வண்ணத் திரை

'அடுத்த ஸ்பீல்பெர்க்' என்று ஹாலிவுட்டில் கொண்டாடப்பட்ட தமிழ் வம்சாவளி இயக்குநர்

2 months 4 weeks ago

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 27 செப்டெம்பர் 2025, 01:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 27 செப்டெம்பர் 2025, 02:01 GMT

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை.)

'அடுத்த ஸ்பீல்பெர்க்'

ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படத்தில் இப்படி ஒரு தலைப்புடன், இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இடம்பெற்றிருந்தார்.

எந்தவொரு இயக்குநருக்கும் அது மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் என்றே சொல்லலாம், காரணம் உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்களால் மதிக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க், இந்தியானா ஜோன்ஸ், ஷிண்ட்லர்'ஸ் லிஸ்ட், ஈ.டி என பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர்.

அது மட்டுமல்லாது, மனோஜ் நைட் ஷியாமளனின் முன்மாதிரியும் அவரே.

மனோஜ் நைட் ஷியாமளனின் திரைப்பயணம் குறித்த பதிவான 'The Man Who Heard Voices' புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் பாம்பெர்கர் இந்த சம்பவம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார்.

"அந்த அட்டைப்படம் வெளியான பிறகு, ஸ்பீல்பெர்க்கிடம் பேசிய மனோஜ், 'நியூஸ்வீக் இதழில் அந்தத் தலைப்பை எழுதியவர்கள் அறியாவிட்டாலும் கூட எனக்கு நன்றாகத் தெரியும், நான் அடுத்த ஸ்பீல்பெர்க் அல்ல' எனக் கூறினார்".

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படம்.

இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில், ஆகஸ்ட் 6, 1970ஆம் ஆண்டு பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். அவரது தந்தை, டாக்டர் நெல்லியாட்டு சி. ஷியாமளன், மாஹேவைச் சேர்ந்தவர், தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். மனோஜ் பிறந்த சில வாரங்களில், அவரது குடும்பம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திற்கு புலம்பெயர்ந்தது.

பென்சில்வேனியாவில் வளர்ந்த போது தங்களைப் போல ஷியாமளனும் ஒரு மருத்துவர் ஆவார் என்றே அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர்.

"அப்பா, நான் நியூயார்க்கில் உள்ள திரைப்படப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். அதுதான் சிறந்த திரைப்படப் பள்ளி. எனக்கு உதவித்தொகையும் கிடைக்கும்' என்று என் தந்தையிடம் கூறினேன். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு நான் என் அம்மாவிடம் சொன்னேன், அவருக்கு சிறுவயதில் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால், மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்." என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் ஷியாமளன்.

'தி சிக்ஸ்த் சென்ஸ்'

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்'

தனது 21வது வயதில், 'பிரே வித் ஆங்கர்' (1992) என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் ஷியாமளன். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. ஆனால் அந்தப் படம், பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது.

"என்னுடைய முதல் திரைப்படத்தின் கதை இந்தியாவில் நடக்கும். நான் அதில் இந்திய அமெரிக்கராக நடித்திருப்பேன். ஆனால் அந்தப் படத்தை என் குடும்பத்தரைத் தவிர யாரும் பார்க்கவில்லை. அப்போது என் அப்பா ஒரு ஆலோசனை வழங்கினார், 'உன் படத்தில் வெள்ளையர்களை நடிக்க வை, அதன் பிறகு பார்' என்றார். அதை பின்பற்றினேன், வெற்றி கிடைத்தது" என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் மனோஜ் நைட் ஷியாமளன்.

இயக்குநர் ஷியாமளனை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற திரைப்படம் என்றால், அது 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' (The Sixth sense).

'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என இத்திரைப்படத்தில் கோல் சியர் என்ற 9 வயது சிறுவன் பேசும் வசனம் இன்றுவரை அமெரிக்காவில் மிகவும் பிரபலம்.

"சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் வெளியானவுடன், 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என்ற வரி டி-சர்ட்களில், விளம்பரங்களில், மேடை நாடகங்களில், புத்தகங்களில் என எங்கும் இருந்தது. இரவில் மக்கள் உணவகங்களில் அமர்ந்துகொண்டு, 'நானும் இறந்தவர்களை பார்க்கிறேன்' என கிசுகிசுப்பார்கள்." என்று 2006இல் வெளியான 'The Man Who Heard Voices' புத்தகத்தில் விவரித்துள்ளார் மைக்கேல் பாம்பெர்கர்.

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 1991இல் சென்னையில் நடைபெற்ற 'பிரே வித் ஆங்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஷியாமளன்.

குறிப்பாக 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்தின் எதிர்பாரா முடிவு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது என்றும், மனோஜ் நைட் ஷியாமளனுக்கென ஒரு பிரத்யேக திரைப்பட பாணியையும், அவரது திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் இப்படம் உருவாக்கியது என்றும் மைக்கேல் பாம்பெர்கர் குறிப்பிடுகிறார்.

"உலகளாவிய டிக்கெட் விற்பனை, டிவிடி விற்பனை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் சாதனை படைத்தது."

"மனோஜ் நைட் ஷியாமளன் அதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். அவர் நடிக்கவும் செய்திருந்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படத்திற்குப் பிறகு, மக்கள் நைட்டை 'அடுத்த ஹிட்ச்காக்' என்று அழைத்தனர், அவருக்கு அப்போது முப்பது வயது கூட ஆகவில்லை. நடிகர்களிடம் திறன்பட வேலை வாங்கும் ஒரு இயக்குனராக அவர் பாராட்டப்பட்டார். குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸிடமிருந்து ஒரு சிறப்பான நடிப்பை அவர் பெற முடிந்ததால். 1999இல், நைட் ஒரு 'ராக் ஸ்டார்' போல மக்களால் கொண்டாடப்பட்டார்." என மைக்கேல் பாம்பெர்கர் எழுதியுள்ளார்.

ஹாலிவுட்டில் தொடர் வெற்றிகள்

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின.

'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்திற்கு பிறகு, ஷியாமளன் இயக்கி அடுத்தடுத்து வெளியான, அன்பரேகபிள் (Unbreakable- 2000), சைன்ஸ் (Signs- 2002), தி வில்லேஜ் (The Village- 2004) ஆகிய மூன்று திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றன என மைக்கேல் பாம்பெர்கர் கூறுகிறார்.

'இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் திரைக்கதைத் திருப்பங்களை உள்ளடக்கிய உளவியல் த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படங்கள்'- இதுவே மனோஜ் நைட் ஷியாமளனின் பாணி என்ற பிம்பம் உருவானது.

"விமர்சகர்கள் தான் அத்தகைய பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். எனது எல்லா திரைப்படங்களின் இறுதியிலும் ஒரு எதிர்பாரா திருப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென நினைத்து நான் திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால் அத்தகைய ஒரு எதிர்பார்ப்பு தான் எனக்கு பயமே. அதனால் தான் லைஃப் ஆஃப் பை (Life of Pi) போன்ற திரைப்படத்தை இயக்குவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஷியாமளன்.

ஆங் லீ இயக்கத்தில் 2012இல் வெளியான 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தின் நாயகன் இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்தவனாக இருப்பான். லைஃப் ஆஃப் பை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு ஒருமுறை கிடைத்ததாகவும் ஷியாமளன் அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.

எதிர்மறை விமர்சனங்களும் ட்ரோல்களும்

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 'அடுத்த ஸ்பீல்பெர்க்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.

'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. ஆனால், அதற்கு அடுத்த நான்கு திரைப்படங்கள் 'தி லேடி இன் தி வாட்டர்' (2006), 'தி ஹாப்பனிங்' (2008), 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' (2010), 'ஆஃப்டர் எர்த்' (2013) ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.

தனது வழக்கமான 'எதிர்பாரா திருப்பங்கள்' என்ற பாணியிலிருந்து சற்று விலகியே அவர் இந்த நான்கு திரைப்படங்களையும் இயக்கியிருந்தார்.

குறிப்பாக 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்திற்காக, மோசமான திரைப்படங்களை பகடி செய்து வழங்கப்படும் 'கோல்டன் ராஸ்பெர்ரி விருது' வழங்கப்பட்டது. 'மோசமான இயக்குநர்', 'மோசமான துணை கதாபாத்திரம்' இரு விருதுகள் மனோஜ் நைட் ஷியாமளனுக்கு வழங்கப்பட்டன. அதேபோல, 'தி ஹாப்பனிங்' திரைப்படத்திற்கு மோசமான திரைப்படம், மோசமான நடிகர், மோசமான இயக்குநர், மோசமான திரைக்கதை என நான்கு 'கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள்' வழங்கப்பட்டன.

'அடுத்த ஸ்பீல்பெர்க்', 'அடுத்த ஹிட்ச்காக்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.

"ஒரு திரைப்படத்தை எழுதும்போதே அதை எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் யோசித்தே எழுத வேண்டும். 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்தில் அதை நான் செய்யவில்லை. எனக்குப் பிடித்ததை செய்தேன். ஆனால் இன்றும் கூட மக்கள் அந்தப் படத்தைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, மனோஜ் நைட் ஷியாமளனின் தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர்.

'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்' என்ற பிரபல அனிமேஷன் தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஆசியர்களின் கதாபாத்திரங்களுக்கு 'வெள்ளையின' நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஆனால், இதை இயக்குநர் ஷியாமளனும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மறுத்தது.

அதற்கு பிறகு, ஷியாமளன் இயக்கத்தில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான 'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது.

நடிகர் வில் ஸ்மித் 2015இல் அளித்த ஒரு நேர்காணலில், "'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் என் திரை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி. என்னுடைய பையனையும் அதில் நடிக்க வைத்தது தான் இன்னும் வேதனையானது. நான் ஒன்றரை வருடத்திற்கு நடிப்பதையே நிறுத்திவிட்டேன்." எனக் கூறியிருந்தார்.

'தி விசிட்' மீட்டுக்கொடுத்த அடையாளம்

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 2015இல் வெளியான 'தி விசிட்' திரைப்படம்

"என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, 'மெயின்ஸ்ட்ரீம்' திரைப்பட பாணியில் பொருந்திப் போவதற்கு சில திரைப்படங்களை எடுத்தேன். அது தவறு என பின்னர் புரிந்தது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திரைப்படங்கள் அவை அல்ல என்பதும் புரிந்தது" என தனது தோல்விப் படங்கள் குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.

தனக்கு கிடைத்த தோல்விகளால், தனது அடுத்த திரைப்படத்தை சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்த ஷியாமளன், ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தை இயக்கினார்.

2015இல் வெளியான 'தி விசிட்' என்ற அந்த திரைப்படம் மூலம் மீண்டும் தனது 'எதிர்பாரா திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ்' என்ற பாணிக்கு திரும்பினார் ஷியாமளன்.

தங்கள் அம்மா வழி, தாத்தா- பாட்டியின் பண்ணை வீட்டில் 5 நாட்கள் விடுமுறையைக் கழிக்க, பெக்கா ஜேமிசன் என்ற சிறுமியும் அவளது தம்பி டைலரும் வருகிறார்கள். முதல் முறையாக தங்கள் தாத்தா- பாட்டியை சந்திக்கும் பெக்கா மற்றும் டைலர், அவர்களுடன் தங்கும்போது சில அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள், அவர்களின் 'தாத்தா பாட்டி' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மையையும் கண்டறிகிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.

5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட 'தி விசிட்' திரைப்படம், 98.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய அளவிலான வசூலைக் குவித்தது.

அதன் பிறகு, அவர் எடுத்த 'ஸ்ப்ளிட்' (2016), 'கிளாஸ்' (2019) திரைப்படங்கள் மீண்டும் ஷியாமளனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தின.

"ஹாலிவுட்டில் என்னைப் போல புகழையும் ட்ரோல்களையும் பார்த்த இயக்குநர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை. 'தி விசிட்' திரைப்படம் எடுக்கும்போது, 'நான் அனைத்தையும் இழக்கப் போகிறேன்' என்ற பயமும் இருந்தது, மறுபுறம் காமெடியும் ஹாரரரும் கலந்த ஒரு கதை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது. வெற்றி என்பது எப்போதும் ஒரு கத்தி முனையில் நிற்பது போல தான்" என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.

மனோஜ் நைட் ஷியாமளன், இந்திய இயக்குநர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ஒரு நம்பிக்கை என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"இந்தியர்கள் என்றாலே காதல், 5 பாடல்கள் அல்லது நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் நிலவும் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் மிக எளிய த்ரில்லர் கதைகளால் பிரபலமடைந்தவர் மனோஜ். 'சைன்ஸ்', 'தி வில்லேஜ்' போன்ற திரைப்படங்களில், நம் நாட்டு கதைகளையே ஹாலிவுட்டுக்கு ஏற்றார் போல வடிவமைத்திருப்பார். 'ஒரு இந்தியராக இருப்பது' என்ற தடையையே தனது பலமாக மாற்றி ஹாலிவுட்டில் வெற்றி பெற்றவர் என்ற வகையில், அடுத்த தலைமுறை இந்தியக் கலைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி தான்" என்று ஜா.தீபா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ed01yv466o

‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி?

3 months ago

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு அந்தப் பயிற்சி முகாமில் நடக்கும் சம்பவங்களும், அதை பற்றிய உண்மையும் முருகனையும் அவரை சார்ந்தோரையும் எந்த விதத்தில் பாதிக்கிறது? பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘தண்டகாரண்யம்’ படத்தின் திரைக்கதை.

கதை 2008 காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது. ராமாயணத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் தண்டகாரண்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தலைப்புக்கு ஏற்றவகையில் படம் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையிலும் அண்ணன் - தம்பி கதாபாத்திரங்கள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகார ஒடுக்குமுறையையும், நக்சல் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமில்லாமல் காட்டிய இயக்குநர் அதியன் ஆதிரை, மனதை பதைபதைக்க வைக்கும் காட்சியமைப்புகளுடன் கூடிய உணர்வுபூர்வ சினிமாவை தந்து வெற்றி பெற்றுள்ளார்.முழுக்க சீரியஸ் தன்மை கொண்ட கதைக்களத்தில் லேசாக பிசகினாலும் சலிப்பை தந்துவிடக்கூடிய சூழலில், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையிலேயே அமர வைக்கும் திரைக்கதை உத்தியை ஓரளவு சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

ஜார்க்கண்ட் முகாமில் நடக்கும் பயிற்சி, கலையரசனுக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல்லுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் போன்றவை அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடனே நகர்வது சிறப்பான மேக்கிங். குறிப்பாக, சமையலறையில் நடக்கும் சண்டைக் காட்சி தத்ரூபம். பயிற்சி முகாம் கொடூரங்கள் ‘டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டினாலும், அதற்கு சற்றும் குறையாத வகையில் இப்படத்தில் வரும் காட்சிகளும் முகத்தில் அறைகின்றன. சித்ரவதை காட்சிகள் எந்த இடத்திலும் ஆடியன்ஸிடம் வலிந்து திணிக்காமல் வலியை கடத்துகின்றன.

படத்தின் மற்றொரு ப்ளஸ் என்றால், அது நடிகர்களின் தேர்ந்த நடிப்புதான். சில தினங்களுக்கு முன்னால் ஒரு மேடையில் நடிகர் கலையரசன் தனக்கு இடைவேளையிலேயே இறந்து விடும் கதாபாத்திரத்தைத்தான் கொடுக்கிறார்கள் என்று புலம்பியிருந்தார். அவர் யாரை மனதை வைத்து அப்படி பேசினாரோ அவர்களுக்கான பதிலாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அப்பாவித்தனமும் துணிச்சலும் கொண்ட இளைஞனாக சிறப்பான நடிப்பை தந்து அசத்தியிருக்கிறார்.

படம் முழுக்க சீரியஸ் தன்மையுடன் வரும் அட்டகத்தி தினேஷ் பேசும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மற்றொரு குறிப்பிடத்தக்க நடிப்பு, டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் உடையது. ‘சார்பட்டா பரம்பரை’க்குப் பிறகு பேசப்படும் கதாபாத்திரமாக ‘அமிதாப்’ இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். நெகட்டிவ், பாசிட்டிவ் என இருமுகம் காட்டி ஸ்கோர் செய்கிறார். பாலசரவணன், யுவன் மயில்சாமி, நாயகி வின்சு ரேச்சல் சாம், ரித்விகா உள்ளிட்டோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வனத்தை ரசிக்கவும், சீரியஸ் காட்சிகளில் அதே வனத்தை கண்டு அச்சம் கொள்ளவும் வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சிறப்பு. குறிப்பாக படம் முழுக்க வரும் ஓர் ஒப்பாரி, மனதை அறுக்கிறது. பாடல்கள் ஓகே ரகம். இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் கச்சிதம்.

படத்தின் குறைகள் என்று பார்த்தால், இப்படி ஒரு படத்தில் தினேஷுக்கான அதீத ஹீரோயிச காட்சிகள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை கற்பனை கலந்தும் முடிந்தவரை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் ‘தண்டகாரண்யம்’ நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.


‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி?  | Thandakaaranyam movie review - hindutamil.in

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானா‌ர்!

3 months ago

fotojet-min-1681476744.jpg?resize=750%2C

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானா‌ர்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்று உயிரிழந்துள்ளார்.

https://athavannews.com/2025/1447695

ஸ்வர்ணலதாவின் 10 சிறந்த பாடல்கள் - பட்டியலிட்ட பி.எச்.அப்துல் ஹமீத்

3 months 1 week ago

ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது.

ENS ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது.

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 11 செப்டெம்பர் 2025

தமிழ் சினிமா மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றவர் ஸ்வர்ணலதா.

கேரளாவின் பாலக்காடு பகுதியில் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ஸ்வர்ணலதா பிறந்தார்.

ஸ்வர்ணலதாவின் தந்தை பிரபல இசை கலைஞர் என்ற ரீதியில், ஸ்வர்ணலதாவிற்கும் இசை மீது அபூர்வ ஆர்வம் சிறு வயதிலிருந்தே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் ஊடாக திரை இசைத்துறைக்குள் ஸ்வர்ணலதாகால் தடம் பதித்தார்.

பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை (செப்டம்பர் 12) ஒட்டி, தனக்கு பிடித்த 10 ஸ்வர்ணலதா பாடல்களை இலங்கையை சேர்ந்த மூத்த மற்றும் புகழ்வாய்ந்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் பிபிசி தமிழுக்கு பட்டியலிட்டார். இதில் அவர் எழுதிய பாடலும் இடம்பெற்றுள்ளது.

1. போறாளே பொன்னுத் தாயி

ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்.

Rajshri Tamil ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்.

1994-ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இந்த பாடல் வெளியாகியிருந்தது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.

இந்த பாடலை பாடியமைக்காக ஸ்வர்ணலதாவிற்கு 1994-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசு விருதும், இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது.

இந்த பாடல் அன்று முதல் இன்று வரை பலரது பாடல்கள் விருப்ப பட்டியலில் உள்ளமை விசேட அம்சமாகும்.

2. மாலையில் யாரோ

பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது.

Ayngaran பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது.

1990-ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ''மாலையில் யாரோ'' பாடலும் பலரது விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது.

வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.

திரையில் பானுப்பிரியாவின் காட்சிகளில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு, காட்சிகளை விடவும், ஸ்வர்ணலதாவின் மெல்லிய குரலே உயிரை வழங்கியிருந்தது.

3. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்

2010ம் ஆண்டு செப். 12ம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்.

FB/KSChithra 2010-ஆம் ஆண்டு செப். 12-ஆம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்(வலம்).

ஊரெல்லாம் உன் பாட்டு திரைப்படத்தில் வெளியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

கே.ஜே.யேசுதாஸின் குரலில் தனியாக இந்த பாடல் வெளியாகியிருந்ததுடன், ஸ்வர்ணலதாவின் குரலில் வேறொரு பாடல் தனியாக உருவாக்கப்பட்டிருந்தது.

வாலியின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு, இளையராஜா இசை அமைத்திருந்தார்.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல், அந்த காலப் பகுதியில் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருந்தது.

4. என்னுள்ளே என்னுள்ளே

என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

Sun Music என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்த், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வள்ளி.

1993-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.

என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கான வரிகள் வாலி எழுதியிருந்ததுடன், இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலித்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வரவேற்பு காணப்படுகின்றது.

5. ஹய் ராமா

1995ம் ஆண்டு வெளிவந்த படமே ரங்கீலா.

இந்த படத்திற்கான இசையை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார்.

ரங்கீலா திரைப்படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது.

ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

ஸ்வர்ணலதாவின் பாடல்கள் வரிசையில் இந்த பாடலுக்கும் இன்று வரை முக்கிய இடம் இருக்கின்றது என்பதே உண்மை.

6. பூங்காற்றிலே

'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல்.

Track Musics India 'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல்.

உயிரே திரைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் வெளியான பாடல்கள் வரிசையில் பூங்காற்றிலே பாடல் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

உன்னிமேனன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோரின் குரல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடலுக்கான இசை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார்.

மணிரத்னத்தின் இயக்கத்தின் 1998-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இன்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

7. காதல் எனும் தேர்வெழுதி

காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார்.

API Tamil Songs காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார்.

காதலர் தினம் திரைப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

அறிமுக கதாநாயகன் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோரின் நடிப்பில், கதிரின் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பிடித்திருந்த நிலையில், அனைத்து பாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது.

அனைத்து பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்ததுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் வெளியான ''காதல் எனும் தேர்வெழுதி'' பாடல் இன்றும் இளைஞர் யுவதிகளின் உதடுகளில் முனுமுனுக்கும் பாடலாக அமைந்துள்ளது.

இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு ஈடாக ஸ்வர்ணலதாவின் குரலும் அமைந்திருந்த அதேவேளை, இந்த பாடலின் காட்சிகளுக்கு அந்த குரல்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது என்பது மிகையாகாது.

8. திருமண மலர்கள்

27b4e4d0-8f1f-11f0-9cf6-cbf3e73ce2b9.png

Star Hits ஜோதிகாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார்.

அஜித் மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே பூவெல்லாம் உன் வாசம்.

குடும்ப நண்பர்கள் எப்படி காதல்களாக மாறி இணைகின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாக அமைந்திருந்தது.

இந்த திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பிடித்திருந்ததுடன், அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.

பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாடலாக திருமண மலர்கள் தருவாயா பாடல் அமைந்துள்ளது.

ஜோதிகாவின் காட்சிகளுக்கு, ஸ்வர்ணலதாவின் குரல் அவ்வாறே இணைந்ததாக காணப்படுவதுடன், அந்த காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார்.

9. மயிலிறகே மயிலிறகே

2002- ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே தென்காசி பட்டணம்.

இந்த திரைப்படத்தில் மயிலிறகே மயிலிறகே பாடலை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருப்பார்கள்.

இந்த பாடலுக்கு பீட்டர்ஸ் இசையமைத்திருந்ததுடன்,பாடலுக்கான வரவேற்பு இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றது.

10. சிஞ்ஞோரே சிஞ்ஞோரே

'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார்.

API Tamil Songs 'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், இலங்கை போர் களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு திரைப்படமாக காணப்படுகின்றது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், பி.எச்.அப்துல் ஹமீத்திற்கு இந்த பாடல் அவரது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடலாக விளங்குகின்றது. காரணம் அவரே இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

தமிழ் வரிகளுடன், சிங்கள வரிகள் அடங்களாக எழுதப்பட்ட இந்த பாடலை, ஸ்வர்ணலதாவின் குரலிலும் கேட்கும் போது, அனைவருக்குமே ஆச்சரியம் தருகின்றது.

95bec460-8f23-11f0-8111-31005f7c48fd.jpg

பி.எச்.அப்துல் ஹமீத் எழுதிய சிஞ்ஞோரே சிஞ்ஞோரே பாடலுக்கு ஸ்வர்ணலதா குரல் கொடுத்திருந்தார்

ஸ்வர்ணலதா உலகை விட்டு விடை பெற்று 15 வருடங்கள்

இந்திய சினிமாத்துறையில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற ஸ்வர்ணலதா, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி தனது 37வது வயதில் காலமானார்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

1987-ஆம் ஆண்டு இசை ரசிகர்களுக்கு தனது குரலில் விருந்து வழங்கிய ஸ்வர்ணலதாவின் குரல் 2010-ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும், அந்த குரலின் பதிவுகள் என்றென்றும் ரசிகர்களின் காதுகளில் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c07vkydy3jyo

விமர்சனம் : மதராஸி!

3 months 2 weeks ago

விமர்சனம் : மதராஸி!

7 Sep 2025, 11:07 AM

madharasi-1.jpg

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா?

முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது.

இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்?

தியேட்டரில் ‘மதராஸி’ தரும் திரையனுபவம் அந்த கேள்வியைத் தவிடுபொடியாக்கியிருக்கிறதா?

’ஆபத்பாந்தவன்’ பார்முலா!

மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற ‘ஆக்‌ஷன்’ படங்களின் கதை என்னவாக இருக்கும்?

மக்களை ஆபத்திற்கு உள்ளாக்குகிற வகையில் சில பிரச்சனைகளை வில்லன்கள் இழுத்துக் கொண்டுவருவார்கள். அதனைச் சமாளிக்க முடியாமல் எல்லோரும் திணறும் நேரத்தில், அந்த களத்திற்குள் ஹீரோ வருவார். வில்லனை நேருக்கு நேராக எதிர்கொண்டு வெல்வார். அவரே எல்லோரையும் காக்கிற ‘ஆபத்பாந்தவன்’ என்பதைப் பாதிப்படத்திலேயே உணர்த்திவிடுவதே இப்படிப்பட்ட படங்களின் சிறப்பு. நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் அதனையே விரும்புவார்கள் என்பதே திரையுலகின் நம்பிக்கை.

image-122-1024x538.png

கிட்டத்தட்ட அதனைப் பிரதிபலித்திருக்கிறது ‘மதராஸி’ கதை.

பெருமளவில் துப்பாக்கிகளைச் சுமந்துகொண்டு சில ட்ரக்குகள் தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுகின்றன. அதனை முன்னரே அறிந்து தடுக்க முயற்சிக்கின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். அவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை.

அந்த நிகழ்வில் காயம்பட்ட என்.ஐ.ஏ குழு அதிகாரியின் முன்னே சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார் ஒரு இளைஞன். காதலி தன்னைவிட்டுச் சென்றுவிட்டார் எனத் தற்கொலை செய்யத் துடிப்பவர் அந்த நபர். அவரது இருப்பு அந்த அதிகாரியை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.

இந்த நிலையில், அந்த கும்பல் எங்கிருக்கிறது என்ற விவரம் தெரிய வருகிறது. அந்த இடத்தைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துவது அபாயகரமானது என்பதை அறிந்தவுடன், ‘தற்கொலைப்படை நடவடிக்கை’ போன்ற ஒன்றைச் செய்யலாம் என்று திட்டமிடுகிறார் அந்த அதிகாரி.

அதற்காக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் அந்த இளைஞனை இந்த பிரச்சனைக்குள் தள்ளுகிறார்.

அந்த இளைஞரும் அந்த துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஆலைக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில், அந்த இளைஞரைத் தேடி அவரது காதலியும் என்.ஐ.ஏ. அலுவலம் வருகிறார்.

ஆலைக்குள் சென்ற இளைஞர் அந்த இடத்தைத் தகர்க்க முற்படுகையில், அந்த கும்பலின் தலைவர் அவர் கையில் சிக்குகிறார்.

அதனை அவர் அந்த அதிகாரியிடம் தெரிவிக்கிறார். அதேநேரத்தில், அந்த கும்பலைச் சேர்ந்த இன்னொருவரிடமும் அத்தகவலைத் தெரிவிக்கிற கட்டாயம் உருவாகிறது.

அப்போது, ‘அந்த கும்பலின் தலைவனைச் சுட்டுவிடு’ என்கிறார் அந்த அதிகாரி. ‘அப்படிச் சுட்டால் உன்னைச் சார்ந்தவர்களை துவம்சம் செய்துவிடுவேன்’ என்கிறார் எதிர்முனையில் இருக்கிற அந்த கும்பலைச் சேர்ந்தவர்.

அவர்கள் சொன்னதைக் கேட்டபிறகு, அந்த இளைஞர் என்ன செய்தார்? அந்த இளைஞனின் காதலி ஏன் அவரை விட்டுச் சென்றார்? முடிவில், ‘துப்பாக்கி’ பிரச்சனை என்னவானது என்று சொல்கிறது ’மதராஸி’யின் மீதி.

ஆக்‌ஷன் படங்களுக்கான சிக்கல்!

குறிப்பிட்ட காலகட்டத்தில் சில ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், ’அதே பார்முலா’வில் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிற சில படங்கள் சில காலம் கழித்து வெளியாகித் தோல்வியைத் தழுவும். எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டு இப்போதுவரை தொடர்கிறது அந்த சிக்கல்.

ஏ.ஆர்.முருகதாஸும் அப்படியொரு சிக்கலைச் சமீப ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறார்.

‘கஜினி’ சூர்யா போல, ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் ப்ளஸ் அல்லது மைனஸாக இருக்கும்.

’மதராஸி’ திரைக்கதையில் இரண்டு, மூன்று முக்கியத் திருப்பங்கள் இருக்கின்றன.

வில்லன்களின் உலகத்திற்குள் நாயக பாத்திரம் காலடி எடுத்து வைப்பது அதிலொன்று. அதற்கான விதையாக, ‘பிளாஷ்பேக்’கள் இதில் இருக்கின்றன. நாயகியின் இருப்பும் அதையொட்டி கதையில் நியாயப்படுத்தப்படுகிறது.

இடைவேளையை ஒட்டி, அந்த வில்லன்களோடு நாயகனுக்கு நேரடியாக மோதல் ஏற்படுவது இன்னொரு திருப்பம்.

இவையிரண்டும் ‘முருகதாஸின் வெற்றிகரமான ஆக்‌ஷன் பட’ அனுபவத்தைத் தருகின்றன.

இப்படத்தின் பின்பாதியிலும் சில திருப்பங்கள் இருக்கின்றன. அவை ‘க்ளிஷே’க்களாக தெரிகின்றன.

மற்றபடி, ஒரு வழக்கமான ஆக்‌ஷன் படத்திற்கான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது ‘மதராஸி’.

அதற்கு சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அருண் வெஞ்சாரமூடுவின் தயாரிப்பு வடிவமைப்பு, அனிருத்தின் பின்னணி இசை ஆகியன துணை நிற்கின்றன.

அனிருத் இசையில் ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ பாடல்கள் ஓகே ரகம். ஆனால், ‘தூள் கிளப்பும்’ ரகத்தில் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்பது குறையே.

விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட பல நுட்பங்கள் இதில் சிறப்புற அமைந்திருக்கின்றன.

கமர்ஷியல் படங்களில் நாயக பாத்திரம் என்றால் ‘கெத்தாக’ இருக்க வேண்டுமென்று நம்புவதில், அதனை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பதில் சில நடிகர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.

மிகச்சில நாயகர்கள் அந்த எல்லைக்கோட்டில் இருந்து அவ்வப்போது விலகி நிற்பார்கள். அப்படியொரு பாத்திர வார்ப்பினை இதில் முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

என்ன, குழந்தைகளும் ரசிக்கிற அவரது படத்தில் ‘நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்’ என்று அடிக்கடி வசனம் பேசுவதைத்தான் ஏற்க முடியவில்லை. அந்த இடங்களைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

image-121-1024x576.png

நாயகி ருக்மிணி வசந்த் அழகாகத் திரையில் காட்டப்பட்டிருக்கிறார். ஆனாலும், ‘ரொம்ப மெச்சூர்டு’ என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது.

ஒரு காட்சியில் ‘இப்பதான் நல்ல வொய்ப் மெட்டீரியலா ஆயிருக்கே’ என்று சிவகார்த்திகேயன் வசனம் பேசுவார். அது போன்ற இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த படத்திற்கு இவர் தேவையில்லைதான்.

வில்லனாக இதில் வித்யுத் ஜாம்வால், சபீர் கல்லாரக்கல் தோன்றியிருக்கின்றனர். இருவருக்குமே தனித்தனியாகச் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. இருவருமே அதில் கலக்கியிருக்கின்றனர். ஆனாலும், பல படிகள் முன்னே நிற்கிறார் வித்யுத். நாயகனாகத் தொடங்கிவிட்டார் என்பதற்காகவே, அவருக்காகப் பிரத்யேகமாகச் சில ‘பில்டப்’களை இதில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் பிஜு மேனன், விக்ராந்த் முக்கியப் பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டபோதும், அது திரைக்கதையில் அடிக்கோடிடும் வகையில் அமையவில்லை.

இவர்களோடு தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் உட்படச் சிலர் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர். வினோதினி வைத்தியநாதன், சந்தானபாரதி போன்றவர்களும் அதில் அடக்கம்.

இன்னும் சித்தார்த் சங்கர், ரிஷி ரித்விக் உட்படச் சிலர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு நடுவே விமலா ராமன் போன்ற சிலரும் ‘ஒப்புக்கு சப்பாணியாக’ச் சில ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர்.

மேற்சொன்னவற்றில் இருந்து இப்படத்தில் நாயகி தவிர்த்து பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைவு என்பது புரிந்துவிடும்.

தற்போது இப்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துகள் கலவையாக உள்ளன.

இப்படம் இதற்கு முன் வந்த ஏ.ஆர்.முருகதாஸின் படங்களை நினைவூட்டுகிற வகையில் உள்ளது. அதேநேரத்தில், சமீபத்திய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ‘மதராஸி’ உள்ளதா என்ற கேள்வி அவ்விஷயத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மேற்சொன்ன இரண்டும் ஒன்றிணைகிறபோது சில முரண்கள் எழும். அவை இப்படத்திற்கான பலவீனங்கள்.

லாஜிக் மீறல்கள் என்று பார்த்தால் ‘மதராஸி’யில் கணிசமாகச் சிலவற்றை நம்மால் கண்டறிய முடியும்.  

அதேநேரத்தில் சமீபகாலமாகத் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான ‘பெரிய நாயகர்களின்’ ஆக்‌ஷன் படங்களை ஒப்பிடுகையில் இப்படத்தின் கதை சொல்லலும் காட்சியாக்கமும் நம்மை பெரிதாக அயர்ச்சியுற வைக்காது. இது தமிழைவிடத் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெறவும் வாய்ப்புள்ளது.

image-120-1024x683.png

ஒருவேளை மேற்சொன்னது நிகழாவிட்டால், இப்படத்தை ஓடிடியிலோ, தொலைக்காட்சிகளிலோ காணும்போது ‘இந்த படம் நல்லாத்தானே இருக்கு’ என்று அதே ரசிகர்கள் சொல்லலாம். அதற்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது ‘மதராஸி’.

மற்றபடி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துவிட்டால் அற்புதமான ’கமர்ஷியல் பட அனுபவம்’ கிடைக்கும் என்று அவர்களது ரசிகர்கள் நம்பினாற் போன்றதொரு விஷயத்தை ‘மதராஸி’ நிகழ்த்தவில்லை..!

https://minnambalam.com/sivakarthikeyan-madharasi-movie-review/

விமர்சனம் : காந்தி கண்ணாடி

3 months 2 weeks ago

விமர்சனம் : காந்தி கண்ணாடி

6 Sep 2025, 12:51 PM

Gandhi Kannadi Movie Review 2025

ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா?

டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு.

ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறது.

சரி, ‘காந்தி கண்ணாடி’ தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளதா?

Gandhi Kannadi Movie Review 2025

‘நெகிழ்ச்சி’ தருணங்கள்!

ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் கதிர் (கேபிஒய் பாலா). அவரது காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதனை நிர்வகித்து வருகிறார். நண்பர்கள் சிலர் (மதன், ஜீவா சுப்பிரமணியன்) அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பணம் மட்டுமே பிரதானம் என்றிருக்கும் கதிர், தங்களது பணியாளர் வராவிட்டால் அந்த வேலையைத் தானே செய்யக் கூடியவர். அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவர்.

அப்படிப்பட்டவர் ‘அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டும்’ என்று தன்னைத் தேடி வரும் காந்தியைக் (பாலாஜி சக்திவேல்) காண்கிறார். மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஏக்கம் அது என்பதை உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் துணிகிறார். தனது சம்பளம், சேமிப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெரிய தொகையில் அந்த நிகழ்வை நடத்த ஆசைப்படுகிறார்.

காந்தி ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் அவர் சிறு வயதில் நடனமாடும் கண்ணம்மாவை விரும்புகிறார். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ முடியாது என்பதை உணர்ந்து, இருவரும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர்.

அப்போது முதல் கண்ணம்மாவின் வார்த்தைகள் எதையும் காந்தி மீறியதில்லை. முதல்முறையாக, அவரது வார்த்தையை மீறித் தனது ஜமீன் குடும்பத்து சொத்துக்களை விற்றாவது இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப, அவர் கைவசம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது.

அதனைக் கொண்டு எளிதாகத் தனது கண்ணம்மாவின் ஆசையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறார் காந்தி. அந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறது மத்திய அரசு.

அதன்பிறகு தனது கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறார் காந்தி. அவரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கதிரும் கைவிரிக்கிறார்.

அதன்பிறகு என்ன ஆனது? காந்திக்கு கதிர் உதவிகள் செய்தாரா என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.

ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் கதிர், அங்கிருந்த காந்தி காணாமல் போனதை அறிந்ததும் துணுக்குறுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதுவே ‘பிளாஷ்பேக்’குகள் நிறைந்த இப்படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.

அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் சாதாரண ரசிகர்கள் நெகிழ்ச்சியுறும்விதமாகச் சில தருணங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வங்கி வாசலில் மக்கள் காத்துக் கிடப்பது போன்றவை அப்படிப்பட்டவை.

கூடவே, ‘அதான் நீ இருக்கியே’, ‘தயிர்சாதம் சூப்பர்’ என்று பாலாஜி சக்திவேல் பேசுகிற வசனங்கள் தொடக்கத்தில் செயற்கைத்தனமாகவும், பிறகு நம்மை நெகிழவைக்கும் விதமாகவும் உள்ளன.

‘பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டு, அது நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலைன்னா, நீங்கள்லாம் என்ன …க்கு கல்யாணம் பண்றீங்க’ என்று அவர் வசனம் பேசுகிற இடத்தில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது.

அந்த வகையில் முதல் பாதி இளைய தலைமுறைக்கானதாகவும் இரண்டாம் பாதி வயதானவர்களுக்காகவும் அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.

Gandhi Kannadi Movie Review 2025

திருப்தி கிடைத்ததா?

இடைவேளை வரை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டியவாறு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அதில் நிறையவே தொய்வு ஏற்படுகிறது.

ஒருகட்டத்தில் ‘இவ்ளோ கஷ்டப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள்ள இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்தனுமா’ என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் ‘சோக கீதம்’ வாசிக்கின்றன.

’முனுக்கென்றால் கோபம் வந்துவிடும்’ என்பது போலச் சட்டென்று கண்ணீரை உதிர்க்கக்கூடியவர்கள் தேம்பி அழும் அளவுக்கு இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கின்றன.

அக்காட்சிகளில் தெரிகிறது இயக்குனர் ஷெரீஃபின் வித்தை.

இப்படத்தில் திருவிழா காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் மட்டும் கொஞ்சம் பிரமாண்டம் தெரிகிறது. மற்றபடி இது சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

முடிந்தவரை அந்த எண்ணம் வராத அளவுக்குக் காட்சியாக்கத்தைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை கூட்டணி.

ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ போன்ற அம்சங்கள் காட்சிகளைச் செறிவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. திரையில் கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது அருமை.

அந்த வகையில் காட்சியாக்கத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது.

அதனைத் தாண்டி, திரையில் தெரியும் பிம்பங்களின் வழியே வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கடத்த தூண்டுகோலாய் இருக்கிறது விவேக் – மெர்வினின் பின்னணி இசை.

‘திமிருக்காரி’ பாடல் ‘காந்தி கண்ணாடி’யின் அடையாளமாக உள்ளது. இது போக ‘புல்லட் வண்டி’, ‘ஹிந்தி நஹி மாலும்’ பாடல்களும் கேட்டவுடன் பிடிக்கும்விதமாக உள்ளன.

அனைத்தையும் தாண்டி கிளைமேக்ஸ் பகுதியில் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கிற ‘மெலடி மெட்டு’ நம் மனதைப் பிசையும்விதமாக உள்ளது.

அதுவரை இப்படத்துடன் ஒன்றாதவர்கள் கூட, அந்த இடத்தில் இக்கதையோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள் என்பதே நிஜம்.

‘காந்தி கண்ணாடி’ கதையில் முதன்மையாக வரும் நான்கு பாத்திரங்களின் பின்னணி ‘விலாவாரியாக’ விளக்கப்படவில்லை. போலவே, இதர பாத்திரங்களும் காட்சிகளில் வருகின்றன, போகின்றன. அவற்றின் பின்னணியைக் கொஞ்சம் விளக்கியிருந்தால் இன்னும் முழுமையானதாகத் திரையனுபவம் மாறியிருக்கும்.

ஆனால், அந்த குறையை மறக்கடிக்கும்விதமாக இதில் நடிகர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ உள்ளது.

அந்த வகையில் நாயகன் நாயகியை விட நம்மை வசீகரிப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடி தான். அவர்களைப் புகழ்வது கடல் நீரில் பெருமழை பெய்வதைப் போலானது என்பதால் அடுத்திருப்பவர்களை உற்றுநோக்கலாம்.

பாலாவுக்கு இது நாயகனாக முதல் படம். அதனை உணர்ந்து சிரத்தை காண்பித்திருக்கிறார். தனது உடல் திரையில் கம்பீரமாகத் தெரிய மெனக்கெட்டிருப்பவர், முக பாவனைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.

அது மட்டுமல்லாமல், முதல் பாதியில் அவர் கருமியாகவும் சுயநலமானவராகவும் இருப்பது தெளிவாகச் சித்தரிக்கப்படாதது ஒரு குறையே.

Gandhi Kannadi Movie Review 2025

மற்றபடி, தன்னைக் கொண்டாடுகிற ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதிகமாக ‘காமெடி கவுண்டர்கள்’ அடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார்.

நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி அழகாக இருக்கிறார். தனக்கு ‘ஸ்கோப்’ இருக்கிற இடங்களில் அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை.

ஒருவேளை நாயகன் நாயகி இருவருக்குமே அதிகளவில் ‘குளோஸ் அப்’ ஷாட்கள் வைக்காதது இயக்குனரின் குறையா என்றும் தெரியவில்லை.

இவர்கள் தவிர்த்து ஜீவா சுப்பிரமணியன், மதன் மற்றும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக நடித்தவர்கள் என்று சிலர் வந்து போயிருக்கின்றனர்.

அமுதவாணன், நிகிலா சங்கர் ஜோடிக்குத் திரைக்கதையில் உரிய இடம் தரப்படவில்லை.

பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மனோஜ் பிரபு – ஆராத்யா ஜோடி சட்டென்று மனதில் பதிகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கான காரண காரியங்கள் இன்னும் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றெண்ணுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இந்த படத்தின் முடிவு சில ரசிகர்களுக்குத் திருப்தியைத் தராமல் போகலாம்; இவ்வளவு சோக முடிவு தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம். ‘இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்’ என்றும் தோன்றலாம்.

அனைத்தையும் தாண்டி சில மனிதர்கள், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்ற வகையில் நமக்கு இன்னொரு உலகத்தைக் காட்டுகிறது ‘காந்தி கண்ணாடி’. பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ஓரளவுக்கு ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தரக்கூடும்.

https://minnambalam.com/gandhi-kannadi-movie-review-2025/

The Shawshank Redemption

3 months 2 weeks ago

மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம்.

முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம்.

பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம்.

இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வாறாக நான் உனருகிறேன்) என்பதனை ஒரு சிறந்த திரைக்கதையினூடாக பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என கருதுகிறேன் ஆனால் நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தினை வழங்கும்.

அண்மையில் யுரியூப்பில் இந்த திரைப்படத்தில் உள்ள ஒரு காணொளி துணுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இணைத்திருந்தார்கள் அதனை இணைத்துள்ளேன், 3 தடவைகள் ரெட் தனது பரோலிற்கான நேர்முகத்தேர்வு காட்சி (10 வருட இடைவெளி கொண்ட காட்சி முதல் நேர்முகத்தேர்வில் இருந்து 3 ஆவது நேர் முக தேர்விற்க்டையில் 30 வருடங்கள்) இடம்பெறும் அதில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் காட்டிய இளவயது குரல் முதுமைக்குரல் என வேறுபடுத்திக்காட்டுவார், அதே போல் இந்த மொழி மாற்றத்தில் எம் எஸ் பாஸ்கர் அதே வேறுபாட்டை காட்டுகிறார்.

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு!

3 months 2 weeks ago

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு!

large_saetfgarhyju-214794.png

கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான பூவை செங்குட்டுவன் (90) இன்று மாலை சென்னை பெரம்பூரில் காலமானார். வயது மூப்பே அவரது மரணக்காரணமாகக் கூறப்படுகிறது.

செங்குட்டுவன் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 4,000-க்கும் அதிகமான சுயாதீனப் பாடல்களையும், 5,000 பக்திப் பாடல்களையும் இயற்றி தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வரிகளில் இலக்கிய நயமும், ஆன்மீக உணர்வும், பொதுமக்களின் வாழ்வியல் மொழியும் கலந்து காணப்பட்டதால் பரவலான வரவேற்பைப் பெற்றது.

அவரது படைப்புகளில் சில பாடல்கள் காலத்தால் அழியாத புகழை பெற்றன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “தாயிற்சிறந்த கோவிலுமில்லை”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா”, “இறைவன் படைத்த உலகை” போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தவை. இன்றும் அவை பக்தி நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கின்றன.

திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள் மற்றும் சுயாதீன இசைத் துறைகளிலும் அவர் பங்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தம் படைப்புகளில் எளிமையான சொற்களையும், நுண்ணிய உணர்ச்சியையும் கலந்து அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் அமைத்தது அவரது வித்தியாசமான பலம்.

செங்குட்டுவனின் மறைவு தமிழ்ச் சங்கீத உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பல்வேறு இசைக்கலைஞர்களும், பாடகர்களும், ரசிகர்களும் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

https://www.seithipunal.com/tamilnadu/poets-poovai-senkuttuvan-passed-away

Checked
Thu, 12/25/2025 - 12:15
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed