புதிய பதிவுகள்2

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 3 weeks ago
திரும்பவில்லை "அவர்கள் திரும்பி வருவார்கள்..." அந்த நம்பிக்கையில் தான் — தாய்கள் தூங்காமல் வாழ்ந்தனர், சகோதரிகள் கண்கள் சோர்ந்தது எதிர்பார்ப்பில், பிள்ளைகள் கதவுகள் ஓரம் கண்பார்த்து வளர்ந்தனர். ஒரு நாள் – ஒரு குரல் கேட்கும், ஒரு நிழல் திரும்பும், ஒரு நினைவாய் கதவு தட்டும்… என நம்பினோம். ஆனால் வந்தது அவர் இல்லை வந்தது ஒரு செய்தி. செம்மணியில் — அவர் பெயரற்ற எலும்பாக மண்ணடியில் கிடப்பதாக. அந்தக் குழியில் புதைந்தது — ஒரு உடலல்ல, ஒரு உறவின் கனவு, ஒரு இனத்தின் நம்பிக்கை. அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். மண் இன்னும் உதிரும் உண்மை சொல்கிறது — "அவர்கள் திரும்பவில்லை… ஏனெனில் நீதி அவர்களுடன் இந்த நிலத்துக்குள் புதைக்கப்பட்டது." 🕯️ நாம் அவர்களை திரும்ப பெற முடியாது… ஆனால், நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியாதா? "அவர்கள் திரும்பி வருவார்கள்…" அந்த நம்பிக்கையோடுதான் ஒரு இனத்தின் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும், பிள்ளைகளும் தினமும் வாழ்ந்தனர். ஒரு நாளாவது – அவர் மீண்டும் வருவார், ஒரு குரல் கேட்கும், ஒரு நினைவாய் கதவை தட்டுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் வந்தது அவர் அல்ல வந்தது ஒரு தகவல். செம்மணியில்—அவர் பெயர் தெரியாத எலும்பாகக் கிடப்பதாக. அந்தக் குழியில்தான் புதைந்தது, அவர் மட்டும் அல்ல... ஒரு உறவின் எதிர்பார்ப்பு, ஒரு இனத்தின் நம்பிக்கையும். அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். அந்த மண் இன்னும் சொல்கிறது – “அவர்கள் திரும்பவில்லை, ஏனெனில் அவர்களுடன் நீதி ஒரு நாட்டின் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது.” 🕯️ நாம் அவர்களை திரும்பப் பெற முடியாது. ஆனால் அவர்களுக்கான நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியுமா? (முகநூலில் படித்த கவிதை.)

புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது

2 months 3 weeks ago
உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள இந்த ரத்த வகையின் சிறப்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 ஜூலை 2025, 01:41 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் 'க்வாட நெகடிவ்' (Gwada Negative) என்றழைக்கப்படும் உலகின் 48வது ரத்தப் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவு உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் க்வாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாக கொண்டவர். அந்த இடத்தை குறிக்கும் வகையிலேயே இந்த ரத்தப்பிரிவுக்கு 'க்வாட' நெகடிவ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவை பிரான்ஸ் நாட்டின் தேசிய ரத்த முகமையான Établissement Français du Sang (French Blood Establishment) கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை சர்வதேச குருதியேற்றல் அமைப்பு (International Society for Blood Transfusion) அங்கீகரித்து, PIG7 எனப்படும் உலகின் 48வது ரத்தப்பிரிவாக அடையாளப்படுத்தியுள்ளது. 2025 ஜூன் மாதம் வரையில் உலகில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே இந்த ரத்தவகை இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்தம் எவ்வாறு அரிதான வகையாகிறது? குறிப்பிட்ட ஒரு ரத்த வகை அரிதானதா என்பதை தீர்மானிக்க, பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் ஆன்டிஜன் அந்த ரத்த வகையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயிரத்தில் ஒருவருக்கும் குறைவாக அந்த ரத்த வகை இருந்தால் அது அரிய ரத்த வகை எனப்படும். இப்போது கண்டறியப்பட்டுள்ள ரத்தப் பிரிவின் அரிய அம்சம் இதில் EMM antigen இல்லை என்பதே ஆகும். EMM antigen கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிலும் காணப்படுவதாகும். EMM antigen என்பது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் காணப்படுவதாகும். இது சில புரதங்களை செல்கள் மீது பொருத்த உதவியாக இருக்கும். நமது உடல், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை தன்னுடைய செல்கள் தான் என்று கண்டறியும் 'குறியீடு'களாக EMM antigen செயல்படும். க்வாட நெகடிவ் எவ்வாறு கண்டறியப்பட்டது? 2011-ம் ஆண்டில், 54 வயதான குவாடலூப்பை சேர்ந்த அந்த பெண், தனது அறுவை சிகிச்சைக்கு முன்பாக சில ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது ரத்தத்தில் சில வித்தியாசங்கள் இருப்பதை பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கவனித்தனர். ஏற்கெனவே உள்ள ரத்த வகைகளுடன் அவரது ரத்தம் பொருந்தவில்லை. ஆனால் எதனால் அவருக்கு அப்படி உள்ளது என்று கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. பிரான்ஸ் தேசிய ரத்த முகமையை (EFS) சேர்ந்த ஆய்வாளர்கள் தியர்ரி பெய்ரார்ட் மற்றும் ஸ்லிம் அசௌசி உள்ளிடோர் கொண்ட குழு தொடர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். 2019ம் ஆண்டில், மரபணு வரிசைப்படுத்துதலில் நவீன வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதிக எண்ணிக்கையிலான மரபணுக்களை மிக வேகமாக வரிசைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உருவாகியிருந்தன. அதன் பின்னரே புதிய ரத்த வகைக்கு காரணமான தனித்துவமான மரபணு திரிபினை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர் தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார். இந்த மரபணு திரிபின் காரணமாகவே EMM antigen உற்பத்தியாவதில்லை. அரிய ரத்த வகை வந்தது எப்படி? க்வாட ரத்த வகை கண்டறியப்பட்ட பெண்ணின் பெற்றோர் இருவருமே மேற்சொன்ன மரபணு திரிபினை பெற்றிருந்தனர். எனவே, இருவரிடமும் இருந்து இந்த மரபணு திரிபினை அந்த பெண் பெற்றுள்ளார். தற்போது வரை உலகத்தில் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டுள்ள நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பதால், அவரால் வேறு யாரிடம் இருந்தும் ரத்த தானம் பெற முடியாது என்று தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார். உலகில் கிட்டத்த அனைவருமே EMM antigen பெற்றிருப்பதால் அவரால் வேறு ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாக பெற முடியாது. எனவே இதே ரத்த வகை கொண்ட வேறு நபர்கள் அவர் பிறந்த க்வாடலூப் தீவிலோ அதன் அருகில் உள்ள பகுதிகளிலோ வாழ்கிறார்களா என்று கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அரிய ரத்த வகையால் ஏற்படும் சவால்கள் அரிய ரத்த வகை கொண்டவர்களுக்கு, அதே ரத்த வகையைத்தான் தானமாக பெற முடியும். ஒரு வேளை மாற்று ரத்தம் செலுத்தப்பட்டால், அவர்களிடம் இல்லாத ஆண்டிஜன் உடலுக்குள் சென்று விடும். அந்த ஆண்டிஜனை அவர்களின் உடல் ஏற்காது. அதனை உடல் தமக்கு அந்நியமாக கருதி தாக்கத் தொடங்கும். நுண் உயிரியலாளரான ஷண்முகப்பிரியா "ரத்த வகையை மாற்றி உள்ளே செலுத்துவது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். பாம்பே குரூப் எனும் அரிய ரத்த வகையில் எச் ஆண்டிஜன் (H antigen) இருக்காது. அந்த ஆண்டிஜன் நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் உண்டு. எனவே பாம்பே ரத்த வகை கொண்டவர்களுக்கு ரத்தம் செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற அரிய வகை ரத்தம் கொண்டவர்களுக்கு தங்களுக்கு தாங்களே ரத்தம் செலுத்திக் கொள்ளும் முறை உள்ளது. அவர்களது ரத்தத்தை தாங்களே தானமாக அளித்து சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். ரத்தத்தின் வெவ்வேறு கூறுகளை தனித்தனியாக சேமித்து வைக்க முடியும். சில கூறுகளை ஓராண்டு காலம் வரை வைத்துக் கொள்ள முடியும். ஆண்டிஜன்கள் இல்லாத பிளாஸ்மா போன்ற கூறுகளை எந்த கொடையாளரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்" என்கிறார். உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது? அரிதிலும் அரிதான ‘பாம்பே ஓ’ ரத்த வகை: ரத்த தானம் செய்யும் கொடையாளர்கள் உங்கள் ரத்த வகை மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்குமா? உடலில் வேறுவகை ரத்தத்தை ஏற்றினால் என்னவாகும்? அரிய வகை ரத்தம் கொண்ட கர்ப்பிணி பெண்களில் மாற்று ரத்தப்பிரிவு கொண்ட தங்கள் குழந்தையின் செல்களுக்கு எதிரான செல்களை தங்கள் உடல் உருவாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது. "O நெகடிவ் போன்ற ரத்தப்பிரிவு கொண்ட கர்ப்பிணிகளுக்கு, பேறு காலத்தின் இறுதிக் கட்டத்தில் சில ஆண்டிபாடிகள் வழங்கப்படும். வழக்கமாக ரத்த ஓட்டம் தாயிலிருந்து குழந்தைக்கு செல்வதாகவே இருக்கும். ஒரு வேளை குழந்தையிடமிருந்து தாய்க்கு ரத்தம் ஓட்டம் இருந்தால் அதனால் நேரும் விளைவுகளை தடுக்க இந்த ஆண்டிபாடிகள் வழங்கப்படும்." என்று ஷண்முகப்பிரியா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1k8wlern1ro

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

2 months 3 weeks ago
சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்.... மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂

நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா

2 months 3 weeks ago
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி 03 JUL, 2025 | 04:02 PM புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார். தலாய் லாமா அறிவிப்பும், சீனா தலையீடும்: இந்தியாவில் தஞ்சமடைந்து தரம்சாலாவில் வாழ்ந்து வரும் 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை (காடன் போட்ராங் அறக்கட்டளை) தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் உறுதி செய்தார். ஆனால், புத்த மதத் தலைவரான தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்து இந்த அறிவிப்பில் சீன அரசு முரண்பட்டுள்ளதுடன், புதிய தலாய் லாமாவை தேர்வு செய்வதில் தலையிடும் முனைப்பில் இருக்கிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்தப் பின்னணியில்தான், 14-வது தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்த அறிவிப்புக்கு ஆதரவாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பவுத்தருமான கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்த தின விழா வரும் 6-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில், மத்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜுவும், ராஜீவ் ரஞ்சன் சிங்கும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. https://www.virakesari.lk/article/219111

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

2 months 3 weeks ago
🤣கல்லுண்டாய் குப்பை மேட்டிலை குமாரசாமியின்ரை கோவணத்தையும் கிழிச்சு தொங்க விடுறதுக்கெண்டே ஒரு கும்பல் அலையுது😂

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

2 months 3 weeks ago
நல்ல பாம்பாக இருக்குமோ? அசையாமல் இருந்திருக்குது. எப்படி இந்த மலைப்பாம்புகளை உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு இயல்பாக நடந்திருக்க முடியும்? ஒருவேளை பயணப்பெட்டியில் உள்ளாடைக்குள் சுற்றி மறைத்து வைத்திருந்திருந்திருப்பாரோ? வாசகர்களை குழப்பியடிக்கிற மாதிரியான செய்திகள்! நீங்கள் ஒன்றையும் மறைத்து கொண்டுவரவில்லைத்த்தானே சிறியர்? எனக்குத்தெரியும் நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரல்ல.

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

2 months 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அழுத்தம் கொடுப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது! செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது. முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய ஆலோசனைகள் என்பவற்றுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை ஆதரிப்பது தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, அந்த நாட்டு நாடாளுமன்றில் எழுத்து மூல கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் (Catherine West), இந்த பிரச்சினையில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1438148

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 3 weeks ago
பலர் தாறுமாறாக புதைக்கப்பட்டுள்ளதை செம்மணி மனித புதைகுழியில் காணக்கூடியதாக உள்ளது – சட்டத்தரணி மணிவண்ணன் 05 JUL, 2025 | 10:49 AM செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் அகழ்வாய்வு பணிகள் நடைபெறுகின்றன என்ற அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் சார்பிலும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். செம்மணி சித்தப்பாத்தியிலே 11க்கு 11 என்ற விஸ்தீரணமான இடத்திலே அகழ்வு பணிகள் இடம்பெற்றாலும் சற்று அருகில் உள்ள ஏனைய பகுதியொன்றிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது. மேலதிகமான இடங்களிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெறலாம் என்று அனுமானங்கள் காணப்படுகிறது. மனிதப் புதைகுழிக்குள் சடலங்கள் மீடகப்படும் விதத்தை பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது. நாற்பதை கடந்தும் மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருப்பது மிகப்பெரிய மனித புதைகுழி இந்த பிரதேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தென்பட வைக்கிறது. உலகம் முழுவதிலும் பல்வேறுபட்ட மனித புதைகுழிகள் அகழப்பட்டிருந்தாலும் கூட அவை எல்லாவற்றிலும் இருந்து சற்று வித்தியாசமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இந்த மனிதப் புதைகுழி காணப்படுவதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த எலும்பு கூட்டுத் தொகுதியிலே எந்த ஒரு உடைகளும் கண்டெடுக்கப்படாமல் இருப்பதும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதும் திட்டமிட்ட கொலை ஒன்று திட்டமிட்ட ரீதியிலே நடைபெற்று புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. தடயங்களை சரியாக கண்டுபிடிக்ககூடாதவாறு திசை திருப்பும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் சடலங்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட போது முன்னெடுக்கப்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக சட்டத்தரணிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக முக்கியமாக இந்த அகழ்வு பணி ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது. தற்போது கூட செம்மணி மற்றும் நாவற்குழி பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு எழுத்தானை மனு மீதான விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அதற்கான கட்டளை எதிர்வரும் 11 ஆம் திகதி வழங்கப்பட இருக்கின்ற நிலையில் இவ்வாறான தடயங்கள் வெளிப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயமாகும். செம்மணி புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையிலே ஆட்கொணர்வு மனுவிலே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களின் சாட்சியங்கள் இந்த எலும்பு கூட்டு பகுதியை அடையாளப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். அந்த வகையில் மிக நேர்மையாக அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் சர்வதே கண்காணிப்பின் கீழான ஒரு முழுமையான ஆராய்ச்சி இங்கு நடத்தப்பட வேண்டும். கொலைகள் மூடி மறைக்கப்பட முடியாதவை. இதன் பின்னணி உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சாட்சியத்திலே 600 வரையான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார். இந்த அனைத்து பின்னணிகளும் ஆராயப்பட்டு இதிலே கொல்லப்பட்டவர்கள் மற்றும் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதுவரை சட்டத்தரணிகளாக நாங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு பணியின்போது சட்ட உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219217

