ஊர்ப்புதினம்
வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோ மீற்றர்களே எஞ்சியுள்ளன! - தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோமீற்றர்களே எஞ்சியுள்ளன என மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் பாராட்டப்பட்டுள்ளது.
இந்த மாநாடு சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) கடந்த ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
04 பிரதான இடைக்கால கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் இலங்கையின் தலைமையில் ஒரு கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றதும் விசேடமாகும்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான டபிள்யூ.எஸ். சத்யானந்த மற்றும் பிரதிப் பணிப்பாளர் வி. பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மனிதாபிமான கண்ணிவெடி நடவடிக்கைக்கான சர்வதேச மாநாட்டின்படி கண்ணிவெடி அகற்றும் பணியில் ஒவ்வொரு நாடும் அடைந்துள்ள முன்னேற்றம், செயல்முறையை வெற்றிகரமாக நிர்வகிப்பதில் பெற்ற அனுபவம், அறிவு பரிமாற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக டபிள்யூ.எஸ்.சத்யானந்த தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீற்றர் தூரத்தில் 3000க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடுத்த 03 வருடங்களில் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், இன்னும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்படவிருக்கிறது எனவும் இந்த மாநாட்டில் சத்யானந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை இலங்கை இராணுவம் Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிற்ஸர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருகின்றன.
வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற இலங்கை எடுத்துவரும் வேலைத்திட்டம் குறித்து மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சத்யானந்த தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்துக்கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது !
ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் த தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.
கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் கொடுக்கும் போது, அது குறித்த தகவலை பதிவாளர் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூகப் பிரச்சனைகளே குழந்தைகளை பிறரிடம் தத்து கொடுப்பது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது !
போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது !
போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன்வந்திருக்கிறார். இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போகம்பர சிறைச்சாலை 2014ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது.
மேலும், அந்த அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சிறைச்சாலையின் பிரதான கட்டடம் காலனித்துவ கட்டடக்கலையை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கு திறந்த மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் வளாகத்தின் பொருளாதார மதிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் இ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க தெரிவித்தார்.
தற்போதும் சிறைச்சுவர் மற்றும் பிரதான கட்டடம் தவிர மற்ற பகுதிகளின் அபிவிருத்திக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
2018ஆம் ஆண்டு வரை நகர அபிவிருத்தி அதிகார சபையானது சிறைச்சாலையின் முன்பகுதியை நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய கட்டடத்துடன் கூடிய பூங்காவாக உருவாக்கியுள்ளது.
சிறைச்சாலையின் பிரதான வர்த்தகத் தொகுதி, உணவுக்கூடம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உள்ளிட்ட வர்த்தகக் கட்டடமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போகம்பர சிறைச்சாலை வளாகத்தின் கட்டடக்கலை மற்றும் வரலாற்று விழுமியங்களைப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை முதலீட்டு சபையும் இணைந்து தனியார் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளன. இது தவிர முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
போகம்பர சிறைச்சாலை 138 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் பல்லேகலையில் உள்ள புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது.
போகம்பர சிறைச்சாலை தற்போது பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
போகம்பர சிறைச்சாலை கட்டப்படுவதற்கு முன்னர், இலங்கை பிரித்தானியர்களின் காலனியாக மாறிய பின்னர், தற்போதைய கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள ஹெங்மேன்ஸ் ஹில் (Hangmans Hill) என்ற மலைப்பாதையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1876ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போகம்பறை ஏரியை நிரப்பி சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.
அரசாங்க திணைக்களத்தின் மூலம் அப்போது சிறைச்சாலை மற்றும் காவல் துறையின் பிரதான ஆணையாளராக இருந்த என்.ஆர். சோண்டர்ஸின் மேற்பார்வையில் இருந்தது. இந்த சிறைச்சாலை 92 கைதிகளின் உழைப்பில் 4 இலட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு சிறைச்சாலைகளில் போகம்பறர சிறைச்சாலையும் ஒன்று. பரப்பளவு மற்றும் பாதுகாப்பில் இலங்கையின் இரண்டாவது இடத்தில் இருக்கும் போகம்பர சிறைச்சாலையில் ஒரே நேரத்தில் மூவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம். 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கிலாந்து எடிம்பரோ ராணி விக்டோரியாவின் கிரீடத்தின் வடிவில், பிரான்சின் பரிஸ் பஸ்டில் கோட்டையைப் போன்றே கட்டப்பட்டது. இது 556 அடி நீளமும், 144 அடி அகலமும், 102 அடி உயரமும் கொண்டது.
இது 408 கைதிகளுக்குப் போதுமான 1080 கன அடி (10×12×9) கொண்ட 328 அறைகளைக் கொண்டுள்ளது.
போகம்பர சிறைச்சாலை ஒரு கட்டடக்கலை அடையாளமாகும். இது ஆசியாவிலேயே மிக நீளமான கட்டடமாகும். இங்கு 1876 முதல் 1975 வரை 524 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1975ஆம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் நாட்டையே உலுக்கிய முப்பதாவது கொலைக் குற்றவாளிகளான டபிள்யூ.ஜி.ரிச்சர்ட் மற்றும் டி.எம்.ஜயவர்தன ஆகிய இரு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர், போகம்பர சிறைச்சாலையில் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
எஹலேபொல குமாரிஹாமி நீரில் மூழ்கி சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடமும் இந்த சிறை வளாகத்திலேயே உள்ளது.
மேலும், உத்துவன்கன்தே சரதியல், மரு சிரா, கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி சில்வா போன்ற பிரபலங்களும் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இதே போன்று உதுவன்கன்தே சரதியல், மரு சிறா போன்றவர்களும் கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி. சில்வா போன்ற பிரபல்யமான மனிதர்களும் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சிறைச்சாலையாக செயற்படுகின்ற காலத்தில் அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, புளொக் கல் உற்பத்தி, பூ வளர்த்தல், சவர்க்காரம் செய்தல் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில்களும் அங்கு சிறைச்சாலையின் நலன்புரிப் பிரிவால் இங்கு செயற்படுத்தப்பட்டிருந்தன.
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் !
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் !
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவில்லை.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினைகளாகவே கடைப்பிடித்து வந்தனர்.
அவர்கள் தமிழ் சமூகத்துக்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் உள்நோக்கம் கொண்ட சுயஇலாபம் கொண்டதாகும்.
அது ஜனாதிபதி முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி, அதன் பின்பு ஓர் உத்தரவாதத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும். பொது வேட்பாளர் என்பது ஒரு பொய்த்தனம்.
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !
இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளிலுள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, மே மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறுகின்ற சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு பங்கேற்கின்றது.
இந்த தூதுக்குழுவில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2 பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கான குழுவின் 8 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், இலங்கை தூதுக்குழுவின் பங்கேற்பு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்குமான முக்கிய தளமாக இது அமையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை
தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் , வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்படுகின்றன.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள வீட்டில் தூங்க சென்ற சமயம் வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.
அயல் வீட்டில் தூங்க சென்ற பெண்ணின் மகள் மறுநாள் வீட்டிற்கு சென்ற வேளை தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார்.
அது தொடர்பில் அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து , அயல் வீட்டார் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்
தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பகுதிக்கு சனிக்கிழமை(04) நேரில் விஜயம் செய்து அப்பகுதி மீகவர்களின் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
சுருக்குவலைப் பயன்படுத்துதல் கிழக்கில் மாத்திரமல்ல நாடு பூராகவும் பரந்துபட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. நான் செல்லும் இடம் எனலாம் அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரையில் சுருக்குவலைப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன்.
அதுபோல் மட்டக்களப்பு வாவியிலும் தொழில் செய்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாத்திற்குள் ஒரு குழுவை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்கள். அதனை வைத்துக் கொண்டு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையாகும். இது தொடர்பில் நாம் போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதுபோல் சட்டநடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் முழு நட்பிக்கை வத்து முயற்சிகளை எடுத்துள்ளோம்.
தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்கள் தொழிலுக்கு வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் கூடிக் கதைக்கலாம் என அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமிருந்தும், புதுச்சேரி முதலமைச்சரிடமிருந்தும் எனக்கு அமைப்பு வந்திருந்தன. அதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம்.
30 வருடங்களாக் நான் சொல்லி வந்தவிடையம் அவைரும் அறிந்ததே. அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமையை ஆரம்பித்ததனூடாகத்தான் தமிழர்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நான் மிக நீண்ட காலமாக சொல்லி வந்தேன். அதனை “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் அதனை யாரும் கேட்கவில்லை.
ஆனால் தற்போது அதுபற்றி பலரும் முணு முணுக்கின்றார்கள். அவ்வகையிலாவது அது நல்லவிடையமாகும். யாரும் இவற்றை எதிர்க்கும்போதும், அதனை ஆதரிக்கும்போதும் உண்மைத் தன்மையாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மைத்தன்மையாக முன்வருவார்களேயானால் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமராச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள்.
இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது வாக்குகளை உங்களுக்குத் தலராம் எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமே தவிர வெறுமனே பொ வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து ஆகும்.
புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என பார்த்தால் கடந்த கால தமிழ் அரசியல் மருந்துக்குத்தான் வலி என்ற அரசியலை முன்னெடுத்திருந்தனர். அது என்ன நிலமையில் மக்களைக் கொண்டு விட்டுள்ளது என்பதை புரிகின்றது. எனவே புண்ணுக்குத்தான் வலி இதனை தமிழ் மக்களும் சரிவர உணர்ந்து யார் தமது பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரழ்வததான் சரியானது என தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் – பசில் இன்று சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் இந்த சந்திப்பு கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இறுதியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
வெளியக தலையீடற்ற பொறிமுறையை நிறுவுவதிலும் அதிகாரங்களைப் பகிர்வதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் அலி சப்ரி
(நா.தனுஜா)
ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது:
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுமார் 72 வருடகாலமாக நெருங்கிய நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. இந்நட்புறவானது அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நானும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவும் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தோம்.
இதன்போது கடந்த காலங்களில் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், ஜப்பான் வெளிப்படுத்திய உடனிற்பு மற்றும் வழங்கிய உதவிகளுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோன்று வெளியகக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பான் வழங்கிவரும் பங்களிப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி என்பவற்றுக்கும் நன்றி கூறுகிறேன்.
அதேபோன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், கடன் உறுதிப்பாட்டை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன்.
இன்றளவிலே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மாத்திரம் மீட்சியடையவில்லை. மாறாக, இம்மீட்சியானது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்குள் கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்திசெய்யப்படுமென எதிர்பார்க்கின்றோம்.
அதேவேளை இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பன குறித்த அமைச்சர் யொகோ கமிகவா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இலங்கையில் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களையும், மின்சாரம், உட்கட்டமைப்பு, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீட்டுத் திட்டங்களையும் ஆரம்பிக்குமாறு நான் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இலகு ரயில் சேவைத்திட்டத்தையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியிருக்கிறோம்.
மேலும், ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் யொகோ கமிகவாவுக்கு விளக்கமளித்ததுடன், அவற்றை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார்.
சடுதியாக குறைவடைந்துள்ள இலங்கையின் சனத்தொகை – மத்திய வங்கி அறிக்கை
இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.
மக்கள்தொகை குறைப்பு சதவீதம் பூஜ்யம் மற்றும் ஆறு சதவீதம்.
இதனால் பெண் மக்கள் தொகை எழுபதாயிரமும், ஆண் மக்கள் தொகை எழுபத்து நாலாயிரமும் குறைந்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதாக கூறும் பேராசிரியர், இறப்பு எண்ணிக்கையும் 1447 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகரிப்பு ஒரு சதவீதமாக எட்டு சதவீதம் ஆகும்.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளது.
கடன் மறுசீரமைப்பை பூர்த்திசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயார் - இலங்கையிடம் சீனா உத்தரவாதம்
(நா.தனுஜா)
கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கைக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
ஜோர்ஜியாவின் ட்பிலிஸி நகரில் 2 - 5ஆம் திகதி வரை நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக ஜோர்ஜியா சென்றிருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அங்கு பல்வேறு உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்திவருகின்றனர்.
அதன் ஓரங்கமாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், சீனாவின் பிரதி நிதியமைச்சர் லியோ மின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி செயற்றிட்டம், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை பூர்த்தி செய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீன பிரதி நிதியமைச்சர் லியோ மின் உறுதியளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதில் சீனா கொண்டிருக்கும் வலுவான நிலைப்பாட்டையும் அவர் மீளுறுதிப்படுத்தினார்.
அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் யிங்மிங் யாங்குடனான சந்திப்பின்போது 2024 - 2028ஆம் ஆண்டு வரையான புதிய ஒத்துழைப்பு செயற்றிட்டம் குறித்தும், நுண்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஆசிய அபிவிருத்தியின் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு பொருளாதாரத்திலும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையிலும் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
OnmaxDT பிரமிட் திட்டத்தின் ஊடாக பண மோசடி செய்த ஆறு பேருக்கு பயணத்தடை!
ஒன்மேக்ஸ் டிடி (OnmaxDT) பிரமிட் திட்டத்தின் ஊடாக பணமோசடி செய்த ஆறு பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீதுவ, திஸ்ஸமஹாராம, லுனுகம்வெஹர ரன்ன, அகுனுகொலபலஸ்ஸ, மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஆறு பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் நிதி அமைச்சராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இருந்த காலகட்டத்தில், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நினைவுகூர்ந்தார்.
அத்துடன், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக பேணுவது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.
மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும்
அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் பயணம் மற்றும் தரைவழிப்பயணம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான படகுச் சேவை இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பு வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், அதனை நிறைவேற்றி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் என்று சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
நில வழித்தட திட்டத்திற்கு மேலதிகமாக தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது உட்பட எரிசக்தி துறையின் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் எண்ணெய் குழாய் இணைப்பதே இந்தியாவின் நோக்கமாகும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
https://akkinikkunchu.com/?p=275707
உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள்
உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள்
இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி திருமதி பிரவீனா கலையமுதன் உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
அதேபோல யாழ்ப்பாண தமிழ்த் தேசிய உணர்வாளன் உமாகரன் ராசையா அவரும் உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் - கோ. கருணாகரம் எம்பி
13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் - கோ. கருணாகரம் எம்பி
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றார் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.