"பாகப்பிரிவினை"
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03 [ஒரு புது முயற்சி]
"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல ...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"
காட்டில் உறையும் தாய் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த் தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இப்படி பெண்ணுக்கு முன்னுருமை கொடுத்த தமிழ் இனம் எப்படி மாறியதோ ? இதற்கு யார் காரணமோ ? அவள் தூக்கத்தில் புலம்பினாள். பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகின்றான்.
"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய யே பிஸ்யூ பாபயோயை ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர ஸ்தேபி யாந்தி பராம்கதி"[133]
"பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"
என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு பகவத் கீதையில் இழிவு படுத்துவதை காணலாம். இப்படித் தான் மெல்ல மெல்ல மாற்றப்பட்டதோ? பரிசம் சீதனமாக மாறியது. அதன் விளைவு? அவள் நெஞ்சம் பட படத்தது. தன் அக்காவின் கதை நிழலாக அவள் கண் முன் ஓடியது. அவள் தன்னை அறியாமலே கண்ணீரில் நனைந்தாள்.
வால்மிகியின் ராமாயண சீதை அவள் முன் தோன்றி ஆறுதல் கொடுத்தாள். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலை வைத்து படுத்து இருக்கும் போது, கடவுளாக போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காகம் வேடம் போட்டு வந்து, தனது பாலியல் வக்கிரத்தை சீதையின் முலைக் காம்பை கொத்தி தீர்த்த போது, அது குற்றமாக ராமனுக்கு படவில்லை. இராவணனை வென்ற இராமன், சீதையை பார்க்க மறுத்த நிலையில்,
"இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை"
என்றான். மேலும் அவன்
"உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம் ... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா."
என்று கேட்கின்ற போதே, சீதையை கொன்றுவிட்டான் ? கடைசியாக இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு, மீண்டும் தனது கற்பை நிருபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளை கேட்டு தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள் சீதை. அவள் தனக்கு நடந்ததை கூறி
" பூப்போல் உண்கண் மரீஇய நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே."
பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்து நெய்தல் நிலத்துத் தலைவன் வரும் தேர். அது போல உன் அவன் வரும் விமானம் உன் கண்களில் தோன்றிய நோயைத் தீர்க்கும் என் கூறி அவள் கண்ணீரை துடைத்தாள். கண் விழித்த அவள் ஒரு வாறு தன்னை சரிபடுத்திக் கொண்டு, எல்லாம் நல்ல படியாக நடக்கும் என தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.
அவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் என ஒரு பெரும் கூட்டமே அங்கு வந்து கொண்டு இருந்தது. அவர்களுடன் அவளுக்கு தெரியாத ஒரு ஆடம்பர குடும்பம் வருவதை இட்டு அவள் திடுக்கிட்டாள். ஒரு சில நேரம் தடு மாறியே விட்டாள். அவளுக்கு இனி அவர்களை பார்ப்பது வெறுப்பாக இருந்தது. அவளுக்கு அங்கு இனி காத்திருப்பதும் பிடிக்கவில்லை. மேலும் தான் அங்கு வந்திருப்பதை காட்டி கொள்ள விரும்பாதவளாய், மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த ஒரு கடையில் குளிர் பாணம் வாங்கி குடிக்கத் தொடங்கினாள். ஆனால் கண் அவளுக்கு, அவள் எண்ணங்களுக்கு படியவில்லை. அது இன்னும் பயணிகள் வருகையின் வாசல்லையே பார்த்துக் கொண்ட்டிருந்தது. அவள் என்ன செய்வாள்?
"நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”
உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர! என அவள் வாய் தன்னையறியாமல் முணு முணுத்தது.
"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?"
சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுனடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளாரை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ என கத்துவேனா, ஒரு காரணத்தால்? என்ன செய்வது என்று எனக்கு புரியவில்ல. இப்படி அவள் மன நிலை இருந்தது.
"நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே”
அவன் தனக்கு தந்த காதல் நோயால் கறுப்பான தன் கண்கள் இப்போ பச்சையாக போய்விட்டது என நொந்தாள். மக்களும் உலகமுமா சொன்னார்கள் இவளை காதல் செய்யச் சொல்லி? இல்லையே? இப்ப வருந்தி என்ன பயன்? மஞ்சளாய்ப் போயிருந்தாலாவது மஞ்சள் காமலை என்று மருந்தெடுத்திருக்கலாம். பசுமைக்கு ஏங்கியதாலோ என்னவோ இவளது கண்கள் பச்சையாகி விட்டனவோ? யாருக்கு தெரியும்?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 4 தொடரும்.