இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது - காமினி லொகுகே குற்றச்சாட்டு
Published By: VISHNU
28 APR, 2024 | 11:00 PM(இராஜதுரை ஹஷான்)
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. அரச நிறுவனங்களின் ஊழியர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளோம்.பெருமளவான தொழிலாளர்களை உள்ளடக்கிய வகையில் மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை உறுதிப்படுத்துவோம்.மே தின கூட்டத்தின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பி;ல் அவர் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.நட்டடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.இலாபமடையும் நிறுவனங்களினதும்,நட்டமடையும் நிறுவனங்களினதும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியறுத்தியுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் பதிலளித்துள்ளது.2014 ஆம் ஆண்டு எமக்கு துரோகமிழைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிமைத்து நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்தார்.இறுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேற்றினார். நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர கட்சியின் நிலைமை கவலைக்குரியது என்றார்.