுதலை எனும் பெருவிருட்சத்தை தாங்கும் விழுதுகளில் ஒரு மூத்த மருத்துவக்கலாநிதியாக உருவாகியிருந்தார்.

அவருக்கும் உள்ளே வலித்திருக்கும். விழிகள் உதிரும் நீரை அவர் யாரும் அறியாவண்ணம் எத்தனை தடவை துடைத்திருப்பார். அப்படியே இன்றும் அவர் துடித்துப்போனார். ஆனால்

“கடமை அவரை அழைத்துவிட நினைவுகளில் அவரின் தம்பி அமர்ந்து கிடக்க. விடுதலைப்போராட்டத்தின் இறுதி நாள்வரை ஓயாது ஓங்கி இருந்த அவரின் கரங்கள் மீண்டும் கரத்தில் தெலஸ்கோப்பினை இறுகப்பற்றிக்கொண்டன.

நினைவோடு

இ.இ.கவிமகன்

நாள்: 04.02.2026

“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026)

2 weeks 4 days ago

“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026)

எழுபத்தெட்டு ஆண்டுகள் கொடியேறி நிற்கிறது
ஆனால் எல்லோரும் தலையை உயர்த்தவில்லை
சுதந்திரம் ஒவ்வொருமுறையும் விழாவாக வருகிறது
ஆனால் நீதி மட்டும் வாசலில் நின்றுவிடுகிறது!

வாக்களிக்க சுதந்திரமாம், தேசியகீதம் பாட சுதந்திரமாம்
அனுமதிக்கப்பட்டதை நினைவில் கொள்ள சுதந்திரமாம்
இரத்தம் குடித்ததை, கற்பழித்ததை மறக்கச் சுதந்திரமாம்
கொடியை ஏற்றி உன்னை மறக்க சுதந்திரமாம்!

திரும்பாத காலடிகளை, மீளாத உயிர்களை
துப்பாக்கிமுனையில் பறிபோன வயல்களை, ஆலயங்களை
வரலாறுகள் மாற்றியமைத்து மறுபெயரிடவைகளை
"வளர்ச்சி”யின் போர்வையில் மறந்திட சுதந்திரமாம்!

சந்தேகம்தவிர்க்க கட்டித்தழுவும் மொழிகள் ஒருபக்கம்
தேசத்துரோகமாகும் நினைவகங்களின் வழிபாடுகள் மறுபக்கம்
கண்காணிப்புடன் பதில் அளிக்கப்படும் கேள்விகள் ஒருபக்கம்
சிறைச்சாலையால் மௌனம் ஆக்கப்படும் எதிர்ப்புகள் மறுபக்கம்!

பெண்கள் உடலில் போர்கொடுமைகளை இன்னும்சுமக்க
குழந்தைகள் சோதனைச் சாவடிகளை பயத்துடன்கடக்க
மாணவர்கள் பயத்தின் வடிவத்தை தினம்கற்றுகற்று
கீழ்ப்படிந்து தங்கள் சுதந்திரத்தை அடகுவைக்கிறார்கள்!

சட்டம் சமத்துவத்தை உறுதி அளித்தாலும்--
நீதி வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறது
சில கல்லறைகள் விசாரிக்கப் படுகின்றன
சில கல்லறைகள் காப்பகப் படுத்தப்படுகின்றன
சிலவற்றை புல்டோசர்கள் உடைத்து அழிக்கின்றன!

தடுப்புக்காவலுக்கு குற்றச்சாட்டு தேவையில்லாத போது
உண்மைக்கு அனுமதி தேவைப்படும் போது
முரண்பாடு நீக்க மறப்பதைக் கோரும்போது
இதுதான் சுதந்திரமா? நெஞ்சு வலிக்கிறது!

ஆனாலும் நாங்கள் சகித்துக் கொள்கிறோம்.
சங்கிலிகள் உடைந்து விட்டதால் அல்ல
நாம் மரத்துப் போக மறுப்பதால்
நாம் நினைவுகூர்ந்து தினம் வாழ்வதால்!

நிலம் திரும்பக் கொடுக்கப்படும் நாள் எதுவோ
காணாமல் போனவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படும் நாள் எதுவோ
நினைவுகூறல் குற்றமல்ல என்று சொல்லப்படும் நாள் எதுவோ
அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்!

எல்லோரும் சட்டத்தின்முன் சமமான நாள் எதுவோ
அதிகாரம் வழிவிட்டு விலகிய நாள் எதுவோ
தொல்லியல் ஆயுதம் ஒழிந்த நாள் எதுவோ
நம்பிக்கை பலத்தால் திணிக்கப்படாத நாள் எதுவோ
அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்!

அதுவரை, இந்தநாளை பட்டாசுகளால் அல்ல
கேள்விகளால் தைரியத்துடன் நாம் புறக்கணிப்போம்
சுதந்திரத்திற்கான முடிக்கப் படாத கோரிக்கையுடன்
கருத்தக் கொடிகளை ஏற்றி வெளிப்படுத்துவோம்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

சுதந்திரம்: இன்னும் சமத்துவமற்ற ஒரு வாக்குறுதி (இலங்கை, 2026)

பிப்ரவரி 4 ஆம் தேதி, இலங்கை சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. கொடிகள் பறக்கின்றன, உரைகள் எதிரொலிக்கின்றன, வரலாறு ஒத்திகை பார்க்கப்படுகிறது. இருப்பினும், பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களுக்கு - சுதந்திரம் என்பது ஒரு வாழும் யதார்த்தமாக இல்லாமல் ஒரு அரசியலமைப்பு அறிக்கையாகவே உள்ளது.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் கடந்த போதிலும், இன அடிப்படையிலான பாகுபாடு, சட்டத்தின் இரட்டை அளவுகோல்,பாதுகாப்பு பெயரில் அடக்குமுறை இன்னும் தொடர்கிறது.

நாடு அதிகாரப்பூர்வமாக இறையாண்மை கொண்டதாக இருந்தாலும், கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியால் வரையறுக்கப்படும் உண்மையான சுதந்திரம் - இன்னும் சமமற்ற முறையில் இனங்களுக்கிடையில் விநியோகிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களைப் பொறுத்தவரை, போருக்குப் பிந்தைய யதார்த்தம் பின்வருவனவற்றால் குறிக்கப்படுகிறது:

இராணுவம் அன்றாட வாழ்வில் தலையிடுகிறது

தொல்பொருள் என்ற பெயரில் நிலங்கள் பறிக்கப்படுகின்றன

இந்து ஆலயங்கள் மற்றும் கலாச்சார இடங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கின்றி நீண்டகால தடுப்புக்காவல்கள்

நினைவேந்தல் மற்றும் கருத்து வேறுபாடுகளை கண்காணித்தல், தடைகள் போடுதல்.

போர்க்கால அட்டூழியங்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறல் இல்லாமை, நீதி வழங்காமை

நல்லிணக்கம் பெரும்பாலும் பேசப்படுகிறது, ஆனால் அரிதாகவே நேர்மையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே மறக்கச் சொல்கிறது. அதே நேரத்தில் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பதிவு
உயர்வு கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை மௌனம் ஆக்குகிறார்கள். நினைவுகூர்தல் குற்றமாக்கப்படுகிறது, ஆனால் மறுப்பு அதிகாரப்பூர்வமாக்கப்படுகிறது.

அதாவது, இறந்தவர்களை நினைவுகூருவது, உண்மையை பேசுவது அல்லது ஆதாரங்களை சேகரிப்பது சட்டவிரோதமானதாகவோ, தேசத்துரோகமாகவோ கருதப்பட்டு, அதைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது சிறைபிடிக்கப் படுகிறார்கள். அதே நேரத்தில், நடந்த கொடுமைகள், இனப்படுகொலை அல்லது வன்முறையை அரசு நிறுவனங்கள், அரசமைப்பு, அதிகாரிகள் அல்லது வரலாற்றாசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக மறுக்கிறார்கள். அதாவது "அப்படி ஒன்றும் நடக்கவில்லை" அல்லது "நடந்தது சரிதான்" என்று அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் செய்கின்றன. இது கொடுமையிலும் கொடுமை இல்லையா ? அதுவும் புத்தரை வழிபாடுபவர்களால்??

தீவு முழுவதும் ஆட்சியை ஊழல் தொடர்ந்து அரித்து வருகிறது. ஊழல் பொதுவாக ஒரு இனத்துக்கே உரியது அல்ல — என்றாலும் சட்டத்தின் ஆட்சி நீதியை நோக்கி அல்ல, அதிகாரத்தை நோக்கி சாய்கிறது. அத்தகைய சூழலில், அதன் விளைவுகள் சிறுபான்மையினரை அதிகமாக நசுக்குகின்றன.

சுதந்திரம் என்பது காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.

அதாவது உண்மையான சுதந்திரம் என்பது:

பயமில்லா, பாகுபாடு இல்லா வாழ்வு

இராணுவமயமாக்கப்பட்ட தேசியவாதமோ அல்லது மத தீவிரவாதமோ இல்லா வாழ்வு

சமச்சீர் சட்டம்

நிலம், மொழி, பண்பாடு பாதுகாப்பு

பொய்மைப்படுத்தப் படாத உண்மை வரலாறு

நீதி மற்றும் பொறுப்பு

ஒரு தேசம் அதன் காயங்களை அமைதிப்படுத்துவதன் மூலம் குணப்படுத்த முடியாது.

எனவே, இவை இல்லாமல், சுதந்திர தினம் ஒரு விழா மட்டுமே— விடுதலை அல்ல.

உண்மையான சுதந்திரம் எப்போது வரும் என்றால் :

சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம்

நிலம் திருப்பித் தரப்படுகிறது, மறுபெயரிடப்படவில்லை

வரலாறு உண்மையாகச் சொல்லுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அல்ல

பன்முகத்தன்மை பாதுகாக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படவில்லை

நீதி என்பது மறுசீரமைப்பானது, செயல்பாட்டுக்குரியது (நாடகத்தனமானது) அல்ல.

அதாவது, நீதி என்பது குற்றவாளியைத் தண்டிப்பதோடு நின்றுவிடாமல், பாதிக்கப்பட்டவரின் இழப்பைச் சரிசெய்து (Repair), சமூகத்தில் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் (Restore). இது ஏனோதானோவென்று பெயரளவில் தண்டனை வழங்கி, நாடகம் ஆடுவது (Performative) போல இருக்கக் கூடாது.

அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - அது ஒரு முடிக்கப்படாத பயணத்தின் நினைவூட்டலாகும்.

சுதந்திரம் மரபுரிமையாக இல்லை. இது கட்டமைக்கப்படுகிறது - தைரியம், உண்மை மற்றும் கூட்டு பொறுப்புக்கூறல் மூலம்.

"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே
உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்
எங்கே பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!

[இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு / கீதாஞ்சலியில் இருந்து]

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

“Independence, Still Deferred” (04.02.2026)

Seventy-eight years since the flag was raised,
Yet some hands still tremble to lift their heads.
Freedom arrived dressed in ceremony,
But justice stayed locked outside the gate.

They say we are free—
Free to vote, free to sing an anthem,
Free to remember only what is permitted,
Free to forget what still bleeds.

In the North, the land remembers footprints
Of those who never returned.
Fields guarded by guns,
Shrines renamed, histories relabelled,
Bones buried beneath “development”.

A language spoken softly to avoid suspicion,
A memory treated as sedition,
A question answered with surveillance,
A protest met by silence—or prison.

Women still carry wars in their bodies,
Children inherit checkpoints instead of playgrounds.
Students learn early the geography of fear,
And the curriculum of obedience.

The law promises equality,
But justice speaks different tongues.
Some graves are investigated,
Some are archived,
Some are erased by bulldozers at dawn.

Is this independence—
When detention needs no charge,
When truth needs permission,
When reconciliation demands forgetting?

Yet still, we endure.
Not because the chains are gone,
But because we refuse to become numb.

Independence is not a date.
It is the day land is returned,
The day the disappeared are named,
The day memory is not a crime.

It is the day Tamil, Sinhala, Muslim
Stand equal before law—not power.
The day archaeology stops being a weapon,
The day faith is not enforced by force.

Until then,
We mark this day not with fireworks,
But with questions,
With courage,
With an unfinished demand for freedom.

[Kandiah Thillaivinayagalingam
Athiady, Jaffna]

Independence: A Promise Still Unequal (Sri Lanka, 2026)

On the 4th of February, Sri Lanka celebrates independence. Flags rise, speeches echo, and history is rehearsed. Yet for many—particularly Tamil-speaking communities—independence remains a constitutional statement rather than a lived reality.

Seventy-eight years after the end of British rule, Sri Lanka continues to struggle with structural injustice, selective law enforcement, and ethnic majoritarianism. While the country is officially sovereign, true freedom—defined by dignity, equality, and justice—remains unevenly distributed.

For Tamils in the North and East, the post-war reality is marked by:

Militarisation of civilian life

Land appropriation under archaeology and security narratives

Encroachment on Hindu temples and cultural spaces

Prolonged detentions under the Prevention of Terrorism Act

Surveillance of memorialisation and dissent

Absence of accountability for wartime atrocities

Reconciliation is often spoken of, but rarely practised with sincerity. Victims are asked to forget, while perpetrators are promoted. Memory is criminalised, while denial is institutionalised.

Corruption continues to corrode governance across the island. From daily bribery to elite impunity, the rule of law bends not toward justice, but toward power. In such an environment, minorities suffer disproportionately, lacking both protection and political leverage.

Independence must mean more than independence from colonial rulers.

It must mean freedom from:

Fear

Discrimination

Militarised nationalism

Religious extremism

Historical falsification

A nation cannot heal by silencing its wounds.

True independence will arrive only when:

All citizens are equal before the law

Land is returned, not renamed

History is told truthfully, not selectively

Diversity is protected, not controlled

Justice is restorative, not performative

Until then, February 4th is not merely a celebration—it is a reminder of an unfinished journey.

Independence is not inherited.
It is built—through courage, truth, and collective accountability.

"Where the mind is without fear and the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake"

[Gitanjali / Rabindranath Tagore]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

துளி/DROP: 2014 [“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026)

https://www.facebook.com/groups/978753388866632/posts/33625230760458806/?

"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" / "Independence is not just a flag or a date"

2 weeks 5 days ago

"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"

காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது:

பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா?
நீதி சமமானதா?
நிலம் திருப்பித் தரப்படுகிறதா?
நினைவு கூறல் ஒரு குற்றமா?

பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு -

சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது,
நீதி தாமதமாகிறது,
மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது.

உண்மையான சுதந்திரம் தொடங்குவது:

உண்மை அடக்கப்படாதபோது,
சட்டம் ஆயுதமாகாதபோது,
பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது.

அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல -

நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல்.

— கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்

"Independence is not just a flag or a date"

78 years after colonial rule, Sri Lanka is still asking hard questions:

Are women safe?
Are children free from fear?
Is justice equal?
Is land returned?
Is memory a crime?

For many—especially Tamil-speaking people—

freedom remains selective,
justice delayed, and
reconciliation conditional.

True independence begins when:

truth is not silenced,
law is not weaponised,
and every citizen lives without fear.

Until then, February 4th is not just a celebration—

it is a reminder of unfinished freedom.

— Kandiah Thillaivinayagalingam
Athiady, Jaffna

துளி/DROP: 2012 ["சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"]

https://www.facebook.com/groups/978753388866632/posts/33616508844664331/?

உதவி தேவை: கல்லுண்டாய்வெளி & தொண்டைமானாற்றில் பறந்த புலிகளின் வானூர்தி பற்றிய தகவல்கள்

4 weeks ago

உறவுகளே வணக்கம்,

கல்லுண்டாய்வெளி மற்றும் தொண்டைமானாற்றில் பறந்த புலிகளின் வானூர்தி பற்றி நேரில் கண்டிருந்தாலோ அல்லது கேள்வியுற்றிருந்தாலோ அது தொடர்பில் தெரிந்த தகவல்களை பதிவிட்டு (அறிந்தவர்களிடம் கேட்டாவது) வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இராவணனின் புட்பக விமானம் போல வான்புலிகளின் வானூர்திக் கதைகள் இருக்கப்படாது. புலிகளைப் போன்றே அவர்தம் வரலாறுகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.

புலிகளின் இரண்டாவது உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | வானில் பறந்த முதல் வான்கலம்

4 weeks ago

இது கேணல் சங்கர் அவர்களின் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட கொச்சு இலகு வானூர்தி (Micro Light Aircraft) வகையைச் சேர்ந்த ஒரு வகையான வான்கலம் (சரியான வடிவம் என்னவென்று தெரியவில்லை.) ஆகும். இதுதான் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டு வானில் பறந்த முதலாவது வான்கலமும் ஆகும். இது 1980களின் இரண்டாம் பாகத்தில் (சரியான திகதி அறியில்லை. கூடுதலாக 86,87 காலமாக இருக்கலாம்) வானில் பறந்தது. இதற்கான புளூ பிரின்ட் எந்தவொரு நாட்டிடமும் இருந்து புலிகள் பெறவில்லை. முற்றிலும் உள்ளூரிலேயே கிடைக்கத்தக்க மூலப்பொருட்களையும் சொந்த அறிவினையும் கொண்டு உருவாக்கியிருந்தனர்.

இதற்கான புளூ பிரின்ட் எந்தவொரு நாட்டிடமும் இருந்து புலிகள் பெறவில்லை. முற்றிலும் உள்ளூரிலேயே கிடைக்கத்தக்க மூலப்பொருட்களையும் சொந்த அறிவினையும் கொண்டு உருவாக்கியிருந்தனர். இதில் வானோடி உட்பட ஒருவர் மட்டுமே அமரலாம்.

வான்கலத்திற்கான பொறியாக ஒரு பழைய உந்துருளியின் பொறி கழற்றி எடுக்கப்பட்டு பாவிக்கப்பட்டது. வான்கலத்தை தயாரிப்பதற்கான பொருட்களாக உடைந்த ஊர்திகளிலிருந்து எடுக்கக்கூடிய அலுமினியத் தகடுகள், குழாய்கள், மற்றும் மரப்பலகைகள் பாவிக்கப்பட்டதாக அறியக்கூடியதாக உள்ளது.

வசதிகள் கொண்ட சரியான தொழிற்சாலைக் கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் சிறிய பண்ணுறத்தகம் (garage) போன்ற கொட்டிலுக்குள் வைத்தே இவ்வான்கலத்தை கேணல் சங்கர் தலைமையில் புலிகள் வடிவமைத்தனர். இது தொண்டைமானாற்றில் அமைந்திருந்தது. அவருடைய இம்முயற்சிக்கு உள்ளூர் தச்சர்களும் கொல்லர்களும் உதவி நல்கியிருந்தனர்.

இவர்களின் இம்முயற்சியைக் கண்ட தமிழ் பொதுமக்களில் சிலர் "சாப்பாட்டிற்கே வழியில்லை, என்னத்துக்கடா இங்க விமானம்" என்றும் ஏளனமும் செய்தனர். எனினும் இதற்கெல்லாம் மனச்சோர்வடையாமல் புலிவீரர்கள் முதல் வான்கலத்தை செய்யும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றி கண்டனர். ஓம், புலிகளின் முதல் பறக்கத்தக்க வான்கலம் இங்குதான் உருவாகியது.

இங்கு உருவாகிய வான்கலமானது தொண்டைமானாறு உப்பளவெளியிற்கு அருகிலிருந்த ஓர் மண்பாங்கான தெருவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதல் முயற்சியிலேயே உருவாகிய இவ்வானூர்தி அம்மண் தெருவில் ஓடி எழும்பியது. ஒரு தென்னைமரமளவு உயரத்திற்கு எழும்பிவிட்டு மீண்டும் கீழிறங்கியது. இதுவே புலிகளின் முதல் வானூர்தியாக முதல் பறப்பாக வரலாற்றில் பதிவானது.

ஆதாரம்: வானத்தை வென்ற தமிழர்கள் ல் ஈழத்தில் கண்டுபிடித்த முதல் விமானம், IBC Tamil

புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்

4 weeks ago

புலிகளின் முதல் விமானம்

Friday, February 06, 2009

எழுத்தாளர்: சாத்திரியார்

அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இருக்கவே புலிகள் முதலில் செய்த விமானம் பற்றிய விபரத்தினையும். ரெலோ அமைப்பு விமானங்கள் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பதனையும் தெளிவு படுத்தவே எனது இந்தப்பதிவாகும்.

1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப் பகுதிகளெல்லாம் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. (ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) எல்லாம் இங்கு தயாரிக்கப்படும்.

அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்பு குட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக இருந்தார்..ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில் விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை.

இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும்.

ஆனால் 1985ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட ரெலோ இயக்கம் விமானம் செய்வதானால் அதே யாழ்குடாநாட்டில்தான் செய்திருக்கவேண்டும். ஏனெனில் இந்தியாவில் செய்யமுடியாது அப்படியொரு முயற்சியை இந்திய அரசு விரும்பாது. அப்படி யாழ்குடாநாட்டில் செய்திருந்தாலும் விமானம் பறப்பு முயற்சிகளை மேற்கொள்வதங்கு உகந்ததாக நேரான பாதையும் மரங்கள் வீடுகளற்றதொரு வெளியான இடம் யாழ் குடாவில் மூன்றுதானிருந்தது அதில் ஒன்று வல்லைவெளி இங்கு அருகிலேயே தொண்டைமானாறு இராணுவ முகாம் இருந்ததாலும் மற்றும் இந்தவீதி வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் முக்கியமானதொரு வீதி என்பதால் வாகனப்போக்குவரத்துக்கள் அதிகம். எனவே இங்கு விமானத்தை பரீட்சிக்கமுடியாது. அடுத்தது கோப்பாய் சாவகச்சேரி வீதியில் வரும் கோப்பாய் வெளி இதற்கருகிலும் நாவற்குழி இராணுவ முகாம் இருந்தது. அடுத்ததாக புலிகள் விமானத்தினை பரீட்சித்த கல்லுண்டாய் வெளியாகும். இங்கும் ரொலே எவ்வித விமானப் பறப்பு முயற்சியும் மேற்கொள்ளவில்லை..அப்படியானால் ரெலோ விமானத்தை எங்கு செய்தது எங்கு பரீட்சித்தது??? அப்படியானால் ரெலோ விமானவடிவில் கடதாசியில் பட்டம் செய்து விட்டுப்பார்த்திருக்கலாம்.

அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.அட எதுக்கு இவ்வளவு சிரமப்படுவான் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய ரெலோ அமைப்பின் தலைவராகவும் பாராழுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன் - selvamtelo@yahoo.com அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு மேலும் யாராவது வந்து ரெலோ செய்த விமானத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று அடம்பிடித்தால் என்லை முடியலை முடியலை

மேலதிகமாக சில விபரங்கள். அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் ஆயுதத்தெழிற்சாலையில் நான் பழகிய போராளிகளான. முத்து.முகுந்தன்.வெள்ளைப்பிறேம்.கொன்னைப்பிறேம்.பாரத்.சுபாஸ்.சுதா. ஆகியோர் இந்திய இராணுவத்துடனான மேதலில் இறந்துவிட்டார்கள்.குட்டி சிறி கிட்டுவுடன் வங்கக்கடலில்வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப்பட்டான்.அந்த முகாமை நிருவகித்த அப்பையா அண்ணை யாழ் இடப்பெயர்வின்பொழுது ஈ.பி.டி.பியினரால் கடத்திக்கொண்டுபோய் கொல்லப்பட்டார்.மானிப்பாய் அரசியல்துறை பொறுப்பாளராயிருந்த மயூரன் மற்றும் பாலா கண்ணன் சத்தியா .ஆகியோர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.


https://sathirir.blogspot.com/2009/02/blog-post_4579.html?m=1


அநீதிக்குப் பிரபலமான நாடு - குமாரபுரம் படுகொலை

4 weeks 1 day ago

அநீதிக்குப் பிரபலமான நாடு

DJI_0353-780x470.jpg

படுகொலை செய்யப்பட்ட தனது கணவனின் படத்தோடு நடராசா தவமணி (69)

கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு வீதியில் அமைந்திருக்கிறது குமாரபுரம் கிராமம். பல தலைமுறைகளாகத் தமிழர்கள் வாழும் இக்கிராமத்தைச் சூழ பரந்த வயல்வெளிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்த வயலை நம்பியே அக்கிராமத்தவர்களின் பொருளாதாரம் தங்கியுள்ளது. இத்தகைய கிராமமானது 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மிகப்பெரிய படுகொலையைச் சந்தித்தது. இலங்கை அரச படைகளும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட  26 பேர் படுகொலைசெய்யப்பட்டனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.

தற்போது குமாரபுரத்தில் வசிக்கும் நடராசா தவமணி (69) படுகொலையின் நேரடி சாட்சியாவார். அவரின் கணவர் நடராசா இப்படுகொலை சம்வத்தின்போது கொல்லப்பட்டதிலிருந்து தவமணி தன் மகனோடு தனியே வசித்துவருகிறார்.

”நாங்க தொண்ணூத்தைஞ்சில கலியாணம் முடிச்சம். எட்டு மாச வாழ்க்கதான். வயித்திள இருந்த புள்ள பொற்ற முதலே வாழ்க்கையே பேயிற்று” தவமணி தன்னை இப்படித்தான் அறிமுகம் செய்கிறார்.

1996 ஆம் ஆண்டு ரெண்டாம் மாசம் 11 ஆம் திகதி. நாங்க வீட்டுக்குள்ளதான் இருந்தனாங்க. றோட்டில நிறைய வெடி சத்தங்கள் கேட்டது. நாங்க பயத்தில வீட்டுக்க வந்து இருந்தனாங்க. நிறைய ராணுவம் ஊருக்க வந்திற்று. அங்கால ஏதோ சம்பவம் நடந்ததாம் எண்டு, தெகிவத்த, அம்பத்தெட்டு, கிளிவெட்டி இடங்களில இருந்த எல்லா இராணுவமும் எங்கட ஊருக்குள்ள புகுந்து சுட்டது.

நாங்க எங்கட வீட்டில இருக்கல்ல. பயந்து பக்கத்து வீட்டில தான் இருந்தனாங்க. அங்க வந்த ஆமிக்காரர் ஜன்னல், கதவுகள உடைச்சு சுட்டதில எங்கட அவருக்கு (கணவர்) வெடிபட்டிற்று.  அந்த வீட்டுக்கார அக்காவுக்கும் வெடி பட்டிற்று. அங்க பதுங்கியிருந்த இன்னொரு பிள்ளைக்கும் வெடி பட்டிற்று. அங்க இருந்த ரெண்டு பேருக்கு வெடி படல்ல.

கதவ உடைச்சி சுட்டதில எங்கட அவருக்கு வயித்தில வெடிபட்டிற்று. மற்ற அக்காவுக்கு ஜன்னலுக்கால சுட்டதில நெத்தியில வெடி பட்டிற்று.

அங்கா ஒரு வீட்டுக்குள்ள ஏழு பேர சுட்டிருக்கானுவ. அதில ரெண்டு புள்ளத்தாச்சிகள் (கர்ப்பிணித்தாய்மார்) செத்தது. அதில ஒரு புள்ளைக்கு 16 ஆம் திகதி புள்ள பொறக்கிற நாள். 11ஆம் திகதி சுட்டிற்றானுவ.

ஒருத்தரையும் வெளியில வைச்சு சுடல்ல. எல்லாரையும் வீட்டுக்க வைச்சித்தான் சுட்டானுவ.

ஐஞ்சு மணி இருக்கும் தொடங்கி இரவு எட்டு மணி வரைக்கும் வெடி மயமாத்தான் கிடந்த அதுக்குள்ள. ஒருத்தரும் வெளிய வந்துக்க ஏலாது. பொறவு விடிஞ்சுதான் தெரியும், எங்க வீட்ட மட்டுமில்ல எல்லார்ட வீட்டயும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கெண்டு. அங்க ஒரு புள்ளையையும் (சிறுமி) கற்பழிச்சிக் கொன்றிருந்தானுவ.

முதல் பொடிய கொண்டு போக வேணாம் எண்டு வெள்ளக்காரங்க சொன்னவங்க. பிறகு மூதூருக்கு பொடிய கொண்டுபோய் அங்க வைச்சி தந்தவங்க. புதன் கிழமதான் பொடி தாட்டம் (சடலம் புதைப்பது).

அதில 26 பேருக்கு வெடிபட்டு செத்தவங்க. 24 பேருக்கு காயம். இங்கத்தய ஆக்கள் மட்டுமில்லா கிளிவெட்டி, 58, மேங்காமம் ஆக்களுக்கும் எங்கட ஊருக்குள்ள வந்த இடத்தில செத்தாங்க. சின்னப்புள்ளயள், புள்ளத்தாச்சிப் பொம்பிளகள் என்று எல்லாரையும் சுட்டுக்கொன்றானுவ.

முதல்ல மூதூர்ல வழக்கு நடந்தது. பொறவு ரிங்கோவுக்கு (திருக்கோணமலை) போட்டவங்க. ரிங்கோவுலயும் பத்தொன்பது தரம் வழக்கு நடந்தது. ஒரு முடிவும் இல்ல. பொறவு அன்ராதபுரத்துக்கு போட்டு, அங்க போன்னாங்க. அங்கயும் எங்களுக்கு எதுவுமான முடிவும் வரல. இதுவரைக்கும் எந்த முடிவுமில்ல. நாங்களும் ஒவ்வொரு வருசமும் அந்த நினைவுநாளத்தான் செய்துவாறம். செய்யக்குல்ல எல்லாரும் வருவாங்க. வாறவங்களிட்ட இதுக்கு ஒரு தீர்வெடுத்துத் தரச்சொல்லித்தான் கேட்கம். அதுக்காகத்தான் எவ்வளவு கஸ்ரத்திலயும் நினைவு நாள செய்துவாறம்.

படுகொலை சம்பவத்தின்போது படுகாயமடைந்து தப்பித்தவர்களின் ஒருவரான அரசரட்ணம் நாகராசா (74) தவமணி வசிக்கும் அதே கிராமத்தின் முனையில் வசிக்கிறார். பார்வையற்றிருக்கும் அவரிடமும் வலி மிகுந்த அனுபவங்கள் உண்டு.

ஆயிரத்தி தொளாயிரத்தி தொன்னூற்றி ஆறாம் ஆண்டு, ரெண்டாம் மாசம் பதினொராம் திகதி. அன்றைக்கு நாங்க ஒரு பதினாலு பேர் வெள்ளாம வெட்ட கூலிக்குப் போயிந்தம். முன்று மணியப் போல எங்கட வேலை முடியப்போகுது. குளிப்பமெண்டு கரப்புறப்படக்குள்ள வெடிச்சத்தம் கேட்குது. நேரத்தோட போறவாற ஆடிக்காரர் கொக்குக்குங் குருவிக்கும் சுடுறது. அப்பிடித்தான் நான் நினைச்சிருந்தன். ஆனா அன்றைக்கு வெடிச்சம்கூடக் கேட்குது. நான் எங்கட வீட்டுக்கு ஓடியந்திற்றன். மற்றாக்களும் தங்கட வீடுகளுக்கு ஓடித்தாங்க. வீட்ட வந்தாலும், ஊரைச் சுத்தி வெடிச்சத்தம் கேட்குது. அந்த நேரம் எங்கட வீட்டயும் ஆக்கள் ஓடிவாறாங்க.

படாரென்று எனக்கு கன்னத்துக்கு மேல மழைத்துளி பட்டமாதிரி இருந்தது. அதோட என்ர கண் வெட்டைக்குவந்திற்று (வெளியே வந்துவிட்டது). என்ர மகன் பிடிச்சிற்றான். ஆனால் எனக்கு அறிவுகெடல்ல. என்னைக் கடந்து போயிற்றானுவ. எல்லா வீட்டலயும் வெடி. சவமும், காயப்பட்டாக்களும் கிடக்கு. வந்து பார்க்கிறதுக்கு ஒரு மனுசங்கிடையாது. வரையுமேலாது. விடயுமில்ல அவங்க.

காயப்பட்டவுடன என்னையத் தூக்கிக்கொண்டு ஓடக்குள்ள என்ர பெஞ்சாதிக்கும் வயித்தில வெடிபட்டிற்று. மகனுக்கும் காலில வெடி. இருவத்தாறு தையல். அந்த நேரம் எட்டுவயது அவனுக்கு.

பொறவு அடுத்தநாள் ஒரு ஏழு மணியிருக்கும். பஸ்ஸில ஆசுபத்திரிக்கு ஏத்திப்போனானுவ. திருக்கோணமலையில இந்தக் கண்ணுக்கு பக்கத்தில் விறைப்பூசி அடிவங்க. அந்த விறைப்பு இன்னும் மாறல்ல. பொறவு கண்டி ஆசுபத்திரியில பதிமூனு நாள் கிடந்தன். பொறவு திருகோணமலை ஆசுபத்திரியில ஏழு நாள் கிடந்தன். என்ர கண் பிழையாபேயிற்று என்றது எனக்கே விளங்கீற்று. மற்ற கண்ணும் சரியா தெரியல்ல. இப்பிடியே ஒரு மூணு வருசம் பேயிற்று.

இதுக்கிடையில  இங்க காயப்பட்ட ஆக்களையெல்லாம் கோட்சுக்கு (நீதிமன்றம்) கொண்டுபோய் ஆமிக்காரங்கள காட்டச்சொன்னாங்வங்க. அதில எட்டுப்பேரை என்னமோ காட்டினாங்களாக்கும். அவங்களுக்கு வழங்கு நடந்துகொண்டிருக்கு. எனக்கு வழக்கென்றால் எப்பிடி என்று கூட தெரியல்ல. எனக்கு சம்மன் வரயில்ல. கண்டியில் வாய்முறைப்பாடு எடுத்த பொலிஸ்காரன் சரியா எடுக்கல்ல. சேரிட்ட கேட்டிற்று வந்து எடுக்கிறன் என்று சொன்னவன், போனவன் போனவன்தான். பொறவு வரவேயில்ல. மலையிலயும் (திருக்கோணமலை) எடுக்கல்ல.

வழக்கு மூதூர்ல இருந்து திருக்கோணமலைக்குப் போய், பொறவு அனுராதபுரம் போயும் எங்களுக்கு சார்பா தீர்ப்பு கிடைக்கல்ல. தள்ளுபடி செய்திற்றாங்க.

சனங்களுக்கு இதுக்கு அலைஞ்சு சீ (சலித்துப்போயிற்று) என்று பேயிற்கு. இதுக்கு ஒரு ஞாயத்தை (நீதி) யார் தாறது?

பார்வையை இழந்து அல்லற்படும் நாகராசாவின் கேள்விக்கு இலங்கை அரசிடம்கூட பதில் இல்லை.

குறிப்பு – இப்படுகொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் மூதூர் நீதவான் நீதிமன்றத்திலும், திருகோணமலை நீதிமன்றத்திலும் இடம்பெற்றன. போர்ச்சூழல் காரணமாக சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பில்லை எனத் தெரிவித்து, வழக்கானது 2013ஆம் ஆண்டில் அனுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2016ஆம் ஆண்டு  ஜீலை மாதம் 27ஆம் திகதி பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்குப் போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து, குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டிருந்த இராணுவததினர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

https://nenarrative.com/அநீத்கு-பிரபலமான-நாடு/

கீரிமலை - தமிழர் மரபுரிமை சுற்றுலா

4 weeks 2 days ago

தமிழர் மரபுரிமை சுற்றுலா

DJI_0424-780x470.jpg

கட்டுரை மற்றும் படம்| North East Narrative

நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன.

மரபுரிமைகள் என்ன செய்யும்?

இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைக் கடத்தும் பணியை செவ்வனே செய்கின்றன. குறித்தவொரு பிராந்தியத்தின் வாழும் மக்களின் தனித்துவமான அடையாளக்கூறுகளைக் கட்டிக்காக்கின்றன. இனம்சார் உணர்வு மேலிடவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்தவொரு மரபுரிமைச் சின்னம் காணப்படுகின்ற பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை விருத்தியடையவும், அதன்விளைவாக அப்பிராந்தியத்தின் வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகள் உலகத்தவர்களுக்கு எடுத்துச்செல்லப்படவும், பொருளாதாரம் மேம்படவும் உதவுகின்றன.

ஈழத்தமிழர் மரபுரிமைகள் எத்தகையன?

இலங்கையின் வடக்கு கிழக்கு பாகங்களில் வாழுகின்ற ஈழத்தமிழர்களிடம் இருக்கின்ற மரபுரிமைகளை எந்த வகைக்குள் உள்ளடக்குவது என்கிற கேள்வி எழுவது இயல்பானது. இப்பிராந்தியத்தில் போரில் அழிக்கப்பட்டவைபோக, தற்போது எஞ்சியிருக்கின்ற மரபுரிமைகளுக்குள் அனேகமானவை பண்பாட்டு மரபுரிமைகள் (Cultural Heritage) என்கிற வகையறாவுக்குள்ளேயே உள்ளடக்கத்தக்கவை. அவற்றுள் தொட்டுணரக்கூடியவையும், தொட்டுணரமுடியாதவையும் அடங்கும்.

அண்மையில், சர்வதேச சுற்றுலாப் பயணங்களுக்கான விபரிப்பு சஞ்சிகையான Lonely Planet இவ்வருடத்தில் (2026) சுற்றுலாப் பயணிகள் உலகளவில் பயணம் செய்வதற்கெனத் தெரிவுசெய்யக்கூடிய சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நகரத்தைத் தெரிவுசெய்திருந்தது. அச்சஞ்சிகையில், யாழ்.நகரானது தமிழ் கலாசார விழுமியங்களைக் கற்க விரும்புபவர்களுக்குப் பொருத்தமான நகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தொடர்பான பார்வையில் இப்படியோர் அடையாளத்தைப் பிடித்திருக்கும் யாழ்ப்பாணத்தைத் தமிழர் பண்பாட்டு மரபுரிமைசார் இடமாகக் காட்டுவது எப்படி என்பதற்கான எழுத்துவடிவிலான சுற்றுலா வழிகாட்டியாக இந்தக் கட்டுரைத்தொடர் அமையும்.

கீரிமலை

யாழ்.குடாநாட்டில் இருக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு மரபுரிமை மையங்களில் கீரிமலையும் ஒன்றாகும்.  யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே 19 கிலோமீற்றர்கள் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஆழமற்ற, சுண்ணக்கற்பாறைகளால் சூழ்ந்த அழகிய கடற்கரையும்,  யாழ்ப்பாண பாரம்பரிய கட்டடக் கலைமரபில் அமைந்த கட்டடங்களும் இந்தக் கிராமத்திற்கு எல்லையிட்டு நிற்கின்றன.

கீரிமலையை அடைவதற்கான இலகு பயணம்

யாழ்ப்பாண நகர மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இக்கிராமத்திற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் மூலமாகப் பயணம் செய்யலாம். அதேபோல தனியார் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் பயணிக்கலாம். அரச, தனியார் பேரூந்துகளின் கட்டணம் 200 ரூபாவுக்குட்பட்டதாகவும், முச்சக்கரவண்டிகளின் கட்டணம் 2500 ரூபாவுக்குட்பட்டதாகவும் காணப்படும். யாழ்.நகரிலிருந்து புறப்பட்டால் 45 நிமிட நேரத்திற்குள் இவ்விடத்தினை அடையலாம்.

கீரிமலையில் பார்க்கவேண்டிய இடங்கள்

கீரிமலையின் என்கிற இந்தக் கடற்கரை கிராமத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானது நகுலேச்சரம் சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள மிகத் தொன்மையான ஐந்து சிவன் கோயில்களில் ஒன்றாக நகுலேச்சரம் காணப்படுகின்றது. இக்கோயிலின் வரலாறானது இராமயணக் காலத்திலிருந்தே ஆரம்பிப்பதாகக் குறிப்புகள் உண்டு. இறந்தோருக்கான பிதிர்க்கடன் ஆற்றுவதற்குப் பிரசித்தி பெற்ற  நகுலேச்சர கோயிலின் உருவாக்கம் தொடர்பில் ஐதீகக் கதையொன்று உண்டு.

15ஆம் நூற்றாண்டில் இலங்கையைத் தம் காலனியாத்திக்கத்தின் கீழ் வைத்திருந்த போத்துக்கேயர்கள் மிகத் தொன்மையான இக்கோயிலை முதலில் அழித்தனர். பின்னர் ஆறுமுகநாவலர் எடுத்த முயற்சியின் பலனாக 1894 ஆம் ஆண்டில் மீண்டும் புனருத்தானம் செய்து திறக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நகுலேச்சரம் முற்றாக சேதமடைந்தது. தற்போது மீளவும் புதுப்பொலிவுடன் கட்டியமைக்கப்பட்டு, வர்ணமிகு புதிய கோயிலாக நகுலேச்சரம் காட்சிதருகின்றது.

நகுலேச்சரத்தின் வரலாறு

முன்பொரு காலத்தில் சுதாமா எனும் முனிவர் மேரு மலையில் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரின் தவத்தை குழப்பிய குற்றத்திற்காக யமத்கினி எனும் வேடன் முனிவரின் சாபத்திற்குள்ளானார். அச்சாபத்தினால் அவர் கீரி முகம் அமையப்பெற்றார். கீரிமுகம் பெற்ற வேடன் தற்போதைய நகுலேச்சரத்தை அண்மித்த கடலில் நீராடி தன் கீரிமுகத்தை நீங்கப் பெற்றமையால் அவர் நகுல முனிவர் என அழைக்கப்பட்டார். அதனால் அந்தக் கடற்கரை கிராமத்திற்கு கீரிமலை என்றும், நகுலகிரி என்றும் பெயர்பெற்றது. பின்னாளில் நகுல முனிவர் வழிபட்ட இடம் ஆனபடியால், அங்கு அமைந்த சிவ ஆலயமும் நகுலேச்சரம் எனப் பெயர்பெற்றது.

DJI_0441-1024x576.jpg

கீரிமலை நகுலேச்சரம் கோயில்

கீரிமலை தீர்த்தக் கேணி

கீரிமலைக்கு வருகின்ற பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிகம் கவருகின்ற இடமாக நீள்வட்ட வடிவான அழகிய தீர்த்தக்கேணி காணப்படுகின்றது. எக்காலத்திலும் நீர் வற்றாத, உப்புத் தன்மையற்ற இத்தீர்த்தக்கேணியில் பகல் வேளைகளில் நீராடுவது, உடலில் உள்ள நோய்களைத் தீர்க்கும் என நம்பப்படுகின்றது.

DJI_0401-1024x576.jpg

கீரிமலை தீர்த்தக்கேணி

சிறாப்பர் மடம்

கீரிமலையில் அமைந்துள்ள சிறாப்பர்மடமானது யாழ்ப்பாணத்து பாரம்பரிய சமயம்சார் கட்டடக் கலை மரபின் எச்சமாக காணப்படுகின்றது. 1870ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் கதிரவேல் என்பவர் ”நகுலேசுவர சுவாமிகள் தண்ணீர் பந்தல்” எனும் பெயரில் இம்மடத்தினை அமைத்தார். அவர் அக்காலத்தில் பிரபலமான ”சிறாப்பர்” பதவியைப் பெற்றிருந்தமையால், பின்நாட்களில் சிறாப்பர் மடம் என அழைக்கப்பட்டது. கீரிமலைக்கு வருகின்ற யாத்திரிகர்கள் தங்கிநின்று ஓய்வு எடுக்கவும், தியானம் செய்யவும், சமயத் தேவைகளுக்காகவும் இந்த மடம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதுபோல கீரிமலையை அண்மித்த பகுதிகளில் 13 மடங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. அவை அனைத்தும் இன்று அழிவடைந்துவிட்டன. சிறாப்பர் மடமும் போர்க்காலத்தில் மோசமாக சிதைவடைந்த போதிலும், அதன் கட்டட அமைப்பை இப்போதும் பார்வையிடலாம்.

மன அமைதி தரும் தியான மண்டபம்

கீரிமலையின் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மண்டபம் தியானம் செய்வதற்கு மிகப் பொருத்தமான இடமாகும். வெளிநாட்டுப் பயணிகளும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை வேளையில் இந்த மண்டபத்திற்கு வருகைதந்து, மெல்லிய கடல் அலையின் ஓசையைக் கேட்படி மனதுக்கு அமைதி தரும் தியானத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் தியான மண்டபமும், தியானம் மேற்கொள்வதற்கான கோயிலும் கீரிமலையில் அமைக்கப்பட்டுள்ளது.

DJI_0400-1024x576.jpg

கீரிமலை கடற்கரையில் அமைந்துள்ள யாத்திரிகர்களுக்கான மண்டபம்

கீரிமலையில் பார்க்கக்கூடிய சடங்கு

கீரிமலை ஆலயச்சூழலில் இறந்தோர்க்கு பிதிர்க்கடன் செய்யும் வகையிலான சடங்குகளும் இடம்பெறும். அதிகாலை 3 மணி தொடக்கம் சூரிய உதயம் நிகழும் வரைக்கும் இந்தச் சடங்கினைப் பார்க்க முடியும். சைவ சமயத்தைப் பின்பற்றுகின்ற தமிழ் மக்கள் தம் குடும்பத்தில் இறந்த ஒருவரின் 16ஆம் நாள் கீரிமலைக்கு அதிகாலை வேளை வருகைதந்து, சமய முறைப்படி, இறந்தவர் குறித்த சடங்குகளைச் செய்வதோடு, இறந்தவரை எரித்த பின் எஞ்சிய சாம்பலையும் அக்கடலில் கரைத்துச் செல்வர்.

இதனைவிட இறந்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இடம்பெறும் ஆடி ஆமாவாசை வழிபாட்டு நிகழ்வுகளும் இங்கு சிறப்பாக இடம்பெறும். நாடு முழுவதுமிருந்து பெருமளவிலான பக்தர்கள் இவ்விடத்திற்கு வருகைதந்து சடங்குகளைச் செய்வர்.

உணவு மற்றும் தங்குமிடம்

கீரிமலைக்கு அண்மித்த தெல்லிப்பளை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் அதிகளவான தங்ககங்கள் உள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்தின் உணவுகளைப் பரிமாறும் உணவகங்களும் கீரிமலைக்குப் பயணிக்கும் சாலை ஓரங்களில் உள்ளன. கீரிமலையில் ”அம்மாச்சி உணவகம்” என அழைக்கப்படுகின்ற மலிவு விலை பாரம்பரிய உணவகமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த உணவகத்தில் யாழ்ப்பாணத்தின் உணவுகளை சமைத்து, சுடச்சுட பெண்கள் வழங்குவர். அவ்வுணவுகளின் விலை மலிவானதாகவும் சுகாதாரமானதாகவும் காணப்படுகிறது.

இது தவிர ஞாயிற்றுக் கிழமைகளிலும், விசேட தினங்களிலும் கீரிமலையில் அமைந்துள்ள சிவபூமி அறக்கட்டளை என்கிற அமைப்புக்குரிய அன்னதான மடத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. கீரிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள்கூட குறித்த இந்த அன்னதான மடத்தில் உணவருந்தமுடியும். அன்னதானத்தைத் தாம் வழங்க விரும்பினாலும் அதனைச் செய்ய இயலும்.

முடிவாக, யாழ்ப்பாண பண்பாட்டின் மரபுரிமைகளைத் தரிசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் – மனதுக்கு அமைதியைத் தரக்கூடிய இடமொன்றைப் பார்வையிட விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவுசெய்யவேண்டிய முதன்மையிடம் கீரிமலை ஆகும்.

https://nenarrative.com/தமிழர்-பண்பாட்டு-மரபுரிம/

ஆதாரங்களின் தொகுப்பு: இருளில் இருந்து சான்றுகள்

1 month 1 week ago

என்னவென்று சொல்வது எங்கள் இனப்பெண்கள் பட்ட துன்பங்களை,

இனமானம் உயிர் என கொண்ட இனத்தை,

அவமானம் செய்து பாலியல் வன்முறை கொடுமைகள் செய்த ஶ்ரீலங்கா இராணுவ கஜவர்களின் நடத்தைகள் இவை:

இது கதையல்ல உண்மை…!

EPRLF ஆல் சித்திரவதை செய்யப்பட்ட பல்கலைக்கழக மணவர் ஒருவரின் வாக்குமூலம்

1 month 2 weeks ago

முன்னாள் யாழ்பல்கலைக் கழக மாணவர் ஒருவரின பதிவிலிருந்து…..

THUGS’ LIFE

EPRLF இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. EPRLF இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என EPRLF

இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார்.

யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து EPRLF இராணுவம் செயற்பட்டது.

EPRLF குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே EPRLF தன்னை அறிமுகப்படுத்தியது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன.

தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த EPRLF

இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது.

1988 ஆம் நடுப்பகுதில் EPRLF மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம்.

1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது.

விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர்.

விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர்.

அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன்.

பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார்.

அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன்.

மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன்.

நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் EPRLF உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.

அங்கிருந்த EPRLF உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர்.

தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த EPRLF உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார்.

மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார்.

சற்றுப் பின்னதாக இரண்டு EPRLF பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர்.

நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர்.

அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார்.

என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர்.

அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர்.

அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார்.

அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு EPRLF உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது.

யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி.

இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார்.

பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார்.

எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார்.

மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார்.

சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார்.

புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார்.

நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன்,

“உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை.

அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார்.

பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். EPRLF உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “*நல்ல தமிழ்” *மட்டும் தான் “தோழர்” பேசினார்.

வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது.

ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார்.

அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது.

மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார்.

மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன்.

சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள்.

வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார்.

எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது.

அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர்.

எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார்.

அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார்.

அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார்.

வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர்.

வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள் ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள்.

இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன்.

அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்தித்து EPRLF

செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர்.

அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன்.

* வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத்்தெருக்களில்

https://www.facebook.com/naveen.navaneethan.50

உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?

1 month 3 weeks ago

உறவுகளே,

இந்தியக் கடற்படையின் அதிரடிப்படையால் (MARCOS) குருநகர் துறைமுகம்(?) தாக்கப்பட்டது, ஒக்டோபர் 21,1987.

இதன் போது என்னமாதிரியான அழிவுகள் ஏற்பட்டன? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? ஏதேனும் படகுகள் தாக்கப்பட்டதா?

உண்மையில் அங்கு துறைமுகம் என்று சொல்லுமளவிற்கு கட்டுமானங்கள் ஏதேனும் இருந்ததா?

இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன?

வரலாற்றை ஆவணப்படுத்த உதவி செய்யுங்கள்.

நன்றி

இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்

1 month 3 weeks ago

மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.

திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி

1 month 3 weeks ago

“சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார்.

அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார்.

தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார்.

எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள்.

அந்த நாள்களில் திலீபனின் நாளில் சந்தியில் திலீபனின் படம் வைத்து பூ வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் இந்த இராணுவத் தளபதி திலீபனின் படம் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து பூ வைத்துவிட்டு செல்வார்.

எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும்

அப்பொழுது பானு அண்ணரைக் கேட்போம்

எங்களுக்கு எதிராக போராடிய இவரால் எப்படி திலீபனுக்கு பூ வைக்க முடிகிறது என்று

அதற்கு அவர் சொன்ன பதில் அவர் கூலிக்காக வந்த படியால் எமது தியாகம் பற்றி அறியாதவராக இருந்தார்.

எங்களிடம் வந்த பிறகு தான் எமது போராட்டத்துக்கு தனது பங்கும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

அவர் மட்டுமல்ல அவரது நாயும் எங்களுடன் தான் இருக்கிறது.

இவர் பூ வைக்க மறந்தாலும் அவரின் நாய் பூ கொண்டு வந்து வைத்து விட்டுப் போகும். என்றார்.

எதிரியால் கூட விளங்கிக் கொண்ட எமது போராட்டத்தை சர்வதேசம் இன்றும் விளங்காமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.”

நினைவுபகிர்வு – துன்னாலை செல்வம்

1987 இல் 30 கலிபருடன் ஒரு தயார்படுத்தல்

1 month 3 weeks ago

1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான், வாசு, அஜித்(பாம்பன்), பரன், றொபோட்(வெள்ளை) ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார்.

அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர்.வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கியான30 கலிபர் பரிசோதிக்கப்பட்டது(zero setting) நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தயாரிப்பு நடவடிக்கை நடைபெற்றது.தேசியத் தலைவர் எப்போதும் கூறுவது போல் தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்க வேண்டும் என்றால் முன் தயாரிப்பு வேலை முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைய அவரே கடுமையாக உழைத்த இந்த ஒளிநாடாவை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமையாகும்.

(இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்)

அ.சேரா

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு

1 month 3 weeks ago

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது.

தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர்.

திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர்.

திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் போராளிகளுக்கு திருமண ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கினை மேற்கொண்டு வந்தது.

காதல் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிட்ட அம்சமாகும். ஆண் போராளிகள் 28 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும்,பெண் போராளிகள் 23 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும் இருத்தல் முக்கியமானது.

போராளிகள் தமக்கிடையே காதல் ஏற்படுமாயின் அது பற்றிய விபரத்தினை எழுத்து மூலம் துறைப் பொறுப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். துறைப்பொறுப்பாளர் அதனை ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார்.

திருமண ஏற்பாட்டுக் குழு கூடிய அதைப்பற்றி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த பின் அந்த விபரத்தை தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கும்.

தேசியத்தலைவர் அவர்களது அங்கீகாரம் கிடைத்தபின் ஆண்,பெண் போராளிகளின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் பூரண சம்மதத்தோடு திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்யும்.

திருமண நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் குறைந்த அளவிலான உறவினர்கள், அத்தோடு துறை சார்ந்த போராளிகளும் கலந்துகொள்ளும் நிகழ்வாக அந்த திருமணம் இடம்பெறும்.

விடுதலைப்புலிகளால் நடாத்தி வைக்கப்பட்ட திருமணங்களில் தாலி அணிதலும் முக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தங்கத்திலான தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருக்கும்.

வழமையாக திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையிலேயே இந்தத் திருமண நிகழ்வுகள் இடம்பெற்றன.சில மூத்த தளபதிகளின் திருமணங்களில் தேசியத் தலைவரும் திருமதி மதிவதனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சில போராளிகளின் காதல் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன்.

நிதர்சனம் பகுதியில் கடமை புரிந்த தவா,எழில் ஆகியோர் களுக்கிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. தவா அவர்கள் இவ்விடயத்தை திருமண ஏற்பாட்டுக் குழுவுக்கு அறியத் தந்தார். குழுவில் அங்கம் வகித்த புதுவை இரத்தினதுரையும் நானும்(தேவர் அண்ணா) தவா,எழில் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினோம். அப்போது எழிலனின் பெற்றோர் தமிழீழ மண்ணில் இருக்கவில்லை. அவரது மாமியார் மானிப்பாயில் இருப்பதாக எழில் தெரிவித்தார்.

புதுவை அவர்களும் நானும் சென்று மாமியாரைச் சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறி அவர் மூலம் பெற்றோருக்கும் அறியத்தரப்பட்டு தேசியத்தலைவர் அவர்களின் அனுமதியோடு அந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றது.

இதே விதமாக இன்னும் சில போராளிகளின் திருமணங்களும் நாம் போராளிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களோடு கலந்து பேசி அனைவரினதும் பூரண சம்மதங்களுடன் இடம்பெற்றிருக்கின்றன.

புலிப்போராளிகளது திருமணங்களுக்கு தமிழீழ திருமண பதிவுச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு திருமணப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையில் சபையினர் முன்பாக ஆணும் பெண்ணும் உறுதிமொழிகளைக் கூறி கையொப்பங்கள் இடப்பட்டு சாட்சிகளின் ஒப்பங்களோடு அவை அங்கீகரிக்கப்பட்டன.

இவர்களுக்கு திருமணம் முடிந்தபின் குடும்ப பராமரிப்பு இறுக்கமான நிதியை மாதாமாதம் இயக்கத்தின் நிதிப் பிரிவு வழங்கி வந்தடையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

--> தேவர் அண்ணா

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் பணியாற்றிய போராளியின் நினைவுகள்

1 month 3 weeks ago

அழியாத நினைவுகள் புகைப்படத்தை பார்த்ததும் கடந்த கால பயணத்தை பதிவு செய்கிறேன்…

கோகுலன் அண்ணாவின் கீழ் பயணிக்கும் பொழுது சிறப்பு பயிற்சி ஒன்றுக்காக அனுப்பப்படுகிறோம் நானும் செந்தாழனும்... எங்களுக்கு அருகில் தான் சாள்ஸ் அன்ரனி கோபித் அண்ணாவின் முகாம் இருந்தது வட போர் முனை கிலாலி பகுதியில்...அவரோடு அன்று 5 போராளிகள் இருந்தார்கள்

பாவலன்,மதுரன்,வளநெஞ்சன்,அறிவுச்சுடர்... இந்த புகைப்படத்தில் கோபித் அண்ணாவும் பாவலனும் இருக்கிறார்கள்…

நான் ஒரு ஆசிரியர் துறை சார்ந்த கல்வியை அப்பொழுது நிறைவு செய்தபடியால் இவர்களோடு இணைந்து கொண்டோம் வட போர்முனை போராளிகள் சார்ந்து…ஐந்து மாதங்கள் ஒன்றாக பயணித்தோம் காலை நாலு முப்பது தொடக்கம் நள்ளிரவு 11 மணி வரை மிகக் கடுமையான பயிற்சிகள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடி துடுப்பாடிய நினைவுகள் அதிகம்…

இதில் மேலும் ஒரு சகோதரர் இருக்கிறார் காண்டீபன் தூயவன் அரச அறிவியல் கல்லூரியில் ஒன்றாக கல்வி கற்றோம் மிகச் சிறந்த கல்வியாளர்…நான் புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னர் இரண்டு முறை கோபித் அண்ணாவோட உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்று எங்களுக்கு சிறப்பாக சமைத்து தரும் மதுரன் அண்ணாவை விசாரித்தேன்…மேஜர் மதுரன் கேப்டன் அறிவிச்சுடர் இருவரும் வீரச் சாவடைந்துவிட்டார்கள் அவர்களைப் பற்றி இறுதியாக உரையாடினேன் கோபித் அண்ணாவோடு நோர்வே நாட்டிலிருந்து…

அன்று நகுலன் அண்ணா துணை தளபதியாக இருந்தார் சாள்ஸ் அன்ரனி படையணியில் வீரமணி அண்ணா தளபதியாக இருக்கும் பொழுது நான் (லீமா சேரா)லாரன்ஸ் அண்ணாவோடு நகுலன் அண்ணாவை பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன் சந்திப்போம் சிறப்பாக வரவேற்பார் அன்புடன் நினைவுகள் இப்பொழுதும்….

லீமா சேரா மற்றும் நகுலன் அண்ணா இக்கச்சி பிரதேசத்தில் இருந்த போர் பயிற்சி கல்லூரியில் தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் இருவரையும் ஒன்றாக சந்தித்தேன் நினைவுகள் இன்றும்…ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிந்தேன்…லோரன்ஸ் அண்ணா ஆனந்தபுரம் முற்றுகையிலிருந்து காயப்பட்ட தகவலை மட்டும் அறிந்தேன் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து…

எங்களைப் போன்றவர்கள் மரணிக்கும் வரை எங்கள் இனத்திற்காக நாங்கள் பயணித்த

பாதைகள் பயணங்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கடந்து செல்ல முடியாமல் எங்களை காயப்படுத்துகிறது வலிகள் நிறைந்திருந்தாலும் தமிழ் இனத்திற்காக வாழ்ந்த மறவர்கள் நாங்கள்…

எழுத்தாளர்: தரன் ஸ்ரீ💐

முள்ளிவாய்க்காலில் மருத்துவர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்ட போது

1 month 3 weeks ago

நான் மே 15 அன்று காயமடைந்து, எனது சகாக்களால் முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்த இராணுவ வைத்திய சாலையில் ஒப்படைக்கப் பட்டேன். பின்பு அவர்கள் என்னை ஆனந்தபுரம் ஊடக கைவேலி பாடசாலியில் இருந்த இன்னொரு இராணுவ வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்த இராணுவத்தினரும் இராணுவ வைத்தியர்களும் என்னை என்ன செய்வது என்று தொடர்பாடல் கருவி மூலம் பலருடனும் கதைத்துக்கொட்டிருந்தார்கள்.

நேரம் கிட்டத்தட்ட பி.ப.6.30 - 7.00 இருக்கும். ஓரளவுக்கு இருட்டி விட்டது. என்னை ஒரு இராணுவ ரக் (Truck) ஒன்றில் ஏற சொன்னார்கள். நான் ரக்கில் ஏற மிகவும் கஷ்டப்பட்டேன், எனது வலது கை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, நெஞ்சுக் காயமும் வயிற்றுக்காயமும் வலித்துக்கொண்டிருந்தது.

ஒருவாறு வாகனத்தில் ஏறியபின் அங்கு நான் இருப்பதற்கு ஒரு மெல்லிய வாங்கு மட்டுமே போடப்பட்டிருந்தது. அதுவும் வாகனம் ஓடும்போதும் பள்ளத்தில் விழும் போதும் ஆடிக்கொண்டும் சரிந்து விழுந்து விடும் போலும் இருந்தது. வாகனத்தில் ஏறிய உடனே மெல்லிய இருட்டில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரத்தின் பின்பு எனக்கு எதிரே இருந்த வாங்கில் மூன்று பேர் இருப்பது தெரிந்தது. நன்கு கவனித்து பார்த்தேன். மூன்று பெண் போராளிகள்- கிட்டத்தட்ட 18-20 வயது இருக்கும். மூவருமே விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள். அச்சம் கலந்த முகத்துடன் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத தவிப்போடு இருந்தார்கள்.என்னை யார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்குமோ என்னக்கு தெரியவில்லை.

நாங்கள் சென்ற வாகனம் நீண்ட நேர பிரயாணத்திற்கு பின் ஒரு இடத்தில் ( ஒரு வீட்டின் முன் ) நின்றது. என்னை இறக்குவதற்கு முன் பெண் போராளிகள் மூவரையும் இறக்கி எடுத்தார்கள். அவர்கள் மூவரையும் இறக்கிய சிறிது நேரத்தின் பின் என்னையும் இறக்கினார்கள். அந்த இடத்தில் ஒரே இருள் மயம். தானாகவே பயம் வந்துவிடும் அளவிற்கு மயான அமைதியாக இருந்தது .

என்னை அந்த வீட்டின் முன் பகுதியில் இருக்கச்சொன்னர்கள். ஒரு இராணுவ அதிகாரி வந்து என்னைப் பற்றி விசாரித்தார். பின்பு எனக்கு இரவு உணவு கொடுக்க சொல்லிவிட்டு காலையில் சந்திப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்பு நான் அவரை ஒரு நாளும் காணவில்லை. என்னை வைத்திருந்தது கிளிநொச்சி என்றும் அந்த வீடு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் (TRO) அலுவலகம் என்பதும் அந்த சுவரில் ஒட்டி இருந்த அறிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டேன். என்னை சிறை வைத்திருந்த அதே வீட்டில் தான் அந்த பெண் போராளிகளையும் வைத்திருந்திருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் என்னை முகம் கழுவ வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கிருந்த ஒரு மாமரத்தில் புலிகளுடைய சில சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. அது பெரும்பாலும் அந்த பெண் போரளிகளுடையதாக இருக்க வேண்டும். அதன் பின்பு ....................................................

thurairaajaa varatharaaja

2007 ஆம் ஆண்டு எனது அம்மாவை கடத்திச்சென்றார்கள்

1 month 3 weeks ago

2007 ஆம் ஆண்டு எனது அம்மாவை கடத்திச்சென்றார்கள் அப்போது அப்பா வீரச்சாவு அடைந்து சில காலங்களே தாண்டி இருந்தது என் தங்கைக்கு 6 வயது நானும் அக்காவும் பாடசாலை படித்துக்கொண்டு இருந்தோம்.

அன்று அம்மாவிற்கு அழைப்பு வந்தது.

அக்கா நாங்கள் தொலைதூரம் நடந்து வந்ததால் பசியும் தாகமாகவும் இருக்கிறது எங்களுக்கு உணவு ஏதாவது எடுத்துக்கொண்டு மேல் வீதிக்கு வர முடியுமா என்று கேட்டார்கள்,

உடனே அம்மா குடிப்பதற்கு குளிர்பாணமும் உணவும் எடுத்துக்கொண்டு சென்றார் இது அம்மா அடிக்கடி இயக்கம் ஊருக்குள் வந்தால் செய்யும் விடையம்தான்,

ஆனால் மதியம் சென்ற அம்மா மாலை நேரமாகியம் வீடு வரவில்லை,

நாங்கள் மாறி மாறி அழைப்பு எடுத்தோம் ஆனால் போன் நிறுத்தப்பட்டு இருந்தது,

இரவு 9 மணிக்கு அழைப்பு வந்தது தம்பி உங்கள் அம்மாவை கடத்தி விட்டார்கள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று இயக்கம் அறிவித்தது,

உண்மையை சொல்லப்போனால் அந்த காலப்பகுதியில் அயலவர் கூட எங்கள் வீடுகளுக்கு வர மாட்டார்கள் அடிக்கடி இராணுவம் கருணா குழு என்று எங்கள் வீட்டை அவதானித்துக்கொண்டே இருப்பார்கள்,

வீட்டில் நானும் என் மூன்று சகோதரிகளும்தான் அப்போது இரவு இரவாக அழுது விட்டு அப்படியே நித்திரை கொள்வோம்,

அடுத்து இரண்டு நாட்கள் பின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது...

நாங்கள் ஒப்பாரி வைத்து அழுதோம் எங்க அம்மா இருக்கிறீங்க எப்போ வருவீங்க என்று,

நான் வயல் வேலையா வந்தனான் வயல்ல வேலை முடிஞ்ச உடனே வாறன் என்று அழுது அழுது சொல்லுவா

பிறகு எனக்கு வேலை கிடக்குது பிறகு கோல் பன்றன் என்று சொல்லிட்டு கோல் கட் பன்னிடுவா

இப்படி தொடர்ந்து ஒரு கிழமை தாண்டியது,

வீட்டில் சரியான உணவும் இல்லை தூக்கமும் இல்லை ஒரே ஒப்பாரியாக இருக்கும் வீடு.

எட்டு நாட்கள் கழிந்து அழைப்பு வந்தது அம்மா இப்போ எங்கட வீட்டில் நிக்கிறா நாளைக்கு விடிய வீட்ட வருவா என ஒரு அக்கா அழைப்பு எடுத்து கூறினார்,

அடுத்த நாள் காலையில் அம்மா வீட்டிற்கு வந்தா நாங்கள் கட்டி அணைத்து அழுதோம்

அம்மாவின் உடல் முழுவதும் இரத்தமும் தழும்புகளும் பதிந்து கிடந்தது,

முதுகில் அணைத்து இடங்களும் வெடிப்பு காயம்,

எங்கே அழைத்து சென்றார்கள் என்று கேட்டோம்,

வீதியில் வைத்து வாகனத்தில் இழுத்து ஏற்றியவுடன் கண்களை கட்டினார்கள் சிறிது நேரத்தில் புகையிரத சத்தம் கேட்டது,

பின் இறக்கி என்னை இழுத்து சென்று இரு கைகளையும் சங்கிலியால் கட்டினார்கள்,

அங்கே அடிக்கடி அழு குரல்கள் கேட்கும் கதறி அழும் சத்தம் கேட்கும் எப்போதும் இரத்த வாடையாக இருக்கும் அடிக்கடி துப்பாக்கி சூடு சத்தம் கேட்கும் என்றார்,

போன் எடுக்கும்போது கண்களில் கட்டியுள்ள துணியை அவிழ்ப்பார்கள் அப்போது அந்த இடம் முழுவதும் இரத்தமாக இருக்கும்,

நான் பேசுவதை சுற்றி நின்று கேட்பார்கள்,

அதன் பின் கேள்விகள் கேட்டு கேட்டு அடிப்பார்கள் நான் என்ட பிள்ளைகளுக்கு யாரும் இல்லை என்று சொல்லி அழுவேன் அப்போது அடிப்பார்கள் என்னால் வேதனை தாங்க முடியாமல் கத்துவேன் பின் சிறிது நேரம் களித்து வந்து அடிப்பார்கள் என்று கூறி அழுதா,

இறுதியாக ஓர்சில் சந்தியில் கொண்டு சென்று சுடுவதற்கு தீர்மானித்தார்கள், பின் வாகனத்தில் ஏற்றினார்கள் வாகனத்தில் இருந்த ஒருவன் இந்த அம்மா பாவம் விட்டு விடுவோம் என்று கூற ஓர்சில் சந்தியின் பக்கம் ஒரு வீதியில் இரண்டு கைகளையும் கண்கள் வாயை கட்டியபடி வாகனத்தில் இருந்து தள்ளி விட்டார்களாம்,

அதன் பின் அங்கு தெரிந்த ஒருவரின் வீட்டிற்கு சென்று பின் வீடு வந்து சேர்ந்தார் அம்மா.

இந்த வதை முகாம் பற்றி நேற்று படித்தேன் அம்மா கூறிய விடையங்கள் ஒத்து போவதால் எழுதுகிறேன்.

எழுதும்போது அம்மா பட்ட வேதனைகளை நினைக்கும்போது கண்கள் அழுகின்றது

நான் அணைத்தையும் மறந்து வாழ போவது இல்லை என்றோ ஓர்நாள் அணைத்திற்கும் இவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.

வரலாற்றை படியுங்கள்,
வரலாற்றை படையுங்கள்,
வரலாற்றை மறந்த இனம் வாழாது,
வரலாறே எங்கள் வழிகாட்டி.

  • செந்தமிழன்

Checked
Sun, 02/22/2026 - 16:23
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed