வண்ணத் திரை

பத்மபூஷண் விருது பெற்றார் அஜித் - ரசிகர்களின் விலகாத அன்புக்கு சொந்தக்காரர்

2 months ago

அஜித் குமார், பத்ம விருதுகள்,   பத்மபூஷண்

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு,குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருதைப் பெறுகிறார் அஜித்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு

  • பதவி, பிபிசி தமிழ்

  • 19 ஏப்ரல் 2025

ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டியக் கலைருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.

இது தவிர கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் தாமு ஆகியோரும் பத்மஸ்ரீ விருதைப் பெற்றனர்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மாறாத அன்புக்கு உரியவராக அஜித் இருப்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

அஜித் குமார், தமிழ் நடிகர், கோலிவுட், சினிமா

பட மூலாதாரம்,AJITHKUMAR/X

சூப்பர் ஸ்டார்களில் தனித்து நிற்பவர்

தமிழ் சினிமா எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை கண்டிருக்கிறது. ஆனால், அவர்களிடம் இருந்து தனித்து இருப்பவர் நடிகர் அஜித். அப்படி அஜித் தனித்திருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அஜித் அளவுக்கு தோல்வி படங்களை கொடுத்தவர் கிடையாது. ரசிகர்கள் சந்திப்பை அஜித் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரை திரையில் பார்க்கும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தல என அழைக்க வேண்டாம் என அஜித் அறிவித்தபோதெல்லாம் அவரது ரசிகர்கள் விலகி செல்லவில்லை.

அப்படி என்ன செய்துவிட்டார் அஜித்?

அஜித் திரைத்துறைக்குள் வந்ததே ஒரு விபத்துதான். ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு வந்த அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட, மறுபக்கம் திரைத்துறைக்கான கதவும் திறந்தது.

கதாநாயகனாக தெலுங்கு படமான பிரேம புஸ்தகத்தில் அஜித் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த அமராவதிதான் முதலில் ரிலீஸ் ஆனது.

அமராவதி ரிலீஸுக்கு பின் விபத்து ஒன்றால் ஒன்றரை ஆண்டுகள் அவர் ஓய்வெடுக்க நேர்ந்தது. பவித்ரா படம் அவருக்கான ரீ-என்ட்ரியாக அமைந்தது. ஆனாலும், அஜித்துக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது வசந்த் இயக்கிய ஆசை திரைப்படம்தான். பின்னர் வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை என வரிசையாக தோல்வி படங்கள்.

1996 ஜூலையில் அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமான காதல் கோட்டை வெளியானது. அகத்தியனின் புதுமையான திரைப் பாணி ரசிகர்களை கவர, படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு தேசிய விருதுகளையும் குவித்தது.

அடுத்து மீண்டும் வரிசையாக தோல்விப் படங்கள். அமிதாப் பச்சன் தயாரிப்பில் அஜித், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த உல்லாசம் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும் அந்த படமும் தோல்வியை தழுவியது.

ஒரு மெகா ஹிட் கொடுப்பது, அடுத்து வரிசையாக தோல்விப்படங்களை கொடுப்பது என அஜித்தின் தொடக்க கால திரைப்பயணம் சிறிய ஏற்றம், பெரிய இறக்கம் நிறைந்ததாக இருந்தது.

1999-ல் வெளியான வாலி திரைப்படம்தான் திரைத்துறையில் அவரை தவிர்க்க முடியாததாக மாற்றியது. அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் பெரிய பாராட்டைப் பெற்றதோடு அஜித்துக்கான முதல் ஃபிலீம்ஃபேர் விருதையும் பெற்றுக்கொடுத்தது.

தொடக்கத்தில் அஜித்துக்கு ஆண் ரசிகர்களுக்கு நிகராக பெண் ரசிகர்கள் இருந்தனர். ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், முகவரி, அவள் வருவாளா போன்ற படங்கள் அவரை ஒரு சாக்லேட் பாய் ஹீரோவாக பெண்களிடம் கொண்டுபோய் சேர்த்தன.

2001-ல் வெளியான தீனா அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அஜித்தே வேண்டாம் என்று துறந்தாலும் அவரது ரசிகர்களால் விரும்பப்படும் தல என்ற பட்டம் அஜித்துக்கு கிடைத்தது இந்த படத்தில்தான்.

அதே ஆண்டில் அஜித்குமார் பல்வேறு கெட்டப்களில் நடித்த சிட்டிசன் திரைப்படம் வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், பெரிய வெற்றியைத் தரவில்லை என அதன் தயாரிப்பாளர் நிக் ஆட்ஸ் சக்ரவர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அசோகா, ரெட், ராஜா என அஜித் நடித்த அடுத்தடுத்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சொதப்ப அவரது கவனம் பதின் பருவ கனவு மீது திரும்பியது.

அதுதான் ரேஸ்.

அஜித் குமார், தமிழ் நடிகர், கோலிவுட், சினிமா

படக்குறிப்பு,2000களின் துவக்கத்தில் அஜித் நடித்த அடுத்தடுத்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சொதப்ப அவரது கவனம் பதின் பருவ கனவு மீது திரும்பியது

32 வயதில் கார் ரேஸ்

தன்னுடைய பதின் பருவ கனவு குறித்து அஜித் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது , ''ஒரு கட்டத்தில் எனது திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனக்குப் பிடித்த ஒன்றைச் செய்ய வேண்டுமெனத் தோன்றியது. இம்முறை கார் ரேஸிங்கில் கலந்து கொண்டேன். மிகவும் தாமதமாக 32 வயதில் கார் ரேஸிங் துறைக்குள் நுழைந்தாலும், என்னால் முடிந்ததைச் செய்தேன்'' என்றார்.

2002-ஆம் ஆண்டு, ஃபார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட நடிகர் அஜித், அதில் நான்காம் இடம் பிடித்தார்.

பிறகு 2003-ஆம் ஆண்டு நடந்த ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா சாம்பியன்ஷிப்பில் (Formula BMW Asia) கலந்துகொண்ட அவர், அதில் 12-ஆம் இடத்தைப் பிடித்தார். பிறகு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் ஃபார்முலா 3 நேஷனல் கிளாஸ் (British Formula 3 - National Class) பந்தயத்தில் கலந்துகொண்டு 7-வது இடம் பிடித்தார்.

இதற்கு பிறகு ஆறு ஆண்டுகளுக்கு மேல் நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் இருந்து விலகியே இருந்தார்.

அதற்கு நடுவே 2007இல் அளித்த பேட்டியில், "நான் கார் ரேஸிங்கில் இருந்தபோது அதை யாருமே கேட்கவில்லை அல்லது என்னை ஊக்குவிக்கவில்லை. அதை விட்டபிறகு ஏன் விட்டீர்கள் எனக் கேட்கிறார்கள். எனது ரசிகர்கள் என்னிடமிருந்து நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகவே தொடர்ந்து ரேஸிங்கில் ஈடுபடுவதை விட்டேன்" என்று கூறியிருப்பார்.

பிறகு 2010-ஆம் ஆண்டு, எஃப்ஐஏ ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப் (FIA Formula Two Championship) சீசனில் பங்கேற்றார் அஜித். ஏப்ரல் 18 முதல் செப்டம்பர் 19 வரை ஐரோப்பாவில் இந்தத் சாம்பியன்ஷிப் சீசன் நடைபெற்றது.

அஜித் குமார், தமிழ் நடிகர், கோலிவுட், சினிமா

பட மூலாதாரம்,SIVASAKTHI MOVIE MAKERS

படக்குறிப்பு,ஒரு மெகா ஹிட் கொடுப்பது, அடுத்து வரிசையாக தோல்விப்படங்களை கொடுப்பது என அஜித்தின் தொடக்க கால திரைப்பயணம் சிறிய ஏற்றம், பெரிய இறக்கம் நிறைந்ததாக இருந்தது

தொடர் தோல்வியும் திருப்புமுனை தந்த பில்லாவும்

2005 முதல் 2006 வரை 4 திரைப்படங்களில் அஜித் நடித்திருந்தார். இதில், வரலாறு தவிர ஜி, பரமசிவன், திருப்பதி ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன.

வரலாறு படத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் இருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. அந்த படம் தொடங்கும்போது அஜித் சற்று பருமனாக இருந்தார். சில ஆண்டுகளில் அஜித் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தை கொண்டு வந்தார். இதனால், அந்த படத்தில் இரு தோற்றமும் இடம் பெற்றிருக்கும்.

2007ல் அவர் நடித்து வெளியான ஆழ்வார் படுதோல்வி அடைந்தது, அடுத்து வெளியான கிரீடமும் அஜித்துக்கு தேவையான வெற்றியை பெறவில்லை. இனி அஜித் சினிமா கேரியர் முடிந்ததா என்று பேச்சு பரவியபோதுதான், அஜித்தின் திரைவாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமான பில்லா ரிலீஸ் ஆனது.

அதுவரை பார்க்காத ஸ்டைலான ஒரு கேங்ஸ்டராக அஜித் திரையில் தோன்றி இருப்பார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அடுத்த நான்கே ஆண்டுகளில் அதைவிட ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார் அஜித். அதுதான் அவரின் 50-வது படமான மங்காத்தா.

அஜித் முழுக்க முழுக்க வில்லனாகவே நடித்திருந்தாலும் 'விநாயக் மகாதேவை' ரசிகர்கள் கொண்டாடினர். இதற்கு முன்பு அவரது திரைப்படங்கள் வசூலித்த கலெக்சன் அனைத்தையும் இந்த படம் விஞ்சியது.

2012-ல் வெளியான பில்லா 2 பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வி அடைந்தாலும் பலரின் விருப்பமான படங்களில் இந்த படத்துக்கு எப்போதும் இடம் உள்ளது.

2013 முதல் 2025 வரை ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 11 படங்களில் அஜித் நடித்திருக்கிறார்.

இதில் விவேகம், வலிமை, விடாமுயற்சி ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டன.

அதேநேரம், விடாமுயற்சி மற்றும் நேர்கொண்ட பார்வையில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் பாராட்டைப் பெற்றன.

அஜித் குமார், தமிழ் நடிகர், கோலிவுட், சினிமா

பட மூலாதாரம்,AJITHKUMAR RACING/X

படக்குறிப்பு,மிகவும் தாமதமாக 32 வயதில் கார் ரேஸிங் துறைக்குள் நுழைந்தார் அஜித்குமார்

அஜித் தவறவிட்ட படங்கள்

அஜித் தோல்வி படங்களை கொடுத்திருந்த காலகட்டத்தில் அவர் வேண்டாம் என்று விலகிய மற்றும் பாதியில் கைவிடப்பட்ட பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தன.

நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் அஜித். படப்பிடிப்பும் நடந்த நிலையில், பாதியில் அவர் விலகினார்.

வாலி ஹிட்டை தொடர்ந்து நியூ படத்துக்காக அஜித்தை அணுகினார் எஸ்.ஜே. சூர்யா. அஜித், ஜோதிகா நடிப்பதாக போஸ்டர் வெளியானது. ஆனால், பின்னர் எஸ்.ஜே சூர்யாவே கதாநாயகனாக அறிமுகமானார்.

பாலாவின் நந்தா, நான் கடவுள் படங்களில் முதல் சாய்ஸ் அஜித்தான். ஆனால், இந்த படங்களும் பின்னர் முறையே சூர்யா, ஆர்யா நடிப்பில் வெளியாகின.

இதேபோல், சூர்யாவுக்கு பெரிய பிரேக் கொடுத்த கஜினியும் அஜித் நடிக்க வேண்டியது. மிரட்டல் என்ற பெயரில் படத்தின் போஸ்டர் வெளியானது. எனினும் இந்த படமும் முழுமை பெறவில்லை.

இதுபோக, சரண் இயக்கத்தில் இருமுகம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் காங்கேயன், இதிகாசம், மகா என பல படங்களில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது.

Play video, "அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது ஏன்?", கால அளவு 10,43

10:43

p0l50n69.jpg.webp

காணொளிக் குறிப்பு,அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது ஏன்?

அஜித்தும் சர்சையும்

தற்போது ஊடகங்களிடம் விலகி இருக்கும் அஜித் தனது தொடக்க காலத்தில் ஊடகங்களிடம் நெருக்கத்துடன் இருந்தவர். மனத்தில் பட்டத்தை துணிச்சலாக பேசக்கூடியவர். ஒரு பேட்டியில் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித் குறிப்பிட, அது சர்ச்சையானது.

இதேபோல் 2010-ல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு திரைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இதில் கலந்துகொண்ட அஜித், சினிமா கலைஞர்களை கட்டாயப்படுத்தி இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க வைப்பதாகவும், நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை என்றும் பேசியிருந்தார். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் பின்னர், கருணாநிதியை அஜித் நேரில் சந்தித்து பேச இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இதேபோல் அரசியல் சர்ச்சையும் அஜித்தை தொடர்ந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவானவர் என அவர் மீது சாயம் பூசப்பட்டது. இதேபோல் 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அஜித் ஆதரவளிப்பதாக வதந்தி பரவியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அஜித், ''என் தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் ஆசையில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு'' என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அஜித் குமார், தமிழ் நடிகர், கோலிவுட், சினிமா

படக்குறிப்பு,கருணாநிதிக்கு திரைக்கலைஞர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மீண்டும் கார் ரேஸ் மீது திரும்பிய ஆர்வம்

கார் ரேஸில் இருந்து விலகியிருந்த அஜித்குமார் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து 2024இல் மீண்டும் கார் ரேஸிங் களத்திற்குள் நுழைந்தார்.

சர்வதேச கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக 'அஜித்குமார் ரேஸிங்' என்ற அணியைத் தொடங்கினார். இந்த அணியும் பல்வேறு வெற்றிகளை பெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு அவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தை சந்தித்தார். பின்னர் ஸ்பெயினில் அவர் ரேஸில் பங்கேற்றபோது மற்றொரு விபத்தை சந்தித்தார். ரேஸ்களால் அஜித் விபத்துகளை சந்திப்பது புதியதன்று. பல்வேறு விபத்துக்கள், பல்வேறு அறுவை சிகிச்சைகளை அவர் எதிர்கொண்டிருந்தாலும், ரேஸ் மீதான அவரது ஈர்ப்பு இன்றும் தொடர்கிறது.

சினிமா, ரேஸ் இரண்டையும் தாண்டியும் அஜித்துக்கு வேறு சிலவற்றின் மீதும் ஆர்வமும் இருந்தது.

துப்பாக்கிச் சுடுதலில் அஜித்துக்கு அதிக ஆர்வம் உண்டு. 2022-ல் தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர் 4 தங்கப் பதக்கங்களையும் வென்றிருந்தார். இதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவுக்கு டிரோன் தொழில்நுட்பம் தொடர்பாக அஜித் ஆலோசகராக இருந்தார். பின்னால், இந்த குழுவும் பல்வேறு பரிசுகளை வென்றது. புகைப்படம் எடுப்பதில் அஜித்துக்கு ஆர்வம் உண்டு.

அஜித் குமார், தமிழ் நடிகர், கோலிவுட், சினிமா

பட மூலாதாரம்,AJITHKUMAR RACING/X

படக்குறிப்பு,கார் ரேஸில் இருந்து விலகியிருந்த அஜித்குமார் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து 2024இல் மீண்டும் கார் ரேஸிங் களத்திற்குள் நுழைந்தார்

அஜித்தும் ரசிகர்களும்

ரசிகர்கள் விஷயங்களில் அஜித் அதிகம் கவனமாக இருக்கக்கூடியவர். 'முதலில் குடும்பத்தை பாருங்கள், நேரம் இருந்தால் என் படத்தை பாருங்கள்' என்பதுதான் ரசிகர்களுக்கு அவர் சொல்வது.

2011-ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதை பிறந்த நாள் பரிசாக அஜித் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், "நான் என்றுமே என் ரசிகர்களை எனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதில்லை. என் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பிற்காக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்" எனக் கூறியிருந்தார்.

அவரது மெகா ஹிட் படமான மங்காத்தா அப்போதுதான் ரிலீஸ். திரைத்துறையின் உச்சத்தில் இருக்கும்போதே தனது ரசிகர் மன்றத்தை அவர் கலைத்தார். ஆனாலும், அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதேபோல், அல்டிமேட் ஸ்டார் பட்டம், தல என்ற அடைமொழியை துறப்பதாக அஜித் அறிவித்தபோதும் அவரது ரசிகர்கள் விலகி செல்லவில்லை.

'தோல்வி படம் கொடுத்தாலும் அடுத்த படத்திற்கு இவ்வளவு பெரிய ஓபனிங் இருக்கிறதே, அப்படி ரசிகர்களுக்கு நீங்கள் செய்தது என்ன?' என்று ஒருமுறை அஜித்திடமே இது குறித்து கேள்வி எழுப்பட்டது.

அதற்கு அஜித் கூறிய பதில், ''போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அதிக தோல்வி படம் கொடுத்த நடிகனாக நான் தான் இருப்பேன். ஆனாலும் ரசிகர்கள் அளவுகடந்த அன்பை காட்டுகிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாத அன்பை காட்டுகிறார்கள்'' என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr5dz4nlm73o

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

2 months 1 week ago

ஏஆர் ரஹ்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

'சிவ ஸ்துதி' - 'வீரா ராஜ வீர' சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் 'வீரா ராஜ வீர' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளதாக, தனது மனுவில் வசிஃபுதின் கூறியிருந்தார்.

தனது தந்தை மற்றும் மாமா ஆகியோர் 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தீர்வு மூலம் தனக்கு காப்புரிமை (Copy right) வழங்கப்பட்டதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

'வீரா ராஜ வீர' பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் (credit) கொடுக்கப்படவில்லை எனவும் வசிஃபுதின் தெரிவித்திருந்தார்.

ஆகவே, 'பொன்னியின் செல்வன் 2' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஏ .ஆர்.ரஹ்மான் சொன்னது என்ன?

ஏஆர் ரஹ்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், வழக்கு விசாரணையின்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு மறுத்துள்ளது.

'சிவ ஸ்துதி' என்பது துருபத் வகையைச் சேர்ந்த பாரம்பரிய இசை எனவும் 'வீரா ராஜா வீர' பாடல், இந்துஸ்தானி மரபுகளைத் தாண்டி மேற்கத்திய இசையின் அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.

'பொதுத் தளத்தில் உள்ள கிளாசிக்கல் படைப்புகள் மீது எந்த பிரத்யேக உரிமையையும் யாரும் கொண்டாட முடியாது' எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் தீர்ப்பளித்தார்.

117 பக்க தீர்ப்பு - நீதிபதி கூறியது என்ன?

117 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 'வீரா ராஜா வீர' பாடல், சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாக கொண்டும் ஈர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

'இந்துஸ்தானி இசை மரபுகளை அடிப்படையாகக் கொண்ட இசையமைப்புகள், அதன் அசல் (Original) தன்மையை வெளிப்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்' என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

'ராகம், தாளம் போன்ற அடிப்படை விஷயங்கள் பொதுத்தளத்தில் இருந்தாலும் பாரம்பரிய கட்டமைப்புகளைப் பயன்படுத்தி தனித்துவமான இசைப் படைப்புகளை உருவாக்கும் இசையமைப்பாளர்கள், காப்புரிமை சட்டம் 1957ன்கீழ் உரிமை உடையவர்கள்' என நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியுள்ளார்.

"அனைத்து பாரம்பரிய இசை அமைப்புகளும் ச,ரி,க,ம,ப,த,நி என எட்டு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ள நீதிபதி, "அனைத்து ஆங்கில படைப்புகளும் A to Z எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ளார்.

"இலக்கணத்துக்கு (grammar) எழுத்தாளர்கள் யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. ஆனால், தங்களின் படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். அதுபோலவே ராகமும் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை" என நீதிபதி குறிப்பிட்டார்.

"இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன"

டெல்லி உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம்

தவிர, 'வீரா ராஜா வீர' பாடலின் மையக் கரு என்பது வெறுமனே ஈர்க்கப்பட்டதல்ல எனக் கூறியுள்ள நீதிபதி, "அந்தப் பாடலைக் கேட்பவரின் பார்வையில் சிவ ஸ்துதியின் ஸ்வரங்கள் மற்றும் செவியில் தாக்கம் ஆகியவை உண்மையில் ஒரே மாதிரியாக உள்ளன" எனக் கூறியுள்ளார்.

அந்தவகையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மனுதாரரின் உரிமைகளை மீறுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்தப் பாடலுக்குள்ள கிரடிட் ஸ்லைடை (Credit slide) மாற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, 'மறைந்த உஸ்தாத் நசீர், ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியை அடிப்படையாக கொண்ட இசையமைப்பு என மாற்ற வேண்டும்' என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி ரூபாயை டெபாசிட் செலுத்துமாறும் இந்த தொகை வழக்கின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டது எனவும் மனுதாரருக்கு செலவாக 2 லட்ச ரூபாயை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

"தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்குத் தொடர்ந்த பிறகே இதுபோன்ற விஷயங்கள் வெளியில் வருகின்றன" எனக் கூறுகிறார், சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காப்புரிமை தொடர்பான விவகாரங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் கெடுபிடி காட்டுவதற்கு வாய்ப்பில்லை. அவர், பணத்தைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்கிறார்.

காப்புரிமை சர்ச்சைகள்

இளையராஜா

பட மூலாதாரம்,ILAIYARAAJA/FACEBOOK

கடந்த 10 ஆண்டுகளாகவே தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, இசையமைப்பாளர் இளையராஜா எடுத்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதை மேற்கோள் காட்டியுள்ளார்.

'2014 ஆம் ஆண்டு முதல் எனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும். அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியன்று நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தான் இசையமைத்த மூனறு பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக, படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சள் குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீட்டை இளையராஜா கேட்டுள்ளார்.

"இசை தொடர்பான உரிமைகளை அறிந்தவர்கள், நீதிமன்றங்களை நாடி தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் சரவணன்.

இவர் காப்புரிமை தொடர்பாக இளையராஜா தொடர்ந்துள்ள வழக்குகளை நடத்தி வருகிறார்.

காப்புரிமை கோருவது ஏன்?

வழக்கறிஞர் சரவணன்

தொடர்ந்து பேசிய சரவணன், "தான் இசையமைத்த பாடலுக்கு இளையராஜா எவ்வாறு உரிமை கோர முடியும் எனப் பலரும் கேட்டனர். தற்போது அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டனர்" என்கிறார்.

"ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் படம் வெளிவந்த பிறகு முழு படத்தையும் விற்கலாம்.

அப்போது பாடல்களுடன் சேர்த்து படத்தை வெளியிடலாம். ஆனால், பாடல்களை மட்டும் தனியாக பயன்படுத்தும்போது அதன் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. இது அவரின் இசைப் பணிக்கான உரிமை (Musical rights). இது அறிவுசார் சொத்துரிமையில் வரும்" என்கிறார் சரவணன்.

இசையமைப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை என்று ஒன்று உள்ளது என்பதை இளையராஜா நிரூபித்துள்ளதாகவும் காப்புரிமை சட்டத்தை மீறினால் இழப்பீடு கோர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

"உரிய முறையில் சொல்லவில்லை"

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், தேனிகர்ணன்

"பொருளாதார பின்னணி உள்ளவர்களால் காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி தீர்வை பெற முடியும். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை" எனக் கூறுகிறார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன்.

2021 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தில், 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடம் இடம்பெற்றிருந்தது.

'இது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடல்' என்ற சர்ச்சை கிளம்பியது. படத்தின் டைட்டில் கார்டில் சுந்தர்ராஜனின் பெயர் இடம்பெற்றிருந்தது. 'ஆனால், தங்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை' என சுந்தர்ராஜனின் வாரிசுகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

"பிறரின் பாடல்களை இசையமைப்பாளர்கள் கையாளும் போது, அதற்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும். அதைத் தங்களின் பாடல் போல பயன்படுத்துவது வேதனையைத் தருகிறது" என பிபிசி தமிழிடம் கூறினார், கர்ணன்.

'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் தொடர்பான சர்ச்சை, ஊடகங்களில் வெளியான பிறகே தங்களுக்குத் தெரியும் எனவும் கர்ணன் குறிப்பிட்டார்.

பாடல்களால் புகழ் கிடைத்தது, ஆனால்?

கர்ணன்

பட மூலாதாரம்,MARISELVARAJ/X

தொடர்ந்து பேசிய அவர், "பல திரைப்படங்களில் என் அப்பாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார்.

"பிரபல கேசட் நிறுவனம் ஒன்றுக்கு என் தந்தை பாடல்களை எழுதி பாடிக் கொடுத்திருந்தார். அதன் உரிமையாளரிடம் நாங்கள் கேட்டபோது, 'பாடியதற்கு பணம் கொடுத்துவிட்டேன். அது என்னுடைய பாட்டு' எனக் கூறினார்.

ஆனால், அவர்களுக்கு பாடிக் கொடுப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே (1990) மதுரை வானொலி நிலையம், தூத்துக்குடி வானொலி நிலையம் ஆகியவற்றில் இதே பாடல்களை எனது அப்பா பாடியுள்ளார். பிறகு எப்படி அவர்கள் உரிமை கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

திருவிழா காலங்களிலும் கச்சேரிகளிலும் பாடுவது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் தொழிலாக இருந்துள்ளது. "பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும். அப்போது தான் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்" என்கிறார் கர்ணன்.

தான் தற்போது தேநீர் கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகக் கூறிய கர்ணன், "பாடல்களால் என் அப்பாவுக்குப் புகழ் கிடைத்தது. ஆனால், குடும்பத்தை வறுமையிலேயே வைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டார்" என்கிறார்.

தனது தந்தையின் பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வழக்கை நடத்துவதற்கான பொருளாதார பின்புலம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y6r4d63x9o

மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!

2 months 2 weeks ago

மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!

17 Apr 2025, 5:18 PM

priyanka deshpande marraige hits social media

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

GoukWFzW4AAbmDe-edited-1024x576.jpeg

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார்.

GoukWGHWgAADx6R-edited-1024x576.jpeg

விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் பதிந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்று, அதில் மக்களின் ஆதரவுடன் இரண்டாவது வெற்றியாளர் ஆனார்.

WhatsApp-Image-2025-04-17-at-16.25.53_76

இதற்கிடையே பிரியங்காவின் அம்மா, தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் தான் நேற்று தனது காதலரான வசி என்பவரை திடீரென திருமணம் செய்துள்ளார். டிஜே மற்றும் ஈவெண்ட் மேனஜராக பணியாற்றி வருகிறார் வசி. இருவீட்டு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

GouCYp9acAAwA9J-edited-1024x576.jpeg

இந்த திருமண விழாவில் அமீர் – பாவனி ஜோடி, நிரூப், சுனிதா, அன்ஷிதா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சமீபத்தில் தன்னுடைய பக்கெட் லிஸ்ட் பற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், “பிக் பாஸ் போக வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது.. இனி நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. என்னை என்னுடைய கணவர் தாங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

தற்போது அவரது திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து குவிந்து வருகிறது.

https://minnambalam.com/priyanka-deshpande-marraige-hits-social-media/

குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!

2 months 3 weeks ago

’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம்.

ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். 17 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் அவர், தனது மகனின் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் சிறையிலிருந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வருகிறார். ஆனால், அவர் வெளியே வரும் சமயத்தில் ஸ்பெயின் நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது மகன் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார்.

ADVERTISEMENT

HinduTamil8thAprilHinduTamil8thApril

குடும்பத்தோடு மீண்டும் சேரும் கனவோடு வரும் ஏகேவிடம், இந்த பிரச்சினைகளை மீண்டும் சரிசெய்யுமாறு அவரது மனைவி சொல்கிறார். தன் மகனை சிக்க வைத்தது யார் என்று கண்டுபிடித்தாரா? அடுத்து என்ன நடந்தது என்பதுதான் ‘குட் பேட் அக்லி’ படத்தின் திரைக்கதை.

சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நாஸ்டால்ஜியா என்ற பெயரில் அவர்கள் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வசனங்கள் அல்லது பாடல்களாக வைப்பதுதான் ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால், இதுவரை அப்படி வந்த படங்களுக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. அந்த படங்களில் காட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்தப் படத்தில் ரெஃபரன்ஸ்களுக்கு நடுவே தான் படம் கொஞ்சம் வருகிறது. அந்த அளவுக்கு அஜித்தின் ஆரம்பகால படங்கள் தொடங்கி சமீபத்திய படங்கள் வரை ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸோ ரெஃபரன்ஸ். ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு வசனத்துக்கு அஜித்தின் முந்தைய படங்களின் ஒரு குறியீடாவது வசனங்களாகவோ அல்லது பாடல்களாகவோ வந்துவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில் அவை குதூகலத்தை தந்தாலும் போகப் போக அதுவே ஓவர்டோஸ் ஆகி போதும் என்று தோன்றவைத்து விடுகிறது.

ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் பார்ப்பவர்களை ‘கூஸ்பம்ப்ஸ்’ ஆக்கும் வகையில் ரெஃபரன்ஸ் வைத்தால் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், வெறுமனே முதல் மூன்று நாட்கள் வரும் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு காட்சிக்கு ரெஃபரன்ஸ்களை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக்.

சரி, எழுதிய திரைக்கதையை குறைந்தபட்சம் கோர்வையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால், காட்சிகள் இஷ்டத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஹீரோ நினைத்தால் ஜெயிலில் மகனுடன் வீடியோ கால் பேசுகிறார். நினைத்தபோது மூன்று மாதத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிறார். இந்தக் காட்சிக்கு நியாயம் செய்கிறேன் பேர்வழி என போலீஸ்காரரான சாயாஜி ஷிண்டேவுக்கும் அஜித்துக்கும் 17 வருட பழக்கம் என்று ரெடின் கிங்ஸ்லியை வைத்து ஒரு வசனம் வேறு. எந்தக் காட்சியிலும் மருந்துக்கும் ‘டீடெட்டெயிலிங்’ என்ற ஒன்று இல்லவே இல்லை.

இது ஒரு ஸ்பூஃப் படமா? அல்லது முந்தைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்களுக்கான கோர்வையா என்ற குழப்பம் கடைசி வரைக்குமே நீடிக்கிறது. படத்தில் நினைவில் இருக்கும் காட்சிகள் என்று சொன்னால் ‘இளமை இதோ இதோ’ பாடல் பின்னணியில் ஒலிக்க நடக்கும் பார் சண்டை. இடைவேளை காட்சி (அதிலும் ஒரு படத்தின் ரெஃபரன்ஸ்) என ஒரு சில காட்சிகளை மட்டுமே சொல்ல முடியும். என்னதான் படம் போரடிக்காமல் காட்சிகள் சென்றாலும், படம் முடிந்த பிறகு யோசித்தால் அஜித்தின் பழைய படங்களின் குறியீடுகள் மட்டுமே நினைவில் தேங்கியிருக்கின்றன.

படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் ததும்பும் அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது. நெகட்டிவ் தன்மை பொருந்திய ஹீரோ கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது போல பிரித்து மேய்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சிகரெட், குடி என்று வந்தாலும், அஜித் எந்த காட்சியிலும் மது, சிகரெட் பயன்படுத்துவது போல நடிக்காதது பாராட்டத்தக்கது.

அஜித்தை தவிர படத்தின் மற்ற எந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்படவில்லை. த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷ்ரோஃப் மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷின் பணி பாராட்டுக்குரியது. பாடல்களின் ‘காட் ப்ளஸ் யூ’ பாடல் மட்டுமே ஓகே ரகம். மற்றவை நினைவில் இல்லை. அபிநந்தன் ராமானுஜத்தின் ரெட்ரோ ஸ்டைல் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கு வலு சேர்த்துள்ளது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பில்லாததைப் போல இருப்பது உறுத்தல்.

என்னதான் படத்தின் நாஸ்டால்ஜியாவை தூண்டும் ரெஃபரன்ஸ், ஸ்லோமோஷன் ஷாட்ஸ் என இருந்தாலும் அடிப்படையாக ஒரு வலுவான கதை, திரைக்கதை அவசியம். ஆனால் அவை இப்படத்தில் முற்றிலுமாக மிஸ்ஸிங். இப்படத்தில் வரும் ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘வரலாறு’, ‘பில்லா’ போன்ற படங்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் குறியீடுகளாக வைப்பதற்கு அவற்றில் இருந்த நல்ல திரைக்கதையே காரணம். ஆனால் வெறுமே ‘ஃபேன் சர்வீஸ்’ என்ற பெயரில் எடுக்கப்படும் இது போன்ற படங்களை எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருக்க முடியும் என்பது இயக்குநர்களுக்கே வெளிச்சம்.

குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்! | Good Bad Ugly Movie Review - hindutamil.in

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்:

3 months 1 week ago

ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார்.

மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் பெரியவர் ரவிக்கும் (பிருத்வி) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அதே சிக்கலைச் சாக்காக வைத்து அவர்களை என்கவுன்ட்டரில் போடத் துடிக்கிறார் எஸ்.பி-யான அருணகிரி (எஸ்.ஜே. சூர்யா). அருணகிரியிடமிருந்து தப்பிக்க அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி, அருணகிரி, பெரியவர், கண்ணன் இவர்களுக்குள் இருக்கும் முன்பகை எத்தகையது, அருணகிரி எதற்காகப் பெரியவர் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார், ரவுடிகளே மிரளும் காளியின் பிளாஷ்பேக் என்ன, அவர் இந்தச் சிக்கலுக்கு எழுதும் முடிவுரை என்ன என்பதே இந்த 'வீர தீர சூரன் பாகம் 2'.


குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, வன்மம், சூழ்ச்சி என ராட்டினம் போலச் சுழலும் கதாபாத்திரத்தை, தன் நடிப்பு எனும் அச்சாணியைக் கொண்டு நிலை நிறுத்தி மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

மகனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் பிருத்வி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் சூரஜ் வெஞ்சரமூடு என இருவரும் வில்லனிசத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இவர்களின் குடும்பப் பெண்களாக வரும் கதாபாத்திரங்களும் கோபத்தைத் தூண்டும் அளவில் படு ரியலான நடிப்பைக் கொடுத்து பாஸ் ஆகிறார்கள். பாலாஜி எஸ்.யூவின் குணச்சித்திர நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

நிசப்தமான சூழலில் கேட்கும் கடிகார முள்ளின் ஒலியைப் போல, ‘திக் திக்’ திரில் உணர்வை தன் பின்னணி இசையில் கடத்தி, கதையோடு சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். அதிலும் அந்த மாஸ் பி.ஜி.எம்., படம் முடிந்த பின்னரும் மனதில் நிற்கும் அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடல்கள், திரைக்கதையின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் கடந்து போகின்றன. இரவு நேரத்தில் நடக்கும் கதைக்கு பக்காவான லைட்டிங், உணர்வுகளைத் துண்டிக்காத சிங்கிள் ஷாட் காட்சிகள் என நேர்த்தியான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அதிலும் திருவிழாக் காட்சிகளில் கலை இயக்குநர் சி.எஸ். பாலசந்தரின் உழைப்பைப் பிரமாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.வீர தீர சூரன் பாகம் 2

வீர தீர சூரன் பாகம் 2

திரைக்கதையின் 'பக் பக்' துடிப்பை முதல் பாதியில் அற்புதமாகக் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. ஆனால், இரண்டாம் பாதியின் பிளாஷ்பேக் பகுதியில் சற்றே கறாராகக் கத்திரி போட்டிருக்கலாம். ‘பீனிக்ஸ்’ பிரபுவின் துப்பாக்கிகள் தெறிக்கும் சண்டைக் காட்சியின் வடிவமைப்பு, படத்தின் முக்கிய ப்ளஸ்ஸாக அமைகிறது. அதிலும், துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி, கார் வெடித்துச் சிதறும் இடம் வரை தொடரும் காட்சி, சிறப்பான திரையாக்கத்துக்கு உதாரணம்; படக்குழுவின் உழைப்புக்குப் பாராட்டுகள்.


ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். மனித மனங்களுக்குள் மண்டிக் கிடக்கும் வன்மத்தைப் பட்டாசாக மாற்றி, அதற்கு நீண்ட திரியை வைத்துக் கொளுத்திவிட்டது போல, 'எப்போது வெடிக்கும், எப்போது வெடிக்கும்' என்று எழுதப்பட்ட திரைக்கதை, இருக்கை நுனியில் கட்டிப்போடுகிறது. ஒருவித பதற்றமான சூழலிலேயே வைத்திருக்கும் திரையாக்கம், எந்த இடத்திலும் நம்மைக் கதை மாந்தர்களைவிட்டு விலகாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது. அதேபோல, நாயகனின் பாசத்தைப் பாடல் காட்சிகளின் மாண்டேஜிலேயே சொன்ன விதமும் ஹைக்கூ டச்! போலீஸ் என்கவுன்ட்டர், கஸ்டடி மரணம் ஆகிய முக்கிய பிரச்னைகளை சற்றே தொட்டிருந்தாலும், அதை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.

வீர தீர சூரன் பாகம் 2

வீர தீர சூரன் பாகம் 2

முன்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும் விக்ரமும் ஒரே அறைக்குள் பேசிக்கொள்ளும் இடம், போலீஸ் ஸ்டேஷன் கொலை என இரண்டாம் பாதியின் மாஸ் காட்சிகள் மண்டையில் ஒட்டிக்கொண்டாலும், அதன் நீளம் முதல் பாதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. பழி வாங்கும் படலத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் டீல் பேசிக்கொள்ளும் போக்கு, ஆரம்பத்தில் திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்க உதவினாலும், இறுதியில் சற்றே அயர்ச்சியைத் தருகிறது. அதேபோல, இறுதிக் காட்சியில் அத்தனை கொடூரமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க, போலீஸ் காட்சிக்குள் வந்தும் பின்னர் காணாமல் போவது ஏன் என்பது புரியவில்லை.

இரண்டாம் பாதியின் திரைக்கதை சற்றே டல் அடித்தாலும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, சிறப்பான திரையாக்கம், முதல் பாதியின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றால் ‘வீர தீர சூரன் பாகம் 2’ நம் மனத்தினில் வெற்றி வாகை சூடுகிறான்.

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி? | Vikram and SJ Suryah starrer Veera Dheera Sooran Part 2 Review - Vikatan

பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)

3 months 1 week ago

485742453_9611784935547606_1744802964346

படம் தொடங்குனதுல இருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே பெரிய வெற்றி.

ஏற்கனவே இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் ஒன்லைன் தெரியும். ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர். அதுதான் கதை. இதில் என்ன நகைச்சுவை செய்துவிட முடியும் என்கிற அதிருப்தியில்தான் படம் பார்க்கவே சென்றேன். சும்மா சொல்லக்கூடாது திரிகொளுத்தி பட்டாசாக வெடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியுமே நல்ல நேர்த்தி, நடித்தவர்கள் எல்லோருடைய பங்களிப்புமே மிகநன்று, சரியான டைமிங் டயலாக்ஸ், சின்னச் சின்ன முகபாவனைகளில், பார்வையில், பல்வேறு செய்திகளை குறிப்பால் உணர்த்தி அது கதையோட்டத்தில் கலக்கும் போது அடல்ட் காமெடியாக நன்றாகவே வொர்க்கவுட் ஆகிவிடுகிறது.

ஒன்றுமில்லை, இந்த ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கக்கூடிய குடும்ப உறுப்பினரில் மருமகள்களும் உண்டு. ஒரு மருமகள் வீட்டிற்கு வந்து மாமனாரின் இறப்பிற்கு முதலில் வருந்தி, பிறகு அவரது விறைத்த ஆண்குறியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து..... இந்தப் பிரச்சனையை மூடிமறைக்கும் பொறுப்புக்குள் நாமும் இருக்கிறோம் என்று சாந்தமானதும்... அருகில் நிற்கும் கணவனை ஏற இறங்க ஒரே ஒரு பார்வை பார்ப்பார். "இவருக்கு புள்ளையா பொறந்துட்டு நீயும் தான் இருக்கியே தெண்டமா" என்பது போலான பார்வை. Chandini Tamilarasan பிரம்மாதப்படுத்தி இருப்பார்.

மருமகள் 1 : என் புருஷன் குச்சியை வச்சு குழந்தைகளை அடிக்க மட்டும்தான் லாயக்கு

மருமகள் 2 : இந்த பால் கூட கொஞ்சம் லேட்டா பொங்கும். ஆனா என் புருஷன்!

இப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல ஏகப்பட்ட காட்சிகள் படத்தினுள் உண்டு, மீண்டும் சொல்கிறேன் இது அடல்ட் காமெடி. குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. பெரியவர்கள் ரசித்துச் சிரிக்க ஏற்ற படம். நிச்சயம் முகம் சுழிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை அல்ல. சென்சிபிலாகவே இருக்கும்.

இளங்கோ ராம் திறமையான இயக்குனர், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக கட்டமைத்து இருக்கிறார்.

திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Karthik 

நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!

3 months 1 week ago

New-Project-328.jpg?resize=750%2C375&ssl

நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!

தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார்.

அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர்.

அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.

பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார்.

அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு அவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 5 இலட்சம் இந்திய ரூபா நிதி உதவி வழங்கியது.

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹுசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார்.

Gm29h6DbQAA-Zjc?format=jpg&name=large

1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பின்னர் ரஜினிகாந்தின் வேலைக்காரன், பிளட்ஸ்டோன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே பயிற்சியாளராக நடித்தார்.

விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகியவை அவரது இறுதி நடிப்பு முயற்சிகளில் சில.

படங்களில் நடிப்பதைத் தவிர, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் அவர் தோன்றினார்.

ஹுசைனி, போர் விளையாட்டு, சிற்பம், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார்.

https://athavannews.com/2025/1426343

ஒரு தலை ராகம்

3 months 2 weeks ago

ஒரு தலை ராகம்

..........................

ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்...

1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்...

கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்...

அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு...

கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ.

இந்தத் திரைப்படம் வெளி வந்த உடன் எத்தனை இளம்பெண்கள் அவர் மேல் காதற்வயப்பட்டார்கள் என நன்கறிவேன்...

சோகத்தை வெளிக் காண்பிக்கும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்... ஆனால் அந்த கால பெல்பாட்டமும், காதை மறைத்த தலை முடி அலங்காரமும், நெஞ்சில் பேன்ட்டை டக் இன் செய்யும் விதம்தான் கொஞ்சம் சிரிப்பு மூட்டியது...

ஒவ்வொரு நடிகரும், நடிகையும், சந்திரசேகராகட்டும், உஷாவாகட்டும், ரவீந்தராகட்டும், தியாகுவாகட்டும், தன் கதாபாத்திரத்தை செவ்வனே செதுக்கியிருந்தார்கள்...

80 களில் இருபாலார் படிக்கும் கல்லூரியை அப்படியே கண்முன் நிறுத்தினார்கள்...

எனக்கு நான் படித்த சிவகங்கை மன்னர் கல்லூரி, எங்கள் தோழிகள், கூட படித்த மாணவர்கள் என நினைவு சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது..

வசனங்கள்...நோ சான்ஸ்...அவ்வளவு அருமை...இப்போதைய பெரும்பான்மையான படங்களில் தேவையில்லாத நேரத்தில் வண்டி வண்டியாக நடிகர்கள் வசனம் பேசுகிறார்களே?

கதாநாயகன் கோவிலில் பக்கத்தில் நிற்கிறான்.. அவனுடன் பேச முடியாத நிலை..தங்கை அருகிலிருக்கிறாள்...எண்ணெய் கிண்ணத்தை தவற விடுகிறாள்...

" எண்ணயவே (என்னய) கொட்டிட்டேன்...திருப்பி அள்ள முடியல" என்கிறாள் அவன் உணரும் வகையில்...

நாயகிடம் நாயகன் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்க பதிலுரைக்காமல் மவுனமாக அங்கிருந்து அகல்கிறாள்... அவன், அவள் , தோழி என மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிருக்கையில் தோழியிடம் அவன் சொல்கிறான்" கேட்காத கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்க...கேட்ட கேள்விக்கே சிலர் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க" அப்போது சுழற்றி சுழற்றி ரூபாவின் விழிகள் நர்த்தனமாடும் பாருங்கள்...மிக அழகு அக்காட்சி, வசனம் அத்தனையும்...

இறுதி காட்சி...நாயகி நாயகனிடம் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த காதலைப் பேசித் தீர்க்க வேண்டுமென நெடும் போராட்டத்திற்கு பின் கல்லூரி முடிந்த மறுநாள் முடிவெடுத்து கிளம்புகிறாள்..

அவள் மிகவும் அக்கறையுடன் தன்னை அலங்கரித்து கொள்வதை கவலை கலந்த வெறுப்புடன் தாய் பார்க்கிறாள்..

நாயகியின் அம்மா

" காலைல எழுந்திரிச்ச, குளிச்ச, பேசாம போய்ட்ருக்க? எங்க போற?"

"பேசத்தான் போறேன்" நாயகி..

"என்னடி உளர்ற?" அம்மா

"உளறலம்மா இப்பத்தான் நிதானமா பேசறேன்" நாயகி..

இந்த இடத்தில் என்னையும் மீறி வசன அபாரத்திற்கு கரங்கொட்டி மகிழ்ந்தேன்...

வசன கர்த்தாக்கள் படத்தை நகர்த்தும் விதம்தான் படத்திற்கு அழகூட்டும் என்பேன் நான்...

பாட்டுக்கள் அத்தனையும் தேனினிமை....

என்ன பொருட்சுவை... என்ன காட்சிப் பொருத்தம்...

"ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்" வாசமில்லா மலரிது பாடலில்..

"கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி" கடவுள் வாழும் கோவிலிலே பாடலில்..

'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்..

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" குழந்தை பாடும் தாலாட்டு பாடலில்..

மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகள் இல்லை...

அபத்தமான வசனங்கள் இல்லை...

நகைச்சுவை என்ற பெயரில் முகஞ்சுளிக்க வைக்கும் தனித்தடம் இல்லை...

அழகு, யதார்த்தம், இயல்பு, இவையன்றி வேறேதும் இல்லை...

ஆனால் படம் முடிந்த வுடன் மனம் முழுதும் சோகம் கவ்வியது..

80 களில் பட்டையை கிளப்பிய படம்...200 நாட்கள் தாண்டி ஓடிய படம்...

Hats off ராஜேந்தர் சார்...

இதே போல் இன்னுமொரு அழகான படம் கொடுங்களேன்...

May be an image of 5 people and people smiling


Lakshmi RS 


Checked
Sat, 07/05/2025 - 12:34
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed