Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவும் இலங்கையும்
#5
இந்தியாவும் கதிர்காமரும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய உறவுநிலையை `மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மகோன்னதமானது' என்று அடிக்கடி வர்ணிப்பதில் பெருமைப்படும் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த வாரம் புதுடில்லி விஜயத்தின்போது தெரிவித்திருந்த சில கருத்துகள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் கதிர்காமர் இந்தியாவுக்கு இதுவரை 50 க்கும் அதிகமான தடவைகள் விஜயம் மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. கடல்கோள் அனர்த்தத்தில் இலங்கை அவலத்துக்குள்ளான வேளையில் அவசர நிவாரணப் பணிகளில் இந்தியா செய்த அளப்பரிய உதவிக்காக நன்றி தெரிவிப்பதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் விசேட தூதுவராகவே இத்தடவை அவர் புதுடில்லி சென்றிருந்தார்.

`தூரதர்ஷன்' தொலைக்காட்சிக்கு விரிவான பேட்டி யொன்றை அளித்த கதிர்காமரிடம் இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிர பங்கேற்கவேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, `ஆம், இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவில் உள்ளவர்களுக்கு நியாயபூர்வமான- முறைப்படியான ஒரு நலன் ( Legitimate Interest ) இருக்கிறது. இலங்கையில் என்ன நடந்தாலும் அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். இதன் அடிப்படையில், ஒட்டுமொத்த விளைவுகளில் அக்கறையில்லாத தரப்பாக இந்தியா இருக்க முடியாது' என்று பதிலளித்திருக்கிறார்.

`கோட்பாட்டு அளவிலான (Academic Interest) அக்கறையை விட கூடுதலான பங்கை இந்தியா ஆற்ற வேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். இலங்கையில் எந்த வகையான தீர்வு காணப்படுவதை இந்தியா விரும்புகிறது என்பதை குறிப்பிட்டுக் கூற அது தயாராக வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். வேறு எந்தவெளிச் சக்தியும் எதையும் கூறமுடியாது. தீர்வு எத்தகையதாக இருக்க வேண்டும் என்று கூறக்கூடிய ஒரே வல்லமை மிக்க நாடு இந்தியா தான். அவ்வாறு கூறுவதற்கான நியாயபூர்வமான உரிமை இந்தியாவுக்கு மாத்திரமே இருக்கிறது. இந்தியா இதைக் கூறாதவரை முரண்பாடுகளுக்கு இடமிருக்கும். இலங்கையில் நடப்பவை குறித்து நிச்சயம் இந்தியத் தலைவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இலங்கைக்கான தீர்வு எந்த வகையானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் அதன் மனதில் இருப்பதை இந்திய அரசாங்கம் வெளிப்படையாகச் சொல்வதற்கு சரியான தருணம் இது. சமஷ்டித் தீர்வு காணப்பட வேண்டுமென்று இந்தியா யோசனை கூறுமானால், இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் அதற்கு இணங்கும்' என்று வெளியுறவு அமைச்சர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்து 11 மாதங்கள் கடந்தும் நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க முடியாமல் இருக்கும் துரதிர்ஷ்டவசமானதொரு நிலையில்- அரசாங்கமே கவிழ்ந்து விடுமோ என்று சந்தேகம் வலுவடையுமளவுக்கு அதன் பிரதான பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)க்கும் இடையே (விடுதலைப் புலிகளுடனான விவகாரங்களைக் கையாளுவது தொடர்பில்) சர்ச்சைகள் கூர்மையடைந்திருக்கும் ஒரு கட்டத்தில் இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிர பங்காற்ற வேண்டுமென்று கதிர்காமர் கேட்கிறார். இதே இந்திய விஜயத்தின் போது தான் கதிர்காமர், விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இது பொருத்தமான தருணமில்லை என்றும் கூறியிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

சமாதான முயற்சிகளில் காணப்படும் தேக்க நிலையைப் போக்குவதற்கு குறைந்தபட்ச முயற்சியையேனும் மேற்கொள்வதற்கு ஏதுவான மனோ நிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியில் இல்லாதிருக்கும் இச் சந்தர்ப்பத்தில்- அதே சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக உலகுக்குக் கூறிக் கொண்டிருக்கும் இந்தியாவை தீவிர ஈடுபாட்டைக் காண்பிக்குமாறு கதிர்காமர் வலிந்து கேட்பதன் நோக்கம் என்ன? விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமற்றதாகக் கதிர்காமர் காணும் இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தீவிர ஈடுபாட்டினால் எதைச் சாதிக்க முடியுமென்று அவர் நம்புகிறார்?

இலங்கைக்கான தீர்வு எத்தகையதாக இருக்க வேண்டுமென்று கூறுவதற்கு நியாயபூர்வமான உரிமையுடைய நாடு இந்தியா மாத்திரமே என்றும் இந்தியா அதைக் கூறாதவரை முரண்பாடுகளுக்கு இடமிருக்கும் என்றும் கூறும் கதிர்காமர், 1980 களில் இலங்கைக்கான தீர்வொன்றைத் தருவதற்கு நேரடியாக புதுடில்லி தலையீடு செய்த போது தென்னிலங்கை அரசியல் சமுதாயம் இந்தியாவை எவ்வாறு கணித்தது என்பதை அறியாதவராக இருக்க முடியாது. சமஷ்டித் தீர்வை இந்தியா யோசனையாக முன்வைக்குமானால், இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் அதற்கு இணங்கும் என்று வெளியுறவு அமைச்சர் தைரியத்துடன் கூறுவதற்குக் காரணம் தென்னிலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இன்றைய `மகோன்னத உறவு நிலையே' என்று கருதவேண்டியிருக்கிறது.

இலங்கையின் சரித்திரத்தையும் அதன் அரசியலையும் வேறு எதையும் விட மிகக் கூடுதலான செல்வாக்கிற்குட்படுத்திய ஒரே காரணியென்றால், அது இந்தியாவுக்கு மிகவும் அண்மையாக- 20 மைல் அகலக் கடலால் பிரிக்கப்பட்ட நிலையில்- அமைந்திருக்கிறதென்ற புவியியல் நெருக்கமேயாகும். இந்த உண்மையின் அடிப்படையில் நிலைவரங்களைப் புரிந்து கொள்வதற்குப் பெரிதாக அரசியல் ஞானம் எதுவுமே தேவையில்லை. ஆனால், அதே புவியியல் நெருக்கம் இலங்கையின் அண்மைக்கால சரித்திரத்தில் ஒரு குறுகிய கால கட்டத்துக்குள் ஏற்படுத்திய விபரீதங்கள் இரு நாடுகளும் அவற்றின் மக்களும் என்றென்றைக்கும் மனதைவிட்டகலாத பாரதூரமான படிப்பினைகளைத் தந்திருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இன நெருக்கடிக்குக் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வுமே தமிழர்களின் பாதுகாப்பையும் பத்திரத்தையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருந்த கால கட்டமொன்று இருந்தது. அப்போது தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் அதிகப் பெரும்பான்மையான பிரிவினரால் இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே நோக்கப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையின் இலங்கைப் பிரவேசத்துக்குப் பின்னரான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் காரணமாக மாற்றமடைந்த நிலைமைகளின் கீழ் இலங்கை விவகாரத்தைத் தூர இருந்து அவதானிக்கும் போக்கை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்தது.

இந்தியா விடுதலைப் புலிகளைத் தடை செய்து அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகள் காலப்போக்கில் தென்னிலங்கையின் உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்களின் நியாயபூர்வமானதும் சட்டபூர்வமானதுமான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களுக்குக் குறுக்கே இனிமேல் இந்தியா நிற்கும் என்ற நம்பிக்கையையும் பேரினவாதச் சக்திகள் மத்தியில் தோற்றுவித்தன. இன்று தென்னிலங்கை இந்தியாவை ஆரத் தழுவுவதற்கும் நாட்டின் ஐக்கியத்தினதும் ஆட்புல ஒருமைப்பாட்டினதும் `நம்பிக்கைக்குரிய பாதுகாவலன்' என்று போற்றுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா ஈடுபாட்டைக் காட்டவேண்டும். அதேவேளை, தமிழ் மக்களினதும் பொதுவில் சிறுபான்மை இனங்களினதும் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளுக்கு விரோதமான தென்னிலங்கைப் பேரினவாதச் சக்திகளுக்குக் தெம்பூட்டக் கூடிய ஒரு சிறுநகர்வைக் கூட இந்தியா செய்தல் ஆகாது என்பதே எமது வேண்டுகோள். சரித்திரத்தில் இருந்து எவரும் எதையும் படிப்பதில்லை என்பதே சரித் திரத்தில் இருந்து நாம் படித்த பாடமாகிவிடக் கூடாது.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 02-27-2005, 11:31 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:43 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)