தமிழகச் செய்திகள்

சேலம்: பட்டியலின மக்கள் கோவில் நுழைவுக்கான பேச்சுவார்த்தையில் கலவரம் வெடித்தது ஏன்? பிபிசி கள ஆய்வு

3 weeks ago
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மே 2024, 05:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.

கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது தெரிய வந்தது என்ன?

கலவரத்தில் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு மிக அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் 200 பட்டியலின குடும்பங்கள் உள்ளன.

இரு கிராமத்தின் மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.

 
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன

இந்நிலையில், மே 1ஆம் தேதி இரவு, "ஆதிக்க சாதியினர் தங்களை கோவிலுக்குள்விட மறுக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டிய பட்டியலின மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பிரச்னைக்குத் தீர்வு காண, மே 2ஆம் தேதி இருதரப்பையும் அழைத்த வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருதரப்பும் சமரசம் அடையாத நிலையில், அன்று மதியமே இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த நகைக்கடை, காய்கறிக்கடை என 5 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், இது கலவரமாக மாறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் அங்கு என்ன நடந்தது? கலவரத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிய பிபிசி தமிழ் தீவட்டிப்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.

இதேபோன்ற பிரச்னை ஏற்பட்ட திருவண்ணாமலை அருகே உள்ள அம்மன் கோவில் ஒன்றில், கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்யத் தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 
‘இருதரப்பிலும் பாதிப்பு’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன

நாங்கள் தீவட்டிப்பட்டி மற்றும் நாச்சினம்பட்டிக்குச் சென்றபோது, இரு கிராமங்களிலும் திரும்பிய திசையெல்லாம் போலீசாரும், திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் காட்சியளித்தன.

நாச்சினம்பட்டி நுழைவுப்பகுதியில் பரபரப்பான அந்த சாலையில், கலவரத்திற்கு சாட்சியாகத் தீக்கிரையான கடைகளும் அந்தக் கடைகளில் இருந்த பொருட்களும் இருந்தன.

தீக்கிரையான நகைக்கடைக்கு அருகே பூக்கடை நடத்தி வரும் சரஸ்வதியிடம் பேசியபோது, "இந்தக் கட்டடத்தில் ஆதிக்க சாதி, பட்டியல் சாதி எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடை வைத்துள்ளனர். தீ பிடித்ததில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது, அன்று மதியம் 1:00 மணிக்கு மேல் திடீரென இப்பகுதியில் பல இளைஞர்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டு இருந்தனர்," என அன்று நடந்தது குறித்து விவரித்தார்.

அப்போது ஒரு காய்கறிக்கடையில் தீப்பிடித்ததாகவும் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்குப் பரவியதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய சரஸ்வதி கூறினார். இருப்பினும் காய்கறிக்கடை அருகே ஒரு டிப்பர் லாரி நின்றிருந்ததால் யார் தீ வைத்தது எனத் தெரியவில்லை என்கிறார் அவர்.

சரஸ்வதியிடம் பேசிவிட்டு பட்டியலின மக்கள் வசிக்கும் நாச்சினம்பட்டி கிராமத்தினுள் சென்றபோது அங்குள்ள வேப்பமரத்தின் அடியில், சில பெண்கள், இளைஞர்கள் தலையில் காயத்திற்கான கட்டுகளுடன், மற்றவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்தும் அன்று என்ன நடந்தது எனவும் வினவினோம்.

 
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
‘கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால் தான் பிரச்னை’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,'எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார் தங்காய்.

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் "ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால்தான் பிரச்னை" எழுந்ததாகத் தெரிவிக்கிறார் தங்காய்.

‘‘எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் உற்சவரான மாரியம்மனை வைத்து பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம்.

ஆனால், இந்த ஆண்டு பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் கூறியதோடு சாதிப் பெயரை வைத்து மிக மோசமாகத் திட்டியதாகவும்" கண்ணீருடன் தழுதழுத்த குரலில் நம்மிடம் பேசினார் அவர்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய தங்காய், ‘‘பட்டியலின சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும்,’’ என்றார்.

 
‘போலீசார் எங்களை மட்டுமே தாக்கினார்கள்’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,'போலீசார் தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்', என்கிறார் வீரம்மா.

கலவரம் முடிந்ததும் போலீசார் தங்கள் கிராமத்தினுள் நுழைந்து கடுமையாக தங்களைத் தாக்கியதாகவும், வீடு புகுந்து பெண்களையும் தாக்கியதாகவும் குற்றம் சாட்டுகிறார் வீரம்மா.

‘‘நான் அன்று வீட்டில்தான் இருந்தேன். திடீரென பிரச்னை எனத் தெரிந்ததும் சென்று பார்த்தபோது, அங்கு எங்கள் பகுதி இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். பலரும் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர்.

கலவரம் முடிவதற்குள் நான் வீட்டுக்கு வந்தபோது, எங்கள் பகுதிக்கு வந்த போலீசார் எங்களை கடுமையாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அவர்களின் தாக்குதலில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்,’’ என்கிறார் வீரம்மா.

 
‘நான் வேலைக்கு போயிட்டு வந்தேன், என்னையும் அடித்தார்கள்’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,கலவரம் நடந்த அன்று கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தன்னை போலீசார் தாக்கியதாகக் கூறுகிறார் பசுபதி.

வீரம்மாவின் கூற்றையே பசுபதியும் கூறுகிறார். காலில் காயமடைந்து படுக்கையில் இருந்தபடி நம்மிடம் பேசிய பசுபதி, ‘‘அன்று கலவரம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை நான் வீட்டுக்கு வந்தபோது திடீரென வீட்டிற்குள் வந்த போலீசார் என்னை லத்தியால் கடுமையாக அடித்தார்கள். எதற்காக அடிக்கிறீர்கள் என நான் கேட்டபோது என்னைத் திட்டியதுடன், கலவரம் செய்கிறாயா? எனக் கூறி அடித்தார்கள்,’’ என்கிறார்.

மேலும் தனது காயத்தைக் காண்பித்து, இரு நாட்களாகப் படுக்கையில் இருப்பதாகவும், தனக்கு ஏற்கெனவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த நிலையில் போலீஸார் தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பசுபதி.

ஆனால், போலீசார் தாக்கியதாக பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன்.

பிபிசி தமிழிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘நாங்கள் கலவரத்தில் ஈடுபட்டோரைத்தான் கைது செய்தோம். அப்போது, ஆதாரத்திற்காக நாங்கள் வீடியோ எடுத்துதான் கைது நடவடிக்கையில் ஈடுபட்டோம். பட்டியலின மக்கள் புகார் தெரிவித்தால், வீடியோவை ஆய்வு செய்து தவறு இருந்தால் அத்துமீறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனக் கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகளைக் கேட்டறிய தீவட்டிப்பட்டி கிராமத்திற்குச் சென்றோம்.

கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மாரியம்மன் கோவில் திருவிழாக் கோலத்தில் அலங்காரம், விளக்குகளுடன் காட்சி அளித்தாலும், கலவரத்தால் திருவிழா தடைபட்டுள்ளதால் கோவிலே வெறிச்சோடி வெறும் போலீசாருடன் காணப்பட்டது.

 
‘பட்டியலின மக்கள் உள்ளே வரக்கூடாது’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா கோபிநாத்.

அந்தக் கோவிலைக் கடந்து சென்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்கள் பட்டியல் சாதி மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எனவும் இது தங்கள் பாரம்பரியம் எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

நம்மிடம் பேசிய கோவிலின் தர்மகர்த்தாவான கோபிநாத், ‘‘பல தலைமுறையாக நாங்கள் இந்தக் கோவிலை நடத்தி வருகிறோம். இதை எங்கள் சாதி உள்பட ஐந்து சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறோம். அவர்கள் (பட்டியலின மக்கள்) கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபாடு செய்வார்கள், பல தலைமுறையாக அப்படித்தான் கடைபிடிக்கிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தைக் கடைபிடிப்போம், அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை எங்கள் கோவிலுக்கு அவர்கள் வர வேண்டாம்,’’ என்று கூறினார் அவர்.

"இது அனைவருக்கும் பொதுவான கோவில்தானே? பிறகு ஏன் பட்டியலின மக்கள் வர வேண்டாம் என்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டபோது, ‘‘இது தான் எங்கள் பாரம்பரியம், பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கிறோம், விட்டுத் தரமாட்டோம்,’’ என்றார்.

‘வெளியில் நின்றுதான் வழிபடுவார்கள்’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,'எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறியதால் கலவரம் நடந்துள்ளது,' என்கிறார் பாவையம்மாள்.

கோவிலுக்கு வெளியில் நின்றுதான் இத்தனை ஆண்டுகளாக பட்டியலின மக்கள் வழிபட்டார்கள் என்கிறார் பாவையம்மாள்.

‘‘பல தலைமுறைகளாக கோவிலுக்கு வெளியில் நின்று தான் அவர்கள் (பட்டியலின மக்கள்) வழிபடுவார்கள், தீர்த்தம் வாங்குவார்கள். அவர்கள் உள்ளே வந்து வழிபட்டது இல்லை, அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இளைஞர்தான் கோவிலுக்குள் வர வேண்டும், எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறினார். அதனால்தான் கலவரம் நடந்துள்ளது,’’ என்கிறார் அவர்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சார்பாக நம்மிடம் பேசிய கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த மணி மற்றும் சேனாதிபதியும், பாவையம்மாள் கருத்தைத்தான் எதிரொலித்தனர்.

கலவரம் தொடர்பாகவும், பட்டியலின மக்களின் கோரிக்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைப்பாடு குறித்தும், பிபிசி தமிழ் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது.

 
‘சமூக நீதியை உறுதிசெய்வோம்’ – மாவட்ட ஆட்சியர்
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,போலீசார் தாக்கியதில் காயமடைந்த பெண்.

பிபிசி தமிழ் விளக்கம் கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது, செல்போன் வாயிலாகப் பதிலளித்த ஆட்சியர் பிருந்தா தேவி, ‘‘கலவரம் ஏற்படுவதற்கு முன்பு இருதரப்பு மக்களையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசனை நடத்த ஒருநாள் அவகாசம் கேட்டனர். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை முடித்த அன்றே ஏன் கலவரம் செய்தார்கள் எனத் தெரியவில்லை," என்றார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து வருவதாகவும் போலீசார் கண்காணிப்பில் நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்து, சமூக நீதியை உறுதிப்படுத்துவோம்,’’ என விளக்கம் அளித்துள்ளார்.

‘மீண்டும் சுமூகமாக திருவிழா நடத்த திட்டம்’ – காவல் கண்காணிப்பாளர்
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார்

போலீசார் வேண்டுமென்றே வீடு புகுந்து தாக்கியதாக பட்டியல் சாதியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, செல்போன் வாயிலாக பதிலளித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘1972 முதல் அந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பட்டியலின சாதியினரை உள்ளே நுழையக்கூடாது என ஆதிக்க சாதியினர் கூறியதால், இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடைகளுக்குத் தீ வைத்தவர்களைத் தேடி வருகிறோம். இருதரப்பையும் கைது செய்யும்போது நாங்கள் ஆதாரத்திற்காக வீடியோவும் எடுத்துள்ளோம்.

போலீசார் வேண்டுமென்றே யாரையும் தாக்கவில்லை. அப்படி புகார் வரும் பட்சத்தில் எங்கள் வீடியோக்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் திருவிழாவை சுமூகமாக நடத்த இருதரப்பிடமும் பேச்சவார்த்தை நடத்துவோம்,’’ என விளக்கம் அளித்தார்.

 
அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார்

"அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் பட்டியல் சாதியினர் நுழைவதில் சிக்கல் என்ன?" என்று இந்து சமய அறநிலையத்துறை காடையம்பட்டி ஆய்வாளர் கதிரேசனிடம் கேட்டபோது, ‘‘இதுவரை அந்தக் கோவிலில் இதுபோன்ற பிரச்னை, கலவரம் வந்தது இல்லை. பட்டியல் சாதியினர் சார்பில் எந்தப் புகாரும் வரவில்லை.

அரசு கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்வது தனிமனித உரிமை. இதை உறுதிப்படுத்த இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம், அதற்குள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னையை விரைவில் சரி செய்வோம்,’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c1vw66yn2evo

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

3 weeks 1 day ago

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : 
WhatsApp-Image-2024-05-04-at-10.32.27_76
 

தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Savukku Shankar has been arrested today by Coimbatore city police cyber crime wing for the offences committed under the following sections. 294(b), 509 and 353 IPC r/w section 4 of Tamilnadu prohibition of harassment of Woman Act and section 67 of Iinformation Technology Act,2000

— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) May 4, 2024

அதன்படி பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294(b)) பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் (509), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (67) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

https://minnambalam.com/political-news/fir-has-been-registered-against-savukku-shankar/

 

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

3 weeks 1 day ago
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை.

பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர். இதையடுத்து பொலிஸார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தென்காசி மாவட்டம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது.

உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அபாய சங்கிலியை இழுத்தும் நிற்காத ரெயில்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ்-9 பெட்டியில்தான் கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்தார். கை கழுவும் இடத்தில் இருந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தபோது கஸ்தூரி தவறி கீழே விழுந்தார். உடனே உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது. உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

அதன்பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்றும், வரும் காலங்களில் அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கலி செயல்படுவதை உறுதி படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கூறினர்.

https://thinakkural.lk/article/300787

மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.

3 weeks 2 days ago
jk-1-623x375.jpg மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன்.

மறைந்த  நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது.

விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு அங்கு நாளாந்தம் உணவளிக்கப்பட்டு வருகின்றது.

விஜயகாந்த் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380958

தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .

3 weeks 2 days ago

திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

வடமாநிலத்தவர் ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. திருப்பூர் இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். பரபர வீடியோ இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது. போராட்டம் அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது.

இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார்

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/many-tamil-groups-are-protesting-against-north-indians-attacking-tamils-in-tiruppur/articlecontent-pf852979-496221.html
 

இலங்கை – தமிழகம் சுற்றுலாத்துறையில் கூட்டு பொறிமுறை அமைத்து செயற்படின் முன்னேற்றம் - தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

3 weeks 2 days ago
28 APR, 2024 | 06:36 PM
image

நேர்கண்டவர் -  ரொபட் அன்டனி 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற  ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு   வழங்கிய விசேட செவியிலேயே இதனை  சுட்டிக்காட்டினார். 

மிக முக்கியமாக இலங்கையில் ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேலும்   தமிழகத்தின் நிதித்துறை, வரிவருமான விடயம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி,  பெண்களின் பொருளாதார பங்களிப்பு  குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

‘’ ஒரு நாட்டில் பெண்கள் கல்வியில் வளர்ச்சிaடையும் போது அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். எனவே பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய செய்வதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது’’  என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். 

மேலும் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன் பொறியியல் ரீதியாக கட்டடவியல் ரீதியாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானதே  என்று தெரிவித்ததுடன் உலக நாடுகளில் இதனை விட நீளமான பாலங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பிலும் அமைச்சர்  தியாகராஜன் கருத்து வெளியிட்டார். 

‘’ 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குk; இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே இந்த விடயம் காணப்படுகிறது.  எல்லைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஒரு இடத்திலும் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை‘’  என்றும் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக்காட்டினார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு

கேள்வி  நாங்கள் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நிதி ஸ்திரத்தன்மை ரீதியான சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா 

பதில் இந்த விடயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ  கல்வியையோ தாண்டி இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் வழங்கிய ஆதரவும் பொறுப்பும் தான் இதற்கு காரணமாகும்.  2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் அங்கம் வகித்தேன்.  இதில்   பல விடயங்களை ஆராய்ந்தேன். ஆயிரக்கணக்கான விடயங்கள் தொடர்பாக வாசிக்க கிடைத்தது.  குறிப்பாக மீனவத்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்   எங்கு பிரச்சனைகள் இருக்கின்றன என்பன தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான ஒரு தெளிவை பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.  இந்த குழுவின் ஊடாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய முடிந்தது.  அதேபோன்று பல பல அதிகாரிகளை அழைத்து கேள்வி கேடகும் உரிமையும் இந்த குழுவுக்கு காணப்பட்டது.  இந்த ஐந்து வருட காலப்பகுதியில்     நான் சிறந்த புரிதலையும் தெளிவையும் பெற்றேன்.    எங்கே என்னென்ன பிரச்சனைகள் காணப்படுகின்றன?  அவற்றை எவ்வாறு திருத்துவது?  என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் நான் மதிப்பீடு செய்துவிட்டு தான் பதவிக்கு வந்தேன்.  அந்த அனுபவம்,  அந்த புரிதல் நான் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு கை கொடுத்தது,  மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அறிவோ தெளிவோ தொழில்நுட்ப திறமையோ முக்கியமாக இருக்காது.    மாறாக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அரசியல் ரீதியான நோக்கம் இருக்க வேண்டும்.  அந்த அரசியல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு (Political will)    முதலமைச்சரிடம் மட்டும் இருந்தே வர வேண்டும்.  முதல்வரின் அந்த நோக்கம் தெளிவாக இருந்தது.  அதற்காக அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.  இந்த விடயத்தில் எனக்கு ஆலோசனை ஒத்துழைப்பு தந்தது மட்டுமன்றி முதல்வர் என்னை பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்.  இந்த சில வருடங்களில் ஒருமுறை கூட முதல்வர்  ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்யவில்லை என்று கேட்டது கிடையாது. கடந்த காலங்களில் நான் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பம் இட வேண்டி ஏற்பட்டது.  அந்த 7000 கோப்புகளில் பத்து சதவீதமானவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டன.  இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது. 

ஒரு முறையை நீங்கள் தொடர்ந்து அவ்வாறே செய்து கொண்டிருந்தால் மாற்றம் வராது.  முறையை   மாற்றினால் கூட விளைவு வருமா என்பது தெரியாது. ஆனால்  மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதனையே நாங்கள் செய்தோம்.  

கேள்வி நீங்கள் சமூகநீதி, சமஷ்டி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றீர்கள். ஆனால் பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகின்றீர்கள்.   இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? 

 பதில் சகல சமூகங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் பின்தங்கி வைக்கப்பட்டனர்.  அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும்   சக்தியை கொண்டிருப்பதால் அவர்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் காணப்பட்டது.  நீங்கள் இந்த நூற்றாண்டை  எடுத்துப் பார்த்தால் ஒரு சமூகம் எந்த அளவுக்கு பெண்களுக்கு சமகல்வி சம உரிமை அளிக்கின்றதோ  அங்கு பாரியதொரு பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றத்தை காண்கிறோம். 

ஸ்கடேினேவிய நாடுகள்,  மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமையை பரவலாக காணமுடியும்,  மிக முக்கியமாக ஜப்பானில் இதை பார்க்கலாம். ஜப்பானில் பெண்களுக்கு சமஉரிமை சமத்துவம் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டின் அபார வளர்ச்சியை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  பெண்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி கற்கின்றார்களோ, உயர் கல்வியை பெறுகின்றார்களோ அத்தனை ஆண்டுகள் அவர்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் தாமதமாகிறது.   பெண்கள் எந்த சூழலில் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள்,  அப்போது அவர்களது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது  என்பதில்தான் அந்த குழந்தையின் எதிர்காலம் தங்கி இருக்கிறது.  எனவே பெண்களுக்கு நீங்கள் சமகல்வி சமஉரிமை வழங்கினீர்கள் என்றால் சுகாதார ரீதியான ஒரு முன்னேற்றத்திலிருந்து   நாட்டின் அபிவிருத்தி ஆரம்பமாகிறது.  பெண்கள் தாமதித்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாயின் அந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானதாக வளரும்.  பிரசவ மரணம் குறைவடையும்.  அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான  சுமை குறைவடைகிறது.  அப்படிபார்க்கும்போது எந்தளவு தூரம் ஆண்களுக்கு சமமாக பெண்கள்     பலத்தை அடைகிறார்களோ அங்கு முன்னேற்றம் தானாக உருவாகிவிடும்.  ஆண்களுக்கு சிறந்த கல்வியை கொடுத்து அவர்களை முன்னேற்றிவிட்டு பெண்களுக்கு ஒன்றும் செய்யாமல் விட்டால் அங்கு என்ன நடக்கும் ? அங்கு அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான சராசரி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  பெண்களுக்கும் அதேயளவு சமஉரிமையும் சம கல்வியும் வழங்கப்பட்டால் சமுதாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.  பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி உயர்வடையும்.  இன்று தமிழ்நாடு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாரிய  வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.  அதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியினால் உருவாக்கப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எந்தக் கட்சியும் பின் வாங்கியதில்லை.  இன்று தமிழ்நாடு இலத்திரணியல் உற்பத்தி ஏற்றுமதியில் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டது. அதில் அதிகளமான பங்களிப்பை பெண்களே வழங்குகிறார்கள் என்பது இங்கு ஒரு முக்கியமான விடயம்.  இன்று இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் ஏனைய இடங்களில் தொழில் புரியும் பெண்களில் 43 சதவீதமானோர்  தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.    இதன் காரணமாகவே தமிழகத்தின் தலா வருமானம் அதிகரிக்கிறது.   

கேள்வி தற்போது நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கின்ற வகிக்கின்றீர்கள்.    தற்போது இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூர் பூனே ஆகிய நகரங்களே தகவல் தொழில்நுட்பத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன.   தமிழகம் எப்போது இந்த இடத்தை நோக்கி பயணிக்கும்? 

 பதில் தமிழகத்தின் மிகப்பெரிய இயற்கை பலம் என்னவென்றால் அது தமிழக மக்களின் மனித வளமாகும்.  இந்தத் துறையின் எதிர்காலத்தை கருதி   1991 ஆம் ஆண்டு முன்னால் முதல்வர் கலைஞர்     தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை உருவாக்கினார்.  ஆனால் கடந்த 25 வருடங்களில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. ஆனால் பெங்களூர் ஹைதராபாத் பூனே ஆகிய நகரங்கள் இந்த விடயத்தை தேடிச் சென்று கஷ்டப்பட்டு உருவாக்கின.  தற்போது பெங்களூரு நகரத்தை பார்த்தால் அங்கு தகவல் தொழில்நுட்பம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. 

ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை.  பல துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.   தகவல் தொழில்நுட்பம் என்ற  விடயம்  வெளிக்காட்டவில்லை.  அதாவது தமிழகத்தில் இந்த துறையை அதிகளவில் நாம் ஊக்குவிக்க வில்லை.    பொதுவாக இந்த துறையில் எந்தெந்த கம்பெனிகள் எங்கெங்கே   முதலீடு செய்து இருக்கின்றன  என்ற தகவல் மாநில அரசாங்கத்தில் இருக்கும்.  ஆனால் தமிழகத்தில் அந்தத் தரவு கட்டமைப்பு கூட இல்லை.  காரணம்   நாங்கள் ஊக்குவிப்பு வழங்காமல் இயற்கையாக இந்த துறை வளர்ந்திருக்கிறது.    அதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை என்பதை நான் உங்களுக்கு இப்போது கூற விளைகிறேன்.  எம்மிடம் தகவல் கட்டமைப்பு தான் இல்லை.  மாறாக அந்த துறை முன்னேறியிருக்கிறது.  இதனை நாம் நுணுக்கமாக தேட ஆரம்பித்தால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பாரியளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்ற உண்மையை கண்டுபிடிக்க முடியும்.  மேலும் தற்போது ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10,000 தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.    இதனை நான் சட்டமன்றத்திலும் கூறி இருக்கிறேன்.  ஆனால் இது மிகப் பெரிய ஒரு எண்ணிக்கை அல்ல.  இது இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றது.  ஆனாலும் இது கவனிக்கத்தக்கது ஒன்றாக உள்ளது.  நாங்கள் அரசாங்கமாக இதனை இன்னும் ஊக்குவிக்கவில்லை.  எனவே முதலில் தகவல் கட்டமைப்பை திரட்ட வேண்டும்.   அது தொடர்பான விபரங்களை உண்மையை வெளியிட வேண்டும்.  அதைவைத்து ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த துறையை மேலும் வலுவானதாக உருவாக்குவோம்.  

கேள்வி 2030ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள். இது சாத்தியமா?

பதில் இது முதலமைச்சர்  ஸ்டாலினின் இலக்காக காணப்படுகிறது அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி  நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றீர்கள். இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றது.  உங்களின் பார்வையில் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை எவ்வாறு மேம்படுத்த முடியும்? 

பதில்   நான் மாநில அமைச்சராக இருப்பதால் மாநிலம் சம்பந்தமான விடயங்களிலேயே அவதானம் செலுத்த வேண்டும்.  காரணம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே முன்னெடுக்கப்பட முடியும்.  அரசியலமைப்பில் இது தொடர்பில் பல தேவைகள் காணப்படுகின்றன.  தற்போதைய சூழலில் மாநில உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.  தற்போதைய டெல்லி அரசாங்கம் இருக்கும்வரை இந்த விடயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  அப்படியான ஒரு தடை இல்லாவிடில் தமிழகமும் இலங்கையும் மிக நெருக்கமாக செயல்படுவதற்கான இயற்கை ரீதியாக பல வழிகள் காணப்படுகின்றன.  சக்திவளத்துறையில் நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோம்.  ஆனால் இலங்கையில் அளவுக்கு அதிகமாக இந்த புதுப்பிக்கத்தக்க வகையிலான வலு சக்தி துறையில் உற்பத்தியை செய்ய முடியும்.  அதில் இணைந்து செயற்பட  ஆற்றல் காணப்படுகிறது.  மனிதவள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றது.  இந்த விடயத்திலும் இலங்கை இளைஞர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி   தொழில் செய்யும்போது பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் நாம் இணைந்து செயல்படலாம். 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும். அதாவது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கலாசார தொடர்புகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு இதனை முன்னெடுக்கலாம்.  

கேள்வி தற்போது இந்த கச்சதீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது.  இது மத்திய அரசாங்கத்தின் விடயம் ஆனாலும் மாநில அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.  எனவே இந்த கச்சதீவு விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் என்னைப்பொறுத்த வரையில் இந்த விடயம் சட்டமன்றத்திலும் சரி தற்போது அரசியல் களத்திலும் சரி வெறுமனே பேசப்படுகிறது.  50 வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்  12 கிலோமீட்டர் அடிப்படையிலான கடல் சார்ந்த ஒப்பந்தம்   கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.  அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் (கச்சதீவு)  இடம் பெற்றுள்ளது.  அல்லது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்காக இந்த விடயம் காணப்படுகிறது.  50 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் குறித்து   கடந்த 10 வருடங்களாக டெல்லியில் ஆட்சியில் இருந்த    எதனையும் செய்யவில்லை.  ஆனால் தற்போது இதனை இங்கே அரசியலுக்காக பேசுகின்றார்கள்.  கவனச்சிதறல்  முயற்சியாகவே இது  தெரிகிறது. 

இது இந்த விடயத்தில் மாநிலத்துக்கு எவ்வளவு அக்கறை, எவ்வளவு தேவை, ஈடுபாடு இருந்தாலும் கூட இந்த எல்லை நிர்ணய விடயங்களை மத்திய அரசாங்கமே செய்யும். 

கேள்வி  தற்போது இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக பேசப்படுகிறது.  நீங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்.  முன்னாள் நிதி அமைச்சர்.  பொருளாதார ரீதியாக இதன் சாத்தியத்தன்மை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 பதில் இதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.  இதற்கான சாத்தியம் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதது.  உலகளவில் இதனை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நானே பயணம் செய்திருக்கிறேன்.   ஆனால் இதில் பொருளாதார  விளைவுகள் என்ன ? செலவு என்ன என்பது முக்கியமாகும்.  தொடர்புகள்,  பாதுகாப்பு விடயங்கள் என்பன ஆராயப்பட வேண்டும்.   என்னுடைய துறையுடன் இது உடனடியாக தொடர்புபடவில்லை.  சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள். ஆனால் இதனை  சாத்தியமில்லை என்று உறுதியாக கூற முடியாது.  உலக அளவில் இதனைவிட நீளமான எத்தனையோ பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    பொறியியல் ரீதியாக கட்டிடவியல் ரீதியாக அது சாத்தியமானதாகும். 

கேள்வி உங்களின் இரண்டு கைகளிலும் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டப்பட்டுள்ளனவே? 

பதில்  இதற்கான காரணம் உள்ளது. அதில் எனது இடது கையில் இருப்பது என்னுடைய தாத்தாவின் கைக்கடிகாரமாகும்.   அதனை 1990 ஆம் ஆண்டு எனது தந்தை எனக்கு வழங்கினார்.  நான் அதனை திருத்தி பழுதுபார்த்து தொடர்ச்சியாக எனது இடது கையில் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.  வலது கையில் இருப்பது  மிகவும் நவீனமான எனக்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்குகின்ற கைக்கடிகாரமாகும்.  உங்களுக்கு தெரியும் எங்களது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம்.    எனவே இந்த கைக்கடிகாரம் எனக்கு மிக முக்கியமானதாக   இருக்கிறது. 

https://www.virakesari.lk/article/182174

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

3 weeks 2 days ago
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அதீத காலநிலை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

புனேவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமிலமயமாதல், அதிக புயல் மற்றும் சூறாவளி நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது.

எல்சேவியர்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ள ‘இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிக்கான எதிர்கால கணிப்புகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானியான ஐஐடிஎம் புனேவை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ராக்சி மேத்யு கோல், “எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை உயர்வு, ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்புக்கு நிகரான வெப்பத்தை உண்டாக்கும்” என்று தனது ஆய்வின் முடிவுகள் குறித்து விவரிக்கிறார்.

மேலும், “இந்த மாற்றங்களின் தாக்கங்கள் நமது எதிர்கால சந்ததிகள் எதிர்கொள்ளக் கூடியவை என்று புறக்கணிக்க முடியாது. இவற்றின் விளைவுகளை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம்." என்கிறார் அவர்.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,ROXY MATHEW KOLL/FB

"வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் நிகழும் வெப்ப அலைகள் நம்மை அதிகளவில் பாதிக்கின்றன. காலநிலை நெருக்கடியைத் தணிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தத் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆய்வு முடிவுகள் கூறும் காலத்திற்கும் முன்பே தீவிரமடையும்,” என்று எச்சரிக்கிறார் ராக்சி மேத்யூ கோல்.

இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதி குறித்து ஆய்வறிக்கை முன்வைக்கும் எச்சரிக்கைகள்:

  • கடந்த 70 ஆண்டுகளில்(1950-2020) நூற்றாண்டுக்கு 1.2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவுக்கு இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனால், அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) நூற்றாண்டுக்கு 1.7 டிகிரி செல்ஷியஸ் முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
  • அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி அதிகபட்ச வெப்பநிலை உயர்வை எதிர்கொள்ளக்கூடும்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிதீவிர பருவநிலை நிகழ்வுகள் ஏற்படலாம். கடந்த 1950கள் முதல் அதிகன மழை, அதிதீவிர சூறாவளிகள் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்த நிகழ்வுகளின் அளவு வரும் ஆண்டுகளில் உயரப்போகும் கடல் வெப்பநிலை காரணமாக மேன்மேலும் அதிகரிக்கும்.
  • கடல் மேற்பரப்பு மட்டுமின்றி, கடலின் 2000 மீட்டர் ஆழத்திலும்கூட பத்து ஆண்டுகளுக்கு 4.5 ஜெட்டா-ஜூல் என்ற கணக்கில் ஏற்கெனவே வெப்பமடைந்து வருகிறது.
  • இவற்றின் விளைவாக இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கப் போகும் கடல் அமிலமயமாதல், பவளப்பாறை அழிவு, கடல்புல் அழிவு, கடல்பாசி நிறைந்த பகுதிகளின் அழிவு ஆகியவற்றால் வாழ்விடச் சிதைவு ஏற்படக்கூடும். இதனால் பெருங்கடலின் மீன்வளத்துறை பெரியளவில் பாதிக்கப்படும்.
 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் காலநிலை விளைவுகளால் மீனவர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து என்ன?

"இதுபோன்ற எச்சரிக்கைகள் புதிதல்ல" என்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ். "இவை குறித்து என்ன செய்யலாம் என்று மீனவ சமூகங்களிடம் கலந்து பேசினால் மட்டுமே அவர்களுக்கு ஏற்ற உரிய தீர்வு கிடைக்கும்" என்றும் வலியுறுத்துகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச இடை அரசுக் குழுவின் (ஐபிசிசி) சிறப்பு அறிக்கை, “கடல் வெப்பநிலை எதிர்பாராத வேகத்தில் உயர்வதாகவும் இதனால் அதைச் சார்ந்துள்ள சமூகங்கள் பெரியளவிலான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் எச்சரித்தது.

அந்த எச்சரிக்கையை மேலும் அழுத்தமாகத் தற்போதைய ஆய்வு எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார் ஜோன்ஸ்.

கடல் வெப்பநிலை அதிகரிப்பது, கடல் மட்டம் உயர்வது, கடல் நீர் உட்புகுதல் ஆகியவை கழிமுகப் பகுதிகளில் ஆக்சிஜன் நீக்கம் ஏற்படக் காரணமாக அமைவதாகவும் இதனால், மீன் இனங்களின் இடப்பெயர்ச்சி நடப்பதாகவும் ஐபிசிசி அறிக்கை எச்சரித்தது.

அதன்படி, வாழ்விடப் பரவல், மீன்களின் இருப்பு ஆகியவற்றின்மீது வெப்பநிலை உயர்வு ஏற்படுத்தியதன் விளைவுகளை ஏற்கெனவே மீன்பிடித் தொழிலும் அதைச் சார்ந்து வாழும் சமூகங்களும் எதிர்கொள்கின்றன.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
படக்குறிப்பு,மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக எச்சரிக்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு “கடந்த 70 ஆண்டுகளில் (1950-2020) இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், காலநிலை மாதிரிகள் கணித்துள்ளதன்படி அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) இந்த அளவு குறைந்தபட்சம் 1.7 டிகிரி முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி வரை இருக்கும்” என்று எச்சரிக்கிறது.

குறிப்பாக, இந்தியப் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியும் அரபிக் கடலும்தான் இதன் தீவிரத்தை அதிகம் உணரப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. இது கடலோர சமூகங்கள், குறிப்பாக கடல் வளங்களைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஜோன்ஸ்.

கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்

சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 55-ஆவது மனித உரிமை மன்றத்தில் மீனவ சமூகங்களின் பிரதிநிதியாகப் பங்கெடுத்த ஜோன்ஸ், “இந்தியப் பெருங்கடல் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் எனப் பல முனைகளிலும் குறிவைக்கப்படுவதால், இதுபோன்ற காலநிலை நெருக்கடிகளோ அதன் விளைவாகப் பாதிக்கப்படும் மீனவ சமூகங்களோ கண்டுகொள்ளப்படுவது இல்லை,” என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

“இந்தியப் பெருங்கடல் என்னும்போது, அதை மட்டுமே பார்க்கக்கூடாது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 80 சதவீதம் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுபோக, பாதுகாப்பு ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. பல நாடுகள் இங்குள்ள தீவுகளின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மீன் சார்ந்த தொழில் துறையும் இங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் குறித்து யாருமே கவலைப்படுவது இல்லை,” என்று குற்றம் சாட்டுகிறார் ஜோன்ஸ்.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பகுதியிலுள்ள அனைத்து மீனவர்களும் வரலாற்று ரீதியாகவே ஓர் இன ஒதுக்கலை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார். “இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை பேரிடர்களும் வளர்ச்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஆனால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் மீனவ மக்கள் அதன் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களே தவிர, இங்கு கிடைக்கும் நன்மைகள் அவர்களைச் சென்றடைவதே இல்லை.”

சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதிகளில் ஆக்சிஜன் செறிவு குறைந்து வருவதாகவும் கண்டறிந்துள்ளது. சர்வதேச அளவில் கரிம உமிழ்வை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல்.

பலமுனைகளில் இருந்து இதை அணுகுவதன் மூலம்தான் வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, உலகளாவிய கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவது, இதன் விளைவாக ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளத்தக்க கட்டுமானங்களை உருவாக்குவது எனப் பலமுனை நடவடிக்கைகளை ஒருசேர எடுப்பதே கடலோர சமூகங்கள் எதிர்கொள்ளவிருக்கும் இந்தப் பேராபத்தைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘மூச்சுமுட்டும் நிலையில் தவிக்கும் மீனவர்கள்’

ஆனால், ஏற்கெனவே மீனவர்கள் எதிர்கொண்டு வரும் அபாயங்களே அவர்களை மூச்சுமுட்ட வைப்பதாகவும் இந்த நிலையில் இப்படியொரு எச்சரிக்கை வந்திருப்பது சிவப்பு எச்சரிக்கையைவிடத் தீவிரமானது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ்.

“கடலோர பொருளாதார மண்டலங்கள், கடலில் நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள், இவற்றுக்கு மேல் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் தொழில், வாழ்வாதார பாதிப்புகள் என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நிகழும்போது மீனவர்களால் எந்தப் பக்கம் ஓட முடியும்?” என்று வினவும் ஜோன்ஸ், மீனவ சமூகங்கள் அனைத்துமே இப்போதே உள்நாட்டு சூழலியல் அகதிகளாகத்தான் இருப்பதாகவும் கூறுகிறார்.

அதே நேரத்தில், இத்தகைய ஆய்வுகளை முற்றிலுமாகச் சார்ந்திருக்க முடியாது என்கிறார் ஐஐடி மும்பையை சேர்ந்த பேராசிரியரும் காலநிலை விஞ்ஞானியுமான ரகு முர்துகுட்டே.

அவரது கூற்றுப்படி, ஒருவேளை உண்மையாக இத்தகைய பேராபத்து வரவுள்ளது என வைத்துக்கொண்டாலும்கூட அதைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான பதில் நம்மிடம் இல்லை.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலநிலை மாதிரிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எதிர்காலம் குறித்த ஊகங்களை மட்டுமே வழங்குவதாகவும் அவற்றை முழுமையாக நம்ப முடியாது என்று கூறும் முர்துகுட்டே, பவளப் பாறைகள் அழிவு, கடல்பரப்பில் வெப்பநிலை உயர்வு, கடல் அமிலமயமாதல் ஆகிய அபாயங்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்கிறார்.

“கடல் பகுதியில் ஏற்படும் வெப்ப அலைகளை, அதன் பாதிப்புகளை இப்போது எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து நாம் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும். அதன் பிறகு, 2100-இல் ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.”

மீன் வளத்தைப் பொறுத்தவரை அளவுக்கு அதிகமாக மீன் பிடிப்பது ஒருபுறம் பிரச்னையாக இருக்க, மறுபுறம் காலநிலை நெருக்கடியால் மீன் வளம் குறைவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தனித்தனி பிரச்னைகளாக அணுக வேண்டியது அவசியம் என்கிறார் ரகு முர்துகுட்டே.

“கடலோரங்களில் அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் மீது அதிக கவனம் செலுத்துவது, மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவது, மீனவ சமூகங்கள் ஒட்டுமொத்தமாக மீன் பிடிக்காமல், அவர்களில் யாரெல்லாம், எந்தெந்த காலகட்டங்களில் மீன் பிடிக்கலாம் என்பது போன்ற ஏற்பாடுகளைச் செய்வது, மீன்வள மேலாண்மையில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் எடுக்க வேண்டியது அவசியம். அதன்மூலம் இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியும்.” எனவும் வலியுறுத்துகிறார் அவர்.

 
காலநிலை நெருக்கடியைக் கையாள என்ன செய்ய வேண்டும்?
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கவும், காலநிலை தகவமைப்புடன் கூடிய அணுகுமுறையைக் கையாள வேண்டியது அவசியம் எனவும் இதில் சர்வதேச ஒத்துழைப்பையும் வளர்க்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது.

ஆனால் காலநிலை நெருக்கடியின் விளைவாக ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் கூறுகிறார் ரகு முர்துகுட்டே.

கடலோர பொருளாதார மண்டலங்கள் மூலம் துறைமுகங்களைப் புதிதாகக் கட்டுவது, ஆழ்கடல் சுரங்கங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், தூய ஆற்றல் என்ற பெயரில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவுவது எனப் பல திட்டங்கள் இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனால், “இத்தகைய பொருளாதார நோக்கிலான திட்டங்களால் தற்போது கூறப்படும் காலநிலை எச்சரிக்கைகள் துரிதப்படுமே தவிர, தணியாது” என்று விமர்சிக்கிறார் ஜோன்ஸ்.

மனித நடவடிக்கைகளால் துரிதமடையும் அபாயங்களை மட்டுப்படுத்தாமல், “வளர்ச்சித் திட்டங்கள்” மூலம் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே அரசு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,SIVA.V.MEYYANATHAN/TWITTER

காலநிலை நெருக்கடியின் விளைவுகள் மட்டுமின்றி மேற்கூறிய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்களையும் கையாள்வதற்கான அணுகுமுறையைத் திட்டமிடும்போது மீனவ சமூகங்களின் பார்வை மிகவும் அவசியம் என அவர் வாதிடுகிறார்.

“உள்ளூர் மக்கள் சமூகங்களைத் திட்டமிடுதலில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற பார்வையே அதிகாரிகள், வல்லுநர்கள் என யாரிடத்திலும் இல்லை. அப்படி நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள முடியும். அதன் மூலமாகத்தான் எதிர்வரும் அபாயங்களைக் கையாள முடியும்” என்கிறார் ஜோன்ஸ்.

மீனவர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்துகிறதா?

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டு காலத்தில் எந்தவித அபாயகரமான திட்டமும் கடற்கரையோரங்களில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

எந்தவொரு திட்டமோ நடவடிக்கையோ கொண்டு வரப்படும்போது மீனவ சமூகங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “மீனவ மக்களுடைய உரிமைகள், வாழ்வாதாரம் தொடர்பான பணிகளை, மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டு, அவர்கள் அறிவுறுத்தியதன்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

எதிர்காலத்தில் காலநிலை நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே நெய்தல் மீட்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் மெய்யநாதன்.

அந்தத் திட்டத்தால் மீனவ மக்களுக்குப் பெரிய பயன் ஏதுமில்லை என்ற விமர்சனம் குறித்துக் கேட்டபோது, “மீன்பிடித் தடைக்காலத்தில் கொடுக்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது, மீனவ மக்களுக்கான வீட்டு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன” என்று கூறியவர் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c84z39xx194o

தமிழ்நாட்டில் 12 நாட்களில் 4 காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

3 weeks 3 days ago
காவல் மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்தச் சம்பவங்களில் என்ன நடந்தது?

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழக காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் மட்டும் 3 காவல் மரணங்கள் நடந்திருந்தன.

முதலமைச்சர் இப்படிச் சுட்டிக்காட்டிப் பேசிய பிறகும்கூட போலீஸ் காவலில் இருப்பவர்கள் மரணமடைவது தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், இப்போது ஒரே மாதத்தில் 12 நாட்களுக்குள் நான்கு பேர் போலீஸ் காவலில் இறந்திருப்பதுதான் பலரையும் அதிர வைத்திருக்கிறது.

ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை நான்கு பேர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழந்திருக்கின்றனர். இந்த நான்கு பேரில் 2 பேர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பேர் நீதிமன்றக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர்.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் காவலில் மரணம்

மணிமேகலையும் அவரது கணவர் கணேசனும் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையின் வாயிலில் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கடைகள் அங்கிருந்து அகற்றப்படவே, தற்போது கூலி வேலை செய்கிறார்கள் இந்தத் தம்பதி. இவர்களது ஒரே மகன் கார்த்திக். இவருக்குத் திருமணமாகி, ஒரு வயதிலும் 3 வயதிலும் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில்தான் ஒரு வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக், போலீஸ் காவலிலேயே இறந்து போயிருக்கிறார்.

"ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீஸ்காரர்கள் வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நான் வேலைக்குப் போயிருந்ததால், பிற்பகல் நான்கு மணி அளவில் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். நான் என் மருமகளிடம் விவரத்தைச் சொன்னேன். அதற்குப் பிறகு ஆறு மணிக்கு என் மகனே போன் செய்தான். தன்னை ரிமாண்ட் செய்யப்போவதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னான். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். பத்து மணியளவில் அவனை ரிமாண்ட் செய்து ஜெயிலுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்." என்கிறார் கார்த்தியின் தாயாரான மணிமேகலை.

"அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு காவல் துறையிடமிருந்து போன் வந்தது. என்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று இரவு 2 மணிக்கு போலீஸிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னார்கள். நாங்கள் போய் பார்த்த சிறிது நேரத்திலேயே அவன் இறந்துவிட்டான். என்ன நடந்ததென்றே தெரியவில்லை" என்கிறார் மணிமேகலை.

அதீத காய்ச்சலால் இறந்ததாகக் கூறிய காவல்துறை

அவர் அதீதமான காய்ச்சலால் உயிரிழந்ததாக காவல் துறை கூறியிருக்கிறது. இருந்தாலும் குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை. நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மகன் எப்படி திடீரென இறக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து போனார்.

12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,இட்லி கார்த்திக். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்
பாஜக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நேர்ந்தது என்ன?

பா.ஜ.கவின் பட்டியல் அணி பிரிவின் மாநிலப் பொருளாளரான சங்கர் என்பவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரான 30 வயது சாந்தகுமார் என்பவர் கைதுசெய்யப்பட்டு 11 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவர் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுவந்தார். இதற்காக புட்லூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அவரையும் அவருடன் இருந்த வேறு ஆறு பேரையும் கைதுசெய்தனர். செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சாந்தகுமார் கூறியதாகவும் அதனால், அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திட்டமிட்ட படுகொலை எனக் கூறும் சாந்தகுமாரின் மனைவி

இது திட்டமிட்ட படுகொலை என்று குற்றம்சாட்டிய சாந்தகுமாரின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் சாந்தகுமாரின் மரணம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"என் கணவரின் சொந்த ஊரே புட்லூர்தான். அவருடைய அம்மா வழியில் வந்த நிலம் அங்கிருந்தது. அதை விற்பது குறித்து பேசத்தான் அவர் அங்கே போயிருந்தார். ஆனால், ஆயுதங்களோடு இருந்ததாகக் கூறி கைதுசெய்திருக்கிறார்கள். அன்று மாலை நான்கு மணியளவில்தான் எனக்குத் தகவல் தெரிந்தது. நான் வழக்கறிஞர்களை அனுப்பிவைத்தேன். உள்ளே விசாரணை நடந்துவந்ததால், அவர்களால் அவரை சந்திக்க முடியவில்லை. ஐந்தரை மணியளவில் போன் செய்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். அங்கே போனபோது, மார்ச்சுவரியில் என் கணவரின் உடல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள்" என்கிறார் அவரது மனைவி விஜயலட்சுமி.

இப்போது இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சாந்தகுமாரிடம் விசாரணை நடத்திய நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது எப்படி நடந்தது என்பது குறித்து ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் ஷங்கரிடம் கேட்டபோது, "பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இதுவரை கிடைத்த தகவல்களின் படி அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இருதய நாளங்களில் அடைப்பு இருந்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். ஆனால், காவல் நிலையத்தில் இருக்கும்போது இந்தச் சம்பவம் நேரிட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதித்துறை நடுவர் விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவை வைத்து கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆனால், சாந்தகுமாருக்கு வயது வெறும் 30தான் எனும்போது சந்தேகம் ஏற்படாதா எனக் கேட்டபோது, "இப்போது சிறு வயதினருக்கே மாரடைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி கூடத்தில்கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்கிறார் அவர்.

உயிரிழந்த சாந்தகுமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோல, ஏப்ரல் 10ஆம் தேதி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய கே. ராஜா என்பவர், வீட்டிற்குள் வந்தவுடன் உயிரிழந்தார்.

விழுப்புரம் டவுன் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த 44 வயதான கே. ராஜா என்பவரை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் காணவில்லை. ஏப்ரல் பத்தாம் தேதி காலையில் அவர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதற்குப் பிறகு அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் கைதியை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு காலை 11.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

டாஸ்மாக் ஒன்றுக்கு அருகில் இருந்த உணவகத்தில் வேலை பார்த்த ராஜா, மது விற்பனைக்கான நேரம் முடிந்த பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

வீட்டுக்குத் திரும்பிய ராஜா, தன்னைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் வாயிலிருந்து நுரை தள்ளி கீழே சாயவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இது தொடர்பாக விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட சிவகாசியை சேர்ந்த 60 வயதான ஜெயக்குமார் என்ற விசாரணைக் கைதி ஏப்ரல் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் வழக்கைத் தவிர, மற்ற மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 176 (1) (அ)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு சம்பவங்களிலும் தமிழ்நாடு அரசு இழப்பீடு ஏதும் அறிவிக்கவில்லை. விழுப்புரம் ராஜாவின் மரணம் சந்தேக மரணமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

 

"இந்த வழக்குகளின் புலன் விசாரணையை உடனடியாக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த மரணங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த நான்கு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைத்து காவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் (NHRC) தெரிவிக்க வேண்டும்" என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திஃபேன்.

மேலும் சில விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதுபோல நடந்தால் என்ன செய்ய வேண்டுமென 'சந்தேஷ் VS மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்' வழக்கின் தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் போலீஸ் காவலில் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் பார்க்காமல் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கே அனுப்பக்கூடாது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அவர்கள் அதனைப் படித்துப் பார்த்து, ஒப்புதல் தெரிவிக்க கால அவகாசம் வழங்கியே சடலத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தாலே, பாதி பிரச்னைகள் எழாது. இந்தப் பரிந்துரைகள் எல்லாமே காவல்துறைக்கு எதிரானவையல்ல. அவர்களுக்கு ஆதரவானவைதான். இந்த விதிமுறைகளின்படி நடந்தால், காவல்துறை அதிகாரிகள் எந்தச் சிக்கலிலும் சிக்க மாட்டார்களே.. ஆனால், அப்படி செய்யாமலிருப்பது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார் ஹென்றி.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காவல்துறையில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்கிறார் முன்னாள் டிஜிபியான திலகவதி.

"ஒருவரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரும்போது பல சமயங்களில் அவரது உடல் நிலை மோசமாகக்கூட இருக்கலாம். அதனால்கூட மரணங்கள் நேரலாம். அதற்கு காவல்துறை பொறுப்பேற்க நேர்கிறது. ஆகவே, ஒருவரை விசாரணைக்கு அழைத்துவரும்போதே அவரை மருத்துவ பரிசோதனை செய்துதான் அழைத்து வரவேண்டும். அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமே தவிர, காவல் நிலையத்திற்கு அழைத்துவரக்கூடாது. கைது செய்யப்பட்டவுடனேயே உறவினர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். கைதி விரும்பினால் வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும்."

"எந்தக் கைதியையும் இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் தங்க வைக்கக்கூடாது. காரணம், இரவில் காவல் நிலையத்தில் மிகக் குறைவான காவலர்களே இருப்பார்கள். திடீரென கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஒன்றிரண்டு காவலர்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த விதிமுறைகளை திரும்பத் திரும்ப காவல்துறையினருக்கு சொல்லிவர வேண்டும். மனித உயிர் விலைமதிப்பற்றது" என்கிறார் திலகவதி.

தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c72pkrxp3xxo

தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி

3 weeks 3 days ago
high-temperatures-711x375.webp தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி.

இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்களால் கூறுகின்றனர்.

குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகியுள்ளது.

இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://athavannews.com/2024/1380732

சென்னை: ஏரிகளில் வேகமாக குறையும் நீர்மட்டம் - கோடையில் குடிநீர் தட்டுப்பாடின்றி வருமா?

3 weeks 3 days ago
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையின் வடக்கு எல்லையில், திருவொற்றியூரில் வசிக்கும் எஸ்.பாக்கியலட்சுமி கடந்த வாரம் தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பேரன்களுடன் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். கோடைகாலத்தில் மகள் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அல்ல, தனது வீட்டில் நான்கு நாட்களாக தண்ணீர் வராததால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தார்.

திருவொற்றியூர் ஆறாவது தெருவில் வசிக்கும் அவரது வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர் வசிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 7 மணி வரை அரசு வழங்கும் குடிநீர் கிடைக்கும். அதை அடுத்து இரண்டு நாட்களின் பயன்பாட்டுக்காக வீட்டில் உள்ள ட்ரம், பாத்திரங்களில் நிரப்பி வைத்துக் கொள்வார். குடிப்பதற்கு கேன் தண்ணீர் பயன்படுத்தும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் மற்ற எல்லா தேவைகளுக்கும் இந்த நீரையே நம்பியுள்ளனர்.

“எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் சேறும் சகதியுமாக இருக்கும். அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். கடல் நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்து எங்களுக்கு கிடைக்கும் நீர், போதிய அழுத்தம் இல்லாததால் எங்கள் பகுதி வரை வந்து சேரவில்லை என்று இந்தப் பகுதி கவுன்சிலர் கூறினார். எனவே இரண்டு நாட்கள் அனைவரும் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அங்கும் மெட்ரோ வாட்டர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கும், ஆனால் நிலத்தடி நீரின் தரம் பரவாயில்லை,” என்றார்.

இந்த ஆண்டு பெங்களூரூ நகரில், தேர்தல் விவகாரமாக பேசப்படும் அளவுக்கு, கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட பெங்களூரூ நகரம் தனது குடிநீர் தேவையில் 60%-ஐ பூர்த்தி செய்ய காவிரி நீரையேச் சார்ந்துள்ளது.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெங்களூருவில் குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்
பெங்களூருவின் குடிநீர் பிரச்னை

காவிரி ஆற்றுப்படுகையில், மரங்கள் அழிக்கப்பட்டதால் பெங்களூருவின் குடிநீர் தேவையை காவிரி ஆற்றால் பூர்த்தி செய்யமுடியவில்லை, என்றும் அதிகரித்து வரும் கட்டடங்களால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது என்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரூ போன்றே சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட மாநகரம் சென்னை. பெங்களூரு இன்று சந்திப்பது போன்ற வறட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை சந்தித்திருந்தது. மீண்டும் அப்படி ஒரு நிலை சென்னையில் வராது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. அதிகரிக்கும் வெப்ப அலை, குறைந்து வரும் ஏரிகளின் நீர் மட்டம் ஆகியவை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 ஏரிகளிலும் வேகமாக குறையும் நீர்மட்டம்

சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் 50% நீர் இருப்பே உள்ளது. சென்னையில் 1944-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் நீர்த்தேக்கம் பூண்டி. பெரிய நீர் தேக்கங்களில் ஒன்றான பூண்டியில் அதன் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 27.79% மட்டுமே நீர் உள்ளது.

அதே போன்று 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் நீர் தேக்கத்தில் 9.99% நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் அதன் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவில் 89.7% நீர் இருப்பும் செம்பரம்பாக்கத்தில் 64.64% நீர் இருப்பும், தேர்வாய் கண்டிகையில் 76% நீர் இருப்பும் உள்ளது.

 
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,VINAY IAS

படக்குறிப்பு,சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ்
காவிரி நீர் பற்றாக்குறையும் சென்னையை பாதிக்கிறது

இதைத் தவிர சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் சோழ அரசர்களால் அமைக்கப்பட்டு, 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி நீரை கொண்டு வந்து சேர்க்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால், கடந்த 21 ஆண்டுகளாக சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வரும் வீராணம் ஏரி தற்போது வறண்டு கிடக்கிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 6,702 மில்லியன் கன அடி அதாவது 50.69% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ் பிபிசி தமிழிடம் பேசும் போது, “வீராணம் ஏரி வறண்டு போவதற்கு முன்பாக, அதிலிருந்து ஒரு நாளுக்கு 165 மில்லியன் லிட்டர் நீர் எடுப்போம். தற்போது வீராணத்துக்கு அருகில் உள்ள நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்று நீர், மற்றும் பரவனாற்றுக்கு அருகில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கிறது,” என்றார்.

 
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,DR L ELANGO

சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர்

இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னை மாநகரம், தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாகும். சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,000 முதல் 27,000 பேர் வரை வசிக்கின்றனர். இது லண்டன் மாநகரத்தின் சராசரி மக்கள் அடர்த்தியை விட ஐந்து மடங்கு அதிகம்.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவை தற்போது ஒரு நாளுக்கு 1,070 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 1,040 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்குவதாகக் கூறுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வழங்கலுக்கும் இடையிலான வித்தியாசம் வரும் நாட்களில் அதிகரிக்கப் போகிறது என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை நடத்திய சென்னை ஐ.ஐ.டி-யின் பகுதி நேர பேராசிரியர் முனைவர் எல்.இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், “சென்னையில் 2030-ஆம் ஆண்டில் ஒரு நாளுக்கு 2,365 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும். அப்போது ஒரு நாளுக்கு 466 மில்லியன் லிட்டர் நீர் குறைபாடு இருக்கும்.

அதேபோன்று சென்னையில் 2040-ஆம் ஆண்டு ஒரு நாளுக்கு 717.5 மில்லியன் லிட்டர் குறைவாக இருக்கும், மேலும் 2050-ஆம் ஆண்டு 962 மில்லியன் லிட்டர் நீர் ஒரு நாளுக்கு தட்டுப்பாடாக இருக்கும். சென்னையின் சராசரி மழை அளவு, நிலத்தடி நீர் என பல்வேறு அளவுகோல்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது,” என்றார்.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையிலுள்ள ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சென்னைக்குக் கை கொடுக்கும் 'ஆபத்பாந்தவன்' கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாகும்.

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை முதன் முதலாக 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு வழங்கி வருகிறது.

சென்னையின் தென் திசையில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள ஆலை 110 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்கக் கூடியது.

நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

நான்காவது ஆலை, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஆலை ஒரு நாளுக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் திறன் கொண்டது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆலையான இதிலிருந்து சென்னையின் தென் பகுதியில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அரசு கூறுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே 750 மில்லியன் லிட்டர் குடிநீரை கடல் நீரிலிருந்து பெறக் கூடிய நகரமாக சென்னை இருக்கும் என தமிழக அரசு கூறுகிறது.

இந்த ஆண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுவதற்கு இந்த ஆலைகளே முக்கிய காரணம்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்
அதிகாரிகள் சொல்வது என்ன?

சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ், “சென்னையின் ஏரிகளில் 50%-க்கும் குறைவான நீர் இருப்பு இருந்தாலும், மார்ச் மாதத்துக்கு முன் எவ்வளவு தண்ணீர் வழங்கப்பட்டதோ, அதே அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னையின் ஏரிகளிலிருந்து ஒரு நாளுக்கு 42 மில்லியன் கனஅடி நீர் சென்னையின் தேவைக்காக எடுக்கப்படுகிறது. இப்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு, கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு நீர் வழங்க முடியும். கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளிலிருந்து 360 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு பெறமுடியும். தற்போது 250 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த அளவு அதிகரிக்கப்படும். எனவே செப்டம்பர் முதல் வாரம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை,” என்றார்.

இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று வைத்துக்கொண்டாலும், இது இந்த ஆண்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. வறட்சி, நீர் பற்றாக்குறை, மண்வளம் குறைதல், கடல் நீர் உட்புகுதல், காட்டுத் தீ, உயிரினங்கள் அழிவது, வெப்ப அசௌகரியம் ஆகியவை காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.

காலநிலை மாற்றத்தின் நீண்ட கால விளைவுகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ள காலநிலை செயல்திட்டம் கணித்துள்ளது. அதன்படி 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் ஆண்டுக்கான சராசரி வெப்பம் 3.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், மழை பொழிவு 9% குறையும்.

சென்னையில் மழை பற்றாக்குறையா?

காலநிலை மாற்றத்தின் ஒரு விளைவு தான் மாறி வரும் மழைப்பொழிவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 1,200மி.மீ. மழை பெய்கிறது. இது சென்னை நகரத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு மழை ஆகும். எனினும், சில நேரங்களில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்து விடுகிறது. ஒரு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை முடிந்து தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள நாட்கள் ‘வறண்ட நாட்கள்’ என்று அழைக்கப்படும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னையில் 150 வறண்ட நாட்கள் இருந்தன, அது 2019-ஆம் ஆண்டு 193 நாட்களாக அதிகரித்தது. இடையில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட 2015-ஆம் ஆண்டும் 193 வறண்ட நாட்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையில் 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது
பெருவெள்ளமும், கடும் வறட்சியும்

சென்னையில் 2005, 2015, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்ணீரே இல்லாத நிலையை குறிக்கும் ‘பூஜ்ஜிய நாள்’ அறிவிக்கப்பட்டது. அப்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகள் மூடப்பட்டன. உணவக நேரம் குறைக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் தாண்ணீருக்காக அடிக்கடி கைகலப்புகள் நேர்ந்தன. அப்போது பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அருகில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்தும் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டது.

அதேபோல 2003-ஆம் ஆண்டும் மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் முக்கிய காரணமாக இருப்பது நகரமயமாக்கல், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள், என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி
படக்குறிப்பு,சென்னையில் நீர்நிலைகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் கோப்புப் படம்
'சென்னையின் நீர் நிலைகள் சுருங்கிவிட்டன'

1893-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சென்னையில் 12.6 சதுர கி.மீ.-ஆக இருந்த சென்னை நீர் நிலைகளின் பரப்பளவு 3.2 சதுர கி.மீ.-ஆகச் சுருங்கியுள்ளது.

சென்னையில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 1,488 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டடங்கள் உள்ளன. இது 100 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ .டி நடத்திய ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நமது எல்லா பிரச்னைகளுக்கும் காலநிலை மாற்றத்தின் மீது பழி போடக் கூடாது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தின் நீர் மற்றும் வளர்ச்சிக்கான மையத்தின் முன்னாள் ஆய்வாளராகவும், பல்துறை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கும் எஸ்.ஜனகராஜன்.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,S JANAKARAJAN

படக்குறிப்பு,எஸ்.ஜனகராஜன்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் எக்காரணம் கொண்டும் அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'Tank Memoirs' என்ற ஆவணத்தின்படி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 3,600 நீர் நிலைகள் இருந்தன. இன்று இவற்றில் பல காணாமல் போய்விட்டன,” என்றார்.

மேலும், “ஏரிகள் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டவை. ஒன்று நிரம்பும் போது, அங்கிருந்து நீர் அடுத்த ஏரிக்குச் செல்லும். அந்த முறை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. வளர்ச்சிக்கு யாரும் தடை சொல்லவில்லை. அந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என்கிறார்.

மாறி வரும் மழைப்பொழிவுக்கு ஏற்றாற் போல மழைநீர் சேகரிப்பு முறைகள் வடிவமைக்க வேண்டும் என்கிறார் அவர். “ஒரே நாளில் பெய்யும் கனமழை கடலில் கலப்பதற்கு முன்பாக அதைச் சேமிக்க நவீன வழிகள் இருக்கின்றன. பூமிக்கு அடியில் பல கிலோ மீட்டருக்கு கால்வாய்கள் அமைத்து நீரைச் சேமிக்கும் பல நாடுகள் இருக்கின்றன. போதிய மழை பெய்யும் சென்னையில் தெற்கு ஆசியாவிலேயே பெரிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தேவை இல்லை. ஏரிகளை முறையாகத் தூர்வாரி, நவீன மழை நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலே போதும்,” என்கிறார்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையில் மெட்ரோ வாட்டர் வினியோகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் அதைக் குடிக்க விரும்புவதில்லை
சென்னையில் கிடைக்கும் குடிநீர் தரமானதா?

மத்திய அரசு நடத்திய 'பே ஜல் சர்வேக்ஷன்' (Peyjal Survekshan) ஆய்வில் இந்தியாவில் உள்ள 485 நகரங்களில் 46 நகரங்கள் மட்டுமே மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையை 90%-க்கும் மேல் பூர்த்தி செய்து விட்டதாக அரசு கூறினாலும், சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பலரும் குடிப்பதில்லை. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சென்னையில் 70% குடியிருப்புகள் குடி தண்ணீர் கேன்களை பயன்படுத்துகின்றன. 25 கி.மீ. நீள கடற்கரை கொண்ட சென்னையில் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதால், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பது சென்னையின் மற்றொரு சவாலாகும்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் எஸ் குமாரி, “எங்களுக்கு 24 மணி நேரமும் மெட்ரோ வாட்டர் கிடைக்கிறது. ஆனால் அந்த தண்ணீரில் கழிவுநீர் கலக்கலாம், தூசு கலக்கலாம் என்பதால் அதைக் குடிப்பதில்லை. தண்ணீர் கேன்கள் வாங்கிக் கொள்கிறோம்,” என்றார்.

ஐ.ஐ.டி-யின் ஆய்வை நடத்திய முனைவர் எல்.இளங்கோ, “குடிநீர் வாரியம் குடிநீரை எவ்வளவு தான் சுத்தப்படுத்தி வழங்கினாலும், குழாய்களில் இருக்கும் தூசு, வழியில் யாராவது கொண்டுள்ள கழிவுநீர் இணைப்புகள் நீரின் தரத்தை பாதிக்கின்றன. அதேநேரம் கேன்களில் நீரில் அதன் எல்லா தாது சத்துகளும் நீக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. குடிநீரில் 500 TDS இருக்க வேண்டிய சத்துகள் 50-க்கும் குறைவாகவே இருக்கின்றன. கேன்களில், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரில் குறைந்தபட்ச தாதுக்களின் அளவை நிர்ணயிக்க வேண்டும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c0x0v85l72po

வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

3 weeks 4 days ago
வள்ளலார் சர்வதேச மையம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 10 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 30 ஏப்ரல் 2024

வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிதுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "106 ஏக்கர் பெரு வெளி நிலத்தில் மூன்று ஏக்கரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நடைபெற்று வருகின்றன, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் இடமாக உள்ளது, தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

வள்ளலாரின் பாரம்பரியத்தை கௌவரவிக்கும் வகையில் தமிழக அரசால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் புதிய வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்? வடலூரில் என்ன நடக்கிறது?

ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.42 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் வள்ளலாரின் ‘பெருவெளி’ தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வள்ளலாரை பின்பற்றுபவர்களும், வடலூர் பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வள்ளலாரை முன்னிறுத்தி கருத்தியல் மோதல்

வள்ளலார் எனப்படும் ஸ்ரீ ராமலிங்க அடிகளாருக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீதும் அவரது கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட மக்களால் 106 ஏக்கர் நிலம் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் சத்ய தர்ம சாலையின் ‘பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்ய ஞான சபையில் பௌர்ணமி மற்றும் தைபூசம் நாளன்று சமரச சன்மார்க சங்க இயக்கத்தைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். தைப்பூசம் நிகழ்வுக்கு 10 முதல் 15 லட்சம் பேர் கூடுவார்கள். பௌர்ணமி நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் வரை கூடுவார்கள்.

இது ஒரு கருத்தியல் மோதலாகவும் இருப்பதால் அரசியல் சர்ச்சையாகவும் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் நபர்களை பாஜக போன்ற அரசியல் அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டும் எழுகின்றன.

சனாதன தர்மத்தை ஆதரித்தவர் வள்ளலார் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறிய போது, வள்ளலார் எவ்வாறு சாதியையும் சடங்குகளையும் எதிர்த்தார் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பெருவெளியில் கட்டிடம் எழுப்புவது சத்ய தர்ம சாலையின் மாண்பை குறைக்கும் செயல் என்று கூறி, வள்ளலாரை பின்பற்றுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பாஜக, பாமக, தமிழ் தேசிய பேரியக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெருவெளியில் சன்மார்க்க நிகழ்வுகளை நடத்துவதற்கும் இத்திட்டம் இடையூறாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 
வள்ளலார் யார்?
வள்ளலார் சர்வதேச மையம்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 19ம் நூற்றாண்டின் தமிழ் சைவ ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாமல் அனைவருக்குமான பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை நம்பினார். அதேபோன்று, கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார்.

வெளியை வெறும் நிலப்பரப்பாக மட்டும் பார்க்காமல் ஞானத்தின் ஒரு பரந்த தொடர்ச்சியாக நம்பினார் வள்ளலார். அவரது கொள்கைகள் பக்தியின் ஸ்தூலமான வெளிப்பாடுகளுடன் முரண்படுவதை காணலாம்.

அவர் எழுதிய திருவருட்பா ஆறு பாகங்களாக உள்ளன. இவை திருமுறைகள் என்று அழைக்கப்படும். முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீக வாழ்க்கை குறித்து பேசிய வள்ளலார், தனது கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும், ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். சடங்குகளையும் நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருந்தார்.

“கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக” என்று எழுதியிருந்தார். 1927ம் ஆண்டு வெளி வந்த குடியரசின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை தந்தைப் பெரியார் பிரசுரித்திருந்தார்.

“வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர்,

வேத ஆகமத்தின் விளைவு அறியீர்”

என்று ஆறாவது திருமுறையில் கூறியுள்ளார்.

 
வள்ளலார் சர்வதேச மையத்துக்கு ஏன் எதிர்ப்பு ?

1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 80 காணி நிலம் (106 ஏக்கர்) நிலத்தை மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்தனர். அதில் அவர், சத்ய தர்ம சாலையை நிறுவினார். 1871-ம் ஆண்டு சத்ய ஞான சபையின் கட்டுமானம் தொடங்கி 1872-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக திறந்த வெளியாக இருக்கும் இடத்தில், புதிய கட்டுமானம் எழுப்பப்படுவது தங்கள் தத்துவத்தை குலைக்கும் செயல் என்கிறார், வள்ளலார் பணியக கடலூர் மாவட்ட பொறுப்பாளர், முனைவர் சுப்ரமணிய சிவா.

“மக்கள் கொடுத்த 106 ஏக்கரின் நடுவே ஞான சபையை நடுவில் கட்டவில்லை வள்ளலார். உடம்பில் உள்ள தலையை குறிக்கும் வண்ணம் தென் திசை மூலையில் கட்டியிருந்தார். பூத வெளி, உயிர் வெளி, யோக வெளி என 40 வெளிகளை கொண்டது பெருவெளி. ஒளி, வெளி இரண்டுமே சன்மார்க்கத்தின் பிரிக்க முடியாத அமைப்பு. எனவே வெளி என்பது எங்களுக்கு வெறும் திடல் அல்ல. பெருவெளி என்பது தத்துவம். அதை குலைக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

எப்படி கோயில்கள் அமைப்பதற்கு ஆகம விதிகள் உள்ளனவோ அது போன்ற விதிகள் இங்கும் உள்ளன என்று சுட்டிக்காட்டும் சுப்ரமணிய சிவா, “தில்லை நடராஜர் கோயிலில் அதன் பழமையை குலைக்கும் வகையில் தீட்சிதர்கள் கட்டிடத்தில் மாற்றங்கள் செய்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதே இந்து சமய அறநிலையத்துறை எங்களது பெருவெளியை குலைக்கப் பார்க்கிறது.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 
வள்ளலார் சர்வதேச மையம்
நிலத்தை தானமாக வழங்கிய பார்வதிபுரம் மக்கள்

வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள மக்களின் முன்னோர்கள் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை எதிர்க்கும் அவர்கள், பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாடாக இருக்கிறது.

ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ‘வேண்டுகோள் ஆர்ப்பாட்டம்’ நடத்தினர். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

வள்ளலார் சர்வதேச மையம்
 
‘அரசு வெளிப்படையாக இல்லை’
வள்ளலார் சர்வதேச மையம்

பட மூலாதாரம்,FACEBOOK

இந்து சமய அறநிலையத்துறை மக்களிடம் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்கிறார் தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலில் 12 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்றார்கள், பிறகு 3.8 ஏக்கர் நிலம் எடுப்போம் என்கிறார்கள். வள்ளலாரின் கொள்கைகளை உலகுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தை வரவேற்கிறோம். ஆனால் அரசின் முயற்சி அவரது கொள்கைகளுக்கே மாற்றாக இருந்தால், முன்னுரிமை கொள்கைக்கு தான், பிறகு தான் சர்வதேச மையம்” என்கிறார்.

“சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் அனுமதி இல்லாமல் ஏதாவது கட்டடம் கட்ட முடியுமா? விவேகானந்தர் பாறையில் புதிதாக எதையும் கட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பும் மணியரசன், இதுவும் மதத்தின் ஒரு பிரிவு, ஒரு தனிப்பட்ட வழிபாட்டு முறை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “வள்ளலார் சர்வதேச மையம் வள்ளலாரின் கொள்கைகள் அடிப்படையில் அமைய வேண்டும், திராவிட மாடல் அடிப்படையில் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.

 
அரசு என்ன கூறுகிறது?

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வள்ளலார் சர்வதேச மையத்துக்கான அடிக்கல் நாட்டு நடைபெற்றது. இந்த விழாவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். வடலூரில் நேரில் இருந்து அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், “பெருவெளி நிலமான 72 ஏக்கரில் 3.42 ஏக்கர் மட்டுமே சர்வதேச மையம் கட்டுவதற்கான பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்குகின்றனர்” என்று பேசியிருந்தார்.

இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் இரண்டு தடவை முறையாக நடத்தப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பு கூறுகிறது.

வள்ளலார் சர்வதேச மையம்
சர்வதேச மையத்தின் கட்டுமான விவரங்களை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானம் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த வினோத் ராகவேந்திரன், சத்ய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அருட்பெரும் ஜோதியை எட்டுகால் வாயில் திறப்பின் போது மக்கள் காண்பதற்காக வள்ளலார் பெருவெளியை விட்டுச் சென்றார் என்றும் எனவே அந்த இடத்தில் சர்வதேச மையம் கட்டக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.

தைப்பூசம் மற்றும் பௌர்ணமி நாட்களில் மக்கள் பெருவெளியில் கூடும் போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாலேயே அங்கு சர்வதேச மையம் அமைக்க திட்டமிட்டது என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது. அறங்காவலர்கள் கொண்ட குழு அமைக்காமல் சர்வதேச மையம் அமைப்பது இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன் படி குற்றமாகும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச மையம் கட்டி முடிக்கப்பட்ட பின் அது சத்ய ஞான சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது.

https://www.bbc.com/tamil/articles/cn0w7p9gnz4o

மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - எவ்வாறு பெறுவது?

3 weeks 4 days ago
ஊட்டி, கொடைக்கானலுக்கு இபாஸ் கட்டாயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 30 ஏப்ரல் 2024

இந்திய சுற்றுலாத்துறை 2023-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலின்படி, இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

தற்போது, கோடைக்காலம் என்பதால் வெப்ப அலையில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப்பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கொரோனா காலத்தில் கடைபிடித்தது போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற உத்தரவிட்டிருக்கிறது.

இ-பாஸ் பெறுவது எப்படி? அரசு பேருந்துகளில் செல்லலாமா? அரசு கூறுவது என்ன? இந்த நடைமுறையால் சுற்றுச்சூழல் காக்கப்படுமா?

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. அதில் கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைகள் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன.

இதில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியாக கருதப்படும் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை என்பது ஆண்டுதோறும் இருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் இந்த இரண்டு சுற்றுலாத்தலங்களை முக்கியமாக தேர்வு செய்வார்கள். இப்போது இதற்கு நீதிமன்றம் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

 
இ- பாஸ் முறை ஏன்?
கொடைக்கானல், ஊட்டிக்குச் செல்ல மே-7 முதல் இ-பாஸ் நடைமுறை

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இதில் நீலகிரி மற்றும் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆஜராகி இருந்தனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஊட்டிக்கு நாள்தோறும் கோடை விடுமுறை காலங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருவதாகவும் இதில் 1,300 வேன்கள் அடங்கியிருப்பதாகவும் தகவல் அளித்திருந்தது.

இதனை கேட்ட நீதிபதி அதிர்ச்சியடைந்து இவ்வளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் மலை பகுதிகளுக்குச் சென்றால் நிலைமை மோசமாகும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாத சூழல் ஏற்படும், சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினர்.

மேலும், சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வறிக்கையை அளிக்குமாறு கூறினர்.

மேலும், மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மே ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
இ- பாஸ் நடைமுறைகள் என்ன?
கொடைக்கானல், ஊட்டிக்குச் செல்ல மே-7 முதல் இ-பாஸ் நடைமுறை

இ-பாஸ் விதிமுறையை பின்பற்ற கூறிய நீதிபதிகள் அதனை வழங்குவதற்கு முன்பாக வாகனங்களில் வருவோரிடமிருந்து என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர், எத்தனை நாள் சுற்றுலா உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும்.

இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், உள்ளூர் மக்களுக்கு இந்த இ- பாஸ் நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த இ-பாஸ் நடைமுறையை இந்திய அளவில் விரிவான விளம்பரம் கொடுக்க வேண்டும், இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

 
'மலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு'
கொடைக்கானல், ஊட்டிக்குச் செல்ல மே-7 முதல் இ-பாஸ் நடைமுறை

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிடாத சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். குறிப்பாக, கொடைக்கானலை சீசன் அல்லாத மாதங்களில் ஆயிரம் முதல் 2,000 வாகனங்கள் மலைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வரும். இதுவே கோடை விடுமுறை நாட்களில் 20,000 முதல் 30,000 வரையில் வாகனங்கள் வரும்.

இதனால் மலையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும் சூழலை காண முடியும்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இதனை நம்பி தொழில் செய்யும் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கும் மறுபுறம் போக்குவரத்து நெரிசலால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கடினமாக மாறி இருக்கிறது.

நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திடம் சுற்றுலாவுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன.

சுற்றுலாத்துறை, காவல்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து இ-பாஸ் நடைமுறையை எப்படி முறைப்படுத்தி செயல்படுத்தலாம் என்பது குறித்து பேசப்பட்டு இருக்கிறது.

எதன் அடிப்படையில், இ-பாஸ் எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது", என்றார்.

 
இ-பாஸ் பெறுவது எப்படி?
கொடைக்கானல், ஊட்டிக்குச் செல்ல மே-7 முதல் இ-பாஸ் நடைமுறை
படக்குறிப்பு,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி

இதுகுறித்து பிபிசி தமிழிடம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பேசுகையில், "நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை பின்பற்றி இ-பாஸ் சேவையை வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

இ-பாஸ் பதிவு செய்யும் இணையதள பக்கம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படும்.

அதற்கு முன்னதாகவே இந்த இணையதள பக்கம் பயன்பாட்டுக்கு வரும். இதில் முன்பதிவு செய்துவிட்டு கொடைக்கானலுக்கு சென்று மக்கள் சுற்றிப் பார்க்கலாம்.

ஒருநாளைக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம், பேருந்தில் செல்பவர்களுக்கு அனுமதி எப்படி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்புகள் முறையாக அறிவிக்கப்படும்", என தெரிவித்தார்.

 
'இ- பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல்'
கொடைக்கானல், ஊட்டிக்குச் செல்ல மே-7 முதல் இ-பாஸ் நடைமுறை
படக்குறிப்பு,சுற்றுலாத்துறை உதவி பேராசியர் கோ.வை. திலீபன்.

"இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகள் சில சிக்கல்களை சந்திக்கலாம்", என்கிறார் சுற்றுலாத்துறை உதவி பேராசியர் கோ.வை. திலீபன்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கோடை காலங்களில் மலைப்பிரதேசங்களை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும்.

இதனால் கூட்ட நெரிசலை சுற்றுலா தலங்கள் சந்திக்கும். தற்பொழுது நீதிமன்றம் வாயிலாக நடைமுறைக்கு வரவிருக்கும் இ-பாஸ் முறை சுற்றுலாப் பயணிகள் கூட்ட நெரிசலின்றி சுற்றுலா சென்று பல்வேறு பகுதிகளை பார்த்து வர இயலும்.

ஆனால், சிலருக்கு விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலா செல்ல முடியும். அவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை சிக்கலை கொண்டு வரலாம்.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு மட்டுமே இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருப்பதால், ஏலகிரி, ஏற்காடு, மேகமலை போன்ற வேறு சில பகுதிகளை நோக்கிச் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுலா சார்ந்த வியாபாரங்கள் நடைபெறும்”, என்றார்.

'சுற்றுலாப் பயணிகளை நம்பியிருப்போர் தொழில்கள் பாதிப்பு'

இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி விஜய் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி ஹோட்டல்கள், தங்கும், விடுதிகள் சிறு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என அனைத்துத் தரப்பு தொழிலும் இ-பாஸ் நடைமுறையால் பாதிக்கும் சூழல் ஏற்படும்.

கொடைக்கானலுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். இதனால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கொடைக்கானலுக்கு வருவார்கள். இவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதால், சீசனை நம்பி பல ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்யும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, இதனை நடைமுறைப்படுத்த அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக”, கூறுகிறார்.

 
'சொந்த வாகனங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம்'
கொடைக்கானல், ஊட்டிக்குச் செல்ல மே-7 முதல் இ-பாஸ் நடைமுறை
படக்குறிப்பு,'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

"கொடைக்கானல், ஊட்டி ஆகிய நகரங்கள் தாங்கும் திறனை தாண்டி விட்டதாக," கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை சுற்றுலாத் தலங்கள் அதன் தாங்கு திறனை தாண்டி விட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மக்கள் நெரிசலால் உயிர்பன்மை தன்மை பாதிக்கப்படாமல் அதை பாதுகாக்க வேண்டும்.

சுற்றுலா தலங்களுக்கு சொந்த வாகனங்களில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் வேண்டும், அறிவியல்பூர்வமாக, அதன் தாங்கும் திறனை கண்டறிந்து தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்", என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv26jjgvq1xo

`நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு

3 weeks 5 days ago

தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

 
 
 
`நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு
 

மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

 

அதன்படி, பரபரப்பான சூழ்நிலையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியை நிர்மலா தேவி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி குற்றவாளி எனவும் கோர்ட் தீர்மானித்தது.

 

இந்த சூழலில் நிர்மலா தேவிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறித்து வாதங்களை முன்வைக்க விரும்புவதாக நீதிபதியிடம் பேசினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசினார். இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி பகவதியம்மாள் கூறினார்.

 

தொடர்ந்து நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வழக்கில் 2-ம் மற்றும் 3-ம் நபர்களாக குற்றம்சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிர்மலா தேவிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன் வைப்பதற்கு நீதிபதியிடம் அவகாசம் கேட்டிருக்கிறோம். வாதங்கள் குறித்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

சி.பி.சி.ஐ.டி.தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசுகையில், 'நிர்மலாதேவி வழக்கில் 2,3-ம் நபர்களாக குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதற்கு போதுமானது தான். ஆனால் வழக்கு விசாரணையின்போது முருகன் மற்றும் கருப்பசாமிக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிறழ் சாட்சிகளாக மாறியதால் நீதிமன்றம் பிறழ்சாட்சிகளை கருத்தில் எடுத்துக்கொண்டு உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்திருக்கிறது. அதேசமயம் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் தீர்மானித்துள்ளது.

 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருக்குமே தண்டனை பெற்று தருவதில் அரசு தரப்பு உறுதியாக உள்ளது. இந்த வழக்கிலே அரசுத் தரப்பில் 104 சாட்சிகள் வழங்கப்பட்டதில் 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 194 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. 46 சான்று பொருட்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முருகன், கருப்பசாமியின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம். அதேசமயம் பிறழ் சாட்சிகளாக மாறிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்வார்கள்.

பிற்பகலில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிர்மலா தேவி வழக்கில் வாதங்களுக்கான சிறப்பு கால அவகாசம் வழங்கக் கூடாது, இன்றைக்கே வாதங்களை முன்வைக்கவும் நியாயத்திற்கான தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். எதுவாகினும் பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு பின்பு எதையும் உறுதியாக சொல்ல முடியும்' என்றார்.

`நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு
 

பிற்பகலில், தீர்ப்பிறக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், 'இம்மார்டல் ட்ராஃபிக் ப்ரெவென்ஷன் ஆக்ட் சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன்வைக்க எங்களுக்கு இறுதி வாய்ப்பு தர வேண்டும். இதேப்போல, பிரசாந்த் பூஷன் மீதான வழக்கிலும்கூட சுப்ரீம் கோர்டு இறுதிக்கட்டத்தில் எதிர்தரப்புக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது' என மேற்கோள் காட்டி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு நாளை பிற்பகலில் வழங்கப்படும்' என வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

`நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு | srivilluputhur court convicted nirmala devi in the case of misbehaving with the students - Vikatan

மாடியில் இருந்து விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு: உயிரை பணயம் வைத்து மீட்ட மக்கள்

3 weeks 6 days ago
29 APR, 2024 | 10:37 AM
image

தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது.

இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர்.

இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார்.

குழந்தையை   எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

https://www.virakesari.lk/article/182204

பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை | எல்லை கடந்த மனிதநேயத்திற்குக் குவியும் பாராட்டுகள்…

4 weeks 1 day ago
26 APR, 2024 | 10:31 AM
image
 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிஷா ராஷன் (வயது 19). இவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். வரும் போது இதய பகுதியளவு செயலிழக்கும் நிலையில் வந்தார்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு முழுமையாக இதயத்தை மாற்ற முடிவு செய்தனர். மேலும் இதற்காக 35 லட்சம் செலவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு சென்னையை சேர்ந்த டிரஸ்ட் மூலம் பண உதவியும் கிடைக்கப்பெற்று இலவசமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு டெல்லியை சேர்ந்த 69-வயது நபர் மூளைச்சாவு அடைந்ததால் அவரது இதயத்தை இந்த பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு இருக்க சென்னையில் வைத்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. இவ்வளவு நாட்களாக அந்த பெண் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு உயிரும் முக்கியம், அவர் எங்களது மகள் என்று கூறினர்.

இவ்வாறு இருக்க சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாகிஸ்தான் இளம்பெண், தமிழக மருத்துவர்கள் மற்றும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் பாகிஸ்தான் சென்று பேஷன் டிசைனராக விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் பெற்றோர் கூறுகையில், பாகிஸ்தானில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. அங்கு இருக்கும் டாக்டர்கள் இங்கு இதயம் மாற்றம் செய்வதற்கான வசதிகள் இல்லை என கூறினர். இதனால் நாங்கள் இந்தியா வந்தோம். இந்தியா எங்களது மகளிற்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் ஹாக்கி உலக கோப்பை கோல்கீப்பர் மன்சூர் அகமது ஏற்கனவே இந்தியாவில் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுவும் தற்போது அந்த இளம் பெண்ணிற்கு சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பது சென்னை  மக்களுக்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.

https://www.virakesari.lk/article/181992

யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன?

4 weeks 1 day ago
டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன?
திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார்.

என்ன நடந்தது?

ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்?

வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா?

பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும்.

(டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார்.

அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.

 
திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம்

இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார்.

இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார்.

மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார்.

திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம்,YOUTUBE

நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார்.

அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர்.

நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார்.

மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன்.

நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

 
திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம்,YOUTUBE

மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன்.

அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார்.

திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது.

வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து.

ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.

 

பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான்.

இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார்.

அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

1 month ago
Published:Today at 6 AMUpdated:Today at 6 AMமன்சூர் அலிகான் - செல்வப் பெருந்தகை

மன்சூர் அலிகான் - செல்வப் பெருந்தகை

 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி சார்பாகப் போட்டியிடும் அதன் நிறுவனர் மன்சூர் அலிகான், காங்கிரஸில் இணையப்போவதாக அறிவித்திருக்கிறார். முன்னதாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மன்சூர் அலிகான் இன்று நேரில் சந்தித்தார்.
மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை
 
மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ``தாய் கழகத்தில் இணைவதற்காகக் கடந்த ஆண்டு நவம்பரிலேயே கடிதம் கொடுத்திருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். பின்னர் மீண்டும் இணைய கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால், அது யாரிடமும் சேரவில்லை என்று நினைக்கிறேன்.

 

அதனால்தான், இடையில் கட்சி ஆரம்பித்தேன். தற்போது, வேலூர் தொகுதியைத் தவிர எல்லா இடங்களிலும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன் என்று கூறிவந்தேன். அதோடு, சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி இருக்கு, அவர்தான் பிரதமராக வரவேண்டும் அல்லது ராகுல் காந்தி வரவேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்'' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி
 
பிரதமர் மோடி

மேலும், பிரதமரின் சமீபத்திய மத ரீதியிலான பேச்சு குறித்து பேசுகையில், ``முன்னாள் பிரதமர் மன்மோகன் 2006-ல் பேசியதைத் திரித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பிரதமர், வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் நாட்டு மக்களை யாசகர்களாக்கிவிட்டு, இன்றைக்கு இவரைக் கொலைசெய்ய வெளிநாட்டு சதி நடப்பதாக இவரே கூறுகிறார். இந்த மாதிரி எதையாவது பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். முதலில் அவரை சிறைக்கு அனுப்புங்கள். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்" என்று கூறினார்.

Mansoor AliKhan: `தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு | actor and politician Mansoor Ali Khan announced he will join Congress (vikatan.com)

'ஸ்ட்ராங் ரூம்' என்பது என்ன? அங்கே வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒன்றரை மாதம் எவ்வாறு பாதுகாக்கப்படும்?

1 month ago
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?
2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன.

அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?
படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்.
வாகனங்களுக்கு அனுமதி இல்லை

ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம்.

அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.

 
பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

அதன்படி,

  • ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும்.
  • தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
  • அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
  • ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
 
மூன்றடுக்குப் பாதுகாப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர்.

இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள்.

மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர்.

https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko

இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்

1 month ago
"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்
படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 18 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா?

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர்.

ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு

தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார்.

அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

 
40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி
"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்

பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH

படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம்.

கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார்.

‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’

நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார்.

அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

 
‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’
"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்
படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார்.

இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார்.

இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார்.

அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய்.

தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.

 
"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்
படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி.

அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி.

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது.

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி.

https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo

லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

1 month 1 week ago
Savukku-Shankar-750x375.jpeg லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது.

தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார்.

மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது.

அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார்.

https://athavannews.com/2024/1378369

Checked
Sun, 05/26/2024 - 14:17
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed