பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
-
எழுதியவர், சஞ்சய் கிஷோர்
-
பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி
-
11 ஜூன் 2024
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது.
கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’.
பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாதை அமைத்து கொடுத்தார்.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 பந்துகள் `டாட் பால்கள்’ ஆனது.
குறைந்த ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில், இந்த டாட் பால்களின் மதிப்பு விக்கெட் எடுப்பதற்கு சமம் என்றே சொல்ல வேண்டும். இதனை ரவிச்சந்திரன் அஷ்வினை விட வேறு யாராலும் தெளிவாக விளக்க முடியாது.
போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஷ்வின் எக்ஸ் தளத்தில் ஒரு நீண்ட பதிவை பகிர்ந்தார்: “டி20யில் விக்கெட்டுகளை எடுப்பது ஒரு கொடுங்கனவு போன்றது. இதை நான் சொல்லும் போதெல்லாம் மக்கள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். டி20யில் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். இது பும்ராவை போன்று பந்துவீச்சாளரின் சொந்த திறனைப் பொறுத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பொதுவாக பந்துவீச்சாளர்கள் தவறான நேரத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார்கள். அடுத்த ஓவரில் சக பந்துவீச்சாளர்களால் அழுத்தத்தை உருவாக்க முடியாது. மெதுவாக ஆனால் நிச்சயமாக, போட்டியின் போக்கை சுயநலமற்ற பந்துவீச்சாளர்கள் தீர்மானிக்கிறார்கள்." என்றும் அஷ்வின் பதிவிட்டிருக்கிறார்.
"விக்கெட்டுகளை பெறுவது இறுதி இலக்கு அல்ல"
பட மூலாதாரம்,GETTY IMAGES
போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ரா பேசிய வார்த்தைகள் அஷ்வினின் கூற்றை எதிரொலித்தது. பும்ராவின் எண்ணங்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்தவை என்பதையும் அவர் எவ்வளவு வியூகமாக பந்து வீசுகிறார் என்பதையும் அவரின் பேச்சு பிரதிபலிக்கிறது.
பும்ரா பேசுகையில், "போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் போது பந்துவீச்சாளராக நாம் பொறுமை இழந்து விடக்கூடும். பந்து வீசுபவர்கள் முழு பலத்துடன் சிறந்த பந்தை வீச முயற்சிப்பார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் இருக்க முயற்சித்தேன். நாங்கள் விளையாடத் தொடங்கியதும், ஸ்விங் மற்றும் சீம் குறைந்துவிட்டது.
அத்தகைய சூழ்நிலையில் நாம் துல்லியமாக வியூகம் வகுக்க வேண்டும். ஏனென்றால், பந்துவீச்சில் மாயம் செய்து விடலாம் என்று நினைத்து அவசரம் காட்டினால், எதிரணிக்கு ரன்களை எடுப்பது எளிதாகிவிடும், மேலும் அவர்கள் இலக்குக்கு ஏற்ப பேட் செய்து வென்றுவிடுவர்.
எனவே, நாம் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும். ஆம், அழுத்தத்தை அதிகரித்து, பெரிய பவுண்டரி லைனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் இருக்கும் சூழலை நம் நன்மைக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்து நாங்கள் செய்தோம். முதலில் அழுத்தத்தை உருவாக்கினோம், அதன்பின்னர் அனைவரும் விக்கெட்டுகளைப் பெற்றோம்.” என்றார்.
கடினமான நியூயார்க் ஆடுகளம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Nassau County International Cricket Stadium) எதிர்பாராத விதமாக மிகவும் கடினமாக இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆட்டத்துக்கு நடுவே மழை பெய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட்டானது. .
ரிஷப் பந்த் 42 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும், ரோஹித் சர்மா 13 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ரஃப் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஆமிர் 2 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
எதிரணிக்கு குறைந்த இலக்கு என்று கவலைப்படாத பும்ரா
"சிறு வயதில் இருந்தே பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ஜஸ்பிரித் பும்ரா கூறுகிறார். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும் போது, அவர்களுக்கு உள்ளிருந்து மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும்.
பாகிஸ்தானுக்கு 120 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தது, ஆனால் அது பும்ராவின் நோக்கத்தில் எந்த பதற்றத்தையும் விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தோன்றியது.
பும்ராவின் பந்துவீச்சில், ஃபைன் லெக்கில் ரிஸ்வானின் கேட்சை ஷிவம் துபே தவறவிட்ட போது பாகிஸ்தான் 17 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வான் 7 ரன்களில் இருந்தார். ஐந்தாவது ஓவரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை (13) அவுட் செய்து பும்ரா முதல் விக்கெட்டை கைப்பற்றினார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் ஆக இருந்தது. 13வது ஓவரில் 73 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
திருப்புமுனையாக அமைந்த ரிஸ்வானின் விக்கெட்
முகமது ரிஸ்வான் உறுதியாக நின்று விளையாடி கொண்டிருந்தார். அவர் 43 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார், போட்டி பாகிஸ்தானுக்குச் சாதகமாகப் போவதாகத் தோன்றியது. அதன் பின்னர் 15வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச வந்தார்.
பும்ராவின் முதல் பந்து நல்ல லென்த்தில் வீசப்பட்டது. பந்து பவுன்ஸாகி மேலெழுந்ததும், ரிஸ்வானை தடுமாற வைத்து விக்கெட்டை வீழ்த்தியது. ரிஸ்வான் அவுட் ஆனவுடன் ஆட்டம் தலைகீழாக மாறியது.
இறுதியில் பாகிஸ்தானுக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜின் ஓவரில் இமாத் மற்றும் இஃப்திகார் 9 ரன்கள் எடுத்தனர், இலக்கு 12 பந்துகளில் 21 ரன்கள், ஆனால் பும்ரா 19வது ஓவரின் கடைசி பந்தில் இஃப்திகாரை (5) அவுட்டாக்கியது மட்டுமல்லாமல், மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் பாகிஸ்தான் 18 ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் சமநிலை முக்கியம்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆச்சரியமான வெற்றிக்குப் பிறகு, வாட்ஸ்அப் குழுவில் எனது சீனியர் ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது - “நல்லது, நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையிலான நல்ல போட்டியைப் பார்க்க முடிந்தது. ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் போட்டியின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
போட்டிக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா இதேபோன்ற கருத்தை ட்வீட் செய்தார், “பந்துவீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் போது மட்டுமே எனக்கு போட்டி மீது ஆர்வம் இருக்கும். பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தால், எனக்கு அந்த போட்டியை பார்க்க விருப்பமில்லாமல் நான் டிவியை அணைக்க விரும்புகிறேன். “ என்று பதிவிட்டிருந்தார்.
`வெல் டன்’ என்று சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
பும்ராவின் சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் வீரர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில், “இந்திய ஊடகங்கள் விராட் கோலி போன்றவர்கள் மீது ஆர்வம் காட்டுகின்றன. தொடர்ந்து பேட்ஸ்மேன்களை பாராட்டுகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா எந்த ஆரவாரமும் இல்லாமல் தனித்து வெற்றி பெற்றார். பும்ரா தற்போது இந்திய அணியின் சிறந்த வீரர்.
முகமது கைஃப் எக்ஸ் தளத்தில் , "ஜஸ்பிரித் பும்ரா ஆகச் சிறந்த ஆட்டத்தின் வெற்றியாளர்- எந்த வடிவத்திலும் எந்த சூழ்நிலையிலும் உலகின் எந்த மூலையில் ஆட்டம் நடந்தாலும் அவர் வெற்றியாளர் தான்”
வீரேந்திர சேவாக் கூறுகையில், "தோல்வியை வெற்றியாக மாற்றக்கூடியவர் பும்ரா. என்ன ஒரு அபாரமான ஆட்டம். இந்த நியூயார்க் வெற்றி சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார்.
விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி
ஒரு வருடத்திற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தபோது தனது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பிய விமர்சகர்களை அமைதிப்படுத்தினார். முதுகு அறுவை சிகிச்சை காரணமாக, அவர் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட பல முக்கியமான போட்டிகளில் விளையாடவில்லை.
அவர் கடந்த ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை 2024 இல் சிறப்பாக விளையாடினார்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பும்ரா, "ஒரு வருடத்திற்கு முன்பு இதே நபர்கள் தான் நான் மீண்டும் விளையாட முடியாது, என் கேரியர் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள், இப்போது அவர்களின் கேள்வி மாறிவிட்டது" என்று கூறினார்.
சிறப்பாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கேப்டன் ரோஹித் ஷர்மா பும்ராவை பாராட்டினார், "பும்ரா அற்புதமாக விளையாடி வருகிறார், அவரின் திறனை நாங்கள் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், அதைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்த உலகக்கோப்பை முடியும் வரை அவர் இந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் பந்து வீச்சில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
குறுகிய காலத்தில் பெரிய சாதனைகள்
ஜஸ்பிரித் பும்ரா குறுகிய காலத்தில் பெரிய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் இவர்.
கிரிக்கெட்டின் அனைத்து மூன்று ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டிய முதல் பந்து வீச்சாளர் பும்ரா.
பும்ரா 2013 இல் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுடன் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார். அணியை ஐந்து முறை சாம்பியனாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஐசிசி ஒரு நாள் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பும்ரா தனது முதல் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியையும், தனது முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தையும், முதல் டி20யில் டேவிட் வார்னரையும், முதல் டெஸ்டில் ஏபி டி வில்லியர்ஸையும் வீழ்த்தியுள்ளார்.
`ஆபத்தான பந்துவீச்சாளர்’
பட மூலாதாரம்,GETTY IMAGES
30 வயதான ஜஸ்பிரித் பும்ரா, அவரது வழக்கத்திற்கு மாறான அதிரடி பந்துவீச்சு மற்றும் திறமையால், உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
பந்து அவரின் கையை விட்டு வெளியேறினால், அதன் போக்கை பேட்ஸ்மேன்கள் கணிப்பது கடினம். ஐபிஎல் போட்டியின் போது, லசித் மலிங்கா துல்லியமான யார்க்கர்களை வீசுவதில் திறமை வாய்ந்தவராக பார்க்கப்பட்டார். அவரின் டெத் ஓவர்களை விளையாடுவது எந்த பேட்ஸ்மேனுக்கும் எளிதானது அல்ல.
நிஜத்தில் பந்துவீச்சு அவ்வளவு வேகமாக இல்லாத போதும், பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்து வீசப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவது அவரது தனித்துவமான பாணி.
ஆல்-ரவுண்டர் பென் கட்டிங் ஒரு இணையதளத்தில் அளித்த பேட்டியில், "பந்தின் வேகத்தை மதிப்பிடுவது பேட்டிங்கின் முக்கிய பகுதியாகும். சிறந்த வீரர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவசரப்படாத அவர்களின் திறமை தான்” என்றார்.
https://www.bbc.com/tamil/articles/cw44g4ywynjo