Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியார் கவிதைகள்
#1
சுதந்திரப் பள்ளு களியாட்டம்


ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே

பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும்போச்சே - பிச்சை
ஏற்ப்பாரைப் பணிகின்ற காலமும்போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யுங் காலமும்போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு - நாம்
எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத் தோது வோமே (ஆடுவோமே)

எல்லோரு மொன்றென்னுங்க் காலம்வந்ததே - பொய்யும்
ஏமாற்றுந் தொலைகின்ற காலம்வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம்வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம் (ஆடுவோமே)

நாமிருக்கு நாடுனம தென்பதறிந்தோம் - இது
நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்
பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம். (ஆடுவோமே)

மகாகவி திரு. சு. பாரதி

நன்றி : MSN தமிழர் குழு
http://groups.msn.com/tamilar
Reply


Messages In This Thread
பாரதியார் கவிதைகள் - by தமிழன் - 07-26-2003, 06:19 PM
[No subject] - by தமிழன் - 07-28-2003, 06:19 PM
[No subject] - by தமிழன் - 07-28-2003, 07:30 PM
[No subject] - by sethu - 08-17-2003, 08:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)