ஊர்ப்புதினம்

முக்கிய அறிவிப்பு : கடுமையான வெள்ளப்பெருக்கால் கொட்டுகோட துணை மின்நிலையம் தற்காலிகமாக செயலிழப்பு

3 months 2 weeks ago

Published By: Digital Desk 1

30 Nov, 2025 | 07:32 AM

image

கொட்டுகோட பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக கொட்டுகோட 220/132/33kV  மின் இணைப்புக்கான துணை மின்நிலையம் தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையால் சுற்றியுள்ள வெள்ள நீர் வேகமாக உயர்ந்து, துணை மின்நிலைய வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நேற்று (29) சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதால், இலங்கை மின்சார சபையின் கொட்டுகோட மின் இணைப்புபின் துணை மின்நிலையத்தை பாதுகாப்பாக துண்டித்து அணைத்துள்ளது. 

பொதுமக்களின் பாதுகாப்பு, தளத்தில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான மின் உட்கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் குழுக்கள், நிலைமையை கண்காணித்து வருவதுடன், நீர் மட்டம் குறைந்து துணை மின்நிலையம் செயல்பாட்டிற்கு பாதுகாப்பானதா என்று சரிபார்க்கப்பட்டவுடன் மின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/231993

காப்பாற்ற சென்றவர்கள் உயிரிழந்த சோகம் - ஒரே பகுதியில் 'புதையுண்ட 23 தமிழர்கள்'

3 months 2 weeks ago

மண்ணுக்குள் புதையுண்ட 23 தமிழர்கள்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன்.

இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.

இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது.

சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மண்ணுக்குள் புதையுண்ட 23 தமிழர்கள்

ராணுவத்தின் உதவியுடன் தேடல்

இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர்.

பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன.

ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இலங்கை கனமழை, திட்வா புயல், கண்டி மண்சரிவு

படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன்

மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார்.

உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.

இறுதி நொடியில் தப்பித்த தருணம்

இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார்.

உதவ சென்றவர் உயிரிழந்த சோகம்

இலங்கை கனமழை, திட்வா புயல், கண்டி மண்சரிவு

படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா

தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார்.

'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை'

இலங்கை கனமழை, திட்வா புயல், கண்டி மண்சரிவு

படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா

தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் ஹரிணி!

3 months 2 weeks ago

29 Nov, 2025 | 04:33 PM

image

"திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், நகர பிதா உட்பட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-11-29_at_16.21.43.jp

WhatsApp_Image_2025-11-29_at_16.21.44.jp

WhatsApp_Image_2025-11-29_at_16.21.47.jp

https://www.virakesari.lk/article/231944

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

3 months 2 weeks ago

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

29 Nov, 2025 | 01:40 PM

image

சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிவித்தலின்படி, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், உதவிகளுக்கு 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

WhatsApp_Image_2025-11-29_at_13.33.59.jp

https://www.virakesari.lk/article/231918

அனர்த்தத்தில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் வழங்கும் அமெரிக்கா

3 months 2 weeks ago

இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

25-692aa29bd3afc.webp

'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர்.

இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்றார்.

https://tamilwin.com/article/us-commits-usd-2-million-urgent-flood-relief-1764401818

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்

3 months 2 weeks ago

Courtesy: Rajugaran

மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரும்பி வந்த இராணுவத்தினர் 

இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள் | Mannar Maanthai Eaxtreme Flood 40 Trapped

இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.

அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

25-692ad7007840c.webp

25-692ad70122b57.webp

25-692ad701bf0dc.webp

https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289

சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்!

3 months 2 weeks ago

29 Nov, 2025 | 01:47 PM

image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய  அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எனவே, சுத்தமான நீரை  பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது.

சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk

அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு!

3 months 2 weeks ago

29 Nov, 2025 | 02:51 PM

image

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது.

அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4.jpg


அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு! | Virakesari.lk

யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி

3 months 2 weeks ago

29 Nov, 2025 | 02:57 PM

image

யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம்  மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்  பாதுகாப்பாக  மீட்கப்பட்டு நொச்சிகாமம்  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர  மாவட்ட  செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும்  மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக  மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.

சகல மாவட்ட அரச அதிபர்களுடனான  ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி  விடயம்  ஜனாதிபதியின் கவனத்திற்கு  கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின்  செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  .

பல்வேறு நெருக்கடிகள்,  இடர்பாடுகளுக்கு  மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி | Virakesari.lk

குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்

3 months 2 weeks ago

குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு!

29 Nov, 2025 | 05:24 PM

image

குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய  முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! | Virakesari.lk

வழமைக்கு திரும்பும் வவுனியா

3 months 2 weeks ago

29 Nov, 2025 | 05:33 PM

image

கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமையான நிலைமைக்கு திரும்பி வருகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் பலர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கி வந்ததோடு அரச திணைக்களங்கள் சில வழங்கி இருந்தன.

இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இரு உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பல்வேறு அசெளகரியத்திற்கு மக்கள் முகம் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீரில் அகப்பட்டு மரணங்கள்

வவுனியா சாந்தசோலை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகரான 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை சேர்ந்த ஆணும் 38 வயதுடைய  306 ஏ காத்தான்குடி என்ற முகவரியை சேர்ந்த முகமது முஸாபின் சப்ரினா எனவும் தெரியவந்துள்ளது.

வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள்

இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம், பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

குளங்களின் நிலை

இந் நிலையகல் பாவற்குளத்தின் நான்கு வாண் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது.

இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து

இந்நிலையில் வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி உயரத்திற்கு நீர் ஏ9 வீதியை ஊடறுத்து சென்றதுடன் கல்குண்ணாமடு மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதி ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர் சென்ற  காரணத்தால் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் தற்போது குறித்த பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோடி இருப்பதன் காரணமாக பழமையான போக்குவரத்து நடைமுறைகள் இடம் பெற்று வருகின்றது.

தொலைத்தொடர்புகள்

இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள்  பல இடங்களில் செயழிலந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர்.

1000688290__1_.jpg


வழமைக்கு திரும்பும் வவுனியா | Virakesari.lk

சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது

3 months 2 weeks ago

சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்.

9 Nov, 2025 | 05:31 PM

image

சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன்  விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

இது தவிர மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய  மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருந்த போதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம்  வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார்.

சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள்  இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு  சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார்.

அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும்  இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், இதன் மறைமுகமான தாக்கங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிக்கும் என்பதோடு  நாட்டிற்குள்ளேயும் சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும்  காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மீன்பிடி மற்றும் கடற் போக்குவரத்து நடவடிக்கைகளை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அவர் கோரினார்.

இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது   நீங்கும் எனவும் அதன்  பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் | Virakesari.lk

சீரற்ற வானிலையால் இதுவரை 153 பேர் பலி, 191 பேர் மாயம்

3 months 2 weeks ago

29 Nov, 2025 | 08:06 PM

image

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் பெருவெள்ளம், மண்சரிவு மற்றும் பல்வேறு அனர்த்த சம்பவங்களை முன்னிட்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 191 பேர் இதுவரை காணாமல்போயுள்ளனர்.

பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படைகள் மற்றும் மீட்புக்குழுக்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான கனமழை, பலத்த காற்று மற்றும் ஆறுகள் நிரம்பி வழிவந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு பல கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, வீடுகள், வீதிகள், வயல் நிலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், வெளியிடப்படும் புதிய எச்சரிக்கைகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளது.

சீரற்ற வானிலையால் இதுவரை 153 பேர் பலி, 191 பேர் மாயம் | Virakesari.lk

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ தயாராகும் சீனா!

3 months 2 weeks ago

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ தயாராகும் சீனா!

29 Nov, 2025 | 11:19 AM

image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக சீனா தாயாராகவுள்ளதாக சீனக் குடியரசு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் சீனக் குடியரசு தனது உண்மையான அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சீனா தனது ஒற்றுமையையும் ஆதரவையும் வழங்கும் என சீனக் குடியரசு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/231897

ஜனாதிபதி இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்

3 months 2 weeks ago

இலங்கையில் அவசர நிலை - மக்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,PMD

படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

கட்டுரை தகவல்

  • பிபிசி சிங்கள சேவை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையிடம் அவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் பேரிடர் சூழல் நிலவுவதால் இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பொருட்டு அவசர நிலையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,PMD

படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டம்

அவசர நிலை என்பது என்ன?

அவசர நிலை என்பது ஒரு அரசுக்கு அதிகளவு அதிகாரங்களை அளிக்கிறது.

பெரிய ஆபத்து, அச்சுறுத்தல் அல்லது பேரிடர் நேரத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க சில அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களும் இதன்கீழ் அரசாங்கத்திற்கு இருக்கும்.

எனினும், இலங்கை அரசியலமைப்பு அவசர நிலை குறித்த அதிகாரபூர்வ விளக்கத்தை வழங்கவில்லை. ஆனாலும், அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் நிபந்தனைகள் குறித்து இலங்கை பொது பாதுகாப்பு சட்டம் (Public Security Ordinance) விளக்கியுள்ளது.

"பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் விநியோகங்களை பராமரிக்கவோ அல்லது அவசரகால சூழல்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டோ" ஜனாதிபதி அவசரநிலையை பிரகடனப்படுத்தலாம் என அதற்கான நிபந்தனையாக அதில் விளக்கப்பட்டுள்ளது.

''தேச பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதை உறுதி செய்வதை'' அவசர நிலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் கனமழை காரணமாக இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

படக்குறிப்பு,இலங்கையில் கனமழை காரணமாக இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அவசர நிலையை யார் பிரகடனப்படுத்தலாம்?

இலங்கை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 155-ன் கீழ், அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒரே நபராக ஜனாதிபதி உள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவதற்காக அவையை கூட்ட வேண்டும். அவசர நிலை அறிவிப்பு, நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் அவசர நிலையை அறிவிப்பதன் மூலம் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் வேறு எந்த சட்டத்தையும் மீற முடியும் என்றாலும், அவை அரசியலமைப்பை மீற முடியாது.

எவ்வளவு காலம் அவசர நிலை நீடிக்க முடியும்?

ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் வகையிலான அவசர நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். (என்றாலும், ஒருமாதம் கடப்பதற்கு முன்பாகவே ஜனாதிபதி அதை ரத்து செய்யலாம்.)

அவசர நிலை அறிவிப்பு வெளியான நான்கு நாட்களுக்குள் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அப்படி செய்யப்படவில்லையெனில், அந்த அறிவிப்பு செல்லாததாகிவிடும். அவசர நிலை 30 நாட்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டுமென்றால் அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலின் பேரிலேயே செய்யப்பட வேண்டும்.

குடிமக்களின் உரிமைகள் மீதான தாக்கங்கள் என்ன?

அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் மற்ற சட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள உரிமைகள் மீது அவசர நிலை விதிமுறைகள் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம்.

இந்த கட்டுப்பாடுகள், அவை தடுக்கப்பட வேண்டிய ஆபத்துகளின் நோக்கத்துக்கு ஏற்ப ஒத்த அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. தீர்மானிக்கும் நபரை பொறுத்தே கட்டுப்பாடுகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

அவசர நிலையால் கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம்:

  • ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படும் நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாக அவர் குற்றமற்றவர் என்ற அனுமானத்தின் மீது கட்டுப்பாடு ஏற்படுத்தப்படலாம். (Presumption of innocence)

  • சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் எந்தவித பாகுபாடும் இல்லை என்பதில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

  • கைது மற்றும் தடுப்புக்காவலில் எடுப்பதற்கான வழக்கமான சட்ட நடைமுறைகள்

  • கருத்து சுதந்திரம், கூடுகை, சங்கம், இயக்கம், வேலைவாய்ப்பு, மதம், கலாசாரம், மொழி சார்ந்த அடிப்படை உரிமைகள்

அவசர நிலையால் கட்டுப்படுத்தப்பட முடியாதவை:

  • சிந்திப்பதற்கான மற்றும் உளச்சான்றின்படி செயல்படுவதற்கான சுந்ததிரம்

  • துன்புறுத்தப்படுவதிலிருந்து விடுபடுவதற்கான சுதந்திரம்

  • தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் நியாயமான விசாரணைக்கான உரிமை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அவசரநிலை அதிகாரங்கள் மூலம் அரசு தன்னிச்சையாக பயன்படுத்தலாம். பயங்கரவாத தடுப்பு தொடர்பான அதிகாரங்கள் பரவலானவை (மேலும் அது விரிவுபடுத்தப்படலாம்), மேலும் அவசரகால அதிகாரங்களைப் போலன்றி, நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் இதற்கு தேவையில்லை.

சாமானிய மக்களை எப்படி பாதிக்கிறது?

பயங்கரவாதம் அல்லது வன்முறையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையில் கூட அவசரநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊடகங்கள் மீதான தாக்கம் என்ன?

குடிமக்கள் பிரசுரிப்பதன் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வெளியீடுகள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை ஊடகங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g9x56957go

நாடு முழுவதும் தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

3 months 2 weeks ago

தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

Nov 29, 2025 - 05:43 PM

தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகத் தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணையத்தள தொடர்பாடல் வலையமைப்புகளை உடனடியாக வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, அரசாங்கத்திற்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் இன்று (29) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. 

ஜனாதிபதி செயலகம், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகம், டிஜிட்டல் அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. 

நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒலிபரப்பு கோபுரங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டமை மற்றும் வலையமைப்பு செயலிழப்பினால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமை குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. 

மின்சாரம் தடைப்பட்டுள்ள கோபுரங்களுக்கு உடனடியாக மின்தோற்றிகள் (generators) அல்லது மாற்று வலுசக்தியை வழங்க, குறித்த நிறுவனங்களுக்கும் மின்சார சபையிற்கும் இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. 

சேதமடைந்த கோபுரங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பக் குழுக்களை அனர்த்தப் பகுதிகளுக்கு அனுப்ப, அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. 

அனர்த்த வேளைகளில் வலையமைப்பு நெரிசலைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க சேவை வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தனர். 


இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் முழுமையானத் தலையீட்டை வழங்குவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmik968ce025zo29n0e62jf2m

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

3 months 2 weeks ago

102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

Nov 29, 2025 - 11:56 AM

102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmijws59p025fo29nw65thb5j

இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் வேண்டுகோள்

3 months 2 weeks ago

Published By: Digital Desk 3

29 Nov, 2025 | 12:53 AM

image

அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக நாரஹேன்பிட்ட தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கும், அதிக இரத்தம் தேவைப்படும் பின்வரும் இரத்த வங்கிகளுக்கும் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதன்படி, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை  ( 011 236 9931, 011 722 0677) இரத்த தானம் வழங்க முடியும்.

காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

ராகம போதனா வைத்தியசாலை - 011 296 0535/ 011 2959261


மகரகம ஹோப் வைத்தியசாலை - 011 284 9525/ 011 289 7377


கப்பல் அனுப்புதல் - 021 2223063/ 021 2222261


குருநகலை - 037 2229617/ 037 2223873


அநுராதபுரம் - 025 2222261/ 025 2236424


கண்டி - 081 2203100/ 081 2222261


பதுளை - 055 2222124/ 055 2222261


அம்பாந்தோட்டை - 047 2222016/ 047 2220261


கருப்பு - 034 2222261/ 034 2236529


இரத்னபுர - 045 2226592/ 045 2222261


திருகோணமலை - 026 2231385/ 026 2222600


காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலை (091 2226066/ 091 2232267)


மாத்தறை கம்புருகமுவ தெற்கு இரத்த மையத்தில் (041 3415665) ஆகிய இடங்களில்  இரத்த தானம் வழங்க முடியும்.

https://www.virakesari.lk/article/231874

யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

3 months 2 weeks ago

யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சனி, 29 நவம்பர் 2025 04:33 AM

யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

கடந்த 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 795 பேரும், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 725 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேரும் பாதிக்கப்பட்டனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேரும், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேரும் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் பாதிக்கப்பட்டனர்.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டனர் அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது.

ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

https://jaffnazone.com/news/52724

இராணுவப்படையினர் அனர்த்த நிவாரண சேவைகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் - இலங்கை இராணுவத் தளபதி

3 months 2 weeks ago

இராணுவப்படையினர் அனர்த்த நிவாரண சேவைகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் - இலங்கை இராணுவத் தளபதி

29 Nov, 2025 | 11:08 AM

image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த நிவாரண சேவைகளை வழங்குவதற்கு இராணுவப்படையினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (29) காலை வரையிலான நிலைமை 

கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டத்தில் சுமார் 12,800 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில்  சுமார் 3580 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில்  சுமார் 2960 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களில்  சுமார் 3100 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்கு படகுகளும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்

https://www.virakesari.lk/article/231896

Checked
Tue, 03/17/2026 - 22:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr