வண்ணத் திரை

ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?

4 hours 11 minutes ago
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? 1222572.jpg  
 

கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது.

“எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது.

படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.

இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது.

பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது.

பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும்.

அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'!

ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in

10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை..

1 day 17 hours ago
10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை..

seshu2632024m21-1711454986.jpg

சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு.

இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்‌ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது.

லொள்ளு சபா

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியில் நடித்து கலக்கியவர். மேலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் இவர் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

ஹார்ட் பேஷன்ட் ஆனாலும்: வாட்டர் பாட்டில் கூட தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு, நான் ஒரு ஹார்ட் பேஷன்ட்.. ஆனாலும், 5 கிலோ அரிசி, 10 கிலோ அரிசி மூட்டையை மாடியிலிருந்து தூக்கிட்டு வந்து கொடுக்கிறேன். நம்மாள முடிந்த உதவியை மத்தவங்களுக்கு பண்ணனும், என கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்து வந்த சேஷு இலவசமாக பல பேருக்கு திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார்.

10 லட்சம் இருந்தா:

காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்றும் 10 லட்சம் வரை பணம் செலவாகும் என சொல்லப்பட்டது. மேலும், சேஷுவை காப்பாற்ற பணம் கொடுங்க என்றும் சினிமா துறையினரிடம் அவரது உறவினர்கள் கெஞ்சிக் கேட்டனர்.

 யாருமே உதவல:

ஒரு சிலர் சேஷுவிற்கு உதவி செய்ய ஜீபேயில் பணம் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், பெரிதாக யாருமே உதவி செய்யாத நிலையில், சேஷுவிற்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுத்தான் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எத்தனை கோடி செலவானாலும் காப்பாற்றி விடுகின்றனர். ஆனால், நலிந்த கலைஞர்களுக்கு உதவி பண்ண பெரிய நடிகர்கள் மற்றும் உடன் பல ஆண்டுகள் நடித்து வந்த நடிகர்களும் உதவி செய்ய முன் வருவதில்லை என்பது தான் வேதனையான விஷயமாக உள்ளது. நடிகர் சந்தானம், வடிவேலு, லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர் சேஷு என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை இறுதிச்சடங்கு: பள்ளிக்கரணையில் உள்ள சாய் பாபா நகரில் உள்ள 3வது மெயின் ரோடு, 3வது குறுக்குச் சந்தில் உள்ள சேஷுவின் வீட்டில் அவரது உடல் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை 8 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.filmibeat.com/news/no-one-helps-lollu-sabha-seshu-for-his-treatment-at-the-last-time-details-shocks-fans-130057.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider

டிஸ்கி :

இப்போது பார்த்தாலும் அந்த  மூதாட்டி வேடத்தில்  கலக்கி இருப்பார்..

இன்றைய திரை நகைச்சுவையாளர்கள் யோகிபாபு, சந்தானம் எல்லாம்  லொள்ளு சபாவின் அங்கத்தினர்களே.. நன்றி கெட்ட உலகமப்பா..

 

ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..!

2 weeks 1 day ago
ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..!
March 11, 2024, 1:18 pm IST
ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..!

பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, கதைக்களம், எடிட்டிங், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்தும் ட்ரெய்லரில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. 2008 ல் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொள்வதை அடிப்படையாக வைத்து ஆடு ஜீவிதம் நாவலை பென்யாமின் எழுதியிருந்தார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் வெளியாகும்வரை பென்யாமின் அறியப்படும் எழுத்தாளராக இருக்கவில்லை.

நாவல் வெளிவந்த ஒரேயிரவில் ஸ்டார் எழுத்தாளராக கொண்டாடப்பட்டார். ஆடு ஜீவிதம் உடனடியாக பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம்பிடித்தது. குறுகிய காலத்தில் ஆடு ஜீவிதம் நாவல் 100 மறுபதிப்புகளை மலையாளத்தில் கண்டது. இதுவொரு சாதனை.
பிறகு தமிழ், தாய், ஒடியா, அரபு, நேபாள, இந்தி, கன்னடா என்று பல மொழிகளில் இந்நாவல் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. இது வெளியான காலகட்டத்தில் நாவலை திரைப்படமாக்கும் தனது விருப்பத்தை இயக்குநர் பிளெஸ்ஸி பென்யாமினிடம் தெரிவித்தார். அதற்கான வேலைகள் தொடங்கின. பிறகு, படத்தின் பட்ஜெட் ஒரு மலையாள சினிமாவுக்கு மிகப்பெரியது என உணர்ந்து, பட முயற்சியை கைவிட்டனர்.  ஆனால், பிளெஸ்ஸியின் மனதிலிருந்து நாவல் மறையவில்லை.

தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 2017 ல் பிருத்விராஜை வைத்து ஆடு ஜீவிதம் படத்தை எடுப்பதாக அறிவித்தார். 2018 ல் ரஹ்மான் இசையமைப்பாளராக படத்தில் இணைந்தார். கோவிட் காலகட்டத்தில் படப்பிடிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஆடு ஜீவிதத்தை படமாக்க வேண்டும் என்ற விதை பிளெஸ்ஸின் மனதில் விழுந்து, சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு வரும் மார்ச் 28 படம் திரைக்கு வரவிருக்கிறது. ஒரு படைப்பாளியாக பிளெஸ்ஸியின் காத்திருப்பு பாராட்டப்பட வேண்டியது. 2004 ல் தனது 51 வது வயதில் காழ்ச்சா என்ற தனது முதல் படத்தை பிளெஸ்ஸி இயக்கினார். குஜராத் பூகம்பத்தில் பெற்றோர்களை இழந்து, கேரளா வரும் சிறுவனின் பின்னணியில் உருவான காழ்ச்சா புதியதொரு அனுபவத்தை மலையாள ரசிகர்களுக்கு தந்தது.

அடுத்தப் படம் தன்மாத்ராவில் அல்சைமரால் நினைவுகளை இழக்கும் குடும்பத் தலைவனின் கதையை படமாக்கினார். இரண்டு படங்களும் வசூல், விருதுகள் என இரண்டு திசையிலும் கொடிகட்டிப் பறந்தன. அதன் பிறகு இயக்கிய பளிங்கு, கல்கத்தா நியூஸ், பிரம்மரம் படங்கள் சுமாராகவே போயின. 2011 ல் பிரணயம் படத்தின் மூலம் பிளெஸ்ஸி மீண்டும் ரசிகர்களை ஆச்சரிப்படுத்தினார். கடைசியாக அவரது இயக்கத்தில் ஸ்வேதா மேனனின் பிரசவத்தை படம் பிடித்து எடுத்த களிமண்ணு திரைப்படம் வெளியானது.

ஒரு படைப்பாளி சாதாரணமாக யோசிக்காத பகுதிகளில் சிந்தனையை செலுத்துகிறவர் பிளெஸ்ஸி. ஒரு படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மகத்தானது. அவரது திரைவாழ்க்கையின் உச்சமாக கருதப்படும் படம் ஆடு ஜீவிதம். மார்ச் 28 வெளியாகும் இப்படம், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.news18.com/entertainment/cinema-aadu-jeevitham-movie-is-releasing-after-14-years-of-waiting-1374650.html

 

96 ஆவது ஒஸ்கர் விருது விழா - 2024

2 weeks 3 days ago
ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன?
நோலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன.

 

ஓபன்ஹைமர் படக்குழுவினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற வந்தபோது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவருக்கு கோப்பையை வழங்கினார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், நோலன் தனது மனைவியும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளருமான எம்மா தாமஸுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்மா தாமஸ், அந்த தருணத்தைப் பற்றி தான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்தத் தருணத்திலேயே தான் நின்றிருப்பதாகவும் கூறினார்

அவர் தனது கணவரை 'தனித்துவமானவர் என்று வர்ணித்தார். இருப்பினும், ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் பெருமையடைவதாகக் கூறினார். மேலும் தனது மூன்று குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

ஓபன்ஹைமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற எம்மா ஸ்டோன்
எம்மா ஸ்டோன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எம்மா ஸ்டோன் சிறந்த நடிகையாக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தார்.

"நான் அந்த நேரத்தில் அப்படியே சுயநினைவு இழந்துவிட்டேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேடைக்குப் பின்னால் கூறினார்.

"நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுழல்வது போல் உணர்கிறேன். இது ஒரு பெரிய மரியாதை. எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது," என்றார்.

யோர்கோஸ் லாந்திமோஸ் படத்தில் பெல்லா பாக்ஸ்டராக நடித்ததில் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

"புதிதாக ஆனால் உருவகமாக நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு... மொழி மற்றும் திறமைகளை வேகமாகப் பெறும் ஒரு நபராக நடிக்கும் வாய்ப்பு... அவள் மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையான அன்பும் நிறைந்தவளாக இருந்தாள்," என அந்தக் கதாப்பத்திரத்தைப் பற்றி அவர் பேசினார்.

 

ஓபன்ஹைமர் சிலியன் மர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது
சிலியன் மர்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில்லியன் மர்பி செய்தியாளர் அறைக்குள் வரும்போது அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதைப் போலத் தெரிந்தது. (அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை என்றாலும்).

"நான் கொஞ்சம் திகைப்புடன் இருக்கிறேன், இன்று இங்கு நிற்கும் ஐரிஷ் நாட்டவராக இருப்பதில் நான் மிகவும் வியப்படைகிறேன், பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

“இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும் கிறிஸுக்கும் (நோலன்) அத்தகைய சிறப்பு உறவு இருக்கிறது. நாங்கள் 20 வருடங்களாக இணைந்து பணியாற்றி வருகிறோம், அவர் சரியான இயக்குநர் என்று நினைக்கிறேன்...என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. நான் சிறுவயதில் அவருடன் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் செய்தேன், அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்!"

ஐரிஷ் நாட்டில் பிறந்த, ஆஸ்கார் வாங்கும் முதல் நடிகராக இங்கு நிற்பதில் அவர் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

"நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை (ஏற்புரையில்), ஆனால் அயர்லாந்தில் கலைஞர்களை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் சிறந்தவர்கள். அது தொடர வேண்டும்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c51w4gqq9pqo

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

2 weeks 5 days ago
Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28
04:28p0hfjy1b.jpg
காணொளிக் குறிப்பு,

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?

28 பிப்ரவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024

மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை.

2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

இந்தியா டுடே விமர்சனம்

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நட்பு, உயிர் வாழ்வதற்கான வேட்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து பேசுவதாக இந்தியா டுடே தனது திரை விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலில் 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது' எனும் வரியோடு தொடங்குகிறது.

க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இந்த வரி பயன்படுத்தப்பட்ட விதம் படத்தில் வரும் 11 நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை கூறும் விதமாக இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த கதையும் மனித உணர்வுகளை பற்றி ஆழமாக பேசுவதாக இந்தியா டுடே கூறுகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

படத்தின் ஆரம்பத்திலேய ஸ்ரீநாத் பாஸி பள்ளத்தில் விழும் காட்சி காட்டப்பட்டு அதற்கு அவரது நண்பர்கள் கொடுக்கும் ரியாக்ஷனோடு படத்தின் தலைப்பு போடப்படுவதில் இருந்தே, பார்வையாளர்களை படத்திற்குள் இயக்குநர் இழுத்து வந்துவிடுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் கதை 2006ல் நடப்பதாக இருப்பதால், அந்த காலகட்டத்தை இயக்குனர் உறுத்தல் இல்லாமல் இயல்பாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், படம் வேகம் எடுக்கும் இடமே 11 நண்பர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல்லும்போதுதான். அப்போது கலகலப்பாக இருக்கும் திரைப்படம், நண்பர்கள் குணா குகைக்கு சென்றவுடன் த்ரில்லிங்காக மாறுவதாக குறிப்பிட்டுள்ளது

நண்பர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் முதல் ஒரு உயிரை காப்பாற்ற போராடுவது வரை படம் முழுவதும் மனித உணர்வுகளின் இரண்டு எல்லைகளையும் இயக்குனர் சிதம்பரம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக இந்தியா டுடே புகழாரம் சூட்டியுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனைவராலும் பொதுவாக பாராட்டப்படும் ஒரு அம்சம் நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு. தனது நண்பர் ஒருவர் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதும் அவரை உயிருடன் மீட்க வேண்டும் எனும் சூழலில் அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படும் நடிப்பு அபாரமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

'கூஸ்பம்ப்ஸ்' தரும் இளையராஜா

நடிப்பை தாண்டி படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் திரைக்கதை, சுஷின் ஷ்யாமின் இசை மற்றும் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

படத்தில் ஒரெயொரு குறை இருப்பதாக சுட்டிகாட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, பள்ளத்தில் விழுந்த ஸ்ரீநாத் பாஸியை காப்பாற்ற முயலும் காட்சி குறைந்த நேரமே வருவதால் அது படத்தோடு ஒட்டவில்லை என விமர்சித்துள்ளது

மலையாளத்தில் இந்த வருடம் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்களின் வரிசையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் தனக்கான இடத்தை பிடித்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களால் கணிக்க கூடிய வகையில் படத்தின் முடிவு இருந்தாலும், எங்கேயும் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களை படத்திற்குள் கட்டிப்போட்டதுதான் படத்தின் வெற்றி என தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.

தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது என இந்து தமிழ் திசை தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப் பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது என இந்து தமிழ் திசை கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cd1wezzrd5jo

The Kerala Story ஐ  இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது

3 weeks 5 days ago

The Kerala story, படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் படத்துக்கு வந்த கண்டனங்கள் அதிகமாக இருந்ததால், அப்பொழுதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

இந்திப் படமான The Kerala Story ஐ  இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது.

படத்தில் நாயகர்களே இல்லை. நாயகிகள்தான் படம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். முஸ்லீம்களை இவ்வளவு தீவிரமாக  வேறு எந்தப் படத்திலும் சித்தரிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  ஒரு நல்ல முஸ்லீமையும்  படத்தில் காட்டுவதில்லை என்றே கதாசிரியர் தீர்மானித்து விட்டார் போலும்.

மதம் மாற்றும் பகுதிகளை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் செய்பவருக்கு, போதை மாத்திரை தருவது தொட்டு அவர்களை எப்படி சிறீலங்கா ஊடாக சிரியாவுக்கு கடத்துகிறார்கள் என்பதையும்  விளக்கி இருக்கிறார்கள்.

ஒரு உண்மையான கதையை வைத்து படத்தை, எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் உள்ள சம்பவங்களில்  எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

ரமணி vs ரமணி புகழ் தேவதர்சினி இந்தப் படத்தில் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார். நகைச்சுவை நடிப்பில் மட்டுமே அவரைப் பார்த்துப் பழகிய கண்கள், இந்தப் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து ஆச்சரியத்தில் விரிகின்றன.

வன்முறைகள் அதிகம். ஆனாலும் இறுதிவரை பார்க்க வைக்கிறது.

 

வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’

1 month ago
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன்,
Mammootty-in-Bramayugam-Movie-Review-1.j

மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’.  17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும்  நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்;

கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக முயலும் போது வழி தவறி உயர்சாதியைச் சார்ந்த கொடுமோன் போட்டி என்பவரின் தரவாட்டுக்கு (உயர் சாதியினர் வீடு) வந்து விடுகிறார்.  கொடுமோன் போட்டி பாணனை பாடச் சொல்கிறார். அவனது இசையில் மயங்கியவர், பாணனை தன்னுடைய வீட்டிலேயே தங்கச் சொல்கிறார். தயங்கினாலும் பிறகு பாணன் சம்மதிக்கிறார்.  அந்த வீட்டில் போட்டியைத் தவிர ஒரு சமையல்காரர் மட்டுமே இருக்கிறார்.   ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பாணன் அந்த வீட்டில் தங்கும் போது பல அமானுஷ்யமான நிகழ்வுகளைப் பார்க்கிறார்.

சமையல்காரன், பாணனிடம் போட்டியை நம்பாதே என்கிறான். அதனால் மனம் குழம்பிப் போகிறான் பாணன். பகடை விளையாட அழைக்கிறான் போட்டி. அதில், தோற்றதால் தனக்கு அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான்.  ஒரு சிலந்தியைப் போல வலையில் சிக்கிக் கொள்ளும் பாணன் அந்த வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான். என்ன நடந்தது? என்பது கிளைமாக்ஸ்.

Bramayugam-is-set-in-17th-century-Kerala
 

இந்த எளிய கதையை வைத்துக் கொண்டு, மூன்றே மூன்று கதாபாத்திரங்களின் மூலம் ஒரு முழு நீள சினிமாவில் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன்.  மொத்தக் கதையும் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளே மட்டுமே நடக்கிறது. ஆனால், நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு சினிமா அனுபவத்தை தருகிறார். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மற்ற வண்ணங்கள் தேவையில்லை என்ற முடிவு எடுத்ததிலேயே வெற்றி பெறுகிறார் ராகுல்.

கதையின் ஊடாக நமக்கு காட்டப்படும் 17ம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்குமுறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவுக்கே உரித்தான தொன்மங்களையும் மாந்திரீக நடைமுறைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் நறுக்கென்று வெளிப்படுகின்றன. ஒரு ‘ஹாரர்’ படத்தில் நுட்பமான கலை அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர்.

1500x900_1604349-brahmayugam-06-1.png
 

படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டி பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார் மம்மூட்டி.  அவரின் நடையும், கூர்ந்த பார்வையும், அச்சத்தை தரும் அவரது எகத்தாள சிரிப்பும் நம்மை பயத்தில் உறைய வைக்கின்றன. எப்பேர்பட்ட நடிகன் மம்மூட்டி என்பதை முதல் ஷாட்டிலேயே காட்டி விடுகிறார். அந்த வீடு முழுக்க எதிரொலிக்கும் அவரது அமானுஷ்யமான அந்தச் சிரிப்பு திரையரங்கு முழுவதும் நிசப்தத்தை தருகிறது. போட்டி என்ற அவரது தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவரை விட்டால், வேறு யாரையும் அந்த கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்.

பாணனாக வரும் அர்ஜூன் அசோகன் நடிப்பில் மம்மூட்டிக்கு சவால் விடுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவர் காட்டும் ஒடுக்கமான உடல் மொழி, தயங்கி தயங்கி பேசுவது, அமானுஷ்யங்களை காணும் போது, திடுக்கிட்டு குழம்புவது என்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வேட்டி மட்டுமே உடை. அவரின் கண்களில் காணும் மிரட்சியும், பயமும் நமக்கும் தொற்றிக் கொள்கின்றன.

maxresdefault-2-1.jpg
 

இன்னொரு பாத்திரமான சமையல்காரனாக சித்தார்த். மம்மூட்டியுடன் முரண்படும் போதும், அலட்சியமாக பாணனை நடத்தும் போதும் மிக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் தூண் எனில், அது ஒளிப்பதிவு தான்.  படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.  இந்த கதைக்கு தேவையான ஒரு உணர்வு நிலையை இதுவே உருவாக்கி விடுகிறது. கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளருக்கு சிதறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மீது நமது கவனம் முழுமையாக குவிகிறது. குறிப்பாக அவர்களின் கண்களின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் கோணங்களும், ஒளியமைப்பும் புத்துணர்வைத் தருகின்றன. மிக மெதுவாக நகரும் காட்சிகளின் மூலம் அந்தந்த காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறார்.

Bramayugam1708223238792.jpg
 

படத்தின் இசையும், ஒலிக் கோர்ப்பும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. சிறு சிறு ஓசைகளை கூட துல்லியமாக பதிவு செய்திருப்பதன் மூலம் அமானுஷ்யத்தை உணர்த்துகிறார்கள்.  பாணன் பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. ஹாரர் படம் என்பதற்காக திடுக்கிட வைக்கும் ஒலிகளோ, இசையோ இல்லாமல், இயல்பாக காட்சியோடு இணைந்திருக்கின்றன. படத்தின் கொண்டாடப்படப் வேண்டிய இன்னொரு அம்சம் கலை இயக்கமும், ஒப்பனையும். பழைய கால தரவாட்டு வீட்டை அதன் புழங்கு பொருள்களோடு, உருவாக்கி இருக்கிறார்கள்.  சின்னச் சின்ன பொருட்களில் கூட அவ்வளவு மெனக்கெடலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.  ‘பாதாள அறைகளும், மாடங்களும், நெல் குதிர்களும், மதுப் பானைகளும் கலை இயக்கம் என்ற ஒன்று நிகழ்ந்தது போலவே இல்லை’ என்ற நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பு காட்சியோடும், ஒலியோடும், இசையோடும் இணைந்து ஒரு ரிதத்தை உருவாக்கி இருக்கிறது. ‘திடுக் திடுக்’ என்று ‘ஜம்ப் கட்’களை செய்து செயற்கையான திகிலை உருவாக்காமல், மொத்த திரைக் கதையின் நீட்சியாக அமானுஷ்யத்தை ஒரு அனுபவமாக நமக்குள் செலுத்துகிறது எடிட்டிங்.

படத்தில் பத்து பேர் நடித்திருந்தாலும், மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொன்மம் சார்ந்த கதையை வரலாற்று பின்புலத்தில் திகில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல். நடிகர் மம்மூட்டிக்கு இது ஒரு வாழ்நாள் சாதனைப் படம். மாபெரும் அனுபவத்தை தரும்  பிரமயுகம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 

 

https://aramonline.in/16772/brahumayugam-cinema-review/

லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி?

1 month 2 weeks ago
லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? 1196502.jpg  
 

ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.

இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே எலியும் புலியுமாக இருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகிவந்த இந்து - முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதை பேசுகிறது ‘லால் சலாம்’.மதங்களை முன்னிறுத்தி விவாதங்கள் தொடர்ந்து எழும் சூழலில் இப்படியொரு கதைக்களத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மனதார பாராட்டலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன் என பிரச்சார நெடியுடன் வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் முக்கியமான கருத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் - விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டில் தூவப்படும் வெறுப்புணர்வு மெல்ல எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் நான்-லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. கலவரத்தைத் தொடர்ந்து சிறைக்கு சென்று வெளியே வரும் விஷ்ணு விஷால், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இடையில் ஒரு காதல் பாட்டு என சற்றே தொய்வுடன் தொடங்கும் படம், ரஜினியின் என்ட்ரிக்கு பிறகு சூடு பிடிக்கிறது.

சமீப வருடங்களில் வெளியான ரஜினி படங்களையே தூக்கி சாப்பிடும்படியாக ரஜினிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி. கூடவே ரஹ்மான் குரலில் ‘ஜலாலி ஜலாலி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் செம விருந்து. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பு.

 

 

 

ஷார்ப் ஆன வசனங்கள், வயதுக்கு ஏற்ற பக்குவமான கேரக்டர் என தன்னுடைய திரை ஆளுமையால் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார். சிறப்புத் தோற்றம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஏறக்குறைய முழு படத்திலும் ரஜினியின் ஆதிக்கம்தான். மதநல்லிணக்கம் தொடர்பாக ரஜினி பேசும் வசனங்கள் அனைத்துக்கும் அரங்கம் அதிர்கிறது. குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் மைக்கில் பேசுபவரை அழைத்து பேசுவது, இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே அமைதியை ஏற்படுத்த நடக்கும் கூட்டத்தில் ரஜினி பேசுவது ஆகிய காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் ரகம்.

படத்தின் பிரச்சினையே முதல் பாதி நான்-லீனியரில் சொல்லப்படுவதுதான். நிகழ்காலம், கடந்த காலம் இரண்டுமே ஆறு மாத இடைவெளியில் நடப்பவை என்பதால் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. போரடிக்காத வகையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்தாலும் இலக்கில்லாத வகையில் எங்கெங்கோ செல்வதால் எந்த இடத்திலும் படத்துடன் ஒன்றமுடியாத நிலை ஏற்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் கதைக்களம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படத்தில் மிகச் சிறிய அளவே கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றிலுமே எந்தவித பரபரப்போ, அழுத்தமோ இல்லை. படத்தின் மையக்கரு தேர்த் திருவிழாவா அல்லது கிரிக்கெட்டா என்று தெளிவாக சொல்லமுடியாமல் தடுமாறியுள்ளனர். எடிட்டிங்கில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். பல காட்சிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன.

ரஜினி தவிர்த்து விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வரும் அனந்திகா சனில்குமார் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் உதவியிருக்கிறார். படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என்று சொல்லப்பட்ட தன்யா பாலகிருஷ்ணாவின் காட்சிகள் பெரிதாக இல்லை (வெட்டப்பட்டனவோ?) சமூக வலைதள சர்ச்சை காரணமா என்று தெரியவில்லை. இறுதிக் காட்சியில் ஓரிரு நிமிடங்கள் வந்தாலும் ஈர்க்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் இதயத்தை உருக வைக்கிறது. தேர்த் திருவிழா பாடல், மறைந்த ஷாஹுல் ஹமீதுவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருக்கும் ஒரு பாடல் ஆகியவை சிறப்பு.

படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சிகள் நன்றாக கைகொடுத்துள்ளன. குறிப்பாக, செந்தில் தனது மகன் குடும்பத்தை பற்றி பேசும் காட்சி, மருத்துவமனையில் இருக்கும் தனது மகனை நினைத்து ரஜினி ‘அல்லாஹ்’ என்று கதறி அழும் காட்சி ஆகியவை நெகிழச் செய்கின்றன.

சமூக வலைதளங்களில் மதங்களை முன்வைத்து ஒருவர் மீது ஒருவர் வீசும் வன்மக் கணைகளுக்கு நடுவே ஒரு முக்கிய கருத்தை, ரஜினி என்ற ‘பிராண்ட்’ உடன் சுமந்து வந்திருக்கும் ’லால் சலாம்’ படத்தை தாராளமாக வரவேற்கலாம். திரைக்கதையை மெருகேற்றி, காட்சிகளில் அழுத்தம் கூட்டியிருந்தால் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.

லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? | Rajinikanth starrer Lal Salaam Review - hindutamil.in

சிறந்த இசை அல்பத்திற்கான கிராமி விருதைப் பெற்ற இந்திய இசைக்குழு ‘சக்தி’

1 month 2 weeks ago

image

 

2024 ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான கிராமி விருதை இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவினர் வென்றிருக்கிறார்கள். இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் இசைக்கலைஞர்களுக்கு ஓஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு தெரிவித்திருக்கிறார். 

உலகம் முழுவதிலுமுள்ள இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதைப் பெறுவது தான் கனவாக இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸில் பிராம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ‘ஒஸ்கர் நாயகன்’ ஏ ஆ ரஹ்மான் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார். 

இதன் போது 2024 ஆம் ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான விருது, ‘திஸ் மொமண்ட்’ (This Moment) எனும் அல்பத்தை உருவாக்கிய சக்தி குழுவினருக்கு வழங்கப்பட்டது- இந்த இசைக்குழுவில் பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், உஸ்தாத் ஜாஹீர் உசேன் மற்றும் கடம் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான செல்வகணேஷ் விநாயக்ராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிராமி விருதை வென்ற இவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, அதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இவர்களுக்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இந்திய இசைக்கலைஞர்கள் கிராமி விருதை வென்றிருப்பதால் இசையுலக ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

https://www.virakesari.lk/article/175822

இசைஞானியின் ‘நீனைவெல்லாம் நீயடா ’ படத்தில் 70 : 30

1 month 2 weeks ago

image

 

நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். 

‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’  ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்திருக்கிறார். 

இவ்விழாவில் இயக்குநர் ஆதிராஜன் பேசுகையில்,“ எம்முடைய நண்பரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன். எழுபது சதம் உண்மை.. முப்பத சதம் கற்பனை.. கலந்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருவரும் பாடசாலைப் பருவத்தினைக் கடந்து தான் வந்திருப்பார்கள். அதன் போது ஏற்பட்டிருக்கும் முதல் காதல் எம்முடைய உயிர் மண்ணுக்குள் செல்லும் வரை மறக்க இயலாது. அத்தகைய முதல் காதலை வைத்து தான் இப்படம் உருவாகியிருக்கிறது. இசைஞானியின் இசையுடன் இணைந்து பார்க்கும் போது மறக்க இயலாத அனுபவமாக இருக்கும்.” என்றார். 

https://www.virakesari.lk/article/175826

ப்ளூ ஸ்டார் விமர்சனம்

1 month 3 weeks ago
ப்ளூ ஸ்டார் விமர்சனம்
 
 
 
நடிகர்கள்:
அசோக் செல்வன்,கீர்த்தி பாண்டியன்,சாந்தனு பாக்யராஜ்
இயக்கம்: எஸ் ஜெயகுமார்சினிமா வகை:Comedy, Drama, Sportகால அளவு:2 Hrs 48 
 
அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியாக உள்ளது. படம் துவங்கியதுமே அந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குறித்து பேசுகிறார்கள். இந்த ஒரு போட்டியை பற்றி தான் மொத்த படமும் இருக்குமோ என தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லை. பெரிதும் பேசப்படும் அந்த கிரிக்கெட் போட்டி படத்தின் முதல் பாதியிலேயே நடந்துவிடுகிறது.
 
 


யார் ஜெயிக்கிறார், தோற்கிறார் என்பதை தாண்டி காட்டியிருப்பது தான் ப்ளூ ஸ்டார் படத்தின் நல்ல விஷயமே. ஒரே ஒரு கோணத்தில் தான் படத்தை எடுக்க வேண்டும் இல்லை என்று காட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ். ஜெயகுமார்.
 

படம் முழுக்க ஹீரோ ரஞ்சித்தின்(அசோக் செல்வன்)காதல் டிராக்கை மட்டும் காட்டவில்லை ஜெயகுமார். பிற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. பகவதி பெருமாளின் பிளாஷ்பேக் தியேட்டரில் இருப்பவர்களை கவர்கிறது.


ரொம்ப யோசிக்காமல் படம் பார்க்கலாம். எதை சொல்ல வருகிறோம் என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார். தான் சொல்ல வருவதை ரசிகர்களை புரிந்து கொள்ளவும் வைத்திருக்கிறார்.

ஹீரோ படும் அவமானங்களை புரிய வைக்க பலர் அவரை பற்றியும், அவரின் நண்பர்களை பற்றியும் மோசமாக பேசுவதை காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் வேதனை புரிந்துவிட்டது என்றாலும் ரசிகர்களை இயக்குநர் சும்மா விடுவதாக இல்லை. வேதனையை வெளிப்படுத்தும் வசனங்கள் அதிகமாக உள்ளது. அது படத்திற்கு மைனஸாக அமைந்துவிட்டது.
 

கதாபாத்திர தேர்வை பாராட்டியே ஆக வேண்டும். அசோக் செல்வனின் நடிப்பு அருமை. 30களில் இருக்கும் அசோக் செல்வன் டீனேஜராக அசால்டாக நடித்து அசத்தியிருக்கிறார்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி அற்புதம். எதிரணியின் கேப்டன் ராஜேஷாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சாந்தனு பாக்யராஜ். சஜு நவோதயாவுக்கு தனித்து தெரிகிறார்.

ப்ளூ ஸ்டாரின் முக்கிய ஸ்டாரே இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை பெரிய பலம்.

ப்ளூ ஸ்டார்- பார்த்து என்ஜாய் பண்ணலாம்
blue star
 

பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்த ரகசியம்

1 month 3 weeks ago
செயற்கை நுண்ணறிவு: பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்ததன் ரகசியம்
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இனிமேல் உங்கள் விருப்பமான பாடகர்களை, அவர்கள் மறைந்த பின்னரும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அதை நம்ப முடிகிறதா?

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தனது சிறப்புகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது இறந்த பாடகர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உயிர் கொடுப்பதைச் செய்து காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ள பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக அமெரிக்காவின் ஹாலிவுட் போர்க் கொடி தூக்கி வரும் நிலையில் இந்திய திரை உலகம் அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமைகளைப் படைத்திருப்பது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

 
'ஊர்வசி ஊர்வசி' என்று பாடிய குரல் மீண்டும் ஒலிக்கிறது
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/X

லால் சலாம் திரைப்படத்தின் ‘திமிறி எழுடா’ என்ற பாடலில் மறைந்த பாடகர்கள் ஷாஹுல் ஹமீது, பம்பா பாக்யாவின் குரல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இருவருமே தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடனும், பிற இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஷாஹுல் ஹமீது 1980கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். 1993ஆம் ஆண்டில் "திருடா திருடா" திரைப்படத்தில் அவரது தனித்துவமான குரலை வெளிப்படுத்திய "ராசாத்தி என் உசுரு" பாடல் ஹமீதுக்கு திருப்புமுனையாக இருந்தது.

"வண்டிச்சோலை சின்ராசு" படத்தில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே", "காதலன்" படத்தில் "ஊர்வசி ஊர்வசி" மற்றும் "ஜீன்ஸ்" படத்தில் "வாரயோ தோழி" உள்ளிட்ட 1990களின் மிகவும் பிரபலமான தமிழ்ப் பாடல்களை அவர் பாடினார். அவர் 1998ஆம் ஆண்டு தனது 44வது வயதில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/FACEBOOK

பம்பா பாக்யா தமிழ் திரை உலகில் பின்னணிப் பாடகராக வலம் வந்தவர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பொன்னி நதி” பாடல், நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்தில் “சிம்டான்காரன் பாடல், நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தில் “புல்லினங்காள்” பாடல் ஆகியவை அவர் பாடியதில் பிரபலமான பாடல்கள். அவர் 2022ம் ஆண்டு உயிரிழந்தார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/X

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசியிடம் பேசும்போது, "எந்தவொரு தொழில்நுட்பமும் மனித சமுதாயத்திற்கு நன்மை தரவேண்டும். வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது என்று கருதுகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்கும்போது நிறைய யோசித்தேன். பாடகர்களின் குடும்பத்தாரையும் சந்தித்தோம். வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எதையும் செய்வதற்கு நான் விரும்புவதில்லை.

இப்போது நாங்கள் இந்தப் பாடலுக்குத் தேவையானதைச் செய்திருக்கிறோம். நாளை இதேபோன்ற முயற்சியை வேறு யாராவது செய்தாலும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவார்கள். பாடகரின் குடும்பத்திற்கு, அவர்களின் வாரிசுகளுக்கு உரிய தொகையைச் செலுத்திவிட்டு அந்த முயற்சியை மேற்கொள்வார்கள்," என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,SCREENGRAB

'கடவுளுக்கு பிறகு, ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி' - ஷாஹூல் ஹமீதின் மகள்

ஷாஹூல் ஹமீதின் மகள், ஃபாத்திமா ஷாஹுல் ஹமீது இது முற்றிலும் எதிர்பாராதது என்று தெரிவித்தார். அவர் நம்மிடம் பேசும்போது, “ரஹ்மான் அங்கிள், தனக்கே உரிய பாணியில் மேஜிக் செய்கிறார். அப்பாவின் குரலை மீண்டும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

என்னால் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேறு யாருக்கும் புரியும் என்று நான் நினைக்கவில்லை. என் அம்மாவுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தாத்தாவின் காலத்தில் அவருடன் இருக்க முடியாமல் தவித்த என் மகள், இப்போது இந்தப் பாடலைக் கேட்டு குதூகலிக்கிறாள்,” என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தனது தந்தைக்குமான உறவு நட்பையும் தாண்டியது என்கிறார் ஃபாத்திமா.

“அவர்கள் சகோதரர்களைப் போலவே இருந்தார்கள். இருவரும் அவரவர் துறைகளில் வளர்ந்து வரும் காலத்திலேயே தொடங்கிய நட்பு அது. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக ஜிங்கிள்ஸ் இசைக்கும்போது இருவரும் அறிமுகமானார்கள்.

ரஹ்மான் அங்கிளின் சொந்த ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்ட முதல் ஆல்பமான – 'தீன் இசை மாலை'- இஸ்லாமிய பக்திப் பாடல்கள் கொண்டது. அதில் ரஹ்மான் அங்கிளின் டேக் லைனாக மாறிய 'எல்லாப் புகழும் இறைவனுகே' என்ற பாடலை என் தந்தை பாடியிருந்தார்.

சுற்றி பல திறமைசாலிகள் இருந்தாலும் ரஹ்மான் அங்கிள்தான் திறமையை அடையாளம் கண்டு சரியான தளத்தில் பயன்படுத்தினார். கடவுளுக்கு அடுத்தபடியாக ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி செலுத்துகிறோம்,” என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

மறைந்தவர்களின் குரலை மீண்டும் பயன்படுத்துவது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, “தொழில்நுட்பத்துடன் நாம் வளர வேண்டும். இதில் எதிர்மறையாக எதுவும் இல்லை. அப்பாவின் குரலைப் பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது," என்றார் ஃபாத்திமா.

"நான் எப்படி உணர்கிறேன் என்பதை விட, மக்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அவரது ரசிகர்கள் அன்புடனும் மரியாதையுடனும் அதை வரவேற்றதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்."

உண்மையில், பாடல் முதன்முதலில் ஆன்லைனில் வெளியிடப்பட்டபோது, அவரது ரசிகர் ஒருவர்தான் பாடலின் இணைப்பையும் பாடலில் தன் அப்பாவின் குரல் எந்த நிமிடத்தில் ஒலிக்கிறது என்பதையும் குறிப்பிட்டு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இந்தப் பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் மறப்பது மிகவும் எளிதானது. ஆனால், அவர் இறந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே சினிமாவில் இருந்த ஒருவரை மக்கள் எவ்வாறு அன்புடன் நினைவில் கொள்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்,” என்றார்.

 
இனி பாடகர்களின் குரலே பாடலைப் பாடும்
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலேயே முதல் முறையாக மறைந்த பாடகர்களின் குரலை மீண்டும் ஒலிக்க செய்வது இதுவே முதல் முறை.

இது எப்படி சாத்தியமானது என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இதை உருவாக்கிய டைம்லெஸ் வாய்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண சேத்தன் பிபிசியிடம் பேசினார்.

“நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. ரஹ்மான் சார் ஏதாவது புதிய இசைக் கருவி வாங்கி வந்தால், அது எப்படிச் செயல்படுகிறது என்று முழுமையாகக் கற்றுக் கொள்வேன்.

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், இசையமைப்பாளர்களுக்கான இசை உருவாக்கத் தேவைப்படும் மென்பொருட்களைத் தயாரிக்க நானும் என் குழுவும் தொடங்கினோம். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, டைம்லெஸ் வாய்ஸஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்," என்றார் கிருஷ்ண சேத்தன்.

யாருடைய குரலை உருவாக்க நினைக்கிறோமோ, அவரது குரலின் பதிவு தேவை. அது ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

"பதிவு செய்யப்பட்ட குரலைக் கொண்டு ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை பயிற்றுவிக்க வேண்டும். அந்த ஏஐ மாடல் பாடகரின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் கிரகித்துக் கொள்ளும்.

பின்பு, நாம் பதிவு செய்ய நினைக்கும் பாடலை வேறு ஒரு நபரைப் பாடச் சொல்லி பதிவு செய்துகொள்ள வேண்டும். இது பைலட் வாய்ஸ் எனப்படும். பின்பு, நாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மாடல் பைலட் வாய்ஸை பாடகரின் குரலாக மாற்றும். இந்தியாவிலேயே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை,” என்று இந்தத் தொழில்நுட்பத்தை விளக்கினார்.

ஏன் ஷாஹூல் ஹமீது மற்றும் பம்பா பாக்யாவின் குரல்கள் தேர்ந்தெடுக்கபட்டன என்று கேட்டதற்கு, “ஷாஹுல் ஹமீத், பம்பா பாக்யாவின் குரல்கள் மிகவும் தனித்துவமானவை. செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்குக் கொண்டு வர இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை," என்றார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,KRISHNA CHETAN

மேலும், "பம்பா பக்கியாவின் குரல் ரஹ்மான் சாருக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு மாதிரி குரலை உருவாக்கியபோது, அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஷாஹூல் ஹமீது அவருடன் நெடு நாட்களாகப் பயணம் செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,” என்று கூறினார்.

டைம்லெஸ் வாய்ஸஸ் என்பது பாடர்களின் குரல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணன் சேத்தன்.

“இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒரு பாடகரின் குரலை காலத்துக்கும் பாதுகாக்க முடியும். மறைந்த பாடகரின் குரலைப் பயன்படுத்தும்போது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு உரிய வெகுமதியை முன்கூட்டியே குடும்பத்தினருக்கு அளித்துவிடுகிறோம்,” என்றார்.

இந்தத் தொழில்நுட்பம் இசைத் துறையில் பல மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிருஷ்ண சேத்தன்.

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தங்கள் குரல்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விரும்பும் முன்னணி பாடகர்களுடன் நாங்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளோம். அவர்களின் குரல்களைப் பதிவு செய்து சோதனை செய்து வருகிறோம்.

ஸ்டூடியோவுக்கு நேரில் செல்ல முடியாத ஒரு பாடகரின் ஏஐ குரலைக் கொண்டு, பாடலைப் பதிவு செய்துகொள்ள முடியும். பல்வேறு கால கட்டங்களில் ஒரு பாடகரின் குரல் எப்படி இருந்ததோ அதைப் பதிவு செய்து ஒரே பாடலில் சேர்க்க முடியும்.

மேலும், ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படும் திரைப்படங்களின் நடிகர்களுக்குத் தங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், ஏஐ மூலம் அவரது குரலிலேயே அனைத்து மொழி ரசிகர்களிடமும் பேச முடியும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cnknq92w234o

32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

1 month 3 weeks ago
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

article_image1

Poonam pandey

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

article_image2

கொரோனா சமயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றதால், இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட கோவா சென்றிருந்த பூனம் பாண்டே, அங்கு தன் கணவர் தன்னை அடித்து துன்புறித்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருமணமான இரண்டே வாரத்தில் பூனம் பாண்டேவின் கணவர் சாம் மும்பை போலீசாரான் கைது செய்யப்பட்டார்.

 

article_image3

 

பின்னர் சில தினங்களிலேயே தன்னுடைய கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டதாக பூனம் பாண்டே அறிவித்ததை பார்த்த நெட்டிசன்கள் அவர் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்துவருவதாக விமர்சித்தனர். இதுதவிர நிர்வாண படங்களிலும் நடித்து வந்த பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

article_image4

 

அவர் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் "இன்று காலை எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. கர்ப்பப்பை புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். பூனம் பாண்டேவின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

https://tamil.asianetnews.com/gallery/gallery/poonam-pandey-died-at-the-age-of-32-due-to-cervical-cancer-gan-s87u2c#image3

 

‘நெரு’ (Neru-மலையாளம்) பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடக் கற்றுத் தரும் படம்!

1 month 4 weeks ago
பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடக் கற்றுத் தரும் படம்!

-வசந்த் பாரதி

 

500x300_2002120-india-films-neru1.jpg

‘நெரு’ (Neru). மலையாளச் சொல்லுக்கு  ‘உண்மை’ என்று அர்த்தம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பார்வையற்ற இளம் பெண், உண்மையை நிலை நாட்ட நடத்தும் சட்டப் போராட்டமே கதை! ஆரம்பம் தொடங்கி இறுதி வரை அறம் பிறழாமல், விறுவிறுப்பு குறையாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் திரைக் கதை, இயக்கம் அசத்துகிறது!

மலையாள இயக்குனர்கள் தமக்குள்ள சமூக பொறுப்பில் சிறிதும் சமரசம் செய்து கொள்வதில்லை. தாம் கூற வருவதை அவர்கள்  தெள்ள தெளிவாக கூறி பரந்த அளவில் பாராட்டையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியடைகிறார்கள்! திரைக்கதை உருவாக்கத்தில் அவர்கள் கோடம்பாக்கத்தை விட  மேம்பட்ட தளத்தில்இருப்பதை இது போன்ற திரைப்படங்கள் நிரூபித்து வருகின்றன.

திரிஷியம் படைத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் சமீபத்திய படமே  நெரு. இந்த படத்தின் குற்றவாளியான மைக்கேல் ஒரு பெரும் செல்வந்தரின் மகன்!  கண் பார்வையற்ற ஒரு இஸ்லாமிய இளம்  பெண்ணை வீட்டில் தனியே இருக்கையில் அந்த மிருகம் சிதைத்து விடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை நசுக்க பார்க்கிற முயற்சிகள் பல விதங்களில் அரங்கேறுகிறது.

Mohanlal-Jeethu-Joseph-Neru.jpg இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் மோகன்லால்.

வலுவான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர்  ( சித்திக்) மூலமாக பணத்தை கொடுத்து சரி கட்டி விடலாம் என்ற ரீதியில், கொலை மிரட்டல் மூலமாக முயற்சிகள் அரங்கேறுகிறது. குற்றவாளியை தப்பிக்க செய்யும் சாட்சியங்களை ஆதாரங்களை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்குகிறார் நாயகன் மோகன்லால்!

பொதுவாக ஒரு குற்றம் நிகழும் போது அந்த குற்றவாளியை தப்பிக்க வைக்க கையாளுகிற உத்தி, அந்த குற்ற சம்பவம் நிகழும்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் அந்த குற்ற சம்பவம் நடந்த இடத்தில இல்லை என்பதே. இந்த உத்தியை திரிஷ்யம் படத்தில் இயக்குனர் லாவகமாக பயன்படுத்தியிருப்பார். அதில் குற்ற சம்பவம் நிகழ்ந்த அன்று மோகன்லால் குடும்பத்தினர் அந்த ஊரிலேயே இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து அந்த குடும்பம் தண்டனையிலிருந்து தப்பித்து இருக்கும். அந்த படத்திற்கு நேர்மாறாக இந்தப் படத்தில் நிஜமாகவே திமிர்த்தனத்துடன் அரங்கேறிய  குற்றத்தை மறைக்க குற்றம் சுமத்தப்பட்டவரின் வழக்கறிஞர் தன்னுடைய சாதூர்யத்தனத்தால் வீடியோ  ஆதாரங்களை அழித்து, நீதிமன்றத்தை திசை திருப்ப முயல்வதை அறிந்து நாயகன் மோகன்லால் அதனை பொய் என்று நிரூபிக்கிறார்.

GEeokWRbsAAc7D6.jpg

பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளம் பெண்ணின் தாய் இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட்டவள்! ஆகவே, வளர்ப்பு தந்தையே தன் மகளை கற்பழித்திருக்க வாய்ப்புண்டு என்ற கொடூர திசைதிருப்பல்கள் நடக்கின்றன! இதனையும் மோகன்லால் மிக நேர்த்தியாக முறியடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்பம்சம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு பழக்கப்பட்ட  தனிச் சிறப்பம்சம் கையால் தடவி உருவத்தை மனக்கண்ணால் உள்வாங்கி களிமண்ணால் உருவத்தை வடிக்கின்ற ஆற்றல் அதனைக் கொண்டு அந்தப்பெண் அந்த குற்றவாளி உருவத்தை களி மண்ணால்  வடித்து கொடுத்ததால்  போலிஸ் குற்றவாளியை  கண்டு பிடித்து விடுகிறது. இது பற்றியும் நீதிமன்றத்தில் கேள்வி எழுகிறது குற்றம் சுமத்தப்பட்டவரின் வழக்கறிஞர் மூலமாக!

1652816-h-228dba42c0b9-Copy.jpg

அது எப்படி உன்னை ஒருவன் பலாத்காரம் செய்யும்போது அவன் முகத்தை கைகளால் வருடிக்கொண்டிருப்பாய் .அவன் செயலை நீ  அனுபவித்தாயோ என்பதான கேள்விகள் எல்லாம்  முகம் சுளிக்க செய்யும் கேள்விகள்! அதற்கு பதிலாக இயக்குனர் வைக்கும் வாதம் தான் அருமையான ஒன்று;

அந்த காமக் கொடூரனிடம் தான். தப்பிக்க முடியாது சிக்கி கொண்டவுடன் அந்த குற்றவாளியை தப்பிக்க விடக்கூடாது என்பதால் தான் அந்த இளம் பெண் அந்த கொடியவன் முகத்தை தனது கைகளால் தொட்டு பார்த்தாள்  என்று மோகன்லால் மூலமாய் இயக்குனர் தமது நியாயப்படுத்துதல் வாதத்தையை முன் வைத்திருப்பார். அந்த இளம் பெண்ணின் அந்த சிறப்பு திறமை தான் குற்றவாளியை தப்பிக்க விடாது செய்தது .அதோடு மட்டுமன்றி, அந்த பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் அந்த திறமையை நம்ப மறுக்கிறது  குற்றவாளி தரப்பினர் .

அப்போது நீதிமன்றத்தின் முன்பாகவே அந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உருவத்தை தொட்டுத்தடவி களிமண்ணால் உருவமாக படைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதைத் தொடர்ந்து அவர் எதிர் தரப்பினர்  ஒருவரின் உருவத்தை உருவாக்க ஒத்து கொள்கிறார் .

அந்த உருவம் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் சித்திக்கின் உருவம் ஏற்கனேவே இந்த வழக்கு தோற்று விடும் என்கிற வெறியில்  இருக்கும் இவர் தம்மை இந்த இளம் பெண் உருவமாய் வடிக்கக்கூடாது என்று அவரை திசை திருப்ப வக்கிரத்தன கேள்விகளை எல்லாம் கேட்டு வார்தைகளால் கொடுமைப்படுத்துவார். அதனை எல்லாம் கண்ணீரோடு சகித்துக் கொண்டு   அந்த இளம் பெண் நேர்த்தியாய் அந்த வழக்கறிஞர் உருவத்தை வடித்து தமது தனித் திறமையை நீதி மன்றத்தில் நிருபிப்பார்!

GB4t3oLaIAAXioz.jpg

இது போன்ற வழக்குகளில் எல்லா வழக்கறிஞர்களும் மோகன்லால் போல புத்திக் கூர்மை உள்ளவர்களாக இருப்பதில்லை. முதலில் இந்த வழக்கை விசாரிக்கும் அரசு தரப்பு வழக்கறிஞரை எதிர்தரப்பு விலைபேசி விடுவதால் அவர் சொதப்புவார்! இதைத் தொடர்ந்து ஒரு திற்மையான வழக்கறிஞ்ரை தேடும் போது ஆரம்பத்தில் மோகன்லால் மறுப்பார்! ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்படக் கூடிய சூழல்கள் அவர் கவனத்திற்கு வரவும் தானே மனம் மாறி, இந்த வழக்கிற்குள் நுழைகிறார்! அதன் பிறகு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அவமானப்பட வேண்டியதில்லை. துணிந்து போராட முடியும். அதற்கு உதவ மனித நேயம் கொண்ட வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் உண்டு! எதிர் தரப்பினர் எவ்வளவு வலுவானவர்கள் ஆனாலும், உண்மையை நிலை நாட்ட முடியும் என இந்தப் படம் தரும் செய்தி மிக முக்கியமானது.

பாதிக்கப்பட்ட பெண் சாராவாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், அவமானங்களை பொறுத்துக் கொண்டு உறுதி குலையாமல் போராடுவதில் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பெறுகிறார்! குறிப்பாக, உச்சகட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் எதிர்த ரப்பு வழக்கறிஞரின் வக்கிரமான வாதங்களை எதிர் கொண்டதில் அசத்தி இருக்கிறார்! பிரியாமணி, சித்திக், சாந்தி, ஜெகதீஷ், மேத்யூ வர்கீஸ்  ஆகிய அனைத்து நடிகர்களும் சிறந்த பங்களிப்பை தந்துள்ளனர். ஜித்து மற்றும் சாந்தி மாயாதேவியின் திரைக்கதை வசனம், விநாயக்கின் நுணுக்கமான படத் தொகுப்பு விஷ்ணு ஷ்யாமின் சூழலுக்கு உகந்த பின்னணி இசை அகியவை படத்தை தூக்கி நிறுத்துகின்றன!

இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தான் கையில் எடுத்த விசயத்திலிருந்து எள்ளளவும் விலகி செல்லாது வணிக ரீதியிலான மசாலாத்தனங்கள் இன்றி ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ள வகையில் இயக்குனர் தனக்குள்ள சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதை பாராட்டியாக வேண்டும்.

மலையாளம் மட்டுமின்றி, தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த சினிமாவை  ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்!

விமர்சனம்; வசந்த் பாரதி
 

https://aramonline.in/16488/neru-malayalam-cinema/

The hunt for Veerappan.

2 months ago

இன்று இந்த தொடரை பார்த்து முடித்தேன்.

நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்த படம்.

தனிப்பட்ட ரீதியில் ஏனோ தெரியவில்லை வீரப்பன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது.

எல்லைக் கிராம மக்களை கர்நாடக தமிழ்நாட்டு காவல்துறையினர் மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பெண்கள் குழந்தைகளைக் கூட விட்டுவைக்கவில்லை.

ராஜகுமார் கடத்தல் மிகவும் துணிகரமாக திட்டம் போட்டு செய்தது மட்டுமன்றி 90 நாட்கள் கைதியாகவும் இருந்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் விடுதலையின் போது இருவருமே கண்ணீர் மல்ல கட்டித் தழுவினார்களாம்.

 

கடைசியில் இலங்கை போய் தலைவர் பிரபாகரனுடன் வாழ விரும்பியதை வைத்து தலைவர் பிரபாகரன் உன்னை அழைத்து வரச் சொன்னார் என்று அம்புலலன்ஸ் ஆக உருமறைப்பு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றிக் கொண்டுவந்து சுட்டுக் கொன்றதாக காட்டுகிறார்கள்.

ஆனாலும் நெத்தியில் உள்ள சூட்டைப் பார்த்து இது தானாகவே தனக்கு வெடி வைத்ததாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.

வழமை போல இதிலும் எமது தலைவரை பாவித்தே வீரப்பனின் முதுகில் குத்தியுள்ளார்கள்.

விரும்பியவர்கள் Nét Flex மூலம் பார்க்கலாம்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

2 months ago

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானதாக செய்தி !! 😥 
செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றாராம் . இது உண்மையா தெரியவில்லை ...

Society of the snow - சிறு குறிப்பு

2 months 2 weeks ago

 

image.png

Society of the snow

(Netflix release)

மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு.

இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். 

அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால், அது தன்னை தக்க வைக்க, உயிர்வாழ எந்த எல்லைக்கும் போகும் திறன் வாய்ந்தது என்பதுவும், இயற்கைக்கு சவால் விடுவதன் மூலமே தன்னை தக்கவைக்க முடிகின்றது எனவும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த அடிப்படை உண்மையை 1972 இல் அந்தீஸ் மலைத் தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் தப்பி மனித இனம் வாழவே முடியாத கடும் குளிர் நிறைந்த பனி சிகரத்துக்குள் 70 நாட்களுக்கும் மேல் வாழ்ந்து உயிர் பிழைத்தவர்களின் வாழ்வு எமக்கு சொல்கின்றது.

உண்பதுக்கு எதுவும் இன்றி, தம்முடன் பயணித்த சக நண்பர்களின் மற்றும் பயணிகளின் இறந்த உடல்களை வெட்டி உண்ணும் நிலை வரை அவர்கள் சென்று தம் உயிரை காப்பாற்றிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் 4 தினங்களுக்கு மேல் பனிக்குவியலால் பல அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்டு மீள்கின்றனர். அருகில் இருக்கும் சக நண்பர்களின் மரணங்களை நேரடியாகவே காண்கின்றனர். 

எந்த ஒரு உரினமும் வாழ முடியாத சூழலை தாக்குப் பிடித்து 16 பேர் தப்புகின்றனர். 

அவர்களை காப்பாற்றியது மனித இனத்துக்கு என்று இருக்கும் அந்த உயிர்பிழைத்தலுக்காக எந்த சவாலையும் எதிர் கொள்ளும் பண்புதான் (Survival).

இவர்களின் உண்மைக் கதையை ஒட்டி Netflix இனால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Society of the snow.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கே சென்று, அந்த கடும் குளிர் பிரதேசத்திலேயே செட் வைத்து, உண்மைக்கு மிக நெருக்கமாக சென்று இப்படத்தை எடுத்துள்ளனர்.

படம் ஆரம்பித்து, விமான விபத்து நிகழ்ந்த அந்த நிமிடத்தில் இருந்து முடிவு வரைக்கும் பார்ப்பவர்களை 
 'சில்லிட' வைக்கும் சினிமா இது.

நேற்று இரவு இப் படத்தை பார்த்தேன். என் பிள்ளைகள் இருவருக்கும் 'கண்டிப்பாக பார்க்கவும்' என கேட்டுக் கொண்டுள்ளேன்.

முடிந்தால் நீங்களும் பாருங்கள்.

 

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

2 months 2 weeks ago
Play video, "அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?", கால அளவு 2,40
02:40p0h4ncm9.jpg
காணொளிக் குறிப்பு,

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது.

வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது.

படத்தின் முதல் பாதியில், ஏலியனின் பார்வையில் உலகைக் காட்டும் காட்சிகள் சிரிப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கருணாகரன், யோகி பாபு ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர். இரண்டாவது பாதியில் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளன.

ஏலியன் படங்கள் புதிதல்ல என்றாலும் அவை பெரும்பாலும், ஹாலிவுட் படங்களிலேயே பயன்படுத்தப்பட்டது. தமிழ் ரசிகர்கள் அதை மொழிபெயர்ப்புப் படமாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கதை ஒன்றில் ஏலியனை பொருத்திப் பார்த்து ரசிக்கும் வாய்பை இயக்குநர் ரவிக்குமார் உருவாக்கி தந்திருக்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, உருவாகி வரும் அயலான், கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தாமதமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இனி பார்க்கலாம்.

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

 
அயலான்: தமிழ் பேசும் ஏலியன்
Ayalaan movie review

பட மூலாதாரம்,THEAYALAAN/@X

முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பியே படக்குழு இதில் இறங்கியிருப்பதைக் காண முடிவதாக தினமணி தன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “அதற்கேற்ற தகுந்த உழைப்பை கிராபிக்ஸ் குழு சரியாகக் கொடுத்திருக்கிறது. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது படக்குழு.

ஏலியனை முகபாவனைகளுடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருந்தனர்,” என்று தினமணி விமர்சனம் செய்துள்ளது.

மேலும், “நாம் யூகிக்கக்கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் அடங்கியிருக்கிறது இயக்குநரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும், அதன் பின் மெதுவாக மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம், ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்பு சாயல் படத்தில் தெரிகிறது.

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய பாணியிலான நடிப்பை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது,” என்றும் அயலான் திரைப்படத்தைப் பற்றி தினமணி கூறுகிறது.

 
ரசிக்க வைக்கும் ஏலியன்
Ayalaan movie review

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

ஹாலிவுட் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலப்பயணம் என்ற கருவை இயக்குநர் ரவிக்குமார், 'இன்று நேற்று நாளை' என்ற படத்தில் எளிய தமிழ் கதை மூலம் அனைவருக்கும் புரியும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவருடைய இரண்டாவது படத்திலும் சையன்ஸ் ஃபிக்ஷன் கருப்பொருளைக் கொண்டுள்ளார்.

அதுகுறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், "ஹீரோ அறிமுக பாடல், காதல், இரண்டு நகைச்சுவை நடிகர்கள், ஒரு கார்ப்பரேட் வில்லன், கொஞ்சம் அம்மா சென்டிமென்ட், இயற்கை முறை விவசாயம் குறித்த சில அறிவுரைகள் என தமிழ் படத்துக்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன," என்று விமர்சித்துள்ளது.

எனினும், சூப்பர் பவர், பறக்கும் தட்டு, ரோபோக்கள் என ஹாலிவுட் படங்களில் பார்த்த விஷயங்களுக்கு நிகராக இயக்குநர் ரவிக்குமார் கதையில் நிறைய டிவிஸ்டுகள் வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

இந்தப் படம் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளதற்கு இதுவே காரணம் எனப் பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், "படத்தின் முதல் பாதியில் டாட்டூ என்ற ஏலியனை ரசிக்கும்படியான கார்ட்டூன் கதாபாத்திரம் போல் பயன்படுத்தி நகைச்சுவையைத் தூண்டியிருக்கிறார் இயக்குநர்.

விசுவல் எஃபெக்ட்ஸ் திரையில் காண்பதற்குத் தங்கு தடையின்றி இருப்பது, படத்தில் கூடுதல் மேஜிக் செய்கிறது,” என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

 
அயலான் காட்டும் புதிய உலகம்
Ayalaan movie review

பட மூலாதாரம்,THEAYALAAN/@X

இந்து தமிழ் திசை நாளிதழ் தனது விமர்சனத்தில், “தமிழில் இதுவரை பார்த்திராத அளவு கிராபிக்ஸ் காட்சிகளில் அத்தனை நேர்த்தி. குறிப்பாக, ஏலியனின் உடல் பாகங்கள் தொடங்கி அதன் அசைவுகள், உடல்மொழி வரை துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன," எனப் பாராட்டியுள்ளது.

"தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். வழக்கமாக இந்திய சினிமாக்களில் கிராபிக்ஸ் சொதப்ப காரணம், அதன் லைட்டிங்கில் கவனம் செலுத்தாததுதான் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் இதில் படம் முழுக்க அப்படியான குறை எதுவும் இல்லாமல் துல்லியமான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. ஏலியனும் கியூட்டாக வடிவமைப்பட்டுள்ளதால் குழந்தைகளைக் கவர வாய்ப்புள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.

 
ஏ.ஆர்.ரஹ்மான் நடனம்
Ayalaan movie review

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், “அசர வைக்கும் காட்சிகள் மூலம், இந்த திரைப்படம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். திகைப்பூட்டும் காட்சிகள் வேறொரு உலகத்துக்கு உங்களை எடுத்துச் செல்லும்,” என்று கூறுகிறது.

“படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள். அதை ஓரிடத்தில்கூட பிசிறு தட்டாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது கிராஃபிக்ஸ் குழு. ஏலியனுக்கு பின்னணிக் குரலாக வந்திருக்கும் சித்தார்த்தின் குரல் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர் ரஹ்மான், ஒரு பாடலில் சிவக்கார்த்திகேயனுடன் சேர்ந்து நடனமாடியும் உள்ளார். மேடைகளில் அதிக சத்தம் போட்டுக்கூட பேசாத ரஹ்மானை பார்த்த ரசிகர்களுக்கு, அவர் நடனமாடியிருப்பது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. இயக்குநர் ரவிக்குமாரும் அதே பாடலில் நடனமாடியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cmmddq9jne4o

கேப்டன் மில்லர் Review:

2 months 2 weeks ago
கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி?  

1182656.jpg  

 

வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன்.

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிறார். ஆனால், அங்கு தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி ஊர் திரும்ப, கொலைகாரன் என கூறி துரத்தியடிக்கப்படுகிறார். பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையிலிருந்து மக்களை மீட்டது எப்படி என்பதே திரைக்கதை.

ஆங்கிலேயே ஆதிக்கத்தையும், அரசனின் சாதிய ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் இணைத்து, அதனைச் சுற்றி ‘மாஸ்’ தருணங்களை கட்டமைத்து அழுத்தமான கதையாடலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். சுதந்திர போராட்டக் கதையை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளிருந்து சொல்ல முயன்றது சிறப்பு. “முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம். கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?’ என தனுஷ் பேசும் வசனம், “கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்” என்ற அதிதி பாலன் வசனம் வழியே ஒடுக்குமுறையின் அனைத்து கதவுகளையும் பதம் பார்த்தற்கு பாராட்டுகள்!

தனுஷின் இன்ட்ரோவும், அவருக்கான மாஸ் காட்சிகள் எழுதப்பட்ட விதம், ரசிகர்களுக்கான பிரத்யேக விருந்து. குறிப்பாக பரபர சேஸிங்கில், புகுந்து விளையாடும் கேமராவும், இமைக்கும் நொடியில் வரும் இன்டர்கட் ஷாட்ஸுடன் படமாக்கப்பட்ட இடைவேளைக் காட்சி அட்டகாசமான திரையனுபவம். 6 அத்தியாயங்களாக பிரித்து சொல்லப்படும் இக்கதையில் அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் வன்முறைக் காட்சிகளும், தெறிக்கும் தோட்டாக்களும், ரத்தமும் சதையுமான திரைக்கதைக்கு தேவையாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் உணர்வைத் தருகிறது.

தனுஷுக்கும் சிவராஜ்குமாருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப்போகிறது. சிவராஜ்குமாரும், தனுஷும், சந்திப் கிஷனும் இணையும் இறுதிக் காட்சி ‘சூப்பர் ஹீரோ’ படத்துக்கு நிகரான சினிமாட்டிக் அனுபவம்.

எனர்ஜியூட்டும் ‘கில்லர் கில்லர்’ பாடல் படமாக்கப்பட்ட விதம், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஆகியவை ஓடிடி காலத்திலும் திரையரங்கில் படம் பார்ப்பதற்கான நியாயத்தை உறுதி செய்கிறது. “கோயில் கருவறைக்குள்ள நம்ம போகலாமா?” என கேட்கும்போது, “போக கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லலயே”, ‘நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ போன்ற வசனங்கள் அப்லாஸ் அள்ளுகின்றன. தனுஷ் பாத்திரம் ஒன்றை கழுவிக்கொண்டிருக்க, நிவேதிதா சதீஷ் துப்பாக்கியை துடைக்கும் காட்சி அட்டகாசம்.

மூன்று வெவ்வேறு தோற்றங்கள், அதற்கேற்ற உடல்மொழி, தன் மக்களை கொல்லும் இடத்தில் அஞ்சி நடுங்குவது, குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகுவது, ஆக்ரோஷமாக திருப்பி அடிக்கும் இடங்களில் ‘அசுர’த்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

சிவராஜ்குமாரின் சர்ப்ரைஸ் இன்ட்ரோவில் ‘ஜெயிலர்’ பட நடையாக இருந்தாலும் அவரது ஸ்கிரின் ப்ரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. சந்தீப் கிஷன் கேமியோவில் கவனம் பெறுகிறார். ஆக்‌ஷனில் களமிறங்கும் நிவேதிதா சதீஷ், ஓரிடத்தில் ஆக்ரோஷம் கொ(ல்)ள்ளும் பிரியங்கா மோகன் கதாபாத்திரங்களும் ரொமான்ஸுக்காக பயன்படுத்தபடுத்தாமல் கதைக்களத்துடன் ஒன்றியே பயணிக்க வைப்பதன் வழியே இயக்குநர் அருண் தனித்து தெரிகிறார். இருவரும் நடிப்பில் குறையில்லாமல் கொடுத்ததை செய்துள்ளனர்.

துணைக் கதாபாத்திரங்களான இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஜெயப்பிரகாஷ், நன்றாகவே எழுதப்பட்டுள்ளன. அடுத்த பாகத்துக்காக அதிதி பாலன். இந்தப் படத்தில் பெரிய அளவில் வேலையில்லை.

உடுக்கை சத்தம் ஒலித்தபடி கொடுக்கப்படும் தனுஷின் இன்ட்ரோ தொடங்கி காட்சிகளுக்கான மாஸை மெருகேற்றி சின்ன சின்ன சீன்களை செதுக்கியது வரை ஜி.வி.பிரகாஷ் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், ‘உன் ஒளியிலே’ பாடலை ஷான் ரோல்டனின் வெர்ஷனை படத்தில் வைத்திருக்கலாம். சித்தார்த் நுனியின் கேமராவும், நாகூரான் ராமசந்திரனின் கட்ஸும் இன்டர்வல் ப்ளாக்கையும், க்ளைமாக்ஸையும் ரசிக்க வைக்கின்றன.

பொறுமையாக நகரும் காட்சிகளும் அதீத வன்முறையும் சிலருக்கு அயற்சியை கொடுக்கலாம். தாய் இறந்துவிட்டதாக ஓரிடத்தில் வசனத்தில் சொல்லப்படும். அந்த வசனத்தையே இரண்டாம் பாதியில் மீண்டும் காட்சியாக்கியிருப்பது ஏன் என தெரியவில்லை. அதேபோல, பிரிட்டிஷ் ராணுவப் படையில் இணைந்தால், தன் மக்களை கொல்ல வேண்டியிருக்கும் என்பது கூடவா தனுஷுக்கு தெரிந்திருக்காது என்பன போன்ற லாஜிக் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன.

இறுதியில் வரும் சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான நோக்கமும் தேவையும் பெரிய அளவில் கதையில் இருப்பதாக தெரியவில்லை. அதன்பின் வரும் காட்சிகளும் சற்று இழுவை.

நாட்டார் தெய்வ வழிபாடு, கம்யூனிசத்தின் தூவல், ஆதிக்குடியினரின் நிலப்பறிப்பு, சாதிய பாகுபாடு, பிரிட்டிஷ் ஆதிக்கம் என பல சப்ஜெக்ட்டுகளை தொட்டிருக்கிறது படம். ஆனால், இதில் காட்டப்படும் பல விஷயங்கள் சுதந்திரத்துக்கு முன் நிகழ்வதாக சொன்னாலும் இன்றும் பொருத்திப் பார்க்க முடிவது படத்தின் பலம். மொத்தத்தில் திரையனுபவத்துக்கு ஏற்ற வன்முறை கலந்த வெகுஜன சினிமா எல்லோருக்குமானதாக இருக்குமா என்பதும் அவரவர் விருப்பம் சார்ந்ததே!கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி? | Dhanush starrer captain miller movie review - hindutamil.in

நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ்

2 months 2 weeks ago
நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ் 1176842.jpg  
 

சென்னை: நானி நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ படம் ஜனவரி 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் அவர் நடித்துள்ள 30-வது படமான ‘ஹாய் நான்னா’ கடந்த டிச.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/ott-platform/ott-news/1176842-actor-nani-starrer-hi-nanna-movie-will-stream-ott-on-jan-4.html

 

 

 

Checked
Thu, 03/28/2024 - 19:25
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed