கதை கதையாம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

1 month ago

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1

கார்த்திக் டிசம்பர் 22, 2024

மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல்.

ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம்

உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார்.

பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார்.

mahabharatham.jpg?resize=600%2C400&ssl=1

” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…”

“வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர்.

சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார்.

நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும்.

மிக சரியான மனிதர்

அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.

ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது.

சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் .

சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார்.

இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார்.

ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர்.

அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்.

அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார்.

சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார்.

அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர்.

சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார்.

  1. ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர்

  2. ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர்.

சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம்

இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர்.

கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன்.

வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார்.

அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன்.

மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது.

சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான்.

இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான்.

https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/

சுவர் முகம் - ஷோபாசக்தி

1 month 1 week ago

சுவர் முகம்

August 4, 2025 ஷோபாசக்தி

பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் பிரான்ஸுக்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்திருந்தபோது, காவல்துறையிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு தனது அகதி வழக்குச் சம்பந்தமானது என்றுதான் டேவிட் முதலில் நினைத்தார்.

டேவிட் தன்னுடைய அகதி வழக்கு விசாரணையின்போது, பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோருவதற்கான காரணங்களை விரிவாகச் சொல்லியிருந்தார்.

“அய்யா! நான் <அடைக்கலம்> என்ற சிறிய தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ ஊழியனாகப் பணியாற்றினேன். இந்த நிறுவனத்தைப் பாதிரியார் செபமாலைநாதர் நடத்திவந்தார். இறுதி யுத்தத்தின்போது, நாங்கள் பத்துப் பேர் ‘மோதல் தவிர்ப்புப் பகுதி’ என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்களைப் பராமரிக்கும் தொண்டைச் செய்துவந்தோம். அங்கிருந்த மருத்துவமனையின் மீது இராணுவத்தினர் ஏப்ரல் 10-ஆம் தேதி அதிகாலை தொடக்கம் இரவுவரை தொடர்ச்சியாகப் பலநூறு கொத்துக்குண்டு எறிகணைகளை வீசினார்கள். முந்தைய இரவு கடுமையாக மழை பெய்திருந்ததால், அங்கிருந்த பாதுகாப்புப் பதுங்குகுழிகள் எல்லாமே வெள்ளத்தால் நிறைந்திருந்தன. பதுங்குவதற்கு இடமின்றி 317 நோயாளிகள் எறிகணைகளால் கொல்லப்பட்டார்கள். எங்களது தொண்டு அணியிலும் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள்.

எல்லாம் முடிந்து இராணுவத்திடம் சரணடையும் நாளும் வந்தது. காயமடைந்திருந்த மூன்று புலிப் போராளிகள் பாதிரியார் செபமாலைநாதர் மூலமாக இராணுவத்திடம் சரணடைய விரும்பினார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு பாதிரியார் தலைமையில் நாங்கள் வெள்ளைக்கொடியை ஏந்தியவாறே இராணுவத்தை நோக்கிச் சென்றோம். எங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு முழு நிர்வாணமாகச் சரணடையுமாறு இராணுவம் கட்டளையிட்டது. நாங்கள் சரணடையும்போது, சிறு துண்டு வெள்ளைக்கொடியைத் தவிர வேறெந்தத் துணியும் எங்களிடம் இல்லை.

நாங்கள் சரணடைந்த இடத்தில் விமானத் தாக்குதலால் இடிந்துபோன வீட்டின் மொட்டைச் சுவர் மட்டுமே இருந்தது. அந்தத் சுவரோடு சேர்த்து நாங்கள் ஆறுபேரும் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தோம். பாதிரியார் முதலாவது ஆளாக நின்றிருந்தார். நான் கடைசி ஆளாக நின்றிருந்தேன். எங்கள் மீது பெற்றோல் ஊற்றப்பட்டது. அப்போது எங்களைப் பார்வையிட வந்த இராணுவ அதிகாரி குலத்துங்கே என்னோடு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் பயின்றவன். அவனால் நான் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டேன். சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த மீதி அய்ந்து பேரும் என் கண் முன்னாலேயே உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டார்கள். இந்தப் படுகொலைக்கு நான்தான் சாட்சி. அப்போது அதிகாரி குலத்துங்கே என்னைக் காப்பாற்றிவிட்டாலும், பின்னர் யுத்தக் குற்ற விசாரணை அது இதுவென்று ஏதாவது வந்தால் சாட்சியான நானும் நிச்சயமாக அரசாங்கத்தால் தேடிக் கொல்லப்படுவேன். அதுதான் இப்போது இலங்கையில் நடந்துகொண்டிருக்கிறது. யுத்த சாட்சிகள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் நான் இலங்கையிலிருந்து தப்பிவந்து உங்களிடம் அரசியல் தஞ்சம் கோருகிறேன்.”

டேவிட் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லியிருந்தாலும், அகதி வழக்கு விசாரணை அதிகாரிகள் இவற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டார்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அடையாளமும் ஆதாரமும் பதிவும் இல்லாமல்தானே இறுதி யுத்ததத்தில் அழிக்கப்பட்டன. ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் டேவிட்டின் அகதி வழக்கு இன்னும் முடியாமலேயே இருக்கிறது. பிரான்ஸிலிருந்து வெளியேறுமாறு டேவிட்டுக்குக் காவல்துறை எந்த நேரத்திலும் உத்தரவிடக் கூடும்.

எனவே, பாரிஸ் காவல்துறைத் தலைமையத்திலிருந்து முதற்தடவை அழைப்பு வந்தபோது, டேவிட் நிறையக் குழப்பங்களோடும் சந்தேகங்களுடனும்தான் அங்கே சென்றார். ஆனால், அவர்கள் அழைத்தது அகதி வழக்குக் குறித்தல்ல. காவல்துறைக்கு டேவிட்டிடமிருந்து ஓர் உதவி தேவைப்பட்டது.

நகரத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றச் செயலில் சந்தேக நபராக ஒரு தென்னாசிய நாட்டவர் கைதாகியிருந்தார். காவல் நிலையத்தில் அந்த நபர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படயிருந்தார். இவ்வாறான அணிவகுப்பில் அவரை ஒத்த உருவமுள்ள நான்கு பேர் அவருடன் நிறுத்தப்படுவார்கள். பொதுவாக அந்த நான்கு பேரும் நாடக நடிகர்கள் அல்லது தன்னார்வலர்களாக இருப்பார்கள். சந்தேக நபர் டேவிட்டை ஒத்த உருவமுள்ளவர் என்பதால், அந்த அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு டேவிட்டிடம் காவல்துறை கேட்டுக்கொண்டது. இந்த வேலைக்குச் சிறியதொரு சம்பளமும் உண்டு.

விஸாவும் வேலையுமில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த டேவிட்டுக்கு அந்தச் சிறிய சம்பளம் பெரும் தொகைதான். ஒரு மாதத்தை ஓட்டிவிடுவார். ஆனால், அதைவிடவும் டேவிட்டுக்கு வேறொரு விஷயமே முக்கியமாகப்பட்டது. காவல்துறைக்கு உதவி செய்தால் அது தனது அகதி வழக்குக்குச் சாதகமாக இருக்கலாம் என டேவிட் நினைத்தார். அகதி வழக்கில் வெற்றி பெற்றால், இலங்கையிலிருக்கும் அவருடைய மனைவியையும் குழந்தைகளையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளலாம்.

இலங்கையில் இவ்வாறான அடையாள அணிவகுப்புகள் சிறைகளில்தான் நடத்தப்படும். அணிவகுப்புக்குச் சிறைக் கைதிகள்தான் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால், பிரான்ஸில் அடையாள அணிவகுப்பு முறை வேறாக இருந்தது. என்ன குற்றம், யார் சந்தேக நபர் என எதுவுமே அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களுக்குச் சொல்லப்படுவதில்லை. ஒரே மாதிரியாக உடைகள் அணிவிக்கப்பட்டு அணிவகுப்பில் நிறுத்தப்படும் அய்வருக்கும் ஒருவரையொருவர் முன்பே தெரிந்திருக்கக்கூடாது. குற்றத்தால் பாதிக்கப்பட்ட தரப்புடனோ அல்லது குற்றவாளியை அடையாளம் காட்ட இருப்பவருடனோ இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்கக் கூடாது. முக்கியமாக இந்த நபர்கள் குற்றம் நடந்த எல்லைப் பிரதேசத்திற்கு அப்பால் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அணிவகுப்பில் இருக்கும் அய்ந்து நபர்களுக்கும் இலக்கம் கொடுக்கப்படும். சாட்சி இவர்களைப் பார்வையிட்டு எந்த இலக்கமுடையவர் குற்றவாளி என நீதிபதியிடம் இரகசியமாக் கூறுவார். திரும்பத் திரும்ப மூன்றுதடவை இந்த அணிவகுப்பு நடைபெறும். ஒவ்வொரு தடவையும் உடைகளும் இலக்கங்களும் மாற்றப்படும்.

முதல் அணிவகுப்பு நடந்தபோது, டேவிட்டுக்கு நீலக் காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் கறுப்புக் காலணிகளும் காவல்துறையால் தனியறையில் வழங்கப்பட்டன. அவற்றை அணிந்ததுகொண்டதும் 5-ஆம் இலக்கம் அவரது சட்டையில் குத்தப்பட்டது. அவரை அதிகாரிகள் அணிவகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சுவரோடு வரிசையாக ஏற்கனவே நான்குபேர் நின்றிருந்தார்கள். அவர்களோடு டேவிட்டும் நிறுத்தப்பட்டார். அணிவகுப்பின் போது உடலை அசைக்கவோ முகத்தில் எந்தவிதப் பாவனையையும் காட்டவோ கூடாது என டேவிட் பலமுறை காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். உண்மையில், சுவரில் புதைந்திருந்த அய்ந்து பொம்மை முகங்கள் போலவே அங்கே இவர்கள் இருந்தார்கள். அந்தக் காட்சி டேவிட்டுக்குப் பெரிய பதற்றத்தை உண்டாக்கிற்று. அவரது மனம் பல்வேறு உணர்ச்சிகளால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. கால்கள் தரையிலிருந்து வழுவி உடல் சரிந்துவிடப் போவது போல அவர் உணர்ந்தார். எனினும், எந்த உணர்ச்சியையும் காட்டாது முகத்தைக் கறுப்புக் காகிதம் போல வைத்திருந்தார்.

இவர்களுக்கு எதிரே ஒரு கண்ணாடிச் சுவர் இருந்தது. அந்தச் சுவருக்கு அப்பால் இப்போது ஒரு முதிய வெள்ளைக்காரர் தோன்றினார். அவர்தான் குற்றவாளியை அடையாளம் காட்டப் போகிறவர். அந்த முதியவர் அய்ந்து முகங்களையும் பார்ப்பதற்கு நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டார்.

காவல்துறை தலைமையத்தில் கையெழுத்துப் போட்டுச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வரும்போது, பெரும் மன உளைச்சலில்தான் டேவிட் வெளியே வந்தார். நேரே மதுச்சாலைக்குச் சென்று மூக்கு முட்டக் குடித்தார். பின்பு ஒரு பை நிறைய மிட்டாய்களை வாங்கிக்கொண்டு போதையில் தள்ளாடியடியே ரயிலைப் பிடித்துத் தனது அறைக்கு வந்து சேர்ந்தார். அவரது அறை பாரிஸின் புறநகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது.

அந்த அறை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் இருக்கும். அறைக்கு வந்ததும் உடைகளைக் கூட மாற்றாமல், உடைந்து கிடந்த கட்டிலில் டேவிட் குப்புறப் படுத்துக்கொண்டார். கட்டில் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டிருந்தது. அவரது மூளையின் இருள் மடிப்புகளுக்குள் எரிந்துகொண்டிருந்த தீ அவரில் இப்போது முழுமையாகப் பற்றிக்கொண்டது.

சுவரில் முகங்கள் என்ற படிமம் அவரைப் பெருத்த அச்சத்திற்குள் வீழ்த்தியது. முள்ளிவாய்க்காலின் மொட்டைச் சுவரில் வரிசையாக இருந்த அய்ந்து முகங்கள் இங்கே அடையாள அணிவகுப்பில் இருந்ததுபோல மரத்துப்போய் இருக்கவில்லை. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டின. ஒருமுகம் பிரார்த்தித்தது. மறுமுகம் கெஞ்சியது. இன்னொரு முகம் அழுதது, அடுத்த முகம் கசப்பைப் காட்டியது. கடைசி முகம் வேதனையோடு புன்னகைத்தது. அந்த முகங்களில் பெற்றோல் ஊற்றப்பட்டபோது, முகங்கள் ஒருசேரக் கண்களை மூடிக்கொண்டன.

நிரம்பிய மதுபோதையில் இருந்த இராணுவவீரன் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு அய்ந்து முகங்களையும் நெருங்கும்போது அவனின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்ததை அந்த அய்ந்து முகங்களும் கேட்டிருக்கலாம். ஒவ்வொரு முகத்திலும் அந்த இராணுவவீரன் கொள்ளி வைத்ததும் எழுந்த கூட்டு ஓலத்தின் போதுகூட அவன் பாடலை முணுமுணுப்பதை நிறுத்தவில்லையே.

தீ வைக்கப்பட்டதும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையாக ஓடிச் செல்லும் என்றுதான் இராணுவத்தினர் நினைத்திருக்க வேண்டும். ஓடுபவர்களின் கால்களில் துப்பாக்கியால் சுடுவதற்கு அவர்கள் தயாராக நின்றார்கள். ஆனால், தீ வைக்கப்பட்டதும் சொல்லி வைத்ததுபோல அந்த அய்ந்து நிர்வாண உடல்களும் ஒரு துயர நடனக் காட்சி போல அசைந்து ஒன்றையொன்று தழுவிக்கொண்டே, அய்ந்து முகங்களும் ஒருமுகமாகி எரிந்தன. கடைசியில் பின்னியிருந்த அய்ந்து கரிக்கட்டைகள் எஞ்சின. அவற்றை இராணுவத்தினரின் நாய்கள் எந்தத் தடயமுமில்லாமல் தின்று முடித்தன.

சில வருடங்கள் கழித்துக் காவல்துறையிடமிருந்து மீண்டுமொரு அழைப்பு டேவிட்டுக்கு வந்தது. முதலில் போக வேண்டாம் என்றுதான் நினைத்தார். ஆனால், அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இந்தமுறை சுவரோடு நிறுத்தப்பட்டபோது, டேவிட் பச்சைச் சட்டையும் வெள்ளைக் காற்சட்டையும் அணிந்து முகத்தை மழுங்கச் சிரைத்திருந்தார். அந்த அணிவகுப்பில் 1-ஆம் இலக்கம் டேவிட்டுக்குக் கொடுக்கப்பட்டது. சாட்சி ஒரு கருப்புப் பெண். அவள் தனது முகத்தை மறைத்திருந்தாள்.

சுவரில் இருக்கும் பொம்மை முகங்கள் டேவிட்டை அச்சப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் அவர் அச்சத்தைத் தின்று அச்சத்தைக் குடித்து வாழ்க்கிறார். அச்சம் மெல்லிய மனநோயாக மாறிக்கொண்டிருக்கிறது.

மூன்றாவது தடவையாக அவர் காவல்துறைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது, அவருடைய அகதி வழக்கு விசாரணை முடிவுற்றுத் தீர்ப்புக்காகக் காத்திருந்தார். இந்த முறை அகதி விஸா கிடைத்துவிடும் என்று டேவிட்டின் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்லியிருந்தார். எனவே, காவல்துறையோடு நெருக்கம் வைத்திருப்பது நல்லது என நினைத்துப் போனதுதான் அவரை உயிர் ஆபத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. இந்தமுறை சாட்சியாக வந்தவர் ஒரு நடுத்தர வயதுச் சீக்கியர். அவரும் நீண்ட நேரமாகச் சுவர் முகங்களைப் பார்த்தார். அந்தச் சீக்கியரை டேவிட் மறுபடியும் சந்திக்க நேரிட்டது.

