ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல்: பிளேஆப் வாய்ப்பு அதிகரித்தாலும் ஆர்சிபி அணியில் வெளிப்பட்ட பலவீனம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
13 மே 2024
புள்ளிப்பட்டியலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லாது என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்சிபி 5வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது.
ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதற்கான வாய்ப்பை மெல்ல இழந்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 62-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.1ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்களில் தோல்வி அடைந்தது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?
இந்த வெற்றியால் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு உயிர்ப்பித்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடிய ஆர்சிபி அணி 5 வெற்றிகள் உள்பட 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி அணிகளைவிட சிறப்பாக 0.367 என்று வலுவாக இருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை கொல்கத்தா அணியிடம் ஒரு ரன்வித்தியாசத்தில் தோற்று 6வது தோல்வியை எதிர்கொண்டபோது, ஆர்சிபி அணி 5வது இடத்துக்கு முன்னேறியும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இப்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற அணிகளின் முடிவுகள் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதாவது ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கும்போது, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்றால் ஆர்சிபி வெளியேற்றப்படும்.
லக்னெள அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது ஒன்றில் லக்னெள தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் ஆர்சிபியைவிட மோசமாக இருக்கும். அப்போது இயல்பாக போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறிவிடும்.
அது மட்டுமல்லாமல் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெல்ல வேண்டும், அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 200 ரன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே ரன் ரேட்டைவிட ஆர்சிபி ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தை அடையும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு சாத்தியமா?
டெல்லி கேபிடல்ஸ் அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டில் லக்னெள அணியைவிட சுமாராக இருந்து மைனஸ் 0.482 ஆக இருக்கிறது.அடுத்து வரும் லக்னெள அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி இருக்கிறது. ஒருவேளை லக்னெளவை வென்றால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கும் என்றாலும், நிகர ரன்ரேட் மைனஸ் 0.482 என இருப்பது பெரிய பின்னடைவு. ஒருவேளை லக்னெளவிடம் தோற்றால், டெல்லி அணி 12 புள்ளிகளுடன் வெளியேறும்.
டெல்லி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு பெற வேண்டுமென்றால், சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த இரு லீக் ஆட்டங்களிலும் படுமோசமாகத் தோற்க வேண்டும், அதாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்யும் அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். லக்னெள அணியை 64ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடிக்க வேண்டும். இவை நடந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட்டைவிட டெல்லி அணியின் ரன்ரேட் உயர்ந்திருக்கும். இவ்வாறு நடந்தால் டெல்லி அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும். ஆதலால் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த கடைசி லீக்கில் லக்னெளவை வென்றாலும் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு நனவாகாது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
இரண்டாம் பாதியில் தடுமாறிய ஆர்சிபி பேட்டர்கள்
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பேட்டிங்கில் ரஜத் பட்டிதார்(52), வில் ஜேக்ஸ்(41) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கும், கேமரூன் கிரீனின் (32) கேமியோவும்தான். இவர்களால்தான் ஆர்சிபி அணி ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை எட்டமுடிந்தது, பந்துவீச்சாளர்களும் துணிச்சலாக ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது.
அதிலும் பேட்டிங்கில் 32 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது வென்றார்.
ஆர்சிபியின் நடத்திர பேட்டர்கள் டூப்பிளசிஸ், விராட் கோலியை விரைவாக இழந்தபின் ஆர்சிபி அவ்வளவுதான் எனரசிகர்கள் எண்ணினர். ஆனால், ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் இருவரும் அணியைக் கட்டமைத்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தபின் ஆர்சிபி சரிவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் 220 ரன்கள் வரை அடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. 174 ரன்கள் வரை ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 13 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வேகமான விக்கெட் வீழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகும்.
ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு பவர்ப்ளே ஓவருக்குள் டெல்லி அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி பாதி தோற்றுவிட்டது. அதிலும் அதிரடி பேட்டர் மெக்ருக்கின் விக்கெட்டை வீழ்த்தியபோது ஆர்சிபியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. ஏனென்றால் களத்தில் மெக்ருக் நின்றிருந்தால் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பக்கூடியவர். 86 ரன்கள் வரை டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 54 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கோலியை வென்ற இசாந்த்
விராட் கோலி தனது 250-வது ஐபிஎல் போட்டியில் நேற்று விளையாடினார். தொடக்கத்திலிருந்தே கோலி அதிரடியாக பேட் செய்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார்.
இசாந்த் சர்மா வீசிய ஓவரில் கோலி முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரும் விளாசி சிரித்தார். ஆனால் அடுத்த இரு பந்துகளில் இசாந்த்தின் அற்புதமான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பர் அபிஷேக்கிடம் கோலி கேட்ச் கொடுத்து 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்து செல்லும்போது இசாந்த் சர்மா வேண்டுமென்றே கோலியை தடுத்து நகைச்சுவை செய்தார், இதை கோலியும் ரசித்து சிரித்துக்கொண்டே பெவிலியின் திரும்பினார்.
ரஜத் பட்டிதார் இந்தசீசனில் 11 போட்டிகளில் 8 முறை வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், நேற்று நிதானமாக ஆடிய பட்டிதர் 8 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின் அக்ஸர் படேல், குல்தீப் ஓவர்களில் அதிரடியாக ஆடிய பட்டிதரால் பவர்ப்ளேயில் ஆர்சிபி 2 விக்கெட்இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.
குல்தீப், அக்ஸர் ஓவர்களை வெளுத்த பட்டிதார் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 5 இன்னிங்ஸ்களில் பட்டிதார் 4வது அரைசதத்தை நிறைவு செய்தார், பெங்களூருவில் இந்த சீசனில் முதல் அரைச் சதத்தை அடித்தார். பட்டிதாரை ஆட்டமிழக்கச் செய்ய 4 வாய்ப்புகள் வந்தும் அனைத்தையும் டெல்லி வீரர்கள் தவறவிட்டனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
டெல்லியின் தோல்விக்கு காரணம் என்ன?
டெல்லி அணியின் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் “ சரியான நேரத்தில் கேட்ச் பிடித்திருந்தால் 20 முதல் 30 ரன்களைக் குறைத்திருப்போம், 150 ரன்களை எளிதாக சேஸிங் செய்திருப்போம். பவர்ப்ளேயில் நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கான காரணம். 160 முதல் 170 ரன்கள் வரை எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால், இரவில் பந்து பேட்டர்களை நோக்கி வேகமாக வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பந்து விக்கெட்டில் பட்டு நின்று வந்ததால் அடித்து ஆட சிரமமாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நடந்தது எங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பதை காண்பிக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல எதுவேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார்
அக்ஸர் படேல் போராட்டம்
டெல்லி அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் நேற்று பேட்டிங்கில் ஒற்றை வீரராகப் போராடி அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேலுக்கு ஒத்துழைத்து எந்த பேட்டரும் பேட் செய்யவில்லை. பவர்ப்ளே ஓவருக்குள் வார்னர்(1), ப்ரேசர்(21), அபிஷேக்(2), ஹோப்(29) என விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி அணி பாதி தோற்றுவிட்டது. 4 ஆட்டங்களுக்குப்பின் நேற்று பேட் செய்த வார்னர் ஒரு ரன்னில் ஸ்வப்னில் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். யாஷ் தயாலின் பவுன்ஸரில் அபிஷேக் போரெல் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை ஆர்சிபி வீழ்த்தியது 2வது முறையாகும், இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தியது.
நடுப்பகுதி ஓவர்களில் சரியான திட்டத்துடன் வந்த ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் துல்லியமாக வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டனர். 8-ஆவது ஓவரிலிருந்து 11வது ஓவர்கள் வரை ஆர்சிபி அணி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அக்ஸர் படேல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மற்றவகையில் குமார்(2),ஸ்டெப்ஸ்(3) இருவருமே ஏமாற்றினர். கடைசி 4 விக்கெட்டுகளை டெல்லி அணி 13 ரன்களுக்குள் இழந்தது.
https://www.bbc.com/tamil/articles/c8vz33z04eyo