Aggregator
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு — கருணாகரன் —
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு — கருணாகரன் —
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு
— கருணாகரன் —
“ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.
“நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன்.
“என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி எந்தளவுக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும்?.. என்று கேள்வி உண்டு. அதனால் இந்தக் கூட்டணி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? அல்லது நீடிக்கும் என்று தெரியாமலிருக்கு. அதைப்பொறுத்துத்தான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலம் அமையும்” என்றார் அவர்.
ஆகவே, தன்னுடைய கருத்தை – கணிப்பை – சரிபார்த்துக் கொள்வதற்காகவே என்னிடமும் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். ‘என்னிடமும்‘ என்று நான் பிரத்தியேகமாக இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நிச்சயமாக நண்பர் இந்தக் கேள்வியை வேறு ஆட்களிடத்திலும் கேட்டிருப்பார்.
இதே கேள்வி, இந்தக் கூட்டணியைப் பற்றியும் அது கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி – தமிழ்த்தேசியப் பேரவை தொடர்பாகவும் பலரிடத்திலும் உண்டு. ஏன், தமிழ்த் தேசியப் பேரவைக்குள்ளும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளும் கூட இந்தக் கேள்வி உண்டு.
இந்தக் கேள்வியை நாம் வகைப்படுத்தலாம்.
1. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.
2. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.
3. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும்.
4. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவும்.
5. தமிழ்த்தேசியப் பேரவையோடு எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்வது? அந்த உறவு முறிந்தால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் அடுத்து என்ன என்ற நிலைப்பாடு.
இதைவிட மேலும் சில கேள்விகளும் உண்டு.
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA), ஐந்து கட்சிகளின் கூட்டாகும். ஐந்து கட்சிகளுக்கும் தனித்தனியான அரசியற் கட்டமைப்பும் அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. கூடவே, அவற்றுக்கான செல்வாக்குப் பிராந்தியங்களும் உள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அவை பெற்றிருந்த வாக்குகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதேச மட்டத்திலான பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மூலம் இதை மேலும் அறிந்து கொள்ள முடியும்.
இந்த ஐந்து கட்சிகளும் சில அடிப்படைகளில் புரிந்துணர்வோடு ஒரு பொது மையத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியாக இணைந்துள்ளன. இந்த இணைவுக்காக ஒவ்வொரு கட்சிகளும் சில விட்டுக் கொடுப்புகளையும் சில ஏற்றுக் கொள்ளுதல்களையும் செய்துமுள்ளன. இல்லையெனில் ஐக்கியமோ கூட்டோ சாத்தியமாகியிருக்காது. ஐக்கியம், கூட்டு என்று வரும்போது விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் தவிர்க்க முடியாதது.
இந்த விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் இரண்டு வகையில் பிரதானமாக அமையும்.
அ) தமது (கட்சியின்) இருப்பையும் வெற்றியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறையில் வெளிச் சூழலைக் கையாள்வதற்குத் தேவையான விட்டுக் கொடுப்பையும் ஏற்றுக் கொள்ளலையும் மேற்கொள்ளுதல். இங்கே கட்சியின் நலனே முதன்மை பெற்றிருக்கும்.
ஆ) மக்களின் நலனை முன்னிறுத்திச் சிந்திப்பதால் அமைவது. மக்களுடைய நலன், அவர்களுடைய கோரிக்கைகளுக்குப் பலம் சேர்த்தல், அவர்களுடைய அரசியல், சமூகப் பொருளாதார எதிர்காலத்தைப் பலப்படுத்துதல், அதை வெற்றியடையச் செய்தலுக்காக பொதுத் தளமொன்றில் அவசியப்படும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளதல்களையும் செய்தல்.
இங்கே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளும் மேற்படி இரண்டின் அடிப்படையிலும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளல்களையும் செய்துள்ளன என்றே கொள்ள முடியும். இந்த விட்டுக் கொடுப்புகளின் – ஏற்றுக் கொள்ளல்களின் எல்லை (வரம்பு) எதுவென்று தெரியாது. அதை அந்தந்தக் கட்சியினரே சொல்ல வேண்டும். அல்லது அதைக் காலமும் சூழ்நிலையுமே தீர்மானிக்கும்.
இதற்கப்பால் சரியான – தீர்க்க தரிசனமுடைய தலைமைத்துவம் இருக்குமானால், தமது அரசியல் உறுதிப்பாட்டுடன் ஐக்கியத்துக்காக – ஒற்றுமைக்காக – முடிந்தளவுக்கு பொறுமையுடன் நெகிழ்ந்து கொடுக்கும். அத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஐக்கியத்தை அல்லது கூட்டை வளப்படுத்தும்.
இந்தப் பின்னணியில், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும் எப்படி அமையவுள்ளன? எப்படி அமைய வேண்டும்? என்று பார்க்கலாம்.
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் (DTNA) உள்ள கட்சிகள் ஐந்தும் ஆயுதந் தாங்கிய அரசியல் வழிமுறையின் வழியாக வந்தவை. அதாவது சரிபிழைகளுக்கு அப்பால், செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. தமது அரசியல் இலக்கை அடைவதற்கு செயற்பாட்டு அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அதற்கான வழிமுறையையும் கொண்டிருந்தவை. குறிப்பாக நடைமுறை அரசியலை உள்ளடக்கியவை. அதேவேளை உட்கட்சி ஜனநாயகப் பற்றாக்குறையை அகத்தில் கொண்டிருப்பவை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்..
துரதிருஸ்டவசமாகக் கடந்த 15 க்கு மேற்பட்ட ஆண்டுகால அரசியற் சூழலில் இவையும் முற்றுமுழுதாக தமிழ் மிதவாத அரசியலுக்குப் பழக்கப்பட்டவையாகி விட்டன. அதாவது, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போலாகி விட்டன. ஒரு பொதுமகன் அல்லது இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கும் இடையில் எத்தகைய வேறுபாட்டைக் காண முடியும்? அல்லது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது மக்களுக்கு ஏனைய அரசியற் கட்சிகளிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறது?அதில் உள்ள ஒவ்வொரு கட்சியினதும் தனித்தன்மைகள் என்ன? என அறிய முடியாது.
இந்த வேறுபாட்டை ஒருவர் அல்லது மக்கள் சமூகம் அறியும் (உணரும்) போதுதான் அவர்கள் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியை நோக்கித் தமது ஆதரவைத் திருப்ப முடியும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் வெற்றிக்கான திசையை நோக்கி நகரலாம். ஏனைய தரப்போடு பேரம்பேசும் ஆற்றலைப் பெறலாம். இல்லையெனில் தமிழரசுக் கட்சியும் காங்கிரசுமே தொடர்ந்தும் மேலாதிக்கம் செலுத்தும். இது காலப்போக்கில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியிலுள்ள கட்சிகளை மங்கச் செய்து இல்லாதொழித்து விடும்.
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது, இதுவரையில் தன்னை வேறுபடுத்திக் காட்டக் கூடிய எந்த அடையாளத்தையும் (வேறுபாட்டையும்)உணர்த்தவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமானால், அதற்கான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பை அது உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்கான அனுபவமும் ஆற்றலும் அதற்கு உண்டு. ஆனால், அதை நோக்கி செயற்படுவதற்கு அது ஆர்வம் கொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால், விரைவில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி காணாமல் போய் விடும்.
தமிழ் மிதவாத அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்புகள் எதையும் கொண்டவை அல்ல. அதனால் அவற்றுக்கு இதில் அனுபவமும் இல்லை. வெறுமனே சம்பிரதாயமான ‘தமிழ்க்கட்சிகள்‘ என்ற லேபிளை வைத்தே 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை நடத்தியுள்ளன. அவற்றுக்கு அரசியல் முதலீடாக இருந்தது, சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலும் அது மேற்கொண்ட தமிழின ஒடுக்குமுறையுமே. இதற்கு மேலும் வாய்ப்பாக இருந்தது, தமிழ்ச்சமூகத்தில் நிலவும் சாதிய மனோபாவமாகும். தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்த்தேசியவாதத்தைக் கூர்ந்து நோக்கினால், அது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய உணர்வின் வளர்ச்சியும் நீட்சியுமாகும்.
சாதியத்தில் உள்ள வேறுபாடுகளையும் வேறுபடுத்தல்களையும் தேசியவாதத்தில் அப்படியே பிரயோகித்துத் தன்னை வடிவமைத்துள்ளது தமிழ்த்தேசியவாதம். அதில் ஜனநாயகத் தன்மையோ, ஜனநாயக மயப்படுத்தலுக்கான வெளிகளோ வாய்ப்புகளோ இல்லை. எப்போதும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, எதிர்த்தரப்பின் மீது அனைத்து நீதியின்மைகளையும் தேடிச் சோடித்துப் சேகரித்துப் பட்டியற்படுத்துவதோடு, வெளிப்பரப்பைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதுமாக உள்ளது. இதை எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே ஆதரித்துப் பின்பற்றுகிறது தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகம் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மேல் மத்தியதரத்தினரும் மத்திய வகுப்பினருமாகும்.
இதை எதிர்க்கக் கூடிய, எதிர்த்து வெற்றியைப் பெறக்கூடிய எத்தகைய பொறிமுறை வடிவத்தையும் மேற்படி இரண்டு கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அவை அப்படிச் செயற்படப்போவதுமில்லை. ஏனென்றால், அவை பிரதிநிதித்துவம் செய்வதே அந்த வர்க்கத்தினரையே. என்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்ப் பெருந்திரள் மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கோடு இருப்பது ஆச்சரியமானது. துக்கத்துக்குரியது.
ஆனால், மேற்படி இரண்டு கட்சிகளின் (தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட) தவறுகளை எதிர்த்தே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகள் (முன்பு விடுதலை இயக்கங்கள்) தமது அரசியற் பயணத்தை ஆரம்பித்தன. 1970 களில் விடுதலை இயக்கங்களாகத் தமது அரசியற் பயணத்தைத் தொடங்கிய இந்தத் தரப்பு, தமிழரசுக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் எதிராகச் செயற்பாட்டு அரசியல் முறைமையை அரங்கில் அறிமுகப்படுத்தியது. அது தனியே ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமல்ல. அப்படி யாரும் வியாக்கியானப்படுத்தக் கூடாது. அதற்குமப்பால், மக்களுக்கான பன்முகத் தன்மையுடைய அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார அடிப்படைகளில் கரிசனை வைத்து செயற்பாட்டு வடிவங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை இன்றைய சூழலுக்கு ஏற்ற விதமாக மறுவாக்கம் செய்து மேலும் தொடர்வதே உண்மையில் மாற்று அரசியலாகும். இதற்குரிய (பொருத்தமான) கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை செயற்பாட்டுக்குச் செல்ல வேண்டும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற பேரமைப்பை விரிவாக்கி, பலப்படுத்தி, வலுவாக்கம் செய்ய வேண்டும் என்றால், இது அவசியமாகும்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலான போரும் 50 ஆண்டுகளுக்கு மேலான ஒடுக்குமுறையும் ஈழத் தமிழ்ச்சமூகத்தைப் பல வகையிலும் நிலைகுலைவுக்கு உள்ளாக்கியுள்ளன. இலங்கையில் மிஞ்சியிருக்கும் தமிழ் மக்களில் 70 விழுக்காட்டினர் பாதிப்புக்குள்ளாகியவர்களாகும். இவர்களை மீட்டெடுக்கக் கூடிய, இவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். அதை ஒருபோதும் தமிழரசுக் கட்சியும் காங்கிரசும் செய்யப்போவதில்லை. அவற்றின் செல்வாக்குப் பிராந்தியம் (வாக்காளர்கள்) அநேகமாக படித்த மேற்தட்டு வர்க்கத்தினர் மற்றும் மத்திய தர வகுப்பினர். அவர்களே அடித்தட்டு மக்களின் மீதும் கருத்தியல் செல்வாக்கைச் செலுத்துகின்றனர்.
