புதிய பதிவுகள்2

இன்று மாவீரர் தினம்!

3 months 2 weeks ago
தலைவர் பிரபாகரனுடன், தமிழீழத்தின் தன்னாட்சிக் கனவும் விடைபெற்றது. அதன் பின்னான அரசியல் யாவற்றிலும், நயவஞ்சகமும் சுயநலமுமே மேலோங்கி நிற்கின்றன. எமது விடியலுக்காய் உயிர் நீத்த மாவீரர்களுக்கும், இன்னுயிரை ஈந்த அனைத்து பொதுமக்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வீரவணக்கங்களும், கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகுக.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
பாராளுமன்ற வளாகத்தில் மாவீரர் நாள் குகதாசன், சணக்கியன் இணைந்து நினைவுகூரல் Published By: Vishnu 27 Nov, 2025 | 08:54 PM தமிழர் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு வியாழக்கிழமை (27) மாலை பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன் மற்றும் சாணக்கியன் இணைந்து அஞ்சலி செலுத்தினர். இன்றைய தினம் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் மகாவலி மற்றும் நீர்பாசன அமைச்சின் முக்கிய விவாதங்கள் இடம்பெற்றிருந்ததால், தமிழரசுக் கட்சியின் பல்வேறு மக்களின் கோரிக்கைகள், காலநிலை மாற்றத்தால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டன. இதனாலேயே துயிலும் இல்லங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாததை இருவரும் வருத்தத்துடன் தெரிவித்தனர். இருப்பினும், போராட்டங்களின் வடிவம் மாறினாலும், தமிழர் விடுதலைக்கான இலக்கு மற்றும் உறுதி எப்போதும் மாறாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர். https://www.virakesari.lk/article/231708

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
கனமழையிலும் தம்பலகாமத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு Published By: Vishnu 27 Nov, 2025 | 08:16 PM திருகோணமலை, தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (27)கொட்டும் கனமழையிலும் இடம் பெற்றது. வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை இந்த நேரத்தில் அக வணக்கத்துடன் இயற்கையின் பேரிடரை கூட பாராமல் நினைவேந்தலை முன்னெடுத்தனர். வடகிழக்கின் மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தின நினைவஞ்சலி முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/231705 யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் Published By: Vishnu 27 Nov, 2025 | 08:28 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் மாலை6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231707 அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையையும் மீறி உணர்வுபூர்வமான மாவீரர் நாள் நினைவேந்தல் Published By: Vishnu 27 Nov, 2025 | 10:11 PM வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன. இதன்படி இன்று இம்மாவீரர் துயிலும் இல்லத்தில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் வகையில் எதுவித இடையூறும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள், அரசியல்வாதிகள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு தமிழ் மக்களின் உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது. https://www.virakesari.lk/article/231715

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல் 27 Nov, 2025 | 07:10 PM மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர். https://www.virakesari.lk/article/231698 வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு! Published By: Vishnu 27 Nov, 2025 | 07:40 PM தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு வியாழக்கிழமை (நவ.27) இடம்பெற்றிருந்தது. வவுனியா தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதான திருவுருவ படங்களுக்கு தீபமேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். https://www.virakesari.lk/article/231702

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months 2 weeks ago
வெள்ளக் காடாக மாறிய இலங்கை - பாதிப்புகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு 19 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம். படக்குறிப்பு, இரத்தினபுரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு அழிந்தது கொத்மலை பகுதியில் உள்ள இரத்தினபுரியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு கிட்டத்தட்ட முழுமையாக அழிந்தது. நல்வாய்ப்பாக இதில் யாரும் காயமடையவில்லை. அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். படக்குறிப்பு, மூடப்பட்ட சாலை வெறிச்சோடியிருக்கும் காட்சி கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். படக்குறிப்பு, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் உள்ள காடியன்லெனா நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. காடியன்லேன அருவிக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, நுவரெலியா நகர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் தீவு முழுவதும் 100 மி.மீ-ஐ தாண்டி கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குறிப்பு, பதுளையில் ஏற்பட்ட மண்சரிவால் இரண்டாகப் பிளந்த சாலை பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவுகள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக, பதுளை இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது படக்குறிப்பு, பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது ஒஹிய பகுதியில் பாலம் ஒன்று மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் இலங்கை விமானப் படை சீரற்ற வானிலை காரணமாக மாஹோ எல்ல பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொதுமக்களை இலங்கை விமானப் படை உதவியுடன் மீட்டுள்ளனர். பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் மீட்டுள்ளனர். இலங்கையில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாடு முழுவதும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79x14jn0xjo

பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?

3 months 2 weeks ago
அண்ணா, என்னுடைய களப்பெயரின் முன்னாலோ அல்லது பின்னாலோ ஒரு பாபாவைச் சேர்த்துப் பாருங்கள்............. ஒரு சகோதரத்துவம் தெரியவில்லையா........😜. சேலத்து பாபா (நித்தி), கோயம்புத்தூர் பாபா (ஜக்கி வாசுதேவ்), புட்டபர்த்தி பாபா............ இப்படி எத்தனை பாபாக்கள் உலகிற்கு தேவையாக இருக்கின்றார்கள். இவர்கள் பொய்யர்கள் மட்டும் இல்லை, குற்றவாளிகளும் கூட என்றாலும், இவர்கள் குருக்களாக இருக்கின்றார்கள். மனிதர்களுக்கு அவ்வளவு தேவைகளும், பிரச்சனைகளும் இருக்கின்றன............. ஆனால் அவற்றை அவர்களின் கடவுள்களிடம் நேரடியாகச் சொல்வதில் ஏதோ சில இடர்பாடுகள் போல......... இடையில் ஒரு குரு தேவைப்படுகின்றார்........ விக்கினேஸ்வரனை பிரேமானந்தாவின் பக்தர் என்று சொன்னார்கள். சும்மா சொல்கின்றார்கள் என்று அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. சமீபத்தில் அவர் வீட்டில் எடுத்த படமொன்றில் பிரேமானந்தாவின் படம் வரவேற்பறையில் இருந்தது......... அட கொக்கா மக்கா (இது என்னை நானே சொல்லிக் கொள்வது, உங்களையல்ல.....)............. இவர்கள் தான் இனத்தின் வழிகாட்டிகளா....................🫣.

கெஹலியவின் காலத்தில் தரமற்ற கண் சொட்டு மருந்தால் பார்வை இழந்த 17 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சு

3 months 2 weeks ago
27 Nov, 2025 | 01:07 PM (செ.சுபதர்ஷனி) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தால் பார்வையை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாட்டுக்கு ஆளான பாதிக்கப்பட்ட 17 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மேற்படி இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு விண்ணப்பித்த 69 பேர் பிரட்னிசோலோன் கண் சொட்டு மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என நிருபனமாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஊடகமொன்றில் வெளியாகியுள்ள செய்தித் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண் செட்டு மருந்துகளில் எவ்வித பிரச்சனையும் இல்லை என ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. முன்னாள் அமைச்சர் கெஹலிய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தை உபயோகித்து பார்வையை இழந்த மற்றும் பார்வை குறைபாட்டுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சுகாதார அமைச்சால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தரமற்ற மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு பெற சுகாதார அமைச்சுக்கு சுமார் 99 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அவர்களில் 17 பேருக்கு 14,700,000 ரூபா இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 69 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் உண்மைத் தன்மைத் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த குழுவின் அறிக்கைகமைய, மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/231616

ஆயிரங்களில் ஒன்று

3 months 2 weeks ago
மிக்க நன்றி அல்வாயன். இந்த வாரம் முழுவதும் ஊரின் பெயர் எங்கேயும் இருக்கும். உங்களின் கவிதை ஒன்றில் கூட இருந்தது. அவை பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தன. ஒரு மீன் தொட்டிக்குள் வாழும் மீன் போல நான் அங்கே இருந்த காலங்கள் அவை. மீன் தொட்டியின் சுவரில் முட்டி முட்டி, அதை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றித் திரிந்த ஒரு காலம். ஒவ்வொரு நாளும் நான் கண்டதும் ஒரே மனிதர்களையே. அத்துடன் இந்த வாரம் 'Satanic Force' என்ற ஆவணப் புத்தகத்தில் கிடைத்த பகுதியை வாசித்துப் பார்த்தேன்........................ என்ன கொடுமைகள்............ அதில் இல்லாதவை கூட நடந்து இருக்கின்றன............ அதில் ஒன்று இது..............

