அரசியல் அலசல்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 16
புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்
புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாயகத்தில் கட்சிகளுக்குள் காணப்படும் அணிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பும் பிரதிபலித்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இரண்டு அணிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர் தரப்பில் ஆதரவு அணிகள் உண்டு. எனினும் சிறீதரன் அணிக்கு ஆதரவானவர்கள் தனக்கு எதிராகச் செயல்படுவது குறித்து சுமந்திரன் அதிகம் எரிச்சலடைந்து இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவுதான் அவர் அண்மையில் வழங்கிய ஒரு நேர்காணல் ஆகும். ” கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா? ” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கின்றார். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் சிலர் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்த முற்படுவதை சுமந்திரன், கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஓர் அரசியல்வாதி புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் மீது இவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பது இதுதான் முதல் தடவை.
சுமந்திரன் கூறுவதுபோல புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவர் இரண்டு சிங்களக் கட்சிகளின் பதிவுகளை வாங்கி இருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அந்த முதலீட்டாளரின் அலுவலர் என்று கருதப்படும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் சில கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடியும் இருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த போகிறோம் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்கப் போகிறோம் என்றும் அவர் கதைத்திருக்கிறார். ஏனைய கட்சிகளை ஒருங்கிணைப்பது அவருடைய நோக்கம் என்று ஊகிக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி பின்னர் தொடர்வதாகத் தெரியவில்லை.
இவ்வாறு கட்சிகளை வாங்குவது; கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி உதவி செய்வது; கட்சிப் பிரமுகர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அழைத்துக் கொண்டாடுவது; அல்லது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் கட்சி பிரமுகர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; தாயகத்தில் நிகழும் போராட்டங்களுக்கு நிதி அனுசரனை புரிவது; வெளிநாடுகளில் பிரகடனங்களை வெளியிடுவது… போன்ற பல்வேறு வழிகளிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்து அரசியலின் மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது.
இது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சீக்கியர்கள், சில ஆப்பிரிக்க சமூகங்கள், ஆர்மீனியர்கள் போன்ற புலப்பெயர்ச்சி நடந்த எல்லாச் சமூகங்களிலும் இது ஒரு அரசியல் யதார்த்தம். புலம்பெயர்ந்த யூதர்கள் கடந்த நூற்றாண்டில், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதோடு நவீன அரசியலில் புலம்பெயர் சமூகங்களின் யுகம் துலக்கமான விதங்களில் மேலெழுந்து விட்டது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஈழப் போரின் காசு காய்க்கும் மரமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராடுவது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் கூர்முனை போல காணப்படுவது அவர்கள்தான். ஐநா மைய அரசியலில் அவர்கள்தான் பிரதான செயற்பாட்டாளர்கள்.
அதுமட்டுமல்ல தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி உதவிகளைச் செய்து வருகின்றது. 2009 க்கு பின் தமிழ் மக்கள் தமது சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகமே உதவியது. நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாயகத்தில் உள்ள மக்களை தோல்விகளிலிருந்தும் காயங்களில் இருந்தும் அவமானத்திலிருந்தும் இழப்புணர்விலிருந்தும் மீட்டெடுத்ததில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்குக் கணிசமான பங்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகால அரசியலில் தாயகத்தில் இடம்பெற்ற பெரும்பாலான எழுச்சிகள் போராட்டங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமே உண்டு. எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்… போன்ற எல்லாவற்றின் பின்னணியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் உண்டு.
அதுபோல 2009 க்கு முன்பு சுனாமியின் தாக்கத்திலிருந்து தாயகம் மீள்வதற்கும் 2020 க்கு பின் பெருந்தொற்று நோய்க்காலத்திலும் அண்மை ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பெருமளவுக்கு உதவியது.
அதேசமயம் தாயகத்து அரசியல் நிலைமைகளின் மீது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முற்படுகிறது என்ற குற்றச்சாட்டிலும் உண்மைகள் உண்டு. கள யதார்த்தத்துக்கு வெளியே பாதுகாப்பாக இருந்து கொண்டு, தாயகத்தில் தன்னியல்பாக எழுச்சி பெறும் செயற்பாட்டாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுவது; காணாமல் ஆக்கப்பட்ட வர்களுக்காகப் போராடும் சங்கங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்தியது; பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை ரிமோட் கொண்ட்ரோல் செய்ய முற்படுவது; தாயகத்தோடு கலந்தாலோசிக்காமல் ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரகடனங்களை தயாரிப்பது… போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் புலம்பெயர்ந்த தரப்பில் உள்ள சில தனி நபர்களின் மீதும் சில நிறுவனங்களின் மீதும் உண்டு.
சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறுவது போல புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பு தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கின்றது. அதற்கு முதலாவது காரணம், தாயகத்தை விட்டுப் பிரிந்து வாழ்வதால் ஏற்படும் பிரிவேக்கம். இரண்டாவது காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் காணப்படும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான அரசியல் சூழல். மூன்றாவது காரணம் சீனச்சார்பு இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் மேற்கத்திய நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவிப்பது, வளர்த்து விடுவது.
இது போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தை விடவும் அதிகம் உணர்ச்சிகரமாகவும் எழுச்சிகரமாகவும் சுதந்திரமாகவும் போராடக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான தீவிர நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் சுமந்திரனை தேசிய நீக்கம் செய்யும் ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கிறார்கள். அவர் வெளி நாடுகளுக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்புக்கு காட்டுகிறார்கள். இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவில் அவர்கள் சுமந்திரனை ஒரு வில்லனாகப் பார்க்கிறார்கள். கட்சி சுமந்திரனை நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடும் ஆவேசத்தோடும் காணப்படுகிறார்கள். இவற்றால் சுமந்திரன் எரிச்சலடைந்ததன் விளைவே மேற்சொன்ன நேர்காணல் ஆகும்.
புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்ய வரும்பொழுது அரச புலனாய்வுத்துறை அவர்களை கண்காணிக்கும். அக் கண்காணிப்பை மீறி அவர்கள் எதையும் செய்ய முடியாது. அவ்வாறு புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தமிழ் முதலீட்டாளர்கள் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள் என்று எடுத்த எடுப்பில் தீர்ப்புக் கூறுவது சரியா? இதே விதமான குற்றச்சாட்டுக்கள்தான் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர்கள் மீதும் வைக்கப்பட்டன. 2009க்குப் பின்னரும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டில் சுதந்திரமாக முதலீடு செய்வதில் உள்ள அரசியல் ராணுவ வரையறைகளை அது உணர்த்துகின்றது. அது இன ஒடுக்குமுறையின் ஒரு பகுதி தான். இந்த இடத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் கதைக்கலாமே தவிர ஒடுக்கப்படும் தரப்பு புலனாய்வுத் துறையின் முகவராக செயல்படுகிறது என்ற பொருள்பட யாரும் கதைக்க முடியாது.
தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்தால் அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் என்பது சம்பந்தர் வழமையாகக் கூறும் ஒரு வாதம். இது எப்படியிருக்கிறது என்று சொன்னால், குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைப் பார்த்து நீ வாய் காட்டியபடியால்தான் உன்னுடைய கணவன் உன்னைத் தாக்குகிறான் என்று கூறுவதைப் போன்றது. இங்கு குடும்ப வன்முறை பிழை என்ற நிலைப்பாட்டைதான் முதலில் எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இப்பொழுது தனிநாடு கேட்கவில்லை. தாங்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளைத் தான் கேட்கிறார்கள். தாங்கள் ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பது குற்றமா? அப்படிக் கேட்டால் அது சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தும் என்று சொன்னால் சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தாமல் இருக்க எப்படிப்பட்ட அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்? அதற்கு பெயர்தான் நல்லிணக்கமா?
கடந்த 15 ஆண்டுகளிலும் சம்பந்தர் அப்படிப்பட்டதோர் அரசியலுக்குத்தான் தலைமை தாங்கினார். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐநாவின் நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தின் பிரகாரம் சம்பந்தர் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தார். அதற்காக அவர் அதிகமாக விட்டுக் கொடுத்தார். அந்த உத்தேச யாப்பின் இடைக்கால வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா என்ன சொன்னார் தெரியுமா? சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவரை இனிக் காண முடியாது. சம்பந்தரின் காலத்தில் ஒரு தீர்வைப் பெறவில்லை என்றால் பிறகெப்பொழுதும் பெற முடியாது என்ற பொருள்பட டிலான் பெரேரேரா நாடாளுமன்றத்தில் பேசினார். அதில் உண்மை உண்டு சம்பந்தர் அந்தளவுக்கு அடியொட்ட வளைந்து கொடுத்தார். ஆனால் அந்த விட்டுக்கொடுப்பின் விளைவாக கூட்டமைப்பு எதைப் பெற்றது?
நிலைமாறகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதைக் காட்டிக்கொடுத்தார். 2018, ஒக்டோபர் மாதம் அவர் ஒரு யாப்புச்சதிப் புரட்சியில் ஈடுபட்டு நிலைமாறு கால நீதியைத் தோற்கடித்தார். இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது சுமந்திரன் பின்வரும் பொருள்படக் கூறினார்… கடந்த ஆறு ஆண்டுகளாக (அதாவது 2015 இலிருந்து) ஒரு பரிசோதனையை முன்னெடுத்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அதுதான் உண்மை. சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை மகிழ்விக்க முடியவில்லை.
அதுதான் இலங்கைத்தீவின் யதார்த்தம். இப்படிப்பட்டதோர் பின்னணியில் ஒடுக்குமுறையைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மக்களின் தீவிரத்தையல்ல. இக்கட்டுரையில் முன் சொன்ன உதாரணத்தைப் போல குடும்ப வன்முறை சரியா பிழையா என்ற நிலைப்பாடு தான் இங்கு முக்கியம். மனைவி வாய் காட்டினாரா அல்லது ருசியாகச் சமைக்க வில்லையா என்பது இங்கு விவாதமே அல்ல.
எனவே புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் ஒரு பகுதி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கிறது என்பதற்காகவோ அல்லது தாயகத்து அரசியலின் மீது அளவுக்கதிகமாக செல்வாக்கு செலுத்த விளைகிறது என்பதற்காகவோ அவர்களை தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள் என்று கூறுவது யாருக்கு இறுதியாகச் சேவகம் செய்யும்?
தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் என்பது புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கியதுதான். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தின் நீட்சியும் அகட்சியும் தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். ஈழத் தமிழர்களுக்கு இரண்டு சிறகுகள் உண்டு. ஒன்று தமிழகம் மற்றது புலம்பெயர்ந்த தமிழ் சமூகம். இதில் ஒரு சிறகை வெட்டினாலும் ஈழத் தமிழர்கள் பறக்க முடியாது.
தேர்தல் காலங்களில் கட்சிக்குக் காசை வாரி வழங்கியது போலவே கட்சிக்குள் அணிகள் தோன்றும் போது அந்த அணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கையாளப் பார்ப்பார்கள் என்பது ஒர் அரசியல் யதார்த்தம். கட்சி தனக்குள் உடையும் பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல அரச புலனாய்வுத் துறையும் அதற்குள் புகுந்து விளையாடும். எனவே இதுவிடயத்தில் முதலில் விமர்சிக்க வேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களை அல்ல. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு மூத்த கட்சியை இரண்டாக உடைத்த கட்சிக்காரர்களைத் தான் விமர்சிக்க வேண்டும்.
பொது வேட்பாளர் இனவாதத்தைத் தூண்டுவாரா? நிலாந்தன்!
ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர் இனவாதத்தைத் தூண்டிவிடுவார், அதன்மூலம் ராஜபக்சக்களையும் அவர்களின் பொது வேட்பாளராக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவையும் வெல்ல வைப்பதற்காக அவர் மறைமுகமாக உதவுவார் என்ற ஒரு வாதம் சில அரசியல்வாதிகளினாலும்,யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில ஊடகங்களிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றது.ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்களிலேயே அது தொடர்பாக எழுதப்படுகின்றது.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் இனவாதத்தை தூண்டுவாரா?அவர் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிச் செல்லும் வாக்குகளை கவர்வதன்மூலம்,அவரைத் தோற்கடித்து, அவருக்கு எதிராக நிற்கக்கூடிய மற்றொரு பிரதான சிங்கள வேட்பாளரை வெல்லவைக்கும் உள்நோக்கத்தோடு களம் இறக்கப்படுகின்றாரா?
இக் கேள்விக்கு விடையாக சில கேள்விகளையே திருப்பிக் கேட்கலாம்.சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது உறங்கு நிலையிலா உள்ளதா? அது இனிமேல்தான் தூண்டி விடப்படுவதால் விழித்தெழப்போகின்றதா ? .அப்படி என்றால் கிழக்கில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? குருந்தூர் மலையில் மரபுரிமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பது யார்? வெடுக்கு நாறி மலையில் மரபுரிமைச் சொத்துக்களை ஆக்கிரமிப்பது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டத்தை புதிய வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது யார்? இனப் பிரச்சினைக்கு தீர்வாக 13ஐக் கடக்க கூடாது என்று சிந்திப்பது யார் ?
2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறையும் அப்படியே உள்ளன.இனவாதம் உறங்கு நிலைக்குச் சென்று விட்டது என்று கூறும் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் ஒடுக்குமுறையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார் என்றுதான் ஏடுத்துக்கொள்ள வேண்டும். எனவே சிங்கள பவுத்த பெருந்தேசிய வாதத்தை இனிமேல்தான் ஒரு தமிழ் பொது வேட்பாளர் உசுப்பேத்த வேண்டும் என்பதல்ல.அது ஏற்கனவே ஆக்கிரமிப்பு மனோநிலையுடன் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
கடந்த 2015இல் இருந்து 2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் சம்பந்தர் சிங்கள மக்களை கோபப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் விட்டுக் கொடுத்தார் ? தமிழ் மக்களுக்கு அது சமஸ்டிப் பண்புடைய ஒரு தீர்வு என்று கூறினார். ஆனால் சிங்கள மக்களுக்கு சிங்கள கட்சிகள் அது ஒற்றையாட்சிக்குட்பட்டது என்று கூறின. அதற்கு எக்கிய ராஜ்ய என்று ஒரு புதுப் பெயரை வைத்தார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரிக்கப்படாத,பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் என்றெல்லாம் சம்பந்தர் வார்த்தைகளைத் தெரிந்து எடுத்துப் பேசினார். விளைவாக அவருக்கு என்ன கிடைத்தது? எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகை கிடைத்தது. மற்றும்படி தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது?
இங்கு சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் தோற்கவில்லை. செல்வநாயகம் தோற்றிருக்கிறார். அமிர்தலிங்கம் தோற்றிருக்கிறார். அதற்கு முன்பு ராமநாதன் தோற்றிருக்கிறார். கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்காக தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த எல்லா முயற்சிகளுமே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன.இவ்வளவு தோல்விகளுக்கு பின்னரும் ஒரு புதிய பரிசோதனையைச் செய்யலாம் என்று சிந்தித்தால்,அது சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டிவிடும் என்று சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூறுகின்றன.
அவர்கள் உண்மையாகவே இனவாதம் தூண்டி விடப்படும் என்று அஞ்சுகிறார்களா?அல்லது அவர்கள் டீல் செய்ய விரும்பும் அரசியல்வாதி தோற்றுவிடுவார் என்று அஞ்சுகிறார்களா? அப்படியாயின் அதற்கும் ஒரு தீர்வு உண்டு.ஓர் அரசியல் விமர்சகர் கூறுவதுபோல,தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பு வாக்கை பொது வேட்பாளருக்கும் இரண்டாவது விருப்பு வாக்கை தங்களோடு உடன்படிக்கைக்குவரும் ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வழங்கலாம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த சிங்கள வேட்பாளர் அனைத்துலகக் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களோடு ஒரு பகிரங்க உடன்பாட்டுக்கு வர வேண்டும். வந்தால் அவருக்கு தமிழ் மக்கள் தங்களுடைய இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கலாம்.பொது வேட்பாளரைக் காட்டிப் பயமுறுத்தும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இதற்குப் பதில் கூறட்டும்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கித் திருப்பி,அதன் மூலம் இவர்கள் தமது சொந்த வாக்காளர்களுக்குப் பெற்றுக் கொடுத்த தீர்வு என்ன?
கடந்த 15 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராக என்ற நிலைப்பாட்டில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள்.அவ்வாறு ராஜபக்ஷைகளுக்கு எதிராக என்று சிந்தித்த ஒரே காரணத்துக்காக,2010ல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள்.அவர் ராஜபக்சகளின் ஆணையை ஏற்று யுத்தத்தை வழி நடத்தியவர்.அதன்பின் அதே ராஜபக்சகளின் அமைச்சரவையில் இறுதிக்கட்டப் போரில் பதில் பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.அதன் பின் 2019 ஆம் ஆண்டு சஜித்துக்கு வாக்களித்தார்கள்.
இவ்வாறாக மூன்று தடவைகளும் ராஜபக்சவுக்கு எதிராக என்ற ஒரே புள்ளியில் தமிழ் மக்கள் ஒப்பீட்டளவில் ஒற்றுமையாக நின்று முடிவெடுத்தார்கள். ஆனால் இங்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் ராஜபக்சக்கள் மட்டும் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை. இலங்கைத்தீவில் இன ஒடுக்கு முறை என்பது நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்று.குறிப்பிட்ட காலகட்டத்தில் அதற்கு தலைமை தாங்கும் நபர்களை,குடும்பங்களை வைத்துக்கொண்டு அதனை அந்த குடும்பங்களின் குற்றமாக மட்டும் கருதக்கூடாது. அது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை. சிங்கள பௌத்த அரசு இயந்திரம் என்ற கட்டமைப்பு அதை முன்னெடுக்கின்றது. எனவே இதில் ராஜபக்ச என்ற ஒரு குடும்பத்துக்கு எதிராக மட்டும் சிந்திப்பது என்பது அதன் கட்டமைப்பு சார்ந்த, நிறுவனமயப்பட்ட பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதுதான்.
அதாவது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் ஒரு புதிய யாப்பு இன்றுவரை உருவாக்கப்படவில்லை. அதை உருவாக்க எந்தத் தலைவராலுமே முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் அந்தக் கட்டமைப்பின் கைதிகள்.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,இம்முறை ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு. படித்த ஆங்கிலம் தெரிந்த நடுத்தர வர்க்கம் சிலசமயம் அவருக்கு வாக்களிக்கக்கூடும். ஆனால் தமிழ்க் கூட்டு உளவியல் எனப்படுவது அவருக்கு நெருக்கமாக இல்லை.அடுத்தது சஜித்.ஓய்வு பெற்ற படைத்தளபதிகள் இப்பொழுது அவருடைய கட்சியில்தான் சேர்கிறார்கள்.அவர் தெளிவாகக் கூறுகிறார், 13 பிளஸ்தான்,அதைத் தாண்டிச் செல்லமாட்டேன் என்று. இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையை அங்கீகரித்து ஒரு புதிய யாப்பை உருவாக்க அவர் தயாரில்லை. அடுத்தது அனுர.அவரிடமும் தீர்வு இல்லை. பொருத்தமான ஒரு தீர்வை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய அவர் தயாரில்லை. சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர் தயாரில்லை.
கடந்த 15 ஆண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை வெற்றுக் காசோலைகளாக பயன்படுத்தியதே ஒரு அரசியல் தவறு. கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் காணப்படும் தமிழ் மக்கள் எல்லாப் பேரரசுகளினதும் இழு விசைகளுக்குள் காணப்படுகிறார்கள்.பேரரசுகளின் போட்டோ போட்டிக்குள் தமிழ் வாக்குகளின் பேர பலம் அதிகமானது. 2015 ஆம் ஆண்டு அதுதான் நடந்தது. எனவே தமிழ் மக்களின் புவிசார் அமைவிடத்தைக் கருதிக்கூறின், தமிழ் வாக்குகள் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவற்றை வெற்றுக் காசோலையாக வீணாக்கலாமா?
https://athavannews.com/2024/1380098
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 14
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 13
“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”
“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”
— குசல் பெரேரா —
வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன்.
அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமிழர் அரசியலில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் தங்களது மக்களுடன் நிற்கத் தவறியதே மதத்தீவிரவாதத்தை அனுமதிக்கிறது.
இது உண்மையில் எங்கிருந்து ஆரம்பித்தது? 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததுடன் இது ஆரம்பித்தது. சமாதானத்தைப் பேசுவதற்காக வடக்கு — கிழக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவில் வாக்களித்து 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் “தமிழ் ஈழத்தை” வென்றெடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தது. “தமிழர்களுக்கு சமாதானம் இல்லை” என்று உரத்துக் குரலெழுப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையுடன் “தனியான தமிழ் அரசு” ஒன்றுக்காக மேற்குலகின் ஆதரவைத் திரட்டவும் வசதியாக “கடும்போக்கு சிங்கள பௌத்தவாதியான” ராஜபக்சவை பதவியில் அமர்த்துவதற்கு அந்த சமூகம் தீர்மானித்தது.
இந்த கர்வத்தனமான சிந்தனை “தமிழ் ஈழம்” என்ற பிரபாகரனின் வெறித்தனமான அபிலாசையின் வழியில் அமைந்தது. விடுதலை புலிகளினால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பு 50.29 சதவீத வாக்குகளுடனும் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான பெரும்பான்மையுடனும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது. வடக்கு — கிழக்கில் மாத்திரம் 10 இலட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள்.
கடும்போக்கு சிங்கள பௌத்த தலைவர் ஒருவர் எந்தளவு செலவானாலும் அதைப் பொருட்படுத்தாமல் இறுதிவரை போரை முன்னெடுப்பார் என்பதை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தெரிந்திருக்கவில்லை. 2002 பெப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை போரில் ஈடுபட்டு நன்கு அனுபவத்தைப் பெற்ற விடுதலை இயக்கப் போராளிகளை “நிருவாகிகள்” பதிவிகளுக்கு மாற்றியது. வயதில் நாற்பதுகளின் நடுப்பகுதியிலும் ஐம்பதுகளின் முற்பகுதியிலும் இருந்த அவர்கள் போரில் சலிப்படைந்து சமருக்கு செயலூக்கத்துடன் தலைமைதாங்கும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.
நியூயோர்க்கில் 9/11 தாக்குதல் அரசு அல்லாத ஆயுதக்குழுக்கள் சகலதையும் உள்ளடக்கியதாக “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற சுலோகத்தின் கீழ் போர் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூக்கு வாய்ப்பைக் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்கவும் புலம்பெயர் தமிழர்கள் இருந்தார்கள். விடுதலை புலிகளும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட சுமார் 35 நாடுகளில் அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது.
2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோது உயிருடன் எஞ்சியிருந்த தமிழர்களுக்கு வன்னியின் மனித அவலமே மிச்சமாக இருந்தது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு அவர்களது எதிர்காலத்துக்கு எதையும் விட்டு வைக்கவில்லை. மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் விடுதலை புலிகளின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் போருக்கு பின்னரான குழப்பநிலையில் ஒரு அரசியல் தலைமைத்துவம் கூட இல்லாதவர்களாக கையறு நிலையில் இருந்தார்கள். வெறுமனே பெயரளவில் மாத்திரம் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுக்கு ஒத்தூதிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.
அதுவே போருக்கு பின்னரான வடக்கு — கிழக்கு. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக ராஜபக்சாக்களைத் தண்டிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை விரைந்து பற்றிப்பிடித்துக் கொண்டது. அந்த தீர்மானங்களே தமிழ் மக்களின் “அதிமுக்கியமான அரசியல் தேவை” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்து நின்றது.
அதேவேளை, போரின் முடிவுக்கு பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு களத்தில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் ஆணைக்குழ பொது விசாரணை அமர்வுகளை நடத்தியது. சிதறிப்போயிருந்த தமிழ்ச்சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின உடனடி மனக் குறைகளுக்கு தீர்வைக் கோரும் வாய்ப்பு அதன் மூலமாக உள்ளூர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்தது.
ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை:
———————————/
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டெம்பரில் சமர்ப்பித்த “இடைக்கால அறிக்கையில்” பல விடயங்களுக்கு மத்தியில் பின்வரும் முன்மொழிவுகளைச் செய்திருந்தது ;
(1) நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு ஒரு விசேட பொறிமுறை ( 2) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் (3) தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு அவ்வாறு விடுவிக்கப்பட்டதற்கான சான்றுப்பத்திரம் வழங்கப்படவேண்டும். மீண்டும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படக்கூடாது (4) அரசாங்க ஆதரவுடனான குடியேற்றங்களுக்கு தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படாது என்று தெளிவான கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவேண்டும்.(5) அதிமுன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்படவேண்டும்.
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ச விரோத அரசியலுக்கு இசைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான தங்களது செயற்பாடுகள் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சகல தீர்வுகளுடனும் கூடிய புதிய அரசியலைமைப்பு ஒன்றைத் தரும் என்று நம்பினார்கள். அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த மிகவும் அவசரமானதும் முக்கியமானதுமான முன்மொழிவுகளை அவர்கள் முற்றுமுழுதாக அலட்சியம் செய்தார்கள்.
வடமாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அநாவசியமாக முரண்பட்டுக் கொண்டார்கள். மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்னெடுத்து வடக்கு நிருவாகத்தை இராணுவமய நீக்கம் செய்வதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கி யிருக்கவேண்டும்.
முன்மொழிவுகளுக்கு
முக்கியத்துவமில்லை:
——————————-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கும் 2011 டிசம்பர் 16 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு 9 வது அத்தியாயத்தின் கீழ் 9.45 தொடக்கம் 9.74 வரையான பந்திகளில் காணப்பட்ட முன்மொழிவுகளை முற்றாக அலட்சியம் செய்தது. உனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை என்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அவதானங்களினதும் முன்மொழிவுகளினதும் ஒரு சுருக்கமாக அந்த பந்திகள் அமைந்திருந்தன.
8.193 பந்தியை கொழும்பு சிவில் சமூகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிச்சயமாக வலியுறுத்தியிருக்கவேண்டும். “சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு சிவில் நிறுவனமே பொலிஸ் திணைக்களம். அதனால் அரசின் பாதுகாப்புக்கு பொறுப்பான ஆயுதப்படைகளுடனான தொடர்புகளில் இருந்து பொலிஸ் திணைக்களம் பிரிக்கப்படவேண்டும் என்று அந்த பந்தியும் சிவிலியன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படைகளின் ஈடுபாடு படிப்படியாக நீக்கப்படவேண்டும் ; பாதுகாப்பு படைகளினால் தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை நியாயபூர்வமான கால எல்லை கொடுக்கப்பட்டு இல்லாமல் செய்யவேண்டும் என்று 9.171 பந்தியும் கூறுகின்றன.
மேற்குலகில் பெரிய ஆரவாரம் செய்ப்பட்டபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 14 வருடகால தீர்மானங்கள் வடக்கு — கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் கொண்டுவரவில்லை. மாறாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசியமான தேவைகளுக்கு முக்கியமானதாக இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் வடக்கு — கிழக்கு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கும் தாங்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் வேண்டி ஆர்ப்பாட்டம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
ராஜபக்சாக்களை தண்டிப்பதற்கு முன்னதாக “காணாமல்போன” தங்களது உறவினர் பற்றிய தகவல்கள் அந்த மக்களுக்கு அவசரமானவையாகும் முக்கியமானவையாகவும் இருந்தன. இழந்த தங்களது நிலங்களையும் அன்றாட வருமானத்துக்கான ஆதாரங்களையும் மீளப்பெறுவதில் அவர்கள் கடும் அக்கறை செலுத்தினார்கள்.
அன்புக்குரிவர்கள் எங்கே?
காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் தாய்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் ஒருபோதும் நினைக்கவில்லை. வடக்கு,கிழக்கில் சிவில் சமூகத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டி அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவும் முயற்சிகள் செயயப்படவில்லை.
2,495 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராடுவது என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் இல்லை. “எங்களது அன்புக்குரியவர்கள் எங்கே?” என்ற கேள்வியுடன் 2023 டிசம்பர் இறுதிவரை தொடர்ச்சியாக ஆறு வருடங்களும் ஒன்பது மாதங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது ஒன்றும் பகிடி இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த தாய்மாரையும் மனைவிமாரையும் மகிந்த ராஜபக்சவுக்கு பிறகு மூன்று ஜனாதிபதிகள் ஏழு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக அலட்சியம் செய்திருக்கிறார்கள். இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களில் 180 க்கும் அதிகமான தாய்மாரும் உறவினர்களும் கடந்த ஏழு வருடங்களில் இறந்துவிட்டதாக வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பிரகடனம் செய்த கடந்த ஆகஸ்ட் 30 காணாமல்போனேரின் உறவினர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அந்த ஏழு வருட காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் எங்கே போனார்கள்?
தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாது என்று கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழர்களின் நிலங்கள் சிங்கள சமூகத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு அலட்சியம் செய்திருக்கிறது அல்லது அரச ஆதரவுடன் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அனுசரணை செய்கிறார்கள்.
மன்னாரிலும் வடபகுதி கடல் பரப்பிலும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த அரசாங்கம் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. இடம்பெற்ற மோதல்களில் யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் பிரச்சினைகளும் மனக்குறைகளும் அதிகரிக்கின்றன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் தலைவருக்குமோ அவற்றைப் பற்றி அக்கறை கிடையாது.
அரசியல் அலட்சியத்தின் விளைவுகள்:
————————————————
வெட்கக்கேடான இந்த அரசியல் அலட்சியத்தின் விளைவுகளை வடக்கு, கிழக்கு தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள தெற்கின் இரு பொது வேட்பாளர்களை ஆதரித்த பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 பாராளுமன்ற தேர்தலில் சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வைக்காணும் உறுதிமொழியுடன் கூடிய விஞ்ஞாபனத்தை முன்வைத்து போட்டியிட்டது. கூட்டமைப்பில் இருந்து கூடுதல்பட்ச எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு,கிழக்கு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பெரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் சமஷ்டித் தீர்வொன்றுக்கு உறுதியான ஆணையைத் தந்தால் தெரிவு செய்யப்படவிருந்த விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறினார்கள். சமஷ்டித் தீர்வைப் பிரதான சுலோகமாகக் கொண்டு கூட்டமைப்பில் இருந்து 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். பதிவுசெய்யப்பட்ட 884, 326 வாக்குகளில் மொத்தம் 470, 542 வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தன. 45 ஆயிரம் வாக்குகளுடன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இருந்து ஒரேயொரு உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் இருவருடன் சேர்த்து எல்லாமாக கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள்.
ஒவ்வொரு பிரச்சினையிலும் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பிரமையுடன் செயற்பட்ட சம்பந்தன் — சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேலும் ஒரு ஐந்து வருடங்களை அதிகரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுடனும் வேதனையுடனும் தமிழ் மக்கள் கழித்தார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் அலட்சியத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பை 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். தெரிவுசெய்யப்பட்ட முன்னைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவரை இழந்த கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் மூலமும் ஒரேயொரு ஆசனமே கிடைத்தது.
வேறு மூன்று தமிழ்க்கட்சிகளில் இருந்து நான்கு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 327, 168 வாக்குகள் கிடைத்தன. 2020 ஆம் ஆண்டில் வாக்காளர்கள் தொகை பத்து இலட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்திருந்த போதிலும், 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குளையும் விட இது 143, 374 வாக்குகள் குறைவானதாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் அதன் மக்கள் ஆதரவின் சரிவைத் தடு்க்க முடியவில்லை. தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற அரசியல் போக்கை மாற்று அரசியல் அணியொன்று சவாலுக்கு உட்படுத்தாத நிலையில், சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவத்துக்கு ஒரு மாற்றாக இந்து சார்பு நகர்வொன்றின் மூலம் மாற்றம் பிரதிபலித்திருக்கிறது போன்று தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியில் கூட “மக்கள் சார்பான” எந்தவொரு அரசியல் மாற்று அணியும் இருப்பதாக தெரியவுமில்லை.
தமிழரசு கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவக் குழப்பத்தையும் தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் அணியான்று இல்லாத நிலையையும் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்து தீவிரவாதம் செல்வாக்குப் பெறக்கூடிய ஆபத்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையில் இந்து மதம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்றும் அதனால் நாட்டில் உள்ள இந்துக்களை ஓரணியில் திரட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் இந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் “சிவசேனை” என்ற உதிரி அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல் துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை அது அவசரமாக வேண்டிநிற்கிறது.
(பைனான்சியல் ரைம்ஸ்)
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]
துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான்.
குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும் நம்பினான்.
குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின் நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.
குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும் சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.
ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?
மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும் 'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.
சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!
ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!
புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
குறளரசனும் ருவனிக்காவும் தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.
"இருஇனம் வாழும் ஒரு நாட்டில்
இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி
இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி
இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "
"இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி
இணக்கம் கண்டு இதயம் பரிமாறி
இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு
இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! "
இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும், அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது.
வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும் இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.
ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள்.
'සිහිනෙන් වගේ
ඇවිදින් ආයෙත්
සැගවී හිටියේ කොහෙදෝ?
මදකින් පෙනී නොපෙනී ගියේ
මේ ආදරේ හැටිදෝ ?'
'නෙත සනසනා
නුඹගේ සිනා
මා රැය පුරා එය සිහි කලා
නිදි දෙවු දුවත්
අද නෑ ඇවිත්
ඈතින් ඉදන් සරදම් කලා.'.
'නෙතු වෙහෙසිලා
දහවල පුරා
නුඹ සොය සොයා සිත දුර ගියා
මදකින් පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ ?'
குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான்.
"மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ?
எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ?
திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்?
உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?"
"சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம்
இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்
இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?
தூர விலகி கிண்டல் செய்கிறாள்?."
"பகலில் கண்கள் சோர்வு அடையுதே
இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!
கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது?
கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?"
குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான்.
பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.
"மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?"
"பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?"
ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள்.
ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன.
அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது.
யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது. வலிமையைக் கொடுத்தது.
"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே
உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்
எங்கே பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!"
[கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா]
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 12
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 11
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…! : தேசிய அமைப்பாளர் தேசிய தலைவராக முடியுமா?
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில்.
கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய அரசாங்கத்தில் மகிந்த பிரதமராகவும் பஸில் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்று மக்களை படுகுழிக்குள் தள்ளினர். கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில முடிவுகளை தட்டிக்கேட்க முடியாது மகிந்த விளங்கினார். ஏனென்றால் அவரது மகன் நாமலுக்கு கோட்டாபய விருப்பிமில்லாமலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கினார். மறுபக்கம் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்கிய பஸில், மகிந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து அனைத்து அமைச்சுக்களையும் ஆட்டி வைத்தது போன்று செயற்பட ஆரம்பித்தார்.
இறுதியில் அனைவரையும் பதவியிறக்க அவர்களுக்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடும் போராட்டம் செய்து வருகின்றார். தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்விழுந்து விட்டதால் குறைந்தது பிரதமராகவாவது ஆக்கி விட வேண்டும் என்று முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
அதற்காக கட்சியில் உயர் நிலை பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்க்க முடிவு செய்தார். அதன் படி கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் அதற்கு ஆப்பு வைக்கும் முகமாக மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாமலுக்கு ஜனாதிபதியாவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது’ ஊடகங்களுக்கு கருதுத்து தெரிவித்து விட்டார். இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரசன்னவின் கருத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட பலர் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். இடையில் அரசியலுக்கு வந்த நாமல் ராஜபக்சவை அடுத்த மகிந்தவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மிக முக்கியமாக பஸில் ராஜபக்சவே நாமலை எதிரியாகத்தான் பார்க்கின்றார்.
மகிந்த அரசியலில் இருக்கும் வரை தான் நாமலுக்கு மரியாதை. அவர் ஓய்வு பெற்று விட்டால் கட்சிய. பஸில் ஆக்ரமிப்பார் அல்லது கலைத்து விடுவார். எனவே தள்ளாட்டத்துடன் பாராளுமன்றில் வலம் வருகின்றார் மகிந்த. தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஊடகங்களுக்கு கூறி வருகின்றார். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் நாமல் ராஜபக்ச தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நடை உடை பாவனை மற்றும் தலை அலங்காரம் அனைத்திலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். எந்த உடை அணிந்தாலும் மறக்காமல் சிவப்பு சால்வையை கழுத்தில் போட்டுக்கொள்கின்றார்.
தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்துகின்றார். கம்பஹா மாவட்டம் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரகலய போராட்டத்துக்குப்பின்னர் , மொட்டு கட்சியில் யார் சென்றாலும் மக்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அம்மாவட்டத்தில் மொட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் முழுமூச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
முன்னாள் தேசிய அமைப்பாளர் பஸிலே இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். நாமலின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு போடலாம். மகன் நாமலை அரசியலில் உச்ச இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மகிந்த எடுத்த இறுதி முயற்சியே தேசிய அமைப்பாளர் பதவி. ஆனால் மகிந்த தனது ஆட்சி காலத்தில் தனது புதல்வர்களின் சுகபோக வாழ்வு, ஆடம்பரம், வீண் செலவு போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார். அந்த ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் படங்கள் இப்போது வலம் வந்து நாட்டு மக்களை எரிச்சலில் தள்ளியுள்ளன. எனவே அதற்கு நாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் விட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகும் ரணில் விக்ரமசிங்க இந்த நகர்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மகிந்த தரப்பினரை எதிர்கால அரசியலில் ஊக்குவிக்க விரும்பாதவராகவே உள்ளார். தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள நாமலுக்கு இந்நாட்டின் தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு தலைவராக உருவெடுப்பது சவாலான காரியம் என்றே கூறத் தோன்றுகிறது.
https://www.virakesari.lk/article/180916
அரசியல்மயமாகியுள்ள சர்வதேச உழைப்பாளிகள் தினம்
தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.
உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடதுசாரி கோட்பாடுகள் என்றும், அக்கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கம்யூனிச நாடுகள் என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன.
'மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் - துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இந்த 'உழைப்பு' இன்று மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது.
உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஒரு பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்' என்று உழைப்பாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ் குரல் கொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்துக்கு எதிராக பல கிளர்ச்சிகள் தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் பல்லாயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கிறங்கி போராடினர். இப்போரட்டத்தின் 3ஆம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதொரு கலவரத்துக்கு வித்திட்டது.
இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். இதுவே 1989ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் தினமாக உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது.
இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ஆம் ஆண்டில் தொழிற்சங்க தலைவரான குணசிங்க தலைமையில் இடம்பெற்றது.
அதன் பின்னரே 1956ஆம் ஆண்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கருதி அன்றைய தினத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பொது விடுமுறையாக அறிவித்தார்.
1891ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.ஈ. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருந்ததுடன் இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாகவும் அறியப்படுகிறார்.
இவ்வாறு உலக வரலாற்றிலும், இலங்கையின் வரலாற்றிலும் தொழிலாளர்கள் தினம் போற்றுதலுக்குரியதாக அமைந்தாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனைக்குரிய விடயமாகிறது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, அரசியல் நலன் சார்ந்த மே தினத்தில் கூட்டத்தை நோக்கி தேசிய அரசியல் கட்சிகள் அனைத்து போட்டி போட்டுக்கொண்டு தலைநகர் கொழும்பில் இடங்களை ஒதுக்கிக்கொள்ள போராடுகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம் கொழும்பு - மருதானை சந்தியில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு கோரப்பட்ட இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இம்முறை மே தினத்துக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஆதரவாளர்களை கொழும்பு அழைத்து வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் மே தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக உள்ள எப்.ஆர். சேனாநாயக்க வீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணி அந்த இடத்தில் மே தின கூட்டத்தை நடத்தியிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த கோரிக்கைக்கு ஆரம்பத்தில் எவ்விதமான எதிர்ப்புகளும் அதிகாரிகளிடமிருநது வெளியாக வில்லை. ஆனால் இம்முறையும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை தருமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கும் அனுமதி கோரியுள்ளது.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை கோரியுள்ளமையினால் இருதரப்புக்குமே குறித்த வீதியை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து கொழும்பு மாநகர ஆணையாளர், மாற்று இடங்களை பெயரிட்டு அனுப்புமாறு அறிவித்துள்ளார்.
இவ்வாறு தமது அரசியல் பலத்தை காண்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போடுகின்றதே தவிர, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அல்ல. மேலும், வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமக்குள் செல்வாக்கை வெளிப்படுத்தவும் இந்த அரசியல் கட்சிகள் மே தின மேடைகளை பயன்படுத்துகின்றன. எனவே, முற்றிலும் அரசியல்மயப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினம், மீண்டும் சுதந்திரத்துக்கான போராட்டமாக மாற்றமடைவது அவசியமாகும்.
கேள்விகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ள ஐந்து ஆண்டுகள்! : வேதனைகளுக்குத் தீர்வின்றி நம்பிக்கை இழந்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள்!
ஆர்.பி.என்.
இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேசம் எங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்று தான் ஈவிரக்கமற்ற குண்டுத்தாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.
கிறிஸ்தவ மக்கள் அன்று ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரும் வகையில் காலை வேளை தங்கள் பங்கு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், குண்டுகள் வெடித்துச் சிதறின.
வழிபாட்டிலிருந்த பலரும் அடுத்த கணம் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபகரமாக மரணித்தனர். முதலில் இந்த சம்பவத்தை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. தேவாலயத்துக்குள் குண்டு வெடிக்குமா? என்று எண்ணிப்பார்க்க ஒரு கணம் மனம் தயங்கியது. ஆனாலும், தற்கொலைதாரிகள் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் எழுப்பியது. எதற்காக இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன் தேவாலயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் சரியான விடை காண முடியாமல் உள்ளது.
நடந்தது என்ன?
உயிர்த்த ஞாயிறு தினமான 21 ஏப்ரல் 2019 அன்று நாடு முழுவதும் ஆறு இடங்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் சரியாக காலை 8.45 மணிக்கு ஏக நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.
இதில் மூன்று பிரதான தேவாலயங்களான கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோவில், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மட்டக்களப்பு தேவாலயம் என்பன அடங்கும். மற்றும் கொழும்பில் உள்ள மூன்று சொகுசு நட்சத்திர விடுதிகளான ஷங்க்ரி லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் டிராபிகல் இன் ஆகியவற்றிலேயே குண்டுகள் வெடித்தன.
குறித்த குண்டுவெடிப்பில் குறைந்தது 45 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர். 500 பேரளவில் காயமடைந்தனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள் இதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, மட்டக்களப்பு குண்டுவெடிப்பு இடம்பெற்ற குறித்த தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாட வந்த குழந்தைகளால் தேவாலயம் நிரம்பி வழிந்திருந்தது. அந்தப் பச்சிளம் குழந்தைகளும் பலியானமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?
தாக்குதல்கள் நடந்த சிறிது நேரத்திலேயே, உள்ளூர் தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) தான் காரணம் என்று கூறினர். மேலும், அதன் முக்கிய உறுப்பினரான சஹ்ரான் ஹாஷிம், குண்டு தாக்குதல்களின் தலைவனாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்து. பின்னர் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சஹ்ரான் தன்னைத்தானே குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க, நாட்டில் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்கள் பதில் கூறவேண்டும் என்று குரல்கள் பலமாக ஒலித்தன. அந்த சமயம், ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்தார்.
மேலும், இந்திய அரசாங்கம் குறித்த சம்பவம் தொடர்பில், இலங்கைக்கு உளவுத் தகவல்களை வழங்கி இருந்ததாகவும், இருந்தும் இலங்கை அதைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்தநிலையில் தான் நாட்டில் பல்வேறு ஊகங்கள் வெளிவரத் தொடங்கின. நாட்டில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதைக் காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்ற இவர்களை கூலிப்படையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் துணிந்து எவரையும் விரல் நீட்ட எவருக்கும் திராணி இருக்கவில்லை.
ஆயினும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் ஒரு சிறிய கோட்டுக்கு அருகே பெரிய கோட்டை போட வேண்டிய தேவை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆண்டவன் தீர்ப்பு!
இதேவேளை, மக்களின் குருதியால் தேவாலயத்தின் சிலைகளையும் சுவர்களையும் நனைத்து அவர்களின் உயிரை நொடிப் பொழுதில் குடிக்க காரணமானவர்களை நிச்சயம் ஆண்டவன் தண்டித்தே தீருவான். பாவம் செய்பவர்களுக்கும் சதி செய்பவர்களுக்கும் நிச்சயமாக ஆண்டவன் தீர்ப்பிலிருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வேதனையை கொட்டித்தீர்த்து கண்ணீர் வடித்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்பதே இன்றைய ஒரே நம்பிக்கையாகும்.
இந்த விதமான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை நினைவுகூரும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் காலை 8. 30 மணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக உரையாற்றிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் உண்மையை தொடர்ந்து மூடி மறைத்து வருவதாக தெரிவித்தார். அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய சிலரைப் பாதுகாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக் கோரி பல கடிதங்கள் அனுப்பிய போதிலும் அவற்றுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
தாக்குதல் தொடர்பில் இதுவரை நடந்தது என்ன?
போதுமான புலனாய்வு தகவல்கள் கிட்டியும் முன்னாள் ஜனாதிபதி தாக்குதலை தடுக்க தவறிவிட்டார் என்று மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது உயர் நீதி மற்றம் குற்றம் சாட்டியது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 12க்கும் மேற்பட்ட தடவைகள் விவாதிக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.
எதிர்வரும் காலங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடை பெற்றாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
சரத் வீரசேகர கூறுவது என்ன?
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பது அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர குண்டுத்தாக்கல் சூத்திரதாரிகளை ஜே.வி.பி.க்கு தெரியும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கொழும்பில் கடந்த ஞாயிறு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், குண்டுத்தாக்குதல் தொடர்பில் தமது ஆட்சியில் நீதியைப் பெற்றுக்கொடுப்பதாக கூறுகின்றனர். இது வேடிக்கையானது அவர்களின் தேசிய பட்டியல் உறுப்பினராகப் பெயரிடப்பட்டிருந்தவரின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாரியாக செயல்பட்டவர்கள் மற்றும் அவரது மருமகள் தெமட்டகொட வீட்டில் வைத்து குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எந்த தாமதமும் இல்லை. நீதிமன்ற கட்டமைப்பில் தாமதம் உள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே புதிய தகவல் தெரிந்தவர்கள் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், விசாரணைகள் அடுத்த நூறாண்டுக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும் இவர்கள் கூறுவதைப் பார்த்தால் தாக்குதல் தொடர்பில் குறித்து மக்களுக்கு மாத்திரமே தெரியாதுள்ளது.
பாலித ரங்கே என்ன கூறுகிறார்!
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிந்தோ, தெரியாமலோ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற குழுவினருக்காக செயற்பட்டுள்ளார். இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவை நம்பி தாம் ஏமாந்து போனதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே பாலித ரங்கே பண்டார தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
நம்பிக்கை இழந்தவர்களாக மக்கள்
இறுதி முயற்சியாக கத்தோலிக்க திருச்சபை, குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஏதுவாக, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்மொழிவை சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசம் எந்தளவு தூரம் கரிசனை கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. உலகின் பல்வேறு மனித உரிமை மீறல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தெரிந்ததே.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிக்கப் பட்டவர்கள் என எவருக்கும் தாக்குதலின் போதும் அதனைத் தொடர்ந்தும் பதவிக்கு வந்த அரசுகள் உரிய தண்டனை வழங்க முன்வரவில்லை.
மாறாக மௌனம் காத்து வந்ததுடன் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிட்டன என்ற விரக்தி ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் ஆழமான வடுவாக உள்ளது. இருந்தும் இறைவனின் தீர்ப்பு கால தாமதமானாலும் நிச்சயம் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் அவர்கள் உள்ளார்கள்.
https://www.virakesari.lk/article/181975
வெளியேற்றங்களும் ஆபத்துகளும்
நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக் கடிக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தீர்வுகளை முன்வைப்பது எந்தளவு அவசியமோ, இந்தப் பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்க முயல்வதும் மிக முக்கியமானது.
பொருளாதார நெருக்கடியின் பின்னர் வாழ்க்கைச் செலவு உயர்வு, வரிகள் அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சினை என நாட்டின் சாதாரண மக்கள் முதல் பல தட்டு மக்களும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தச் சிக்கல்களால் அவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதோடு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் நாட ஆரம்பித்திருக்கின்றனர். அதிகளவான மக்கள் குறுகிய காலத்தில் நாட்டைவிட்டு வெளியேற முற்படுவது நாட்டின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை நிச்சயம் எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்.
நாட்டின் சுகாதாரத்துறை, கல்வித்துறை உட்பட பல பிரதான துறைகளில் இந்தப் பிரச்சினை தற்போது தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றது. சுகாதார அமைச்சின் அண்மைய தரவின்படி, தமிழ்- சிங்களப் புத்தாண்டு விடுமுறை வாரத்தில் மட்டும் விசேட மருத்துவர்கள் ஏழுபேர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அண்மைய மாதங்களில் 350க்கும் அதிகமான மருத்துவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி யுள்ளனர். இதனால் பல அரச மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. நாட்டின் ஏனைய துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையால் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றின் தாக்கங்களும் எதிர்காலத்தில் மெல்ல மெல்ல பகிரங்கமாகும். நாட்டில் இருந்து கல்வியியலாளர்களும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவது மிகச்சவாலான விடயமாகவே இருக்கும்.
ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் இவ்வாறான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது செயற்படுமாயின்- எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி களுக்கு அப்பால் நாடு பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தற்போதே திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம். நாட்டில் இருந்து தப்பிச்செல்லும் போக்கு குறைக்கப்படாவிட்டால் ஏனையவற்றுக்கு இலங்கை பிறநாடுகளிடம் கையேந்துவதைப்போன்று துறைசார் மூளைசாலிகளுக்கும் இலங்கை பிறநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும்.
நடக்கப்போவது என்ன தேர்தல்?
நடக்கப்போவது என்ன தேர்தல்?
எம்.எஸ்.எம். ஐயூப்
நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன.
மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ.
தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் குதூகலித்து பசில் ராஜபக்ஷவின் மீள் வருகையைக் கொண்டாடுகின்றனர்.
7 மூளைக்காரரென மொட்டுத் தரப்பினரால் கொண்டாடப்படும் பசில் ராஜபக்ஷவினால் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்களை ஆட்சி அரியணையில் ஏற்ற முடியுமா? கருகிய மொட்டை மீண்டும் மலர வைக்க முடியுமா என்பதே இன்று பலரினதும் கேள்வியாகவும் சந்தேகமாகவும் உள்ளது. இதற்கான விடையை அறிய வேண்டுமானால் சில வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
இலங்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி மலர்ந்தது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் தடவையாகவும் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
மூன்றாவது தடவையாக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசில் அமைச்சராக இருந்தவரான எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்டதால் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9இல் ராஜபக்ஷ குடும்பத்தின் முதல் கட்ட ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
இதனால் அடிபட்ட பாம்பாகச் சீறிக்கொண்டிருந்த ராஜபக்ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, அரியணையில் ஏற இனவாத ஆயுதத்தை கையில் எடுத்தனர். இதன் பெறுபேறாக மீண்டும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தனது சகோதரரான பசில் ராஜபக்ஷவை நிறுவனராகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு ஜனாதிபதியானார்.
இதன் மூலம் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்கள் அரியணை ஏறினர்.
2019ஆம் ஆண்டு இறுதியிலிருந்து, தம்பி கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணனான மஹிந்த ராஜபக்ஷ பிரதமர், அடுத்த அண்ணனான சமல் ராஜபக்ஷ அமைச்சர், பிரதமர் அண்ணனின் மகனான நாமல் ராஜபக்ஷ அமைச்சர், அமைச்சர் அண்ணனின் மகனான சஷீந்திர ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர், சகோதரியின் மகனான நிபுண ரணவக்க பாராளுமன்ற உறுப்பினர் என்று ராஜபக்ஷ குடும்பமே நாட்டை ஆளத் தொடங்கியது.
2005, 2010. 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டபாய ராஜபக்ஷவும் ஜனாதிபதிகளாக வெற்றிபெற பல தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டவர் ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்ஷ. இதனால்தான் அவரை அரச தரப்பினர் ‘7 மூளைக்காரர்’ என அழைத்துக் கொண்டாடினர்.
ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சி அரியணையில் ஏற்றிய பசில் ராஜபக்ஷவினால் அந்த குடும்ப அரசில் கோலோச்ச முடியாத நிலை சட்ட சிக்கல்களினால் ஏற்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்ற ஆரம்பத்தில் அரசில் இருக்கவில்லை. இவ்வாறான நிலையில்தான், கோட்டபாய ராஜபக்ஷவின் தவறான கொள்கை, அரசியல் அறிவின்மை காரணமாக ஆட்சியும் நாடும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது.
இதற்காகவே காத்திருந்த 7 மூளைக்கா ரரான பசில் ராஜபக்ஷ தனது விசுவாச அமைச்சர்கள், எம்.பிக்களை தன்னை தேசியப் பட்டியல் ஊடாக எம்.பியாக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் என உசுப்பி விட்டார்.
இதனையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டுமானால் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்து மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 எம்.பிக்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர்.
அதேவேளை, தேசியப் பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப் பட்டியலில் பெயரில்லாத ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் இதனைவிடவும், இறுதியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, பசில் ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தமையால் அவ்வாறு நியமிக்கப்படுவதானது அரசியலமைப்புக்கு முரணானதென்ற எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் சட்ட நிபுணர்களிடம் இருந்து எழுந்தன.
பசில் ராஜபக்ஷ அமைச்சரானால் தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்ற திட்டமிட்ட பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதால் மக்களும் நம்பத் தொடங்கினர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்புக்களையெல்லாம் மீறி நாட்டை, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜயந்த கோட்டேகொட எம்.பி. பதவி விலக அதனூடாக 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ எம்.பியாக்கப்பட்டு, நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இவரது நிதி அமைச்சுப் பதவிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான நிர்வாகத்தின் காரணமாகவே நாடு கடனில் மூழ்கியது. ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டு வரிசை யுகம் ஏற்பட்டு மக்கள் வாழ்வதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல, அரசின் பங்காளிக் கட்சிகளுடனும் பசில் ராஜபக்ஷ நல்லுறவு வைத்திருக்கவில்லை. பங்காளிக் கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை வளர்த்தெடுத்து அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்துவதே அவரின் திட்டமாக இருந்தது.
இதனால் பங்காளிக் கட்சிகளுக்கு எதிராக பசில் ராஜபக்ஷ எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் அரசிலிருந்து வெளியேறின. இதனால் கோட்டபாய ராஜபக்ஷ அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அத்துடன், வரிசை யுகத்தினால் மக்களும் பொறுமையிழந்து கிளர்ச்சியில் ஈடுபட்டதனால் ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ஷவும் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவும் விரட்டியடிக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்ல, நிதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து பின்னர் எம்.பி. பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷவும் விலகவும் நேரிட்டதுடன், நாட்டிலிருந்து பின்கதவு வழியாக அமெரிக்காவுக்கும் தப்பிச் சென்றார். அத்துடன், இந்த 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களைத்தான் உயர் நீதிமன்றமும் ‘‘பொருளாதார படுகொலையாளிகள்’’ என அண்மையில் அறிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவராக இருந்து விட்டு, மக்கள் கிளர்ச்சியை அடுத்து, பின் கதவால் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தயவால் முன் கதவால் நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்ஷ தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காக்கப்போகும் காவலனாக மொட்டுக்கட்சியினர் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
பசில் ராஜபக்ஷவும் நாடு திரும்பியது முதல் தேர்தல்கள் தொடர்பில் தீவிர செலுத்தி வருவதுடன், ஊடகங்களை வரவழைத்துப் பரபரப்பு பேட்டிகளையும் வழங்கி, மொட்டு மீண்டும் மலர்கின்றது.
என்றவொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். ஆனால், மக்கள் கடந்த காலத்தை மறக்கும் மறதி நோய்க்கு உட்படாதவரை மொட்டு மீண்டும் மலராது. இது ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் நன்கு தெரியும் என்பதனால், கடந்த காலத்தை மக்களை மறக்க வைப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கற்றுக்கொண்ட பாடம்.
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நடக்கப்போவது-என்ன-தேர்தல்/91-336329
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 10
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 09
ஈரான், இஸ்ரேல் பதற்றத்துக்குள் வலிந்து சிக்கப்போகும் இலங்கை
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார்.
அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.
உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.
மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது.
முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன.
அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன.
ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன.
இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.
குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை.
இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம்.
ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.
அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.
இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது.
அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது.
இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.
விட்டுக்கொடுப்பற்ற தலைமையே தேவை!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய அந்தக் குரூரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகினர். 'அந்தப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப் படவில்லை. நீதிக்கான பயணத்தை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் - இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை ' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக அவரால் தனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கமுடியவில்லை என்ற ஆதங்கம் அந்த உரையில் எதிரொலித்தது. இப்போதும் கூட அவர் தனது சமூகத்துக்காக மாத்திரம் குறுகிய வெளிக்குள் நின்றுகொண்டு நீதியைக்கோரி போராடுகின்றார் என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கின்றது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதான மிகப்பெரிய கொடூரத்துக்கு நீதி கோருவதற்கு அவர் தயாரில்லை. மதத் தலைவராக அவர், தனது அருட்தந்தையர்கள் எத்தனையோ பேர் இறுதிப் போரில் கொல்லப்பட்டமைக்கோ, கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமைக்கோ நீதிகோர இன்னமும் தயாரில்லை. இந்த நாடு சிங்கள - பெளத்தர்களுக்குரியது. பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தம் பேசுபவர் அவர். சிங்கள பௌத்தம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முயலும் ஆட்சியாளர்கள் அதற்காக எதையும் செய்வார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் இல்லை. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பௌத்த- சிங்கள பேரினவாத தரப்புகள் ஆட்சியைப்பிடிப்பதற்கே நடத்தியிருந்தன. அப்படிப்பட்டவர்கள் எப்படி நீதியான விசாரணையை முன்னெடுப்பார்கள் என்ற கேள்வியை அவர் இப்போது முன்வைக்கின்றார். சர்வதேச விசாரணையைக் கோரும் தனது நியாயப்பாட்டை வலுப்படுத்துகின்றார். இதையேதான் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லி வருகின்றனர். போரை நடத்திய அரசாங்கமே எப்படி தன்மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும்? இது இயற்கை நீதிக்கே முரணானதே. எனவே சர்வதேச விசாரணைதான் தீர்வு என்ற கோஷம் தமிழர் தரப்பில் எழுப்பப்பட்டபோது மௌனியாக இருந்தவர் கர்தினால் மல்கம் ரஞ்சித். இப்போதும் அந்த விடயத்தில் மௌனியாக இருந்து கொண்டு, தனது மதத்தின் மீது நிகழ்ந்த கொடூரத்துக்கு மட்டும் சர்வதேச விசாரணை கோருகின்றார்.
என்னதான், பக்கச் சார்பானவராகவே அவர் இருந்த போதும், தாக்குதலுக்கான நீதி கோரும் அவரது பயணத்தில் இன்னமும் உறுதியானவராக இருக்கின்றார். அதில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் அவர் தயாரில்லை. யாருடனும் சமரசம் செய்ய அவர் தயாராக இல்லை. இந்த இடத்தில்தான் கர்தினாலிடமிருந்து எமது தமிழ்த் தலைமைகள் பாடம் படிக்க வேண்டும். நல்லாட்சிக் காலத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து கலப்புப் பொறிமுறைக்கு இணங்கினர். இன்று எதுவுமில்லாத நிலையில் வந்து நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான நீதி தேடிய பயணம் இன்று ஓய்ந்திருக்கின்றது. தமிழ்த் தலைமைகள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள், இந்த விவகாரங்களைப் பொறுப்பெடுத்துச் செய்தவர்கள் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திடமிருந்து பிணை யெடுத்துவிட்டு மல்லாக்காகப் படுத்திருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்னமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை திரும்பத் திரும்ப ஆயர் மல்கம் ரஞ்சித் முதலானோர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். புதிது புதிதாக ஆதாரங்களைத்திரட்டி ஒப்படைத்துக் கொண்டும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்த் தலைமைகள் என்ன செய்கின்றன? தங்கள் கட்சிப் பிரச்சினைகளையே நீதிமன்றம் வரையில் கொண்டு சென்று விட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது தமிழ் மக்களுக்கான நீதியைக்கோரும் போராட்டத்தை முன்கொண்டு செல்ல கர்தினால் போன்ற விட்டுக்கொடுப்பற்ற ஒருவரே தேவை.
https://newuthayan.com/article/விட்டுக்கொடுப்பற்ற_தலைமையே_தேவை!