போதைப்பொருள் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை வெளிப்படுத்தும் பிரசாரம் ஆரம்பம் - டிரான் அலஸ்
Published By: VISHNU 29 APR, 2024 | 06:24 PM
(நா.தனுஜா)
'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (30) ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள், பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் கொலைகாரர்களைக் கொல்வது பாவம் அல்ல என கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தையடுத்து, அவர் பதவி விலகவேண்டும் எனவும், அன்றேல் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் டிரான் அலஸின் நிர்வாகக்குழு உயரதிகாரி ஒருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரும் கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல சட்டத்தரணிகள் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகி, பல மில்லியன் ரூபாயைப் பெற்றிருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தே இந்த முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகிளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.