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
'44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? படக்குறிப்பு, உடற்கூறாய்வு அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டாலும், மரணத்துக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், ஒரே இடத்தில் தொடர்ச்சியாகத் தாக்கியதன் விளைவாக ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணம் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அஜித்குமாரின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தது எது? சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவரின் ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக புகார் எழுந்தது. புகார் அடிப்படையில், கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் ஊழியர்கள் ஒப்படைத்தனர். படக்குறிப்பு, கோவிலின் பின்புறம், இங்கு வைத்துதான் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை தனிப்படை பிரிவுக்கு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றியுள்ளார். காவலாளி அஜித்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மறுநாள் (28ஆம் தேதி) அவர் உயிரிழந்தார். கோவிலில் இருந்து அஜித்குமாரை ஆட்டோவில் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாக, அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன? மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 28ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் இறந்த நிலையில் அஜித்குமார் கொண்டு வரப்பட்டதாக, உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மறுநாள் காலை 5.45 மணியளவில் அஜித்குமாரின் உடலை மருத்துவர் சதாசிவம் மற்றும் மருத்துவர் ஏஞ்சல் தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்துள்ளனர். சுமார் மூன்று மணிநேரம் 35 நிமிடங்கள் அது நடந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதில் காயங்கள் பலவும் கன்றிப் போன நிலையில் இருந்துள்ளன. மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இரு காதுகளிலும் உலர்ந்த நிலையில் ரத்தம் காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜித்குமாரின் இதயம், நுரையீரல், கல்லீரல், மூளை ஆகியவை ரசாயனம் (chemical analysis) மற்றும் திசுப் பகுப்பாய்வுக்கு (histopathological) அனுப்பப்பட்டுள்ளது. 'ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்கள்' படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் "மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படாத நிலையில், காவலர்கள் தாக்கியதால் காவலாளிக்கு மரணம் ஏற்பட்டிருக்குமா?" என்று மருத்துவரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் தலைவருமான டிகாலிடம் பிபிசி தமிழ் கேட்டது. "மொத்தமாக 44 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 13 முதல் 16 வரை வகைப்படுத்தப்பட்டுள்ள காயங்கள் என்பது ஒரு காயம் மட்டும் அல்ல. இவை ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்களாக உள்ளன" என்கிறார். தொடர்ந்து ஒரே இடத்தில் அடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கணக்கிட்டால் சுமார் 70க்கும் மேற்பட்ட புறக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கலாம் எனக் கூறும் டிகால், "சுமார் 12 செ.மீ அளவில் தசைகள் வரை காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார். மரணத்திற்கு காரணம் என்ன? படக்குறிப்பு, திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் "அதேநேரம், இதயம், நுரையீரல் உள்பட பிரதான உறுப்புகளில் எங்கும் அடிபடவில்லை. மூளையில் மட்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரிழப்பை உடனே ஏற்படுத்த வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார் டிகால். "அஜித்குமாரின் உடலில் எலும்பு முறிவு எதுவும் காணப்படவில்லை" எனக் கூறும் டிகால், "எல்லாம் கன்றிப் போன காயங்களாக உள்ளன. அஜித்குமார் இறந்து போவார் என காவலர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை" எனக் குறிப்பிட்டார். "பல்வேறு காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தக் கசிவினால் இறப்பு ஏற்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் டிகால், "இது நியூரோ ஜெனிக் ஷாக் (neuro genic shock) எனக் கூறப்படுகிறது. அடிக்கும்போது ஒவ்வோர் இடத்தில் ஏற்படும் வலியும் மூளைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்" என்கிறார். உடலில் மூன்று லிட்டருக்கும் குறைவாக ரத்த சுழற்சி ஏற்பட்டால் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் இது ஹைப்போ வாலிமிக் ஷாக் (hypo volemic shock) என அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீரிழப்பு ஏற்படுவதை மேற்கோள் காட்டிய டிகால், "நீரிழப்பைச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். அதைப் போல ரத்தம் சுழற்சி அடைவதில் (blood circulation) பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும்" என்கிறார். "அடிக்கும்போது ஒவ்வொரு காயத்துக்கு உள்ளும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மூளைக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரத்தக்கசிவு வேகமாக ஏற்பட்டிருந்தால் மரணமும் விரைவாக ஏற்பட்டிருக்கும்" எனக் கூறுகிறார் டிகால். காவலாளியின் உடலில் காயங்கள் பலவும் கன்றிப் போய் இருப்பதால், உடலில் உள்ள ரத்தம் மீண்டும் சுழற்சிக்கு வரவில்லை எனக் கூறும் டிகால், "அழுத்தம் குறையும்போது போதிய ஆக்சிஜனை மூளைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கலாம்" என்றார். மிளகாய்ப் பொடி போட்டதற்கான ஆதாரம் உள்ளதா? படக்குறிப்பு, மடப்புரம் கிராம மக்கள் கோவிலில் அஜித்குமாரை தாக்கும்போது அவர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டபோது, அங்கிருந்த மிளகாய்ப் பொடியைக் கரைத்து அவர் வாயில் காவலர்கள் ஊற்றியதாக அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படவில்லை. "பிரேத பரிசோதனையின்போது ஆடைகளையும் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் முடிவுகள் வரும்போது மிளகாய்த் துகள்கள் இருந்ததா எனத் தெரிய வரும். ஆனால், அவரது உடலில் மிளகாய்ப் பொடி இருந்ததாக விவரங்கள் இல்லை" எனக் கூறுகிறார் டிகால். "நாக்கு கடிபட்டுக் காயம் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கடித்திருக்கலாம். திசுப் பகுப்பாய்வு முடிவுகள் வருவதற்கு ஓரிரு மாதங்கள் தேவைப்படும். அதன் பிறகே இறுதி முடிவை வெளியிடுவார்கள்" எனக் கூறுகிறார் டிகால். அவரது கூற்றுப்படி, "அஜித்குமாருக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்னைகளும் இல்லை. முதல்கட்ட அறிக்கை எனக் கூறப்பட்டாலும் இதை இறுதி அறிக்கையாகவும் பார்க்கலாம். இவ்வளவு காயங்களுடன் ஒரு மனிதர் உயிர் வாழ்வது கடினம்." அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. '24 மணிநேர சித்ரவதை' படக்குறிப்பு, அஜித் குமாரின் தம்பி நவீன்குமார் "மதியம் 1 மணியளவில் வேன் மூலமாக அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படைக் காவலர்கள், மறுநாள் மரணம் ஏற்படும் வரை அடித்துள்ளனர். அவர் அடி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாகப் பொய் கூறியிருக்கிறார்" என்கிறார் மதுரை 'எவிடென்ஸ்' அமைப்பின் கதிர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அஜித்குமார் உடன் பணியாற்றும் வினோத்குமார், அருண்குமார் உள்பட மூன்று பேர் முன்னிலையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது கோவிலில் நடந்த காவல் படுகொலையாகப் பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார். சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கன்றிப் போன காயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுவதை மேற்கோள் காட்டிய கதிர், "24 மணிநேரமும் அஜித்குமாரின் உடல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோபம் வரும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை" என்கிறார். "ஒன்பதரை சவரன் நகைத் திருட்டு என்பது கொடூரமான குற்றம் கிடையாது. இது கொள்ளை வழக்கு அல்ல திருட்டு வழக்கு" எனக் கூறும் கதிர், "அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு சாதாரண காவலாளி என்ற எண்ணத்தில் திருட்டுப் புகார் கொடுத்துள்ளார்" என்கிறார். காவலாளி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய கதிர், "சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல் மரண வழக்கின் விசாரணையை இன்னமும் சிபிஐ முடிக்கவில்லை. அஜித்குமார் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சிபிஐக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனக் கூறினார். இதே கோரிக்கையை முன்வைக்கும் காவலாளி அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார், "சிபிஐ விசாரணை நடந்தால் வழக்கின் விசாரணை தாமதமாகும். நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார். சாட்சியம் அளித்த கோவில் பணியாளர்கள் காவலாளி கொலை வழக்கை விசாரித்து அறிக்கை தருமாறு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை, கடந்த ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்தது. திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் எனக் கூறப்பட்டு இருப்பதால், அஜித்குமார் தாக்கப்பட்டதைப் பார்த்த நபர்கள் சாட்சியம் அளித்து வருகின்றனர். அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் அவரது உறவினர்கள், காவலர்கள், கோவில் பணியாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். இதன் அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அதற்குள் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5w0qn2pv7o

இந்தியா மீது அமெரிக்கா 500% வரியா? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க புதிய முயற்சி

2 months 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் புதினின் 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது, எனக் கூறினார். "இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புதினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்," என்றும் லிண்ட்ஸே கிரஹாம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என பைடன் நிர்வாகமும் விரும்பியது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. இந்த தடைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தியா ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பின, ஆனால் போரின் போது ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் புதிய உச்சத்திற்கு சென்றது. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யில் ரஷ்யாவின் பங்கு இரண்டு விழுக்காடுக்கு கீழ் இருந்தது, இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்ய தடைகள் சட்ட மசோதா 2025 (The Russia Sanctions Act, 2025) அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும். இது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா தினமும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம் மசோதாவில் என்ன இருக்கிறது? ரஷ்ய தடைகள் சட்டம் 2025 (The Russia Sanctions Act, 2025) என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு மசோதா. யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நாடுகள் மீது பெரிய அளவிலான தடைகளை விதிப்பது இந்த மசோதாவின் நோக்கம். இது அமெரிக்க செனட்டில், செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமால் ஏப்ரல் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தற்போது அமெரிக்க செனட் அவையின் பரிசீலனையில் உள்ளது. இது அமலுக்கு வர அவையில் பெரும்பான்மையும் பின்னர் அதிபரின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. இந்த மசோதாவை முன்மொழியும்படி அதிபர் டிரம்ப் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கிரஹாம் சொல்கிறார். "டிரம்பிடம் தற்போது இல்லாத ஒரு ஆயுதத்தை தர விரும்புகிறோம். ஜூலை மாதத்திற்கு பிறகு நாங்கள் அந்த மசோதாவை நிறைவேற்றுவோம். அதிபர் அதில் கையெழுத்திடுவார். இந்த சட்டத்தில் விலக்கு அளிப்பதற்கான அம்சமும் உள்ளது. அதை அமல்படுத்துவது அதிபரின் கையில் இருக்கும்," என்கிறார் அவர். தங்களுடைய நோக்கம் புதினை பேச்சுவார்த்தைக்கு முன்வர கட்டாயப்படுத்துவதுதான் என்கிறார் கிரஹாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவுக்கு அடுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடு இந்தியா இந்தியா மீதான தாக்கம் என்னவாக இருக்கும்? ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிக்கும் மசோதா குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, "செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமின் மசோதா பற்றி பேசும்போது, எங்களுடைய நலன்களை பாதிக்கக்கூடிய ஏதேனும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தால் அது எங்களுக்கும் முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளோம். எங்களது தூதரகம் மற்றும் தூதரும் அவருடன் தொடர்பில் உள்ளனர். "எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான எங்களது கவலைகளை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இந்த விஷயம் எங்கள் முன்வந்தால் நாங்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்." 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய எண்ணெயை வாங்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2025 மே மாதத்தில் இந்தியா தினமும் சுமார் 19.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது, இது கடந்த பத்து மாதங்களில் மிகவும் அதிக அளவாகும். இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தினமும் 20 முதல் 22 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவனமான கெப்ளரின் முதல்கட்ட தரவுகள் காட்டுகின்றன. இது இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அளவாகும். அத்தோடு, இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வாங்கப்படும் மொத்த அளவைவிட அதிகமாகும். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இதை ரஷ்யாவுக்கு அழுத்தம் தர அமெரிக்கா பயன்படுத்தும் உத்தியாக பார்க்கிறார். "சில நாட்களுக்கு முன் டிரம்ப் குறித்து புதின் நேர்மறை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறைகளும் பேசிக் கொண்டிருப்பதாகவும், சில பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே திரைமறைவில் இருக்கும் நிலை இப்போது தோன்றுவது போல் அவ்வளவு மோசமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னமும் பல "இருந்தால்" மற்றும் "ஆனால்" இருக்கின்றன. எனவே, பிரச்னைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம் என ஜெய்சங்கர் சொல்வது சரியானதுதான் என நினைக்கிறேன்," என்கிறார் கன்வல் சிபல். எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சிக்கான மையம் சிந்தனைக்குழுவின் தரவுகள்படி, தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு மே 2025 வரை, ரஷ்ய நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. 2022 டிசம்பர் 5ஆம் தேதி முதல் 2025 மே மாதம் வரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 விழுக்காட்டையும், இந்தியா 38 விழுக்காட்டையும் வாங்கின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடைகள் இருந்தாலும் ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருப்பதாக புதின் சொல்கிறார் மேற்குலகின் தடைகளும், ரஷ்யாவின் பதிலடியும் யுக்ரேன் போர் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதிக்கத் தொடங்கின, அவை காலப்போக்கில் மேலும் கடுமையாயின. இந்த தடைகள் ரஷ்யாவின் நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கின்றன. யுக்ரேனில் சமாதானம் செய்துகொள்ள தங்களது தடைகள் அதிபர் விளாடிமிர் புதினை கட்டாயப்படுத்தும் என நம்புவதாக மேற்கத்திய நாடுகள் சொல்கின்றன. ஆனால் தர்க்க ரீதியான நியாயங்கள் மட்டுமே ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது கூடுதல் தடைகளை விதித்தால் அதனால் ஐரோப்பாதான் அதிகமாக நஷ்டங்களை சந்திக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தெரிவித்திருந்தார். 2024-ல் ரஷ்யாவின் பொருளாதாரம் 4.3% அளவு வளர்ச்சியடையும் என்றும் ஆனால் அதே நேரம் யூரோ மண்டலம் பொருளாதாரம் வெறும் 0.9% அளவுதான் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்தார். இது இந்தியாவுக்கு சவாலான நேரம். இந்தியாவுக்கு மலிவான எரிசக்தி தேவை, அதே நேரம் மேற்குலகின் தடைகளையும் உதாசீனம் செய்துவிட முடியாது. இதைப் போன்ற ஒரு சூழலில் இதுவரை எச்சரிக்கையும், சமநிலையும் கொண்ட ஒரு அணுகுமுறையையே இந்தியா பின்பற்றி வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2d0nrpy159o

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

2 months 3 weeks ago
அவரின் உள்ளாடைக்குள் இருந்தது... உண்மையான பாம்பு தானா என்று வடிவாக பாருங்க ஆபீசர். வேறு எதுவாகாகவும் இருந்திடப் போகுது.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 3 weeks ago
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 37 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன Published By: VISHNU 05 JUL, 2025 | 12:07 AM செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை (4) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 9வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது. முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அழ்வுகளின் போது இதுரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு புதிதாக அகழப்படும் பகுதியில் சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது - என்றார். https://www.virakesari.lk/article/219212

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
வலுவான நிலையில் இந்தியா! பும்ரா இல்லாமல் சாதித்துக் காட்டிய சிராஜ், ஆகாஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜ் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிம்மிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது. இந்திய அணித் தரப்பில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் சிங் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து தரப்பில் ஹேரி ப்ரூக், ஸ்மித் இருவரும் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை சரிவில் இருந்து மீட்டு கவுரமான நிலைக்கு இட்டுச் சென்றனர். ப்ரூக்-ஸ்மித் வரலாற்று பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. புதிய பந்தில் சிராஜின் பந்துவீச்சில் ஜோ ரூட் (22), ஸ்டோக்ஸ் (0) இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 150 ரன்களுக்குள் முடிந்துவிடும் என கணிக்கப்பட்டது. ஆனால், 85 ரன்னாக இருந்த போது 6-வது விக்கெட்டுக்கு சேர்ந்த ஸ்மித், ஹேரி ப்ரூக் பார்ட்னர்ஷிப் அமைத்து 303 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து வரலாற்று சாதனை புரிந்தனர். 24 வயதான இளம் பேட்டர் ஜேம் ஸ்மித் 184 (207 பந்துகள்) ரன்களுடன் 4 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேரி ப்ரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் வரலாற்றுப் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது. ஹேரி ப்ரூக் இந்திய அணிக்கு எதிரான தன்னுடைய முதல் சதத்தை அடித்த நிலையில், ஸ்மித் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்தது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். டெஸ்ட் அரங்கில் 6-வது விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் குவித்த 9-வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இன்னொரு கில்கிறிஸ்ட் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்து விக்கெட் கீப்பராக டெஸ்ட் அரங்கில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 1997ல் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 173 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. இதை ஸ்மித் முறியடித்தார். மேலும்,7வது பேட்டராகக் களமிறங்கி இந்திய அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோரையும் ஸ்மித் பதிவு செய்தார். 24 வயதான ஸ்மித்தின் ஆட்டத்தைப் பார்த்த போது இங்கிலாந்து அணிக்கு 3 ஃபார்மெட்டுக்கும் கிடைத்துவிட்ட அற்புதமான விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்டுக்கு இணையாக ஒப்பிடலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஸ்மித் 43 பந்துகளில் அரைசதத்தையும், 80 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த 3வது இங்கிலாந்து பேட்டராக மாறினார். பிரசித் கிருஷ்ணா ஓவரை விளாசிய ஸ்மித், ஷார்ட் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஜடேஜா, வாஷிங்டன் ஓவர்களையும் ஸ்மித் விட்டுவைக்கவில்லை. இருவரின் ஓவர்களிலும் தொடர்ச்சியாக இருமுறை இரு பவுண்டரிகளை ஸ்மித் விளாசினார். ஒருபுறம் ஸ்மித் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து, ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் ஹேரி ப்ரூக் மிகுந்த கட்டுக்கோப்புடன் ஷாட்களை ஆடி 73 பந்துகளில் அரைசதத்தையும், 137 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். முதல் செஷனில் காலை தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்த நிலையில் மதிய உணவு இடைவேளையின்போது 47 ஓவர்களில் 249 ரன்களை வேகமாகச் சேர்த்தனர். மாலை தேநீர் இடைவேளையின் போது 355 ரன்களை சேர்த்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் சிறப்பாக ஒத்துழைத்து ஆடியதால், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, சுந்தர், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரைப் பயன்படுத்தியும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஆடுகளமும் அதற்கு ஏற்றபடி தட்டையாக, எந்தவிதமான ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்காமல் இருந்தது, பந்தும் தேய்ந்துவிட்டதால், இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சி வீணானது. மாலையில் புதிய பந்து எடுத்த பின்புதான் விக்கெட் வீழ்த்தும் முயற்சியில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வெற்றி கிடைத்தது. சிராஜ், ஆகாஷ் மீண்டும் அழைக்கப்பட்டதற்கு பலனும் கிடைத்தது. ஹேரி ப்ரூக் 158 ரன்னில் ஆகாஷ் பந்துவீச்சில் போல்டாகினார். 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்து இருவரின் பார்ட்னர்ஷிப் பிரிந்தது. இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்த அடுத்த சில ஓவர்களில் இங்கிலாந்து அணியின் கடைசி வரிசை பேட்டர்கள் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஸ்மித் 43 பந்துகளில் அரைசதத்தையும், 80 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார் பும்ரா இல்லாமலும் சாதித்த சிராஜ், ஆகாஷ் பும்ரா இல்லாத நிலையில் பந்துவீச்சில் சிராஜ், ஆகாஷ் தீப் என்ன செய்யப் போகிறார்களோ? எவ்வாறு இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தப்போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு இருவரும் சிறந்த பதிலை அளித்துள்ளனர். சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 3.58 எக்னாமியுடன் பந்துவீசினார். ஆகாஷ் தீப் 88 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து 4.40 எகானமியுடன் பந்துவீசினார். இருவரின் பந்துவீச்சும் ஓரளவுக்கு கட்டுக்கோப்புடனும், விக்கெட் வீழ்த்தும் நேர்த்தியுடனும் இருந்தது சிறப்பாகும். "நான் பொறுப்புகளையும், பணிச்சுமையையும் விரும்பக்கூடியவன்" என முகமது சிராஜ் போட்டிக்கு பின் ஜியோஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். பும்ராவுடனும், முகமது ஷமியுடனும் பந்துவீசிய சிராஜ் அவர்களிடம் இருந்து ஏராளமான அனுபவங்களை பெற்றுள்ளார். பும்ராவுடன் 23 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 33.82 சராசரி வைத்துள்ளார். பும்ரா இல்லாமல் 15 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 25.20 சராசரியாகக் குறைத்துள்ளார். ஷமியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் சேர்ந்து பந்துவீசிய சிராஜ் 34.96 சராசரியும், பும்ரா, ஷமியுடன் இணைந்து 6 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசிய சிராஜ் 33.05 சராசரியும் வைத்துள்ளார். பும்ரா இல்லாமல், ஷமி இல்லாமல் சிராஜ் தலைமையில் பந்துவீச்சுஅமைந்தபோது, அவர் 12 போட்டிகளில் 22.27 சராசரி என அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். முகமது சிராஜ் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய "க்விக் பவுலர்", அவுட் ஸ்விங் நன்றாக வீசக்கூடியவர். இந்த வாய்ப்பு நேற்று சிராஜுக்கு கிடைத்தபோது அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. புதிய பந்து கிடைத்த போது 2வது நாள் மாலையில் ஒரு விக்கெட்டை சாய்த்த சிராஜ், நேற்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரூட், ஸ்டோக்ஸ் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றி தன்னுடைய பந்துவீச்சை நிரூபித்தார். அதேபோல ஆகாஷ் தீப் சிங்கும் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவராக இருக்கிறார். ப்ரூக்,ஸ்மித் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறியபோது, புதிய பந்து எடுத்தவுடன், ப்ரூக் விக்கெட்டை ஆகாஷ் சாய்த்தார். ஆகாஷ் தீப் வீசிய அந்த பந்து ஒரு பேட்டரால் விளையாட முடியாத அதிதுல்லியமான பந்தாகும். ப்ரூக் ப்ரண்ட் புட் எடுத்து வைக்க நினைக்கையில் திடீரென இன்ஸ்விங் ஆகி ஆப் ஸ்டெம்பை தட்டிச் சென்றது. இந்த விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது. ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி 387 சேர்த்திருந்தது. ஆனால் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் விரைவாக சிராஜ், ஆகாஷ் வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பிரசித் கிருஷ்ணா பரிதாபம் முதல் டெஸ்டிலும் படுமோசமாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா, 2வது டெஸ்டிலும் அதே நிலையைத் தொடர்ந்தார். 2வது டெஸ்டில் 13 ஓவர்கள் வீசிய பிரசித் 73 ரன்களை வாரி வழங்கி ஓவருக்கு 5.53 ரன்ரேட்டில் மோசமாகப் பந்துவீசினார். டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு 5.50 ரன்கள் வழங்கிய இந்திய அளவில் 2வது மோசமான பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா ஒரு ஓவரில் 3 பந்துகளை சரியான லைன் லென்த்தில் வீசிவிட்டு, அடுத்த 3 பந்துகளை தவறான லெனத்திலும், ஷார்ட் பிட்சாகவும், ஸ்லாட்டிலும் வீசும்போதும் நன்றாக வீசிய3 பந்துகள் வீணாகிறது. வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜாவும் நேற்று இரு செஷன்களில் பந்துவீசியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இருவருமே ஓவருக்கு 4 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். அதனால் தான் இங்கிலாந்தின் இரு பேட்டர்கள் இணைந்து விரைவாக 300 ரன்கள் சேர்க்க முடிந்தது. ஜெய்ஸ்வால்-ராகுல் வேகம் முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் வேகமாக ஆட்டத்தைத் தொடங்கி, பவுண்டரிகளாக அடித்து ரன்களைச் சேர்த்தனர். டி20 ஆட்டத்தைப் போன்று பவுண்டரிகளாக விளாசியதால், 45 பந்துகளில் விரைவாக 50 ரன்களை இந்திய அணி எட்டியது. ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்திருந்த போது, டங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து வந்த கருண் நாயர் (7), ராகுலுடன் (28) சேர்ந்து ஆடி வருகிறார். இந்தியா முன்னிலை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது. இன்றைய 4வது நாள் ஆட்டம், நாளைய கடைசி நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் இன்று மாலை தேநீர் இடைவேளை வரை இந்திய அணி பேட் செய்து பெரிய இலக்கு நிர்ணயித்து இங்கிலாந்திடம் வழங்கலாம். ஏனென்றால் கடந்த டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை இங்கிலாந்து பேட்டர்கள் அனாசயமாக அடைந்து வெற்றி பெற்றுவிட்டதால் இந்த டெஸ்டில் அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி குறைவான இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm20zgk7v3wo

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து!

2 months 3 weeks ago
யாழ் தென்மராட்சியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளத்தினால் ஆபத்து! யாழ் தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போதே ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு உற்பத்தி பாத்திகளுக்கு நீர் இறைப்பதனை கண்டுபிடித்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 5 குழாய் கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டு வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், உப்பளம் அமைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதேவேளை, அறுகுவெளி கடல் நீரேரியில் இருந்தே உப்பு உற்பத்திக்கான நீர் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் சட்டவிரோத குழாய்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய அதிகாரிகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://athavannews.com/2025/1438132
Checked
Fri, 09/26/2025 - 18:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed