ஊர்ப்புதினம்

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

1 month 4 weeks ago

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியதுடன், அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். 

எனினும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது ஆளும் கட்சி அல்ல எனவும் அது எதிர்க்கட்சியே எனவும் கூறியதுடன், அரசாங்கம் கூறுவதற்கமைய அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சி தயாரில்லை எனவும் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmkm7z2jt0464o29ny1pimdpv

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

1 month 4 weeks ago

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

adminJanuary 20, 2026

cvk.jpeg?fit=809%2C448&ssl=1

தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார்.

வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

“எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது, அந்த நிகழ்வுகள் JVP மற்றும் NPP யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. அதை அரசாங்க நிகழ்வாகப் பார்க்க முடியாது,” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தன்னை ஒரு மாகாண சபை அவைத்தலைவராக அழைப்பதுமில்லை, அறிவிப்பதுமில்லை எனவும், மக்கள் வாக்குப் பெற்று வந்த பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்கைகளை வழங்கிய போதிலும், வடக்கில் ஒருமித்த பயணம் சாத்தியமில்லை எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

மேலும் “வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள்,” என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.

தமது பிரச்சினைகள் தொடர்ந்தால் நாடாளுமன்றத்திலும், சர்வதேச ரீதியாகவும், ஊடகங்களுக்கும் செல்வோம் எனவும் அவா் எச்சரித்தார்.

https://globaltamilnews.net/2026/226891/

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர

1 month 4 weeks ago

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர

19 Jan, 2026 | 09:40 PM

image

(இராஜதுரை ஹஷான்)

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர்  திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது.

திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது.

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/236460

சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன்

1 month 4 weeks ago

download-2026-01-19T163354.362.jpg?resiz

சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன்.

இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை  மன்னாரில் இருந்து நாளை ஆரம்பிக்க உள்ளார்.

வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து,மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தனது பயணம் குறித்து தெளிவு படுத்தினார்.

இதன் போது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலி யூடாக இலங்கை பூராகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும்,குறிப்பாக,இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் புலம் பெயர் உறவுகளும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காக கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர்.அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பயணம் மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்பட  உள்ளது.

எனவே மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து,மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது பயணத்தின் நோக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1460578

செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

1 month 4 weeks ago

செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Jan 19, 2026 - 08:30 PM

செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக அகழ்வுப் பணிகளைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் அகற்றப்பட்ட பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.

மயானத்தின் உட்புறத்தில் உள்ள பாதையை நல்லூர் பிரதேச சபையினர் சீரமைத்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குறித்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தில் மாற்றங்களையோ ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எவ்வித பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmklakm8f0459o29n81uv65ns

கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !

1 month 4 weeks ago

கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !

19 Jan, 2026 | 05:55 PM

image

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சாவித்ரி குணசேகர, மூத்த ஊடகவியலாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர்.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

மேலும், சுனில் ஜயசேகர, ஹனா இப்ராஹீம் மற்றும் ஆர். ராம்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், ஊடக சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

WhatsApp_Image_2026-01-19_at_17.40.57.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.40.51.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.40.38.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.41.38.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.42.02.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.41.43.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.41.04.jp

https://www.virakesari.lk/article/236456

"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

1 month 4 weeks ago

"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

19 Jan, 2026 | 05:31 PM

image

யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08 ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது.

அதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/236454

இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு

1 month 4 weeks ago

களுத்துறையில் இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு

19 Jan, 2026 | 05:36 PM

image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா  தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும்.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான  பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

8883ceae-b415-4048-a30d-efbdc06ce673.jpg

d42a8337-c81a-4777-9be7-9917ac76956a.jpg

5ffe4eba-5b3b-45c6-8b4a-cc2d8f13953d.jpg

f12a81c3-8eca-4aad-a238-1a9a8145b21e__1_

https://www.virakesari.lk/article/236451

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன்

1 month 4 weeks ago

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன்

19 Jan, 2026 | 01:08 PM

image

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய 'இந்தியாவில் கல்வி' (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில்  திங்கட் கிழமை  (19) நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நிகழ்வானது ஒரு சாதாரணக் கண்காட்சி மட்டுமல்ல. இது எமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நுழைவாயில். அத்தோடு, இது வலுவடைந்து வரும் 'இந்தியா - இலங்கை அறிவுசார் பங்காண்மையின்' ஒரு சான்றாகவும் திகழ்கின்றது.

இந்தியா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்கின்றது. அங்கு ஏறத்தாழ 1,300 பல்கலைக்கழகங்களும் 75,000 கல்லூரிகளும் உள்ளன. 

இங்குள்ள யாழ்ப்பாண மாணவர்களுக்கு, முதன்மையான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஒரு மாணவருக்கு, இந்தியாவில் கல்வி கற்பது அதிகபட்ச கலாசார இணக்கப்பாட்டையும், ஒரு இணக்கமான சூழலையும் வழங்குகின்றது.

எமது பிராந்தியம் ஏற்கனவே வலுவான பழைய மாணவர் தடம் ஒன்றைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றின் பல விரிவுரையாளர்கள், இந்தியாவில் தமது பயிற்சியைப் பெற்ற பெருமைமிக்க ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில் பெற்றவர்கள்.

இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 800 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இவை இளங்கலை, முதுகலை மற்றும் செவ்வியல் இசை, நடனம் போன்ற விசேட துறைசார் பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன.

இந்தக் கண்காட்சியானது 'நம்பிக்கையின் புதிய பாலமாக அறிவு' அமையப் பெறுவதற்கான ஒரு மேடையாகும். இந்தியாவில் கல்வி கற்கத் தெரிவு செய்வதன் மூலம், எமது மாணவர்கள் வெறும் பட்டத்தை மட்டும் பெறவில்லை. 

அவர்கள் எமது முழுப் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்கள் மற்றும் புத்தாக்கங்களின் இருவழிப் பரிமாற்றத்தில் பங்குகொள்கின்றனர்.

ஒன்றாக இணைந்து, பாக் நீரிணையை ஒரு 'அறிவுசார் நீரிணையாக' மாற்றுவோம். பகிரப்பட்ட கற்றல் மற்றும் வளர்ச்சியின் ஊடாக எமது சிறந்த அறிவாளிகள் அங்கு வளம் பெறட்டும் என்றார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

034efeef-0217-4cbb-b7d1-38d3ea9f1046.jpg

7a1a0652-9fd5-4742-8e23-51ae94fb2b9d.jpg

7a1a0652-9fd5-4742-8e23-51ae94fb2b9d.jpg

83178e3a-fcac-4028-9b4f-c8b5364486aa.jpg

6d294a27-30fa-485f-9442-780cf76393f3.jpg

a91fe025-6e62-4063-9908-52c312dffa14.jpg

https://www.virakesari.lk/article/236416

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!

1 month 4 weeks ago

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!

19 Jan, 2026 | 03:59 PM

image

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் 3.2 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

321 மீற்றர் நீளத்தில் 11 மீற்றர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திறப்பு விழாவில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

2018-2019 காலப்பகுதியில் இப்பகுதியில் மூன்று மேம்பாலங்களை அமைக்கத் திட்டமிடப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இந்த மேம்பாலத்தின் பணிகள் தடைப்பட்டிருந்தன. குறிப்பாக, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பொலிஸ் குடியிருப்புகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக 2022 இல் நிறைவடைய வேண்டிய இப்பணிகள் காலதாமதமானதுடன், இதனால் ஆரம்ப மதிப்பீடான 2,700 மில்லியன் ரூபாயுடன் மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு, தற்போது மொத்தம் 3.7 பில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மேம்பாலமானது ஒரு வழிப் பாதையாகச் (One-way) செயற்படுவதுடன், இது கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு நகரை ஒரு சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தில் இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, இப்பகுதியில் அகற்றப்பட்ட பொலிஸ் குடியிருப்புகளுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

617561159_1082095944011392_3917720480199

613809883_893810773060942_45527726842066

613848604_1390111652841989_2081206451679

614364943_861194233561073_62996814273676

616196833_1854410055213653_6648196483203

https://www.virakesari.lk/article/236414

ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை

1 month 4 weeks ago

ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை

19 Jan, 2026 | 11:59 AM

image

(இராஜதுரை ஹஷான்)

2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில்  131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2024 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏதேனும் நிதியை ஜனாதிபதியால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முதலீடு செய்ய முடியும்.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கணக்காய்வில் 2024 ஆம் ஆண்டு நிர்வாக சபை ஒரு தடவை மாத்திரமே கூடியுள்ளது. அதாவது 2024.08.15 ஆம் திகதி நிர்வாக சபை கூடியுள்ளது.எவ்வாறாயினும் இந்த வைப்புகளுக்குரிய அனுமதி 2025.01.28 ஆம் திகதியன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில்  131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவிக்கான கொடுப்பனவை வழங்கும் முறை பரிசீலிக்கப்படும் முறையான விண்ணப்பம், மாத வருமானம், பிரதேச செயலாளரின் அறிக்கை, சொத்துக்கள், உயர்ந்தபட்ச மருத்துவ உதவித் தொகை வரையறை உள்ளிட்ட விடயங்கள் பரிசீலிக்கப்படாமல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதியை கடனாக வழங்கும் சட்ட ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.இவ்வாறான பின்னணியில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியத்தின் ஊடாக முன்னாள் பிரதமருக்கு 29,809,143 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட விடயங்களுக்கமைய அந்த தொகையில் 13,748,217 ரூபா மீள அறவிடப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2025 ஜுலை  மாதம் வரை அந்த தொகை மீள அறவிடப்படவில்லை என்று கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி நிதியத்தின் பணிக்குழாமினருக்கான சம்பளம் மற்றும் ஏனைய செலவுகள் நிதியத்தின் ஊடாகவே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்  இதற்குரிய 51,128,078 ரூபா செலவை ஜனாதிபதி செயலகவே ஏற்றுக்கொண்டுள்ளது.

அதற்கமைய மீளாய்வு ஆண்டின் இறுதி பகுதிக்குரிய  விதிமுறைகள் ஜனாதிபதி நிதிய சபையினால் தயாரிக்கப்படவில்லை.அதன் காரணமாக அதிகாரங்கள் பகிர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் இல்லாமல் செயற்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/236409

மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம்

1 month 4 weeks ago

மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக  மூடப்படும் - புகையிரத திணைக்களம்

Published By: Digital Desk 1

19 Jan, 2026 | 12:09 PM

image

(இராஜதுரை ஹஷான்)

புனரமைப்புப் பணிகளுக்காக  வடக்கு புகையிரத  மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக  இன்று திங்கட்கிழமை (19) முதல்  மூடப்படவுள்ளது.  மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி - தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள்  இன்று ஆரம்பிக்கப்படும்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத  பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரத பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு - தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் 'புலதிசி கடுகதி புகையிரதம்' மற்றும் 'உதயதேவி' புகையிரத  சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான 'இரவு தபால் புகையிரத' சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய  இன்று முதல் அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையும், எதிர்வரும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை - காங்கேசன்துறை வரையும் 'யாழ் ராணி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளது.

https://www.virakesari.lk/article/236399

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

1 month 4 weeks ago

Anura-4.jpg?resize=750%2C375&ssl=1

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2025 நவம்பர் நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் 10 வாக்குறுதிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

அதே நேரத்தில் ஒன்பது வாக்குறுதிகளில் எந்த முன்னேற்றமும் பதிவு செய்யப்படவில்லை. 

ஒரு வாக்குறுதி தோல்வியுற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“அனுர மீட்டர்”, ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட 30 முக்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது. 

இந்த மதிப்பீட்டில் 2026 தேசிய பட்ஜெட் வரையிலான முன்னேற்றங்கள் அடங்கும். 

டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டது.

கண்காணிக்கப்பட்ட வாக்குறுதிகள், அவற்றின் உயர் மட்ட பொது நலன் மற்றும் தேசிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அவை பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கியது.

தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை Manthri.lk பராமரிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கண்காணித்த “மைத்ரி மீட்டர்” மற்றும் “கோட்டா மீட்டர்” போன்ற முந்தைய உறுதிமொழி கண்காணிப்பு திட்டங்களை அனுர மீட்டர் பின்பற்றுகிறது.

தற்போது கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில், ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. 

கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பும் மேலதிக வாக்குறுதிகளை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கும் இந்த தளம் அழைப்பு விடுத்துள்ளது.

Manthri.lk என்பது இலங்கையின் ஒரே நாடாளுமன்ற கண்காணிப்பு தளமாகும், மேலும் இது நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

https://athavannews.com/2026/1460479

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா!

1 month 4 weeks ago

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா!

பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை!

written by admin January 18, 2026

NOTHEN-MANNAR-PONGAL-VELLA-18012026-7.jp


மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா –

பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம்  (18)   ஞாயிற்றுக்கிழமை  காலை  நடை பெற்றது.

வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில்  இடம்பெற்ற குறித்த விழாவில்  விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்    அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண  ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி   பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு,  சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த   கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்    அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு  அபிவிருத்தி   பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த  நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது.

இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண  ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது  சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது.  தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட  நிகழ்வு தொடர்ந்து   இடம் பெற்றது.

மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.


https://globaltamilnews.net/2026/226770/

கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மை ஐ.நாவின் புதிய அறிக்கை மூலம் நிரூபணம் - அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல்

1 month 4 weeks ago

கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மை ஐ.நாவின் புதிய அறிக்கை மூலம் நிரூபணம் - அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல்

18 Jan, 2026 | 10:21 AM

image

(நா.தனுஜா)

இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி, இவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராயவேண்டும் என வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய 'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டது.

இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.நாவின் இப்புதிய அறிக்கையைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும், உலகளாவிய ரீதியில் பல்வேறு மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தலைதூக்கியிருக்கும் சூழ்நிலையில், தமது பிரச்சினைகளை ஐ.நா மறந்துவிட்டது எனக் கருதியிருந்த வேளையில் இவ்வறிக்கை வெளியானது தமக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிகமோசமான அக்கிரமங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச மக்கள் தீர்ப்பாயம், சர்வதேச நீதிமன்றம் போன்ற கட்டமைப்புக்களின் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா? அதனை எவ்வாறு செய்வது? என்பன தொடர்பில் ஆராயவேண்டும் எனவும் லீலாதேவி குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்த ஆராய்வு செயன்முறை குறித்தவொரு தரப்பினருக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், மாறாக அதில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/236330

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

1 month 4 weeks ago

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் விடயம் தொடர்பாக முக்கிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியநேத்திரனின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போதுதான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

அரசியல் குழுவின் இறுதி முடிவு! கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன் | Ariyanathran Expelled From The Party

பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

கட்சியின் அரசியல் குழு கூடி குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே அவர் இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.” என்றார்.

https://akkinikkunchu.com/?p=356525

மட்டக்களப்பு வவுணதீவில் வயல்களை நாசமாக்கிய காட்டுயானை ; நீண்ட நேரப் போராட்டத்தின் பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு

1 month 4 weeks ago

மட்டக்களப்பு வவுணதீவில் வயல்களை நாசமாக்கிய காட்டுயானை ; நீண்ட நேரப் போராட்டத்தின் பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு

18 Jan, 2026 | 04:45 PM

image

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் பெரும்போக நெற்செய்கை வேளாண்மை வயல்களுக்குள்  நேற்று (17) மாலை நுழைந்த காட்டு யானை பல மணிநேரங்கள் வயல்வெளிக்குள் நின்று, விளைந்த பெருமளவு நெல்மணிகளை உட்கொண்டுள்ளன.

குறித்த யானையை அப்பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானை வெடிகள் கொழுத்திப்போட்டு, பல மணிநேர போராட்டத்தின் பின்னர், அந்த யானையை காட்டுப்பகுதிக்கு அதிகாரிகள் விரட்டினர்.

யானையின் அட்டகாசத்தினால் பல ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காட்டு யானைகளிடமிருந்து மக்களையும் பொருட்களையும் பாதுகாக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

download__1_.jpg


https://www.virakesari.lk/article/236360

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்

1 month 4 weeks ago

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்

18 Jan, 2026 | 12:52 PM

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். 

இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும். சட்டம் அனைவருக்கும் சமம். 

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்? 

சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும் நாக விகாரை பிக்கு ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். 

இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது?

தைப்பொங்கல் என்பது உழைக்கும் வர்க்கத்தின் விழா. மண்ணோடு ஒட்டிய வாழ்வின், வாழ்வு கலாச்சாரத்தின், பண்பாட்டின் விழா மட்டுமல்ல மண் தமது வியர்வை விழுந்த மண்ணின் சுதந்திர வாழ்வுக்கான அரசியல் உரிமைசார் விழாவுமாகும். இதனை கௌரவப்படுத்துவது என்பது மண்ணின் மக்களை சுதந்திரமாக வாழ விடுவதாகும். அதற்கான எந்த உறுதிமொழியையும் ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் காலங்களில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியவர் அதற்கான எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக தெளிவாக இதனை கூறாதவர் தமிழ் மக்களின் மண்ணில் நின்று தம் மக்களை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள். 

தமிழ் மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.

இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/236339

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு

1 month 4 weeks ago

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. 

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

"Star of Pure Land" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்ற கற்களை விட இது மிகவும் சிறப்பானதாகும் என்றும் கூறப்படுகின்றது. 

இதன் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாகும் என மதிப்பிடப்படபடுவதாக இம்மாணிக்கக்கல்லை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை மாணிக்கக்கல் ஆய்வுகூடத்தின் பிரதம இரத்தினக்கல் ஆய்வாளர் அஷான் அமரசிங்க தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmkjkzlev042wo29n043wb2ly

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

1 month 4 weeks ago

download-3-3.jpg?resize=297%2C170&ssl=1

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்மைய நாட்களாக வடகடல் பகுதி வழமையை விட அதிக குளிராகக் காணப்படுகிறது.

இந்த மாற்றமானது இலங்கையின் ஒட்டுமொத்த வானிலைப் பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

வடக்கிலிருந்து ஆரம்பிக்கும் இந்தக் குளிர்ந்த நீர், கிழக்குக் கரையோரம் வழியாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படும்.

இந்த நீரோட்டத்தின் காரணமாக, தெற்குப் பகுதியில் நிலவும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது குறைக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

‘டித்வா’ (Ditwah) புயல் மறைந்ததைத் தொடர்ந்து, நிலப்பரப்பில் பதிவாகும் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன.

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும் என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1460367

Checked
Wed, 03/18/2026 - 07:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr