லண்டன் குண்டுவெடிப்புகளை அடுத்து இனவெறித்தனமான பழிவாங்கும் நடவடிக்கைகள்இடம்பெறக் கூடுமென்று அச்சம்------------------------------------------------------ லண்டன் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகளை அடுத்து, பிரிட்டன் முழுவதும் நான்கு பிரிட்டிஷ் முஸ்லிம்கள் குற்றச் சாட்டிற்கு உட்பட்டிருப்பதால், ஒருவேளை இன வழியில் சிறுபான்மையினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ என்று அஞ்சப்படுகிறது. லண்டன் சுரங்கப் பாதை ரயில்கள் மற்றும் ஒரு பேருந்தில் 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் தற்கொலைப்படை தாக்குதல்களில் மடிந்ததாக நம்பப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக ஜூலை 12 ஆம் திகதி பொலிஸார் லீட்சிலும், டியூஸ்பரி மற்றும் மேற்கு யோர்க்ஷைரிலும் சோதனைகள் நடத்தியதுடன், லீட்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வெடிக்கச் செய்தலையும் நடத்தினர்.
மூன்று தாக்குதல்களை நடத்தியவர்களை அடையாளம் கண்டுபிடித்து விட்டதாக கூறும் பொலிஸார், லீட்சில் உள்ள அவர்களுடைய வீடுகளை சோதனையிட்டனர். இச் சோதனைகளில் ஓர் இல்லத்தில் `கணிசமான அளவு' வெடி மருந்துப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
உள்ளூர் சமூகங்களுக்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என்ற உடனடியான பொலிஸாரின் வேண்டுகோள்கள் இனவாத பழிவாங்கல் தாக்குதல் பற்றிய அச்சங்களை குறைப்பதற்கு உதவவில்லை. ஒரு "மிகச்சிறிய" எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கவனத்துடன் செய்தி ஊடகம் வலியுறுத்திக் கூறியபோதிலும் கூட, முஸ்லிம் அமைப்புகள் இன்னும் உறுதியான முறையில் குண்டு வெடிப்புகள் பற்றிய கண்டனத்தை கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் அமைப்பும் லண்டனில் நடந்த அட்டூழியத்திற்கு எதிராக வலுவாகக் கண்டித்துள்ள போதிலும், London Evening Standard தலையங்கமாகக் கூறியிருப்பதாவது;
"ஆனால், பிரிட்டிஷ் முஸ்லிம் தலைவர்களை எதிர்கொண்டுள்ள சவால் ஒரு நல்ல முஸ்லிம், பயங்கரவாதிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆதரவு தருபவர் என்று இருத்தல் ஆகும் என்று விளக்கிக் கூறுதல், முஸ்லிம்கள் கூட அடங்கியிருக்கக் கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுமை இழைத்த செயலைச் செய்பவர்களிடம் சிறிது கூட நட்புணர்வு கொண்டிருக்கக் கூடாது என அவர்கள் எடுத்துரைக்க வேண்டும்". மேலும், "இனவாத நிகழ்வுகள் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்துக் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்து விட்டன" என்றும் இந்த ஏடு கூறியுள்ளது.
ஜூலை 9 ஆம் திகதி Daily Telegraph இல் சார்ல்ஸ் மூர், லண்டனுடைய மேயர் கென் லெவிங்ஸ்டனுடைய அறிக்கையில் "இஸ்லாமும் பயங்கரவாதமும் இணைந்து செல்லுவதில்லை" என்று கூறியிருப்பதை நிராகரித்துள்ளார். மாறாக, அவை தொடர்புடையதாக "ஐரீஷ்" மற்றும் "பயங்கரவாதம்" என்ற சொற்கள் இணைந்து செல்லுவது போல் தான் இருக்கின்றன என்று மூர் வாதிட்டுள்ளார்.
மூர் கூறுகிறார்; " வெறிபிடித்தவர்கள் தங்கள் சமயம், அதன் பணியின் போது மற்றவர்களை (பலநேரம் தங்களையே) கொல்லலாம் என்று மக்களிடையே வலியுறுத்தக் கூடும். அதற்குக் கீழ்பணிந்து நடப்பவர்களும் உண்டு. ஆனால் IRA Iப் பொறுத்தவரையில் முற்றிலும் பிறர் துன்பத்தில் இன்பம் கண்டு, வெறிபிடித்து அலைந்தாலும், அவர்கள் ஓர் அரசியல் இலக்கைக் கொண்டுள்ளனர்; அது கிடைத்துவிட்டால் அவர்கள் மேலும் கொல்லமாட்டார்கள் எனக் கூற முடியும்; ஆனால், சமய வெறி பிடித்தவர்களுக்கு தாங்கள் நடந்து கொள்ளும் முறையில் இந்தக் கட்டுப்பாடு கூடக் கிடையாது".
"பெரும்பாலான முஸ்லிம்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல" என்று மூர் ஒப்புக் கொண்டாலும், அவருடைய சொற்கள் அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடும் என்ற விளைபயனை கொண்டிருக்கின்றன. "இதுகாறும் நம்மிடையே கொதி நீர் நிலையில் இருக்கும் சமயச் சிறுபான்மையைக் கொண்டிருக்கும்; இதற்குள் எங்கேயோ (ஒரு மிகச் சிறிய பகுதியாக இருந்தாலும்) ஒரு சிலர் நம்மை கொன்று விட வேண்டும் என்று விரும்புகின்றனர்..... அடையாள அட்டைகள் என்பதின் மூலம், அதிகரித்த அதிகாரத்துவ சக்திகளால் உரிமைகள் அனைத்தையும் இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்முடைய முழு மக்கட் தொகையை தள்ளுவதைக் காட்டிலும், நாம் எங்கு அபாயம் இருக்கிறது. அதைக் கண்டு அகற்ற வேண்டும் என்பதை துல்லியமான முறையில் செயல்படுத்தும் மூலோபாயத்தை வளர்க்க வேண்டும்" என்று தான் எங்கு ஆபத்து இருப்பதாகக் கருதுவதைக் கூறும் முன்னர், மூர் கூறுகிறார்.
"பொலிஸ்காரர்களின் முறைகளை" கேள்விக்குட்படுத்தும் வகையில் மாநகர பொலிஸ் ஆணையர், இயன் பிளேயரின் "முஸ்லிம்களைக் காத்தல் பற்றிய அணுகுமுறை, சமூகத் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்களுடைய அனுமதியைக் கேட்ட பின்தான் மற்றவர்களைக் காண்கிறார். ஒரு விசாரணை தொடரப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதின் மீது அவர்கள் தடுப்பதிகாரம் செலுத்துவது நிச்சயமாக சரியான போக்கு இல்லை. அத்தகைய சமூகத் தலைவர்கள் பொலிஸ் கவனத்தில் இருப்பவர்களை பாதுகாக்க மாட்டார்கள் என நம்புவதற்கில்லை" (வலியுறுத்தல் கட்டுரையாளருடையது)
இத்தகைய அரசியல் சூழ்நிலையில் ஒரு சில வலதுசாரிக் குண்டர்கள், தாங்களே "பழிக்குப் பழி" வாங்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் மீது நாடு முழுவதும் பல இடங்களில் ஈடுபட்டிருப்பது வியப்பை அளிக்கவில்லை.
கடந்த சில நாட்களில் குறைந்தது நான்கு மசூதிகளாவது வெடி மருந்து தாக்குதலினால் ஓரளவு தகர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில மசூதிகள் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கதவுகளும் பிளக்கப்பட்ட நிலையில் உள்ளன. பெல்வெடேரின் தென்கிழக்கில் சீக்கிய கோயில் ஒன்றும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.
இனவாத Combat18 அமைப்பின் ஆதரவாளர்கள் தங்கள் வலைத் தளத்தில் மிகுந்த வெறியூட்டும் கருத்துகளை கொடுத்துள்ளனர். நோட்டிங்ஹாமில் இருந்து ஒரு தகவல் கூறுகிறது: "இறுதியில் ஒருவாறாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.... நேற்று லிவர்பூலில் ஒரு மசூதிக்கு நெருப்பு வைக்கப்பட்டது. நடவடிக்கைகள் இருந்தாலும் இவை போதாது. ஒவ்வொரு மசூதிக்கும் நெருப்பு வைப்போம்".
லண்டனிலும் மற்ற பகுதிகளிலும் மக்கள் இன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தவறாக நடத்தப்படுவதாக பல தகவல்கள் வந்துள்ளன.
இதுவரை மிகத் தீவிரமான நிகழ்வு கிழக்கு மிட்லாந்துப் பகுதியில் நோட்டிங்ஹாமில் ஆசிய மனிதர் கொல்லப்பட்டதாகும். கமால் ராசா பட் என்று தன்னுடைய நண்பர் ஒருவருடன் நகரத்தில் ஆறு வாரங்களாக வசித்து வந்தவர்; இவர் நகரத்தின் மெடோஸ் பகுதியில் ஞாயிறன்று ஒரு இளைஞர் குழுவினால் இனவாத தாக்குதலுக்கு உட்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் சுய நினைவற்று விழுந்து கிடந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் வரும்போதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கொலைக்காக ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இது இனவாத நோக்கத்தினால் நடந்தது என்று நினைக்கின்றனர்.
பிரிட்டனின் முஸ்லிம்சபை தனக்கு நிறைய இனவாத மின்னஞ்சல் தகவல்கள் வந்துள்ளதாகவும், சில நேரம் அது தன்னுடைய தபால் முறைகளையே மூடி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது. `பிரிட்டனில் உள்ள முஸ்லிம்கள் அனைவருடனும் போரிட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று ஒரு தகவல் எச்சரித்துள்ளது.
இனவாத பிரிட்டிஷ் தேசியக் கட்சி, பார்கிங் இடைத் தேர்தலை ஒட்டி ஒரு ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அங்கு அது தன்னுடைய வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வைத்துள்ளது; லண்டன் பஸ் வெடித்து சிதறும் படத்தைச் சித்திரித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது, "இனியாவது BNP கூறுவதைக் கேட்கும் காலம் வந்துவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்."
இத்தகைய வலதுசாரி தாக்குதல்களில் மக்களில் மிக மிகச் சிறிய எண்ணிக்கை மட்டும்தான் ஈடுபட்டுள்ளனர் என்றாலும், லண்டன் பயங்கரவாத நடவடிக்கையில் அரசியல் குற்றத் தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஈராக்கிலோ மற்ற இடங்களிலோ புஷ் மற்றும் பிளேயரின் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்க்காமல், இந்தக் குண்டுவெடிப்புகள் அச்சம், சீற்றம், குழப்பம், அரசியல் நோக்கு நிலையற்ற தன்மையை பரப்பத்தான் பயன்பட்டுள்ளன.
- உலக சோசலிச இணையத் தளத்தில் இருந்து -