சட்டத்தின் பெயரால் சர்வாதிகாரம்
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சபாநாயகர் கையெழுத்திட்டதிலிருந்து சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டத்தின் நோக்கம் அதன் சரத்துகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தச் சட்டவரைவு தொடர்பில் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை இப்போதிருக்கும் சூழலில் இப்படியொரு சட்டவரைவு தேவையா என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துர்நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாக ஆளும் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். 'குட்டைப்பாவாடைகளுடன் பெண்கள் நடமாட முடியாத சூழல் இருக்கின்றது. அப்படி அவர்கள் நடமாடுவதை படமெடுத்து சமூகவலைத் தளங்களில் பகிர்கின்றனர். பெண்கள் குளிப்பதைக்கூட படமெடுத்து சமூகவலைத்தளங்களில் தரவேற்றுகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த இந்தச்சட்டம் அவசியம்' என்று நாடாளுமன்றத்தில் இந்தச்சட்டவரைவு மீதான விவாதத்தின் போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந் தானந்த அளுத்கமகே கூட உரையாற்றியிருந்தார். அவர் குறிப்பிடுவதைப்போன்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க எமது நாட்டில் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் ஏற்கனவே உள்ளன. அவற்றை தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்றவாறு சர்வதேச தரத்துக்கு மாற்றியமைத்தாலே போதுமானது. இவ்வாறான சிறப்பான சட்டம் ஒன்று அதற்குத் தேவையில்லை.
நடைமுறையில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் களைவதற்குப் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் இருக்கத்தக்கதாகவே, இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சிறப்புச் சட்டத்தின் விளைவை 3 தசாப்தங்களாக இந்த நாட்டின் மூவின மக்களும் அனுபவித்திருக்கின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு வழங்கிய கட்டுப்பாடற்ற அதிகாரம், அந்தச் சட்டத்தை வைத்து அவர்கள் ஆள்வோரின் நலனுக்காக எவ்வாறெல்லாம் செயற்பட்டார்கள் என்பதை அறிய முடியும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் அவ்வாறானதொன்றே. ஆட்சியாளர்களின் தேவைக்கே அது பயன்படுத்தப்படப் போகின்றது. ஆட்சியாளர்களுக்கு விரும்பத்தகாத சகல பதிவுகளும் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கப்படப் போகின்றன. அவ்வாறான பதிவர்கள் குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் - முற்போக்குவாதிகள் ஊடகர்கள் கைதாகப் போகின்றனர். இந்தச் சட்டத்தின் ஊடாக அரச தலைவரால் 5 பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்படும். அந்த ஆணைக்குழுவே, ஒவ்வொற்று சமூகவலைத்தளப் பதிவுகள் தொடர்பிலும் தீர்மானிக்கும் உரித்தைக்கொண்டிருக்கப்போகின்றது. அரச தலைவரால் நியமிக்கப்படும் ஓர் ஆணைக்குழு எப்படி இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற பெயரில் இயங்கிய ஆணைக்குழுக்கள் ஆட்சியாளர்களின் தாளத்துக்கு ஆடாவிட்டால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது பரகசியமானது. இப்படியான நிலையில் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணையாளர்கள் சமூகஊடகங்களின் பதிவுகளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணைக்குழு, சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்களை சவாலுக்கு உட் படுத்தமுடியாது. அதாவது மேன்முறையீடு செய்யமுடி யாது. நீதிமன்றப் பொறிமுறையை நாடமுடியாது. இது மிகமோசமானதொரு நடைமுறையே. இப்படியான சட்டத்தையே நாடாளுமன்றத்தில் தலைகீழாக நின்று ஆளும் தரப்பு நிறைவேற்றியிருக்கின்றது. மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து வீதிக்கு இறங்காத வரையில் ஆட்சியாளர்கள் இதை விட மோசமாக இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்.
https://newuthayan.com/article/சட்டத்தின்_பெயரால்_சர்வாதிகாரம்