Aggregator
முழிக்கும் மொழி
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்
அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார்
பதவி,பிபிசி நியூஸ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார்.
இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான வரி உயர்வை நிறுத்த பியூஷ் கோயல் விரும்புகிறார்.
அமெரிக்காவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் இருந்துதான் வருகிறது. பிராண்ட் பெயர் கொண்ட மருந்துகளின் மலிவான பதிப்புகளான ஜெனரிக் மருந்துகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் மருத்துவர்களால் மக்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் 10இல் ஒன்பது இதுபோன்ற மருந்துகளே.
இது வாஷிங்டனுக்கு பல பில்லியன் டாலர் சுகாதாரச் செலவை மிச்சமாக்குகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ஜெனரிக் மருந்துகள் காரணமான சேமிப்பு 219 பில்லியன் டாலர்களை (169 பில்லியன் பவுண்டுகள்) எட்டியதாக ஆலோசனை வழங்கும் நிறுவனமான IQVIA-இன் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்திய மருந்துகளைச் சார்ந்திருக்கும் அமெரிக்கர்கள்
வர்த்தக ஒப்பந்தம் இல்லாதபட்சத்தில் டிரம்பின் இந்த வரி சில இந்திய ஜெனரிக் மருந்துகளை எட்ட முடியாத ஒன்றாக ஆக்கிவிடும். சில நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும். இதன் காரணமாகத் தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்த வரிவிதிப்பு, தேவை-விநியோக சமநிலையின்மையை மோசமாக்கலாம். காப்பீடு இல்லாதவர்கள் மற்றும் ஏழை மக்கள் அதிக செலவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று யேல் பல்கலைக்கழகத்தின் மருந்து செலவு நிபுணர் டாக்டர். மெலிசா பார்பர் கூறுகிறார்.
இது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படும் மக்களை மேலும் பாதிக்கலாம். அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்கான மருந்துகளில் 60%க்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என்று இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி நிதியளித்த IQVIA ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்கர்கள் இந்திய அத்தியாவசிய மருந்துகளை எவ்வாறு சார்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு அமெரிக்காவில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் ஆன்டி-டிப்ரஸன்ட் மருந்தான செர்ட்ராலைன் ஒரு பிரதான உதாரணம்.
இதுபோன்ற பல மருந்துகள், இந்தியா அல்லாத நிறுவனங்களுடைய மருந்துகள் விற்கப்படுவதில் இருந்து பாதி விலையில் கிடைக்கின்றன.
"இதுகுறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்," என்று மருந்துகளுக்கான அணுகலுக்காகப் போராடும் குழுவான 'பப்ளிக் சிட்டிசன்ஸின்' வழக்கறிஞர் பீட்டர் மேபர்டுக் கூறுகிறார். மருந்துகளின் விலை காரணமாக நான்கு அமெரிக்க நோயாளிகளில் ஒருவர் மருந்துகளை எடுக்கத் தவறுகிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சீன இறக்குமதிகள் மீதான வரிகள் காரணமாக டிரம்ப் ஏற்கெனவே அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் விற்கப்படும் மருந்துகளின் 87% மூலப்பொருட்கள் நாட்டிற்கு வெளியில் இருந்து வருகின்றன. மேலும் அவை முக்கியமாக சீனாவில் குவிந்துள்ளன. இது உலகளாவிய விநியோகத்தில் சுமார் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 20% அதிகரித்துள்ளதால், மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய மருந்துகளை உற்பத்தி செய்ய முடியுமா?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்காக மருத்துவர்களால் அளிக்கப்படும் மருந்துகளில் சுமார் 60% இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளாகும்.
வரிகளைத் தவிர்க்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
பிராண்ட் பெயர் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளை விற்கும் ஃபைசர், எலி லில்லி போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள், தங்களின் ஒரு சில உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற ஒப்புக்கொண்டுள்ளன.
ஆனால் குறைந்த விலை கொண்ட மருந்துகளுக்கு இது சாத்தியமில்லை.
தனது நிறுவனம் அமெரிக்காவில் ஒரு பாட்டிலுக்கு 1 டாலர் முதல் 5 டாலர் வரையிலான விலையில் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், வரிகள் காரணமாக உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது கட்டுப்படியாகாது என்றும் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான சன் ஃபார்மாவின் தலைவர் திலீப் ஷாங்வி கடந்த வாரம் ஒரு தொழில்துறை கூட்டத்தில் கூறினார்.
"அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறைந்தது மூன்று முதல் நான்கு மடங்கு மலிவானது" என்று ஐபிஏ-வின் சுதர்சன் ஜெயின் கூறுகிறார்.
எந்தவொரு விரைவான இடமாற்றமும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு புதிய உற்பத்தி வசதியைக் கட்டுவதற்கு 2 பில்லியன் டாலர் வரை செலவாகும். மேலும் அது செயல்படுவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று லாபி குழு PhRMA தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் வரிவிதிப்பு
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு காலகெடு நெருங்கி வரும் நிலையில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டார்
இந்த வரிவிதிப்பு இந்தியாவில் உள்ள உள்ளூர் மருந்து நிறுவனங்களையும் மோசமாகப் பாதிக்கலாம். மருந்துப் பொருட்கள், இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஏற்றுமதியாக உள்ளதாக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ தெரிவிக்கிறது.
இந்தியா கிட்டத்தட்ட எந்த வரியும் செலுத்தாமல் ஆண்டுதோறும் சுமார் 12.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இருப்பினும் இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகள் 10.91% வரி செலுத்துகின்றன.
இது 10.9% 'வர்த்தக வித்தியாசத்தை' ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் எந்தவொரு பதிலடி வரிவிதிப்பும் ஜெனரிக் மருந்துகள் மற்றும் சிறப்பு மருந்துகளுக்கான விலையை அதிகரிக்கும் என்று ஜி.டி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது.
அமெரிக்க சந்தையில் விலை உயர்வு ஏற்படும் அதிக வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மருந்துகள் துறை உள்ளதாக அது சுட்டிக்காட்டுகிறது.
பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகளை விற்கும் இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே குறைவான லாபத்தில் செயல்படுகின்றன. அதிக வரிவிதிப்பை அந்த நிறுவனங்களால் சமாளிக்க முடியாது.
போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அவை மிகக் குறைந்த விலையில் மருந்துகளை விற்கின்றன. மேலும் உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையில் இதயம், மனநலம், தோல் மருத்துவம் மற்றும் பெண்கள் சுகாதார மருந்துகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.
"செலவுக் குறைப்புகள் மூலம் சிறிய அளவு வரிவிதிப்பைச் சமாளிக்க முடியும். ஆனால் வரிவிதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும்," என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒரு முன்னணி இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் பிபிசியிடம் கூறினார்.
பட மூலாதாரம்,Getty Images
அமெரிக்காவின் மருந்து சந்தை
வட அமெரிக்கா இந்த நிறுவனங்களின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகும். இது பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது.
"இது வேகமாக வளர்ந்து வரும், மிகவும் முக்கியமான சந்தை. மற்ற சந்தைகளுக்கு மருந்துகளைக் கொண்டு சென்றாலும்கூட அமெரிக்க சந்தையில் ஏற்படும் இழப்புகளை அது ஈடுசெய்யாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வணிக நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வரிகள் முடிவு செய்யக்கூடாது. ஏனெனில் 'நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வரிகள் நீங்கிவிடக்கூடும்' என்று இந்தியாவின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி உமங் வோஹ்ரா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆனால் நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். பல நிறுவனங்களின் அதிர்ஷ்டத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ இதனால் முடியும்.
அமெரிக்க மருந்துகளின் மீதான இந்தியாவின் இறக்குமதி வரிகள்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்தியா வரிகளை 'பெருமளவு குறைக்க' ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறினார்.
"இவற்றையெல்லாம் தவிர்க்க இந்தியா மருந்துப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டும்" என்று மூத்த சந்தை நிபுணர் அஜய் பக்கா பிபிசியிடம் கூறினார்.
"இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகளின் மதிப்பு சுமார் 50 கோடி டாலர்கள் மட்டுமே. எனவே தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
பதிலடி வரி காரணமாக இந்தியா எதிர்மறையாக பாதிக்கப்படாமல் இருக்க, அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகள் மீதான வரிவிதிப்பை விலக்க வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளர்களைக் கொண்ட ஐபிஏ பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் சமீபத்திய பட்ஜெட்டில், அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் 36 உயிர் காக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டன. இந்தியா தனது அழுத்தத்திற்கு அடிபணியக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கோடிட்டுக் காட்டினார்.
"யாரோ ஒருவர் இறுதியாக அவர்கள் செய்ததை அம்பலப்படுத்தியதால், 'பெருமளவில் வரியைக் குறைக்க' இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்தியா இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் இரு நாடுகளிலும் உள்ள மருந்து நிறுவனங்கள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தின் வடிவத்தைக் காண பதற்றமாகக் காத்திருக்கின்றன.
"புதிய வரிவிதிப்பு காரணமாக குறுகியகால சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் முதல் கட்ட (வர்த்தக) ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்," என்று அமெரிக்க-இந்திய செயல் உத்திக் கூட்டாண்மை மன்றத்தின் மூத்த ஆலோசகர் மார்க் லின்ஸ்காட் பிபிசியிடம் கூறினார்.
"மருந்து விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் முறிவை இரு நாடுகளாலும் தாங்க முடியாது" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம்
15 Mar, 2025 | 05:30 PM
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார்.
மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.
ஒரு மறைமாவட்டத்தில் குரு முதல்வர் பதவி என்பது மறைமாவட்ட ஆயருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவியாகும்.
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் முருங்கன் கிராமத்தில் காலம்சென்ற சந்தான் பாவிலு தம்பதியருக்கு பதினொராவது மகனாக 1969ஆம் ஆண்டு பிறந்தார்.
முருங்கன் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது உயர்தரக் கல்வியையும் கற்றார்.
யாழ்ப்பாணம் புனித மாட்டினார் சிறிய குருமடத்தில் தனது ஆரம்ப குருத்துவ உருவாக்கத்தைப் பெற்ற இவர், தனது மூன்று வருட மெய்யியல் கல்வியை கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியிலும், நான்கு வருட இறையியல் கல்வியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் கற்றார்.
1997ஆம் ஆண்டு அன்றைய மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகையினால் மன்னார் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
வங்காலை, மன்னார் ஆகிய பங்குகளில் உதவி பங்குத்தந்தையாகவும், தலைமன்னாரில் பங்குத்தந்தையாக மூன்று வருடங்களும் பணியாற்றினார்.
தொடர்ந்து, மன்னார் மறை கல்வி இயக்குனராக ஐந்து வருடங்களும், கலையருவி எனப்படும் சமூகத்தொடர்பாடல் அருட்பணி மைய இயக்குனராக ஏழு வருடங்களும், மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் சர்வமத உரையாடல் ஆணைக்குழுவின் இயக்குனராக ஒன்பது வருடங்களும், 'மன்னா' என்ற மறை மாவட்டப் பத்திரிகையின் ஆசிரியராக 16 வருடங்களும், மன்னார் சிறிய குருமட அதிபராக ஐந்து வருடங்களும், மன்னார் மறைமாவட்ட செனட் சபையின் செயலாளராக ஐந்து வருடங்களும் பணியாற்றினார்.
தற்போது தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தின் பரிபாலகராகவும், தோட்டவெளி பங்கு தந்தையாகவும், மன்னார் மறைக்கோட்ட முதல்வராகவும் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் இந்தப் புதிய பணிப்பொறுப்பு அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் நேசன் அடிகளார் சிறந்த கல்வித் தகைமை கொண்டவராக விளங்குகின்றார். ரோமாபுரியில் உள்ள ஊர் பானியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மாணிப் பட்டத்தையும் இறையியல் மாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் எம். ஏ. பட்டத்தையும் கிறிஸ்தவ நாகரீகத்தில் எம். பில். பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தற்போது கண்டிபேராதெனிய பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்யும் நிலையில் உள்ளார்.
சிறந்த தமிழ் அறிஞராக திகழும் தமிழ் நேசன் அடிகளார் பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளமை குறமிப்பிடத்தக்கது.
மேலும், இவர் பல தேசிய, சர்வதேச தமிழ் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
அத்தோடு, 2009 ஆம் ஆண்டு மன்னாரில் மன்னார் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார்.
2010ஆம் ஆண்டு நான்கு நாள் மன்னார் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும், 2013ஆம் ஆண்டு மூன்று நாள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையும் மன்னாரில் பிரமாண்டமாக நடாத்தி தேசிய சர்வதேச கவனத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்த இரண்டு மாநாடுகளும் அடிகளாரின் செயற்திறனை வெளிப்படுத்திய இருபெரும் நிகழ்வுகளாகும்.
அடிகளாரின் தந்தை சந்தான் பாவிலு அவர்களும். அவருடைய தந்தை மரியான் சந்தான் அவர்களும் பல கத்தோலிக்க நாட்டுக் கூத்து நாடகங்களை எழுதிய புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் முதுபெரும் தமிழ் அறிஞர்களான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் வழியில் தமிழ் பணி புரியும் அடிகளார் தொடர்ந்து எழுதியும், தமிழ் மாநாடுகளில் பங்கெடுத்தும் வருகின்றார்.
சமயப் பணியையும், தமிழ்ப் பணியையும் தனது இரு கண்களாகக் கொண்டு இடையறாது பணியாற்றும் அடிகளாரின் திறமையையும் செயற்திறனையும் அங்கீகரிக்கும் முகமாக மன்னார் மறைமாவட்ட திருச்சபை மறைமாவட்ட குருமுதல்வர் பணிப்பொறுப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம் | Virakesari.lk
தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல ; சந்திரசேகர்
15 Mar, 2025 | 06:55 PM
(எம்.நியூட்டன்)
தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த முறை இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை.இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை.
அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர்.
இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலவனம் ஆகக்கூடும்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என்றார்.
தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல ; சந்திரசேகர் | Virakesari.lk
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கற்றுக்கொடுத்தது : எஸ்.பி.திஸாநாயக்க
5 Mar, 2025 | 05:42 PM
(எம்.மனோசித்ரா)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி.) கற்றுக் கொடுத்தது.
எனவே தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த இயலுமைய இந்த அரசாங்கத்துக்கே காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 1984, 1985களில் ஜே.வி.பி.யிலிருந்து கொண்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் அந்தக் கட்சினராலேயே கொல்லப்பட்டனர்.
எனவே தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாச்சூடுகள், வாள் வெட்டுக்களை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையும், அனுபவமும் ஜே.வி.பி.க்கு காணப்படுகிறது.
தற்போதுள்ள அரசாங்கம் அதற்கு மிகப் பொறுத்தமானதாகும். எனவே இந்த கொலை, கொள்ளை கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசபந்து தென்னகோன் தலைமறைவாகுமளவுக்கு ஒன்றும் இடம்பெறவில்லை. அவர் தலைமறைவாகாமல் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணையில் விடுதலையாகியிருக்கலாம். எவ்வாறிருப்பினும் அவர் ஓரிரு தினங்களில் வெளியே வருவார். அவர் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
நாட்டு மற்றும் மக்கள் மீதான அன்பின் அடிப்படையிலேயே அரசியலில் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கற்றுக்கொடுத்தது : எஸ்.பி.திஸாநாயக்க | Virakesari.lk
அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மனித உரிமை பேரவையில் அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த மாதம் 25ஆம் திகதி இடம்பெற்றிருந்த 25ஆவது மனித உரிமை பேரவையில் எமது வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தார். கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பல விடயங்கள் அங்கு கையாளப்பட்டிருந்தன.
எனினும் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. மனித உரிமை தொடர்பில் பல விடயங்களை அமைச்சர் கூறி இருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
எமது நாடு பொருளாதார ஸ்திரதன்மைற்று இருக்கிறது. அதில் இருந்து மீள்வதற்கு தேவையான விடயங்களை செய்துவருகிறது என்பதை நாங்கள் அறிவோம். தமிழ் பேசும் பொலிஸார் இணைத்துக்கொள்ளல் போன்ற பல விடயங்களை தெரிவித்திருந்தீர்கள்.
ஆனால் இவை அனைத்தும் ஒரு அடையாளமாக மட்டுமே எமக்கு தெரிகிறது. அதிகாரிகளிடமிருக்கும் பணி நிலை தொடர்பான செயற்பாட்டையே நீங்களும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும்.
அதன் நடைமுறைகள் தொடர்பில் தெரிவித்திருக்க வேண்டும். பொறுப்புக்கூறும் விடயம் காலதாமதாகி இருக்கிறது. இது தொடர்பில் சர்வதேச எம்மை குற்றம் கூறி இருக்கிறது.
மனித உரிமை ஆணைக்குழு தொடர்பில் இலங்கையில் மனித உரிமை செயற்திட்டம் தொடர்பில் நேற்று ஆவணம் ஒன்று வெளிவந்திருக்கிறது.
இணையத்தளத்தில் அது இருக்கிறது. செப் டெம்பர் அமர்வுகளுக்காக தயாராகி வருவதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அக்காலப்பகுதியில் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் எடுத்த முன்னேற்றம் தொடர்பில் கூறுவதாக தெரிவித்திருந்தார்.அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் தற்போது மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிட்டிருக்கும் அறிக்கையை அரசாங்கம் பார்க்க வேண்டும்.
அதில் பல்வேறு தலைப்புகளில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. நீதி நியாயம் தொடர்பில் உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டு தொடர்பில் கேட்கப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்திலான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 (1) பிரேரணைக்காகவும் அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று பொறுக்கூறும் விடயத்தில் அவர்கள் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதல், தேசிய ரீதியாக அல்லது பிராந்திய ரீதியாக அல்லது சர்வதேச ரீதியாக அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனவே கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்து தவறுகளும் இங்கு திருத்தப்பட்டிருக்கின்றன.பல கோரிக்கைகள் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை வன்முறைகள் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பின்பற்றப்படும் மரபுரிமைகள் இதற்கான டிஜிட்டல் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, இந்த சாட்சியங்களும் தரவுகளும் சுருக்கமாக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளன.
எனவே அரசாங்கத்தின் புலனாய்வு துறையை பயன்படுத்தி அனைத்து சிவில் அமைப்பினராலும் இதனை செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையை கண்டறிவதற்கு பல விடயங்கள் நாங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.
உண்மையை கண்டறிதல் எனும்போது முஸ்லிம்கள் பாரிய துன்பங்களுக்கு முகம்கொடுத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள, தமிழர்கள் சிங்களவர்கள் என அனைவரும் துன்பப்பட்டிருக்கிறார்கள்.
அதனால் நாங்கள் இதில் இருந்து வெளியில் வரவேண்டும். மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய அனைத்தும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
"கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய கட்சி பிள்ளையான் தலைமையில் உதயம்.
"கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய கட்சி பிள்ளையான் தலைமையில் உதயம்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (15) சனிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் இடம் பெற்றுள்ளது.
கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு இன்று உதயமானது.
இதன் முதற்கட்டமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திட்டனர்
இந்த ஒற்றுமைக்கான பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கை அடிப்டையாகக் கொண்டு இயங்கும் அரசியல் சக்திகள் அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர்களின் அரசியல், சமூக பாதுகாப்பு அரணாக பலம்பொருந்திய கட்டமைப்பாக இது செயல்படவுள்ளது என தெரிவித்தனர்.
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
ஒளியை “சூப்பர்சொலிட்” ஆக மாற்றிய அதிசய கண்டுபிடிப்பு – இத்தாலிய விஞ்ஞானிகள் புரட்சிகர சாதனை..!
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
ஒளியை “சூப்பர்சொலிட்” ஆக மாற்றிய அதிசய கண்டுபிடிப்பு – இத்தாலிய விஞ்ஞானிகள் புரட்சிகர சாதனை..!
அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்…
இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..
சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்..
“சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்..
சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிணைந்து இருக்கும் போதிலும், அவை எந்த தடையுமின்றி (without friction) நகர முடியும்...
சூப்பர்சொலிட் தன்மை 1969 ஆம் ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது... ஆனால், இதை ஆய்வகத்தில் உருவாக்கி, கண்கூடாக காண்பது கடினமானது...
இதை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சியில்தான் இத்தாலிய விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர்… அதுவும் ஒளியை..
சாதாரணமாக, சூப்பர்சொலிட் நிலை, குறைந்த வெப்பநிலையிலான அணுக்கள் (ultracold atomic gases) மூலம் உருவாக்கப்பட்டன… ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் இதை ஒளி (light) மூலம் உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு ஆகும்...
சரி இப்போ இவர்கள் எப்படி ஆய்வுகூட மட்டத்தில் இதைச் சாதித்தார்கள், அதுவும் தன்னைவிட இந்த பிரபஞ்சத்தின் உள்ளே யாரும் வேகமாக போகமுடியாது என்று அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஒளியை என்பதைப் பார்ப்போம்…
சூப்பர்சொலிட் உருவாக்கத்தில் பயன்படுத்திய உயர் துல்லிய படமெடுப்புக் கருவி(high resolution imaging system)
சூப்பர்சொலிட் தன்மை கொண்ட ஒளியின் ஒழுங்கமைப்பு…
விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்யும் தருணம்…
விஞ்ஞானிகள் ஒளியை ஒரு சிறப்பான செமிகண்டக்டர் (semiconductor) கட்டமைப்பில் சிறப்பாக கட்டுப்படுத்தினர்…
ஒளியின் துகள்கள் (photons) ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் (interact) விதமாக அமைக்கப்பட்டது…
இதன் விளைவாக, ஒளி திண்மமாகவும் (solid-like) திரவமாகவும் (fluid-like) நடந்துகொள்ளும் நிலை உருவானது...
இவ்வாறு ஒளி “சூப்பர்சொலிட்” ஆக மாறியது... இதை முதன்முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள், இது எதிர்காலத்தில் குவாண்டம் இயற்பியலுக்கு (quantum physics) புதிய வாசல்கள் திறக்கும் என நம்புகின்றனர்...
இந்த கண்டுபிடிப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள்..👇
1. குவாண்டம் கணிப்பொறிகள் (Quantum Computing):
சூப்பர்சொலிட் ஒளி (supersolid light) புதிய வகை குவாண்டம் பிட்டுகள் (qubits) உருவாக்க உதவும்… இது மிகுந்த செயல்திறன் கொண்ட குவாண்டம் கணிப்பொறிகளை உருவாக்க வழிவகுக்கும்...
2. அளவீட்டு கருவிகள் (Precision Measurement):
சூப்பர்சொலிட் ஒளியின் தன்மை, மிகுந்த துல்லியத்துடன் (high precision) அளவீடுகளை மேற்கொள்ள உதவும்…இது அடிப்படை இயற்பியல் மாறிலிகளை (physical constants) கண்டறியவும், gravitational waves களை கண்டறியவும் உதவும்...
3. புதிய பொருட்கள் (Advanced Materials):
ஒளியை சூப்பர்சொலிட் நிலை வரை கட்டுப்படுத்தும் திறன், புதிய வகை பொருட்கள் (materials) உருவாக்க உதவும்… இது புதிய மெக்கானிக்கல் (mechanical) மற்றும் ஒளி (optical) பண்புகளைக் கொண்ட பொருட்களை உருவாக்க வழிவகுக்கும்...
இந்த கண்டுபிடிப்பின் எதிர்கால தாக்கம்..
இது குவாண்டம் கணிப்பொறிகள், தகவல் தொடர்பு, மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் (medical technology) புதிய புரட்சிகளை ஏற்படுத்தும்…
புதிய அளவீட்டு கருவிகள் மற்றும் அதிக செயல்திறனுள்ள தகவல் தொடர்பு முறைகளை உருவாக்கும்…
விஞ்ஞான உலகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது…
ஆக மொத்தத்தில் அறிவியல் உலகில் ஒளியின் புதிய வடிவம் – இது ஒரு புதிய அதிசயம்..!
இத்தாலிய விஞ்ஞானிகள் சாதித்துள்ள இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இது ஒளி பற்றிய மனிதரின் புரிதலை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை…!
-பாலபத்திரஓணாண்டி