இதற்குக் காரணம், அடித்தட்டு மக்கள் அல்லது கீழ் மத்தியதர வர்க்கம் சுய பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தை வலுவாகக் கொண்டதல்ல. அதனால் அது தனக்கு மேலுள்ள தரப்பின் இழுவிசைக்கு தவிர்க்கமுடியாமல் உட்பட வேண்டியுள்ளது. அதனுடைய இழுவிசைக்கு வெளியிலுள்ள இன்னொரு தொகுதி மக்கள் தென்னிலைங்கைக் கட்சிகளையும் அவற்றோடு உறவான பிராந்தியக் கட்சிகளை நோக்கிச் செல்கின்றனர்.
இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் ஆய்வு (பரிசீலனை) செய்ய வேண்டியது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொறுப்பாகும். கதிரைகளை விட்டுக் களத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே இதனுடைய பொருள். தன்னுடைய இளைய உறுப்பினர்களைப் புதிய – செயற்பாட்டு அரசியலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். களம் என்பது மக்கள் மட்டத்தில் என்று பொருள்படும். மக்களுடனான உறவு வலுப்படும்போது செல்வாக்கு மண்டலம் விரிவு பெறும்.
தன்னை வேறுபடுத்திக் காட்டுவது வேலைகளால், நடைமுறைகளால், வித்தியாசங்களால், பயன்பொருத்தமான பெறுமானங்களால் என்பதை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உணர வேண்டும். அது சரியாக உணர்ந்து செயற்பட்டால், அந்த உணர்கை மக்களிடத்திலும் நிச்சயமாக நிகழும். அதுவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை விரிவாக்கிப் பலப்படுத்தும். இதில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றின் அரசியலை ஏற்காத தரப்பினரும் இணைந்து கொள்வர்.
இது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அரசியலையும் அதனுடைய கட்டமைப்பையும் புத்தாக்கம் செய்வதாக அமையும். மக்களிடத்திலே செல்வாக்கைப் பெறும் தரப்பு ஒன்றுதான் தன்னுடைய அரசியலை மக்களிடத்திலே துணிச்சலாக அறிமுகப்படுத்த முடியும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு தடுமாற்றம் உள்ளதைக் காண முடிகிறது. அவர்கள், வெளியே தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், மணிவண்ணன், விக்கினேஸ்வரன் போன்ற தரப்பினரால் பேசப்படுகின்ற தமிழ்த்தேசியவாத அரசிலையையே தாமும் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் மக்கள் தங்களை அங்கீகரிப்பார்கள் என்ற தவறான எண்ணமுள்ளது. இல்லையென்றால் தமது கடந்தகாலக் குறைபாடுகள் மேலெழுந்து கருந்திரையாக எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று அஞ்சுகிறார்கள்.
இது தேவையற்ற அச்சமாகும். ஈழத் தமிழ் அரசியலில் எவரும் – எந்தத் தரப்பினரும் தங்களை வெற்றிகரமான தரப்பு என்று சொல்ல முடியாது. அனைத்துத் தரப்பும் தோல்விகளையும் பலவீனங்களையும் பாதிப்புகளையும் மக்களுக்குப் பரிசளித்தவையே. எல்லாத் தரப்பும் ஏதோ ஒரு வகையில் சிங்கள மேலாதிக்கத் தரப்பிடம் தோற்றவையே. எல்லாத் தரப்பினரும் ஏதோ சந்தர்ப்பங்களில் இலங்கை – இந்திய அரசுகளோடு ஒத்துழைத்தவை அல்லது சேர்ந்து நின்றவையே. சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொன்னால், எவரும் சுத்தவாளிகளில்லை. எவரும் வெற்றிவீரர்களில்லை.
இந்த யதார்த்தத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மக்களிடம் துணிச்சலாக முன்வைப்பது அவசியம். அதற்கு வலுவானதொரு ஊடகக் கட்டமைப்பு தேவை. அது இன்றைய சூழலில் இலகுவானது. அதற்கான தொழில் நுட்பமும் அதில் தேர்ச்சியுள்ளோரும் தாராளமாக உதவுக் கூடிய நிலையில் உள்ளன.
விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாமற்போய் 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவர்களுடைய அரசியல் நினைவலைகளும் அரசியற் தொடர்ச்சியும் அடையாளங்களும் அவர்கள் உருவாக்கிய பண்பாட்டுச் சுவடுகளும் இன்றும் தமிழ் மனங்களிலும் சமூக வெளியிலும் பலமாகவே உள்ளன. இதற்குக் காரணம், 30 ஆண்டுகளாக ஊடகங்களின் வழியாக மக்களிடம் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு புலிகள் மேற்கொண்ட கரிசனையும் உத்திகளுமே. அதை மேவிச் செல்ல வேண்டுமானால், அல்லது இன்றைய காலகட்டத்துக்குரிய அரசியல் முன்னெடுப்பைச் செய்ய வேண்டுமென்றால், அதற்குரிய ஊடகப் பொறிமுறை அவசியம். இதைப்பற்றி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
ஆனால், இன்று வரையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கோ அதில் உள்ள எந்தவொரு கட்சிக்குமோ திறனுடைய இணையத் தளங்கூட இல்லை. அதிகமேன், சமூக வலைத்தளங்களில் ஊட அதற்கான அடையாளத்தைக் காண முடியவில்லை. இந்த நிலையில் எப்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தன்னை ஒரு வலுவான தரப்பாக அரசியல் அரங்கிலும் சமூக வெளியிலும் முன்னிறுத்த முடியும்? இந்தக் குறைபாட்டினால்தான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள இளைய – புதிய முகங்கள் எவையும் பரந்து பட்ட மக்களிடம் சென்று சேரவில்லை. இப்போதுள்ள வெகுஜன ஊடகங்களில் (mainstream media) தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கான சார்பு வெளிகளே அதிகமாக உண்டு. இதை இன்னொன்றால்தான் சமப்படுத்தவும் மேலோங்கவும் முடியும்.
இவ்வாறான ஒரு நிலை உருவாகும்போதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் குறித்து ஒரு தீர்க்கமான – சமனிலைப்படுத்தப்பட்ட உரையாடலைச் செய்வதற்கு வாய்ப்புண்டு. மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும் பாதுகாக்கப்படுவதும் அது மேற்கொள்ளக் கூடிய புத்தாக்க அரசியலினால்தான் அமையும். அதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்கள் தமது தரப்பை முழுவதுமாகக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுச் சூழலில் உள்ளனர். அதாவது புத்தாக்கச் சிந்தனையோடு கடுமையான உழைக்க வேண்டிய நிலையில் – நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.
மாற்று அரசியலைத் தேடி அலையும் தமிழ்ச்சமூகம் இறுதியாக வந்து சேர்ந்துள்ள இடம் தேசிய மக்கள் சக்தியாகும். நாளை அவர்கள் இன்னொரு சக்தியைத் தேடக் கூடும். மடிக்குள் மருந்திருக்கும்போது மலையெல்லாம் தேட வேண்டிய தேவை என்ன என்று தன்னை மாற்றுச் சக்தியாக உருவாக்கி நிரூபிப்பதே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேலை. இதில் அது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, கிழக்கின் அரசியல் உணர்வையும் யதார்த்தத்தையும்.
கிழக்கு மாகாணம் வரவர தமிழ்த்தேசியவாதத் தரப்பின் அரசியலில் இருந்து விடுபடும் – விலகிச் செல்லும் ஒரு யதார்த்தத்தில் உள்ளது. அங்குள்ள பிள்ளையான் – கருணா – வியாழேந்திரன் போன்றோரின் அரசியலோடு மட்டும் சம்மந்தப்படுத்தி இதைக் குறிப்பிடவில்லை. கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் போன்ற பிற தரப்புக் குரல்களையும் உணர்வுகளையும் ஏனைய அரசியல் ஈடுபட்டாளர்களையும் கவனித்தே இந்தக் கருத்து இங்கே முன்வைக்கப்படுகிறது.
கிழக்கிற்கென – கிழக்கை மையப்படுத்திய – ஒரு இணைய ஊடகத்தைக் கூட தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அங்குள்ள அரசியல், சமூக, பண்பாட்டு வெளியும் யதார்த்தமும் வேறானது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் வெளிப்பாடே இந்த விடுபடலும் விலக்கலுமாகும். இதை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி புரிந்து செயற்படுவது அவசியமாகும்.
தமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின் விடுதலைக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பங்களிக்க வேண்டிய பொறுப்பு பல வகையிலும் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் என்ற வகையில், தமிழ்ச் சமூகம் கூடுதலான பாதிப்பை சந்திப்பதற்கு இந்தக் கூட்டணியினரும் காரணமாகியுள்ளனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும். வரலாற்றைக் கட்டமைக்க – மாற்றியமைக்க வேண்டும்.
"செம்மணியில் உங்களின் பிரசன்னம் வலுவான செய்தியை சொல்லும்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம்
"செம்மணியில் உங்களின் பிரசன்னம் வலுவான செய்தியை சொல்லும்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம்
"செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும் - பொறுப்புக்கூறல் திட்ட அறிக்கையில் புதைகுழிகள் குறித்த விபரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம்
Published By: RAJEEBAN
25 JUN, 2025 | 10:37 AM
செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தில் குறிப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது.
கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடர்பில் இலங்கைக்கான உங்களது விஜயத்தினையும் நாட்டிற்குள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னகர்த்துவது குறித்த உங்கள் அர்ப்பணிப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
உங்களது விஜயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக கொண்டது என்பதை நாங்கள் அறிந்துகொண்டுள்ள அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி குறித்த விடயங்கள் உங்கள் அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணம் செம்மணி மனித மனித புதைகுழிக்கான விஜயத்தையும் இணைத்துக்கொள்ளுமாறு நாங்கள் வலுவான வேண்டுகோளை விடுக்கின்றோம்.
செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும், இந்த விடயத்தின் தீவிரதன்மையை மீண்டும் வலுப்படுத்தும்.
ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்
காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி
காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி
காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி
25 JUN, 2025 | 10:57 AM
காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவத்தினரின் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கவசவாகனம் தீப்பிடித்து எரிந்தது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது அவர்கள் 19 முதல் 21 வயதிற்குட்பட்டவர்கள்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்
யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்
யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்
‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப் போவதுமில்லை.
அவ்வாறிருக்கையில் விகாரை அமைக்கப்பட்டிருக்கும் காணியை விடுவிக்கும்படி போராட்டம் நடத்துவதே தேவையற்ற விடயமாகும் என்பதே யதார்த்தமானது.
கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள.
தமிழ் மக்களின் காணிகளில் இருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடைய பேச்சின் கருத்து என்னவென்று எல்லோருக்கும் புரிந்தாலும் அதற்கு விளக்கம் கொடுப்பதானால் விடுவிக்கக்கூடியவை என அவர்கள் நினைக்கும் அல்லது தீர்மானிக்கும் காணிகள் மாத்திரம்தான் விடுவிக்கப்படும் மற்றையவைகள் அல்ல என்பதாகவே இருக்கிறது.
இந்த நிலையில்தான், தையிட்டி விகாரைக்கு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிக்குப் பதிலாக ‘மாற்றுக் காணி அல்லது இழப்பீடு’ வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
விகாரை அமைக்கப்பட்ட காணிக்கு உரிமை கோருவோர் தங்களுடைய காணிக்கு மாற்றுக்காணி கோரவும் இல்லை அதற்கு இழப்பீடு வழங்கும்படி அரசாங்கத்தைக் கேட்கவுமில்லை என்றிருக்கையில் இந்தவிதமான அறிவித்தலொன்று வெளிவந்திருக்கிறது.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் (ONUR), தையிட்டி விகாரை குறித்த அறிக்கையை நீதி அமைச்சரிடம் ஒப்படைத்ததையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நடத்திவரும் காணி உரிமைக்கான போராட்டத்தின்போது, அரசாங்கத்தின் மாற்று காணி அல்லது இழப்பீட்டுத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, தங்கள் பரம்பரைக் காணியை தங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமென கோரிவருகின்றனர்.
ஜூன் 12ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத்தீர்க்க, பௌத்த விகாரையை காணியில் இருந்து அகற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை.
விகாரைக்குரிய காணி ஒதுக்கப்படும். தமிழ் மக்களின் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால், மாற்றுக் காணி அல்லது இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே நேரம், “தையிட்டி பிரச்சினை இந்த பிரதேசத்தில் பெரிய ஒரு பிரச்சினை.
தையிட்டி பிரச்சினைக்கு இந்த மாதத்திற்குள் தீர்வினை வழங்கத் தீர்மானித்துள்ளோம். ஏனென்றால், தையிட்டி விகாரையை உடைக்க ஏலுமா? ஏலாது?. அப்படியாயின் ஒன்று, விகாரைக்குரிய காணியை ஒதுக்கிவிட்டு, மிகுதிக் காணிகளை விடுவிப்பது. இந்த விடயம் அரச அதிபரிடம் ஒப்படைத்ததன் அடிப்படையில், பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பார்.
பின்னர் போய் பாருங்கள் காணி இருக்கிறதா என்று, காணி இருக்கின்றவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். மக்களின் காணிக்குள்
விகாரை அமைந்திருந்தால் அதற்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு
வழங்க முடியும்” என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படியே இந்த மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டுத் திட்டம் வெளிவந்திருக்கிறது என்பதே நிலைமை. 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்திவரும் தமிழ் மக்கள், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 150 பரப்பு காணியை இராணுவம் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி திஸ்ஸா விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். விகாரை அமைக்கப்பட்ட காணிக்குரிய உரிமையைக் கோருவோரில் ஒருவரான வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன், அரசாங்கத்தின் இந்த மாற்றுக் காணி, இழப்பீட்டுத் தீர்மானத்தைக் கடுமையாக நிராகரித்திருக்கிறார்.
காணி உரிமையை உறுதிப்படுத்தும் மக்களுக்குக் காணி வழங்கப்படும் என, ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர் உறுதியளித்த விடயத்தை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் சுட்டிக்காட்டுகின்றார்.
திஸ்ஸ விகாரைக்கு காணி கையகப்படுத்தப்பட்டமை காரணமாகக் காணியை இழந்த அனைத்து குடும்பங்களும் கலந்துரையாடலின் போது, காணி மீதான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி மக்களுக்குச் சொந்தமானது என்பதை
நாங்கள் உறுதிப்படுத்தினால், அது மக்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். எங்களுக்கு எங்கள் காணி வேண்டும் என்றும்
பத்மநாதன் சாருஜன் கூறியிருக்கிறார்.
இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியமைக்கு அமைய, திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் குறித்து கடற்றொழில்
அமைச்சர் மற்றும் நீதி அமைச்சரின் கருத்துக்கள் முரண்படுகின்ற விடயம் கவனிக்கப்பட வேண்டும். இருந்தாலும், நடைபெறுவது தமிழ் மக்களுக்கு
நன்மையாக இருக்கப்போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம்.
திஸ்ஸ விகாரை காணிப் பிரச்சினை தொடர்பான அனைத்து தரப்பினரையும் யாழ்ப்பாண நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்கு வரவழைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு மத்தியஸ்த நிகழ்ச்சியை நடத்தியதாக 2025 ஜூன் முதல் வாரத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
காங்கேசன்துறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி அன்று இடம்பெற்றது என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில், பலாலி விமான நிலையத்திற்குத் தேவையான காணிக்கு மேலதிகமாக அந்தப் பகுதியில் இராணுவ முகாமை நடத்திச் செல்லவும் காணி அவசியம் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என, ஜூன் 12ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
எஞ்சிய காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புத் தலைவர்களுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதே நேரத்தில், பாதுகாப்புத் தரப்பினருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி பலாலி விமான நிலையம் வருவதனால் அத்தியாவசியமாக அந்த விமான நிலையத்திற்குத் தேவையான காணியைத் தவிர்த்து, அதனைவிட இந்த பிரதேசத்தில் ஏதோ ஒரு இராணுவ முகாம் இருக்கத் தானே வேண்டும்.
அந்த இராணுவ முகாம் தவிர்த்து மற்றைய காணிகள் அனைத்தையும் விடுவிக்குமாறு மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார்.
அதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மிகவும் தெளிவாகப்
பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டமைக்கமைய, பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பலாலியில் விமானப்படைத் தளத்தை விரிவுபடுத்துவதற்காக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான 1009.7 ஏக்கர் காணியை விமானப்படை ஏற்கெனவே ஓடுபாதைக்காகப் பயன்படுத்தி வருவதாக ஜனவரி 2025இல் ஜனாதிபதியிடம் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், அந்த காணியில் 643 தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இவ்வாறிருக்கையில்தான், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளில் இருந்து விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால், தையிட்டி விகாரை அகற்றப்படாதிருக்கும் என்ற முடிவும் கிடைக்கும்.
கருத்து படங்கள்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பயங்கரவாதத் தடைச்சட்டம் 3 மாதங்களில் நீக்கப்படும்!
பயங்கரவாதத் தடைச்சட்டம் 3 மாதங்களில் நீக்கப்படும்!
பயங்கரவாதத் தடைச்சட்டம் 3 மாதங்களில் நீக்கப்படும்!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. நீதி அமைச்சர் தலைமையில் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்குக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்தச் சட்டத்தை நீக்கமுடியும். அதேபோல் திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டமொன்றும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது. அரசியல் பழிவாங்கல் நோக்கில் தடுத்துவைத்தல் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படும். ஜனநாயக வழிமுறைகளுக்கமைய புதிய சட்டம் அமையும் - என்றார்.
https://newuthayan.com/article/பயங்கரவாதத்_தடைச்சட்டம்_3_மாதங்களில்_நீக்கப்படும்!
4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர
4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர
4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனாவுக்குச் செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சீனா சென்று நாடு திரும்பியுள்ளார். அமைச்சர் வசந்த சமரசிங்க தற்போது சீனாவில் தங்கியுள்ளார். சீனா சென்ற ரில்வின் சில்வா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் திரும்பியுள்ளார் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் சீனா சென்று திரும்பிய ஜனாதிபதி மீண்டும் சீனா செல்லவுள்ளமை பேசுபொருளாகியிருக்கின்றது.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, பொருளாதார நெருக்கடி சமயத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க சீனா உறுதியளித்திருந்தது. ஆயினும் கோத்தாபய அதைத் தவிர்த்து சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதற்கு முடிவெடுத்தார். அதனால் அந்த நிதி வழங்கப்பட வில்லை. அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 4 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அநுர சீனா செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
https://newuthayan.com/article/4_பில்லியன்_டொலருக்காக_சீனா_பறக்கின்றார்_அநுர