Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<i><b>1. உடலியல் தாக்கங்கள்</b></i>
உடலியல் தாக்கங்களாக ஐம்புலன்களிலும் நிகழ்த்தப்படக்கூடிய தாக்கங்களை முதன்மையாகக் கொள்ளலாம். இந்தத் தாக்கங்களில் இருந்து இணையப் பாவனையாளர்கள் (கணனி) பாதுகாப்பதற்கான வழிமுறைகள் ஆய்வாளர்களால் அடிக்கடி நினைவுபடுத்தப்படுகின்ற போதும் அதனை பின்பற்றுகிற பாவனையாளர்கள் எத்தனை பேர் என்பது இன்னொரு ஆய்வுக்குரிய கேள்வியாகும். கணனிப் பாவனையாளர்களில் பெரும்பாலானவர்கள் இன்று குழாய்த்திரையைத் (?) (tube monitor) தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். tube monitor இல் காண்பிக்கப்படுகிற காட்சி "வரி வரியாக"த்தான் (line to line) காட்சிப்படுத்தப்படுகிறது. அப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறபோது ஒருவகை மின்னும் தன்மை (flicker effect) உருவாகிறது. இதனால் பாவனையாளர்களின் கண்கள் சோர்வைடைகின்றன. திரையை உற்று நோக்கவேண்டிய தேவை ஏற்படுவதால் கண்களின் மேல் அதிக உழைப்பை சுமத்தவேண்டியுள்ளது. அதன் தொடர்விளைவாக தலையிடி போன்ற வலிகள் ஏற்படுவதோடு கண்பார்வையும் குன்றிப்போகிறது. tube monitor க்கு மாற்றீடான வழி flat screen. ஆனால் அதிகமானவர்கள் விலையைப் பார்த்து உடலைக் கெடுப்பதில் குறியாய் இருக்கிறார்கள்.
அடுத்து இணையம் பயன்படுத்துவோர் பலதளங்களுக்கும் போவார்கள். காட்சிகள் அடிக்கடி மாறும் சூழல் அங்கு உருவாகிறது. இணையப்பக்கங்களை செய்பவர்களில் அதிகமானவர்கள் உடலியல் பாதிப்புகளை கருத்தில் எடுக்காமல் தமக்கு அழகாகக் படுவதை செய்கிறார்கள். இதனால் சிறிய எழுத்துக்களை உற்றுப் பார்க்கவேண்டியதாக உள்ளது. கடும் வெளிச்ச நிறங்கள் கண்களைக் குத்துகின்றன. இவையெல்லாம் சீரான பார்வையை சிதைக்கின்ற காரணிகளாக அமைவது குறிப்பிடத்தக்கதாகும். புலம்பெயர்ந்து வாழ்கிற இளைஞர்களில் இணையப்பாவனையாளர்களாக உள்ள எத்தனை இளையோர் மூக்குக்கண்ணாடி அணிகிறார்கள் என்று கணக்கெடுத்தால் 60 விழுக்காடுகளை அது தாண்டும் என்பது உறுதியாகச் சொல்லமுடியும்.
அடுத்ததாக முக்கிய சீரழிவாக இணையப் பாவனைக்கான இணைப்பினால் ஏற்படுகிற உடலியல் பாதிப்புகளையும் இங்கே குறிப்பிடலாம். இன்றைய காலகட்டத்தில் இணைய இணைப்புக்கு பலவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கனவாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படுகின்றனவாக மூன்றைக் குறிப்பிடலாம்:
ஒன்று: local area network/wide area network
இரண்டு: wireless local area network
மூன்று: bluetooth (ஒரு குறிப்பிட்ட குறுகிய எல்லைக்குள் ஒலியையும் ஏனைய தரவுகளையும் பரிமாறிக்கொள்வதற்கான இணைப்பு)
இவற்றினால் என்ன பாதிப்பு? கடைசி இரண்டும் அலைவரிசையை அடிப்படையாகக் கொண்ட இணைப்பு முறை. வயர் இல்லாத இணைப்புமுறை. இந்த இணைப்பின் போது சராசரியாக 0.1watt சக்தி வெளிப்படுகிறது. இது கைத்தொலைபேசி வெளிப்படுத்துவதில் 5 இல் 1 பங்குதான்.
WLAN மூலமாகவும் BLUETOOTH மூலமாகவும் வெளிப்படுத்தப்படுகிற கதிர்கள் உடல்நலத்துக்கு கேடுவிளைவிக்கின்றன. இவையும் ஏனைய கதிரலை இணைப்புகள் போல அவதானத்துடனும் பாதுகாப்புடனும் அணுகவேண்டியவையாக உள்ளன. காரணம்: இந்தக் கதிர்வீச்சு வெளிப்பாட்டின்போது தனியே தரவுகள் மட்டும் கடத்தப்படுவதில்லை. மாறாக சமநேரத்தில் மானுட உடலுக்குள் வெப்பசக்தியாக மாற்றம் அடையக்கூடிய சக்தியும் சேர்த்துக் கடத்தப்படுகிறது. தனியே ஒரே ஒரு கம்பியில்லாது இணைக்கப்பட்ட கணனியால் (இணையம்) உருவாகிற இந்த வெப்பம் குறைவானதே. அதாவது மானுட உடலில் பாதிப்புகளை செலுத்துவது மிக மிகக் குறைவானது. ஆனால் ஒரே நேரத்தில் பல (கம்பியில்லா) இணைப்புகளை பயன்படுத்தும்போது (உதாரணம்: கைத்தொலைபேசி அல்லது வேறு ஒரு வயரில்லா இணைப்பு) வெளிப்படுத்தப்படுகிற கதிர்வீச்சினால் உருவாகிற வெப்பம் அதிகமாகும் (எல்லாம் ஒன்றுசேருவதால்). சில கதிர்வீச்சு பாதுகாப்பு மையங்களால் கணிப்பிடப்பட்டுள்ளபடி உடல்வெப்பம் 0.3 இலிருந்து 0.5 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் (உதாரணம்: ஒருவர் இயக்கத்தில் உள்ள இரண்டு கைத்தொலைபேசிகளை உடல்ரீதியான தொடர்பை வைத்துக்கொண்டு இணையத்தையும் பயன்படுத்தும்போது இந்த நிலையை அடைய முடியும்). இதனை மீறும்போது ஏற்படுகிற பாதிப்பு உடல்நலத்தில கேட்டினை விளைவிக்கிறது. புகலிடத் தமிழ் இளையோர் வயரில்லா இணையசேவையை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். ஒரே நேரத்தில் கைத்தொலைபேசியையும் பிற வயரில்லா இணைப்புகளையும் பயன்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் வீட்டின் ஒரு குறிப்பிட்ட குறுகிய இடத்துக்குள் தான் நிகழ்கின்றன. இதனால் உடல்வெப்பம் அதிகரிக்கிற சூழல் உருவாகிறது என்பதை கவலையுடன் குறிப்பிடவேண்டியுள்ளது. இவற்றுக்கும் மாற்றுவழிகள் உண்டு. ஆனால் இவற்றை கவனத்தில் எடுப்பவர்கள் மிகக் குறைவு. அதற்கான பொது அறிவு குறைவாகவே அதிகமானோரிடம் உள்ளது.
இணையத்தில் (+கணினியில்) ஆர்வமாக இருப்பவர்கள் உணவு உட்கொள்ளுவதில் கவனம் செலுத்துவது குறைவாகிறது. அல்லது உணவு உட்கொள்ளுவதில் சீரான தன்மை இருப்பதில்லை. நேர ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் உணவு உட்கொள்வதையே மறந்தநிலையில் பலர் இருக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்றாக அரட்டை(?)(chat) அறைகளைக் குறிப்பிடலாம். உணவு உட்கொள்வதில் தாமதம், அப்படி உட்கொண்டாலும் செமிபாடு அடைவதற்கான உடல் அசைவுகள் மிகக் குறைவு. இந்த சீரற்ற உணவுப்பழக்கத்தால் உடல்நிலையில் பாதிப்புகள் பல ஏற்படுகின்றன. உடல் மெலிவு, நரம்புத்தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்ற உடன்விளைவுகளுக்கும் வேறு பல தாமதமான விளைவுகளுக்கும் ஆளாகின்றார்கள்.
இவைதவிர கணனியின் பாதிப்புகளான நீண்டநேரம் நாற்காலியில் அமர்வதால் ஏற்படுகிற முதுகுவலி, கழுத்துநோவு போன்றவையும் குறிப்பிடத்தக்கன.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<i><b>2. உளவியல் தாக்கங்கள்</b></i>
உளவியல் தாக்கங்களை இணையம் எப்படி உருவாக்கிறது என்பது சுவாரசியமான அதேநேரம் கவலைக்குரிய உண்மையாகும். (ஒரு உளவியல் பற்றிப் பயிலும் மாணவியாக எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்). இணையம் எப்படி இயங்குகிறது அதன் சேவைகள் அதன் பல பரிமாணங்கள் என்பன பற்றி ஏற்கனவே பலரும் குறிப்பிட்டு விட்டார்கள். இந்த பல் பரிமாணத் தன்மையின் சிறப்பம்சம் எல்லாத்தரப்பினரையும் அவர்களின் ஆர்வத்துக்கேற்ப கவர்ந்திழுக்கக்கூடிய குணாம்சங்களைக் கொண்டிருப்பதுதான். இது வெளிப்பார்வையில் நன்மையாகத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தோமென்றால் இலகுவாக ஒருவரை அவரின் பலவீனத்தை வைத்தே அடிமையாக்கும் நிலை இங்கு காணப்படுவது புலப்படும். சாதாரணமாகவே போதைப்பொருள் பாவனையாளர்களை இரு வகையாக நாங்கள் பிரிக்கலாம். ஒன்று போதைப்பொருளை பயன்படுத்துவோர் மற்றையது போதைப்பொருளால் பயன்படுத்தப்படுவோர் (ஆக்கிரமிக்கப்பட்டோர்). முதல் வகையினர் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாவதில்லை (அல்லது குறைவு). இரண்டாவது வகையினர் பெரிதுமாக உளவியல் தாக்கத்துக்கு ஆட்பட்டவர்களாக ஒன்றில் மிக மென்மையானவர்களாக அல்லது மிக வக்கிரமானவர்களாக மாற்றம் பெறுவார்கள்.
நேரடியாக இணையத்தை போதைப்பொருளோடு உப்பிட முடியாத போதும் பாவனையாளர்களை அதே இருவகையினராக நாங்கள் பிரித்து அணுகமுடியும். அடிமைப்பட்டவர்களாகவும் தம்மைச் சுற்றி நடப்பதை மறந்தவர்களாகவும் தனிமையாக தனி ஒரு உலகத்தில் இருப்பவர்களாகவும் இவர்கள் உளநிலையில் மாற்றங்கள் ஏற்படும். சிலநேரங்களில் இணையத்தில் எதுவுமே செய்யாமல் அதை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். எதற்காக தாம் இணையத்தில் இருக்கிறோம் என்கிற நோக்கமே அவர்களிடம் இருக்காது. அப்படியான மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருப்பார்கள். (இப்படியான சிலர் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்). குறிப்பாக அரட்டை அறைகளில் பல இளையோர் அடிமையாகிப்போய் எதுவுமே செய்யாதவர்களாக மந்தநிலையில் இருப்பார்கள். தமிழர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்கிற கேள்வி எழலாம். தமிழர்களில் சிலர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். பலரது வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பெற்றோருக்குத் தெரியாது. சிலருக்கு ஏன் தமது பிள்ளைகள் இப்படியிருக்கிறார்கள் என்கிற காரணம் தெரியாது. சிலருக்கு தன் பிள்ளைக்கு மனநிலை குழம்பியிருக்கிறது என்று சிகிச்சைக்கு போவதால் கெளரவப் பிரச்சனை.
இது ஒரு பிரச்சனையாக இருந்தால் அடுத்து இணையத்தின் மூலம் வக்கிரத் தன்மைகள் இளையோர் மத்தியில் ஏற்படுவது இன்னொரு பிரச்சனையாக இருக்கிறது. பாலியல் வக்கிர எண்ணங்கள் ஏற்படுவதற்கும் அதை நிஜ வாழ்க்கையில் செய்துபார்க்கவேண்டும் என்ற எண்ணங்கள் ஏற்படுவதற்கும் இணையம் துணைபோகிறது. சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை என்பது அவற்றில் ஒன்றாகக் குறிப்பிடத்தக்கது. இணையம் மட்டும் தான் அதற்கு காரணம் என்று சொல்ல வரவில்லை. இணையமும் ஒரு காரணமாக அமைகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். மீண்டும் தமிழ் இளையோரிடம் இப்படியான சீரழிவுகள் நிகழ்கின்றனவா என்ற கேள்வி எழலாம். அங்கங்கே சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நாளை இவை பெருகக்கூடாது என்பதும் இப்பொழுதே இந்தப் பிரச்சனைகளை கதைத்து தீர்வு காணவேண்டும் என்பதுமே எமது எண்ணம்.
அடுத்ததாக இணையத்தில் முகவரியில்லாத (முகமூடி) நபர்களால் ஏற்படுத்தப்படுகிற உளவியல் தாக்கம் மிகக் கொடுமையானது. நண்பர்களாகவும் காதலர்களாகவும் பழகி ஏமாற்றப்பட்டு உளவியல் தாக்கத்துக்குள் உள்ளாக்கப்பட்டவர்கள் பலருண்டு. அதைவிட அரட்டை அறைகளாலும் மடலாடற் குழுமங்களாலும் கருத்துத்தளங்களாலும் மனக்கசப்புகள் உருவாகுவதும் பகையுணர்வு உருவாகுவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. முகமூடி அணிந்தவர்களாக பலர் இருப்பதால் மற்றவர்கள் பற்றிய கவலைகள் அவர்களுக்கில்லை. இதனால் வன்மையாக தாக்கப்படும்போதோ சிறுசிறு விடயங்களில் இணையத்தில் ஏமாற்றங்களை அடையும்போதோ மென்மையான மனதையுடையவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் தற்கொலை முயற்சிகளுக்கும் தன்னிலை மறந்து தனியே புலம்புகிற மனநிலைப் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதையும் வருத்தத்தோடு தெரிவிக்க விரும்புகிறேன்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<i><b>3. ஒழுக்கவியல் தாக்கங்கள்</b></i>
<b>ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கும்
இழிந்த பிறப்பாய் விடும்
(பொருள்: நல் ஒழுக்கம் உடைமையே வாழ்க்கை இயல்பு ஆகும். தீய ஒழுக்கம் கொண்டிருந்தால் இழிந்த பிறப்பாகிவிடும்)</b>
மேற்கூறிய உடலியல் உளவியல் தாக்கங்களின் விளைவுகளிலிருந்து ஒழுக்கவியல் தாக்கத்தை பதிலாகப் பெறலாம். முன்னைய தலைப்புகளில் குறிப்பிட்டது போல உணவுப் பழக்கம் தொட்டு பாலியல் ஒழுக்கம் வரையாக இந்த சீரழிவு தொடர்கிறது. உணவுப்பழக்கம் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆதலால் பாலியல் ஒழுக்கம் சார்ந்த சீரழிவுகளைக் கவனிக்கலாம். இணையத்தின் சீரழிவுகளில் மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிற சீரழிவு இதுதான். பாலியல் தொழில் விரிவடைவதற்கும் பாலியல் வக்கிரங்கள் இளையோர் மனதில் விதைக்கப்படுவதற்கும் இணையம் காரணமாக உள்ளது என்றால் மிகையாகாது.
<b>ஆபாசவார்த்தைகள்</b>
அரட்டை அறைகளும் தமிழ்ச் சினிமாத் தளங்களும் கருத்துத் தளங்களும் இவற்றை வளர்த்துவிடுவதில் பங்காற்றுகின்றன. யாகூ எம்எஸ்என் போன்ற அரட்டைக் களங்களும் தமிழ் இளையோரால் இயக்கப்படுகிற அரட்டை அறைகளும் ஆபாச வார்த்தைகளை பரவலாக பேசிக்கொள்வதற்கான ஒரு இடமாகத்தான் இன்றுவரை இருக்கின்றன. இங்கே பயனுள்ள ஒரு விடயம் நடந்திருக்கிறதா என்றால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்றையும் அறியமுடியவில்லை. பல வயதையுடையவர்களும் வந்து போகிற ஒரு அரட்டை அறைக்குள் ஆபாச வார்த்தைகள் எழுதப்படுகிறபோதோ பேசப்படுகிறபோதோ இதுவரை அவற்றை அறியாதவர்கள் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கப்படுகிறது. முகமூடி அணிந்து செல்பவர்கள் எந்தப் பயமும் கவலையும் இல்லாம் இப்படியான ஆபாச வார்த்தைகளை தாமும் சொல்லிப் பார்க்கிறார்கள். அதன் வக்கிரத் தன்மை வெளிஉலகில் தனது சகோதரர்களிடமும் நண்பர்களிடமும் பயன்படுத்துகிற நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.
<b>அநாமதேயர்கள்</b>
நமது பொதுவான வாழ்க்கைச் சூழலில் ஒருவர் மீது இருக்கும் தனிப்பட்ட கோபத்தைக் காட்டுவதற்கு அவரை கண்டவாறு திட்டுவது வழக்கமாக இருக்கிறது. திட்டும்போது ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் குடும்ப உறுப்பினர்களை இழுத்து அவர்களைக் கேவலமாகப் பேசுவதும் நடக்கிறது. ஆனாலும் இது சமூகத்தில் தமது சமூகநிலை கருதியும் ஒழுக்கம் கருதியும் பலரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இணையத்தை பொறுத்த மட்டில் இந்நிலை மாறுகிறது. இணையத்தில அநாமதேயர்களின் எண்ணிக்கை அதிகம். முகமூடிகளின் நடமாட்டம் அதிகம். தமக்கென்றொரு சமூகநிலையை அவர்கள் அங்கு வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. சமூகத்துக்கு பயந்து தம்மைக் கட்டுப்படுத்தவேண்டியது கிடையாது. இது ஒரு வாய்ப்பாகிப் போகிறது. இதன் விளைவைத்தான் இன்று நாம் பல கட்டுப்பாடற்ற கருத்துக்களங்களிலும் வலைப்பதிவுகள் போன்றவற்றிலும் அரட்டை அறைகளிலும் காணமுடிகிறது.
<b>பாலியல் பக்கங்கள்</b>
தமிழில் இதுவரை பாலியல் தளங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிலும் தமிழில் உள்ள பாலியல் தளங்களை ஐந்து விரல்களுக்குள் அடக்கலாம். ஆனாலும் இளைஞர்களிடம் பாலியல் ரீதியான ஒழுக்கவியல் தாக்கங்கள் நிகழ்கின்றன. இதற்கு காரணம் நாளுக்கு நாள் இணைய உலகத்தில் தோன்றுகிற ஏனையமொழி பாலியல் தளங்கள். இந்தத் தளங்களில் இலவசமான தளங்களும் உள்ளன. மிகக்குறுகிய கட்டணந் தொடங்கி மிகக்கூடிய கட்டணம் கொடுத்து பார்வையிடுகிற தளங்களும் இருக்கின்றன. இவற்றுக்கான அனுமதிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று இருந்தாலும் அவற்றைக் கண்காணிப்பதற்கான வசதிகள் குறைவு. ஆபாச இணையப்பக்கங்களால் என்ன பாதிப்பு என்று நீங்கள் எண்ணலாம். இளைஞர்களின் மனசை பாலியல் வக்கிரம் நிறைந்ததாக மாற்றுகிற தன்மை இவற்றுக்கு உண்டு. மனசை இலகுவில் இவற்றுக்கு அடிமையாக்கிவிடக்கூடிய தன்மை இளைஞர்களுக்கும் உண்டு. சிறுவர்களின் நிர்வாணப்படங்களையும் ஆடுமாடுகள் என்று மிருகங்களுடனான பாலியல் உறவினையும் படம்பிடித்து பரப்புகிற ஒரு ஊடகமாக இணையம் பயன்படுகிறது. இவற்றுக்கு தடைகள் தண்டனைகள் இருக்கிறபோதும் முழுமையாகக் கட்டுப்படுத்தும் அளவு தொழில்நுட்ப சாத்தியங்கள் குறைவு. புகலிட தமிழ் இளைஞர்களின் கணனிகளை ஒருமுறை சோதனை செய்து பார்த்தோமென்றால் 90 வீதமானோர்க்கும் மேற்பட்டோரின் கணனிகளில் ஆபாசத் தளங்களுக்கு சென்றமைக்கான சுவடுகள் இருக்கும். இவர்களுள் 18 வயதுக்கும் குறைந்தவர்களும் அதிகமாக இருப்பார்கள்.
<b>இணையக் காதல்</b>
புகலிட சூழலில் எதிர்கொள்ள நேர்கிற முக்கியமான பிரச்சனைகளில் இணையக் காதலினால் ஏற்படுகிற ஒழுக்கவியல் தாக்கமும் ஒன்று. பொதுவாகவே இளம்பருவம் காதல் அனுபவங்களை அதிகமாகக் கொண்டிருக்கும். எதிர்ப்பாலார் மேல் -அதிகம்- கவர்ச்சி உருவாகிற இளம்பருவம். பாலியல் ரீதியான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வயது. எதிலும் அவசரமாக முடிவுகளை மேற்கொள்கிற துடிப்பு. எதையும் செய்துபார்க்க துணிகிற மனசு. இப்படியான குணங்களைக் -அதிகம்- கொண்டவர்கள் தான் பெரும்பாலான இளைஞர்கள். இது பலவீனமா பலமா என்பது அதனால் ஏற்படுகிற விளைவுகளை வைத்தே தீர்மானிக்க முடியும்.
இப்படியானவர்களுக்கு இணையம் பல வாய்ப்புகளை அளிக்கிறது. பொதுவில் பெண்களுக்கு தமிழர் சமூகத்தில் பல கட்டுப்பாடுகள் தடைகள் உள்ளன. ஆண்களுக்கும் தான். ஒப்பீட்டளவில் பெண்களுக்கானது அதிகம் என்றே கருதமுடியும். அந்தக் கட்டுப்பாடுகளுக்கான காரணங்களும் சமூகத்தில் தான் இருக்கின்றன. இப்படி கட்டுப்பாடுகளுக்குள் வளர்பவர்களுக்கு இணையம் சொர்க்கம். இணையத்தில் அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கிறது.
பெற்றோரைப் பொறுத்தமட்டில் பிள்ளைகள் வெளியில் போகவில்லை. நண்பர்களுடன் ஊர் சுத்தவில்லை. நேரம் பிந்தி வீட்டுக்கு வருவதில்லை. வெளியில் வம்புகளை வளர்த்துக்கொள்வதில்லை. பிரச்சனையில்லாமல் அமைதியாக வீட்டில் இருக்கிறார்கள். தாமுண்டு தம்பாடுண்டு என்று இருக்கிறார்கள். காதல் என்று வெளியில் இரகசியமாகத் திரியவில்லை.
ஆனால் பிள்ளைகளைப் பொறுத்தவரை வெளியுலகத்துக்கு ஈடாக -சிலவேளைகளில் அதற்கும் மேலாக- ஒரு cyber or virtual உலகம் அவர்களின் வீட்டுக்குள் அறைக்குள் இருக்கிறது. தம்மைப்போல பல மனிதர்களை சந்திக்க முடிகிறது. ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி பலரோடும் பழகமுடிகிறது. அரட்டை அறைகள் அதற்கு வழிசெய்கின்றன. messenger களும் துணை செய்கின்றன. தமது உணர்வுகளை கொட்டமுடிகிறது.
இதன் விளைவு எல்லோரையும் நம்புகிறார்கள். அன்பாகப் பழகிறார்கள். அவர்களும் ஆதரவாகக் கதைக்கிறார்கள். நட்பாக இருக்கிறார்கள். நட்போடு பழகிறவர்கள் எல்லோரும் நம்பிக்கையானவர்களாக உண்மையானவர்களாக இருப்பதில்லை. நிழற்படங்களை பகிர்ந்துகொள்ளக் கேட்கப்படுவார்கள் இவர்கள். நம்பிக்கையில் நிழற்படம் அனுப்பி வைக்கப்படும். இந்த நிழற்படத்தினை வைத்துக்கொண்டு பலவிதமான சட்டமீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
o பெண்களின் நிழற்படங்களில் முகங்களை வெட்டி ஆபாசமாகவும் நிர்வாணமாகவும் இருக்கிற பெண்களின் படங்களோடு பொருத்தி இணையத்தில் பிரசுரிப்பது.
o அப்படிப் பொருத்தப்பட்ட படத்தைக் காட்டி மிரட்டுவது. இதன் விளைவு பெண்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
o இணையத்தின் மூலம் பெறப்பட்ட பெண்களின் படங்கள் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
மேற்சொன்னது ஒரு விளைவின் தொடர்ச்சி. அடுத்த விளைவைப் பார்க்கலாம். பெண் நிழற்படம் அனுப்பியதிலிருந்து அவளின் அழகால் எதிர்த்தரப்பு கவரப்படுகிறது. தனது படத்தையும் ஆண் அனுப்புகிறான். -அது உண்மையான படமாகவும் இருக்கலாம் அழகுபடுத்தப்பட்ட படமாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஒருவரின் படமாகவும் இருக்கலாம். எதிர்த்தரப்பில் இருப்பவர் இளைஞராகவும் இருக்கலாம். முதியவராகவும் இருக்கலாம்- இனி அடுத்த கட்டம். நட்பு காதலாக மலர்கிறது. ஆசைவார்த்தைகள் பகிரப்படுகின்றன. அன்பு வார்த்தைகள் பகிரப்படுகின்றன. அது மெல்ல வளர்கிறது. காமம் கலந்து பேசுவார்கள். எழுத்தில் எழுதிப் பகிரப்பட்டவைகள் எல்லாம் voice chat மூலமாக குரலில் பகிரப்படும். webcam மூலமாக video chat வரை அது வளரும். இரவிரவாக அறைக்குள்ளிருந்தபடியே காதலும் வளரும். பின்பு தொலைபேசி இலக்கம் பகிரப்படும். தொலைபேசியிலும் காதல் வளரும். கடைசியில் நேரில் சந்திக்க உந்தப்படுவார்கள். -ஒரே நாடாக இருந்தால் அது வேகமாக நடக்கும். வேறு வேறு நாடாக இருந்தால் அதுவும் நடக்கும். நடந்திருக்கிறது- ஒரு நாள் குறிப்பார்கள். எங்கோ ஒரு இடத்தில் சந்திப்பார்கள். சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் முதல் சந்தர்ப்பத்திலே பாலியல் உறவுக்கு தம்மை அர்ப்பணிப்பார்கள். இல்லாவிட்டால் அடுத்தடுத்து வருகிற சந்திப்புகளில் அது நடக்கும். அதன்பின்பு அவன் விலகிச் செல்வான். அவனது முகவரி இவளுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரிந்திருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கலாம். பாதுகாப்பாக உடலுறவு கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் கர்ப்பமடைந்திருப்பாள். வீட்டுக்குத் தெரியவரும். தெரியாமலும் இருக்கலாம். கர்ப்பம் கலைக்கப்படும். சிலகாலம் மனமுடைந்தவளாக இருப்பாள். சிலவேளைகளில் தொடர்ந்தும் அப்படியே இருப்பாள். அவளுடைய வாழ்க்கை இப்படியாக சீரழியும். அவன் அடுத்த பெண்ணிடம் அரட்டையடிக்கத் தயாராகிவிடுவான்.
மேற்சொன்னது அவன் ஒரு இளைஞனாக இருந்தால் நடந்திருக்கக்கூடியது -நடந்தது-. அடுத்து எதிர்த்தரப்பு ஒரு குடும்பத் தலைவராக இருக்கலாம். அல்லது 40-50 வயதை கொண்டிருக்கலாம். இருவரும் சந்திப்பார்கள். பெண் தான் ஏமாந்து போனதை உணர்வாள். காலம் தாமதம். பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுவாள். வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் குடும்பத்தின் மானம் போகும். தனக்குள் அழுவாள். கர்ப்பம் கலைப்பாள். சிலவேளை தற்கொலை முயற்சியும் நடைபெறலாம். தப்பித் தவறி வீட்டுக்கும் தெரிய வரலாம். தெரியவந்தால் பெற்றவர்கள் கவலைப்படுவார்கள். குடும்பமே தற்கொலை வரைகூடப் போகலாம். எதிர்த்தரப்பு முகவரியில்லாமல் தப்பிவிடலாம். தொலைபேசி இலக்கத்தை மாற்றிவிடலாம். புதிய பெண்ணைத் தேடலாம். அல்லது பெண் காவல்துறைக்கு அறிவித்திருக்கலாம். உரியவர் பிடிபட்டிருக்கலாம். தண்டிக்கப்படலாம். அவரது குடும்பமும் அதனால் பாதிக்கப்படலாம்.
மேற்சொன்னவை பெண்ணின்தரப்பு. அதைப்போல் ஆண்களும் ஏமாற்றப்படலாம். பாலியல்ரீதியான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படப் போவதில்லை. ஒரு ஆணே பெண்ணாக நடிக்கலாம். ஒரு பெண்ணின் படத்தை அனுப்பி காதலிப்பதாக ஏமாற்றலாம். இவன் ஏமாரலாம். உண்மையாகக் காதலிக்கலாம். கடைசியில் ஒருநாள் அவன் ஆண் என்பது தெரிய வரலாம். தெரியவரும்போது தான் ஏமாற்றப்பட்டது புரியும். தனது ஏமாற்றத்தால் தற்கொலை முயற்சி வரை செல்லலாம். அல்லது மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகலாம். எதிர்த்தரப்பு ஆணென்று தெரியாமலும் போகலாம். எதிர்த்தரப்பு திடீரென்று காணாமலும் போகலாம். இதனாலும் இவன் பாதிக்கப்படலாம். -லாம்- என்று சொன்னவையெல்லாம் நடந்தவைதான்.
இன்னொன்று. அரட்டை அறைகளில் கைத்தொலைபேசி இலக்கங்கள் பரிமாறப்படலாம். இணையத்துக்கு வராத பெண்களின் இலக்கங்களும் பரிமாறப்படலாம். இலக்கங்கள் கிடைத்தவர்கள் பெண்ணோடு தொடர்பு கொள்வார்கள். சிலர் ஆபாசமாகக் கதைப்பார்கள். தொலைபேசியில் தொந்தரவு செய்வார்கள். பெண்கள் கைத்தொலைபேசி இலக்கத்தை மாற்றுவார்கள். மாற்றாமலும் விடலாம். சிலர் நட்பாகப் பேசுவார்கள். பின்பு நேரில் தனியே எங்காவது சந்தித்துக்கொள்வார்கள். அல்லது பொது நிகழ்வுகளில் சந்தித்துக்கொள்வார்கள். அதுவும் காதலென்று வளரும். காமம் வரை வளரும். கர்ப்பமாகும். கருக்கலைப்பு. தற்கொலை. வீட்டுக்கு தெரியும். அவன் தொலைபேசி இலக்கம் மாற்றுவான். இவளுக்கு மனரீதியான பாதிப்பு. அவன் அடுத்த இலக்கம் தேடுவான்.
<b>பாலியல் தொந்தரவு</b>
பாலியல் ரீதியாக ஒருவரை தொந்தரவு செய்வதும் அதிகரித்துள்ளன. அரட்டை அறைகளில் நடக்கின்ற கருத்தாடல்கள். அதில் ஏற்படுகிற தனிப்பட்ட கோபங்கள். அதனால் கணனி ஊடுருவப்படும். கணனியிலிருந்து படங்கள் களவாடப்படும். அந்தப்படங்கள் முதலில் சொன்னதுபோல் நிர்வாண உடல்களில் பொருத்தப்படும். உடலுறவுக் காட்சிகளில் பொருத்தப்படும். இணையப்பக்கங்களில் பிரசுரிக்கப்படும். அதைவைத்து உரியவர் மிரட்டப்படுவார். உரியவர் ஆணாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். பெண்ணாக இருந்தால் அதிகமாக இருக்கும். அதிலும் திருமணமான பெண்ணாக இருந்தால் கணவனுக்கு தெரியவந்து பெரும் பிரச்சனை ஆகும்.
மேற்சொன்னவையெல்லாம் நடந்த உண்மைகளிலிருந்து சொல்லப்பட்டவை. கல்யாணம் வரை சென்ற இணையக்காதல் ஒரு சில. கட்டிலோடு முடிந்த இணையக்காதல் கதைகள் பல.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<i><b>4. சமூகவியல் தாக்கங்கள்</b></i>
சமூகவியல் தாக்கங்கள் என்பதில் மனித உறவுகளை முன்னிலைப்படுத்தலாம். இணையப் பாவனையால் மனித உறவுகளில் நடக்கின்ற மாற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இணையப் பாவனையாளர்கள் உறவுகளிடமிருந்து தனிமைப்படுகிறார்கள். நண்பர்களை சந்திப்பதைக் குறைத்துக்கொள்கிறார்கள். தனக்கு அருகிலிருப்பவர்களிடமிருந்து விலகிப்போகிறார்கள். தூர இருக்கின்ற முகம் தெரியாதவர்களோடு virtual உறவை உருவாக்குகிறார்கள். அவர்களை ஒருநாள் சந்திக்காவிட்டால் கவலைப்படுகிறார்கள். இணையத்திலும் நிரந்தரமான உறவுகள் என்று அவர்களுக்கு இருப்பதில்லை. இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை இல்லாமல் போவார்கள். காணாமல் போவார்கள். புதியவர் வருவார். அவரோடு பழக்கம் ஏற்படும். அவரும் சிறிது காலத்தால் காணாமல் போவார்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<i><b>5. பிற தாக்கங்கள்</b></i>
<b>பொருளாதாரவியல்</b>
இணையப்பாவனையால் ஏற்படுகிற பொருளாதார தாக்கம் பலவகையானது. முதலில் இணைய இணைப்புக்கான செலவு. வேகம் கூடக் கூட இணைப்பிற்கான கட்டணமும் அதிகரிக்கிறது. வேகமான இணைப்பை வைத்திருக்கவே பலர் விரும்புகிறார்கள். அதனால் அதற்கான பணச்செலவு அதிகரிக்கிறது.
இணைப்பு கிடைத்தபிறகு அதில் தோன்றுகிற விளம்பரங்களால் ஏற்படுகிற நட்டங்கள். சில ஆபாசத்தளங்களுக்குள் போவதுக்கான மென்பொருள் கணனியில் -தானாக- பதியப்படும். அதன்மூலம் உள்ளே போய் பார்க்க ஆசைவரும். போவார்கள். அதனால் பணச்செலவு ஏற்படும்.
இணையத்தில் வைரஸ்களின் தொல்லைகள் அதிகம். அதற்கான பாதுகாப்புகளை செய்யவேண்டியுள்ளது. அதற்கு பாதுகாப்பு மென்பொருட்கள் தேவைப்படுகிறது. பணம் செலவாகிறது. பாதுகாப்பில்லாமல் வைரஸ் தாக்கினால் கணனியைத் திருத்துவதற்கு மீண்டும் பணச்செலவு ஏற்படுகிறது. வைரஸ் தாக்குதல் மட்டுமில்லை crackers இன் தாக்குதல்களும் அதிகம் இணையத்தில் இருக்கின்றன. அவர்களிடம் மாட்டுப்பட்டால் கணனியை திருத்துவதற்கு பணச்செலவு.
spyware - adware - spams என்று பல தொந்தரவுகள். இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான செயலிகளின் தேவை. அவற்றுக்கான பணச்செலவு. பாதிக்கப்பட்டால் பிறகு ஏற்படுகிற பணச்செலவு.
<b>மொழியியல்</b>
மொழி பற்றி பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் போன்ற மொழிகள் இணையத்தால் எப்படி பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன என்று எல்லாருக்கும் தெரியும். தமிழுக்கும் அந்த நிலைமைதான். வேகமாக அவசரமாக எழுதவேண்டும் என்பதால் ஏற்படுகிற தவறுகள் -என்னைமாதிரி- ஒருபக்கம் இருக்கு. மற்றப்பக்கம் தமிழ் ஒழுங்கா தெரியாதவையால விடப்படுற பிழைகள். வேகமான பாவனைக்காக வேண்டுமென்று தமிழை வெட்டிக்கொத்தி எழுதுற நிலைமை. தமிழை ஆங்கிலத்தில் எழுதிறதால வாற பாதிப்பு. உதாரணம ல ள ழ எல்லாத்தையும் ஆங்கிலத்தில எழுதுறதால் உச்சரிப்புகள் மறந்துபோற நிலை. இப்படி மொழியியல் ரீதியாகவும் இளைஞர்களிடம் சீரழிவு ஏற்படுது.
<b>கல்வி</b>
கல்விரீதியான பாதிப்புகள் என்ன? இணையத்தில் சுலபமாகப் பெறப்படும் தகவல்கள். ஆராயமல் அப்படியே பிரதிசெய்யும் தன்மை. சுயமான ஆக்கங்கள் எழுதுவது குறைந்துபோகிற நிலை. பெறப்படும் தகவல்களின் உண்மை பற்றிய உறுதியின்மை. இப்படி பலதையும் சொல்லலாம்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>இ) உதாரணங்கள்</b>
1. அவசரத்தில் வெளியிடும் செய்திகளில் ஏற்படும் தவறு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9192
2. பொழுதுபோக்கு சினிமாக் கிசுகிசுக்களில் ஆர்வம் காட்டுபவர்களும் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களும்
சினிமா: http://www.yarl.com/forum/viewforum.php?f=39
விஞ்ஞானம்: http://www.yarl.com/forum/viewforum.php?f=10
3. யாழ்களம் போன்று புலம்பெயர்ந்த இடத்திலிருந்து இயங்கும் ஒரு இணையத்தளம் சொல்லுங்கள்.
4. புலம்பெயர்மண்ணிலிருந்து -இளைஞர்கள் பயன்பெறக்கூடிய- இளைஞர்களால் செய்யப்படுகிற 10 இணையத்தளங்களைப் பட்டியலிடுங்கள்.
5. இணையம் மூலமான தொடர்பையடுத்து டென்மார்க்கில் சந்தித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் இளம் பெண்.
6. ஒரு இளம் குடும்பத் தலைவர். மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தது. பிரான்சில் இருந்து லண்டனிலிருக்கிற ஒரு இளம்பெண்ணைக் காதலித்தார். இவரின் அன்பில் அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்தாள். இணையத்தில் தொடங்கிய காதல் தொலைபேசி வரை வந்தது. குடும்பத்தை விட்டுவிட்டு லண்டன் போகத் துணிந்தார் இவர். அவளுக்கு இவருக்கு குடும்பம் இருக்கிற விசயம் தெரிய வந்தது. மனம் நொந்தாள். இவருக்கும் வீட்டில் பிரச்சனை. நல்லகாலம் கடைசிவரை இருவரும் சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால் அவளின் வாழ்க்கை வேறாக மாறியிருக்கும். அவள் தன்னை தேற்றிக்கொண்டுவிட்டாள். இவருக்கு குடும்பத்தில் பிரச்சனையால் குடும்பத்தோடு இல்லை. மனைவியும் பிள்ளையும் பாவம்.
7. யேர்மனியில் வசித்த ஒரு பெண். இங்கு பிரான்சில் இருக்கிற ஒருவரை இணையத்தின் மூலம் காதலித்தார். அதுவும் சிலகாலம் தொடர்ந்தது. பிரான்சுக்கு வந்தநேரம் அவனை சந்தித்தாள். உடலுறவு கொண்டார்கள். வீட்டுக்கு தெரியவந்தது. அவனுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பேசுவதாக சொல்லி மறுத்துவிட்டார்கள். பெண்ணின் நிலை பரிதாபம். இப்பொழுது பெண் வேறு நாட்டில் இருக்கிறாள். படிக்கிறாள்.
8. பிரான்சில் இருக்கிற ஒருபெண்ணுக்கும் லண்டனில் இருந்த ஒரு இளைஞனுக்கும் இணையத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலும் சிலகாலம் தொடர்ந்தது. லண்டனில் உறவினர்களிடம் சென்றபோது அந்தப்பெண் அவனை சந்தித்தாள். சிலதடவைகள் லண்டன் சென்று வந்தாள். சென்றபோதெல்லாம் அவனை சந்தித்தாள். ஒருநாள் அதுவும் நடந்தது. பின்பு அவனுக்கும் வீட்டில் ஊரில் கல்யாணம் பேசியிருப்பதாக கூறி மறுத்துவிட்டார்கள். அவன் இப்போது திருமணம் முடித்து வாழ்கிறான். ஆனால் பெண்தான் பாவம்.
.......
இவை கற்பனைக்கதைகள் அல்ல. நடந்த கதைகள். ஆண்கள் ஆண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இருக்கு. ஆண்கள் பெண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இணையத்தில் நடந்து இருக்கு.
இன்னும் உதாரணங்கள் நிறைய உண்டு
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>ஈ) எதிர்வாதங்கள்</b>
<b>o இளைஞன் அண்ணா</b>
Quote:வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா? கீழ்நோக்கி நகர்வதா? - மரம் மேல் நோக்கி வளர்கிறது. வேர் கீழ்நோக்கி வளர்கிறது.
எண்டு இளைஞன் அண்ணா சொன்னார். அண்ணா நாங்க மரமே வளரல மரம் பட்டுப் போகுது வேர் அழுகிப் போகுது எண்டு சொல்லுறம். வளருதா இல்லாட்டி சீரழியுதா எண்டுறது தானே அண்ணா தலைப்பே. நீங்க மேல நோக்கி வளருது கீழ நோக்கி வளருது எண்டு நகைச்சுவையள் சொல்லி சிரிக்க வைக்கிறியள்.
Quote:உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்
இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்
தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா?
புதுசு புதுசா இணையத்தளங்கள் வருகுது எண்டுறது ஒரு பக்கமா இருக்கட்டும். புதுசு புதுசா முளைச்சு வாறதுகள் எல்லாம் ஊனத்தோட (மன்னிக்க) வந்தாலும் பறவால்ல. வாறதுகள் எல்லாம் தொற்றுநோயள காவிக்கொண்டெல்லோ வருகுதுகள். அந்த தொற்றுநோயள் பரவி கடைசில சிகிச்சைக்கு என்ன செய்யிறதெண்டு முழிக்கிறதுக்கு முதலே தீர்வுகள காணுங்கோ.
Quote:இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி. அதனடிப்படையில், இணைய ஊடகத்தால் இளம்
சமூகம் சீரழிகிறது என்று வாதாட வந்திருக்கும் எதிரணி இளைஞர்களும்
நன்மைபெறுபவர்களாகவே உள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.
தங்கட முகத்தயும் அடையாளத்தையும் மறைச்சுக்கொண்டு கருத்துகள வைக்கத்தானே இந்த இணையத்தளங்களில நடக்கிற கருத்தாடலுகள் வழிசெய்யுதுகள். 80 விழுக்காடு ஆக்கள் இளமாக்கள் எண்டு எப்பிடி உறுதியா சொல்லுவீங்கண்ணா? முகமூடியளோட திரியிற இவையில யார் ஆம்பிள? யார் பொம்பிள? யார் இளமாள்? யார் கிழடு? எண்டு எப்பிடி தெரிஞ்சுகொள்ளுவீங்க? பெண்ணாக இருக்கிறவை தங்கள ஆணாயும் | ஆணாக இருக்கிறவை தங்கள பெண்ணாயும் | வயது கூடினவை தங்கள வயது குறைஞ்சவை எண்டும் | குண்டா இருக்கிறவை தங்கள மெலிஞ்ச கட்டான உடம்போட இருக்கிறமாதிரியும் இணையத்தில அடையாளப்படுத்தலாமே? இதுகள வச்சுக்கொண்டு சும்மா கற்பனைல கணிப்புகள செய்யிறது எதுக்குமே உதவாதண்ணா. மனுசர்கள் சிலதுகள் தங்கள பறவையள காட்டிக்கொள்ளுற உதாரணங்கள யாழ்களத்திலயும் உங்களுக்கு எடுத்துக் காட்டவா? சரி யாழ்களம் மாதிரி நன்மை தாற தமிழ் களங்கள் எத்தின இருக்கு? தமிழ் களங்களால மட்டும் தான் நன் பெறேலும் எண்டு சொல்லேலாது வேறு மொழி களங்களிலயும் நன்மை பெறலாம் எண்டு சொன்னியள். அப்பிடியான களங்களுக்கு எத்தின எங்கட இளமாக்கள் போறவை எண்டு சொல்லுங்கோவன். கண்கெடுப்பு ஒண்டு நடத்தினா உங்கட கற்பனையள் எல்லாம் கற்பனையாவே போயிடுமண்ணா.
Quote:அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை
உருவாக்கி, அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும், இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டி,
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும், நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது.
அண்ணா புறக்கணிப்பு எங்கதான் இல்ல? எல்லா இடத்திலயும் இருக்கு. இணையத்திலயும் அது இரக்கண்ணா. தங்கள அறிவாளியளா காட்டிக் கொள்ளுறதும் பிறகு மற்றாக்கள மட்டந்தட்டுறதுமு் இணையத்திலயும் இருக்கு. இதுக்கும் யாழ் களத்த உங்களுக்கு முன்னுக்கு உதாரணமா வைக்கலாம். நீங்க ஒரு கருத்த வச்சா உங்கள மட்டமா விமர்சிக்கிறதும் உங்கள மாற்றுக்கருத்தாளன் எண்டு நக்கலடிக்கிறதும் புரட்சி புதுமை எண்டு சொல்லி கிண்டலடிக்கிறதும் பெண்ணியவாதியள் எண்டு கேலி பண்ணுறதும் யாழ் களத்திலயே நடக்கலயா அண்ணா? நீங்க சொல்லுற அந்த வெளியுலகத்தில இருந்துதான் இந்த இணையமும் இயங்குது எண்டுற மறந்திட்டீங்க போல நீங்க.
Quote:வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும், தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும், வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது இணையம் என்றால் மறுக்கமுடியுமா?
நட்புறவ வளத்தா பறவா இல்ல. நட்புறவ வளத்துக் கொள்ள இடமளிக்கிற அதே இணையத்தில தான் அதுக்கும் அதிகமான அளவு பகையுணர்வ வளர்த்துகொள்ளுறதுக்கும் இடமிருக்கு. செயற்திட்டங்கள வகுக்கிறதுக்கும் வகுத்த செயற்திட்டங்கள ஒன்றுசேர்ந்து செயற்படுத்துறதுக்கும் பலமா இருக்கெண்டு சொல்லுறீங்க. நான் அத மறுக்கல அண்ணா. ஆனா எப்பிடியான செயற்திட்டங்கள? குழுமோதல்களுக்கான செயற்திட்டங்கள. ஒரு பெண்ணை பத்துப்பேர் எப்பிடி காதலிக்கலாம் எண்டுறதுக்கான செயற்திட்டங்கள. அந்த இணையத்தளத்த எப்பிடி ஊடுருவலாம் எண்ட செயற்திட்டங்கள வகுக்கத்தானே?
Quote:சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?
உங்கள நினைச்சா எனக்கு அடிக்கடி சிரிப்புத்தான் வருது. சாதி சமயம் ஊர்ப்பாகுபாடுகள் களைஞ்சு தமிழர் எண்டுற தேசியத்த உணரவைத்திருக்கிறதா? பாவம். பகல்கனவு. சாதிகளின்ர பெயர சொல்லி சண்டை பிடிக்கிற இளமாக்கள யாகூ போன்ற அரட்டை அறைகளில காட்டுறனஇ வாறீங்களா? சமயப் பாகுபாட்ட அப்பட்டமா வெளிக்காட்டுற வலைப்பதிவுகள காட்டுறன் பார்க்க நீங்க தயாரா? அதவிடுங்கோ. யாழ் களத்திலய இந்து சமயத்தின்ர குறைபாடுகள விமர்சிச்சு சிலபேர் கருத்து வச்சிருக்கினம். அதுக்கு சில மதம் பிடிச்சவை சில பேர் இந்து மதத்துக்கு எதிரா கருத்து வச்சா அத நிர்வாகம் விடுது ஆனா மற்ற மதத்துக்கு எதிரா வச்சா விடுவினமா எண்டு அப்பட்டமா மதவெறிய காட்டினதுகளும் யாழ்களத்தில இருக்கு. தேடிப்பிடிச்சு காட்ட நான் தயார். சன்மானம் தர நீங்கள் தயாரா? சகோதரத்துவமா (அய்யோ அய்யோ)? சண்டைக்காரர்களாத்தானே இணையம் புகலிட தமிழ் இளைஞர்கள வளத்து விட்டிருக்கு.
Quote:இளையோர் மீது (குறிப்பாக இளம் பெண்கள்) கருத்தியல் சுதந்திரத்தில் தலையிட்டு,
கருத்தியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வெளியுலகத்துக்கு மாற்றாக, சுதந்திரமாகவும்
சுயமாகவும் தனது கருத்தை, தனது எண்ணத்தை, தனது உணர்வுகளை வெளிப்படுத்த
வழிசமைத்துக்கொடுத்திருப்பது எது? இணையம்தானே? - இது தமிழ் இளையோர்
அடைந்துள்ள மிகப்பெரிய நன்மையில்லையா?
முதலே சொன்னதுதான். வெளியுலகத்துக்குள்ள தான் இந்த இணைய இணைய உலகமும் இருக்கண்ணா. வெளிஉலகத்தின் எல்லா விடயங்களும இணையத்துக்குள்ளயும் பிரதிபலிக்குது. வெளியில நடக்கிற பெண்கள் மேல அவிட்டு விடப்படுற கருத்தியல் வன்முறை இணைய உலகத்துக்குள்ளயும் நடக்குது. இதுக்கும் யாழ் களத்த ஒரு அளவுகோலாக அல்லாட்டி எடுத்துக்காட்டா என்னால காட்ட முடியும். ஒரு பெண் கருத்த வச்சா அவவ கீழ்த்தரமா விமர்சிக்கிறது இங்க நடக்கலயா? அத விடுங்கோ. ஒரு ஆண் தன்ர கருத்த வச்சா கூட அவரின்ர மனுசி அக்கா தங்கச்சி அம்மா மகள் எண்டு எல்லாரையும் இழுத்து மட்டமாக விமர்சிக்கிற மடத்தனம் இங்க நடந்தத காணலயா? யாழில இருக்கிற எத்தின பெண்கள் நீங்க சொல்லுற மாதிரி சுதந்திரமாவும் சுயமாவும் தங்கட கருத்த வச்சிருக்கினம்? நான் மற்றது தமிழினி அக்கா (இவாவும் அடிக்கடி பயந்து ஓடிடுவா) மற்றது குருவி அக்கா(இவா ஒருத்தி தான் போறன் போறன் எண்டுகொண்டு இன்னும் போகாம இருக்கிற ஒராள்) அடுத்தது அஸ்வினி அக்கா. இவைய விட யாழில ஒரு பெண்ண சொல்லுங்கோ பாப்பம்? (இதுகள் ஒண்டும் இணையத்தில நடக்கல எண்டு நீங்க சொன்னபடியாத்தான் சொன்னான்)
Quote:உலகக் கலைகளெலாம் கற்று தமிழுக்கு வளம் கொணர்ந்து சேர்ப்போம் என்று
பொருள்படும் ஆன்றோர் எண்ணத்தை செயலாக்கும் தளம் எது? கலைகளெல்லாம் விரல்
நுனியில், கலைப்படைப்புகளெல்லாம் கண்ணருகில், சிறு திரையில்.
அண்ணா அண்ணா. எல்லாம் இருக்குதண்ணா. இல்லையெண்டு சொல்லல. ஆனா இதுகளால ந்மையடையினமா இதுகள பயன்படுத்துகினமா எண்டுறதுதானே கேள்வியே. எந்தக் கலையை கொண்டுவந்து சேத்தியள் தமிழுக்கு? பத்து பதினஞ்சு யன்னல்கள் திறக்கிற கலையையா (10 nicknames)? இல்லாட்டி ஊடுருவுற (hacking + cracking) கலையையா?
Quote:பள்ளிக் கல்விக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் விலைமதிப்பான புத்தகங்களுக்கு ஈடாக இருப்பது இணையம். நேரத்தை மிச்சப்படுத்தி, நிறைவான தகவல்களைத் திரட்டிடத் துணைபுரிகிற இணையத்தின் சேவையால் எத்தனை எத்தனை தமிழ் இளைஞர்கள் நன்மையடைகிறார்கள் என்பதை அறிவீர்களா? இன்று
எதிரணியினர் தமது வாதத்துக்கு வலுச்சேர்ப்பதற்காய் தகவல்களை எங்கு சென்று
தேடுகிறார்கள்? தோள்கொடுக்கும் தோழனை துரோகி என்கலாமா?
இணையத்தில ஒரு தகவல தேடுறதுக்கு சரியா ஒர சொல்லக் குடுக்கணும். அப்பதான் நெரத்தோட கண்டு பிடிக்கலாம். இல்லாட்டி மாடுதான் பிடிக்கலாம். நேரம் செலவழியுறதுதான் மிச்சம். ஒரு புத்தகத்தில இருக்கிறத போல உறுதியான நம்பத்தகுந்த மாதிரி தகவல உடன தேடி எடுக்கிறது கடினமண்ணா. ஒரு இணையத்தளத்தில ஒருவர் பிறந்த ஆண்டு 1941 எண்டு இருக்கும். இன்னொண்டில 1942 எண்டு இருக்கும். இன்னொண்டில முழுக்க முழுக்க வேற மாதிரி இருக்கும். எத நம்புவீங்க? எத உறுதிப்படுத்துவீங்க? இன்ரர்நெட்டில இருக்கிறதெல்லாம் நம்பிக்கையான தகவலெண்டு சொல்ல முடியாதண்ணா. பொய்ப்பரப்புரைய செய்யிறதுக்காண்டி நர்னும் ஒரு இணையப் பக்கத்த தொடங்கி அதில பொய்யான தகவல போட்டு வச்சா நாளைக்கு ஒரு தகவல் தேடி வாற மாணவனோ மாணவியோ என்ர பொய்யான தகவல உண்மையா நினைச்சுத்தானே தன்ர கருத்துத்தளத்த விரிச்சுக்கொள்ளுவினம்? இந்த இணையத்தில இருக்கிற தகலால சுடுகிற பழக்கம் நிறையப்பேருக்கு வந்திட்டு. சொந்தமா ஒண்ட எழுதுற பழக்கம் குறைஞ்சு போச்சு. வெட்டி ஒட்டுறதும் சுட்டுப் போடுறதும் அடுத்தவன்ரய தன்ர எண்டுறதும் ஒரு தனிப்பெருங் கலையா வளந்துபோச்சு இண்டைக்கு. ஆயகலைகள் அறுபத்துநாலோட இத அறுபத்தஞ்சாவத சேத்துக் கொள்ளுங்கோ.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o அனித்தா அக்கா</b>
Quote:எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்...
அனித்தா அக்கா நீங்க சொல்ற மாதிரி அவையவை வாழுற நாட்டு மொழில இருக்கிற இணையத்தளங்களுக்கு போகினம் எண்டு வைச்சு கொள்ளுவம். ஆனா எந்த வகையான தளங்களுக்கு போகினம் எண்டு சொல்லுங்க பார்ப்பம்? அதுவும் சினிமாத்தளங்களாவும் இல்லாட்டை அரட்டையடிக்கிற தளங்களாவும் அதுவும் இல்லாட்டி பொப் ஸ்ரார்கள பற்றின தளங்களாவும் தான் பெரும்பான்மையாக இருக்கும். ஏற்கனவே சினிமா மோகத்தில இருக்கினமா இல்லையா எண்டுறது பிரச்சனையில்ல. இணையம் அதுக்கு துணை போகிறதா இல்லையா எண்டுறது தான் பிரச்சனை.
Quote:சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!
இதப்பற்றி முதல்ல எங்கட அணி ஆக்கள் சொல்லிட்டினம் தான். திரும்ப நான் ஒண்ட சொல்ல விரும்புறன். முந்தியெண்டாலும் பறவால்ல சஞ்சிகையில பாத்திட்டு அத வெட்டி மடிச்சு ஏதாவது ரமூலை முடுக்கில வச்சினம். இப்ப ஐஸ்வர்யா ராயின்ர முதல் தொட்டு ஏஞ்சலஸ் எண்டு அவையின்ர படத்த எல்லாம் ஸ்கிறீன்சேவரா கணனித் திரையில பாவிக்கினம். கணனிய போட்ட கண்ணுக்கு முன்னால வாறது உந்த கறுமங்கள் ஐஸ்வர்யா ராயின்ர படமும் அசினின்ர படமும் தான். அம்மா அப்பான்ர படத்த எத்தின பேர் போட்டு வைக்கினம்.
Quote:ஐயா எதிரணித் தலைவர் அவர்களே, சினிமாப் படங்களைத் தரவிறக்குவதும், கல்யாணக்காட் அடிப்பதும் (இது கணினி சார்ந்தது, இணையம் இல்லாமலே இதை செய்யலாம்.) தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள். யேர்மன் எழுத்தாளர் சோழியான் அண்ணா, சுவிசில் வசிக்கும் ஒளிப்பதிவுக் கலைஞர் அஜீவன் அண்ணா, போன்ற இன்னும் பல இலக்கியவாதிகளுடனும் கலைஞர்களுடனும் தொடர்புகளைப் பேணுகிறார்கள். என்னைப் போன்றவர்கள் கூச்சமில்லாமல் கவிதைகளை எழுதிப் பழகுகிறார்கள். தாயக செய்திகளை உடனுக்குடன் படிக்கிறார்கள். உலக நடப்புக்களை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். இவை பெற்றோருக்கு தெரியாது தான் ஏனென்றால் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே இருக்கிறார்கள். எனவே பெற்றோரின் குறுகிற பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு இளைஞர்கள் இணையத்தால் சீரழிகிறார்கள் என்ற வாதம் குழந்தைப்பிள்ளைத்தனமானது....!
அனிதா அக்கா செவ்வாயில குடியேறி எத்தின காலம்? இல்ல நீங்க இந்த உலகத்தில இருக்கிற மாதிரி எனக்கெண்டாத் தெரியல. தமிழ் வலைப்பதிவின்ர காலம் ஒரு ஒண்டரைல இருந்து இரண்டு வருசம் இருக்குமா? அத வாசிக்கிறாக்கள் ஒரு 1000 இல இருந்து 3000க்குள்ள வருமா? அந்த 3000க்குள்ள இளைஞர்கள் ஒரு 1900ம் பேர் வருமா? அதில புலம்பெயர்ந்து வாழுற ஈழத் தமிழ் இளைஞர்கள் 300 பேர் வருமா? மொத்தமா இணையத்தளம் பாக்கிற இளைஞர்களுக்குள்ள இந்த 300 பேர் எல்லாம் ஒரு கணக்கா?
தங்களுக்கான இணையப்பக்கங்கள செய்யிற ஆக்கள் எத்தின பேர்? அந்த இணையத்தளங்களில வாற விசயங்கள் என்ன எண்டு பாப்பமா? இலவசமா குடுக்கிற வழங்கிகள வச்சுக்கொண்டு தனக்கு பிடிச்ச நடிக நடிகை யாரெண்டும் அவையின்ர படங்களையும் போட்டு வைக்கிறத தாகே செய்யினம்? நீங்க சொன்ன ஆக்களோட எல்லாம் தொடர்ப வச்சிருந்தா நீங்க எல்லாம் பெரியாக்களாகிடுவீங்களா? நீங்க சுயமா ஏதாவது செய்தாத்தான் உங்களுக்கு புகழ். அதவிட்டிட்டு அவையோட தொடர்பு வச்சிருக்கிறன் இவையோட தொடர்பு வச்சிருக்கிறன் எண்டா என்ன அர்த்தம்?
உலக நடப்புகள அறிஞ்சு கொள்ளுற ஆக்கள பாப்பம்? இணையத்த திறந்தோடன போறது முதல்ல இண்டைக்கு எந்த நடிகைக்கும் எந்த நடிகருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் தானே? இதுக்கும் யாழ் களத்தில உதாரணஞ் சொல்லவா? அல்வா கொடுத்த ஐஸ்வர்யா ராயெண்டு புது தலைப்பு தொடங்கி அதுக்கு கீழ கண்ணீர் வடிக்கிறதுக்கெண்டு ஒரு கூட்டமும் விசிறிவிடுறதுக்கு ஒரு கூட்டமும் திரியிறது இங்க நடக்குதே. உதுகள கவனிக்கிறேலயா? ஐஸ்வர்யா ராய் யாரக் கட்டினா உங்களுக்கு என்ன வந்திச்சு? அவான்ர பிள்ளைக்கு உங்கட பேர வைக்கிதெண்டு சொன்னாவோ? மானங்கெட்ட பிழைப்பு நடத்துற எங்கட இளசுகளுக்கு இணையம் உதவி செய்து எண்டுறது இதில இருந்தே தெரியலயா?
படம் இறக்கிறதயும் கல்யாணக்காட் அடிக்கிறதயும் விட்டா பெரும்பாலான இளைஞர்களுக்கு என்ன தெரியுமெண்டுறீங்க? அதவிடுங்க கணனியே பாவிக்கத் தெரியாததுகளுக்கெல்லாம் வீட்டில இணையத்தளத்த பூட்டிக்குடுத்திட்டு இருக்கினம் தாய்தகப்பன். கணனிய ஒழுங்கா பாவிக்கத் தெரியாதவை இணையத்தில என்ன பிரயோசனமா செய்து கிழிக்கப் போயினம்?
Quote:எதிரணித் தலைவர் அவர்களே, மனதிலுள்ள வக்கிரங்கள் என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஏற்கனவே அவர்கள் சீரழிந்துதான் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்... இணையப் பரவலாக்கத்துக்கு முன்னரே மனதில் உள்ள வக்கிரங்களை சுவர்களிலும், பேருந்துகளிலும் இறக்கி வைத்தார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
ஏற்கனவே சீரழிஞ்சிருக்கட்டும். சீரழிஞ்சு போனதுகள இன்னும் சீரழிக்கிறதும் சீரழிவு தானே? ஏதோ ஒரு மூலையில இருக்கிற சீரழிவ உலகமெல்லாம் காவி தொற்றுநோய்போல பரப்புறதும் சீரழிவுதானே? இந்தியாவில பெரியார் எண்டு ஒருத்தர் இருந்தவர். அவரின்ர சில வரியள இங்க உங்களுக்கு நினைவுபடுத்துறது பொருத்தமா இருக்குமெண்டு நினைக்கிறன். கடவுள கற்பித்தவன் முட்டாள்......கடவுள பரப்பியவன் அயோக்கியன்.....கடவுள வணங்குறவன் காட்டுமிராண்டி எண்டு சொல்லியிருக்கிறார். அதத்தான் நாங்களும் சொல்லுறம். சீரழிவுகள பரப்புற இணையமும் அயோக்கியத்தனமானது எண்டு.
Quote:யாகூ சாற் ரூம்கள் பற்றி எதிரணித் தலைவர் குறிப்பிட்டார்.... அவர் கெட்டதை மட்டுமே ஒலிவடிவில் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.... அது ஒரு சிறு துளிதான். யாகூ அரட்டை அறைகளிலே ஒலிவடிவிலான பட்டிமன்றங்கள் நடந்தனவே அவற்றை நீங்கள் அறியவில்லையா? ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்..... எதிரணித் தலைவர் யாழ் போன்ற தமிழ்த் தளங்களை மட்டுமே மையமாக வைத்து தனது வாதத்துக்கு வலுச்சேர்க்கிறார்..... யாழுக்கும் அப்பால் பல வேற்றுமொழித் தளங்களின் மூலம் தமிழ் இளைஞர்கள் பயனடைகிறார்கள் என்பதுவும் அதன் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதுவும் எதிரணியினர் அறியவில்லைப் போல் உள்ளது....
அனிதாக்கா அனிதாக்கா....ஒலிவடிவில நடந்த பட்டிமன்றங்கள் எத்தின பேரால நடத்தப்பட்டிருக்கு? அது எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்த நடந்தது? இப்பவும் அது தொடருதா? இந்த கேள்வியளுக்கு உங்களால என்ன பதில் தரமுடியும்? இவ்வளவு பட்டியலிட்டா பிறகும் ஒருசில கெட்டவைகள் தான் நடக்குது எண்டு நீங்க இனியும் சொல்லுவீங்க எண்டா உங்களுக்காக நான் மிக வருந்துறன். வேற மொழித் தளங்கள பற்றி முதலில சொல்லிட்டன். தமிழ்ச்சினிமால அரைவாசிப்பேர் மூழ்கி இருக்கினமெண்டா மேற்கத்தய பாட்டு மோகத்தில (கெட்ட கெட்ட வார்த்தைகளில படிக்கிறதுகளெல்லாம் பாட்டாகிட்டு) மிச்சப்பேர் திரியினம்.
Quote:இன்று பெரும்பாலான பயனுள்ள தமிழ் இணையத்தளங்களை நிர்வகிப்பவர்கள் யார்? தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தின் மூலம் இணையத்தளங்களை வடிவமைத்து வழங்குபவர்கள் யார்? இளைஞர்கள் தான் என்கிற உண்மையை மறுக்கப் போகிறீர்களா? இன்று இந்த பயனுள்ள இணையத்தளமான யாழ் இணையத்தை வடிவமைத்தும் நிர்வகித்தும் வருகின்ற மோகன் அண்ணா இளைஞர் இல்லையா? இன்று உடனுக்குடன் செய்தியை ஓடிப்போய் புதினம் செய்தித்தளத்தில் பார்க்கிறீர்களே அதனை நிர்வகிப்பவர் யார்? ஒரு இளைஞர் தானே? வலைப்பதிவுகள் பலவற்றில் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதையும் அதன்மூலம் தமிழில் பல நல்லவிதயங்களை அவர்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எப்படி மறந்துபோனீர்கள்? இலக்கிய இதழ்களான அப்பால் தமிழ், தமிழமுதம், பதிவுகள் போன்ற இணையத்தளங்களை மூத்தவர்கள் நெறிப்படுத்த தொழில்நுட்ப உதவிகள் செய்பவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழ் சமூகத்துக்கு எதனைச் செய்தார்கள் என்று கேட்கிறீர்களே தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உறுதுணையாக பல தளங்களை உருவாக்கி நெறிப்படுத்துபவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழீழப் இலக்கியப் படைப்புகள் பல வெளிஉலகத்துக்கு தெரியாமல் இருந்ததே அவற்றையெல்லாம் இணையம் ஊடாக உலகத்தமிழர்கள் அறியும் வகை செய்தவர்கள் யார்? html கற்போம், java கற்போம், வீடியோத் தொழில்நுட்பம் கற்போம், விஞ்ஞானம் அறிவோம் வாருங்கள் என்று தமிழ்சமூகத்தை தொழில்நுட்ப அறிவையும், அறிவியலையும் வளர்க்க இணையம் ஊடாக வழிசெய்தவர்கள் யார்? இன்னும் இன்னும் நிறைய சொல்லலாம்....
இணையத்தளங்க நிர்வகிச்சா போதாது. தொழில்நுட்பங்கள படிச்சா போதாது. இதெல்லாம் செய்தாபோல நன்மையடையினமெண்டு யார் சொன்னது? கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக எண்டு வள்ளுவன் சொல்லி வச்சானே அதுமாதிரி நடக்கோணும். அப்பதான் பயனடையினமெண்டு அர்த்தம்.படிச்ச தொழில்நுட்பத்த வச்சு என்னத்த பெருசா செய்திட்டினம்? இலட்சக்கணக்கில இணையத்த பாக்கிற இந்த தமிழ் இளைஞர்களில எத்தின பேராம் இணையப்பக்கத்த உருவாக்கினம். அவை உருவாக்கினதில எத்தின பக்கங்கள் பயனுள்ள பக்கங்கள்? ஒரு கணக்கெடுத்த நடத்திப் பாப்பமா? தமிங்கிலத்தில இருக்கிற தளங்கள் 30 விழுக்காடுகளத் தாண்டும். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில இருக்கிறதுகள் 50 வீழுக்காடத் தாண்டும். மிச்சமிருக்கிற 20 ல 10 விழுக்காடு தமிழில இருந்தாலும் பயனில்லாத சினிமாக் குப்பயைள காவி வாற தளங்கள். கடைசியா மிஞ்சி இருக்கிறதில எத்தன வீதமான பக்கங்கள் உண்மையான தகவல்கள தாங்கி வருது? எத்தின வீதம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுது? அனித்தாக்கா நீங்க சொன்ன அந்த மூன்று இலக்கிய பக்கங்கள விட வேற ஒரு நாலு புலம்பெயர் ஈழத்தமிழர்களால அதுவும் இளைஞர்களால தொழில்நுட்ப உதவி செய்யப்படுற இலக்கிய பக்கங்கள பட்டியலிட முடியுமா உங்கட அணியால? முடியாது. ஆக உலகத்தில எண்ணிக்கைல ரண்டாவது இடத்தில இருக்கிற தமிழ் இணையப் பக்கங்களில மூன்றே மூன்று இலக்கிய தளங்கள வச்சுக்கொண்டு நன்மையடையினம் எண்டு சொல்லி வாதாட வந்திருக்கிற உங்கள நினைச்சு அழவா சிரிக்கவா எண்டு தெரியல. தமிழீழ விடுதலை போராட்டுத்துக்கான பக்கங்கள ஈழத்தில இருந்தே செய்யினம். அப்பிடி இங்க இருக்கிறாக்கள் செய்யிறதுகள எண்ணினாலும் ஒரு 20 இல இருந்து 30 க்குள்ளதான் வரும். அதில உண்மையாவ தேசித்துக்கு துணையா இருக்கிறதெண்டு பாத்தா ஒரு கை விரல்களுக்குள்ள அடக்கலாம். தமிழீழ இலக்கியத்த உலகத்துக்கு எப்பிடி அறிய வச்சவை? மொழிபெயர்த்து மற்ற மொழிகளில மற்ற நாட்டுக்காரரின்ர பக்கங்களில போட்டு ஈழத்தமிழ் இலக்கியத்த பரப்பினவையா? இலக்கியமெண்டா சூரியக்குடும்பம் தாண்டி ஓடுறவை தான் இந்த இணையம் பாக்கிற 90 வீத இளைஞர்கள். இதில இவை இலக்கியத்த உலகம் முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்டினவையாம் (அய்யோ அய்யோ). HTML JAVA VIDEO பற்றி எங்கயாவது முழுமையா இருக்கா? எல்லாம் அரைகுறை. இதுக்குள்ள இத வச்சு நாங்க என்னத்த படிச்சு கிழிக்கிறது? விஞ்ஞானத்த பிபிசில போய் வாசிச்சா விளக்கமா இருக்கு. அத மொழிபெயர்த்து போடுறத வாசிக்கிறவ எத்தின பேர்.
Quote:எதிரணித் தலைவர் அவர்களே கூத்தடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் டிஸ்கோ இருக்கிறது. டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !
இணையமில்லாமல் இதெல்லாம் நடக்குதெண்டு யார் சொன்னது. கைத்தொலைபேசி இலக்கத்த கடவுளென்ன கனவில கொண்டுவந்து குடுக்குறாரோ? முதலில அரட்டை அறை வழிய தான் கைத்தொலைபேசி இலக்கங்கள் மற்றாக்களிட்ட பரவுது எண்டுற விசயம் அனித்தா அக்காக்கு தெரியேல போல. அதுக்கு பிறகு தொலைபேசில கதைச்சு ஏதாவது ஒரு நிகழ்ச்சில சந்திச்சு பிறகு அங்கால நடக்குறதெல்லாம் சீரழிவுகள். அரட்டை அறையில ஓராளுக்கு கிடைக்கிற இலக்கம் பிறகு அவரின்ர நண்பர் நண்பரின்ர நண்பர் எண்டு அப்பிடியே பரவி ஆளாளுக்கு மாறி மாறி கடைசில என்ன நடக்கும் எண்டு நான் இங்க சொல்லத் தேவையில்ல எண்டு நினைக்கிறன்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b> o விஸ்ணு அண்ணா</b>
Quote:நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம். இணையத்திலும் அதே தான்.... மனக்கட்டுப்பாடின்மை தான் இணைய போதைக்கு காரணமே தவிர எத்தனையோ நன்மைபயக்கும் விடயங்களை தந்து கொண்டிருக்கும் இணையம் எவ்வகையிலும் காரணம் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அழிவுக்கு மட்டுமே வழிசமைக்கும் குடி, போதைவஸ்து போன்றவைகளுடன்... எத்தனையோ சாதனைகளைப்படைக்க வழிசமைக்கும் இணையத்தையும் சேர்த்து கொள்வது எவ்வகையில் பொருத்தமாகும்??
விஸ்ணு அண்ணா மனக்கட்டுப்பாடின்மைதான் அடிமைத்தனத்துக்கு காரணமெண்டுறியள் சரி அப்பிடியே வைச்சுக்கொள்ளுவம். மனக்கட்டுப்பாடின்மை எண்டுறது எப்பிடி வருது? மனக்கட்டுப்பாட்ட உடைச்சாத்தானே வரும். அப்பிடியெண்டா மனக்கட்டுப்பாட்டை உடைக்கிற அளவு பாதிப்பு தாற ஏதோண்டு இணையத்தில இருக்குத்தானே. ஏதோண்டு எண்டுறத விட நிறைய இருக்கு எண்டுறது சரியா இருக்கும். மனுசரின்ர பலவீனங்கள பாவிச்சு மனுசரின்ர மனச குழப்பி தன்னை நம்பி மட்டுமே வாழவைக்கிற ஒரு சீரழிவுச்செயல இணையம் செய்யுது. நானில்லாம உன்னால இருக்க முடியாது எண்டுற எண்ணத்த மனசுக்குள்ள விதைக்குது.
Quote:இதனால் நான் கூறவிரும்புவது நடுவர் அவர்களே....... தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாயக உணர்வுகள் இருக்கிறது என்று பிரியசகி கூறுகிறார். ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களுக்கு தாயக உணர்வை ஊட்டுவதில் இணையம் எத்தகைய ஒரு பணியை ஆற்றுகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக இணையத்தளத்தினூடாக தமது சேவைகளை விரிவு படுத்தும் TYO அமைப்புகளில் இணையத்தளங்களையும் நேரம் இருக்கும் போதுபார்க்குமாறு எதிரணியினரை கேட்டுகொள்கிறேன்.
tyo அமைப்பில இருக்கிற ஆக்களின்ர எண்ணிக்கை எத்தினை? அதில இணையத்த பாக்கிற ஆக்கள் எத்தின பேர்? tyo அமைப்பின்ர இணையப்பக்கங்களால என்னத்த செய்யினம்? அதில எத்தின பேர் பங்குபற்றுகினம்? அரட்டை அறைகளிலயும் படங்கள் இறக்கிற இடங்களிலயும் பங்குபற்றுற ஆக்களோட ஒப்பிடேக்க இந்த எண்ணிக்கை எதுவுமில்ல. அடுத்ததா பார்த்தமெண்டா இணையத்தினூடாக என்ன சேவையை விரிவுபடுத்தியிருக்கினம்? ஒரு online community இருக்குதா? இல்ல. ஒரு ஆரோக்கியமான கருத்து பகிர்வ செய்யிற மாதிரி ஒழுங்கான கருத்துக்களங்கள் இருக்கா? அப்பிடி இருந்தாலும் அதில ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யப்படுதா? இல்லையே.
Quote:காலையில் தாயகத்தில் என்ன நடந்தது ?? என்று பார்த்து... தாயக செய்திகளை அன்றாடம் பெற்றுக்கொண்டு தாயக உணர்வில் எப்போதும் இருக்கவும்.... அது மட்டும் அன்றி உலகதில் எந்த மூலையில் என்ன நடந்தது என்பதை அறிந்து உலக அறிவை பெற்றுக்கொள்ளவும்.. நாளை 10 பேர் மத்தியில் ஒரு பூரணமான ஒருவனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள இனையம் துணைபுரிகிறது.
அப்பிடியா? செய்திகள உடனுக்குடன பெறலாம் எண்டுறது உண்மைதான். அதில இருக்கிற திரிபுத்தன்மைகளால செய்திகளில உண்மையள் இல்லாம போகுது. உடனுக்குடன செய்திய குடுக்கோணுமெண்டு எல்லாரும் ஆசைப்படுறதால உண்மை பொய் ஆராயுறேல. ஒராள் போட்டத அந்தப் பிழையோடயே மற்றாளும் பிரதியெடுத்து போடுறது எல்லாம் நானாந்தம் நடக்குறதுதானே. இதுக்கும் உதாரணம் வேணுமா. யாழில இருக்கு.
Quote:இவ்வாறாக கல்வி, பொழுதுபோக்கு, வர்த்தகம், தொடர்பாடல், விளம்பரம் போன்ற இன்னும் பல விடயங்களில் நமது இளையோர் இணையத்தின் மூலம் பல நன்மைகளை பெற்று தம்மை மெருகேற்றி விருகிறார்கள். இவ்வாறாக பயன் கொடுக்கும் ஒரு இணையத்தை.. ஒரு சிலர் சரியான வழி நடத்தலின்றி.. அல்லது தமது தனிப்பட்ட பலவீனங்களால் கேட்டுப்போவதை சாட்டி குறை கூறுவது எந்தவகையில் நியாயமானது??
பலவீனங்கள் தானா உருவாகுறேல எண்டுற சின்ன உண்மைய பெரிய அண்ணா விஸ்ணு தெரிஞ்சுகொள்ளேலயோ? பலவீனங்கள் உருவாக்கப்படுறது. ஒண்டில ஒராள் பலவீனமா இருந்தா சரி அவர விலகியிருக்க சொல்லலாம். ஒட்டுமொத்தமா இளைஞர்கள் சமூகம் ஒரு விசயத்தில பலவீனமா இருந்தா அந்தப் பலவீனம் வெளில(இணையத்த சொல்றன்) இருந்து தான் உருவாக்கப்படுது அண்ணா. விளம்பரத்தால இளைஞர்கள் என்ன நன்மை பெறுகினம்? வியாபாரம் செய்யினமா? சரி தமிழ் இளைஞர்கள் நடத்துற online shops எத்தினை இருக்கெண்டு சொல்லுங்கோ? வர்த்தகம் போன்ற துறைகளில நன்மையடைகினம் எண்டு சொன்னாப் போதாதே. என்ன எப்படி அடையினம் எண்டு சொல்லுங்கோவன்? பொழுதுபோக்கு எண்டியள். பொழுதுபோக்கால நன்மையடையினமெண்டா சந்தோசப்படலாம். பொழுதுபோக்கெண்டு எங்கட ஆக்கள் சொல்லுறது எத? அரட்டையடிக்கிறதையா? சினிமா செய்தியள வாசிக்கிறதயா? படங்கள் இறக்கிறதையா? சினிமா நடிகர்களின்ரயும் நடிகைகளின்ரயும் படங்கள சேர்த்து வைக்கிறதயா? இல்லாட்டி online games விளையாடுறதையா? எத? எத? எத? இதெல்லாத்தையும் நன்மையளெண்டு சொன்னா உலகம் தாங்காது அண்ணா.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o சிநேகிதி அக்கா</b>
Quote:இணையத்தால எனக்கு என்ன நனமையென்று சொல்றன்.ஒரு நாள் விரிவுரைக்குப் போக முடியவில்லை என்றால் ஒன்றில் பாடத்தளத்தில் விரிவுரைக்கான வாசிப்பன்.அல்லது பதிவு செய்யப்பட்ட ஒலிவடிய விரிவுரைய ஒரு நண்பர் மூலம் இணையத்தினூடு பெற்றுக் கேட்பேன்.ஒரு ஒப்படையைச் சமர்ப்பிக்கத்தான் அன்று கல்லூரிக்குப் போகவேண்டியிருந்தால் ஒரு ஈமெயில்ல விசயம் முடிஞ்சிடும்.முன்னர் மாதிரி பாடஅட்டவணை எடுக்கவோ புத்தகம் எடுக்கவோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.எக்ஸாம் முடிஞ்ச உடனே டிஸ்கஸனுக்குப் போய் யாருக்கு என்ன விடை வந்தது என்று அறியலாம்.ஒன்லைன் குயிஸ் செய்யலாம்.நூல் நிலைய புத்தகங்களை ஹோல்ட்ல போடலாம் றினியு பண்ணலாம்.யுனி தொடங்க முதலே கோர்ஸ் அவுட்லைன் பார்க்கலாம்.பேராசிரியர் அவேன்ர உதவியாளர்களோட நேரில கதைக்க சந்தர்ப்பம் கிடையாதபோது டிஸ்கஸன் போர்டுக்குப் போய்க்கதைக்கலாம். இவ்வளவு ஏன் ஒன்லைன் டிகிறீ படிச்சு எடுக்குதுகள் சனம்.வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.
மொத்தத்தில சோம்பேறியாகுறீங்க எண்டு சொல்லுங்கோ. நோய் ஏதாவது வந்து விரிவுரைக்கு போகாட்டி அத பாடத்தளத்தில இருந்து எடுத்து வாசிக்கிற வசதி பிறகு எதுக்கு விரிவுரைக்கு போகணும் பிறகு ஆறுதலா வீட்ட இருந்தே படிக்கலாம் எண்டுற எண்ணத்த கொண்டுவரும். பிறகு பிறகு எண்டு கடைசில படிக்காமலே சோம்பேறித்தனமா விட்டிருவினம். இதான் இப்ப நடக்கிறது. நீங்க சொன்ன புத்தக விசயமெல்லாம் ரெலிபோனிலயும் வீட்டில இருந்து செய்யலாம். இதுக்கு இன்ரர்நெட் தேவையெண்டில்ல. எல்லாம் செய்யலாம் செய்யலாம் எண்டு சொல்லுறியளே ஒழியே எத்தினை தமிழ் இளைஞர்கள் உப்பிடியெல்லாம் உதால பயனடையினம் எண்டு சொல்லவேயில்லை. வெப்காமில முகத்த காட்டலாம் பிறகு அத ஸ்கிறீன்சொடு் எடுத்து வேறமாதிரி ஆபாசமா மாத்தி உலகமெல்லாம் ரசிக்க அனுப்பலாம். என்னக்கா சொல்றீங்க? ஸ்கைப் பயன்படுத்துறதில இளைஞர்களுக்கு என்ன சிறப்பா நன்மையெண்டு சொல்லுங்கோவன்?
Quote:கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட வசதியைப் பயன்படுத்துங்கோ.இன்னும் பத்து வருடங்களில் வங்கி நடவடிக்கைகள் குறைக்கப்பட்டால் எல்லாரும் இணையத்தினூடுதான் காசுப்பரிமாற்றம் எல்லாம் செய்ய வேண்டி வந்தால் அப்ப என்ன செய்வம்.தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் அனுகூலங்களை இருகரம் சேர்த்துப் பெற்றுக்கொண்ட நாங்கள் பிரதிகூலங்களையும் சமாளிக்கத்தான் வேண்டும்.
இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டினம். இருந்தாலும் எனக்கும் சில விசயங்கள சொல்லோணும் போல இருக்கு. அக்கா நீங்க வசதியா இருக்கிறீங்க போல. உதுகள வாங்குவீங்க. ஆனா எல்லாரும் அப்பிடி இல்லத்தானே. மற்றது இன்னொரு பக்கத்தால பொருளாதார ரீதியா உது சிக்கல கொண்டு வருதுதானே. நீங்க சொல்லுறத பார்த்தா நன்மையடையோணுமெண்டா சீரழியோணுமெண்டுற மாதிரியெல்லோ கிடக்கு.
Quote:அதே போலதான் இணையத்தில ஆபாசப்படமிருக்கு கெட்டுப்போக வழியிருக்கு என்று புலம்பாம அன்னம் மாதிரி பாலைமட்டும் குடியுங்கோ தண்ணியை விடுங்கோ.ஆபாசம் வன்முறையெல்லாம் தொலைக்காட்சியிலும் இருந்தது தானே அங்க எப்பிடி
பெற்றோர் கட்டுப்பாட்டு வசதி இருந்ததோ அத மாதிரி கணனியிலும் இருக்குப் பாவியுங்கோ.ஒரு கொஞ்சக்காசோட அந்நிய நாட்டில பிழைக்க முடியும் என்று நம்பி வந்த பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் நம்பிக்கை வேணும்
மொத்தத்தில இளைஞர்கள் இணையத்தால சீரழியினம் எண்டுறத ஒத்துக்கொள்ளுறியள். அதாலதான் அதுக்கு தீர்வு சொல்ல வெளிக்கிடுறியள். நடுவர்மாரே கவனியுங்கோ. சீரழிகிறார்கள் என்பதை சிநேகிதி அக்கா ஒத்துக்கொண்டு அதில இருந்து பாதுகாத்துக்கொள்ளுறதுக்கு வழி சொல்லுறா. பிள்ளையள கவனிக்கிறதுக்கு நேரமில்லாம ஓடி ஓடி உழைக்கிற புலம்பெயர் பெற்றோருக்கு மேலும் ஒரு வேலைய சிநேகிதி அக்கா கொடுக்க சொல்லுறா. பாவம் ஊரில இருக்கிற சொந்தங்கள கவனிக்கோணும் அதவிட நாட்டுக்கு உதவுறதுக்காக உழைக்கோணும். இப்பிடி எல்லாத்துக்கும் உழைச்சு தேய்ஞ்சு போற பெற்றோர மேல மேல கஸ்ரப்படுத்த சொல்லுறா சிநேகிதி அக்கா. இவை சீரழிஞ்சு போவினமாம் ஆனா இவையள பிறகு பாதுகாக்க வேணுமாம். நல்லா இருக்கு உங்கட தத்துவம்.
Quote:நீங்கள் சொல்ற மாதிரி இணையத்தில உள்ளதைக் கொண்டே குடுக்க அதை வாங்கி திருத்துற அளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல.எங்க எப்ப எந்தத்த தளத்தில இருந்து சுடப்பட்டிருக்கு என்று துல்லியமாகச் சொல்லும் மென்பொருள்கள் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் எல்லாமுண்டு.சில பாடங்களுக்கு இணையத்தளங்களை தகுந்த சைற்றேசனோடு பயன்படுத்தலாம். சில பாடங்களுக்கு புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் மட்டுமே பாவிக்கலாம்.இணையத்தை கட்டாயம் மற்றவருடைய வேலையக் களவாடத்தான் பாவிக்கவேண்டுமா அவர்கள் ஒரு கடினமான விளக்கத்ததை இலகுவான நடையில் எழுதியிருந்தால் அதை வாசிச்சு அறிவை வளர்க்கலாமே தமிழினியக்கா.
நீங்க சொல்றதெல்லாம் பல்கலைக்கழக மட்டத்தில சரியா இருக்கலாம். ஆனா பள்ளிக்கூட மட்டத்தில உதுகள கவனிக்கிறல. ஆனாலும் பல்கலைக்கழக மட்டத்திலயும் பாருங்கோ இணையத்தில இருந்து எடுத்து கொஞ்சமா மாத்திப்போட்டு குடுத்தா அத பல்கலைக்கழகத்திலயும் கண்டுபிடிக்கிறது சிக்கலான வேலை. நீங்க நினைக்கிற அளவொண்டும் தொழில்நுட்பம் வளரேல்லக்கா. முதல்ல இணையத்தில ஒரு விசயத்த தேடி இலகுவா எப்பிடி கண்டுபிடிக்கிறதெண்டுறது எங்கட இளைஞர்களுக்கு தெரியிறேல. அதால ஒண்ட தேடியெடுக்க கனநேரம் செலவளிக்கினம். இப்ப பார்த்தீங்க எண்டா இணையத்தில இன்னொராளின்ரய எடுத்த தன்ர ஆக்கமெண்டு வெளில சொல்லித் திரியிற சீரழிவுகளும் நடக்குது. உங்க யாழிலயும் ரண்டு மூண்டு பேர் பிடிபட்டவை. இன்னொண்டையும் சொல்லோணும். இணையத்தில பொறுக்கியெடுக்கிறதுகள கொண்டுவந்து ஒரிடத்தில போடுவினம். அத எங்க எடுத்தவை எப்ப எடுத்தவை அத யாரெழுதினது எண்டறத பற்றின ஒரு தகவல்களும் இல்லாம. இதெல்லாம் தகவல் திருட்டுத்தானே. இதுகளெல்லாம் சீரழிவுகள் தானே?
Quote:இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச் சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது.இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே.வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.
ஓமக்கா இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகந்தான். அதால என்னத்த எழுதுறதெண்டு தெரியாமல் கண்ட கண்ட குப்பையளையும் எழுதிக் கொட்டுகினம். உங்க வலைப்பதிவு வழிய நடக்கிற கூத்துகள பாக்கிறம்தானே. ஆபாசமா பின்னூட்டம் எழுதுகினம். ஒராளின்ர குடும்பத்த பற்றி கண்டபடி கதைப்பினம். ஏன் இங்க யாழிலயே சுதந்திரமா ஒண்ட எழுதமுடியுமா. எழுதினா உடன தனிப்பட தாக்க வெளிக்கிடுவினம். சுதந்திரமா எழுதக் கிடைச்சோடன சுயதம்பட்டம் அடிக்கிற கூட்டம் தான் அதிகரிச்சிருக்கு. இணையத்தில எழுதிறெண்டா கூட வீட்டுக்கு தெரியாமத் தான் நீங்க எழுதவேணு்டிக் கிடக்கு. அப்பிடி எழுதிக் கிழிச்சு என்னத்தக் கண்டியள்? ஏதாவது நன்மையடைஞ்சியளா? உங்கட முகத்த காட்டிக்கொண்டு உங்கட சொந்தப்பேர வைச்சுக்கொண்டு உங்களால சுதந்திரமா உங்கட கருத்த வெளிப்படையா இந்த யாழ்களத்தில வைக்கமுடியுமா? வைச்சுக்காட்டுங்க. அதுக்கும் அடுத்ததா போய் பெண்கள் திருமணத்துக்கு முதல்ல பாலியல் உறவு வைச்சுக்கொள்ளலாமா வேண்டாமா எண்டுறத பற்றி உங்கட ஒரு கட்டுரைய எழுதுங்கோ. அப்ப பெண்கள் சுதந்திரமா எழுதுகினம் எணு்டு ஒத்துக்கொள்ளுறன். சும்மா விசுக்கியடிச்சுக்கொண்டு சுதந்திரமா எழுதுறமெண்டு கதையளக்காதேங்கோ.
Quote:நீங்க சொன்ன இந்தியாவில தான் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மலிவான விலையில் 700 சானல்கள் கொண்ட ஒரு டிஸ்க்கை விற்பனைக்கு விட்டது.சன் ரீவி செய்தியிலை பார்த்தது.பெயர்கள் ஞாபகம் இல்லை.அந்த டிஸ்க் ஏனிப்பிடி மலிவாக விற்கப்பட்டடு எப்பிடி இவ்வளவு விற்பனையானது என்று ஆராய்ந்ததில் அதில் பல வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சானல்கள் இருந்ததாம்.அதால பார்க்கிறதுக்கு இணையம்தான் கதி என்றில்லை.இப்பெல்லாம் ஹிந்திப்படத்திலெல்லாம் எல்லாம் காட்டினமே கெட்டுப்போகணும் என்றால் நிறைய வழியிருக்கு. ஈராக் படங்கள் பத்திரிக்கைகளில் ஒரு அமெரிக்க அதிகாரி ஆண்கைதிகளை பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுடும் படங்கள் வந்திருந்தனதானே.
அக்கா முதலாவது நாங்க இங்க புலம்பெயர்ந்த நாடுகளில வாழுற இளைஞர்கள பற்றிக் கதைக்கிறம். இரண்டாவது நாங்க இணையத்தால சீரழிஞ்சுபோறத பற்றிகஇ கதைச்சா நீங்க ஏன் அதுகும் கெடுக்குது தர்னெ இதுகும் கெடுக்குது தர்னே எண்டுகொண்டு இருக்கிறியள். இங்க சிலபேரின்ர வியாதி உங்களுக்கும் தொத்திட்டுது எண்டு நினைக்கிறன். ஒண்டப் பற்றிக் கதைச்சா ஏன் அதபற்றிக் கதைக்கல ஏன் இதப்பற்றிக் கதைக்கல எண்டு தங்கட பலவீனத்த காட்டுறது. நாங்க கதைக்கிறது இணையத்தின்ர சீரழிவுகள பற்றி. தொலைக்காட்சியளின்ர சீரழிவுகள பற்றி வேணுமெண்டா பிறகொரு தலைப்பத் தொடங்கிக்க கதைப்பம். சரியா?
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o அஜீவன் அண்ணா</b>
அஜீவனண்ணா இணையத்தின்ர பொதுவான நன்மையத்தான் சொல்லியிருக்கிறார். அதெல்லாத்தாலயும் புலம்பெயர்ந்த நாடுகளில வாழுற தமிழ் இளைஞர்கள் நன்மையடையினமா எண்டுறதுக்கு ஆதாரங்களயோ உதாரணங்களயோ அவர் வைக்கல.
Quote:அது போலவே நல்லவைகளை விட தீமைகளே பலரது கண்ணையும் மனதையும் வசீகரிக்கின்றன. எதுக் கெடுத்தாலும் அதன் நன்மைகளை பார்ப்பதையும் ஆராய்வதை விடுத்து தீயவற்றை ஆராய்வதிலேயே பல உள்ளங்கள் காலத்தைச் வீணடிக்கின்றனவே? அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
சரியாச் சொன்னியள். பாருங்கோ நீங்களும் எங்கட அணிக்கு சார்பாத்தான் கதைக்கிறியள். அதான் நல்லதெல்லாத்தையும் விட்டிட்டு இணையத்தில இருக்கிற தீயதுகளத்தான் எங்கட தமிழாக்கள் தேடிப் போகினம். தீயதுகளில தான் கவர்ச்சி கூடப்போல இருக்கு. இதில புரியாத புதிரா என்ன இருக்கு.
Quote:மரணப்படுக்கையில் இருந்த தமிழ் கூட இணையத்தின் வழி பிராணவாயு கொடுக்கப்பட்ட நோயாளியின் நிலையில் தற்போது பிழைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
மரணப்படுக்கையில கிடந்த தமிழ் இப்ப சுடுகாட்டுக்கு போய்க்கொண்டிருக்கெண்டுறது அஜீவனண்ணாக்கு விளங்கேல. தமிழில கவனிப்பாரில்லாமல் பிழைகள தாராளமா விடுகினம். இப்ப என்னப்பாருங்கோ. அவசரத்தில பள்ளிக்கூடத்திலயோ இல்லாட்டி வேலையிடத்திலயோ நிண்டு எழுதேக்க பிழையள கவனிக்காம அப்பிடியே அனுப்பிட்டு போயிடுவன். அண்டைக்கும் -ரமில்- எண்டு நக்கலுக்கு தமிழ் எழுதியே தமிழ கொலை பண்ணுற -டங்கிளஸ்- (பெயரும் தமிழில்ல) அண்ணா என்னை ஒழுங்கா தமிழ எழுதுமெண்டு சுட்டிக்காட்டினவர். சுட்டிக்காட்ட யாருமில்லாம நிறைய இடங்களில தமிழக் கொலை பண்ணுகினம். பிறகு அரட்டை அறை வழிய தமிழ ஆங்கிலத்தில எழுதி கொலை பண்ணுகினம். இப்பிடியே நிலமை போனா புதைகுழிக்குள்ள தமிழ் போயிடும் இல்லாட்டி சாம்பாலாப் போயிடும்.
Quote:உலகெங்கும் பரந்து வாழும் மக்கள் முகம் தெரியாமல் இருந்தாலும் ஒரே சமயத்தில் இணையத்தின் வழி இணைந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் நட்புப் பாலம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறதே என்பது பல காலத்துக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம்தான்.
அதிசயம் தான் ஆனா அழிவு. உலகமெல்லாம் பரந்து வாழுறவையோட தொடர்ப வச்சிருக்கிற ஆக்கள் பக்கத்தில இருக்கிற தமிழாக்கள தெரியாம இருப்பினம். நட்புப் பாலமா நச்சுப் பாலமா? நல்ல நண்பர்கள் இணையத்தில கிடைக்கிறதே அரிது. இணையத்தில பழகிற முக்காவாசி ஆக்கள் லவ் பண்ணத் திரியறவை தான். வேணுமெண்டா உங்களமாதிரி இளைஞர்கள் எண்டுற பருவத்த தாண்டினவைக்கு நட்புப்பாலங்கள் சாத்தியமா இருக்கலாம். ஆனா இங்க இளைஞர்கள பொறுத்த வரைக்கும் காதல் தான் முதலாவது. காதல் சரிவராட்டி கடைசியா ஏனோ தானோண்டு நட்புப்பாலம் கட்டுவினம். இல்லாட்டி புதுசா இன்னொண்டத் தேடுவினம்.
Quote:அது போலவே நம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களது எண்ணங்கள் கூட தொலைந்து போனதும் மறுப்பாகி குப்பைகளுக்குள் தூக்கி எறிப்பட்டதுமான நிகழ்வுகள் ஏராளம்.
இன்றைய நிலை அன்று இருந்திருந்தால் எவ்வளவோ பதிவுகள் பாதுகாப்பாய் இருந்திருக்கும்?
எழுத்தாளர்கள பற்றி சொல்றீங்கள். சரி அதில எத்தினை பேர் இளைஞர்களெண்டு சொல்லுங்கோவன். அதாவது புலம்பெயர்ந்த இளைஞர்கள். அரட்டையடிக்கிற ஆக்கள் தான் அதிகம் ஆக்கபூர்வமா எழுதவெளிக்கிடுற ஆக்கள விட.
Quote:பொதுவில் காரசார விவாதங்களில் ஈடுபடுபவர்கள், தனி மடலில் நட்பு பாராட்டிக் கொள்வதெல்லாம் இங்கே வெகு சாதாரணம்.
ஏனண்ணா இதெல்லாம் ஒரு நன்மையெண்டு சொல்லுறீங்க. வெளிலயும் காரசாரமா கதைக்கிறவை தங்களுக்குள்ள நட்பு பாராட்டுகினம் தானே. கருத்துக்களால மேர்துறவை தங்களுக்குள்ள பகைய வளர்க்கிறேலத்தானே. அவை தங்களுக்குள்ள நட்புப் பாராட்டுறதில அதிசயமொண்டுமில்ல. கருத்துமோதல விளங்கிக்கொள்ளாம தனிநபர் மோதல் செய்யிறவை இருக்கினமெல்லோ அவை எங்க இருந்தாலும் நட்பு பாராட்டாயினம். மற்றது இங்க முகமூடி போட்டு வாறதால ஒராள ஒராள் மதிக்கோணுமெண்டுற பண்பே இல்ல. மனுச உணர்வுகள மதிச்சு கருத்து எழுதோணுமெண்டுற சாதாரண அறிவுகூட இல்ல. தானதோன்றித்தனமா மற்றாக்கள மிதிச்சு எழுதத்தான் கனபேர் இருக்கினம். (இவையளுக்குள்ள நாங்களும் எங்கட கருத்துகள வைக்கோணுமெண்டா நாங்களும் அவை மாதிரி மிதிக்கவெளிக்கிடோணும்)
Quote:மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது. சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.
அப்ப எழுத்துப்பிழையளோட எழுதலாம் எண்டுறியள். ம் நடவர் அய்யா ஒரு தமிழ் ஆசிரியர் எண்டு கேள்விப்பட்டன். அவர் உதுகள பற்றி என்ன சொல்லுறார் எண்டு கேக்க ஆசையா இருக்கு. இண்டைக்கு எழுத்துபிழையில ஆரம்பிக்கிறது நாளைக்கு சிதைஞ்சு சிதைஞ்சு பொருட்பிழையிலயும் வசனப்பிழையிலயும் வந்து நிக்கும். அதுக்கு பிறகு நான் முதல்ல சொன்னமாதிரி விறகடுக்கி கொள்ளி வைக்கவேண்டியதுதான் தமிழுக்கு.
Quote:மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.
ஓமோம் மாற்றுக்கருத்துகள மட்டுமில்ல மாற்றுக்கருத்து எண்டுற பேரில சமூகவிரோதக் கருத்துகளும் வரும். இணையத்திலயும் இன்னொராளின்ர கருத்த சிதைச்சும் திரிச்சும் போடலாம்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o மதன் அண்ணா</b>
Quote:ஆக தப்பு இணையத்தில் இல்லை பார்வையில் தான்.
அப்ப உங்களுக்கெல்லாம் என்ன பார்வைக்கோளாறா? சரி விடுங்க விடுங்க. ஒரு கதை சொல்றன் கேளுங்க. ஒரு பெரிய பெட்டிக்குள்ள குப்பையள் இருக்கு. அழுக்காவும் கெட்ட மணத்தோடயும் அழுகிப்போனதாவும் நிறைய இருக்கு. பெட்டிய சுத்தி பரிசு குடுக்கிற சாமான்களுக்கு சுத்துற பேப்பரால வடிவா சுத்தி அலங்காரமெல்லாம் செய்திருக்கு. வாசனைக்காக சுத்தி சுத்தி சென்ற் எல்லாம் அடிச்சிருக்கு. இப்ப அத கொண்டு வந்து பட்டிமன்றம் நடக்கிற இடத்தில ஒரு அறைக்குள்ள வைச்சாச்சு. அத எங்கட அணித் தலைவரும் எதிரணித் தலைவரும் ஒருக்கா போய் பார்த்திட்டு வரலாம். அப்ப எதிரணித் தலைவர் போறார் உள்ளுக்க. உள்ளுக்க போய் அவர் எல்லாத்தையும் பாத்திட்டு அதின்ர வெளித்தோற்றத்திலயும் வாசனையிலயும் மயங்கி இவ்வளவு வடிவா இருக்கே. எங்கட ஆக்களுக்கு இதுக்குள்ள நிறைய விசயங்கள் பயன்படுற விசயங்கள் இருக்குதே எண்டு யோசிச்சார். அவர் அப்பிடியே கற்பனை உலகத்துக்குள்ள போட்டார். அப்பிடியே வெளில வந்து -அம்மாடியோ இது என்ன அதிசயமா கிடக்கு. இதப்போல புதுமையான ஒரு விசயத்த இதுவரைக்கும் பாக்கலயே. இது எங்கட ஆக்களுக்கு நிறையத் தரப்போது. இதால பெரிய புரட்சியே நடக்கப்போகுது- எண்டு கதையளக்கிறார். அடுத்ததா எங்கட அணித்தலைவர் உள்ளுக்க போறார். அவருக்கு வெளித் தோற்றத்த பார்த்தோடன ஒரு சின்ன சந்தேகம் வந்திட்டு. வடிவா இருந்தாலே ஆபத்தாச்சே. என்ன விசயமிருக்கும் எண்டு அலசிப் பாக்கிறார். பெட்டில சாதுவா ஓட்டை போட்டு பாத்தா உள்ளுக்குள்ள இருந்து அழுகின மணம் வரத்தொடங்கிட்டு. எங்கட அணித்தலைவருக்கு விளங்கிட்டு. ஓட்டைக்குள்ளால தன்ர பேனாவ விட்டு கிளறிப்பாக்கிறார். புழு ஒண்டு வெளில விழுந்திச்சு. எங்கட அணித்தலைவர் அவசர அவசரமா வெளில வந்தார். -அந்தப் பெட்டிக்குள்ள நிறைய கெட்ட சாமான்கள் எல்லாம் கிடக்கு. அழிகிப்போன மணமெல்லாம் வருது. இது எங்கட ஆக்களுக்கு கூடாது. சீரழிக்கிறதுக்க பேர்குது. அந்த நாத்தம் எல்லாரையும் மயக்க நிலைக்கு கொண்டு போகப் போகுது. எல்லாரும் கவனமா இருங்கோ- எண்டு எச்சரிக்கிறார். அதுக்கு எதிரணில இருக்கிற மாதவன் -சீ மன்னிக்கோணும் அவரின்ர அடையாளமே மறந்து போச்சு- மதனண்ணா பெட்டில தப்பில்லையாம் பார்வையில தான் தப்பாம். அப்ப யாரின்ர பார்வையில தப்பெண்டு நடுவர்மார்களே சொல்லுங்கோ.
Quote:எதிர்காலத்தில் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தால் அதையும் நல்ல முறையில் உபயோகித்து நன்மையடைவார்கள் நமது இளையோர்.
நல்ல நம்பிக்கை. உங்கட அணித் தலைவரின்ர புதுமையான கற்பனையள் எல்லாம் உங்களுக்குள்ளயும் வந்திட்டு போல. சும்மா சும்மா எதிர்காலத்த பற்றி கற்பனையள கதைச்சுக்கொண்டிருக்காம நிகழ்காலத்த கொஞ்சம் பாருங்கோவன். நிகழ்காலத்தில நடக்கிற சீரழிவுகள பார்த்த பிறகுமா உந்த கற்பனையள். எதிர்காலத்தில இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தாலும் அதையும் தாங்கள் சீரழிவுக்காகத்தான் எங்கட இளைஞர்கள் பயன்படுத்துவினம். அதால அந்த சக்திவாய்ந்த ஊடகத்தாலயும் மேலதிகமா கெட்டுச் சீரழிஞ்சு போவினம்.
Quote:இப்போதாவது எப்படி இளையோர் இணையம் மூலம் வாழ்க்கை துணையை தேர்தெடுக்கின்றார்கள் மற்றும் வேறு வழிகளில் அறிமுகமானோரை திருமணம் செய்ய முன்பு இணையம் மூலம் புரிந்து கொண்டு நன்மையடைகின்றார்கள் என்று எதிரணி நண்பர்களுக்கு புரிந்ததா அல்லது இன்னும் புரியாதது போல் நடிக்க போகிறீர்களா?
நாங்க ஒண்டும் புரியாத மாதிரி நடிக்கல அண்ணா. ஆனா இணையத்தில புரிஞ்சுகொண்டமாதிரி நடிச்சு ஏமாத்துற வேலையள் தான் நிறைய நடக்குதுங்கோ அண்ணா. நேரில சந்திச்சே ஒண்டையும் ஒழுங்கா புரிஞ்சுகொள்ள முடியேல. 10 வருசங்களா பக்கத்தில சேர்ந்திருந்தவையே விவாகரத்து வாங்குகினம். இதுக்குள்ள இணையத்துக்குள்ளால புரிஞ்சுகொள்ளப் போகினமாம். நல்ல கதையாத்தான் இருக்கு. உங்கட அணித்தலைவர்தானே ஏதோ கணனில செய்த படங்கள் கொஞ்சத்த போட்டு எழுதியிருந்தவர்.
<b>...பல சட்டவிரோதமான வேலைகளைச் செய்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்பது கவலைக்குரியதே.
இன்று பொழுதுபோக்கு சஞ்சிகைகள், விளம்பர இதழ்கள், உடற்பயிற்சி சார்ந்த சஞ்சிகைகள் போன்றவற்றிற்கான படங்கள் இந்தமுறையிலேயே செய்யப்படுகின்றன. முகத்தில் ஒரு பருக்கூட இல்லாத, தோல் மென்மையாக இருக்கிற, கண்கள் ஒளிர்கிற படங்களைப் பார்த்து ஏமாருபவர்கள் பலர். நாம் அப்படி இல்லையே என்று தமக்குள் ஏங்குபவர்கள் பலர். ஆனால் உண்மையில் ஒரு பருக்கூட இல்லாத, ஒரு காயமோ, கீறலோ இல்லாத முகம் அல்லது மேனி எங்கும் இல்லை என்பதே உண்மை. digital imaging மூலம் தேவதைகளையும் மன்மதன்களையும் விளம்பர இதழ்கள் உருவாக்கிவிட்டுள்ளன.</b>
இப்பிடி படங்கள மாத்தி செய்து அனுப்பியும் ஒராள ஏமாத்தலாந்தானே. நேரில சந்திக்கேக்க தான் ஏமாந்து போனத நினைச்சு தற்கொலை செய்தவையின்ர கதையளும் இணையத்தால நடந்திருக்கிறத நீங்க தெரிஞ்சும் தெரியாத மாதிரிக் கதைக்கிறியள்.
Quote:அடுத்து மென்பொருள் திருட்டு பற்றி சொல்லியிருக்கின்றார். உரிய வகையில் வாங்கப்படும் மென்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக பிரதி செய்யப்பட்டு நடைபாதையில் வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன நண்பர்களிடையே மென் தகடுகளாக பரிமாறப்படுகின்றன். இணையம் இன்றியே நடக்கும் ஒரு விட்யம் இது. ஆனால் இது இணையம் வழியால் தான் நடப்பதாகவும் அதனால் இளையோர் சீரழிவதாக புது கதை சொல்கின்றார் அருவி.
இணையமில்லாமல் நடக்கிறது குறைவாத்தான் இருந்திருக்கும். இணையத்தாலதான் அது அதிகரிச்சு இருக்கு. இப்ப லண்டனில இருக்கிறவர் தனக்கு கிடைச்ச ஒரு மென்பொருள பிரான்சுக்கு அனுப்புறாரெண்டா அது இணையத்தால தானே நடக்குது. கடிதத்தால அனுப்பலாந்தர்னெ எண்டு சொல்லுவியள். ஆனா கடிதத்தால எத்தின பேருக்கு அனுப்பேலும். இணையத்துக்குள்ளால வேகமா பரவுது.
Quote:இதற்கு பதிலை நீட்டி முழக்கி எழுத போவதில்லை சுருக்கமாகவே சொல்கின்றேன். தாயக செய்திகளை அறிய புலம் பெயர் இளையோர் உபயோகிக்கும் முக்கிய தளங்கள் தமிழ் நெட் மற்றும் புதினம்.
தமிழ்நெட்டையும் புதினத்தையும் தவிர வேறொண்டும் உங்களால சொல்ல முடியாது. சொன்னாலும் அதுகளில நம்பிக்கைத்தன்மை இருக்கா எண்டா அதையும் சொல்ல முடியாது. மொத்தத்தில எத்தனையோ இளைஞர்கள் பார்க்கிற இணையத்தில இரண்டே இரண்டு தளங்கள் தான் உங்களுக்கு நம்பிக்கையா இருக்கு.
Quote:வலைப்பதிவுகள் அண்மைகாலங்களில் ஆரம்பமாகி இப்போது தான் பிரபல்யமாகி வருகின்றது. அவற்றை புலம்பெயர்ந்த இளையோர் தமது கருத்துக்களை எண்ணங்களை தங்குதடையின்றி வெளிப்படுத்த உபயோகிக்கின்றார்கள். தமிழில் தோன்றும் வலைப்பதிவுகளை எடுத்து கொண்டால் அவை தமிழ் நன்றாக தெரியாத புலம் பெயர்ந்த இளையோரினால் தமிழில் எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஆரம்பிக்கபடும் போது இலக்கண தவறுகள் ஏதும் நிகழலாம். அவை வேண்டுமென்றே செய்யப்படுவன அல்ல. இன்று இந்த வலைப்பதிவு மூலம் தமிழில் தனது புலமையை அதிகரித்து நன்மையடையும் இளையோர் நாளை அந்த இலக்கண தவறுகளையும் மற்றவர்களின் வழிகாட்டலுடன் சரி செய்வார்கள் என்பதை க்ருத்தில் கொள்ளுங்கள். இங்கு இளைன்யோரின் நோக்கம் தமிழில் எழுதுவதே அன்றி இலக்கண விதிகளை மீறுவது அல்ல.
வலைப்பதிவுகள பற்றி உங்கட அணில எத்தினை தரந்தான் திரும்பத் திரும்ப சொல்லுவியள். இலக்கணப் பிழையள நாளைக்கு திருத்துறது இருக்கட்டுமண்ணா. இண்டைக்கு யாரு திருத்திறது? இண்டைக்கு சீரழிஞ்சுகொண்டும் சீரழிச்சுக்கொண்டுமெல்லோ இருக்கினம். தாமே ராசா தாமே மந்திரி எண்ட கணக்கா வலைப்பதிவில எழுதுறாக்கள ஆரு வழிநடத்துறது? இலக்கணமில்லாட்டி தமிழில்ல எண்டுறதா யாரோ சொல்லிக் கேள்விப்பட்டன். அது உண்மையா இருந்தா -இளையோரின் நோக்கம் தமிழில் எழுதுவதுதான் ஆனா இலக்கணப் பிழையள் விடுறது ஒண்டும் பெரிய பிழையில்லையெண்டுறது- சின்னப்பிள்ளத்தனமான வாதமண்ணா. தட்டச்சுறதில பிழையள விட்டா சரி பறவால்ல தட்டச்சி பழகப் பழக அது திருத்தமா வருமெண்டு சொல்லலாம். ல ள ழ வில பிழையள விட்டா எழுதுற விசயத்தின்ர அர்த்தமே மாறிப்போகுதெண்டு செல்வமுத்து அண்ணாவே அண்டைக்கு பட்டிமன்றத்தில எழுதினது உங்கட பார்வையில விழலயோ?
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o வர்ணன் அண்ணா</b>
நன்மைகளை மட்டுமே அடுக்கிக்கொண்டு போனாக் காணுமா? நன்மையடைகிறார்களா எண்டுறத் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். சரி பறவால்ல. என்ன செய்யிறது சொல்றதுக்கு இருந்தாத்தானே சொல்லலாம். இல்லாட்டி நீங்க என்ன செய்வீங்கள் பாவம்.
Quote:சாட்டிங்கும் அதன் பிறகு டேற்றின்கும் என்று வாதாடுறீங்கள்.
சாட் பண்ண இணையம் வழி செய்யுதுதான்.. அதற்காக
24 மணி நேரமும் சாட் பண்ண முடியுமா?
அது ஒரு வகை பொழுதுபோக்கு... '
இயந்திரமயமான புலம் பெயர்வு வாழ்க்கை அதுக்கு இடம் கொடுக்குமா?
என்ன இப்பிடிக் கேட்டுப்போட்டியள் அண்ணா. 24 மணிநேரமென்ன ஒருநாளில 48 மணித்தியாலம் இருந்தாலும் எங்கட இளைஞர்கள் அவ்வளவு நேரமும் அரட்டையடிப்பினம் இணையத்தில. அட சாப்பாடு தண்ணி எதுவுமில்லாமலும் அதில இருப்பினம் தெரியுமோ? பொழுதுபோக்கெண்டுறது சரி. ஆனா பொழுதே -அரட்டையில- போக்குறதுக்கு தான் எண்டு நினைச்சுகொண்டெல்லோ எங்கட இளமாக்கள் இருக்கினம்.
Quote:* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?
இணையத்தளங்கள் வாறதுக்கு முதலும் காதல் இருந்திச்சுத்தான். ஆரும் எங்கட அணில இல்லையெண்டு சொன்னியளா? இல்லத்தானே. எங்கட அணிலயே வித்தியாசமான புதுமையான புரட்சியான -பறக்கிற- -மலருற- காதல்கள் இருக்கு. அதால நாங்க ஒண்டும் காதல பற்றி தப்பா சொல்லமாட்டம். ஆனா இணையத்தால காதலெண்டுற சொல்லின்ர அர்த்தமே கெட்டுப்போச்சு எண்டுதான் சொல்லுறம். ஒரு பக்கத்தில அக்காவோட அரட்டையடிச்சு கடலைபோட்டு கவுத்து காதலிக்கிறதெண்டுறது. மற்றப்பக்கத்தில தங்கச்சியோட கடலை போட்டு காதலிக்கிறதெண்டுறது. பிறகு அக்காவும் தங்கச்சியுமா ஒருத்தருக்கொருத்தர் தெரியாம ஒராளையே காதலிக்கிற கொடுமைய என்னவெண்டுறது. உதாவது பறவால்ல. ஒரு வீட்டில வேற வேற கணினியில இருந்துகொண்டு அண்ணனும் தங்கச்சியுமே -அண்ணன் தங்கச்சி எண்டு தெரியாம- கடலைபோட்டு காதலிச்ச கொடுமையளும் நடந்திச்சு. கேள்விப்படலயா அண்ணாமாரே அக்காமாரே. எதுக்கும் உங்கட வீட்டில கவனமா இருங்கோ.
Quote:*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?
மொத்தத்தில திரும்ப திரும்ப ஒத்துக்கொள்ளுறியள் இணையத்தளத்திலயும் வக்கிரங்கள இறக்கி வைக்கினமெண்டுறத. அப்ப அதின்ர அர்த்தமென்ன? இணையத்தளங்களாலயும் சீரழிஞ்சு போகினம் எண்டுறதுதானே?
Quote:*கண்காணிப்பாளர்களற்ற ???????? சாட்ரூம் என்ற ஒன்று வந்தபின்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா?
*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?
நீங்கள் இணையதளங்களில் உள்ள பாதிப்பு என்று சொல்லவந்தது ...
அதன் மொத்த பகுதியின் சிறு அம்சம்! ஆகவே ஒன்றை வைத்து பலதை தீர்மானிப்பது எப்படி இருக்கிறதென்றால்...
காகங்கள் கறுப்பானவை-ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!
என்பது போல் உள்ளது!
சரி ஏற்கனவே இளைஞர்கள் குப்பையா இருந்தவை எண்டுறியளா? அப்பிடியே வைச்சுக்கொள்ளுவம். அப்ப குப்பையள அழுகி நாறவைச்சது இணையம் எண்டு நாங்கள் சொல்லுறம். இப்ப சரியா? ஓ ஏற்கனவே அழுகி நாறிக்கொண்டு இருந்தவை எண்டு சொல்லுறியளா? அப்ப அந்த நாத்தத்தில நஞ்சைக் கலந்துவிட்டிருக்கு இணையம் எண்டு நாங்க சொல்லுறம். இப்ப இது சரியா இருக்கா?
நாங்க சொன்ன தீமையள் நீங்க சொன்னமாதிரி இணையத்தின்ர மொத்தப்பகுதில ஒரு சிறிய பங்காக இருக்கலாம். ஆனா அதனால ஏற்பட்டிருக்கிற சீரழிவு இல்லாட்டி அதால சீரழிஞ்சு போனவையின்ர எண்ணிக்க நன்மையடைஞ்சவையின்ர எண்ணிக்கையவிட பலமடங்கு பெருசாக்கும். புரிஞ்சுதா அண்ணா?
காகம் கறுப்பு எல்லாம் இருக்கட்டும். நானொண்டு சொல்லுறன் கவனியுங்கோ.
பால் வெள்ளையானது-ஆகவே
வெள்ளையானவை எல்லாம் பால்!!
என்பதுபோல் உள்ளது உங்கள் கதை! கள்ளும் வெள்ளை எண்டுற அரும்பெரும் உண்மை வர்ணன் அண்ணாக்கு நான் சொல்லவேண்டிக்கிடக்கு எண்டுறத நினைச்சா கவலையாக் கிடக்கு.
Quote:அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில் அவர்களின் பெற்றோர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் எட்டி பிடிக்க முடியாத உயரங்களை.. புலம்பெயர்ந்த்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சாதித்தார்களே எதனால் ? இணைய தளங்களினால் ஏற்பட்ட தீங்கினாலா?அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக வந்து உட்கார்ந்துவிட்ட இணையதளங்களின் நன்மையினாலா?
அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில அவர்களின் பெற்றொர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் தடக்கி விழ முடியாத பள்ளங்களை.. புலம்பெயர்ந்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சீரழிந்து அடைந்தார்களே எதனால்? இணையத் தளங்களினால் ஏற்பட்ட நன்மையினாலா? அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக(நடுவர்களே கவனியுங்கோ) வந்து உட்கார்ந்துவிட்ட இணையத்தளங்களின் தீமையினாலா?
Quote:அவர்கள் அர்த்தப்படுத்துவதுதான் என்ன? சீரழிந்து போகிறார்கள்தான்! மிக சொற்ப சிலர்! அதே நேரம் இலட்சக்கணக்கானவர்கள் பயனடைகிறார்களே - அதை ஏன் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை? ஒரு விமானம் சிதறி விழுகிறதென்றால்- விமானமே அபாயம் என்று சொல்கிறீர்களா? பயணம் இடைவழியில் நிற்கும்! - அதை தவிர உங்கள் விவாதத்தில் பயன் ஒன்றும் இல்லை!!
அட இவ்வளவு விடயங்களை அள்ளி உங்களுக்கு முன்னால வைச்ச பிறகும் இனியும் மிகச் சொற்ப சிலர்தான் சீரழியினம் எண்டு சொல்றது சரியில்ல. சீரழியிறவையின்ர எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருது. அதனால திக்கிமுக்காடிப்போயிருக்கிற அரசாங்கங்களும் -சைபர் பாதுகாப்பு படையை- உருவாக்கியிருக்கிறது நீங்க அறியல போல. அண்ணாக்கு தான் ஒரு நல்லா உதாரணத்த சொல்லிட்டன் எண்டற மகிழ்ச்சில இருக்கிறார். அண்ணா விமானம் அபாயமானது தான். விமானத்தால அபாயம் உருவாக்கப்படுது. ஆனா அதின்ர அபாயத்தின்ர அளவு எப்படியானது எணடு நாங்க பார்க்கோணும். விமானம் ஒண்டும் இணையத்த போல சுதந்திரமானது இல்ல. ஒராளின்ரயோ ஒரு குழுவின்ரயோ கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு. ஆனா இணையம் அப்பிடியில்ல. உங்கட அணிதானே சொல்லிச்சு அது ஒரு சுதந்திரமான ஊடகமெண்டு. அதால ஒராளின்ர கட்டுப்பாட்ட விட்டு கனபேரின்ர கைபடுது.
இப்ப உங்களுக்கு நானொரு உதாரணத்த சொல்லுறன். ஒரு கார் இருக்கு அத ஒராள் ஓடினா ஒழுங்கா இருக்கும். ஆனா பத்துப்பேர் அத மாறி மாறி ஓட்டினா என்ன நடக்கும்? ஒவ்வொராளும் தங்கட தங்கட விருப்பத்துக்கு ஓட்டுவினம். ஒராள் வேகமா ஓட்டும். ஒராள் அடிக்கடி பிரேக் அடிக்கும். கடைசில காரும் பழுதாப் போய் அந்த கார ஓட்டுற உங்கட நிலமையுமு் பரிதாபமாப் போகும். இதான் இணையத்திலயும் நடக்குது. கட்டுப்பாடில்லாம பலர் ஆக்கிரமிச்சு இருக்கிறதால அதின்ர சீரழிவுகளின்ர அளவு பெருசா இருக்கு.
Quote:இன்றைய இளையோர்க்கு
பொருளாதாரம் - மருத்துவம் - இலக்கியம் - பன்னாட்டுத்தொடர்பு - கலை - தொழில்நுட்பம் - பத்திரிகைத்துறை - அரசியல் - ஆன்மீகம் - புவியியல் - உயிரியல் - தாவரவியல் - விண்ணியல் விநோதங்கள் - இசை - கற்கைநெறி - கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் - திரைத்துறை -வரலாறு - இயற்கை பற்றிய ஆய்வு - ... இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்- இத்தனை விடயங்களையும் மேற் சொன்ன ஒரு சில விடயங்களை வைத்து உதாசீன படுத்தலாமா?
அம்மாடியோவ் மூச்சுவிட்டிட்டுவாறன் பொறுங்கோ. இவ்வளவு இருக்கா? இவளத்திலயும் எத்தினைய எத்தினபேர் பாவிக்கினம்? இவ்வளவும் இருக்கெண்டுறது வேற பிரச்சினை. இவ்வளவாலயும் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் நன்மையடையினமா எண்டுறது தான் கேள்வி. இப்ப பாருங்கோவன். யாழில அறிவியல் களம் எண்டு ஒண்டு இருக்கு அதுக்குள்ள உதாரணத்துக்கு விஞ்ஞானம் தொழில்நுட்பம் எண்டுற பகுதிய எடுப்பமன். அதமாதிரி இளைப்பாறுறதுக்கெண்டு ஒரு பகுதியிருக்கு அதுக்குள்ள சினிமா எண்டுற பக்கத்த எடுப்பமன். இப்ப முதலாவதா இரண்டுக்குள்ளயும் இருக்கிற ஆக்கங்களின்ர எண்ணிக்கைய ஒப்பிட்டுப்பார்ப்பம். இரண்டாவதா அங்க இருக்கிற தலைப்புகளில பதில் எழுதின ஆக்களின்ர எண்ணிக்கைய பார்ப்பம். மூண்டாவதா அதுகள பார்வையிட்டாக்களின்ர எண்ணிக்கைய ஒப்பிட்டுப் பார்ப்பம். செய்து பார்த்திட்டீங்களா? என்ன சொல்லுது?
Quote:அப்பிடியான செயல்களை செய்து வெற்றி கொண்டு - பழமைவாத கருத்துக்களை முன்வைத்து ஒரு இனத்தின் முனேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட்ட தலிபான்கள் போல் எம் இளையோரும் வாழ்வதில் எதிர் தரப்பினர்க்கு சம்மதமா?
எதண்ணா பழமைவாதம்? அதுசரி புரட்சி புதுமையெண்டுற ஆக்களுக்கு எத பாத்தாலும் பழமையாத்தானே இருக்கும். பழமையில இருந்து தான் புதுமை வருதெண்டுறது உங்களுக்கு எங்க தெரியப்போகுது. சீரழியினம் எண்டு சொன்னா அது பழமைவாதம். சீரழியினம் எண்டு தெரிஞ்சும் நன்மையடையினம் எண்டு சொன்னா அது புதுமை புரட்சி. ம் என்னத்த சொல்ல. சரி அத விடுவம் இப்ப. இணையத்தால் இளைஞர்கள் முன்னேறவில்லை சீரழிகிறார்கள் என்று அவர்களுக்கு எச்சரிக்கை மணியடிச்சு தலிபான்களாக இல்லாம தமிழீழ மக்களப்போல விழிச்சுக்கொள்ளச் செய்யிறது தான் எங்கட நோக்கம்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o குறுக்காலபோவான் அண்ணா</b>
Quote:இலத்திரனியல் தகவல் களஞ்சியங்களை இணைக்கும் பாலமாக, சுயகருத்துக்களை குழுமங்களில் குடில்களில் பலரோடு பகிர்ந்து விமர்சனம் பெற்று முன்னேறவும், கல்வித்துறையில் ஆசிரியரோடு சக மாணவர்களோடு, பொழுதுபோக்கும் துறையிலும் சமூகச்சேவையிலும் சகாக்களுடன் வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறையாகவும் எமது புலம் பெயர்ந்த இளையவர்கள் பயன்படுத்தி தம்மையும் வளம்படுத்தி எமது தேசியத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள். இவற்றை எனக்கு முன் வந்த எனது அணியினர் விபரமாக உதாரணத்தோடு தந்திருந்தார்கள்.
குறுக்காலபோவான் அண்ணா எங்க உப்பிடி நடக்கெண்டு சொல்லுங்கோவன். நாங்களும் போய் கதைச்சு எங்கட தேசியத்துக்கு வலுச்சேர்ப்பம். சும்மா அபஇபிடி நடக்கு இப்பிடி நடகஇகெண்டா கர்ணுமா? எங்க எப்ப எப்பிடி நடக்கெண்டு சொன்னாத்தானே அதின்ர தன்மையள நாங்க புரிஞ்சுகொள்ளமுடியும்.
Quote:இன்னுமொரு 5...10 வருடங்களில் கைத் தொலைபேசியில் இணையத்திற்கு செல்லக்கூடியது என்பது சர்வசாதாரணமாகப் போகிறது. அது மாத்திரமல்ல தொலைக்காட்சி உரையாடல் (video conference) கூடச் செய்யலாம். தனியே பேச்சு எழுத்துக்கள் மாத்திரம் அல்ல பங்குபற்றுபவர்களின் அசையும் படங்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இங்கே ஒருவரின் வக்கிர எண்ணங்கள் இன்னெருவரினால் அறைக்குள் மாத்திரம் ஒளிந்திருந்து பகிரப்படப்போவதில்லை அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் ஒளித்துவைக்கும் கைத்தொலைபேசியால் எங்கும் என்னேரமும் நிறைவேற்றலாம்.
அப்பாடியோ. கடைசில ஒத்துக்கொண்டிட்டீங்களே. அதுபோதும். ஒண்டு அறைக்குள்ள இருந்து வக்கிரங்கள் பகிர்ந்துகொள்ளப்படுது. இரண்டு இனி இதவிட கனக்க சீரழிவுகள் இணையத்தாலயும் அதஒட்டி இருக்கிற மற்றத் தொழில்நுட்பங்களாலயும் நடக்கப் போகுது.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b> o மேகநாதன் அண்ணா</b>
நன்மையடைகிறார்கள் என்பதற்கான எந்த வாதமும் இவர் முன்வைக்கவே இல்ல. தனிய எங்கட அணியின்ர வாதங்கள பற்றி தன்ர தனிப்பட கருத்த சொல்லியிருக்கிறார். நன்மையடைகிறார்கள் எண்டுறதுக்கு காரணத்த சொல்லாம ஆதாரத்த முன்வைக்காம எங்கட அணியின்ர கருத்த பற்றி கருத்து சொல்லுகினமெண்டுறதில இருந்தே விளங்குது. நன்மையணில சொல்றதுக்கு வேற வாதங்களே இல்லையெண்டுறது.
Quote:"மதவடி கலாசாரத்தை" மீளப் போட்டு "பண்பாட்டுச் சிரழிவுக்கு" ஆலாபணை செய்கிறார்....நடுவர்கள் உறவுகள் இவ்வாவறானவற்றை நுணுக்கமாக கவனிப்பார்கள் என்பதை அவர் அறியார் போலும்.சீரழிவைக் கதைக்க வந்தவராகத் தன்னை இனம் காட்டியவரே அச் சீரழிவை ஊக்குவிப்பது "அமைதி காப்பதாக சொல்லி வந்தவர்(கள்) ஆக்கிரமிப்புக்குத் துணை போவது போல" அபாய சமிக்கை காட்டுகிறது...
நன்மையடைகிறார்கள் என்பதற்கான கருத்தா இது? என்ன கருத்து வறட்சி வந்திட்டு போல கிடக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள். நடுவர்கள் கவனிக்கோணும். வார்த்தைகளால கோலம் போட்டா போதாது வாதத்த வைக்கோணுமெண்டு ஒருக்கா எதிரணிக்கு சொல்லிவிடுங்கோ.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o ஸ்ராலின் அண்ணா</b>
Quote:ஒரு உருவாக்கம் செய்வதற்க்கு ஊக்குவிப்பதற்க்கு இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.அதை புல இளைஞன் கடைப்பிடித்து நன்மை அடைகிறான்...ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது.
உருவாக்கம் செய்யிறதுக்கு பயனுடையதா இருக்குிறது சரி. என்னத்த பெருசா உருவாக்கி தமிழாக்களுக்கு முன்னால வச்சிட்டீங்க? ஏதோ ஒண்டிரண்டு காய்ஞ்சு போன உருவாக்கங்கள வச்சுக்கொண்டு பெருமையடிக்காதேங்கோ. இத்தனை பேர் பாவிக்கிற இணையத்தில ஒண்டு இரண்ட கணக்குக்காட்டி இணையம் நன்மையளிக்குது எண்டா என்னத்த சொல்ல.
Quote:இலமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளி கொணரமுடிகிறது .முன்னரென்றால் சின்னபயலே உனக்கு புரியாதாடா என்று உந்த அரை குறை விற்ப்பனர்கள் அவனது கனவுகளை இலைமறைகாயான திறமைகளை முளையிலையே நசுக்கிவிடுவார்கள்..
அண்மையில் சினிமா சம்பந்தமான கொசுறு செய்தி வாசித்தேன்.காதல் கடிதம் புலம் பெயர் இளைஞர்களால் தாயரிக்கப்படும் படம்...அப்படத்தின் கவிஞன் இசையைப்பாளர் உதயாவை இணையத்தில் சந்தித்து தனது ஆற்றலை காட்டி வாய்பை பெற்றார் கூறப்படுகிறது...பலரது உண்மையான திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகிறது கோடம் பாக்கத்தின் கதவுகளை மீறி உட்புகுவதற்க்கு கஸ்டப்படுவேளையில் புல இளைஞனுக்கு தனது ஆக்க சக்தியை வெளியிட கை கொடுக்கிறது .இதே போன்றே லண்டன் ஈழ தமிழ் ஆகாஸ் என்ற நடிகரும் சுகாசினியிடம் இணயம் போல தொடர்பு கொண்டு வாய்ப்பு பெற்றாரென்று கூறப்படுகிறது.
திரும்பவும் அதான். எத்தனையோ இலட்சம் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பாவிக்கிற இணையத்தில நன்மையடைஞ்சவையெண்டு ஒரு 10 பேரத்தான் உங்களால காட்ட முடியும். ஆனா சீரழிஞ்சவை எண்டு ஆயிரக்கணக்கில எங்களால காட்ட முடியும். ஒருத்தரில்ல சமூகம் ஒட்டுமொத்தமும் தான் சமூகம். ஒரு நன்மையடைஞ்சாள வச்சுக்கொண்டு ஒட்டுமொத்த இளைஞர் சமூகமும் நன்மையடையினம் எண்டுறத விளையாட்டுக்கு நீங்க சொன்னதாத்தான் எடுக்கலாம்.
Quote:தாயகத்தில் சிறுவயதிலிருந்து கபொத உயர்தரம் வரை வெறும் ஒப்பிப்பிப்பதையூடாகவும் மீள் நினைவு செய்யுமுறையையூடாகவும் பாடவிதானத்துக்குட்பட்ட தூடாகவும் தான் கல்வியாக தந்து கொண்டிருந்தார்கள்...ஆனால் பல்கலை செல்லும் போது தான் அங்கே புதிய கல்வி முறை காத்திருக்கிறது அங்கே பேராசிரியர் சிறியவழி நடத்தலையே தருகிறார் மிகுதி அவனே தரவுகளே தேடி தொடரபாடல்கள் மூலமும் தானே கற்று கொள்ள வேண்டியவனாகிறான் .இந்த தீடிரென்ற ஏற்படும் புதியமுறைக்கு சிரமத்துக்குள்ளாகிறாகிறார்கள்.கபொத உய்ர்தரத்தில் திறமை சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்........
இது கல்வியமைப்பின்ர கோளாறு. இதுக்கும் இணையத்தின்ர நன்மைக்கும் என்ன சம்பந்தமெண்டு கடைசியா வாற உங்கட அணித்தலைவராவது விளக்கஞ்சொல்லட்டும்.
Quote:புலஇளஞன் இணையத்தில் உலகதரவுகளை பெற்று தான்கல்வி பெறுவதன் மட்டுமன்றி தான் சார்ந்த தாயக சமுதாயத்துடனும் பகிர்ந்து கொள்கிறான்..விமான தொழில்நுட்ப அறிவு,பலகாலகட்டத்து யுத்த சம்பந்தமான அறிவு புலனாய்வுசம்பந்தபட்ட அறிவுகளை புல சூழலில் இருக்கு சாதகமான் அம்சங்களோடு பெற்று தாயக உறவுகளோடு பகிர்ந்து கொள் வதன் மூலம் தமிழ் தேசியத்துக்கூட வலுவூட்டிக்கொள்கிறான்
இதுக்கு உங்களால என்ன ஆதாரத்த தரமுடியும்? வெறும் கற்பனையளால கதையளக்காதேங்கோ. இண்டைக்கு இணைய இணைப்பு ஊரில சாத்தியம். அவை அங்க இருந்துகொண்டே தங்களுக்கு தேவையானதுகள் இருந்தா பெற்றுக்கொள்ளுவினம். இங்க இருக்கிறவை இணையத்தில எடுத்து அங்க கொண்டுபோய்க் கொடுக்கோணுமெண்டில்ல. சும்மா இன்ரர்நெட்டில வாசிச்சு மொழிபெயர்க்கிறதெல்லாம் தேசியத்த ஒண்டும் வெண்டதரப்போறேல்ல. அனுபவத்தில படிக்கிறது தான் தேசியத்துக்கு கூடுதலா உதவும். அனுபவப் பாடத்துக்கு இணையத்தால உதவமுடியாது.
Quote:நடுவர அவர்களே இப்படி இணையம் மூலம் பல நன்மைகளை பெறும் இளைஞனை எதிரர் அணியினர் எல்லோரும் திரும்ப திரும்ப இதைத்தான் கூறுகிறார்கள்... ஆபாச படம் பார்த்தல் டேறறிங் சாற்றிங் செய்தல் ...கெட்டு போதல்... கெட்டு போதல்என்று கூக்கிரலிடுகிறார்கள்
இவையால தான் கூட சீரழிஞ்சு போகினம் எண்டா அதுகள தானே திரும்பத் திரும்ப சொல்ல முடியும்.
Quote:புலத்து நான் காணும் இளைஞன் தெளிவாய் இருக்கிறான்.....அத்துடன் உங்களைப்போல ஏமாளியாக இல்லாமல் பாலவினை நோய் பற்றியும் கர்ப்ப தடை பற்றியும் வடிவாக தெரிந்து வைத்திருக்கிறான் .....
கர்ப்பத்தடை பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறதால இணையத்தால சீரழியேல எண்டு எப்பிடி சொல்றீங்க. ஒண்டுக்கொண்டு சம்பந்தமில்லாம கதைக்கிறீங்க? கர்ப்பத்தடை பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறதால ஒழுகத்த மீறலாமெண்டு சொல்ல வாறியளா? புலத்து இளைஞனின்ர மனக்கட்டுப்பாடின்மைதான் அவை சீரழியிறதுக்கு காரணமெண்டு உங்கட அணில மற்றாக்கள் சொல்லிச்சினம். இப்ப நீங்க என்னடா எண்டா புலத்து இளைஞன் தெளிவா இருக்கிறானெண்டுறியள். மொத்தத்தில அணிக்குள்ளய ஒரு ஒத்த கருத்தில்ல.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o நாரதர் அண்ணா</b>
Quote:இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?
இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?
அண்ணா நாரதர் அண்ணா இணையம் சீரழிக்குது எண்டு எங்கட அணி வாதாடேல. இணையத்தால் சீரழிகிறார்கள் எண்டு தான் சொல்லுறம். குற்றங்கள் செய்யிறவையும் குற்றவாளிதான் குற்றவாளிக்கு துணை செய்யிறவையும் குற்றவாளியள் தான். அப்பிடித்தான் இணையத்தையும் பார்க்க முடியும் எண்டுறத விளங்கிக்கொள்ளுங்கோ. தகவல்கள மட்டும் காவிச் செல்லேல. தகவல்களோட சேர்த்து சீரழிவுகளையும் காவிச் செல்லுது அண்ணா. சீரழிப்பதுக்கான காரணியா எடுக்கேலாது தான். ஆனா சீரழியிறதுக்கான காரணி எண்டுறது தான் தலைப்பு.
Quote:ஆனால் இணயதில் நாம் விரும்புவதை ஒரு சில சொடுக்குகளுக்குள் எம்மால் பெற முடிகிறது.அத்தோடு பெறப்படும் விடயமானது அந்த நிமிடதிற்கு பொருத்தமான விடயமாக இருகிறது.அத்தோடல்லாமல் பெறப்படும் தகவலை நாம் எமக்கு ஏற்றவாறு மாறுபாடு அடயச் செய்யக் கூடியதாக இருகிறது.
நாரதர் அண்ணா இப்பிடி உண்மையள ஒத்துக்கொண்டு உங்கட அணிக்கே துரோகம் செய்யலாமா? நாம் விரும்புவதை எண்டு சொன்னா எங்களுக்குள்ள நிறைய விருப்பங்கள் இருக்கு. எல்லாத்தையும் வெளில சமூகத்துக்கு பயந்து செய்ய முடியாம பலர் இருக்கினம். அப்பிடியான சீர்கேடுகள எல்லாம் இணையத்தில சில சொடுக்குகளில தீர்த்து கொள்ள சந்தர்ப்பமளிக்கப்படுது எண்டுறத ஒத்துக்கொண்டதுக்கு எப்பிடி என்ர நன்றிய சொல்றதெண்டு தெரியல. பெறப்படுற விசயங்கள எங்களுக்கேற்ற மாதிரி மாத்திக்கொள்ளலாம் எண்டுறீங்க. அதுக்கென்ன அர்த்தம்? திரிபுகள் செய்யிற சீரழிவையும் இணையம் கொடுக்குது எண்டுறதது தானே?
Quote:அது மட்டுமா ஒருவர் தானே செய்திகளை ,படைப்பிலக்கியங்களை ஆக்கக் கூடிய வல்லமயை அது வளங்கி உள்ளது.இங்கே எதிரணியில் வாதாடும் அன்பர்கள் கவிதை எழுதக் கூட அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
செய்தியள படைப்பிலக்கியங்கள ஆக்குறதுக்கு வல்லமை வழங்கியிருக்கெண்டுறீங்க. ஆனா அந்த படைப்புகளின்ர தரம் எந்தளவில இருக்கு? வாற கவிதையள் சமூக சிந்தனையோடயா வருது? அப்பிடி வாற கவிதையள் எத்தனை இருக்கும்? இணையத்தில காதலிச்சு எழுதுற கவிதையளும் -முக்காவாசி ஒப்பாரியும் சுய புலம்பல்களுந்தான்- தோத்துப்போனா பிறகு எழுதுறதுகளும் தான் கனக்க. ஏற்கனவே சொல்லிட்டன். வேற ஒரு இணையப்பக்கத்தில இருந்து எடுத்துக்கொண்டு வந்து இன்னொரு பக்கத்தில போட்டு தன்ர கவிதையெண்டுறது. அதுக்கு பத்துப்பேர் கூடிநிண்டு நல்லாருக்கு அக்கா அல்லாட்டி அண்ணா எண்டுறதும் வாழ்த்துக்கள் எண்டு சொல்லி வழியுறதும் இங்க நடக்கிற கதைதானே. இணையத்தில இருக்கிற சுதந்திரத்த ஆக்குறதுக்கு எங்கட இளைஞர்கள் பயன்படுத்துறேல அழிக்கிறதுக்கு தங்கள சீரழிக்குறதுக்கு தான் பயன்படுத்துகினம்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>o இரசிகை அக்கா</b>
Quote:இணையத்தால் மட்டுமே புலம்பெயர்ந்த இளைஞர்கள் உயர்கிறார்கள் என்றோ உயர்ந்தார்கள் என்றோ நாம் சொல்லவில்லை. <b>இணையம் என்பது இளைஞர்களின் சிந்தனைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்கிறோம். அவர்களின் உழைப்புக்கு பக்கதுணையாக இருக்கிறது (பக்கதுணையாக இருக்கிற ஏனைய காரணிகளோடு) என்றே சொல்கிறோம்.</b> தல அவர்கள் எழுதிய மேற்கண்ட கருத்தின் மூலம் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக்கொள்கிறார். சொந்த உழைப்பால் அதாவது சொந்தச் செயற்பாட்டால் தான் ஒருவர் போற்றப்படுகிறார். அப்படியாயின் அதிலிருந்து இன்னொன்றையும் நாம் விடையாகப் பெறலாம். அது யாதெனின், ஒருவர் தனது சொந்த செயற்பாட்டால் தான் தீமையடைகிறார் அல்லது சீரழிந்து போகிறார் என்பதே அது ஆகும். இது இப்படியிருக்க இணையத்தின்மீது உங்கள் பாவங்களை சுமத்துவது எந்தவகை நியாயம் என்று சொல்லுங்கள். எதிரணியினரின் வாதங்கள் எப்படியிருக்கிறதென்றால் எல்லாக் குற்றங்களையும் தாம் செய்துவிட்டு கடவுளின் மேல் பழியைப் போடுவதைப் போல் உள்ளது. தமது பிழைகளால் தாம் அனுபவிக்கிற துன்பத்துக்கெல்லாம் "எல்லாம் அவன் செயல்" என்று அடி முட்டாள்தனமாக சொல்லிவிட்டு தம்மை பொம்மைகளாகக் காட்டிக்கொள்ளும் எதிரணியனரை என்னவென்பது?
என்னக்கா இப்பிடிச் சொல்லிப்போட்டியள். இப்ப பாருங்கோ உங்கட தலையில நீங்களே மண்ணை அள்ளிப் போட்டிட்டியள். எப்பிடியெண்டு கேக்குறியளா? இளைஞர்களின் உழைப்புக்கு பகு்கதுணையாக இளைஞர்கள் இருக்கெண்டு சொல்லுறியள். அதமாதிரித் தான் இளைஞர்களின் சீரழிவுகளுக்கும் இணையம் பக்கதுணையாக இருக்கெண்டு நாங்கள் சொல்லுறம். வளர்ச்சிக்கு பக்கதுணையாக இருக்கிறத விட சீரழிவுக்கு பக்கதுணையாக இருக்கிறது தான் அதிகமோ அதிகம். குற்றஞ்செய்யிறவைக்கு உதவி செய்யிறவையும் குற்றவாளியெல்லோ. -இத முதலும் ஆருக்கோ சொல்லிட்டன் எண்டு நினைக்கிறன்- சரி அதுக்கென்ன நீங்களும் திரும்பத் திரும்ப ஒண்டத்தானே சொல்லுறியள். பறவால்ல.
இல்லாத கடவுளில எங்கட பாவத்த கொட்டுறது நீங்க சொல்ற மாதிரி அடிமுட்டாள்தனமா இருக்கும். ஆனா இருக்கிற இணையத்தில நடக்கிற குற்றங்களுக்கு அத காரணமாக் காட்டுறதில ஒண்டும் அடிமுட்டாள்தனமிருக்கிற மாதிரி எனக்கெண்டாத் தெரியல. நீங்கள ஆடுறவரைக்குந்தான் நீங்க மனுசர். நீங்க எப்ப இன்னொண்டால ஆட்டுவிக்கபடுறீங்களோ அண்டைக்கே நீங்க பொம்மை ஆகிடுவீங்க. மதுபானம் குடிக்கிறவை குடிச்சிட்டு தெளியினம். மதுபானத்தில குளிக்கிறவை? அதான் இணையத்தில பெரும்பாலான ஆக்களுக்கு நடக்குது.
Quote:தல அவர்கள் தனது வாதத்தின் மூலம் தெட்டத் தெளிவாக பல வாக்குமூலங்களை அளித்துள்ளார். இணையம் ஒன்றையும் புதிதாக செய்துவிடவில்லை என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் ஏற்கனவே சீரழிந்து போய் இருக்கிறவர்களை மேலும் சீரழிக்கவில்லையென்று அல்லது தீமைகளை செய்யவில்லை என்று சொல்கிறார்.
தல அண்ணா சொன்னதையே ஒழுங்கா வாசிச்சு விளங்கிக்கொள்ள முடியல. இதுக்குள்ள நன்மை நன்மையெண்டு துள்ளிக்குதிக்கினம். -இணையம் ஒன்றையும்(ஒரு நன்மையையும்)புதிதாக செய்துவிடவில்லை- எண்டுதான் சொன்னவர்.
Quote:வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், நூல்நிலையங்களும் ஒன்றாய் உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? - உங்கள் மூளைக் கலன்களின் மீது சத்தியம் செய்யுங்கள்!!! பணம் செலவழித்து எத்தனை பத்திரிகைகளைத்தான் வாங்குவது? அதிலும் எமக்கு அவசியமற்ற தகவல்களையும் சேர்த்து வாங்குகிறோம். ஆனால் இணையத்தில் வேகமாக பத்திரிகைச் செய்திகளைப் பெற்றுக்கொள்கிறோம் - பல்வேறு தரப்பு நியாயங்களையும் அறிந்துகொள்கிறோம் - எமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து படிக்கிறோம் - பணச்செலவு மிச்சம் - உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்கிறோம்.
நீங்கள் சொன்னதுமட்டுமா உங்கட கண்ணுக்கு முன்னால திரையில விரியுது? நீங்க சொன்னதுகளில இருந்த கெட்டவையெல்லாம் பலமடங்கு பல்கிப் பெருகி தன்னோட இன்னும் கனக்க கூட்டாளிகளையும் கூட்டிக்கொண்டு வந்து உங்கட திரையில பாய் விரிச்சு படுத்துக் கிடக்கிறது உங்களுக்கு விளங்கேலயா? மற்றது உதுகளெல்லாம் விரிஞ்சா போல உதுகள எல்லாம் நன்மைக்குத்தான் பயன்படுத்துகினம் எண்டு யார் சொன்னது. வேகமாப் படியுங்கோ அதோட வேகமா போடோணுமெண்டு செய்தியள பிழை பிழையா போடுறதையும் படியுங்கோ.
Quote:சோம்பேறித்தனத்தை இணையம் தான் இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டிகளின் முன்னிருந்து பெறாத சோம்பேறித்தனமா? ஐயா சோம்பேறித்தனமென்பது உங்கள் உங்கள் மனம், உடல் சார்ந்தது. அதை வழிநடத்தவேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது - இணையத்திடமில்லை. எங்கள் அணியில் நாரதர் தெளிவாக ஒரு கருத்தை முன்வைத்தார். செய்வதெல்லாம் செய்திட்டு "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்று கல்லை நோக்கி கைகாட்டுவீர்கள் - ஏனென்றால் கல் திருப்பிக் கதைக்காது என்கிற நம்பிக்கையில்.
சரிங்கோ அக்கா சோம்பேறித்தனத்த இணையம் அறிமுகப்படுத்தேல. ஆனா சோம்பேறித்தனத்த மேலும் வளர்த்துவிட்டிருக்கெண்டு சொல்லுறம். சரிங்கோ சோம்பேறித்தனம் மனமும் உடலும் சார்ந்தது எண்டு வைச்சுக்கொள்ளுவம். மனத்திலயும் உடலிலயும் நடக்கிற மாற்றங்களுக்கு எது காரணம்? சூழல்தானே? சூழலெண்டேக்க அதுக்குள்ள இணையத்தின்ர சூழலும் வருது தானே? அதால மனுசரின்ர மனசக் கெடுத்து சோம்பேறித்தனத்த கொடுக்கிற சூழல இணையம் உருவாக்கியிருக்கு எண்டு சொல்லுறம். கல்லு கடவுள் உதாரணங்களெல்லாம் மொக்குத்தனமான உதாரணம். கல்லையும் இணையத்தையும் ஒப்பிடுறியள். பல ஆயிரக்கணக்கா செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிற இணையத்தை கோயில் மூலக்குள்ள எதுக்குமே உதவாம வைச்சிருக்கிற கல்லோட ஒப்பிட்டு இணையத்தாலயும் இளைஞர்களுக்கு நன்மையில்லையெண்டுறத திரையில வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறியள்.
Quote:அது தவறானது.... மற்றய ஊடகங்கள் போலவே இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றன... உதாரணமாக அரபு நாடுகளில் பாலியல் சம்பந்தமான தளங்களுக்கு தடை இருக்கிறது. ஏன் தமிழ் நாட்டிலும் பாலியல் தளங்களை தடை செய்ய நடவெடிக்கை எடுக்கவுள்ளார்கள் ( ஆதாரமில்லாத செய்தி என்று சொல்ல வேண்டாம். அண்மையில் ஜெயா கூறியது தான் ) மிக அண்மையில் GOOGLE க்கும் சீனா நாட்டுக்கும் ஒரு கருத்து வேறு பாடு பற்றி அனேகமானோர் கேள்விபட்டு இருக்கலாம். இதை விட அனேகமான நாடுகளில்.. ஒருவரின் இணைய நடவடிக்கைகள்.. அந்த நாட்டு பொலீசாரினால் சேகரிக்கப்பட்டு.. கோப்பாக பேணப்படுகின்றன. எப்போது அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரோ... அப்போது அவரை பிடிப்பதற்கு அவை வழிவகுக்கும். ஆகவே தூயவன் சொல்வது போல மற்றய ஊடகங்கள் கட்டுப்படுத்த படுகின்றன.. இணையம் கட்டுபடுத்த படுவதில்லை என்பது தவறானது.
ஹா ஹா! ஹி ஹி! ho ho! he he! நல்லாச் சிரிச்சிட்டன் அக்கா. வயிறு நோகுது அக்கா நீங்க சொன்ன நகைச்சுவையைக் கேட்டு. அரபு நாடுகளில இருந்து பல பாலியல் தளங்கள் வெளில வருகுதே. அந்தத் தடையெல்லாம் தாண்டித்தானே? இருக்கிற தடையளையும் தாண்டி அரபு நாடுகளில இருக்கிற ஆக்கள் வெளில இருந்து பொற பாலியல் தளங்களயும் பாக்கினமே? அதெப்படியெண்டு சொல்லுங்கோவன். அதெல்லாம் விடுங்கோ. ஐரோப்பாவில தடை இருக்கா? அமெரிக்காவில தடை இருக்கா? ஒஸ்ரேலியால தடை இருக்கா? இங்க எல்லாம் தடையள் இல்லத்தானே. அப்ப அதால சீரழிஞ்சு போவினந்தானே. சட்டவிரோதத்த செய்யிறது மட்டும் சீரழிவில்ல. சட்டவிரோத செயல்களால அழியுறதும் சீரழிவுதானக்கா. இணையம் கட்டுப்படுத்தப்படுதெண்டே வச்சுக்கொள்ளுவம். ஆனா மற்றைய ஊடகங்கள மாதிரி கட்டுப்படுத்தக்கூடிய நிலமை இணையத்தில இல்லையக்கா. சூரியனை நீங்க போர்க்கிற போர்வையால மூடி மறைக்கிற மாதிரித்தான் உந்தக் கட்டுப்பாடுகள்.
Quote:அப்படி சொல்ல முடியாது. ஒரு தளத்தை ஒரு நாட்டில் தடை செய்தால். அது அந்த நாட்டில் வேலை செய்யாது. அப்படி செய்ய முடியும். ஒரு நாட்டில் உள்ள கருத்துக்கு எதிரான தகவல்களை தேடி பெற முடியாது செய்யவேண்டும் என்று அரசு விரும்பினால். Google போன்ற தேடல் தளங்களுடன் பேசி அதை செய்து கொள்ளலாம். அயிரக்கணக்கான மடல்களை பிரித்துபடிப்பது கடினம் தான். ஆனால் ஒரு வேலை தளத்தில் தனி மடல் பார்த்தால்.. அல்லது அனுப்பினால்.. அதை மேலதிகாரிகள் பார்வையிடலாம். உங்களது இணைய புரொவீடர்களால் உங்கள் தனிமடல்கள் பார்வையிடப்படலாம். எல்லா தனிமடல்களையும் பார்ப்பது நேரவிரயம் தான். தெரிவு செய்யபட்ட மடல்களை மட்டுமே. அவ்வாறு மடல்களை தெரிவு செய்வதற்கும் சில முறைகளை கையாளுகிறார்கள்.
சரி ஒரு தளத்த தடை செய்தா அதே விசயத்த இன்னொரு பக்கத்தில போட்டு அந்த நாட்டுக்குள்ள கொண்டரலாந்தானே? ஏன் வேற நாட்டில இருக்கிற ஆள் கூகிளில தேடியெடுத்து தடைசெய்த நாட்டுக்குள்ள தடைசெய்யப்பட்ட விசயங்கள அனுப்பலாந்தானே மின்னஞ்சலில? இதெல்லாம் இணையத்தால சீரழிஞ்சுபோற இளைஞர்களுக்கு தெரியாதா என்ன? அதுசரி நீங்க சொல்றதெல்லாத்தையும் தாண்டி இங்க பலவிசயங்கள் எப்பிடி பரிமாறப்படுது? அக்கா இப்ப ஒராள் மதுபானம் குடிக்கிறார். வீட்டில குடிக்கவேண்டாமெண்டுகினம். ஆள் வெளில போய்க் குடிக்கிறார். ஆளிட்ட காசு இல்ல. கடையில காசு இல்லாம தரமாட்டினம். ஆள் கேக்குறார். அவை குடுக்கல. அவர் கடையில களவெடுக்கிறார். முதல்தரம் தப்பிட்டார். பிறகு அடுத்தமுறையும் காசில்லாம கடையில களவெடுக்கலாம் எண்டுற துணிவு வருது. திரும்ப போறார் திரும்ப களவெடுக்கிறார். இந்தமுறை போத்தலோட சேர்த்து சிப்ஸ் பக்கற்றையும் எடுக்குறார். இந்தமுறையும் தப்பிட்டார். அடுத்தமுறை பெரிய திட்டம்போட்டு போறார். ஆனா எடுத்துக்கொண்டு வரேக்க பிடிபட்டிட்டார். காவல்துறை கைதுசெய்யுது. போய் இருந்திட்டு வெளில வாறார். இப்ப காசு குடுத்துத்தான் வாங்கணும். ஆனா காசு இல்ல. வீட்டுக்கு போறார். வீட்டில இருக்கிற சாமான்கள திருடி விக்கிறார். அதில வாற காசில வாங்கிக் குடிக்கிறார். இப்பிடிக் கொஞ்சநாள் செய்தார். வீட்டில மனுசி பிள்ளையள் சொல்லிப் பார்த்தும் கேக்கல. ஆள வெளில விட்டாச்சு. இப்ப வெளில வந்திட்டார். தனிய இருக்கிறார். வெளில போற வாற ஆக்களிட்ட பிச்சை எடுக்கிறார். கடையில வாங்கிக் குடிக்கிறார். இப்பிடி ரண்டு மூண்டுதடவை பிச்சை எடுக்கிறது நடந்திச்சு. ஆனா போகப்போக பிச்சை போட ஒருத்தரும் வரல. இவர் குடிக்கிறதுக்குத்தான் வாங்குறார் எண்டு தெரிஞ்சிட்டு. ஒருத்தரும் குடுக்கல. அதால ரோட்டுல போறாக்களிட்ட திருட வெளிக்கிடுறார். அதுகும் இரண்டு மூண்டு தடவை உதவிச்சு. பிறகு ஆக்களிட்ட கேக்குறார். குடுக்கேல எண்டோடன கத்தியெடுத்து ஒராள குத்துறார். காவல்துறை வருது. பிடிக்குது. சிறைக்கு போறார். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்தக்கதையில இருந்து உங்களுக்கு என்ன விளங்குது?
Quote:தயவு செய்து கருத்துக்களை வடிவாக வாசியுங்கள். எம் எஸ் என் சாட் தளம் வேறு, எம் எஸ் என் மஸெஞ்சர் வேறு. சாட் தளத்தை பாலியல் பரிமாற்றங்கள் காரணமாக மூடிய மைக்ரோ சொப்ற்... ஏன் மஸெஞ்சர்களை மூடாமல் புதிய புதிய வேர்சனை அறிமுகம் செய்கிறது. இதுதான் விஸ்ணு கூறியது. தூயவனுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மசெஞ்சர்கள் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறவில்லையா?? உண்மையில் பார்த்தால் மெஸெஞ்சர்ளில் தான் இதற்கான வாய்ப்புகள் அதிகம் ( வீடியோ வசதியை இங்கே சொல்லாம் )
பாத்திங்களா. நல்ல அக்கா. மெசெஞ்சர்மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடக்குதெண்டு நீங்களே சொல்லுறியள். பிறகு சீரழிக்கேல எண்டும் சொல்லுறியள். அப்ப பாலியல் துஸ்பிரயோகம் சீரழிவில்லையெண்டுறியளா? மெசெஞ்சர்களில வாய்ப்புகள் அதிகம் எண்டுறியள். பிறகென்ன எப்படா வாய்ப்பு வரும் பாவிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிற இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தானே.
Quote:அது போலத்தான்.... தூயவன் இணையம் இல்லாத காலங்களில் தேசியம் வளரவில்லை என்று யார் சொன்னது?? இப்போது இணையப்பயன்பாடு தேசியத்தின் வளர்ச்சியில் இன்னும் ஒரு தோள் குடுத்து இருக்கிறது... என்று தான் நாம் கூறுகிறோம்...
வணக்கம்! தலைப்புச்செய்திகள். வாசிப்பது பூனைக்குட்டி. யாழ்களத்தில் இப்போது நடக்கின்ற பட்டிமன்றத்தின் தலைப்பு -இணைய ஊடகத்தால் <b>புலம்பெயர்ந்து வாழும் இளையோர்கள் </b>நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிகிறார்களா? என்பதாகும்- நன்றி. விரிவான செய்திகள் விரைவில் தொடரும்.
நாங்க கதைச்சுக்கொண்டிருக்கிறது தமிழீழத்த பற்றியில்ல. புலம்பெயர்ந்து வாழுற இளைஞர்கள பற்றி. சரி ஏதோ கதைச்சிட்டியள். நானும் பதில் சொல்லிட்டு போறன். தேசியத்தின்ர வளர்ச்சிக்கு தோள் மட்டுந்தான் குடுக்குது. ஆனா இளைஞர்களின்ர சீரழிவுக்கு முழுசா அள்ளிக்குடுக்குது.
Quote:யாழ் வீதியில் வெறு வேலையாக அவசரமாக போகும் போது எதிரே இருக்கும் கல்லில் நாம் கவனிக்காமல் தான் மோதுகிறோம் தூயவன். இதில் நான் சொல்ல வருவது 2 விடயம்... வேறு வெலையாக போகும் போது தான் நமக்கு குறுக்கே கல் இருக்கிறது. நாம் கவனிக்காமல் தான் கல்லில் மோதுகிறோம். யாரும் காலையில் எழுந்து யாழ் வீதில கல் இருக்காம் தூயவன் சொன்னவர்.. அதில மோதுவம் என்று போவதில்லை. வேறு வேலையாக செல்லும் போது குறுக்கே வருவது அது.
ஆனால்.... இணையத்தில் ஆபாசத்தளங்கள் கணணியை இயக்கி இணையத்துக்குள் பாடசாலை ஒப்படை செய்ய போகும் போது தானாக வருவதில்லை. இளையோர்கள் தாமாகவே அங்கே போகிறார்கள். அப்படி இல்லை தாமாகவே விளம்பரங்கள் தோன்றுகின்றன என்று யாரோ சொன்ன நினைவு. நீங்கள் முதலில் அப்படியான தளங்களுக்கு போய் இருந்தால் தான் அப்படியான விளம்பரங்கள் தோன்றும். அல்லது ஆபாச தளங்களின் உறவு தளங்களுக்கு போனால் தான் அப்படியான கற்கள் உங்களுக்கு தோன்றும். அதை விட ஆபாசங்களை தடை செய்ய கணணிகளில் முடியும் . அப்படியான விடயங்களை மேற்கொண்டு அப்படியான கற்களை நீங்கள் அப்புறப்படுத்தலாம். ஆகவே தூயவன் நாரதர் சொல்ல நினைத்தது..... இணையத்தில் கல் தானாக எமது முன் தோன்றுவதில்லை... யாழ் வீதி மாதிரி. நாமாக தான் தேடி போகிறோம். இணையத்தில் சடப்பொருட்கள் இல்லாத நாம் தான் ஆபாசங்களை.... சீர்கேடுகளை தேடிப்போகிறோம். இப்போது நாரதர் கூறியதை பாருங்கள் உங்களுக்கு சரியாக தோன்றும்.
இருக்கிற படியாத்தானே தேடி போகினம் அக்கா? இல்லாட்டி ஏன் போகினம்? இங்க அதுகள தடைசெய்யிறது பிரச்சனையில்ல. ஆனா எத்தனை இளைஞர்களுக்கு அதுகள தடை செய்ய விருப்பம் வருமெண்டு சொல்லுங்கோ. அதுகள தேடித் திரியிற பருவத்தில எல்லாத்தையும் வீட்டு அறைக்குள்ள நீங்க சொன்னமாதிரி திரையில கொண்டு வந்து நிப்பாட்டி வச்சா அவையேன் அதுகள தடை செய்யினம். அக்கா மதுபானக் கடையுக்குள்ள போய் குடிக்காம நிக்கிறவை ஒரு சில ஆக்கள் தான் இருப்பினம். எல்லாரும் அப்பிடி இருக்கிறேல. அதால வாய்ப்புகள் கொடுத்த குற்றங்கள் செய்யிறதுக்கும் சீரழிஞ்சுபோறதுக்கும் அநேகமான ஆக்கள் தயாராத்தான் இருக்கினம். நீங்க தேடிப் போறீங்களோ அது தானா வருதோ மொத்தத்தில அது அங்க இருக்கு அதுவும் எல்லாரும் காணுற இடமா திறந்துகிடக்கு. அதான் பிரச்சனை. அக்கா கல்லு எங்களில வந்து மோதினா என்ன கல்லில நாங்கபோய் மோதினா என்ன காயம் வரப்போறது எங்களுக்குத்தானே. அப்ப நாங்க என்ன சொல்லுவோம் கல்லால காயம்பட்டிட்டு எண்டுதானே சொல்லுவம். இப்ப நாங்க சொல்லுறது உங்களுக்கு விளங்குதோ?
Quote:இங்கே எய்தவன்.. தானாக சீர்கேடுகளை தேடும் இளையவன். ஆகவே இணையம் சீரழிக்கவில்லை. கெடுகிறேன் பந்தயம்பிடி என்று திரியும் இளையவர்கள் தான் தாமாகவே கெட்டு போகிறார்கள். இணையத்தில் அறிவு பசியை போக்குபவர்கள் பயன் பெற்று மேலே சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்னத்த சொன்னாலும் கேக்கமாட்டியள். என்ன செய்யிறது போதையில இருக்கிறியள். நாங்க சொல்லுறது ஏறவா போகுது. ஏதோ கடமையெண்டு ஒண்டு இருக்கெல்லோ.
ஒரு மரம் பட்டுப்போகோணுமெண்டாலும் அதுக்கு நீங்க சொன்ன புறக்காரணியள் வேணும். நீங்க அழுறீங்க கண்ணீர் வருதெண்டா தானாவா வருது? ஏதோ ஒண்டு நடந்திருக்கோணுமெல்லோ. தூசு விழுந்திருக்கணும். மனசு கவலைப்பட்டிருக்கணும். நீங்க உணர்ச்சிவசப்பட்டிருக்கணும். இப்பிடி ஏதாவது காரணமிருக்கணும். தூசு விழுறது புறக்காரணி ஆனா மனசு கவலைப்படுறது சொந்தக்காரணமெண்டு சொல்லவாறியள்தானே? மனசு எதுக்கு கவலைப்படுது யாராவது பேசியிருப்பினம். ஏதாவது ஒண்டு வெளில நடந்திருக்கும். இதுகள் புறக்காரணியள் தானே. இதமாதிரித்தான் ஒராள் கொலை செய்யுதெண்டா சும்மா தன்ரபாட்டுக்குபோய் செய்யுறாரா? அவர் அத செய்யிறதுக்கு ஏதோ ஒரு காரணமிருக்குந்தானே? ஏதோ ஒண்டு அவருக்கு தூண்டுகோலா இருக்குந்தானே? சும்மா காரணமில்லாம சிலபேர் செய்யுறவையெண்டு நீங்க சொல்லலாம். அவைக்கு மனநோய். அப்ப தாங்களா கெட்டுப்போற இளைஞர்களுக்கு மனநோயெண்டுறியளா? சரி அப்படி மனநோயால சீரழிஞ்சு போகினம் எண்டு சொன்னா அந்த மனநோய்க்கு என்ன காரணமெண்டு பார்ப்பமன்? மனநோய் எதால வந்திச்சு? அதத்தான் அது இணையத்தால வந்திச்சு எண்டு நாங்க சொல்லுறம். இண்டைக்கு புலம்பெயர்ந்த நாடுகளில -இளைஞர்கள் சீரழிஞ்சுபோறதுக்கு- புறக்காரணிகளில முக்கியமான ஒரு இடத்தில இந்த இணையமும் இருக்கெண்டுறது வேதனையான உண்மையெண்டுறம்.
Quote:இந்த ஆண்டுக்குரிய மிகப்பெரிய நகைச்சுவை (சிறந்த நகைச்சுவை 2006). அதென்ன முதிர்ந்த வியாபாரி? முதிர்ந்த வியாபாரி இளைஞராக இருக்க முடியாதா? - தொழில் உதவியாளர்களும், பணியாளர்களும், பொறியியலாளர்களும் இளைஞர்களாக இருக்க முடியாதா? -இவர்களின் தொழில்ரீதியான செயற்பாடுகளுக்கு இணையம் தன்னாலான பங்களிப்பை செய்யவில்லையா?
எந்தளவு பெரிய தத்துவத்த தல அண்ணா சொல்லியிருக்கிறார். அத ஆழமா பாத்து புரிஞ்சுகொள்ளாம நகைச்சுவையெண்டு போட்டியள். பறவால்ல உங்கட அரைவேக்காட்டுத்தனத்துக்காக நாங்க கவலைப்படுறம்.
முதிர்ந்த எண்டு தல அண்ணா சொன்னது வயசுபோன ஆக்கள எண்டு நீங்களா ஏன் எடுத்துக்கொள்ளுறியள். அறிவில முதிர்ந்தவையா இருக்கலாம். அனுபவத்தால முதிர்ந்தவையா இருக்கலாம். ஆளுமையில முதிர்ந்தவையா இருக்கலாம். இப்பிடியானவைக்கு இணையம் பிரச்சனையா இருக்காம இருக்கலாம். ஆனா இப்பிடி முதிர்ந்தவை எங்கட இளமாக்களில எத்தினை பேர் இருக்கினமெண்டு கணக்குப்பார்த்து சொல்லுங்கோவன்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
Quote:புலம்பெயர்ந்ததால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாசிக்கும் பெற்றோர்களுக்கு அறிவில்லையா? நல்ல கண்டுபிடிப்பு. ஐயா நடுவர் அவர்களே, சிற்றுந்து ஓட்டத் தெரியாத பெற்றோர்கள் நிறைய பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். அவர்களுக்கு புலம்பெயர் சிற்றுந்து ஓட்டுனருக்கான விதிமுறைகள் தெரியாது தான். ஆனாலும் சிற்றுந்தில் பயணிக்கும் போது "கவனமா ஓட்டு தம்பி", "பார்த்துப் போ ராசா", "சிவப்பு விழுந்திட்டு", "வேகத்த கொஞ்சம் குறை" போன்ற பல அறிவுரைகளைக் கேட்கலாம். ஆக ஆபத்துகள் இருக்குமிடத்து அறிவுரைகளையும் கண்காணிப்புகளையும் பெற்றோர்கள் செய்யட்டும், செய்யத் தவறின் அது இணையத்தின் தவறல்ல. கடவுள் சிலையில் தலையைக் கொண்டு போய் முட்டினாலும் ஆபத்துத்தான்.
இதுதானுங்கோ இந்த நூற்றாண்டின்ர பென்னாம் பெரிய நகைச்சுவை. எந்தநேரமும் அம்மாவும் அப்பாவும் பிள்ளை போற இடத்துக்கெல்லாம் காரில போய்த் திரியினம் தானே. ஆர் கண்டது பக்கத்தில அம்மா அப்பா இருக்கேக்கயும் வேகமா ஓட்டுற ஆக்கள் இருக்கினந்தானே. அப்பிடி ஒட்டிக்கொண்டு போக கடைசில பிள்ளையோட சேர்ந்து அம்மா அப்பாவும் பரலோகம் போகவேண்டிய நிலைமை வருதோ யார் கண்டிச்சினம். புலம்பெயர்ந்த நாடுகளில எந்தநேரமும் பிள்ளைக்கு பக்கத்தில நிண்டு அறிவுரை சொல்லுற அளவில தாய்தகப்பன்ர நிலமை இல்ல. கண்டிச்சு அடிச்சு திருத்துறதுக்கும் புகலிடச் சூழலில இடமில்ல. இப்பிடியான நிலைமையில இணையம் மோசமா இளைஞர்கள பாதிக்குது. சரி வீட்டில பிள்ளை நாள்முழுக்க இணையத்தில என்ன செய்யுது எண்டுற சநஇதேகத்தில தாய்தகப்பனும் இணையத்தை நிப்பாட்டி வைக்கினம் எண்டு வைச்சுக்கொள்ளுவம். internet cafe எண்டு இப்ப வீதிக்கு வீதி பல இடங்களில இருக்குத்தானே. இதுகளில சீரழிவு விசயங்கள செய்யிறதுக்கு தடையில்லாம வாய்ப்புகள் நிறைய கொடுக்கப்படுதுதானே.
Quote:புத்தகத்தில வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது கடினம். இணையத்தில் வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது மிக இலகு. வேகமாகவும், நேரம் செலவளிக்காமலும் தகவல்களையும் பயனுள்ள விடயங்களையும் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா? படித்தபாடம் மனதில் நிற்பதற்கு அது எவ்வளவு வேகமாக கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. பாடம் பிடித்ததாக இருக்குவேண்டும். படிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்குவேண்டும். அப்பதான் பாடம் மனதில் நிற்கும். இலகுவாகக் கிடைப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? அப்படியென்றால் எதையும் சிக்கலானதாகவும், சிரமப்பட்டதாகவும் செய்யத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? தன்நம்பிக்கையை இணையம் வளர்க்கவில்லை என்று சும்மா மேலோட்டமாக சொன்னால் எப்படி? பக்கத்தில் இருந்து பரீட்சை எழுதும் நண்பனின் திறமையில் நம்பிக்கை வைத்து பரீட்சை எழுதுகிற இளைஞர்கள் போன்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இணையம் தன்நம்பிக்கையை வளர்க்கவில்லை என்றுதானே சொன்னீர்கள். தன்நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று சொல்லாதவரையில் சீரழிந்துபோகவில்லை என்பதாக உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.
வேகமாவும் நேரம் செலவளிக்காமலும் தகவல்கள பெறுறத தவறெண்டு நாங்க ஒண்டும் சொல்லலயே. பெறுற தகவல்கள ஆராயம அதில இருக்கிற உண்மையள விளங்கிக்கொள்ளாம பொய்யான தகவல்களையும் சேர்த்து பெறுகினம் எண்டு தான் சொல்லுறம். பாடம் பிடிச்சிருந்தாத் தான் படிக்கலாம் எண்டுற உங்கட தத்துவத்த என்ன சொல்லுறது. அப்பிடிப் பார்த்தா பள்ளிக்கூடத்தில முக்காவாசிப்பேர் படிக்காமலே இருக்கவேண்டியதுதான். படிக்கவேண்டும் எண்டுற எண்ணத்த மெல்ல மெல்லமா இணையம் இல்லாமச் செய்திருக்கு பலபேருக்கு. அதுக்கு இணையத்தில இருக்கிற மோகமும் இணையத்தில விடிய விடிய இருந்து அடிக்கிற அரட்டையுந்தான் காரணம். தன்னம்பிக்கை இல்லாதவைய தன்னம்பிக்கை இல்லாதவையாவே வைச்சிருக்கிறதும் சீரழிவுதான். இதுகூட விளங்காம அரைவேக்காட்டுத்தனமா இனியும் கதைச்சா எனக்கு கோவம் வரும் சொல்லிட்டன்.
Quote:சித்தர் தல அவர்களே நேரங்களை செலவளிக்காமல் கல்வித்தகவல்களை வேகமாக மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. மிகுதி இருக்கிற நேரங்களில் குறிக்கோளில்லாத பயணங்களைத் தொடர்கிறார்கள் என்றால் அது அவர்களின் இயல்பான குணாம்சமே. அப்படியென்றால் வேகமாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா?
எப்பிடிக்கா? இதெல்லாம் எப்பிடி வருது? அது தானா வருது எண்டு சொல்லப்போறியளோ. -அடச்சே- மிச்சம் இருக்கிற நேரத்தில குறிக்கோளில்லாத பயணத்த செய்யிறதுக்கு வாய்ப்ப எது கொடுக்குது? இணையம் தானே கொடுக்குது. அதான் அதால இளைஞர்கள் சீரழியினம் எண்டு சொல்லுறம். அக்கா வேகமா கல்விதகவல்கள பெற்றுக்கொண்டு பள்ளிக்கூட வேலையள நேரத்தோட செய்துமுடிக்க முடிஞ்சுதெண்டுறதெல்லாம் மலையேறிப் போச்சு. இப்ப இணையத்தில அரட்டையடிக்கோணும் இணையத்தில விளையாடோணும் எண்டுறதுக்காகவே அவசர அவசரமா இணையத்தில இருக்கிற தகவல்கள உண்மை பொய் ஆராயம எடுத்து பள்ளிக்கூட வேலைய ஏனோ தானோ எண்டு செய்துபோட்டு போற காலம் இணையத்தால ஏற்பட்டிருக்கு.
Quote:கண்ணியவான தல அவர்களே, முகம் தெரியாத நீங்கள் கண்ணியமில்லாமலா இருக்கிறீர்கள்? எத்தனை தடவை தான் நாம் சொல்வது வக்கிரங்கள் இணையத்தால் தோன்றவில்லை, உங்கள் மனதிலிருந்து தோன்றுகின்றன என்று? கனடாவில், யேர்மனியில், இலண்டனில், பிரான்சில் என்று பல்வேறு நாடுகளில் இருக்கும் இளைஞர்களோடு புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள இணையம் எப்படித் துணைபுரிகின்றது என்பதை யாழ்களமூடாக உங்களால் அறிந்துகொள்ளமுடியவில்லையா? நட்புணர்வை வளர்த்துக்கொள்வதில் எம்எஸ்என் துரிததூதர் போன்றவை எப்படியான பங்கை ஆற்றுகின்றன என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இல்லை என்று நினைக்கிறேன். வெளி உலகத்தில நடப்பவை எல்லாவற்றையும் இணையமும் செய்யவேண்டும் என்று எதற்கு எதிர்பார்க்கிறீர்கள்? தமது பள்ளி மற்றும் தொழில் சார் தேவைகளுக்கும் பொழுதுபோக்கு விடயங்களுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் நன்மையும் அடைகிறார்கள். அவர்கள் ஒன்றும் நாள்முழுக்க இணையத்துக்குள் குடும்பம் நடத்தவில்லை.
வக்கிரமென்ன தன்ரபாட்டுக்கா மனசில இருந்து வருது. வெளில இருந்து தூண்டுற படியாத்தர்னே வக்கிரம் வருது. அந்த தூண்டுற வேலையைத்தான் இணையம் செய்யுது. யாழ்களத்தில புரிந்துணர்வு மட்டுமா வளருது. கனடால இருக்கிறவை சுவிசில இருக்கிறவையோட கொழுவுகினம். பிரித்தானியாவில இருக்கிறவை யேர்மனில இருக்கிறவையோட கொழுவுகினம். ஒல்லாந்தில இருக்கிறவை இந்தியாவில இருக்கிறவையோட கொழுவுகினம். யாழில நடக்கிற தனிநபர் தாக்குதல்கள் எல்லாம் புரிந்துணர்வால வாறதுதானோ? எம்எஸ்என்னில காதல் பண்ணி சீரழிஞ்சுபோனவையின்ர வரலாற்ற எடுத்து வைக்கவா? பள்ளிசார் தொழில்சார் விசயங்களுக்கு பாவிக்கிறவையெல்லாம் குறைவு. சும்மா கண்ட கண்ட தேவையளுக்கு பாவிக்கிறவை தான் கூட. இணையத்தில குடும்பம் நடத்துறத நீங்க பாக்கலயா? விடிய விடிய இருந்து இணையத்துக்குள்ள அரட்டையடிக்கிறவையின்ர சோக வரலாற்ற நாங்க கண்டிருக்கிறம். குறைஞ்சது ஒருநாளைக்கு 6 மணித்தியாலமாவது இணையத்தில இருக்கிற இளைஞர்களின்ர எண்ணிக்கை அதிகம். 6 மணித்தியாலத்தையும் பள்ளித் தேவைக்கும் தொழில் தேவைக்கும் பயன்படுத்திற இளைஞர்களின் எண்ணிக்கை அதில மிக மிக சொற்பமக்கா.
Quote:சமூகச் சிந்தனையாளர் தல அவர்களே உங்கள் அதிசயமான சமூக ஆய்வுக்கு நன்றி. எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதற்கு நாம் அடிமைப்பட்டுப்போகிறோம். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே". இணையம் இளைஞருக்கு போதைப் பொருள் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். எதனால் இணையம் போதைப்பொருள் ஆகிறது? அதிகமாக அதில் அவனை ஈர்க்கிற ஒரு சக்தி இருக்கிறது. இதன் பொருள் என்ன? அவன் இயல்பாய் இருப்பதற்கு தேவையான ஒரு சக்தி வெளியுலகத்தில் அவனுக்கு குறைந்து போயுள்ளது என்பது தானே? வெளியுலகில் அவன் இயல்பாய் இருப்பதற்கான சூழல் இருந்திருக்குமானால் இணையத்துக்குள் மூழ்கிப் போவதற்கு அவனுக்கு என்ன தேவையிருக்கிறது? ஆக தவறுகள் புறச்சூழலால் நிகழ்கிறதே ஒழிய இணையத்தால் அல்ல.
ஓமக்கா இளைய சமூகம் சீரழிஞ்சு போகக்கூடாதெண்ட நினைக்கிற தல அண்ணா சமூக சிந்தனையாளர் தான். புதுமை புரட்சி எண்டுற பேரில சீரழிவுகள மறைச்சு இளம் சமூகத்த கெடுக்க நினைக்கிற நீங்கள்?
புறச்சூழல் எண்டுறதுக்குள்ள இணையமும் இருக்குத்தானே? இணையம் என்ன அகச்சூழலா? ஆக மொத்தத்தில இணையத்துக்குள்ள மூழ்கிப் போகினம் எண்டுறத ஒத்துக்கொள்ளுறீங்க தானே. வெளி உலகத்தில இளைஞர்கள் இயல்பா இருக்கிறதுக்கான சூழலில இருந்து திசைதிருப்பி கவர்ச்சிகாட்டி கவிழ்த்தி வைச்சிருக்கு இணையம். ஏற்கனவே நாங்க சொல்லிட்டம் இண்டைக்கு புகலிடத்தின்ர புறச்சூழலில இணையமும் ஒரு அங்கமா இருக்கெண்டு. அதால புறச்சூழலில இருந்து இணையத்த தனிய பிரிச்சு பார்த்து கருத்த வைச்சீங்க எண்டா அதில அர்த்தமிருக்காது.
Quote:தல(வெறும்) அவர்களே இராவணன் வெட்டிய வெட்டுக்களில் தெரிவது இணையத்தின் சீரழிவுகள் அல்ல - ஒவ்வொரு களஉறுப்பினர்களின் தனப்பட்ட பண்பு. இணையமில்லாமல் ஒரு கருத்தாடலை ஒரு அறையில் வைத்து நடத்தினால் இதைவிட மோசமான விளைவுகளை (வன்முறைகள், ஆயுதங்களுடனான சண்டைகள்) சந்திக்க நேரிடும் என்பதை உணர்க. அப்படியான பாதிப்புகளிலிருந்து காத்து எதுவித இரத்தமும், காயமும் இன்றி ஒரு கருத்தாடலை நடத்த துணைபுரிகிறது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
சரிங்கோ அக்கா. அப்ப உங்க நடக்கிற பட்டிமன்றங்களில எல்லாம் அடிதடி தானே நடக்குது. நல்ல கற்பனை. முகம் மறைச்சுக்கொண்டிருக்கிறதால தான் ஒவ்வொராக்கள பற்றியும் ஒவ்வொராக்களுக்கும் ஒவ்வொரு கற்பனையள். நேரில பாத்தா அதெல்லாம் உடைஞ்சு போயிடும். இங்க இணையத்தில எழுத்தில வீரங் காட்டுறவையெல்லாம் நேரில வாய மூடிக்கொண்டிருப்பினம். சந்திச்சுப் பார்க்கப் போறியளோ? சரி அந்தக் கதையெல்லாம் எதுக்கு. நேரில சந்திச்சு கதைக்கிறதால வாற புரிந்துணர்வு இணையத்தில வரப்போறதில்ல. சரி இரத்தமும் காயமும் இல்லாமல் இணையத்தில பட்டிமன்றம் நடத்தலாமெண்டுறீங்க. இதுகள விட பெரிய பாதிப்பான மனக்காயங்கள இணையமூடா செய்யலாம் எண்டுறது தெரியாதோ?
Quote:மீண்டும் மீண்டும் வாக்குமூலங்களை அளித்து எமது அணியின் நியாயத்தை வலுப்படுத்த உதவிபுரிந்த எதிரணி நண்பர் தல அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். அவரே ஒத்துக்கொள்கிறார்: எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சீரழியாமல் கட்டுப்படுத்துவதற்கும் அதனூடாக நன்மையடைவதற்கும் சில சட்டதிட்டங்கள், வரையறைகள் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டில் வன்முறை, களவு, பாலியல் தொல்லைகள் என்று பல குற்றச்செயல்கள் இருக்கின்றன. அதற்காக அந்த நாடே சரியில்லை, அந்த நாட்டால் நன்மையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். குற்றங்களுக்கு பின்னாலிருப்பது நாடு (மக்களில்லாமல் நாடு இல்லை) அல்ல நாட்டுமக்கள். அதேபோலத்தான் இணையத்தில் நீங்கள் குறிப்பிடும் ஒருசில சீரழிவுகளுக்கு பின்னாலிருப்பது இணையமில்லை, மாறாக அந்த இணையத்தின் பயனர்கள் தான் என்பதை புரிந்துகொள்க. நாட்டில் சில விடயங்களை பயன்படுத்த சில சட்டவரைமுறைகள் இருப்பதுபோல, வீட்டிலும் இணையப்பாவனைக்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்.
நாங்க புதுசா ஏதோ ஒத்துக்கொண்டமாதிரி கதைக்கிறீங்க. நாங்க தொடக்கத்திலயே சொல்லிட்டம் தானே. இணையத்தில நல்லவிசயங்களும் இருக்கு. ஆனா எங்கட இளைஞர்கள் நல்லதெல்லாத்தையும் பாவிச்சு நன்மையடையிறேல. கெட்டதுகளில தான் குறியா இருக்கினம். அப்பிடியிருக்கிற இளைஞர்களுக்கு இணையம் வாய்ப்புகள் வழங்குது சீரழிஞ்சுபோறதுக்கு. அதால இளைஞர்கள் சீரழியாம இருக்கோணுமெண்டா அதுக்கு கட்டுப்பாடுகள் தேவை என்று ஏற்கனவே சொல்லிட்டம் தானே. எங்கதான் உங்கட உதாரணங்கள தேடியெடுக்கிறியளோ தெரியா. ஒண்டோட ஒண்டு பொருத்தமில்லாம சொல்லுறது. நாங்க ஒண்டும் இணையத்தால நன்மையில்லையெண்டு சொல்லேல. இணையத்தால சீரழிஞ்சுபோகினம் எண்டுதான் சொல்லுறம். நாட்டில குற்றச்செயல்கள மக்கள் செய்தா அந்த நாடு சீரழிஞ்சு போகுதெண்டுதானே அர்த்தம். நாட்டில சட்ட நடைமுறைகள் ஒழுங்கா இல்லாட்டி நாட்டு மக்கள் ஒழுக்கமா நடந்துகொள்ளாட்டி நாட்டின்ர நிர்வாகம் சரியில்ல எண்டுதானே அர்த்தம். நிர்வாகம் சரியில்லாட்டி நாட்டின்ர சூழல் மக்களுக்கு குற்றங்கள செய்ய வாய்ப்பளிக்குதெண்டுதானே அர்த்தம்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<b>உ) முடிவு</b>
இணையம் என்கிற சக்திவாய்ந்த ஊடகத்தை புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழ் இளைஞர்களில் பலர் தவறான முறையில் பயன்படுத்தி சீரழிந்துபோகிறார்கள். சீரழிவு என்பது ஏதோ ஒருவகையில் நிகழ்வதில்லை. அது பலவழிகளில் நிகழ்கிறது என்பதை மேற்கண்ட ஒரு சில விளக்கங்களின் மூலம் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஒப்பீட்டளவில் நன்மையடைகிற இளைஞர்களைவிட இணையத்தால் சீரழிந்துபோன - போகிற - இளைஞர்கள் தான் அதிகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல சீரழிவு என்பது தீமையடைவது மட்டுமல்ல. இளைஞர்கள் நன்மையடைவது தடைப்படும் என்றால் அதுவும் சீரழிவுதான்.
|