அந்த அணிவகுப்பு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு டேவிட்டுக்கு அகதி விஸா கிடைத்தது. வேலை தேடித் திரிந்துவிட்டு அவர் தனது அறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது, தன்னை ஒரு வெள்ளை வேன் பின்தொடர்வது போல உணர்ந்தார். டேவிட் வேகமாக நடந்து அடுக்குமாடிக் குடியிருப்பை நெருங்கியபோது, அவருக்குப் பின்னால் வந்த வேன் சட்டென நிறுத்தப்பட்டது. வேனில் இருந்து அந்தச் சீக்கியர் குதித்து இறங்கி ஓடிவந்து டேவிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.

“வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த எனது சின்னஞ்சிறு மகளை நீதான் கடத்திச் சென்று கொன்றாய். நான் ஜன்னல் வழியாக உன்னைப் பார்த்தேன். முட்டாள் காவல்துறை உன்னை விட்டுவிட்டது. ஆனால் நான் விடமாட்டேன்.”

டேவிட் திகைத்துப் போய்விட்டார். குடியிருப்புவாசிகள் அங்கே கூடிவிட்டார்கள். “இவன் சிறுமிகளை நாசம் செய்து கொல்பவன்” என்று அந்தச் சீக்கியர் திரும்பத் திரும்பக் கூச்சலிட்டார். “இல்லை அய்யா… நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளக் காவல்துறையால் அழைக்கப்பட்டவன்” என்று டேவிட் கெஞ்சினர்.

இதற்குள் யாரோ காவல்துறையை அழைத்துவிட்டார்கள். அவர்கள் வந்து சீக்கியரை எச்சரித்து விலக்கிவிட்டபோது கூட “உன்னைக் கொல்லுவேன்” எனச் சொல்லியவாறேதான் சீக்கியர் அங்கிருந்து சென்றார். குடியிருப்புவாசிகளில் பலர் டேவிட்டைச் சந்தேகத்துடன் பார்ப்பது போலவே டேவிட் உணர்ந்தார். குடியிருப்பு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களுக்கு மிட்டாய் கொடுப்பது டேவிட்டின் வழக்கம். இலங்கையிலிருக்கும் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் முகத்தைத்தானே இந்தச் சிறுமிகளிடம் அவர் பார்த்தார். இனி எந்த முகத்தோடு அவர் சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுப்பார்! இவர் கொடுத்தாலும் சிறுமிகள் வாங்க மாட்டார்களே. மூன்று நாட்களாக அவர் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை.

நான்காவது நாள் டேவிட் காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது மிகுந்த பதற்றத்துடனேயே சென்றார். அந்தச் சீக்கியர் விடுத்த கொலை மிரட்டல் ஏற்கனவே பல வருடங்களாக மன உளைச்சலிலும் அச்சத்திலும் இருந்த அவரது நடுமூளையில் கூரிய ஆணியாக இறங்கியிருந்தது.

காவல்துறை தலைமையகத்தில் அந்தச் சீக்கியரும் இருந்தார். டேவிட்டுக்கு முன்பாகவே அந்தச் சீக்கியரிடம் காவல் அதிகாரி “இந்த மனிதர் காவல்துறைக்கு நீண்டகாலமாக உதவி செய்பவர். இவர் சந்தேக நபர் கிடையாது. நீங்கள் அடையாள அணிவகுப்பில் தவறாக இவரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்” எனச் சொன்னார்.

“எனது கண்கள் ஒருபோதும் பொய் சொல்லாது” என்றார் அந்தச் சீக்கியர்.

“நீங்கள் மறுபடியும் இந்த மனிதரைத் தொந்தரவு செய்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்வேன்” எனக் காவல் அதிகாரி சீக்கியரை எச்சரித்தார். அப்போது அந்தச் சீக்கியர் டேவிட்டின் கண்களைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே இகழ்ச்சியான புன்னகையொன்றை வீசியபோது, உண்மையில் டேவிட் அச்சத்தால் உயிரோடு செத்துப்போனார். அவரது மூன்று குழந்தைகளதும் முகங்கள் அவரது இருதயத்தில் வரிசையாகத் தோன்றின. அவரது கண்களில் நீர் கொப்பளித்துச் சிதறியது.

தன்னுடைய அறை இருக்குமிடம் சீக்கியருக்குத் தெரிந்திருப்பதால், அறையில் இருப்பதற்கே டேவிட் அஞ்சினார். சீக்கியரின் இகழ்ச்சியான புன்னகை ஒரு பளபளக்கும் கூரிய கத்தி போல அவருக்குத் தோன்றியது. அறையைக் காலி செய்துவிட்டுப் புதிய இருப்பிடம் தேடலாம் என்றால் பணத்திற்கு வழியில்லை. ஆனால், உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்துகொண்டாலும் சீக்கியரின் கூரிய பார்வை தன்னைக் கண்டுபிடித்துவிடும் என அஞ்சினார்.

நகரத்தில் அவர் வேலை தேடித் திரிந்தபோது, எங்கேயாவது சீக்கியத் தலைப்பாகை தென்படுகிறதா என்பதே அவரது முதல் கவனமாக இருந்தது. அவ்வாறு தலைப்பாகையோடு யாரைப் பார்த்தாலும் உடனேயே அங்கிருந்து நழுவிச் சென்று குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து மறைந்து போனார். ஆனால், பிரான்ஸில் இருக்கும் எல்லாச் சீக்கியர்களும் தலைப்பாகை அணிவதில்லை என்பதையும் அவர்களில் சிலர் மழித்த முகத்தோடு அய்ரோப்பியர்களின் சாயலில் இருப்பதையும் அவர் அறிந்தபோதுதான் தன்மீதும் காவல்துறை மீதும் எல்லாவற்றின் மீதும் அவர் நம்பிக்கையை இழந்தார். தன்னுடைய மரணம் நெருங்கி வருவதை அவர் தெளிவாக உணர்ந்துகொண்டார்.

மதிய நேரத்தில் லூவர் அருங்காட்சியகத்திற்கு அருகேயுள்ள உணவகங்களில் வேலை கேட்டுத் திரிந்துவிட்டு, எப்போதும் போல ஏமாற்றத்துடன் அருங்காட்சியத்தின் வெளி வாசலருகே நின்றிருந்த டேவிட் தனது இடுப்பின் இடதுபுறத்தில் சுருக்கென வலி தோன்றுவதை உணர்ந்து குனிந்து பார்த்தார். இடுப்பிலிருந்து பலூன் போல ஏதோவொன்று ஊதிக்கொண்டு குபுகுபுவென வெளியே வந்தது. அது அவரது குடல். இரண்டு கைகளாலும் குடலை எந்தியவாறே கீழே விழுந்துவிட்டார். அவரைக் கத்தியால் குத்தியவன் அவரை நோக்கிக் குனிந்து எச்சிலைக் கூட்டி அவரது முகத்தில் உமிழ்ந்தான். அவனது முகத்தை ஒருபோதும் டேவிட்டால் மறக்க முடியாது. தலைமுடி ஒட்டவெட்டப்பட்டு, மழுங்கச் சிரைக்கப்பட்ட முகத்துடன் இருந்தான். அவனுக்கு இருபது வயது இருக்கும். அவனது கண்கள் டேவிட்டைப் பார்த்து இழிவாகப் புன்னகைத்த சீக்கியரின் கண்கள் போலவே இருந்தன.

மருத்துவமனையில் டேவிட் ஒன்றரை மாதம் இருந்துவிட்டுத் தனது அறைக்குத் திரும்பியதற்குப் பின்னர் முறை வைத்து மதியத்தில் இரண்டு மணிநேரமும் அதிகாலையில் இரண்டு மணிநேரமும் மட்டுமே தூங்கினார். அது கூட அரை உறக்கம்தான். எந்த நேரமும் தான் கொலை செய்யப்படலாம் என அவர் அஞ்சிக் கிடந்தார். ‘சாவு என்பது ஒரு கடவுள் போன்றது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வெளியே செல்லும்போது ஒவ்வொரு முகத்தையும் உற்றுப் பார்த்து விலகி நடந்தார். முதலில் சீக்கிய முகங்களுக்கு அஞ்சியவர் இப்போது உலகிலுள்ள எல்லா முகங்களுக்கும் அஞ்சினார். சுவரில் ஒருமுகம் வரையப்பட்டிருந்தால் கூட அந்தச் சுவரிலிருந்து அச்சத்தோடு விலகி நடந்தார்.

கொல்லப்பட்ட அந்தச் சீக்கியச் சிறுமியின் மூத்த சகோதரனே டேவிட்டைக் குத்தியிருந்தான். மூன்று மாதங்களுக்குப் பின்பாக அந்த இளைஞன் ஸ்பெயினில் வைத்துக் கைது செய்யப்பட்டுப் பாரிஸுக்குக் கொண்டுவரப்பட்டான்.

இந்த முறை கண்ணாடிக்கு இந்தப் பக்கமாகச் சாட்சியாக டேவிட் இருந்தார். எதிரே சுவரில் இருந்த அய்ந்து முகங்களை நிமிர்ந்து பார்க்கவே அவர் அச்சப்பட்டுக் கண்களை மூடியிருந்தார். நீதிபதியும் காவல்துறை அதிகாரிகளும் பெரும் பிரயத்தனத்துடன் டேவிட்டுக்குத் தைரியம் ஊட்டினார்கள். உண்மையில் அவர்களது தொந்தரவாலேயே டேவிட் கண்களைத் திறந்தார். அவரது உள்ளம் அச்சத்தால் இருண்டே இருந்தது.

எதிரே சுவரில் ஒரே மாதிரியாக அய்ந்து முகங்கள். டேவிட்டால் அய்ந்து விநாடி கூட அந்த முகங்களைத் தைரியமாகப் பார்க்க முடியவில்லை. எனினும், தன்னைக் குத்திய இளைஞனை டேவிட் மூன்று முறையும் சரியாகவே அடையாளம் காட்டினார். தான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளவோ சாட்சியாகவோ காவல்துறைத் தலைமையத்திற்கு வருவது இதுவே கடைசி முறை என நினைத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பினார். சீக்கிரமே தெற்குப் பிரான்ஸிலுள்ள சிறு கிராமத்திற்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டார். அந்தக் கிராமத்தில் ஒரேயொரு தென்னாசியர் கூடக் கிடையாது. அங்கே விவசாயப் பண்ணையொன்றில் நல்ல வேலையும் கிடைத்தது. சீக்கிரமே மனைவி, குழந்தைகளைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார்.

டேவிட் அச்சத்திலிருந்து மெதுவாக வெளியே வந்துகொண்டிருந்த காலத்தில்தான் காவல்துறை டேவிட்டை மறுபடியும் அடையாள அணிவகுப்பில் நிறுத்தியிருக்கிறது. இம்முறை அவருக்கு 3-ஆம் இலக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களும் ஒரேமாதிரியான தோற்றத்துடனும் தாடியோடும் உடைகளோடும் அய்ம்பது வயதை நெருங்கியவர்களாகவும் இருந்தார்கள். நடுமுகம் டேவிட்டுடையது. கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கத்தில் சாட்சி வரும்போதே டேவிட் சாட்சியின் முகத்தை அடையாளம் கண்டுவிட்டார். அந்த முகம் முள்ளிவாய்க்காலில் பாதிரியார் செபமாலைநாதருடன் இராணுவத்திடம் சரணடைந்து சுவரோரமாக நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆறாவது முகம். அதிகாரி குலத்துங்கேவால் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட முகம். நடந்த யுத்தக் குற்றத்திற்கு ஒரே சாட்சி. அந்தச் சாட்சி எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் அணிவகுப்பின் நடுமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.

அந்தச் சாட்சியின் முன்னே இரண்டு தடவைகள் அணிவகுப்பு நடந்து முடிந்து மூன்றாவது தடவையாக டேவிட் அணிவகுப்பில் நின்றிருந்தபோது, டேவிட்டின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்தன. மொட்டைச் சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களின் மீதும் டேவிட் பெற்றோலை ஊற்றிக் கொள்ளி வைத்தபோது ‘சாவு ஒரு கடவுள் போன்றது’ என்ற இந்தப் பாடல்தான் டேவிட்டின் நாவில் இருந்தது.

(ஆனந்த விகடன் – ஜூலை 2025)

https://www.shobasakthi.com/shobasakthi/2025/08/04/சுவர்-முகம்/?fbclid=IwQ0xDSwL9gi9leHRuA2FlbQIxMQABHudbGtZFYAu6hJv3wHzCCn6NODHXoaEHgJ5qf4i5ATO1AKFmzL11sxrNMJ_R_aem__IgadcQPKVZeVUMPtzadqA

நேற்று இல்லாத மாற்றம்!

2 months ago

கதையாசிரியர்: பாரதிமணியன்

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%

ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன். சாப்பிட்டதும் பக்கத்தில் டைனிங் டேபிள் மேல் இருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து ‘மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு, எழுந்து வாஷ்பேசினில் கையை கழுவினான். அவனுடைய ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்ப… மனைவி சங்கீதா அவனிடம் லஞ்ச் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அந்த நேரம் பார்த்து, அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை, அவன் காதில் இருந்த ப்ளூடூத் இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திப் பேச ஆரம்பித்தான்.

சங்கீதா கொடுத்த டிபனை வாங்கி பேக்கில் வைத்துக்கொண்டு, அவளைப் பார்த்து ‘சரி, கிளம்புகிறேன்’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டிவிட்டு, வாசலில் இருந்த காரைப் பார்த்து நடந்தான்.

சங்கீதா அவன் கூடவே வாசல் வரை போய், அமுதன் காரில் ஏறி கிளம்பும் வரை பார்த்துவிட்டு, திரும்பி வீட்டுக்குள் வந்ததும்… கோபமாக ஹாலில் இருந்த சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தாள்.

அவளுக்கு கணவன் அமுதன் மீது கோபம் கோபமாக வந்தது. சமீபகாலமாக அவன் முன்பு போல அவளை கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் அவளுடைய கோபத்திற்குக் காரணம். அவளுக்குத் திருமணம் ஆன புதிதில், புளித்துப் போன மாவில் தோசை ஊற்றிக் கொடுத்தால் கூட.. ‘அடடா என்ன சுவை!’ன்னு பாராட்டியவன், இப்போதெல்லாம்… அவள் ‘யூடியூப்’ வீடியோ பார்த்து, விதவிதமான டிஷ்சை செய்து கொடுத்தாலும் … ‘இது இன்னும் கொஞ்சம் வெந்து இருக்கலாம்!’ ‘உப்பு கொஞ்சம் குறைவா இருக்கிற மாதிரி இருக்கே!’ ‘காரமே இல்லை!’ என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லுகிறான் அல்லது எதுவுமே பேசாமல், மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுகிறான்.

ஒருவேளை அமுதனுக்கு அவள் சமையல் பிடிக்கவில்லையா? அல்லது அவளையே பிடிக்கவில்லையா?!.. இல்லை முன்பு போல அவனுக்குப் பிடித்த மாதிரி தனக்குச் சமைக்கத் தெரியவில்லையோ?! என்று யோசித்தாள். ‘ஆனால் அவளுடைய குழந்தைகள் எப்போதும் போல அவளுடைய சமையலை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார்களே’!’ என்றும் நினைத்தாள்.

அவள் கணவனைப் பற்றிய தீவிர யோசனையோடு… சோபாவுக்கு முன்பு இருந்த டீப்பாயைப் பார்த்தபோது, அங்கே ஒரு ஃபைல் இருப்பதைக் கவனித்தாள். அது ஒரு பட்டன் டைப் பிளாஸ்டிக் ஃபைல், அது சரியாக மூடாததால், அதில் இருந்த பேப்பர்கள் ஃபேன் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

‘ம்ம்..இது அமுதனுடைய ஆபீஸ் ஃபைல் தானே! அடடா… காலையில் ஆபீசுக்குக் கிளம்ப ரெடியானவன், ஆபீஸ் பேக்கில் இருந்து இந்த ஃபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சாப்பிட போகும்போது இதை அப்படியே வைத்துவிட்டுப் போனான். பிறகு ஆபீசுக்குப் புறப்படும்போது, போன் பேசிக்கொண்டே… ஃபைலை மறந்துவிட்டு, ஆபீஸ் பேக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் போல!’

என்று நினைத்தபடி, அவள் அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

அப்போது அந்த ஃபைல் அவளுடைய கையில் இருந்து நழுவி, கீழே தரையில் விழவே… அதற்குள் இருந்த பேப்பர்கள் சில ஃபைலை விட்டு வெளியில் வந்து விழுந்தன. அவள் உடனே சட்டென்று எழுந்து… அந்த பேப்பர்களை எடுத்து மீண்டும் அந்த ஃபைலில் வைத்தாள். அதில், அமுதனுடைய முத்து முத்தான கையெழுத்தில் தமிழில் எழுதியிருந்த பேப்பர் ஒன்று அவள் கண்ணில் பட்டது.

மற்ற பேப்பர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்க, இந்த பேப்பர் மட்டும் தமிழில் இருந்ததால், அந்த பேப்பரில் எழுதியிருந்ததைப் படித்தாள்.

‘நீ என் மனைவியாக வந்தது…’ என்று ஆரம்பித்த வரியைப் பார்த்தவுடன், அது அவளுடைய ஆவலைத் தூண்ட, அதை முழுவதுமாகப் படிக்க விரும்பினாள்.

“நீ என் மனைவியாக வந்தது…நான் செய்த புண்ணியம்!. நீ என்னை அக்கறையோடு கவனித்துப்பார்த்துக்கொள்வதால்தான், நான் வீட்டில்

கவலை இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆபீஸ் வேலை, டென்ஷனில் உன்னிடம் இதுவரை மனம் விட்டு பேச முடிந்ததில்லை. என் மனதில் உள்ளதை நேரடியாக சொல்வதை விட, இந்தக் கடிதம் மூலமாக என் உள்ளம் திறந்து சொல்கிறேன்! ‘நீயில்லாமல் என் வாழ்க்கையே இல்லை! உன்னை எனக்கு மனைவியாகக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அதைப்போலவே உன்மீதும் நான் அன்பைப் பொழியவே விரும்புகிறேன்.’

அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் கையெழுத்து அமுதனுடையது என்பது தெளிவாக அவளுக்குத் தெரிந்தது. ‘ஏன் அமுதன் இதை, ஆபீஸ் ஃபைலில் வைத்திருக்கிறான்?! அவள் அவனிடம் கோபமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவளைச் சமாதானப்படுத்த, இப்படி எழுதி வைத்திருக்கானோ?! அவள் பார்க்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்தப் ஃபைலை வைத்துவிட்டுப் போய்விட்டானோ!’… இப்படி பல விதமாக அவள் யோசித்தாள்.

அதற்குள் ஆபீசுக்குப் போன அமுதன் திரும்ப வீட்டிற்கு முன்பு வந்து காரை நிறுத்தி, ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே சங்கீதா அந்த லெட்டரை ஃபைலில் வைத்துவிட்டு, அந்த ஃபைலை எடுத்துக்கொண்டு அவசரமாக, வீட்டுக்கு வெளியே வந்தாள்.

“நான் ஒரு ஆபீஸ் ஃபைலை, ஹாலில் சோபா மேலே வைத்துவிட்டுப் போய்விட்டேன். கொஞ்சம் அதை எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு, அவள் கையில் அந்த ஃபைலை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு புன்னகையோடு அந்த ஃபைலை வாங்கிக்கொண்டு போனான்.

அன்று மாலை அமுதன் திரும்ப ஆபீஸில் இருந்து வந்த பிறகு, அவனால் வீட்டில் நடப்பதெல்லாம் நம்ப முடியவில்லை. அவன் ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாய், காரை நிறுத்தும் இடத்துக்கே வந்து வரவேற்கிற சங்கீதாவை அமுதன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

முன்பெல்லாம் அவன் ஏதாவது சொல்வதற்கு முன்பு… “உங்களுக்கு ஒன்றும் தெரியாது. சும்மா இருங்கள்! எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலை ஆன்லைன் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டு, வீட்டையே கவனிக்கிறதில்லை!

இங்கு வீட்டில் ஒருத்தி என்ன சமைக்கிறாள்? என்ன சாப்பிட்டாள்… இப்படி எதுவும் கண்டுகொள்வதில்லை… எப்ப பார்த்தாலும் அந்த போனில் யாருகிட்டயாவது பேசிக்கொண்டே இருக்கிறது. இல்லை அதையே நோண்டிக்கொண்டு இருக்கிறது. வீட்டில் பொண்டாட்டி என்று ஒருத்தி இருக்கிறதே உங்கள் ஞாபகத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை.! பெற்ற பிள்ளைகளிடம் பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை.”

எப்பவும் குறை சொல்லிக்கொண்டு, அவனை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிற மனைவி, இப்போது “பாவம்ங்க நீங்கள்… நம்ம குடும்பத்துக்காக இப்படி வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் கூட பேசக்கூட முடியாத அளவுக்கு வேலை. ஆபீஸில் எந்த பிரச்னையானாலும், உடனே போன் பண்ணி பேசி.. உங்களைத் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்.

நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கிற பாசத்தை புரிந்துகொள்ளாமல், நான் வேறு… உங்களிடம் எப்ப பார்த்தாலும் மல்லு கட்டிக்கொண்டு, மூஞ்சை தூக்கிக்கொண்டு இருக்கிறேன்.”

சங்கீதா இப்படி பேசுவதைக் கேட்டு… அவனுக்கே நடப்பதெல்லாம் கனவா நனவா என்று தெரியவில்லை.

திடீரென்று அவளுடைய நடவடிக்கையில் வந்த இந்த மாற்றத்துக்கு காரணம், ஒருவேளை, ராசிபலனில் சொல்லுவார்களே, அது மாதிரி அவனுடைய ராசியில் இருக்கிற கிரகங்கள் எல்லாம் உச்சம் பெற்றுவிட்டதா?!’ என்று யோசித்தான்.

மறுநாள் வழக்கம் போல அமுதன் ஆபீஸ் கிளம்பும் போது, சங்கீதா, பளிச்சென்று புன்னகையோடு கூடவே வாசல் வரை வந்து வழியனுப்பினாள்.

அவனுடைய லஞ்ச் பாக்ஸ், ஆபீஸ் பேக் எல்லாவற்றையும் அவளே எடுத்துக்கொண்டு வந்து, அவனுடைய காரில் வைத்துவிட்டாள். கல்யாணம் ஆன புதிதில் அவனோடு அன்பாக, சினேகமாக இருந்த மனைவி சங்கீதாவை மீண்டும் பார்ப்பது போல் அமுதனுக்குத் தெரிந்தது. ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ என்ற திரைப்பட பாடல் அவன் நினைவுக்கு வந்தது.

இப்படி யோசித்துக்கொண்டே, ஆபீசுக்கு வந்த அமுதனை, அவனுடைய சீட்டில் வந்து உட்கார்ந்ததும்… அவனுடைய ஜூனியர் நவீன் எதிரே வந்து நின்றான். “ரொம்ப தாங்க்ஸ் சார். உங்க அனுபவ அறிவை வெச்சு , என்னோட குடும்பத்தில் இருந்த பிரச்சனையை சரி பண்ணி கொடுத்திருக்கிறீங்க . சூப்பர் சார். இந்த உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன் சார். உண்மையில் உங்களை போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க உங்க வைஃப் கொடுத்து வெச்சிருக்கணும்.

அவங்க ரொம்ப லக்கி சார்” என்று மகிழ்ச்சியோடு மனம் நெகிழ்ந்து பேசினான். “என்ன பிரச்சனைன்னே தெரியாம, எனக்கும் என் வைஃபுக்கும் இடையில இதுவரை இருந்த சண்டை, நீங்க கொடுத்த யோசனையாலதான் சரியாச்சு.

அவளோட இனிமே சந்தோஷமா வாழவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்த நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்னா அது உங்களாலதான் சார். நீங்க எனக்காக ஒரு லெட்டரை எழுதி காண்பித்து, அதே மாதிரி என்னையும் எழுதி, என் வைஃப் கண்ணுல படற மாதிரி வீட்டுல வைக்க சொன்னீங்க. ஆனா நான் அவ கையிலேயே கொடுத்துட்டேன்.

அவ அதை படிச்சதும் செம ஹாப்பியா ஆகிட்டா… அதுக்கப்புறம் எனக்கு ஒரே கவனிப்புதான்.” என்று சொல்லிவிட்டு, அவன் மனசுல தோன்றிய சில விஷயங்களையும் அமுதன் கிட்ட சொன்னான்.

சார், நம்ம கூட வேலை செய்யறவங்களை, நமக்கு கீழ வேலை பார்க்குறவங்களை தட்டிக்கொடுத்து, பாராட்டிட்டு, அதுக்கு பிறகு அவங்களை வேலையை செய்ய சொல்லும் போது, அவங்களோட நட்பும், முழு ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்குது. நாம அதே மாதிரியான அணுகுமுறையை, நம்ம வீட்டில காண்பிக்கிறதில்ல. அவங்களுக்காக உழைக்கிறோமுன்னு சொல்லிட்டு, நாம அவங்ககூட பேசக்கூட நேரம் இல்லாது போல நடந்துக்கறோம்.”

வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு… நாள் முழுதும் டென்ஷனோடு வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற லேடிஸ்க்கு, ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கணுமுன்னா… நாம அவங்களோட பேச, நம்ம நேரத்தை ஒதுக்கணும். மனசு விட்டு பேசணும். அப்போதுதான் அவங்களை நாமும், நம்மை அவங்களும் புரிஞ்சிக்க உதவும். இதை உங்க உதவியால நான் புரிஞ்சிக்கிட்டேன். நவீன் உற்சாகமாகப் பேச… பேச… அவனுடைய பாராட்டையும், நன்றியையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அமுதனுக்கு, அப்போது மனசுக்குள் பல்ப் எரிந்தது.

அவன் நவீனிடம் பேசி, வாழ்த்தி அனுப்பிவிட்டு… அவசரமாக அவன் வைத்திருந்த அந்த பிளாஸ்டிக் பைலை எடுத்துப் பார்த்தான். வீட்டில் ஒரே சண்டையாக இருப்பதாக நவீன் அமுதனிடம் புலம்பியபோது, நவீனுக்காக, நவீன் மனைவியைப் பாராட்டி எழுதுவதுபோல, ஒரு கடிதத்தை எழுதிக் காண்பித்து, அவனையும் அதைப்போல் எழுதச் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கடிதத்தை அந்த பைலில் வைத்திருந்தான்.

‘சங்கீதாவின் மாற்றத்துக்குக் காரணம் அந்தக் கடிதம்தான் என்று அமுதனுக்குப் புரிந்துவிட்டது. நேற்று அந்த பைலை அவன் வீட்டில் மறந்துவிட்டுப் போன நேரத்தில், சங்கீதாவும் படித்துவிட்டு… அது அவளுக்காக அமுதன் எழுதியது என்று நினைத்திருக்கலாம்’ என்று நினைத்தான்.

பொதுவாக அடுத்தவர்களுக்கு ஆலோசனை தருவது சுலபமான விஷயம். ஆனால் அவரவர் குடும்ப விஷயத்தில் அதைப் பின்பற்ற நினைப்பதில்லை. எது எப்படி இருந்தாலும், நவீனுடைய குடும்பச் சண்டைக்கு, அமுதன் கொடுத்த யோசனை அவனுக்கே பலன் தந்துவிட்டது.

அவன் மனைவி சங்கீதா பாவம், அவளாகவே கற்பனை பண்ணிக்கொண்டு சந்தோஷமாகிவிட்டாள். அதை நினைத்ததும் அமுதனுக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன்மீது அவள் காட்டும் அன்புக்குத் தகுதியானவனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ‘இனிமேல் மனைவி சங்கீதா கூடவும், குழந்தைகளோடும் அதிக நேரம் செலவழித்து, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கணும்’ என்று அமுதன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

– ராணி வார இதழில் (29.06.2025) பிரசுரிக்கப்பட்டுள்ளது.

https://www.sirukathaigal.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/

மாதா எழுதிய “முதுமை” சிறுகதை

2 months 1 week ago


Muthumai Tamil Short Story Written By Matha

Posted inStory

மாதா எழுதிய “முதுமை” சிறுகதை

Posted byb3859e7d7d51687ce989542ecb0cc7755ef15e61Bookday07/07/2025No CommentsPosted inStory

“முதுமை” சிறுகதை

– மாதா

அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார்.

ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இருப்பவரே பெரிய செல்வந்தர். நலக்குறைவில்லா வாழ்க்கை.

மூதாட்டிக்கு கடவுளிடம் ஒரே ஒரு பிரார்த்தனைதான். நூறு ஆண்டுகள் வரை கணவர் உயிரோடு வாழ வேண்டும். அவருக்கு முன்பு அவள் உயிர் பிரிய வேண்டும். நலமுடன் இருக்கும் போதே கடவுள் அவளை அழைத்துக் கொள்ள வேண்டும். அவரை விட்டால், அவள் யாரிடம் முறையிட முடியும்? தேவைப்படும் நாளில் உதவிக்கரம் கிடைக்காத சூழலில் மனிதன் கடவுளை எண்ணுகிறான், தன்னை மீட்டெடுப்பான் என்று நம்புகிறான்.

ஆனால் அளவான இறை நம்பிக்கையுள்ள முதியவர் ஆண்டவனிடம் இதுபோன்ற கோரிக்கை வைப்பதில்லை. பக்தர்களை கவனிப்பதை விட கடவுளுக்கு உலகில் ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அவளுடைய வேண்டுகோளை கடவுள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இருப்பவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கி விட்டால், மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லாமல் போகுமே…

சராசரி அயுளுக்கு மேல் நீணட கால வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையின் இறுதிப் பகுதி துயரத்தின் வலி மிகுந்ததாகவே இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடு அந்த மூத்த தம்பதிகளின் வயதை விட பழமையானது. மூன்று தலைமுறையை தாங்கி நிற்கிறது. பழமையான அந்த வீட்டில் பழமையான இரு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். நூற்றி ஐம்பது ஆண்டு வயதுடைய அந்த வீட்டை மராமத்து செய்யவோ, நவீனப்படுத்தவோ அவர்கள் வரும்பவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து தங்காத வீட்டை புதுப்பிக்கவில்லை. பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்த்துவிட்டு மீண்டும் வாழத்தொடங்கி இருக்கிறார்கள்.

மூத்த தம்பதிகள் நீண்டகாலம் வாழ்வதால் முதுமைக்கால பிரச்சனைகள் துன்புறுத்தும். அவர்களை பராமரிப்பதற்காக செலவு ஏற்படும். பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததால் அவர்கள் தங்களிடம் சேர்ந்து கொண்டார்கள் மூத்த தம்பதிகள். முதுமைப் பருவம் என்பது பிறப்பு, இறப்பு எல்லைகளுக்கு இடையிலான விளிம்பு நிலை பருவம். கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையின் அனைத்து அனுபவங்களையும் அசை போட்டு, அடுத்த தலைமுறைக்கு சுவடுகளை விட்டுச் செல்லுகிற உன்னத பருவம். அவர்கள் ஏற்கனவே நீணட காலம் வாழ்ந்து விட்டார்கள். அந்த ஊரிலேயே அவர்கள்தான் வயதானவர்கள். அவர்கள் வயதையொத்தவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனாலேயே அவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிய மனதளவில் தயாராகி விட்டார்கள். மரணம் யாரிடமும் அனுமதி கேட்பது இல்லை. மரணத்தை விட்டு ஓட முடியுமா? ஒருவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். நிறைவான வாழ்க்கையில் மரணம் இருக்காது.

கிழவரும், அவருடைய மனைவியும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். தங்களின் தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தினமும் ஒரு நேரம் மட்டுமே ரேஷன் அரிசியை சமைத்து இரண்டு வேளைக்கு சாப்பிடுகிறார்கள். பல நாட்களில் வயதான வயிறு ஒத்துழைக்க மறுக்கிறது. உண்ட உணவை செரிக்க முடியவில்லை. தினமும் குறைந்த அளவே உண்ணுகிறார்கள். உடலில் உயிரையும், ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்கியதே இல்லை.

அக்கம், பக்கத்து குடித்தனக்காரர்கள் அவர்களை பொறாமையோடு பார்ப்பார்கள். இந்த வயதான காலத்திலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? வெளியூர்களில் வசிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவில்லையே, பராமரிக்கவில்லையே எனற கவலைகள் கிடையாது.
நீங்கள் எப்போது விரும்பினாலும் இந்த கிராமத்திற்கு வந்து நமது முன்னோர்கள் கட்டிய இந்த வீட்டில் தங்கிச்செல்லலாம் என்று பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்கு தந்தியோ, தகவலோ கொடுப்பதில்லை.

ஆனால் கிழவிக்கு முதுமைக்கால புலம்பல்கள் அவ்வப்போது வரும். பெண்கள் எதற்காக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்? பெற்றோர்களை முதுமைக் காலத்தில் கவனித்து பராமரிப்பதற்குத்தானே…என் பிள்ளைகள் எனக்கு கடிதம் கூட எழுதுவதில்லை.

இப்படியான பேச்சு வரும்போதெல்லாம் கிழவர் சட்டென்று சொல்லிவிடுவார்;. எந்த மனிதனும் எவரையும் காப்பாற்ற முடியாது. கடவுள் மட்டுமே நமக்கு நல்லது செய்ய முடியும் என்பார். அவரவர்க்கு ஏராளமான சொந்த பிரச்சனைகள். நமது பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் நமக்கு கடிதங்கள் எழுதுவதாலேயே நம்முடைய பிரச்சனைகள் மறைந்துவிடுமா?

பிள்ளைகளைப் பற்றி தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பது தாய்மார்களுக்கு. வாடிக்கையாகிவிட்டது. அவர்களெல்லாம் நம்மைப் பார்க்க வந்து தங்கிவிட்டால், உன்னால் சமாளிக்க முடியாது. பத்துப் பனிரெண்டு தட்டுகளுக்கு உன்னால் சமைத்து பரிமாற முடியுமா? அவர்கள் எப்போது விரும்புகிறர்களோ அப்போது வந்து பார்க்கட்டும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது.

இதைக் கேட்டதும் பாட்டிக்கு பல்லில்லா வாயில் கனிவான புன்னகை பூக்கும். கண்டிப்பு கலந்த வார்த்தைகளை கணவன் உச்சரித்தாலும் அதில் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும். சில நேரங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதற்காக அவள் புலம்பினாலும், கணவன் அவளை அதட்டி கட்டுப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதாகி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி, தம்பதிகள் முதுமையாகி தளர்ந்து விட்டார்கள்.

ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் இந்த வீடு பழமையானாலும் கம்பீரமாக நிற்கிறது. பொலிவுடன் தொன்மையான மரபின் அடையாளமாகத் திகழ்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரமாண்டத்தை அளிக்கிறது.

மனிதருக்கு வீடும், உலகமும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. தனித்துவமாகவும் இருக்கிறது. சிலருக்கு வீட்டிற்கும், உலகிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. வீடு உங்களை எளிதாக அங்கீகரித்தாலும், உலகம் உங்களை எளிதில் அங்கீகரிக்காது. வீடும் அங்கீகரித்து, உலகமும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உலகிலேயே வீடுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது. வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல. அது வாழ்வின் அடையாளம். முதுமையை கழிப்பதற்கு பாதுகாப்பான இடம் வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை.

அவர்களது உடம்பு முதுமையாகி தளர்ந்து விட்டது. முதுமை அவர்களுக்கு சுமையாகிப் போனது. சிரமமும், வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்கள் தூசிக்குள்ளும், சிலந்தி வலைக்குள்ளும் அடைந்து கிடக்கிறார்கள். இருந்தும் தங்களைத் தாங்களே மென்மையாகப் பாதுகாத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

அண்மைக் காலமாக முதியவர் உடம்பு கூன் விழுந்து பலவீனமாகி, முதுமைக்கால தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. கட்டிலில் இருந்து இறங்கக் கூட யாரேனும் கைத்தாங்க வேண்டிய காலத்தில் புரிகிறது அவளுக்கு நானும், எனக்கு அவளும்தான் கடவுள் என்பது. முதலில் பிறந்த மனிதன் பழையது ஆகிறான். பின்னால் பிறந்தவன் புதியவனாகிறான். ஆனால் ஒவ்வொருவரும் பழமையாகி, பயனற்றதாகி விடுகிறார்கள். இந்த முறையும் லீவுக்கு வரமுடியாதுன்னு தபால் வந்திருக்கு. ஒரு தடவையாவது அவன் வந்து பார்க்கக் கூடாதா என்று கிழவி கேட்டதற்கு, கிழவர் அமைதியாய் பதிலளித்தார். ஒருவன் பழையவர்களை அழைத்துச் செல்ல
வருவான்.

யார் அவன்?

அவன் புதியவற்றை வளரவிட்டு, பழமையாக்குபவன்;. நம்மை அழைத்துச் செல்ல எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அவள் நெற்றியைத் தடவிக்கொண்டே கூறினார். லௌகீக வாழ்வுக்கு தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்தப் பருப்பொருள்தான் கடவுள்.

*************

எழுதியவர் : 

MATHA-PHOTO-221x300.jpg

✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு
சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர்
75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி
ஆண்டிபட்டி- அஞ்சல் 625512
தேனி- மாவட்டம்


https://bookday.in/muthumai-tamil-short-story-written-by-matha/

சிஸ்ட்டர் அன்ரா

2 months 3 weeks ago

நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது.

1988 சித்திரையாக இருக்கலாம்.

தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம்.

இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள்.

அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார்.

மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.

வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் -

2 months 4 weeks ago

வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் -

- குரு அரவிந்தன் -

பயணங்கள்

11 ஏப்ரல் 2025

kuru_aravinthan_iceland1.jpg

நடு இரவில் தெரியும் சூரியன்!

ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் 22 மொழிகள் இங்கே பாவனையில் இருக்கின்றன. இங்குள்ள 86 வீதமான மக்கள் ஆங்கிலமொழி பேசுகின்றார்கள்.

பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், நடுநிசியில் தெரியும் சூரியன், பல வர்ணங்கள் கொண்ட நொதேன்லைட், வட அமெரிகாவிலே உயர்ந்த தெனாலி மலைத்தொடர், உலகிலே உயிர் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலங்கள், பனிக்காலத்தில் உறங்குநிலைக்குப் போகும் கரடிகள், வடதுருவ பனிக்கரடிகள், பனிக்கட்டி வீட்டில் வாழும் எஸ்கிமோக்கள் என்றெல்லாம் மாணவப் பருவத்தில் படித்ததை அங்கே நேரடியாகக் காணமுடிந்தது. இதைவிட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது, அது என்னவென்றால் ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற, சேலம் தமிழ் சங்கத்தின் சிறந்தநாவல் -2020 க்கான பரிசு பெற்ற எனது நாவலின் தளமாகவும் பனி சூழ்ந்த அலாஸ்காதான் இருந்தது.
   
நாங்கள் ஒரு கரவன் வண்டியை அதாவது இங்கே ஆர்.வி. என்று சொல்லப்படுகின்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றோம். அதில் சமையலறை, படுக்கையறை, குளியலறை எல்லாமே இருந்தன. பெயபாங் என்ற இடத்தில் இருந்து டல்ரன் நெடுஞ்சாலையில் சென்றால் வடதுருவத்தை அடையலாம். அங்கே உள்ள மொறிஸ் தொம்ஸன் கலாச்சார மண்டபத்திற்குச் சென்றால் வடதுருவத்தில் கால்பதித்தவர் என்று உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள்.

வடஅமெரிக்காவில் மிக உயரமான மலைச்சிகரம் Mount McKinley இங்கேதான் இருக்கின்றது. உலகிலேயே மூன்றாவது பிரபலமான இந்த மலையின் உயரம் 20,310 அடியாகும். இந்த மலைத் தொடரில் பனிப்படலத்தால் உறைந்த ஐந்து கிளேஸியர்கள் இருக்கின்றன. சிலெட்டோக் என்று சொல்லப்படுகின்ற அலாஸ்கியன் நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டிகளில் பயணிப்பது, பனியில் சறுக்கி விளையாடுவது, கூடாரம் அடித்து தங்கி காம்பயர் செய்வது, மலை ஏறுவது, வேட்டையாடுவது, மீன் பிடிப்பது போன்ற பொழுது போக்குகள் இங்கே உண்டு. கருங்கரடிகள், கரிபோ மான்கள், மலை ஆடுகள் போன்றவற்றை அருகே சென்று பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது. கழுகுகள், மலை எலிகள், நரிகள், மலை அணில்கள் போன்றவற்றையும் அங்கே காணமுடிந்தது. எஸ்கிமோக்கள் என்று நாங்கள் சிறுவயதில் படித்த, பனிக்கட்டிகளால் உருவான வீடுகளில் வாழ்ந்த முதற்குடி மக்களின் பரம்பரையினரை அங்கு சந்தித்து உரையாட முடிந்தது.

அங்கரேய்ச் நகரில் தங்கி அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்த்தோம். கடல் உணவுக்குப் புகழ் பெற்றது. இரவுதங்கிவிட்டு தெற்கே 127 மைல்களுக்கு அப்பால் உள்ள சீவாட் என்ற இடத்திற்கு மறுநாள் காலையில் பயணமானோம். சீவாட்டில் சுமார் 3000 மக்கள் வசிக்கிறார்கள். கினாய் பியோட்ஸ் நேசனல் பார்க் என்ற இடத்திற்குச் செல்வதற்காக முற்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தோம். இது றிசுரக்ஷன் குடாவின் கரையோரத்தில், மலைகள் சூழ்ந்த பகுதியில்; இருப்பதால் படகில்தான் செல்லவேண்டும். படகில் செல்லும் போது, ஒன்றல்ல, இரண்டு இடங்களில் கறுப்பு வெள்ளை நிறமான ‘கில்லவேல்’ என்ற திமிங்கிலங்களை மிக அருகே  காணமுடிந்தது. எக்ஸிற் கிளேஸர் என்ற பனிமலை இப்பகுதியில் பிரபலமானது.

kuru_aravinthan_iceland5.jpg

திரும்பி வரும் வழியில் கோப் (ர்ழிந) என்ற மிகப் பழமையான ஒரு கிராமத்துக்குச் சென்றோம். இங்கு 1898 ஆம் ஆண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால், சியாட்டோவில் இருந்து மக்கள் வந்து குடியேறினார்கள். அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் முதியவரான பெண்மணி, தான் அங்கே பிறந்து வளர்ந்ததாகவும், தனது தாத்தா, பாட்டி காலத்தில் அவர்கள் தங்கச் சுரங்கத் தொழில் நிமிர்த்தம் இங்கு வந்து குடியேறியதாகவும் குறிப்பிட்டார். ரொறன்ரோவில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியோடு தேனீர் தந்து உபசரித்தார். எங்களுடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார். தங்கச் சுரங்கத்தில் பாவித்த மிகப்பழைய பொருட்களைக் காட்சிப் படுத்தி இருந்தார்கள். எப்படித் தங்கத்தை பிரித்து எடுப்பது என்றும் அதற்கான தொட்டியில் செய்து காட்டினார்.
 
வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு

kuruaravinthan_alaska2.jpg

ஐஸ்லாந்து என்ற ஒரு சிறிய தீவு அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இருக்கின்றது. 103,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட, ரெக்காவிக்கைத் தலைநகராகக் கொண்ட இந்த எரிமலைத் தீவுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. படகில் சென்று வடதுருவத் திமிங்கிலங்களை அருகே பார்க்கக்கூடியதாக இருந்தது. இத்தீவில் சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். நான் பயணத்தை முடித்துக் கொண்டு வந்ததன் பின் ஒருநாள் 24 மணி நேரத்தில் சுமார் 2200 நிலவதிர்வுகள் இத்தீவில் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று அங்குள்ள மக்கள் பயந்து போனார்களாம். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுகள் அடிக்கடி முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே உள்ள எரிமலை ஒன்று 2010 ஆம் ஆண்டு வெடித்த போது விமானப் போக்குவரத்தே அப்பகுதியில் ஒருவாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த எரிமலை வெடிப்பால், புகையும், சாம்பலும் பல மைல் தூரங்களுக்குக் காற்றோடு பரவி சுற்றுவட்டத்தை மாசடைய வைத்திருந்தன.

ஐஸ்லாந்தின் பொருளாதார வசதிகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளையே அவர்கள் அதிகம் நம்பியிருக்கிறார்கள். பொருட்களை இறக்குமதி செய்வதால் பொருட்களின் விலை இங்கு சற்று அதிகமானது. ஆங்கிலமும் பேசும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள். வீடுகள் கூட்டமாக இல்லாமல், தனித்தனியாகவே அங்குமிங்குமாக இருக்கின்றன. மலைச்சரிவில் உள்ள சில வீடுகளின் கூரைகளைப் புற்கள் வளர்ந்து மூடியிருக்கின்றன. பபின் என்று சொல்லப்படுகின்ற அழகிய பறவைகளை இங்கு காணமுடிந்தது. செம்மறி ஆடுகளும், குதிரைகளும் நிறை இருக்கின்றன. சிக்காக்கோவில் ‘பான்பிட்ஸா’ பிரபலமாக இருப்பது போல, இங்கே கிடைக்கும் ‘ஐஸ்லாண்டிக் கொட்டோக்’ மிகவும் ருசியானதால் பிரபலமானது. வரிசையில் நின்றுதான் வாங்கவேண்டி வந்தது.
kuru_aravinthan_iceland2.jpg
‘நோர்ஸ்’ இனத்தைச் சேர்ந்த வைக்கிங் காலப்பகுதியில்தான் இத்தீவில் குடியேற்றங்கள் எற்பட்டன. சுமார் 3 லட்சம் மக்கள்தான் இங்கு வசிக்கிறார்கள். அரச கட்டுப்பாடுகள் காரணமாக, பெற்றோர் விரும்பியவாறு பிள்ளைகளுக்கு இங்கே பெயர் வைக்க முடியாது. தொடர்வண்டிகளும் இங்கு இல்லை. இவர்களது முன்னோர்கள் ஒரு காலத்தில் பயங்கரமான கடற்கொள்ளையர்களாக இருந்தார்கள். கழுத்தைக் கோடாரியால் வெட்டுவது, மரத்திலே கட்டி உயிரோடு எரிப்பது போன்ற தண்டனைகளைக் கொடுத்தார்கள். இங்குள்ள காட்சியகத்தில் இது போன்ற தண்டனைக் காட்சிகளை நிஜமாக நடப்பது போலப் பார்க்க முடிந்தது. இன்னுமொரு காட்சிப் பொருளாக 2 ஆம் உலகயுத்தத்தில் ஜெர்மனியால் சுட்டு விழுத்தப்பட்ட ரஸ்ய விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் அமெரிக்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்த போது ஆச்சரியமாக இருந்தது. இதைப்பற்றித்  தேடுதல் செய்தபோது அமெரிக்காவிடம் இருந்து ரஸ்யா அந்த விமானங்களை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.
   
kuruaravinthan_alaska3.jpg

நிலத்திற்கு அடியில் இருந்து திடீர் திடீரென ஒரு பனைமர உயரத்திற்கு நீர் ஊற்றுக்கள் சீறிப்பாய்கின்றன. நிறைய நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. சுடுதண்ணிக் குளங்களும் இங்கு இருக்கின்றன. வீடுகளைச் சூடாக்க இந்த சூடான தண்ணீரையும், நிலவடிச் சூட்டுகாற்றையும் பயன்படுத்துகின்றார்கள். தீவைச் சுற்றி வருவதற்கு நல்ல நிலையில் ‘றிங்ரோட்’ என்ற நெடுஞ்சாலையை அமைத்திருக்கிறார்கள். வண்டியை வாடகைக்கு எடுத்து விரும்பிய இடங்களைச் சென்று பார்க்கக்கூடிய வசதிகள் உண்டு. பனிக்காலத்தில் சிறிய வீதிகளை மூடிவிடுகிறார்கள். இக்காலத்தில் ‘நொதேன் லைட்’ என்று சொல்லப்படுகின்ற வானத்தைப் பல வர்ணங்களில் பார்க்க முடியும். நோர்வே நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்தத் தீவுகளுக்குப் பெயர்சூட்டும் போது தவறு செய்து விட்டார்கள். மாலுமிகள் தகவல் தெரிவித்தபோது ஒரு தீவு பனியாலும், அருகே உள்ள இன்னும் ஒரு தீவு பச்சைப் பசேலென்று தாவரங்கள் சூழ்ந்திருப்பதாகவும் அறிவித்தபோது, நேரடியாகச் சென்று பார்க்காததால் அருகே இருந்த பனியால் சூழப்பட்ட கிறீன்லாந்திற்கு அந்தப் பெயரையும், தாவரங்கள் வளர்ந்திருந்த இந்தத் தீவக்கு ஐஸ்லாந்து என்றும் வரலாற்றுத் தவறு காரணமாகப் பெயர் நிலைத்து விட்டது.

இங்குள்ள துறைமுகத்திற்கு அருகே சூடான நீரோட்டம் ஓடுவதால் துறைமுகத் தண்ணீர் உறைவதில்லை. குற்றங்களே நடக்காத நாடு என்பதால் வீதிகளில் பொலிசாரைக் காணமுடியாது. நான் அங்கு நின்ற நாட்களில் ஒரே ஒரு பொலிஸ்காரரைக் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாட முடிந்தது. பாதுகாப்பு வேலிகள் இல்லாததால், சில இடங்களில் தரை பிளந்து அதிலிருந்து புகை வெளிவருவதையும், சுடுநீர் கொதிப்பதையும் அருகே சென்று பார்க்கமுடிந்தது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடமாக இது இருக்கின்றது.

kuruaravinthan@hotmail.com

https://www.geotamil.com

யப்பானில் சில நாட்கள் (1-2) - நடேசன் -

3 months ago

யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் -

- நடேசன் -

பயணங்கள்

06 ஜூன் 2025

David_Edelstein_on_Unsplash_free.jpg

* Photo by David Edelstein on Unsplash

nadesan23.jpgஇரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும்  நாங்கள் தங்க வேண்டிய  ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன்.   இத்தனை  உயரமான மாடிக்கட்டிடத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்  தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி  இருக்கும் நாடு  யப்பான்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள்.  படைப்பில் நம்பிக்கையற்ற,  பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்!

இலகுவான வழி?

எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தப்புகிறது  என்ற எனது கேள்வியை நாகரிகமாக  எமது வழிகாட்டியிடம் ஹொட்டேல் வாசலில் வைத்துக்   கேட்டேன்.

அந்த யப்பானிய இளைஞன் என்னை பார்த்து சிரித்தான். ஆனால் , பதில் தரவில்லை.

இந்த இரவு நேரத்தில் இது தேவையான கேள்வியா என சியாமளாவின் பார்வை என்னை நோக்கி கூரிய கணையாக வந்தது.

அவனது மனத்தில் என்ன நினைத்திருப்பான்? அதைபற்றி என்ன கவலை?

nadesan_japan1a.jpg

நான் கேட்டதற்கு காரணம் உள்ளது.

(On 11 March 2011, the Fukushima nuclear power station was damaged after the magnitude 9.0 earthquake and subsequent tsunami.)

யப்பானில் ஆங்கிலம் பேசுபவர்கள் மிக குறைவு. ஆனால் ,  அமெரிக்காவில் இரு வருடங்கள் படித்த இளைஞன் வழிகாட்டியாக  கிடைத்தது எங்கள் அதிஸ்டமே .

அடுத்த நாள் காலையில்  ஹொட்டேலை விட்டு பஸ்சில் ஏறியபின் அவனிடமிருந்து, எனது  இரவு கேள்விக்கான விடை அரைநாள் தாமதமாக  கிடைத்தது.

‘யப்பானில் ஃபுக்கசீமா நில நடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட  சுனாமியாலே  அணு உலையின் குளிராக்கி ( Cooling pond) உடைந்து கதிரியக்கம் வெளிப்பட்டது.  அந்த நில நடுக்கம் டோக்கியோவில் தாக்கியபோதும் உயரமான கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சிறிய தனி வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன.   பெரிய கட்டிடங்கள்  நிலத்தின் கீழ் அத்திவாரமற்று அவற்றை இரும்பு  பிரேம் தாங்கியபடி  இருக்கும்.  அந்த பிரேமில் இப்படியான அதிர்வைத் தாங்கி அசைந்து ஆடிவிட்டு  (Horizontal Shock absorber) மீண்டும் அதே நிலைக்கு வரும் தன்மை உள்ளதால்,அடுக்குமாடிகள் இங்கு பாதுகாப்பானவை‘ என்று விளக்கம்  கிடைத்தது.

யப்பானுக்கு கடந்த வருடம் சென்ற ஒரு மில்லியன் அவுஸ்திரேலியர்களில் இருவராக  நானும் சியாமளாவும் சென்றோம். நாங்கள்  நடு இரவில் டோக்கியோ சென்றடைந்தபோது  ஒரு நாற்பது மாடிகள் கொண்ட ஹொட்டேலுக்கு  அழைத்து சென்றார்கள்.  ஒரு குழுவாக சென்றதால்  மொழி,  போக்குவரத்து , உணவு  என்ற பிரச்சினைகள் எமக்கு  இருக்கவில்லை.

ஜப்பான் வரலாறு பல ஆசிய நாடுகளில் இருந்து வித்தியாசமானது. எந்த ஒரு ஐரோப்பிய நாடுகள்போல்  காலனி ஆதிக்கத்தின் கீழ்  இருக்காதது மட்டுமல்ல மற்ற நாடுகளை தனது காலனியின் கீழ்  வைத்திருக்க முயன்றது. ஜெங்கிஸ்கான் காலத்தில் மங்கோலியர்கள் மூன்று முறை கடல் கடந்து  படையெடுத்து தோற்றார்கள். ஒரு முறை புயலே யப்பானியர்களை காப்பாற்றியது என அறிந்தேன்.

ஆயிரம் வருடங்கள் வரையும்  ஷோகன் (Shogun) என்ற ஒரு வித இராணுவ பொறுப்பானவர் முழு யப்பானுக்கும் பொறுப்பாக இருந்தாலும்  அவரின் கீழ் இந்திய ஜமீன்தார்கள் போல் பல பிரபுக்கள் கொண்ட பிரிவுகளாக யப்பான் அக்காலத்தில் ஆளப்பட்டது.  அவர்களது அதிகாரம் எல்லை கடந்தது.   அவர்களிடம் சமுராய் எனப்படும் விசுவாசமாக  போர் வீரர்கள்- ( அதாவது பாண்டிய மறவர்கள் போல) இருந்தார்கள்.  அதன்பின் எல்லா பிரதேசங்களையும்   இணைத்து மொத்தமான ஜப்பானுக்கு ஒரு  மன்னர் வருகிறார்.  7ஆம் நூற்றாண்டின் பின்பாக மன்னர் இருந்தாலும் அவர் அதிகாரமற்றவர். யப்பானிய மன்னர்  மீண்டும் அதிகாரம் பெற்றது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே நடந்தது.

வரலாற்றுக்கு முன்பாக அதாவது  35,000 வருடங்கள் முன்னால் யப்பான் ஆசியாவோடு நிலமாக இணைந்திருந்த காலத்தில் மக்கள் சைபீரியாவின் பகுதிகளிலிருந்து  சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆரம்பக்கால யப்பானின் வரலாறு மற்றைய நாடுகளினது  கற்கால மக்கள்போல் ஆரம்பிக்கிறது.  அதாவது 10,000 வருடங்களுக்கு முன்பு கரையோரத்தில் வாழும்  மக்கள் மீன் பிடித்தல், உள்பகுதியில் வசிப்பவர்கள் வேட்டையாடுதல் என்பன முக்கிய ஜீவனோபாயத் தொழிலாக நடந்தது. யப்பானிய வரலாற்றில் ஒரு வித்தியாசமான விடயம் எனக்கு அறிய முடிந்தது .

nadesan_japan1b.jpg

பெரும்பாலாக பிரதேசங்களில் மண்பாண்டங்களின் உருவாக்கம் விவசாயத்தோடு தொடங்கும்.  ஆனால், யப்பானில் மண்பாண்டங்கள் விவசாயத்திற்கு ஆயிரம் வருடங்கள் முன்பு தொடங்கியது என்கிறார்கள். யப்பானுக்கு கிட்டத்தட்ட 2500 வருடங்கள் முன்பாக கொரியா போன்ற இடங்களிலிருந்து விவசாயம் மற்றும் உலோக சாதனங்களின் தொழில்நுட்பம் சென்றது. யப்பானின் தெற்குத்  தீவுகள் கொரியாவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ளன.  அதாவது இலங்கைக்கு ,இந்தியா போல அக்கால கடல் பயணத்திற்கு அதிக தூரமில்லை. விவசாயம்  ஆரம்பித்தபின்  பின்பு சமூக கட்டுமானங்களின் படிமானங்கள் உருவாகிறது.

ஒரு காலத்தில் ( கி.பி300) சீனாவிலிருந்து சென்ற ஒரு தூதுவர் ஒருவர் யப்பானை பற்றிச் சொல்லிய சில விவரங்கள் எழுத்தில் உள்ளன . அதில் பல சிறிய அரசுகள் அக்காலத்தில் ஒன்றாகிய யப்பானில் 30 பெரிய அரசுகள் இருந்தன அதில்  முக்கியமான அரசைப்  பெண் மந்திரவாதி  அவளது சகோதரனது உதவியுடன் அரசாண்டாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  சூரியனை முக்கிய கடவுளாக கொண்டாடிய யப்பானியர்களது வாழ்க்கை  சீனாவிலிருந்து சென்றவருக்கு வித்தியாசமானதாகத் தெரிந்திருக்கலாம் . பிற்காலத்தில் எழுத்துமுறை சீனாவிலிருந்து சென்றது. இதனால் ஆரம்ப ஷின்டோ மத நம்பிக்கை, தொன்மைக்  கதைகளே.   கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு வரையில் வாய்மொழி விடயங்களாகவே மத நம்பிக்கை இருந்தன. நமது இதிகாசம் புராணங்கள்போல், இதற்கு மேல் வரலாறு தேவையில்லை.

நாங்கள் யப்பான் சென்றது இலையுதிர்காலம்.  வசந்த காலமும் இலையுதிர் காலமும் விசேடமானவை . இளஞ்சிவப்பு நிறத்தில் ஷெரி மரங்கள் வசந்தகாலத்தில் பூத்து குலுங்குவதுபோல்  சிவப்பு மஞ்சள் என மாப்பிள் இலைகள் வர்ணத் தோரணமிட்டு நம்மை வரவேற்கும்.

டோக்கியோவில் முதல் நாள்  காலையில் சென்றது  அருகில் உள்ள யப்பானிய பூங்காவிற்கு.  இந்த பூங்கா 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டோக்கியோ, நாட்டின்  தலைநகரானபோது,  அப்போதிருந்த ஷோகன் இந்த  அழகிய பூங்காவை தனக்காக வடிவமைக்கிறார்.

அக்காலத்தில் பொதுமக்கள் இந்த பூங்காக்களுக்கு செல்ல முடியாது.  கடந்த 100 வருடங்களாக மட்டுமே பொதுமக்கள் உள்ளே சென்று  பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த யப்பானிய பூங்காக்களின் தத்துவமே தனியானது. மற்றைய நாடுகளில் பூங்காக்கள்  இருந்தாலும் அவைகள் கலாசாரக் கூறுகள் அல்ல.அழகுக்காக உருவாக்கப்பட்டவை.   இங்கு  பூங்காக்கள் யப்பானிய கலாசாரத்துடன் இணைந்துள்ளன. முக்கியமாக அமிடா பௌத்தம்( Pure land Buddhism) வந்தப்பின் இவை பூமியில்  சொர்க்கத்தை பிரதிபலிப்பன . ஷோகன் இறந்தபின், அவர் சொர்க்கம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதால் அவரது கற்பனையில் இப்படித்தான் சொர்க்கம் இருக்கும் என்ற நினைவுடன் இந்தப் பூங்காக்கள்  வடிவமைக்கப்பட்டது. உண்மையில் சொர்க்கம் இப்படி இருக்குமென்றால் நல்ல விடயம்,   நானும் அதற்கு பயண சீட்டை எடுக்க விரும்புவேன். 

கியோசூமி பூங்கா (Kyosumi Garden)  மிகவும் அழகானது. பூங்கா என வார்த்தையில் சொல்லாது நான் அதை விவரிக்கவேண்டும்.   ஒரு மணி நேரம் பூங்காவை சுற்றி வந்தபோது,  இதுவரையிலும் ஆங்காங்கு நான்  கேள்விபட்ட யப்பானிய பூங்காவின்  முக்கிய கூறுகளை அங்கு முழுமையாக பார்க்க முடிந்தது.

உலகத்தின் பல பெரிய பூந்தோட்டங்களைப் பார்த்துள்ளேன். பேராதனையில் படித்த காலத்தில்  அங்குள்ள பூந்தோட்டம் என்னைக் கவர்ந்தது.  அவுஸ்திரேலியாவில் பலவற்றைப் பார்த்தாலும் எனது மனதில் நிற்பது கனடாவின் மேற்குப்பகுதியில் உள்ள விக்டோரியா நகரில்(Butchart Garden) உள்ளதே. இங்கு அழகை விட இந்த பூங்கா ஒரு காலத்தில் சுண்ணாம்பு கற்கள் அ௧ன்றெடுத்த இடமாக இருந்தது. அதை தனி ஒருவராக வடிவமைத்து  இப்பொழுது அரசின் பொறுப்பில் உள்ளது. சமீபத்தில் அவுஸ்திரியாவின் சலஸ்பேர்க்கில்  உள்ள மிரபெல்லா  பூங்காவைப் பார்த்தேன். இவைகள் எல்லாம் ஐரோப்பிய சிந்தனையின் வடிவங்கள்.  அதேபோல் டெல்லியில்  சில பூங்காக்கள் முகாலய அல்லது பேர்சிய சிந்தனையின் வடிவமைப்பில் அமைந்தது.

இவற்றிலிருந்து  யப்பானியர்களது பூங்கா அமைப்பு முற்றாக வித்தியாசமானவை. யப்பானின் கால நிலைக்கும் அவர்களது நில அமைப்பையும் ஒன்றிணைத்து அமைப்பார்கள்.  யப்பானில்   நான்கு காலநிலைகளிலும் அந்த பூங்காக்கள் அழகாக  இருப்பதற்கு,  அதற்கேற்ப  மலர் செடிகளுடன்,  எல்லா கால நிலைக்கும் ஏற்ற மரங்கள்,  யப்பானின் நில அமைப்பு அதாவது மலைகள்,  பள்ளங்கள்,  நீர்நிலைகள்,  அருவிகள் என்பவற்றை ஒன்றிணைத்து, அதற்கேற்ப நீர் தடாகங்கள் உருவாக்கி, அதில் சிறிய அருவிகள்  மெல்லிய ஓசையுடன் சலசலத்தபடி ஓடும்.  ஒழுங்கற்ற தடாகத்தில் மீன்கள், பறவைகள்,நீர்த்தாவரங்களுடன்,  குறுக்கே வாய்கால்கள் மீது சிறிய மரப்பாலங்கள் பாதையாக அமைந்திருக்கும். ஆங்காங்கே கற்கள் வைக்கப்பட்டு , அவைகளில் பச்சைப் பாசி படித்திருக்கும்.  சுற்றியிருக்கும்  கருங்கற்களில் சிறிய சிற்பங்கள் அல்லது பகோடா போன்ற அமைப்பு இருக்கும்.  நடக்கும்போது பாதைகளாக  மரத்தாலான சிறிய பாதைகள் வளைந்து செல்லும்.  வர்ண விளக்குகள் பல இடங்களில் அமைத்திருப்பார்கள். மொத்த பூங்காவும் அமிடா புத்தரின் சொர்க்க உலகத்தை நமக்கு படிமமாக்குகின்றன.

பூங்காவில் மரங்கள் சிறிதாக, அதாவது பொன்சோ முறையில் வளர்க்கப்படுகிறது. நான் பார்த்தபோது,  சில மரங்களின் அடிப்பகுதிகளை சுற்றி காயமடைந்த இடத்தில் துணி சுற்றுவதுபோல் மூங்கில் பாய் போன்ற ஒன்றைக் கொண்டு  அந்த மரத்தை சுற்றியிருந்தவர்கள் . அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .  ‘ மரத்தின் சில பகுதிகள் ஏதாவது காரணத்தால் உடைந்தால் அந்த இடங்களில்  தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்காக’  என்ற பதில் கிடைத்தது. பூங்காவின் நுழைவாயில்,  மூங்கில்களால்  அமைந்தது   இவை எல்லாம் இங்கு இருந்தால் உள்ளே வருபவர்கள் மனங்கள் பூரண அமைதி அடைய முடியும் என கருதுகிறார்கள்.

இங்கு யப்பானிய மன்னரது இறுதிக் சடங்குகள் நடந்ததுடன் பல நில நடுக்கங்களை கடந்து வருங்கால சந்ததிக்காக இந்த பூங்கா தற்போது டோக்கியோ நகரசபையினரால் பராமரிக்கப்படுகிறது  என்ற அறிவிப்பு அங்கிருந்தது

[தொடரும்]

uthayam12@gmail.com

https://www.geotamil.com

நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்

3 months ago

கதையாசிரியர்: குரு அரவிந்தன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%

புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் வெள்ளை நிறத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்க விரும்பியதால் அருகே சென்று வாசித்துப் பார்த்தேன். ‘வேட் இன்ஸ்’ என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது. ஆர்வம் காரணமாக வாசித்தேன்.

சற்றுத்தள்ளி இருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் மெல்ல அவதானித்தேன். ஆபிரிக்கக் கறுப்பு இனத்தவராக இருக்கலாம்.

‘என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்ததா?’ என்று அங்கிருந்தபடியே ஆங்கிலத்தில் கேட்டார்

‘ஓம்’ என்று நான் தலை அசைத்தேன்.

‘அதில் தண்ணீரில் நீந்தப் போய்ப் போலீசாரால் கைதானவர்கள் என்று போட்டிருக்கே, அந்த நால்வரில் நானும் ஒருத்தன்’ என்றார்.

‘அப்படியா?’ ஆர்வம் காரணமாக நான் அவருக்கு அருகே சென்று அமர்ந்தேன், சுமார் எண்பது வயதைத் தொட்டிருக்கலாம், ஆனாலும் ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார்.

‘ஐயாம் குரு, உங்க பெயரைச் சொல்லலையே’ என்றேன்.

‘ஏப்ரஹாம்’ என்று சொல்லி, இருந்தபடியே படியே கை குலுக்கியவர் தொடர்ந்தார்,

‘எங்கள் பெற்றோர்களுக்கு நீந்தத் தெரியாத படியால் தண்ணீரைவிட்டு எட்வே விலத்தி இரு என்று அடிக்கடி எங்களுக்குப் போதிப்பார்கள்.’ என்றார்.

‘ஏன் உங்களுக்கு நீந்தத் தெரியாதா?’

‘தெரியாது, எப்படி நீந்துவது தண்ணீரில் இறங்காமல்…?’ என்றார்

‘ஏன் நீந்தப் பழகவில்லையா, தண்ணீருக்குப் பயமா?’

‘இங்கே உள்ள நீச்சல் தடாகத்திலேயோ அல்லது கடலிலேயோதான் நீந்தப் பழகலாம், இவர்கள்தான் எங்களைத் தண்ணீரில் இறங்க விடவில்லையே’

‘என்ன சொல்றீங்க, இவர்கள் என்று யாரைச் சொல்லுறீங்க?’

‘இங்கே அப்போது இருந்த சில வெள்ளையர்களைத்தான்’

‘இனவெறியா…?’

‘அப்படியே எடுத்துக் கொள்ளலாம், எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள், அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள்’

‘அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?’

‘எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது.’

‘அதற்காக என்ன செய்தீர்கள்?’

‘அப்போதுதான் நாங்கள் அல்வின் அ ய்லி டான்ஸ் தியேட்டரில் ஒரு நாட்டிய நாடகம் பார்த்தோம். நான் நினைக்கின்றேன் 1960 ஆம் ஆண்டாக இருக்கலாம், அந்த நாடகம் எங்களுக்குள் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது.’

‘எப்படியான நாடகம், அதிலே என்ன சொல்லியிருந்தார்கள்?’

‘உண்மையைச் சொல்லப் போனால், அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. ‘வேட் இன் த வாட்டர்’ என்ற வரிகள் எங்களை ரொம்பவும் கவர்ந்தது மட்டுமல்ல, எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்களை அறியாமலே நாங்கள் அந்த வரிகளுக்குள் மூழ்கிப் போயிருந்தோம்.’

‘ஆர்வமாக இருக்கிறது, அது என்னவென்று சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன்.

‘எனக்கு வயசு போயிடிச்சு, அதனாலே சரியாக அந்த வரிகள் இப்போது ஞாபகமில்லை, ஆனால் தண்ணீருக்குள் இறங்கினால் தப்பி ஓடும் அடிமைகளைத் தேடும் வேட்டைநாய்களால் அவர்களை மோப்பம் பிடிக்க முடியாது என்று கறுப்பினத்தவரின் விடுதலை பற்றி மறைமுகமாகச் சொல்லியது அந்தப்பாடல்.’

எனக்கு ஓரளவு புரிந்தது. 1600 களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள். ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது என்பதைத்தான் அந்தப் பாடல் மறைமுகமாகச் சொன்னது. 1865 இல் அமெரிக்க ஜனாதிபதியான ஏப்ரஹாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டங்களை இயற்றினாலும், நடைமுறையில் தொடர்ந்தும் அடிமை வாழ்க்கை இருக்கத்தான் செய்தது.

‘ஒருநாள் ஜோன்சன் எங்களைச் சந்தித்தார். கடலிலே இறங்கிக் குளிக்கப் போகிறோம், நீங்களும் வர்றீங்களா?’ என்று கேட்டார்.

ஜோன்சனை எனக்கு ஏற்கனவே தெரியும், எங்கள் இனவிடுதலைக்காகப் பாடுபட்டவர். அவருடன் நின்ற இன்னுமொருவரை ‘டாக்டர் மிசெல்’ என்று அறிமுகப் படுத்தினார். இந்தப் பகுதியில் உள்ள மருத்துமனைக்குச் சேவையாற்ற முதன் முதலாக வந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதைப் பின்பு தெரிந்து கொண்டேன்.

‘கடலில் குளிப்பதற்கு ஏன் நீங்க தயங்குறீங்க?’ என்று கேட்டார்.

‘எங்களைத்தான் கடலிலே இறங்க விட மாட்டாங்களே’ என்று சொன்னேன். அதற்கு அவர்,

‘உண்மைதான், ஆனால் எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும். குறிப்பாக மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும். அதனால்தான் துணிச்சல் உள்ள உங்களைக் கேட்டேன்’ என்றார் ஜோன்சன்.

எனக்கு ஒரு அசட்டுத் துணிவு ஏற்பட்டது. சரி என்று அவரிடம் ஒப்புக் கொண்டேன்.

என்னுடன் சேர்ந்து இன்னும் மூன்று கூட்டாளிகள் இணைந்து கொண்டார்கள். நீந்தத் தெரியாவிட்டாலும் வருவது வரட்டும் என்று துணிந்து கடலில் இறங்கி விட்டோம்.

கடலிலே சில வெள்ளையர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் பாய்ந்து விழுந்து வெளியேறிவிட்டார்கள்.

‘ஏன், அவர்களுக்கு என்ன நடந்தது?’

‘அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை, தண்ணீரில் தீட்டுப் பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அப்படித்தான் அவர்களை அவர்களது பெற்றோர்கள் வளர்த்திருந்தார்கள்.’

‘அப்புறம் என்னாச்சு?’

‘அவர்கள் போலீசை அழைத்ததும் போலீஸ் வந்து எங்களைக் கைது செய்து கொண்டு போய்ச் சிறையில் அடைத்தார்கள்.’

‘இது எப்ப நடந்தது, எவ்வளவு காலமிருக்கும்?’

‘சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் இந்தக் கடற்கரையில்தான் நடந்தது, அப்போதெல்லாம் இந்த வசதிகள் ஒன்றும் இங்கே கிடைக்கவில்லை, ஏன், இங்கே வருவதற்குச் சரியான வீதிகளே இருக்கவில்லை. நான் நினைக்கிறேன் இது நடந்தது 1961 ஆம் ஆண்டாக இருக்கலாம், இன்னும் நினைவில் நிற்கிறது.’

அவர் பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்க முனைந்தார்.

‘நான் மணவனாக இருக்கும் போது, தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்.’ என்று தங்கள் பெற்றோரைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அவர் சொன்னது உண்மைதான், காலமெல்லாம் அடிமை வாழ்க்கை வாழ்தவர்களின் பரம்பரையில் வந்த சாதாரண பெற்றோர்களால், தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க இதைவிட வேறு என்னதான் செய்ய முடியும்?

‘போராட்டம் வலுவடைந்ததால், தினமும் எம்மவர்கள் கடலில் குளிக்கத் தொடங்கினார்கள். சுமார் 200 மேற்பட்ட எம்மவர்களை இந்தக் கடலில் குளித்ததற்காகத் தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒருகட்டத்தில் சிறைச்சாலை நிரம்பி வழிந்ததால், இந்த வழக்கை விசாரனைக்கு எடுத்தார்கள்.’

‘1962 ஆம் ஆண்டு யூலை மாதம் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, ரெட் காபோட் என்பவர்தான் பிறோவாட் கவுண்டி நீதிபதியாக இருந்தார். அவரும் வெள்ளை இனத்தவர்தான், என்ன நடக்குமோ என்று நாங்கள் பயந்து போயிருந்தோம். எங்கள் படிப்பும் தடைப்பட்டதால், பெற்றோரும் இதை நினைத்து மனம் கலங்கிப் போயிருந்தார்கள்.’

கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது’ என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது. 1966 ஆம் ஆண்டுவரை அவர் இங்கேதான் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவருடைய நல்ல மனசால்தான் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. அவரைப் பற்றிய ஒரு நூலும் ‘பீட்டாஸ்கிரிப் பப்பிளிஸிங்’ என்ற பதிப்பகத்தால் வெளிவந்தது.’ என்றார்.

அதாவது 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று ‘பிறவுண்’ நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும்.

எங்கு சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், எமக்காக யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான், இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது’ என்பதையும் அவரோடு உரையாடியபோது, நான் புரிந்து கொண்டு, அவரது துணிச்சலான செயலைப் பாராட்டி அவரிடம் இருந்து விடை பெற்றேன். சுதந்திரம் என்பது இலவசமாகக் கிடைப்பதில்லை, போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

https://www.sirukathaigal.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/

செவ்வால் அறணை

3 months ago

வைகாசி பிறந்தவுடன் தலைக்கச்சான் தொடங்கிவிடும். தென்மேற்குத் திசையிலிருந்து சீறிக்கொண்டுவரும். சித்திரை வெயில் புழுக்கத்தில் கிடந்தவர்களுக்கு சீதளக்காற்று சுகமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த வாரமே வெம்மை கூடிவிடும். மரங்களைத் தலைவிரித்தாட்டிவிடும்.

பூவையும் பிஞ்சுகளையும் விழுத்திவிட்டு வாழை இலைகளை நார் நாராகக் கிழித்துவிடும். கானல் பயிர்கள் விளைந்து முற்றி விழுவதும் இந்த நாட்களில்தான்.

வட்ட விதானையின் மனைவி, அம்பலவி மாமரத்திற்கு கீழ் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இலைகொள்ளாமல் பிடித்திருந்த பிஞ்சுக் காய்களை புரட்டி எடுத்து விழுத்திவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் விழுந்து, மண்ணில் புரண்டு கிடந்ததை நெஞ்சு பதறப் பார்த்தாள்…….

பனையாற்றுக்கு மேலே நாணல் புதர்கள் தாண்டியுள்ள மேட்டு நிலத்தில் எள்ளு விதைத்திருந்தது. அறுவடை முடிந்து கதிர்கள் அடையப் போட்டிருந்தது. தலைக்கச்சான் காற்று புரட்டி எடுத்துவிடும், என்பதற்காக பாரம் ஏற்றிவிட்டு வருகிறேன் என்று போனவர், இன்னும் வரவில்லை… இனி வரும் நேரம்தான்……

தெற்குப் பார்த்த வீடு. தலைக்கச்சானுக்கும் சரி, சோளகத்திற்கும் சரி வீட்டு வாசலுக்கூடாக் காற்று பிய்ச்சுக்கொண்டு போகும். வாசலை ஒட்டினாற் போல பெரிய அறை. மாட்டுக்காலில் சூடடித்து, சணல் சாக்கில் நெல்லை இறுக்கமாகக் கட்டி அந்த அறையில்தான் வைப்பார். விதை நெல்லுக்கென்ற ஏற்பாடு அது. அதற்கு எதிரே விறாந்தை. அதில்தான் அவர் உட்கார்ந்து அலுவல்களைப் பார்ப்பார். அதை ஒட்டியுள்ள திண்ணையில்தான் அமர்ந்து சாப்பிடுவார். சாப்பிடும் போது அவரோடு யாராவது இனசனம் இருக்க வேண்டும். குறைஞ்சது வயல் செய்கைக்காரர் யாராவது இருக்க வேண்டும். வேளாண்மை, ஊர் நடப்பு பற்றி பேச வேண்டும்…

அவருக்கென்று குரக்கன் பிட்டு அவித்து வைத்திருக்கிறது. மெல்லிதாக தேங்காய்ப்பூ போட்டு கட்டித் தயிரோடு குழைத்து சாப்பிடுவார். சாப்பிடும் போது அவர் உருட்டித் தரும் உருண்டைகளுக்காக கினிக் கோழிகள் நான்கும் காத்துக் கொண்டிருக்கும்.

நாவற் காய்களை உருட்டித் தள்ளும் வேகத்தோடு வீசுகின்ற தலைக் கச்சானுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாம்பிஞ்சுகள் ‘பொத் பொத் ‘தென்று விழுவதை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவள் புதுக்கோலத்தோடு, படலையைத் தள்ளித் திறந்து உள்ளே நுளைகின்ற அவரைக் கண்டதும் விக்கித்துப் போனாள்……

சண்டிக்கட்டு கட்டிய சாரம் முழுவதும் ஈரமாகி தண்ணீர் சொட்ட, காலெல்லாம் சேரும் சக்தியுமாகி, முகம் இருண்டு புதிர் காட்ட…. சாத்திய சைக்கிள் வேலியைத் தாண்டி கீழே விழ – நேரே கிணற்றடிக்குச் சென்று விட்டார்.

சைக்கிளை சரியாக நிறுத்தி, படலையைப் பூட்டி, தலைக்கயிறை போட்டுவிட்டு உள்ளே நுளைந்தவள். அவரது முகத்தை நேராகப் பார்க்கும் தைரியமின்றி, துவாயை எடுத்து நீட்டினாள்.

“யாரும் தேடி வந்தால் இல்லை என்று சொல்லி விடு”

“ஏனப்பா?”

“உனக்கு எல்லாம் விளக்கமாகச் சொல்லணுமோ? சொன்னதைச் செய் நான் கொஞ்சம் படுக்கப்போறன்”

“சாப்பாடு குரக்கன்ல அவிச்சு வெச்சிருக்கன்”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்னைக் கொஞ்சம் தனிய விடு. யாரையும் உள்ள விடாத என்ன?”

“வெளிக்காரர் யாரோடையும் சண்டையா?”

” ஓம் …… ஓம்…. நான் சண்டை புடிக்கிற ஆள்தான்…… கொலைகாரன் தான்….. நீ சாட்சிக்கு வாரியோ?”

அவர் இப்படிப் பேசிப் பார்த்ததில்லை. இன்று இது புதுனம். பட்டு நெய்தது போல வார்த்தைகள் மென்மையாக வரும். சித்திரைப் புழுக்கத்தில் புரடியில்படும் வேப்பங் காற்றுப் போல ஆதரவாகப் பேசுவார். சுடுசொல் வராது……. அவருடன் பேசிக் கொண்டிருப்பது புறங்கைத் தேன் நக்குவது போல ஒரு சுகமான அனுபவம்.

இன்று என்ன நடந்தது?…. நடந்து வந்த முறையும் வித்தியாசம்… காலெல்லாம் சேறு சுடு சொல்.

அவருக்கு எப்போதாவது கோபம் வராமலும் இல்லை. முற்கோபம். முணுக்கென்று கோபிப்பார். ஆனால் அஞ்சு நிமிசந்தான். அதற்குள் ஆறி விடும். அடுத்த நிமிசம் இந்த மனுசனா இப்படிக் கோபித்தார் என்று ஆச்சரியப்படும்படி…. அன்பாகி விடுவார். பனை நுங்கின் மென்மையும் பால் நுரையின் கலகலப்புமாக…….

இப்படித்தான் ஒருமுறை…. தென்னங்காணிக்குள் யாரோ கள்ளமாக தேங்காய் புடுங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டு வெள்ளாப்பிலேயே புறப்பட்டுப் போனார். கதை சரிதான். கள்ளன் ஒருவன் தேங்காய் புடுங்கிக் கொண்டு வட்டுக்குள் தலை மறைத்துக்கொண்டு இருந்திருக்கின்றான். இவருக்கு வந்ததே கோபம். உச்சாணிக் கோபம். ஆத்திரம் தலைக்கேறி கண்ணை மறைத்துவிட்டது.

பக்கத்தில் கிடந்த கிடுகுமட்டை, தென்னம்பாளை, விறகுக்கட்டை முழுவதையும் சேர்த்து, கள்ளன் ஏறி இருந்த மரத்தைச் சுற்றி நெருப்புக் கொடுத்துவிட்டார். மரத்தைச் சுற்றி திமுதிமுவென்று தீச்சுவாலை கொழுந்து விட்டெரிய கள்ளன் அலறிய அலறலில் மரண பயம் தொக்கி நிற்க – அவருக்கு மனம் மாறிவிட்டது.

மறுகணம், வெள்ளங்கம்பு நாரில் திரித்திருந்த கயிற்றை பக்கத்துத் தென்னையின் வட்டில் இறுகக் கட்டி மறு நுனியை இவனுக்கு எறிந்து அவனது மரத்தில் சேர்த்துக் கட்டிக்கொள்ளச் சொல்லி, கயிற்று வழியே ஆளை இறக்கிய போது, கள்ளன் மறுகி நின்றான்.

அவர் தாமதிக்கவில்லை. கீழே கிடந்த தேங்காய்களையெல்லாம் பொறுக்கி, மட்டை உரித்து நாரில் கோர்த்து அவனிடம் கொடுத்த ‘சரி போய்வா என்று அனுப்பி வைத்தார்.

அரணைக் குணம் அது. ஆத்திரம் கொண்டு எதிரியைத் தாக்கவரும். அரணை கடித்தால் மரணம் என்பார்கள். அத்தனை விசம். அதிலும் செவ்வால் அறணை கடும் விசம். வாய் வைத்ததென்றால் கதை முடிந்துவிடும். பல் கிட்டிவிட மரணம்தான். மறுபேச்சில்லை. அதனால் ஆத்திரம் கொண்டு வாய் வைப்பதற்குள் அதன் கோபம் ஆறிவிடும். சாதுவாகிவிடும். நெளிந்து வளைந்து பின்னோக்கி விடும். அற்ப நேரக் கோபம். அதற்குள் மனம் குளிர்ந்து, கோபப்பட்டதற்காக வெட்கப்பட்டு ஓடிவிடும்.

‘இன்றைக்கும் அப்படி ஏதும் நடந்திருக்குமோ’

அடையப் போட்டிருக்கும் எள்ளுக் கதிர்களை யாராவது களவாடிப் போயிருப்பார்களோ?.. அல்லது ஆற்றைக் கடக்கையில் மாடு, கன்றுகள் எதையும் முதலை பிடிச்சிருக்குமோ? – அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

அரணைக் குணம் வந்து யாருக்காவது அறைந்துவிட்டு வந்து, மனவலியில் படுக்கிறாரோ?……

இவரது தம்பி மகள் ஒருத்திக்கு யாரோ பையன் கடுதாசி கொடுத்தான் என்று கேள்விப்பட்டு – அந்தக் கணத்திலேயே ஆத்திரப்பட்டு அவனைப் பிடித்து அடிஅடியென்று அடித்து துவைத்து நிமிர்ந்த போது – அவன் மூச்சுக் காற்றுக்காக அவஸ்தைப்பட்டான்.

அவரது கோபம் அடங்கிவிட்டிருந்தது.

அவனை அவரே ஆசுப்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போய் வைத்தியரைப் பார்த்து, சுகப்படுத்தி, பின்னர் கல்யாணம் செய்து வைத்து. வீடொன்றைக் கட்டி, அதில் இருப்பாட்டி..

ஓ.. எவ்வளவு தாராளம்……….

இந்த மனசுக்குள் கணப்பொழுதில் வந்து ஆட்சி செய்துவிட்டுச் செல்கின்ற அந்த மூர்க்கத்தனம் எங்கே ஒழிந்துகொண்டு இருக்கிறது?……..

இன்றைக்கு என்ன நடந்திருக்கும்?….

எதற்கும், படுத்து ஆறுதலாக எழும்பட்டும்……

படலையடியில் நிழலாடுகிறது. கிராம சேவகர்!

“வட்டவிதான் இருக்கிறாரா”

அவளுக்கு நெஞ்சு குறுகுறுக்கிறது.

“இல்லியே, வெளியே போனவர். இன்னும் வரல”

வேலியடியில் சார்த்தியிருந்த சைக்கிளில் அவர் பார்வை சென்று மீளுகின்றது.

“வந்தால் ஆசுபத்திரிப் பக்கம் வரச்சொல்லுங்கோ”

“ஏனுங்க யாருக்கும் சுகமில்லையோ……..

“உங்கட மேட்டுக்காணிப்பக்கம் ஒரு பையன் அடிபட்டு இறந்து கிடக்கிறான். ஆசுபத்திரிக்குக் கொண்டு போறாங்க. வசதியெண்டால் வரச்சொல்லுங்க”

அவள் சில்லிட்டுப் போனாள். காலையில் அவர் அங்கே தான் போனவர்…. இப்பத்தான் பதறி அடித்துக்கொண்டு வந்திருக்கிறார்…. அங்கே ஒரு பையன் செத்துக் கிடக்கிறான், இது என்ன வில்லங்கம்….

அந்தப் பையன் எப்படிச் செத்தான்?….

செவ்வால் அரணையொன்று வேலிக்கிடுகுக்குள் மறைந்து நழுவி ஓடுகிறது….. அவளுக்கு அடிவயிற்றில் குமைச்சல் எடுக்கத் தொடங்கியது….

விறாந்தையை ஒட்டிய திண்ணையில் படுத்திருந்தவருக்கு கிராமசேவகர் வந்து விசாரித்துப் போனது தெளிவாக காதில் விழத்தான் செய்தது.

அவருக்கு உடம்பு சில்லிடத் தொடங்கியது. தொண்டை வரண்டு, நாவு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவர் அறியாமல் கண்ணில் நீர் வழிந்து காதோரம் வழிந்து சென்றது.

இது என்ன சோதனை?…. நான் அவனைக் காப்பாற்ற அல்லவா பாடுபட்டேன்….

அவர் எழுந்து உட்கார நினைக்கிறார். முடியவில்லை. கைகள் உதறத் தொடங்கிவிட்டன. இதைப்பற்றியே பேசிக்கொண்டு சனங்கள் ஆசுபத்திரிக்கு விரையும் காட்சி, வேலியடைப்புகால் மங்கலாகத் தெரிகிறது.

செய்தி அறியவென்று அவள் படலையடியிலேயே நிற்கிறாள் போலும், நானும் காலையில் கோபப்பட்டு விட்டேன்.. எனக்கிருக்கின்ற ஒரே ஆறுதல் அவள்தானே.

அவளிடமாவது உண்மையைச் சொல்லிவிடுவோமா?

காலையில் அவர் மேட்டுக்காணிக்கு செல்லும்போது அந்தப் பையன் தனக்கு முன்னால்தான் ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.

சின்னப்பையன், நாரைகள் பிடிப்பது முசுப்பாத்தி. வைகாசி பிறந்தால் செங்கால் நாரைகள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்க இடம் தேடத் தொடங்கி விடும். ஓங்கி வளர்ந்துள்ள நாணல் புதர்கள் மூன்று நான்கை ஒன்றாக இணைத்து அவை ‘அவதி’ தயாரித்து விடும். அதற்குள் மெல்லிசாகக் கூடு கட்டி நாணற் பூக்களை மெத்தையாக இட்டு, முட்டையும் இட்டு அடைகாக்கத் தொடங்கி விடும்.

அடர்த்தியாக வளர்ந்துள்ள நாணற் புதர்களுக்குள் கூட்டை கண்டு பிடிப்பது மலைப்பாம்புகளுக்கு கஷ்டம். அப்படியே கண்டு பிடித்தாலும் கூடுகள் இருக்கும் இடத்திற்கு ஏறுவது கஷ்டம். இதனால் நாரைகளும் குஞ்சுகளும் மலைப்பாம்பு அபாயத்தில் இருந்து தப்பி விடும்.

ஆனால் நாரைக்கொக்கு பிடிக்கும் சிறுவர்கள் வேறு உபாயங்களைக் கையாளுவார்கள்.

நாணல் புதர்களுக்குள் ஓசைப்படாமல் புகுந்து கூடுகளை அடையாளம் கண்டுகொள்வார்கள். கூடுகளைத் தாங்கிநிற்கும் நாணல்களை திடீரென விலக்கிவிட, கூடும் நாரையும் கீழே விழுந்து, நாணல் அடர்த்திற்குள் சிக்குண்டு விடும். அதனைலாவகமாக ‘லபக்’ என்று பிடித்து சிறகுகளை மேல்நோக்கி இணைத்து கட்டுப்போட்டு விடுவார்கள்.

மேட்டுக் காணிக்குள் அடையப் போட்டிருந்த எள்ளுக் கதிர்களுக்கு பாலை மரக்குற்றிகளை பாரம் ஏற்றி வைத்தவிட்டு நிமிர்ந்தபோது, பொழுது வெப்பங்கொள்ளத் தொடங்கியிருந்தது.

ஆற்றைக் கடக்குமுன் நாணல் மண்டிக் கிடந்த பகுதிகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தபோது அந்தப் பையன் கொக்குக் கூடுகளைத் தேடிப் பதுங்குவது தெரிகிறது.

அவர் பார்வை நிதானிப்பதற்குள் அது நடந்துவிட்டது.

ஆளுயர மலைப் பாம்பொன்று பையனது கால்கள் வழியாக ஏறி, உயர்ந்து தலைவரை முன்நோக்கி, உடலை ஒரு சுற்றுச் சுற்றி முறுக்கத் தொடங்கிவிட்டது. பையன் ஹீனமாக முனகத் தொடங்கினான். கைகளை ஆட்டி ஆட்டி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த வேளை பாம்பு அவனைக் கீழே விழுத்தியிருந்தது.

இனி தாமதிக்க நேரமில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் உடலை முறுக்கி எலும்புகளை உடைத்து கூழாக்கி விழுங்கத் தொடங்கிவிடும்.

அவர் மின்னலாகச் செயல்பட்டார்.

எருமைக் கன்றுகளை கட்டிப் போடவென நட்டு இருந்த காட்டாமணக்கு கணுவொன்றைப்புடுங்கி. பையன் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினார்.

பாம்பின் தலைக்குக் கீழ், கழுத்துப் பக்கமாக ஓங்கி திசை பார்த்து அடித்தவேளை, பாம்பு தன்பலம் கொண்ட மட்டும் பையனை உருட்டிப் புரட்டிவிட, அடி, பையனின் பிடரியில் பழுவாக இறங்கியது. அதற்குள் பாம்பு பையனை கைவிட்டு விட்டு நழுவி மறைந்து விட்டது. பையன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது கொஞ்ச நேரந்தான்.

உயிர் முடிச்சில் அடி விழுந்திருக்க வேண்டும்.

அவன் ஆவி பிரிந்துவிட்டிருந்தது.

வட்ட விதானையார் நிலைகுலைந்து போனார். காப்பாற்றப்போய் தாமே அவனைக் கொன்றுவிட்டோமே என்று நெஞ்சு பதைக்கத் தொடங்கினார்.

ஊர் நம்பப் போகிறதா?..

தன்மீது பழியைப் போட்டு தாக்கி நசுக்கி விடாதா? ஓடி மந்த மலைப்பாம்பு வந்து சாட்சி சொல்லப் போகிறதா?

பையனின் தலையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார்.

தொண்டையில் முடிச்சொன்று திரண்டு-தலை முடிக்கற்றையொன்று பொறுத்துக் கொண்டதுபோல – சிக்கலாக வலிக்கத் தொடங்கியது.

நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ பிராண்ட…. கழுத்தை நெரிக்க…. கண்கள் குளமாக… குழந்தை போல தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார்.

இரண்டு கைகளையும் முன்னால் இணைத்து விலங்கிட்டு பொலிஸ் பிடித்து இழுத்துச் செல்வது போல….. மனைவி தலைவிரி கோலமாக பின்னால் ஓடி வருவது போல……..

கைகள் உதறத் தொடங்கி விட்டன.

அரைவாசி திறந்திருந்த பையனின் கண்களை கசக்கி மூடிவிட்டார். இனி கண்கைளத் திறக்கவே மாட்டான்…. வாய் பேசவே மாட்டான்….

பட்டியில் இருந்து எருமைப் பால் கறந்து காவில் தூக்கி வரும் பால்காரர்களின் பேச்சொலி கேட்கிறது.

இனி தாமதிக்க நேரமில்லை. இந்த வழியாகத்தான் வந்து ஆற்றைக் கடப்பார்கள்.

நாணற் புதர்களை விலக்கிக்கொண்டு, குறுக்கு வழியாக ஆற்றைக் கடந்து, சேற்றில் புதைந்து, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அப்படியே வீடு வந்தவரை மனசாட்சி கேட்டது.

‘நீ செய்தது நியாயந்தானா?’

அவரால் பதில் சொல்ல முடியவில்லை

நெஞ்சுக் கூட்டுக்குள் நெருஞ்சி முட்கள் உருளத் தொடங்கின.

தம்பி வந்துவிட்டான்.

‘ஏதும் கேள்விப்பட்டிருப்பானோ…. எப்படிக் கேள்விப்பட்டிருப்பான்?’

“ஏதும் சுகமில்லையா? ஏன் படுத்திருக்கிறீங்க?”

“இல்லையே….” – குரலில் தடுமாற்றம்

“வெள்ளாப்பிலே மேட்டு நிலப்பக்கம் போனீங்களா?”

“ஏன் தம்பி கேட்கிற?”

“நாரைக் கொக்கு பிடிக்கிற பொடியன் இறந்து கெடந்தவனாம். தூக்கிக்கொண்டு வந்திருக்கிறாங்க. புரடியில் அடிப்பட்டிருக்கு. செத்திட்டான். பொலிசு விசாரிக்கிறது.. நீங்கள் போன நேரம் நடந்ததோ…. கண்டிருப்பீங்களோ….அதான் கேட்டன்.”

அவர் ஒன்றும் பேசவில்லை.

மோட்டு வளையையே வெறித்துப் பார்த்தார். செவ்வால் அரணை யொன்று இரைதேடி நெளிந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பி…தம்பி…. விலகு.

“காலையில் அலவரைக்குள்ள போய் வந்தனான். வெள்ளாமை பாலேறி அன்னம் வாத்துக் கெடக்குது. கலவன் கதிரெல்லாம் தலப்பு நெல் பழுத்து, கொப்புச் சவண்டு வருது. அதுக்குள்ள அறக்கொட்டியான் தத்துவெட்டி அடிக்கிற குணம் தெரியுது. ஒரு நாளைக்குள்ள அடிச்சு சாம்பலாக்கிவிடும். அதுதான் நாளைக்கு அடிப்பயிர் ஒதுக்கி எண்ணெய் அடிக்கலாம் எண்டு இருக்கன். எண்ணெய்ப் பம்பைக் கொண்டு போக வந்தனான்”

அறக்கொட்டியான் என்றதும் தீயை மிதித்தவர் போல அரளத் தொடங்கினார். மனம் அரட்டத் தொடங்கியது.

ஐந்து வருசத்து முந்திய நிகழ்ச்சி அது. இந்த முன்கோபத்தால் வந்தவினை அது.

மோட்டு வளைவில் நிலைக்குத்தியிருந்த பார்வை இப்போது அசவில் சாத்தியிருந்த பாய்ச் சுருணையில் பதிகிறது. கண்களில் ஓரங்கட்டியிருந்த உப்பு நீர் வழிய, கேவத் தொடங்கினார்.

தம்பி, ஆதரவாகத் தோளைப் பற்றிக் கொண்டான்.

“சும்மா ஆறுதலா இருங்க. அழாதேங்க. தைரியமா இருங்க உங்கட குணம் இந்த ஊருக்குத் தெரியும். நீங்க செய்திருக்கமாட்டீங்க…..”

“நான் செய்ய இல்லடா தம்பி. என்னை நம்புடா தம்பி. பொலிஸ் வந்திருக்குமோ…. தம்பி வெளியில என்னடா கதைக்கிறாங்க? நான் பாம்புக்குத் தான்டா அடிச்ச நான்….

“எனக்கு எல்லாம் தெரியும். நீங்க அமைதியா இருங்க.”

“உனக்கு நடந்தது தெரியுமோ?….

“நான் எல்லாம் விசாரிச்சுக் கொண்டுதான் வாறன். யாரோ நாரைக் கொக்கு பிடிக்கிற பையன்தான் தூரத்தில் நின்டு பார்த்தணென்டு சொல்றான். உங்கமாதிரி எண்டுதான் அவன்ட கணிப்பு. நீங்தான் என்டு குறிப்பாகச் சொல்லயில்ல. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க ஏன் அந்தப் பையனை அடிக்கப் போறீங்க? எல்லாம் நான் பார்த்துக் கொள்றன். நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கணும்.”

அதற்குள் அவள் வந்துவிட்டாள்.

அவளுக்கு செய்திகள் சாடைமாடையாக அருக்கொடுத்துத்தான் இருக்க வேண்டும்…

கண்கள் சிவந்திருந்தது. மூக்குச் சிந்தத் தொடங்கி இருந்தாள். கைகளில் நடுக்கம்….

“பார்த்துக் கொள்ளுங்கோ.நான் வெளியிலே வெசவளம் என்னென்று விசாரிச்சுக்கொண்டு வாரன். பசளைக் கடையில அறக்கொட்டியான் எண்ணெயும் வாங்கிட்டு வாரன்.”

தம்பி விலகிச் செல்கிறான்.

அவர் கண்கள் மயங்கி நினைவிழக்கத் தொடங்கினார். ‘தம்பி என்ன சொன்னவன்? அறக்கொட்டியான் மருந்தா? அறக்கொட்டியான் மருந்து ஆளைக் கொல்லுமோ?”…..

நினைவுப் பிசிரில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சி, மெல்லிய மின்வெட்டில் தெரியும் மழை இருட்டுக் காட்சி போல மங்கலாக நிழலாடுகிறது.

அறுவடை நிலையில் இருக்கும் வேளாண்மையைத்தான் அறக்கொட்டியான் தாக்குவது வழக்கம். ஒரு பொழுதில் ஒரு வயல் மூலையில் தொட்டமாகக் காணப்படும். இரண்டு நாட்களுக்குள் வயல் பூராகவும் பரவி நெல்மணியைப் பதம் கெடுத்து, மாவாக்கி விடும். எதுவும் மிஞ்சாது. செய்கைக்காரனின் நெஞ்சையும் சேர்த்து சுருக்கி விடும்.

இவர் அவசர அவசரமாக எண்ணெய் வாங்கி அடிக்க ஆயத்தமானார். அதற்கு முன் வயலிலுள்ள நீர் முழுக்க வடிய வைக்க வேணும். தண்ணீர் நின்றால் எண்ணெய் பலனளிக்காது. அறக்கொட்டியான் மடங்காது.

அடுத்த வயல்காரனுக்கும் அறக்கொட்டியான் பிரச்சினை. இவருக்கு முதல் நாளே அவன் தண்ணீரை வடியவிட்டு எண்ணெய் அடித்துக் கொண்டிருந்தான். ஆனால் இவருடைய நீர் வடிச்சல் அவனது வயலுக்குள்ளாலதான்!

“ரெண்டு நாள் பொறுங்களன் வட்ட விதானையார். அதுக்குள்ள எண்ணெய் அடிசசு முடிச்சிர்றன். அதற்குப் பிறகு என்ர வயலுக்கால தண்ணிய வடியவிட்டு நீங்க எண்ணெய் அடிங்களன்.”

“அதுக்குள்ள என்ட வயல அறக்கொட்டியான் அடிச்சு துவைச்சுப் போடுமே.”

“ஒருநாள் பொறுங்க நான் பயிரெல்லாம் ஒதுக்கி, தண்ணிய வடியவிட்டு இன்டைக்குள்ள எண்ணெய் அடிக்கப் போறன். நாளை – ஒருநாள் பொறுங்க அதுக்குப்பிறகு நீங்க தண்ணியை என்ற வயலுக்கால வடியவிட்டு, பயிரை ஒதுக்கி எண்ணெய் அடிங்க.

அவருக்கு விறுவிறுவென்று சூடு ஏறுகிறது.

“உன்ர வயல் தப்ப வேணும். என்ர வயல் அழிய வேணும். அப்படியே… ஒரு கீற்றால தண்ணிய வடிய விடன். நானும் பயிர் ஒதுக்கி எண்ணெய் அடிக்கிறன்.”

“நீங்க வட்ட விதானையார். நீங்கதான் எங்கட வயலையும் காப்பாத்தித் தரணும். அதை விட்டுப் போட்டு மல்லுக்கு நிக்கறீங்க”

“நான் சண்டைக்காரன் என்று சொல்றியாடா?”

“மரியாதையாப் பேசுங்கோ. ‘டா’ போட்டு பேசக் கூடாது. உங்க வயசுக் குத்தான் நான் மரியாதை தாறன்…….. கவனம்.”

இவருக்கு பிடரி மயிர் சிலிர்க்கிறது…… ‘விறுவிறு’வென்று விலங்குக் கூட்டமொன்று எட்டுக் கால் பாய்ச்சலில் வேகம் கொண்டு கைகளில் வலுக்கொள்கிறது….

“இங்க, தண்ணிய தட்ட விடறியோ இல்லையோ”

“முடியாது. இண்டைக்கு முடியாது போ. ஏலாது”

“என்னடா சொன்னனீ?”

முதல் அடி கன்னத்தில் விழுகிறது. கட்டிப் புரண்டதில் யாருக்கு அடி. யாருக்கு உதை என்று புரியவில்லை. விலங்குக் கூட்டம் மறுபடி மறுபடி பாய்ந்து “மனிதனை” விரட்ட….

“எனக்காடா கை வெச்ச ?”

இளமையும் முதுமையும் மோதிக்கொள்ள முதுமை பழிதீர்க்கப் பாய்கிறது. “எனக்காடா கை வெச்ச”…… மறுபடிமறுபடி ஆக்காண்டிப்பறவை வட்டமிட்டுக் கீச்சிடுகிறது.

“எனக்காடா கை வெச்ச?”

கையில் அகப்பட்ட கிருமிநாசினிப் போத்தலில் அரைவாசியை அவனது வாய்க்குள் ஊற்றி முடிந்த போதுதான் அவரது ஆத்திரம் தணிகிறது….

நிலமையின் கொடூரம் புரியத் தொடங்கிய போது….. எல்லாமே முடிந்து விட்டிருந்தது.

செவ்வால் அறணை தான் நோக்கிய திசையில் இருந்து பின்வாங்கி நகரத் தொடங்கியது. அவரை ஆட்சி செய்திருந்த விலங்குக் கூட்டம் தனது பேய்ப் பாய்ச்சலை குறுக்கிக்கொண்டு மனக் கூட்டுக்குள் கடிவாளம் இட்டுக்கொண்டது.

ஆனாலும் எல்லாமே முடிந்திருந்தது!

குற்றத்தின் வெப்பச்சுடர் அவரை தீய்க்கத் தொடங்கியது. ஒரு கொலைகாரனாக மாறிவிட்ட கொடூரம் அவரை அணு அணுவாக பிராண்டத் தொடங்கி விட்டது. கண நேரத்தில் தன்னை ஆக்கிரமித்துச் செல்கின்ற முன்கோபம் செய்து விட்டிருந்த அட்டூழியம் அவரைக் குற்றவாளியாக்கி

“நீ கொலைகாரன். நீ கொலைகாரன்” என்று விரல் நீட்டி குதறி எடுத்தது.

கொலைகாரனாக மாறிவிட்ட நிலையில் அதற்கான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதோ – தண்டணையில் இருந்து தப்பிக்கொள்வதோ அவருக்குச் சரியாகப் படவில்லை. பாவத்திற்குரிய தண்டணையை தானே வழங்கிக் கொள்ளவே விரும்பினார்.

கையில் மிகுதியாக வைத்திருந்த கிருமிநாசினி, தானே தண்டனை அளிக்கின்றேன் என்று கூறிற்றா?…..

போத்தலை உயர்த்தி வாய்க்குள் ஊற்ற வெளிக்கிட்ட போது, தம்பி ஓடி வருகின்றான்.

“உங்களுக்கு விசரே” போத்தல் எகிறிப் போய் விழுந்து கவிழ்ந்து கொள்கிறது.

“நீங்களென்ன வேணுமென்டா செய்தனீங்க? அவனும் அடிச்சான். நீங்களும் அடிச்சீங்க. சண்டையில் இது சகஜம்… அவன் உங்கட வயசுக்கும் மரியாதை தரயில்லியே….”

“என்டாலும் நான் செய்திருக்கப்படாது. என்ர கோபம் கண்ணை மறச்சுப் போட்டுது”

“கை கால் கழுவிக் கொண்டு நீங்க மேட்டு நிலத்துக்குப் போங்க…. அங்கேயே ரெண்டு நாள் இருந்து மாடுகன்றைப் பாருங்க.மற்றதெல்லாம் நான் கவனிச்சுக் கொள்றன்.”

அப்படியேதான் நடந்தது. அவர் மேட்டு நிலம் போனார். பாதுகாப்பு இல்லாமல் கிருமி நாசினி பாவித்ததால மரணம் சம்பவித்தது என்று முடிவானது.

தண்டனை தப்பிப் போனது. குற்றம் அமுங்கிப் போனது. உண்மை அடங்கிப் போனது.

நீண்ட நாள் அவர் பேச்சற்றுப் போனார். மனசாட்சி குறுகுறுப்புக் காட்டியது. இரவில் புலம்பத் தெடங்கினார். கண்விழித்து அரட்டத் தொடங்கினார்.

தம்பி எல்லாவற்றையுமே மறைத்து விட்டான். செத்தவனின் பிள்ளைகளுக்கு தர்ம காரியங்கள் என்று உதவி புரிந்தார்கள். ஆனால் அவையெல்லாம் செய்த பாவங்களுக்குரிய பிராயச்சித்தம் ஆகிவிடுமா…?

இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நெஞ்சின் ஓரத்தில் தனித்திருந்து எப்போதாவது அவரை வாட்டி வதைத்துக் கொண்டுதானிருந்தது.

அன்று செய்த குற்றத்திலிருந்து தப்பிவிட்டார். இன்று செய்யாத குற்றம் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறது. தண்டணைகள் தாமதிக்கலாம். ஆனால் தப்பவிடாது போலும்.

விதானைாயர் வந்து விட்டார்.

“வட்ட விதானை, எனக்கெண்டா நம்பிக்கையில்ல. நீ கொலை செய்ற ஆள் இல்லை. ஆனால் அந்தப் பையன் நீ அடிச்சதெண்டுதான் சொல்றான்.எனக்கெண்டா என்ன செய்றதெண்டு விளங்குதில்லை. நீங்க ஒரு நடை பொலிசுக்கு வாங்களன். நடந்ததை சொல்லிப்போட்டு வந்துருவம்.”

அதற்குள் தப்பி வந்து விட்டான்.

“யாரோ ஒரு பையன் சொன்னான் எண்டதுக்கா அவரை பொலிசுக்கு வரச் சொல்றீங்க…. என்ன நியாயம் விதானை?……. அவர் என்ன கொலைகாரனா?…. நாரைக் கொக்குப் புடிக்கிற பொடியனை நாங்க ஏன் கொல்ல வேணும்….. அவர் வரமாட்டார்….. நீங்க போங்க…”

மனைவி விசும்பத் தொடங்கிவிட்டாள். உச்சிப் பொழுதின் வெம்மை யையும் சேர்த்துக்கொண்டு காற்று சுழன்று அடிக்கிறது. வெள்ளை கொழும்பான் மாமரத்திலிருந்து கொப்பொன்று முறிந்து படலைப் பக்கம் விழுந்து வழியை மறைத்து நிற்கின்றது.

“நாங்களாகப் போய் உண்மையைச் சொல்லிட்டா நமக்கு நல்லது. அவங்களாக வந்து இழுத்துக் கொண்டு போனா வில்லங்கமாகப் போயிடும். நலவுக்குத்தான சொன்னன்.”

“அதெல்லாம் நாங்க பாப்பம். பொலிஸ், கோடு கச்சேரி என்று நாங்களும் ஒரு கை பாப்பம். நீங்க போய்வாங்க.”

மாமரக்கொப்பை விலக்கிக் கொண்டு விதானையார் படலை தாண்டுகிறார். தம்பி விறாந்தை நோக்கி வருகிறான்.

“விதானைக்கென்ன விசறா?….. அவர் வேலையை அவர் பாத்துக் கொண்டு போக வேணும். முந்திரிக் கொட்டை. நீங்க சும்மா இருங்க, நான் எல்லாம் பாக்குறன். பாம்புக்குத்தான் அடிச்சது. அது தவறிப் போச்சு. நீங்க அதையும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியாதெண்டே சொல்லிப் போடுங்க.”

“அதெப்படிடா தம்பி’ அவரால் பெச முடியவில்லை. தொண்டடைக்குள் வார்த்தைகள் சிக்குண்டு உறைகிறது.

வாந்தி எடுக்கிறார். கண்களில் மயக்கம்……..

செவ்வால் அறணைக் குட்டிகள் தவழ்ந்து ஊர்ந்து செல்வது போலவும் நாரைகள் அவற்றைக் கவ்விக் கொண்டு பறப்பது போலவும் காட்சிகள் அடிமனதில் தோன்றுகின்றன… கோழிக்குஞ்சொன்றை கறுப்புக்காகமொன்று தூக்கிக் கொண்டு கூட்டில் வைத்து தனது குஞ்சுக்கு இரை ஊட்டுவது போல சலனக்காட்சி… இது என்ன நியாயம்?

கிருமி நாசினிப் போத்தலை மலைப்பாம்பொன்று விழுங்கி, விழுங்கி வெளியே துப்புகிறது. பாம்பு முட்டைகள் உடைந்து உடைந்து தீப்பற்றிக் கொள்கிறது……. அவர் பார்வையில் சலனங்கள் தீர்ந்து, ஒளி பரவுகிறது.

“தம்பி, நான் பொலிசுக்குப் போறன்”

“உங்களுக்குப் பைத்தியமா? புடிச்சு கூண்டுல போட்டு நீங்கதான் செய்தது என்டு தண்டனை தந்திடுவாங்க”

மனைவி கையை பிசைந்து கொள்கிறாள்.

“தம்பி நானே செய்ததாகத்தான் சொல்லப் போறன். அதுக்கு பிறகு விசாரணை தேவையில்லை. அஞ்சு வருசத்துக்கு முன் நடந்த அறக்கொட்டியான் சண்டையை நினைச்சுப்பார். அதற்குரிய தண்டனையே இன்னும் எனக்குப் பாக்கி இருக்கிறது. இப்போது நான் போவது தண்டனை பெறுவதற்காக அல்ல. பிராயசித்தம் பெறுவதற்காக”

தம்பி மலைத்து நின்றான். இப்போது அவன் தடுக்கவில்லை. அவரைத் தடுக்கலாம். ஆனால் அவரது மனச்சாட்சியை தடுக்க முடியாது என்பதை அவன் அறிவான்.

– கலாச்சார அமைச்சு தேசிய மட்டத்தில் அரச ஊழியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (2002)

– வரால் மீன்கள் (பரிசு பெற்ற சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, வானவில் வெளியீட்டகம், திருக்கோணமலை.

https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%a3%e0%af%88/

Checked
Wed, 09/17/2025 - 04:45
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed