கதை கதையாம்

 "பாகப்பிரிவினை"

18 hours 22 minutes ago
"பாகப்பிரிவினை"
 
 
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும் 
 
 
அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது. 
 
 
"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"
 
 
இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?
 
 
நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!  
 
 
 "தெருவோர   மதகில்  இருந்து
ஒருவெட்டி   வேதாந்தம் பேசி
உருப்படியாய் ஒன்றும்   செய்யா
கருங்காலி   தறுதலை  நான்"
 
"கருமம்      புடிச்ச     பொறுக்கியென
வருவோரும் போவோரும் திட்ட
குருவும்     குனிந்து    விலக
எருமை     மாடு       நான்"
 
 
இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள் 
 
 
"மணலில் கதிரவன் புதையும் மாலையில்   
மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் 
மரணம் தழுவும் விபத்து எனோ?
பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"       
 
"அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன் 
அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார் 
அவளது சிறிய விரல்களை தொட்டேன்
காதில் கூறி மறைந்து போனது!"
 
 
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!
 
 
அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.
 
 
எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.   
 
 
அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?
 
 
எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!
 
 
என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!
 
 
முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!  
 
 
[கந்தையா தில்லை விநாயக லிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

No photo description available. No photo description available.

"குடியை கெடுத்த குடி"

1 day 16 hours ago
"குடியை கெடுத்த குடி"
 
 
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” 
(குறள் 926)
 
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார் வள்ளுவர். அப்படியான ஒருவர் தான் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் வசித்த கந்தசாமி ஆவார். அவர் ஒரு குடிசை வீட்டில் மனைவியுடனும் ஒரு மகளுடனும் வாழ்ந்து வந்தார். அவரின் மகள் பெரிய அழகு ராணி என்று கூற முடியாவிட்டாலும், அவர் ஒரு இளைஞனை பிரமிக்க வைக்கும்  ஓரளவு அழகு உள்ளவரே! அவரின் பெயர் ரோஜா என்று எண்ணுகிறேன். மனைவி காலையில் அப்பமும் இடியாப்பமும், தன் குடிசையில் சுட்டு , அயலவர்க்கு விற்பார். மாலையில் இட்டலி, பிட்டு அவித்து விற்பார். ஆனால் கந்தசாமி தொடக்கத்தில் கூலிவேலைக்கு போய் ஓரளவு உழைத்து வந்தாலும், போகப் போக நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கப் பழகினார். 
 
கந்தசாமியின் இந்த மாற்றத்தை நான் காணும் பொழுது, தொடக்கத்தில், அதன் தன்மை அல்லது போக்கு சரியாக விளங்கா விட்டாலும், பண்டைய சுமேரியாவில், கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட மதுவை பற்றிய ஒரு சுமேரியன் துதி பாடலின் [Sumerian Hymn to Ninkasi] சில வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தது.  
 
"நின்காசியே,  நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான 
இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய், 
அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய், 
நின்காசி, நீ வடி கட்டும் பெரும் மரத்தொட்டி 
ஒரு இன்பமான ஒலியை தருகிறது!
குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா 
பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக 
[a blissful mood… with joy in the [innards] [and] happy liver] 
அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" 
 
[தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]  
 
கந்தசாமி, கூலி வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது, அவரின் நடையும், தனக்கு தானே சிரித்து, ராஜா மாதிரி ஆனால், தள்ளாடி தள்ளாடி வரும் அவரின் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலை ஏன் என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது!. ஆனால் அவர் பிற்காலத்தில் தானே நின்காசி மாதிரி சாராயம் வடிப்பார் என்றோ, அந்த கள்ள சாராயத்தில் என் தந்தையும் தன் உயிரை பறிகொடுப்பர் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.    
 
ரோஜா, தனது சிறுவயதில் நன்றாக படித்ததுடன், மிகவும் மகிழ்வாக எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவராகவும் இருந்தார். உடுப்புகளும் ஓரளவு வண்ணம் வண்ணமாக கவர்ச்சியாக உடுப்பார்.  
 
நாமும் சில வேளை அவர்களிடம் காலை உணவுக்கு அப்பம் வாங்கி உள்ளோம். நானும் தம்பியும் அதை சாப்பிட்டுவிட்டுதான் பாடசாலை போவோம். அப்பத்துக்கு சம்பலும் தருவார்கள். அவரின் மனைவி, அவர் குடிக்க தொடங்கிய பின், சிலவேளை அழுது என் அம்மாவிடம் முறையிடுவார். 'இவர் இப்படியே போனால், காசும் கரையும், உடலும் கரையும் ஏன் வாழ்வே கரையும்' என்பார்.   
 
நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,
 
 "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே 
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"  . 
 
என்று எடுத்து உரைக்கிறார். அது மட்டும் அல்ல, பெண்கள் தெளிந்த கள்ளினைக் குடித்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடினார் என்று அகநானுறு 336 இல் காண்கிறோம். 
 
"தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்"
 
அப்படியான ஒரு சம்பவத்தை விரைவில் கந்தசாமி வீட்டிலும் காண்பேன் என்று முதலில் நான் நினைக்கவில்லை. ஏனென்றால் குடியை குடி கெடுக்கும் என்று , அவரின் மனைவி கந்தசாமியை பற்றி அடிக்கடி என் அம்மாவுக்கு முறையிடுவதை கண்டுள்ளேன். அப்ப எல்லாம் ரோஜா கூட , தாயின் கையை பிடித்துக்கொண்டு, தனக்கு, அம்மாவும் அப்பாவும் இரவில் தினம் சண்டை என்பதால், காதை பொத்திக்கொண்டு நேரத்துடன் படுக்கைக்கு போவதாகவும், அது தன் படிப்பை, மற்றும் பாடசாலை கொடுத்து விடும்  வீட்டு வேலைகளை, முடிக்காமல் போய் விடுவதாகவும், படிப்பில் கவனம் குறைவதாகவும் , தாயுடன் சேர்ந்து என் அம்மாவிடம் முறையிடுவதை கேட்டுள்ளேன். 
 
கந்தசாமி ஒரு நாள் கூலி வேலைக்கு போவதை நிறுத்திவிட்டு, தானே சாராயம் காச்சி களவாக வீட்டில் இருந்து விற்க தொடங்கியதை அறிந்தோம். அது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அமைதியான எம் சுற்றாடல், இனி என்ன பாடு படப்போகுதோ என்று எமக்கு தெரியவில்லை. குடியால் தன் குடியை இப்ப கெடுத்துக் கொண்டு இருக்கும் கந்தசாமி, இனி எத்தனை எம் அயலவர்களை  கெடுக்கப் போகிறானோ என்று ஒரே கவலை!. எம் அயலவர் சிலர் காவல் துறையினருக்கு அறிவித்த போதிலும், அவனின் பணம் அவர்களையும் வாங்கி விட்டது என்பதை பின்பு தான் உணர்ந்தோம். 
 
அவனுக்கு கையில் பணம் கணக்க புழங்க தொடங்க, வியாபாரம் கலைக்கட்ட, கந்தசாமியை திட்டிய மனைவியும் அதில் பங்கு பற்ற தொடங்கினார். அவரின் நடை உடை கூட கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர் இப்ப என் அம்மாவுடன் கதைக்கும் பொழுது, மது வாடை அவர் வாயில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்னும் கந்தசாமியை திட்டுவதை மட்டும் விடவில்லை.  
 
"துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
 
என்பது போல அவரும் இப்ப இரவு நேரங்களில், கணவனுடன் சேர்ந்து, கொஞ்சம் கூட வெறிக்கக் கூடிய காச்சிய சாராயமும் - இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக் /பீர் ] கைவிட்டு மதுவினை - குடிக்க தொடங்கினார் என் அறிந்தோம். பாவம் ரோஜா அவர் இன்னும் படிக்க வேண்டும், நல்ல உத்தியோகம் எடுக்கவேண்டும், நல்ல குடும்பமாக  கௌரவமாக வாழ்வை அமைக்க வேண்டும் என்பதிலேயே இன்னும் இருப்பது போலவே இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு, இப்ப தாயும் தந்தையுடன் கூடி இரவில் குடித்து இன்புற, எல்லாம் அவளுக்கு தலைகீழாக மாறிவிட்டது. 
 
அவரின் முகத்தில் ஒரு கவலை குடிகொண்டதை காணக் கூடியதாக இருந்தது. பொல்லாத காலம், அந்த காலக் கட்டத்தில் தான், இலங்கையில் மிக முக்கியமாக கருதப்படும் பரீட்சையில் ஒன்றான  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் நடைபெற்றது. அவளின் முகத்தல் எந்த மகிழ்வையும் காண முடியவில்லை. கடைசிநாள் பரீட்சை எழுத போனவள், வீடு திரும்பவே இல்லை.  அவள் பரீட்சை முடிய தன் சக தோழிகளுடன் ஒருவேளை எதாவது உணவு விடுதியிலோ அல்லது எதாவது படம் பார்க்க போய் இருப்பாள் என அன்று இரவும் அவர்கள் தங்கள் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். 
        
ஆனால், யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு போகும் கடைசி தபால் புகையிரதம் புறப்பட்டு போகும் பொழுது ஒரு இளம் பெண் தற்கொலை செய்ததால், தபால் வண்டி தாமதமாக புறப்படும் என்ற இரவு செய்தி தான் கந்தசாமிக்கும் மனைவிக்கும் ஒரு சந்தேகத்தை கொடுத்து இருக்கலாம். அப்ப தான் கந்தசாமியின் மனைவி பதைபதைத்து வந்து, என் அம்மாவிடம், என்னை  அங்கு போய் பார்க்கும் படி கூறினார்.   
 
கந்தசாமியும், அவரின் மனைவியும், தங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் அயலவர்களுக்கும், ஏன் எங்கள் அப்பாவின் சாவிற்கும் காரணமாக இருந்தாலும், ஒருவர் உதவி என வரும் பொழுது மன்னிப்பதே மனித அழகு என்பதாலும், இந்த சூழ்நிலையிலும், தன் பண்பாட்டிலும் பழக்கவழக்கங்களில் சற்றும் மாறாத ரோஜாவின் நல்ல இயல்பும், என்னை அங்கு போய் தேட வைத்தது. 
 
"வாய் மடித்து கண் சுழன்று 
வான் உயர கை அசைத்து   
வாட்டம் இன்றி துள்ளி சென்றவளே 
வான் இருண்டும் வராதது எனோ ?"
 
 
"மணலில் கதிரவன் புதையும் மாலையில்   
மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் 
மரணம் தழுவ தொடர்வண்டியின் முன் 
மடையர் போல் பாய்ந்தது எனோ ?"
 
 
"செவ்வாய் நீயோ வீடு வந்தாய்
செவ் இதழ் நீயோ திறக்கவில்லை 
செல்வச் செழிப்பாய் பல்லக்கில் வராமல் 
செத்து சாக்கில் வந்தது எனோ ?"  
 
 
"பள்ளி பையை ரயில் பாதையில் 
பகுதி பகுதியாக கண்டு எடுத்தேன்
பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் 
பள்ளி புத்தகம் சிவந்தது எனோ?"  
 
 
"மச்சம் கொண்ட உன் சிறுகால் 
மல்லாந்து என்னை பார்ப்பதை கண்டேன்
மயான அமைதியை விட்டு ரோஜாவே 
மடிந்தகால் நானென்று சொல்லாதது எனோ?" 
 
 
அது அவளே தான். எனக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை. இனி காவற்படை விசாரணை மற்றும் தாய் தந்தையரின் அடையாள உறுதி படுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பின்பே செய்வாய் அவளின் பிரேதம் வீட்டிற்கு கொடுக்கப் படும் என்றார்கள். குடி குடியை மட்டும் கெடுக்கவில்லை, அவர்களின் பரம்பரையே இல்லாமல் ஆக்கிவிட்டது.  இனி அவர்கள் திருந்தி தான் என்ன பயன்? 
 
 
நன்றி 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
 

"தைரியமானவள்"

2 days 19 hours ago
"தைரியமானவள்"
 
 
வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும். 
 
அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!      
 
"மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின்
சாயர் கிடைந்து தங்கான் அடையவும்
.........
அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும்
...........
அளிய தாமே சிறு பசுன் கிளியே
குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின்
மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"
 
கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்
 
"கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக்
காவியை கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
வாழை வெண் ர்ரவுநீன் டகன்று
கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக்
குமிழையும் குழைyaiயும் சீறி
விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை
வேலினும் கூறிய விழியால்"
 
ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி' 
 
காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது. 
 
அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய 
சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார். 
 
மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக. 
 
கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று 
 
“மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
        நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
        திருநகையைத் தெய்வ மாக
இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
        நானறியேன்! உண்மை யாகக்
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
        படைத்தனன் நல்கமலத் தோனே! ”   
 
பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான். 
 
ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல. 
 
"எண் அரும் நலத்தினாள்
    இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
    கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
    உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
    அவளும் நோக்கினாள்."
 
அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.
 
"இசை போன்ற மெல்லிய  மொழி
இடைவெளி குறைக்க வழி சமைக்க  
இறைவி நேரே வந்தது போல 
இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "
 
"இருசொல் இணைதல் புணர்ச்சி என்று 
இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி 
இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி 
இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"
 
மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள். 
 
அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்! 
 
கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல, 
 
‘தேரா மன்னா! செப்புவது உடையேன்' 
 
ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள். 
 
"வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"
 
கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.
 
"நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு
நீதியின் கண்களை திறந்து விடு
நச்சு பாம்புகள் படமெடுத்தால்
அச்சம் வேண்டாம் அழித்து விடு"
 
"பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது
குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது
வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன்
மகனில்லை ஓர் மகனில்லை"
 
அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது 
சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.   
 
சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது. 
 
"தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே" 
 
நன்றி  
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
No photo description available. romantic art with realism details" - Playground 

"என் அன்பு மகளே"

2 days 20 hours ago
"என் அன்பு மகளே"
 
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே,
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; 
‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!
 இயங்குதி! என்னும்;’யாமே," 
 
 
தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை. 
 
 
வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!
 
 
"உள்ளம் களிக்க உடனே சிரிக்க
உதிர்மா வேண்டுமம்மா! .    
துள்ளித் திரிந்து துயரை மறந்திடத்
துளிமா வேண்டுமம்மா!"
 
 
அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.
 
 
"இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச்
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"
 
 
மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!
 
 
"பூக்களின் அழகை வண்டுகள் அறியும்
பூங்கா முழுவதும் மயங்கி திரியும் 
பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் 
பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்" 
 
 
அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!
 
 
ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.
 
 
“கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்
நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும்
சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”   
 
 
என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!  
 
என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்! 
 
 
"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5
அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"
 
 
தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !! 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
No photo description available. No photo description available.

"பாசக்காரப் பாட்டி"

3 days 16 hours ago
"பாசக்காரப் பாட்டி"
 
 
எல்லா குழந்தைகளுக்கும், தமக்கு அன்பு செலுத்தவும், தாம் அன்பு செலுத்தவும் ஒரு சிலர் கட்டாயம் தேவை. அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக, ஏன் பலவேளைகளில் முதலாவராக இருப்பவர் தான் பாட்டி ஆவார். ஏன் என்றால் அவர்கள் பெற்றோர்களின் பங்கை இலகுவாக எடுக்கக் கூடியது தான், பொறுமையாக இருந்து ஆலோசனை வழங்குவதுடன், சேர்ந்து விளையாடி, கதைகள் சொல்லி ஒரு ஆசிரியர் போலவும், கூட்டாளி போலவும் செயற்படக் கூடியவர்கள் அவர்கள் ஒருவரே! அப்படியான ஒருவர் தான் என் பாட்டி!!
 
எங்க குடும்பம் ஓரளவு கூட்டு குடும்பம் என்பதால், தாத்தாவும் பாட்டியும் எம்முடன் இருந்தனர். அப்பா முழுநேர வேலையும், அம்மா பகுதி நேர வேலையும் என்பதால், என்னை கவனிப்பதில் பாட்டியே முதலாவதாக இருந்தார். பல மகிழ்வான நிகழ்வுகள் இன்னும் என் மனதில் இருக்கிறது. நான் இன்று பெரியவனாகி, படிப்பு முடித்து, வேலையும் செய்கிறேன். அடுத்த ஆண்டு எனக்கு திருமணம் கூட நடக்க உள்ளது. என் முதல் கனா, எனக்கு மூத்தப்பிள்ளை, மகளாக பிறக்கவேண்டும், அவளுக்கு பாட்டியின் பெயரை சூட்டிட வேண்டும். ஆமாம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன், என் பாசக்காரப் பாட்டி, சென்ற ஆண்டு திடீரென கொரோனாவால் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதற்க்கு முதல், என் வருங்கால மனைவியை [காதலியை] சந்தித்து அவருக்கு ஆசி வழங்கியது, அவரை பேத்தி என்று செல்லமாக கூப்பிட்டு அளவளாவியது இன்னும் மறக்க முடியாது!
 
என் சின்ன வயதில், பாட்டி பொதுவாக வீட்டிலேயே இருப்பதால், என்னுடன் அதிகமாக இருந்து உள்ளார். அதனால் அவரே, நான் எடுக்கும் சின்ன சின்ன தீர்மானங்களுக்கு நங்கூரமாகவும், அதே நேரம் எனது பாதுகாப்பாகவும் இருந்தார். அந்த நேரம் அதை என்னால் சரியாக உணரமுடியவில்லை. இடைஞ்சலாக இருக்கிறார் என அடம்பிடித்ததும் உண்டு. ஆனால் இன்று அதன் உண்மையான தன்மையை உணருகிறேன்
 
குறிப்பாக என் பாலர் பருவத்தில் பாட்டியின் பங்கு மறக்கமுடியாத ஒன்று. அவரின் பாசம், எந்த நிலையிலும் மனம் குழம்பாது ஒரு சிறு புன்னகையுடன் எடுக்கும் தீர்மானங்கள், மடியில் இருத்தி கதை சொல்லும் அழகு, தாலாட்டு பாடி நித்திரை ஆக்கும் பக்குவம், கணிதம், தமிழ், விஞ்ஞானம், பொது அறிவு போன்றவற்றை இலகுவாக உதாரணத்துடனும் செய்முறைகளுடனும் புகட்டும் அனுபவம் நான் இன்னும் வேறு யாரிடமும் கண்டதில்லை.
 
"பாசம் கொண்டு மகிழ்ந்து விளையாட
பாவம் பாட்டி இந்த வயதிலும்
பார்த்து படியில் கால் வைத்து
பாலும் சோறும் கொண்டு வாரார்"
 
"பாடி ஆடி விளையாட்டு காட்ட
பால் கொடுத்து கதை சொல்ல
பாயில் அணைத்து சேர்ந்து படுக்க
பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்"
 
பாயை விரித்து நீட்டி படுத்து
பாதி பல்லால் வெற்றிலை மென்று
பாதை காட்ட நல்ல கதைசொல்ல
பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்"
 
ஆமாம் இப்படித் தான் என் பாட்டி இருந்தது எனக்கு இன்னும் ஞாபகம் . அவரை பற்றி கொஞ்சம் விரிவாக சொலவ்து என்றால், அவர் என்றும் பாரம்பரிய உடையில் தான் இருப்பார். எம் பெற்றோர் , நாம் எல்லோரும் இன்றைய நவீன உடை அலங்காரத்துக்குள் தாராளமாக இருந்தாலும், அவர் தன் அலங்காரத்தை மாற்றவே இல்லை, ஆனால் எம்மை தடுக்கவும் இல்லை, அவர் எம்மை அதில் பார்ப்பதில் மிக்க மகிழ்வே காட்டினார் ! அது தான் அவரின் சிறப்பு !, இது யாருக்கு வரும் ??
 
அவர் பெரிதாக வண்ண நிற ஆடைகள் அணியமாட்டார். அது மட்டும் அல்ல தொழ தொழ என்றே மேல் சடடை இருக்கும். அது முழங்கை மட்டும் நீண்டும் இருக்கும். அதிகமாக பகலில் சேலை அணிந்து இருப்பார். மாலை வரும் பொழுது நைட்டி / இரவில் அணியும் ஆடை அல்லது மேல் சட்டையுடன் ஒரு வித பாவாடை அணிவார். ஆனால் மிகவும் கச்சிதமாக அழகாக உடுத்து இருப்பார்.
 
இன்று உடை கலாச்சாரம் சிறுவரில் இருந்து கிழவி வரை மாறி விட்டாலும், என் பாட்டி கிராமத்து கலாச்சார உடையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் எந்த ஒப்பனையும் செய்வதில்லை, என்றாலும் அவரின் இயற்கையான சாயல் உண்மையில் அழகே! ஏன், அவர் பெயர் கூட கனகம்மா தான்! அவர் சிறு வயதில், பாரமான தங்க தோடு அணிந்தவர் என்பதால், பிற்காலத்தில் அவரின் காது மடல்கள் நீளமாக வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.
 
பாட்டி சொன்ன இரு விடயங்கள் எனக்கு இன்னும் ஞாபகமாக இருக்கு. அது அவரின் பண்பாட்டையும் அறிவையும் கட்டாயம் பறைசாற்றும். அது மட்டும் அல்ல அவரின் இனப்பற்றையும், ஒரு குடும்ப ஒழுஙகையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று தமிழ் இனம் இலங்கையில் பட்ட துன்பங்களும், அதனால் ஆயிரம் ஆயிரமாக இடம் பெயர்ந்து பரவலாக பல நாடுகளில் வாழும் சூழலில், தமது பண்பாட்டையும், மொழியையும் தொடர வேண்டிய அவசியம் இருக்கு என்பதை அவரின் சொற்கள் என் காதில் ஒலித்த படியே உள்ளது.
 
கலிகாலம் என்றால் என்ன? ஒரு சின்ன பிரசங்கமே எனக்கு வைத்தார். அந்த நாள் காலம் வேறு, இப்பத்தான் காலம் வேறு என்று ஆரம்பித்த அவர், கரிகாலம் என்று சற்று நிறுத்தி சொல்லி, அண்ணனும் தம்பியும் ஒரு முறை சந்தித்தார்கள், தம்பி, அண்ணா கரிகாலம் பிறந்து விட்டது என்று சொன்னான். உடனே அண்ணன், அது உன்னிலேயே தெரிகிறது என்று பதில் கொடுத்தார். காரணம் அன்றைய காலத்தில், மூத்தோருக்கு முன்னால், தோளில் இருக்கும் சால்வையை, ஒரு மரியாதை பொருட்டு, எடுத்துவிட்டு தான் கதைப்பார்கள். ஆனால் தம்பி அதை மறந்து வீறாப்புடன் அண்ணன் முன் கதைத்தது கரியன் பிறந்து விட்டான் என்பதை காட்டுகிறது என்றானாம், என்றார் என் பாட்டி. இது இன்று நகைப்புக்கு உரியதாக பலரால் கருதினாலும், கரிகாலம் என்ற சொல்லுக்கு ஒரு நல்ல விளக்கம் என்றே நம்புகிறேன் ! மற்றும் படி எனக்கும் அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.
 
மேலும் குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்திய பாட்டி, பிதா மாதாவுக்கு கடமை செய்ய வேண்டும் என்றும் தாய் மொழியை எங்கிருந்தாலும் மறக்க வேண்டாம் என்றும், மொழி அழிந்தால் இனம் அழிந்ததுக்கு சமன் என்று சில வரலாற்று கதைகள் மூலம் விளங்கப் படுத்தினார். அதனின் உண்மையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் / காண்கிறோம்! அதனால் தான் என் பாட்டியை மீண்டும் என் மகளாக வரவேண்டும் என்று கனவு காண்கிறேன். நான் மறு பிறப்பில், இவை போன்ற மூட நம்பிக்கைகளில், எந்த உண்மையும் இல்லை என்று அறிவியல் ரீதியாக எண்ணுகிறவன் என்றாலும், என் பாசக்காரப் பாட்டியின் சாயலில் வரவேண்டும் என்பதே என் கனா!
 
"கட்டிலில் படுத்து பாட்டியை நினைத்தேன்
ஊட்டி வளர்த்த கதைகளை சுவைத்தேன்
போட்டி போட்டு கனவு வந்தது
பாட்டி உருவில் தேவதை வந்தது!"
 
"கேட்காத இனிமை காதில் ஒலித்தது
வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது
மொட்டு விரிந்து வாசனை தந்தது
குட்டி பாட்டி தவழ்ந்து வந்தது"
 
"மெட்டி ஒலி காற்றோடு கலக்க
முட்டி மோதி நிமிர்ந்து நடந்து
பொட்டக் குட்டி பாட்டி பெயரில்
லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது"
 
"ஒட்டி உடையில் அழகு காட்டி
சட்டம் போட்டு திமிரு காட்டி
பாட்டு படித்து இனிமை காட்டி
புட்டி பாலூட்ட மடியில் உறங்குது"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பி கு ;
என் அம்மாவை என் மகன் எழுதுவதாக கதை வடிவமைத்துள்ளேன்
297943814_10221424717270145_8289047939070825_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Od5jHBBTINcAb6VEhNw&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCBFiPd0cWZ7FiK1Hc37Ldp9Ur16e1x_sFPd8o0TiFFpg&oe=662354E7 May be an image of 1 person
 
 
 

"வேதனை தீரவில்லை" 

3 days 16 hours ago
"வேதனை தீரவில்லை" 
 
 
"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்"
 
என்று பாடிச் சென்றாள் மூதாட்டி அவ்வையார். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என இலங்கை அரசாங்கம் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பாவிக்க வேண்டும் என்று திடீரென மறுமலர்ச்சி என்று கூறி இரசாயனப் பசளை இறக்குமதிக்கு முற்றாக ஜூன் 2021 இல் தடை விதித்தது. இதை அடுத்து அங்கு இரசாயன உரம், கிருமி நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் சேதனப்பசளையும் போதிய அளவு இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அதன் உபயோகமும் பயிற்றுவிக்கப் படவில்லை. அந்த இக்கட்டமான காலத்தில் தான் நானும் விடுதலையில் ஊர் திரும்பினேன்.
 
ஒளி வண்ண மலர்கள் கொண்ட எங்க ஊர் செடிகளில் என்றும் அழகு ஜொலிக்கும். மா மரத்தில் மாம்பழம் தொங்கும் கட்சி மனதை குளிர்விக்கும். இப்படியான எம் கிராமத்துக்கு தான், நான் புகையிரதத்தால் இறங்கி நடந்து போய்க்கொண்டு இருக்கிறேன்.
 
என் அப்பா விவசாயத்தில் மிகவும் வல்லுநர். எப்பேர்ப்பட்ட நிலையிலும் மனம் சோராது அதை எல்லாம் அழகிய பசுமையான வயல்வெளியாக மாற்றிவிடுவார். அவர் எல்லா கிராம மக்களுடனும் நன்றாக பழகி, அன்பாக அனுசரிப்பதுடன், எங்கள் கிராம தலைவர் கூட அவரே!
 
எங்கள் கிராமத்துக்குள் போகுமுன், நான் கிராமத்தின் எல்லையில் இருக்கும் காவல் தெய்வத்தை தாண்டித் தான் போகவேண்டும். இது எங்கள் கிராமத்துக்கு நீர்வழங்கும் குளக்கரையில் அமைந்து உள்ளது. நான் அந்த இடத்தை தாண்டும் பொழுது, கொஞ்சம் நின்று தலை உயர்த்தி ஒரு தரம் பார்த்தேன். என்னையே நம்பமுடியவில்லை, என் அப்பா, அந்த காவல் தெய்வத்திடம் எதோ முறையிட்டுக்கொண்டு இருந்தார். நான் மெதுவாக, சத்தம் வராதவாறு நடந்து கிட்ட போய், அவர் பின்னால் நின்றேன்.
 
" ஏன் இந்த அரசுக்கு அவ்வையார் பாடல் விளங்கவில்லை? நெல் உயர குடி உயரும் என்ற சிறு தத்துவமும் இவனுக்கு தெரியாதா ? குடி உயரவிட்டால், அங்கு கோனுக்கு [நாட்டை ஆள்பவனுக்கு] என்ன வேலை ?" என்று புலம்பிக்கொண்டு இருந்தார். நான் திடுக்கிட்டே விட்டேன். நான் மெல்ல பின்னோக்கி நடந்து, வயல் வெளி ஊடாக வீடு போகத் தொடங்கினேன். அங்கு நெற்கதிர்கள் பசுமை இழந்து பழுத்துப்போய் மஞ்சளாக பரவி இருப்பதை கண்டேன். அது மட்டும் அல்ல நேற்று பெய்த கடும் மழையாலும் காற்றாலும், நெற் கதிர்கள் சாய்ந்து இருப்பதுடன், வரம்புக்கு மேலால் நீர் வழிவதையும் கண்டேன்.
 
ஒரு சீரான மாற்றத்தை முறையாக அறிமுகப் படுத்த தவறிய அரசின் கொள்கையின் பிரதிபலிப்பை, அந்த வயல்களில் அல்லலுறும் மக்களின் முகத்தில் தெரிந்தது. நான் என்னை சரி படுத்திகொண்டு, அந்த வயல் வெளியில் நிற்கும் , எம் பக்கத்து வீட்டு செல்லப்பா மாமாவிடமும் செல்லாச்சி மாமியிடமும் அருகில் போனேன். " இந்த சீர்கெட்டுப் போன அரசு ஒழியட்டும் என" வசைபாடி என்னை வரவேற்றனர். இந்த அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்திற்கு மாறி இருக்க வேண்டும், அதே நேரத்தில், இன்று சனத்தொகை கூடிய காலத்தில், இயற்கை , செயற்கை இரண்டு முறையிலும் விவசாயத்தை நடை முறை படுத்தி இருந்தால், இன்று நாம் பட்டினியை நோக்கி போய் இருக்க மாட்டோம் என்று ஒரு விவசாய பாடமே எமக்கு நடத்தினர். இன்று அவர்கள் கை நீட்டி கடனாக வாங்கும் உணவு எல்லாம் அதிகமாக செயற்கை விளைச்சலே!
 
இப்படியே போனால், இங்கு வருங்காலத்தில் விவசாயியே இருக்கமாட்டான் என்று பற்றாக் குறைக்கு தம் எரிச்சலை கொட்டி தள்ளினர்.
அந்த நேரம் பார்த்து, அவசரம் அவசரமாக பதைபதைத்துக் கொண்டு என் அப்பாவும் ஓட்டமும் நடையுமாக அங்கு திரும்பி வந்தார். எங்கள் கணபதி மளிகை சாமான்கள் வாங்க என்று போனவர், தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டு விட்டார் என கண்ணீரும் கம்பலையுமாக கூறினார். ஆனால் அதற்கு முதல் தன் செத்த வீட்டுக்கு தேவையான வற்றையும் வாங்கி வைத்துள்ளார். அவ்வற்றை வயலில் இருந்த தனது அப்பாவின் கல்லறை மேல் வைத்துவிட்டு தான் தனது உயிரை மாய்த்தார் என்று கூறினார்.
 
அங்கு அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார். அதை நாம் அங்கு போய் பார்க்கும் பொழுது கண்டோம். அதில், அரசை மட்டும் சொல்லி குற்றமில்லை, அரசிடம் சுளை சுளையாக பணம் கறந்து ஆலோசனை கூறும் பேராசிரியார்களையும் முதல் குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று இருந்தது.
 
இரசாயனப் பசளை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் மூலம் உள்நாட்டு விவசாயத் துறையை சூழலுக்கு உகந்த விவசாயத் துறையாக மாற்றியமைக்க முடியும் என பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் கூறியதும், மற்றும் ஒரு பேராசிரியர் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாயத்தை 21 ஆம் நூற்றாண்டின் விவசாய கைத்தொழிலாக வளர்ச்சியடைந்த நாடுகள் பார்ப்பதாக கூறியதும் ஞாபகம் வந்தது. ஆனால் நாம் வளர்ச்சி அடைந்த நாடா ? அவர்கள் வளர்ச்சி அடைய, உற்பத்தியை பெருக்க, மலிவாக உணவு பொருட்களை தாராளமாக வழங்க, ஏறுமதி செய்து செல்வம் ஈட்ட, உண்மையில் என்ன செய்தார்கள் - என் மனதில் கேள்வியாக எழும்பின.
 
அதே நேரத்தில் அங்கு எல்லா விவசாயிகளும் சேர்ந்து இறந்தவரின் படத்தை கையில் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கையிலும் போராட்டங்களிலும் குதித்தனர். நானும் அவர்களுடன் ஒன்று சேர , என் விடுதலையை (Holiday) பொருட்படுத்தாமல் அங்கு அப்பாவுடன் சென்றேன்! வேதனை தீரும் என்ற ஒரு நம்பிக்கையில் !! என்றாலும் இன்னும் தீரவில்லை. அது ஜூலை ஒன்பது, 2022 தாண்டியும் நீள்வதை காண்கிறேன்!
 
மாறும் மக்களின் மனநிலை, குறிப்பாக மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நிரந்தரமாக , விடிவாக வருமா ?? 1948 இல் கிடைக்காத உண்மையான சுதந்திரம் வருமா ?? தமிழர் , தமிழ் பேசும் மக்களின் கொடுமையான , பரிதாப நிலை மாறுமா ?? தொலைத்த சம உரிமை வருமா ?? அல்லது இது இன்னும் ஒரு நாடகமா ??
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
293116681_10221316524805401_8465074122517372635_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=C1KXU25WE00Ab77UH-c&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD2-F3ELI2s4SAgq3FOEEaT654UtBxuW8F2TNGteyiOww&oe=6623444C 293200604_10221316525405416_7770267421772758873_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fdBHOvMaYHYAb6NBtPE&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBhIOhJ2zRt2p1hLAK36xBHiwafQ94aQDKKqvEU4kc1Nw&oe=662320C5
 
 

"மர்ம இரவுகள்"

4 days 15 hours ago
"மர்ம இரவுகள்"
 
 
பொதுவாக என் வேலை மாலை மூன்றரை மணிக்கு முடியும். ஆனால் அடுத்த நாள் விடுதலையில் யாழ்ப்பாணம் போக வேண்டி இருந்ததால், தொடங்கிய திட்டச்செயல் வேலையை [project work] ஓரளவு முடித்துவிட்டு போகவேண்டி இருந்தது. அப்பத்தான், எனக்கு மாற்றாக தற்காலிகமாக வருபவரால் அதை தொடர இலகுவாக இருக்கும். அத்துடன் அவருக்கு அதைப்பற்றி கொஞ்சம் தொலைபேசியிலும் மற்றும் குறிப்பேட்டிலும் ஒரு விளக்கம் கொடுக்கவேண்டியும் இருந்தது. ஆகவே அன்று என் வேலை முடிய ஆறு மணி தாண்டிவிட்டது.
 
கொஞ்சம் களைப்பாக இருந்ததாலும், மற்றும் என்னுடன் பணிமனையில் இருந்து வரும் நண்பர்கள் எல்லோரும் வீடு போய் விட்டதாலும், நான் தனியவே போக வேண்டி இருப்பதால், பக்கத்தில் இருந்த கடை ஒன்றில் இரண்டு பீர் போத்தல் [bottle of beer] வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு போனேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் பேருந்தை தவறவிட்டுவிட்டேன். இரவு என்பதால், அடுத்ததுக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் நிற்கவேண்டும். அது மட்டும் அல்ல, இங்கு நடைபெறும் சில அரசுக்கு எதிரான கலவரங்களால், ஒன்பது மணியில் இருந்து ஊரடங்கு சட்டமும் ஒருபக்கம். எனவே குறுக்கு வழியில், ஆற்றின் வழியே நடக்க தொடங்கினேன்.
 
அன்று முழுமதி நாள் என்பதால், ஆற்றங் கரையோரமாக நிமிர்ந்து நிற்கும் மூங்கில் மரங்களுக்கும் மற்றும் சோலையில் பூக்கும் மலர்களுக்கும் இடையில், சந்திரன் அழகாக வானில் தவழ்ந்து கொண்டு இருந்தான். அந்த அழகு என் காதலியின் நினைவை தந்து என்னை துன்புறுத்த செய்தன!
 
"பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே!"
[கானல் வரி - சிலப்பதிகாரம்]
 
சோலையில் பூக்கும் வாசமுள்ள மலரே, உன்னால் இந்த மணலும் மணக்குதே, என் காதலியின் உடம்பும் அது போல வாசனை வீசுதே! குற்றமில்லா இன்பப் பேச்சும், கணந்தொறும் பருக்கின்ற இளமையுடைய அவளது முலையும் எங்கே! முழு நிலவு போன்ற முகமும், வில்லுக்கு இணையாய் வளையும் புருவமும் எங்கே!, எழுகின்ற மின்னலைக் கொண்ட இடையும், என்னைத் துன்புறுத்துகிறதே இங்கே! இன்றைய கூடுதலான வேலையும், அவளின் நினைவும், தனிமையும் வாட்டிட, அங்கு உயர்ந்து காற்றுக்கு ஆடிக்கொண்டு இருந்த மூங்கில் மரங்களுக்கிடையில் இருந்து, நான் கொண்டுவந்த மதுவினை, கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினேன். நான் மிகவும் சோர்வாக இருந்ததால், கொஞ்சம் கண்களை மூடினேன். என்னை அறியாமலே அங்கே, மணலில் தூங்கிவிட்டேன்!
 
"மாலைக் காற்று மெதுவாய் வீச
பாடும் குயில்கள் பறந்து செல்ல
வெண்நிலா ஒன்று கண் சிமிட்ட
வெற்றி மகளாய் இதயத்தில் வந்தாளே!"
 
"வானம் தொடும் வண்ணத்துப் பூச்சியாய்
வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து
மனதை மயக்கும் வாசனை உடன்
மனதை நெருடி மகிழ்ச்சி தந்தாளே!"
 
என் கனவில் வந்த என்வளுடன்கொஞ்சம் ஆனந்தமாக இருந்த எனக்கு, திடீரென என் கால் மாட்டில் அவளே வந்து கொஞ்சுவது போல உணர்வு வந்தது, இன்னும் களைப்பாக இருந்ததால், கண்ணை திறக்காமலே, காலை உதறினேன். உதறமுடியவில்லை, உண்மையில் யாரோ கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்து இருப்பது போல இருந்தது. சட்டேன துள்ளி எழும்ப முயற்சித்தேன். முடியவில்லை, கண்ணை முழித்து, நல்லகாலம், முழுமதி நாள் என்பதால், பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு இளம்பெண், அலங்கோலமான அரைகுறை உடையுடன் நினைவுற்று என் கால் மேல் கிடந்தாள்.
 
திடுக்கிட்டு பயந்து போனேன். கொஞ்சம் கண்ணை மேலே உயர்த்தினேன். ஒரு வாலிபன் தனது தொலை பேசி மூலம் என்னையும் அவளையும் சேர்த்து படம் எடுத்துக்கொண்டு இருந்தார். நான் எழும்புவதை கண்டதும், அங்கிருந்து ஓடி, மோட்டார் சைக்கிளில் ஆயத்தமாக நின்ற மற்றோரு வாலிபனுடன் எதோ சிங்களத்தில் பேசிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
 
நான் விரைவாக அவர்களின் பின் ஓடி, என் தொலைபேசியில் எடுக்கக்கூடிய அளவு வீடியோ எடுத்தேன். பின் பக்கம் என்றாலும், அவர்கள் துணியால் மறைத்த இலக்கத்தகடு, ஓடும் வேகத்தில், துணி நழுவி விழ, அது அதை பதித்துவிட்டது. எனது வெற்று பீர் போத்தலில் ஆற்று நீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து, எனக்கு தெரிந்த முதல் உதவியும் செய்தேன். அவள் எதோ சிங்களத்தில் முணுமுணுத்துக்கொண்டு மெல்ல மெல்ல கண்ணை திறக்க தொடங்கினாள். அது எனக்கு நிம்மதியை தந்தது. ஏனென்றால், கட்டாயம் அவள் என்ன நடந்தது என்று உண்மை சொல்லுவாள். அப்படி என்றால் ஒரு பிரச்சனையும் எனக்கு வராது என்று.
 
ஆனால் ' நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று' என்பது போல, நான் அவளிடம், நீ யார், என்ன நடந்தது என்று கேட்கும் முன்பே காவற்படையினர் பல வண்டிகளில் வந்து என்னை கைவிலங்கு போட்டு, என்னை ஒன்றும் கதைக்கவிடாமல் அடித்து இழுத்து சென்றனர். அவள் எதோ சிங்களத்தில் அவர்களிடம் அழுதுகொண்டு சொல்வது மட்டும் எனக்கு தெரிந்தது. அவர்கள் இவன் ட்ரஸ்ட்வாதி [பயங்கரவாதி] என எனக்கு முத்திரையே குத்திவிட்டார்கள். அதற்குள் மருத்துவ அவசர ஊர்தியும் வர, அவளை அதில் ஏற்றுவது மட்டுமே எனக்கு தெரிந்தது.
 
யார் அவள், அந்த இரு வாலிபரும் யார், அவளுக்கு என்ன நடந்தது எல்லாமே எனக்கு ஒரு மர்மமாகவே இருந்தது. என் கால்சட்டை பாக்கெட்டை மெல்ல ஒரு கையால் தொட்டு பார்த்தேன். என் தொலைபேசி அங்கு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என்னை ஒரு நீதிபதியிடம் கொண்டுபோய், இவன் ஒரு பயங்கரவாதி, ஒரு பெண்ணை கெடுத்து கொலை செய்ய முயற்சித்தான் என குற்றம் சாட்டி, என்னை தங்கள் காவலில் வைத்து முழுதாக விசாரிப்பதற்கு அனுமதி தரும்படி அவரிடம் கேட்டனர்.
 
நீதிபதி என் பெயர், விபரங்களை பதிவுக்காக கேட்டார். நான் அந்த சந்தர்ப்பத்தில், என் தொலை பேசியை எடுத்து, இதில் ஒரு வீடியோ இருக்கு அதையும் பார்க்கவும் என கொடுத்து, என் முழுவிபரத்தையும் , அன்று நான் பணிமனையில் ஆறு மணிவரை, வேலை செய்ததையும், பீர் வாங்கிய கடையையும், நான் ஒரு பொறியியலாளர் என்பதையும் என் வாக்குமூலமாக ஆங்கிலத்தில் அவரிடம் சமர்ப்பித்தேன் .
 
இப்ப விடிய தொடங்கிவிட்டது. என்றாலும் என் மனதில் அந்த இரவின் மர்மம் புரியவில்லை. அந்த இரு வாலிபரையும் தேடுவதை விட்டுவிட்டு,
என்னை விசாரிப்பதிலேயே அக்கறையாக இருந்தனர். இன்னும் ஒன்றும் எனக்கு மர்மமாக இருந்தது. எப்படி இத்தனை வண்டிகளுடன் அங்கு காவற் படையினர் வந்தனர். அந்த இருவரை தவிர, வேறு யாரும் அங்கு இருக்கவில்லை? எப்படி என்னையோ அந்த பெண்ணையோ விசாரிக்க முன் என்னை பயங்கரவாதி என்றனர்? அவளை நான் கெடுத்தனர் என்றனர் ? எல்லாமே மர்மமாக இருந்தது.
 
என்னை தங்கள் காவல் நிலையத்துக்கு கொண்டுபோய், ஏற்கனவே அவர்களால் சிங்கள மொழியில் தயாரித்த ஒரு வாக்குமூலத்தை, நான் கொடுத்ததாக அதில் ஒப்பமிடும்படி வற்புறுத்தினர். 'உண்மை, தோற்பது போல் இருந்தாலும், அது கட்டாயம் வெல்லும்'. நான் அதற்கு இசையவில்லை. அந்த நேரம் அந்த நீதிபதியிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது, உடனடியாக விடுதலை செய்யும் படியும், என் தொலை பேசியை நீதிபதி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும். அவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தபடி, வேறுவழி இன்றி என்னை கைவிலங்கு அகற்றி வெளியே விட்டனர்.
 
ஆனால் இன்றுவரை அந்த இரு வாலிபர் யார், அவள் யார், அவள் இப்ப எங்கே ? என்ற மர்மம் வெளிவரவே இல்லை. என்றாலும் சமூக வலைத்தளங்களில், அவளின் பெயர் குறிப்பிடாமல், யாரோ பெரும் புள்ளியின் மகனும் நண்பனும் அவளை அனுபவித்துவிட்டு, இறந்துவிட்டாரென மூங்கில் பத்தையில் போட்டுவிட்டு சென்றதாக மட்டுமே இருந்தது, அதில் என்னைப் பற்றி ஒன்றுமே இல்லை ?
 
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்
இமைகள் மூடி பல நாளாச்சு ...
சொல்லுங்கள், என் கண்களை மூடினால்
அந்த மூவரும் வரிசையாய் வருகுது ...
தாருங்கள், தீர்வைதந்து மர்மம் கலையுங்கள்
கேள்விகள் கேட்டு உள்ளம் வதைக்குது ...
கண்களுக்குள் புதையாத மர்மம் தருகிறேன்
கவனமாக ஒன்று ஒன்றாய் அவிழ்க்க ..."
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
288186080_10221185141520901_8179381818398215754_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gi3ASOqpLWQAb5WW7NC&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDducRXmGSIHsGgl9TvXMa_V2j9RywwLZNJIr-YLBIWbQ&oe=6621F1CF  287992146_10221185142280920_883232513016447641_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=AbACIcZupjkAb4pdnU4&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAemaePQ2AYlSRMWr5CsrX9nXfJ6U8stTggPMkzayQ7Jg&oe=66220C47
 
 
 
 

"வறுமையின் நிறம் சிவப்பு"

4 days 15 hours ago
"வறுமையின் நிறம் சிவப்பு"
 
 
கொழும்பு, காலி முக திடலில், வறுமையை ஒழிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்து ஐம்பது நாள் தாண்டியும் மக்களின் போராட்டம் முடிவற்று இன்னும் தொடர்கிறது. சிவப்பு கொடிகள், கருப்பு கொடிகள் பல அங்கு மக்கள் ஏந்தி அமைதியான ஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) செய்கிறார்கள். கருப்பு கொடி துக்கத்தை குறிக்கும் என்றாலும், சிவப்பு கொடி எதற்க்காக ?. கூட்டத்தில் நானும் ஒருவனாக இன்றுதான் இணைந்தேன். என் மனதில் முதல் தோன்றியது அது தான். ஏன் சிவப்பு ?
 
எல்லோரையும் பார்க்கிறேன், அவர்களின் வறுமை எல்லையை தாண்டி இருப்பதை அவர்களின் கண் காட்டுகிறது. கோப ஆவேசத்தில் அது சிவந்து இருப்பதை காண்கிறேன்! மா சே துங் [Mao Zedong] எழுதிய [கம்யூனிசம்] பொதுவுடைமை புத்தகத்தினை சிவத்த புத்தகம் ["Red Book"] என்றும் அழைப்பது வழமை. இப்ப எனக்கு ஏன் வறுமையின் நிறம் சிவப்பு என்பது தெளிவாக உணர முடிந்தது.
 
நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு,படுக்கையில் சரிந்து இருந்து நேரத்தை பார்த்தேன். அது எட்டு மணியை காட்டியது. நான் இப்ப படுத்தால், நேரத்துடன் எழும்பிவிடுவேன். இன்னும் இரண்டு மணித்தியாலம் ஆவது பொறுத்து இருப்பது நல்லது. ஆனால், அதுவரை எதாவது வாசிக்கலாம் என்றால், என்னிடம் இருப்பதோ பழைய பழைய புத்தகங்களே, அதை திருப்பி திருப்பி எத்தனை தரம் வாசிப்பது. வறுமையில் இருப்பது உண்மையில் சலிப்பு தான். இதை மனித வாழ்வில் ஒரு மலட்டுத்தன்மை என்று கூட சொல்லலாம். சாப்பிடவே போராடிக்கொண்டு இருக்கும் நான், எப்படி புது புத்தகம் வாங்குவேன் ?
 
கொஞ்ச நேரம் வெளியே, காசு இல்லது வாங்கக் கூடிய காற்றை வாங்கப் புறப்பட்டேன். என் மனம் என்னைவிட பல மடங்கு வேகமாக, ஆனால் பின்னோக்கி சென்றது. அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலத்திற்குள் புகுந்துவிட்டது. அங்கே பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவரின் புறநானூறு 160 , 164 இல் இருந்து சில அடிகளை அது முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.
 
"உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று
இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும்
25 வினவல் ஆனா ளாகி நனவின்"
 
'என் மகன் இல்லத்தை மறந்து விளையாடச் செல்வதும், பசி தாங்க முடியாமல் இல்லம் திரும்பி, கூழ் இருக்கும் பானையைத் திறந்து பார்ப்பதும், அதில் கூழ் இல்லாமையால் அழுவதும், அதனைப் பார்த்த என் மனைவி ‘அழுதால் புலி வந்துவிடும், அழாதே’ என்று அச்சுறுத்துவதும், பின் நிலாவை வேடிக்கை காட்டித் தேற்றுவதும் என் வீட்டில் வாடிக்கையாகப் போய்விட்டது' என்று அவன் புறநானூறு 160 இல், மன்னன் குமணன் இடம் கூறுவதும், அதை தொடர்ந்து
 
"ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!"
 
'சமைத்தலை முற்றிலும் மறந்த உயர்ந்த பக்கங்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. உடல் மெலிந்து வருந்தி, பால் இல்லாததால் தோலோடு சுருங்கித் துளை மூடிய பயனில்லாத வற்றிய முலையச் சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தை நோக்கி, நீர் மல்கிய ஈரம் படிந்த இமைகளைக்கொண்ட கண்களுடைய என் மனைவியின் துன்பத்தை நினைத்து உன்னை [குமணன்] நாடி வந்தேன்' என்று புறநானூறு 164 இல் கூறுவதும் வறுமையின் நிறம் எவ்வளவு சிவப்பு என்பதை காட்டியது.
 
ஆமாம், இப்ப நான் வறுமையில் இருந்தாலும், ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன், இதைவிட கொடூர நிலையில், ஒரு நாளைக்கு ஒரு கஞ்சிக்கு - உயிரை பிடித்து வாழ - முள்ளிவாய்க்காலில் வரிசையில் நின்றதை நான் மறக்கவில்லை. அந்த அனுபவம் தான் என்னை இன்னும் வாழவைக்க உறுதி தந்துகொண்டு இருக்கிறது.
 
உயிர்கள் எல்லாம் தாம் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை உணவு. பாதுகாப்புக்கு உறைவிடம். அவ் உணவிற்காக நொடி பொழுதும் பல போராட்டங்களை அன்று முதல் சந்தித்துக் கொண்டே வந்துள்ளது. பொதுநிலையில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தது வரை மனிதனுக்குள் முரண்பாடுகள் இருக்கவில்லை. வறுமை சிவப்பாகவும் இருந்ததில்லை. சேமிக்க தொடங்கிய பின்னரே தோன்ற ஆரம்பித்தன இந்த முரண்பாடுகள். இம்முரண்பாடுகளே வர்க்கமாய் நிலைபெற்று இன்று வரை இயற்கைச் சமூகத்தை செயற்கையாக்கியிருக்கிறது. ஆமாம் இந்த நவீன உலகிலும், உண்ண உணவின்றி, தவிக்கும் என்னைப் போல் பலரை காணலாம். அன்று அரசனிடம் முறையிட்டனர். இன்று அரசிடம் முறையிடுகின்றனர், அது தான் வித்தியாசம்.
 
அடுத்தநாள் காலை, பத்து மணிக்கு பிறகு நான் எழும்பினேன், பசி குறைந்த பாடு இல்லை. நான் எடுக்கும் ஓய்வூதியம், இன்றைய விலைவாசி உயர்வில் கட்டுப்படி ஆகாது. அதுமட்டும் அல்ல, எல்லா பொருட்களுக்கும் நீண்ட வரிசையிலும் நிற்க வேண்டும். எதோ என்னிடம் இருந்த தேயிலை தூளில், மிக கொஞ்சமாக எடுத்து ஒரு தேநீர் ஆக்கி , என்னிடம் இருந்த நாளான [stale] பானில் இரு துண்டுகளை அதில் தோய்த்து என் வயிற்றை சிறிது நிரப்பினேன். ஆனால் அது நிறைந்த பாடாக இல்லை. எனவே என்னிடம் இருந்த ஒரே ஒரு முட்டையையும், எண்ணெய் இல்லாததால், எண்ணெய் இல்லாமலே பொரித்தேன். என்றாலும் முட்டையை என்னிடம் மிகுதியாக இருந்த அதிக மிளகாய் தூளில் வறட்டி எடுத்தேன். ஏன் என்றால் இந்த உறைப்பு என் பசியை அடக்கும் என நான் நம்பியதால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.
 
யாரோ என் கதவின் ஊடாக எதோ போடுவது தெரிந்தது. தட்டுத்தடுமாறி எழும்பி, அது என்ன என்று பார்த்தேன், அவை துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரச்சாரத் துண்டுகள். என் அடுத்த ஓய்வூதியத்திற்கு இன்னும் நாலு நாள் இருக்கு. அதன் பின்புதான் ஏதாவது கொஞ்சம் வயிற்று பசிக்கும் அறிவு பசிக்கும் வாங்கலாம், ஆகவே இப்ப கொஞ்சம் வயிற்றுப பசி ஆறி இருப்பதால், அறிவு பசிக்கு அந்த இலவச துண்டுகளை ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினேன்.
 
சிவத்த கருத்த கொடிகளுடன் தமது ஐம்பது நாள் போராட்டம் பற்றியும், மற்றும் இதுவரை இணையாதவர்களை இணையும் படியும் அழைப்பு இருந்தது. 1917 இல் ஏற்பட்ட, சமூக மற்றும் பொருளாதார மாற்றஙகள் வேண்டி, உருசியப் மக்கள் செய்த புரட்சி ஞாபகம் வந்தது. அந்த புரடசிக்கு அடையாளமாக சிவப்பு கொடி இருந்தது. ஆகவே சிவப்பு கட்டாயம் வறிய [ஏழை] மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் சின்னம் என்பதில் உறுதியானேன். நானும் அதில் ஒருவனே என்ற உணர்வு என்னை அங்கு போய் சேர தூண்டியது.
 
என்றாலும் கொஞ்சம் மனதில் சஞ்சலமும் தவிப்பும் தோன்றியது. நாம் ஒரு நேர கஞ்சிக்காக, குண்டுகளுக்கிடையில், உயிரையும் கையில் பிடித்து காத்திருந்த தருவாயில் கூட, வெடி கொளுத்தி கொண்டாடியவர்களே இவர்கள். என்றாலும் மன்னித்து மறந்துவிடு என்ற எம் பண்பாடும் நினைவுக்கு வந்தது. எப்படியாகினும் நாம் முன்னைய செயலை மறக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும் போல் தோன்றியது.
 
கணவன், மனைவி இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலில், "நான் செய்த தவறை மன்னித்து, மறந்துவிட்டதாகச் சொல்கிறாய். பின், ஏன் மீண்டும், மீண்டும் அதைப் பற்றிப் பேசுகிறாய்?" என்று கணவன் தன் மனைவியிடம் கேட்கிறார். அதற்கு, மனைவி, "நான் மறந்து, மன்னித்துவிட்டேன். ஆனால், நான் மறந்துவிட்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறேன்" என்று பதில் சொல்கிறார். அப்படித்தான் என் நிலையும் இருந்தது.
 
இப்ப நான் அவர்களில் ஒருவனாக, காலிமுகத்திடலில் சிவத்த கொடியுடன் "வறுமையின் நிறம் சிவப்பு" என்று, அந்த வறுமைக்கு சாதி பேதம், இனத்துவேசம், மத வேறுபாடு ஒன்றுமே இல்லை என்று, அரசியலுக்கு அப்பாற் பட்டு, இன்று உணர்ந்து நிற்கும் இளம் தலைமுறையுடன், தாத்தாவாக நானும் இணைந்துவிட்டேன்!
 
 
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்
உரிமை இழந்து பல ஆண்டாச்சு ...
சொல்லுங்கள், நீதியான நல்ல தீர்வுகளை
வரிசை குறைத்து அப்பாவிகள் வாழ ...
தாருங்கள், கவலை தீர்க்கும் முடிவுகளை
எல்லோரையும் சரி சமமாக மதிக்க ...
கூடுங்கள், ஒன்றாய் குரல் எழுப்புங்கள்
கொதித்து எழுந்த மக்கள் கேட்கிறார்கள் ... "
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
287344222_10221166254968749_1735153041608774595_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=UkBeDIiI4s4Ab65tH-H&_nc_oc=Adj_X5MVQA_5bl9jIcwG7PIlEpGNhLshw92MGXelhl526WDYOcvqyMxiQl2kzdYWUpvb2q3YREjqB3wbXtryQtZE&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBEuOiyn22ARMbPkgPve1e-DprkGykwvwHS6IHnUn4DTg&oe=6621F83D  287188336_10221166254888747_8516474758046253073_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nPPlsR1YtUAAb6gDeT6&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCEf82U5WhgJrfVqdtWfwS54S64C5mV6YGyNmj1ohuxRw&oe=6621FD62
 
 

'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை]

5 days 15 hours ago
'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை]
 
 
தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்!
 
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் மற்றும் அயல், அந்த குறைபாடை நீக்கி, எந்தநேரமும் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. தனிமை என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இரவில் கூட அண்ணாவின் கடைசி மகள், கலைமதி, வயது மூன்று என்னுடனே வந்து படுப்பார். அந்த தருணத்தில் தான் ...
எனக்கு அரசாங்கம் கல்வி உதவித்தொகை தந்து கப்பல் எந்திரவியலில் பயிற்சி பெற ஒரு ஆண்டுக்கு ஜப்பானுக்கு அனுப்பினார்கள். கட்டுநாயக்க கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பயணம். அண்ணா குடும்பம் மற்றும் ஒரு சில அயலவர்கள் வழியனுப்ப, ஒரே குதூகலமாக அங்கிருந்து புறப்பட்டேன். விமானத்தில் பறப்பது முதல் தரம் என்பதால், சாளரத்தின் ஊடக வெளியே பார்ப்பது , பக்கத்தில் இருந்தவருடன் கதைப்பது இப்படி பொழுது போய் விட்டது.
 
டோக்கியோ விமான தளத்தில் வந்து இறங்கியதும் ஆளுக்கு ஒருபக்கமாக போகத் தொடங்கி விட்டார்கள். என்னை அங்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர்கள் வரவேற்று கூட்டிச்சென்றார்கள். அதன் பின்புதான் தனிமை என்றால் என்ன என்று முதல் முதலாக உணரத் தொடங்கினேன்!
 
அவர்களின் மொழி புரியவில்லை. அதனால் கதைக்க முடியாத சூழ்நிலை. பொதுவாக பல்கலைக்கழகம் வரை தம் மொழியிலேயே படிப்பதாலும் மற்றும் பணி இடங்களிலும் அப்படியே என்பதாலும் ஆங்கிலம் அங்கு ஒருவரும் பாவிப்பதில்லை. மிக மிக சிலருக்கே ஆங்கிலம் தெரியும்.
 
என் பயிற்சி ஷிமோனோசேக்கி பல்கலைக்கழகத்தில் தரப்பட்டது. இது டோக்கியோவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். ஆகவே இங்கு பொதுவாக ஒருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. எனவே எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர், பயிற்சியின் போது மட்டும் இருப்பார். மற்றும் படி அவர் தானும் தன்பாடும்.
 
அன்று கைத்தொலை பேசிகளோ, சமூக வலைகளோ இல்லாத காலம். ஒரு இருண்ட உலகத்தில் இருப்பது போல ஒரு உணர்வு. நான் இருந்த மாணவர் விடுதியில் எல்லோரும் ஜப்பான் மாணவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் துப்பரவாக தெரியாது. அங்கு தொலைக்காட்சி இருந்தாலும் அவை முற்றிலும் ஜப்பான் மொழியிலேயே! நல்ல காலம் நான் ஒரு சிறிய வானொலி வாங்கி, அதன் மூலம் ஆங்கிலத்தில் உலக நடப்புக்கள் கேட்பேன். அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் துணை !
 
தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என்பதை அங்குதான் நான் முதல் முதல் உணர்ந்தேன். குடும்பம் மற்றும் நண்பர்களைவிட்டுப் பிரிந்து வெளியில் சென்றது ஒரு முட்டாள்தனம் போல் எனக்கு இருந்தது. ஆமாம், தான் செய்த கொலைக் குற்றத்துக்காக ஒருவன் பத்துக்குப் பத்தடி அறையில், அங்கு வெளிச்சமோ, வெளியிலிருந்து சத்தமோ வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும் சிறைக்கு போனது போலவே நான் உணர்ந்தேன். என்ன குற்றம் செய்தேன், எனக்கு ஏன் இந்த வேதனை ?. இப்படியான எண்ணங்கள் நித்திரைக்கு போகும் பொழுது அடிக்கடி மனதில் நிழலாக ஆடும். என் குடும்பத்தாருடன் கடித போக்குவரத்து மட்டுமே, ஒரு மாதத்திற்கு அதிகமாக ஒரு கடிதமே!
 
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தனிமையை உணரலாம். அருகில் யாரும் பேச்சு துணையாக இல்லாமல் இருக்கும்போது தனிமையை உணர்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. அப்படியான ஒன்றில் தான் நான் சிக்கி இருந்தேன், எப்ப ஒரு ஆண்டு முடியும் என்பதே, பயிற்சியை விட முக்கியமாக எனக்கு இருந்தது.
 
அந்த நேரத்தில் தான், தற்செயலாக, அந்த பல்கலைக்கழகத்துக்கு உதவி விரிவுரையாளராக அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வந்த கணேயாசு என்ற பெண்ணை சந்தித்தேன். தனிமை என்ற சிறைவாசத்தில், இருட்டில் இருந்தவனுக்கு, வெளிச்சம் வந்தது போல் எனக்கு இருந்தது. பல்கலைக்கழக நேரம் போக மற்ற நேரங்களில் அவர் என் கூட்டாளியாக, வெளியில் சுற்றி திரிவது, பல விடயங்களை பற்றி கதைப்பது என தனிமை மறந்து மிகுதி காலம் சந்தோசமாக சென்றது. ஆனால் ஒரே ஒரு குறை மட்டுமே, இது வரை நகராது இருந்த நாட்கள், இப்ப கடுகதி வேகத்தில் போக தொடங்கி விட்டது!
 
என்றாலும் நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் அந்த தனிமை உலகம் என்று சொல்லலாம். நல்ல பாடங்கள் கற்றுத் தருவது வாழ்க்கையாம்! அந்த வாழ்க்கைக்கு நல்ல பாடங்கள் கற்று தருவது கட்டாயம் ஒரு தனிமை தான் என்பது என் அனுபவம்!
 
"தனித்திருந்து விழித்திருந்து
தனிநிலை அனுபவித்தவனுக்கு
தனித்திருப்பதும் விழித்திருப்பதும்
தடையாய் என்றும் தெரியவில்லை...!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
279140118_10220916349961280_2919729902825404171_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=aw_Cvy8dei8Ab6zehyV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA_fZBoyA1KFfhFJwsfAtV4C5FC-R4jCufVti527fRsmA&oe=6620B1FA  No photo description available.

"சாதகப் பறவைகள்"

5 days 15 hours ago
"சாதகப் பறவைகள்"
 
 
அத்தியடி, யாழில் எங்கள் வீட்டுக்கு அருகில் இரு வயது போன தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இருவரும் மாலை நேரத்தில் படலைக்கு அருகில் வீற்றிருந்து வருவோரையும் போவோரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் இருவரும், வாயில் பற்கள் இல்லாத, பொக்கு வாய் என்பதால், பொதுவாக கஞ்சி குடிப்பதே தமது உணவாக கொண்டும் இருந்தார்கள்.
 
எனக்கு அவர்களை காணும் போதெல்லாம் 'சாதகப் பறவைகள்' ஞாபகம் தான் வரும். ஏன் என்றால் புராண, இதிகாசங்களில் இந்தப் பறவையை மழை நீரை மட்டுமே அருந்தும் என்றும் [இங்கு கஞ்சி நீர்] மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் [இங்கு மக்களை பார்த்து] என்றும் வர்ணிப்பதை பார்த்து இருக்கிறேன்.
 
அவர்கள் நலம் விசாரிப்பவர்களிடம் ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களை போதிப்பதும் மற்றும் அதேநேரம் கர்வம் கொண்டவர்களாகவும் இருந்தது, அவர்களை நான் 'சாதகப் பறவைகள்' என்று அழைப்பது சரியே என்று எனக்கு பட்டது.
 
ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம், துதி 2-42 இல், இந்த 'சாதகப் பறவையை' நோக்கி: "ஓ, அதிர்ஷ்டம் தரும் மகிழ்ச்சியான பறவையே! பருந்து, கழுகு, வேடனின் அம்பு ஆகியவற்றில் இருந்து, உனக்கு ஒரு ஆபத்தும் நேரிடக் கூடாது." என்று போற்றுவது போல, நான் அவர்களை காணும் நேரம் எல்லாம் இந்த கொடிய கொரானாவிலும் மற்றும் நோய்களிலும் இருந்தும் இவர்களை என்றென்றும் காப்பாற்று என்று வேண்டுவது வழமை.
 
அன்று நான், விடுதலையில் வெளியே போய், வீடு திரும்புகையில், அவர்களின் வீடு வெறிச்சோடி இருப்பதை கண்டேன். உடனடியாக அம்மாவிடம் விசாரித்ததில், இருவருக்கும் கடும் கொரோன வந்து ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை விட்டு நீங்கினார்கள் என்பதை அறிந்து, என்னை அறியாமலே
 
'சாதகப் பறவைகள் இனி எம் மனதில் என்றும் சகாப் பறவைகள்'
 
என்று கண்ணீர் மல்க கத்தியே விட்டேன்!
 
"ஓ, மங்களச் செய்தி அறிவிக்கும் பறவையே! தந்தையர் பகுதியில் [இறந்துபோன முன்னோர்கள் வாழும்] இருந்துகொண்டு, ஒலி எழுப்பு. திருடர்களும், பாவம் செய்வோரும் எங்களைத் தாக்காமல் இருக்கட்டும். பொதுச் சபையில் நாங்கள் உரத்த குரலில் (உன்னைப் போல / சாதகப் பறவை போல) பேசுவோமாக." என மேலும் துதி 2-42 கூறுவது போல, அந்த உன்னத தம்பதிகள் எம்மை என்றென்றும் காப்பாறும் தெய்வங்கள் என்ற நம்பிக்கை என்னிடம் எனோ தானாகத் தோன்றி விட்டது !!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
274265404_10220625812818033_2339629878116087210_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=r4J30ChRVDEAb6uaMaY&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfByOJiGhxCPLm3B_d2OZ4_siRU3ajreRZNCDHACpXLITQ&oe=6620A2A9
 
 

"கனவில் வந்த நங்கை"

6 days 18 hours ago
"கனவில் வந்த நங்கை"
 
 
ஒருமுறை நான் வாலிபனாக இருந்த காலத்தில், இயற்கை மணம் பரப்பும் மலைநாட்டின், எழில் மிகு மாநகரம் கண்டியில், 1752 ஆம் ஆண்டில், கீர்த்தி ஸ்ரீ இராஜ சிங்கன் அரசனாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட, கண்டி செல்வ விநாயகர் ஆலயத்துக்கு அருகில் அன்று இருந்த செல்வன் கஃபேயில், சைவ உணவு சாப்பிட்டுவிட்டு, சில்லறை காசு திருப்பி வாங்கும் பொழுது ஒரு ஐந்து ரூபாய் தாள் என்னை எனோ திடீரென கவர்ந்தது. அதில் யாரோ ஒரு பெண், தமிழில் தன் பெயரும், கண்டி விலாசமும் எழுதி இருந்தார்.
 
நான் பேராதனை வளாக விடுதிக்கு சென்றதும், நீங்க யார்?, உங்க ஐந்து ரூபாய் இப்ப என்னிடம் என, சிறு குறிப்புடன், என் விடுதி விலாசத்தையும் சேர்த்து அன்றே தபால் அனுப்பினேன். என்றாலும் ஒரு மாதமாகியும் ஒரு பதிலும் இல்லை. நானும் அதை மறந்துவிட்டேன்.
 
ஒரு வார இறுதிநாள், நண்பர்களுடன் மகாவலி ஆற்றங்கரையில் பொழுது போக்கிவிட்டு, அன்று இரவு நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென யாரோ கதவை தட்டுவது போல் இருந்தது. களைப்பாக இருந்தாலும், ஓரளவு என்னை தேற்றிக்கொண்டு, கதவை திறந்தேன்.
 
அங்கே, தேவலோக ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை போல அழகிய ஒப்பனைகளுடன், கண்ணை கவரும் அழகு எழிலுடன், ஓரு நங்கை நின்றாள். என்னால் நம்பவே முடியவில்லை. திகைத்தே விட்டேன்!
 
" பெண்ணுக்கு அழகு செய்ய பொட்டிட்டுப் பார்ப்பது" என்பது தமிழரின் ஒரு வழக்கு!, என்றாலும் இவள் நெற்றியில் அப்படி ஒரு பொட்டும் இல்லை. ஆனால் இயற்கையான வனப்பும், வசிகரமும் நிறைந்து இருந்தாள். கருங்குழல் சரிந்து விழ, விரிந்த கயல் விழிகள் மண்ணோக்கி பின் நாணம் விடுபட்டு வாள் வீச்சையும், வேல் பாய்ச்சலையும் மழுக்கிவிடும் பார்வையால் என்னை பார்த்தாள்!. இல்லை இல்லை கொன்றாள்!! வயிரமணிக் கழுத்து, துடித்த மார்பு, துலங்கு கரம். இவைகளுக்கு துணையாகும் தோள். கைம்மணம் காட்டும் காந்தள் விரல்கள், இல்லாதது போல இருக்கின்ற மெல்லிடை ... எப்படி நான் அவளை சொல்வேன்!!
 
அவள் என் வியப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எதோ நாம் பலநாள் பழகிய நண்பர்கள் போல், எந்தவித அச்சமும் இன்றி, புருவம் உயர்த்தி புன்னகை பூத்து அருகில் வந்தாள். வந்ததும் வராததுமாக எங்கே என் ஐந்து ரூபாய் என்று கேட்டு, என் அறையில் அதை தேடவும் முற்பட்டாள். நான் மலைத்தே விட்டேன்!
 
பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு நேர் சந்தித்ததில் எனக்கு ஆனந்தம் தான், என்றாலும் நான் இப்படி நடக்கும் என என்றும் எதிர்பார்க்க வில்லை. தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி கலகல பேச்சால் நெஞ்சைப் பறித்தவள், எப்படியோ அந்த ஐந்து ரூபாயை எடுத்து விட்டாள். அவ்வளவு தான், துள்ளி குதித்தாள் சந்தோசம் தாங்காமல். என்றாலும் என் நெஞ்சம் இன்னும் திக்குத்திக்கு என துடித்துக்கொண்டு தான் இருந்தது. கைகால்கள் எனோ ஓடவில்லை. ஆனால் அவளோ தரதர என்று என்னை இழுத்து, படபட என இமைகள் கொட்ட, கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி, சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு, சரசரவென்று துள்ளி ஓடி விட்டாள்!!
 
நான் அவளை எட்டிப்பிடிக்க கையை ஓங்கினேன். ஆனால் அது என் தலைமாட்டுக்கு மேல் தொங்கிய ஒரு படத்தை தட்டி விட்டது தான் மிச்சம்!! என்னை கொஞ்ச நேரம் கதிகலங்க வைத்து இன்பம் மூட்டியது 'கனவில் வந்த நங்கை' என்று படம் நிலத்தில் விழுந்து உடையும் பொழுது தான் உணர்ந்தேன்!!
 
"மஞ்சள் நிலாவில் கொஞ்சம் அயர்ந்தேன்
மஞ்சத்தில் நெருங்கி நங்கை வந்தாள்!
நெஞ்சை பறித்தாள் அன்பை கொட்டினாள்
வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள்!!"
 
"துஞ்சிய கண்கள் அகல விரிந்தன
பஞ்சாய் மிதந்து மறைந்து விட்டாள்!
நெஞ்சம் வருடிய கள்ளிக்கு ஏங்குகிறேன்
எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"துரோகம்"

6 days 18 hours ago
"துரோகம்"
 
 
நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை.
 
ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான்.
 
தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செய்யும் பொழுது, தற்செயலாக அவள் அங்கு ஒரு குளத்தில் தோழிகளுடன் குளித்துக்கொண்டு இருக்கும் பொழுது பார்க்க நேர்ந்ததாகவும், அவளின் அழகும் இளமையும், துடிப்பும் தன்னை கவர்ந்ததாகவும் , பிறகு மெல்ல மெல்ல அவளுடன் கதைத்து, அவளைப்பற்றி முழுதாக அறிந்து, அவள் சாதாரண படிப்பு என்றாலும், அவளின் குணம் பிடித்துக்கொண்டதாகவும், அவளையே தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் கூறினான்.
 
அதன் பின் ஒவ்வொரு முறையும் ஊர் போய் திரும்பி வந்தால் , அவளின் கதை தான்! இருவரும் ஒன்றாக படங்களும் எடுத்துள்ளனர், எனக்கும் ஒரு முறை, நான் அவனின் கிராமத்துக்கு சென்றபொழுது, அவளை அறிமுக படுத்தினான். உண்மையில் அவனின் தெரிவு நல்லதாகவே இருந்தது. மிகவும் பண்பாடாக என்னுடன் கதைத்தாள். என்னை அண்ணா என்று கூப்பிடுவாள். நானும் என் தங்கையாக மிக மரியாதையுடன் கதைப்பேன்.
 
"ஒட்டி உடையில் பெண்மை காட்டி
எட்டி நடையில் வேகம் காட்டி
சுட்டி விடையில் புத்தி காட்டி
வெட்டி பேச்சில் வெகுளி காட்டி
தட்டி கழித்து நாணம் காட்டி
முட்டி மோதி போகும் பெண்ணே"
 
அவளை என்னால் அன்று கவிதையில் சொல்லக்கூடியதாக இருந்தது. கிராமத்து மணம் வீசும், ஒரு சாதாரண பெண் அவள், என் நண்பனுடன் உயிருக்கு உயிராக அன்பாக நட்பாக பழகினாள். அவனும் அப்படித்தான் எனக்கு அன்று தெரிந்தது.
 
பொதுவாக நகரத்திற்கு வரும் கிராமத்து பெண்களின் பேச்சு, நடை, உடை பாவனைகளை பார்க்கும் நகரத்து பெண்கள் அவர்களை ஏளனம் செய்வது நான் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் அந்த கிராமத்துக்கு போய் அவர்களின் வாழ்வை நேரடியாக பார்க்கவேண்டும். அப்ப தான் அவர்களின் கிராமத்து மணம் வீசும் உண்மையான அன்பும் பற்றும் கொண்ட அவர்களின் பண்பாட்டு வாழ்வை அறிவார்கள். இவளும் அப்படித்தான். இதழ்களில் வழிந்தோடும் கனி ரசமான இரத்தின புன்னகை - அதில் முத்துக் குளிக்க காத்திருக்கும் வரிசையான பற்கள், பின்னல் போடும் மயில் தோகை - அதில் இருந்து வெளி வரும் இயற்கை. மணம். பொய்கள் வசீகரம் இல்லா உண்மையான வார்த்தைகள்! . என்றாலும் விதி யாரைத்தான் விட்டது?
 
நாட்டில் கலவரங்கள் , அரசியல் கொந்தளிப்புக்கள் தொடர்ந்து ஏற்பட, அவன் நாட்டை விட்டு திடீரென ஒருநாள் வெளிநாடு போய்விட்டான். தான் அங்கு முறையாக குடியேறியதும், அவளை கூப்பிடுவதாக என்னிடம் கூறினான். அவளும் தன்னிடம் அப்படி கூறியதாகவும் , அந்தநேரம் தன் பெற்றோரிடம் கதைப்பார் என்றும் கூறினாள். நானும் அதன் பின் திருமணம் செய்து, மனைவியுடன் வெளிநாடு போய்விட்டேன். நன்பனுடன், அல்லது அவனின் காதலியுடன், அதன் பின்பு எனக்கு தொடர்பு இருக்கவில்லை.
 
பல ஆண்டுகள் கழித்து, முகநூல் மூலம் என் நண்பன் மீண்டும் என்னுடன் இணைந்து கொண்டான். நானும் மிக மகிழ்ச்சியாக எங்கே என் தங்கச்சி [அவரின் காதலி] என்றேன். அதெல்லாம் முடிந்து விட்டது என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன் என்ன நடந்தது தங்கச்சிக்கு என்று ஆவலாக கேட்டேன். ஒரு பக்கம் அவளுக்கு ஏதாவது நடந்து விட்டதா என்ற கவலையும் ஏக்கமும்
 
ஆனால் அவனோ, சிரித்தபடி, அதெல்லாம் அந்தநேரம். நான் வெளியே வந்ததும் மறந்துவிட்டேன். நான் இங்கேயே ஒருவளை காதலித்து மணந்து விட்டேன். அவளுக்கு தெரியுமா என்றேன் ?. இப்ப அவள் எப்படி என்றேன் ?? தான் அவளுக்கு சொல்லவில்லை என்றும், அது தேவையும் இல்லை என்றும் கூறி, எப்படி நீ என கதையை மாற்றினான். மனைவி படமும் காட்டினான். அவளை விட அழகு என்று சொல்ல
முடியாது, ஆனால் வசதியான படித்த பெண்ணாக தெரிந்தது. என்றாலும், அண்ணா என்று அன்பாக, பண்பாக என்னுடன் கதைத்த அவளை பற்றி அறியவேண்டும் என்ற கவலை என்னில் இருந்தது.
 
முகநூல், மற்றும் நண்பர்கள் மூலம் தேடி, ஒருவாறு அவளை கண்டு பிடித்தேன். அவள், அவன் வெளிநாடு சென்றபின், வருவான் வருவான் என்று காத்திருந்து, பின் வேறு ஒருவரை கல்யாணம் செய்ய மறுத்து, தனிக் கட்டையாக இன்னும் வாழ்வதாக அறிந்தேன்!
 
அவன், தனது வசதிக்கு ஏற்ப, முன்னையதை தூக்கி எறிந்து விட்டு, புதியதை ஏற்று, வாழ பழகிவிட்டான். காலம், வசதிக்கு ஏற்ப தன்னை சரிப்படுத்தி விட்டான். அதை அவன் துரோகம் என்று கூட கருதவில்லை. அவன் சொன்ன காரணம். நாம் காதலித்தோம் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எல்லோரும் எதோ ஒரு நேரத்தில் காதல் கொள்ளுவது புதுமை இல்லை. நம்பிக்கை கொடுத்ததும் கூப்பிடுவேன் என்று சொன்னதும் உண்மைதான். இவை எல்லாம் அந்த நேர பேச்சுக்கள். அதை தூக்கி பிடித்துக்கொண்டு வாழ்வை வீணாக்க முடியாது.
 
மகாவம்சத்தில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன், அங்கு அடைக்கலம் புகுந்து, யக்கினி குவேனியை திருமணம் செய்கிறான். என்றாலும் பிறகு அது தனக்கு பெருமை மற்றும் வசதி இல்லை என்று, அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கும் மக்களுக்கும் தான் திருமணம் செய்த குவேனிக்கும் துரோகம் செய்து, பாண்டிய மன்னனின் மகளை திருமணம் செய்து, இலங்கையின் துரோக வரலாற்றை ஆரம்பிக்கிறான் என்று கூறுகிறது. ஆகவே என் நண்பனின் கதை எனக்கு ஆச்சிரியம் தரவில்லை. ஆனால் அவள் மேல் பரிதாபம் இருந்தது. அவள் கிராமத்து நம்பிக்கைகள் கூடிய அப்பாவி பெண்! அவளுக்கு இதெல்லாம் புரியாது. காதல் செய்யும் பொழுதே, தன்னை இச்சையில் தொடும் பொழுதே, இவன் தான் என் புருஷன் என, தான் வணங்கும் காவல் தெய்வத்துக்கும் சொல்லிவிடுவாள். அவளுக்கு பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. காதல் வாழ்வை சூழலுக்கு ஏற்ப சரிப்படுத்தி நகரவும் தெரியாது !
 
பரிணாமம் என்பது புதுமை படைப்பதோ, புரட்சி செய்வதோ அல்ல. அது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம்கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வது போன்றது. அப்படித்தான் அவனும் இலங்கையில் இருந்த சூழலும் வெளிநாட்டு சூழலும் ஒன்றுக்கொன்று மாற அவனும் தன்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டானென்று சொல்வதா ? இல்லை இது துரோகம் தானா ?உங்களுக்கு எப்படியோ ??
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"தனிமை"

1 week ago
"தனிமை"
 
 
தனிமை என்பது எதோ தனிய காலம் கழிப்பது அல்ல, சிலவேளை எம்மை சுற்றி பலர் இருப்பார்கள், என்றாலும் சில காரணங்கள் எம்மை அவர்களில் இருந்து மனதளவில் தனிமை படுத்துவதும் உண்டு. வெளியில் பேசி கதைத்தாலும் உள்ளுக்குள் தனிமை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். அதற்கு புறம்பானவர்கள் உன்னை முழுதாக சூழ்ந்து இருக்கும் பொழுது நீ தனிமையாகி விடுவாய்!. அப்படித்தான் என் பாடசாலை வாழ்வும் அமைந்தது.
 
நான் யாழ் மத்திய கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, அதற்கு முன்னால் அமைந்து இருந்த யாழ் நூலகத்திற்கு போவது வழமை. இது தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அன்று திகழ்ந்தது. இது 1981 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி, 97,000 அரிய நூல்களுடன் அரச காடையர்களால் எரிக்கப்பட்டு, யாழ் இளைஞர்களைப் படிப்பில் இருந்து தனிமை படுத்த எடுத்த கொடூரமான நிகழ்வு இன்றும் என் மனதில் உண்டு.
 
அங்கு பல நூல்களை வாசிக்க தொடங்க, சமயம், சம்பந்தமாக பல கேள்விகள் என் மனதில் எழ தொடங்கின. இதுவரையும் கேள்வி கேட்க்காமல் நம்பி இருந்த பல விடயங்கள், கேள்விகளாக என் மனதை துளைத்தன. அதனால் என்னிலும் சில மாற்றம் ஏற்படுவது என்னால் உணர முடிந்தது.
அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு இன்னும் ஆலயத்துக்கும் சமய பிரசங்கங்களுக்கு போனாலும், எனக்கு அங்கு முழுதாக ஈடுபடமுடியாமல் இருந்தது. என்னை சுற்றி அம்மா, அப்பா இப்படி பல கூட்டங்கள். இருந்தாலும், அவர்களின் சமய சம்பந்தமான கதைகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணங்கள் அறிய அறிய, அவை என்னை அந்த கூடத்தில் இருந்து தனிமை படுத்த தொடங்கின. நான் என் ஆதங்கத்தை கேள்விகளாக கேட்க்கத் தொடங்க, இவன் உருப்படமாட்டான் என்று அதற்கு பதில் சொல்லாமல், விலத்தி போக தொடங்கினார்கள். இது மேலும் மேலும் தனிமையை கூட்டிகொண்டே போனது. உதாரணமாக, கல்லூரிக்கும் முதல் முதல் போகும் ஒருவன், அவனை சுற்றி பலர் இருந்தாலும், அவன் தொடக்கத்தில் ஒரு தனிமை அவனை வாட்டிக்கொண்டு இருக்கும். அப்படித்தான் எனக்கும் இருந்தது.
 
தனிமை ஒரு வெறியாக, மேலும் மேலும் என் பாட்டில் நூலகம் போய் ஆய்வுகள் செய்ய தொடங்கினேன். இப்ப நானே என்னை தனிமையாக்க தொடங்கிவிட்டேன். நான் அறிந்தவற்றை உதாரணங்களுடனும் காரணங்களுடனும் வாதாடவும் தொடங்கினேன். இது பலரை எண்ணில் இருந்து தூர தூர விலக தூண்டியது. அப்பொழுது தான் எனக்கு புரிந்தது எவ்வளவுக்கு நிறைய விடயங்களை காரணம் அறியாமலே, பகுத்தறியாமலே, நம்பிக்கைகளை வளர்த்துள்ளார் என்பது.
 
இதில் வேடிக்கை என்னவென்றால், எமக்கு பௌதிகவியலில் கிரகங்கள் எப்படி உண்டாகின்றன என படிப்பித்த ஆசிரியை, கிரகணத்தின் போது இராகு கேது என அழைக்கப்படும் கற்பனை கிரகங்களை சுற்றி வந்து வழிபடுவது தான்!. இது என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உழைப்புக்காக எதோ பாடம் படிப்பிக்கிறார்கள் போல் தான் எனக்கு தோன்றியது. ஆனால் அவர்களின் நம்பிக்கை வேறு எங்கோ ?
 
என்னை சுற்றி பலர் இருந்தாலும், நான் மனத்தளவில் , எண்ணங்களில் விலகி விலகி போவது, என் தனிமை உணர்வை மேலும் மேலும் கூட்டியது. நானும் அவர்கள் மாதிரி, வேலை வேறு, வீடு வேறு என்று இருந்து இருந்தால், தனிமை என்னை இன்று வாட்டாது. ஆனால், ஏன் நான் அவர்களையும் சிந்திக்க தூண்டக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் மேலோங்க தொடங்கியது. அதற்கு ஒரே வழி, பாடசாலையில் . சமயத்தை பகுத்தறிவுடன், மானிடவியலுடன் சேர்த்து கற்பிக்க வேண்டும்.
 
எனவே, ஒரு நாள் அதிபரை சந்தித்து என் அவாவை கேட்க முடிவு செய்தேன். ஆனால் பின்பு தான் உணர்ந்தேன் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று. ஆமாம் அதிபர் தந்த பிரபு அடியும், அதை பார்த்து, இவனுடன் சேரக்கூடாது என மேலும் விலகிய கூட்டமும் தான் மிச்சம். ஆனால் ஒன்று உண்மை தனிமை என்னை மனிதனாக்கியது. அதனால் ஏற்பட்ட வைராக்கியம் என்னை படிப்பில் உயர்த்த தொடங்கியது. நான் இன்று பொறியியலாளர். என்றாலும் இன்னும் என் அம்மா அப்பா இவன் திருந்த மாட்டான் என்று சொல்வதில் இருந்து விலகவில்லை. பல நிகழ்வுகளில் என்னை விலத்தியே வைக்கிறார்கள். நானும் என் பாட்டில் வாழ பழகிவிட்டேன். தனிமை என்னிடம் தோற்கத் தொடங்குகிறது!
 
வேதத்தில் , பிரம்மாவை, ஆண்டவனின் சந்ததி என, பிரஜாபதி என்று கூப்பிடுவார்கள். அவர் தனது தனிமையை போக்க உயிரினங்களை படைத்தார் என்கிறது. நானும் அதன் பின் திருமணம் செய்து, எனக்கு என ஒரு வாழ்வையே அமைத்து மனைவி, பிள்ளைகளுடன் தனிமை போக்க தொடங்கிவிட்டேன்!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மாட்டு வண்டிக்காரன்"

1 week ago
"மாட்டு வண்டிக்காரன்"
 
 
வேலன் ஒரு விவசாயி. அவன் எங்க பெரியம்மா வீட்டிற்கு அருகில் இடைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அது ஒரு தோட்டங்கள் நிறைந்த அச்சுவேலிக்கும் செல்வச் சன்னதிக்கும் இடைப்பட்ட கிராமம். அவன் தன்னுடைய தோட்டத்திலும் மற்றும் அந்த கிராமவாசிகளின் தோட்டத்திலும் விளையும் மரக்கறிகளை காலையில் அச்சவேலி சந்தைக்கு, தனது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று விற்பது வழக்கம். வேலன் என்று சொல்வதை விட, 'மாட்டு வண்டிக்காரன்' என்றால் அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
 
ஒருமுறை வழமையாக செய்வது போல, மரக்கறிகளை சுமந்து கொண்டு, அவனின் மாட்டு வண்டி சந்தையை நோக்கி போய்க் கொண்டு இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், அந்த மண் வீதி சேறும் சகதியுமாக இருந்தது. அவன் நேரத்துடன் சந்தைக்கு போனால் தான், அவன் கொண்டு வந்த மரக்கறி முழுவதும் விற்க இலகுவாக இருக்கும். எனவே கொஞ்சம் விரைவாக, எதோ ஒரு காதல் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு மாட்டு வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான்.
 
அவனின் வேகமும் தாகமும் வண்டில் சில்லுக்கு புரியுமா? அது திடீரென சேற்றில் புதைந்து, உருள முடியாமல் போய் விட்டது. மகாபாரதத்திலும் இதற்கு ஒத்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. விறுவிறுப்பான போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேரின் சக்கரம் சகதியில் சிக்குகிறது. அதை மீட்கும்படி தேரோட்டி சல்லியனுக்கு கட்டளையிடுகிறான். ஆனால் அவன் மறுத்து அங்கிருந்து வெளியேறுகிறான். ஆனால் கர்ணன் மனம் தளரவில்லை, சோர்வடையவில்லை, தானே சக்கரத்தை தன் தோளின் வலிமையால் உயர்த்தி அதில் இருந்து எடுக்க முற்பட்டான் என்பது வரலாறு.
 
ஆனால் எங்க வண்டிக்காரனுக்கு அது புரியவில்லை. அவன் மாட்டு வண்டியில் இருந்து இறங்கி அதன் பக்கத்தில் நின்று யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்றான். மரக்கறி எல்லாம் விற்காவிடில் பழுதாகி விடுமே என்ற கவலை ஒருபக்கம். அவனுக்கு. அவன் வானத்தை பார்த்து சத்தம் போட்டான்: " நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், இந்த ஆண்டவன் அங்கே என்ன செய்கிறான்? அவனுக்கு என்ன குறை ?? நாம் தான் பூலோகத்தில் எல்லா கஷ்டமும் அனுபவிக்கிறோம்?" என்று பெரும் முறையீடு செய்து கொண்டு இருந்தான்!
 
அந்த நேரத்தில் தான் நான் பெரியம்மா வீட்டிற்கு அச்சுவேலி தாண்டி, ஸ்கூட்டர் [scooter] ஒன்றில் நெருங்கி கொண்டு இருந்தேன். வேலனை முன்பே எனக்கு தெரியும் என்பதால், "சும்மா சத்தம் போட்டு, ஆண்டவன் என்ற ஒருவனுக்கு முறையிட்டு ஒன்றும் நடக்காது." என்று கூறிக் கொண்டு அவன் அருகில் சென்று நடந்ததை விசாரித்தேன்.
 
திருப்பவும் கர்ணன் தான் ஞாபகம் வந்தது. போர் தர்மத்திற்கு எதிராக ஆயுதம் இல்லாது, தேர் சில்லை உயர்த்திக் கொண்டு இருந்தவனை, நல்ல சந்தர்ப்பம் என்று ஆண்டவனாக கருதப்படும் கிருஷ்ணர் சொல்ல , அருச்சுனன் அம்பு எய்தி, கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. அதை கண்டு, ஏன் அப்படி அதிசயமாக கேட்ட அருச்சுனனுக்கு, உடனடியாக உதவி செய்ய, பிராமணன் வேடம் போட்டு ஒரு நாடகமே நடத்தியதாக நான், நல்லூர் திருவிழா மூட்டம், மணி ஐயர் பிரசங்கம் கேட்டது என் மனதில் நிழலாடியது. ஆனால் அவன் [ஆணடவன்] இங்கு வரவில்லை, ஏன் மனிதன் நாகரிகம் அடைந்து தன் பாட்டில் சிந்திக்க பாமரமக்கள் தொடங்கிய நாளில் இருந்து இன்னும் வரவில்லை, ஏமாற்றும் பல சாமியார்கள் வந்துள்ளார்கள், வந்து கொண்டு இருக்கிறார்கள்!. என் உருவில் வந்தான் என்று இதற்கு விளக்கம் கொடுக்க பலர் காத்திருப்பது எனக்கும் புரியும்.
 
நான் அவனிடம் சுருக்கமாக ஆனால் நம்பிக்கை வரக்கூடியதாக, " நீ முறையிடுவதால், வண்டி அசையாது. முயற்சி இன்றி வெற்றி வராது!
துணிவுடன் எடுத்த செயலை செய்யின், நினைத்த எண்ணம் தானாய் வரும் என்று கூறி, எழும்பு, உன் தோள்பட்டை சக்கரத்தில் வைத்து தூக்க பார், எல்லாம் சரிவரும் என்று, நானும் சேர்ந்து உயர்த்தி வெளியே எடுத்தோம்!
 
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் [குறள் 666]
 
வண்டியின் சில்லு வெளியே வந்ததை பார்த்த அவன், தன் செய்யலை எண்ணி வெட்கப்பட்டான். அதை சமாளிப்பதற்காக வண்டிக்கார வேலன், என்னை பார்த்து " வேலனை வள்ளியுடன் இணைக்க, விநாயகர் யானை வேடம் போட்டு உதவினார், இன்று தில்லையில் இருக்கும், லிங்கத்தை தனது அடையாளமாக கொண்டவனின் மகனாக இந்த விநாயகர் எனக்கு உதவி புரிந்தார்" என என் பெயரை [தில்லைவிநாயகலிங்கம்] சொல்லாமல் சொல்லி வாழ்த்தி சென்றான் மாட்டு வண்டிக்காரன்!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:05 [ஒரு புது முயற்சி]

1 week 1 day ago
இலக்கிய பாடல்கள் ஊடாக  ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:05 [ஒரு புது முயற்சி] 
 

"நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே." 

நோகும் என் நெஞ்சே,நோகும் என் நெஞ்சே, இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து எனக்கு பொருத்தமாக இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார், நோகும் என் நெஞ்சே. என தன்னை தானே தேற்றிக் கொண்டு ,தலையை நிமிர்ந்து மீண்டும் ஒரு முறை ஏனோ அங்கு பார்த்தாள். அவள் கண்களுக்கு வெட்கமே இல்லை?

அந்த மேனகா "குட்டி மாமா.. குட்டி மாமா" என்று அவனை கூப்பிட்ட வாறு எதோ கொஞ்சி குழவிக் கொண்டிருந்தாள். அவள் அப்படியே பிரமித்து விட்டாள். அவனின் மூத்த அக்கா, அவன் சின்னவனாக இருக்கும் போதே கல்யாணம் செய்து வெளி நாடு போனது இப்ப அவளுக்கு நினைவுக்கு வந்தது. என்றாலும் எதிர் பக்கம் பார்த்த படி குளிர் பாணத்தை குடிக்கத் தொடங்கினாள். அது அவளது ஊடலோ ? 

"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்ல(து) அவர்அளிக்கு மாறு."

அவனிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவனோடு ஊடுதல், அவன் தன்மேல் மிகுதியாக அன்பு செலுத்த செய்ய வல்லது என்றோ ?

"போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி ஊடல் அணிமருதம் -" 

தலைவன், தலைவி பிரிதல் போக்கு - பாலையோ, அவர்கள் புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சியோ, அவர்களின் இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதமோ -- இப்படி எத்தனையோ நினைவுகள் கண் முன் அவளுக்கு தோன்றி தோன்றி மறைந்தன. அவன் ஏன் இன்னும் தன்னிடம் வரவில்லை என்ற கோபமும் அதிகரித்தது. அவள் இனி எப்போதும் திரும்பி பார்ப்பதே இல்லை என்ற இறுதி முடிவோடு விரைவாக அங்கிருந்து வெளியேற தொடங்கினாள். இது அவளின் ஒரு வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காத போது உண்டாவது தான் இந்த கோபம் . யாரோ தட தட என்று பின்னால் ஓடி வருவது போல அவள் உணர்ந்தாள். யாரோ நேரம் போகிறது என ஓடுகிறார்கள் என நினைத்தவாறு இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

"குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே! 
நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே."

குவளையின் மணம் வீசுகின்ற வளமான, கருத்த கூந்தல், ஆம்பலின் மணமும் தேனின் சுவையும் பொதிந்து சிவந்த வாய், ஆழமான நீரில் மலர்ந்த தாமரைப் பூவின் மகரந்தத்தைப் போல் சிறிய பல தேமல் புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டவளே, நான் உன்னைப் பிரிவேனோ என்று நினைத்து நீ அஞ்சவேண்டியதில்லை. குறுகலான கால்களை உடைய அன்னப் பறவைகள் நிறைந்த மணலைக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த நில மண்டிலம் மொத்தமும் எனக்குக் கிடைத்தால் கூட, நான் உன்னைப் பிரியமாட்டேன். கவலைப்படாதே! என்பது போல 

"என்னடி தாகமாக இருக்குது அந்த மிச்சத்தை தா "

என்று கூறியவாறு, பதிலுக்கு காததிராமல், மிச்சத்தை பறிப்பது போல் அவள் கையை பிடித்தே விட்டான். அதே குரல். தன்னுடன் தினம் தினம் தொலை பேசியில் கதைக்கும் அதே குரல். சட்டென திரும்பி , சற்றும் எதிர் பாராத விதமாக "அம்மா" என அலறி விட்டாள். அவன் தாய் பதறி ஓடி வந்து "என்ன? என்ன?" என கேட்டாள். மற்றவர்களும் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர், அவள் ஒருவாறு தன்னை சமாளித்தவாறு உங்கள் மகன் விக்குகிறார் என்றாள். அதற்கு ஏன் இந்த சத்தம் ? ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ? பின் மகனை நோக்கி "எப்படித்தான் நீ இவளை கட்டி குடும்பம் நடத்தப் போகிறியோ என செல்லமாக கேட்டாள். அவள் சொர்க்கத்திற்கே போய் விட்டாள். தாயோ மகன் உண்மையிலேயே விக்கல் ஆட்கொண்டது என அவன் நெஞ்சை தடவினாள். அவனோ தாயின் கழுத்தில் சாய்ந்தபடி பின்புறமாக அவளை பார்த்த பார்வை -அதை அவள் என்ன என்று சொல்வாள்?

"அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, 
நகைக் கூட்டம்     
செய்தான், அக் கள்வன் மகன்"

அதிர்ச்சியடைந்த நான்  ‘அம்மா! இவன் என்ன செய்கிறான் பாரேன்’ என்று அலறினேன். அம்மாவும் பதறிப் போய் ஓடி வந்தாள். ஆனால் இவன்? எதுவும் தெரியாத அப்பாவி போல் விழிக்கிறான். நல்ல வேளை, நான் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவன் செய்த குறும்பை மறைத்து ‘தண்ணீர் குடிக்கும் போது இவனுக்கு விக்கல் எடுத்தது’ என்று பொய் சொன்னேன். நான் சொன்னதை அம்மா நம்பிவிட்டாள். ஆதரவாக அவனுடைய முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப் பயல் கடைக் கண்ணால் என்னைக் கொல்வது போல் பார்த்துப் புன்னகை செய்தான்! இப்படித்தான் சொல்வாளோ ? அவள் கண் மூடி சந்தோஷ கடலில் மிதந்து கொண்டு இருந்த இந்த வேளையில் "குட்டி மாமி.. குட்டி மாமி.." என்ற கொஞ்சும் குரல் கேட்டு கண் திறக்கும் முன் அவள் கன்னத்தில் மாறி மாறி முத்த மழை பொழிந்தது. முத்தம் கொடுத்தது அந்த மேனகா. இப்ப இது எந்த எரிச்சலையும் கொடுக்கவில்லை. மாறாக பெருமையையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு கொடுத்தது.

 "யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." 

நானும் நீயும் எப்படி பழக ஆரம்பித்தோம் எப்படி ஒருவருக் கொருவர் அறிந்து கொண்டோம்? ஆனாலும்... எப்படி செம் மண்ணில் நீர் விழுந்த பின் அந்த செம்மண்ணும் நீரும் கலந்த கலவை போல் நம் நெஞ்சங்கள் பிரிக்க முடியா வண்ணம் கலந்து விட்டன. இப்படி அவனும் அவளும் கலந்து விட்டனர். இனி எமக்கு அங்கு என்ன வேலை?.

நன்றி 
 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
 

இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:04 [ஒரு புது முயற்சி]

1 week 1 day ago
இலக்கிய பாடல்கள் ஊடாக  ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:04  [ஒரு புது முயற்சி] 
 
 
"அண்ணா வாரார்", "அங்கே தம்பி வருகுது" அவளை அறியாமலே ,அவள் கால்கள் மெல்ல அடி எடுத்து வைத்தது.
 
"இடிக்கும் கேளிர்! நும் குறை ஆகம்
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல!
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந் நோய் நோன்று கொளற்கு அரிதே"
 
பகல் பொழுதில் ஒரு பாறையின் மீது வெண்ணெய்யை வைத்து விட்டு, பேசவும் முடியாத கைகளும் இல்லாத ஒரு மனிதனை, வெண்ணெய்க்கு காவல் வைத்தால் எப்படி தவிப்பனோ அப்படி நான் உருகுகிறேன்,,, காலம் கழிய அந்த வெண்ணெய் வெயிலால் உருகும். அதை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மனிதனால் என்ன செய்ய முடியும்? உரக்க கூவி மற்றோரை அழைக்கவும் முடியாது .. ஏனெனில் அவன் ஊமை .. அதே நேரத்தில் தன் கரங்களால் அதை எடுத்து வேறு பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்கவும் முடியாது ... ஏனெனில் அவனுக்கு கரங்களும் இல்லை .... அவனால் என்ன செய்ய முடியும் .... இயலாமையால் பரிதவிப்பான் ... அதைப் போலவே என் அவன் மிக அருகில் இருந்தும் நான் அவனை காண முடியவில்லை ... இயலாமையில் தவிக்கிறேன் .... என புலம்பினாள். அவனை ஒரு கூட்டமே மொய்த்து விட்டது. அந்த ஆடம்பர குடும்பத்துடன் வந்த அந்த பெண் அவனை கட்டிப்பிடித்து ஒரு முத்தமே கொடுத்து விட்டாள்.
 
"இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?"
 
சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ இப்படி நான் அவளிடம் சொன்னேன். அவளும் என்னிடம் ஆசையாகப் பேசினாள் ..... அந்தக் கொடிச்சி, அந்தக் காட்டுப் பெண் என்னை விட்டுச் செல்லும்போது, அவளுடைய முதுகைப் பார்த்துக் கலங்கிய என் நெஞ்சு - அவளை விட்டுவிடாதே!என்றது - இப்படி நடக்க வேண்டும் என் கனவு கண்டு ஏங்கியவளுக்கு இடியாக அந்த முத்தம் இருந்தது. எனினும்
 
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா."
 
பகல் நேரத்தில் காக்கை தான் பலம் வாய்ந்தது. அப்போது ஆந்தையால் காக்கையை வெல்ல முடியாது. ஆனால் இரவு நேரத்தில் ஆந்தையின் பலம் அதிகரித்து விடும். அப்போது காக்கையால் ஆந்தையை வெல்ல முடியாது. ஆக, நேரம் பார்த்து எதிரியுடன் மோதுவது முக்கியம். ஓர் அரசனின் கடமை, உலகத்தை (தன்னுடைய மக்களைக்) காப்பாற்றுவது தான். ஆனால் அதற்காக அவன் அவசரப் படக்கூடாது. மீன் வரும் வரை ஆற்றங்கரையில் காத்திருக்கும் கொக்கைப் போலப் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களை ஜெயிப்பது சிரமம். இப்படி நினைத்தவளாய் அந்த பெண்ணை தன் ஒரக் கண்ணால் பார்த்தாள். இவள் திலோத்துமை என்றால் அவளும் ஒரு மேனகா தான். மேனகா என்பது மேனி என்ற அழகு உடலைக் குறிக்கும்.
 
"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு"
 
அவள் தேவதையோ? மோகினியோ? அழகிய தோகை மயிலோ? இல்லை கனமான அழகிய குழையை காதில் அணிந்திருக்கும் மானிடப் பெண் தானோ ? அவளின் அழகைக் கண்டு என் மனமே மயங்குகிறதே. என் அவன், என் காதலன் என்ன செய்வான்?
 
"சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே."
 
சிறிய வெண்மையான அழகிய கோடுகளை உடைய பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், அழகிய தோற்றம் உடையவளும் மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என தடுமாறக் கூடாது. இந்த புதியவளின் காதல் - ஈர்ப்பினால் என் அவன் தன் வாழ்வியல் நெறிகளில் இருந்து பிறழ்ந்து விடக்கூடாது என்று பல தடவை வேண்டிக் கொண்டாள். சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே என அறிவுறுத்தலாமோ என்று சற்று யோசித்தாள். அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்க வில்லை. மெல்ல மெல்ல நகர தொடங்கினாள். என்றாலும் அவளுக்கு ஒரு அவா. அங்கு என்னதான் நடக்குது பார்ப்போம் என்று. தன் இதயத்தை கல்லாக்கி கொண்டு மீண்டும் அந்த கடை அருகில் நின்று குடிக்கத் தொடங்கினாள். அவள் கண்கள் குளம் ஆகி விட்டன. காதில் - சிரிப்பது , பகிடி விடுவது, ஊர் கதைகள் இப்படி அவர்களின் ஆரவாரம் விழுந்து கொண்டு இருந்தன.
 
"கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே"
 
அவளது கண்ணீர் நிறைந்து அவளது முலைகளின் இடைப்பகுதி நாரைகள் மேய்கின்ற குளம் போல் ஆகிவிட்டது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 5 தொடரும்.

இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03 [ஒரு புது முயற்சி]

1 week 1 day ago

இலக்கிய பாடல்கள் ஊடாக  ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03  [ஒரு புது முயற்சி] 


"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல ... 
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்" 

காட்டில் உறையும் தாய் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த் தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இப்படி பெண்ணுக்கு முன்னுருமை கொடுத்த தமிழ் இனம் எப்படி மாறியதோ ? இதற்கு யார் காரணமோ ? அவள் தூக்கத்தில் புலம்பினாள். பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகின்றான்.

"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய யே பிஸ்யூ பாபயோயை ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர ஸ்தேபி யாந்தி பராம்கதி"[133]

"பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்" 

என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு பகவத் கீதையில் இழிவு படுத்துவதை  காணலாம். இப்படித் தான் மெல்ல மெல்ல மாற்றப்பட்டதோ? பரிசம் சீதனமாக மாறியது. அதன் விளைவு? அவள் நெஞ்சம் பட படத்தது. தன் அக்காவின் கதை நிழலாக அவள் கண் முன் ஓடியது. அவள் தன்னை அறியாமலே கண்ணீரில் நனைந்தாள். 


வால்மிகியின் ராமாயண சீதை அவள் முன் தோன்றி ஆறுதல் கொடுத்தாள். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலை வைத்து படுத்து இருக்கும் போது, கடவுளாக போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காகம் வேடம் போட்டு வந்து, தனது பாலியல் வக்கிரத்தை சீதையின் முலைக் காம்பை கொத்தி தீர்த்த போது, அது குற்றமாக ராமனுக்கு படவில்லை. இராவணனை வென்ற இராமன், சீதையை பார்க்க மறுத்த நிலையில், 

"இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை" 

என்றான். மேலும் அவன் 

"உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே!  உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம் ... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா." 

என்று கேட்கின்ற போதே, சீதையை கொன்றுவிட்டான் ? கடைசியாக இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு, மீண்டும் தனது கற்பை நிருபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளை கேட்டு தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள் சீதை. அவள் தனக்கு நடந்ததை கூறி

 " பூப்போல் உண்கண் மரீஇய நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே."

பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்து நெய்தல் நிலத்துத் தலைவன் வரும் தேர். அது போல உன் அவன் வரும் விமானம் உன் கண்களில் தோன்றிய நோயைத் தீர்க்கும் என் கூறி அவள் கண்ணீரை துடைத்தாள். கண் விழித்த அவள் ஒரு வாறு தன்னை சரிபடுத்திக் கொண்டு, எல்லாம் நல்ல படியாக நடக்கும் என தன்னை தானே தேற்றிக் கொண்டாள். 

அவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் என ஒரு பெரும் கூட்டமே அங்கு வந்து கொண்டு இருந்தது. அவர்களுடன் அவளுக்கு தெரியாத ஒரு ஆடம்பர குடும்பம் வருவதை இட்டு அவள் திடுக்கிட்டாள். ஒரு சில நேரம் தடு மாறியே விட்டாள். அவளுக்கு இனி அவர்களை பார்ப்பது வெறுப்பாக இருந்தது. அவளுக்கு அங்கு இனி காத்திருப்பதும் பிடிக்கவில்லை. மேலும் தான் அங்கு வந்திருப்பதை காட்டி கொள்ள விரும்பாதவளாய், மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த ஒரு கடையில் குளிர் பாணம் வாங்கி குடிக்கத் தொடங்கினாள். ஆனால் கண் அவளுக்கு, அவள் எண்ணங்களுக்கு படியவில்லை. அது இன்னும் பயணிகள் வருகையின் வாசல்லையே பார்த்துக் கொண்ட்டிருந்தது. அவள் என்ன செய்வாள்?

"நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மற்ற துஞ்சாதேனே” 

உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர! என அவள் வாய் தன்னையறியாமல் முணு முணுத்தது.

"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?"

சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுனடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளாரை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ என கத்துவேனா, ஒரு காரணத்தால்? என்ன செய்வது என்று எனக்கு புரியவில்ல. இப்படி அவள் மன நிலை இருந்தது.

"நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே” 

அவன் தனக்கு தந்த காதல் நோயால் கறுப்பான தன் கண்கள் இப்போ பச்சையாக போய்விட்டது என நொந்தாள். மக்களும் உலகமுமா சொன்னார்கள் இவளை காதல் செய்யச் சொல்லி? இல்லையே? இப்ப வருந்தி என்ன பயன்? மஞ்சளாய்ப் போயிருந்தாலாவது மஞ்சள் காமலை என்று மருந்தெடுத்திருக்கலாம். பசுமைக்கு ஏங்கியதாலோ என்னவோ இவளது கண்கள் பச்சையாகி விட்டனவோ? யாருக்கு தெரியும்?


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 4 தொடரும்.

இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:02 [ஒரு புது முயற்சி]

1 week 1 day ago
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:02 [ஒரு புது முயற்சி]
 
 
"சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப,
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே."
 
சிறு கண்களை உடைய மதம் கொண்ட யானை பற்றி பொருட் படுத்தாது, பூ மாலை அணிந்த அன்பு உள்ளம் உடையவனே, எப்படி நீ என்னை காண இந்த கரும் இருட்டில் வந்தாய்? இப்படி சங்க கால "தெரியிழை அரிவை" யாக அவள் தோன்றினாள். அவள் பயந்தவளாக திடுக்கிட்டு கண்ணை அகல திறந்து பார்த்தாள். இன்னும் அவன் வர நேரம் இருக்கிறது. என்றாலும் அவள் மனதில் திடீர் என ஒரு கவலை எங்கு இருந்தோ வந்து ஆடத் தொடங்கியது. எப்படி சங்க கால காதலன் இரவுக்குறியில் சந்திப்பதற்கு வரும் வழியில் உள்ள இடையூறுகளை எண்ணித் காதலி வருந்தினாலோ, அப்படி அவளும் வருந்த தொடங்கி விட்டாள். மேல் நாடு சென்று மேல் படிப்பு முடித்து வரும் அவனை, தன் காதலனை "பரிசம்" கொடுத்து யாரவது கொத்தி விடுவார்களோ என அவள் உள்ளம் ஒரு ஊஞ்சல் ஆட தொடங்கி விட்டது. எங்கே நல்ல உத்தியோக, நல்ல படிப்பு மாப்பிள்ளை கிடைக்காதா தமது மகளுக்கு என பண முடிப்புடன் காத்திருக்கும் சிலரை எண்ணி கலங்கினாள்.
 
"உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பம் எனினே, தப்பு ந பலவே."
 
பசியைப் போக்க ஒரு நாழித் தானியம் மற்றும் உடுக்க வேண்டியது மேலாடையும் இடுப்புத் துணியும் ஆகிய இரண்டே; பிற எல்லாமும் எல்லார்க்கும் சமமே; சேர்க்கும் செல்வத்தை சமூக வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் மெத்தைக்குள் தைத்து வைத்துக் கொண்டு தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை பல இன்னல்களைத் தரும் என்றாலும் அது பாதாளம் வரை செல்லக்கூடியது. அவர்கள் எவரையும் மாற்றக் கூடியவர்கள்.பணம், செல்வாக்கு எல்லாத்தையும் வாங்கிவிடும்.
 
"பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை"
 
என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள் நெஞ்சில் வந்து மோதி,
ஒரு நடுக்கம் அவளை ஆட்ட, அவள் மீண்டும் அயர்ந்து விடடாள்.
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே,
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;
‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!
இயங்குதி! என்னும்;’யாமே,"
 
தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே,ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். இப்படித்தான் பெண்பிள்ளைகளை சரி சமனாக பார்த்தார்கள் அதை ஒரு பாரமாக அவர்கள் கருதியது இல்லை அது மட்டும் அல்ல பெண் எடுப்பதற்கு ஆண் வீட்டார் தான் பரிசம் கொடுத்தார்கள்.
 
"உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே"
 
பெண்ணுக்கு ஒரு விலை தந்து, பொல் பிடிக்கும் நரைத்த தலையும் உடைய பெரியோர்களைக் கொண்டு பெண் வீட்டுக்கு வந்து, மணம் பேசி முடிக்கும் வழக்கம்,
 
"பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டு உடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்று நன்று என்னும் மாக்களோ
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே.",
 
அதாவது பெண்ணைத் தேடி வரும் வழக்கம் அன்று இருந்தது.
 
"..மூவேறு தாரமும் ஒருங்குடன்கொண்டு
சாந்தம் பொறைமர மாக நறைநார்..
இன்தீம்பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் ..
யாமும் நாள் வல்லே வருக என
இல்லுறை கடவுட்குப் பலி ஓக்குதும்."
 
வெவ்வேறாகிய அம்மூன்று பண்டங்களையும் சந்தன மரம் காவு மரமாக அவற்றை ஒரு சேரக் காவிக்கொண்டு, நறைக் கொடியாய நாரினால் ........... ............ மிக்க இனிமையுடைய பலாமரங்களையுடைய அழகு மிக்க செல்வத்தையுடைய நம் தந்தையும் நின்னைக் கொடுத்தலை ஏற்றுக் கொண்டான் ........... .............. நாமும் நம் மணத்திற்கு வரைந்த நாள் விரைந்து வருவதாக என்று நல்ல இறையினையுடைய மெல்லிய விரல்களைக் குவித்து மனையுறை தெய்வத்திற்கு பலி செலுத்து வோமாக - இப்படி இருந்த நாம், எப்படி இப்படி மாறினோம் ?அவளுக்குள் ஒரு குமறல்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 3 தொடரும்.

இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 [ஒரு புது முயற்சி]

1 week 1 day ago
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 [ஒரு புது முயற்சி]
 
 
“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே."
 
கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்து போகும் பசுவின் பாலைப் போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் என் மாந்தளிர் மேனியும் விணாகிக் கொண்டிருக்கின்றதே -- இப்படி ஏங்கி தவித்து இருந்தவளுக்கு இன்று ஒரு பௌர்ணமி.
 
".... திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?"
 
நீ [தலைவன்] முழுமதி போன்றவன். உன் [தலைவன்] நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது? என்று நினைத்தாலோ ?அவளது முகமும் முழுமதியாக ஒளிர்ந்தது. பிரமன் அளந்து தான் செதுக்கியிருக்க வேண்டும் அப்படி ஒரு அழகு.
 
''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,
பாவை அன்ன வனப்பினள் இவள்'' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே."
 
நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள், இப்படி அவள் அழகு தேவதையாக இருந்தாள். அவள் யாருக்காக இவ்வளவு காலமும் காத்திருந்தாளோ அந்த கள்ளன் வருகிறான்.
 
"உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்று ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்;
சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே"
 
மாறனோ அம்புமேல் அம்பு பொழிகிறான். காமமோ வானளாவப் பெருகிவிட்டது. அவனை நினையாதிருக்கவும் அவளால் முடியவில்லை. அப்படி நினைத்தாலும் அவள் மனம் வேதனை அடைகிறது, அதை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை என்று இது வரை காலமும் இருந்தவளுக்கு இப்ப அவன் இன்னும் சிறிது நேரத்தில் வருகிறான் என்றால் எப்படி இருக்கும்?. அந்த பூரிப்பில் அவள் அழகு மேலும் மேலும் மெருகேறியது. ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அப்படித்தான் இவளும் இருந்தாள். பெயரில் மட்டும் அல்ல, அழகிலும் அப்படித்தான். ஆனால் அவளுக்கு என்னவோ அந்த பெயர் எள்ளளவும் பிடிக்காது. ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் படைத்தவனுக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது. பெற்ற மகளுக்கு சமமான திலோத்துமை மீது மையல் கொண்டான் பிரம்மா. ஆசையோடு காமத்தோடு அணைத்தான். அவள் பெண் மானாக மாறி தப்பி ஓடினாள். பிரமன் விட்டானா? ஆண்மானாக மாறி அவளை விரட்டிப் பிடித்து தன் பசிக்கு இரை யாக்கினான். இதனால் தான் போலும் அந்த பெயர் அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. தன் பெயரை "திலோ" என்று மட்டுமே கூறி வந்தாள் மிக மிக அமைதியுடன் அவள் பயணிகள் வருகையை நோக்கி வந்தாள்.
 
"ஒரு பெண் நீராட வரும்போது அவளது நடையை பார்த்து பழகுவதற்காக ஒரு அன்னப்பறவை வயலில் காத்து நிற்குமாம்"
 
- இப்படி கூறினான் கம்பன். அதே மாதிரி தான் அவளும் அன்ன நடை பயன்று வந்தாள் அங்கு ஆர்ப்பரித்தெழுந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அப்படியே ஒருக்கா நின்றுவிட்டது. அவள் அதை சற்றும் பொருட் படுத்தாதவளாய் அங்கே ஒரு மூலையில் அவனுக்காக காத்திருந்த்தாள்.
 
"உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து ,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,"
 
புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே; கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு; அவற்றுள் ஒன்று துயர் தரும் மாலைப் பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்தது போல; நானும் அவரும் ஒருவரை ஒருவர் காணும் போது நடக்கக் கூடாது .
 
"புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,"
 
விடிகாலையில் பறவைகளின் ஒலி; வானிலே தெளிந்த ஒளி.. நிலவு- உரோகிணி என்னும் மீனுடன் கூடிய ஓரை (Constellation) நல்ல நாள் - அந்த நாளில் மணவீட்டினை அலங்கரித்து நடை பெற்ற திருமணம் போல் இருவரும் கூடும் இந்த நாள், நல்ல நாள் ஆகட்டும் என்று நினைத்தவாறு இன்னும் நேரம் இருப்பதால் தன்னை அறியாமலே பாவம் கொஞ்சம் "சேமம் புகினும் யாமத்து உறங்கு" போல் அவள் தூங்கி விடடாள்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 2 தொடரும்.

"பாட்டி சொல்லைத் தட்டாதே"

1 week 2 days ago
"பாட்டி சொல்லைத் தட்டாதே"
 
நான் இப்ப வளர்ந்துவிட்டேன். பொறியியலாளராக வேலை செய்கிறேன். ஊர் உலகம் எல்லாம் சுற்றி திரிகிறேன். எத்தனையோ விதம் விதமான மனிதர்களையும் பண்பாடுகளையும் சந்திக்கிறேன். என்றாலும் நான் கண்ட, அனுபவித்த பாட்டி - பேரன் தொடர்பை எனோ எங்கும் முழுமையாக காணவில்லை?
 
நான் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறக்கும் பொழுது என் அம்மம்மாவோ அல்லது அப்பம்மாவோ இல்லை. என்றாலும் எங்கள் உறவினரான ஒரு பாட்டி, தன் மகன் மருமகளுடன் எம் அருகில் வாழ்ந்து வந்தார். அவருக்கு பேரனோ பேத்தியோ இல்லை, ஆகவே நாம் எல்லோரும் அவருக்கு பேரன் பேத்தியே!. நாம் அவரை அப்பாச்சி என்றே அன்பாக கூப்பிடுவோம்.
 
நான் சின்னவனாக இருக்கும் பொழுது, பெரிய குழப்படி இல்லை என்றாலும் கொஞ்சம் முரடு, கொஞ்சம் என் வழி. எனக்கு சரியாக படுவதை நான் மற்றவர்களின் புத்தியை அலட்சியம் செய்து என் வழியில் செல்வேன்.
 
"குழந்தை பருவம் சுமாராய் போச்சு
வாலிப பருவம் முரடாய் போச்சு
படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு
பழக்க வழக்கம் கரடாய் போச்சு"
 
மாரி காலம் வந்தாலே, எமக்கு ஒரே கொண்டாட்டம். அப்பொழுது எம் வீட்டுக்கும் அப்பாச்சி வீட்டுக்கும் இடையில் ஒரு வெறும் காணி மட்டுமே. நாம் எமது வேலியில் ஒரு பொட்டு வைத்து, அதன் வழியாகப் புகுந்து அப்பாச்சியிடம் போவோம். அப்ப அந்த வெற்றுக் காணியில் நாம் மழையில் நனைந்து துள்ளி குதிப்போம். அம்மா எம்மிடம் மழையில் விளையாடாதே, காச்சல் தடிமல் வரும், காரிருளில் பாம்பு பூச்சிகள் வாரதும் தெரியாது என்று அச்சுறுத்தல் பாணியில் சொல்லுவார். எனோ அப்படியான பாணியை நான் மதிப்பதில்லை, இவன் சொல்வழி கேளான் என எனக்கு ஒரே திட்டு தான்!
 
ஒரு நாள் அம்மாவின் திட்டலை கேட்ட அப்பாச்சி, என்னோடு விடு நான் அவனை சரிபடுத்துகிறேன் என்று சொல்லி, அவர் தன் வீட்டு திண்ணைக்கு என்னை அழைத்து போனார். முதலில் நீ இதை சாப்பிடு என ஒரு கறுத்தக் கொழும்பு மாம்பழம் வெட்டி தந்துவிட்டு, திண்ணையில் சாய்ந்தபடி கதைக்க தொடங்கினார்.
 
'கடவுள் எங்கே இருக்கிறார் ?' என்று என்னை பார்த்து கேட்டார். இப்ப கேட்டால், பதில் வேறு விதமாக இருந்து இருக்கும், அந்த சின்ன வயதில், அவர் ஆகாயத்தில் இருக்கிறார் என மேலே காட்டி ஒரு துள்ளு துள்ளினேன். 'சிறுநீர் கழிக்க போவதென்றால் என்ன செய்வாய்?' என தனது இரண்டாவது கேள்வியை கேட்டார். நான் அயோ, இதுவுமா பாட்டிக்கு தெரியாதென துள்ளி சிரித்தபடி, அதற்கு பதில் கூறினேன். அவர் விட்டபாடில்லை. 'கடவுள் சிறுநீர் கழிப்பது என்றால் என்ன செய்வார்?' என மீண்டும் கேள்வி கேட்டார். நானும் கோபமாக, எரிச்சலாக, ஆகாயத்தில் தான் கழிக்க வேண்டும் என்றேன்.
 
அவர் தனக்குள் சிரித்தபடி, வெற்றிலை சீவலை வாயிலிட்டு மென்று கொண்டு, என்னை கட்டி பிடித்துக் கொண்டு, அது தான் ஆகாயத்தில் இருந்து கீழே மழையாக பொழிகிறது என்றார். நான் திடுக்கிட்டு போனேன். அந்த சிறுநீரிலேயா நான் விளையாடினேன் . எனக்கு ஒரே அருவருப்பு!
 
'பாட்டி சொல்லைத் தட்டாதே' என சொல்வதை பலமுறை கேட்டிருந்தாலும், அதை பலமுறை பொருட்படுத்தாமல் இருந்து இருந்தாலும், இந்த அசுத்தம், அழுக்கு, அருவருப்பு போன்ற எண்ணங்கள் வர, நான் அப்படியே அப்பாச்சி சொல்லை கேட்டு, அன்றில் இருந்து மழையில் நனைந்து விளையாடுவதை நிறுத்திவிட்டேன்.
 
ஆமாம் பாட்டி எப்பவும் பேரன் பேத்தியின் நலத்திலேயே கூடுதலான அக்கறை உள்ளவர்கள். அவர்கள் பல நேரம் பொய் சொன்னாலும், அந்த பொய்கள் கட்டாயம் ஒரு நோக்கத்திற்காகவும் , பேரன் பேத்தியின் நன்மைக்காகவும் என்பதே உண்மை!
 
"பாவம் பாட்டி தள்ளாடும் வயதிலும்
பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்
பாதாளம் சொர்க்கம் புலுடா விடுவார்
பாவம் புண்ணியம் புராணம் வாசிப்பார்!"
 
"பாடி ஆடி விளையாட்டு காட்டுவார்
பால் கொடுத்து கதை சொல்லுவார்
பழக்க வழக்கங்களை திருத்தி எடுப்பார்
பக்குவமாகப் பேசி நம்ப வைப்பார்!"
 
"பாரிலே உன்னை பெருமை படுத்த
பாதி பொய்யும் கலந்து கூறுவார்
பாட்டி வாரார் பாட்டி வாரார்
பாட்டி சொல்லை இனி தட்டாதே!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
Checked
Fri, 04/19/2024 - 08:37
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed