ஊர்ப்புதினம்

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ?

3 weeks 3 days ago

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ?

adminFebruary 20, 2026

2-3.jpg?fit=1170%2C876&ssl=1

ஊர்காவற்றுறை துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பகுதி ஆகிவற்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

அதன் போது, காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைப்பது, துறைமுக அபிவிருத்தி, ஊர்காவற்றுறையில் இருந்து காரைநகர் கடற்கோட்டைக்கு பயணிகள் செல்வதற்கான வழிவகைகள், துறைமுகத்திற்கு அருகில் பாவிக்கப்படாது காணப்படும் காணிகளை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் எதிர்கால சுற்றுலா வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

  இந்தப் பாலத்தை அமைப்பதற்கு ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி கணிசமான நிதி தேவைப்படும். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அல்லது நட்பு நாடுகளின் நீண்டகால சலுகைக்கடன் உதவியைப் பெறுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சாத்தியக்கூறு ஆய்வுகளுக்கான (Feasibility Study) நிதி ஒதுக்கப்படவுள்ளது.

கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்குத் தேவையான நிதி, துறைமுக அதிகார சபையின் (SLPA) சொந்த நிதி மற்றும் அரசாங்கத்தின் “நீலப் பொருளாதார” (Blue Economy) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படவுள்ளது.

அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் அறிவிப்பின்படி, பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். சர்வதேச தரத்திலான கேள்வி மனுக்கள் கோரப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்ததாரர்கள் அடையாளம் காணப்படுவர்.பாலத்திற்கான அடிக்கல் நடும் விழா மற்றும் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் கடற்கோட்டைப் பகுதிகளை ஒரு விசேட சுற்றுலா வலயங்களாக பிரகடனப்படுத்த சுற்றுலா அமைச்சுடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ளது.சுற்றுலாவைக் கருத்திற்கொண்டு காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை இடையே நவீன மின்சார படகுச் சேவைகளை (Electric Ferries) அறிமுகப்படுத்தவும் அமைச்சர்கள் குழு ஆர்வம் காட்டியுள்ளது.

2-1-1.jpg?resize=800%2C600&ssl=12-2.jpg?resize=800%2C600&ssl=1


https://globaltamilnews.net/2026/229447/

பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.

3 weeks 3 days ago

பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.

adminFebruary 21, 2026

637477619_3665108936962587_2343533896809

 

மன்னார் மாவட்ட குடும்ப நல   உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட  காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட தோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. கடமை நேரத்தில் குறித்த குடும்ப நல உத்தியோகத்தர் வழிமறிக்கப்பட்டு, உடமைகள் அபகரிக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கையில் கருப்பு பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று சனிக்கிழமை (21) காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குடும்ப நல  உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம் வரை பேரணியாக சென்றனர்.அங்கிருந்த உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்து மகஜர் ஒன்றை கையளித்தனர். தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்,பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில்  காவல்துறை  பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்,மன்னார் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர்

மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தனியாக நடமாடும் இடங்களை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களால் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை இவ்வாறான 4 சம்பவங்கள்   பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் வீதிக்கு இறங்கி நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ள தோடு, தமக்கான பாதுகாப்பு இல்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

634303499_699427533160604_62624358111979637477619_3665108936962587_2343533896809DSC_0159.jpg?resize=800%2C533&ssl=1DSC_0205.jpg?resize=800%2C533&ssl=1DSC_0217.jpg?resize=800%2C533&ssl=1DSC_0229.jpg?resize=800%2C533&ssl=1

https://globaltamilnews.net/2026/229476/

அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பலான “DECISIVE” இலங்கை கடற்படையில் இணைகிறது - வரலாற்றுப் பயணம் ஆரம்பம்

3 weeks 3 days ago

அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பலான “DECISIVE” இலங்கை கடற்படையில் இணைகிறது - வரலாற்றுப் பயணம் ஆரம்பம்

Published By: Priyatharshan

21 Feb, 2026 | 11:22 AM

image

( வீ.பிரியதர்சன் )

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான Cutter DECISIVE என்ற கப்பல், மேரிலாந்து மாநிலத்தின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு இலங்கை கடற்படையில் இணைவதற்கான வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தப் பயணம், ஒரு கப்பலை தாயகத்துக்கு கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை மேற்கொள்ளும் அதிக நீளமான கடல் பயணம் என்பதுடன், பனாமா கால்வாயை முதன்முறையாக கடக்கும் இலங்கை கடற்படை கப்பல் பயணம் என்ற வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்கிறது.

இலங்கை கடற்படையில் சேவையில் இணைந்த பின்னர், “DECISIVE” என்ற கப்பல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும் தேடுதல் மற்றும் மீட்பு (Search & Rescue) நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதைகளை பாதுகாக்கவும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அமெரிக்கத் தூதரகம் தெரிவிக்கையில், “ இந்த கப்பல் மாற்றம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பகிரப்பட்ட பொறுப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைகிறது. அமெரிக்காவின் Excess Defense Articles (EDA) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்களை இயக்குவதில், தற்போது உலகிலேயே முன்னணியில் இருப்பது இலங்கையாகும்.

இத்துடன், இலங்கை கடற்படையில் தற்போது நான்கு முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்கள் சேவையில் உள்ளன. இது அமெரிக்கா – இலங்கை இடையேயான ஆழமான நம்பிக்கை, இணக்கத்தன்மை மற்றும் வளர்ந்து வரும் கடற்படை கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.

இதேவேளை, கப்பலை இலங்கைக்கு கொண்டு வரத் தயாரான இலங்கை கடற்படை பணியாளர்களுடன் அமெரிக்காவில் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறோம் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. “DECISIVE” என்ற கப்பலை பொறுப்பேற்றுக் கொள்ளும் இலங்கை கடற்படை குழுவிற்கு சிறப்பான கடற்பயணம் அமைய வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கப்பல் இணைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

HBqDb4DbgAE4BW4.jpg

HBqDb4JboAAWrJJ.jpg

HBqDb4MaYAA9Z4p.jpg

https://www.virakesari.lk/article/239216

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றல் ; அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை தீவிரம்

3 weeks 3 days ago

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றல் ; அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை தீவிரம்

20 Feb, 2026 | 03:53 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உட்பட ஏனையவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கெஹல்பத்தரே பத்மேவுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சகல விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2024.09.21 ஆம் திகதி முதல் இன்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பெருந்தொகையான சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய முடக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 12 புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாட்டில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தரே பத்மே உட்பட ஏனையவர்கள் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நேரடியான தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சகல விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/239168

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்

3 weeks 3 days ago

20260220_1300382.jpg?resize=750%2C375&ss

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்.

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த பிரேரணையை தவிசாளர் கொண்டுவந்த நிலையில் , தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தவிசாளர் தனது பிரேரணையில் கருத்து தெரிவிக்கையில்,

மரணச் சடங்குகளின் போது வீதிகளில் வெடி வெடிப்பதால் வீதிகள் அசுத்தமடைகின்றன. அவற்றை பிரதேச சபையே சுத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே அந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் குறித்த வெடிகளை வெடிப்பவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபா கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

அவர்கள் எமது பிரதேச சபைக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தி அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே வெடிகளை வெடிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து சபையில் நீண்ட விவாதம், கருத்து முரண்பாடுகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், வெடி வெடிப்பது என்பது எமது மரபு. எமது மரபுகளுடனும், மக்களின் உணர்வுகளுடனும் விளையாடாதீர்கள். இந்த விடயத்திற்கு நான் எதிர்ப்பு என்று கூறியதுடன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் குறித்த பிரேரணையானது சபையில் நிறைவேற்றப்பட்டது.

20260220_1300381.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2026/1465726

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள் ; விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்

3 weeks 4 days ago

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள் ; விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்

20 Feb, 2026 | 02:45 PM

image

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நேற்றைய தினம் (19) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வெத்தன்சிங்கன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

f51730c9-8c27-44c3-a0e7-02b22db1a949.jpg

எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படவுள்ள துரித வளர்ச்சிக்குத் தேவையான மனித வளத்தைத் தயார் செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பாடசாலை மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான தெளிவை வழங்குவதே பிரதான நோக்கமாகும். 

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் விமானப் போக்குவரத்து சங்கங்களை நிறுவுதல், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், விமான நிலையச் செயற்பாடுகள் குறித்த களப்பயணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

568b8647-5be4-406e-a0c9-e16531fdc5e3.jpg

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக, சமூகத்தில் பலருக்கு விமானப் பொறியியலாளராகவோ அல்லது விமானியாகவோ வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை குறித்து போதிய தெளிவு இல்லை எனச் சுட்டிக்காட்டினார். 

தற்போது தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை விமானப் பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதிலும், அத்துறையில் போதிய ஆட்கள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, எமது இளைஞர் சமூகத்தை இலங்கைக்கு மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இத்துறை சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய தகுதியுள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

88235c07-7c84-4080-9752-d659a1b3f149.jpg

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரவுகளின்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறை மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான தகுதியுள்ள நபர்களை உருவாக்க விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார். 

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன உரையாற்றுகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளால் சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக புதிய விமான நிறுவனங்கள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், வட மாகாணத்தில் இத்துறையை அபிவிருத்தி செய்ய முன்வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்ததுடன், வட மாகாணத்தில் உள்ள வளங்களை உச்சகட்டமாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
https://www.virakesari.lk/article/239158

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

3 weeks 4 days ago

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

Feb 20, 2026 - 05:19 PM

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் பல்வேறு கட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த அறிக்கையை அமைச்சின் இணையதளத்தில் வெளியிட்டு, பொது அறிவித்தல் மூலம் அந்த அறிக்கை தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஒரு மாத காலம் வழங்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், உயர்கல்வித் துறை தொடர்பான உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்னவும், பாடசாலைகளில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பிரதி அமைச்சர் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன ஆகியோரும் முன்வைத்தனர்.

மேலும், பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ முன்வைத்தார்.

அத்துடன், தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளல் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmlutuk3a0007356pbcwwmasu

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

3 weeks 4 days ago

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி 

Published By: Vishnu

20 Feb, 2026 | 08:54 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரது சமூக வலைப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த நெரிசல் கொண்ட சுகாதார நிலையமாகும். இவ்வளவு பெரும் மக்கள் வருகையுள்ள சூழலில் வைத்தியசாலையை சுத்தமாகவும் சுகாதாரத் தரநிலைகளுக்கு இணங்கவும் பேணுவது எங்களின் முதன்மை பொறுப்பாகும்.

இத்தகைய நோக்கத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தினமும் இரவு பகலாக பணியாற்றி, வார்டுகள், நடைபாதைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மிகுந்த தூய்மையுடன் பராமரித்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு சேவையால் வைத்தியசாலை சுத்தமான சூழலை நிலைநிறுத்தி வருகிறது.

ஆயினும், சிலர் வெற்றிலைப் பயன்படுத்தி எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு முரணானதோடு, நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை முழுவதும் பதியப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் இத்தடை மீறப்படின், சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக அனுப்பப்படுவார்கள் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த வைத்தியசாலை உங்கள் அனைவரின் வைத்தியசாலையாகும். அதனை சுத்தமாகவும் சுகாதாரமான சூழலுடனும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, இத்தகைய செயல்களில் இருந்து முழுமையாக விலகி, சுத்தம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/239187

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!

3 weeks 4 days ago

harshana-nanayakkara.jpg?resize=750%2C37

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (19) தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,500 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. தற்போது அவை கிட்டத்தட்ட 39,000 பேரை அடைத்து வைக்கின்றன.

இவற்றில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், தண்டனை விதிக்கப்படாத அதிக எண்ணிக்கையிலான தடுப்புக் கைதிகள்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 20,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உட்பட, சுமார் 28,000 கைதிகள் தடுப்புக் காவலில் உள்ளனர்.

இந்த நிலையில், நீதிபதி யசந்த கோடகொடவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படும் முன்மொழியப்பட்ட சட்டம், சந்தேக நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றங்களை அனுமதிக்கும்.

இதனால் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ளும் கைதிகளுக்கான தண்டனைகளை மறுபரிசீலனை செய்ய அல்லது குறைக்க தற்போது எந்த கட்டமைக்கப்பட்ட வழிமுறையும் இல்லை.

நீண்டகால சிறைவாசிகளுக்கு தண்டனை குறைப்பு கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நீதிபதி துரைராஜா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை நீதிமன்றங்கள் சுமார் 1.1 மில்லியன் நிலுவையில் உள்ள வழக்குகளால் நிரம்பியுள்ளது.

தற்போதைய தலைமை நீதிபதியின் கீழ் வழக்குகளை தீர்ப்பதற்கான விகிதம் அதிகரித்துள்ளதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலஞ்ச வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதற்கு மேலதிகமாக ஏழு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

https://athavannews.com/2026/1465609

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் அரசுடைமை

3 weeks 4 days ago

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் அரசுடைமை

Feb 20, 2026 - 01:37 PM

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் அரசுடைமை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) வெளிப்படுத்தினார். 

பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்தச் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 'கெஹெல்பத்தர பத்மே' உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பல சொத்துக்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார். 

அமைச்சர் பாராளுமன்றில் சமர்ப்பித்த சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு, 

ஹப்புகொட ஆராச்சிகே கங்கானம்கே துமிந்த தில்ருக் 

முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு 23 மில்லியன் ரூபாய். இதில் ஒரு வேன், ஒரு மோட்டார் சைக்கிள், வீடு மற்றும் ரோலர் கேட் 

கந்தையா கலாமோகன், 

சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. 2 மோட்டார் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

திலூம் தாரக பாலசூரிய, 

8 இலட்சம் ரூபாய் முகப்பு மதிப்புக் கொண்ட 15 பேர்ச் காணியுடன் கூடிய இரண்டு மாடி வீடு. 

மொஹமட் ஹரீஷ் மொஹமட் 

2026.01.21 முதல் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன, பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை. மேலதிகமாக 5 வாகனங்கள் அரசுடமை 

மொஹமட் ஷியாம், 

2026.01.21 அன்று சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. கார் ஒன்று அரசுடமை. 

விஜேசூரிய மஹதுருகே உதித இரோஷன் விஜேசிறி, 

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 1 லொறி. 

இந்திக பத்மக்குமார, 

2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கெப் வாகனம் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் வைப்புச் செய்யப்பட்ட வங்கி கணக்கு. 

லஹிரு சம்பத், 

1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு முச்சக்கரவண்டி 

ஹெட்டியாரச்சிகே தோன ஸ்ரீயானி சந்திரலதா, 

6 கோடி ரூபாய் பெறுமதியான 14.7 பேர்ச் காணியும் நான்கு மாடி வீடு. 

கெஹெல்பத்தர பத்மே என்ற மந்தினு பத்மசிறி 

30 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுடன் கூடிய 20 பேர்ச் காணி, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 அறைகளைக் கொண்ட பாதி பூர்த்தியான கட்டிடம். 

தெஹிபாலா என்ற பட்டபெதிகே மத்துமகெ ஷெஹான் சத்சர 

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 பலநாள் மீன்பிடி படகுகள், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான 15.8 பேர்ச் காணி மற்றும் இரண்டு மாடி வீடு. 

ஜயசிங்ககே மதுரங்க சம்பத், 

5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 கெப் வாகனம், 14.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 வேன், 5 வங்கிக் கணக்குகளில் உள்ள 73.03 மில்லியன் ரூபாய், மற்றுமொரு கணக்கில் உள்ள 160,328.88 ரூபாய், 544 அமெரிக்க டொலர் மற்றும் 283 மில்லியன் ரூபாய் பணம். 

அதிகாரி சமந்த பெரேரா,

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 10.10 பேர்ச் காணி, 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 ஏக்கரும் 1.5 பேர்ச் காணி.

https://adaderanatamil.lk/news/cmlulu5wg0006356pisiutrnh

திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்

3 weeks 4 days ago

திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்

February 20, 2026

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின்  கோரிக்கைக்கு அமைவாக 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது இருப்பினும் குறித்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இவற்றை அகற்றுமாறு குறித்த திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்ததுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விகாராதிபதி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்கள் ஊடாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்டதுடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகளை அகற்றியிருந்தார்கள்.

இதன்பின்னர் 19.11.2025 அன்று குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் நவம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைத்து குறித்த விடயம் சர்ச்சையாகியிருந்ததுடன் குறித்த விடயம் திசைமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

https://www.ilakku.org/trincomalee-illegal-restaurant-set-up-on-the-beach-removed/

யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல்

3 weeks 4 days ago

யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல்

20 Feb, 2026 | 10:21 AM

image

யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியதாகக் கூறி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) இதில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) வலியுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், குறித்த கட்டுமானப் பகுதி ஒரு தாழ்வான கடலோர சதுப்பு நிலமாக இருப்பதையும், அது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெள்ளக் கட்டுப்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் வளப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பகுதி கண்டல் காடுகள் (Mangroves), உவர் சதுப்பு நிலங்கள், கடற்புல் படுக்கைகள் மற்றும் இயற்கை நீரோட்ட அமைப்புகளை கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. இவை கடல் மட்ட உயர்வு, சூறாவளி அலைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு எதிரான இயற்கை அரண்களாகச் செயல்படுகின்றன.

பாரிய அளவிலான நில நிரப்புதல், தாவர அழிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், இந்த இயற்கை சூழலமைப்புகள் நிரந்தர சேதமடையக்கூடும் என்றும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுமானத் திட்டம் பல்லுயிர் வாழ்விட இழப்பை ஏற்படுத்தி, கடலோர சூழலியல் சமநிலையை பாதிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தனது கடிதத்தில், 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் Terms of Reference வழங்கப்பட்டிருந்த போதிலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறை முழுமையாக நிறைவேறாமல் சுமார் 60 சதவீத கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது சட்டத்தின் ஆட்சி முறையை பாதிப்பதோடு, சுற்றுச்சூழல் ஆளுமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.

முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மதிப்பீடு மற்றும் பொதுமக்கள் ஆலோசனை இன்றி இத்தகைய பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமைகளை புறக்கணிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எதிர் அனுர சதரசிங்க’ என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையானவை அல்ல என்றும், அவை பொதுமக்களின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புகள் (Public Trust Doctrine) என்றும் நினைவூட்டியுள்ளது.

எனவே, முழுமையான சட்ட இணக்கப்பாடுகள் உறுதி செய்யப்படும் வரை யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வ பதில் வெளியாகும் வரை, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் நிதானமாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239125

⚓  காங்கேசன்துறை  துறைமுகத்தில் கள ஆய்வு

3 weeks 4 days ago

⚓  காங்கேசன்துறை  துறைமுகத்தில் கள ஆய்வு

adminFebruary 20, 2026

IMG_5046-scaled.jpeg?fit=1170%2C658&ssl=

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தை ஒரு பிராந்திய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாக (Regional Hub) மேம்படுத்தும் நோக்கில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்று நேரடி கள ஆய்வை மேற்கொண்டனர்.

காங்கேசன்துறை துறைமுகமானது இந்தியாவின் தென் பகுதிக்கும் இலங்கைக்கும் இடையிலான மிக நெருக்கமான கடல்வழிப் பாதையாக இருப்பதால், இதனை நவீனமயமாக்குவது அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார இலக்காகும்.பெரிய ரக சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் (Ferries) இலகுவாக வந்து செல்வதற்கு ஏதுவாக துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிக்கும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆராய்ந்தனர்.

இந்திய அரசாங்கத்தின் சுமார் 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் (Breakwater construction and Pier expansion) குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தற்போது இந்தியா – இலங்கை இடையே இயங்கும் கப்பல் சேவைகளை (Sivagangai Ferry) மேலும் வலுப்படுத்தி, பயணிகளுக்கான நவீன முனையங்களை (Terminals) அமைப்பதற்கான இடங்கள் பார்வையிடப்பட்டன. வடமாகாணத்தின் விளைபொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக துறைமுகத்தில் களஞ்சிய வசதிகளை (Warehouse facilities) உருவாக்குவது அமைச்சரின் பிரதான திட்டமாகும்.

அமைச்சர்கள் துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், ஏற்கனவே அமுலில் உள்ள ‘சகல’ (Sagar) கடல்சார் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்தனர்.

தற்போது நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கி வரும் ‘சிவகங்கை’ (Sivagangai) பயணிகள் கப்பல் சேவையை, வானிலை சீராக இருக்கும் பட்சத்தில் வாரத்தில் அதிக நாட்கள் இயக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ராமேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இது ஆன்மீக மற்றும் வர்த்தக சுற்றுலாவை (Religious & Business Tourism) மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் பயணக் கட்டணங்களைக் குறைப்பது மற்றும் பயணிகளுக்கான சுங்க வரி நடைமுறைகளை எளிதாக்குவது தொடர்பாக இந்தியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் கூற்றுப்படி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் பாரிய கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டு, 2028 ஆம் ஆண்டளவில் காங்கேசன்துறை ஒரு முழுமையான வர்த்தகத் துறைமுகமாக மாற்றப்படும் என்பது நோக்கத்தக்கது

IMG_5049.jpg?resize=800%2C450&ssl=1IMG_5054.jpg?resize=800%2C450&ssl=1IMG_5092.jpg?resize=800%2C450&ssl=1IMG_5151.jpg?resize=800%2C450&ssl=1IMG_5159.jpg?resize=800%2C450&ssl=1IMG_5173.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2026/229419/

சிம் மீள்பதிவு வர்த்தமானி: தொலைபேசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பா? - முஜிபுர் ரஹ்மான்

3 weeks 4 days ago

சிம் மீள்பதிவு வர்த்தமானி: தொலைபேசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பா? - முஜிபுர் ரஹ்மான்

Published By: Vishnu

20 Feb, 2026 | 05:24 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2019 காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 2019ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு, குறித்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, சிவராம், எக்னெலிகொட, போத்தல ஜயந்த மற்றும் தாஜுதீன் போன்றவர்களின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில் 2019 ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளின் தகவல்கள் அந்த நிறுவனங்களில் இல்லாமை காரணமாக சட்ட நடவடிக்கைகளுக்கு அது பிரச்சினையாக இருப்பதால், 2019ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும்போது, குறித்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறித்த நிறுவனங்களுக்கு நிபந்தனையாக தெரிவித்தே, அந்த நிறுவனங்களுக்கு அதுதொடர்பான அனுமதியை வழங்கி இருக்கிறது. அதனால்தான் நாங்கள் சிம் அட்டை பெற்றுக்காெள்ளும்போது எமது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்குகிறோம். அப்படியானால் யாரை பாதுகாக்க ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்த பல கொலைகள் 2019லே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக லசந்த விக்ரமதுங்க, தாஜுதீன் போன்றவர்களின் வழக்கு விசாரணை, தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினம் அது தொடர்பில் 60க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சென்றுள்ளன. அதனை தேடிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அப்போது டயலாேக் நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரியாக இருந்தவர்தான் ஹான்ஸ் விஜேசூரிய. அவர் தற்போது ஜனாதிபதியின் பொருளாதார ஆலாேசகர். அதேபோன்று தாஜுதீனின் கொலையை விபத்து என வழக்கின் பீ அறிக்கையை மாற்றிய பொலிஸ் குற்றப்பிரிவு எஸ்.பி. தற்போது பாெலிஸுக்கு பொறுப்பான அமைச்சின் ஆலோசகராக இருக்கிறார். இவ்வாறான நிலையில் தாஜுதீனின் கொலையாளியை கண்டுபிடிக்க முடியுமா?

இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகளுக்கு அரசியல் தொடர்பு காணப்படுகிறது. அதேபோன்று அது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு தொலைபேசி தகவல் பெறவேண்டியதாகும். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் இந்த கொலைகளுடன் தொடர்புபுடைய யாராவது, மீண்டும் அந்த சிம் அட்டையை பதிவு செய்வார்களா?இது இடம்பெறப்போவதில்லை. அப்படியானால், குறித்த தொலைபேசி நிறுவனங்கள் அந்தபொறுப்பில் இருந்து நீங்கிக்கொள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இடமளிக்கப்பட்டிருக்கிறது.

சிம் அட்டை விநியாேகித்த நிறுவனத்திடம், சிம் அட்டை உரிமையாளரின் தகவல்கள் இல்லை என அந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்க முடியாது. அப்படியென்றால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் புதிதாக சிம் அட்டைகளை பதிவு செய்த பின்னர், வழக்கு விசாரணைகளின்போது குறித்த தொலைபேசி நிறுவனங்கள், தங்களிடம் அதுதொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவிக்கும், அப்போது அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடியாகும். அதனால் ஜனாதிபதி இந்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாப்பதற்கா இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என கேட்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/239111

🚨  யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்   காவல்நிலையத்தில் முறைப்பாடு

3 weeks 4 days ago

🚨  யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்   காவல்நிலையத்தில் முறைப்பாடு :

adminFebruary 20, 2026

Gtn1.png?fit=900%2C1200&ssl=1

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் விநியோகிக்கப்பட்ட அரசியல் துண்டுப் பிரசுரங்கள் இந்த சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் விநியோகிக்கப்பட்ட தினசரிப் பத்திரிகைகளுக்குள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பெயரிலான துண்டுப் பிரசுரங்களும் வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கருத்து, அவரது கௌரவத்திற்கும் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தனது நற்பெயரைப் பாதுகாக்குமாறு அவர் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் ரீதியான பிரசாரங்கள் அல்லது தனிநபர் விமர்சனங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வைத்தியசாலை போன்ற பொது சேவை மையங்களுக்குள் விநியோகிக்கப்படுவதை நிர்வாகம் பொதுவாக அனுமதிப்பதில்லை. இந்தப் பின்னணியில், பத்திரிகை விநியோகஸ்தர்கள் ஊடாக இவை எவ்வாறு உள்ளே வந்தன என்பது குறித்தும் காவல்துறையினா் ஆராய்ந்து வருகின்றனர். வைத்தியசாலைக்குள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் துண்டுப் பிரசுரங்கள் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளியாகும்.

அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு செயற்படும் ஒரு புதிய அரசியல் கட்சியாகும். இதன் நிறுவனராகவும், முக்கிய செயற்பாட்டாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (MP Ramanathan Archchuna) அறியப்படுகிறார். அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் செயற்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் “ஆதாரமற்ற மற்றும் தரக்குறைவான” கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினசரி பத்திரிகைகளின் உள்ளே வைத்து இவை விநியோகிக்கப்பட்டதன் மூலம், பொதுமக்களிடையே திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டக்கோவையின் கீழ், ஒரு அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலான இந்த மோதல் கடந்த சில மாதங்களாகவே தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2026/229413/

அரசியல் கைதிகள் விவகாரம்: நீதியரசர் துரைராஜா தலைமையிலான குழு ஆய்வு - ஹர்ஷன நாணயக்கார

3 weeks 4 days ago

அரசியல் கைதிகள் விவகாரம்: நீதியரசர் துரைராஜா தலைமையிலான குழு ஆய்வு - ஹர்ஷன நாணயக்கார

Published By: Vishnu

20 Feb, 2026 | 04:13 AM

image

(நா.தனுஜா)

அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'அரசியல் கைதிகள் என்ற பதத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரால் வௌ;வேறு வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதற்கு அப்பால், எமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் பலர் உள்ளனர். அவர்களது தண்டனைக்காலத்தை நினைத்தவாறு குறைக்கமுடியாது' என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலமாகத் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகளின் தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுதலை செய்தல் என்பன தொடர்பில் எவ்வித இன, மத அடிப்படையிலான பாகுபாடுமின்றி நடுநிலையாக ஆராய்ந்து வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்புடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/239105

ஓட்டிசம் விழிப்புணர்வு: இலங்கையில் உலகின் மிக நீளமான உணர்வுசார் சுவர் ‘சென்சரி’ சுவர்நிர்மாணம்

3 weeks 4 days ago

ஓட்டிசம் விழிப்புணர்வு: இலங்கையில் உலகின் மிக நீளமான உணர்வுசார் சுவர் ‘சென்சரி’ சுவர்நிர்மாணம்

Published By: Vishnu

20 Feb, 2026 | 03:31 AM

image

நாட்டில் ஓட்டிசம் எனப்படும் மதியிறுக்க நிலை குறித்த விழிப்புணர்வை அடிமட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் நோக்கில், ‘மரக் 2026’ எனும் பாரிய தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி கண்டியில் உலகின் மிக நீளமான 'உணர்வுசார் சுவர்' ( சென்சரி வோல்) எனும் கட்டமைப்பை நிறுவி, கின்னஸ் உலக சாதனை படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை( 18 ) கொழும்பு நைன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத் திட்டம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கைத் தொட்ர்பில் ‘ட்ரீஹவுஸ் சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளரும், ஓட்டிசம் தொடர்பான சர்வதேச நிபுணருமான வைத்தியர் அந்தோனி ஜேம்ஸ் தெரிவிக்கையில்,

சர்வதேச தரவுகளின்படி , இன்று 31 குழந்தைகளில் ஒருவருக்கு ஓட்டிசம் பாதிப்பு உள்ளது. இது நாட்டில் ஒரு 'அமைதியான நெருக்கடியாக நிலவிவருகிறது. இலங்கையில் உள்ள 23 மில்லியன் மக்களில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஓட்டிசம் என்றால் என்ன என்பதை உண்மையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது இலக்கு. ஓட்டிசம் பாதிப்புடையவர்கள் உலகை உணரும் விதம் சாதாரண மக்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களது மூளை புலன் தகவல்களைச் செயலாக்கும் விதம் வேறானது. இதனைப் பொதுமக்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலேயே இந்த 'உணர்வுசார் சுவர்' உருவாக்கப்படுகிறது.

தொட்டுணரக்கூடிய மற்றும் ஒளி, சத்தம் போன்ற பல்வேறு புலன்களைத் தூண்டக்கூடிய பாகங்கள் இச்சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இலங்கையின் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு, பல்வேறு பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் பங்களிப்புடன் இச்சுவர் வடிவமைக்கப்படவுள்ளது. செர்பிய மொழியில் இருந்து பெறப்பட்ட 'மரக்' என்ற சொல்லுக்கு, சிறு சிறு விடயங்களில் ஆழ்ந்த அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கண்டறிதல் என்று பொருள். ஓட்டிசம் கொண்ட ஒவ்வொரு தனிநபரும் தனித்துவமானவர்கள் என்பதையே இப்பெயர் குறிக்கின்றது என்றார்.

2022 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய டொக்டர் அந்தோனி ஜேம்ஸ், இலங்கையில் 'பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு எனும் சான்று அடிப்படையிலான சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் இச்சிகிச்சைக்காக இலங்கையை நாடி வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

https://www.virakesari.lk/article/239102

மகா சங்க மாநாடு இன்று!

3 weeks 4 days ago

மகா சங்க மாநாடு இன்று!

Feb 20, 2026 - 07:58 AM

மகா சங்க மாநாடு இன்று!

தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் 'மகா சங்க மாநாடு' இன்று (20) நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிக்குகளுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், பிரிவினைவாதத்திற்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் எதிராகச் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து, மக்கள் மனு ஒன்றில் கையெழுத்திடும் வேலைத்திட்டம் நேற்று (19) ஆரம்பமானது.

பெப்லியான சுனேத்ராதேவி மகா பிரிவெனா வளாகத்தில் இந்த மக்கள் மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பமானதாக 'அட தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்களான மேதகொட அபயதிஸ்ஸ தேரர், இந்துராகாரே தம்மரதன தேரர் மற்றும் மல்வானே சந்தரதன தேரர் ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குணதாச அமரசேகர மற்றும் கல்யாணந்த திராணகம உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தேசிய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் மனுவை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmlu9ryae0004356p79ibzupu

மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDக்கு அழைப்பு

3 weeks 4 days ago

மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDக்கு அழைப்பு

Feb 20, 2026 - 06:29 AM

மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் அவரை நிதி குற்றப் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்து கொள்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmlu6k4jb0001356pdla0dnwx

மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்

3 weeks 5 days ago

மன்னார் - புத்தளம் வீதியை திறந்து தாருங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள்; இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் போராட்டம் மேற்கொள்வோம் - ரிஷாத் பதியுதீன் 

19 Feb, 2026 | 07:10 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

100 வருடங்கள் பழைமை வாய்ந்த மன்னார் புத்தளம் வீதியை திறந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள். இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை புத்தளத்தில் இருந்து வாக்களிக்க பஸ்ஸில் கொண்டுசென்ற வழக்கில் நான் 3மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மாதங்களில் அந்த வழக்கில் இருந்து நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன். ஆனால் எனக்கு உதவி செய்த சிலரின் வழக்கு விசாரணைகள் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதுதாெடர்பான அறி்கையை வழங்காதமமையால் வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவிக்கின்றனர். அதனால் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதாவது இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து திருந்தி, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மன்னார் போன்ற இடங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை அரசாங்கம் நினைத்தால் நிறுத்தலாம். அதற்கு கடற்படை அதிகாரிகளை நீண்டகாலத்துக்கு அங்கு நிறுத்தக்கூடாது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் போதைப்பொருள் கடத்தலுன் தொடர்பு பட்டிருப்பதாக நான் இந்த சபையில் தெரிவித்தபோது, அவருக்கு எதிராகநடவக்கை எடுக்கப்படுவதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவரை இடமாற்றம் செய்ததே தவிர வேறு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் மன்னாருக்கு சென்றால், கடத்தல் காரர்கள் சாப்பாடு கொடுக்கிறார்கள். இவ்வாறு செயற்படும்போது எப்படி அந்த பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நிறுத்த முடியும்? அதனால் மன்னாருக்கு செல்லும் அமைச்சர்கள் புத்தியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று அதிகமான பள்ளிவாசல்களில் அல் குர்ஆனுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. குர்ஆன் விளக்க புத்தகங்கள் இறக்குமதி செய்வதற்கு இருந்துவரும் தடையே இதற்கு காரணமாகும். ஏனைய மத புத்தகங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டுவருவதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சில் அதற்கான அனுமதியை பெறவேண்டி இருக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல. இது கோட்டா என அராஜகன் போட்ட தடை. ஆனால் அது இந்த அரசாங்கத்திலும் தாெடர்கிறது. ஏன் அநுர அரசாங்கத்துக்கு அதனை மாற்ற முடியாதா? துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு25 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு அனுப்பியபோதும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மஹர பள்ளிவாசல் இன்னும் மூடப்பட்டே இருக்கிறது. மதத்த்துக்கு பொறுப்பான பிரதி அமைச்சருக்கும் பல தடவைகள் இதுதொடர்பில் தெரிவித்து வந்தபோதும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. அதனால் ரமழான் காலத்தில் அந்த மக்கள் வழிபாடுகளில் ஈடுபட மஹர பள்ளிவாசலை திறந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் மன்னார் புத்தளம் வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தபோது பொய்யான கருத்துக்கள் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டது. அதனால் 100 வருடம் பழைமைவாய்ந்த இந்த வீதியை திற்ந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்று பாதையை கடல் ஓரமாக அமைத்துத்தாருங்கள் இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம்.இந்த பாதை கம்பஹாவிலோ அம்பாந்தோட்டையிலோ இருந்தால் இவ்வாறு மூடி வைத்திருப்பீர்களா? அந்த பாதையை அதிகம் தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படு்த்துவதாலே உங்களது கண்கள் இந்த விடயத்தில் குருடாக இருக்கின்றன.

அத்துடன் வில்பத்துவில் காடுகள் அழிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பெரிய அறிவாளி போன்று பேசுகிறார். அவர் தெரிவிக்கும் விடயங்கள் அனைத்தும் பொய்யான கருத்தாகும். வில்பத்துவில் ஒரு அங்குலம்கூட காடு அழிக்கப்படவில்லை. விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த மண்ணிலேயே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு பின்னர் அந்த காணிகள் காடாக இருந்தன. அதனால் அந்த மக்களை குடியேற்ற காடுகளை அழிக்க வேண்டி ஏற்பட்டது. அதனையும் சட்ட ரீதியிலே மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு இல்லை என்றால் முடிந்தால் அதனை நிரூபியுங்கள்.

மன்னாரில் அந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக இந்த காடுகளை அழித்ததாக தெரிவித்து, மன்னார் புத்தளம் வீதியை திறக்காமல் இருப்பதற்கு இந்த சபையில் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/239077

Checked
Tue, 03/17/2026 - 22:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr