எனது மாமாவின் மகன் , மைத்துனன் , என்னைவிட இரண்டு வயது தான் அதிகம் ,ஆறடி உயரம் , சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆளுமையானவர் , விளையாட்டு கிரிக்கெட் முதல் கொண்டு கல்வி வரை மட்டுமல்லாது தமையனோடும் எங்களோடு போடும் குத்து சணடை தொடக்கம் விளையாட்டு வரை எப்போதும் அவர் இருந்தால் அது எங்களுக்குச் சிறிய திருவிழாதான்.
என் மாமா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் முதலில் மட்டக்களப்பு , சாவகச்சேரி பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் . அதனால் ராகவனும் மட்டக்களப்பு , முதல் சாவகச்சேரி இந்து கல்லூரியிலும் , யாழ் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றவர் .
சிறுவனாக இருக்கும் போதே மிக உயர்ந்த சிந்தனை கொண்டு இருந்தவர் , ஒரு விமான ஓட்டியாக படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். யாழப்பாணத்தில் மிக அரிதானவர்கள் தான் டாக்டர் , என்ஜெனியரை தாண்டி பறக்கிற உயர்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள் .
யாழ் இந்து கல்லுரியில் 8 பாடங்களிலும் " D" எடுத்தவர்கள் இவன் மட்டும் முக்கியமானவனல்ல இவனது உற்ற நண்பர்களும் தான் , இன்னும் அவர்கள் இவனை இறுதி வழியனுப்ப வந்து அழுது கொண்டு இருந்தது இன்னும் மறக்கமுடியாது .
வல்வை வைத்தீஸ்வரன் சிவன் கோயில் தான் எங்களுக்கு குல தெய்வம் , ஸ்கூல் லீவு விட்டு ஊருக்கு வந்தால் கோயில் பந்தம் பிடிப்பது முதல் அந்த சுற்று வட்ட வீடுகள் எல்லாம் நாங்கள் கால் பதித்த இடம் தான் .
நாங்களும் வீட்டில் விக்கிரங்கள் வைத்திருக்கின்றோம் , எங்கட வீட்டுக்கு அவர்கள் வந்தால் என் முருகன் சாமிக்கு கொடி ஏற்றி 10 நாளில் தேர் , பூங்காவனம் தீர்த்தம் எல்லாம் வைப்போம் நான் தான் ஐயர் , அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போனால் பிள்ளையார் சாமிக்கு கொடி ஏற்றி திருவிழா நடத்தி 10ம் நாள் தீர்ததமாடுவோம் . அவர் தான் ஐயர் . உண்மையான கோயில விட இங்க பக்தியும் , ஒழுக்கமும் உண்மையாக இருக்கும் .
அவனோட கதையை நான் சுருக்கமாக சொல்லோணுமென்றால் , நானும் அவனும் கடைசியாக சந்தித்தது கோண்டாவிலில் 1990 களில் தமிழீழ விடுதலை புலிகள் மாணவர் அமைப்பு (SOLT ) பொறுப்பாளர்களுக்கான போது கூட்டம் நடைபெற்றது .
நான் வடமராட்ச்சியில் இருந்தும் , அவர் வலிகாமத்திலிருந்தும் சென்றிருந்தோம் , அது போர் முனைக்கு எங்களை தயார் படுத்துவதாக இருந்தாலும் , அவர்கள் இறுதி இலக்கு ஒன்றுதான் . டேய் " நாங்க சந்தித்ததை வீட்டில சொல்லாதே என்றான் " அதற்கு பிறகு அவன் கதைத்தது அப்பவும் இப்பவும் சரியாக விளங்கவேயில்லை . பின்னாளில் அதை சொல்லுவதற்கு தைரியமும் வரவில்லை .
அவர் ஒரு தனித்துவமான ஆளுமை.
அந்த வயதில், அந்த காலத்தில், அத்தகைய உயர்ந்த சிந்தனையும் தைரியமும் கொண்டவரை
நான் வேறு யாரிடமும் காணவில்லை.
இன்றும் — ஒருபோதாவது ராகவன் திரும்பி வருவானோ என
எங்கள் பிள்ளைகளிள் கூட தேடல் உண்டாகி விடுகிறது.
இது நடந்து கொண்டிருப்பது 1990 காலம் ..
இலங்கை சட்ட அரசாங்கத்தில் மிகவும் முக்கியமான , பொறுப்பான பதவிகளில் நீதித்துறை முக்கியமானது , யாழ் மாவட்ட நீதிபதிக்கு யப்பானிலிருந்து புதிய கார்களை இறக்குமதி செய்து அரசாங்கம் வழங்கியிருந்தது , அவரது 16 வயதில் கொழும்பிலிருந்து தானே ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் .
சில நாட்களிலேயே விடுதலை புலிகள் பாசறையில் சேர்ந்தார்.
மாமாவின் பதவி காரணமாக இந்த விஷயம் எங்களில் யாருடனும் முறையாக பகிரப்படவுமில்லை. .
கிட்டத்தட்ட ஆறு மாதங்களே.
ஒருநாள் சில போராளிகள் என் வீட்டின் வாசலில் மறைந்த வீரரின் உடலுடன் வந்தனர்.
"சந்திரபாபு வீடு இதுதானா?" என்று கேட்டபோது
நான் பதட்டத்தால் "இல்லை, இங்கே அப்படி ஒருவரில்லை" என்றேன்.
மனம் கேற்கவில்லை , மேலே சென்று உடலை பார்த்தேன்.
அது எங்கள் ராகவன் தான்.
கோட்டை சமரில் வீரமரணம் அடைந்திருந்தார்.
ஆம் கோட்டை சமரில் அவர் வீர்மரணமடைந்துவிட்டார். அடுத்த கணங்கள் எவ்வாறு போனது என்று விபரிக்கமுடியாது .
35 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் அவன் விடுமுறைக்கு வந்து ஆழ்மனதில் சில வேளை விளையாடுவான் .
இன்னும் அந்த வீரன் அவரது குரல் இன்றும் என் உள்ளத்தில் ஒலிக்கிறது. திரும்பிப் போக முடியாத காலத்துக்கு எதிரே. குற்றஉணர்வுடன் வாழ்கின்றோம்
Navajeevan Anantharaj