Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலக்கியத்தில் என்னைக் கவர்ந்த தலைசிறந்த காதல் காட்சி
#1
படித்து சுவைத்தது - BBC

<span style='font-size:25pt;line-height:100%'>இலக்கியத்தில் என்னைக் கவர்ந்த தலைசிறந்த காதல் காட்சி - பொன்னியின் செல்வன்</span>

படிக்கப் படிக்கத் தெவிட்டாத "பொன்னியின் செல்வன்"நாவலில் அமரர் கல்கி எழுதிய கீழ்வரும் காட்சிக்கு இணையான காதல் காட்சி வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இருக்க முடியாது என்பதே என் கருத்து. காட்சியைக் கண்டுவிட்டு வாருங்கள், ஏனென்று சொல்கிறேன்.

(வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறான். இளவரசி குந்தவை அவனைப் பார்க்க அங்கு வந்திருக்கிறாள்.)

"... போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..."

"(அப்படியானால்) உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியது தான்"என்றாள்.

வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.

"நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?"

"இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?"

இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு,

"ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?"என்றாள்.

"அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்."

"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர் தப்ப முடியாது..."

"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?"

"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..."

"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?"

"என்னுடைய இதயமாகிய சிறைச் சாலையைத் தான் சொல்கிறேன்."

"தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி..."

"யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒரு நாள் பழைய கதை ஆகலாம்."

"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதன்மந்திரியும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணிய மாட்டார்கள்..."

"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?"

"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்."

"அதிலே தான் என்ன தவறு?"

"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம் தான் தவறு..."

"'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?"

"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?"

"ஆம்! பொருந்தும் தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..."

"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் ஆவலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்..."

"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?"

"ஆம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் ஆலயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..."

"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..."

"தேவி, தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவர வேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது. விடை கொடுங்கள்..."

"ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"

"தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்..."

இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனது உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.

"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன்கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்..!"

"கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!"

"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம், இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

வல்லவரையன் சொல்லிழந்து, செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.



X-X-X-X-X


காதலின் மென்மையையும் தேடலையும் இதைவிட எப்படிச் சிறப்பாகச் சொல்ல முடியும்?? அமரர் கல்கி தீட்டும் சொல்லோவியங்களைப் பாருங்கள்..

இளவரசி ஒருகணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்தாள்..

நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?

அவன் உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.

குந்தவையின் கன்ணீர் ததும்பும் கண்கள்.

சொல்லிழந்து, செயலிழந்து, மதியுமிழந்து நின்றான்.

அதி அற்புதம்.!! படிக்கின்ற ஒவ்வொரு ஆணும், 'அடடா, நம்மிடம் இப்படிச் சொல்ல ஒரு பெண் கிடைக்க மாட்டாளா' என்றும், படிக்கின்ற ஒவ்வொரு பெண்ணும், 'அடடா, நாம் இப்படிச் சொல்லுமளவிற்கு நமக்கு ஒரு ஆண் கிடைக்க மாட்டானா' என்றும் ஏங்க வைக்கும் அவரது திறமையே அவரது வெற்றிக்குச் சான்று.

"இந்த இப்பிறவியில் இன்னொரு மாதினை என் சிந்தையாலும் தொடேன்"என்று இராமாயணத்தில் இராமன், சீதையிடம் வாக்குத் தருவதாய் கம்பர் காட்டும் காட்சிக்கு இணையாய், அதனினும் ஒரு படி மேல் சென்று அமரர் கல்கி ஒரு அற்புதமான காட்சியை நம் முன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

குந்தவை, வந்தியத்தேவனின் வார்த்தைகளை வைத்தே அவனை மடக்கும் சொற்போர் அபாரம்..

இப்படிப் பல சிறப்புகள் கொண்டு ஒப்பற்று விளங்குவதால், இதுவே இலக்கியத்தில் எனக்கு மிகவும் விருப்பமான காதல் காட்சி.

நன்றி - meenak

குறிப்பு - இந்த கட்டுரைல வர்ர உடங்கட்டை ஏறுவது மாதிரியான விடயங்களை நான் ஏத்துக்கலை. உடங்கட்டை ஏறுவது பெண்கள் மேல் திணிக்கப்பட்ட பிற்போக்கான விடயம் - BBC
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
இலக்கியத்தில் என்னைக - by Mathan - 02-23-2004, 09:13 PM
[No subject] - by vasisutha - 02-26-2004, 08:27 PM
[No subject] - by Kanakkayanaar - 02-27-2004, 04:56 AM
[No subject] - by Mathan - 02-27-2004, 01:31 PM
[No subject] - by Mathan - 03-01-2004, 05:27 PM
[No subject] - by vasisutha - 03-02-2004, 02:46 AM
[No subject] - by phozhil - 03-03-2004, 12:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)