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 2 weeks ago
யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு! 27 Nov, 2025 | 05:56 PM (எம்.நியூட்டன்) யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதிகளலும்பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 275 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 02 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் போக்காட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய், சங்கானை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், வேலணை, சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் இதன் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பொன்னாலை - பருத்தித்துறையின் ஏ.பி.019 வீதியின் 50km தொடக்கம் 55km வரையான பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அப்பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/231691

தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!

3 months 2 weeks ago
நாடாளுமன்றத்தில் அர்சுணாவிற்கு முன்னர் வேறு யாரேனும் மாவீரர் நாள் அஞ்சலியோ இல்லை தலைவ‌ர் பி.நா. வாழ்த்தோ கூறியுள்ளனர்?

மோசமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமை - ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்

3 months 2 weeks ago
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்! 27 Nov, 2025 | 05:28 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலையாக மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்ககளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார். மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராயும் வகையில் வியாழக்கிழமை (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு வரவுசெலவுத்திட்ட விவாதங்களும் பாராளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால், நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது. பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.மேலும்,உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்தோடு, நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் புதிய தரவுகளின் அடிப்படையில் அனர்த்த சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான முன்கூட்டிய திட்டங்களைத் தயாரிக்குமாறும் கடும் மழை ஏற்பட்டால் நீர்ப்பாசன கட்டமைப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அது தொடர்பில் மிக நெருக்கமாக ஆய்வு செய்யுமாறும் ஜனாதிபதி மகாவலி மற்றும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகங்களுக்கு அறிவுறுத்தினார். தமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்ததோடு அவற்றின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன. https://www.virakesari.lk/article/231685

மனித மூளை அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள்

3 months 2 weeks ago
மூளை எந்த வயதில் மிக இளமையாக இருக்கும்? அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள் படக்குறிப்பு, மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அந்த காலகட்டத்தில்தான் மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லேகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் X,@JamesTGallagher 27 நவம்பர் 2025, 01:43 GMT மனித மூளை வாழ்க்கையில் ஐந்து தனித்துவமான கட்டங்களை கடக்கிறது. இதில் 9, 32, 66 மற்றும் 83 வயதில் முக்கியமான மாற்றங்கள் நடக்கின்றன எனக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். 90 வயது வரையிலான சுமார் 4,000 பேரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் மூளைச் செல்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அக்காலகட்டத்தில், மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மனநலக் கோளாறுகளும், டிமென்ஷியாவும் (நினைவாற்றல்) ஏற்படக்கூடிய ஆபத்து வாழ்நாள் முழுவதும் ஏன் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்த முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். படக்குறிப்பு, மூளை வளர்ச்சியில் ஐந்து வெவ்வேறு நிலைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் புதிய அறிவு மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப, மூளை தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே மாதிரி, சீரான முறையில் நடைபெறுவது இல்லை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. மனித மூளை 5 கட்டங்களை கடக்கிறது. அவை, குழந்தைப் பருவம் - பிறப்பு முதல் ஒன்பது வயது வரை இளமைப் பருவம் - ஒன்பது முதல் 32 வயது வரை முதிர்வயது - 32 முதல் 66 வயது வரை முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - 66 முதல் 83 வயது வரை முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - 83 வயது முதல் "மூளை வாழ்நாள் முழுவதும் தனது இணைப்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும். சில இணைப்புகளை வலுப்படுத்தும், சிலவற்றை பலவீனப்படுத்தும். இது ஒரே மாதிரியான, நிலையான முறை அல்ல. இடையிடையே மாற்றங்களும், புதிய கட்டங்களும் ஏற்படுகின்றன" என்று பிபிசியிடம் மருத்துவர் அலெக்சா மௌஸ்லி கூறினார். சிலருக்கு இந்த கட்டங்கள் வேகமாகவும், சிலருக்கு தாமதமாகவும் ஏற்படலாம். ஆனால் மாற்றம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட வயது தரவுகளில் எவ்வளவு தெளிவாகத் தனித்து நின்றது என்பது ஆச்சரியமாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட மூளை ஸ்கேன்களின் எண்ணிக்கை காரணமாக, இவை இப்போது தான் வெளிப்பட்டுள்ளன. படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முப்பதுகளின் ஆரம்பம் வரை மூளை இளமைப் பருவத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மூளையின் ஐந்து கட்டங்கள் குழந்தைப் பருவம் – இந்த முதல் காலத்தில், மூளை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும். அதே சமயம், வாழ்க்கையின் தொடக்கத்தில் உருவான மூளைச் செல்களுக்கு இடையேயான அதிகப்படியான இணைப்புகள் (சினாப்சஸ்) மெலிந்துகொண்டிருக்கும். இந்தக் கட்டத்தில் மூளையின் செயல்திறன் குறைவாக இருக்கும். அது, A-விலிருந்து B-க்கு நேராகச் செல்லாமல், பூங்காவில் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஒரு குழந்தை போல, தன்னிச்சையாக விருப்பமான இடங்களுக்கு செல்வது போல செயல்படுகிறது. படக்குறிப்பு, குழந்தை பருவத்தில் மூளை அதன் விரைவான மாற்றங்களுக்கு உட்படுகிறது இளமைப் பருவம் – ஒன்பது வயதிலிருந்து மூளையின் இணைப்புகள் திடீரென மாறி, மிக வலிமையான செயல்திறன் கொண்ட ஒரு கட்டத்தை அடைகின்றன. "இது ஒரு பெரிய மாற்றம்," என்று மூளை கட்டங்களுக்கு இடையிலான ஆழமான மாற்றத்தை மருத்துவர் மௌஸ்லி விவரித்து கூறுகிறார். இந்தக் காலத்தில் மனநலக் கோளாறுகள் தொடங்கும் ஆபத்து அதிகமாக இருக்கும். பருவமடைதல் தொடங்கும் நேரத்தில் இளமைப் பருவம் ஆரம்பிப்பது அசாதாரணமான விஷயமல்ல. ஆனால், இது நாம் நினைத்ததை விட மிகவும் நீண்டகாலமெடுத்து முடிகிறது என்பதைக் காட்டும் புதிய ஆதாரமாக இந்த ஆய்வு அமைகிறது. முன்பு, இளமைப் பருவம் பதின் பருவ வயதுக்குள்ளேயே முடிவடைகிறது என்று கருதப்பட்டது. பின்னர், நரம்பியல் ஆய்வுகள் அது 20வயதுக்குப் பிறகும் தொடரும் என்று குறிப்பிட்டன. இப்போது, வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வு முடிவுகள் இளமைக்காலம் 30 வயதின் தொடக்கம் வரை நீடிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மூளை நியூரான்களின் வலையமைப்பு மிகவும் திறமையானவையாக மாறும் ஒரே காலம் இதுதான். முப்பது வயதின் தொடக்கத்தில் மூளையின் செயல்பாடு உச்சத்தை அடைகிறது என்பதை பல அளவீடுகள் காட்டுகின்றன என்று மருத்துவர் மௌஸ்லி கூறினார். ஆனால், ஒன்பது வயது முதல் 32 வயது வரை மூளை அதே கட்டத்தில் இருப்பது "மிகவும் ஆர்வமூட்டக்கூடியது" என்றும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு, மனநலக் கோளாறுகள் மற்றும் டிமென்ஷியாவின் ஆபத்து ஏன் வாழ்நாள் முழுவதும் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள அதன் முடிவுகள் நமக்கு உதவும் என்று ஆய்வுக் குழு கூறுகிறது முதிர் பருவம் – அடுத்து மூளை அதன் மிக நீண்ட கால கட்டத்தில் நுழைகிறது. இது முப்பது ஆண்டுகள் நீடிக்கும் நிலைத்தன்மை கொண்ட காலமாகும். முன்பு இருந்த வேகமான மாற்றங்களுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் ஏற்படும் மாற்றம் மெதுவாக இருக்கும். ஆனால் இங்கே, மூளையின் செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தலைகீழாக மாறத் தொடங்குகின்றன. "இது நம்மில் பலர் நேரில் கண்ட அல்லது அனுபவித்த நுண்ணறிவு மற்றும் ஆளுமையின் சமநிலை நிலையுடன் (plateau) ஒத்துப்போகிறது," என்று மருத்துவர் மௌஸ்லி விளக்குகிறார். படக்குறிப்பு, முதிர்வயது என்பது மூளையின் வளர்ச்சியின் மிக நீண்ட காலம் என்றும், அது மிகக் குறைந்த மாற்றத்திற்கு உள்ளாகும் என்றும் ஆய்வுக் குழு கூறுகிறது முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - இது 66 வயதில் தொடங்குகிறது, ஆனால் இது திடீர் மற்றும் உடனடி வீழ்ச்சி அல்ல. மாறாக, இந்த நேரத்தில் மூளையில் உள்ள இணைப்புகளின் வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. முழு மூளையாக ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, மூளை படிப்படியாக ஒன்றிணைந்து செயல்படும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது, இசைக்குழு உறுப்பினர்கள் தனி நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போல இது செயல்படுகிறது. மூளையின் நலனை பாதிக்கும் டிமென்ஷியா மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இந்த வயதில் தான் வெளிப்படத் தொடங்குகின்றன. முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - பின்னர், 83 வயதில், நாம் இறுதி கட்டத்திற்குள் நுழைகிறோம். ஸ்கேன் செய்வதற்காக ஆரோக்கியமான மூளைகளை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்ததால், மற்ற குழுக்களை விட குறைவான தரவுகளே இதில் கிடைத்துள்ளன. இந்த சமயத்தில், மூளையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு முந்தைய கட்டத்தைப் போலவே தோன்றுகின்றன, ஆனால் இன்னும் அதிகமாக வெளிப்படுகின்றன. பருவமடைதல், பிற்காலத்தில் ஏற்படும் உடல்நல சிக்கல்கள் மற்றும் 30 வயதுகளின் தொடக்கத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்வது போன்ற "பல முக்கியமான மைல்கல்களுடன் வெவ்வேறு 'வயதுகள்' எவ்வளவு நன்றாக பொருந்துகின்றன" என்பது தன்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதாக மருத்துவர் மௌஸ்லி தெரிவித்தார். படக்குறிப்பு, விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, முதுமையின் பிந்தைய கட்டம் 83 வயதில் தொடங்குகிறது. 'மிக அருமையான ஆய்வு ' இந்த ஆய்வு ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பார்க்கவில்லை, அதனால் மாதவிடாய் நிறுத்தம் (menopause) எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற கேள்விகள் எழ வாய்ப்புள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் தகவலியல் பேராசிரியரான டங்கன் ஆஸ்டில் இதுகுறித்துப் பேசுகையில், " பல்வேறு நரம்பியல் வளர்ச்சி நிலைகள், மனநலம் மற்றும் நரம்பியல் நிலைகள் மூளை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதோடு இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், மூளை இணைப்புகளில் உள்ள வேறுபாடுகள் கவனம், மொழி, நினைவு மற்றும் பல்வேறு நடத்தைகளில் ஏற்படும் சிரமங்களை முன்னறிவிக்கின்றன"என்றார். எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் டிஸ்கவரி பிரெயின் சயின்ஸ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் தாரா ஸ்பைர்ஸ்-ஜோன்ஸ் இதுகுறித்துப் பேசுகையில், " வாழ்நாளில் நமது மூளை எவ்வளவு மாறுகிறது என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் அருமையான ஆய்வு இது"என்கிறார். மூளை வயதாவதைப் பற்றிய நமது புரிதலுடன் இந்த முடிவுகள் "நன்றாகப் பொருந்துகின்றன" என்று கூறிய அவர், ஆனால் "அனைவரும் ஒரே வயதில் இந்த மாற்றங்களை சரியாக எதிர்கொள்ள மாட்டார்கள்" என்றும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgd12m1wnno

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months 2 weeks ago
27 Nov, 2025 | 05:14 PM இலங்கைக்குக் அருகில் வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த தாழ் காற்றழுத்தம், இன்று (27) சில நேரங்களுக்கு முன் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த புதிய சூறாவளிக்கு "டித்வா"(Ditwah) என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் யேமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டது. யேமனில் உள்ள சொகோத்ரா தீவின் பிரசித்தி பெற்ற டிட்வா லகூனை குறிக்கும் இந்தப் பெயர், அப்பகுதியின் தனித்துவமான கடல்சார் மற்றும் கரையோர சுற்றுச்சூழலை வெளிப்படுத்துகிறது. உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. ESCAP ‘புயல்கள் தொடர்பான குழு’ முன்பே அங்கீகரித்துள்ள நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சூறாவளிகளுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் யேமன் பரிந்துரைத்த பெயராக ‘டித்வா’, அந்த நாட்டு கரையோர மரபையும் கடல் வளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதேவேளை, இலங்கையின் கடல் பகுதியில் குறித்த சூறாவளி நீடிப்பதாலும் மற்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலத்தின் ஒரு பாதி இலங்கையின் நிலப்பகுதியில் நீடிப்பதாலும் இதன் நகர்வு தற்போது வரை குழப்பமான நிலையில் உள்ளதாகவும் எங்கு கரையை கடக்கும் என்பது தற்போது பெரும் சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்திய வானிலை மையம் இது குறித்து இப்போது வரை கரைய கடக்கும் இடம் பற்றி தெரிவிக்கவில்லை ஆனால் நிகழ்வானது சென்னை வரை பயணிக்கும் போல் வரைபடத்தில் காண்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/231682

அமைதியாக ஆனால் 'அதிரடியாக' நீக்கப்பட்ட சரித் அசலன்க

3 months 2 weeks ago
சரித் அசலன்கவை தலைவர் பதவியில் இருந்து நீக்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறார் உப்புல் தரங்க 27 Nov, 2025 | 12:26 PM (நெவில் அன்தனி) இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அணிகளின் தலைவராக இருக்கும் சரித் அசலன்கவை ரி20 அணித் தலைவர் பதவியிலிருந்து நீக்க இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் பாகிஸ்தான் தொடரின் பின்னர் அது குறித்து அலசி ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவுக்குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார். இதேவேளை, சரித் அசலன்கவுக்கு நம்பிக்கையை ஊட்டி அவரை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட இணையவழி ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர்கள் இருவரும் இந்த விடயங்களைத் தெரிவித்தனர். 'எமது அணித் தலைவராக சரித் அசலன்க தான் இன்னமும் இருக்கிறார். அது குறித்து எமது திட்டத்தில் மாற்றம் இல்லை. 2026 உலகக் கிண்ணம் வரை சரித்தை தலைவராக வைத்திருக்கும் நோக்கத்துடனேயே அவரை நாங்கள் தலைவராக நியமித்தோம். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்' என ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஓன்றுக்கு பதிலளிக்கையில் உப்புல் தரங்க பதிலளித்தார். அணித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா என எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், 'பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவில் அணிக்கு அவசியமான தீர்மானத்தை எடுப்போம். எமக்கு உள்ள தேர்வு எது என்பது குறித்து கூர்ந்து நோக்க வேண்டும். உலகக் கிண்ணம் நெருங்கி வரும்போது பெரிய அளவில் மாற்றங்களை செய்ய முடியாது. இது குறித்து தேர்வாளர்களுடனும் பயிற்றநருடனும் கலந்துரையாடி எமக்கு எது அவசியமோ, அணிக்கு எது தேவையோ அதற்கான தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டி வரும். நாங்கள் இன்னும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை. ஆனால், ரி20 போட்டிகளில் அவரிடம் (சரித் அசலன்கவிடம்) ஓட்டங்கள் எடுப்பதில் நிலைத்தன்மை இருக்கவில்லை. உண்மையிலேயே வைரஸ் காய்ச்சல் காரணமாகவே அவர் இலங்கைக்கு வருகை தர நேரிட்டது. அவர் ஒரு சிறந்த வீரர். அனுபவசாலியான அவர் உலகக் கிண்ணத்தில் முக்கிய வீரராக இருப்பார். அவரை நாங்கள் மறக்கவில்லை. அவர் மத்திய வரிசையில் தனித்து போராடி வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார். அவர் எங்களது திட்டத்தில் இருக்கிறார்' என்றார். இதேவேளை, சரித் அசலன்கவுக்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும் என சனத் ஜயசூரிய தெரிவித்தார். 'சரித்திடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவரிடம் இருந்து அதிகபட்ச பங்களிப்பை பெறவேண்டும். ஒரு வீரர் பிரகாசிக்கத் தவறினால் பயிற்றுநர்கள், உயர் ஆற்றல் நிலைய அதிகாரிகள் அனைவரும் அவருடன் இணைந்து செயற்பட்டு அவரை மீண்டும் பிரகாசிக்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு வீரரும் சரிவை எதிர்கொள்வது சகஜம். அத்தகைய வீரரை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வர அவருக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். அவர் நம்பிக்கை அடைந்ததும் அவரை அணியில் இணைத்துக்கொள்ளலாம். சரித் அசலன்க ஒரு சகலதுறை வீரர். அவரை பந்துவீச்சிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு பயிற்றுநர் என்ற வகையில் அவரை சரிவிலிருந்து மீட்டெடுப்பது எமது கடமை என நான் கருதுகிறேன்' என்றார். https://www.virakesari.lk/article/231609
Checked
Tue, 03/17/2026 - 22:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed