Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா..??!
#3
இன்று பிறப்பு விகிதம் குறைந்தும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகின்றது. முதியோர் எனப்படுவோர் 60 வயதுக்குக் கூடியவர்களையே குறிக்கும் ஒரு பதமாகும். மேலும், அரச, தனியார் நிறுவனங்களும் 60 வயதை இளைப்பாறும் வயதாகக் கொண்டிருப்பதும் முதியோர் வயதை 60 க்குக் கூடியது எனக் கொள்ளக் காரணமாகும்.

இன்று உலகிலே 650 கோடி சனத்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் 65 கோடியாக அல்லது 10 சதவீதமாக உள்ளனர். 1950 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20 கோடி 40 இலட்சமாக இருந்தது. 2050 ஆம் ஆண்டில் இந்த தொகை 200 கோடியாக அல்லது உலக மொத்த சனத்தொகையில் 22 சதவீதமாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சனத்தொகைப்பிரிவு தெரிவிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை 12 இலட்சத்தால் அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பில் 75 சதவீதம் அதிகரிப்பு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் குறிப்பாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் காணப்படுகிறது.

1991 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் 65 வயதிற்கு மேற்பட்டோர் 11.2 சதவீதத்தினராக இருந்தனர். இத்தொகை 2030 ஆம் ஆண்டில் 19 சதவீதமாக அதிகரித்து விடுமென ஆசிய பிராந்தியத்தில் 15 நாடுகளை மதிப்பீடு செய்த போது அறிய முடிந்தது. 120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 130 மில்லியன் பேராக இருக்கின்றார்கள். அது சீனா நாட்டின் சனத்தொகையிலேயே 10 சதவீதமாகும். உலகிலே முதியோர் தொகை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் ஒன்றாகும். 1997 இல் 7 சதவீதமான சிங்கப்பூர் மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள். 2030 இல் இது 19 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கொரியாவிலும் முதியோர் தொகை 1997 இல் 7 சதவீதத்திலிருந்து 2020 இல் 13 சதவீதத்திற்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுமை நிலை ஏற்படும் போது உடல், மன, சமூக ரீதியான மாற்றங்களும் ஏற்படுவது வழமை, உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் தளர்ச்சியடைகின்றன. வேலைகளைச் செய்யும் போது பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்க்கும் போது, உடல் மாற்றங்கள் அவர்களுக்கு அலுப்பைத் தருகின்றன. இரசாயனங்களும் உடலில் குறைவாகவே சுரக்கின்றன. மூளையிலும் இரசாயனம் குறைவாக சுரப்பதாலும், நரம்புகள் சுருங்க ஆரம்பிப்பதாலும், இரத்தோட்டமும் குறைகிறது. இதனால் மூளையின் செயற்பாடுகளான புத்திசாலித்தனம், ஞாபகம், முடிவு எடுக்கும் ஆற்றல் போன்றவற்றில் குறைகள் ஏற்பட இடமுண்டு. இவர்களிடம் குறை காணும் அதிகாரிகள் இவர்களது எரிச்சலுக்கும், கோபத்திற்கும் ஆளாக இடமுண்டு.

மேலும், மன ரீதியாக பலர் பாதிப்புக்குள்ளாகின்றனர். குடும்பத்தில் இருந்த தலைமைப் பாத்திரம் குறைவதால் மனச்சோர்வடைகின்றனர். மேலும் உடல் உபாதைகள் சஞ்சலங்கள் மனநோய்கள் இவர்களைப் பாதிக்கின்றன. தனித்து ஒதுங்கி வாழும் முதியவர்கள் பதற்றத்துக்கும், பயத்திற்கும் ஆளாகின்றனர். தனிமை விரும்பிகளாக இருக்கும் இவர்கள் சோர்வாகவும், கோபமாகவும், சோகமாகவும், தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் காணப்படுவர். மனப்பதற்றம் என்பது இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். ஏனையோரைச் சார்ந்து வாழ்வதாலும் தன்னம்பிக்கையற்று வாழ்வதாலும் நெஞ்சு படபடப்பு, தூக்கமின்மை, எரிச்சல் என்பன அதிகமிருப்பவர்களாக காணப்படுவர்.

இந்த மனத்தளர்ச்சியுடையவர்கள் உடல் தளர்வு பயிற்சி பெற வேண்டும். மன நல ஆலோசனைகளும் இவர்களுக்கு மிக அவசியமாகும். எனவே, முதியவர்கள் மாற்றத்திற்கேற்ப தமது அன்றாட நடைமுறைகளையும் பழக்கங்களையும் ஏற்க வேண்டும். இதற்காக உளவியலாளர்கள் அவர்களுக்கு போதிய பயிற்சியளிக்க முன் வரவேண்டும்.

மேலும், முதியவர்களுக்கும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்னும் ஆசை ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. எனினும் உடல் தளர்வு, மனச்சோர்வு என்பவற்றை இதனால் கட்டுப்படுத்த முடியாது. அவை வயது ஏற ஏற இயல்பாக ஏற்படுவதொன்று. இன்று உலகில் மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்திருப்பது எமது நாகரிகத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். எனினும், இன்று பல முதியவர்கள் பல பிரச்சினைகளுக்குட்பட்டுக் காணப்படுகின்றனர்.

முதலாவது நிதிப்பிரச்சினை, தமது வாழ்க்கையை கொண்டு செல்ல நிதியின்றி அவதியுறுகின்றனர். ஏனையோரை, பிள்ளைகளை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பராமரிப்போர் இவர்களது மனதில் இறுதி நேரத்தில் சஞ்சலம் ஏற்படாது தகுந்த உபசாரங்களைச் செய்ய வேண்டும். இத்தாலியில் 1995 ஆம் ஆண்டில் வேலை பார்ப்போர் வயது 15 க்கும் 64 க்கும் இடைப்பட்டதாக இருந்தது. மேலும், சமூகப்பாதுகாப்பும் இவர்களுக்கு முக்கிய பிரச்சினையாகும். இவர்களை உடல், உள பாதிப்புகளிலிருந்தும் சமூகத்திலிருந்து ஒதுக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும். இதற்காக பல சமூக நலன் திட்டங்களைச் செயல்படுத்தப்பட முற்பட வேண்டும். ஓய்வுநேரத்தை பொழுதுபோக்கு ஏற்ற நித்திரை என்பன சரிவர இருக்க வேண்டும்.

இலங்கையில் 2000 ஆம் ஆண்டில் முதியோர் தொகை சனத்தொகையில் 10 சதவீதமாக இருந்தது. இலங்கையில் மொத்தம் 160 முதியோர் பராமரிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. அதில் 3 நிலையங்கள் மாத்திரம் அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்றன. ஏனைய மதஸ்தாபனங்கள், தனிநபர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றன. எமது சட்டத்திலே சில மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம். வயோதிப காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்பதை விதியாக்க வேண்டும். மேலும், முதியவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இவர்களுக்கு உழைக்கும் போதே சேமிக்கும் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சமூக பாதுகாப்பு நலன்புரி 1987 ஆம் ஆண்டு 12 இலக்கத்தின்படி விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் இன்று சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏனையோரும் ஏற்ற பலாபலன்களையடைய வழிவகுக்க வேண்டும். முதியோருக்கு அவர்களது தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் பாதிக்க இடமளிக்கக் கூடாது. இவர்களை தனிமைப்படுத்தும் போது வெறுமையடைகிறார்கள். கூட்டுகுடும்பங்களில் இது உணரப்படவில்லை. வீட்டில் சகல விடயங்களிலும் இறுதித் தீர்மானம் கூட்டுக்குடும்பத்தில் முதியவர்களால் எடுக்கப்பட்டது. இன்றும் இதை ஏற்படுத்த முற்பட வேண்டும். அவர்களது நீண்டகால அனுபவம், முடிவெடுத்தலில் பிரதான பங்களிக்க வேண்டும். சிலர் ஓய்வு பெற்ற பின்பும் வருமானத்திற்காகத் தொழிலுக்குச் செல்கின்றனர். இதனால், தன்னம்பிக்கை, தன்மானம் என்பன வளர வழிவகுக்கிறது.

1996 ஆம் ஆண்டில் இலங்கையில் சனத்தொகையில் 9 சதவீத பெண்களும் 9.1 சதவீத ஆண்களும் 60 வயதுக்குக் கூடியவர்களாக இருந்தனர். 1946 இல் 60 வயதுக்கு கூடியோர் 5.4 சதவீதமாக இருந்தது. 1991 இல் 8.1 சதவீதமாக உயர்ந்தது. 1998 ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாக மேலும் உயர்ந்துள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக உயர்வடைந்து செல்லும் முதியோர் தொகை 2031 இல் 22.4 சதவீதம் முதியவர்களாக மாற வழிவகுக்கிறது. இலங்கையில் வாழ்க்கை நீடிப்பு 42 ஆக 1946 இல் இருந்தது. 1991 இல் இது 72 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்கள் 70 வயது வரையும், பெண்கள் 74 வயது வரையும் வாழ்வு நீடிப்பு உள்ளது.

மேலும், கணவர் 73.5 வருடங்களும், பெண்கள் 78.5 வருடங்களும் வாழ்வதற்குரிய காலமாக 2025 கணக்கிடப்படுகிறது. இன்று 60-70 வயது வரை சுகமாக, பௌதீக ரீதியாக உளரீதியாக பொருளாதாரத்திற்கு பங்காற்றக்கூடிய நிலைமை முதியவர்களுக்கு உண்டு. இதனால் சுகாதார, சமூகச்சேவைகள் 70 வயதுக்குக் கூடியவர்களுக்கு மாத்திரம் இன்று இலங்கையில் தேவைப்படுகிறது. மேலும் முதியோரில் பிறர் ஆதரவில் தங்கியிருக்கும் விகிதாசாரம் 1963 இல் 11 சதவீதமாக இருந்தது 1991 இல் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2031 இல் 100 வேலை செய்யும் பிரிவினர் 36 முதியோரைப் பராமரிக்கும் நிலைமை ஏற்படும். 1963 இல் 100 பிள்ளைகளுக்கு 14 முதியவர்கள் இருந்தனர். 1991 இல் 100 பிள்ளைகளுக்கு 26 முதியோர் இருந்தனர். இளம் முதுமை வயதானது 60-74 வரையாகும். முதுமையிலும் முதுமையின் வயதானது 75 க்கு கூடுதலாகும். முதுமையிலும் முதுமையான 75 வயதுக்கு கூடியவர்கள் 1971 இல் 19 சதவீதமாக இருந்தனர். 2031 இல் 30 சதவீதமாக மாறக்கூடும். ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுதியத்தின் காரணமாக தன்மானத்துடன் வாழ்கின்றனர்.

இலங்கையின் நியமப்படி பிள்ளைகள் தான் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். முதியோர்களின் தேவைகளாக சுகாதாரக் கவனம், உறைவிடம், நாளாந்த வேலைகள் என்பன இருக்கின்றன. முதியவர்களில் குறிப்பிட்டோர் தான் ஓய்வூதியும் பெறுகின்றனர். முதியவர்களில் தாய்லாந்தில் 5 சதவீதமும் மலேசியாவில் 6 சதவீதமும் மாத்திரம் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

இலங்கையில் தொழில் புரியும் முதியவர்களாகக் கணக்கிடின் 1992 இல் 47.4 சதவீத ஆண்களும் 8.7 சதவீத பெண்களும் தொழில் புரிந்தனர். 1998 இல் 42.4 சதவீத ஆண்களும் 8.8 சதவீத பெண்களும் மாத்திரமே தொழில் புரிகின்றனர். தொழில் புரிபவர்களில் ஆண்களே இலங்கையில் அதிகமாக காணப்படுகின்றனர். அதுவும் விவசாய தொழில் புரிபவர்கள் தொகைதான் அதிகம். ஜப்பானில் 33 சதவீத முதியவர்கள் 1982 ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபட்டனர். சீனாவில் 80 சதவீத முதியவர்கள் 1990 ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் என குடிசனமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது 46/91 தீர்மானமாக "வயது கூடியவர்களுக்கு வாழ்வளிப்போம்" என்ற கருதுகோளை முன் வைத்தது. இதன்மூலம் முதியவர்களது முக்கியத்தை அது உணர்த்தியது. இலங்கையில் 1991 ஆம் ஆண்டு முதியோருக்கு ஒரு தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன் மூலம் முதியோருக்கு முக்கியமளிக்கப்பட்டது.

மேலும், இளைஞர்களும், ஏனையோரும் முதியவர்களைப் பற்றிச் சிந்தித்து அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். சமூக ரீதியாக அவர்கள் வேலை இழந்திருப்பவர். வாழ்க்கை நிலை மாற்றத்திற்குள்ளாயிருப்பர், நிதியின்றி அவதியுறுவர், பிறருக்கு சுமையாக இருப்பர், தனிமையை நாடுவர், உதவி பாதுகாப்பின்றி அவுதியுறுவர். இவற்றை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். இது ஒவ்வொருவரது கடமையாகும். சுகாதார ரீதியாக நோய் வாய்ப்படுவர். போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவர், வைத்தியசாலையை நாடுவர், வலது குறைந்து போயிருப்பர், நடமாட அவதியுறுவர். இவர்களுக்கும் நாம் மனதார உதவி செய்ய வேண்டும். உளரீதியாக மாறுபாடான தன்மை, தனிமை தன்மதிப்பு இழப்பு என்பனவற்றால் அவதியுறுவர். இவற்றையும் நீக்க முயல வேண்டும். இதற்கு அவர்களை நாம் பின்வருமாறு உதவுவதால் வழிசெய்யலாம். உரிய நித்திரை கொள்ள அனுமதித்தல், நல்ல தரமான வயதுக்கேற்ற உணவு அளித்தல், சுகத்தை பாதுகாத்தல், மருத்துவ பரிசோதனை, மன உறுதியை ஏற்படுத்தல் என்பனவற்றிற்கும் நாம் வழிவகுக்க வேண்டும்.

இப்படியாக நாம் பல்வேறு விதத்தில் உதவி செய்து முதியவர்களாகிய எமது பெற்றோரை பேணிப்பாதுகாக்க வேண்டும். இது எமது வாழ்நாள் கடமை. நாமும் முதியவராவது திண்ணம். எனவே எம்மையும் எம்மில் வயது குறைந்தோர் பிற்காலத்தில் எம்மை கவனிக்க வழிவகுக்க வேண்டும். காவோலை வில குருத்தோலை சிரிக்கக் கூடாது. குருத்துதோலை காவோலையாக மாறும் நிலை திண்ணம். முதியவர் வளத்துடன் வாழ வழிவகுப்போமாக! இது எமது தலையாய கடமையும் கூட, இளம் சமுதாயமே முதியோரைப் பேண திடசங்கல்பம் பூணுவோமாக!
thinakural
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 08-22-2005, 08:07 PM
[No subject] - by adsharan - 08-23-2005, 09:11 AM
[No subject] - by tamilini - 08-23-2005, 09:41 AM
[No subject] - by vasisutha - 09-04-2005, 12:59 PM
[No subject] - by MUGATHTHAR - 09-04-2005, 07:46 PM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)