கதை கதையாம்

எட்டாவது திரை - தெய்வீகன்

2 weeks 4 days ago

எட்டாவது திரை - தெய்வீகன்

அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின் வாகன நெரிசல் பெரும்பாலும் அத்தனை திரைகளிலும் நிறைந்திருந்தது. எனக்கருகிலிருந்த தொலைத்தொடர்பு ரேடியோ கருவண்டு போல அவ்வப்போது இரைந்து முனகியது. பாதுகாப்பு அதிகாரிகளின் குரல்கள், அந்த ரேடியோவில் விழுவதும் ஓய்வதுமாயிருந்தன.

களத்திலிருந்து உத்தியோகத்தர்கள் அறிவித்த சங்கேதக் குரல் வழியான செய்திகளுக்குப் பதில் கொடுத்தேன். அதனை பதிவேட்டில் நேர விவரத்தோடு எழுதினேன்.

“Spring Street Security vehicle moving”

கட்டுப்பாட்டு அறையிலுள்ள பெருந்திரைக்கு மேலுள்ள மணிக்கூட்டில் சரியாக மாலை ஐந்து மணி காண்பித்தது. முன்னைய இரவுப் பணியின் சோம்பலை பகல் தூக்கம் ஓரளவு துடைத்தெடுத்திருந்தாலும், மிதமான அசதி உடம்பில் இன்னும் மீதமிருந்தது. கட்டுப்பாட்டு அறைக்குள் வருவதற்குச் சற்று முன்னர், தயாரித்த சூடான தேனீர், ஆவியை எந்தியபடி மேசையில் வீற்றிருந்து உற்சாகமளித்தது.

மெல்பேர்ன் நகரின் கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாலுள்ள அத்தனை கமராக்களும் காட்சிகளின் துரிதத்தை எனது கண்களுக்குள் வார்த்தபடியிருந்தன.

கமரா 1 – ஜொலிமென்ற் ரயில் நிலைய வாயில்

கமரா 2 – புல்மென் ஹோட்டல் வாயில்

கமரா 3 - ஸ்பிறிங்க வீதி (தெற்கு நுழைவாயில்)

கமரா 4 – திறைசேரிப்பூங்கா நுழைவாயில்

கமரா 5 – திறைசேரிப்பூங்கா விருந்தினர் மேடை

கமரா 6 – திறைசேரிப்பூங்கா நிகழ்வரங்கு

கமரா 7 – ட்ராம் தரிப்பிடம் - இலக்கம் 174

மெல்பேர்ன் பெருநகரின் பாதுகாப்பிற்காகப் பல்லாயிரக்கணக்கான கமராக்கள், ஒவ்வொரு மூலையிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், நகர் மையத்திலுள்ள ‘அக்மி’ மண்டபத்தின் கட்டுப்பாட்டு அறையில் எட்டுக் கமராக்களின் வழியாக, கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியிலுள்ள பகுதியின் வெளிக்கள நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான மெல்பேர்ன் நகர் கவுன்ஸிலின் பிரதான உத்தியோகத்தர்களில் ஒருவனாக நான் பணியாற்றி வந்தேன்.

என் முன்னாலிருக்கும் இந்த எண்-திரைகள் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் சுற்றாடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்களின் வழியான காட்சிகளை நேரடியாகத் தருபவை. நகரின் மத்திய பிரதான தெருக்கள், அங்காடிகளுடன் ஒப்பிடும்போது நெரிசல் மிக்கவை இல்லாவிட்டாலும், இந்தக் கமராக்கள் ஒவ்வொரு நொடியும் புதிய காட்சிகளை திரைக்கு அனுப்பிக்கொண்டிருப்பவை.

மெல்பேர்ன் எனும் பெரு நகரின் ஒரு துண்டை, இந்தக் கமராக்களின் வழியாகக் காவல் காக்கும் நான், இருளுக்குள் ஒளி மேயும் பசு.

வாழ்வின் அசதியான காலங்கள் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த வேலையில் இணைந்தேன். பதினைந்து வருடங்களை நிறைவுசெய்துவிட்டேன். திரைகளுடன் நானும் என்னுடன் இத்திரைகளும் பேசுகின்ற முடிவுறாப் பயணமாய் இந்தப் பணி ஆண்டுக் கணக்கில் விரிந்து பரந்தது.

பின் அந்திப்பொழுதில் நகர் கலையும் மணித்துளிகளை நரைவிழுந்த இந்தத் திரைகள் ஆக்ரோஷமாகக் காண்பிக்கும். இந்தக் கமராக்களின் கண்களையும் அவற்றின் களைப்பையும்கூட நான் அறிவேன். இந்தப் பெருந்திரையின் முன்னால் இரவெனும் இனிய புலர்வுக்காகத் தினமும் காத்திருப்பேன்.

தவிர்க்கப்பட்டத் தெருக்களில் தரித்து நிற்கும் வாகனங்களை அகற்றும்படி களத்தில் பணிசெய்யும் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்வேன். காட்சிகளில் ஏதாவது புதிராய் நிகழ்ந்தால், அவற்றை எழுதிவைப்பேன். அவற்றின் தன்மை குறித்து மேலதிகாரிகளிடம் தகவல் சொல்வேன். இரவுச் சோதனைகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் தகவல்களை எழுதிவைப்பேன்.

களத்திலுள்ள பணியாளர்கள் தொடர்ச்சியாக ரேடியோ மூலம் எனக்கு அனுப்புகின்ற தகவல்களைக் குறிப்பதும், தேவையேற்படும்போது பதிலளிப்பதும், அவர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு நகர்த்தும் அறிவுறுத்தல்களை அனுப்புவதுமாக - ஒரு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொண்டு அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் அரூப அடையாளம் நான்.

கட்டடக் காடுகளுக்கு இடையில் பூத்திருக்கும் இந்தப் பெருநகரின் ஒவ்வொரு இரவும் புதிய இரவே. அவை முன்னைய இரவோடு ஒத்திருப்பதில்லை. இந்த இருளின் பெரு நடனம் மந்தகாசமானது. அடர் இருளில் ஒளித்திவலைகளாய் இடர்படும் மனிதர்களின் அழகும் வித்தியாசமானது. திரையில் காணும் அவர்களது அவசரமற்ற அசைவுகளையும் நிதானத்தையும் வியப்பேன். இருளுக்கு அவர்கள் அழிக்கும் மதிப்பையும் இருளால் அவர்கள் அடையும் அச்சத்தையும் கண்டு ரசிப்பேன்.

திறைசேரிப்பூங்காவில் ஓங்கி நிற்கும் ஒலிவ் மரங்களின் அசைவும், வீதி விளக்குகளின் அசையாமையும், நேரம் தவறாத ரயில் - ட்ராம் வண்டிகள் என நகரில் இடர்படும் வாகனங்கள் என்று சகல காட்சிகளும் என்னைச் சலிப்பின்றித் தாலாட்டுபவை.

திரை ஒளியில் பூக்கின்ற என் விழிகள் இரண்டும் ஒவ்வொரு இரவையும் பத்திரமாய் ஏந்தும். பகல் பொழுதில் தூங்கும்.

மனிதர்கள் எனக்கு எப்போதும் திரையில் மாத்திரம் தோன்றும் உறவுடையவர்கள். என் தனிமையான வாழ்வுக்குத் தூரமானவர்கள். வீட்டிலிருந்து காரில் கிளம்பும்போதும் மனிதர்கள் கண்ணாடிக்கு வெளியில் தெரிபவர்கள். அவர்களுக்கான எனது பெறுமதி அவர்களது உருவங்கள் மாத்திரமே.

இரவுப் பணியை ஆரம்பிக்கும்போது மாத்திரம், பகல்பணியை முடித்து வெளியேறும் ஹரால்ட்டைச் சந்திப்பேன். அவனைப் பார்க்கும்போது எனக்கு விநோதமாக இருக்கும். நான் திரைகளில் பார்க்கும் மனிதர்களுக்கு சற்று விநோதமானவனாக, பெரிய மூக்கும் வீங்கிய காதுகளும் உடையவன் அவன். அவனது கண்கள் மிகவும் அகன்றவை. அவன் அருகில் நிற்கும்போது சிலவேளைகளில் அச்சமாகவுமிருக்கும். இவன் ஏன் கமராக்களில் தெரிபவர்களைப்போல இயல்பானவனாக இல்லை என்றெண்ணுவதுண்டு.

வாரத்தில் ஆறு நாட்கள் இரவுப்பணி செய்யும் ஒருவனுக்கும் இந்த மானிட ஆராய்ச்சி தேவையற்றது என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன்.

ஆனால், எனது இருளில் இதழ் விரிக்கும் ஏழு கமராக்களும் எனக்கு ஏழு வகையான உலகைப் படைக்க வல்லவை. இந்த அறை எனக்கு ஒரு கருந்தடாகம் போன்றது. என் முன்னால் மலர்ந்திருப்பவை ஏழு கரு மலர்கள்.

ஒரு கமரா மாத்திரம் கரிய திரை. அது இயங்குவதில்லையா, அல்லது அதன் கண்களின் முன்னால் ஏதாவது நிரந்தர மறைப்பா? கடந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ தடவைகள் எனது மேலாளரிடம் கேட்டுவிட்டேன். கவலைப்படவேண்டியதில்லை என்பதுதான் பதிலாகக் கிடைத்தது. அந்த எட்டம் திரை என் இரவுக்கு அப்பாலுள்ள ஏதோ மர்மமானது என்று விட்டுவிட்டேன்.

2017 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் திகதி.

எனது பதினைந்து வருட நிறைவில் - தொடர் இரவுப் பணியைப் பாராட்டி – கட்டாயப் பணி ஓய்வு அறிவிக்கப்பட்டது. அது எனது உடல்நலத்தைக் கருத்திற்கொண்ட மேலிடத்தின் முடிவு. பணி செய்யும்போது வழங்கப்பட்ட அதேயளவு பணம் ஓய்வூதியமாக அறிவிக்கப்பட்டது. எனது பணியின் நேர்த்தியும் நேர்மையும் மெச்சப்பட்டது.

ஆனால் என் உலகினால் அதனை ஓய்வாக ஏற்கமுடியவில்லை.

நான் ஒரு புதிய இருளுக்குப் புலம்பெயர்ந்தேன். அங்கேயும் விழித்திருந்தேன். புத்தகங்கள் படித்து எனக்குள் புதிய திரைகளைத் திறந்தேன். என் முன்னால் கமராக்களற்ற இரவு எனக்கு அச்சத்தைத் தந்தது. நிகரில் நான் கண்ட இரவின் கருமை எரிச்சலாயிருந்தது.

என் வீட்டின் ஜன்னலின் வழி தெரிந்த புதிய இருளை நாள்தோறும் காணப் பயின்றேன். இரவெல்லாம் அதில் புதிய வாசம் கிளர்ந்தது. என் படுக்கை அறையைத் தழுவிச் சரிந்திருக்கும் தைல மரக்கிளைகளின் அசைவுகளை கட்டிலில் உட்கார்ந்து பார்த்தேன். அவை திறைசேரிப்பூங்காவிலுள்ள கமராக்களில் தெரிந்த சிறிய கிளைகளைவிட மிகப்பெரியவை. விசித்திரமான ஒலிகளை எழுப்பக்கூடியவை.

போகப்போக, பின் அந்திப்பொழுதில் தூக்கம்விட்டு எழுந்தபோது, நான் பல நாட்களாகக் காணாத ஜொலிமென்ற் ரயிலின் நினைவுகளால் தொந்தரவானேன். ஸ்பிறிங்க வீதியில் நேரம் தவறாது ஊர்ந்து வரும் ட்ராம் வண்டியின் முகத்தைக் காணாது துயருறத் தொடங்கினேன். சிறிய கை - கால்களை வீசியெறிந்து நகரிலோடும் மனிதர்களைக் காணாது எனது நினைவுகள் கொந்தளிக்கத் தொடங்கின..

அனைத்தும் என் முன்னால் திரண்ட காட்சிகளாய் கூடி நில்லாதது பெரும் களைப்பை ஏற்படுத்தியது. இரவு எனக்குள் கோபங்களால் கூடுகட்டத்தொடங்கியது.

இரவின் வாசத்தை நுகர்வதற்காக, நடுநிசி தாண்டிய பிறகு வீட்டிலிருந்து இறங்கி வெளி வீதியில் கருமை அடர்ந்த பாதையில் நடைபோனேன். காலடியில் மிதிபட்ட சருகுகளின் சத்தம் முதலில் அச்சமூட்டின. மரங்களின் அசைவும் அதில் வளைந்து வீழ்ந்த காற்றும் அரியண்டமாயிருந்தது. இரவுக்குருவியொன்று தீடீரென்று வெட்டி வெட்டிக் கத்திக்கொண்டு தலைக்கு மேல் பறந்துபோனது. உடல் நடுங்கிப்போனேன். தூரத்தில அடர்ந்த வெளிச்சமும் மின்கம்ப ஒளிவிளக்குகளும் தெரிந்தன. ஜீரணிக்க மறுத்த ஒளிப்பந்துகள் பெருந்திரளாய் நெஞ்சை அழுத்தின. மீண்டும் வீட்டை நோக்கி நடந்தேன். வழி காட்டும் ஏழு திசைகளுமற்ற ஒரு வெட்டவெளியில் நான் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

அன்றிரவு கண்ட அடர் வெளிச்சம் வெளியே செல்வதற்கு பயங்கர அச்சத்தைத் தந்தது. அந்த நினைவிலிருந்து மீண்ட ஒருவாரத்தின் பிறகு, பின்னிரவுப்பொழுதில் மீண்டும் நடைபோனபோது அவளைக் கண்டேன்.

எனது வீட்டுக்கு அடுத்த தெருவிலிருந்து பிரியும் சிறு ஒழுங்கையிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் வெளி விறாந்தையில் தற்செயலாக அவள் எதிர்ப்பட்டாள். அவள் மெல்லிய வெளிச்சத்தில் ஒல்லியான உடலை அசைத்து அசைத்து தன் நினைவை நெட்டுருக்கும் இசையோடு நடனமாடிக்கொண்டிருந்தாள். அவளை எனக்குக் காண்பித்த சிறு வெளிச்சம் அந்த வீட்டில் எங்கிருந்து ஒளிர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், அது அவளுக்கென அளவாக உருவான ஒளியின் ஒத்தடம்.

நான் பணியிலிருந்து ஓய்வடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ஐந்தாவது கமராவில் ஒரு நாளிரவு திறைசேரி விருந்தினர் மேடையில் கண்ட அழகிய பெண்ணின் முகத்தை ஒத்திருந்தது அவள் சாயல். அன்று அவள் அந்த விருந்தினர் மேடையில் தனியாக இருந்தாள். மங்கிய ஒளியில் அங்குமிங்கும் மெதுவாக நடந்தாள். நீண்ட யோசனையில் ஆழ்ந்தவளாகத் தெரிந்தாள். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. அன்றிரவு நான் வேறு எந்தத் திரையையும் பார்க்காமல், அவள் மீது லயித்திருந்தேன். ஒரேயொரு திரையில் மாத்திரம் ஒளிர்ந்துகொண்டிருந்த அவளது உருவம், அதுவரை நானறியாத புது ரேகைபோல் ஒருகணம் எனக்குள் பதிந்தது.

திடீரென அவள் மறைந்துபோனாள். என் கண்கள் அவசர அவசரமாக மிகுதி அனைத்துத் திரைகளைப் பாய்ந்து பாய்ந்து தேடின. எங்கேயும் காணவில்லை. எட்டாவது கருந்திரைக்குள் வீழ்ந்துவிட்டாளா? எப்படிப் பார்ப்பது? இதயம் வேகமாக அடித்தது. அவள் மறைந்துவிட்டாள்.

அங்கு மறைந்தவள் இங்கெப்படித் தோன்றினாள்.

வீட்டிற்கு மிக அருகில் சென்றேன். அவள் தன்னை மறந்து தொடர்ந்து நடனமாடியபடியே இருந்தாள். ஒளி விரல் தீண்டிய இருளின் இதழ்கள்போல நாணிச் சரிந்தாள். பின் எழுந்தாள். அவள் அசைவில் இசை அசைந்தது. மெல்லிய விரல்கள் சூடிய கைகளைத் தலைக்கு மேல் அசைத்து அசைத்து, அபிநயத்தோடு ஆடினாள். மெல்ல மெல்ல அவ்விசை எனக்குள்ளும் கேட்கத் தொடங்கியது. கரகரப்பில்லாமல் தொடர்ச்சியாக இசைக்கும் மெல்லிய ஒலி. இரவின் கருமையை ஒளியெனும் சிறு வாளால் ஓசையின்றிச் சீவுகின்ற அசாத்தியமான ஒலி. ரேடியோக்களின் இரைச்சலினால் துருப்பிடித்திருந்த எனது செவித்திரைகளை ஊடுருவிய அவ்வொலி, பாறைகளில் வழுக்கி விழுகின்ற சிறு நதியாய் எனக்குள் நிறைந்து குளிர்ந்தது.

திடீரென அங்கு ஒரு இருள் வீழ்ந்தது.

எதையும் காணமுடியவில்லை. மேலே அழகிய கருஞ்சுடராய் அசைந்துகொண்டிருந்தவளைக் காணவில்லை. அவளின் பின்னால் நாணத்தோடு ஒளிர்ந்துகொண்டிருந்த மெல்லிய வெளிச்சம் அணைந்துவிட்டது. இசையும் அஸ்தமித்துவிட்டது. என்னைச் சூழ இருட்டிருந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த இருட்டு எங்கேயும் வியாபித்திருந்தது.

அவள் எங்கே? அவளை இரண்டாவது தடவையும் தவறவிட்டுவிட்டேனா? மறுபடியும் எட்டாம் திரைக்குள் அவள் வீழ்ந்துவிட்டாளா?

எனக்காக ஒரு கணம் - ஒரேயொரு கணம் - இவ்வுலகு ஒரு துளி வெளிச்சம் தாராதா?

அண்ணாந்து பார்த்தபோது, அருகிலிருந்த கம்பத்தில் ஒரு கமரா என்னையே உற்றுநோக்கியபடியிருந்தது.

"கலைமுகம்” இதழின் 2025 - ஜனவரி - மார்ச் பதிப்பில் இச் சிறுகதை வெளியானது.

https://www.theivigan.co/post/10017?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR57gaY84h7_qVGGUphN678Y6GsJ__YhKIGRLn4xgNEJTGXD-yZ4PyPX31Ck4w_aem_mctltdFu3dl1rkZqRBtwng

ஐந்து ரூபாய் கட்டணம்

4 weeks 1 day ago

இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு.

கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல.

சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்?

இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்?

நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய் டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான்.

இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா?

கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள்.

முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன்.

இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை.

ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும்.

இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது.

"ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன்.

திகைத்து நின்றார் அவர்.

சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார்.

திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார்.

"அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன்.

அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார்.

கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன்.

படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்?

என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. 

இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். 

Screenshot%202025-05-06%20at%202.02.38%E2%80%AFPM.png

ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான்.

இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. 

இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. 

கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா?

வளமுடன் வாழ்க.

https://thangavelmanickadevar.blogspot.com/2025/05/blog-post_6.html

பளு வீரன் – தீபச்செல்வன்

1 month ago

பளு வீரன் – தீபச்செல்வன்

paluveeran-2-scaled.jpg

01

கரில் மூண்ட சமர் நின்ற வேளையில் கடிகாரமும் நின்றுபோயிருக்க வேண்டும். அதன் முட்கள் பன்னிரண்டைக் காட்டின. தூரத்தில் நடந்து வரும் சத்தியனைப் பார்த்தது நேரத்தின் எண்கள் உடைந்த கடிகாரம். காலம் உடைந்து போனதின் சித்திரமாக உருக்குலைந்த அதன் முட்கள் நெளிந்தழைப்பதைப் போலிருந்தன அவனுக்கு. எறிகணைகள் நுழைந்தும் துப்பாக்கிச் சன்னங்கள் காயமிட்டும் இருந்த மணிக்கூண்டுக் கோபுரத்தின் சுவர்களில் யாழ் நகரின் வெளுத்த முகம்  தெரிந்தது.

கோபுரத்திற்கு அண்மையாய் நடந்தவன், நிமிர்ந்து அதன் சுவர்களைப் பார்த்தான். போரின் தழும்புகள் அதன் உடல் முழுதும் சித்திரமாயிருந்தன. விதவிதமான முகங்கள். அத்தனையிலும் காயங்களும் தழும்புகளும். பெயர்ந்தலையும் சனங்களும் பதுங்கியிருக்கும் போராளியின் ஒளிமிகுந்த கண்களும் தெரிந்தன. வெடித்துவிட்ட எறிகணைகளின் வெற்றுக் கோதுகளும் கைவிடப்பட்ட பொதிகளும் அறுந்த செருப்புகளுமாய் அச் சித்திரம் அவனை அலைக்கழித்தது.

யாழ் மத்திய கல்லூரியின்  முதல் மணி ஒலிக்கவும் கவனம் பள்ளிக்கூட திசை நோக்கிற்று. பள்ளிக்குச் செல்வதற்காக யாழ் நூலக வீதியில் மெல்லக் காலடிகளை வைத்தான். பற்றை மண்டியிருந்தது யாழ் நூலக வளாகம். இன்னும் நெருப்பு யாழ் நூலக சுவர்களில் கனல்வதைப் போலிருந்தது அவனுக்கு. எரிந்த புத்தகங்களின் சாம்பல் நாசியில் மணந்தது. ‘பத்து வருசமும் ஆயிற்றுது… இன்னும் தீயின் வெம்மை குறையேல்லை’ சிவந்து கசியுமவன் கண்களில் இயலாமையின் அனல் வீசிற்று. கரிப்பிடித்த கூரையில் வௌவால்கள் தலை கீழாய்த் தூங்கின

எறிகணை வீச்சு துளைத்த விழுந்த ஓட்டையில் அமர்ந்திருந்த கருங்குயிலொன்று பெருந்தாகத்துடன் கூவியது. போரின் தழும்புகளால் நூலகத்தின் மேனி துடிதுடிப்பதைப் போலிருந்தது. கோயிலைப் போலிருந்த ஒரு நாளில் தான் புத்தகங்களை எடுக்கப் போயிருந்த வேளையில், வரலாற்றையும் கதைகளையும் தட்டுகள் முழுக்க நிரப்பியிருந்த புத்தகங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் எப்படி நோவுடன் எரிந்து போயிருக்கும் என்பதை நினைக்க இவனுடல் நடுங்கிற்று. மூதாதையர்களின் ஓலைச்சுவடிகளில் இருந்த தொன்மை நெருப்பில் எரிந்து சாம்பலாகும்போது எப்படி வாதையில் துடித்திருக்கும் என்பதை நினைக்க இவன் மனதில் தீக்கொழுந்து பரவியெரிந்தது.

பள்ளிக்கூட வீதியில் நடந்தான். வாசலில் இருந்த வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட்டு வாசல் பணிகளைக் கவனிக்கத் துவங்கினான். பிள்ளைகள் பள்ளியை நோக்கிக் குவியத் தொடங்கினர்.

“மணிமாறன்…. ஏன் இண்டைக்கு சூ போடேல்லை?…”

“…”

“அப்பு… இஞ்ச நில்லு… சேட்டை வடிவாய் உள்ளுக்கை விடு…”

“…”

“மருதன்… உதென்ன தலைவளப்பு?…”

“…”paluveeran-1-250x300.jpg

“நாளைக்கு வரேக்குள்ளை தலைமுடி வெட்டியிருக்க வேணும்… சரியோ!”

மோட்டார் வண்டியை தணித்தபடி அதிபர் வந்திறங்கவும் “வணக்கர் சேர்..” சத்தியன் வரவேற்றான். “உமக்கு வன்னிக்கு ட்ரான்ஸர் வந்திருக்குது… கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்… கடிதத்தை வந்து எடும்…” அதிபர் தன் பையைத் தூக்கியபடி நடந்தார். பள்ளியின் அடுத்த மணி ஒலித்தது.

  “…கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து

  கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து

குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்

  கோணமா மலையமர்ந் தாரே.”

ஆண் பிள்ளைகளின் குரலில் ஒலித்த தேவாரத்தின் சுரம் சத்தியனின் மனதில் படர்ந்திற்று. மாணவர்கள் வகுப்பறைகளை நோக்கி நகர, பின்னால் நடந்தான் சத்தியன்.

02

நேற்று நிலமையள் எப்பிடி சேர்… எட்டு லட்சம் யாழ்ப்பாண சனங்களும் உயிரைப் பணயம் வைச்சு கிளாலியாலை போய் வர வேண்டிக் கிடக்குது என்ன?… ஆனையிறவு பாதை திறக்கிற நேரம் தான் கிளாலி படுகொலையளுக்கு முடிவு வரும்… நீங்கள் கையெழுத்தைப் போடுங்கோ சேர்…” பாடசாலை சம்பவத் திரட்டு புத்தகத்தில் சத்தியனின் வருகையை சோதிநாதன் அதிபர் பதிவு செய்தார். சத்தியன் வருகை ஏட்டில் ஒப்பமிட்டான். “நியமனமாகி இரண்டு வருசமாக்கும்… தமிழ் படிப்பிக்கிறதிலை நீங்கள் வலு கெட்டிக்காரனாம்… கேள்விப்பட்டன்… இளம் பெடியன் தானே.. ஓ.எல். பிள்ளையளுக்கு தமிழ் எடுங்கோ… வகுப்பாசிரியரும் நீங்கள்தான்…” கைகளைக் கொடுக்கவும் சத்தியன் வகுப்பறையைத் தேடி நடக்கத் துவங்கினான். நீண்ட இரண்டடுக்கு மாடியால் நிமிர்ந்திருந்த பள்ளியின் பெருமிதத்தைக் கவனித்துக் கொண்டே நடந்தான்.

சத்தியன் வரவும் மாணவர்கள் எழுந்து வணக்கம் செய்தனர். மேசையில் புத்தகங்களை வைத்துவிட்டு மாணவர்களை ஒவ்வொருவராகப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தான் சத்தியன். “அட மருதன்… நீ எப்பயடா இஞ்ச வந்தனீ…” அவன் தலையைக் குனிந்து கொண்டான். நல்லாய் நெடுத்த அவனின் தலை மாணவர்களிடையே உயரத் தெரிந்தது. உயர்ந்த தோள்களும் கருமை படர்ந்த தேகத்தில் வெண்ணுடை மினுங்கியது. சத்தியன் நெருங்கி வந்தான். பிடரி வரை வளர்ந்து போயிருந்தது தலைமுடி. “அங்கையும் சொன்னான்.. இப்ப இஞ்சையும் சொல்லுறன்.. நாளைக்குப் பள்ளிக்கூடம் வரேக்கை தலைமுடிய வெட்டியிருக்க வேணும்…” சத்தியன் விரல்களை நீட்டி எச்சரித்தான். மருதன் தலையைக் குனிய, அவன் கைகள் புத்தகமொன்றின் பக்கங்களைப் புரட்டின. நிமிர்ந்து சத்தியனைப் பார்த்து சிரித்தபடி ஆமோதித்தான்.

பிள்யைள்… சீதமதி குடைக்கீழ் செம்மை அறம்கிடப்பத், தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்.. என்ற பாடலிலை நளனின்ரை ஆட்சிச் சிறப்பை புகழேந்திப் புலவர் நல்ல வடிவாய் சொல்லியிருக்கிறார்… விளங்கிச்சோ?…”  குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர் மாணவர்கள். சத்தியன் ஒவ்வொருவராக நெருங்கி வந்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தலையைக் குனிந்திருந்த மருதனின் அருகில் வந்து நின்றான். அவன் குறிப்பேட்டில் கையெழுத்து முத்துமுத்தாய் மினுங்கிற்று. “அச்சடிச்ச மாதிரி எவ்வளவு வடிவாய் இருக்குது உன்ரை கையெழுத்தெடாப்பா…” மருதனின் தலைமுடியைக் காணவும்  சத்தியனின் முகம் மாறியது.

“நானும் இரண்டு மாதமாய் தலை முடி வெட்டச் சொல்லுறன்…”

“…”

“நீ சொல்வழி கேட்கிற மாதிரி தெரியேல்லை..”

“…”

“வெளியிலை போய் நில்லு…”

“…”

“தலைமுடியை வெட்டிப் போட்டு வகுப்புக்குள்ளை வா…”

எழுந்து பதிலற்று நின்றான் மருதன். “கெதியிலை வெளியிலை போ…” சத்தியன் சத்தமிடவும் தன் புத்தகங்களை எடுத்தபடி நடந்தான் மருதன். வெளியில் சென்று நிற்க வகுப்பில் பாடம் தொடர்ந்தது. மருதன் வெளியில் நின்றபடி தன் குறிப்பேட்டைச் சுவரில் வைத்து எழுதத் துவங்கினான்.

குப்புக்கு வந்த சத்தியன் முதல் ஆளாய் மருதனைத் தேடினான். அவன் தலைமுடி இன்னமும் நீண்டு வளர்ந்திருந்தது. சத்தியனுக்குக் கொதி உச்சத்தில் ஏறியது. வெண்கட்டியை தூக்கி எறிந்தான். மருதனுக்கு கிட்டவாக வரவும், அவன் எழுந்து கொண்டான்.

“நாலு மாதமாய் தலைமுடிய வெட்டச் சொல்லி நானும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறன்… நீயோ சொல்வழி கேக்கிறேல்லை எண்டு சரியான பிடிவாதமாய் தான் நிக்கிறாய் என…”

“…”

“இவர் என்ன சொல்லுறது… நான் என்ன கேக்கிறது… அப்பிடித்தானே என்ன மருதன்?…”

மருதன் மறுத்துத் தலையசைத்தான். சத்தியன் கோபத்தைத் தணித்தான்.

“அப்ப ஏன் தலைமுடி வெட்டேல்லை…?”

சத்தியன் அமைதியாய் மருதனைப் பார்த்தான். தோலுடைந்து விழும் மாதுளை முத்துக்களாய் மருதனின் உதடுகள் பிரிந்து விழுந்தன சில வார்த்தைகள்.

“காரணம் இருக்குது சேர்…”

பறவையைப் போன்ற அவன் கண்களொரு தாகத்துடன் அசைந்தன. சத்தியன் சுற்றியிருந்த மாணவர்களைப் பார்த்தான். “வெளிக்கிடு… அதிபரிட்டை கொண்டேய் விடுறன்… இண்டைக்கு இதுக்கொரு முடிவு கட்டுறன்… வெளிக்கிடு…” மீள தலையைக் குனிந்து கொண்டான் மருதன். “வா அதிபரின்ரை ஒப்பீசுக்கு…” மருதனை எழுப்பிக் கொண்டு நடந்தான் சத்தியன்.

“சேர் இவன் தலைமுடி வெட்டுற மாதிரி தெரியேல்லை… நானும் நெடுகச் சொல்லிச் சொல்லிக் களைச்சுப் போட்டன்… நாலு மாதம் ஆகிட்டுது… யாழ்ப்பாணத்திலை இருந்து தலைமுடியை வெட்டச் சொல்லி நானும் மண்டாடிக் கொண்டிருக்கிறன்… இவனும் கேக்கிற மாதிரி தெரியேல்லை… இது பெரிய கரச்சலாய்க் கிடக்குது… இண்டைக்கு எனகொரு முடிவு தெரிய வேணும் சேர்… இல்லாட்டில் உந்த வகுப்புக்குள்ளை நான் போகன்…” சத்தியன் கொந்தளித்தான்.

“முதலிலை… கொஞ்சம் அமைதியாய் இரும் சத்தியன்…”

அதிபர் அமைதியாகச் சொல்லியபடி புன்னகைத்தார். சத்தியனுக்கு இன்னும் சினமேறியது.

“அப்பு மருதன் நீ வெளியிலை அந்தக் கதிரையிலை இரு…”

அலுவலகத்திற்கு வெளியில் அடுக்கியிருந்த கதிரையொன்றில் அமர்ந்து கொண்டான் மருதன்.

“சத்தியன் சில பிள்ளையளின்ரை குடும்ப பின்னணியலை பார்க்க வேணும்… அதைப் போல வேற ஏதாவது காரணங்களும் பின்னணிகளும் அவங்களுக்கு இருக்கும்…. அதையும் நாங்கள் சரியாய் அறிய வேணும்…  அவன் தலைமுடி வளக்கிறான் தான்.. ஆனால் குழப்படியள் ஏதும் செய்யிறவனே.. இல்லைத்தானே… அவன் நல்ல பிள்ளை… நீர் ஒரு கொஞ்சக் காலம் அமைதியாய் இரும்.. பிறகு பாப்பம்… பிறகு தெரியும்… இப்ப வகுப்புக்கு போங்கோ…”

“சேர் நீங்களும் அவனுக்கு நல்லாய் இடம் குடுக்கிறியள்… கடைசியிலை அவனை காவாளி ஆக்கப் போறியள்…” சத்தியன் எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தான்.

“மருதன், இப்ப உனக்கு நல்ல புளுகு தானே? நீ என்னெண்டாலும் செய்.. நல்லது சொன்னால் உங்களுக்கு உபத்திரமாய்த்தான் கிடக்கும்… இனிமேல் நான்  உன்னைத் தலைமுடி வெட்டச் சொல்லிக் கேக்க மாட்டன்… நீ நல்லா தலைமுடியை வள…” மருதனைப் பார்த்துக் கையை விரித்தபடி நடந்தான் சத்தியன்.

paluveeran-3-219x300.jpg“சேர்… சேர்…” பின்னால் துரத்திக் கொண்டே  வந்தான் மருதன்.

“சேர்… கோவப்படாதையுங்கோ…”

“…”

“ஒரு லட்சியத்திற்காகத்தான் வளக்கிறன் சேர்..”

சத்தியனுக்கு சினம் மிகுந்திற்று.

“விசர்க் கதை பறையாதை…”

“…”

“மயிரை வளக்கிறதிலை என்னடா லட்சியம்…”

கத்தியபடி சத்தியன் அடியதிர நடந்தான். தலையைக் குனிந்தபடி நின்றான் மருதன். பள்ளி மணி ஒலித்தது. மணியின் அதிர்வு ஆலாபனையாய் ஒலித்தடங்கியது.

த்தியன் அங்குமிங்கும் நடந்தான். மருதன் இருந்த இருக்கை வெற்றிடமாய் இருந்தது. வெண்கட்டியை எடுத்து ‘இலங்கை வளம்’ பாடலை கரும்பலகையில் எழுதினான். கைகள் தடுமாறின. வெண்கட்டி உடைந்து விழுந்தது. “பிள்ளையள், பாட்டை எழுதிப்போட்டு எல்லாரும் பாடமாக்குங்கோ… நான் ஒருக்கால் ஒப்பீஸ் போயிற்று வாறன்..” என்றபடி அதிபர் அலுவலகத்தை நோக்கி பதறியபடி நடந்தான் சத்தியன்.

“சேர் இன்றையோடை பத்து நாள் ஆகிற்று.. மருதன் வரேல்லை… நான் பேசினதுதான் அவனுக்கு மனக்கசப்போ தெரியேல்லை… படிக்கக்கூடிய பெடியன் சேர்… நான் ஒருக்கால் அவன்ரை வீட்டை போய் பாத்திட்டு வரவே…” அதிபர் பதற்றமாயிருந்த சத்தியனை வடிவாய் பார்த்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் அனுமதிக்கவும், பதிவேட்டில் இருந்த அவன் முகவரியைக் குறித்துப் பொக்கற்றில் சொருகினான்.

சைக்கிளை ஏ-9 தெருவில் விட்டான். முன்பக்கத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும் தலைவர் பிரபாகரன். “தமிழர் பிரச்சினைக்கு பிரேமதாசா அரசின் தீர்வு என்ன?” கேள்வியுடன் புத்தகக் கடையொன்றில் தொங்கின விடுதலைப் புலிகள் ஏடு.  தொங்கும் பத்திரிகையைப் பார்த்தபடி நின்ற மாணவனைப் பார்க்க மருதனைப் போலிருக்கவும், கடையின் முன்னால் சைக்கிளை நிறுத்தினான் சத்தியன். “மருதன்!…” மெல்ல அவன் தோள்களைத் தட்டினான்.

அவன் விழிபிதுங்கியபடி திரும்பினான். “பின்னாலை பாக்க என்ரை மாணவன் மருதன் மாதிரிக் கிடந்தது… அதான் அப்பு..” சத்தியன் மீண்டும் சைக்கிளை எடுத்து மிதித்தான்.

வழிநெடுக அவன் கண்கள் மருதனைத் தேடின.

குன்றும் குழியும் விழுந்த தெருவில் சைக்கிள் விழுந்தெழும்பித் திணறியது. அவனோ பெடல்களை வேகமாக மிதித்தான்.

படலையடியில் நின்று எட்டிப் பார்த்தான் சத்தியன். ஓலையால் தாழ்வாரம் பணிய வேய்ந்த குடிசை. அவன் கண்கள் வீட்டு முற்றத்தை நோக்கிச் சுழன்றன. ‘இது தான் வீடாக இருக்க வேணும்’ சைக்கிளை விட்டிறங்கினான். “அப்பு மருதன்… மருதன்…” குரல்கொடுத்துப் பார்த்தான். ‘சிலமினில்லை.. உள்ளுக்கை போய் பாப்பம்…’ படலையைத் திறந்து நடந்தான். ஒரு பக்கத்தில் பனையோலைப் பாயில் பினாட்டை பிரட்டி காய வைத்துக் கொண்டிருந்தாள் ஒரு ஆச்சி. கிட்டவாகச் சென்ற சத்தியன் ஆச்சியின் அருகில் குந்தினான்.

“ஆச்சி இதே மருதனின்ரை வீடு…”

“…”

“அவர் ஏன் பள்ளிக்கூடம் வரேல்லை…”

“…”

“நான் அவரின்ரை மாஸ்டர்…”

“…”

“அதான் தேடி வந்தனான்…”

அவள் எழுந்தாள். சத்தியனும் எழுந்து கொண்டான். கண்களை கூர்ந்து இடக்கையை நெற்றியில் வைத்து வெயிலை மறைத்தபடி இவனைப் பார்த்தாள்.

“உந்தத் திண்ணையிலை இருங்கோ…”

உள்ளே சென்று பித்தளைச் செம்பொன்றில் தண்ணீர் எடுத்து வந்து வைத்தாள். சத்தியன் குடிசையை எட்டிப் பார்த்தான். ‘மருதனை வீட்டுக்கையும் காணேல்லை..’ சத்தியன் பரபரத்தான். மருதனின் பாடசாலைக் காலணிகள் இரண்டும் ஒருசேர திண்ணையின் சுவர்க்கரையோரமாக முன் பக்கம் உயர்த்திச் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. ஆச்சியின் முகத்தை பார்த்துப் பதிலுக்குக் காத்திருந்தான் சத்தியன்.

“தம்பி…”

“…”

“அவன்…”

“…”

“இயக்கத்துக்கு…”

“…”

“போயிற்றான்….”

“…”

“அப்பு…”

சத்தியன் அதிர்ந்தபடி எழுந்தான். முகம் வியர்த்தது. கண்கள் கலங்கிக் காரணத்தை தேடி அதிர்ந்தன.  எழும்பிய அதே வேகத்தில் மீண்டும் அமர்ந்தான் திண்ணையில்.

“நானும் அவனைப் பேசிப்போட்டன்…”

“…”

“அதாலைதான் இயக்கத்துக்குப் போட்டானோ?”

“…”

“பள்ளிக்கூடம் பக்கம் காணேல்லை எண்டு மனம் கேக்காமல்தான் வந்தனான் ஆச்சி…”

சத்தியனின் முகத்தில் பதற்றம் விளைந்தது.

“நீங்கள் அப்பிடி நினைக்காதேங்கோ தம்பி…”

“…”

“அவனுக்கு உங்களிலை நல்ல மரியாதையும் விருப்பமும்..”

“…”

“சேர் நல்லவர்…”

“…”

“நல்லா வழிப்படுத்துறவர் எண்டு தான்  நெடுகப் பறைவான்…”

“…”

“எனக்கவன் பேரன்… தேப்பன் யாழ் நூலகத்திலை வேலை செஞ்வன்… பியோன்தான். யாழ் நூலகம் எரிச்சதோடை அவனுக்கு மனநிலையே ஒரு மாதிரிப் போட்டுது… பிறகு நஞ்சைக் குடிச்சுப் போட்டு செத்துப் போயிற்றான்… பிள்ளைக்கு அதுதான் பெரிய தாக்கம்… அவன் இயக்கத்துக்குப் போறதுக்குத்தான் இஞ்ச வந்தவன்…” அவள் சுருண்ட சேலைத் தலைப்பால் கன்னங்களைத் துடைத்தாள்.

மருதன் இல்லாத வீடு வெளித்திருந்தது. மெல்ல எழும்பி நடந்தாள். கொடியில் உலர்ந்து அசைந்தன அவன் சட்டைகள். போயதை எடுத்து முத்தமிட்டு விசும்பினாள் ஆச்சி. ஒடுங்கிய விரல்களால் கண்களைத் துடைக்குமவளை வணங்கிய சத்தியன் படலையை நோக்கி நடக்கத் துவங்கினான்.

03

சத்தியனின் சைக்கிள் முரசுமோட்டைச் சந்தியால் திரும்பி ஊரியான் வீதியில் மிதந்தது. யாரையோ வரவேற்பதைப் போலிருந்தன நெல்லுப் பூத்த வயல்களின் சிரிப்பு. வேலிக்கரையாய் பூவரசுகளும் பூத்துக் குதுகலித்தன. காற்றில் சடசடவெனப் பறந்தது வயல் காக்கும் வெள்ளைக் கொடி. ஊரியான் சந்தி கடக்கத் துவங்கும் பற்றைக் காடுகளில் படர்ந்து பூத்திருந்தன காந்தள்கள்.

போராளி அணியொன்று உருமறைப்பு செய்தபடி வீதியைக் குறுக்கறுத்து நகர்ந்தது. தேசக்கனவுடன் சீர்மையாக நகரும் போராளிகளின் வரிசை அவன் மனமெங்கும் கனவைப் பூக்கச் செய்திற்று. சத்தியனுக்குக் கைகளைக் காட்டுமொரு போராளியின் முகத்தில் கறுப்புக் கோடுகள். தலையில் துணித் தொப்பி. அதனையும் மூடி இலைகுழைகளால் உருமறுப்பு செய்யப்பட்டிருந்தது. நகர்ந்து கொண்டிருந்தவன், சட்டெனத் தரித்து நின்றான். சத்தியனைப் பார்த்தான். அவனை நெருங்கி வந்தான் அந்தப் போராளி. சத்தியன் சைக்கிளை மெதுவாக நிறுத்தி பிறேக்கை அழுத்திப் பிடித்தான். இவன் சைக்கிள் காண்டிலை பற்றிக் கொண்டான் அந்தப் போராளி.

“சேர்….. எப்பிடி இருக்கிறியள்?…”

அணுக்கமான அந்தக் குரல் அவன் மனதில் ஈரத்தைச் சுரக்கச் செய்திற்று. முகத்தை முடியிருந்த இலைகுலைகளை விலக்கினான்.

“நான் மருதன் சேர்…”

சத்தியன் தடுமாறியபடி சைக்கிளை விட்டிறங்கினான். ஸ்டான்டைப் போட்டு சைக்கிளை நிறுத்தினான்.

அவனேதான். வார்த்தைகள் வர மறுத்தன. பருத்து அகன்ற அவன் தோள்களைத் தொட்டுத் தழுவினான். பரந்து விரிந்த நெஞ்சு நிமிர்ந்திருந்தது. மீசை வளர்ந்து அடந்திருந்தது. அந்த வெண் சிரிப்புடன் சத்தியனை வணங்கினான் மருதன்.

“என்ரை ராசா… எப்பிடியடா இருக்கிறாய்?…”

“…”

“ஒரு வருசத்துக்கும் மேலாய் உன்னைத் தேடாத இடமில்லை…”

“…”

“வகுப்பிலை நீ இல்லாமல் பெரிய கவலையடாப்பா…”

சத்தியனின் முகம் அதைத்து மலர்ந்தது. நெடுத்த அவனின் தலையை விட கூராய் நீண்டிருந்தது எல்எம்ஜி.  குனிந்த அவன் தலையைத் தடவினான் சத்தியன்.

“நான் நல்லா இருக்கிறன் சேர்…”

“…”

“இந்த ரீமுக்கு நான்தான் பொறுப்பு…”

மருதனின் கன்னங்களைத் தொட, பெருமிதத்தில் சத்தியனின் கண்கள் ஒளிர்ந்தன.

“நல்லா பெரிய ஆளாய் வளந்திட்டாய் என்ன?…”

மெல்ல அவன் உருமறைப்பு இலைகுழைகளை அவிழ்த்துத் தொப்பியை கழற்றினான். நீண்ட அவன் தலைமுடி பின்பக்கமாய் சுருண்டிருந்தது.

“அட இஞ்சை பார்… இயக்கத்திலையும் உன்ன தலைமுடி வளர்க்க விட்டவங்களே…” சத்தியன் சிரித்தான்.

“எல்லாம் காரணமாய்தான் சேர்…”

“…”

“லட்சியத்தோடைதான் வளர்க்கிறன்…”

மருதனின் கண்களின் ஒளி இன்னும் பிரகாசித்தது. அதை ஏற்றாற்போல தலையசைத்த சத்தியன், மளமளவென அருகில் இருந்த கடையை நோக்கி ஓடினான். தின் பண்டங்களை அள்ளி வாங்கினான். பிஸ்கற் பைக்கற்றுக்களை ஒரு பையில் போட்டான். அவற்றை அள்ளி எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். “தம்பியாக்கள் வடிவா சாப்பிடுங்கோ…”

“…”

“இதுகளைக் கொண்டு போங்கோ…”

போராளிகள் மருதனைச் சூழ்ந்து கொண்டனர். சிறுவர்களைப் போல அவற்றைப் பகிர்ந்துண்டு பகிடி விளையாடும் போராளிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சத்தியன்.

“ஒரு நாளைக்கு பொடியளோடை வீட்ட வா… நல்லாய்ச் சாப்பிட்டுப்போட்டுப் போகலாம்… உனக்கு ஒரு அண்ணாவை மாதிரி இந்த சேர் இருக்கிறன்…”

எதற்கும் பணியாத மருதனின் கண்கள் அப்போதுதான் கலங்கின. நிமிர்ந்து வாஞ்சையுடன் சத்தியனைப் பார்த்தான்.

“சரி சேர்… நான் போயிற்று வாறன்…”

கையைக் காட்டியபடி நகரத் துவங்கினான் மருதன். “அப்பு… ராசா… கவனமடா…” கத்தினான் சத்தியன். போராளி அணி, காட்டுக்குள் நுழைந்து மறைந்துவிட்ட பிறகும் நகராமல் தரித்தே நின்றது சத்தியனின் சைக்கிள். அசையாத காட்டின் மீது சூரியன் கவியத் தொடங்கியது.

04

‘இரவிரவாய் ஆனையிறவுப் பக்கம் ஒரே சத்தம்… ஏதும் சண்டையோ தெரியேல்லை.. மருதன் இப்ப எங்கை நிக்கிறானோ…’ யோசனையுடன் ஈழநாதம் பத்திரிகையைக் கையில் எடுத்து விரித்தான் சத்தியன். ‘டிங்கிரி பண்டா விஜயதுங்கா மீண்டும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை… அதனால் சனாதிபதி வேட்பாளராக காமினி அறிவிப்பு…’ தலைப்புச் செய்தியுடனிருந்த பத்திரிகையின் பக்கங்களை புரட்டினான் சத்தியன்.

“இலங்கைத் தலைநகரில் தமிழரின் சாதனை..” அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவன் கண்கள் நம்ப முடியாத திகைப்பில் உறைந்தன. திரும்பத் திரும்பப் பார்த்தான். சத்தியனின் விரல்கள் நடுங்கத் துவங்கின. கண்கள் ஒருமுறை இருண்டு வெளித்தன. அவன் தான். கொழும்பில் தலைமுடியில் பாரவூர்தி ஒன்றைக் கட்டி இழுக்கும் அவன் மருதன்தான். ஒரு பக்கம் முழுவதும் அவன் சாதனை குறித்த படங்களும் செய்தியும்தான். “பாரத்தை இழுக்கும் என் பயணம் எங்கள் இனத்தின் பாரத்தை இறக்கத்தான்…” ஊடகங்கள் சூழ்ந்திருக்கப் பேசும் அவனுடைய வெண்மையான சிரிப்பு பத்திரிகையின் பக்கங்களில் உதிராதிருந்தன. சத்தியனின் முகத்தில் பெருமிதம் பூத்தது.

“என்னெண்டு கொழும்புக்குப் போனவன்…”

“…”

“இயக்கத்தை விட்டு விலத்திட்டானோ?”

“…”

“இல்லை இயக்கமாய்த்தான் போனவனோ..”

“…”

“அப்ப இதுக்குத்தான் முடி வளர்த்திருக்கிறான்…”

“…”

“பாரத்தை இழுக்கும் என் பயணம் எங்கள் இனத்தின் பாரத்தை இறக்கத்தான்…”

“…”

“அப்பிடி என்றால் இவன் என்னதான் செய்யப் போறான்…”theepachelvan-art-ezham-255x300.jpg

கேள்விகள் தலையைக் குடையத் துவங்கின. பத்திரிகையின் பக்கங்களை மூடினான் சத்தியன். வகுப்பறையில் தலைகுனிந்திருந்த அவன் முகம் நினைவில் துருத்தியது. அவனின் முத்துமுத்தான கையெழுத்துக்கள் நினைவில் மிதந்தன. சத்தியனின் மனைவி வைத்துச் சென்ற தேநீர் ஆறிப்போயிருந்தது. திரும்பவும் பத்திரிகையைத் திறந்து பார்த்தான். “சேர்…” என்று அவனைப் பார்த்து அழைப்பதைப் போலவே இருந்தது மருதனின் வெண் சிரிப்பு. சத்தியனின் மனம் பெருமலையை சுமந்தாற்போலக் கனத்தது.

05

கொழும்பு நகரின் அந்த வீதி மூடப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் நகர்ந்தன. பவுத்த விகாரையில் பிரித் ஓதல் ஒலித்து மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. புத்தரின் முன்பாய் நிரம்பியிருக்கின்றன தாமரைகள். வீதியின் மதில்களெங்கும் கன்னத்தில் கைவைத்தபடி புன்னகைக்கும் காமினியின் படங்கள். பேருந்துகள் சனங்களைக் கொண்டுவந்து இறக்கின. ஒலி பெருக்கிகள் சரி செய்யப்பட்டு அதில் பரீட்சார்த்தக் குரல்கள் இடையிடை ஒலித்தன. சனக்கூட்டம் திரளத் துவங்கியது. தேர்தல் பிரசாரப் பாட்டுக்கு சிலர் ஆடிக் கொண்டிருந்தனர்.

“இதோ இலங்கையின் அடுத்த சனாதிபதி வருகிறார்…”  ஒலிபெருக்கி மகிழ்ந்தறிவிக்கத் துவங்கியது. மகிழுந்தில் வந்திறங்கிய காமினி கைகளை உயர்த்திக் காட்டிக் கொண்டு வெளியில் வந்தார். காமினியைக் கண்டதும் ஆதரவாளர்கள் கூச்சலிட்டுக் கத்தி ஆதரவை வெளிப்படுத்தினர்.

மேடையில் ஏறிய காமினியை அரச காவலர்கள் சூழ்ந்து நின்று காவல் செய்தனர். “எங்கள் கட்சியின் ஆட்சியால்தான் இந்த நாட்டை முழுமையான சிங்கள நாடாக்க முடியும்… அமைச்சராக இருந்தபோதே அதற்காக எவ்வளவோ செய்திருக்கிறேன்… ஜனாதிபதியானால் எவ்வளவை செய்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்… புச்சன்ன ஓன தேவல் புச்சல தானவ. அல்லகன்ன ஓன தேவல் அல்ல கன்னவ” காமினியின் பேச்சில்  சனக் கூட்டம் களித்தது. “அப்பே ஜனாதிபதி மாத்துமா… அப்பே ஜனாதிபதி மாத்துமா…” எல்லோரும் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர். யானைச் சின்னம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடிகள் கைகளில் அசைய “ஜய… ஜய…” சனங்கள் கத்தினர்.

யாரும் எதிர்பாராக் கணமொன்றில் பேரதிர்வுடன் குண்டொன்று வெடித்தது. வானம் தகர்ந்தது போலப் பெருஞ்சத்தம். தொடர்ந்து வெடித்துச் சிதறின குண்டுகள்.  சனக்கூட்டம் சிதறி ஓடத் துவங்கியது. காமினியின் உடல் பாகங்கள் குருதியில் தோய்ந்திருந்தன. குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் உடல்களின் மேலால் பறந்தன கிழிபட்ட தேர்தல் துண்டுப் பிரசுரங்கள். காமினி கையில் கொண்டு வந்திருந்த தேர்தல் அறிக்கைப் புத்தகம் குருதியூறிக் கிடந்தது.

06

எரிந்த புத்தகங்களின் நிழல் நூலகச் சுவர்களில் படிந்திருந்தது. பேரழிவின் காயங்களின் சாயல் தீராத கட்டடமெங்கும் பாழின் தடங்கள். புத்தகங்களின் கூட்டில் இட்ட மிலாசும் தீ நூர்ந்தடங்காமல் ஒரு தீக்குச்சியில் மூண்டது.

சத்தியன் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து வந்து நூலக வாசலில் வைத்துப் பற்ற வைத்தான். அது காற்றில் எரிந்து கரையத் துவங்கியது. எழுத்துக்களின் குரல்களில் அடங்காத பெருமூச்சின் வெம்மை. தீயடங்காத முகங்களுடன் புத்தகப் பக்கங்கள் அலைந்தன. கைகளில் நிறைந்திருந்த பூக்களை வானத்தை நோக்கிக் காற்றில் எறிந்து நீர் ததும்பி நிலத்தில் சிந்தும் கண்களை இறுக மூடி வணங்கினான் சத்தியன்.

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-february-2025-deepatchelvan-short-story/

ஊமைக்காயங்கள்.

1 month ago

77 வயது, மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன். இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம். இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்.இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல, இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டுஎண்ணிக்கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக,போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது, முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.

இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்.கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால்,எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை, துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும், துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும்

என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும் என்று சொல்லி,அவர்களின் ஆடையோடு கூடஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள். கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட எதுவும் சொல்வதில்லை,மருமகளும் சொல்லவிடுவதில்லை, இன்னும் நான்கு நாட்கள்தானே என்று,ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல்,கடைசி மருமகளின் வீட்டு போக என்னுடைய உடைகளை நானே,ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன். கடைசி மகன் மற்றவர்களை போல்,கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை, வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும் இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கிறது.நான் ஊருக்கு போகும்போதெல்லாம்,மருமகள்தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டேண்டு வருவாள்.

அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு போவதில் அப்படி என்ன ஆனந்தமோ,எனக்கு தெரியாது, என்னென்ன நடந்தது என்று அவள் கேட்டுக்கொண்டே போக,நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும் சொல்லாமல் நல்லதை மட்டுமே சொல்லிக்கொண்டு போவேன்,அவள் கெட்டிக்காரி என்பதால் போகும் வழியில் எனக்கு பிடித்த,ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து வேடிக்கை பார்க்கும்போது கண்டுபிடித்து விடுவாள்.

வீட்டுக்கு போனதும் என்னுடைய கட்டை பையை ஆராய்ச்சி செய்து,மருந்து மாத்திரைகளாவது சரியாகவாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று,தேடிப்பார்த்து திட்டுவாள்.அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டைநான் வாங்கி வந்திருப்பதை பார்த்து,சிரித்துவிடுவாள். இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று,மீனாட்சியிடம் சண்டை போடக்கூட அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால் போய் சேர்ந்துவிட்டதில் நிறைய வருத்தம் எனக்கு. நான்கு நாட்கள் கழித்து பஸ்ஸில் போய் இறங்கினேன்,

எப்போதும் போல் எனக்கு முன்வந்து காத்திருந்தாள். ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார வைத்துக்கொண்டாள், உங்களை ஷேவிங் பண்ண கூடகூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா? அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா ஆயிட்டாங்களா எனும்போதே அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்....என்று ஆரம்பிக்கும்போதே இப்படியே பேசி பேசி அவங்களைகாப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு போவதற்குள் சவரக்கடைக்கு தான் அழைத்து சென்றாள். கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள், பெயிலான மார்க் சீட்டை காட்டும் குழந்தையை போல் தயங்கி தயங்கி ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை காட்டினேன்.கோபத்தை வெளிக்காட்டாமல் கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள். இதுக்கு தான் உங்களை அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது புரியுதாப்பா....என்று முறைத்தாள், என்னிடம் பதிலில்லை ஊர் உலகத்துல யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை கஷ்டப்படுத்தி அனுப்புறது..இதேவேலையா போச்சி எல்லாருக்கும்,என்று முணுமுணுத்துக்கொண்டே கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள்,

துணியெல்லாம் சுத்தமா துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க,பொய் சொல்லாம சொல்லுங்க என்று டீச்சரை போல் முறைக்க,என்ன செய்வது என்று தெரியாமல் பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,அவளும் சிரித்துவிட்டாள்! எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி பையை நிரப்பிக்கொண்டு,வீட்டுக்கு அழைத்து சென்றாள். ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது ,லேசா மயக்கமா இருக்கு சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்.கொஞ்சதூரம் தான்பா போயிடலாம் பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல,மெதுவாக சாய்ந்துகொண்டேன். உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை, நான் பெறாத மகளின் மீது சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது,அதனால் தான் பொய்சொல்லி சாய்ந்துகொண்டேன், இன்னும் ஒரு மாதத்திற்கு, அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில் காணாமல் போகும் என் முதுமையின் ஊமைக்காயங்கள்.

படித்து ரசித்தவை நன்றி முக புத்தகம் .

கணவனை சுட்டுக் கொன்ற பாட்டி.

1 month 1 week ago

494289177_705784981916309_41679075242094

ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி.
அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳

பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶
அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺

அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐

நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறுமினார்.😡
அதற்கு அங்கு போன பொலிஸார் சொன்னார்கள்......🤭
" நோ சேர்... இன்னும் இல்லை. கழுவிய தரை, இன்னும் காயவில்லை..!😁😄😂

Rj Prasath Santhulaki

கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்

1 month 1 week ago
கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்

0

author.png கதையாசிரியர்: தி.ஞானசேகரன்
newspaper.png தின/வார இதழ்: வீரகேசரி

1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ.

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0

கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள்.

வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை.

வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.

‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான்.

‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள்.

அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள்.

இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது.

கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.

பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன.

வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.

“பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி.

“காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?”

“இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.”

அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்.

“இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி.

“உவனுக்கு எத்தனை வயசு?”

“ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.”

“இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.”

“என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?”

கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!.

வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது.

“பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?”

“இல்லை ஆறு மாசந்தான்”

“எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?”

வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.

“ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள்.

“இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள்.

குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது.

“அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.”

அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது.

கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள்.

“பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள்.

“அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.”

அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது.

“ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.”

கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள்.

கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான்.

கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும்.

கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள்.

வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான்.

வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள்.

அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள்.

கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள்.

வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது.

கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

“ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி.

“இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”.

அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை.

அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது.

அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது.

இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது.

“கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள்.

“குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ”

முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா.

குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது.

கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை.

துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது.

ஐயோ! குழந்தை விழப்போகிறதே !

கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள்.

“அம்….. மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது.

குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி.

குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது.

“அ….. ம்மா, அம்… மா ”

கதிரி தன்னை மறக்கிறாள்.

கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது.

“ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”.

மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள்.

அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை.

கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள்.

– வீரகேசரி 1973

– கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன்.

https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9/

தெரிவு - சோம.அழகு

1 month 2 weeks ago

தெரிவு

- சோம.அழகு

காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும்,

சக்தி என்பான்!

குலசாமி என்பான்!

தாயே துணை என்பான்!

மனைவியே தெய்வம் என்பான்!

மகளே உலகம் என்பான்!

கோவிலுக்குள் நுழைந்தால்

தீட்டு என்பான்…!

என்ற தோழர் மதியின் கவிதையுடன் கதிரவனும் தகிக்கத் தொடங்கியிருந்தது. இதை வாசித்ததும்தான் உவளுக்குத் திடீரென நினைவிற்கு வந்தது. தேநீர் மேசையில் நீட்டியிருந்த கால்களைச் சட்டென மடக்கிக் கீழே தொங்க விட்டுச் சிறு பதற்றத்திற்குள்ளானாள். இந்த மாதம் உவளுக்கு மாதவிடாய் வரவில்லை. அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து நாள்காட்டியில் நாட்களைக் கணக்கிட்டாள். பத்து நாட்கள் தள்ளிப் போயிருந்தது. இது முற்றிலும் வழக்கமற்ற ஒன்று. உவன் எழுந்துவிட்டதைக் கூட பொருட்படுத்தாத அளவிற்கு மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஈர முகத்தைத் துடைத்தவாறே உவள் அருகில் வந்து அமர்ந்தான். “காபி எடுத்துட்டு வரேன்” என்றாவறே அடுப்படிக்குச் சென்றாள். கூறாமை நோக்கக் குறிப்பறியும் உவனிடம் இருந்து தற்காலிகமாகத் தப்பிச் சென்றாள்.

காபி கொண்டு வந்தவளிடம், “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான். “ஒண்ணுமில்லையே” என்று சமாளிக்க முயன்றவளை “வழக்கமான புன்னகையைக் காணோமே” என்று மடக்கினான். நெஞ்சம் கடுத்தது காட்டும் தன் முகத்தில் செயற்கையாக முகமலர்ச்சியைக் கொண்டு வர முனைந்தவளிடம் “Good try! ஆனா ஒட்டவே இல்ல. இப்ப என்னன்னு சொல்லப் போறியா? இல்லையா?” என்று காபியின் ஒரு மிடறை உள்ளிறக்கியவாறே கேட்டான். சொன்னாள். “வாவ்” என்று விளையாட்டாகச் சிரித்தான். உவளது இதயத்துடிப்பை அது இன்னும் அதிகரித்தது.

மேலும் பேச்சைத் தொடர விரும்பாமல் காலை உணவைத் தயார் செய்யச் சென்றாள். “பாத்து… மெதுவா நட” என்று அக்கறையான தொனியில் உவன் கிண்டலாகக் கூற செல்லமான கோபத்துடன் உவனைத் திரும்பிப் பார்த்தாள். அடுப்படி அலமாரியில் கொஞ்சம் உயரத்தில் இருந்த சட்டியை எட்டி எடுக்க முற்பட்ட உவளிடம், “தள்ளு… நான் எடுத்துத் தர்றேன். இந்த நேரத்துல இப்பிடில்லாம் எக்கக் கூடாது” என்று கண்களைச் சிமிட்டியவாறே சட்டியை எடுத்துக் கொடுத்தான். உவளும் பதிலுக்கு விளையாட்டாக உவனது வயிற்றில் லேசாகக் குத்தினாள்.

இதற்குள் உவர்களது மூன்று வயது மகள் “அம்மா…” என்று கண்களைக் கசக்கியவாறே படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள். தூங்கி விழித்ததில் காலைக் கதிரொளியினால் அக்குட்டிக் கண்கள் இன்னும் கூசிக் கொண்டிருந்தன போலும். சுருங்கியிருந்த கண்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்குப் பழகிக் கொண்டிருந்தன. ஓடிச் சென்று மகளை வாரி அணைத்தவள், “நல்ல தூங்குனியாடா ராஜாத்தீ? முகம் கழுவிக்கிறீங்களா, தங்கம்? அப்புறம் பால் குடிக்கலாம்” என்றவாறே கொஞ்சியபடி குழந்தையைத் தூக்கினாள். “ஹே! இந்த மாதிரி நேரத்துல வெயிட்லாம் தூக்கக் கூடாது” என்று மீண்டும் உவளைச் சீண்டினான். “ப்பா..” என்று அழுவதைப் போல் முகத்தைச் சுளித்தவாறே சிரித்தாள். “ஓ! அதான் கொஞ்ச நாளா முகம் பளிச்சுன்னு இருக்கா? அப்பவே சந்தேகப்பட்டேன்” என்று வம்பிழுத்தான். “சும்மாதான் இருங்களேன் ப்பா” என்றவாறே குழந்தைக்குப் பல் தேய்த்துவிட அழைத்துச் சென்றாள்.

அனைவரும் குளித்துக் கிளம்பி காலை சிற்றுண்டி நடந்து கொண்டிருந்தது. “நல்லா சாப்பிடுடா… இப்போதான் நல்லா சாப்பிடணும். தெம்பு வேணுமில்ல?” – உதட்டின் ஓரம் நெளிந்த சிரிப்பை அடக்கி உவளிடம் சொன்னான். இருந்த அவசரத்தில் குழந்தைக்கு ஊட்டிவிட்டபடியே உவனை லேசாக முறைத்தாள். குழந்தையைப் பள்ளியில் விட்ட பின் உவளை நூலகத்தில் விடும் வழியில் வழக்கத்திற்கு மாறாக வேண்டுமென்றே நல்ல குத்துப்பாட்டாக மகிழுந்தினுள் ஒலிக்க விட்டு குஷியான மனநிலையில் ஆடியபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். நூலகம் வரை உவன் மீது படர்ந்திருந்த உவளது உக்கிரமான பார்வையைக் கண்டு கொள்ளாதது போலவே பாடல் வரிகளை உரத்துப் பாடித் தன் மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தினான். “பாத்து… பத்திரம். எதுவும்னா கூப்பிடு” உவனது வார்த்தைகள் காதில் விழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல் இறங்கிச் சென்று விட்டாள்.

அன்று மதியம் பள்ளி முடிந்து குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. குழந்தைக்கு விளையாட்டு காட்டியவாறே சோறூட்ட முயன்றாள். முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. பல வகையான யோசனைகள் உவளை இயங்கவே விடவில்லை. இத்தலைமுறையினருக்கே உண்டான கூகுள் வியாதி உவளையும் அன்று பீடித்தது. என்னவெல்லாமோ தேடினாள். பப்பாளி பழச் சாறு, அன்னாசிப் பழச் சாறு எனத் தொடங்கி தாம் வசிக்கும் மாகாணத்தில் பன்னிரண்டு வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டப்படி பிரச்சனை இல்லை என்பது வரை கன்னா பின்னாவென தேடினாள். திடீரென, “அய்யோ! என்ன செய்து கொண்டிருக்கிறேன்? உவன் எவ்வளவு ஆசையாக இருக்கிறான் இன்னொரு குழந்தைக்கு? நான் ஏன் இப்படி….? ச்சை” என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னை நினைத்து கொஞ்சம் அருவருப்பு கூட மேலிட்டது.

“உடன்பிறப்புன்னு கூட ஒண்ணு இருந்தா நாள பின்ன ஒண்ணுக்கொன்னு ஒத்தாசையா ஆதரவா இருக்கும்ல” – இதைச் சொல்பவர்கள் அனைவரும் தங்களது உடன்பிறப்புக்களுடன் ஒட்டும் உறவுமாகவா இருக்கிறார்கள்? எனவே வருங்காலத்தில் இதற்குப் பெரிய அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. நல்ல உடன்பிறப்பு அமைவது உறுதியல்லவே! ஆனால் நமது தெரிவு நல்லதொரு கேண்மையை நிச்சயம் கொண்டு வரும். அது உடன்பிறப்பின் இடத்தை மிக அழகாகச் சமன் செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

தனக்குள் முன்னும் பின்னுமாக முட்டி மோதிக் கொண்டிருந்த எண்ணவோட்டங்களினால் பொழுது மாலையைச் சூடிக் கொண்டதை உவள் உணரவே இல்லை. உவனால் எழுந்த கதவு தட்டலின் ஒலிதான் உவளை உசுப்பியது. கதவைத் திறந்ததும், “தூங்கிட்டு இருந்தியா?” என்று கேட்டான். இல்லை என்பதாகத் தலை ஆட்டினாள். “நல்லா ஓய்வெடுக்க வேண்டியதுதான? அதான் உடம்புக்கு நல்லது” – மறுபடியும் துவக்கினான். “ப்ச்” என்றபடியே திரும்பிச் சென்று தேநீர் தயாரிக்கலானாள். உவன் உடை மாற்றிக் கொண்டு வரவும் தேநீர் கோப்பையை உவன் கைகளில் தந்தாள்.

“நீ பால் குடிச்சியா? இங்க வா… வந்து உக்காரு. நான் போட்டுத் தரேன்” – இப்போது உவளுக்கு நிஜமாகவே உதறத் துவங்கியது. அதை மறைத்துக் கொண்டு, “இப்போ எதுக்கு திடீர்னு இவ்ளோ அக்கறை?” என்றாள். “திடீர்னு ஒண்ணும் இல்லையே. எப்பவும் உள்ளதுதான்” என்றான். “ஒருவேளை…” – அதற்கு மேல் தொடர சரியான வார்த்தைகளின்றி உணர்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். “ஹ்ம்ம்?” என்று கோப்பையிலிருந்து பார்வையை அகற்றி நிமிர்ந்து பார்த்தான்.

“உங்களுக்கு நிஜமாவே இப்போ இன்னொரு குழந்தை வேணுமா?” – என்னத்தைப் போட்டு பூசி மெழுகி…? பளிச்செனக் கேட்டு விட்டாள்.

“இருந்தா நல்லாதான் இருக்கும். ஏன்? உனக்கு வேண்டாமா?”

“‘இப்போதைக்கு’ வேண்டாம்” – ‘இப்போ’வில் உவள் தந்த அழுத்தம் உவனைச் சென்றடைந்ததா என உவனது கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்ம்… சரிடா” என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி முடித்துவிட்டான்.

மேற்கொண்டு அதைப் பற்றி உவன் பேச விரும்பவில்லையா அல்லது பேச ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டானா என உவளுக்குப் புரியவில்லை. “ஒருவேளை நான் இப்போ உண்டாயிருந்தா என்ன பண்றது?” – தயங்கியபடியே கேட்டாள்.

“அத நீதான் சொல்லணும்” – தேநீரைக் காலி செய்தபடியே மிகவும் நிதானமாகச் சொன்னான். எப்படி இவனால் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது?

“அது வந்து…. இப்போதான் பாப்பா அவளோட வேலைய கொஞ்சம் தன்னால செய்யப் பழகுற பருவத்துக்கு வந்துருக்குறா… அதுக்குள்ள இன்னும் ரெண்டு மூணு வருஷம் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க கொஞ்சம்….. அதுவும் நான் இன்னும் வேலைக்கும் போகல…” - ஆங்காங்கே நிறுத்தியும் வார்த்தைகளை விழுங்கியும் கூறினாள்.

“அததான் சொன்னேன்… உன் முடிவுதான்னு. ஒருவேளை நீ இப்போ மாசமாயிருந்து, கலைக்குறது உன் உடம்புக்கு நல்லதில்ல, அதனால இப்போ பெத்துக்குறத தவிர வேற வழி இல்லன்னு மருத்துவர் சொல்லும் அளவிற்கான சூழல் இருந்தாலும் கவலைப்படாத. உன்னையும் ரெண்டு பிள்ளைகளையும் நான் பாத்துக்குறேன். உனக்கு பிடிச்சதைச் செய்ய எந்தத் தடையும் இல்லாம ஏற்பாடு பண்ணித் தரேன். மருத்துவப் பரிசோதனைகள் அப்படி சொல்லாத பட்சத்துல எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னு ஆசை இருக்குங்குறதுக்காகவெல்லாம் நீ பெத்துக்கணும்னு அவசியம் இல்லை. உன் உடம்புதான் முக்கியம்.” என அதீத புரிதலுடன் பேசினான்.

“நீங்க வேற காலைல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… அதான்”

“அடேய்! அது சும்மா உங்கிட்ட ஒரண்ட இழுத்துட்டு இருந்தேன். அதெல்லாம் பெருசு பண்ணாத” என்று உவளுக்குச் சாதகமாக ஆறுதலளித்தான்.

தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களை எடுத்துரைப்பது அத்தனை எளிதல்ல என உணர்ந்தாள். இன்னொரு குழந்தை பெற்றும் கொள்ளும் எண்ணம் உவளுக்குப் பெரிதாக இல்லை. அதிலும் இப்போதைக்குக் கண்டிப்பாக இல்லை. இருந்திருந்து இப்போதுதான் சிறிது மூச்சு விட நேரம் கிடைத்தாற்போல் இருக்கிறது. பிள்ளை பெறுவதைப் பற்றி நினைத்தாலே…. வயிற்றைத் தள்ளிக் கொண்டு மூச்சு வாங்கியபடியே ஒன்பது மாதத்தையும் கழித்தது; நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, குமட்டல், குறுக்கு வலி; சுறுசுறுப்பு என்ற சொல்லே மறந்தாற்போல் எப்போதும் மந்தமாகவே இருந்தது; தூங்கித் தூங்கி விழுந்தாலும் சரியான தூக்கம் இன்மையால் அவதிப்பட்டது; பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம்; அகச்சுரப்பிகள், இசைமங்கள்(hormones) என எதுவுமே தன் கட்டுக்குள் இல்லாது தாறுமாறாக இயங்கியது; கர்ப்பப்பை கட்டிகளினால் ஏற்பட்ட அளவிற்கு அதிகமான இரத்தப்போக்கு; அதீத சோர்வு; தன் உடலைக் கவனிக்கக் கூட நேரம் இல்லாமல் போனது; தற்போது வரை குழந்தையின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பது; கருவுற்றதில் இருந்து தற்போது வரை உடல்நிலையாலோ நேரமின்மையாலோ வாசிக்கவும் படிக்கவும் இயலாமல் போனது - என எல்லாமே ஒரு கணம் அகக்கண்ணில் வந்து பயமுறுத்தின.

தன் ஆசைக்கும், நீளமான நாக்குகள் பலவற்றைக் கொண்ட ஊர் வாயை அடைக்கவும் என கண்மணியாக ஒரு பிள்ளை பெத்தாயிற்று. இவளை நன்கு படிக்க வைத்து ஆளாக்கினாலே போதும்தான். தான் வேலைக்குச் சென்று ஓரளவு சொந்தக் காலில் ஊன்றி நின்று தனக்கான அடையாளத்தை உருவாக்கிய பின், பொருளாதாரச் சூழலோடு உடலும் மனதும் தயாரான பின் உவனது ஆசைக்காக வேண்டுமானால் பின்னர் இன்னொன்று பெற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என நினைத்தாள். அதை விடுத்துச் சும்மா சும்மா குட்டி போட்டுக் கொண்டு அம்மா மற்றும் தங்கையின் உதவியை நாடுவது கொஞ்சம் வெக்கங்கெட்டத்தனமாகவே தோன்றியது உவளுக்கு.

வழக்கம்போல் மனக்குழப்பத்தின் போது தன்னுடனேயே பேசுவதைப் போன்ற உணர்வைத் தரும் தங்கையை நாடினாள். அவள் இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு தெளிவான மனநிலையை எட்டவும் உதவுவாள்.

“வாந்தி, தலைசுத்தல் மாதிரி ஏதாவது இருக்கா?” எனக் கேட்டாள் தங்கை.

“மொதல்ல உண்டாயிருந்தப்பவே அதெல்லாம் பெருசா இல்லையே. குமட்டல் மட்டும்தான இருந்துச்சு? நேத்து ராத்திரி சாப்பிட்டு முடிச்சவுடனே அப்போ மாதிரியே குமட்டுச்சு”

“Pseudocyesis, maybe”

“அப்பிடீன்னா?”

“Phantom pregnancyயா கூட இருக்கலாம். சோர்வா இருக்கா?”

“இல்ல. ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு pregnancyயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதெல்லாம் வச்சு சொல்ல முடியாதுல்ல?”

அதன் பிறகு உவளது மனக்கலக்கம் குறித்து எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டுத் தங்கை சொன்னாள் – “இங்க பாரு. இப்போ மறுபடியும் நீ உண்டானா அது எங்களுக்கு சந்தோஷமான விஷயம்தான். சந்தோஷம் மட்டும்தான் எங்களுடையது. உன் வலியை எங்களால வாங்கிக்க முடியாது. உனக்கான எல்லா உதவியை மட்டும்தான் நாங்க செய்ய முடியும். மேலும் குழந்தைங்குறது ரொம்பப் பெரிய பொறுப்பு. அதுக்கு நீ தயாரான்னு யோசிச்சுக்கோ. உன்னை மட்டும் வச்சி யோசி. இதுல சரி தப்புன்னு ஒண்ணுமே கிடையாது. நீ உன்னையும் உன் வளர்ச்சியையும் தேர்ந்தெடுக்குறது சுயநலம் கிடையாது. ஒரு பொண்ணோட உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவளைத் தவிர சுற்றியிருக்கும் வேறு ‘யாருக்கும்’ கருத்து சொல்லவோ முடிவு எடுக்கவோ உரிமை கிடையாது… கணவனே ஆயினும் கிடையாது! உன் விஷயத்துல அத்தானே உன் பக்கம்தான் நிக்குறாங்க. தைரியமா முடிவு எடு. புரிஞ்சுப்பாங்க”

எல்லோருக்கும் எப்படி இவ்வளவு லேசான விஷயமாகத் தோன்றுகிறது இது? இருவரும் உவளது மூளைக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களைத் தான் கூறிக்கொண்டிருந்தார்கள். அதை மனதிற்குக் கடத்துவதுதானே பெரும்பாடு! Pregnancy Kit வாங்கிப் பரிசோதித்துப் பார்க்கும் மனத்திடம் சுத்தமாக இல்லை. இரண்டு நாட்களாக உழன்று கொண்டே வந்தவள் மிகவும் தயங்கியபடியே அலுவலகத்தில் இருக்கும் உவனை அலைபேசியில் அழைத்தாள்.

“ப்பா!”

“ம்ம். சொல்லுடா…” – மறு முனையில் பரபரப்பான சூழ்நிலையிலும் அழைப்பிற்குப் பதில் தந்தான் உவன்.

“கொஞ்சம் வரும்போது பப்பாளி வாங்கிட்டு வர்றீங்களா?”

“ஹ்ம்ம். சரி டா. நான் கடைக்குப் போய்ட்டு வீடியோ கால் பண்றேன். எதுன்னு நீயே பாத்துச் சொல்லு” – எவ்விதத் தடுமாற்றமும் இன்றி மிக இயல்பாகக் கூறினான். அது உவளுக்கு இன்னும் வயிற்றைப் பிசைந்து கொண்டு வந்தது.

மேசையில் பப்பாளி இருந்த பையைத் திறந்து கூடப் பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் கழிந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் வாங்கி வரச் சொல்லிவிட்டாள். ஆனால் அதன் அருகே செல்வதற்கு மனம் கொஞ்சமும் ஒத்துழைக்காமல் வெதிர் எடுத்தது. ஏதோ கொலை பாதகம் செய்யத் துணிந்து விட்டதைப் போல் மருண்டாள். “ஒருவேளை கர்ப்பப்பை கட்டிகளின் வளர்ச்சியால் சில வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள இயலாமல் போய்விடுமோ? ஒருவேளை இப்போது தவறான முடிவை எடுக்கிறோமோ? ஒருவேளை இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளும் அடுப்படியும்தான் வாழ்க்கை இப்படியே கழிந்து தேக்க நிலையை அடைந்து விட்டால்?” - எல்லாமே தன் கையில்தான் என்பதுதான் ‘ஒருவேளை’களாக உருவெடுத்து உவளைப் பாரமாக அழுத்தியது. ‘இப்போது குழந்தை வேண்டாம்’ என்ற ஆழ்மனதின் பரிதவிப்பை வெளிப்படையாகத் தன்னிடமே கூடச் சொல்ல முடியாமல் தவித்தாள். ஒரு மாதிரி மூச்சு முட்டிக் கொண்டு வந்ததில் உவளுக்கும் சேர்த்து அந்த அறையே பெருமூச்செறிந்தது.

‘பப்பாளியை இன்று உட்கொண்டுவிடுவோமா?’ , ‘மருத்துவரிடம் செல்லலாமா?’ – இவ்விரு கேள்விகளுக்கும் இடையில் நசுங்கி வாடி வதங்கியவாறே மறுநாள் காலை சமைத்துக் கொண்டிருந்தாள். திடீரென…. கால்களுக்கு இடையில் பிசுபிசுப்பாக உணர்ந்தாள். அடுப்பை அப்படியே அணைத்துவிட்டு குளியலறைக்கு ஓடினாள். ஓடி வந்த வேகத்தில் கரண்டைக் கால் வரை வழிந்தது இரத்தம். அப்படியே அங்கிருந்த முக்காலியில் அமர்ந்துவிட்டாள். இரண்டு நிமிடங்கள் உலகமே உறைந்து போய்விட்ட மாதிரி இருந்தது. என்ன நிகழ்கிறது என மூளை மனதிற்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தது.

“ஐயோ! உவன் ஆசையில் மண் விழுந்துவிட்டதே!” என்ற வருத்தம் கலந்த ஏமாற்றம்; “எவ்வளவு கொடூரமாக வறட்டுத்தனமாக சுயநலமாக இருக்க முடிந்தது என்னால்?” என பொதுபுத்தியினால் விளைந்த பயம்; ஆண்டாண்டு காலமாக வழிவழியாகப் பெண்களுக்கு மரபுவழியே கடத்தப்பட்ட ‘பிறர்நலம்’ என்னும் பண்பில் இருந்து விலகியதால் “எப்பேர்பட்ட முடிவை எடுக்கத் தெரிந்தேன்?” என்ற குற்றவுணர்வு; “நல்லவேளை! ஒன்றும் செய்யாமல் தானாக வந்துவிட்டது” என்ற ஆசுவாசம்; “எனக்குப் பிடித்தவற்றையெல்லாம் தங்கு தடையின்றி செய்யலாம். இனி வானமே எல்லை” என்ற மகிழ்ச்சி – அனைத்து உணர்வுகளும் ஒரே பிடியாக ஒன்றாக அழுத்தியதில் என்னவென்று உணர்வது என்றறியாமல் திகைத்தாள். அத்திகைப்பு கண்ணீராக வெளிப்பட்டது உவளுக்கே வியப்பைத் தந்தது. “இப்போது ஏன் அழுகிறோம்?” என்று கூட புரியவில்லை.

குளித்து முடித்து வெளியே வந்தவள் மேசை மேல் பிரிக்காமல் இருந்த பப்பாளியைப் பார்த்தாள். முந்தைய நாள் வரையிலும் அதைத் தன் மனதினுடைய குரூரத்தின் உருவகமாகக் கருதி வந்தவள் தற்போது அவ்வாறாகக் கருத வைத்த பொதுபுத்தியையும், தன் தெரிவு என்ற எண்ணமே துளிர் விட விடாமல் சமூகம் தன்னுள் சாமர்த்தியமாக விதைத்துவிட்டிருந்த அர்த்தமற்ற குற்றவுணர்வையும் மட்டும் குப்பையில் போட்டு விட்டு பப்பாளியைத் தூக்கிப் பழக் கூடையினுள் இட்டாள்.

நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.

முதியவரின் மனைவிக்கு ஏற்பட்ட மறதி நோய்.

1 month 3 weeks ago

490346494_3976140269330600_8554738173188

எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர்.

அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறாள்” என்று பதில் சொன்னார்.

அதைக்கேட்ட அந்த மனிதர், ”மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனைவிக்கு உங்களையும் அடையாளம் தெரியாதுதானே?” என்று கிண்டலாகக் கேட்கவே, அதனை ஆமோதித்த அந்த முதியவர், ”உண்மைதான்! என் மனைவி நான் அவள் கணவன் என்பதை மறந்து(ம்) பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சொன்னார் சற்று வருத்தத்தோடு.

வினாத் தொடுத்தவர் அத்தோடு நிறுத்தவில்லை. ”அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியை நடுவழியில் விட்டுச்சென்றாலும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை; பின்பு ஏன் நீங்கள் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது அழைத்துச் செல்கின்றீர்கள்?” என்று நக்கலாகக் கேட்க, எரிச்சலூட்டும் அவ்வினாவைக்கூடச் சிறுபுன்னகையோடு எதிர்கொண்ட அந்த முதியவர், ”தம்பி! என் மனைவிக்கு வேண்டுமானால் என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம்; ஆனால், அவள்தான் என் மனைவி என்பதும், என் வாழ்க்கைக்கு இனிமை சேர்த்தவள் அவளே என்பதும் எனக்குத் தெரியுமே” என்று பதிலளித்தார். அதைக்கேட்டதும் வினாத்தொடுத்தவரின் முகம் தொங்கிப்போனது; தம்முடைய பண்பாடற்ற வினாவுக்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அந்த மனிதர்.

நண்பர்களே, உறவுகள் நமக்குப் பயன்படும் நிலையில் இருக்கும்போது மட்டும் அவர்களிடம் அன்புகாட்டுவதும் இல்லையெனில் தூக்கியெறிந்துவிட்டுச் செல்வதும் மனிதத்தன்மையற்ற செயல்கள். பின்னாளில் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டுவதும், கைவிடாது அரவணைப்பதுமே உறவுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை; அதனைத் தம் செயலால் நிரூபித்திருக்கும் அந்த முதியவரைப் போற்றுவோம்!🙏

[About That Street (ATS) எனும் முகநூல் பக்கத்தில் நான் படித்த ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது.]

Megala Ramamourty 

மத்தேயு 6 : 3 - சோம.அழகு

2 months ago

மத்தேயு 6 : 3

- சோம.அழகு

“கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்!

“யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல்.

இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின் ஆசைக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும்.

“வேணாங்கண்ணு… படிக்குறதுனா படி; இல்லனா பக்கத்து வீட்டுக்குப் போய் விளையாடக் கூட செய். எதுக்குப் போட்டு அந்தக் கூட்டத்துல வந்து….?”

“ம்மா… ப்ளீஸ் மா…” - மறுதலிக்கவே முடியாத ஒரு முகத்தை எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? வேறு வழியில்லாமல் அந்த வெகு சில நாட்களில் இன்றும் ஒன்றாகிப் போனது.

மிகவும் பொறுப்பாக ஒரு சிறிய கூடையைத் தானாக எடுத்து வந்து, “ம்ம்.. எனக்கும்” என்று மலரிடம் நீட்டினாள்.

“சொன்னா கேட்க மாட்டா… இந்தா.... ஆனா கொஞ்சந்தான் தருவேன்” என்றபடி வெறும் நான்கைந்து பூச்சரங்களை மட்டுமே அக்குட்டிக் கூடையினுள் இட்டாள்.

அம்மாவைப் போலவே கூடையை இடுப்புப் பக்கத்தில் வைத்துப் பிடித்தவள் தன் வயதிற்கே உரிய களிப்புடன் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி துள்ளிக் குதித்தவாறே தன் குதிரைவால் இடமும் வலமும் ஆட குதூகலமாகச் சென்றாள். தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தவாறே மென்புன்னகையுடன் உடன் நடந்து வந்தாள் மலர். அந்தத் தெருமுனையில் வறுத்த கடலைப் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த எழிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் கோவில் தெருவை நோக்கி நடந்தார்கள். கோயிலுக்கு வருபவர்கள், அதைச் சுற்றி இருக்கும் ஏராளமான கடைகளுக்கு வருபவர்கள் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிக அகலமானதும் நீண்டதுமான ரத வீதி அது. எனவே ஆளுக்கு ஒரு புறமாக விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.

“படிக்குற புள்ளைகள்லாம் என்னத்துக்கு என் கூட வாரீக?” என்று செல்லமாக அதட்டினாள் மலர்.

“சும்மா வா அக்கா” என்று சிரித்த எழில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிப்பவள்.

“அம்மா! இப்பிடி ஏதாவது வெளிய வந்தாதான் உண்டு. நாங்க பாட்டுக்கு எங்க சோலிய பாக்கப் போறோம். உனக்கு என்ன எடைஞ்சலாம்?” – தனது அணியில் எழில் வந்துவிட்ட தைரியத்தில் கயலின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தைக் கையில் திணித்துத் தானும் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டவாறே நடந்தாள் எழில். கடைவீதியை வேடிக்கை பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு கயலுக்கு. எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்ப்பளே தவிர ஒரு நாளும் அம்மாவிடம் எதையும் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கவே மாட்டாள்.

“நாங்கதான் படிக்கல. உங்களுக்கு இருக்குற ஒரே வேலை – படிக்குறது. அத மட்டும் பாக்குறதுதானே? அதுக்குத்தான கெடந்து இப்பிடி கஸ்டப்படுதோம் நாங்க” என்றள் மலர். வீட்டில் சில சமயம் பூ தொடுத்துக் கொண்டிருக்கும் போது கயல் படிப்பதை ஆசையாய்ப் பார்க்கையில் மலரின் கண்களே பூக்களாய் மாறிப் போகும்.

பத்தொன்பது வயதில் மணமாகி இருபது வயதிலேயே கயலுக்குத் தாயாகிவிட்டாள். நன்கு படிக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் கல்லூரியின் முதலாமாண்டோடு படிப்பைத் தூக்கிப் போட வேண்டிய குடும்பச் சூழல். இப்போது அவளது உலகம், உயிர், மூச்சுக்காற்று என எல்லாமே கயல்தான். ஆனாலும் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் வகையில் அனைத்து உலக நடப்புகளையும் அறிந்து கொள்ள முயல்வாள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் மலரை விட்டுப் போகவே இல்லை.

கோயிலில் அம்மன் சன்னதிக்கென்று தனி நுழைவுவாயில் உண்டு. கயல் உடன் வரும் நாட்களில் மட்டும் உள்ளே செல்வாள். ஐயருக்காகக் காத்திருக்கவும் மாட்டாள். அர்ச்சனையும் செய்ய மாட்டாள். வேண்டிக்கொள்ளுதல் என்பதும் அவளுக்குத் தெரியாது. சாமி கும்பிடுதல் என்பது அவளைப் பொறுத்த வரை சில நொடிகள் அக்கற்சிலையைக் கூர்ந்து நோக்கியவாறு மனதினுள் கயல் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என தனக்குள் வைராக்கியமாக சொல்லிக் கொள்வது. சொல்லிக் கொள்வது என்பதையும் தாண்டி அம்மனிடம் கயலைப் பெரிய கெட்டிக்காரியாகக் கொண்டு வரப்போவதாகச் சூளுரைப்பது போல இருக்கும். அதன் வீரியம் எப்படி இருக்குமென்றால் அவளது மனதிற்குக் காலமே செவி சாய்த்து அதை நிகழ்த்தித் தரும் முயற்சியில் அர்ப்பணிப்போடு ஈடுபடத் துவங்கும் அளவிற்கு இருக்கும்.

பின்னர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த இசைத்தூணில் கொட்டப்பட்டிருக்கும் குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து கயலின் நெற்றியில் இருக்கும் சிறிய கருப்புப் பொட்டிற்கு மேல் மெலிதான கோடாக இடுவாள். சட்டென்று யாரும் நெட்டி முறிக்கும் அழகைப் பெற்றுவிடும் அம்முகம். உடனே கண்களை இறுக மூடி புருவங்களையும் மூக்கையும் சுருக்கிச் சுளித்தும் விரித்தும் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே விளையாடுவாள் கயல். குங்குமம் லேசாக கண்களுக்குக் கீழேயும் மூக்கின் மேலேயும் மகரந்தத்தைப் போல் சிதறிப் படியும். அதைத் துடைத்து விட்டவாறே மலரிடம் இருந்து பரிசாகக் கிடைக்கும் ஒரு முத்தத்திற்குத்தான் இந்தக் குறும்பெல்லாம்.

“ரொம்ப தூரம் போய்டாதீங்க… நான் பாக்குற தூரத்துலயே இருங்க ரெண்டு பேரும்” – ரத வீதியை அடைந்ததும் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னாள் மலர். சரியென்றவாறே கூட்டத்தினுள் பிரிந்து சென்றனர்.

கோயில் ஒலிப்பெருக்கியில் உரத்துப் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பி, ஒவ்வொரு கடை வாசலிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மக்கள், வாகன இரைச்சல்கள் ஆகியவற்றுடன் “பூவு… பூவு… மல்லிப் பூவு… அக்கா பூ வாங்கிக்கோங்க”, “கடல… கடல… வறுத்த கடல… அண்ணா ஒரு பொட்டலம் அஞ்சு ரூபாதான்… வாங்கிக்கோங்கண்ணா” ஆகியவையும் போட்டி போட்டன. அவ்வளவு கூட்டத்திலும் வேக வேகமாகத் தன் கண்களால் துழாவி அவ்வப்போது இருவரின் இருப்பையும் உறுதி செய்தவாறே பூ விற்றுக் கொண்டிருந்தாள் மலர்.

கயலை உடன் அழைத்து வரும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திலேயேதான் பொழுது கழியும் மலருக்கு. “சீக்கிரம் பூக்கள் விற்றுத்தீர்ந்து விடாதா?” என்றிருக்கும். கண்ணை விட்டு கயல் ஒரு நொடி மறைந்து விட்டாலும் மீதமிருக்கும் மொத்தப் பூக்களையும் சட்டை செய்யாமல் கயலைத் தேடிக் கண்டடைந்து வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவாள். கூடையில் இருக்கும் பூக்களையும் அவர்கள் வரும் நேரத்தையும் பார்த்து அக்கம்பக்கத்தினர், “ஏங் கயலு? அம்மைய விட்டுத் தள்ளிப் போனியோ?” என்று விளையாட்டாகக் கேட்டுச் சிரிக்கும் அளவிற்கு அத்தனை பேருக்கும் கயலின் மீதான மலரது பேரன்பு பரிச்சயம். “ஏஞ் சிரிக்க மாட்டீங்க? வச்சுருக்குறது ஒத்த புள்ள… அதைக் காணாம ஒரு நிமிசம் உசுரே போயிருது. இன்னைக்கு யாவாரத்துல கொட்டுனது போதும். இந்தப் பூவையெல்லாம் ஆளுக்கு ஒண்ணா எடுத்து வச்சுக்கிடுங்க” என்பாள்.

அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாக நடந்தது மூவருக்கும். கிட்டத்தட்ட எல்லாமே விற்றுத் தீரப் போகும் சமயம்.

கயலைக் காணவில்லை.

லேசான பதற்றம் தொற்றிக் கொண்ட போதிலும் ‘வழக்கம் போல் எங்கேனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாள்’ என மனம் ஆசுவாசப்படுத்த முயன்றது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவ்வீதியை இரண்டு முறை கால்களால் அளந்து அலசி விட்டாள். கண்கள் இருப்பு கொள்ளவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்ததில் இப்போது நிஜமாகவே பீதியடையத் தொடங்கினாள்.

“மலரக்கா… என்னாச்சு? ஏன் இப்பிடி அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டு இருக்க? உன்ன தேடிக் கண்டுபிடிக்குறதே பெரும்பாடா போச்சு. கயல எங்க?” – எழில்

“அவளதான் காணும்னு தேடிட்டு இருக்கேன்”

“பயப்படாத… இங்கதான் எங்கயாவது வாய் பார்த்துட்டு நிப்பா. அடுத்த தெருவுல போய் பாப்போமா?”

“இல்ல… கண்டிப்பா இந்த ரத வீதிய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்” – பரபரத்தாள் மலர்.

“சரி. வா… தேடுவோம்” என்று எழிலும் மீண்டும் ஒரு முறை அத்தெரு முழுக்க சல்லடை இட்டுத் தேடினாள்.

யாரிடமேனும் விசாரிக்கத் துவங்கும் அளவிற்குச் சூழல் கையை மீறிச் சென்றுவிட்டதாக நம்பும் திராணி அற்றவளாக மாறிப் போயிருந்தாள் மலர். ஒவ்வொரு நொடியும் கொடூரமாகக் கழிந்தது. “வர வேண்டாம்னு சொன்னா எங்க கேக்குறா… கழுத” என்று கோபம் கோபமாக வந்தது மலருக்கு. நேரம் ஆக ஆக அழுகை வரும் போல் இருந்தது. இருவருக்கும் என்னென்னவெல்லாமோ தோன்றியது. ஆனால் வாய்விட்டுச் சொல்ல விரும்பாமல் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என மனதினுள் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

“கோயில் வாசல்ல ட்ராஃபிக் போலீஸ் நிப்பாரு. அவர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று கேட்டாள் எழில்.

நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதை அவளது வார்த்தைகள் சட்டென வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்குக் கூட பயந்து போனவளாக மருண்டு நின்றிருந்தாள் மலர். செய்வதறியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கால்கள் நிலைகுத்தி நின்றன எனினும் கண்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் கூட்டத்தினுள் ஊடுருவி அலைந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்து விட்டது.

திடீரென ஒரு இரு சக்கர வாகனத்திற்கும் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தவருக்கும் நடுவில் தென்பட்ட இடைவெளியில் பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்று அவ்வீதியில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மஞ்சள் பூ போட்ட சிகப்புச் சட்டை… கயலேதான்!

“யக்கா… அங்க பாரு… கயலு!”

கூட்டத்தைப் பிளந்து கயலை நோக்கிப் பாய்ந்து சென்றாள் மலர். கையில் ஒரு ஜிகிர்தண்டா கோப்பையுடன் சிரித்தவாறே அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள் கயல்.

“என்ன கயலு? எத்தன தடவ சொல்லிருக்கேன்? நீ பாட்டுக்கு எங்கயாவது போகாதன்னு” – பதற்றம் தணியாத குரலில் படபடத்தாள்.

“இங்கதாம்மா இருந்தேன். இந்த அண்ணாதான் வாங்கித் தந்தாங்க. சூப்பரா இருக்குமா. இந்தா நீ ஒரு வாய் சாப்பிட்டுப் பாரேன்” – கோப்பையைத் தூக்கிக் காண்பித்தாள்.

மகள் கிடைத்துவிட்ட ஆறுதலில் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே நன்றி கூற வாய் எடுத்தாள். ஆனால் அவன் கைகளில் முளைத்திருந்த கண்கள் அவளைக் கொஞ்சம் உறுத்தின.

“என்ன தம்பி பண்றீங்க?”

“ஒண்ணும் இல்லையே” என்றவாறே தோள்களைக் குலுக்கினான்.

மலரது பார்வையில் கோபம் மெல்லமாக ஏறத் துவங்கியிருந்ததை அவளது நெரிந்த புருவங்கள் காட்டிக் கொடுத்தன. உடனே அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, “அட! நெஜமாவே ஒண்ணும் இல்லீங்க. குழந்தை பூ வித்துட்டு இருந்தா. சும்மா பேசிட்டு இருந்தேன். ‘என்ன படிக்குற?’, ‘என்ன பாடம் பிடிக்கும்?’, ‘என்னவாகப் போற?’, ‘அம்மா என்ன பண்றாங்க?’… வழக்கமா கேக்குறதுதான். ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதான்”

“அதுக்கு எதுக்கு ஃபோன்ல படம் புடிக்கிறீங்க?”

“என்னோட வலைதளத்துல போடுறதுக்கு” – இப்படிச் சொல்லும் போது அலைபேசியை அணைத்துச் சட்டைப் பையினுள் வைத்து விட்டிருந்தான்.

“அதான் எதுக்குன்னு கேக்கேன்”

அவனிடம் சரியான பதில் இல்லை. அல்லது பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்க தைரியம் இல்லை.

“அது… வந்து… நெறைய பேரு பாப்பாங்க”

“பாத்து? ஆமா… நீங்க போடுற இந்த வீடியோவ எப்படி உண்மைன்னு நம்புவாங்க?”

“அதுலாம் நம்புற மாதிரி பண்ணிடலாம்” – விளையாட்டாகச் சிரித்தான்.

“எப்படி? பிண்ணனியில ஒரு சோக பாட்டு இல்லேனா உத்வேகத்த கெளப்புற மாதிரியான பாட்ட சேர்த்தா?” – அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எழில் கொஞ்சம் காட்டமாகக் கேட்டாள்.

“ஏதோ இந்தக் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கணும் போல இருந்துச்சு. அதுக்குப் போய் இவ்வளவு….” என்று பம்மினான்.

இதற்குள் அந்தச் சிறு சலசலப்புக்கு ஏற்ற சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. அதில் ஒருவன் அந்த இளைஞனைப் பார்த்து, “டூட்! நீங்க… சமூக வலைதளத்துல… அந்த genz_idiots பக்கத்தோட…” என அடையாளம் கண்டு கொள்ள முனைய அவனுக்கு அது இன்னும் ஏந்தலாய் இருந்தது. அவனைப் பின் தொடரும் 2 மில்லியன் தலைகளும் அவனுக்காக அங்கு ஆஜர் ஆனதாகவே உணர்ந்தவன் தன் தொனியைச் சற்றே மாற்றினான்.

“நல்ல மனசோட உதவி பண்ண நெனச்சேன் பாருங்க. என்னைச் சொல்லணும். தெரியாம பண்ணிட்டேன். போதுமா? ஆள வுடுங்க. நல்லதுக்கே காலம் இல்ல” என்று எரிச்சலடைந்தான்.

“தம்பி! நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட வந்து உதவியும் கேட்கல. நீங்க உதவி பண்ணனும்னு நெனச்சதயும் நான் தப்புன்னு சொல்லல. அத படம் புடிச்சு ஒளிபரப்பணும்ங்கிற ஈன புத்தியைத்தான் தப்புன்னு சொல்றேன்” – மலர் நிதானமாக சொல்ல முயன்றாலும் அந்த ஒரு வார்த்தையில் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது.

“ஈன புத்தியா? என்ன வாய்க்கு வந்தபடி பேசுற? Ungrateful bi**h”

“ஏய்! இந்த புடுங்கித்தனத்தலாம் வேற யார்கிட்டயாவது காட்டு…. எங்களுக்கும் பேசத் தெரியும்… You imbecile ba****d” – எழிலும் பதிலுக்கு எகிறினாள்.

சண்டை முற்றத் துவங்க, யாரோ ஒருவர் அதைத் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் இணைய உலகில் தன் பிம்பம் கலைந்து விடுமோ என்று அஞ்சி, “ஹலோ! ஃபோன ஆஃப் பண்ணுங்க. யார கேட்டு ரெக்கார்டு பண்றீங்க? டெலீட் பண்ணுங்க. It’s an invasion of privacy” என்று குதித்தான்.

“ஹய்ய்ய்! உனக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளிச் சட்னியா? இல்லாதப்பட்டவங்கன்னா கேக்காம கொள்ளாம உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணுவியா? எங்க கூட பேசுறதயே ஏதோ தாராள மனசுக்காரன் மாதிரி எடுத்துப் போட்டுட்டு இருக்க?” என்று கடுகடுத்தாள் எழில்.

“நான் நல்லது பண்ணததான் வீடியோ எடுத்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு”

“நல்லது பண்ணனும்னு நெனைக்குறவன் சத்தங்காட்டாம செஞ்சுட்டுப் போவான். இப்பிடி பெரும பீத்தீட்டு இருக்க மாட்டான். ஒரு 20 ரூபாய்க்கு ஜிகிர்தண்டா வாங்கி குடுத்தது நீ கட்டை விரல் பிச்சை எடுக்கத்தானே? நீ நோகாம சம்பாதிக்குறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா?” – தான் நினைப்பதை எவ்வாறு வார்த்தைகளில் வடிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்ற மலருக்கும் சேர்த்து எழிலே பேசினாள்.

“What nonsense? இதைப் பாத்து இன்னும் நெறைய பேருக்கு உதவணும்னு தோணும் இல்லையா?”

“உதவி பண்ணனும்னு நினைக்குறதும் நீ பண்றதும் ஒன்னா? மனுசனா பொறந்த ஒவ்வொருத்தனும் தன்னால முடியும்னா கண்ணு முன்னால பசிச்சுக் கெடக்குறவனுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுக்கத்தான் செய்வான். நீதான் ஏதோ பெரிய சமூக சேவை செஞ்ச மாதிரி அனத்தீட்டு திரியுற” – அவ்வளவு பெரிய விஷயத்தை அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் எழில்.

வசமாக மாட்டிக் கொண்டதாக உணர்ந்தவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

“வா எழிலு… போலாம்” என்று அவ்விடத்தை விட்டுக் கிளம்ப முயன்ற மலரின் கைப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட எழில்,

“இருக்கா… அதான் பேச்சு இவ்ளோ தூரம் வந்துட்டுல்ல… இரு, கொறையையும் பேசீட்டு வந்துருதேன்” என்றவாறு அவனை நோக்கித் திரும்பினாள்.

“நீ மலரு அக்காட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் உன் வீடியோல சிலத பாத்தேன். போன வாரம் ஒரு வீடியோ போட்டுருக்கியே? அவரு பிச்சைக்காரரா? சொல்லு?” என்று அவனைப் பார்த்துக் கத்தியவள், கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள் – “நாலாவது தெருவுல இருக்க எங்க சித்தப்பா போன வாரம் மில்லு வேலை முடிஞ்சு களைப்பா இருக்குன்னு காட்சி மண்டபத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. இவன் ‘உங்கள ஆளையே மாத்துறோம்’னு சொல்லி சித்தப்பாவுக்கு முகச்சவரம் செய்து முடிவெட்டி குளிப்பாட்டி புதுத்துணி சாப்பாடுன்னு வாங்கி குடுத்து அனுப்பியிருக்கான். அவரும் ஏதோ ஷூட்டிங்னு நெனச்சுட்டு சிரிச்சுட்டே வந்துருக்கார். இப்போ பாத்தாதான் புரியுது”. மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “நேத்து கூட அந்த நாய்க்குட்டியையும் நீதான் வேணும்னு சாக்கடைக்குள்ள வீசிட்டு காப்பாத்துறாப்புல வீடியோ போட்டுருப்ப. இந்த லட்சணத்துல உன்ன நம்ப வேற செய்யணுமா?” என்றவள் ஒரு சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.

“நீ பண்றது பேரு என்ன தெரியுமா? Pandering. Emotional Prostitution. You are just feeding your bloody ego” என்று முகத்திற் அறைந்தாற் போல் வார்த்தைகளை வீசினாள் எழில். அவற்றின் வெப்பம் பொறுக்க முடியாமல், சுற்றி நிற்பவர்களின் அருவருப்பான பார்வை தன் மீது நெளிவதைச் சகிக்க முடியாமல் நழுவப் பார்த்தான்.

இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “சரி, விடும்மா! புள்ளைக்கு அவன் வாங்கிக் குடுத்ததுக்கு நன்றி சொல்லிட்டு அத அத்தோட விட்டுட்டுக் கலைஞ்சு போங்க” என பெரியதனமாகக் கூறவும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது எழிலுக்கு.

“போன வருசம் அஞ்சு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு அத அம்பது தெருவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுன மகாபிரபுதானே நீங்க? நியாயம் சொல்ல வர்ற மூஞ்சியெல்லாம் பாரேன்”

அதன் பிறகு ஒருவரும் வாயைத் திறக்கத் துணியவில்லை.

“வீடியோவ டெலீட் பண்ணு” என்று மட்டும் சொன்னாள் மலர்.

அந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் அவசர அவசரமாக அலைபேசியைத் தட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி அந்தக் காணொளியை அழித்தாள் எழில். பின்னர் Recently deletedக்கும் சென்று அழித்துவிட்டுச் சொன்னாள், “இவ்வளவுக்கு அப்புறமும் இப்போ எடுத்தத மீட்டெடுத்து ஒளிபரப்புனேனா நீ மனுசனே இல்ல!”

அலைபேசியைத் திரும்பப் பெற்றவன் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டாகப் பறந்தே விட்டான்.

மூவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கடைத்தெருவின் அவ்வளவு சத்தமும் அவர்களது அமைதியில் அமிழ்ந்து போனது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கயலுக்கு என்ன நடந்தது என்று சுத்தமாகப் புரியவில்லை. அவர்களின் கோபத்திற்குத் தான்தான் காரணமோ என்று அவள் வயதிற்கே உரிய யோசனையில் கொஞ்சம் பயந்து கூட போயிருந்தாள்.

அவர்களின் மௌனத்தில் கல் எறியும் பொருட்டு அருகில் வேகமாக வந்து நின்றது அவர்கள் தெருவில் வசிக்கும் இஸ்மாயிலின் சைக்கிள். சைக்கிளில் இருந்து இறங்கி அவர்களுக்கு நடைத்துணையாக சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தவர் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

“எழிலு… ஏன்டா அவ்வளவு கோவம் உனக்கு?”

“சும்மா இருங்க பெரியப்பா… அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டீங்க” என்று மலர் பதிலுரைத்தாள்.

“லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு அங்கனதான்டா இருந்தேன். முதலாளி இருந்தனால வர முடில. அதான் கேக்கேன்… அவன் ஏதோ இந்தக் காலத்து வழக்கத்துக்கு ஏத்தாப்புல… எல்லாரும் எங்கன பாத்தாலும் ஃபோனும் கையுமாத்தான் திரியுதாங்க. இப்போல்லாம் இது சகஜம்தான?”

“என்ன பெரீப்பா நீங்களும்? அவன் செஞ்சது தப்பில்லையா? புள்ள ஏதோ பிச்சைக்கு நின்ன மாரியும் இவன் கொடை உள்ளத்தோட உதவுற மாரியும்… பெரிய வள்ளல்னு நெனப்பு. உணர்வுப்பூர்வமா உதவி பண்றவன், அவசர உதவி பண்றவன்… எல்லாவனுக்கும் அத ஆவணப்படுத்தியே ஆகணுமோ? அதெப்படி உதவி பண்ற இக்கட்டான நேரத்துலயும் வறட்டுத்தனமா பொறுமையா படம் பிடிக்க முடியுது? இது பேரு உதவிலாம் இல்ல. தன்னை எல்லோரிடமும் இரக்க குணமுள்ள நல்லவனாகக் காட்டிக் கொள்ள முனையும் அசட்டுத்தனம்” – எழில்

“என்னமோ உலகத்துல ஒருத்தர் விடாம இதத்தான் பாத்துட்டு இருக்கப் போற மாதிரி… விட்டுத் தள்ளு கழுதைய!” என்று அவர்களை அதை உதாசீனப்படுத்த வைக்கும் எண்ணத்தில் கூறினார் இஸ்மாயில்.

“உலகத்துல ஏதோ ஒரு மூலையில கூட அவளைப் ‘பாவம்’ன்னு யாரும் பரிதாபப் பார்வை பார்த்துடக் கூடாதுன்னுதானே இப்பிடி ஓடி ஓடி ஓடா தேயுறேன்?” வழக்கமற்ற குரலில் கூறினாள் மலர். இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்திருந்ததா உடையத் துவங்கியிருந்ததா எனத் திருத்தமாகக் கூற இயலவில்லை.

“இதுல இவ்ளோ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?” - இஸ்மாயில்

“உணர்ச்சி வசப்படல பெரியப்பா. சரி - தப்பு பத்திதான் இங்க பேச்சே. இப்பவும் பெத்தவங்கள ‘அம்மா’, ‘அப்பா’ன்னுதானே கூப்பிடுறோம்? இரத்தல் இன்றைக்கும் பழிக்கக்கூடிய நாணக்கூடிய தொழிலாகத்தானே இருக்கு? சில விஷயங்கள் மாறாது; மாறவும் கூடாது. நாம ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது உதவி பெறுபவர் இரத்தல் தொழிலே செய்பவராயினும் அவர் கண்ணியத்தையும் தன்மானத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நல்ல பெயர் எடுக்கணும்ங்கிறதுக்காக உலகின் கண்களில் ஒரு தனிமனிதரின் இயலாமையைச் சாதமாகப் பயன்படுத்தி அவரைக் கூனிக் குறுக வைக்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாமல் நல்ல பெயர் எடுத்து என்னத்துக்கு?” – தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.

எழில் பேசுவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தார் இஸ்மாயில். அவரது நரைத்துப் போன தாடிக்குள் இருந்து ஒரு புன்னகை, “யம்மாடி! எவ்ளோ வெவரமா பேசுதா?” என்ற ஆச்சரியத்துடன் வெளிப்பட்டது.

வழியில் இருந்த தேவாலயத்தை அவர்கள் கடந்து செல்கையில் மிகச் சரியாக மத்தேயு 6 : 3 வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.

துரோகி ( காட்டிக் கொடுப்பவன் )

2 months 3 weeks ago

துரோகி 

ஒரு ஊரில், சிறு தொழில் செய்யும் வியாபாரி பறவைகளைப்பிடித்து சந்தையில் விற்கும் தொழில் செய்து கொண்டு இருந்தான். வழக்கமாக சந்தை கூடும் ஒரு நாளில் தன் விற்பனைக்காக ஐந்து கெளதாரி பறவைகளை கொண்டு சென்று இருந்தான் . நான்கினை ஒரு கூட்டிலும் ஒன்றை தணிக் கூட்டிலும் வைத்திருந்தான்.

அந்த வழியே வந்த ஒருவன் பறவைகளின் விலை என்ன என்று கேட்க நான்கு பறவைகள் இருந்த கூட்டினை காட்டி ஒன்று நான்காயிரம் ரூபா என்றான் . மாற்றியதை காட்டி ஐந்தாயிரம் ரூபா என்றான். என் அதற்கு விலை அதிகம் என்று கேட்க்க ..எல்லாவற்றுக்கும் உணவு கொடுப்தேன் அதற்கு விசேடமாக தயாரித்து உணவு கொடுக்கிறேன் . என்றான் ..ஏன் அப்படி என்று கேட்க இதை தனியே வைத்து பழக்கி ஒரு கூட்டிலை விட அது தன் குரல் எழுப்பி ஏனையவற்றை அழைக்கும். அவைகளும் நான் விரித்து வைக்கும் வலையில் விழும் . பின் அவற்றை விற்பனைக்கு கொண்டுவருவேன் என்றான்.

வாங்க வந்தவனும் அதை ஐயாயிரம் கொடுத்து வாங்கி சற்று அப்பால் சென்று அதன் கழுத்தை திருகி கொன்றான். வியாபாரியும் அயலில் உள்ளவர்களும் திகைத்து நின்றனர்.ஏன் என கேடடதற்கு ...தன் இனத்தையே கட்டிக்க கொடுத்த துரோகி என பதில் சொல்லி வந்த வழியே சென்று விடடான்.

உலகம் ரொம்ப கேட்டு விட்ட்து மனித இனத்திலும் இப்படிபடட துரோகிகள் பலர் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

Checked
Wed, 06/11/2025 - 01:54
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed