ஊர்ப்புதினம்

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

2 months 4 weeks ago

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்களின் பட்டியலின் பிண்ணனியில்  தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதாக தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(20.12.2025) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கிளிநொச்சியில் கட்டப்பஞ்சாயத்து நடாத்திக் கொண்டு பல அரசியல்வாதிகள் நல்லவர்கள்போல் நடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள் எப்படி சொத்துக்கள் சேர்த்தனர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தம்மைத் தாக்கிய கூலித்தொழிலாளியிடம் எப்படி சொத்து வந்தது என்பனையும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!

2 months 4 weeks ago

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!

Published By: Digital Desk 2

20 Dec, 2025 | 02:57 PM

image

நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன.

மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233942

பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம்

2 months 4 weeks ago

பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம்

20 Dec, 2025 | 11:05 AM

image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு  வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து  உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றினால்  உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.

https://www.virakesari.lk/article/233917

'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

2 months 4 weeks ago

'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

சனி, 20 டிசம்பர் 2025 04:43 AM

'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகம் புதிதாக அமையவுள்ளது. 

அதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், தென்மராட்சி பிரதேச செயலர் சந்திரா சத்தியஜோதி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , சாவகச்சேரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது 

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் , யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் , யாழ் . மாநகர சபை உறுப்பினருமான எஸ், கபிலன் , அரச அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

அதன் போது , புதிய பிரதேச செயலகத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க இது வரையில் நால்வர் முன் வந்துள்ளனர் எனவும்  , எதிர்வரும் 31ஆம் திகதி க்கு முன்னர் வேறு யாரேனும் காணிகள் வழங்க விரும்பின் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது. 

அடுத்த வருடம் முதல் வார கால பகுதியில் பொருத்தமான காணியினை தெரிவு செய்த பின்னர் , பிரதேச செயலகம் அமைப்பதற்கான அடுத்த கட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

https://jaffnazone.com/news/53388

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்

2 months 4 weeks ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்

2025 டிசெம்பர் 20 , மு.ப. 11:04

தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இதன்போது பிரதி அமைச்சரிடம் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

No image previewமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்த...
தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்று

சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்

2 months 4 weeks ago

சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்

Published By: Vishnu

20 Dec, 2025 | 03:29 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நான் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இனரீதியாக பேசியதில்லை. ஆனால் இப்போது சொல்கின்றேன், சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்தவாரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஒரு முன்மொழிவை தயாரித்து சமர்ப்பித்தார்கள். புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, தீர்வு தொடர்பான முன்மொழிவே அது. அதனை இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக எங்களால் முடிந்த உதவியாக எம்மால் சேகரிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பணத்தில் பாதிக்கப்பட்ட 2137 குடும்பங்களுக்கு நாம் உதவி செய்துள்ளோம். இதற்கு உதவியவர்களுக்கு இந்த சபையில் நன்றி கூறுகின்றேன்.எமது உதவி தொடர்பான கணக்கு விபரங்களையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். என்றாலும் நாம்செய்த இந்த உதவி போதாது.

கடந்த பாராளுமன்ற அமர்வில் கொத்மலையில் நடந்த அசாதாரண சம்பவம் தொடர்பில் நான் உரையாற்றினேன்.அதில் முக்கியமானதொரு பிரச்சினையாக அந்த பகுதியிலிருந்த பிரதேச செயலாளர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற விடயத்தை முன்வைத்தேன். இது தொடர்பில் அரசு. அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் நான் கூறியபோதிருந்ததை விட இப்போது அந்த பிரச்சினை அதிகரித்துள்ளது . நேற்றைய தினம் ( வியாழக் கிழமை)அதே பகுதியிலிருக்கின்ற மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே அந்த பிரதேச செயலாளர் தம்மை முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்கள்.

நான் எனது பாராளுமன்ற நாட்களில் ஒரு உரையைக்கூட இனரீதியாக ஆற்றியதில்லை. ஆனால் இன்று உண்மையான விடயம் கொத்மலை பிரதேசம் மட்டுமல்ல கொத்மலை, உடப்புசல்லாவ என சிங்கள சமூகம் எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை.

இது தொடர்பாக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று நன் அந்த குற்றச்சாட்டை வைத்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க சொன்னார்கள். நான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததால் இன்று அங்குள்ள தமிழ் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் அனைத்துப்பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

இது அமைச்சரின் நோக்கம் கிடையாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எல்லோரும் மோசமானவர்கள் என நான் சொல்லவில்லை. ஒரு சிலரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்துக்கு மட்டும் கெட்ட பெயர் கிடையாது. நாட்டுக்கே கெட்ட பெயர் .அதேமாதிரி கிராமசேவகர்களைப் பார்த்தால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பெயருக்கே செல்கின்றார்கள். பெயர்களை எடுக்கின்றார்கள் .ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் என்கின்றார்கள்.

9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடந்தது அதில் ஜனாதிபதி ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். அப்படிப்பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச் காணிதான். திகாம்பரம் எம்.பி. இருக்கும்போது 7 பேர்ச் காணி என சட்டம் கொண்டுவரப்பட்டது.நாங்கள் இருக்கும்போது 10 பேர்ச் காணி என சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்போது 6 பேர்ச் எனப்படுகின்றது எனவே இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென ஜனாதிபதி இந்த சபையில் தெளிவு படுத்தியேயாக வேண்டும்.

அதேவேளை சந்தாப்பணத்தில் நான் நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ்வோடு நான் சென்ற போது அவருடன் கூட்டு சேர்ந்து விட்டதாக கூறினார்கள். எல்லோரும் சந்தாப்பணம் வாங்குகின்றார்கள்.எத்தனைபேர் கணக்கு வழக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் ? ஆனால் நான் சமர்ப்பித்துள்ளேன். நான் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் நுவரெலியா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனக்கூறினேன். எனக்கு ஆளும் கட்சியா எதிர்கட்சியா, சிவில் அமைப்புக்களா என்ற பிரச்சினை கிடையாது. அந்த வகையில்தான் நாமல் ராஜபக்ஷ் அங்கு வந்து உதவிகளை வழங்கினார் என்றார்.

https://www.virakesari.lk/article/233892

பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்

2 months 4 weeks ago

பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்

Published By: Vishnu

19 Dec, 2025 | 10:57 PM

image

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை (19) ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.

அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது.

நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம்.

எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம்.

2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது.

குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது.

இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும்.

மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.

தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/233884

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

2 months 4 weeks ago

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

19 Dec, 2025 | 02:39 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (19) பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் புதிய அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு, அது மக்களிடம் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல்களுடன் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதன்படி இதற்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை மற்றும் ஏனைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் ஆராயப்படுவதுடன், அது தொடர்பான ஆரம்பகட்ட யோசனை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

எமது கொள்கை பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை அமைத்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியை நியமித்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. புதிய அரசியலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. இது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதுடன், இந்த விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இது தொடர்பான காலப்பகுதி தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 2017/17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கமைய எல்லை நிர்ணயம் தொடர்பிலும், தேர்தல் தொகுதிகள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னர் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும்.

இதுவரையில் எல்லை நிர்ணய நடவடிக்கை முடிவடையாத காரணத்தினால் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. இதனால் இதில் திருத்தங்களை மேற்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். 2026ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக பரிந்துரைகளுடனான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான குழுவொன்றுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அது தொடர்பான சட்டவரைபுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/233835

இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி

2 months 4 weeks ago

இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி

Dec 19, 2025 - 10:06 PM

இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. 

பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்குப் பக்கபலமாக அமையும். 

புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு IMF ஆதரவுத் திட்டம் எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பதை ஆராய்வதற்கும் மேலதிக காலம் தேவைப்படுகிறது. 

இதன் காரணமாக, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான கலந்துரையாடல்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjd3cy9t02xmo29nbrwlvvuh

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

2 months 4 weeks ago

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

Dec 19, 2025 - 05:58 PM

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார். 

டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். 

2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டொலர் அளவை விட 500 மில்லியன் டொலர் மேலதிகமாக ஈட்டுவதன் மூலம் டொலரின் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் ஊடாக வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி குறித்துப் பின்வருமாறு விவரித்தார். 

முழுமையாக 6,282 வீடுகளுக்கு சேதம். 4,543 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம். எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் NBRO வினால் அனுமதி வழங்காத 6,877 வீடுகள் உட்பட மொத்தம் 17,648 வீடுகளுக்கு, மூன்று மாத காலத்திற்கு மாதமொன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

அனர்த்த நிலைமை தணிந்த பின்னர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக 25,000 ரூபாய் வழங்கல். 

தளபாடங்கள் சேதமடைந்த வீடுகளுக்கு, அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாய் வழங்கல். 

முதற்கட்டமாக, முழுமையாக வீடுகளை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், NBRO பரிந்துரைகளைக் கொண்ட பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் அல்லது வீடுகள் சேதமடையாத போதிலும் அபாய நிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு ஜனவரி முதல் மூன்று மாத காலத்திற்கு 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். 

வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தவர்கள், பகுதியளவில் சேதமடைந்தவர்கள் அல்லது வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும் NBRO பரிந்துரையின் பேரில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கல். 

நெல், சோளம், நிலக்கடலை மற்றும் ஏனைய தானியங்களைப் பயிரிட்டுள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல்.

 

மிளகாய், வெங்காயம், பப்பாளி, வாழை உள்ளிட்ட செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். 

அடர்த்திக்கு ஏற்ப மிளகு, ஏலக்காய் மற்றும் கோப்பி ஆகிய பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் ( ஒரு மிளகு கொடிக்கு 250 ரூபாய்). 

கால்நடை மருத்துவ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு கலப்பினப் பசுவிற்காக தலா 200,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 10 பசுக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 

ஒரு நாட்டு பசுவிற்காக 50,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 பசுக்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும். 

பன்றி, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு விலங்கிற்கு 20,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 விலங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 

உயிரிழந்த ஒரு முட்டையிடும் கோழிக்கு 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 2,000 கோழிகளுக்கு உதவி வழங்கப்படும். 

இறைச்சிக் கோழி ஒன்றிற்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சம் 4,000 கோழிகளுக்கு உட்பட்டு (அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை) நட்டஈடு வழங்கப்படும்.

 

கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, காப்புறுதி கொண்டுள்ள படகுகளுக்கு, அக்காப்புறுதித் தொகையை 'சீனோர்' நிறுவனத்திற்கு வழங்கி அத்தரப்பினருக்கு புதிய படகுகளைப் பெற்றுக்கொடுத்தல். 

வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இழந்த ஒவ்வொரு மீனவருக்கும் 100,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கல். 

அனர்த்தத்தினால் சேதமடைந்த படகுகளை 'சீனோர்' நிறுவனம் மூலம் இலவசமாகத் திருத்திக் கொடுத்தல். 

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தோணியை இழந்தவர்களுக்கு 100,000 ரூபா பணமும், பாதிப்படைந்த நீர்த்தேக்கங்களுக்கு மீன்குஞ்சுகளும் வழங்கல். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். 

கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 9,600 கைத்தொழில் நிலையங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கல். 

பகுதியளவில் சேதமடைந்த வர்த்தகக் கட்டடங்களுக்கு 5 இலட்சம் ரூபா அல்லது மதிப்பீட்டின் பின்னர் அதிகபட்சமாக 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கல். 

பதிவு செய்யப்பட்டுள்ள பிரதேச வர்த்தக நிலையங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடுப்பனவு வழங்கல். 

சிறிய கைத்தொழில்களுக்கு 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையும், பெரிய கைத்தொழில்களுக்கு 25 மில்லியன் ரூபாய் வரையும் வழங்கல்.

https://adaderanatamil.lk/news/cmjcui1t802xco29n6co5fogn

கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு

2 months 4 weeks ago

19 Dec, 2025 | 01:04 PM

image

"தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு, சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அதேவேளை விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என சபையில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சி எதுவும் தலைமை தாங்காது. மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.

அதன்போது, நடத்தப்படும் போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது. 

அதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு | Virakesari.lk

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!

2 months 4 weeks ago

19 Dec, 2025 | 12:54 PM

image

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது.

இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது.

இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.  

அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. 

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு! | Virakesari.lk

கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி!

2 months 4 weeks ago

19 Dec, 2025 | 03:06 PM

image

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக கனடா அரசாங்கம் 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஹெச்.இ. இசபெல் மார்ட்டின் (HE Isabelle Martin) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அலுவலகத்தில் வைத்து சந்தித்து இந்த நிதியுதவியை கையளித்துள்ளார்.

இந்த நிதியுதவியில் 1.4 மில்லியன் டொலர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உணவு வசதிகளை வழங்குவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 350,000 டொலர்கள், நிவாரணப் பொருட்கள், அவசரகால தங்குமிடங்கள், நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதற்காக, 'வேர்ல்ட் விஷன் கனடா' (World Vision Canada) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

215,000 டொலர்கள்,  கனடா செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசரகால பேரிடர் உதவி நிதியத்தின் மூலம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய சுமார் 70,000 டொலர்கள், உள்ளூர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் (Canada Fund for Local Initiatives) ஊடாக அவசரகால நிவாரணங்களை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையையும், மனிதாபிமான உதவிகள் மற்றும் மீள்தன்மை மீதான அர்ப்பணிப்பை இந்த அனர்த்த நிவாரண நிதியுதவி பிரதிபலிக்கிறது.


கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி! | Virakesari.lk

GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

2 months 4 weeks ago

19 Dec, 2025 | 04:40 PM

image

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPayஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2025ஆம் ஆண்டில் 2 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.

விரைவாக மாற்றியமைக்கும் திறன், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக GovPay 45 நாட்களில் அதன் வருமானத்தை 1 பில்லியன் ரூபாவில் இருந்து 2 பில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்க முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது.

2025 பெப்ரவரி 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்று வரை 70,178க்கும் மேற்பட்ட GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 221 அரச நிறுவனங்களில் 3,372 அரச சேவைகளுக்கான கட்டண வசதிகள் செயற்படுத்தப்படுகின்றன. இந்த விரைவான வளர்ச்சி, பொதுமக்களும் அரச நிறுவனங்களும் இந்த கட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலோபாய தலைமையின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) LankaPay உடன் இணைந்து செயல்படுத்திய GovPay, இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கிய சேவை வழங்குநராக மாறியுள்ளது.

இந்த டிஜிட்டல் தளம் அனைவருக்கும் பொதுவான, திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது.

2025 ஏப்ரல் 10ஆம் திகதி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கான ஒன்லைன் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த கட்டமைப்பின் மூலம் 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக 66 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த சேவை தற்போது தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் முழுவதும் செயல்படுகிறது.

இது 2025 டிசம்பர் மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸுடன் இணைந்து LankaPayஇன் ஆதரவுடன், 2026 ஜனவரி மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) இணக்கம் தெரிவித்துள்ளது.

GovPay, பிரதேச செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூரட்சி மன்றங்கள் ஊடாக அதன் பிரவேசத்தை விரிவுபடுத்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசாங்க சேவைகளை அணுகுவதை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம்  மற்றும் இலங்கை அணுசக்தி சபை போன்ற நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டில் GovPayக்கு அதிக பங்களிப்பு செய்த நிறுவனங்களில் அடங்குகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் இதற்கு நிலவுகின்ற அதிக வரவேற்பு, இளைய தலைமுறையினர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தையும், இந்த டிஜிட்டல் தளத்தின் வியாபிப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

வழக்கமான அரச சேவைகளுக்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கும் GovPay ஆதரவு அளித்தது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி முதல், இது Rebuilding Sri Lanka அனர்த்த நிவாரண நிதியத்திற்கு டிஜிட்டல் நன்கொடைகளுக்கு வசதிகளை வழங்கியுள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நன்கொடைகள் உட்பட 909 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 14 மில்லியன் ரூபா நிதியை திரட்ட உதயுவியுள்ளது.

தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, மேலதிகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கி, மேம்பட்ட வசதிகளுடன் கூடிய  www.govpay.lk  நவீனமயமாக்கும் பணியில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

முதல் ஆண்டில் 2 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் 45 நாட்களில் 1 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியதன் மூலம், GovPay டிஜிட்டல் தளம், 2030ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை யதார்த்தமாக்குவதற்கான ஒரு தனித்துவமான தொடக்கமாகக் காணலாம்.

GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் | Virakesari.lk

10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

2 months 4 weeks ago

(செ. சுபதர்ஷனி)

"இந்தியாவின் 'மான் பார்மசூட்டிகல்' நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.

குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்:

"பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பாகும். அதற்கமைய, தமது பணியை உரியவாறு நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் மீது சாடுவதை எப்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.  பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம். இந்நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் மருந்து மாபியா மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி போன்றன தொடர்பில் கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழும், தற்சமயம் மருந்து கொள்வனவு செயற்பாட்டில் முறைக்கேடாகச் செயற்பட்ட நபர்கள் குறித்த நிறுவனங்களில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டில் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 100 மருந்து வகைகள் தரமற்றவையாக உள்ளன. சர்ச்சைக்குரிய ஓண்டன்செட்ரோன் என்னும்  ஊசி மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 2 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இம்மருந்து இந்தியாவில் உள்ள மான் பார்மசூட்டிகல் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட  சுமார் 90 மருந்து வகைகள் தரமற்றவை எனப் பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளதாக அரச மருத்துவ விநியோகப் பிரிவு கணினி தரவு தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயாளி ஒருவரின் உடலில் செலுத்தப்படும் ஊசி மருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது பாரதூரமான விடயமாகும். இந்த மருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கட்டமைக்கப்பட்டுள்ள பரிசோதனையின் பின்னரே மருந்துகள் நோயாளர்களுக்கு வழங்கப்படும். மேற்படி மருந்து உற்பத்தி செய்யும் மான் பார்மசூட்டிகல் தனியார் நிறுவனத்திடமிருந்து ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்துகள் தரமற்றவை எனப் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஓண்டன்செட்ரோன் மருந்துடன் அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மருந்து தயாரிப்பின் போதே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகத் தரமற்ற மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்கின்றனர். எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர்? குறித்த நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.   ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடமை அலட்சியத்தை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிச்செல்ல முயலும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் | Virakesari.lk

IOM மூலம் இலங்கையின் தங்குமிடங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது ஜப்பான்!

2 months 4 weeks ago

IOM மூலம் இலங்கையின் தங்குமிடங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது ஜப்பான்!

19 Dec, 2025 | 12:47 PM

image

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, சர்வதேச புலம்பெயர் அமைப்பின் [International Organization for Migration (IOM)] இலங்கைக்கான தூதரகத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்கோவுடன் இணைந்து, பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) இயக்குநர் (முனனேற்பாடுகள்) சதுர லியனாரச்சியிடம் தங்குமிடங்களை வெள்ளிக்கிழமை (19) ஒப்படைத்தார்.

IOM மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை உதவி, 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையதாகும், இது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நன்கொடையின் ஒரு பகுதியாகும், இதை ஜப்பான் அரசு டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் அமைப்புகளான IOM, உலக உணவுத் திட்டம் [World Food Programme (WFP)] மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் [United Nations Children’s Fund (UNICEF)] ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முடிவு செய்தது.

கண்டி, பதுளை மற்றும் கேகாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, IOM மூலம், ஜப்பான் சமையலறைப் பொருட்கள், கழுவும் பொருட்கள் மற்றும் படுக்கைப் பொருட்கள் உட்பட 615 தங்குமிடங்களை வழங்கும்.

டிசம்பர் 17 ஆம் தேதி நிலவரப்படி, பேரிடர் மேலாண்மை மையத்தின் [Disaster Management Center (DMC)] சூழ்நிலை அறிக்கையின்படி, 66,000 க்கும் மேற்பட்ட நபர்களும் 22,000 குடும்பங்களும் இன்னும் சொந்த வீடுகள் இல்லாமல் பாதுகாப்பு மையங்களில் உள்ளனர்.

கூடுதலாக, 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன, அதே நேரத்தில் 6,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த பேரழிவின் பின்னரான சூழ்நிலையில், இந்த உதவி வீடுகளை இழந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கவும், அவர்களின் அவசர வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்யும்மென எதிர்பார்க்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை இடத்தை உறுதி செய்வது ஒரு அவசரத் தேவை" என்று தூதர் இசொமதா தனது கருத்துக்களில் கூறினார்.

மேலும், "இந்த உதவி ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான நம்பிக்கை மற்றும் நட்பைப் பிரதிபலிக்கிறது, மேலும் தேவைப்படும் காலங்களில் இலங்கை மக்களை ஆதரிப்பதில் ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கை மக்களுடன் ஜப்பான் முழு ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று வலியுறுத்தினார்.

IMG_4277.jpeg

https://www.virakesari.lk/article/233824

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!

2 months 4 weeks ago

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!

19 Dec, 2025 | 02:15 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவராஜா ராஜ்உமேஸ் ஆகியோர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகப் பேரவையின் கூட்டம் வெள்ளிக்கிழமை (19) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி சுகன்யா அரவிந்தன், கலாநிதி சிவராஜா உமேஸ் மற்றும் திறந்த முறையில் கோரப்பட்ட விளம்பரத்துக்கு அமைவாக விண்ணப்பித்திருந்த சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகியாரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.  

அவற்றின் அடிப்படையில், சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் இசையியல் துறையில் பேராசிரியராகவும், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவராஜா ராஜ்உமேஸ் சந்தைப்படுத்தல் துறையில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன்,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் சட்ட வைத்தியப் பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட வைத்தியத்துறைக்குச் சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/233829

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

2 months 4 weeks ago

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

19 Dec, 2025 | 11:45 AM

image

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்கான கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக நாங்கள் வீதியோரத்தில் உள்ள மரங்களையும் வெட்டி புனரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

இதன்போது குறித்த வீதிக்கு தரமான அடித்தளம் இடப்படாமல், தரமற்ற வகையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. இதுகுறித்து நாங்கள் பிரதேச சபை தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருடன் முரண்பட்டோம்.

இதன்போது தவிசாளரும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும் ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினை, ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினை கூறினர். பின்னர் ஓரளவு தரமான நிலையில் வீதிக்கு அடித்தளம் இடப்பட்டது. இருப்பினும் அதுவும் திருப்திகரமாக இல்லை.

குறித்த வீதியானது முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல் அந்த வீதிக்கு வந்த மூலப்பொருட்கள் வேறு ஒரு வீதிக்கு, எமது அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனரமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனைக் கண்டித்த நாங்கள், வைரவர் வீதியை முழுமையாக புனரமைக்குமாறும் மற்றைய பகுதியில் உள்ள வீதியை வேறொரு நிதியியல் புனரமைக்குமாறும் கூறினோம். காரணம், இரண்டு வீதிகளும் அரைகுறையில் காணப்படும் என்பதால் ஒரு வீதியை முழுமையாக புனரமைக்குமாறு நாங்கள் கூறினோம்.

சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன், தங்கள் மீது பிழை இருப்பதனை ஒத்துக்கொண்டார். மற்றைய வீதியில் பரவப்பட்ட மூலப் பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியை முழுமையாக புனரமைப்பதாக கூறினார்.

அந்த வீதியில் பரவப்பட்ட மூலப்பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியில் பரவுமாறு ஊர் மக்களாகிய எங்களிடம் கூறினார். அவர்கள் விட்ட தவறுக்கு நாங்கள் அந்த வேலையை செய்ய தேவையில்லை. இருப்பினும் நாங்கள் அதையும் செய்வதாக கூறினோம். இருப்பினும் இதுவரை மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

இதுவரை காலமும் புனரமைக்காது காணப்பட்ட எமது வீதியானது தற்போதாவது புனரமைப்பு செய்யப்படுகின்றது என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. எனவே இது குறித்து பிரதேச சபையானது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG-20251219-WA0027.jpg

IMG-20251219-WA0025.jpg

IMG-20251219-WA0024.jpg

IMG-20251219-WA0028.jpg

VID-20251218-WA0107.jpg

20251218_173116.jpg

https://www.virakesari.lk/article/233808

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!

2 months 4 weeks ago

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!

Published By: Digital Desk 2

19 Dec, 2025 | 10:37 AM

image

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பவுதவி உயர்க்காக எதிர்ப்பை தெரிவித்தும், தீர்மான பிரேரணை ஒன்று சபையில் முன்மொழியப்பட்டது.

குறித்த பிரேரணையையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233791

பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கிருஷ்ணன் கலைச்செல்வி

2 months 4 weeks ago

பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் -  கிருஷ்ணன் கலைச்செல்வி

18 Dec, 2025 | 05:52 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் அது என்றாவது ஒருநாள் அதன் பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்ற சிறந்த பாடத்தை இடம்பெற்ற அனர்த்தம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் புகட்டியுள்ளது. எனவே அதிகம்  பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

வழமையாக இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் போது தனித்தனியே ஒவ்வொருவரும் அதற்கான பங்களிப்புகளை வழங்கி வருவர்.ஆனால் இம்முறை அரசாங்கம்,அமைச்சர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாலேயே இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு 23 தினங்களுக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

இயற்கை அனர்த்தங்களினால் மலையக பிரதேசங்களில் வாழும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்த மக்கள் மற்றும் மலை பிரதேசங்களில் வாழ்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அனர்த்தும் இடம் பெற்ற பின்னர் இன்றும் கூட அந்த மக்கள் தமக்கு இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலேயே வாழ்கின்றனர்.

எவ்வாறெனினும் இம்முறை இடம் பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் இயற்கையானது என்றாவது ஒருநாள் அதன் விளைவுகளை, பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்பதாகும்.

அனர்த்தத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் பல குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.கொத்மலை, வலப்பனை,ஹங்குரங்கெத்த போன்ற பிரதேசங்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் மக்கள் வீடுகளையும் இழந்து பெருமளவு உயிர்களையும் இழந்துள்ள நிலையையே காண முடிகிறது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான உறுதி மொழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த மக்களுக்கு வழங்கி யுள்ளார்.

இந்த இயற்கை அனர்த்தத்தின் போது எமது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை வைத்து பெருமளவிலான நாடுகள் எமக்கு உதவி, ஒத்துழைப்புகளை வழங்கின.பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. சில தோட்டங்களில் தொழிலாளர்களும் தமது ஒருநாள் சம்பளத்தை வழங்க முன் வந்தனர். ஆனால் அந்த நிவாரணங்கள் உரிய வகையில் மக்கள் கைகளுக்கு போய் சென்றுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/233753

Checked
Wed, 03/18/2026 - 04:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr