உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - சமூகம் மற்றும் மத நிலையம் வேண்டுகோள் - முக்கிய சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச உதவியை பெறவேண்டும் என தெரிவிப்பு
Published By: RAJEEBAN 19 APR, 2024 | 05:53 PM
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல் பொருளாதார சமூக கலாச்சார பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது.
சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது
உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர் தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான சம்பவம் என குறிப்பிடலாம்.
அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும்.
சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும் குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக .
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும்.
உயர்நீதிமன்றம் நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள் அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.
உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.
இதேவேளை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார்.
உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர் நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
முக்கிய சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.