80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா
17 Feb, 2026 | 07:56 PM

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாகும். அதனால் பதிவுக்காக காத்திருக்கும் 80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2020ஆம் ஆண்டு புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆனால் புத்தசாசன திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற பிரிவெனாக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அறநெறி பாடசாலைகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மிஷனரி பாடசாலைகள் என்பவற்றை பதிவு செய்வதற்கான முறையான அனுமதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதுடன் அது மிகவும் சுமூகமாகவும் இடம் பெற்று வருகின்றது. இலங்கையில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்களை பதிவு செய்வது தற்போதைய நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கல்வி, சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் நாடு முழுவதிலுமிருந்து பதிவிற்காக விண்ணப்பித்த சுமார் 80 அரபுக் கல்லூரிகளுக்கும், மதரசாக்களுக்கும் பல ஆண்டுகளாக பதிவு செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை.
மேற்படி பதிவு இடைநிறுத்தத்தின் காரணமாக, குறித்த அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்கள் இயங்குவதில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அரச ரீதியாக அங்கீகாரம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல வருடங்கள் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களது கல்வி முயற்சிக்கு உரிய சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையில் தவிப்பதோடு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி, ஒழுக்கப் பயிற்சி மற்றும் சமுக வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பதிவு இடைநிறுத்தம் காரணமாக இந்த மார்க்கக் கல்வி தொடர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டு, சமூகத்தில் தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கை குறைபாடுகள் உருவாகும் அபாயமும் காணப்படுகிறது. அத்துடன், பதிவு இல்லாத கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுவதால், வங்கி கணக்குகள், நிதி உதவிகள், வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக சட்டம் மற்றும் நடைமுறை ரீதியான குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.
நமது நாடும், முழு உலகமும் வேண்டி நிற்கின்ற நல்லொழுக்கங்களையும் உயரிய பண்புகளையும் கற்றுக் கொடுக்கின்ற இம் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதி .
எனவே, மேற்படி நிலைமைகளை கருத்திற்கொண்டு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வது தொடர்பான நடைமுறையை விரைவாக தெளிவுபடுத்தி, பதிவு செயல்முறையை மீண்டும் ஆரம்பிக்க அல்லது உரிய வழிகாட்டுதல்களை வழங்க தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும்.
அதனால் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு ஆவண செய்ய முடியுமா?மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என கேட்கிறேன் என்றார்.
https://www.virakesari.lk/article/238910